Posted on Leave a comment

இந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் – ஹரன் பிரசன்னா

இந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல்
ஹரன் பிரசன்னா
செப்டம்பர் 29ம் தேதி காலையில் இந்தியா முழுக்க நெருப்புப் பற்றிக்கொண்டது போன்ற ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியதை வெளிப்படையாக அறிவித்ததை ஒட்டி ஊடகங்களும் இந்திய நாட்டின் குடிமக்களும் பெரும் பரபரப்படைந்தார்கள். அறுவை சிகிச்சையின்போது குறிப்பிட்ட இடத்தை மட்டும் துல்லியமாகக் கண்டுபிடித்து அறுத்து சிகிச்சை (சர்ஜரி) செய்து மூடிவிடுவது போல, வேறு எதையும் தொந்தரவு செய்யாமல் எதிரி இலக்கை மட்டும் துல்லியமாகக் கண்டுபிடித்து அழித்தொழிக்கும் இத்தகைய தாக்குதலை ரணசிகிச்சைத் தாக்குதல் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) என்று அழைக்கிறார்கள்..
இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் இந்திய எல்லையைத் தாண்டி நடைபெற்றது என்று அறிவிக்கப்பட்டதுதான் அனைவரின் உற்சாகத்துக்கும் காரணம். கார்கில்
போரின்போதுகூட இந்தியப் படைகள் எல்.ஓ.சி எனப்படும் எல்லையைத் தாண்டிச் சென்று
தாக்குதல் நடத்தியதில்லை என்று
சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம், இப்படி தாக்குதல் நடத்தியதை இந்திய ராணுவம் வெளிப்படையாக அறிவித்திருக்கவில்லை. இந்த முறை எல்லையைத் தாண்டி இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் வரை பாகிஸ்தானின் பகுதிக்குள் ஊடுருவிச் சென்று தீவிரவாதிகளின் லான்ச் பேட் முகாம்களை இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 முதல் 40 வரையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக இருந்தவர்கள். பொதுவாக தீவிரவாத முகாம்கள் என்பன இந்தியாவின் எல்லையில் இருந்து 40 கிமீ தூரத்தில் இருப்பவை. அவை மிகப் பிரத்யேகமான முகாம்கள் அல்ல. சில கூடாரங்கள் அமைக்கப்பட்டு அங்கு தீவிரவாதிகள் கிராம மக்களோடு கலந்திருப்பார்கள். இந்தியாவில் ஊடுருவ வேண்டிய நேரம் வரும்போது, லாஞ்ச் பேட் என்றழைக்கப்படும் முகாம்களில் ஒன்றுகூடி அங்கிருந்து பிரிந்து சென்று இந்தியாவுக்குள் நுழைவார்கள். லாஞ்ச் பேட் என்பது சில சமயங்களில் பாகிஸ்தானின் ராணுவ முகாமாகவும் இருக்கக்கூடும். இத்தகைய லாஞ்ச் பேடுகளை குறிவைத்து இந்த முறை இந்திய ராணுவம் ரகசியமாகத் தாக்கியது. ஆறு முதல் ஏழு லாஞ்ச் பேடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடப்பதற்குப் பத்து நாள்களுக்கு முன்பு செப்டம்பர் 18ம் தேதி, ஊரி தாக்குதல் நிகழ்ந்தது. ஊரி என்பது ஜம்மு
காஷ்மீரில் உள்ள எல்லை நகரம். கடந்த இரு பத்துவருடங்களில் இந்திய எல்லையில்
தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இதற்குத் தகுந்த பதிலடி தரப்படவேண்டும் என்கிற எண்ணம் இந்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இருந்ததில் வியப்பில்லை. பெரும்பாலான இந்தியர்களும் இந்தியாவின் சார்பில் இந்தக் கொடூரமான தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி தரப்படவேண்டும் என்றே நினைத்தார்கள்.
இந்த ஊரி தாக்குதலில் குறைந்தது 19 ராணுவ வீரர்களும் ராணுவ உதவியாளர்களும் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் முழுக்கப் பதற்றம் நிலவியது. இது இந்தியாவுக்கு நேரடியாகவே விடப்பட்ட சவால் என்று ஊடகங்கள் பேசின. மோதி பிரதமராக இருக்கும்போது நடக்கும் இத்தாக்குதலுக்கு மோதி தகுந்த பதிலடியைத் தருவார் என்ற எண்ணம் பொதுவாக நிலவியது. ஆனால் இது அத்தனை எளிதான விஷயமல்ல.
ஒரு போர் என்று வந்தால் இந்தியாவால் பத்து நாள்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கமுடியும் என்று சிஏஜி அறிக்கை தெரிவித்திருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டினார்கள். இடையில் வாஜ்பேயி அரசு பொறுப்பேற்றிருந்த காலங்கள் தவிர, ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவதில் அதிக அக்கறை காட்டவில்லை. ராணுவ வணிகத்தில் தனக்கு வரும் பங்கைப் பற்றி மட்டுமே அதிகம் கவலைப்பட்டிருக்கும் ஓர் அரசாக அது இருந்தது என்று, வெளிப்படையாகத் தன் பெயரைச் சொல்ல விரும்பாத ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி சொன்னார். மோதி பிரதமராகப் பதவியேற்று மூன்று வருடங்களே ஆகியுள்ளது. இந்நிலையில் நம் ராணுவத்தின் பலம் என்ன என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் சி..ஜியின் அறிக்கை மேம்போக்கானது என்றும் இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கும் ஒட்டுமொத்த இந்தியப் படையும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டால் இந்தியாவால் பத்து நாள்களுக்குத் தாக்குப் பிடிக்கமுடியும் என்றே அதைப் பொருள் கொள்ளவேண்டும் என்ற சரியான விளக்கம் ராணுவ அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது. சி..ஜியின் அறிக்கை ஒரு தியரி, ஒரு ஊகம் சார்ந்த (hypothetical) வாதம் என்று ராணுவ அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். எப்படி இருந்தாலும் இந்திய அரசு ராணுவத்தின் தேவையை நிறைவேற்றுவதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது என்பதை ஊரி தாக்குதல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.
நேரம் போகாமல் ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு வேலைக்குச் சென்றிருக்கவில்லை. அவர்கள் அங்கே தங்கள் உயிரைப் பணையம் வைத்துப் போராடுவது, இந்தியாவுக்குள் நாம் நம் ஜனநாயக உரிமைகளுடன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழத்தான். தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு அங்கே அவர்கள் செத்துக் கொண்டிருப்பது, நாம் நம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதை உறுதி செய்யத்தான். எனவே இந்த ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும். இதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் துணை நிற்கவேண்டும்.
ஊரி தாக்குதல் நடந்து பத்து நாள்களுக்குப் பிறகு வெளிப்படையான தீவிரவாத அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே இது மிக அவசரமாக இந்திய மக்களைத் திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்று சொல்லமுடியாது என்பதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். பத்து நாள்கள் என்பது திட்டம் தீட்டப் போதுமான காலம். மிகக் கவனமாக செயல்திட்டம் தீட்டி, எந்த நேரத்தில் துவங்கி எப்போது முடிக்கவேண்டும் ஆகியவை யெல்லாம் உறுதியாக வடிவமைக்கப்பட்டு, எந்த எந்த வீரர்கள் எதை எதைச் செய்யவேண்டும் என்பதையெல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். அதை இம்மி பிசகாமல் செயல்படுத்தி இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள எந்த ஒரு அமைப்பாலும் இந்திய வீரர்கள் ஊடுருவுவதைக் கண்டறியவே முடியவில்லை. தாக்குதல் நடந்து முடிந்து இந்திய ராணுவம் அறிவிக்கும் வரை யாருக்கும் இத்தாக்குதல் பற்றித் தெரியவில்லை. ஊடகங்கள் அதுவரை, ‘ஏன் ஊரி தாக்குதல்களுக்கு மோதி அரசு பதிலடி தரவில்லைஎன்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன. தங்களுக்குத் தெரியாமலேயே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்ததை இந்த ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் ஒருவழியாக சமாளித்துக்கொண்டு சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் இந்திய அரசுக்கு ஆதரவாக நின்றன ஊடகங்கள். பெரும்பாலான கட்சிகளும் இத்தாக்குதலை வரவேற்றன. உண்மையில் அவர்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. அந்த வகையில் அரசியல் ரீதியாக இந்திய அரசின் மிக பாதுகாப்பான காய் நகர்த்தலாக இது அமைந்துவிட்டது.
இந்திய அரசியல் கட்சிகள், இந்திய மக்கள் மற்றும் ஊடகங்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க இந்திய அரசுக்கு ஆதரவாக வரும் செய்திகளைப் பார்த்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மெல்ல கேள்வி எழுப்பத் தொடங்கின. இந்தத் தாக்குதல்
நடந்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. கெஜ்ரிவால் காணொளி
ஆதாரம் வேண்டும் என்று கேட்டார்.
ராணுவத்தின்
நடவடிக்கைகளை
மற்ற சாதாரண மற்றும் பொதுவான நிகழ்வுகளோடு ஒப்பிடுவது அறிவுபூர்வமானதல்ல. ஒரு ராணுவம் தன் ரகசியத்தைக் கடைப்பிடித்தே ஆகவேண்டியது மிக முக்கியம். அந்த வகையில் ராணுவம் என்ன செய்தி மக்களுக்குத் தெரியவேண்டும் என்று நினைக்கிறதோ அதை மட்டுமே வெளியிடும். எப்போதும் எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தேவையான மாதிரி பயன்படுத்திக்கொள்ளும் ஊடகத்தை இந்த முறை இந்திய ராணுவம் தனக்குத் தேவையானது போலப் பயன்படுத்திக்கொண்டது என்பதுதான் உண்மை. இதைப் புரிந்துகொண்ட ஊடகங்கள் செய்வதறியாது திகைத்துப் போயின.
எதையும் ‘போராட்டக்
களத்தில் இருந்து நேரடியாக’ ஒளிபரப்பியே பழக்கப்பட்ட ஊடகங்களுக்கு, இத்தாக்குதலின்
போது தாங்கள் அங்கு இல்லையே என்ற ஏக்கமே பல்வேறு கேள்விகளாக வெளி வந்தது. ஆதாரம்
வேண்டும் என்ற கேள்வி பூதாகரமானபோது இந்திய ராணுவம் காணொளியை
வெளியிட இந்திய அரசுக்கு அனுமதி அளித்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசியல் கட்சிகள், கேள்வி கேட்டது சந்தேகத்தால் அல்ல, தாக்குதலை மறுக்கும் பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழிப்பதற்காகத்தான் என்று சொல்லி நழுவின.
பாகிஸ்தான் இப்படி ஒரு தாக்குதலே நடைபெறவில்லை என்று மறுத்தது. எல்லைப் பகுதியில் எப்போதும் போன்ற சண்டைகளே நடந்தன என்றும் அதில் இரண்டு பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என்றும் சொன்னது. அதே சமயம் இத்தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி தரும் என்று சொல்லவேண்டிய கட்டாயத்திலும் இருந்தது. ஆனால் தாக்குதல் நடந்ததை, எல்லையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் நேரில் பார்த்ததாகவும், வெடிகுண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் ட்ரக்குகளில் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.(1)
இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலர் ஜெர்மனியின் தூதருடன் பேசிய ஆடியோவில் உள்ள தகவல்கள் பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டன. அதில் இந்தியச் செயலர் இப்படி ஒரு தாக்குதலே நடைபெறவில்லை என்று சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஜெர்மனியின் இந்தியத் தூதர் அதிகாரபூர்வமாக மறுத்திருக்கிறார். இப்படி ஒரு பேச்சே நடைபெறவில்லை என்றும் இது அடிப்படையற்றது என்றும் அவர் உறுதி செய்திருக்கிறார். இப்படி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளும் அடிப்படையற்ற அவதூறுகள் உடனுக்குடன் ஆதாரத்துடன் அதிகாரபூர்வமாக மறுக்கப்பட்டு வருகின்றன.(2)
பாகிஸ்தான் இந்த வெளிப்படையான சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு எப்படி பதிலடி தரப்போகிறது என்பதை எதிர்கொள்ள நிச்சயம் இந்தியாவும் தயாராகவே இருக்கும். ஆனால் மோதியின் தொடர்ச்சியான சளைக்காத வெளிநாட்டுப் பயணங்களால் உலக அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தாண்டி இந்தியாவை மீறி பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு பெறுவது பெரிய சவாலாகவே இருக்கும்.
இதற்கு முன்பு இப்படி சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்றதில்லை என்ற கூற்றை காங்கிரஸ் மறுத்திருக்கிறது. தி ஹிந்து 2011ல் நடந்த ஆப்பரேஷன் ஜிஞ்சர் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.(3) மனோகர் பரிக்கர் இது பற்றிய தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். கவர்ட் ஸ்ட்ரைக்ஸ் என்றழைக்கப்படும் ரகசியத் தாக்குதல்கள் வேறு. அது எப்போதும் இந்திய ராணுவத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது. அதாவது தேவைக்கேற்ப ராணுவம் தன் முடிவில் தாக்குதல் நடத்திவிட்டுப் பின்னர் அரசுக்குச் சொல்வது. ஆனால் ஊரி தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் அப்படியானதல்ல. அரசு முடிவு மேற்கொண்டு ராணுவத்தின் மூலம் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்வது. அந்தவகையில் இது முதன்முதலாக நடந்த தாக்குதலே. அதுமட்டுமல்ல, இனியும் இத்தகைய தாக்குதல்கள் நடக்கும் வாய்ப்பு உண்டு என்றும் ராணுவம் தன் நிலையைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஊரி தாக்குதலைத் தொடர்ந்து மோதி பாகிஸ்தானியர்களுக்கு விடுத்த செய்தி மிக முக்கியமானது. பாகிஸ்தானின் அப்பாவிப் பொதுமக்கள் வேறு, பாகிஸ்தான் அரசு வேறு என்று சொன்ன மோதி, இந்தியா கணினி மென்பொருளை இந்தியாவெங்கும் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும்போது ஏன் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது என்று தன் ஆட்சியாளர்களைப் பாகிஸ்தானியர்கள் கேள்வி கேட்கவேண்டும் என்றும் கூறினார்.
அதோடு, “இந்தியா
போருக்குத் தயாராக உள்ளது. அந்தப் போர், வறுமைக்கு எதிரான போர். பாகிஸ்தானின்
இளைஞர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் போரை நாம் தொடங்குவோம். பாகிஸ்தானின் குழந்தைகளே, கல்வி அறிவின்மைக்கு எதிரான போரை நாம் மேற்கொள்வோம். யார் வெல்கிறார்கள் எனப் பார்ப்போம்என்று பேசினார். இறுதியாக, ஊரித் தாக்குதலில் உயிரிழந்த 18 ராணுவ வீரர்களின் தியாகமும் வீணாகாது என்றும், உலக அரங்கில் தீவிரவாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த தன் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்தியா பயன்படுத்தும் என்றும் சொன்னார். செப்டம்பர் 29ம் தேதி இந்தியா தனது பதிலை உறுதியாக உலகுக்கு அறிவித்திருந்தது.
இந்தியாவின் முன் இரண்டு பாதைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இரண்டிலும் வலுவாக இந்தியாவால் செல்லமுடியும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதை பாகிஸ்தானே இனி முடிவு செய்யவேண்டும்.
உசாத்துணைகள்:
அடிக்குறிப்புகள்:

Leave a Reply