Posted on 1 Comment

வலம் பிப்ரவரி 2017 இதழ் – முழுமையான படைப்புகள்


வலம் பிப்ரவரி 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.
 

பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் – பி.ஆர்.ஹரன்

என்ன நடக்குது சபரிமலையிலே…? – ஆனந்தன் அமிர்தன்

ஜல்லிக்கட்டு போராட்டம்: சில உண்மைகள் – அரவிந்தன் நீலகண்டன்

தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? – பீட்டர் ஸிங்கர்; தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு – ஹாலாஸ்யன்

துபாஷி (ஆனந்த ரங்கப்பிள்ளை)  – பி.எஸ்.நரேந்திரன்

இசக்கியின் கொடுவாய் (சிறுகதை) – சுதாகர் கஸ்தூரி

ஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் – சந்திர பிரவீண்குமார்

இறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் – ஜடாயு

இராமானுசன் என்னும் சம தர்மன் – ஆமருவி தேவநாதன்

Posted on 1 Comment

இறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் – ஜடாயு

தமிழில் நவீன யுகத்தின் முன்னோடியாக விளங்கிய மகாகவி பாரதியார், தனக்கு முன்பிருந்த இரண்டாயிரமாண்டுக் காலத் தமிழ் இலக்கிய மரபை முழுவதுமாக கண்மூடித்தனமாக வழிபடுபவராக இருக்கவில்லை. விமர்சன நோக்குடனேயே அதனை அணுகினார். ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்’ என்று அவர் அளித்த தரவரிசை அதற்குமுன்பு வேறு யாரும் செய்திராதது. இந்த மூன்று கவிஞர்களையும்தான் தமிழிலக்கியத்தின் உச்சங்களாக மீண்டும் மீண்டும் பல கவிதைகளில் பாரதியார் முன்வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார். இவர்களோடு பாரதியார் பெரிதும் மதித்துப் போற்றிய மற்றொரு மகத்தான தமிழ்க்கவி என்றால் அது தாயுமானவர்தான்.
என்றும் இருக்க உளம்கொண்டாய்


இன்பத் தமிழுக்கு இலக்கியமாய்

இன்றும் இருத்தல் செய்கின்றாய்
இறவாய் தமிழோடு இருப்பாய் நீ!
‘ஒன்று பொருள்; அஃது இன்பம்’ என
உணர்ந்தாய் தாயுமானவனே
நின்ற பரத்து மாத்திரமோ
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
– தாயுமானவர் வாழ்த்து, பாரதியார்

தாயுமானவர் பாடல்களின் தத்துவச் செழுமையும், வாழ்க்கை நோக்கும், கவித்துவமும் பாரதியாரை முழுமையாக ஆட்கொண்டன. தமிழ்ச் சிந்தனை மரபில் இத்தகைய உயர் இடத்தை அவருக்கு பாரதி அளித்திருப்பதற்கு இதுவே காரணம். புதுச்சேரி வாசத்தின்போது, வெளிப்படையாக அரசியல், சமூக விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் வேதாந்த விசாரத்திலும் தத்துவ சிந்தனைகளிலும் மூழ்குவதாக பாரதியாரின் மனப்பாங்கு அமைந்திருந்தது. கவிஞர், அரசியல் செயல்பாட்டாளர், வேதாந்தி என்று பல முனைகளிலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அவர் உள்ளத்திற்குத் தாயுமானவரின் வாழ்க்கையும், அவரது பாடல்கள் பேசும் தத்துவங்களும், தெளிவையும் வழிகாட்டுதலையும் தந்திருக்கக்கூடும்.
வரலாற்றுப் பின்னணி:
தாயுமானவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் நிலையற்ற அரசாட்சிகளாலும், மாபெரும் அரசியல், சமூகக் குழப்பங்களாலும் சூழப்பட்டிருந்த ஒரு காலகட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைபெற்றிருந்த நாயக்க அரசுகள், இஸ்லாமிய நவாப்கள் மற்றும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் காலனியாளர்களின் தாக்குதல்களுக்கும் ஆதிக்கப் போட்டிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சீரழியத் தொடங்கியிருந்த காலம். மிகை அலங்காரங்களும் உயர்வு நவிற்சிகளும் ததும்பும் படாடோபமான சிற்றிலக்கியங்களையும் பிரபந்தங்களையும், மன்னர்களையும் ஜமீந்தார்களையும் மகிழ்விக்கும் கேளிக்கைப் பாடல்களையுமே தமிழ்ப் பண்டிதர்களும் கவிராயர்களும் புனைந்துகொண்டிருந்த காலம்.
இத்தகைய ஒரு சூழலில், கேடிலியப்ப பிள்ளைக்கும் கஜவல்லி அம்மையாருக்கும் இரண்டாவது குழந்தையாகத் தாயுமானவர் பிறந்தார். பிறந்த ஆண்டு, 1707ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. துல்லியமான தரவுகள் இல்லை. சிவபக்தி மணமும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த தாயுமானவர், திருச்சியில் பாடசாலை நடத்தி வந்த சிற்றம்பலத் தேசிகரை முதல் ஆசானாகக்கொண்டு இளம் வயதிலேயே தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த நூற்புலமை பெற்றார். கணிதம், ஜோதிடம், தர்க்கசாஸ்திரம் ஆகிய துறைகளிலும் தேர்ந்தார். அத்துடன், சைவாகமங்களையும், பன்னிரு திருமுறைகளையும், அருணகிரியாரின் திருப்புகழ் போன்ற நூல்களையும் கசடறக் கற்றார். பின்னாட்களில் அவர் புனைந்த தத்துவக் கவிதைகள் அனைத்திலும் அவரது ஆழ்ந்தகன்ற கல்வித்திறம் விளங்குவதனை அவற்றை வாசிப்பவர்கள் உணரமுடியும். 
கல்வியிலும், செல்வத்திலும் திளைத்திருந்தபோதும், இளைஞன் தாயுமானவனது மனம் அதில் நிலைகொள்ளவில்லை, சத்தியத்தைத் தேடியலைவதிலேயே அவருக்கு நாட்டம் இருந்தது. திருச்சி மலைக்கோட்டைப் பகுதியிலேயே அமைந்திருந்த சாரமாமுனிவர் மடம் என்னும் மௌனகுரு மடத்தின் சுவாமிகளிடத்தில் தீட்சை பெற்று வேதாந்த நூல்களையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகக் கற்றார். லௌகீக வாழ்வில் எந்த நாட்டமும் இல்லாபோதும், தந்தையின் மறைவிற்குப் பின் அவர் வகித்த உயர்பதவியை நிர்ப்பந்தத்தினால் ஏற்று, பற்றற்ற மனநிலையில் தனது கடமைகளைச் செய்து வந்தார். 1732ல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசின்றி மறைந்ததால், அவர் மனைவி ராணி மீனாட்சி பதவியேற்றார். அதற்குச் சிறிது காலம் பின்பு, தமது பதவியைத் துறந்து தாயுமானவர் ஊரைவிட்டு வெளியேறி இராமேசுவரத்தில் யோக நிஷ்டைகளைப் பயிற்சி செய்துகொண்டு வந்தார். காதல் விருப்புற்று தன்னை ஏற்குமாறு ராணி வேண்ட, அது முறையன்று என மறுத்து தாயுமானவர் வெளியேறியதாகவும் ஒரு வழக்கு உள்ளது. பிறகு, ராணி மீனாட்சி சந்தாசாகிப்பின் நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்டு அரசிழந்த சோகவரலாற்றுடன் தமிழ்நாட்டில் இந்து மன்னர்களான மதுரை நாயக்க வம்சத்தினரின் உறுதி மிக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.
தாயுமானவர் பின்னர் குடும்பத்தாரின் வேண்டுதலால் ஊர் திரும்பி, திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் சிலகாலம் வாழ்ந்திருந்தார். ஒரு குழந்தை பிறந்து, அதன்பின் மனைவியும் காலமானார். தாயும் இறைவனடி சேர்ந்தார். தனது மகனை அண்ணனின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தாயுமானவர் முறையாக சன்னியாசம் பெற்றார். மௌனகுரு மடத்தின் தலைவராகவும் இருந்தார். இறுதிக் காலத்தில் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டிணத்தில் வாழ்ந்து அங்கேயே 1737 தை மாதம் விசாகத்தன்று பூரணமெய்தினார். அவரது சமாதிக்கோயில் அங்கு இப்போது ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பாடல்கள்:
தாயுமானவர் தன் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது சீடரும் சிறிய தாயாரின் புதல்வருமான அருளைய பிள்ளை என்பவர் எழுதிப் பாதுகாத்து மற்ற சீடர்களுக்கும் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 1452 பாடல்கள் கிடைத்துள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் அவற்றின் உள்ளடக்கத்தை விளக்கும் உபதலைப்புகள் கொண்டு பகுக்கப்பட்டு ஒரே தொகுப்பாக உள்ளன.
இவற்றில் கணிசமான பகுதிகள், பத்துப்பாடல்களும் ஒரேவிதமான கடைசி அடி கொண்டு முடியும் பதிக வடிவில் அமைந்துள்ளன. இந்தக் கடைசி அடியின் வாசகங்களே மகத்தான ஆன்மீக அனுபவம் தரும் மகா மந்திரங்கள் என்னும்போது முழுப்பாடல்களின் மகத்துவம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பரிபூரணானந்தம்:



பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே.
மௌனகுரு வணக்கம்:
மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்
மரபில் வரு மௌனகுருவே.
(மந்த்ரம் என்பது இறைவனின் அருட்சக்தி வாய்ந்த பெயரையும், தந்த்ரம் என்பது அதைக் கையாளவேண்டிய உபாயத்தையும் குறிக்கும்.)
கருணாகரக் கடவுள்:
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணாகரக் கடவுளே.
ஆனந்தமான பரம்:
அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவாகி
ஆனந்தமான பரமே.
சுகவாரி:
சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவாரியே. (சுகவாரி – சுகக்கடல்)
எங்கும் நிறைகின்ற பொருள்:
இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி
எங்கும் நிறைகின்ற பொருளே.
தேஜோமயானந்தம்:
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேஜோமயானந்தமே.
மலைவளர் காதலி:
வரைராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை-
வளர் காதலிப்பெண் உமையே. 
(மலைவளர்காதலி – பர்வதவர்த்தினி என்பதன் தமிழ் வடிவம்)

இவை தவிர்த்த வேறுசில பாடல் பகுப்புகள் அவற்றின் முதற்சொல்லை வைத்து அடையாளப் படுத்தப்படுகின்றன – பொன்னை மாதரை, எனக்கு எனச் செயல், பாயப்புலி, எடுத்த தேகம், கற்புறு சிந்தை, கல்லாலின் என்பது போல.
இதுவன்றி, இரண்டே அடிகளில் அமைந்த ‘கண்ணிகள்’ பலவற்றையும் தாயுமானவர் இயற்றியுள்ளார். திருக்குறள் போல சூத்திர வடிவில் அமைந்து ஆழ்ந்த உட்பொருளை விளக்கும் தன்மை கொண்டவை இவை. சில உதாரணப் பாடல்கள்:
பராபரக்கண்ணி:



எத்திக்கும் தானாகி என் இதயத்தே ஊறித்
தித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே.
நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே.
(பராபரம் – பரம்+அபரம்; மேலானதும், கீழானதும் இரண்டுமே ஆன இறைவடிவம்)


பைங்கிளிக்கண்ணி:



தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத
எல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே.
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம்
வள்ளல் அறிந்தால் எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே.
எந்நாள் கண்ணி:
பொய்க்காட்சி ஆன புவனத்தை விட்டு அருளாம்
மெய்க்காட்சி ஆம் புவனம் மேவுநாள் எந்நாளோ.
தர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டு
நிற்கும் அவர் கண்டவழி நேர்பெறுவது எந்நாளோ.

தத்துவ நோக்கு:
தாயுமானவரின் தத்துவ நோக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் வேரூன்றிச் செழித்திருந்த சைவசித்தாந்தத்திலிருந்து முளைவிட்டு, அதேசமயம் அதன் வரம்புகளைத் தாண்டியும் வளர்ந்து தனக்கான ஒரு தனித்துவத்துடன் மிளிர்வது.
உபநிஷதங்களையும், ஆதிசங்கரரின் பாஷ்யங்களையும், ஆழ்ந்துகற்று அத்வைத வேதாந்தத்தின் தத்துவ சாரத்தை அவர் உவப்புடன் உள்வாங்கியிருக்கிறார். தாயுமானவர் பாடல்கள் அனைத்திற்கும் விரிவான உரையெழுதியவர் சுவாமி சித்பவானந்தர். அந்த உரைகளில் பல இடங்களில் உபநிஷத மந்திரங்களுக்கும் தாயுமானவர் பாடல்களுக்கும் நேரடியாக உள்ள ஒப்புமையை எடுத்துக் காட்டியபடியே செல்கிறார்1. “அடிகள் வடமொழியில் உபநிடதங்களையே நன்கு பயின்றனரென்று தெளிக. தமது நூலிலும் உபநிடத்துட்போந்த சைவக் கருத்துக்களையே வேதாந்தக் கருத்தாகவும் வேதக் கருத்தாக்கவும் கூறினார்” என்று தமது தாயுமானவர் வரலாற்று நூலில் கா.சுப்பிரமணிய பிள்ளை குறிப்பிடுகிறார்2.
யோக பூமிகள், அஞ்ஞான பூமிகள் எனப்படும் ஆழ்மன நிலைகள் குறித்த கருத்தாக்கங்கள் தாயுமானவர் பாடல்களில் வருகின்றன. இவை, யோகவாசிஷ்டம் (தமிழ் வடிவம் ஞானவாசிட்டம் என்று அழைக்கப்படுகிறது) என்ற மாபெரும் யோகநூலில் உள்ளவை. இதன் மூலம் அந்நூல் விரிவாகக் கூறும் சிக்கலான தத்துவ விளக்கங்களையும், பல்வேறு வகையான யோக, தியான முறைகளையும் அவர் பயின்றிருந்தார் என்பது புலனாகிறது. அகத்தியர், திருமூலர், போகர் முதலான சித்தர்களைக் கொண்ட தமிழகத்தின் பதினெட்டு சித்தர் மரபு, கோரக்நாதர் தொடங்கி ஒன்பது சித்தர்களைக் கொண்ட வடஇந்தியாவின் நவநாத சித்தர் மரபு ஆகிய இரண்டு மரபுகளையும் தமது பாடல்களில் அவர் குறிப்பிடுகிறார்.



“வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற


வித்தகச் சித்தர் கணமே” 

என்பது ‘சித்தர் கணம்’ என்ற பதிகத்தின் பாடல்களில் வரும் கடைசி அடியாகும். இதன்மூலம் வேதாந்தம், சைவ சித்தாந்தம், சித்தர்களின் யோகம் ஆகிய மூன்று மெய்ஞான மரபுகளின் இணைவே தனக்கு உவப்பான மார்க்கமாகும் என்று அவர் பிரகடனம் செய்கிறார். தாயுமானவரின் முழுமையான தத்துவ நோக்கைத் தெளிவாக வெளிப்படுத்தும் சொற்றொடர் இது. இத்தகைய தத்துவ இணைப்பு தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த ஒன்று. இதில் தாயுமானவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் குமரகுருபரர். (17ம் நூற்றாண்டு.) தாயுமானவரை முன்னேடியாகக் கொண்டு இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இராமலிங்க அடிகளார். (19ம் நூற்றாண்டு.)
மேற்கண்ட சொற்றொடரில் வரும் சமரசம் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, ஒரு சாரார் மிகவும் தவறான விளக்கங்களை அளிக்கிறார்கள். அதாவது, சமரசம் என்பது முரண்படுகிற இரு பிரிவினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவது. எனவே வேதாந்தம், சித்தாந்தம் என்ற இரண்டு பிரிவினருக்கிடையில் நிலவிவந்த பூசலைத் தீர்த்துவைக்கும் வகையில் இந்த வரியைத் தாயுமானவர் எழுதியிருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது சரியன்று.
சமரசம் என்பதற்கு இன்றைய நடைமுறைத் தமிழில் உடன்படிக்கை (agreement) என்ற பொருள் உண்டாகியிருக்கிறது. ஆனால், யோக மொழியில் அதற்குண்டான பொருள் அதுவல்ல. சமரசம் என்றால் ஒருமை உணர்வு அல்லது ஒன்றாகக் கருதுதல். “ஸமத்வம் யோக உச்யதே” (வேறுபடுவதாகத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே யோகம்) என்கிறது கீதை. “ஒன்றாகக் காண்பதே காட்சி, புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்” என்கிறது ஔவையார் பாடல். “ஸாமரஸ்ய பராயணா” (ஒருமையில் நிலைபெற்றவள்) என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. சமரச சுத்த சன்மார்க்கம் என்று வள்ளலார் கூறும்போதும் ஒருமை என்பதையே சுட்டுகிறார். எனவே, தாயுமானவர் அச்சொற்றொடரில் கூறுவது பூசல்களையும் சமரசங்களையும் பற்றிய வரலாற்றுக் குறிப்பு அல்ல. அவர் பேசுவது தெளிவான யோக மொழி.
இதே ரீதியில், பல தாயுமானவர் பாடல்கள், அதில் உறைந்துள்ள யோக, தத்துவ மொழி சார்ந்த பிரக்ஞையின்றி நேரடியாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்கு உரை எழுதப் புகுந்த சில தமிழறிஞர்களுக்கும், சமயப் புலவர்களுக்கும் போதிய தத்துவ இயல் பயிற்சியும், சம்ஸ்கிருதப் புலமையும் இல்லாததே இதற்குக் காரணம்.
வாழ்க்கை நெறி:
தாயுமானவரின் ஆன்மீகம் என்பது அறிதலின் சிக்கல்களுக்குள் புகுந்து துழாவும் தத்துவங்களுக்குள் மட்டும் அடங்கி விடுவதல்ல, வாழ்க்கையின் போரட்டங்களை நேரடியாக நடைமுறையில் எதிர்கொள்வது. அறிதலின் உயர்நிலையை அடைந்த ஞானியின் மனம் போலித்தனங்களும் விருப்பு வெறுப்புகளும் அற்ற அற்ற தூய உள்ளமாக இருக்கும். அவரது ஆன்ம ஞானம் அனைத்து உயிர்களின் மீதான அன்பாகவும், அருளாகவும், கருணையாகவும் வெளிப்படும் என்பது இந்து ஞான மரபின் அனைத்து குருமார்களும் காட்டிச் சென்ற வழியாகும். தாயுமானவரின் வாழ்விலும் உபதேசங்களிலும் இதைத் தெளிவுபடக் காண்கிறோம்.
‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’ 

என்பது தமிழில் எழுதப்பட்ட என்றென்றைக்குமான மகத்தான வாசகங்களில் ஒன்று.


எங்கெங்கே நோக்கிடினும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கிருப்பது நீ அன்றோ பராபரமே.


எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் உன்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.

தாயுமானவர் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தான் எழுதிய இந்த வரிகளுக்கு இலக்கணமாகவே அவர் வாழ்ந்தார் என்பதை உணர்த்துகின்றன.


அவர் சம்பிரதியாக அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் அரசாங்கப் பத்திரங்களை வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பத்திரங்களைக் கைகளால் கசக்கித் தூள்தூளாக்கினார். அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் தடுமாற்றமடைந்தனர். உடனே “திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரியின்

துகிலில் பற்றிய தீயைக் கசக்கி அணைக்க முயன்றேன். என்னையறியாது இந்தப் பத்திரம் பாழாகி விட்டது குறித்து வருந்துகிறேன்” என்று தாயுமானவர் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து திருவானைக்காவல் கோயிலிலிருந்து அரண்மனைக்கு ஒரு செய்தி வந்தது. தீபாராதனையின் போது கற்பூரம் லேசாகத் தவறி விழுந்து அம்பிகையின் ஆடைமீது விழுந்து தீப்பற்றிக் கொண்டதாகவும், அர்ச்சகர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை அணைத்ததாகவும் நல்லவேளையாக பெரிய தீவிபத்து நிகழாமல் காப்பாற்றப்பட்டதாகவும் செய்தி கொண்டு வந்தவர்கள் கூறினர். இதன்மூலம் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போதும் தாயுமானவரது மனம் எப்போதும் இறைவனிடத்திலேயே ஈடுபட்டுள்ளதால் அவரது உள்ளுணர்வுக்கு இந்த விஷயம் தோன்றியிருக்கிறது என்று அரண்மனையில் இருந்தவர்கள் எண்ணி வியப்படைந்தனர்.
தாம் உயர் அதிகாரியாக வலம்வந்த அதே திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறங்களில் துறவியாகக் கௌபீனம் தரித்து பிச்சை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார் தாயுமானவர். பனிவிழும் அதிகாலையில் அவர் வெற்றுடம்புடன் கண்மூடி அமர்ந்திருந்ததைப் பார்த்து மனம் கலங்கிய ஊர்ச் செல்வந்தர் ஒருவர் விலையுயர்ந்த சால்வையை அவர்மீது போர்த்தி வணங்கிவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அதே சால்வையை ஒரு இளம் வேலைக்காரி அணிந்துகொண்டு நடமாடினாள். அவள் அதை எங்கிருந்தோ திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, பரதேசி ஒருவர் தனக்கு அதை அளித்தார் என்று அவள் கூறியதை யாரும் நம்பவில்லை. அந்தப் பரதேசியிடமே போய் விசாரிப்போம் என்று தாயுமானவரிடம் வந்து கேட்டனர். “அன்னை அகிலாண்டேஸ்வரி அன்றொரு நாள் குளிரில் நடுங்கிக் கொண்டு வந்தாள். என்னிடமிருந்த சால்வையை அவளுக்குச் சார்த்தினேன்” என்று அவர் பதிலளித்தார். பாரதியார் வாழ்க்கையிலும், இதே போன்று தனக்குப் போர்த்திய சால்வையை வண்டிக்காரன் ஒருவனுக்கு அளித்துவிட்டு வீட்டுக்கு வந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னிலை உணர்ந்த ஆத்மஞானிக்கு, யோகமும் போகமும், இல்லறமும் துறவறமும், செயலும் செயலின்மையும் எல்லாம் ஒன்றுதான், அவற்றின் பயன்கள் அவனைக் கட்டுப்படுத்துவதில்லை என்று கீதை கூறும் வாழ்க்கை நெறியை ஏற்பவராகத் தாயுமானவர் இருந்தார். தனது பகவத்கீதை மொழிபெயர்ப்புக்கு எழுதிய விரிவான முன்னுரையில் இதுகுறித்து ஒரு அழகிய தாயுமானவர் பாடலை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் பாரதியார்.
கவித்துவம்:
தாயுமானவரின் தத்துவ நோக்கு போன்றே அவரது கவித்துவமும் தனித்தன்மை கொண்டது. அவரது சொல்லாட்சிகள் அபாரமான அழகும், வீரியமும் பொருளாழமும் கொண்டவை. 18ம் நூற்றாண்டின் பொதுவான தமிழ்நடையிலேயே சம்ஸ்கிருதச் சொற்கள் மிக அதிக அளவில் புழங்கின. அப்படியிருக்கையில், தத்துவப் பொருளைப் பேசவந்த தாயுமானவரின் கவிதைகளிலும் சம்ஸ்கிருதச் சொற்கள் கொஞ்சம் அதிக அளவில் பயின்று வருவது ஆச்சரியமல்ல. ஆனால், இந்த வடசொற்பெருக்கு அவரது தமிழ்க் கவிதையின் ஜீவனைப் பாதிக்காத வகையிலும், அதைச் சிடுக்காக்காத வகையிலும் அமைந்துள்ளது கவனத்திற்குரியது. சம்ஸ்கிருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் அமைந்துள்ள வைணவ வியாக்யானங்களை இன்று சாதாரணத் தமிழ் வாசகர்கள் படித்துப் புரிந்து கொள்வது மிகக் கடினம். ஆனால், தாயுமானவரின் பாடல்கள் அதன் இயல்பான அழகினாலும் கவித்துவத்தினாலும் இன்றைக்கும் அனைத்துத் தமிழர்களும் படித்து இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
தாயுமானவரின் ஒரு புகழ்பெற்ற பாடலை (அறுசீர் விருத்தம்) வழக்கமாக பழந்தமிழ்ப் பாடல்களை எழுதும் முறையில் இல்லாமல், பொருளுக்கேற்றபடி மடக்கி எழுதிக் கீழே அளித்திருக்கிறேன்.

கல்லாத பேர்களே நல்லவர்கள்


நல்லவர்கள்

கற்றும் அறிவில்லாத
என் கர்மத்தை என்சொல்கேன்
மதியை என் சொல்லுகேன்
கைவல்ய ஞான நீதி நல்லோர் உரைக்கிலோ
கர்மம் முக்கியம் என்று
நாட்டுவேன்
கர்மம் ஒருவன் நாட்டினாலோ
பழைய ஞானம் முக்கியம் என்று
நவிலுவேன்
வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும்
த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்
வல்ல தமிழறிஞர் வரின்
அங்ஙனே
வடமொழியின் வசனங்கள்
சிறிது புகல்வேன்
வெல்லாமல்
எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தை
என் முத்தி தருமோ
வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர்கணமே.

மெய்யறிவு ஒன்றே முக்தியளிக்குமே அன்றி, வெற்றுத் தர்க்கங்களால் பயனொன்றுமில்லை என்பதைக் கூறவருகிறது இந்தக் கவிதை. இந்த ஆன்மீகமான கருத்தைத் தாண்டி, இக்கவிதையிலுள்ள அங்கதமும் பகடியும் சுய எள்ளலும் கலந்த தொனி ரசனைக்குரியது.


இத்தகைய பன்முகப் பான்மைகள் கொண்ட தாயுமானவர், பாரதியார் போன்ற ஒரு கூர்மையான சிந்தனையாளரை, வசீகரித்ததில் ஆச்சரியமே இல்லை. ஆனால், புதிய நூற்றாண்டில் பிரவேசித்துக் கொண்டிருந்த இந்தியாவின் நவீனக் கல்விமுறையில் தாயுமானவர் போன்ற மகான்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தியாவின் இளைய தலைமுறைகள் வளர்கிறார்களே என்ற பெரிய கவலை அவருக்கு இருந்தது. ‘நமது கல்விமுறை’ என்ற கட்டுரையில் அதனை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:

”நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள். அவர்கள் நவீன காலத்துப் புதுமைகள் சிலவற்றை அறியாவிடினும் ஒவ்வொரு விஷயத்தில் மிகவும் அருமையான உயர்வு பெற்றவர்களாயிருக்கக் கூடுமென்று நம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. நம் காலேஜ் மாணாக்கர்களுக்குள்ளே தாயுமானவர், சங்கரர் முதலியவர்களின் சரித்திரத்தை உணராதவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ இருக்கிறார்களல்லவா?


தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்.”

பாரதியாரின் இந்த விசனம் இன்றும் பொருள் பொதிந்ததாகவே உள்ளது என்பது தான் சோகம்.


*****


சான்றுகள்:
[1] ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்கள் – சுவாமி சித்பவானந்தர் உரையுடன், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை (1988)
[2] தாயுமான சுவாமி வரலாறும் நூலாராய்ச்சியும் – கா.சுப்பிரமணிய பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1977)

Posted on Leave a comment

ஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் – சந்திர பிரவீண்குமார்

2016 நவம்பர் 25ம் தேதி கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய கம்யூனிச ஆட்சியாளர்  என்ற பிம்பத்தைத் தாண்டி அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இங்கு பலருக்கும் தெரியாது.
காஸ்ட்ரோவுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். கம்யூனிஸ்டுகளைக் கண்டால் பிடிக்காதவர்கள் கூட, உண்மையான கம்யூனிஸ்ட் மறைந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி, கல்வி வசதி போன்ற திட்டங்களை காஸ்ட்ரோ வெற்றிகரமாகச் செயல்படுத்தினார் என்ற பிரசாரமும், புரட்சியாளர் பிம்பமும் இந்தியாவில்கூட கணிசமான இளைஞர்களை அவர்பால் ஈர்த்தது நிஜம்.
“சுதந்திரம் என்பது விரிவடைதல்; தனிமைப்படுதல் அல்ல” என்பார் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். ஆனால், ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில், உலக அரங்கில் இருந்து கியூப மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பொருளாதார வளர்ச்சியோ அல்லது வீழ்ச்சியோ, அதை காஸ்ட்ரோவின் கம்யூனிச அரசுதான் உறுதி செய்யும். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூப மக்களுக்கு மிகச்சில நன்மைகள் கிடைத்தாலும், கம்யூனிசம் என்ற பெயரில், அவர்களின் அடிப்படை உரிமைகள் முழுதுமாக மறுக்கப்பட்டன. கடந்த 57 ஆண்டுகளாகத் தொடர்ந்த காஸ்ட்ரோவின் சர்வாதிகாரத்தில், அந்த மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் உலக வரலாற்றில் சிவப்பு மையால் எழுதப்பட்டவை.
உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஜனநாயகம் பேசினாலும், கியூபாவில் மட்டும் ஜனநாயகத்தை யாரும் பேச முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு இடமில்லை. ஒற்றை கட்சி முறைதான் வலுவான தேசத்துக்கு அவசியம் என்று அங்கே பிரசாரம் செய்யப்படுகிறது. அரசைத் தவிர மற்ற யாரும் ஊடகங்களை நடத்த முடியாது. மனித உரிமைகளைப் பேச முடியாது. இதை காஸ்ட்ரோவை ஆதரிப்பவர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அதனால்தான் அவரால் வலுவாகப் போராட முடிந்தது என்று அதற்கு ஒரு நியாயமும் கற்பிப்பார்கள்.
இதை விடப் பெரிய கொடுமை, கம்யூனிஸ்டுகள் நாத்திகவாதிகள் என்பதால், கடந்த 1969 முதல் 1998ம் ஆண்டு வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம் கியூபாவில் தடை செய்யப்பட்டிருந்தது. இதையெல்லாம் தட்டிக் கேட்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
காஸ்ட்ரோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, கியூபாவில் இருந்து கடல் மார்க்கமாக 150 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்காவின் மியாமி நகருக்குத் தப்பியோடிய அகதிகளின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் மேல் இருக்கும். அப்படி தப்பியோடுபவர்கள் பிடிப்பட்டால், கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் தப்பியோட முயன்றவர்கள், எதிர்க்குரல் எழுப்பியவர்கள் என சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1994 ஜூலை 13ம் தேதி கியூபா ராணுவத்தினர் நடத்திய தக்போட் படுகொலை புகழ்பெற்றது. அந்தப் படுகொலையில் மட்டும், அமெரிக்காவுக்குத் தப்பியோட முயன்ற குழந்தைகள், அவர்கள் தாய்மார்கள் என 37 பேர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், கியூப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பவே இல்லை என்பதும் உண்மையல்ல. ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் 22 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்மாண்டோ வல்லாதரஸ் என்பவர் எழுதிய Against All Hope (அனைத்து நம்பிக்கைகளுக்கும் எதிராக) என்ற புத்தகம், வல்லாதரஸுக்கு ‘கியூபாவின் சோல்செய்னிஸ்டின்’ (சோவியத் ரஷியாவின் கம்யூனிச அரசு அடக்குமுறைக்குக்கு எதிராகக் குரலெழுப்பிய புகழ்பெற்ற எழுத்தாளர் சோல்செய்னிஸ்டின்) என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. மற்றொரு எழுத்தாளரான ரைனாடோ அரேனஸ் எழுதி 1993ம் ஆண்டில் வெளியான Before Night Falls (இரவு வீழ்வதற்கு முன்பு) என்ற நாவல், நாடகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. ஆனால், இந்த உண்மைப் பிரகடனங்கள் அனைத்தும் கியூபாவின் கம்யூனிச பிரசாரப் பனியில் உறைந்துவிட்டன.
ஃபிடல் காஸ்ட்ரோவை எதிர்த்தவர்கள் என்றில்லை, ஆதரித்தவர்களும் துன்பங்களையே அனுபவித்தனர். கியூபா கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், அதன் பொருளாதாரம் சோவியத் ரஷியாவையே நம்பியிருந்தது. கம்யூனிசம் வீழ்ந்து ரஷியா சிதைந்ததால், கியூபாவின் பொருளாதாரமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் அதிக அளவில் சர்க்கரையை ஏற்றுமதி செய்த நாடு என்ற பெருமை போய், சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. நாட்டுநலன் காக்க மக்கள் பட்டினியை ஏற்கத் தயாராக வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்தார் காஸ்ட்ரோ. அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் பெரும் எண்ணிக்கையிலான கியூபக் குடிமக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர்.
இதை விடவும், காஸ்ட்ரோவின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அவருடன் இணைந்து கியூபாவில் கம்யூனிசப் புரட்சி செய்த சேகுவேரா, பொலிவியா நாட்டில் புரட்சி செய்ய முற்பட்டபோது, 1967ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கும் காஸ்ட்ரோவுக்கும் தொடர்புண்டு என்று குற்றம்சாட்டுகிறார், சேகுவேரா பற்றி ஆராய்ச்சி செய்து வரும் கியூபப் பத்திரிகையாளர் ஆல்பர்டோ முல்லர். கடந்த 1965ல் அல்ஜீரியாவில் நடைபெற்ற அஃப்ரோ-ஆசிய மாநாட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு சோவியத் ரஷியா உடந்தையாக இருப்பதாக, சேகுவேரா மறைமுகமாகக் குற்றம்சாட்டியதாகவும் அது முதலே காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்கும் கருத்து மோதல்கள் நிலவி வந்ததாகவும் அவர் கூறுகிறார்.
தனது தாய்நாடான அர்ஜெண்டினாவுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த சேகுவேராவை பொலிவியாவுக்குப் புரட்சி செய்ய காஸ்ட்ரோ அனுப்பினார் என்றும், அங்கு சேகுவேராவுக்கு ஆபத்து நேர்ந்தபோது அவரைக் காப்பாற்ற கியூப ராணுவத்தினர் விரும்பினாலும் காஸ்ட்ரோ அனுமதியளிக்க மறுத்துவிட்டார் என்பதும் ஆல்பர்டோ முல்லரின் குற்றச்சாட்டு.
சோவியத் ரஷியாவில் ஸ்டாலின் பல்வேறு கொடுமைகளைப் புரிந்தாலும், அவருக்குப் பின், குருசேவ் போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் என்று இருக்கவே செய்தனர். ஸ்டாலின் செய்த கொடுமைகளை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் அவர்கள்தான். இதை காஸ்ட்ரோ நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்.
எனவே பொதுவுடமைவாதி என்று தன்னை முரசறைந்து கொண்டாலும், முடியாட்சி வழக்கமான வாரிசு நியமனத்தை மறக்காமல் கடைப்பிடித்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களை அவர் உருவாக விடவில்லை. அவருக்குச் சமமான போட்டியாளராக இருந்த சேகுவேராவும் ஒழிக்கப்பட்டுவிட்டார். காஸ்ட்ரோவுக்குப் பிறகு அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவையே கியூபாவின் அடுத்த அதிபராக்கினார். ஆனால், மற்ற வாரிசுகளை அவர் வெளியே கொண்டு வரவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஐந்து மனைவிகளும் ஒன்பது வாரிசுகளும் இருப்பதாக, ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன. இது தவிர பல்வேறு பெண்களுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கியூபாவில் இருந்த சர்வாதிகாரத்துக்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் குடும்பத்தில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஃபிடல் தங்கை ஜுவாலா, கடைசி 40 ஆண்டுகள் அவருடன் பேசவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில், “என் அண்ணன் ஒரு அரக்கன்” என்று அவர் குறிப்பிட்டார். ஃபிடல் ஆயுதப் போராளியாக இருந்த காலத்தில், திருமண உறவுக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பிறந்த அலினா பெர்னாண்டர்ஸ், தனது தந்தையை “சர்வாதிகாரி” என்று விமர்சித்து வருகிறார்.
கடைசி காலத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு தானே நியாயம் கற்பித்துக் கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விதித்த தடையை விலக்கினார். “அன்பையும், சகோதரத்துவத்தையும்தான் கிறிஸ்தவம் கடைப்பிடிக்கிறது என்றால், அதை ஏற்கத் தயார்” என்று அறிவித்தார். ஆனால், இந்த வாதத்தை கம்யூனிஸ்டுகளே ஏற்க மறுக்கிறார்கள். தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள கிறிஸ்தவத்திடமும் அவர்கள் மூலமாக அமெரிக்காவிடமும் காஸ்ட்ரோ சரணடைந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி இப்படிப் பல ஆதாரபூர்வமான செய்திகள் உலகளவில் அறியப்பட்டிருந்தாலும், இந்தியா உட்பட பல நாடுகளில் அவை வெளிச்சத்துக்கு வரவில்லை. காஸ்ட்ரோவின் நடவடிக்கைகளுக்குப் பொதுவுடமை பின்னணி அளிக்கப்பட்டதும், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச எழுத்தாளர்களும் ஊடகங்களும் ஃபிடல் காஸ்ட்ரோவை உயர்த்திப் பிடித்ததுமே அதற்குக் காரணமாகும்.
ஆனால், உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்தால், ரஷியாவின் ஸ்டாலின், ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, கம்போடியாவின் போல்பாட் போன்ற சர்வாதிகாரிகளின் பட்டியலில், கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் இயல்பாகவே கலந்து விடுகிறார்.


Posted on Leave a comment

இசக்கியின் கொடுவாய் (சிறுகதை) – சுதாகர் கஸ்தூரி

 “போங்கல, நிக்கானுவோ, அவ என்ன ஏசுதான்னு கேக்கணும் என்னலா?” சிவராசன் மாமா அனைவரையும் துண்டை சுழற்றி விரட்டிவிடுவார். எசக்கி என்ன சொற்கள் கொண்டு ஏசினாள் என்பது தெரியாமல் துக்கத்தில் நாங்கள் தயக்கத்துடன் அங்கிருந்து நகர்வோம்.
எசக்கி பே(ஏ)சுவதை சிறுவர்களால் மட்டுமே கேட்கமுடியும். பெரும்பாலும் பாலுணர்வு அர்த்தம் புரியாத வயதில், சொற்களின் தீவிரம் புரியாது, கோபத்தில் அவள் இரைவதில், அவள் கைகள் காட்டும் புணர்வுக்கான சைகை வசவுகளை சிரிப்புடன் பார்த்திருப்போம். எசக்கியின் வசவுகள் முழுதும் காணாமற்போன அவளது கணவனையோ, குடியால் சீரழிந்த அவள் மகனையோ உருவகப்படுத்தியே இருக்கும். அவள் மகள் சற்றே தறிகெட்டுப் போயிருந்த நிலையில், அவசரமாக எவனுக்கோ விக்கிரமசிங்கபுரத்தில் மணம் செய்து கொடுத்திருந்தாள். அந்தப்பெண் அங்கு தொழில் செய்து வாழ்க்கை நடத்துவதாகவும், அவ்வப்போது எசக்கியைப் பார்க்க வருவதாகவும் வதந்தி இருந்தது. தொழில் என்பதன் பொருள் புரியாமல், மலங்க மலங்க விழித்து வதந்தி கேட்ட நாட்கள் அவை.
எசக்கி சற்றே இளைத்த உடல்வாகு. தீனமாகத்தான் பேசுவாள். மார்கழியில் கோவில் வாசலில் நெல்லிக்காய், அருநெல்லிக்காய் படியாய் அளந்து விற்பாள். இலந்தைப்பழ சீசனில் இரு கூடை நிறைய இலந்தைப்பழம் இருக்கும். மதியம் முதல் மாலை வரை, நாடார்க் கடை அருகே புண்ணாக்கு விற்பாள். “ஏட்டி, அங்கிட்டு போன்னேம்ல்லா? வாபாரத்த கெடுக்கியே? எங்கடலயும் புண்ணாக்கு வச்சிருக்கேம்லா?” என்று திட்டும் நாடாரின் குடும்பத்தினரின் நடத்தையைச் சந்தேகித்து ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பாள். வசவு என வரும்போது மட்டும், அவள் ஒரு ஆம்ப்ளிஃபயரை அவசரமாக முழுங்கியது போலத் தோன்றும். கரகரத்து மேலும் கீழுமாய் ஏறி இறங்கும் குரல் திடீரென சரியாகி பெரும் ஒலியில் வீதி முழுதும் கேட்கும்.
“எம்பொளப்புல மண்ணள்ளிப் போடுற நாடாரே ஒம்ம…” எனத் தொடங்கும் அவள் வசவு வரிகளில் நாய் நரி கிளி என்று விலங்கினங்களுடனான புணர்ச்சி விகாரம் மேலோங்கி நிற்கும்..
“இந்த மாமா பெருசால்லா இருக்காரு? அவர எப்படி…?” என்ற லாஜிக்கான கேள்வியை செல்வராஜ் முன்வைக்க, அனைத்துப் பயல்களும் அதனை சீரியஸாக யோசித்து, இறுதியில் அவனே, அவனது மாமாவிடம் கேட்டுத் தெளிந்து கொண்டு வரட்டும் என தீர்மானித்தோம். செல்வராஜும் முதலில்  ‘நா மாட்டேண்டே’ என்று பிகு பண்ணி, பின் ஒத்துக்கொண்டான்.
அடுத்த நாள் முதல் இருவாரங்களுக்கு அவன் எங்களோடு சேர்ந்து பள்ளி வரவில்லை. கூப்பிட கூப்பிட கேட்காது தனித்து முன் நடந்தான். அவனுக்கு படு கோபம் வரவைக்கும் “சீப்புள்ள” என்றபோதும் திரும்பி வந்து அடிக்கவில்லை. அதன்பின்தான் விசயம் தெரிந்தது.
“ஒக்காளி, இந்த வயசுல இது தெரியணும் என்னலா?” என்றபடி மாமா, இடுப்பில் இருந்த பச்சை பெல்ட்டை எடுத்து ரெண்டு அறை விட்டதும், அவன் “யாத்தீ” என்று வாய்க்காங்கரை வழியாக ஓடியதையும், பின்னாலேயே ”நில்லுல, ஓடினே கொன்னுறுவேன்” என்று அவன் தாய் வீறிட்டுக்கொண்டே துரத்தி ஓடியதையும் கண்ணனின் தம்பி பார்த்ததாகவும், அது உண்மை என்று சாஸ்தா முன்னாடி சத்தியம் செய்வதாகவும் உறுதி சொன்னான். அதன் பின் சைஸ் பற்றிய தருக்கங்களை விட்டுவிட்டோம்.
எசக்கி எந்தச் சிறுவனுக்கும் சிறுமிக்கும், கொடுத்த காசுக்கு அதிகம் நெல்லிக்காய் தந்ததில்லை. அருநெல்லிக்காய் கூட இரண்டு கூட விழுந்தால், கையைப் பிடித்து நிறுத்தி அதனைக் கூடையில் போட்டுக்கொள்வாள். “நாம்போயி பொறுக்குதேன். இவனுக மேல்டாக்ல வந்து அஞ்சிசாக்கு (அஞ்சு பைசாவுக்கு) அள்ளிட்டுப் போவகளாம். எங்கையி என்ன ***லயா சொருகிட்டு நிக்கி?”
ஏன் அவள் இத்தனை வசை பாடுகிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை. பேசினால் மானம் போகும் என்பதால் அவளிடம் பேசவே பலரும் பயந்தார்கள். சிவராசன் மாமா மட்டும் அவளிடம் பேசுவார் “ஏட்டி, ஏன் நாயி கணக்கா குலைக்க? அன்பாத்தான் பேசேன்” என்பார் அவளைச் சீண்டி விடுவதற்கு. அதன்பின் அரைமணி நேரத்துக்கு ரோட்டில் நடப்பவர்கள் நின்று அவள் கத்துவதை வேடிக்கை பார்ப்பார்கள். சிவராசன், ஏதோ கூண்டில் இருக்கும் மிருகத்தைச் சீண்டிவிட்டு தைரியமாக நிற்கும் ரிங் மாஸ்டர் போல பெருமிதமாய் ஒரு புன்னகையுடன் அனைவரையும் பார்ப்பார்.
ரிடையர் ஆகி வந்திருந்த ரோசம்மாள் டீச்சர் “இவமேல சாத்தான் இறங்கியிருக்கு, கர்த்தர் மனமிறங்கினா சாத்தான் ஓடிறும். 
செபக்கூட்டத்துக்கு வாரியா எசக்கி?” எனக் கேட்கப்போக, எசக்கி பேசின பேச்சில் அவர் தன்னையே சிலுவையில் அறைந்த வலியில் துடித்து ”சேசுவே, இவள ரச்சியும்” என்று விசும்பியபடி, குடை விரித்து விரைந்தார். அதுதான் எசக்கியை மனிதராக்கவோ மதம் மாற்றவோ நடந்த கடைசி நிகழ்வு என நினைக்கிறேன். வசவு மழை நிற்கவே இல்லை.
“அவ சம்பாரிக்காளே, யாருக்கு சேத்து வைக்கா?” என்று கேட்டார் விறகுக்கடைத் தேவர். “அவ பொண்ணுக்காயிருக்கும், இல்ல அவ பேத்திக்கா?” என்றார் அங்கு ஓசி பேப்பர் படிக்க வந்த ஜோசப் தங்கராஜ். தினசரியில் ‘நீர்மட்டம்’, சிந்துபாத் படிக்க வந்த நாங்கள் இதையும் கேட்டுக்கொண்டிருந்தோம்.
’ப்ச்’என்று பல் குத்தித் துப்பியபடி சிவராசன் சொன்னார். “அவ பொண்ணுதான் மலந்து கிடந்து சம்பாரிக்காளே? பேத்தி மேல ஒரு பாசம், எசக்கிக்கு பாத்துகிடுங்க. அவ எப்பவாச்சும் எங்கிட்ட சொல்லுவா ‘சாமி, எம்பேத்தியாச்சும் நல்ல பொண்ணா வருவாள்லா? அவள இந்த தாயளிப்பயலுவ சீரளிச்சுறக் கூடாது. அதான் எம்பயம்.”
“நீரு என்ன சொன்னீரு?” என்றதற்கு ஜோசப் தங்கராஜ் புன்னகைத்து “தொளிலு செய்யுறவ மவ எப்படி வருவா? பூப்பெய்தினா தொளிலுதான் அவளுக்கும். பன்னிக்குட்டி மலந்தான திங்கும்? சோறா திங்கும்?”
“அடக்கிப் பேசுவே” அதட்டினார் சிவராசன். “அவளும் மனுசிதானவே. என்னமோ போறாத காலம். அதுக்கு சின்னப்புள்ளய இப்படி அசிங்கமாப் பேசுதீரே? விளங்குவீரா நீரு?”
ஜோசப் துணுக்குற்று “சும்மா ஒரு ஜோக்கு” என்று வழிந்தாலும், சிவராசன் அவரைக் கோபமாகவே பார்த்துக்கொண்டிருந்தார்.
திடீரென எசக்கியைக் காணவில்லை. இரு நாட்கள் வசவு நாடகம் நடக்காத ஏமாற்றத்தில் நாங்கள் இருந்தாலும், பின்னர் எசக்கி இல்லாத வெற்றிடமும், வசையில்லாத மாலைப்பொழுதுகளும் பழகிப்போயின. அவள் மெல்ல மெல்ல நினைவுகளிலிருந்து மறைந்து போனாள்.
ரு மாதம் கழித்து கோவிலில் அலுவலகக் கட்டிடத்தினுள் பெரிய சத்தத்தில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. சிவராசன் கோயில் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“ஆமாவே, எசக்கியோட பைசாதான். அவ உடம்பு அழுக்கோ, வாய் அழுக்கோ, மனசு சுத்தம். அவ, கடவுளுக்குன்னு கொடுத்ததை மறுக்க உங்களுக்கு உரிமை இல்லை.”
“சார்வாள், குதிக்காதயும். நாங்க எங்க மாட்டம்னோம்? யாருக்குன்னுவே இதுக்கு ரசீது கொடுக்க? ரெண்டு பவுன் சங்கிலி… கோவிந்தா கணக்கு எழுத முடியாதுவே. அறநிலைத்துறை அதிகாரி இப்ப ஒரு முசுடு தெரியும்லா?”
“வழி இருக்கும்வே, அவர்கிட்ட பேசிப்பாரும்.”
“சரிய்யா, இவ்வளவுதான் அவ வச்சிருந்தான்னு உமக்கு எப்படித் தெரியும்? எதுக்கு கேக்கேன்னா, நாளக்கி போலீஸ் எதுவும் விசாரணைன்னு வரக்கூடாதுல்லா?”
சிவராசன் “எங்கிட்ட கொடுத்தாவே, ஒரு மாசமுன்னாடி. ‘சாமி, பேத்தியப் பாக்கப் போறன். திரும்பி வராட்டி, இத கிருஷ்ணங்கோயில்ல சேத்திருங்க’ன்னா. ‘ஏட்டி, இதென்னா, புதுசா சொல்லுத?’ன்னேன். ‘பொண்ணு வீட்டுல பேத்தி இனிமே நிக்கக்கூடாது சாமி. அது எப்ப வேணாலும் திரண்டுரும், கேட்டியளா? அதான் ஒரு முடிவுலதான் போறேன்’ன்னா” என்றார்.
“பெறவு?” என்றார் கோயில் அதிகாரி ஒருவர். அவரது முன்வழுக்கையில் ட்யூப்லைட்டின் ஒளி சற்றே மின்னியது.
“சரி, பேத்திய நீ கூட்டிட்டு வந்தா என்ன செய்வேன்னேன். ‘பாப்பம், விதி என்ன எழுதியிருக்கோ? மாப்பிள ஒரு முரட்டு ஆளு. அவள வச்சி சம்பாரிக்கற மாரி, பொண்ணையும் வச்சி சம்பாரிக்க நினைச்சிருக்கான். போய்க்கேட்டேன்ன, செருக்கியுள்ள, என்ன செய்யுமோ’ன்னு அழுதா.”
சிவராசன் மேலே தொடர்ந்தார். “ ‘என் அழுகின வாய வச்சுத்தான் இத்தன வருசம் என் ஒடம்ப சுத்தமா வச்சிருந்தேன். இங்கன இருக்கற தயாளிய, கொஞ்சம் பலவீனமா இருந்தா, அசிங்கப்படுத்திருவானுவோ. இது சின்னப் புள்ள பாத்தியளா. என்ன மாரி அசிங்கமா பேசத்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கா. பயந்த புள்ள. என்ன செய்யும்? எதாச்சும் ஆசிரமம் இருக்காய்யா? சேத்துவிடுவீயளா’ன்னா. எனக்குத் தெரியாதுன்னேன். அழுதுகிட்டே டவுண்பஸ் ஏறிப் போயிட்டா. சரி கதய விடும். இந்த சங்கிலிய என்ன செய்யணுமோ செஞ்சுக்கோரும்.”
இருநாட்கள் கழித்து மாலையில் பள்ளி விட்டு எசக்கி வழக்கமாய் அமர்ந்திருக்கும் இடத்தினருகே பெரிய கூட்டம். ஓ வென ஒரு பெண்ணின் அழுகை. “பெணம் கிடக்குலே. பாக்காதீய ஓடிப்போயிரு” என்று எவரோ எங்களை விரட்டிக்கொண்டிருந்தார். “லே, பொணத்தைப் பாக்கும்போது வவுத்தப் பிடிச்சுக்கிட்டு பாக்கணுமாம். பாட்டி சொல்லிச்சு” என்ற செல்வராஜின் அறிவுரைப்படி, வயிற்றைப் பிடித்துக்கொண்டே, மெல்ல உள்ளே நுழைந்து எட்டிப் பார்த்தோம். ஊதிய உடலொன்று மல்லாந்து கிடக்க, அதனருகே ஒரு நடுத்தர வயதுப்பெண் ஒருத்தி அரற்றிக் கொண்டிருந்தாள்.
“பாவி மவளே, போறதுதான் போற, எம்புள்ளய என்னட்டி செஞ்ச? எங்கிட்டு கொண்டு போய் விட்ட? தே..யா மவளே. அதாண்ட்டி நல்ல சாவா இல்லாம குளத்துல விழுந்து செத்த… இங்கனயே புளுத்துக் கிடந்து நாறுட்டீ…”
“ஏ, செத்த அம்மயப் பாத்து சொல்ற பேச்சாட்டி இது?” யாரோ அவளை அடக்க, அவள் வெகுண்டு எழுந்தாள். “எவம்ல என்னச் சொல்றது? தே..மவனே. முன்னாடி வால” என்று அசிங்கமாகத் தொடங்கினாள். “எசக்கி பொண்ணு பின்ன எப்படி இருப்பா?” என்றார் எவரோ.
“இந்தாட்டி, நீ எடுக்கலன்னா, நாங்க பொணத்த எடுக்கணும். கோவிந்தாக் கொள்ளி போட்டுறுவம்” என்றார் சிவராசன். “இந்த தே..நாய என்ன வேணும்னாலும் செய்யி. நாம் போறேன். எம்பொண்ணக் காங்கலயே?” அழுது அரற்றிக்கொண்டே அவள் ஓட்டமும் நடையுமாய், வாய்க்காப் பாலம் அருகே திரும்பி, சாஸ்தா கோவில் பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்த விக்கிரம சிங்கபுரம் டவுண் பஸ்ஸில் அவசரமாக ஏறினாள்.
“சரி. தூக்குங்கடே. ஏ, ஆத்துப்பாலம் பக்கம் சுடுகாட்டுல எரிச்சிருவம்” என்ற ஒருவரின் குரலுக்கு நால்வர் பாடையைத் தூக்கினர்.
எசக்கி போகிற வழியில் எழுந்து “ஏல, ஒன்ன…” என்று ஏதோ திட்டிவிடுவாளோ என்று பயந்துகொண்டே வயிற்றை இறுகப் பிடித்து சிவராசன் அருகே நான் நின்றிருந்தேன்.
முன்வழுக்கை கோயில் அதிகாரி சிவராசன் அருகே வந்தார். “நேத்திக்கு ஒரு சின்னப் பொண்ணை மதுரைக்கு முத பஸ்ல கூட்டிட்டுப் போனீயளாமே? காசி சொன்னான். யாரு அது?” என்றார்
“எம் பேத்தி” என்றார் சிவராசன். “அங்கிட்டு ஒரு போர்டிங்க் ஸ்கூல்ல சேத்திருக்கம். லீவுக்கு வந்திருந்துச்சி.”
“ஏம்வே, எசக்கி பேத்திய எங்கிட்டு கொண்டு போய் விட்டிருப்பா?”
“எவங்கண்டான்?” என்றார் சிவராசன் குளக்கரைப் படிகளைப் பார்த்தபடி.
Posted on Leave a comment

துபாஷி (ஆனந்தரங்கம் பிள்ளை) – பி.எஸ்.நரேந்திரன்

இன்றைக்கு அறியக் கிடைக்கும் இந்திய வரலாறு முற்றிலும் மழுப்பல்களாலும், பொய்களாலும், புனைகதைகளாலும் ஆன ஒன்று. இந்திய சுதந்திரத்திற்குப்பின் இந்திய வரலாற்றை எழுதப் புகுந்த இடதுசாரிகளும், கிறிஸ்தவச் செயற்பாட்டாளர்களும், நேருவியச் சிந்தனையாளர்களும் உண்மையான இந்திய வரலாற்றை அவர்களின் இஷ்டத்திற்குத் திரித்து எழுதினார்கள். அந்த வரலாற்றையே உண்மையான வரலாறாக நிறுவ முயன்று, அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
துரதிருஷ்டவசாக இந்தியப் பெரும்பான்மையும், சுதந்திரத்திற்குப் பின் அவர்களை ஆள வந்தவர்களும் இது குறித்த அறிதல் சிறிதும் இல்லாதவர்களாக இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள். இனிமேலும் அது மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே நான் நினைக்கிறேன். தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்ளாத எந்தவொரு சமுதாயமும் மெல்ல மெல்ல அன்னியர்களுக்கு இடம் கொடுத்து அவர்களிடம் அடிமைப்பட்டு அழிந்து போகும். தன்னுடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து தெளிந்த ஒருவனுக்கு மட்டுமே, தான் எப்படி வாழவேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாறே மீண்டும் மீண்டும் இந்தியர்களின் மீது திணிக்கப்படுகிறது. அது ஓரளவிற்கு உண்மையென்றாலும் அதுவே உண்மையும் அல்ல. அதனையும் தாண்டி இந்திய வரலாறு நீண்டது. நெடியது. அதனை அறிந்து கொள்ளாத அல்லது அறிந்து கொள்ள முயலாத இந்தியன் மீண்டும், மீண்டும் அடுத்தவனுக்கு அடிமைப்படுவான். அன்னியரின் வரலாற்றையே தனது வரலாறாகவும் நினைக்க முற்படுவான். அதுவே இன்றைக்கு இந்தியாவில் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. பைபிளும், குரானும் அன்னியர்களின் வரலாறே அன்றி வேரென்ன?
நம்மை வெற்றி கொண்டவர்களால் எழுதப்பட்ட வரலாறே இன்றைக்குப் பெரிதும் நமக்குக் கிடைக்கிறது என்பது உண்மையே. அதேசமயம், அதே காலத்தில் வாழ்ந்த பிற இந்தியக் குடிமக்கள் எழுதிய வரலாறுகள் அல்லது வரலாற்றுக் குறிப்புகள் பெருமளவிற்கு வெளிச்சத்திற்கு வரவில்லை. அல்லது அதனை நாம் பொருட்படுத்தவில்லை. அவர்கள் நமக்கு அளிக்கும் சித்திரம் முற்றிலும் மாறுபட்டது. அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை ஆழமாக ஆய்ந்து அறிய முற்பட வேண்டும். நமது கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இதற்கான முனைப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த வகையில் இந்தியர்களால், குறிப்பாகத் தமிழர்களால் பெரிதும் உதாசீனப்படுத்தப்பட்ட ஆனந்த ரெங்கம் பிள்ளை நாட்குறிப்பு மிக முக்கியமானதொரு ஆவணம். பாண்டிச்சேரியை ஆண்ட பிரெஞ்சு கவர்னர்களின் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ‘துபாஷி’ ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1736ம் வருடம் துவங்கி 1761ம் ஆண்டு வரையிலான இருபத்தைந்து ஆண்டு காலகட்டத்தில், தான் கண்டு கேட்டு அனுபவித்தவற்றைக் குறித்து எழுதி வைத்த தகவல்களே இன்றைக்கு ‘ஆனந்த ரெங்கம் பிள்ளை’ நாட்குறிப்பாக அறியப்படுகிறது. அதில் அறியக் கிடைக்கும் வரலாற்றுத் தகவல்கள் நமக்கு முற்றிலும் வேறொரு உலகத்தைக் காட்டுகின்றன. ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் பெயர்க்கப்பட்ட அந்த நாட்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
*****
னந்த ரெங்கம் பிள்ளை, 1709ம் வருடம் மார்ச் மாதம் சென்னையை அடுத்த பெரம்பூரில், வணிகரான திருவேங்கிட பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். 1716ம் வருட காலத்தில் திருவேங்கிட பிள்ளை, பிரெஞ்சு அரசாங்கத்தில் அவர்களுக்கு உதவும் ஏஜெண்டாகப் (courtier) பணிபுரிந்த அவரது மாமனாரான நைனா பிள்ளையின் அறிவுறுத்தலின் பேரில், குடும்பத்துடன் பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்தார். அன்றைக்கு பாண்டிச்சேரி கவர்னராக இருந்த ஹெர்பெர்ட்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு அழைப்பு அனுப்பியதாகத் தெரிகிறது. திருவேங்கிட பிள்ளையுடன் அவர்களது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த பல செல்வந்தர்களும் அங்கு வியாபாரம் செய்யும் நோக்கில் பாண்டிச் சேரிக்குக் குடிபெயர்ந்தார்கள்.
நைனா பிள்ளை மற்றும் திருவேங்கிட பிள்ளையின் மேற்பார்வையில் பாண்டிச்சேரியின் வணிகம் செழிக்கத் துவங்கியது. அவர்களின் துரித வளர்ச்சியைப் பொறுக்காத கவர்னர் ஹெர்பெர்ட், நைனா பிள்ளையை பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்ய, அவர் சிறையிலேயே இறந்து போனார். தங்களையும் கவர்னர் சிறையில் அடைத்து விடுவார் என அஞ்சிய நைனா பிள்ளையின் மகனான குருவ பிள்ளையும், அவரின் மாமனாரான திருவேங்கிட பிள்ளையும் சென்னைக்குத் தப்பியோடினார்கள். பின்னர் குருவ பிள்ளை இங்கிலாந்திற்குப் பயணித்து அங்கிருந்து பிரான்ஸுக்குப் போய் அன்றைக்கு பிரான்ஸை ஆண்ட ட்யூக் ஆஃப் ஆர்லியன்ஸிடம், பாண்டிச்சேரி கவர்னர் ஹெர்பெர்ட்டின் நடத்தையைக் குறித்துப் புகார் செய்ய, அதன் அடிப்படையில் 1719ம் வருடம் ஹெர்பெர்ட்டை பிரெஞ்சு அரசாங்கம் திரும்ப அழைத்துக் கொண்டது.
இதற்கிடையில் பிரான்ஸ் முழுவதும் சுற்றித் திரிந்த குருவ பிள்ளை மதம் மாறி கிறிஸ்தவரானார். செவாலியே ஆஃப் செயிண்ட் மைக்கேலாக நியமிக்கப்பட்ட குருவ பிள்ளை, இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருக்கும் கிறிஸ்தவர்களுக்குத் தலைவராகவும் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து குருவ பிள்ளை பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். அவர் திரும்புவதற்கு முன்னர் புதிய பாண்டிச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட டி லா ப்ரெவோஸ்டி (de la Prdvostiere) திருவேங்கிட பிள்ளையை மீண்டும் பாண்டிச்சேரிக்கே திரும்பி வரும்படி அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்ற திருவேங்கிட பிள்ளை மீண்டும் அவரது ஐந்து செல்வந்த நண்பர்களான வியாபாரிகளையும், அவர்களின் குடும்பத்தையும் பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்தார். அதனைத் தொடர்ந்து பிரெஞ்சுக் கம்பெனிகளின் வியாபாரம் செழித்து வளரத் துவங்கியது. குருவ பிள்ளை 1724ம் வருடம் இறந்து போக, அடுத்த இரண்டாண்டுகளில் (ஜூன் 1726) திருவேங்கிட பிள்ளையும் இறந்தார்.
அதே 1726ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் லெனாய் (Lenoir) கவர்னராகப் பதவியேற்கும் பொருட்டு பாண்டிச்சேரிக்கு வந்தார். லெனாய் பாண்டிச்சேரில் நீண்ட காலம் வசித்து விட்டு பிரான்ஸுக்குப் போனவர். அவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்த காலத்தில் திருவேங்கிட பிள்ளையின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவராக இருந்தவர். எனவே அவரது மரணச் செய்தியால் துக்கமடைந்த கவர்னர் லெனாய் அவரது மகனான ஆனந்த ரெங்கம் பிள்ளையை பிரெஞ்சு அரசாங்கத்தின் உள்நாட்டு ஏஜெண்டாக, திருவேங்கிட பிள்ளை வகித்த அதே பதவிக்கு, நியமினம் செய்தார்.
ஆனந்த ரெங்கம் பிள்ளை அந்தப் பதவியை மிகத் திறம்படச் செய்து கவர்னர் லெனாயின் நம்பிக்கையைப் பெற, லெனாய் போர்ட்டோ நோவோவில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தார். போர்ட்டோ நோவோவில் அதிக அளவில் தயாரிக்கப்பட்ட நீல நிறத் துணிகள் இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிற வியாபாரிகளுக்கும் விற்கப்பட்டன. பிரெஞ்சுக்காரர்களின் வியாபாரத்தை விருத்தி செய்யும் முகமாக, ரெங்க பிள்ளை அவரது சொந்த முதலீட்டில் ஆற்காட்டிலும், லாலாபேட்டையிலும் வியாபார ஸ்தலங்களைத் (trading posts) துவக்கினார். அங்கிருந்து ஐரோப்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு, ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரெஞ்சு வணிகர்கள் பெரும் லாபமடைந்தார்கள்.
கவர்னர் லெனாயைத் தொடர்ந்து பாண்டிச்சேரி கவர்னாக 1735ம் வருடம் பதவிக்கு வந்த கவர்னர் டூமா (Dumas)வும் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் உடையவராக இருந்தார். வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த பிரெஞ்சுக்காரர்கள் 1740ம் வருடம் தென்னிந்தியாவின் மீது அரசாட்சி செலுத்த வந்த மராத்தியர்களால் பெரும் சரிவை சந்தித்தார்கள். அவர்களின் வியாபாரமும் தொழிற்சாலைகளும் பெருமளவிற்கு முடங்கின. மராத்தியர்கள் போர்ட்டோ நோவோ துணி தயாரிப்புத் தொழிற்சாலையின் மீது தாக்குதலைத் தொடுத்து அதனை அழித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தென்னிந்தியாவில் வலிமையுள்ள அரசுகள் எதுவும் இல்லாமல், தென்னிந்தியா முழுமையும் ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலில் இருந்தது.
தமிழகம் முழுமையும் போர்களும், ஆக்கிரமிப்புகளும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் தியூப்ளே (Dupleix), 1742ம் வருடம் பாண்டிச்சேரியின் பிரெஞ்சுக் கவர்னராகப் பதவியேற்க பாண்டிச்சேரிக்கு வந்தார். அவருக்கு முன்னர் பாண்டிச்சேரியை ஆண்ட சில கவர்னர்களைப் போலவே தியூப்ளேவும் இரண்டாவது முறையாக பாண்டிச்சேரிக்கு வருகிறார். 1721 முதல் 1731ம் வருடம் வரைக்கும் பிரெஞ்சுக் கம்பெனியில் பணிபுரிந்த தியூப்ளே, திருவேங்கிட பிள்ளையையும் அவரது மகனான ஆனந்த ரெங்கம் பிள்ளையையும் நன்கு அறிந்தவர் என்பதில் சந்தேகமில்லை.
தியூப்ளேவின் வரவிற்குப் பின்னர் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவம் உச்சத்திற்குச் சென்றது. ஆனந்த ரெங்கம் பிள்ளை நேர்மையும் திறமையும் உடையவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைய கவர்னர் தியூப்ளே அவரை மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த courtier பதவி (chief of dubhash என்றும் இப்பதவி அறியப்பட்டது), குருவ பிள்ளையின் மரணத்திற்குப் பின்னர் வேறொரு குடும்பத்தின் வசம் இருந்தது.
முக்கியத்துவம் வாயந்த courtier பதவி ஒரு கிறிஸ்தவர் வசமே இருக்க வேண்டும் என்று தீர்மானித்த பாண்டிச்சேரியின் வலிமையுள்ள கிறிஸ்தவ குருமார்கள் அந்தப் பதவியை, குருவ பிள்ளை கிறிஸ்தவர் என்றாலும், வேறொரு கிறிஸ்தவருக்கு அளித்திருந்தார்கள். குருவ பிள்ளையின் குடும்பத்தில் அவரைத் தவிர வேறொருவரும் கிறிஸ்தவர்களாக மதம் மாறவில்லை என்பதுதான் காரணம். எனவே தியூப்ளே கவர்னராக இருந்த காலத்தில் கனகராய முதலி என்பவரே courtier பதவியில் இருந்தார். கவர்னருக்கும் ஆனந்த ரெங்கம் பிள்ளைக்கும் இருந்த நெருக்கத்தை கனகராய முதலி விரும்பவில்லை. எனவே அவர் ஆனந்த ரெங்கம் பிள்ளையைத் தனது எதிரியாக நினைத்து அதன்படியே நடந்தார். இருந்தாலும் 1746ம் வருடம் கனகராய முதலி மரணமடைய, 1747ம் வருடம் ஆனந்த ரெங்கம் பிள்ளை அந்தப் பதவியை அடைந்தார்.
 கவர்னர் பதவியிலிருந்து தியூப்ளே நீக்கப்படும் வரையில் (1754) ஆனந்த ரெங்கம் பிள்ளை அரசாங்க முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியை வகித்தார். அவரைத் தொடர்ந்து கமிஷனராக நியமிக்கப்பட்ட கொதே (Godeheu)யின் காலத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தில் ஆனந்த ரெங்கம் பிள்ளையின் முக்கியத்துவமும் அதிகாரமும் படிப்படியாகச் சரிய ஆரம்பித்தது. அதனுடன் அவரது உடல் நலமும் சரியில்லாமல் போக, அவரால் அந்தப் பதவிக்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாமல் போன காலத்தில், பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டி லெறி (de Leyrit) ஆனந்த ரெங்கம் பிள்ளையை courtier பதவியிலிருந்து (1756) நீக்கினார்.
ஆனந்த ரெங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்பு இதனைக் குறித்து நேரடியாக எதுவும் சொல்லாவிட்டாலும், தியூப்ளேவிற்குப் பின்னர் வந்த கவர்னர்கள் ஆட்சியில் அரசாங்க ஏஜெண்ட்களாக நியமிக்கப்பட்ட துபாஷிகள் லஞ்சம் வாங்குவதனையும், ஊழல்கள் செய்வதனையும் குறித்தும், பிரெஞ்சுக்காரர்களின் மோசமான நிர்வாகம் குறித்தும் கசப்புடன் எழுதிய குறிப்புகள் காணப்படுகின்றன. தனது கடைசிக் காலத்தை மன வருத்தத்துடனேயே கழித்த ஆனந்த ரெங்கம் பிள்ளை, 1761ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, பிரிட்டிஷ்காரர்கள் கர்னல் கூட்டே (Colonel Coote) தலைமையில் பாண்டிச்சேரியைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் மரணமடைந்தார். அவருக்கு மகன்கள் எவரும் இல்லை. பிறந்த இரண்டு ஆண்குழந்தைகளும் அவர்களின் சிறு வயதிலேயே இறந்து போனார்கள்.
ஆனந்த ரெங்கம் பிள்ளை எதற்காக இத்தனை நுணுக்கமாக இத்தனை தகவல்களையும் எழுதி வைத்தார் என்பது வியப்பிற்குரிய விஷயம். ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடும் எண்ணம் எதுவும் அவருக்கு நிச்சயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சாதாரண ஒரு சிறிய தகவலிலிருந்து, வியாபார நடவடிக்கைகள், அவரது குடும்ப விவகாரங்கள், மக்களின் அன்றைய வாழ்க்கை முறை, வதந்திகள் என எல்லாத் தகவல்களையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். பாண்டிச்சேரி கடற்கரையை வந்தடைந்த ஒவ்வொரு கப்பலின் பெயரிலிருந்து, அதன் கேப்டன்கள், அதில் வந்திறங்கிய முக்கியஸ்தர்கள், அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட பொருள்களின் தகவல்கள், வரவேற்பிற்காக வெடிக்கப்பட்ட பீரங்கிக் குண்டுகளின், துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை என ஒன்றுவிடாமல் அவரது நாட்குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உடல்நலம் குறைந்த அவரால் சுயமாக எழுத முடியாத காலத்தில் பிறரின் உதவி கொண்டும் அந்தக் குறிப்புகளை விடாமல் எழுதியிருக்கிறார்.
பெரிய கணக்குப் புத்தகங்களில் எழுதப்பட்ட இந்த டைரிக் குறிப்புகள், 1736ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பிக்கின்றன. ஆனந்த ரெங்கம் பிள்ளையின் மரணத்திற்குப் பிறகு அவரது உறவினரான திருவேங்கிட பிள்ளை 1770ம் வருடம் வரைக்கும் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். ஆனால் இந்தக் குறிப்புகள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் வரைக்கும் பிறரது பார்வையிலிருந்து மறைந்திருந்தன. Montbrun என்கிற பிரெஞ்சுக்காரரின் பெரு முயற்சிக்குப் பின்னரே இந்த டைரிக் குறிப்புகளை உலகம் அறிய முடிந்தது. அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களும் அதனை ஆங்கிலத்தில் பெரும் முயற்சி செய்து 1892ம் வருடம் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.
தமிழில் ஆனந்த ரெங்கம் பிள்ளைக்கு முன்னரும் சரி, அவருக்கும் பின்னரும் சரி, இது போன்ற முயற்சிகள் நிகழவில்லை. எனவே அவரது டைரிக் குறிப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் பெருமைப்பட வேண்டிய தமிழர்கள் ஆனந்த ரெங்கம் பிள்ளையை கௌரவப்படுத்தும் எளிய முயற்சிகளைக் கூடச் செய்யவில்லை என்பது மிகவும் வருந்தக்கூடிய ஒன்றே.
ஆனந்த ரெங்கம் பிள்ளை டைரிக் குறிப்பிலிருந்து சுவாரஸ்யமான சில சிறு பகுதிகளை இங்கு காணலாம். ஆர்வமுள்ளவர்கள் மொத்த குறிப்புகளையும் இணையத்திலிருந்து தரவிறக்கிப் படிக்கலாம்.
*****
சனிக்கிழமை, மே 23-1739, சித்தாத்ரி வருடம், வைகாசி 13 :
சூரத்திலிருந்து இன்று மதியம் பாண்டிச்சேரியை வந்தடைந்த ட்யூப்ளேவின் கப்பலான சந்திரநாகூர் கீழ்க்கண்ட தகவலைக் கொண்டு வந்திருந்தது.
இரானின் இஸ்ஃபஹான் பகுதியை ஆண்டு வந்த பெர்ஷிய அரசனான தஹ்மாஸ்ப் குலிகான் பெரும் வலிமை பெற்றவனாக மாறியிருந்தான். அவன் துருக்கிய சுல்தானுடன் போரிட்டு அவனைத் தோற்கடித்தான். அதனைத் தொடர்ந்து அவனது பார்வை தில்லியை நோக்கித் திரும்பி, தில்லியின் முகலாய அரசன் தனக்கு அடிபணியக் கோரி கடுமையான மிரட்டலை முகலாய அரசனுக்கு அனுப்பி வைத்தான். அதற்கு அடிபணிய மறுத்த முகலாய அரசன் போருக்கு அறைகூவல் விடுத்தான். அதனைத் தொடர்ந்து தஹ்மாஸ்ப் குலிகான், இரானின் இஸ்ஃபஹானிலிருந்து 60,000 படை வீரர்களுடன் தில்லியை நோக்கிப் படையெடுத்து வந்தான். வரும் வழியிலிருந்த சிறிய, பெரிய அரசர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு அவர்களைக் கப்பம் செலுத்த வைத்துவிட்டு, லாகூரை வந்தடைந்தான். லாகூர், முகலாய அரசின் மிக முக்கியமானதொரு நகரம். அங்கு நடந்த சண்டையில் குலிகானின் படைகள் முகலாயப் படைகளைத் தோற்கடித்து லாகூர் கோட்டையைக் கைப்பற்றின.
அதனைக் கண்டு அஞ்சிய முகலாய அரசன் தனக்கு உதவி செய்யும்படி நிஜாம்களையும் இன்னபிற அரசர்களையும் வேண்ட அவர்களும் அவனுக்கு உதவிக்கு வந்தனர். இருந்தாலும் அவர்கள் அனைவரும் குலிகானால் தோற்கடிக்கப்பட்டனர். படை திரட்ட முயன்ற முகலாய அரசனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, குலிகான் தில்லியின் மீது படையெடுத்து முகலாய அரசன் முகம்மது ஷாவை, அவனது மந்திரி பரிவாரங்களையும், சேனாதிபதிகளையும் பிடித்துச் சிறையிலடைத்தான். அவ்வாறு பிடிக்கப்பட்ட இருபத்தைந்து முகலாய முக்கியஸ்தர்களுடன் முகலாய அரசர் முகம்மது ஷாவையும் குலிகான் நடுத்தெருவில் வைத்து அவர்களின் தலையைத் துண்டித்தான்.
முகம்மது ஷாவின் பெயரால் இதுவரை அடிக்கப்பட்ட காசுகள் ஒழிக்கப்பட்டு, இனிமேல் தனது பெயரில் மட்டுமே காசுகள் அச்சடிக்கப்பட வேண்டுமென குலிகான் உத்தரவிட்டான். அந்த உத்தரவு சூரத்தின் நவாப்புக்கு அளிக்கப்பட்டு, முகம்மது ஷாவின் பெயர் காசுகளில் பொறிப்பது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ‘கடவுளின் ஆணைப்படி, நாதிர் ஷா, மஹாராஜா’ என்கிற எழுத்துக்கள் பொறிக்க ஆணையிடப்பட்டது.
இனிமேல் எல்லோரும் புதிய மஹாராஜாவை ‘நாதிர் ஷா, கடவுளின் ஆணைப்படியான மஹாராஜா’ என்றே அழைக்க வேண்டும் என்றும், எவரேனும் அவரை ‘தஹ்மாஸ்ப் குலிகான்’ என்று அழைத்தால் அவர்களுக்கு ரூபாய் 600 அபராதம் என்றும் ஓர் ஆணையை நாதிர் ஷா அனுப்பி வைக்க, சூரத்தின் நவாப் அந்த அரசாணையை சூரத் முழுவதற்கும் தண்டோரோ போட்டு அறிவித்தான். பழைய காசு உருளை வடிவமாக இருக்க, புதிய காசு முனைகளுடன் இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.
இந்த மாதிரியான செய்திகளை கவர்னரும் அவரைச் சுற்றியுள்ள முக்கியஸ்தர்களும் மட்டுமே அறிந்திருந்தார்கள். எல்லா வலிமையுமுள்ள தில்லி அரசனுக்கே இந்தக் கதியென்றால் சாதாரண மனிதர்களின் கதி என்ன? இந்த உலகில் இத்தனை செல்வமும் வலிமையும் இந்த அரசர்களுக்கு எதற்கு? எப்படியும் இது ஒரு நாள் அழிந்து போகும்.
…..
நான் இதற்கு முன்னர் தில்லியின் பாதுஷா முகமது ஷாவின் தலை துண்டிக்கப்பட்டதாகs சொல்லியிருந்தேன். ஆனால் பின்னர் வந்த தகவல்கள் இதனை முற்றாக மறுக்கின்றன. முகமது ஷா சிறையில் அடைக்கப்பட்டதாக மட்டுமே இப்போது வந்த தகவல்கள் சொல்கின்றன. மேலும் நிஜாம் நாதிர்ஷாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் தெரிகிறது. அடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் வந்த தகவல்களின்படி முகமது ஷா மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டதாகவும், அவரது மகள் குலிகானின் மகனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டதாகவும் சொல்கிறது. தில்லி பாதுஷாவின் அத்தனை பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு சென்ற நாதிர்ஷா அட்டோக் நதியைக் கடந்து, மூல்தானையும் காபூலையும் தாக்கியழித்தான்.
நாதிர்ஷா கொள்ளையடித்துச் சென்ற ஏராளமான செல்வம் காரணமாக தில்லியின் வியாபாரிகள் அனைவரும் வறுமையில் வாடினார்கள். பல ஆயிரக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்டு அவர்களின் மனைவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். நாதிர்ஷாவின் இந்தப் படையெடுப்பால் ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் வரையிலானவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மேற்கண்ட தகவல்கள் அர்மீனிய வியாபாரிகள் எழுதிய கடிதங்களின் வாயிலாக அறியப்பட்டது.
செவ்வாய், டிசம்பர் 27-1740, ரவுத்திரி வருடம் மார்கழி:
கீழ்க்கண்ட தகவல்கள் இன்றைக்கு அறியக் கிடைத்தன.
நேற்று அரை டஜன் மராத்தா குதிரைப்படையினர் கடலூருக்கு மேற்கே வந்திருந்ததாகத் தெரிகிறது. அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு ஆள் அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால் அந்த ஆள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கு முன் எதிரிகள் நகரை நோக்கி வருவது போலத் தெரியவே, திருப்பாப்புலியூரின் கோட்டைச் சுவரிலிருந்து அவர்களை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. எனவே அவர்கள் அங்கிருந்து திரும்பி ஓடிவிட்டார்கள்.
அவர்களைப் பின் தொடர அனுப்பி வைக்கப்பட்ட உளவாளி அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் பின் தொடர்வதனை உணர்ந்த ஒரு குதிரைக்காரன் அவனை நோக்கி வேகமாக வந்து வாளினால் தாக்க முயன்றான். உளவாளி தன் கையில் வைத்திருந்த தடியினால் ஓங்கி அடித்து குதிரைக்காரனின் வாளைத் தட்டி கீழே விழ வைத்துவிட்டு, உடனடியாக கடலூரின் செயிண்ட் டேவிட் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த கவர்னரிடம் இதனைக் குறித்துக் கூற, அவனுக்கு இரண்டடி அகல இடுப்புத் துணியும், ஏழு பகோடாப் பணமும், இருபது நாழி அரிசியும் பரிசாக வழங்கப்பட்டன.
அதே நாளில் சிறிது நேரம் கழித்து ஐம்பதிலிருந்து அறுபதுவரையுள்ள மராத்தா குதிரைப்படையினர் பாகூருக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களை நோக்கி இருபது அல்லது முப்பது துப்பாக்கிகளால் சுட்ட பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடினார்கள். மறுநாள் பாகூரில் இருந்த படைத்தலைவர் பாண்டிச்சேரிக்கு வந்து நடந்தவற்றை கவர்னருக்கு விளக்கினார். மராத்தா படையினர் பாகூரைச் சுற்றியிருந்த ஊர்களில் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
காலை எட்டு மணிக்கு பல பொதுமக்கள் பாண்டிச்சேரிக்குள் வந்து மராத்தா படையினர் தென்னல் பகுதியைச் சுற்றிக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தனர். மராத்தா குதிரைப்படை வில்லியநல்லூர், உஸ்துகுளம், அரும்பாடைப் பிள்ளை சத்திரம் மற்று ஒழுக்கரை வரையில் வந்ததாகவும், அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களைக் கொள்ளையடிப்பதாகவும் மேலதிகத் தகவல்கள் வந்தன.
ஒன்பது மணியளவில் கவர்னர் ஐம்பது சிப்பாய்களை முத்தையா பிள்ளையின் தலைமையில் ஒழுக்கரைக்கு அனுப்பி வைத்தார். ஆற்காட்டு நவாபுடன் வந்து பாண்டிச்சேரிக்குள் தங்கியிருந்த முகமதிய சிப்பாய்களும் வெளியே அழைக்கப்பட்டு அவர்களும் ஒழுக்கரையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று சேர்வதற்குள் மராத்தா படையினர் வழுதாவூருக்குச் சென்றுவிட்டனர். எனவே மேற்கண்ட சிப்பாய்கள் மீண்டும் பாண்டிச்சேரிக்கு மாலை நான்கு மணிக்குத் திரும்பி வந்துவிட்டனர்.
போர்டோ நோவோவிலிருந்து டிசம்பர் 24ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட கீழ்க்கண்ட கடிதம் மராத்தாக்களின் அட்டூழியங்களைப் பற்றிச் சொல்கிறது.
டிசம்பர் 18, சனிக்கிழமையன்று இரண்டாயிரம் மராத்தா குதிரைப் படையினர் திருச்சிக்குச் செல்வதற்காக திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் தெற்கே தியாகதுர்கம் வரைக்கும் பயணம் செய்து பின்னர் கிழக்காகத் திரும்பி விருத்தாச்சலத்திற்கு அன்றிரவு வந்து சேர்ந்தனர். திருவண்ணாமலைக்கும் விருத்தாச்சலத்திற்கு இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய ஐம்பது மைல்களாகும். தியாகதுர்கத்திலிருந்து விருத்தாச்சலம் வர பத்து மைல்கள் தூரமாகும். இப்படியாக ஒரே நாளில் மராத்தா குதிரைப்படை அறுபது மைல்கள் தூரம் பயணித்திருக்கிறது.
விருத்தாச்சலத்திலிருந்து அடுத்த நாள் காலை புறப்பட்ட மராத்தாக்கள் ஐம்பது மைல்கள் தூரம் பயணித்து போர்டோ நோவோவை வந்தடைந்தார்கள். இப்படியாக வெறும் ஒன்றரை நாட்களில் மராத்தா குதிரைப்படை 110 மைல்களைக் கடந்திருக்கிறது. போர்ட்டோ நோவோவிற்கு மேற்கே இரண்டரை மைல்கள் தூரத்திலிருக்கும் சித்திரச்சாவடியை ஆக்கிரமித்த மராத்தாக்கள் அந்த வழியாகச் செல்வோரை அடித்துத் துன்புறுத்தியும், சாவடியில் தங்கியிருந்த பயணிகளை கொள்ளையடித்தும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நாகப்பட்டினம் டச்சுத் தொழிற்சாலையிலிருந்து கடிதங்களைக் கொண்டு வந்து கொண்டிருந்த இரண்டு பியூன்கள் சித்திரச்சாவடியில் நடக்கும் அடாவடிகளைக் கண்டுவிட்டு வழியிலிருப்பவர்களை எச்சரித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைக் கேட்ட போர்டோ நோவோவின் பல பொதுமக்கள் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு, போர்ட்டோ நோவோ தொழிற்சாலைக்குள் குவிய ஆரம்பித்தார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் தொழிற்சாலைக்குள் இருக்க இடமில்லாதவர்கள் அங்கிருந்த ஆற்றுக்கு ஓடி நாட்டுப்படகுகளில் ஏறித் தப்பிச் செல்ல முயன்றார்கள். வெறும் நாற்பது பேர்களுக்கு மட்டுமே இடமிருக்கும் அந்த நாட்டுப் படகுகளில் இரு நூறிலிருந்து முந்நூறு பேர்கள் வரைக்கும் ஏறியதால் படகு நகர முடியாமல் அங்கேயே நின்றது. துணி மூட்டைகள் அடுக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு படகுகளும் அங்கேயே மாட்டிக் கொண்டு நகர இயலாமல் நின்றிருந்தன.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மராத்தா குதிரைப்படையினர் பார்வையில் தென்பட ஆரம்பித்தார்கள். அவர்களிலிருந்து 500 பேர்கள் ஆற்றை நோக்கி நகரின் தெற்குப்பகுதிக்குச் செல்ல இன்னும் 500 குதிரைப்படையினர் வடக்கு நோக்கி நகர்ந்தார்கள். இப்படியாக 1,000 மராத்தாக்கள் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவர்களிலிருந்து மூன்று அல்லது நான்கு பேர்கள் கொண்ட சிறுகுழுக்களாகப் பிரிந்து அந்தப் பகுதியிலிருந்த ஒவ்வொரு வீட்டையும் கொள்ளையடித்தார்கள். ஆற்றை நோக்கி ஓடாமல் வீட்டிலேயே இருந்தவர்கள் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். அவர்களின் மானத்தை மறைக்க ஒரு அடித் துணியை மட்டும் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்த அத்தனை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
வேறு சிலர் மராத்தாக்களின் குதிரைகளைப் பிடித்துக் கொள்ள வைக்கப்பட்டார்கள். மற்ற சிலரோ கொள்ளையடித்த பொருட்களை அவர்களின் தலைகளில் சுமந்து செல்ல உபயோகப்படுத்தப்பட்டார்கள். இதற்கிடையில் இன்னொரு குதிரைப்படைக் குழுவினர் படகுகளை நோக்கிச் சென்று அங்கு சிக்கியிருந்தவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்தார்கள். பெரும்பாலோருக்கு அடியும், உதையும், வெட்டுக்காயங்களும் பரிசாகக் கிடைக்க, இன்னும் சிலர் ஆற்றில் குதித்து தப்ப முயன்றார்கள். சிலர் தப்பினாலும் பன்னிரண்டு பேர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தார்கள்.
பின்னர் ஐநூறுக்கும் மேற்பட்ட குதிரைப்படையினர் டச்சு தொழிற்சாலையை நோக்கிச் சென்றனர். தொழிற்சாலையின் கதவுகள் மூடியிருந்த போதிலும் கயிற்று ஏணிகளை உபயோகித்து உள்ளே நுழைந்த அவர்கள் தொழிற்சாலையின் கதவுகளைத் திறந்து உள்ளே புகுந்தனர். மொத்த மராத்தாப் படையும் தொழிற்சாலைக்குள் புகுந்து அங்கிருந்த அத்தனை பேர்களையும் பிடித்து அவர்களின் உடைகளைக் களைந்தனர். அங்கிருந்த சிலருக்கு வெட்டுக்காயங்களும், சாட்டையடிகளும் பரிசாகக் கொடுக்கப்பட்டது. பின்னர் கோவணத்துணியை மட்டும் கொடுத்து அகங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அங்கிருந்த கவர்னரும், மனைவியும் அவர்களது மூன்று மகள்களும் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டார்கள். ஊருக்கு வெளியே சிறை வைக்கப்பட்ட ஐரோப்பியக் கைதிகள் அனைவரும் மறுநாள் காலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
விடுதலை செய்யப்பட்ட ஐரோப்பிய கைதிகளுடன் டச்சுத் தொழிற்சாலைக்குச் சென்ற அறுபது குதிரைப்படையினர் தொழிற்சாலையை உடைத்து அழித்துவிட்டு எஞ்சிய பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். ஏறக்குறைய ஒரு இலட்சம் பகோடாப் பண மதிப்பிலான பொருட்கள் டச்சுத் தொழிற்சாலையிலிருந்தும், ஐம்பதினாயிரம் பகோடா பண மதிப்பிலான பொருட்கள் பொதுமக்களிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்டதாக போர்ட்டோ நோவோவிலிருந்து வந்த கடிதம் தெரிவித்தது.
வியாழன், மார்ச் 17-1746, க்ரோதன வருடம் பங்குனி :
வியாழனன்று இது நிகழ்ந்தது.
புதன்கிழமை இரவு பதினொரு மணியளவில் மலச் சட்டியுடன் ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், கோவிலின் நடையைச் சுற்றி இருந்த தெய்வச் சிலைகளின் மீது மலத்தை ஊற்றியதுடன் மட்டுமல்லாமல், ஈஸ்வரன் சன்னிதிக்குள்ளும் நுழைந்து அங்கிருந்த நந்தியின் மீதும் ஊற்றியிருக்கின்றனர். பின்னர் அங்கு உடைந்து கிடந்த கோவில் பகுதியின் வழியாக அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.
விடிகாலையில் கோவிலுக்குச் சென்ற நம்பியானும் மற்ற கோவில் பணியாளர்களும் இந்த அநியாயத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களின் மேலதிகாரிகளுக்கு இதனைத் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் நம்பியானும் இன்னும் நான்கு பிராமணர்களும் அவர்களது அக்ரஹாரத்திற்கும், பிற தெருக்களில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ‘ஈஸ்வரனுக்கு பூஜை புனஸ்காரங்கள் எதுவும் நடக்காது. ஈஸ்வரன், பராசக்தியின் மீது ஆணையாக நீங்கள் வீட்டில் ஒன்றும் சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
பின்னர் ஒன்பது மணியளவில் பெருமாள் கோவிலுக்கு முன்னால் கூடிய பிராமணர்களும் பிற ஜாதியினரும் இதனைக் குறித்து கலந்தாலோசனை செய்திருக்கிறார்கள். இதனைக் கேள்விப்பட்ட கவர்னர் அவரது தலைமை பியூனை அனுப்பி வைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியிருக்கிறார். கிரிமாசி பண்டிதரை அங்கு அனுப்பிய கவர்னர் பெருமாள் கோவிலின் முன் கூடிய கூட்டத்தைக் கலைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படியே அங்கு சென்ற கிரிமாசி பண்டிதர் கோவிலின் முன்னால் நின்றிருந்த ஒரு செட்டியாரின் கன்னத்தில் அறைந்து பின்னர் அங்கிருந்த அத்தனை பேர்களையும் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டதுடன் அவர்களை அடிக்கவும் தயாராக, அங்கிருந்த பத்து பேர்கள் அவரைத் தடுத்திருக்கிறார்கள். ‘எதற்காக எங்களை அடிக்கிறாய்? மதக்காரியம் சம்பந்தமாக நான்கு பேர்கள் கூடக்கூடாதா என்ன? எதற்காக எங்கள் கோவிலில் மலம் கரைத்து ஊற்றப்பட்டது? இந்த விஷயம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கவர்னரை வேண்டுவதற்காகத்தான் நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். எதற்காக இங்கு வந்து நீ எங்களை அடிக்கிறாய்? அதற்கு பதிலாக நீ எங்களையெல்லாம் கொல்லலாம்’ என்று சொல்லியபடியே கிரிமாசி பண்டிதரை கீழே தள்ளியிருக்கிறார்கள்.
கிரிமாசி பண்டிதர் இதையெல்லாம் கவர்னரிடம் வந்து சொல்ல, கவர்னர் எனக்கும், சின்ன முதலிக்கும் ஆளனுப்பி அழைத்தார். சின்ன முதலி எனக்கு முன்பே கவர்னரிடம் போக, அவரிடம் ‘உடனடியாக மகாநாட்டார்களை என்னிடம் அழைத்து வா’ எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். அதற்குப் பின்னர் சென்ற என்னிடமும் அதனையே கவர்னர் சொன்னார். அதன்படியே சின்ன முதலியும் நானும் மகாநாட்டார்களை அழைத்துக் கொண்டு மதியம் இரண்டு மணியளவில் கவர்னரைப் பார்க்கச் சென்றோம்.
கவர்னர் அவர்கள் மீது மிகுந்த கோபத்துடனிருந்தார். ‘எதற்காக கிரிமாசி பண்டிதர்களை அடித்தீர்கள். உங்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள என்னால் உத்தரவிட முடியும். உங்களின் எல்லாப் பிரச்சினைகளையும் ரங்கப்பிள்ளையிடம் சொல்லுங்கள். அவர் என்னிடம் பின்னர் வந்து விளக்குவார். அதன்படியே முடிவு எடுக்கப்படும். நீங்கள் எல்லாம் கூட்டம் கூட்டிப் பேசவேண்டியதில்லை. ரங்கப்பிள்ளையே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்’ என்றார். அத்துடன் அங்கிருந்து அவர்களைக் கலைந்து செல்லும்படி மென்மையாக உத்தரவிட்டார்.
மகா நாட்டார்கள் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் நூறு முதல் இருநூறு வரையிலான மாஹே முகமதியர்கள் கவர்னரின் முன்னால் வந்து நின்றார்கள். மகா நாட்டார்களை சுட்டுக் கொல்லும் பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் வருவதற்கு முன்பே கவர்னர் மகா நாட்டார்களுடன் பேசிப் பிரச்சினையை ஒருவழியாக தீர்த்து வைத்துவிட்டதால் அவர்களை நகரின் நான்கு வாயில்களையும் பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். முகமதியர்கள் அந்த ஆணையை ஏற்று அங்கிருந்து சென்றார்கள். இவையெல்லாம் மாலை நான்கு மணிக்கு முன்னால் நடந்து முடிந்துவிட்டது. இதற்குப் பின்னர் என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியவில்லை.
வியாழன், ஜூன் 11-1739, சித்தார்த்தி வருடம் ஆனி:
செவாலியே டூமாஸ், பாண்டிச்சேரியின் கவர்னர் கீழ்க்கண்ட உத்தரவை இன்றைக்குப் பறையடித்து அறிவித்தார்.
‘நகர எல்லைக்குள்ளோ அல்லது கடற்கரையிலோ அல்லது செயிண்ட் பால் சர்ச்சின் தெற்காக ஓடும் உப்பாற்றின் கரையிலோ அல்லது பொதுச் சாலையிலோ மலஜலம் கழிக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் எவரும் ஆறு பணம் அபராதம் செலுத்த வேண்டும். அதில் இரண்டு பணம் இந்தச் செயலைக் கையும், களவுமாகப் பிடிப்பவர்களுக்கும் மீதிப்பணம் கோர்ட்டின் நிதியிலும் சேர்க்கப்படும்.’
இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டு மனமுடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.


Posted on Leave a comment

அதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு – ஹாலாஸ்யன்

உயிர் என்ற ஒன்று தோன்றிய போதில் இருந்தே அந்த உயிருக்கு எதனோடாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் இருந்திருக்கும். அது, இங்கே உணவு கிடைக்கிறது என்பதாக இருக்கலாம். உணவு என்னுடையது என்பதாக இருக்கலாம். இது என் பேட்டை, நீ ஏன் உள்ளே வந்தாய் என்ற மிரட்டலாம் இருக்கலாம். இணைசேரக் கூவுதலாய் இருக்கலாம். ஓர் உயிர் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எதையேனும் தொடர்புகொள்ள முயன்றுகொண்டே இருந்திருக்கும். கூட யாருமே இல்லாத முதல் உயிரி என்ன செய்திருக்கும்? யாருடன் அல்லது எதனுடன் பேசியிருக்கும்? என்ன சொல்ல எத்தனித்திருக்கும்? அனைத்தையும் கேட்கும் திறன் கொண்ட காதுகள் இருப்பின் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் உயிர்களும் நிற்காமல் பேசுவது கேட்கும். மனிதனான நாம் சைகைகள், குகை ஓவியங்கள், ஓலமிடுதல் தொடங்கி, மொழி உருவாகி, பேச்சு, இசை, மொழி, நடனம், கூத்து என்று எல்லாமே ஏதோ ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

தொடர்பு கொள்ள வேண்டும் என்பதன் நீட்சிதான் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப், வீடியோ ஆடியோக்கள் எல்லாம். பார்க்கப்போனால் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் பசி‌, தாகம், உறக்கம், காமம் போன்ற இயற்கை உந்துதலில் சேர்க்கலாம். NLP (Neuro Linguistic Programming) என்னும் மனிதர்களின் தொடர்புகளைப் பற்றிய இயலில் ஓர் அடிப்படைக் கோட்பாட்டைச் சொல்வார்கள்‌, we are always communicating என்று. தான் கண்ணால் பார்க்க முடிந்தவர்களிடம்‌ மட்டும் பேச ஆரம்பித்த மனிதன் தொழில்நுட்பத்தால் உருவமின்றி ஒலிகள் மூலம் ‌பேச ஆரம்பித்தான். இன்று இரண்டையும் கலந்து வீடியோ கால் பேசுகிறான். ஒரு யூட்யூப் வீடியோ மூலம் பல்லாயிரக்கணக்கான பேரைப் போய்ச் சேர முடிகிறது. அந்தத் தொடர்பு வேட்கை உந்தித்தள்ள ஒரு‌ கட்டத்தில் இயந்திரங்களோடு பேச ஆரம்பித்தான். ஐஃபோனில் சிரி, ஆண்ட்ராய்டில் கூகுள் அஸிஸ்டென்ட், ஹைக்கில் நடாஷா என்று போய்க்கொண்டிருக்கிறான். தன்னைச் சுற்றி இருக்கும் கருவிகள் எல்லாமே தன்னோடு பேச வேண்டும், தன் பேச்சைச் கேட்க வேண்டும் என்ற அடிப்படை ஆசை மனிதனுக்கு உண்டு. அப்படி எல்லாக் கருவிகளும் ஒருங்கிணையும் ஒரு தளமாக இணையம் இருக்கிறது. தேர்ப்பாகன் கையில் எல்லாக் குதிரைகளின் லகானும் இருப்பதுபோல எல்லாக் கருவிகளையும் இணையம் கோத்து நம் கையில் கொடுத்திருக்கிறது.
கம்பி வழி இணையத்தில் ஒரு சிக்கல் நாம் எல்லாரும் அறிந்ததுதான். அது கிடைக்கும் இடத்தில் நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். கம்பிவழி இணையம் நம்பகத்தன்மை உடையது, அதனாலேயே இன்னமும் அலுவலகங்களில் அதையே பயன்படுத்துகிறார்கள். இன்னமும் RJ45 எனத் தொழில்நுட்ப வட்டங்களில் அறியப்படும் ஈதர்நெட் கம்பிகள் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கையடக்கக் கருவிகளுக்கு இந்தக் கம்பிவழி இணையம் தோதுப்படாது. நாம் நமக்கு விரும்பியவாறு அமர்ந்தோ, நடந்தோ, படித்தோ இணையத்தில் மேய முடியாது. மேலும் தற்போது காபி மேக்கர், அடுப்பு, கார், வீட்டில் உள்ள பிற எலெக்ட்ரிக் சாதனங்கள் எல்லாமே இணையத்தில் நுழைந்து நம் கைக்குள் வரும் internet of things யுகத்தில் கம்பிவழி இணையம் நிச்சயம் பழங்கஞ்சிதான்.
நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. ஏற்கனவே வைஃபை என்ற ஒன்றை வைத்திருக்கிறோம். Wireless Fidelity என்பதன் சுருக்கமே WiFi. பதினேழு வருடங்களுக்கு முன் சந்தைக்கு வந்த இந்தத் தொழில்நுட்பம் வயரில்லா இணையத்தை வழங்குவதில் தற்போதைக்கு ஜித்தன். வயர்கள் மூலமாக மோடத்திற்கு (modem) வந்து சேரும் இணையத்தை ரேடியோ அலைகளில் ஏற்றிக் காற்றில் பரவவிடுகிறது. விண்வெளியில் சிறு புள்ளிகளாய் உருவாகி வெடிக்கும் கருந்துளைகளைத் தேடும் ஒரு சோதனை தோற்றுப்போக, அந்தச் சோதனையில்தான் வைஃபையின் அடிப்படைத் தொழில்நுட்பம் கிடைத்துக் காப்புரிமை பெறுகிறார்கள். தோராயமாய் இருபது மீட்டர் வரை அந்த ரேடியோ அலைகள் மூலம் நாம் இணையத்தை அணுகலாம். ரேடியோ அலைவரிசையில் 2.4 GHz மற்றும் 5 GHz (முறையே நொடிக்கு 240 கோடி அல்லது 500 கோடி அதிவெண் கொண்ட அலைகள்) என்ற இரு அதிவெண்களில் இயங்கும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வைஃபை அலைவீச்சால் உடல்நலத்திற்கு எதுவும் பாதிப்பில்லை என்றாலும் பின்வருபவை வைஃபையின் குறைபாடுகள்
1.    ரேடியோ அலைகள் சுவர்களைத் தாண்டியும் பயணிப்பதால் அவற்றை நம்மை அறியாமல் இன்னொருவர் பயப்படுத்த முடியும். வீட்டின் சுவருக்கு வெளியில் இருந்து நம் வைஃபையின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உடைத்து உட்புகுந்து தகவல் திருட முடியும். இதன் பாதுகாப்பு அடுக்ககளாகக் கூறப்படும் WPA, WEP போன்ற எல்லாமே வலு குறைந்தவைதான்
2.    சில இடங்களில் இந்த ரேடியோ அலைகள் பிற கருவிகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். உதாரணமாக மருத்துவமனையின் உயிர்காக்கும் உபகரணங்கள், அணு உலைகள். இங்கிருக்கும் கருவிகளோடு வைஃபையின் ரேடியோ அலைக் குறுக்கீடு பெரும் ஆபத்தாக முடியும்.
3.    வைஃபை பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசை அளவில் குறுகியது. பல கருவிகள் இணைய இணைய, ட்ராபிக் ஜாம் ஆன சாலை போல வேகம் குறைந்து விடும். ஆனாலும் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல் வேறு மாற்று எதுவும் இல்லாததால் நாம் வைஃபையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில்தான் ஜூலை 2011ல் ஒரு TED சொற்பொழிவில், எடின்பரா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத்துறை பேராசிரியர் திரு. ஹரால்ட் ஹாஸ், ஏன் ஒளியைத் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு தளத்தை திறந்து வைக்கிறார். அவருடைய யோசனை என்னவெனில் உட்கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் விளக்குகளை வைத்து ஏன் தகவல்களை அனுப்பக்கூடாது என்பதுதான். அதே சொற்பொழிவில் அவர் ஒளியுமிழிகள் (LED – Light Emitting Diode) தரும் ஒளியில் தகவலை ஏற்றி அதைக்கொண்டு ஒரு காணொளியை ஓட வைக்கிறார். வைஃபை போல அவர் லைஃபை LiFi (Light Fidelity) என்னும் சொல்லை உருவாக்குகிறார்.
 ஒளியைக் கொண்டு தகவல் தொடர்பு என்பது மனித குலத்திற்குப் புதிதில்லை‌‌. தீப்பந்தங்களின் அசைவுகளில் போர் வியூகங்கள் வகுத்திருக்கிறோம். இன்றுவரை கலங்கரை விளக்கங்களில் உச்சியில் இருக்கும் ஒளிகள் கப்பல்களுக்கு ஏதோ ஒரு தகவலைப் பரிமாறுகின்றன. இன்றைய உலகில் தொன்னூறு சதவிகித தகவல்தொடர்பைக் கைக்குள் வைத்திருக்கும் கண்ணாடி இழைக் கம்பி (OFC – Optical Fibre Cable) வழித் தகவல் தொடர்பு என்பது ஒளியால் நிகழ்வதுதான். அதன் அடிப்படைக் கோட்பாடு முழு அகப் பிரதிபலிப்பு. Total Internal Reflection என்பார்கள். இப்படி ஒளியால் தொடர்பு‌கொள்ளும் வழிமுறைகளுக்கான தொழிற்கட்டுமானத்தை VLC (Visible Light Communication) என்கிறார்கள்‌. அதனுடைய ஒரு பகுதியாகத்தான் இந்த லைஃபையை அறிமுகப்படுத்துகிறார்கள்‌.
நாம் பயன்டுத்தும் மின்விளக்குகளில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஆரம்பக்கட்ட குண்டுபல்புகள், பின்னர் குழல் விளக்குகள், சி.எஃப்.எல் விளக்குகள், இப்போது சமீபகாலமாய் எல்.ஈ.டிக்கள் என்று அறியப்படும் ஒளியுமிழிகள். இந்த வகைகளில் எல்.ஈ.டியைத் தவிர மீதி இருப்பவை எல்லாம் மின்சார (எலக்ட்ரிகல்) சாதனங்கள். ஆனால் எல்.ஈ.டி என்பது ஒரு மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) சாதனம். அதாவது அதிவேகமாக அந்த விளக்குகளின் ஒளியுமிழ்த் திறனைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு இருக்கையில் நம்‌ வாசல் வரை வரும் இணையத்தை வீட்டுக்குள் இருக்கும் கருவிகளுக்கு ரேடியோ அலைகளில் ஏற்றாமல் கண்ணால் காணக்கூடிய ஒளி அலைகளில் ஏற்றி அனுப்புதல். விளக்கின் பிரகாசத்தைக் கூட்டியோ குறைத்தோ அல்லது அவற்றை அணைத்துப் போடுதல் போன்றவற்றால் தகவலை ஒளியில் ஏற்றுதல்.
பிரகாசத்தைக் கூட்டிக் குறைத்து அனுப்புதல் என்றவுடன் அக்னி நட்சத்திரம் படத்து க்ளைமேக்ஸ் மாதிரியெல்லாம் இல்லை. சொல்லப்போனால் நாம் வீட்டில் பொருத்தியிருக்கும் குண்டு பல்பு நொடிக்கு ஐம்பது முறை அணைந்து அணைந்து எரிகிறது. ஆனால் அது நம் கண்களுக்குத் தெரியாது அல்லவா? அது அப்படி துடிப்பதற்குக் காரணம், நாம் பயன்படுத்தும் மாறுதிசை மின்னோட்டத்தில் அதிர்வெண் அதுதான். நொடிக்கு ஐம்பது முறை தன் திசையை மாற்றிக்கொள்ளும். அதனால்தான் ட்ரான்ஸ்பார்மர்களில் 50 Hz என்று குறிப்பிட்டிருப்பார்கள். நாம் தகவல் பரிமாறும் வேகம் இதையெல்லாம்விட அதி‌கம். ஒளியின் அதிர்வெண் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணை விடப் பல மடங்கு அதிகம். லைஃபைக்கான உட்கட்டுமானம் மிக எளிதானது. வீட்டின்‌ உத்திரங்களில் அல்லது படுக்கையை ஒட்டிய விளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றி அவற்றோடு தகவல்களை ஒளியில் ஏற்ற பிரகாசத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும் கருவியை இணைத்துவிடுவது.
நியாயமாக சில சந்தேகங்கள் வரவேண்டும். நம்மைச்சுற்றி சாதாரணமாக ரேடியோ கதிர்கள் இல்லை. அதனால் வைஃபை மோடம் அனுப்பும் ரேடியோ கதிர்களை நம் கருவிகள் எளிதில் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் நம்மைச்சுற்றி எப்போதும் ஒளி இருக்கிறதல்லவா? அது இந்த ஒளியோடு குறுக்கிடுமே?
இந்த விளக்குகள் அளிக்கும் தகவல்களைப் பெறுவதற்கு அவர்கள் சிறிய அளவிலான போட்டோ டிடெக்டார்ஸ் எனப்படும் ஒளிவாங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவை பிரகாசம் மாறாமல் எரிகிற விளக்குகளின் ஒளியைக் கண்டுகொள்ளாது. அதாவது ஒரு இசைக்கச்சேரியில் ஸ்ருதிப்பெட்டியை யாரும் ரசித்துக் கேட்பதில்லை‌ அல்லவா? அதுபோலவே அந்த ஒளிவாங்கிகள் தகவல் சுமந்து வரும் ஒளிகளை‌‌ மட்டும் கண்டுகொள்ளும். மற்றதைப் பரிசீலிக்காது.
அடுத்ததாய் லைஃபையைப் பயன்படுத்த வேண்டுமெனில் எப்போதும் விளக்கு எரிந்தபடியே இருக்க வேண்டுமே என்று. ஆம். ஆனால் டே அன்ட் நைட் கிரிக்கெட் போட்டிகளில் எரியும் நியான் விளக்குகளைப் போல பிரகாசமாய் எரியத் தேவையில்லை. நைட் லேம்ப்‌ போல எரிந்துகொண்டிருந்தாலும் போதும்.
மிக முக்கியமான சந்தேகம் நேரு காந்தி போன்றவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில், தெருவிளக்கு ஒளியில் படித்தார்கள் என்று சொல்கிறாற்போல் நாமும் விளக்கின் அடியிலேயே நிற்கவேண்டுமா? இதற்கும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்த ப்ளக் பாயிண்டின் அடியில் நிற்பதற்கும் என்ன வித்தியாசம் என்று? நாம் விளக்குக்கு அடியிலேயே நிற்கத் தேவையில்லை. சுவரில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியே இன்றைய அதிவேக இணையம் அளவுக்கு வேகத்தைத் தரக்கூடியது.
லைஃபை அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. லைஃபையின் சிறப்பம்சங்கள் என்னவெனில்
1.    நம் சுவர்கள் பெரும்பாலும் ஒளிபுகாத தன்மை கொண்டதால் நம் இணையத்தை வெளியாள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள் மட்டுமே இயங்கும். ஒரு அறைக்குள் இருக்கும் விளக்கு அந்த அறைக்குள் மட்டுமே இணைய சேவையைத் தரும். அறைக்கு நான்கு விளக்குகள் வைத்துவிட்டால் குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிச்சுற்றி வந்து பயன்படுத்தலாம்.
2.    கண்ணால் காணக்கூடிய ஒளியின் அலைவரிசை அளவு. ஒட்டுமொத்த ரேடியோ அலைவரிசையின் அகலத்தை விட ஒளியின் அலைவரிசை ஐம்பது சதவிகிதம் அதிகமானது. வைஃபை என்பது ஒத்தையடிப்பாதை எனில் லைஃபை நூறடி ரோட்டிற்குச் சமம்.
3.    வேகம். வைஃபை தருகிற வேகத்தை விட லைஃபை எக்கச்சக்க மடங்கு வேகமானது. சோதனை முயற்சிகளில் லைஃபை 224 gigabits per second வேகத்தைச் சாத்தியப்படுத்துகிறது‌. அந்த வேகம் நொடிக்கு 27 ஜிபி என்ற கணக்கு வரும். புரியும் கணக்கில் சுமார் பதினெட்டு ஹெச்.டி படங்களை ஒரு நொடியில் பதிவிறக்கலாம். ஆனால் இதற்கு நம் இணைய சேவை வழங்கும் நிறுவனம் அவ்வளவு வேகமாக இருக்கவேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
4.    லைஃபையை எந்தக் கவலையும் இன்றி மருத்துவமனைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஒளி அங்கெல்லாம் எந்தவிதக் குறுக்கீடும் செய்யாது.
5.    நீருக்கடியில் ஆராய்ச்சிக்காக இறங்கும் கருவிகளும், நீர்மூழ்கிகளும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தமுடியாது. காரணம், அவற்றை நீர் உறிஞ்சி விடும். ஒலியைப் பயன்படுத்தினால் அவை நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கிலம், டால்பின் போன்றவற்றைப் பாதிக்கின்றன. ஆனால் ஒளிமூலம் தொடர்பு கொள்ளலாம். பிரச்சினையில்லை
இம்மாதிரியான நன்மைகள்தான் லைஃபையை எப்போ வரும் என்று தொழில்நுட்ப ஆர்வலர்களை காத்திருக்க வைக்கிறது. 2011 TED சொற்பொழிவுக்குப் பின்னர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் Purelifi என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி இதைச் சந்தைப்படுத்த நிதி திரட்டியிருக்கிறார்‌. அவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பும் நிதியும் கிடைத்தன. ஜப்பானிய சீன நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் தயாராகியிருக்கின்றன. சோதனை முயற்சியாக சில அலுவலகங்களில் உள்ள கருவிகளை லைஃபை மூலம் இணைத்திருக்கிறார்கள்‌‌. எல்லாமே போலாம் ரைட் என்று விசில் கொடுத்திருக்கின்றன.
2016ல் மற்றொடு TED சொற்பொழிவில் சூரிய சக்தித் தகடுகள்‌ மீது தகவல் பொதிந்த ஒளியை விழச்செய்வது மூலம் தகவல் தொடர்பைச் செய்து காண்பித்திருக்கிறார். இதன் மூலம் கம்பி‌வழி‌ இணையம் சாத்தியப்படாத இடங்களில் இந்தத் தகடுகள் மீது தகவல் பொதிந்த லேசர் ஒளியை விழச்செய்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியும் என்று நிறுவியிருக்கிறார். Harold Haas TED talks என்று இணையத்தில் தேடிப் பாருங்கள்.
லைஃபை எங்கெல்லாம் பயன்படலாம்?
    வீடுகளுக்குள் இருக்கும் கருவிகளை internet of things மூலம் ஒருங்கிணைக்க உதவும்
    தெருவிளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றினால் அதன் மூலம் அந்தத் தெருவைப் பற்றிய தகவல்களைப் பயனருக்கு அளிக்க முடியும்.
    ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் ஒன்றோடொ‌ன்று தொடர்பு கொள்ள இது அதிவேக முறையாக இருக்கும்‌. பத்தடியில் ஒரு பாதாள சாக்கடைப் பள்ளம் எனப் பின்னால் வரும் வண்டியைச் சட்டெனெ எச்சரிக்கலாம்.
    கடல்‌ ஆராய்ச்சியில் தொடர்புக்கு இது ஒரு வரப்பிரசாதம்
    பல்பொருள் அங்காடிகளில் அந்தந்தப்பகுதி விளக்குகளை லைஃபை ஆக்குவதன் மூலம் பொருட்களைப் பற்றிய தகவல்கள், விளம்பரங்கள், கடையில் இருக்கிறதா இல்லையா போன்ற தகவல்களை உடனுக்குடன் வாங்குபவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்
    நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் கேபிள் பதித்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியாத இடங்களில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளால் இணையத்தைக் கொண்டு சேர்க்க முடியும். இதன்மூலம் டிஜிட்டல் டிவைட் என்னும், இணையம் கிடைக்கும் மற்றும் கிடைக்காத மக்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும்
அலாவுதீன் கதைகளில் வரும் அற்புத விளக்கை நாம் எல்லாருமே கதைகளில் கேட்டிருப்போம். அவனுக்குக் கைகட்டி சேவை செய்து வேண்டியதையெல்லாம் பெற்றுத்தரும் பூதம், அந்த விளக்குக்குள் இருப்பதைப்போல், நம் வேலைகளில் முக்கால்வாசியைச் செய்யும் இணையம் எதிர்காலத்தில் இப்படி விளக்குகள் வழியாகத்தான் வெளிவரப்போகிறது. அந்த அற்புத விளக்கிற்குக் காத்திருப்போம்.


Posted on Leave a comment

தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? – பீட்டர் ஸிங்கர் – தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்

பீட்டர் ஸிங்கர் (Peter Singer) மெல்போர்னில் பிறந்தார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்ற இவர், சமகாலத் தத்துவவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்போது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரி அறம் (bioethics) சார்ந்த துறையின் பேராசிரியராகவும், மெல்போர்ன் பல்கலையில் தத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். ‘அறம்’ என்பதுதான் இவரது முக்கிய ஆய்வுக் கருதுகோள். தத்துவம் மற்றும் அறம் சார்ந்த விவாதங்களை தமது குறும் பத்திகள் வாயிலாகத் தினசரி வாசகர்களிடம் சேர்த்தது இவரது தனிச்சிறப்பு. Ethics in the Real World என்னும் புத்தகம் இத்தகைய 86 கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் ஒரு சில கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுபவை.
இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை வாஷிங்டன் போஸ்ட் இதழில் 2012ம் வருடம் வெளிவந்தது. இக்கட்டுரையை Frances Kissing என்னும் அறிஞர் மற்றும் செயல்பாட்டாளருடன் இணைந்து எழுதியுள்ளார்.
இன்று சுற்றுச்சூழல் செயல்பாடு என்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. பல நேரங்களில் இத்தேசத்திற்கு எதிராகச் செயல்படும் நபர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் என்னும் பெயரில் சுற்றி வருகின்றனர். (இவர்களில் ஒரு சில நபர்களை A Dictionary of Fashionable Nonsense செல்லமாக ‘தர்பூசணி’ என்றழைக்கிறது; வெளியே பச்சை, உள்ளே சிவப்பு!) இத்தகைய சூழ்நிலையில்தான் பீட்டர் ஸிங்கர் நமக்கு வழி காட்டுகிறார். பன்னாட்டு நிதி உதவியுடன் செய்யப்படும் பெரும் போராட்டங்கள்தான் சுற்றுச்சூழலைக் காக்கும் என்றில்லை. தனி நபர்களின் உணவுத் தேர்வுகளும் சுற்றுச்சூழலைக் காக்க உதவும் என்பதை ஸிங்கர் தெளிவுபடுத்துகிறார். மேலும் ஸிங்கரின் கட்டுரை நமக்குப் போலிகளை இனம் காணவும் உதவுகிறது.

 ரியோ டே ஜெனிரோவில் நடக்கும் ‘நீடித்திருக்கும் வளர்ச்சி’ (sustainable development) தொடர்பான கூடுகையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு இதே நகரில் இவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். அன்று, இங்கு முதல் ‘புவி மாநாடு’ (Earth Summit) நடந்தது. அன்றிலிருந்து இன்று வரை இக்கூடுகைகளின் குறிக்கோள்  பைங்குடில் வாயுக்களின் (பசுமைவீடு வாயுக்கள் Greenhouse gases) வெளியேற்றத்தைக் குறைப்பதன் வாயிலாக, மிகக் கடுமையான வறுமையில் வாழும் 1.3 பில்லியன் ஏழைகளுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த ஆய்வுதான். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில், ‘வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையை, வாழ்வுரிமையை அபாயத்திற்குள்ளாக்காமல் நாம் அறத்தோடு வாழ்வது எப்படி?’ என்பது இத்தகைய கூடுகைகளின் குவிமையப் பொருள். இதுதான் அவர்களது செயல்திட்டத்திலும் இருக்கிறது.

ஆனால் எங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அவர்களது உணவுப் பட்டியலில் என்ன இருக்கிறது என்பதுதான். குறிப்பாக, புவி வெப்பமாகுவதற்கும் பருவ நிலை மாற்றத்திற்கும் முக்கியக் காரணியான மாமிச உணவு இக்கூட்டத்தில் பரிமாறப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். நாங்கள் அதனைக் கண்டுபிடிக்க முயன்றோம்.
எங்கள் மின்னஞ்சலுக்கு முதலில் கிடைத்தது, அலட்சியமும் பெருமிதமும் கலந்த ஒரு பதில். எங்கள் கேள்வியை அலட்சியம் செய்தனர். பெருமிதத்தோடு இந்த நிகழ்வு ‘முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் நடத்தும் முயற்சி’ என பதிலுரைத்தனர். ஐ.நா. மக்கள் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: “பிரேஸில் அரசும், ஐ.நா. செயலகமும், இந்நிகழ்வை முழுப் பசுமை நிகழ்வாக நடத்துவதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. மாநாட்டில் அச்சடிக்கப்பட்ட தாள்கள் / புத்தகங்கள் ஆகியவற்றின் பயன்பாடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. யாராவது சிறப்புக் கோரிக்கை வைத்தால்தான் அவ்விடத்தில் வைத்து தேவை அடிப்படையில் அச்சிடுவது (Print on Demand) முறையில் அச்சிட்டுக் கொடுப்போம். அனைத்து ஆவணங்களும் மின்னாவணங்கள்தான். மேலும் பிளாஸ்டிக் பிரச்சினைகளையும் சரி செய்ய பிரேஸில் அரசு முயன்று வருகிறது.”
இன்னும் அழுத்திக்கேட்டபோது, ஐ.நா. மக்கள் தொடர்பு அதிகாரி, ‘ஆர்கானிக் உணவுகளைப் பரிமாறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றும் கூறினார்.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் ஆடுமாடுகள் / கால்நடைகள், பட்டியில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் அதே இன மிருகங்களைவிட அதிக அளவு மீத்தேனை (ஒரு பவுண்ட் இறைச்சிக்கு) வெளியேற்றுகின்றன.
1972ம் வருடத்திலிருந்து ஐ.நா. சபை, சுற்றுச்சூழல் கருத்தரங்குகளை நடத்துகிறது. ஆரம்ப காலங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலின் மேல் இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை விவாதப் பொருட்களாக இருந்தன. 1990களில் இக்கருத்தரங்குகளின் குவிமையம் புவி வெப்பமயமாதலாக மாறியது. முதல் ரியோ சந்திப்பில் (1982ல்) ஐக்கிய அமெரிக்கா உட்பட 189 நாடுகளும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும், அபாயகரமான பருவ நிலை மாற்றத்தையும் சரி செய்வதற்கான / குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறின.
ஆனால் இம்முயற்சியில் இவர்கள் பரிதாபகரமான தோல்வியை அடைந்துள்ளனர். இப்போது பைங்குடில் வாயுக்களின் அளவு ஏற்கெனவே அபாயகரமான அளவைத் தாண்டிவிட்டதாகப் பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்துப்படி நாம் இன்னும் இருபது வருடங்களுக்குள், திரும்பி வர இயலாத அளவிற்குப் பேரழிவின் சூழலுக்குள் சிக்கிக்கொண்டு விடுவோம். அதன்பிறகு என்ன செய்தாலும் பருவ மாற்றத்தினால் வரும் பேரழிவுகளில் இருந்து தப்பிக்க முடியாது.
ரியோ+20 சந்திப்பில் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. இந்நிலையில் மாநாட்டிற்கான உணவுப் பட்டியலில் இருந்து மாமிச உணவு வகைகளை நீக்குவதுதான் மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். மாமிச உணவு வகைகளை நீக்குவதோடு மட்டும் அல்லாமல் அந்நீக்கத்தைப் பெரிய அளவில் பிரகடனப்படுத்தவும் வேண்டும்.
மாநாட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும், மாமிச உணவு எவ்வாறு பருவநிலை / கால மாற்றத்திற்கு முக்கியமான காரணி என்பது தெரியவேண்டும். மாமிச உணவினால் ஏற்படும் மாசு ஒப்பீட்டளவில் வெகு விரைவில் தீர்க்கத்தக்க பிரச்சினை. மாமிச உணவை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதன் வாயிலாக, நாம் பருவ மாற்றத்திற்கு எதிராகப் போராடலாம். அடுத்த இருபது வருடங்களுக்குள் செய்யத்தக்க, செயல்பட வாய்ப்புள்ள மிகச் சிறந்த நடவடிக்கை இதுதான்.
2006ல் வெளியான ‘கால்நடைகளின் நீண்ட நிழல்’ என்னும் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிக்கை, இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பது என்பது கடும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை (உள்ளுரில் இருந்து உலகளவில்) உருவாக்குவதில் முதல் இரண்டு அல்லது மூன்று காரணிகளுக்குள் ஒன்றாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது. அதனை அடிப்படையாகக்கொண்டு பருவ நிலை ஆய்வாளர்களான ராபர்ட் குட்லாண்ட் மற்றும் ஜெஃப் அன்ஹாங் ஆராய்ச்சிகளைச் செய்தனர். அவர்கள் ஆராய்ச்சி, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளிப்படுத்தியது. கால்நடைகளும் மீத்தேன் செறிவுள்ள அவற்றின் உபபொருட்களும்தான் 51% வாயு வெளியேற்றத்திற்குக் காரணம் என்பதுதான் அது. குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்திற்கு இறைச்சிதான் காரணம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஐ.நா. சபையும், ரியோ மாநாட்டில் பங்கேற்கும் செயல்பாட்டாளர்களும், பன்னாட்டுப் பிரதிநிதிகளும் சேர்ந்து மாநாட்டின் அனைத்து விருந்துகளில் இருந்தும், பஃபேக்களில் இருந்தும், காலை, மதிய, மாலை உணவுகளில் இருந்தும் இறைச்சியை முற்றிலும் நீக்கினால், ஐ.நா. சபை உலகைக் காக்கும் விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறது என மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பசுமை மாநாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வில், இறைச்சி நீக்கம் என்பது ஒரு இரண்டாம்  தரமான யோசனையாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு விதப் பேசக்கூடாப் பொருளாகக் கருதப்படுகிறது.
எங்கும் எதிலும் சுற்று சூழல் ஆர்வலர்களின், புவி வெப்ப மயமாவதில் உள்ள அபாயங்களைக் குறித்த பரப்புரைகளை நாம் காணலாம்/கேட்கலாம். ஆனால் இவர்களின் பரப்புரை நட்சத்திரங்கள் யாரும் இறைச்சியைத் தவிர்ப்பது குறித்துப் பேசுவதே இல்லை. சமீபத்தைய கூடுகை ஒன்றில் பெரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியதின் அவசியத்தைப் பற்றிச் சன்னதத்துடன் பேசினார். உணவு இடைவேளையின் போது ossobucco என்னும் இறைச்சி உணவைப் பலமுறை கேட்டு வாங்கி உண்டார். இத்தகைய அதீத இறைச்சி உணவினால் வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறித்துக் கேட்டபோது, வெட்கமின்றி, தன்னால் ஒருபோதும் இறைச்சி உணவைக் கைவிட முடியாது எனக் கூறினார்.
இது பிரச்சினையின் ஒரு பகுதி, வளர்ந்த நாடுகளில் இறைச்சி உண்ணுதல் என்பதை மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தின் ஒரு பகுதியாக, குறியீடாகக் கருதுவதில் உள்ளது. இத்தகைய உணவு முறையைக் கைக்கொள்ளுதலைத்தான், அது வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை வீரியமிழக்கச் செய்தாலும், வளரும் நாடுகளும் தமது லட்சியமாகக் கருதுகின்றன.
அந்த அளவிற்கான தேவையை நிறைவு செய்ய வேண்டும் எனில், இப்போது இருப்பதைவிட (60 பில்லியன்) இரு மடங்கு (120 பில்லியன்) அளவிற்குக் கால்நடை எண்ணிக்கையை 2050ல் உயர்த்த வேண்டியிருக்கும் என FAO (Food and Agriculture Organization of the United Nations) கருதுகிறது. இத்தகைய ஒரு நிலை, புவி வெப்பமயமாதலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தானிய உற்பத்தியின் மீதும் கடும் அழுத்தத்தை உருவாக்கும். இந்த அளவிற்கு, கால்நடைகளுக்கு உணவளிக்கும் அளவிற்கு, அவற்றின் உற்பத்தியையும் பெருக்க வேண்டும் அல்லவா?
அறிஞரும், ‘உலகிற்கு உணவூட்டல்’ என்னும் புத்தகத்தின் ஆசிரியருமான வால்காவ் ஸ்மில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“வளர்ந்த நாடுகளில் இப்போது உள்ளவர்கள் உண்ணுவதைப் போல உலகில் உள்ள அனைவரும் உணவு அருந்துவது என்பது மிகக் கடினம். அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால், உலகில் இருப்பதை விட 67% அதிகமான அளவு விளை நிலம் தேவைப்படும். தொடர்ந்து பைங்குடில் வாயுக்கள் வெளியேறுவதால், வரும் சில தசாப்தங்களில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை பருவ நிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசு குழு கூறியுள்ளது. அவை:
1. லத்தின் அமெரிக்காவில் 70 மில்லியன் மக்கள் குடி நீர் இல்லாமல் துன்பப்படுவார்கள். பல விவசாயிகள், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால், பாரம்பரியப் பயிர்களைக் கைவிடுவர்.
2. ஆப்பிரிக்காவில் 250 மில்லியன் மக்கள் நீர்த் தட்டுப்பாட்டால் துயருறுவர். அங்கு கோதுமை பயிரிடும் விவசாயம் முற்றிலுமாக அழிந்து போகும்.
3. ஆசியாவில் 100 மில்லியன் மக்கள் கடல் நீர் மட்ட உயர்வால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறைவான மழையால் வங்கதேசத்திலும் சீனாவிலும் நெல் விளைச்சல் பாதிக்கப்படும்.
4. இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 23 இஞ்ச்கள் உயரும் எனக் கருதப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் தீவுகளும், நாடுகளும் அப்படியே மூழ்கும், மறையும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே மாலத்தீவுகள் புதிய நாடு ஒன்றை விலைக்கு வாங்குவதற்காகப் பணத்தை சேமித்து வருகிறது.”
இறைச்சி உற்பத்தியையும், உண்ணுதலையும் குறைத்தல் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என்பதற்கும், ஆகவே மேலே கண்ட பெருந்துயர்களைத் தடுக்க வாய்ப்புண்டு என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஆனால் பல கட்ட, பல வாரப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் ரியோ மாநாட்டின் வரைவு அறிக்கையில் இறைச்சி குறித்த எந்தத் தீர்மானமும் இல்லை. அதற்குப் பதிலாக புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதையும், பயன்படுத்துவதையும் குறைப்பதற்கான அவசியத்தைப் பற்றி அறிக்கை பேசுகிறது. முக்கியக் குற்றவாளியைப் பற்றி ஏதும் பேசவில்லை.
சுற்றுச்சூழல் நட்சத்திரங்களுக்கு / தலைவர்களுக்கு இந்த மாநாட்டில் பல சவால்கள் உள்ளன. அவர்கள் தங்கள் தட்டில் இருந்து இறைச்சியை எடுக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது.


Posted on Leave a comment

என்ன நடக்குது சபரிமலையிலே…? – ஆனந்தன் அமிர்தன்

ஐயப்ப வழிபாட்டில் சரண கோஷத்தைத் தவிர்த்து மலையாளத்து மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வேறு பெரிய ஒற்றுமை இல்லை. தமிழர்கள் கார்த்திகை ஒன்றில் மாலை போட்டு ஒரு மண்டலம் முறையாக விரதமிருந்து இருமுடி கட்டிக் கிளம்பும் போது, ரத்த பந்தங்களிடம்கூட ‘போய் வருகிறேன்’ என்று சொல்லாமல் கிளம்பும் அளவுக்கு பக்தியிலும் சாஸ்த்திரத்திலும் மூழ்கிப் போனவர்கள். மலையாள மக்களில் பலர், நாம் திருப்பதி போவது போலச் சட்டென முடிவெடுத்துக் கிளம்பி வந்து பம்பையிலேயே ரெடிமேட் இருமுடி வாங்கி சந்நிதானம் அடைந்து சாமியைக் கும்பிட்டுட்டு நெய் அபிஷேகம் வரை கூடக் காத்திராமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவர்.
இந்த வேறுபாட்டினைச் சொல்லவேண்டிய அவசியம் என்னவெனில், இன்றைக்கும் ஐயப்பன் ஆலயம் உயிர்ப்புடன் இருக்க மிக மிக முக்கியமான காரணம், தமிழ், கர்நாடக, தெலுங்கு பக்தர்கள்தான். இந்த வெளிமாநில பக்தர்களால், கோவில் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசாங்கத்திற்கு வரும் வருமானம் மிகவும் கணிசமானது. இந்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருவதைக் கவனித்த அரசாங்கம், இதை முழுக்க முழுக்க சுற்றுலாத்துறை வருமானமாக மாற்றியமைக்க ஆரம்பித்தது. ஒரு இடதுசாரி அரசு இதைச் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ள முடிகிறது. தேவசம் போர்டு?
தேவசம் போர்டின் அழிச்சாட்டியங்களைப் பார்ப்பதற்குமுன் ஐயப்பன் கோவில் நிர்வாக மட்டங்களைக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் முறைகேடுகளை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அதிகார மையங்கள் இரண்டு. ஒன்று தேவசம் போர்டு. இவர்கள்தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையம். மற்றொன்று அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் எனப்படும் அபாஸ் (ABASS – Akhila Bharatha Ayyappa Seva Sangam). இந்த அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். முழுக்க முழுக்க சேவையே பிரதானம்.
பம்பை, சந்நிதானம் என்று மட்டுமில்லாமல் ஐயப்பனுக்கு மாலை போட்ட மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் ஏதோவொரு வகையில் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல வழிகளில் தன் சேவைக்கரங்களை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு. பம்பையிலோ, சந்நிதானத்திலோ யாரோ ஒருவர் தடுக்கி கீழே விழுந்தால் கூட முதலில் கேட்கும் வார்த்தை அபாஸ். சமதளத்தில் கூட அத்தனை துரிதமாக சேவை செய்வது கடினம் ஆனால், நீலிமலை, அப்பாச்சி மேடு பகுதிகளிலும் அத்தனை லாகவமாக, துரிதமாகச் செயல்படும் தன்னார்வத் தொண்டர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளி, ஐயப்பன் தேவசம் போர்டு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்மூடித்தனமாக சேவை செய்யும் அடிமைகள்தான் இந்த அபாஸ்.
இந்த அபாஸ் அமைப்பிற்கு அன்னதானத்திற்காக வரும் நன்கொடை, தேவசம் போர்டுக்கு வரும் நன்கொடையை விட அதிகம். இது தேவசம் போர்ட்டின் கண்ணை உறுத்துகிறது. அபாஸ் அமைப்பிலும் சில ஊழல் நிர்வாகிகள் இருந்திருக்கின்றனர் போலும். அபாஸ் அமைப்பிலும் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. வாய்ப்பினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தேவசம் போர்டு, “இனி பம்பையிலோ, சந்நிதானத்திலோ அபாஸ் அன்னதானம் செய்யக்கூடாது” என்று கோர்ட்டில் தடையுத்தரவை வாங்கிவிட்டது.
தவறு செய்த நிர்வாகிகளைக் களைய உதவியிருந்தாலோ அல்லது தவறு மேலும் நடக்காமல் தடுக்க உதவியிருந்தாலோ அதைப் பாராட்டலாம். மருத்துவ உதவி, சுத்தம் செய்தல், கூட்டத்தை நிர்வகித்தல் போன்ற மற்ற சேவைகள் செய்ய அபாஸ் அமைப்பிற்குத் தடை இல்லை. சம்பந்தமே இல்லாமல் எதற்காக அன்னதானத்தை மட்டும் தடை செய்ய வேண்டும்? அபாஸ் நிர்வாகம் மட்டுமே பம்பையில் நான்கு இடங்களிலும், சந்நிதானத்தில் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தது. இது தவிர கர்நாடக, ஆந்திர சங்கங்கள் சார்பாகவும் வேறு சில அமைப்புகள் சார்பாகவும் அன்னதானங்கள் நடைபெற்று வந்தன. இந்த அன்னதான மையம் எல்லாவற்றிற்கும் இப்பொழுது முற்றிலும் தடை. ஏன்?
15 அடிக்கு 6 அடி அளவுள்ள ஒரு கடைக்கு ஒரு மாத வாடகை நான்கு லட்சம். நாற்பது லட்சம் டெபாஸிட். (இது நீலிமலையின் ஓரத்தில் இருக்கும் டீ காஃபி, ஜூஸ், பழக்கீற்றுக்கள் விற்கும் ஒரு கடைக்கான வாடகை.) அப்படியானால் சந்நிதானத்திலோ பம்பையிலோ இருக்கும், வியாபாரம் கொழிக்கும் கடைக்கு என்ன வாடகை இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஆயிரக்கணக்கான கடைக்காரர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் வாடகையைக் கூட்ட வேண்டுமானால், அவர்களுக்கும் வருமானம் கூடியாக வேண்டும். இப்படி ஆளாளுக்கு அன்னதானம் போட்டால், வியாபாரம் செய்யும் கடைகளுக்கு பக்தர்கள் செல்ல மாட்டார்கள் இல்லையா? அதனால்தான் அன்னதானங்களுக்குத் தடை. எவ்வளவு கீழ்த்தரமான வியாபார உத்தி பாருங்கள்.
அபாஸ் செய்த அன்னதானங்களுக்குத் தடை போட்டதற்குக் காரணம் அவர்கள் அன்னதானத்திற்கு வசூலித்த பணத்தில் ஊழல் செய்து விட்டார்களாம். அப்படியென்றால், அவர்களைக் கரிமலை உச்சியில் மட்டும் அன்னதானம் செய்ய அனுமதித்ததன் நோக்கம் என்ன? அந்த இடத்தில் தேவசம் போர்டின் வருமானத்திற்கு அந்த அன்னதானம் இடைஞ்சலாக இல்லை, அதுதான் விஷயம். நாங்களும் அன்னதானம் போடுகிறோம் என்று தேவசம் போர்டு சப்பைக்கட்டு கட்டலாம். பம்பையில் ஓர் இடத்திலும் சந்நிதானத்தில் ஓர் இடத்திலும் மட்டும் அன்னதானம் போடுகிறது தேவசம் போர்டு. ஒரே ஒரு முறை போய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். அது புளியோதரையா நேற்றைய பொங்கலா என்று நீங்கள் சந்தேகப்படும்போது, இன்றைக்குச் செய்த உப்புமா என்று பதில் வரும். உப்புமாவிற்குச் சுண்டல் குழம்பு. அதுவும் ஒரு கரண்டிக்கு மேல் வைக்க மாட்டார்கள். அடுத்த கரண்டி வாங்க நீங்கள் மீண்டும் எச்சில் தட்டைத் தூக்கிக்கொண்டு அந்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.
எத்தனை வசதி குறைந்தவர்களாக இருப்பினும் மாலை போட்டிருந்த காலத்தில் யாராவது நான்கு பேரை அழைத்து உணவு பரிமாறி ஐயப்பன் சாப்பிட்டதாக மகிழ்ந்து போகும் தமிழக பக்தன் அங்கே பிச்சைக்காரனாக நடத்தப்படுகிறான். ஆனால், இதே தமிழன், சென்ற ஆண்டு வரை அபாஸ் கொடுத்த அன்னதானத்தை வாங்கிவந்து, அப்படியே குப்பையில் போட்டுவிட்டுப் போனதற்காக இப்பொழுது அனுபவிக்கிறான் என்பது தனிக்கதை.
இடைச்செருகல் 1: ஐயப்பன் கோவிலில் தலைமை குருக்கள்/பூசாரிக்குப் பெயர் ‘மேல்சாந்தி.’ வருடத்திற்கொரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவரை நியமிப்பார்கள். அந்த ஒரு வருட காலத்திற்கு, கீழே என்ன நடந்தாலும் அவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்நிதானத்தில் இருந்து இறங்க மாட்டார். ஒருமுறை ஒருவர் மேல்சாந்தி பதவியை அனுபவித்துவிட்டால் போதும், அவர் பல கோடிகளுக்கு அதிபதி. 90% பக்தர்கள் ஐயப்பன் இருக்குமிடத்தில் பணத்தை வீசி காணிக்கை செலுத்துவார்கள். அப்படி விழும் அத்தனை பணமும் அந்த மேல்சாந்திக்கு மட்டுமே. வேறு எந்தக் கோவிலிலாவது இப்படித் தனிநபருக்கென்று உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
இடைச்செருகல் 2: இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள இடங்களில் (சபரிமலை இருக்கும் மாவட்டம்) நீங்கள் சிறியது பெரியது என்றில்லாமல் எந்த உணவகத்துக்குள் நுழைந்தாலும் ஒரே விலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு உணவு கிடைக்கும். குடிக்கத் தண்ணீர் கேட்டால் எந்த இடத்திலும் வெறும் பச்சைத் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். மூலிகை கலந்த வெந்நீர் மட்டுமே கொடுப்பார்கள். இந்த வெந்நீர்க் கட்டுப்பாட்டை பெருவழிப் பயணமான காட்டிற்குள்ளும் கடைப்பிடிப்பது மிகவும் பாராட்டிற்குரியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் புலியோ இல்லையோ நமக்குத் தெரியாது, ஆனால், அதைப் புலியாக நினைத்துக்கொண்டு ஐயப்பன் தேவசம் போர்டு சூடு போட்டுக் கொண்டிருக்கின்றது. அங்கே லட்டுக்காக வரிசையில் நிற்பது போல இங்கே அரவணை/அப்பத்திற்கு வரிசையில் நிற்க வைத்து டிமாண்ட் காட்டுகிறார்கள். ஐயப்பன் ஆலயப் பிரசாதம் என்பதைத் தவிர அதற்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோங்க என்று கொடுத்தால் கூட, மழுப்பலாகத் தவிர்த்துவிட்டுப் போகும் அளவில்தான் அதன் ருசியிருக்கும். அதன் விலையையும் தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். வருமானம் கூடினால் பக்தர்களுக்கு வசதி செய்து தரமுடியும் என்றொரு சல்ஜாப்பு கூடச் சொல்லப்படலாம். இதைப் பற்றி யோசித்து, இங்கு நடப்பதைக் கூர்ந்து கவனித்தபோதுதான், எத்தனை மோசமாக அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று புரியவந்தது.
மகரஜோதி காலத்தில், பம்பையிலிருந்து சந்நிதானம் போகும் 6 கிமீ தூரமும் இருமுடி ஏந்திய பக்தர்கள் கிட்டத்தட்ட 12-15 மணி நேரம் காத்திருப்பார்களாம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு அடி நகருமாம். பக்தியிலிருப்பவர்கள் பொறுமையாக நிற்கிறார்கள் என்பதோடு பசியால் வாடுவதையும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மலஜலம் கழிக்காமல் எப்படிக் காத்திருப்பது? அடக்கக்கூடிய விசயமா அது? ஆகையால் தலையில் இருமுடியை வைத்துக்கொண்டே நிற்கும் இடத்திலிருந்தே சிறுநீர் கழிப்பது சகஜமாகி விட்டதாம். அதாவது ஒரு மண்டலம் அதீத சுத்தமாக விரதம் இருந்து ஐயப்பனைத் தரிசிக்கப் போகும் சில மணிகளுக்கு முன்பு மூத்திரத்தில் மூழ்கி எழுந்து போய் உங்கள் வேண்டுதல்களையோ நன்றி நவில்தலையோ ஐயப்பன் முன் வைக்கவேண்டிய நிலை. நடைபாதை முழுவதும் கடைகளைக் கட்டி விட்டதால் அங்கு கழிவறை கட்ட இடவசதி இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், சந்நிதானத்தில் கூடப் போதுமான கழிவறை வசதி இல்லை. அந்தப் பிரதேசத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தேவசம் போர்டு கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
ஸ்வாமி தரிசனத்திற்காக நீங்கள் வரிசையில் நிற்கும்போதே கூட ஸ்ட்ரெக்சரில் சிலரைத் தூக்கிக் கொண்டு போவதைக் காணலாம். அவர் மயக்கமாக இருக்கிறாரா மடிந்து கிடக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், குறைந்து ஒரு நாளைக்கு நாலைந்து சரணங்கள் (மரணங்கள்) நிகழ்வது சகஜம் என்கிறார்கள். காரணம் நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல்கள்தான். யார் வீட்டில் என்ன இழவு விழுந்தாலும் சரி, எங்களுக்கு வருமானம் தொடர்ந்து வந்தால் போதும் என்ற மனப்போக்கில் கோவில் நிர்வாகம் வெளிப்படையாகவே நடந்து கொள்கின்றது. தேவசம் போர்டினைத் தட்டிக் கேட்க வேண்டிய அவசியம் அம்மாநில அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சீசனில் வரும் வருமானத்திற்காக தேவசம் போர்டினைக் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அரசு. சில வருடங்களுக்கு முன்பு புல்மேடு பகுதியில் நிகழ்ந்ததைப் போன்றதொரு பெரிய விபத்தினைச் சந்திக்காமல் தேவசம் போர்டின் பேராசைத் தீ அணையாது போலிருக்கிறது.
‘ஐயப்பா, உன்னை நம்பி வரும் பக்தர்களைப் பத்திரமாகத் திருப்பியனுப்பு’ என்று வேண்டுவதைத் தவிர நாம் செய்வதற்கு வேறொன்றும் இல்லை. நம்மால், நம் ஊர்க் கோவில்களின் சீர்கேட்டினையே தட்டிக் கேட்க நமக்குத் துப்பில்லை. இதில் அடுத்த மாநில கோயில் நிர்வாகத்தை என்ன செய்துவிட முடியும்?


Posted on Leave a comment

இராமானுசன் என்னும் சமதர்மன் – ஆமருவி தேவநாதன்

பாரத தேசம் யோக பூமி. கல்விக்கும் ஞானத் தேடல்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த நாடு. பாரதி – ‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் / பிரானருள் பொங்கிய நாடு’ என்கிறார். பாரத ஞான மரபு பற்றிய எதிர்மறை நோக்குகளை மார்க்சியர்கள் முன்வைத்தனர். கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இரு கிளைகளாகப் பார்த்தனர். ஆங்கில, ஐரோப்பிய ஆய்வாளர்களும் இதே நோக்கில் பாரதத்தின் ஞான மரபை அணுகினர். பாரத ஞான மரபு வைதீக, அவைதீகப் பார்வைகளைக் கொண்டது. நாம் இந்தக் கண்ணோட்டத்தில் நமது சம்பிரதாயத்தைப் பார்ப்பது சரியான வழியாக இருக்கும்.
அவைதீக மரபு பவுத்தம், ஜைனம், சார்வாகம்.
வைதீக மரபு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலானவை.
பவுத்தம், ஜைனம், சார்வாகம், லோகாயதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று பல தத்துவங்கள்
 பாரத ஞான மரபில் இவற்றின் இருப்பிடங்கள் தனித்தனி ஞான பீடங்கள்
இத்தனை பன்முகப்பட்ட மனிதக் கூட்டத்தின் பரந்த ஞானத் தேடல்களுக்கான முயற்சியில் இவற்றின் தேவை இருப்பதை உணர முடிகிறது..
பாரத ஞான மரபின் அடிப்படைக் கொள்கை : ஒன்றை ஒன்று அழிக்காமல் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது. இரண்டும் வாழ்வது. அத்வைதத்தில் இருந்து விசிஷ்டாத்வைதம் தோன்றியது. ஆனாலும் இரண்டும் வாழ்ந்தன. அனைத்துப் பாதைகளும் கொண்டு சேர்க்கும் இடம் ஒன்றே என்பது நமது பண்பாடு. ‘ஆகாசாது பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்…என்பதே நமது பண்பாட்டுப் பார்வை.
இந்தப் பிரபஞ்சம் விஷ்ணுவின் உடல் என்னும் கருத்துடன் செயல்பட்ட நமது பண்பாட்டில் அழிவு, அழிப்பது என்பன பொருந்தாதவை. தெரியாத, அறிந்துகொள்ள முடியாத, புறக்கண்ணால் தெரிந்துகொள்ள முடியாத பரம்பொருளை, பிரபஞ்ச ஞானத்தை உருவகம் மூலம் உணரும் இறை வடிவுகள். இந்த வடிவுகளையே இறைவன் என்று சொல்லி அவற்றுக்கான ஆராதனைகளை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
உதாரணமாக, ஆற்றங்கரையில் உள்ள கூழாங்கல் மலை மேலிருந்து உருண்ட பாறை, சில ஆயிர ஆண்டுகள் கழித்து இன்று நமது கையில் வட்ட வடிவமான சிறிய கல்லாக இருக்கிறது. ஆக, அக்கூழாங்கல்லின் வடிவம் அதுதானா? நமது அகக் கண்களால் நாம் காணக்கூடியது அது. முப்பரிமாணத்தில், நமது அறிவுக்கு எட்டிய அளவுகோல்களுடன் நாம் கூழாங்கல்லை சிறிய வடிவினதாகக் காண்கிறோம். ஆனால் அக்கல் பல ஆயிரம் ஆண்டுகள் விரிந்த வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கூழாங்கல் அந்த நெடிய வரலாற்றின் உருவகம். ஆனால் அக்கல்லே அதன் முந்தைய வடிவு அல்ல. ஆனாலும் அக்கல் உணர்த்துவது பெரிய உண்மைகளையே. இந்தக் கண்ணோட்டத்துடன் நாம் இராமானுசரைக் காண்கிறோம். இராமானுசர் அந்தக் கூழாங்கல் போன்றவர்.
கடைந்து வடிகட்டிய பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஞானத் தேக்கங்களை ஒன்றிணைத்து, நமது அறிவிற்குப் புலப்படும்படிச் சொன்னவர் அவர்.
விசிஷ்டாத்வைதம்: விசிஷ்டம் + அத்வைதம் விவரிக்கப்பட்ட அத்வைதம். வெறும் அத்வைதம் ஒரு பிரும்மத்தை உணர்த்தியது. மற்ற அனைத்தும் பிம்பம் என்றது. பிரதி பிம்ப வாதம் என்று உரைத்தது. சூரிய ஒளியின் கிரணங்கள் பல கண்ணாடித் துகள்களில் படுவதால் பல சூரியர்கள் இருப்பது போல் தோன்றுவது மாயை. அஞ்ஞானம் அகன்று உண்மைதெரிய, மாயை அகலும். அப்போது ஒரு சூரியன் உணரப்படும்.
ஆனால் விசிஷ்டாத்வைதத்தில், பிரும்மம் தவிர, ஜீவன், ஜடப்பொருள் முதலிய எல்லாமும் உண்மையே. ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் என்னும் முன்னரும் உண்மைகளே. எனவே பானை செய்பவரும், கை வினைஞரும் உண்மையே. சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பும் உண்மையே. அவர்களுக்கும் ஏற்றம் உண்டு. மேலும், அனைவருக்கும், அனைத்துக்கும் மோட்சம் உண்டு.
பிரும்மம் தவிர்த்த ஜீவன்கள், ஜடப் பொருட்கள் முதலியனவற்றுக்கிடையே வேற்றுமைகள் இல்லை. ஏனெனில், அனைவருள்ளும், அனைத்துள்ளும் இருக்கும் ஆத்மா ஒன்றே; உடல் ஸ்திரமற்றது; ஆத்ம அளவில் வேறுபாடு இல்லை. எனவே பிரம்மம் தவிர்த்த அனைத்தும் ஒன்றே என்பதால் அனைத்திற்கும் உய்யும் வழியும், உய்வதற்கான அதிகாரமும் உண்டு என்பது ஸ்ரீமத் இராமானுசரின் விசிஷ்டாத்வைதப் பார்வை.
ஜடப்பொருட்களும் உண்மையே என்பதில் ஒரு சிறப்பு உள்ளது. அதுதான் தற்காலத்தில் சூழியல்குறித்த பார்வை. ‘என் தேவைகளுக்காக இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது’ என்பது நமது சித்தாந்தம் இல்லையாதலாலும், ஜடப்பொருட்களுக்கும் ஆத்மா உள்ளது என்கிற சித்தாந்தப் பார்வையாலும் மரம், செடி, கொடிகளை மனிதனின் தேவைகளுக்காக அழிக்க வழி இல்லை. நவீன சூழியல் (Environmental Conservation) பார்வையும் உள்ளடங்கி இருப்பதை நாம் உணர வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பார்வையாக இராமானுசரது சித்தாந்தம் பரிணமிக்கிறது. ஆனால், இவரது பார்வை புதியது அல்ல. இராமானுசரது பார்வைக்கு முன்னோடிகள் இருந்துள்ளனர். அவர்கள் ஆழ்வார்களாவர். இவற்றுக்குப் பாசுரங்கள் துணை நிற்கின்றன. ஆக ஆழ்வார் ஆச்சாரியார்களின் அனுக்ரஹம் இருப்பதாகவே தெரிகிறது.
பெரியாழ்வாரின் பாசுர வரி ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து…’ என்பது ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்று. இந்த வரியையும் ‘கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடியாட் செய்கின்றோம்’ என்னும் வரியும் சித்தாந்தத்தை அங்கீகரித்த ஆழ்வார்களின் ஆசியுரைகள் என்று கொள்ளலாம்..
ஸமாஸ்ரயனத்தில் / பார நியாசத்தில் தாஸ்ய நாமம் என்பதையும் இணைத்து நோக்க, மனிதர்களுக்கிடையேயான சமன்வயப் பார்வை (Uniformity in treatment) குறித்த நமது சித்தாந்தப் புரிதல் எளிதாகிறது. ஊர்த்துவ புண்ட்ரத்தால் தோற்ற ஒருமை (Uniformity in appearance) புலப்படுகிறது.
தத்துவமும் செயல்பாடும் ஒன்றிணையும் நிலையை நாம் இராமானுசரிடம் காண்கிறோம். கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் இணைந்து அனைவருக்கும் மோட்சம் என்னும் பொது நன்மைக்கான வழி. பெரும் பாண்டித்யம் உள்ள தர்க்க சாஸ்திர விற்பன்னர்களும், பானை செய்பவர்களும் ஒன்றெனக் கொண்ட நிலை. ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் உடன்பாடு உடைய ஒரு சித்தாந்தம் என்று நமது இராமானுச சித்தாந்தம் விரிகிறது.
கர்நாடகப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இராமானுசர் செல்லப்பிள்ளை விக்ரகத்தைக் கொணரும்போது உதவியதும், அதனால் அவர்களை இராமானுசர் வைஷ்ணவர்களாக்கியதும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது. உபநயனம் என்னும் சம்ஸ்காரத்தாலும் ஸமாஸ்ரயணம் என்னும் ஒருமைப்படுத்தல் சடங்காலும் சமூக அளவில் ஆகப்பெரிய ஒற்றுமைப்படுத்தல் நிகழ்வை, நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் நிகழ்த்தியமையால், சொல், செயல், நடத்தை என்னும் மூன்றும் இராமானுசரிடம் ஒன்றாயிருந்ததைக் காட்டுகிறது. (மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒருமுகமாகவும் ஒரு சேரவும் இருப்பது ஆன்றோர் நடத்தை). அப்படி நடந்தவர் உடையவர்.
ஆழ்வார்கள் பல இனங்களில் இருந்தும் வந்த நிலை, இவர்களைக் கோவிலுக்குள் எழுந்தருளப்பண்ண இராமானுசர் செய்த செயல்கள் என்று அனைவரும் உட்செல்லக் கூடிய ஒரு நிலை. இதனைச் செயல்படுத்த அவர் மேற்கொண்ட பாஞ்சராத்ர ஆகம வலியுறுத்தல் முதலியன கவனிக்கத்தக்கவை. கோவிலில் மாற்றம் ஏற்பட ஆகமம் தடையென்றால், புதிய ஆகமத்தை உட்புகுத்துவதால் பெருவாரியான மக்கள் ஆலயங்களுக்குள் சென்று ஒன்றுபட இயலும் என்றால், அதற்காக அதனைச் செய்யவும் இராமானுசர் தயங்கியதில்லை என்பதே அவர் மானுட சமத்துவத்தைச் செயல்படுத்த முனைந்ததை உணர்த்துகிறது. இது நாம் இன்றளவும் நினைத்து மிகவும் பெருமைப்படத் தக்க செயல்.
திருவரங்கக் கோவிலுக்குள் பணிகளைப் பிரித்துக் கொடுத்து பல பண்டாரங்களை ஏற்படுத்தினார் உடையவர். இந்தப் பண்டார அமைப்பு நவீன கார்ப்பரேட் நிறுவங்களின் நிர்வாக அமைப்புக்களுக்கு
ஈடாக உள்ளதைக் காண்கிறோம். வேலையைப் பகிர்ந்துகொளல் (Division of Labour) என்னும் வழிமுறைகள் 1,000 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப் படுத்தப்பட்டது புரட்சியே. எந்தத்துறையும் இழிவல்ல; ஆனால் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நவீன நிறுவனங்கள் செயல்பட முடியும்.  
கோவிலையும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட, சரியான வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் கொண்டுவந்தது எம்பெருமானாரின் முன்னோக்கிய பார்வையை உணர்த்துகிறது.
பல தத்துவங்கள் ஆன்மீகத்தையே முன்னிறுத்தின. இன்னும் பல, சமூகப் பார்வையை முன்னிறுத்தின. ஆனால், இராமானுசர் உரைத்த பாதை சமூகம், ஆன்மீகம் இவற்றுடன் பொருளாதாரத்தையும் இணைத்தது. பல பிரிவினரையும் கோவிலின் அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம், அவர்களின் தொழில் திறமைகள் பயன்பட்டன. பூதொடுத்தல், மடப்பள்ளி கைங்கர்யங்கள், கணக்கு வழக்குகள் சரிபார்த்தல், காவிரியின் கரை உடையாமல் பழுது பார்த்தல் முதலிய பல திறமைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. சமூகத்தின் திறமைகள் அனைத்தும் மக்களின் ஒருங்கிணைந்து ஒற்றுமைக்கும் மேம்பாட்டுக்கும் பயன்பட்டன. சமூகத்தின் வெளிப்புறத்தில் இருத்திவைக்கப்பட்ட கைவினைஞர்கள், பொற்கொல்லர்கள் முதலானோர் சம்பிரதாயத்திற்கான தங்களது பங்களிப்பால் சமூகத்தின் உள்ளே வந்தனர். இதை இராமானுசரது சீரிய திட்டம் எனலாம்.
எந்த ஒரு பெரிய அமைப்பையும் நிறுவுபவர், அதனை சீராக வழிநடத்திச் செல்ல, தானே முன்னின்று செயல்படுவது உலக மரபு. அவர்கள் தங்களுக்குப் பின்னரும் அந்த அமைப்புகள் சரியாக நடைபெற வேண்டி பல வழிகாட்டுதல்களையும், அடுத்த கட்டத் தலைவர்களையும் உருவாக்கி, அதிகாரப் பரவல் ஏற்படும்படிs செய்வர். உடையவரும் அவ்வாறே தனக்குப் பின்னும் விசிஷ்டாத்வத சம்பிரதாயம் தழைக்க, கோவில்கள் சரிவர நடைபெற சிம்மாசனாதிபதிகளை நியமித்து சம்பிரதாயம் தொடர வழிவகுத்தார்.
இன்றைக்குஒருங்கிணைந்த சமூகம்’ (Inclusive Society) என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. இராமானுசர் இதை 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தினார். ‘சாத்திய முதலிகள்’, ‘சாத்தாத முதலிகள்என்னும் ஏற்பாடு அவரது சாதுர்யமான கையாளல் என்று தோன்றுகிறது. அதிகார அடுக்குகளை ஒரே அடியாக வீழ்த்த முடியாது என்பதால் இந்த முறை ஒரு நடுவு நிலை போல் தோற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்த முறையானது செயல்பட்டது. இன்றும் செயல் அளவில் முன்னேறியுள்ளது. சாத்தாத சாதியினரான புருஷோத்தம நாயுடு முதியோரின் உரைகள் நமக்குக் கிடைக்க இந்த அங்கீகாரம் வழிசெய்தது என்பது எத்தனை முற்போக்கான வழி என்று வியக்க வைக்கிறது.
இன்றைக்கும் கொங்கு தேசத்தில் வைணவம் செழித்து, ‘கண்ணன் கூட்டம்’ முதலான வைணவ அமைப்புகள் திருமால் பெருமையையும் வைணவ சம்பிரதாயத்தையும் பேண உதவுகின்றன என்பது உடையவரின் அதிமுற்போக்கான சமூக ஆற்றுப்படுத்தலால்தான் என்பதில் ஐயம் இல்லை.
கொங்கப்பிராட்டி வைபவம் இங்கு நோக்கத்தகக்து.
இந்திய சமயத்தினரை மட்டும் அல்லாது, துருஷ்க சமயத்தினரையும் தன்னகத்தே உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மையை விசிஷ்டாத்வைதத்தில் புகுத்திய இராமானுசர் பெரிய ராஜதந்திரியாகவும் தெரிகிறார். ஆட்சியாளர்கள் துருஷ்கர்களாக இருந்தாலும் பிற்காலத்தில் கோவில் அமைப்புகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது போல். துருஷ்க நாச்சியாரையும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்து, அனைவரையும் ஒருங்கிணைக்கும் சமுதாய அமைப்பை உருவாக்கிய அவரது பார்வை தீட்சண்யம் வியக்க வைக்கிறது. இதுதான் உடையவரது பார்வை என்று கொள்ள இயலாது. ஆனால் அப்படி இருந்திருக்க வாய்ப்புள்ளது.
வைணவம் வெறும் பண்டிதர்களின் கைப்பொருளாக, வழிபாட்டு முறையாக மட்டுமே இருந்திருக்குமேயானால், இன்றளவும் தழைத்து நின்றிருக்குமா என்பது கேள்வியே. விசிஷ்டாத்வைத தத்துவத்தின்படி, எண்ணம், சொல், செயல் என்று அனைத்தும் ஒன்றாக இருக்கும் / இயங்கும் ஒரு சமூக, ஆன்மீக, வழிபாட்டு முறையை உருவாக்கியதன் மூலமும், அம்முறையில் வேறுபாடுகளற்ற சமதர்மச் சூழல் ஏற்படும்படி செய்த உடையவர் திட்டம் உலகில் தோன்றிய வேறெந்த சமூக, பொருளாதார, ஆன்மீகப் புரட்சிகளுக்கும் முற்பட்ட சமதர்மப் புரட்சி எனலாம்.


Posted on Leave a comment

பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் – பி.ஆர்.ஹரன்

“வேளாண்மை பற்றிப் பேசும்போது ‘கால்நடைப் பண்ணை’ என்று நாம் சொல்வதில்லை. ‘பசுப்பாதுகாப்பு’ என்றுதான் சொல்கிறோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகெங்கும் கால்நடைப் பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் நம்மிடம் கால்நடைப் பண்ணைகள் இல்லை; நம்மிடம் பசுப்பாதுகாப்புதான் இருக்கின்றது. பசுக்களைப் பாதுகாப்பது! தர்மத்தின் பாதுகாப்பு என்றால் பசுப்பாதுகாப்பும்தான்! நம் அரசியல் சாஸனம் வழங்கியுள்ள வழிகாட்டும் கோட்பாடுகளில் பசுப்பாதுகாப்பும் ஒன்று. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பசுவதையைத் தடைசெய்து சட்டம் இயற்றலாம். பசு என்பது ‘உபலக்ஷணம்’. உபலக்ஷணம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும். ஆகவே, விலங்குகள் நமக்குத் துன்பம் தராமல் இருக்கின்றபோது நாமும் அவற்றுக்குத் துன்பம் தராமல் இருக்க வேண்டும்.”

– பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி  

 

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மாடுகளின் தோலை நீக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சில ஹரிஜன மக்களை, பசுப்பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் சில நபர்கள் கட்டிவைத்து அடித்தனர். இந்தச் சம்பவம், போலி மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் முன்னணி ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது. மத்திய அரசைக் கண்டித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தின. இவர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்துக்குச் சற்றே தளர்ந்து கொடுத்த பிரதமர், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “சில இடங்களில் நடந்த ஹரிஜன மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் எனக்கு மிகுந்த வலியையும் மனவேதனையையும் தருகின்றன. பசுப் பாதுகாப்பாளர்கள் என்கிற போர்வையில் சமூகவிரோதிகள் இயங்கி வருகின்றனர். பெரும்பாலானோர் பகலில் பசுப்பாதுகாப்பாளர்களாகவும் இரவில் சமூக விரோதிகளாகவும் இருக்கின்றனர். பசுப்பாதுகாப்பு இயக்கத்தைத் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் போலிகள் அடக்கப்படவேண்டும்1 என்று பேசினார். பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆதரவு தந்தது.
பிரதமரின் இந்தப் பேச்சு போலி மதச்சார்பின்மை பேசுபவர்களின் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், உண்மையான பசுப்பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும், பிராணிகள் நல சேவகர்களுக்கும் இடைஞ்சலாக இருந்தது. உண்மையாகவே பசுப்பாதுகாப்புக்குப் போராடுபவர்கள் ஆங்காங்கே தொல்லைக்கு உள்ளாயினர். இதனால் சங்பரிவார் அமைப்புகளுள் ஒன்றான விசுவ ஹிந்து பரிஷத் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஹரிஜன மக்கள் சிலரின் மீதான தாக்குதல் சம்பவமும், அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் செய்த துவேஷப் பிரசாரமும், பிரதமரின் பேச்சும், அதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவும் வி.ஹெச்.பி எதிர்ப்பும், உண்மையான பசுப்பாதுகாப்பாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளும், பசுவதை பற்றிய விவாதத்தை மீண்டும் தேசியக் களத்தில் முன்வைத்துள்ளன.

பா.ஜ.கவின் பிரதான கொள்கை

தற்போது நாட்டை ஆண்டு வரும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து மிகவும் முக்கியமாக முன்வைத்த கொள்கைகளில் பசுவதைத் தடுப்பு முதன்மையானது. அக்கட்சியினுடைய ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இந்தக் கொள்கைப் முதன்மையாகப் பிரகடனப்படுத்தப்படும். ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் 1998 முதல் 2004 வரை நடத்திய கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை.
கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும், நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பேசிய ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்தக் கொள்கையைத் தவறாமல் முன்வைத்தார். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக் கொள்கைக்கு எதிராகவும் பேசி, அது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் வாக்களித்தார்2. இவ்விரண்டு கொள்கைகளும் மீண்டும் தேர்தல் அறிக்கையில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன.
ஆயினும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பசுவதைத் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், இறைச்சிக் கொள்கையிலும் (Meat Policy) எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. பா.. அரசு பதவியேற்ற ஆறு மாதங்களில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரிதும் கூடியது; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதலிடத்தைப் பிடித்தது.3
பசுவதைத் தடுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொள்கை ஆகிய இரண்டு விஷயத்திலும் மோடி ஆதரவாளர்களிடையே கூட கொஞ்சம் அதிருப்தி நிலவி வருகின்றது. ஆயினும், கூடிய விரைவில் பிரதமர் இவ்விரண்டு விஷயங்களிலும் நடவடிக்கை எடுப்பார் என்கிற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் பசுவதை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்துதான் பசுவதைப் பற்றிப் பேசுகிறது. பசு மட்டுமில்லாமல் அனைத்துக் கால்நடைகள் பற்றியும் கூறுகிறது.
“பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை நவீன மற்றும் விஞ்ஞானபூர்வமாக எடுத்து, வேளாண்மையையும் கால்நடைப் பராமரிப்பையும் ஒழுங்குபடுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று ‘வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு’ என்கிற தலைப்பின் கீழ் அரசியல் சாஸனத்தின் 48-வது பிரிவு குறிப்பிடுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனக்கென ஓர் அரசியல் சாசனம் இயற்றுவதற்கு ஏதுவாக ஓர் அரசியல் சாசனப் பேரவை (Constituent Assembly) அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருட காலத்தில் 166 நாட்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நடத்தப்பட்டு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டது. அவ்வாறு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதைக்கு எதிரான சட்டத்தை இயற்றி அதை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்காமல், அரசியல் சாஸனத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகளில் மட்டும் வைத்தது அரசியல் சாஸனப் பேரவை.
அவ்வாறு செய்ததன் மூலம், பசுக்களையும் கால்நடைகளையும் பாதுகாத்துப் பெருக்கவும், பசுவதையைத் தடுக்கவும், பசுவைத் தாயாகவும் தெய்வமாகவும் போற்றும் இந்நாட்டின் உன்னத கலாசாரத்தைக் காப்பாற்றவும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை இழந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரத கலாசாரத்தில் பசுவின் பெருமை

பாரத தேசத்தில் வேதகாலம் தொடங்கி பசுவைத் தெய்வமாகவும் தாயாகவும் போற்றி வழிபடும் பண்பாடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்று ஆரம்பித்து, சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், வரலாறுகள் ஆகியவற்றில் தொடர்ந்து, இன்றைய நவீன இலக்கிய நூல்கள் வரை, பசுவின் பெருமையும், ஆராதித்துப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய கடமையும் விவரமாகக் கூறப்பட்டுள்ளன.  
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்பதும் இந்த தேசத்தின் பண்பாடு. திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும்; ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வார்ப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களையும் தானியங்களையும் வைப்பதும், இந்துக்களின் பண்பாட்டில் வேதகாலம் தொட்டு ஊறிப்போன வழக்கங்களாகும். தொன்றுதொட்டு மனித இனத்துக்குப் பெரிதும் பயனளிக்கும் மற்ற உயிரினங்களையும், தாவர இனங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர் இந்துக்கள்.
வேறெதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையைப் பசுமாட்டிற்கு மட்டும் இந்த தேசம் அளித்துள்ளது. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், அதைப் பெற்ற தாய்க்கு ஈடாகக் கருதி கோமாதா என்று போற்றுவது இந்த பாரத தேசத்தின் கலாசாரம்.
இந்தப் பிரபஞ்சமே தெய்வத்தினால் படைக்கப்பட்டதாக நாம் நம்புவதால், ஒவ்வொரு படைப்பிலும் தெய்வாம்சத்தைக் காணும் பண்பாடு நம்மிடையே தொன்றுதொட்டு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நாம் பசுவை முப்பத்து முக்கோடி தேவர்களின் மொத்த வடிவமாகக் காண்கிறோம். ஒவ்வொரு படைப்பிலும் உள்ள தெய்வ அம்சத்தைத் தேடிக்கொண்டிருக்காமல் தெய்வாம்சம் பொருந்தியதாக நன்றாக அறியப்பட்டுள்ள பசுவை வழிபடுவதே ஞானம் என்கிற எண்ணத்தின் விளைவாகத்தான் பசு வழிபாடு பிறந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் பசு இருந்த காலம் போய்விட்டது. ஆனால் பசு வழிபாடு தொடரவேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு கோவிலின் அங்கமாகப் பசுமடம் இருந்து வந்துள்ளது. கோவில் மட்டுமல்லாமல், வெளிப்புறங்களிலும் கோசாலைகள் அமைக்கப்படுகின்றன. கோவில் பசுமடங்களிலும், வெளிப்புற கோசாலைகளிலும் சென்று பொதுமக்கள் பசு வழிபாடு செய்து வருகின்றனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அந்நியப் படையெடுப்புகளாலும் அவர்கள் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்ததாலும் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியில் பசுவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டன. நாம் நமது கலாசாரத்திலிருந்து வழுவ ஆரம்பித்தோம். அதன் விளைவாகத் தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கப்பட்டு வந்த பசு, பெரும் துன்பங்களுக்கு ஆளானது. ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதையைத் தடுக்கவும், நமது உன்னதக் கலாசாரத்தை மீட்டெடுக்கவும், சட்டம் இயற்றக் கிடைத்த வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை நழுவவிட்டது.
அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் பாராளுமன்றத்தில் இந்த விஷயம் தொடர்பாக விவதங்கள் நடந்தபோதெல்லாம் அன்றைய பிரதமர்களான நேருவும், அவருக்குப் பிறகு அவர் மகள் இந்திராவும் பசுவதையை ஆதரிக்கும் விதமாகவே நடந்துகொண்டனர். சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடுப்பு விஷயத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்ருமாறு:
1947: பசுவதைத் தடையை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்கு நேரு தலைமையிலான இந்திய அரசு சர்தார் தத்தார் சிங் (இன்றைய அமைச்சர் மேனகா காந்தியின் தாத்தா) தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழு, பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற கால்நடைகளை, பயன் தருபவை, பயன் தராதவை, உற்பத்தி செய்பவை மற்றும் உற்பத்தி செய்யமுடியாதவை என்று அவற்றின் தரத்தைப் பிரித்து, பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தது.
* இந்தியாவின் சுபிட்சம் அதன் கால்நடை வளத்தைச் சார்ந்துள்ளது.
* கால்நடை வதையை முழுவதுமாகத் தடை செய்தால்தான் தேசத்தின் ஆன்மா திருப்தியடையும்.
* கால்நடை வதை இந்தியாவில் விரும்பத்தகாததாக இருப்பதால் அதன் மீதான தடையை சட்டத்தின் மூலமாக அமுல்படுத்த வேண்டும்.
* சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து முழுவதுமாகக் கால்நடைவதைத் தடைசெய்யப்பட வேண்டும்.
* அதுவரை பயன்பாட்டில் இருக்கும் அனைத்துக் கால்நடைகள் வதையும் முற்றிலுமாகத் தடை செய்யப்படவேண்டும்.
அதாவது, கால்நடை வதையை முழுவதுமாகத் தடைசெய்து சட்டம் இயற்றிய பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அதை அமுல்படுத்த வேண்டும். அதுவரைப் பயனற்ற கால்நடைகளை கொல்ல அனுமதிக்கலாம் என்று கூறியது.
அப்போதைய பிரதமர் நேரு, முழுமையான தடையை நிராகரித்தார். அதே சமயத்தில் பயன்தராத உற்பத்தி செய்யமுடியாத கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கலாம் என்கிற பரிந்துரையை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டார்.
1948: உத்தரப்பிரதேச அரசு அமைத்த குழுவானது, இந்திய அரசு 1947ல் அமைத்த சர்தார் தத்தார் சிங் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுகொண்டு ஆதரவு அளித்தது.
1950: உத்திரப் பிரதேச மாநில அரசு, பசுவதைத் தடைக்கு ஆதரவளித்ததைப் பொறுக்கமுடியாத பிரதமர் நேரு, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடுமையான கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “வதைக்கப்பட்ட கால்நடைகளின் தோலுக்கு, இயற்கையாக மரணம் அடைந்த கால்நடைகளின் தோலை விட மதிப்பு அதிகம். ஆகவே நல்ல மதிப்புள்ள தோல்களே நல்ல விலையைப் பெற்றுத்தரும். கால்நடைகள் வதைக்கப்படாத நிலையில், நல்ல விலை பெற்றுத்தரக்கூடிய மதிப்புள்ள தரமான தோல் சந்தையில் கிடைக்காது. எனவே, கால்நடைகளின் மீதான முழு தடையானது, ஏற்றுமதியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலின் நலனுக்கு எதிராகவும் இருக்கும்என்று குறிப்பிட்டார்.4 ஆயினும், பாராளுமன்றத்தில் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
1954: பசு மற்றும் அனைத்துக் கால்நடைகளின் வதை தடை செய்யப்படவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மசோதாவின் மீதான விவாதத்தின் இறுதியில், தடை செய்யப்படவேண்டும் என்று கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து ஏற்பட்டு மசோதா நிறைவேறும் நிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் மசோதாவிற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நேரு, கால்நடை வதைத்தடை மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டார்5. அவருடைய அச்சுறுத்தலுக்கு அவர் எதிர்பார்த்த உடனடியான பலன் கிடைத்தது. ஆம், மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, இரண்டு வருடங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மசோதா, ஒரே ஒரு நபரின் அச்சுறுத்தலால் திரும்பப் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம், “கால்நடைவதை மீதான முழுமையான தடை சாத்தியமில்லை. கால்நடைத் தீவனம் நாட்டில் உள்ள 40% கால்நடைகளுக்குத்தான் போதுமானது, மிச்சமுள்ள 60% கால்நடைகள் வதைக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தது.
1955: உத்திரப்பிரதேச அரசு பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றி அமல்படுத்தியது. ஆனால், மூடிய டப்பாக்களில் வைக்கப்பட்ட மாட்டிறைச்சியை விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கலாம் என்று அறிவித்தது.  
1966 நவம்பர் 7: சாதுக்கள், சந்நியாசிகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் உடனடியாகப் பசுவதைத் தடை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தில்லி பாராளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு அபினவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் ஆதரவளித்தார். அப்போதைய பிரதமர் இந்திரா, அந்தப் போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லி அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.எல்.நந்தாவுக்கு உத்தரவிட்டார். சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புரி சங்கராச்சாரியார் நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகளும், ஆச்சார்யா வினோபாபவேவும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த இந்துக்களைச் சாந்தப்படுத்த 1947ல் தன் தந்தை என்ன செய்தாரோ அதையே மகள் இந்திராவும் செய்தார்6.
1967: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.சர்கார் தலைமையில், புரி சங்கராச்சாரியார் ஜகத்குரு நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குருஜி கோல்வல்கர், அப்போதைய இரு மாநில முதல்வர்கள் சரன்சிங், டி.பி.மிஸ்ரா, மற்ற மாநிலங்களின் கால்நடைத்துறை அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய சக்தி வாய்ந்த உயர்நிலைகுழுவை அமைத்தார் இந்திரா. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் வெளியிடப்படவே இல்லை!
1976: தேசிய வேளாண்மை ஆணையம் பின்வரும் பரிந்துரைகளை அளித்தது:
* பால் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், தரமான இறைச்சிக்காகவும் எருமைகள் வளர்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
* எருமை இறைச்சி ஏற்றுமதியைப் பெருக்கும் விதமாகத் தேவையான நடவடிக்கைகளை துணிவோடும் ஊக்கத்தோடும் எடுக்க வேண்டும்.
* உபயோகம் இல்லாத ஆண் எருமைக் கன்றுகளுக்கு ஊட்டம் கொடுத்துக் கொழுக்க வைத்து, இறைச்சியின் தரத்தை அதிகரிக்கும் வகையில் தேவையான மேல் நடவடிக்கைகளை எடுத்து, எருமை இறைச்சி ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.
இந்த அறிக்கையே இந்திய அரசின் கொள்கை ஆனது!
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பின்பற்றி, பல மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மாட்டிறைச்சி சாப்பிடுவது மற்றும் அதை வியாபாரம் (உள்நாடு மற்றும் ஏற்றுமதி) செய்வது ஆகியவற்றைத் தங்கள் கலாசாரமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டவர்களுக்கு எந்தவிதத்திலும் தடங்கல்கள் இல்லாதவாறு, தேவையான ஓட்டைகளுடனேயே அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
1998ல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடை தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லாமல் போகவே, காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பசுவதைத் தடை செய்யப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். உடனடியாக பிரதமர் வாஜ்பாய், முந்தைய பிரதமர்களைப் போலவே தானும் பசுவதைத்தடை பற்றி ஆய்வு செய்வதற்கு, வரலாற்று ஆய்வாளரும் காந்தியவாதியுமான தரம்பால் தலைமையில் தேசியக் கால்நடை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் 2002ல் தன் அறிக்கையை அளித்தது. அதில், “1967ல் அமைக்கப்பட்ட சக்திவாய்ந்த உயர்நிலைக் குழு அளித்த அறிக்கை அரசின் ஆணவக் காப்பகங்களில் எங்கும் காணப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

தர்மத்தின் பாதுகாப்பு பசுப்பாதுகாப்பும்தான்

சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடையை நோக்கி இவ்வளவு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்த பிறகும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசுகள் இந்நாட்டின் தர்மத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் விதமாக, பசுவதைத் தடை விஷயத்தில் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. ஆனால் அதற்கு நேரெதிராக, பசுக்கள், எருமைகள், காளைகள், கன்றுகள் என்று அனைத்தும், உயர்தரத் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், ஏற்றுமதி வியாபாரத்திற்காகவும் வதைக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவே கசப்பான உண்மை!
பசுக்கள், காளைகள், எருமைகள், கன்றுகள் ஆகியவற்றைக் காப்பாற்றிப் பாதுகாப்பது நமது தர்மத்தின்படி இன்றியமையாதது. ஏனெனில் நமது பாரம்பரியம் வயிறு வளர்ப்பதையே பிரதானமாகக் கொண்டதல்ல. மாறாக பலவீனர்களையும் வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகும். கோசம்ரக்ஷணம் அல்லது பசுப்பாதுகாப்பு என்பது பசுக்களை மட்டுமின்றி, காளைகள், எருமைகள், காளைக்கன்றுகள், எருமைக்கன்றுகள் ஆகிய அனைத்துக் கால்நடைகளையும் காப்பதுதான். நமது தர்மத்தின்படி, அவைகள் இருக்க வேண்டிய இடங்கள் வயல்களும், கோவில்களும், கோசாலைகளும்தானே தவிர கசாப்புக் கூடங்கள் அல்ல!
உசாத்துணைகள்:
1. http://www.thehindu.com/news/national/Cow-vigilantes-%E2%80%98anti-social%E2%80%99-Modi-breaks-his-silence/article14556739.ece, http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-blasts-cow-vigilantes-calls-them-anti-social-2958427/
2. http://www.thehindu.com/news/national/other-states/modi-fears-a-pink-revolution/article5864109.ece
3. http://www.thehindu.com/news/national/india-on-top-in-exporting-beef/article7519487.ece
4. https://en.wikipedia.org/wiki/Cattle_slaughter_in_India