Posted on Leave a comment

இந்தியாவில் சுகாதாரம் – லக்ஷ்மணப் பெருமாள்


‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது குறள். நோயற்ற வாழ்வு என்பது வெறும் உடல்நலக் கேடு சார்ந்தது மட்டுமல்ல, மன நலனையும் சார்ந்தது. இன்று பல நோய்கள் வருவதற்கு மன அழுத்தம் மிக முக்கியக் காரணியாக மாறியுள்ளது. உடல்

உழைப்பு சார்ந்த வேலைப்பளுவும் கடந்த காலங்களை ஒப்பிடும்போது குறைந்து வருகிறது. இந்தியாவில் சுகாதாரத்தின் நிலை என்ன? மத்திய அரசு மற்றும் மாநில அரசு சுகாதாரத்தின் நிலையை மேம்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் என்ன? மத்திய,

மாநில அரசு சுகாதாரத்திற்காக ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதா? இந்திய அளவில் குழந்தைகளின் பிறப்பு-இறப்பு விகிதம், சராசரி ஆயுள், ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள், தங்கள் நலனிலும் சுற்றுச் சூழலைப் பேணுவதிலும்

மக்களிடம் போதுமான அளவு பொறுப்பும் அக்கறையும் இருக்கிறதா?

சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் பொறுப்பு யாருடையது?

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ், சில துறைகளின் சட்ட மயமாக்கும் உரிமை மத்திய அரசின் பட்டியலில் (Central List) உள்ளது. சில துறைகளின் சட்டமயமாக்கும் சுதந்திரம் மாநில அரசின் பட்டியலில் (State List) உள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து சட்டமாக்கிச் செயல்படுத்தும் வகையில் சில துறைகள் பொதுப் பட்டியலில் (concurrent List) உள்ளன. அவ்வகையில் பலரும் பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசும்போது மத்திய அரசை நோக்கிச் சாடுகிறார்கள். உண்மையில் பொதுச் சுகாதாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசிற்கே சுகாதாரம், துப்புரவு, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவற்றை அமைக்கும் பொறுப்பு உண்டு. மத்திய அரசு

இந்தியாவை ஆளும் அரசென்பதால் மத்திய அரசும் சுகாதாரத்திற்கென பட்ஜெட்டை ஒதுக்குகிறது. பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரம் சார்ந்து மேற்கொள்ள நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வருகிறது.

மத்திய அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் பட்ஜெட் ராணுவத்திற்கு ஒதுக்கும் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் மிகக் குறைவு என்பது வருத்தமான விஷயமே. கடந்த சில வருடங்களோடு ஒப்பிடுகையில், சுகாதாரத்திற்கு தற்போதைய மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்திற்கு 26,567 கோடி (2012-13) செலவிடப்பட்டது. தற்போதைய பாஜக தலைமையிலான அரசில் 37,471 (2017-18) செலவிடப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சராசரியாக 18% சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதம மந்திரி சுவஸ்த சுரக்ஷா யோஜனாவின் கீழ் இந்தாண்டு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 26% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3.2 கோடியிலிருந்து (2016-17) 1486 கோடி (2017-18) இத்திட்டத்தின் கீழ் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011–12லிருந்து சராசரியாக 4.4% கிராமப்புற மருத்துவ மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான பட்ஜெட் 2015-16ல் 53% ஆக இருந்தது, 2017-18ல் 43% ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் 2017-18 பட்ஜெட்டில் 10,150 கோடி பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,800 கோடி முதலமைச்சர் சுகாதாரக் காப்பீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.1

மனித வளக் குறியீட்டில் இந்திய சராசரியும் தமிழகத்தில் நிலையும்

பிறப்பின்போது குழந்தைகள் இறப்பு விகிதம், சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள், மனிதனின் சராசரி ஆயுள் எனப் பல முடிவுகளை மாதிரி சர்வேக்கள் (Sample Survey Registration) எடுக்கப்பட்டு, 1971 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில், மாநிலங்களின் நிலை, இந்தியாவின் சராசரி போன்ற விஷயங்கள் நிதி ஆயோக்கின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு பிரிவுகளிலும் கேரளாவும், தமிழ்நாடும் சுதந்திர இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவே உள்ளன. அதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்களும் உண்டு. உதாரணமாக கேரளா சுதந்திரம் அடைந்த போதே 47% கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர். தமிழகம் அடுத்த நிலையில் இருந்தது. கேரளாவும் தமிழகமும் 1971ம் ஆண்டிலேயே மேற்கூறிய மனித வளக் குறியீட்டில், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மேம்பட்ட நிலையில் இருந்ததைக் காண முடிகிறது. இந்திய அளவில் மனித வள குறியீடுகள் பல படிகள் முன்னேறி இருந்தாலும் உலக நாடுகளின் சராசரியை ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கியே உள்ளது. அவ்வகையில் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ச்சியாக சுகாதார விஷயத்தில் அக்கறை செலுத்திய காரணத்தால்தான் இன்று இந்திய சராசரியைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலை ஆரம்ப சுகாதார மையம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் பல இறப்புகளைத் தடுக்க இயலுகிறது.

பிறப்பின் போது இறப்பு விகிதம்: (Infant Mortality Rate)

ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை:

மேற்கூறிய பட்டியலை நாம் இரு விதமாக அணுகலாம். பிறப்பின்போது இறப்பு என்பதை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. அதே வேளையில் இந்திய சராசரியோடு ஒப்பிடுகையில் உத்திரப் பிரதேசமும், மத்திய பிரதேசமும் இன்னமும் பின்தங்கியுள்ளதைப் பார்க்க முடியும். குஜராத் இந்திய சராசரி அளவைக் காட்டிலும் குறைத்து விட்டுள்ளதையும் பார்க்க இயலும். கேரளாவும், தமிழகமும் முன்மாதிரி மாநிலங்களாகவே தொடர்கின்றன.2

குழந்தைகளின் பிறப்பு விகிதம்: (Total Fertility rates by Residence)

ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள் என்பதை அடிப்படையாகக் கொண்ட புள்ளி விபரங்கள்:

கல்வியறிவு அதிகமுள்ள மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும் இந்தி பேசும் மாநிலங்களில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இந்திய சராசரியைக் காட்டிலும் அதிகமுள்ளது என்பதும் தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் பிறப்பு விகிதம் இன்னும் குறையுமேயானால் அரசியல் ரீதியாகப் பல இழப்புகளைச் சந்திக்க நேரலாம். ஆனால் தனி நபர் வருமானம் மிக அதிக அளவில் உயர்ந்தது போலத் தோன்றும். பொருளாதாரக் குறியீட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறிப்பிட்ட அளவிற்குக் கீழே குறைந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். மேற்கத்திய நாடுகளான ஐரோப்பாவில் ஒரு பெண் சராசரியாக 1.0 to 1.6 வரையில் பெறுவதை அரசியல் மற்றும் பொருளாதார அறிஞர்கள் விமர்சிக்கும் போது இவை அந்த நாடுகளின் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் கேள்விக்குறியையும், தனி அடையாளத்தையும் காலப் போக்கில் அழிக்கும் என்கிறார்கள். போர், உற்பத்தி போன்ற விஷயங்களில் இவை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

சராசரி ஆயுள்:3

மேற்கூறிய பட்டியலில் குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர சிறிய மாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சராசரி ஆயுள் தமிழகத்தைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவே இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுள் விஷயத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இந்தப் பட்டியலில் ஏன் சில மாநிலங்களில் பிறப்பின்போது சராசரி ஆயுள் அதிகமாகவும் வயது 5-10ல் கணக்கிடும்போது சராசரி ஆயுள் ஏன் குறைந்துள்ளது அல்லது அதிகரித்துள்ளது என்ற சந்தேகம் வரலாம். குழந்தை பிறப்பின்போது இறக்கும் குழந்தைகளுக்கான எண்ணிக்கையில் இந்திய சராசரியைவிட அதிகமாக இருக்கும் மாநிலங்களில், சராசரி ஆயுள் அதிகமென்பதும் அதே மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்கள் வயது 5-10ன் போது உயிரோடு இருக்கும் குழந்தைகள் என்ற கணக்கில் பார்த்தால் மனிதர்களின் சராசரி ஆயுள் குறைந்துள்ளதையும் காணலாம். இந்திய சராசரியைக் காட்டிலும் குறைவாக, பிறப்பின்போது இறக்கும் குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களில் இவை அப்படியே தலைகீழாக இருப்பதையும் காண முடியும்.

பிறப்பின் போது ஆண்-பெண் விகிதம்:
(1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற கணக்கீடு)

இந்தப் பட்டியலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆண் பெண் விகிதத்தை ஒப்பிட்டால் எந்த முடிவுக்கும் வர இயலாது. கல்வி பெற்ற மாநிலங்களுக்கு இணையாகக் கல்வியறிவு இல்லாத சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் சராசரி உள்ளது அல்லது அதிகமாகவும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட ஆண் – பெண் விகிதத்தை ஒப்பிட்டால் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதைக் காணலாம். இதைப் பெண் சிசுக் கொலை என்று சுருக்கிப் பார்க்க இயலாது என்பதே எனது பார்வை.

சுகாதாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்:

சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், டெங்கு, பிளேக், பன்றிக் காய்ச்சல் எனப் பல தொற்று நோய்கள் இந்தியாவைத் தொற்றிக் கொண்டு வருவது மிகுந்த சவாலாக உள்ளது. இதில் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், பிளேக் போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் தரும் விஷயம். ஆனால் இது போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கவோ சுற்றுச் சூழலைப் பேணிக் காப்பதில் மக்களுக்கும் பொறுப்பில்லை. மேலும் சாக்கடை, கழிப்பறை வசதியின்மையால் பொது வெளியைப் பயன்படுத்துவதற்கு சமூகமாக நாம் பல முயற்சிகளை எடுக்காததாலும் எளிமையில் தொற்று நோய்கள் பரவுகின்றன. இன்று ஊடகம் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. ஆனால் கழிப்பறை இல்லாத வீடுகள் நிறைய உண்டு. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, குப்பைகளைக் கொட்டுவது என மக்களே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். ஒருபுறம் கழிப்பறையின் பற்றாக்குறை, மற்றொரு புறம் அவற்றை முறையாகப் பராமரிக்காமை. பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களிலேயே கழிப்பறைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழிப்பது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களை, கண்ட கழிவு நீர்ச் சாக்கடையிலும்,வாய்க்காலிலும் போடுவதால் நீர் செல்ல இயலாது கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதற்கு மேலும் ஏன் தொற்று நோய்கள் பரவுகின்றன. இந்தியர்களுக்குத் தங்களுடைய உடல் மீது பெரிதும் அக்கறை கிடையாது. சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதிலும் அக்கறையோ பொறுப்போ கிடையாது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாரபட்சமெல்லாம் கிடையாது.

மத்திய மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்ததோடு நில்லாமல் சுகாதாரம் சார்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் மோடி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் 3 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.3

போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்திலும் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா போலியோ இல்லாத நாடாக 2014 மார்ச் மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. டெட்டனஸ் தாக்குவதால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. பல நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள, நோயை முற்றிலுமாக ஒழிக்க அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி விழிப்புணர்வும் பெரிய அளவில் உதவி உள்ளது. குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசி போடப்பட்டதால் பல குழந்தைகளின் இறப்பு தடுக்கப்பட்டுள்ளது. இந்திர தனுஷ் என்ற திட்டத்தின் மூலம் தடுப்பூசி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் போடப்படுகிறது.4

சுருக்கமாக, இந்தியாவின் சுகாதாரம் மேம்பட என்ன செய்ய வேண்டும்?

1. மத்திய மாநில அரசு சுகாதாரத்திற்கு ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதாக இல்லை. அதை அதிகரிக்க வேண்டும்.

2. மக்களிடையே சுற்றுச் சூழல் குறித்த அக்கறையையும் பொறுப்பையும் அதிகரிக்க வேண்டும்.

3. கிராமப் பஞ்சாயத்தில் ஆரம்பித்து மெட்ரோ நகரங்கள் வரை குறிப்பிட்ட அளவிலான வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதிக அளவில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.

4. கழிவு நீர்ப் பாதைகள் முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பொது வெளியில் துப்புவது, குப்பையாக்குவது போன்றவை தவறானது என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

5. மருத்துவத்திற்கான காப்பீடு அனைவருக்கும் இலவசம் என்ற வகையில் மருத்துவ மனைகளில் இலவசமாக மருத்துவப் பரிசோதனை கிடைக்கப்பெறும் நாளில் இந்தியாவில் மக்களின் ஆயுளும் கூடும். இறப்புகளையும் பெருமளவில் தடுக்க இயலும்.

அடிக்குறிப்புகள்:

01. http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-budget-key-points-highlights/article17471153.ece

02. http://niti.gov.in/writereaddata/files/StateStats-Ebook.pdf

03. http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/

4. http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/
________________

Leave a Reply