Posted on Leave a comment

2019 தேர்தல் – பாயத் தயாராகும் மௌன வெள்ளம் | சாணக்யா


“என்ன மடத்தனம் சார் இது?”

“என்ன?”

“புல்வாமா தாக்குதலுக்கு நாங்கதான் பொறுப்புன்னு ஒரு தீவிரவாத இயக்கம் சொல்றாங்க. அதுக்கப்புறமும் ப்ரூஃப் எங்கன்னு கேக்கிறாங்க? சர்ஜிக்கல் ஸ்டிரைக் பண்ணினா அதுக்கும் ப்ரூப் கேக்கிறாங்க. 300 பேர் செத்துட்டாங்கன்னு சொன்னா அதுக்கும் ப்ரூஃப் வேணுமாம். இவங்கல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன பண்ணுவாங்க சார்?”

வெறுமையாக சிறிதுநேரம் இருந்தார். பின் மெதுவான குரலில், “இந்த உள்நாட்டுப் போரில் மோடி முதலில் ஜெயிக்கணும்?” என்றார். “தேர்தலைத்தான் சொல்றேன்” என்றார்! ரயில் பயணத்தில் நான் சந்தித்த, நடுத்தர வயதுடைய, முன்னாள் விமானப்படை வீரர்.

இந்தியத் தேர்தல் வரலாறில் சில தேர்தல்கள் மிக முக்கியமானவை – அவை 1977, 1998, 2014. அதைப் போலவே 2019.

பொதுவாக ஆண்ட கட்சிகள் தாங்கள் செய்தவற்றையம் இனி செய்ய போகிறவற்றையும் சொல்லி வாக்குகள் கேட்கும். எதிர்க்கட்சிகள் ஆண்ட கட்சியின் ஊழலையும் தவறையும் சொல்லி, இனி தாங்கள் செய்யப் போகிறவற்றையும் சொல்லி வாக்குகள் கேட்கும். அதுமட்டுமில்லாமல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட கட்சி செய்தவற்றின் நல்ல விஷயங்களை அதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் சொல்லும்.

அப்படியெனில் எல்லை தாண்டிய தாக்குதலைத் தாங்களும் செய்வோம் என்றுதான் காங்கிரஸ் கூறியிருக்க வேண்டும். மாறாக பாகிஸ்தானுடன் போர் கூடாது, சமாதானம் பேசுங்கள் என்று பாகிஸ்தானுக்கான அமைதித் தூதராக எதிர்க்கட்சிகள் பேசியதுதான் பெரும்பாலான மக்களை பீதியடையச் செய்தது. ஆனால் அந்த மக்களின் குரல் வெளியில் கேட்காது. வெளியில் கேட்காததனாலேயே அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றுதான் வழக்கம்போலப் பிரிவினைவாதம் பேசுவோர் முடிவு கட்டி விட்டனர்.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் பெரும் ஆதரவு இருப்பது போல் பேசுவார்கள். அப்படி பேசிய செய்திகளே பெரும்பாலும் ஊடகத்திலும் வரும். ஒருவர் பத்திரிகைச் செய்திகளை மட்டும் படிப்பாரானால் அவர் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் ஆதரவு உண்டு என்றே முடிவுக்கு வருவார். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் வைகோ என்றோ முதல்வராகிருப்பார். குறைந்தபட்சம் சீமானாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிருப்பார். இது இரண்டுமே நடக்கவில்லை என்பதோடு இருவருமே மிகக் குறைவான வாக்குகளையே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கதக்கது.

தமிழக மக்கள் எப்போதும் பிரிவினையை ஆதரித்ததே இல்லை. அனைத்து மாநிலங்களிலும் பரவி இருப்பதால் மட்டுமே சில கட்சிகள் தேசியக் கட்சிகள் என்று கூறிவிட முடியாது. தேசியச் சிந்தனை கொண்டிருக்கவேண்டும். மாறாக காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிரிவினைவாதத்தின் மென்போக்கையே கொண்டிருக்கின்றன.

பிரிவினைவாதிகளிடம் பேச்சு என்ற கட்டத்தையெல்லாம் இந்தியா கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மே 1999 கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோதே அமைதிக்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. அதற்குச் சற்று முன்னர்தான் பிப்ரவரி 1999ல் லாகூர் வரை இந்தியப் பிரதமர் வாஜ்பாய் திறந்த மனதோடு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வாஜ்பாயின், இந்தியாவின் முதுகில் குத்தியது பாகிஸ்தான்.

ஆயினும் அதற்குப் பின்னரும் இந்தியா பேச்சுவார்த்தையைக் கைவிடவில்லை. லாகூர் சம்மிட் – முஷாரப்க்கும் வாஜ்பாய்க்கும் இடையில் நடந்த இன்னொரு பேச்சுவார்த்தை. ஆனால் பாகிஸ்தானை எந்த அளவு நம்புவது என்பதில்தான் இந்தியாவுக்குப் பிரச்சினை.

2016ல் மோடி லாகூர் சென்று நவாஸ் ஷெரிஃப்பின் பிறந்த நாளுக்குக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக ஆண்டாலும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவே பாஜகவும் விரும்புகிறது என்பதே இவற்றின் சமிக்ஞை. ஆனால் தீவிரவாதிகள் ஒருபோதும் அமைதியை விரும்புவதில்லை.

இதுவரை நாம் இந்த பிரச்சினையை எல்லாம் நினைவுகூர்வது தேசத்தை நேசிக்கும் பலமான அரசும், பிரதமரும்தான் இன்றையத் தேவை என்பதை வலியுறுத்தவே.

இந்திராவுக்குப் பின்னான காலங்களில் இந்தியா வெளியுறவுக் கொள்கை என்றெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை, வாஜ்பாய் காலம் தவிர. எப்போதும் எங்காவது கூட்டம், மாநாடு, கருத்தரங்கம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர்கள் அல்லது அதன் பிரதிநிதிகள் சென்று எழுதி வைத்த உரையை வாசித்து வருவார்கள். ஆனால் மோடி அதைத் தீவிரமாக அணுகினார். முடிந்த அளவு, தானே அத்தகைய கூட்டங்களில் கலந்துகொண்டார். மற்ற நாட்டுத் தலைவர்களோடு உளப்பூர்வமாகப் பேசி நட்பாகினார். பாகிஸ்தான், சீனா தவிர கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுவந்தார். முக்கியமாகச் சொல்வதென்றால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுடனான நட்பைச் சொல்லலாம்.

மோடி இஸ்லாமியருக்கு எதிரானவர் என்று இங்கே நடக்கும் அவதூறுக்குத் தக்க பதிலடி சமீபத்தில் கொடுத்தார். உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவைச் சிறப்பு பிரதிநிதியாக அழைத்துக் கௌரவித்தது, இந்தியாவை அழைத்தால், தான் கூட்டத்தைப் புறக்கணிக்க நேரிடும் என பாகிஸ்தான் மிரட்டியும் இந்தியாவை அழைத்துக் கௌவுரவித்தது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு. இது மகத்தான வெற்றி என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்

அப்படியென்றால் உலக இஸ்லாமியர் ஒருபுறம் மோடியின் பக்கமும், இங்கே இருக்கும் சில பிரிவினைவாதிகளும் பாகிஸ்தானும் மறுபுறம் இருக்கிறார்கள் என்பது புரியலாம். மோடி இந்தியாவை முன்னேற்றுவதால் இவர்கள் இந்தியாவுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பது தெளிவு.

*

மோடி தன் ஆட்சிக்காலத்தின் ஒவ்வொரு திட்டத்திலும் நடக்கும் முறைகேடுகள், அமைப்புகளால் கொள்ளை அடிக்கப்படும் ஊழல்கள் ஆகியவற்றை நிறுத்தினார். உதாரணம், சமையல் எரிவாயுவுக்கான மானியம். வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவுடன் போலிக் கணக்கில் வாங்கப்பட்ட சிலிண்டர்கள் ஒழிந்தன. மானியத் தொகை முறைகேடு தடுக்கப்பட்டது. மக்கள் கணக்கில் பதிவு செய்து, மானியத்தை டீலர்கள் மூலம் திருடும் முறை, நேரடி மானியம் மூலம் தடுக்கப்பட்டது. இதன்மூலம் செயற்கையான சிலிண்டர் தட்டுப்பாடும் ஒழிக்கப்பட்டது. இப்போதெல்லாம் பதிவுசெய்த உடன் சிலிண்டர் வருவதைக் காணலாம்.

கவனிக்க, நேரடி மானியத் திட்டத்தை ஒழிப்போம், பழைய முறையைத் திரும்ப கொண்டு வருவோம் என்கிறார் ஸ்டாலின்.1 யாருக்காக எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை

சத்துணவுத் திட்டத்தில் ஆதாரை இணைக்கச் சொன்னவுடன், மாணவர்கள் வயிற்றில் அடிக்கிறார் மோடி என மீம் போட்டார்கள். சில மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்னிக்கை வெகுவாகக் குறைந்தது. அதாவது போலியாகச் சேர்க்கப்பட்டிருந்த மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதுபோன்று கடந்த ஐந்து ஆண்டுகளில், 6 கோடி போலி ரேஷன் கார்டுகள், சிலிண்டர் இணைப்பு, ஓய்வூதியக் கணக்குகள் ஒழிக்கப்பட்டன எனவும் இதன்மூலம் தொண்ணுறு ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டது எனவும் சமீபத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்தது நினைவிலிருக்கலாம். ஊழல் ஒழிப்புத் திட்டங்கள், கருப்புப் பணம் பறிமுதல், சரியான வரிவசூல் மூலமாகச் சேமிக்கப்பட்ட பணமே இந்த நிலையை அடைய உதவுகிறது என்பது நிதர்சனம்.

முத்ரா வங்கிக் கடன் உதவி மூலம் சிறு குறு தொழில் செய்வோர் பயன்பெற்றதையும் கருத்தில் கொள்ளவேண்டும். உள்நாட்டில் தீவிரவாதம் வெகுவாகக் குறைந்தது. இவ்வளவு ஏன், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் திரும்பி வந்தனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை. இதை இங்கு இருப்பவர்களும் ஊடகங்களும் பாராட்ட மறுப்பதேன்?

அனைவருக்கும் வீடு என்ற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நாடு முழுவதும் பெரும் அளவில் வரவேற்பினைப் பெற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் பல குடிசை வீடுகள் சிமெண்ட் வீடுகளாக மாறியுள்ளன. ஒன்றரை கோடி ஏழைக் குடும்பங்கள் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் இலவச வீடு பெற்றன. அனைத்துக் கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டன. நான்கு கோடி வீடுகள் மின் இணைப்பைப் பெற்று இருக்கின்றன

மலிவு விலை மருந்துத் திட்டம், மூட்டு மாற்று அறுவை சிகிசைகள், இதய ஸ்டென்ட்-கள் 50 முதல் 70% தள்ளுபடியில் கிடைப்பது, ஏழரை கோடிக்கு மேல் புதிய கழிப்பறைகள் கட்டியது, வங்கிக் கணக்கு இருக்கும் அனைவருக்கும் ஐந்து லட்சம் காப்பீட்டுத் திட்டம் போன்றவை மிக முக்கியமான திட்டங்கள். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா ஸம்ருத்தி திட்டம் தபால் நிலையச் சேமிப்புச் சேவையாக நாடு முழுவது அமல்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

கொரியர் சேவை, கைபேசி போன்றவை வந்தவுடன் நலிவடைந்திருந்த தபால்நிலையங்களை ஒரு சிறு வங்கியாக மாற்றிப் புதுப்பித்தது மத்திய அரசு.

புதிய ரயில்கள் விடப்பட்டன. சில ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் போல் நவீன படுத்தப்பட்டன. மெட்ரோ ரயில் திட்டங்கள் முடிக்கப்பட்டன. மகளிர் வீட்டுக் கடனில் 2.5 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 9.77 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. கிராமப்புற சுகாதாரம் உயர்ந்தது. மேகாலயா, மிசோரம், திரிபுராவில் ரயில்வே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

புதிய நீர்வழிச் சாலைகள் கொண்டு வரப்பட்டன. 2017ல் நிதின் கட்கரி பாண்டு துறைமுகத்திலிருந்து துப்ரி துறைமுகம் வரையிலான நீர்வழிப் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார். இதனால் 300 கிமீ சாலைப் போக்குவரத்தும் அதனால் ஏற்படும் செலவினங்களும் குறைக்கப்பட்டன. இப்படி அதிரடி அசத்தல்கள் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் போடும் கூச்சல்களைத்தான் பெரும்பாலான மீடியாக்கள் பரப்புகின்றன. மக்கள் இதை வேடிக்கை பார்க்கத் துவங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிக எளிதாக நாற்பதையும் கைப்பற்றிவிடும் என்ற நினைப்பைத் தகர்த்தது பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி. அதுமட்டுமில்லாமல் வாசன், கிருஷ்ணசாமி போன்றோர் மூலமாகவும் கொஞ்சம் வாக்குகள் கூட்டணிக்குள் வரும்.

கூட்டணி அமைந்த உடனே பத்து தொகுதிகள் வரை கைப்பற்றும் எனப் பொதுமக்களே யூகிக்க ஆரம்பித்தனர். தொகுதிகள் முடிவானவுடன் அது பதினைந்து தொகுதிகள் வரை ஜெயிக்கும் என்று அதிமுக – பாஜக கூட்டணியின் செல்வாக்கு உயரத் தொடங்கி இருக்கிறது.

சென்ற முறை 2014ல் அதிமுக வாங்கிய வாக்குகள் சதவீதம் 44.30%. கடந்த முறை வாக்கு சதவித அடிப்படையில் பார்த்தால்கூட அதிமுக கூட்டணி 59.3%. திமுக கூட்டணி 31.4% வாக்குகள் பெறலாம். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஓட்டுகள், சிறுபான்மையின வாக்குகள், தினகரன், கமல்ஹாசன் பிரிக்கும் வாக்குகள் எனக் குறைந்தாலும் அதிமுக கூட்டணி பலமான அணியாகவே தெரிகிறது.

அதிமுக கூட்டணி:

அதிமுக: 44.3%, பாஜக: 5.5%, பாமக: 4.4%, தேமுதிக: 5.1%, மொத்தம்: 59.3%

திமுக கூட்டணி:

திமுக: 23.6%, விசிக: 1.5%, காங்கிரஸ்: 4.3%, மற்றவை: 2%, மொத்தம்: 31.4%

பின்வரும் பதினாறு தொகுதிகள் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்: திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், மதுரை, மயிலாடுதுறை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, கரூர், விழுப்புரம், தேனி.

இவை தவிர, தருமபுரி, கோவை, வேலூர் தென்சென்னை, சிவகங்கை, பொள்ளாச்சி, காஞ்சிபுரம் தொகுதிகளில் பாஜக, பாமக வாக்குகளுடன் சேரும்போது அவையும் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளாகும்.

எனவே இருபத்தொரு தொகுதிகள் இப்போதே வெற்றி என்றே கணக்கிடலாம். கூட்டணித் தலைவர்களும் தொண்டர்களும் கடுமையாக உழைத்தால் இன்னும் ஐந்து தொகுதிகள் வசமாகும்.

இன்றையக் கூட்டணிக் கணக்குகளை வைத்துப் பார்க்கும்போது பின்வருமாறு முடிவுகள் வரக்கூடும்:

உறுதியாக அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் – 21

அதிமுக – 15 இடங்கள்: ஆரணி, திருவள்ளூர், அரக்கோணம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிதம்பரம், திருப்பூர், மயிலாடுதுறை, தென்சென்னை, பொள்ளாச்சி, மதுரை, காஞ்சிபுரம்.

பாமக – 3 இடங்கள்: தருமபுரி, விழுப்புரம், கடலூர்.

பாஜக – 2 இடங்கள்: கோவை, சிவகங்கை.

இவை தவிர, வேலூர் என இருபத்தியொரு தொகுதிகள் உறுதியான வெற்றியைத் தரலாம்.

திருவண்ணாமலை, தேனி, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதூர், கரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ஒன்பது தொகுதிகள் கடும் உழைப்பைக் கொடுத்தால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகும். ஆக முயன்றால் முப்பது. 

இவைபோக 2006 முதல் 2011 வரையான திமுகவின் காட்டாட்சி மக்களின் நினைவில் வந்து பயமுறுத்தத்தான் செய்கிறது. அவர்களே மறந்தாலும் பேன்சி கடை சூறையாடல், பிரியாணி கடையில் அடிதடி, தேங்காய்க் கடையில் இரண்டு பெண்களை அடித்தது என திமுக தொண்டர்கள் ஞாபகபடுத்திக்கொண்டேதான் இருக்கின்றனர். திமுக முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் குறுநில மன்னர்களைப் போலத்தான் எப்போதும் செயல்படுகின்றனர். அவர்களை மீறி எந்த ஒரு திமுக தொண்டனும் முன்னேற முடியாது. 

இந்துக்களை எப்போதும் சீண்டும் வழக்கம், ஸ்டாலின், திருமாவளவன் குழுவுக்கு உண்டு. திருமாவளவன் இந்துப் பண்டிகைகளை, பூப்புனித நீராட்டு விழாக்களைக் கிண்டல் அடித்தார். அதுவும் மாற்று மதத்தவர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அப்படிப் பேசினார். ஸ்டாலின் ஹிந்துத் திருமண முறையைக் கிண்டலடித்தார். கனிமொழி ஒருபடி மேலே சென்று ‘திருப்பதி பாலாஜிக்கு எதற்குக் காணிக்கை? லஞ்சமா? உண்டியலுக்கு எதற்குப் பாதுகாப்பு? சாமியால் அவர் உண்டியலையே பாதுகாக்க முடியாதா?’ என்றெல்லாம் கிண்டலடித்தார். இவர்கள் பேசும் ஒவ்வொரு இந்து எதிர்ப்பு வாசகமும் பெரும்பாலான இந்துக்களை நோகடிக்கவே செய்கிறது. அவர்களின் மெளனம் சம்மதமில்லை, ஆதரவில்லை. அது தெளிவான எதிர்ப்பு. இந்துக்கள் எப்போதும் போராட்டம், ஊர்வலம், கொடி பிடித்து பேரணி என்றெல்லாம் செல்லும் வழக்கமில்லை. இவர்கள் தயவில் இவையெல்லாம் நடக்கத் துவங்கி இருக்கிறது. வாக்குகளைக் கூட எதிராகப் பயன்படுத்தாத ஹிந்துக்கள் இன்று அரசியல் ரீதியாக ஒருங்கிணையத் துவங்கி இருக்கிறார்கள். சபரிமலை பிரச்சினையில் திமுக கூட்டணி என்ன நிலை எடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கெல்லாம் பதில் சொல்ல மக்கள் தயாராகிவிட்டனர்.

ஐயப்பன் கோவிலுக்குப் போயே தீர வேண்டும் என இளம் பெண்களை, அதுவும் ஆபாசப் படத்தில் எல்லாம் நடித்த, மாற்று மத இளம் பெண்களை கம்யூனிஸ்ட் அரசு தயார் செய்து அனுப்பியது. ஐயப்ப பக்தர்களின் தீவிரப் போராட்டத்தால் சில முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி தந்தி டிவி விவாதத்தில், “ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது பெண்கள் உரிமை” என்றார். உடனே தந்தி டிவி செய்தியாளர் ஹரிஹரன், “அப்படியென்றால் அங்குள்ள வாவர் மசூதிக்கும் பெண்கள் செல்லலாமா?” என்றவுடன் பதறி, “நோ ஹரி நோ.. நீங்க புது பிரச்சினையைக் கிளப்பாதிங்க” என்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் குமுறலோடு பரப்பப்பட்டது.

ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. அதற்கு நான் சிரித்தபோது அவரின் மூத்த சகோதரி சொன்னது, “இதுவே வேற மதக் கடவுளை வச்சு இத மாதிரி காட்சி வச்சா அவங்க சிரிக்க மாட்டாங்க.”

இன்னுமா தமிழ்நாட்டில் இந்துத்துவ உணர்வு வளரவில்லை என்று நினைக்கிறீர்கள்?

மெல்லப் பாயக் காத்திருக்குது ஒரு மெளன வெள்ளம். அதன் பாய்ச்சலில் இங்குள்ள அரசியல் கசடுகள் அடித்துச் செல்லப்படட்டும்.

உசாத்துணைகள்:

1. https://www.ndtv.com/tamil-nadu-news/dmk-poll-manifesto-highlights-jobs-crop-loan-waiver-more-reservation-2009805?amp=1&akamai-rum=off