Posted on Leave a comment

பீஷ்ம நாரயண் சிங்கின் ஆலிங்கனம் | ஜெயராமன் ரகுநாதன்

உத்திரப்பிரதேசத்தின் ஈட்டா மாவட்டத்தில் ஆள் கடத்தல், அதற்குப்பணம்
பறிப்பது தொடர்ந்து நடை பெறுவதாகச் செய்திகள் சொல்லுகின்றன. போன மாதம் கூட டெல்லியில்
கடத்தப்பட்ட டாக்டரும் கம்பவுண்டரும் இதே ஈட்டா மாவட்டத்தில்தான் மீட்டெடுக்கப்பட்டனர்.
1983ல் நான் ஹிந்துஸ்தான் லீவரில் மானேஜராக வேலை செய்த சமயம்
இந்த ஈட்டாவில் இரண்டு மாதம் ஒரு குக்கிராமத்தில் கழித்தேன். அப்போதே ஆள் கடத்தல் என்பது
அவர்களின் வாழ்க்கையில் சரளமாகிப்போன அவலத்தைக் கண்டு அதிர்ந்தேன்.
1982ல் பஸ்ஸில் ஃப்ளோரா ஃபௌண்டனில் சீட் கிடைத்தது பூர்வ
ஜென்ம புண்ணியம். அதுவும் மாலை ஏழு மணிக்கு. எனக்கென்னவோ இதெல்லாம் ஒரு பொருட்டாகவே
தெரியவில்லை. அன்று மும்பை நகரமே அலம்பிவிட்டாற்போலச் சுத்தமாக இருந்தது. எல்லோரும்
நல்லவராகத் தெரிந்தார்கள். என் கையில் ஹிந்துஸ்தான் லீவரின் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.
என் ஆதர்ஸ கம்பெனி ‘நீ தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டாய்’ என்று சொன்ன அந்தக்கணம் மறுபடி
மறுபடி ரீவைண்ட் ஆகி ஒரு வித சுஷுப்தி அவஸ்தையிலேயே செம்பூர் வந்து சேர்ந்தேன்.
அடுத்த பதினாலு மாதங்கள் ஹிந்துஸ்தான் லீவரில் நான் நாயடி
பேயடி பட்டு வேலை கற்றுக்கொண்டது பற்றியோ, கிட்டத்தட்ட ஒரு மாதம் இரவு எட்டு மணிக்கு
வந்து அடுத்த நாள் காலை ஆறு மணி வரை வேலை செய்துவிட்டு, மறுபடி ஒன்பது மணிக்கு ஆபீஸ்
வந்தது பற்றியோ, கடுமையான ஆடிட்டுக்கு நடுவில், தென்றலாய் ஃபெர்க்யூஸன் கம்பெனியிலிருந்து
வந்த காதம்பரி பற்றியோ இங்கே எழுதப்போவது இல்லை.
பதினெட்டு மாத டிரெயினிங்கில் இரண்டு மாதம் ஈட்டா மாவட்டத்தில்
உள்ள ஒரு குக்கிராமத்தில் நான் குப்பை கொட்டிய சாகசமே இந்தக் கட்டுரை. கிராமத்தில்
எதேச்சையாக தென்பட்ட, வளைவுகள் நிறைந்த பதினாறு வயதுப் புயல் பற்றி இருக்கும் என்ற
சம்சயத்துடன் இதைப் படிப்பவர்கள் இப்போதே விலகலாம். வாழ்க்கை எப்போதாவதுதான் அப்படிப்பட்ட
சுவாரஸ்யங்களை ஜாதக விசேஷம் உள்ளவர்களுக்கு அளிக்கிறது.
ஈட்டாவில் கம்பெனியின் ஃபாக்டரி கெஸ்ட் ஹவுஸில் டாக்டர் சில
பல ஊசிகள் போட்டார்.
“அங்கெல்லாம் ஈசியா இன்ஃபெக்ஷன் வரும்! ரெண்டு நாளுக்கு மேல்
ஜுரம் நீடித்தால் ஈட்டா ஆஸ்பத்ரியில் சேர்த்துவிடச் சொல்!”
அன்று மாலை நாலு மணிக்கு பக்கெட், ஒரு மெல்லிசான படுக்கை,
ஹரிக்கேன் விளக்கு அப்புறம் ஒரு லோட்டா கொடுத்து ஜீப்பில் ஏற்றி ‘……….’ என்கிற
அத்வானத்துக்குக் கொண்டு விட்டார்கள். எனக்கு அளித்த சாமக்கிரியைகளின் காரணத்தை விளக்குவது
இப்போது அவசியம்.
பக்கெட் – வெட்டவெளிக்குளியலுக்காம்.
படுக்கை – கயிற்றுக்கட்டிலில் மூட்டைப்பூச்சி அதிகம்.
ஹரிக்கேன் விளக்கு – அந்தப் பேட்டைக்கே மின்சாரம் கிடையாது.
லோட்டா – வேறெதற்கு, வயல் வெளியில் ஒதுங்கத்தான்!
ஈட்டா மாவட்டத்தில் எங்கள் கம்பெனி நூற்றைம்பது கிராமங்களைத்
தத்தெடுத்து இருந்தார்கள். ஒவ்வொரு பயிற்சியாளரும் இரண்டு மாதம் ஒரு கிராமத்தில் தங்கி
அதன் முன்னேற்றத்திற்காக எதாவது செய்ய வேண்டியதுதான் எங்கள் முக்கியமான ப்ராஜெக்ட்.
இது பின்னால் வேலை நிரந்தரமாவதற்கு மிக ஆதாரமானது.
தங்குவதற்கு கிராமத்திலேயே கொஞ்சம் வசதியான விவசாயியின் வீட்டில்
ஏற்பாடு. இரண்டு மாதங்களுக்குப் பின் காசு கொடுத்தால் மரியாதைப்படாது என்பதால் அவர்
வீட்டிற்குத் தேவையான சாமான்கள் ஏதாவது வாங்கிக்கொடுப்பது வழக்கமாக இருந்தது.
எனக்குத் தஞ்சமளித்த விவசாயி பீஷ்ம நாராயண் சிங். ஒல்லியான
மீசை வைத்த பஞ்சகச்சம் கட்டின ஆசாமி. அவருக்கு பதினாறில் ஆரம்பித்து இருவத்திரெண்டு
வரை ஐந்து பெண்கள். ஒன்றுக்கும் கல்யாணம் ஆகவில்லை. எனவே என்னை வீட்டுக்குள் வைத்துக்கொள்ள
முடியாது என்று வாசலில் வானம் பார்த்த ஒரு கயிற்றுக்கட்டிலில் தள்ளி விட்டார்.
அக்டோபர் மாதம் என்பதால் கொஞ்சம் குளிர். அதிக வெளிச்சமில்லாத
காலை. கண் விழித்தபோது எனக்குப் பத்து அடியில் கிராமமே உட்கார்ந்து என்னை கண் கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தது. இப்பவே எனக்கு அரைகுறை இந்திதான். அப்போது சுத்தமான திராவிடனாக
இருந்தமையால் சைகையில்தான் பேச்சுவார்த்தை. அவர்கள் இந்தியில் பேசுவார்கள். டீ வந்தது
(மூன்றாவது பெண்). குடித்துவிட்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டு
இருந்தேன். அப்போதுதான் அந்த சரித்திரப் பிரசித்திபெற்ற உரையாடல் நிகழ்ந்தது.
“மானேஜர் சாப்! நஹி ஜா ரஹேஹோ?”
“கஹான்?”
“நை, ஆப் நஹி ஜா ரஹே ஹோ.”
எனக்கு புரியவில்லை. உதவிக்கு வந்தான் ஒரு பையன்.
“வோ பூச் ரஹா ஹய், ஆப் டட்டி நஹி ஜா ரஹே ஹோ!”
சுருக்கமாகச்சொன்னால் அவனுக்கு நான் ஏன் இன்னும் காலைக்கடனுக்குப்
போகவில்லை என்ற கவலை!
ஒரு வழியாகக் கிளம்பி வெட்கத்தினால் வெகு தூரம் போய்த் தனியான
இடம் பார்த்து உட்காரப்போகும்போது வெகு அருகில் கணீர்க்குரல்.
“ஜெய் ராம் ஜி கி, மானேஜர் சாப்!”
திடுக்கிட்டுப் பார்த்தால் ஐந்தடி தூரத்தில் இன்னொரு புதருக்கருகில்
ஒரு சக ஆள்!
ஒரு வழியாகக் காலைக்கடன் பஞ்சாயத்து முடிந்து நான் கிணற்றடிக்குக்
குளிக்கப் போனால் கூடவே முப்பது பேர் வேடிக்கை பார்க்க. ராம் தேரி கங்கா மைலி ஹீரோயின்
போல உணர்ந்தேன்.
இதெல்லாம் முதல் ஓரிரண்டு நாட்களுக்குத்தான். வெட்ட வெளியில்
காலைக்கடன், பொதுக்கிணற்றில் குளியல் எல்லாம் பின்னாள் பம்பாய் வாழ்க்கையில் கிடைக்காதா
என்று ஏங்க வைத்த அனுபவமாக மாறிப்போனது.
வ வே சு அய்யர் கதைகளில் போல இரண்டு மாதங்கள் “உருண்டோடின”!
கடைசி நாட்களில் பீஷ்ம நாராயண் சிங் என்னை வீட்டுக்குள் அனுமதித்ததும்,
அவர் தம் பெண்களை விட்டே எனக்கு உணவு பரிமாற வைத்ததும் என் நேர்மையை விட அவரின் வெள்ளை
மனசு காரணமாகத்தான் என்பதை ஒத்துக்கொள்ள எனக்குத் தயக்கமே இல்லை.
புறப்படும் அன்று பீஷ்ம நாராயன் சிங்கும் அவர் மனைவியும்
பெண்களும் கண்ணீர் விட்டபோது பாழாய்ப்போன அந்த என்னுடைய போலித்தனம் அழவிடாமல் வீரமாகப்
பேச வைத்தது.
மண் வாசனையும் வேர்க்கடலை வறுபடும் நெடியும் கொஞ்சம் அழுக்கும்
வியர்வையும் கலந்த பீஷ்ம நாராயன் சிங்கின் அந்த ஆலிங்கனம்!
அப்புறம் என்ன, கம்பெனியின் ஓட்டத்தில் நானும் ஓடினேன். சண்டிகர்,
கல்கத்தா, ஜம்மு என்று இடம் இடமாக மாற்றம். 1989ல் சீனியர் மானேஜராகப் பதவி உயர்ந்து
ஈட்டா ஃபாக்டரியின் ரிவ்யுக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நான் இருந்த கிராமத்தைக்
காட்டுவதற்காக மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன்.
அந்த சனிக்கிழமை ஜீப் எடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் போனோம்.
வெட்கமின்றி அழ வைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு.
என்னமோ என் பிறந்த ஊருக்கு வந்தாற்போல வாழ்த்தும் விஜாரிப்புமாய்
இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பாலும், ஜிலேபியும் அடைத்தார்கள். என் மனைவிக்கு “இங்கதான்
குளிப்பாரு, இங்கதான் வாலி பால் ஆடுவாரு, இந்தக் கிணறு இவர் அரசாங்கத்தில் சொல்லிப்
போட்டதுதான்” என்றெல்லாம் சுற்றுலா வேலை செய்தார்கள்.
பீஷ்ம நாராயண் சிங்கைத் தேடினேன்.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் ராம் சிங்தான் இருந்தார்.
“அவரைக் கடத்தி விட்டார்கள். மாசக் கடைசிக்குள் முப்பதாயிரம்
கேட்டிருக்கிறார்கள். இதோ இவர்தான் அவரின் முதல் மாப்பிள்ளை. பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
ஒன்றும் பயமில்லை, வந்துவிடுவார்!”
இந்த சமாச்சாரத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
மாப்பிள்ளை கீழ்ப் பார்வை பார்த்துக்கொண்டு ஒரு வித அலட்சியத்துடன்
இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. வீட்டில் அவரின் மனைவி, “வோ ஆயேகா” என்று என்னமோ விதை
நெல் வாங்க டவுனுக்குப் போயிருப்பதுபோல சொன்னார்கள்.
“ஜாக்கிரதை, ஜாக்கிரதை” என்று சொல்லி விடை பெற்று வந்துவிட்டோம்.
இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் பாம்பேயில் ஆஃபீஸ் காரிடாரில்
லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது ராமநாதன் வருவதைப் பார்த்தேன். அவர் ஈட்டா ஃபாக்டரி
மானேஜர்.
“ரகு! நீ “…………” லதானே இருந்தே? அந்த பீஷ்ம நாராயண்
சிங் செத்துட்டான்”!
“ஐயோ என்ன ஆச்சு?”
“முப்பதாயிரம் குடுக்க முடியலை. கரும்பு காட்டுல குத்துயிரும்
கொலை உயிருமா ஆள போட்டிருந்தாங்க. மூணு நாள் காஸ்கஞ்ஜ் ஆஸ்பத்திரில கஷ்டப்பட்டு செத்துப்போயிட்டான்.
நம்ம டாக்டரை விட்டு கூட பாக்கச் சொன்னேன். பிரயோஜனமில்லாம போய்டுத்து!”
உறைந்து போயிருந்தேன். உடனே மனசில் தோன்றியது அந்தப் பெண்கள்தான்.
யார் அவர்களைக் கரையேற்றுவார்கள். அவ்வளவு அன்புடன் சக மனிதனை நேசித்த பீஷம் ஏன் இப்படி
கோரமாய்ச் சாக வேண்டும். அந்த குடும்பம் எப்படி அலை பாயுமோ?
“ச்சே ச்சே! கிராமங்கள் பாம்பே டெல்லி போல விட்டேத்தியாய்
இருக்காது. கூட இருப்பவர்கள் அந்தப் பெண்களுக்கு ஏதேனும் நல்ல வழி காட்டுவார்கள். முதல்
மாப்பிளை சொந்த பிள்ளை போலக் குடும்பத்தை காப்பாற்றுவான்!”
சும்மாவா சொல்லியிருக்கார் மகாத்மா காந்தி, “இந்தியாவின்
உயிர் நாடி கிராமங்களில்தான் இருக்கிறது.”
என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
இன்றும்கூட எப்பவாவது சில இரவுகளில் அந்த பீஷ்ம நாராயண் சிங்கின்
ஆலிங்கனமும் அந்த வாடையும் என்னை எழுப்பி மீதி இரவில் தூங்க விடாமல் செய்து விடுவதுண்டு.
36 வருடங்களுக்குப் பின்னரும் நிலைமை அதிகம் மாறாததுதான்,
நாம் இந்த நாட்டின் ஜனநாயகத்துக்குக் கொடுக்கும் விலை என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Leave a Reply