Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 23 | சுப்பு




பார்வதி அக்கா
என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடங்கியவுடனேயே ஒவ்வொரு நாளும் வினோதமான,
விளக்க முடியாத அனுபவங்கள் ஏற்பட்டன. திடீரென்று என்னைச் சுற்றி ஒரு பூந்தோட்டம் போடப்பட்டு
நான் எப்போதும் நறுமணத்தோடு இருக்க வேண்டும் என்பது போல் ஒரு ஏற்பாடு. காரணமில்லாமல்
எல்லோரும் என்னிடம் கனிவோடு இருந்தார்கள்.
எனக்கு உணவளிப்பதில் பெசன்ட் நகர் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான
போட்டி இருந்தது. நேற்று வரை என் மீது அதிகம் மதிப்பு வைத்திராத நண்பர்கள், உறவினர்கள்
கூட என்னை சீராட்டத் துவங்கினார்கள். என் வயதொத்த பெண்களில் சிலர் என்னைத் தம்பிப்
பாப்பாவாகத் தத்தெடுத்துக்கொண்டார்கள்.
இதனுடைய தாக்கத்தில் சிக்கி, ருசியில் மயக்குண்டு நான் உலகியலில்
பங்கெடுப்பவன் என்ற நிலையிலிருத்து விலகி பார்வையாளனாக மாறிக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும்
என்னுடைய அரசியல் தொடர்புகளோ பொதுப் பணியோ என்னை விட்டுப் போகவில்லை.
இப்படிப்பட்ட ஒரு நாள் காலையில் பெசன்ட் நகரில் ராகவன் வீட்டில்
தங்கி, தி ஹிந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்த ஒரு செய்தி என்னைச்
சூடேற்றிவிட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெளியிடப்பட்ட செய்தி அது.
நீண்ட நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின்
சௌகரியத்துக்காக செய்யவிருக்கின்ற சௌகரியங்களைப் பற்றிய செய்தி அது. பக்தர்களின் மனதை
ஒருமுகப்படுத்துவதற்காக அவர்களுக்கு தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் ஆன்மீகம் தொடர்பான
இலவச வெளியீடுகள் வழங்கப்படும் என்றும் அதில் இந்து, முஸ்லிம், கிறித்துவம் தொடர்பான
விஷயங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டது. என்னுடைய சூடேற்றத்துக்கு காரணம் இதுதான்.
இந்துக் கடவுளைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கும் இந்து பக்தர்களிடையே
பைபிளைப் பரப்ப வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் என் கேள்வி. இந்த அயோக்கியத்தனத்தை
அகற்ற வேண்டும் என்று நினைத்தேன். ராகவன் வீட்டிலிருந்து படியிறங்கி கீழே வீதிக்கு
வந்தேன்.
பெசன்ட் நகரில் முக்கியமான இடம், குறிப்பாக இளைஞர்களைப் பொருத்தவரை
முக்கியமான இடம் ‘ராவ் கடை’தான். உண்மையில் அது பாண்டுரங்க ராவ் என்பவர் நடத்திய சைவ
ஹோட்டல். எவ்வளவு நேரம் உட்கார்ந்து வீண் அரட்டை அடித்தாலும் ஏன் என்று கேட்காத நல்ல
மனிதர் பாண்டுரங்க ராவ். என்ன காரணத்தினாலோ இளைஞர்கள் அதை ஒரு ஹோட்டலாக ஏற்றுக்கொள்ளவில்லை.
‘ராவ் கடை’ என்று சொல்லி சொல்லி அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. ராவ் கடைக்கு வந்தேன்.
அப்போது காலை எட்டு மணி. எனக்கு முன்பாகவே குமார் அங்கு வந்திருந்தான்.
குமார் தொழில் ரீதியாக பெயின்டிங் கான்டிராக்ட் எடுக்கும் முதலாளி; சமயத்தில் தொழிலாளி.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தைத் தடுத்து
நிறுத்த வேண்டும் என்று குமாரிடம் எடுத்துச் சொன்னேன். இது தொடர்ந்தால் அதன் விளைவுகள்
விபரீதமாக இருக்கும் என்பதை விளக்கமாகப் பத்து நிமிடங்கள் பேசினேன். ஒரு கட்டத்தில்
அவனுடைய மூளையில் இதெல்லாம் போய்ச் சேர்ந்ததா என்கிற சந்தேகத்தோடு நிறுத்திவிட்டேன்.
அப்போது குமார் கேட்டான். “நான் என்ன செய்யணும்னு சொல்லு.”
என்னுடைய பதில் “முதல்ல பசங்கள திரட்டணும். ஆள் இருந்தாதான்
போராட முடியும்.”
குமார் ஸ்கூட்டரை உதைக்க ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் போராட்டம்
வெற்றி பெற்று அவன் புறப்பட்டான். நான் காலை உணவுக்காக ராவ் கடையின் உள்ளே போனேன்.
ஒரு மணி நேரத்தில் சிறிய அளவில் போராட்டக் குழு தயாராகிவிட்டது.
நான், குமார், மத்தியான ஷிப்டில் அசோக் லேய்லாண்டிற்குப் போக வேண்டிய இரண்டு பேர்,
வேலையில்லாத அதைப் பற்றி கவலையும் இல்லாத இரண்டு பேர். இன்னும் மூன்று பேர் வருவதாகச்
சொல்லியனுப்பியிருந்தார்கள்.
பகல் பதினோறு மணிக்குள் போராட்டத்திற்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டது.
நூற்றுக்கணக்கான அஞ்சலட்டைகளை வாங்கி, பொது மக்களிடம் கையொப்பம் பெற்று தேவஸ்தானத்திற்கு
அனுப்ப வேண்டும், நம்முடைய எதிர்பைத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
“வீட்டுல அக்கா தங்கச்சியெல்லாம் சும்மாதான இருக்காங்க. அவங்கள
எழுதச் சொல்லலாமே” என்று யோசனை சொன்னான் ஒருவன். அவன் வேலைக்குப் போகாமல் சும்மா இருக்கிறான்
என்பது முக்கியமான விஷயம். ஓரளவுக்கு அவன் கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
இப்படியாக முதல் நாளில் இருநூறு, மறுநாள் முன்னூறு என்று ஐநூறு
அஞ்சலட்டைகளை அனுப்பிவிட்டோம். மூன்றாம் நாள் நண்பர்களிடம் போராட்டத்தைத் தொடருமாறு
சொல்லிவிட்டு ஒரு வேலையாக நான் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போனேன். அங்கேதான் சங்கத்தின்
வார இதழான தியாக பூமி அலுவலகம் இருந்தது. அதன் ஆசிரியர் ஹண்டிரட் ஜீ என்று அன்போடு
அழைக்கப்பட்ட சீனிவாசன் என்னை வரவேற்றார்.
“என்னைய்யா, நசிகேதஸ் மாதிரி வந்திருக்கிற?” என்றார்.
“இதுவும் ஒரு உயிர் மரணப் போராட்டம்தான்” என்று சொல்லி திருப்பதி
தேவஸ்தான போராட்டம் பற்றி விவரித்தேன். ஹண்டிரட் ஜீ அற்புதமான மனிதர். என்னை சாந்தப்படுத்தி
அனுப்பி வைத்தார்.
தியாக பூமியின் அடுத்த இதழில் தேவஸ்தானத்தின் முயற்சி பற்றியும்
அதைக் கண்டிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சங்கத்தின்
அன்பர்கள் தங்கள் சக்திக்கேற்றபடி தந்தி, தபால் மூலமாக தேவஸ்தானத்தைத் துளைத்தெடுத்துவிட்டார்கள்…
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதே ராகவன் வீட்டில் தி ஹிந்து
நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி கண்ணில் பட்டது. திருமலை திருப்பதி
தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அது. முன்பு வந்த பைபிள், குரான் செய்தியை
நடைமுறைபடுத்தப் போவதில்லை என்று அது தெரிவித்தது.
இந்தச் சமயத்தில்தான் ராமானுஜன் திருமணத்திற்காகப் பெங்களூருக்குப்
போனேன்.
திருமணத்திற்கு முதல் நாள் மதியம் பெங்களூர் போய்விட்டோம். மாப்பிள்ளை
வீட்டார் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் என்னைத் தவிர ஐம்பது பேர் பயணம்.
மதியத்திற்கும் மாலையில் நடக்கவிருக்கிற ஜானவாசத்துக்கும் இடைவெளியில்
நான் ஜெய நகருக்குப் போனேன். அங்கே என்னுடைய சித்தப்பா ராகவன் குடியிருந்தார். ஹிந்துஸ்தான்
ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் வேலை பார்த்த அவர் வித்தியாசமான ஆசாமி. தொழிற்சாலையில் இவர்
தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் ராஜாஜியின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட
சுதந்திரா கட்சியிலும் ஒரு கட்டத்தில் உறுப்பினராக இருந்தார். இதுவரை எனக்கும் சித்தப்பா
ராகவனுக்கும் அதிகப் பரிமாற்றங்கள் நடந்ததில்லை, ஆனால் இந்த முறை என்னை அவர் அருகில்
வைத்துக்கொண்டார். எனவே அவரிடம் கேட்க வேண்டும் என்று பாக்கி வைத்திருந்த கேள்வியை
அப்போது கேட்டுவிட்டேன்.
எங்கள் வீட்டிலும் மற்ற உறவினர்கள் வீட்டிலும் முகப்பில் விநாயகர்
படம் இருக்கும். சிலரிடம் காஞ்சி மகா சுவாமிகளின் படம் இருக்கும். அடையார் பெரியம்மா
வகையறாக்கள் சிருங்கேரி ஆச்சாரியாள் படம் வைத்திருப்பார்கள். ஆனால் பெங்களூர் வீட்டில்
இது எதுவும் இல்லை. பகவான் ரமணர் படம் இருந்தது. இது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி.
கேட்டுவிட்டேன்.
சித்தப்பா ராகவன் சொன்ன பதில் இது:
“நான் இளம் வயதிலேயே பெங்களூருக்கு வந்து வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்
(1940). அப்போது நானும் என்னுடைய நண்பர் ஜானகிராமனும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை
ரமணாஸ்ரமத்திற்குப் போவது வழக்கம். ஒரு சமயம் கூட்டமாக இருக்கும், இன்னொரு சமயம் அதிகக்
கூட்டம் இருக்காது. நாங்கள் போகும் வழியில், கூட்டம் இருக்கக்கூடாது என்று பகவானை வேண்டிக்கொண்டே
போவோம்.
அதிசயமாக ஒருமுறை பகவான் இருக்கும் அந்த ஹாலில் நாங்கள் நுழைந்த
போது அங்கே பகவானைத் தவிர நாங்கள் இரண்டு பேர்தான் இருந்தோம்.
பகவானுக்கு அருகில் போய் உட்கார்ந்துவிடலாம் என்று ஜானகிராமன்
என்னிடம் கிசுகிசுத்தான். அந்த இடத்தில் பேசுவதே எனக்கு உவப்பாக இல்லை. தேவையில்லை,
இப்படியே உட்கார்ந்து கொள்ளலாம் என்று செய்கையிலேயே சொன்னேன். எங்களுக்குள் நடந்த தகவல்
பரிமாற்றத்தை பகவான் கவனித்துவிட்டார். பகவான் பேசினார்.
“எங்கே இருந்தால் என்ன. என்ன நடந்தா என்ன. எல்லாம் ஒண்ணுதான்”
என்றார் அவர்.
சிறிது நேரம் கழித்து நாங்கள் புறப்பட்டோம். பெங்களூருக்கு வந்துவிட்டோம்.
என்னைப் பொருத்தவரை பகவானுடைய வார்த்தைகள் என் கையில் கட்டிய தாயத்தாக மாறிவிட்டது.
அன்று முதல் – இது நடந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது – எனக்கு பிரச்சினை
ஏற்படும்போதெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் கொஞ்சம் நிதானிப்பேன். பகவானை நினைத்துக்கொள்வேன்.
மந்திர ரூபமாக அவருடைய வார்த்தைகள் வந்து நிற்கும். சில நிமிடங்கள்தான். பிரச்சினைக்கான
தீர்வு என்னுடைய தலையீடு இல்லாமலேயே கிடைத்துவிடும். இப்படித்தான் நம்ம வண்டி ஓடிண்டிருக்கு”
என்று சொல்லிவிட்டு “ஏதாவது புரிகிறதா?” என்று கேட்டார்.
“இப்போ இதெல்லாம் புரிகிறது” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
சித்தப்பா எனக்கு வில் டுரண்ட் எழுதிய தி ஸ்டோரி ஆப் பிலாசபி
(Will Durant – The Story of Philosophy) புத்தகத்தைக் கொடுத்தார்.
பார்வதி அக்கா
ஜெய நகரில் ஒரு நாற்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். ரமணனுக்காகக்
காத்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் ஒரு பேக்கரி. பேக்கரியின் உள்ளே சுவற்றில் சரஸ்வதி
படம் மாட்டப்பட்டிருந்தது. சரஸ்வதியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னோடு பேசுவது
போலிருந்தது. நானும் கையை ஆட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தேன். இதற்குள் கடையிலிருந்த
ஆள் ஒருவன் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நிமிஷத்தில் நிலமை புரிந்துவிட்டது.
சரஸ்வதி படத்துக்குக்கீழே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணை நான் வம்பு
செய்கிறேன் என்று இவன் நினைத்துவிட்டான். இவனிடம் என்ன சொல்வது என்று தீர்மானிப்பதற்குள்
ரமணன் ஆட்டோவில் வந்து இறங்கினான். அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டு ஆட்டோவை சீக்கிரம் ஓட்டச்
சொன்னேன்.
திருமணத்தில் பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும்
பராசக்தி. சாப்பாட்டு மேசையில் பக்கத்திலிருந்தவன் துப்பிய முருங்கைக்காய் சக்கைக்குப்
பக்கத்தில் குட்டி துர்க்கை. பராசக்தியைப் பார்க்காமல் இப்படி எச்சிலைப் போட்டிருக்கிறானே
என்ற சங்கடம் எனக்கு. வாய்விட்டு சொல்ல முடியவில்லை. எழுந்து கை கழுவப் போனால் வரிசையில்
எனக்குமுன் ஒரு இளம்பெண். அந்தப் பெண்ணுடைய தோளில் மகாலக்ஷ்மி. இவளைத் தொட வேண்டுமென்ற
எண்ணத்தில் கையை நீட்டி, அந்தப் பெண்ணின் கன்னத்தைத் தொட்டுவிட்டேன். அவள் முகம் சுருங்கிய
பிறகுதான் எனக்கு சூழ்நிலையின் யதார்த்தம் பிடிபட்டது.
பிறகு ராஜாஜி நகரில் இருக்கும் ரமணனின் அத்திம்பேர் வீட்டுக்குப்
போனேன். அங்கே ரமணனின் அக்கா மாலாவும் அத்திம்பேர் தியாகராஜனும் இருந்தார்கள். பராசக்தி
காட்சிகளாக வருவதையும், எந்த நேரமும் எனக்கு உதை விழலாம் என்பதையும் அவர்களிடம் விளக்கிச்
சொன்னேன். அந்த வீட்டிலேயே தங்கினேன்.
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பார்வதி அக்கா என்று ஒரு பெண்மணி
இருந்தார். அவர் மூலம் சேஷாத்திரி சுவாமிகள் அனுக்ரஹம் செய்வார் என்று மாலாவும் தியாகராஜனும்
சொன்னார்கள். அவர்கள் பார்வதி அக்காவுடைய சத்சங்கத்தில் இருந்தார்கள். என்னை அவரிடம்
அழைத்துப் போனார்கள். மிகச் சிறிய அறையில் மெத்தை, பெட்டி படுக்கைகள் ஒரு பக்கம் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் நாங்கள் நால்வரும். பார்வதி அக்கா, ஓரளவிற்கு
என்னுடைய பாட்டி குஞ்சம்மா போலிருந்தார். நெற்றியில் திருநீறு. வாயில் பிராமண பாஷை.
தரையில் உட்கார்ந்து கொண்டு விபூதியில் கையைத் துழாவிக் கொண்டிருந்தார். என்னை அவருக்கு
அறிமுகம் செய்தார்கள்.
‘என்னப்பா பார்க்கிற நீ?”
‘பராசக்தியைப் பார்க்கறேன்”.
‘எங்கே பாக்கிற?”
‘எல்லா இடத்திலேயும் பார்க்கறேன். இப்பக்கூட இந்த மெத்தைமேல
மகிஷாசுரமர்த்தினி இருக்கா. மாலாவோட தோள்ல கன்யாகுமரி அம்மன்”.
“சரி நீ சொல்லிண்டே இரு” என்றவர் நான் ஒவ்வொரு தெய்வமாகக் குறிப்பிட,
சிலேட்டில் அழிப்பதுபோல் அவர் கையை அசைக்க, ஒவ்வொரு தெய்வமாய்க் காணாமல் போனது. “இது
ஒரு நிலை. சில அசடுகள் இதையே பார்த்துக் கொண்டு நின்றுவிடும். நீ மேலே போ” என்றார்.
அவருடனே நாங்கள் தங்கியிருந்தோம். அவர் காபி போட்டுக் கொடுத்தார். மிகவும் நேசத்துடன்
இருந்தார். வாய் ஓயாமல்  “அன்பே அமுதம், அன்பே
அமுதம்” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து புறப்பட்டோம். அவர்களை ஸ்கூட்டரில் போகச் சொல்லிவிட்டு
நான் நடந்து வந்தேன். இந்த அனுபவம் புதுமையாயிருந்தது. வீதியில் தென்படும் நேபாளத்துப்
பெண்மணி, பிளாட்பாரத்து நாய், மைதானத்தில் விளையாடுவோர் என்று எல்லோரிடமும் ஒரு ஜொலிப்பு
இருந்தது. வானத்தில் இருந்த மேகங்கள் இறங்கி வந்து வழியை மறைத்து விட்டன. உடல் தளர்ச்சியை
உதறிவிட்டு முறுக்கேறிக் கொண்டது. மனது மிகப் பெரியதாய், எதிலும் அடங்காமல், எதையும்
தொடாமல் தனித்திருந்தது. மாலா வீட்டுக்குப் போய் என்ன செய்யப்போகிறோம் என்ற யோசனை வந்தது.
ஏதோ ஒரு வீட்டுக்குப் போய் அங்கே உள்ள ஜனங்களோடு சம்பந்தப்பட்டு வாழ்வதென்பது ஒட்டவில்லை.
கால்போன போக்கிலே நடந்தேன். வெகு நேரம் இப்படிச் சுற்றிய பிறகு ரமணன் நம்மைத் தேடுவானே
என்ற ஞாபகம் வந்தவுடன் வழி மறந்துபோய் விசாரித்துக்கொண்டு வீடு திரும்பினேன்.
சாப்பிட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தோம். அப்போது தியாகராஜன்
காலடியில் சேஷாத்திரி ஸ்வாமிகள் தென்பட்டார். கொஞ்ச நேரம் கழித்து, “அத்திம்பேர் கால
கொஞ்சம் நகர்த்துங்களேன்” என்றேன். “ஏன்” என்றார். “காலடியில் சேஷாத்ரி ஸ்வாமிகளிருக்கார்”
என்றேன். எல்லோரும் பயந்துவிட்டார்கள். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. பிறகு படுத்துக்
கொண்டேன். சுவாமிகள் சுவரில் வேகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தபடியே
தூங்கிவிட்டேன்.
இதற்குப் பிறகு பத்து நாட்கள் பெங்களூரிலிருந்தேன். பத்து நாட்களும்
பார்வதி அக்காவைப் பார்க்கத் தவறியதில்லை. காலையில் ரமணன் ஆபீஸ் போகும்போது அவர் வீட்டில்
என்னை விட்டு விட்டுப் போவான். மாலையில் ரமணனோ, மாலாவோ வந்து என்னை அழைத்துப் போவார்கள்.
பார்வதி அக்கா சத் விஷயங்களையே பேசுவார். மிகவும் அன்பாக உபசரிப்பார். எனக்குப் பிடித்த
அரிசி உப்புமா செய்து கொடுப்பார். அவர் காபியை பிரஸாதம் என்று சொல்லித்தான் கொடுப்பார்.
ஆன்மிகம் விஷயமாக அவர் எழுதிய நோட்டுப் புத்தகங்கள் அந்த வீட்டில் மூட்டை மூட்டையாயிருக்கும்.
அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொல்வார். வண்ணக் கோலங்களை நூற்றுக்கணக்கில்
வரைந்து வைத்திருப்பார். அதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
பத்து நாட்களுக்குப் பிறகு சென்னை.
பெஸன்ட் நகரிலிருந்த ரமணனின் தந்தையும் தாயும் என்னை நன்றாகப்
பராமரித்தார்கள். ரமணனின் அம்மாவுக்கு நான் செல்லப்பிள்ளையாய் இருந்தேன். ஆன்மிக விஷயமாக
எனக்கு ஏற்படும் சந்தேகங்களை ரமணனின் அப்பா சேஷனிடம் தீர்த்துக் கொள்வேன். அவர் கூறியபடி
இடைவிடாது நான் காயத்ரி ஜபம் செய்து கொண்டிருந்தேன். இரவு, பகலாக காயத்ரி ஜபம் செய்து
கொண்டிருந்தேன். பேசினாலும் சாப்பிட்டாலும் காயத்ரி ஜபம் மனதின் ஆழத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும்.
குளியலறை, கழிப்பறை தவிர எல்லா இடங்களிலும் இது நீடிக்கும். சேஷன் என்னை புவனேஸ்வரி
மந்திரத்தையும் ஜெபிக்கச் சொன்னார். அதையும் அவ்வப்போது செய்து கொண்டிருந்தேன். இரவில்
திடீரென்று கண்விழித்தால் உள்ளே ஜபத்தின் ஓட்டம் தெரியும்.
இதைத் தவிர என்னுடைய பரிட்சார்த்த முயற்சிகளும் உண்டு. பஸ்,
ரயில் பயணத்தின்போது யாரோ ஒருவரைக் குறிவைத்து “யாதேவி சர்வ பூதேஷு நித்ரா ரூபேண சமஸ்திதா.
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ” என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அவர் தூங்கிவிடுவார்
அல்லது அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடுவார்.
(தொடரும்…)

Leave a Reply