Posted on Leave a comment

அதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு – ஹாலாஸ்யன்

உயிர் என்ற ஒன்று தோன்றிய போதில் இருந்தே அந்த உயிருக்கு எதனோடாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் இருந்திருக்கும். அது, இங்கே உணவு கிடைக்கிறது என்பதாக இருக்கலாம். உணவு என்னுடையது என்பதாக இருக்கலாம். இது என் பேட்டை, நீ ஏன் உள்ளே வந்தாய் என்ற மிரட்டலாம் இருக்கலாம். இணைசேரக் கூவுதலாய் இருக்கலாம். ஓர் உயிர் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எதையேனும் தொடர்புகொள்ள முயன்றுகொண்டே இருந்திருக்கும். கூட யாருமே இல்லாத முதல் உயிரி என்ன செய்திருக்கும்? யாருடன் அல்லது எதனுடன் பேசியிருக்கும்? என்ன சொல்ல எத்தனித்திருக்கும்? அனைத்தையும் கேட்கும் திறன் கொண்ட காதுகள் இருப்பின் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் உயிர்களும் நிற்காமல் பேசுவது கேட்கும். மனிதனான நாம் சைகைகள், குகை ஓவியங்கள், ஓலமிடுதல் தொடங்கி, மொழி உருவாகி, பேச்சு, இசை, மொழி, நடனம், கூத்து என்று எல்லாமே ஏதோ ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

தொடர்பு கொள்ள வேண்டும் என்பதன் நீட்சிதான் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப், வீடியோ ஆடியோக்கள் எல்லாம். பார்க்கப்போனால் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் பசி‌, தாகம், உறக்கம், காமம் போன்ற இயற்கை உந்துதலில் சேர்க்கலாம். NLP (Neuro Linguistic Programming) என்னும் மனிதர்களின் தொடர்புகளைப் பற்றிய இயலில் ஓர் அடிப்படைக் கோட்பாட்டைச் சொல்வார்கள்‌, we are always communicating என்று. தான் கண்ணால் பார்க்க முடிந்தவர்களிடம்‌ மட்டும் பேச ஆரம்பித்த மனிதன் தொழில்நுட்பத்தால் உருவமின்றி ஒலிகள் மூலம் ‌பேச ஆரம்பித்தான். இன்று இரண்டையும் கலந்து வீடியோ கால் பேசுகிறான். ஒரு யூட்யூப் வீடியோ மூலம் பல்லாயிரக்கணக்கான பேரைப் போய்ச் சேர முடிகிறது. அந்தத் தொடர்பு வேட்கை உந்தித்தள்ள ஒரு‌ கட்டத்தில் இயந்திரங்களோடு பேச ஆரம்பித்தான். ஐஃபோனில் சிரி, ஆண்ட்ராய்டில் கூகுள் அஸிஸ்டென்ட், ஹைக்கில் நடாஷா என்று போய்க்கொண்டிருக்கிறான். தன்னைச் சுற்றி இருக்கும் கருவிகள் எல்லாமே தன்னோடு பேச வேண்டும், தன் பேச்சைச் கேட்க வேண்டும் என்ற அடிப்படை ஆசை மனிதனுக்கு உண்டு. அப்படி எல்லாக் கருவிகளும் ஒருங்கிணையும் ஒரு தளமாக இணையம் இருக்கிறது. தேர்ப்பாகன் கையில் எல்லாக் குதிரைகளின் லகானும் இருப்பதுபோல எல்லாக் கருவிகளையும் இணையம் கோத்து நம் கையில் கொடுத்திருக்கிறது.
கம்பி வழி இணையத்தில் ஒரு சிக்கல் நாம் எல்லாரும் அறிந்ததுதான். அது கிடைக்கும் இடத்தில் நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். கம்பிவழி இணையம் நம்பகத்தன்மை உடையது, அதனாலேயே இன்னமும் அலுவலகங்களில் அதையே பயன்படுத்துகிறார்கள். இன்னமும் RJ45 எனத் தொழில்நுட்ப வட்டங்களில் அறியப்படும் ஈதர்நெட் கம்பிகள் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கையடக்கக் கருவிகளுக்கு இந்தக் கம்பிவழி இணையம் தோதுப்படாது. நாம் நமக்கு விரும்பியவாறு அமர்ந்தோ, நடந்தோ, படித்தோ இணையத்தில் மேய முடியாது. மேலும் தற்போது காபி மேக்கர், அடுப்பு, கார், வீட்டில் உள்ள பிற எலெக்ட்ரிக் சாதனங்கள் எல்லாமே இணையத்தில் நுழைந்து நம் கைக்குள் வரும் internet of things யுகத்தில் கம்பிவழி இணையம் நிச்சயம் பழங்கஞ்சிதான்.
நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. ஏற்கனவே வைஃபை என்ற ஒன்றை வைத்திருக்கிறோம். Wireless Fidelity என்பதன் சுருக்கமே WiFi. பதினேழு வருடங்களுக்கு முன் சந்தைக்கு வந்த இந்தத் தொழில்நுட்பம் வயரில்லா இணையத்தை வழங்குவதில் தற்போதைக்கு ஜித்தன். வயர்கள் மூலமாக மோடத்திற்கு (modem) வந்து சேரும் இணையத்தை ரேடியோ அலைகளில் ஏற்றிக் காற்றில் பரவவிடுகிறது. விண்வெளியில் சிறு புள்ளிகளாய் உருவாகி வெடிக்கும் கருந்துளைகளைத் தேடும் ஒரு சோதனை தோற்றுப்போக, அந்தச் சோதனையில்தான் வைஃபையின் அடிப்படைத் தொழில்நுட்பம் கிடைத்துக் காப்புரிமை பெறுகிறார்கள். தோராயமாய் இருபது மீட்டர் வரை அந்த ரேடியோ அலைகள் மூலம் நாம் இணையத்தை அணுகலாம். ரேடியோ அலைவரிசையில் 2.4 GHz மற்றும் 5 GHz (முறையே நொடிக்கு 240 கோடி அல்லது 500 கோடி அதிவெண் கொண்ட அலைகள்) என்ற இரு அதிவெண்களில் இயங்கும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வைஃபை அலைவீச்சால் உடல்நலத்திற்கு எதுவும் பாதிப்பில்லை என்றாலும் பின்வருபவை வைஃபையின் குறைபாடுகள்
1.    ரேடியோ அலைகள் சுவர்களைத் தாண்டியும் பயணிப்பதால் அவற்றை நம்மை அறியாமல் இன்னொருவர் பயப்படுத்த முடியும். வீட்டின் சுவருக்கு வெளியில் இருந்து நம் வைஃபையின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உடைத்து உட்புகுந்து தகவல் திருட முடியும். இதன் பாதுகாப்பு அடுக்ககளாகக் கூறப்படும் WPA, WEP போன்ற எல்லாமே வலு குறைந்தவைதான்
2.    சில இடங்களில் இந்த ரேடியோ அலைகள் பிற கருவிகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். உதாரணமாக மருத்துவமனையின் உயிர்காக்கும் உபகரணங்கள், அணு உலைகள். இங்கிருக்கும் கருவிகளோடு வைஃபையின் ரேடியோ அலைக் குறுக்கீடு பெரும் ஆபத்தாக முடியும்.
3.    வைஃபை பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசை அளவில் குறுகியது. பல கருவிகள் இணைய இணைய, ட்ராபிக் ஜாம் ஆன சாலை போல வேகம் குறைந்து விடும். ஆனாலும் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல் வேறு மாற்று எதுவும் இல்லாததால் நாம் வைஃபையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில்தான் ஜூலை 2011ல் ஒரு TED சொற்பொழிவில், எடின்பரா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத்துறை பேராசிரியர் திரு. ஹரால்ட் ஹாஸ், ஏன் ஒளியைத் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு தளத்தை திறந்து வைக்கிறார். அவருடைய யோசனை என்னவெனில் உட்கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் விளக்குகளை வைத்து ஏன் தகவல்களை அனுப்பக்கூடாது என்பதுதான். அதே சொற்பொழிவில் அவர் ஒளியுமிழிகள் (LED – Light Emitting Diode) தரும் ஒளியில் தகவலை ஏற்றி அதைக்கொண்டு ஒரு காணொளியை ஓட வைக்கிறார். வைஃபை போல அவர் லைஃபை LiFi (Light Fidelity) என்னும் சொல்லை உருவாக்குகிறார்.
 ஒளியைக் கொண்டு தகவல் தொடர்பு என்பது மனித குலத்திற்குப் புதிதில்லை‌‌. தீப்பந்தங்களின் அசைவுகளில் போர் வியூகங்கள் வகுத்திருக்கிறோம். இன்றுவரை கலங்கரை விளக்கங்களில் உச்சியில் இருக்கும் ஒளிகள் கப்பல்களுக்கு ஏதோ ஒரு தகவலைப் பரிமாறுகின்றன. இன்றைய உலகில் தொன்னூறு சதவிகித தகவல்தொடர்பைக் கைக்குள் வைத்திருக்கும் கண்ணாடி இழைக் கம்பி (OFC – Optical Fibre Cable) வழித் தகவல் தொடர்பு என்பது ஒளியால் நிகழ்வதுதான். அதன் அடிப்படைக் கோட்பாடு முழு அகப் பிரதிபலிப்பு. Total Internal Reflection என்பார்கள். இப்படி ஒளியால் தொடர்பு‌கொள்ளும் வழிமுறைகளுக்கான தொழிற்கட்டுமானத்தை VLC (Visible Light Communication) என்கிறார்கள்‌. அதனுடைய ஒரு பகுதியாகத்தான் இந்த லைஃபையை அறிமுகப்படுத்துகிறார்கள்‌.
நாம் பயன்டுத்தும் மின்விளக்குகளில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஆரம்பக்கட்ட குண்டுபல்புகள், பின்னர் குழல் விளக்குகள், சி.எஃப்.எல் விளக்குகள், இப்போது சமீபகாலமாய் எல்.ஈ.டிக்கள் என்று அறியப்படும் ஒளியுமிழிகள். இந்த வகைகளில் எல்.ஈ.டியைத் தவிர மீதி இருப்பவை எல்லாம் மின்சார (எலக்ட்ரிகல்) சாதனங்கள். ஆனால் எல்.ஈ.டி என்பது ஒரு மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) சாதனம். அதாவது அதிவேகமாக அந்த விளக்குகளின் ஒளியுமிழ்த் திறனைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு இருக்கையில் நம்‌ வாசல் வரை வரும் இணையத்தை வீட்டுக்குள் இருக்கும் கருவிகளுக்கு ரேடியோ அலைகளில் ஏற்றாமல் கண்ணால் காணக்கூடிய ஒளி அலைகளில் ஏற்றி அனுப்புதல். விளக்கின் பிரகாசத்தைக் கூட்டியோ குறைத்தோ அல்லது அவற்றை அணைத்துப் போடுதல் போன்றவற்றால் தகவலை ஒளியில் ஏற்றுதல்.
பிரகாசத்தைக் கூட்டிக் குறைத்து அனுப்புதல் என்றவுடன் அக்னி நட்சத்திரம் படத்து க்ளைமேக்ஸ் மாதிரியெல்லாம் இல்லை. சொல்லப்போனால் நாம் வீட்டில் பொருத்தியிருக்கும் குண்டு பல்பு நொடிக்கு ஐம்பது முறை அணைந்து அணைந்து எரிகிறது. ஆனால் அது நம் கண்களுக்குத் தெரியாது அல்லவா? அது அப்படி துடிப்பதற்குக் காரணம், நாம் பயன்படுத்தும் மாறுதிசை மின்னோட்டத்தில் அதிர்வெண் அதுதான். நொடிக்கு ஐம்பது முறை தன் திசையை மாற்றிக்கொள்ளும். அதனால்தான் ட்ரான்ஸ்பார்மர்களில் 50 Hz என்று குறிப்பிட்டிருப்பார்கள். நாம் தகவல் பரிமாறும் வேகம் இதையெல்லாம்விட அதி‌கம். ஒளியின் அதிர்வெண் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணை விடப் பல மடங்கு அதிகம். லைஃபைக்கான உட்கட்டுமானம் மிக எளிதானது. வீட்டின்‌ உத்திரங்களில் அல்லது படுக்கையை ஒட்டிய விளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றி அவற்றோடு தகவல்களை ஒளியில் ஏற்ற பிரகாசத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும் கருவியை இணைத்துவிடுவது.
நியாயமாக சில சந்தேகங்கள் வரவேண்டும். நம்மைச்சுற்றி சாதாரணமாக ரேடியோ கதிர்கள் இல்லை. அதனால் வைஃபை மோடம் அனுப்பும் ரேடியோ கதிர்களை நம் கருவிகள் எளிதில் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் நம்மைச்சுற்றி எப்போதும் ஒளி இருக்கிறதல்லவா? அது இந்த ஒளியோடு குறுக்கிடுமே?
இந்த விளக்குகள் அளிக்கும் தகவல்களைப் பெறுவதற்கு அவர்கள் சிறிய அளவிலான போட்டோ டிடெக்டார்ஸ் எனப்படும் ஒளிவாங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவை பிரகாசம் மாறாமல் எரிகிற விளக்குகளின் ஒளியைக் கண்டுகொள்ளாது. அதாவது ஒரு இசைக்கச்சேரியில் ஸ்ருதிப்பெட்டியை யாரும் ரசித்துக் கேட்பதில்லை‌ அல்லவா? அதுபோலவே அந்த ஒளிவாங்கிகள் தகவல் சுமந்து வரும் ஒளிகளை‌‌ மட்டும் கண்டுகொள்ளும். மற்றதைப் பரிசீலிக்காது.
அடுத்ததாய் லைஃபையைப் பயன்படுத்த வேண்டுமெனில் எப்போதும் விளக்கு எரிந்தபடியே இருக்க வேண்டுமே என்று. ஆம். ஆனால் டே அன்ட் நைட் கிரிக்கெட் போட்டிகளில் எரியும் நியான் விளக்குகளைப் போல பிரகாசமாய் எரியத் தேவையில்லை. நைட் லேம்ப்‌ போல எரிந்துகொண்டிருந்தாலும் போதும்.
மிக முக்கியமான சந்தேகம் நேரு காந்தி போன்றவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில், தெருவிளக்கு ஒளியில் படித்தார்கள் என்று சொல்கிறாற்போல் நாமும் விளக்கின் அடியிலேயே நிற்கவேண்டுமா? இதற்கும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்த ப்ளக் பாயிண்டின் அடியில் நிற்பதற்கும் என்ன வித்தியாசம் என்று? நாம் விளக்குக்கு அடியிலேயே நிற்கத் தேவையில்லை. சுவரில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியே இன்றைய அதிவேக இணையம் அளவுக்கு வேகத்தைத் தரக்கூடியது.
லைஃபை அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. லைஃபையின் சிறப்பம்சங்கள் என்னவெனில்
1.    நம் சுவர்கள் பெரும்பாலும் ஒளிபுகாத தன்மை கொண்டதால் நம் இணையத்தை வெளியாள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள் மட்டுமே இயங்கும். ஒரு அறைக்குள் இருக்கும் விளக்கு அந்த அறைக்குள் மட்டுமே இணைய சேவையைத் தரும். அறைக்கு நான்கு விளக்குகள் வைத்துவிட்டால் குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிச்சுற்றி வந்து பயன்படுத்தலாம்.
2.    கண்ணால் காணக்கூடிய ஒளியின் அலைவரிசை அளவு. ஒட்டுமொத்த ரேடியோ அலைவரிசையின் அகலத்தை விட ஒளியின் அலைவரிசை ஐம்பது சதவிகிதம் அதிகமானது. வைஃபை என்பது ஒத்தையடிப்பாதை எனில் லைஃபை நூறடி ரோட்டிற்குச் சமம்.
3.    வேகம். வைஃபை தருகிற வேகத்தை விட லைஃபை எக்கச்சக்க மடங்கு வேகமானது. சோதனை முயற்சிகளில் லைஃபை 224 gigabits per second வேகத்தைச் சாத்தியப்படுத்துகிறது‌. அந்த வேகம் நொடிக்கு 27 ஜிபி என்ற கணக்கு வரும். புரியும் கணக்கில் சுமார் பதினெட்டு ஹெச்.டி படங்களை ஒரு நொடியில் பதிவிறக்கலாம். ஆனால் இதற்கு நம் இணைய சேவை வழங்கும் நிறுவனம் அவ்வளவு வேகமாக இருக்கவேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
4.    லைஃபையை எந்தக் கவலையும் இன்றி மருத்துவமனைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஒளி அங்கெல்லாம் எந்தவிதக் குறுக்கீடும் செய்யாது.
5.    நீருக்கடியில் ஆராய்ச்சிக்காக இறங்கும் கருவிகளும், நீர்மூழ்கிகளும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தமுடியாது. காரணம், அவற்றை நீர் உறிஞ்சி விடும். ஒலியைப் பயன்படுத்தினால் அவை நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கிலம், டால்பின் போன்றவற்றைப் பாதிக்கின்றன. ஆனால் ஒளிமூலம் தொடர்பு கொள்ளலாம். பிரச்சினையில்லை
இம்மாதிரியான நன்மைகள்தான் லைஃபையை எப்போ வரும் என்று தொழில்நுட்ப ஆர்வலர்களை காத்திருக்க வைக்கிறது. 2011 TED சொற்பொழிவுக்குப் பின்னர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் Purelifi என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி இதைச் சந்தைப்படுத்த நிதி திரட்டியிருக்கிறார்‌. அவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பும் நிதியும் கிடைத்தன. ஜப்பானிய சீன நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் தயாராகியிருக்கின்றன. சோதனை முயற்சியாக சில அலுவலகங்களில் உள்ள கருவிகளை லைஃபை மூலம் இணைத்திருக்கிறார்கள்‌‌. எல்லாமே போலாம் ரைட் என்று விசில் கொடுத்திருக்கின்றன.
2016ல் மற்றொடு TED சொற்பொழிவில் சூரிய சக்தித் தகடுகள்‌ மீது தகவல் பொதிந்த ஒளியை விழச்செய்வது மூலம் தகவல் தொடர்பைச் செய்து காண்பித்திருக்கிறார். இதன் மூலம் கம்பி‌வழி‌ இணையம் சாத்தியப்படாத இடங்களில் இந்தத் தகடுகள் மீது தகவல் பொதிந்த லேசர் ஒளியை விழச்செய்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியும் என்று நிறுவியிருக்கிறார். Harold Haas TED talks என்று இணையத்தில் தேடிப் பாருங்கள்.
லைஃபை எங்கெல்லாம் பயன்படலாம்?
    வீடுகளுக்குள் இருக்கும் கருவிகளை internet of things மூலம் ஒருங்கிணைக்க உதவும்
    தெருவிளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றினால் அதன் மூலம் அந்தத் தெருவைப் பற்றிய தகவல்களைப் பயனருக்கு அளிக்க முடியும்.
    ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் ஒன்றோடொ‌ன்று தொடர்பு கொள்ள இது அதிவேக முறையாக இருக்கும்‌. பத்தடியில் ஒரு பாதாள சாக்கடைப் பள்ளம் எனப் பின்னால் வரும் வண்டியைச் சட்டெனெ எச்சரிக்கலாம்.
    கடல்‌ ஆராய்ச்சியில் தொடர்புக்கு இது ஒரு வரப்பிரசாதம்
    பல்பொருள் அங்காடிகளில் அந்தந்தப்பகுதி விளக்குகளை லைஃபை ஆக்குவதன் மூலம் பொருட்களைப் பற்றிய தகவல்கள், விளம்பரங்கள், கடையில் இருக்கிறதா இல்லையா போன்ற தகவல்களை உடனுக்குடன் வாங்குபவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்
    நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் கேபிள் பதித்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியாத இடங்களில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளால் இணையத்தைக் கொண்டு சேர்க்க முடியும். இதன்மூலம் டிஜிட்டல் டிவைட் என்னும், இணையம் கிடைக்கும் மற்றும் கிடைக்காத மக்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும்
அலாவுதீன் கதைகளில் வரும் அற்புத விளக்கை நாம் எல்லாருமே கதைகளில் கேட்டிருப்போம். அவனுக்குக் கைகட்டி சேவை செய்து வேண்டியதையெல்லாம் பெற்றுத்தரும் பூதம், அந்த விளக்குக்குள் இருப்பதைப்போல், நம் வேலைகளில் முக்கால்வாசியைச் செய்யும் இணையம் எதிர்காலத்தில் இப்படி விளக்குகள் வழியாகத்தான் வெளிவரப்போகிறது. அந்த அற்புத விளக்கிற்குக் காத்திருப்போம்.


Posted on Leave a comment

தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? – பீட்டர் ஸிங்கர் – தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்

பீட்டர் ஸிங்கர் (Peter Singer) மெல்போர்னில் பிறந்தார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்ற இவர், சமகாலத் தத்துவவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்போது ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரி அறம் (bioethics) சார்ந்த துறையின் பேராசிரியராகவும், மெல்போர்ன் பல்கலையில் தத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். ‘அறம்’ என்பதுதான் இவரது முக்கிய ஆய்வுக் கருதுகோள். தத்துவம் மற்றும் அறம் சார்ந்த விவாதங்களை தமது குறும் பத்திகள் வாயிலாகத் தினசரி வாசகர்களிடம் சேர்த்தது இவரது தனிச்சிறப்பு. Ethics in the Real World என்னும் புத்தகம் இத்தகைய 86 கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் ஒரு சில கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுபவை.
இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை வாஷிங்டன் போஸ்ட் இதழில் 2012ம் வருடம் வெளிவந்தது. இக்கட்டுரையை Frances Kissing என்னும் அறிஞர் மற்றும் செயல்பாட்டாளருடன் இணைந்து எழுதியுள்ளார்.
இன்று சுற்றுச்சூழல் செயல்பாடு என்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. பல நேரங்களில் இத்தேசத்திற்கு எதிராகச் செயல்படும் நபர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் என்னும் பெயரில் சுற்றி வருகின்றனர். (இவர்களில் ஒரு சில நபர்களை A Dictionary of Fashionable Nonsense செல்லமாக ‘தர்பூசணி’ என்றழைக்கிறது; வெளியே பச்சை, உள்ளே சிவப்பு!) இத்தகைய சூழ்நிலையில்தான் பீட்டர் ஸிங்கர் நமக்கு வழி காட்டுகிறார். பன்னாட்டு நிதி உதவியுடன் செய்யப்படும் பெரும் போராட்டங்கள்தான் சுற்றுச்சூழலைக் காக்கும் என்றில்லை. தனி நபர்களின் உணவுத் தேர்வுகளும் சுற்றுச்சூழலைக் காக்க உதவும் என்பதை ஸிங்கர் தெளிவுபடுத்துகிறார். மேலும் ஸிங்கரின் கட்டுரை நமக்குப் போலிகளை இனம் காணவும் உதவுகிறது.

 ரியோ டே ஜெனிரோவில் நடக்கும் ‘நீடித்திருக்கும் வளர்ச்சி’ (sustainable development) தொடர்பான கூடுகையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு இதே நகரில் இவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். அன்று, இங்கு முதல் ‘புவி மாநாடு’ (Earth Summit) நடந்தது. அன்றிலிருந்து இன்று வரை இக்கூடுகைகளின் குறிக்கோள்  பைங்குடில் வாயுக்களின் (பசுமைவீடு வாயுக்கள் Greenhouse gases) வெளியேற்றத்தைக் குறைப்பதன் வாயிலாக, மிகக் கடுமையான வறுமையில் வாழும் 1.3 பில்லியன் ஏழைகளுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த ஆய்வுதான். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில், ‘வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையை, வாழ்வுரிமையை அபாயத்திற்குள்ளாக்காமல் நாம் அறத்தோடு வாழ்வது எப்படி?’ என்பது இத்தகைய கூடுகைகளின் குவிமையப் பொருள். இதுதான் அவர்களது செயல்திட்டத்திலும் இருக்கிறது.

ஆனால் எங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அவர்களது உணவுப் பட்டியலில் என்ன இருக்கிறது என்பதுதான். குறிப்பாக, புவி வெப்பமாகுவதற்கும் பருவ நிலை மாற்றத்திற்கும் முக்கியக் காரணியான மாமிச உணவு இக்கூட்டத்தில் பரிமாறப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். நாங்கள் அதனைக் கண்டுபிடிக்க முயன்றோம்.
எங்கள் மின்னஞ்சலுக்கு முதலில் கிடைத்தது, அலட்சியமும் பெருமிதமும் கலந்த ஒரு பதில். எங்கள் கேள்வியை அலட்சியம் செய்தனர். பெருமிதத்தோடு இந்த நிகழ்வு ‘முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் நடத்தும் முயற்சி’ என பதிலுரைத்தனர். ஐ.நா. மக்கள் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: “பிரேஸில் அரசும், ஐ.நா. செயலகமும், இந்நிகழ்வை முழுப் பசுமை நிகழ்வாக நடத்துவதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. மாநாட்டில் அச்சடிக்கப்பட்ட தாள்கள் / புத்தகங்கள் ஆகியவற்றின் பயன்பாடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. யாராவது சிறப்புக் கோரிக்கை வைத்தால்தான் அவ்விடத்தில் வைத்து தேவை அடிப்படையில் அச்சிடுவது (Print on Demand) முறையில் அச்சிட்டுக் கொடுப்போம். அனைத்து ஆவணங்களும் மின்னாவணங்கள்தான். மேலும் பிளாஸ்டிக் பிரச்சினைகளையும் சரி செய்ய பிரேஸில் அரசு முயன்று வருகிறது.”
இன்னும் அழுத்திக்கேட்டபோது, ஐ.நா. மக்கள் தொடர்பு அதிகாரி, ‘ஆர்கானிக் உணவுகளைப் பரிமாறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றும் கூறினார்.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் ஆடுமாடுகள் / கால்நடைகள், பட்டியில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் அதே இன மிருகங்களைவிட அதிக அளவு மீத்தேனை (ஒரு பவுண்ட் இறைச்சிக்கு) வெளியேற்றுகின்றன.
1972ம் வருடத்திலிருந்து ஐ.நா. சபை, சுற்றுச்சூழல் கருத்தரங்குகளை நடத்துகிறது. ஆரம்ப காலங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலின் மேல் இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை விவாதப் பொருட்களாக இருந்தன. 1990களில் இக்கருத்தரங்குகளின் குவிமையம் புவி வெப்பமயமாதலாக மாறியது. முதல் ரியோ சந்திப்பில் (1982ல்) ஐக்கிய அமெரிக்கா உட்பட 189 நாடுகளும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும், அபாயகரமான பருவ நிலை மாற்றத்தையும் சரி செய்வதற்கான / குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறின.
ஆனால் இம்முயற்சியில் இவர்கள் பரிதாபகரமான தோல்வியை அடைந்துள்ளனர். இப்போது பைங்குடில் வாயுக்களின் அளவு ஏற்கெனவே அபாயகரமான அளவைத் தாண்டிவிட்டதாகப் பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்துப்படி நாம் இன்னும் இருபது வருடங்களுக்குள், திரும்பி வர இயலாத அளவிற்குப் பேரழிவின் சூழலுக்குள் சிக்கிக்கொண்டு விடுவோம். அதன்பிறகு என்ன செய்தாலும் பருவ மாற்றத்தினால் வரும் பேரழிவுகளில் இருந்து தப்பிக்க முடியாது.
ரியோ+20 சந்திப்பில் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. இந்நிலையில் மாநாட்டிற்கான உணவுப் பட்டியலில் இருந்து மாமிச உணவு வகைகளை நீக்குவதுதான் மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். மாமிச உணவு வகைகளை நீக்குவதோடு மட்டும் அல்லாமல் அந்நீக்கத்தைப் பெரிய அளவில் பிரகடனப்படுத்தவும் வேண்டும்.
மாநாட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும், மாமிச உணவு எவ்வாறு பருவநிலை / கால மாற்றத்திற்கு முக்கியமான காரணி என்பது தெரியவேண்டும். மாமிச உணவினால் ஏற்படும் மாசு ஒப்பீட்டளவில் வெகு விரைவில் தீர்க்கத்தக்க பிரச்சினை. மாமிச உணவை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதன் வாயிலாக, நாம் பருவ மாற்றத்திற்கு எதிராகப் போராடலாம். அடுத்த இருபது வருடங்களுக்குள் செய்யத்தக்க, செயல்பட வாய்ப்புள்ள மிகச் சிறந்த நடவடிக்கை இதுதான்.
2006ல் வெளியான ‘கால்நடைகளின் நீண்ட நிழல்’ என்னும் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிக்கை, இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பது என்பது கடும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை (உள்ளுரில் இருந்து உலகளவில்) உருவாக்குவதில் முதல் இரண்டு அல்லது மூன்று காரணிகளுக்குள் ஒன்றாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது. அதனை அடிப்படையாகக்கொண்டு பருவ நிலை ஆய்வாளர்களான ராபர்ட் குட்லாண்ட் மற்றும் ஜெஃப் அன்ஹாங் ஆராய்ச்சிகளைச் செய்தனர். அவர்கள் ஆராய்ச்சி, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளிப்படுத்தியது. கால்நடைகளும் மீத்தேன் செறிவுள்ள அவற்றின் உபபொருட்களும்தான் 51% வாயு வெளியேற்றத்திற்குக் காரணம் என்பதுதான் அது. குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்திற்கு இறைச்சிதான் காரணம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஐ.நா. சபையும், ரியோ மாநாட்டில் பங்கேற்கும் செயல்பாட்டாளர்களும், பன்னாட்டுப் பிரதிநிதிகளும் சேர்ந்து மாநாட்டின் அனைத்து விருந்துகளில் இருந்தும், பஃபேக்களில் இருந்தும், காலை, மதிய, மாலை உணவுகளில் இருந்தும் இறைச்சியை முற்றிலும் நீக்கினால், ஐ.நா. சபை உலகைக் காக்கும் விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறது என மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பசுமை மாநாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வில், இறைச்சி நீக்கம் என்பது ஒரு இரண்டாம்  தரமான யோசனையாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு விதப் பேசக்கூடாப் பொருளாகக் கருதப்படுகிறது.
எங்கும் எதிலும் சுற்று சூழல் ஆர்வலர்களின், புவி வெப்ப மயமாவதில் உள்ள அபாயங்களைக் குறித்த பரப்புரைகளை நாம் காணலாம்/கேட்கலாம். ஆனால் இவர்களின் பரப்புரை நட்சத்திரங்கள் யாரும் இறைச்சியைத் தவிர்ப்பது குறித்துப் பேசுவதே இல்லை. சமீபத்தைய கூடுகை ஒன்றில் பெரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியதின் அவசியத்தைப் பற்றிச் சன்னதத்துடன் பேசினார். உணவு இடைவேளையின் போது ossobucco என்னும் இறைச்சி உணவைப் பலமுறை கேட்டு வாங்கி உண்டார். இத்தகைய அதீத இறைச்சி உணவினால் வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறித்துக் கேட்டபோது, வெட்கமின்றி, தன்னால் ஒருபோதும் இறைச்சி உணவைக் கைவிட முடியாது எனக் கூறினார்.
இது பிரச்சினையின் ஒரு பகுதி, வளர்ந்த நாடுகளில் இறைச்சி உண்ணுதல் என்பதை மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தின் ஒரு பகுதியாக, குறியீடாகக் கருதுவதில் உள்ளது. இத்தகைய உணவு முறையைக் கைக்கொள்ளுதலைத்தான், அது வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை வீரியமிழக்கச் செய்தாலும், வளரும் நாடுகளும் தமது லட்சியமாகக் கருதுகின்றன.
அந்த அளவிற்கான தேவையை நிறைவு செய்ய வேண்டும் எனில், இப்போது இருப்பதைவிட (60 பில்லியன்) இரு மடங்கு (120 பில்லியன்) அளவிற்குக் கால்நடை எண்ணிக்கையை 2050ல் உயர்த்த வேண்டியிருக்கும் என FAO (Food and Agriculture Organization of the United Nations) கருதுகிறது. இத்தகைய ஒரு நிலை, புவி வெப்பமயமாதலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தானிய உற்பத்தியின் மீதும் கடும் அழுத்தத்தை உருவாக்கும். இந்த அளவிற்கு, கால்நடைகளுக்கு உணவளிக்கும் அளவிற்கு, அவற்றின் உற்பத்தியையும் பெருக்க வேண்டும் அல்லவா?
அறிஞரும், ‘உலகிற்கு உணவூட்டல்’ என்னும் புத்தகத்தின் ஆசிரியருமான வால்காவ் ஸ்மில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“வளர்ந்த நாடுகளில் இப்போது உள்ளவர்கள் உண்ணுவதைப் போல உலகில் உள்ள அனைவரும் உணவு அருந்துவது என்பது மிகக் கடினம். அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால், உலகில் இருப்பதை விட 67% அதிகமான அளவு விளை நிலம் தேவைப்படும். தொடர்ந்து பைங்குடில் வாயுக்கள் வெளியேறுவதால், வரும் சில தசாப்தங்களில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை பருவ நிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசு குழு கூறியுள்ளது. அவை:
1. லத்தின் அமெரிக்காவில் 70 மில்லியன் மக்கள் குடி நீர் இல்லாமல் துன்பப்படுவார்கள். பல விவசாயிகள், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால், பாரம்பரியப் பயிர்களைக் கைவிடுவர்.
2. ஆப்பிரிக்காவில் 250 மில்லியன் மக்கள் நீர்த் தட்டுப்பாட்டால் துயருறுவர். அங்கு கோதுமை பயிரிடும் விவசாயம் முற்றிலுமாக அழிந்து போகும்.
3. ஆசியாவில் 100 மில்லியன் மக்கள் கடல் நீர் மட்ட உயர்வால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறைவான மழையால் வங்கதேசத்திலும் சீனாவிலும் நெல் விளைச்சல் பாதிக்கப்படும்.
4. இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 23 இஞ்ச்கள் உயரும் எனக் கருதப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் தீவுகளும், நாடுகளும் அப்படியே மூழ்கும், மறையும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே மாலத்தீவுகள் புதிய நாடு ஒன்றை விலைக்கு வாங்குவதற்காகப் பணத்தை சேமித்து வருகிறது.”
இறைச்சி உற்பத்தியையும், உண்ணுதலையும் குறைத்தல் பைங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என்பதற்கும், ஆகவே மேலே கண்ட பெருந்துயர்களைத் தடுக்க வாய்ப்புண்டு என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஆனால் பல கட்ட, பல வாரப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் ரியோ மாநாட்டின் வரைவு அறிக்கையில் இறைச்சி குறித்த எந்தத் தீர்மானமும் இல்லை. அதற்குப் பதிலாக புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதையும், பயன்படுத்துவதையும் குறைப்பதற்கான அவசியத்தைப் பற்றி அறிக்கை பேசுகிறது. முக்கியக் குற்றவாளியைப் பற்றி ஏதும் பேசவில்லை.
சுற்றுச்சூழல் நட்சத்திரங்களுக்கு / தலைவர்களுக்கு இந்த மாநாட்டில் பல சவால்கள் உள்ளன. அவர்கள் தங்கள் தட்டில் இருந்து இறைச்சியை எடுக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது.


Posted on Leave a comment

என்ன நடக்குது சபரிமலையிலே…? – ஆனந்தன் அமிர்தன்

ஐயப்ப வழிபாட்டில் சரண கோஷத்தைத் தவிர்த்து மலையாளத்து மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வேறு பெரிய ஒற்றுமை இல்லை. தமிழர்கள் கார்த்திகை ஒன்றில் மாலை போட்டு ஒரு மண்டலம் முறையாக விரதமிருந்து இருமுடி கட்டிக் கிளம்பும் போது, ரத்த பந்தங்களிடம்கூட ‘போய் வருகிறேன்’ என்று சொல்லாமல் கிளம்பும் அளவுக்கு பக்தியிலும் சாஸ்த்திரத்திலும் மூழ்கிப் போனவர்கள். மலையாள மக்களில் பலர், நாம் திருப்பதி போவது போலச் சட்டென முடிவெடுத்துக் கிளம்பி வந்து பம்பையிலேயே ரெடிமேட் இருமுடி வாங்கி சந்நிதானம் அடைந்து சாமியைக் கும்பிட்டுட்டு நெய் அபிஷேகம் வரை கூடக் காத்திராமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவர்.
இந்த வேறுபாட்டினைச் சொல்லவேண்டிய அவசியம் என்னவெனில், இன்றைக்கும் ஐயப்பன் ஆலயம் உயிர்ப்புடன் இருக்க மிக மிக முக்கியமான காரணம், தமிழ், கர்நாடக, தெலுங்கு பக்தர்கள்தான். இந்த வெளிமாநில பக்தர்களால், கோவில் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசாங்கத்திற்கு வரும் வருமானம் மிகவும் கணிசமானது. இந்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருவதைக் கவனித்த அரசாங்கம், இதை முழுக்க முழுக்க சுற்றுலாத்துறை வருமானமாக மாற்றியமைக்க ஆரம்பித்தது. ஒரு இடதுசாரி அரசு இதைச் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ள முடிகிறது. தேவசம் போர்டு?
தேவசம் போர்டின் அழிச்சாட்டியங்களைப் பார்ப்பதற்குமுன் ஐயப்பன் கோவில் நிர்வாக மட்டங்களைக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் முறைகேடுகளை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அதிகார மையங்கள் இரண்டு. ஒன்று தேவசம் போர்டு. இவர்கள்தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையம். மற்றொன்று அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் எனப்படும் அபாஸ் (ABASS – Akhila Bharatha Ayyappa Seva Sangam). இந்த அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். முழுக்க முழுக்க சேவையே பிரதானம்.
பம்பை, சந்நிதானம் என்று மட்டுமில்லாமல் ஐயப்பனுக்கு மாலை போட்ட மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் ஏதோவொரு வகையில் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல வழிகளில் தன் சேவைக்கரங்களை நீட்டிக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு. பம்பையிலோ, சந்நிதானத்திலோ யாரோ ஒருவர் தடுக்கி கீழே விழுந்தால் கூட முதலில் கேட்கும் வார்த்தை அபாஸ். சமதளத்தில் கூட அத்தனை துரிதமாக சேவை செய்வது கடினம் ஆனால், நீலிமலை, அப்பாச்சி மேடு பகுதிகளிலும் அத்தனை லாகவமாக, துரிதமாகச் செயல்படும் தன்னார்வத் தொண்டர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளி, ஐயப்பன் தேவசம் போர்டு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்மூடித்தனமாக சேவை செய்யும் அடிமைகள்தான் இந்த அபாஸ்.
இந்த அபாஸ் அமைப்பிற்கு அன்னதானத்திற்காக வரும் நன்கொடை, தேவசம் போர்டுக்கு வரும் நன்கொடையை விட அதிகம். இது தேவசம் போர்ட்டின் கண்ணை உறுத்துகிறது. அபாஸ் அமைப்பிலும் சில ஊழல் நிர்வாகிகள் இருந்திருக்கின்றனர் போலும். அபாஸ் அமைப்பிலும் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. வாய்ப்பினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தேவசம் போர்டு, “இனி பம்பையிலோ, சந்நிதானத்திலோ அபாஸ் அன்னதானம் செய்யக்கூடாது” என்று கோர்ட்டில் தடையுத்தரவை வாங்கிவிட்டது.
தவறு செய்த நிர்வாகிகளைக் களைய உதவியிருந்தாலோ அல்லது தவறு மேலும் நடக்காமல் தடுக்க உதவியிருந்தாலோ அதைப் பாராட்டலாம். மருத்துவ உதவி, சுத்தம் செய்தல், கூட்டத்தை நிர்வகித்தல் போன்ற மற்ற சேவைகள் செய்ய அபாஸ் அமைப்பிற்குத் தடை இல்லை. சம்பந்தமே இல்லாமல் எதற்காக அன்னதானத்தை மட்டும் தடை செய்ய வேண்டும்? அபாஸ் நிர்வாகம் மட்டுமே பம்பையில் நான்கு இடங்களிலும், சந்நிதானத்தில் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தது. இது தவிர கர்நாடக, ஆந்திர சங்கங்கள் சார்பாகவும் வேறு சில அமைப்புகள் சார்பாகவும் அன்னதானங்கள் நடைபெற்று வந்தன. இந்த அன்னதான மையம் எல்லாவற்றிற்கும் இப்பொழுது முற்றிலும் தடை. ஏன்?
15 அடிக்கு 6 அடி அளவுள்ள ஒரு கடைக்கு ஒரு மாத வாடகை நான்கு லட்சம். நாற்பது லட்சம் டெபாஸிட். (இது நீலிமலையின் ஓரத்தில் இருக்கும் டீ காஃபி, ஜூஸ், பழக்கீற்றுக்கள் விற்கும் ஒரு கடைக்கான வாடகை.) அப்படியானால் சந்நிதானத்திலோ பம்பையிலோ இருக்கும், வியாபாரம் கொழிக்கும் கடைக்கு என்ன வாடகை இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஆயிரக்கணக்கான கடைக்காரர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் வாடகையைக் கூட்ட வேண்டுமானால், அவர்களுக்கும் வருமானம் கூடியாக வேண்டும். இப்படி ஆளாளுக்கு அன்னதானம் போட்டால், வியாபாரம் செய்யும் கடைகளுக்கு பக்தர்கள் செல்ல மாட்டார்கள் இல்லையா? அதனால்தான் அன்னதானங்களுக்குத் தடை. எவ்வளவு கீழ்த்தரமான வியாபார உத்தி பாருங்கள்.
அபாஸ் செய்த அன்னதானங்களுக்குத் தடை போட்டதற்குக் காரணம் அவர்கள் அன்னதானத்திற்கு வசூலித்த பணத்தில் ஊழல் செய்து விட்டார்களாம். அப்படியென்றால், அவர்களைக் கரிமலை உச்சியில் மட்டும் அன்னதானம் செய்ய அனுமதித்ததன் நோக்கம் என்ன? அந்த இடத்தில் தேவசம் போர்டின் வருமானத்திற்கு அந்த அன்னதானம் இடைஞ்சலாக இல்லை, அதுதான் விஷயம். நாங்களும் அன்னதானம் போடுகிறோம் என்று தேவசம் போர்டு சப்பைக்கட்டு கட்டலாம். பம்பையில் ஓர் இடத்திலும் சந்நிதானத்தில் ஓர் இடத்திலும் மட்டும் அன்னதானம் போடுகிறது தேவசம் போர்டு. ஒரே ஒரு முறை போய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். அது புளியோதரையா நேற்றைய பொங்கலா என்று நீங்கள் சந்தேகப்படும்போது, இன்றைக்குச் செய்த உப்புமா என்று பதில் வரும். உப்புமாவிற்குச் சுண்டல் குழம்பு. அதுவும் ஒரு கரண்டிக்கு மேல் வைக்க மாட்டார்கள். அடுத்த கரண்டி வாங்க நீங்கள் மீண்டும் எச்சில் தட்டைத் தூக்கிக்கொண்டு அந்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.
எத்தனை வசதி குறைந்தவர்களாக இருப்பினும் மாலை போட்டிருந்த காலத்தில் யாராவது நான்கு பேரை அழைத்து உணவு பரிமாறி ஐயப்பன் சாப்பிட்டதாக மகிழ்ந்து போகும் தமிழக பக்தன் அங்கே பிச்சைக்காரனாக நடத்தப்படுகிறான். ஆனால், இதே தமிழன், சென்ற ஆண்டு வரை அபாஸ் கொடுத்த அன்னதானத்தை வாங்கிவந்து, அப்படியே குப்பையில் போட்டுவிட்டுப் போனதற்காக இப்பொழுது அனுபவிக்கிறான் என்பது தனிக்கதை.
இடைச்செருகல் 1: ஐயப்பன் கோவிலில் தலைமை குருக்கள்/பூசாரிக்குப் பெயர் ‘மேல்சாந்தி.’ வருடத்திற்கொரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவரை நியமிப்பார்கள். அந்த ஒரு வருட காலத்திற்கு, கீழே என்ன நடந்தாலும் அவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்நிதானத்தில் இருந்து இறங்க மாட்டார். ஒருமுறை ஒருவர் மேல்சாந்தி பதவியை அனுபவித்துவிட்டால் போதும், அவர் பல கோடிகளுக்கு அதிபதி. 90% பக்தர்கள் ஐயப்பன் இருக்குமிடத்தில் பணத்தை வீசி காணிக்கை செலுத்துவார்கள். அப்படி விழும் அத்தனை பணமும் அந்த மேல்சாந்திக்கு மட்டுமே. வேறு எந்தக் கோவிலிலாவது இப்படித் தனிநபருக்கென்று உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
இடைச்செருகல் 2: இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள இடங்களில் (சபரிமலை இருக்கும் மாவட்டம்) நீங்கள் சிறியது பெரியது என்றில்லாமல் எந்த உணவகத்துக்குள் நுழைந்தாலும் ஒரே விலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு உணவு கிடைக்கும். குடிக்கத் தண்ணீர் கேட்டால் எந்த இடத்திலும் வெறும் பச்சைத் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். மூலிகை கலந்த வெந்நீர் மட்டுமே கொடுப்பார்கள். இந்த வெந்நீர்க் கட்டுப்பாட்டை பெருவழிப் பயணமான காட்டிற்குள்ளும் கடைப்பிடிப்பது மிகவும் பாராட்டிற்குரியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் புலியோ இல்லையோ நமக்குத் தெரியாது, ஆனால், அதைப் புலியாக நினைத்துக்கொண்டு ஐயப்பன் தேவசம் போர்டு சூடு போட்டுக் கொண்டிருக்கின்றது. அங்கே லட்டுக்காக வரிசையில் நிற்பது போல இங்கே அரவணை/அப்பத்திற்கு வரிசையில் நிற்க வைத்து டிமாண்ட் காட்டுகிறார்கள். ஐயப்பன் ஆலயப் பிரசாதம் என்பதைத் தவிர அதற்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோங்க என்று கொடுத்தால் கூட, மழுப்பலாகத் தவிர்த்துவிட்டுப் போகும் அளவில்தான் அதன் ருசியிருக்கும். அதன் விலையையும் தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். வருமானம் கூடினால் பக்தர்களுக்கு வசதி செய்து தரமுடியும் என்றொரு சல்ஜாப்பு கூடச் சொல்லப்படலாம். இதைப் பற்றி யோசித்து, இங்கு நடப்பதைக் கூர்ந்து கவனித்தபோதுதான், எத்தனை மோசமாக அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று புரியவந்தது.
மகரஜோதி காலத்தில், பம்பையிலிருந்து சந்நிதானம் போகும் 6 கிமீ தூரமும் இருமுடி ஏந்திய பக்தர்கள் கிட்டத்தட்ட 12-15 மணி நேரம் காத்திருப்பார்களாம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு அடி நகருமாம். பக்தியிலிருப்பவர்கள் பொறுமையாக நிற்கிறார்கள் என்பதோடு பசியால் வாடுவதையும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மலஜலம் கழிக்காமல் எப்படிக் காத்திருப்பது? அடக்கக்கூடிய விசயமா அது? ஆகையால் தலையில் இருமுடியை வைத்துக்கொண்டே நிற்கும் இடத்திலிருந்தே சிறுநீர் கழிப்பது சகஜமாகி விட்டதாம். அதாவது ஒரு மண்டலம் அதீத சுத்தமாக விரதம் இருந்து ஐயப்பனைத் தரிசிக்கப் போகும் சில மணிகளுக்கு முன்பு மூத்திரத்தில் மூழ்கி எழுந்து போய் உங்கள் வேண்டுதல்களையோ நன்றி நவில்தலையோ ஐயப்பன் முன் வைக்கவேண்டிய நிலை. நடைபாதை முழுவதும் கடைகளைக் கட்டி விட்டதால் அங்கு கழிவறை கட்ட இடவசதி இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், சந்நிதானத்தில் கூடப் போதுமான கழிவறை வசதி இல்லை. அந்தப் பிரதேசத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தேவசம் போர்டு கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
ஸ்வாமி தரிசனத்திற்காக நீங்கள் வரிசையில் நிற்கும்போதே கூட ஸ்ட்ரெக்சரில் சிலரைத் தூக்கிக் கொண்டு போவதைக் காணலாம். அவர் மயக்கமாக இருக்கிறாரா மடிந்து கிடக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், குறைந்து ஒரு நாளைக்கு நாலைந்து சரணங்கள் (மரணங்கள்) நிகழ்வது சகஜம் என்கிறார்கள். காரணம் நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல்கள்தான். யார் வீட்டில் என்ன இழவு விழுந்தாலும் சரி, எங்களுக்கு வருமானம் தொடர்ந்து வந்தால் போதும் என்ற மனப்போக்கில் கோவில் நிர்வாகம் வெளிப்படையாகவே நடந்து கொள்கின்றது. தேவசம் போர்டினைத் தட்டிக் கேட்க வேண்டிய அவசியம் அம்மாநில அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சீசனில் வரும் வருமானத்திற்காக தேவசம் போர்டினைக் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அரசு. சில வருடங்களுக்கு முன்பு புல்மேடு பகுதியில் நிகழ்ந்ததைப் போன்றதொரு பெரிய விபத்தினைச் சந்திக்காமல் தேவசம் போர்டின் பேராசைத் தீ அணையாது போலிருக்கிறது.
‘ஐயப்பா, உன்னை நம்பி வரும் பக்தர்களைப் பத்திரமாகத் திருப்பியனுப்பு’ என்று வேண்டுவதைத் தவிர நாம் செய்வதற்கு வேறொன்றும் இல்லை. நம்மால், நம் ஊர்க் கோவில்களின் சீர்கேட்டினையே தட்டிக் கேட்க நமக்குத் துப்பில்லை. இதில் அடுத்த மாநில கோயில் நிர்வாகத்தை என்ன செய்துவிட முடியும்?


Posted on Leave a comment

இராமானுசன் என்னும் சமதர்மன் – ஆமருவி தேவநாதன்

பாரத தேசம் யோக பூமி. கல்விக்கும் ஞானத் தேடல்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த நாடு. பாரதி – ‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் / பிரானருள் பொங்கிய நாடு’ என்கிறார். பாரத ஞான மரபு பற்றிய எதிர்மறை நோக்குகளை மார்க்சியர்கள் முன்வைத்தனர். கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இரு கிளைகளாகப் பார்த்தனர். ஆங்கில, ஐரோப்பிய ஆய்வாளர்களும் இதே நோக்கில் பாரதத்தின் ஞான மரபை அணுகினர். பாரத ஞான மரபு வைதீக, அவைதீகப் பார்வைகளைக் கொண்டது. நாம் இந்தக் கண்ணோட்டத்தில் நமது சம்பிரதாயத்தைப் பார்ப்பது சரியான வழியாக இருக்கும்.
அவைதீக மரபு பவுத்தம், ஜைனம், சார்வாகம்.
வைதீக மரபு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலானவை.
பவுத்தம், ஜைனம், சார்வாகம், லோகாயதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று பல தத்துவங்கள்
 பாரத ஞான மரபில் இவற்றின் இருப்பிடங்கள் தனித்தனி ஞான பீடங்கள்
இத்தனை பன்முகப்பட்ட மனிதக் கூட்டத்தின் பரந்த ஞானத் தேடல்களுக்கான முயற்சியில் இவற்றின் தேவை இருப்பதை உணர முடிகிறது..
பாரத ஞான மரபின் அடிப்படைக் கொள்கை : ஒன்றை ஒன்று அழிக்காமல் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது. இரண்டும் வாழ்வது. அத்வைதத்தில் இருந்து விசிஷ்டாத்வைதம் தோன்றியது. ஆனாலும் இரண்டும் வாழ்ந்தன. அனைத்துப் பாதைகளும் கொண்டு சேர்க்கும் இடம் ஒன்றே என்பது நமது பண்பாடு. ‘ஆகாசாது பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்…என்பதே நமது பண்பாட்டுப் பார்வை.
இந்தப் பிரபஞ்சம் விஷ்ணுவின் உடல் என்னும் கருத்துடன் செயல்பட்ட நமது பண்பாட்டில் அழிவு, அழிப்பது என்பன பொருந்தாதவை. தெரியாத, அறிந்துகொள்ள முடியாத, புறக்கண்ணால் தெரிந்துகொள்ள முடியாத பரம்பொருளை, பிரபஞ்ச ஞானத்தை உருவகம் மூலம் உணரும் இறை வடிவுகள். இந்த வடிவுகளையே இறைவன் என்று சொல்லி அவற்றுக்கான ஆராதனைகளை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
உதாரணமாக, ஆற்றங்கரையில் உள்ள கூழாங்கல் மலை மேலிருந்து உருண்ட பாறை, சில ஆயிர ஆண்டுகள் கழித்து இன்று நமது கையில் வட்ட வடிவமான சிறிய கல்லாக இருக்கிறது. ஆக, அக்கூழாங்கல்லின் வடிவம் அதுதானா? நமது அகக் கண்களால் நாம் காணக்கூடியது அது. முப்பரிமாணத்தில், நமது அறிவுக்கு எட்டிய அளவுகோல்களுடன் நாம் கூழாங்கல்லை சிறிய வடிவினதாகக் காண்கிறோம். ஆனால் அக்கல் பல ஆயிரம் ஆண்டுகள் விரிந்த வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கூழாங்கல் அந்த நெடிய வரலாற்றின் உருவகம். ஆனால் அக்கல்லே அதன் முந்தைய வடிவு அல்ல. ஆனாலும் அக்கல் உணர்த்துவது பெரிய உண்மைகளையே. இந்தக் கண்ணோட்டத்துடன் நாம் இராமானுசரைக் காண்கிறோம். இராமானுசர் அந்தக் கூழாங்கல் போன்றவர்.
கடைந்து வடிகட்டிய பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஞானத் தேக்கங்களை ஒன்றிணைத்து, நமது அறிவிற்குப் புலப்படும்படிச் சொன்னவர் அவர்.
விசிஷ்டாத்வைதம்: விசிஷ்டம் + அத்வைதம் விவரிக்கப்பட்ட அத்வைதம். வெறும் அத்வைதம் ஒரு பிரும்மத்தை உணர்த்தியது. மற்ற அனைத்தும் பிம்பம் என்றது. பிரதி பிம்ப வாதம் என்று உரைத்தது. சூரிய ஒளியின் கிரணங்கள் பல கண்ணாடித் துகள்களில் படுவதால் பல சூரியர்கள் இருப்பது போல் தோன்றுவது மாயை. அஞ்ஞானம் அகன்று உண்மைதெரிய, மாயை அகலும். அப்போது ஒரு சூரியன் உணரப்படும்.
ஆனால் விசிஷ்டாத்வைதத்தில், பிரும்மம் தவிர, ஜீவன், ஜடப்பொருள் முதலிய எல்லாமும் உண்மையே. ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் என்னும் முன்னரும் உண்மைகளே. எனவே பானை செய்பவரும், கை வினைஞரும் உண்மையே. சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பும் உண்மையே. அவர்களுக்கும் ஏற்றம் உண்டு. மேலும், அனைவருக்கும், அனைத்துக்கும் மோட்சம் உண்டு.
பிரும்மம் தவிர்த்த ஜீவன்கள், ஜடப் பொருட்கள் முதலியனவற்றுக்கிடையே வேற்றுமைகள் இல்லை. ஏனெனில், அனைவருள்ளும், அனைத்துள்ளும் இருக்கும் ஆத்மா ஒன்றே; உடல் ஸ்திரமற்றது; ஆத்ம அளவில் வேறுபாடு இல்லை. எனவே பிரம்மம் தவிர்த்த அனைத்தும் ஒன்றே என்பதால் அனைத்திற்கும் உய்யும் வழியும், உய்வதற்கான அதிகாரமும் உண்டு என்பது ஸ்ரீமத் இராமானுசரின் விசிஷ்டாத்வைதப் பார்வை.
ஜடப்பொருட்களும் உண்மையே என்பதில் ஒரு சிறப்பு உள்ளது. அதுதான் தற்காலத்தில் சூழியல்குறித்த பார்வை. ‘என் தேவைகளுக்காக இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது’ என்பது நமது சித்தாந்தம் இல்லையாதலாலும், ஜடப்பொருட்களுக்கும் ஆத்மா உள்ளது என்கிற சித்தாந்தப் பார்வையாலும் மரம், செடி, கொடிகளை மனிதனின் தேவைகளுக்காக அழிக்க வழி இல்லை. நவீன சூழியல் (Environmental Conservation) பார்வையும் உள்ளடங்கி இருப்பதை நாம் உணர வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பார்வையாக இராமானுசரது சித்தாந்தம் பரிணமிக்கிறது. ஆனால், இவரது பார்வை புதியது அல்ல. இராமானுசரது பார்வைக்கு முன்னோடிகள் இருந்துள்ளனர். அவர்கள் ஆழ்வார்களாவர். இவற்றுக்குப் பாசுரங்கள் துணை நிற்கின்றன. ஆக ஆழ்வார் ஆச்சாரியார்களின் அனுக்ரஹம் இருப்பதாகவே தெரிகிறது.
பெரியாழ்வாரின் பாசுர வரி ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து…’ என்பது ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்று. இந்த வரியையும் ‘கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடியாட் செய்கின்றோம்’ என்னும் வரியும் சித்தாந்தத்தை அங்கீகரித்த ஆழ்வார்களின் ஆசியுரைகள் என்று கொள்ளலாம்..
ஸமாஸ்ரயனத்தில் / பார நியாசத்தில் தாஸ்ய நாமம் என்பதையும் இணைத்து நோக்க, மனிதர்களுக்கிடையேயான சமன்வயப் பார்வை (Uniformity in treatment) குறித்த நமது சித்தாந்தப் புரிதல் எளிதாகிறது. ஊர்த்துவ புண்ட்ரத்தால் தோற்ற ஒருமை (Uniformity in appearance) புலப்படுகிறது.
தத்துவமும் செயல்பாடும் ஒன்றிணையும் நிலையை நாம் இராமானுசரிடம் காண்கிறோம். கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் இணைந்து அனைவருக்கும் மோட்சம் என்னும் பொது நன்மைக்கான வழி. பெரும் பாண்டித்யம் உள்ள தர்க்க சாஸ்திர விற்பன்னர்களும், பானை செய்பவர்களும் ஒன்றெனக் கொண்ட நிலை. ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் உடன்பாடு உடைய ஒரு சித்தாந்தம் என்று நமது இராமானுச சித்தாந்தம் விரிகிறது.
கர்நாடகப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இராமானுசர் செல்லப்பிள்ளை விக்ரகத்தைக் கொணரும்போது உதவியதும், அதனால் அவர்களை இராமானுசர் வைஷ்ணவர்களாக்கியதும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது. உபநயனம் என்னும் சம்ஸ்காரத்தாலும் ஸமாஸ்ரயணம் என்னும் ஒருமைப்படுத்தல் சடங்காலும் சமூக அளவில் ஆகப்பெரிய ஒற்றுமைப்படுத்தல் நிகழ்வை, நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் நிகழ்த்தியமையால், சொல், செயல், நடத்தை என்னும் மூன்றும் இராமானுசரிடம் ஒன்றாயிருந்ததைக் காட்டுகிறது. (மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒருமுகமாகவும் ஒரு சேரவும் இருப்பது ஆன்றோர் நடத்தை). அப்படி நடந்தவர் உடையவர்.
ஆழ்வார்கள் பல இனங்களில் இருந்தும் வந்த நிலை, இவர்களைக் கோவிலுக்குள் எழுந்தருளப்பண்ண இராமானுசர் செய்த செயல்கள் என்று அனைவரும் உட்செல்லக் கூடிய ஒரு நிலை. இதனைச் செயல்படுத்த அவர் மேற்கொண்ட பாஞ்சராத்ர ஆகம வலியுறுத்தல் முதலியன கவனிக்கத்தக்கவை. கோவிலில் மாற்றம் ஏற்பட ஆகமம் தடையென்றால், புதிய ஆகமத்தை உட்புகுத்துவதால் பெருவாரியான மக்கள் ஆலயங்களுக்குள் சென்று ஒன்றுபட இயலும் என்றால், அதற்காக அதனைச் செய்யவும் இராமானுசர் தயங்கியதில்லை என்பதே அவர் மானுட சமத்துவத்தைச் செயல்படுத்த முனைந்ததை உணர்த்துகிறது. இது நாம் இன்றளவும் நினைத்து மிகவும் பெருமைப்படத் தக்க செயல்.
திருவரங்கக் கோவிலுக்குள் பணிகளைப் பிரித்துக் கொடுத்து பல பண்டாரங்களை ஏற்படுத்தினார் உடையவர். இந்தப் பண்டார அமைப்பு நவீன கார்ப்பரேட் நிறுவங்களின் நிர்வாக அமைப்புக்களுக்கு
ஈடாக உள்ளதைக் காண்கிறோம். வேலையைப் பகிர்ந்துகொளல் (Division of Labour) என்னும் வழிமுறைகள் 1,000 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப் படுத்தப்பட்டது புரட்சியே. எந்தத்துறையும் இழிவல்ல; ஆனால் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நவீன நிறுவனங்கள் செயல்பட முடியும்.  
கோவிலையும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட, சரியான வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் கொண்டுவந்தது எம்பெருமானாரின் முன்னோக்கிய பார்வையை உணர்த்துகிறது.
பல தத்துவங்கள் ஆன்மீகத்தையே முன்னிறுத்தின. இன்னும் பல, சமூகப் பார்வையை முன்னிறுத்தின. ஆனால், இராமானுசர் உரைத்த பாதை சமூகம், ஆன்மீகம் இவற்றுடன் பொருளாதாரத்தையும் இணைத்தது. பல பிரிவினரையும் கோவிலின் அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம், அவர்களின் தொழில் திறமைகள் பயன்பட்டன. பூதொடுத்தல், மடப்பள்ளி கைங்கர்யங்கள், கணக்கு வழக்குகள் சரிபார்த்தல், காவிரியின் கரை உடையாமல் பழுது பார்த்தல் முதலிய பல திறமைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. சமூகத்தின் திறமைகள் அனைத்தும் மக்களின் ஒருங்கிணைந்து ஒற்றுமைக்கும் மேம்பாட்டுக்கும் பயன்பட்டன. சமூகத்தின் வெளிப்புறத்தில் இருத்திவைக்கப்பட்ட கைவினைஞர்கள், பொற்கொல்லர்கள் முதலானோர் சம்பிரதாயத்திற்கான தங்களது பங்களிப்பால் சமூகத்தின் உள்ளே வந்தனர். இதை இராமானுசரது சீரிய திட்டம் எனலாம்.
எந்த ஒரு பெரிய அமைப்பையும் நிறுவுபவர், அதனை சீராக வழிநடத்திச் செல்ல, தானே முன்னின்று செயல்படுவது உலக மரபு. அவர்கள் தங்களுக்குப் பின்னரும் அந்த அமைப்புகள் சரியாக நடைபெற வேண்டி பல வழிகாட்டுதல்களையும், அடுத்த கட்டத் தலைவர்களையும் உருவாக்கி, அதிகாரப் பரவல் ஏற்படும்படிs செய்வர். உடையவரும் அவ்வாறே தனக்குப் பின்னும் விசிஷ்டாத்வத சம்பிரதாயம் தழைக்க, கோவில்கள் சரிவர நடைபெற சிம்மாசனாதிபதிகளை நியமித்து சம்பிரதாயம் தொடர வழிவகுத்தார்.
இன்றைக்குஒருங்கிணைந்த சமூகம்’ (Inclusive Society) என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. இராமானுசர் இதை 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தினார். ‘சாத்திய முதலிகள்’, ‘சாத்தாத முதலிகள்என்னும் ஏற்பாடு அவரது சாதுர்யமான கையாளல் என்று தோன்றுகிறது. அதிகார அடுக்குகளை ஒரே அடியாக வீழ்த்த முடியாது என்பதால் இந்த முறை ஒரு நடுவு நிலை போல் தோற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்த முறையானது செயல்பட்டது. இன்றும் செயல் அளவில் முன்னேறியுள்ளது. சாத்தாத சாதியினரான புருஷோத்தம நாயுடு முதியோரின் உரைகள் நமக்குக் கிடைக்க இந்த அங்கீகாரம் வழிசெய்தது என்பது எத்தனை முற்போக்கான வழி என்று வியக்க வைக்கிறது.
இன்றைக்கும் கொங்கு தேசத்தில் வைணவம் செழித்து, ‘கண்ணன் கூட்டம்’ முதலான வைணவ அமைப்புகள் திருமால் பெருமையையும் வைணவ சம்பிரதாயத்தையும் பேண உதவுகின்றன என்பது உடையவரின் அதிமுற்போக்கான சமூக ஆற்றுப்படுத்தலால்தான் என்பதில் ஐயம் இல்லை.
கொங்கப்பிராட்டி வைபவம் இங்கு நோக்கத்தகக்து.
இந்திய சமயத்தினரை மட்டும் அல்லாது, துருஷ்க சமயத்தினரையும் தன்னகத்தே உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மையை விசிஷ்டாத்வைதத்தில் புகுத்திய இராமானுசர் பெரிய ராஜதந்திரியாகவும் தெரிகிறார். ஆட்சியாளர்கள் துருஷ்கர்களாக இருந்தாலும் பிற்காலத்தில் கோவில் அமைப்புகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது போல். துருஷ்க நாச்சியாரையும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்து, அனைவரையும் ஒருங்கிணைக்கும் சமுதாய அமைப்பை உருவாக்கிய அவரது பார்வை தீட்சண்யம் வியக்க வைக்கிறது. இதுதான் உடையவரது பார்வை என்று கொள்ள இயலாது. ஆனால் அப்படி இருந்திருக்க வாய்ப்புள்ளது.
வைணவம் வெறும் பண்டிதர்களின் கைப்பொருளாக, வழிபாட்டு முறையாக மட்டுமே இருந்திருக்குமேயானால், இன்றளவும் தழைத்து நின்றிருக்குமா என்பது கேள்வியே. விசிஷ்டாத்வைத தத்துவத்தின்படி, எண்ணம், சொல், செயல் என்று அனைத்தும் ஒன்றாக இருக்கும் / இயங்கும் ஒரு சமூக, ஆன்மீக, வழிபாட்டு முறையை உருவாக்கியதன் மூலமும், அம்முறையில் வேறுபாடுகளற்ற சமதர்மச் சூழல் ஏற்படும்படி செய்த உடையவர் திட்டம் உலகில் தோன்றிய வேறெந்த சமூக, பொருளாதார, ஆன்மீகப் புரட்சிகளுக்கும் முற்பட்ட சமதர்மப் புரட்சி எனலாம்.


Posted on Leave a comment

பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் – பி.ஆர்.ஹரன்

“வேளாண்மை பற்றிப் பேசும்போது ‘கால்நடைப் பண்ணை’ என்று நாம் சொல்வதில்லை. ‘பசுப்பாதுகாப்பு’ என்றுதான் சொல்கிறோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகெங்கும் கால்நடைப் பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் நம்மிடம் கால்நடைப் பண்ணைகள் இல்லை; நம்மிடம் பசுப்பாதுகாப்புதான் இருக்கின்றது. பசுக்களைப் பாதுகாப்பது! தர்மத்தின் பாதுகாப்பு என்றால் பசுப்பாதுகாப்பும்தான்! நம் அரசியல் சாஸனம் வழங்கியுள்ள வழிகாட்டும் கோட்பாடுகளில் பசுப்பாதுகாப்பும் ஒன்று. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பசுவதையைத் தடைசெய்து சட்டம் இயற்றலாம். பசு என்பது ‘உபலக்ஷணம்’. உபலக்ஷணம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் பொருந்தும். ஆகவே, விலங்குகள் நமக்குத் துன்பம் தராமல் இருக்கின்றபோது நாமும் அவற்றுக்குத் துன்பம் தராமல் இருக்க வேண்டும்.”

– பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி  

 

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மாடுகளின் தோலை நீக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சில ஹரிஜன மக்களை, பசுப்பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் சில நபர்கள் கட்டிவைத்து அடித்தனர். இந்தச் சம்பவம், போலி மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் முன்னணி ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது. மத்திய அரசைக் கண்டித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தின. இவர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்துக்குச் சற்றே தளர்ந்து கொடுத்த பிரதமர், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “சில இடங்களில் நடந்த ஹரிஜன மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் எனக்கு மிகுந்த வலியையும் மனவேதனையையும் தருகின்றன. பசுப் பாதுகாப்பாளர்கள் என்கிற போர்வையில் சமூகவிரோதிகள் இயங்கி வருகின்றனர். பெரும்பாலானோர் பகலில் பசுப்பாதுகாப்பாளர்களாகவும் இரவில் சமூக விரோதிகளாகவும் இருக்கின்றனர். பசுப்பாதுகாப்பு இயக்கத்தைத் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் போலிகள் அடக்கப்படவேண்டும்1 என்று பேசினார். பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆதரவு தந்தது.
பிரதமரின் இந்தப் பேச்சு போலி மதச்சார்பின்மை பேசுபவர்களின் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், உண்மையான பசுப்பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும், பிராணிகள் நல சேவகர்களுக்கும் இடைஞ்சலாக இருந்தது. உண்மையாகவே பசுப்பாதுகாப்புக்குப் போராடுபவர்கள் ஆங்காங்கே தொல்லைக்கு உள்ளாயினர். இதனால் சங்பரிவார் அமைப்புகளுள் ஒன்றான விசுவ ஹிந்து பரிஷத் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஹரிஜன மக்கள் சிலரின் மீதான தாக்குதல் சம்பவமும், அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் செய்த துவேஷப் பிரசாரமும், பிரதமரின் பேச்சும், அதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவும் வி.ஹெச்.பி எதிர்ப்பும், உண்மையான பசுப்பாதுகாப்பாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளும், பசுவதை பற்றிய விவாதத்தை மீண்டும் தேசியக் களத்தில் முன்வைத்துள்ளன.

பா.ஜ.கவின் பிரதான கொள்கை

தற்போது நாட்டை ஆண்டு வரும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து மிகவும் முக்கியமாக முன்வைத்த கொள்கைகளில் பசுவதைத் தடுப்பு முதன்மையானது. அக்கட்சியினுடைய ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இந்தக் கொள்கைப் முதன்மையாகப் பிரகடனப்படுத்தப்படும். ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் 1998 முதல் 2004 வரை நடத்திய கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை.
கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும், நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பேசிய ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்தக் கொள்கையைத் தவறாமல் முன்வைத்தார். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக் கொள்கைக்கு எதிராகவும் பேசி, அது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் வாக்களித்தார்2. இவ்விரண்டு கொள்கைகளும் மீண்டும் தேர்தல் அறிக்கையில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன.
ஆயினும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பசுவதைத் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், இறைச்சிக் கொள்கையிலும் (Meat Policy) எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. பா.. அரசு பதவியேற்ற ஆறு மாதங்களில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரிதும் கூடியது; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதலிடத்தைப் பிடித்தது.3
பசுவதைத் தடுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொள்கை ஆகிய இரண்டு விஷயத்திலும் மோடி ஆதரவாளர்களிடையே கூட கொஞ்சம் அதிருப்தி நிலவி வருகின்றது. ஆயினும், கூடிய விரைவில் பிரதமர் இவ்விரண்டு விஷயங்களிலும் நடவடிக்கை எடுப்பார் என்கிற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் பசுவதை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்துதான் பசுவதைப் பற்றிப் பேசுகிறது. பசு மட்டுமில்லாமல் அனைத்துக் கால்நடைகள் பற்றியும் கூறுகிறது.
“பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை நவீன மற்றும் விஞ்ஞானபூர்வமாக எடுத்து, வேளாண்மையையும் கால்நடைப் பராமரிப்பையும் ஒழுங்குபடுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று ‘வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு’ என்கிற தலைப்பின் கீழ் அரசியல் சாஸனத்தின் 48-வது பிரிவு குறிப்பிடுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனக்கென ஓர் அரசியல் சாசனம் இயற்றுவதற்கு ஏதுவாக ஓர் அரசியல் சாசனப் பேரவை (Constituent Assembly) அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருட காலத்தில் 166 நாட்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நடத்தப்பட்டு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டது. அவ்வாறு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதைக்கு எதிரான சட்டத்தை இயற்றி அதை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்காமல், அரசியல் சாஸனத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகளில் மட்டும் வைத்தது அரசியல் சாஸனப் பேரவை.
அவ்வாறு செய்ததன் மூலம், பசுக்களையும் கால்நடைகளையும் பாதுகாத்துப் பெருக்கவும், பசுவதையைத் தடுக்கவும், பசுவைத் தாயாகவும் தெய்வமாகவும் போற்றும் இந்நாட்டின் உன்னத கலாசாரத்தைக் காப்பாற்றவும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை இழந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரத கலாசாரத்தில் பசுவின் பெருமை

பாரத தேசத்தில் வேதகாலம் தொடங்கி பசுவைத் தெய்வமாகவும் தாயாகவும் போற்றி வழிபடும் பண்பாடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்று ஆரம்பித்து, சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், வரலாறுகள் ஆகியவற்றில் தொடர்ந்து, இன்றைய நவீன இலக்கிய நூல்கள் வரை, பசுவின் பெருமையும், ஆராதித்துப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய கடமையும் விவரமாகக் கூறப்பட்டுள்ளன.  
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்பதும் இந்த தேசத்தின் பண்பாடு. திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும்; ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வார்ப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களையும் தானியங்களையும் வைப்பதும், இந்துக்களின் பண்பாட்டில் வேதகாலம் தொட்டு ஊறிப்போன வழக்கங்களாகும். தொன்றுதொட்டு மனித இனத்துக்குப் பெரிதும் பயனளிக்கும் மற்ற உயிரினங்களையும், தாவர இனங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர் இந்துக்கள்.
வேறெதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையைப் பசுமாட்டிற்கு மட்டும் இந்த தேசம் அளித்துள்ளது. பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், அதைப் பெற்ற தாய்க்கு ஈடாகக் கருதி கோமாதா என்று போற்றுவது இந்த பாரத தேசத்தின் கலாசாரம்.
இந்தப் பிரபஞ்சமே தெய்வத்தினால் படைக்கப்பட்டதாக நாம் நம்புவதால், ஒவ்வொரு படைப்பிலும் தெய்வாம்சத்தைக் காணும் பண்பாடு நம்மிடையே தொன்றுதொட்டு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நாம் பசுவை முப்பத்து முக்கோடி தேவர்களின் மொத்த வடிவமாகக் காண்கிறோம். ஒவ்வொரு படைப்பிலும் உள்ள தெய்வ அம்சத்தைத் தேடிக்கொண்டிருக்காமல் தெய்வாம்சம் பொருந்தியதாக நன்றாக அறியப்பட்டுள்ள பசுவை வழிபடுவதே ஞானம் என்கிற எண்ணத்தின் விளைவாகத்தான் பசு வழிபாடு பிறந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் பசு இருந்த காலம் போய்விட்டது. ஆனால் பசு வழிபாடு தொடரவேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு கோவிலின் அங்கமாகப் பசுமடம் இருந்து வந்துள்ளது. கோவில் மட்டுமல்லாமல், வெளிப்புறங்களிலும் கோசாலைகள் அமைக்கப்படுகின்றன. கோவில் பசுமடங்களிலும், வெளிப்புற கோசாலைகளிலும் சென்று பொதுமக்கள் பசு வழிபாடு செய்து வருகின்றனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அந்நியப் படையெடுப்புகளாலும் அவர்கள் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்ததாலும் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியில் பசுவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டன. நாம் நமது கலாசாரத்திலிருந்து வழுவ ஆரம்பித்தோம். அதன் விளைவாகத் தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கப்பட்டு வந்த பசு, பெரும் துன்பங்களுக்கு ஆளானது. ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகு அரசியல் சாஸனம் இயற்றப்பட்டபோது, பசுவதையைத் தடுக்கவும், நமது உன்னதக் கலாசாரத்தை மீட்டெடுக்கவும், சட்டம் இயற்றக் கிடைத்த வாய்ப்பை அரசியல் சாஸனப் பேரவை நழுவவிட்டது.
அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் பாராளுமன்றத்தில் இந்த விஷயம் தொடர்பாக விவதங்கள் நடந்தபோதெல்லாம் அன்றைய பிரதமர்களான நேருவும், அவருக்குப் பிறகு அவர் மகள் இந்திராவும் பசுவதையை ஆதரிக்கும் விதமாகவே நடந்துகொண்டனர். சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடுப்பு விஷயத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்ருமாறு:
1947: பசுவதைத் தடையை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்கு நேரு தலைமையிலான இந்திய அரசு சர்தார் தத்தார் சிங் (இன்றைய அமைச்சர் மேனகா காந்தியின் தாத்தா) தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழு, பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற கால்நடைகளை, பயன் தருபவை, பயன் தராதவை, உற்பத்தி செய்பவை மற்றும் உற்பத்தி செய்யமுடியாதவை என்று அவற்றின் தரத்தைப் பிரித்து, பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தது.
* இந்தியாவின் சுபிட்சம் அதன் கால்நடை வளத்தைச் சார்ந்துள்ளது.
* கால்நடை வதையை முழுவதுமாகத் தடை செய்தால்தான் தேசத்தின் ஆன்மா திருப்தியடையும்.
* கால்நடை வதை இந்தியாவில் விரும்பத்தகாததாக இருப்பதால் அதன் மீதான தடையை சட்டத்தின் மூலமாக அமுல்படுத்த வேண்டும்.
* சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து முழுவதுமாகக் கால்நடைவதைத் தடைசெய்யப்பட வேண்டும்.
* அதுவரை பயன்பாட்டில் இருக்கும் அனைத்துக் கால்நடைகள் வதையும் முற்றிலுமாகத் தடை செய்யப்படவேண்டும்.
அதாவது, கால்நடை வதையை முழுவதுமாகத் தடைசெய்து சட்டம் இயற்றிய பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அதை அமுல்படுத்த வேண்டும். அதுவரைப் பயனற்ற கால்நடைகளை கொல்ல அனுமதிக்கலாம் என்று கூறியது.
அப்போதைய பிரதமர் நேரு, முழுமையான தடையை நிராகரித்தார். அதே சமயத்தில் பயன்தராத உற்பத்தி செய்யமுடியாத கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கலாம் என்கிற பரிந்துரையை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டார்.
1948: உத்தரப்பிரதேச அரசு அமைத்த குழுவானது, இந்திய அரசு 1947ல் அமைத்த சர்தார் தத்தார் சிங் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுகொண்டு ஆதரவு அளித்தது.
1950: உத்திரப் பிரதேச மாநில அரசு, பசுவதைத் தடைக்கு ஆதரவளித்ததைப் பொறுக்கமுடியாத பிரதமர் நேரு, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடுமையான கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “வதைக்கப்பட்ட கால்நடைகளின் தோலுக்கு, இயற்கையாக மரணம் அடைந்த கால்நடைகளின் தோலை விட மதிப்பு அதிகம். ஆகவே நல்ல மதிப்புள்ள தோல்களே நல்ல விலையைப் பெற்றுத்தரும். கால்நடைகள் வதைக்கப்படாத நிலையில், நல்ல விலை பெற்றுத்தரக்கூடிய மதிப்புள்ள தரமான தோல் சந்தையில் கிடைக்காது. எனவே, கால்நடைகளின் மீதான முழு தடையானது, ஏற்றுமதியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலின் நலனுக்கு எதிராகவும் இருக்கும்என்று குறிப்பிட்டார்.4 ஆயினும், பாராளுமன்றத்தில் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
1954: பசு மற்றும் அனைத்துக் கால்நடைகளின் வதை தடை செய்யப்படவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மசோதாவின் மீதான விவாதத்தின் இறுதியில், தடை செய்யப்படவேண்டும் என்று கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து ஏற்பட்டு மசோதா நிறைவேறும் நிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் மசோதாவிற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நேரு, கால்நடை வதைத்தடை மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டார்5. அவருடைய அச்சுறுத்தலுக்கு அவர் எதிர்பார்த்த உடனடியான பலன் கிடைத்தது. ஆம், மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, இரண்டு வருடங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மசோதா, ஒரே ஒரு நபரின் அச்சுறுத்தலால் திரும்பப் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம், “கால்நடைவதை மீதான முழுமையான தடை சாத்தியமில்லை. கால்நடைத் தீவனம் நாட்டில் உள்ள 40% கால்நடைகளுக்குத்தான் போதுமானது, மிச்சமுள்ள 60% கால்நடைகள் வதைக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தது.
1955: உத்திரப்பிரதேச அரசு பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றி அமல்படுத்தியது. ஆனால், மூடிய டப்பாக்களில் வைக்கப்பட்ட மாட்டிறைச்சியை விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கலாம் என்று அறிவித்தது.  
1966 நவம்பர் 7: சாதுக்கள், சந்நியாசிகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் உடனடியாகப் பசுவதைத் தடை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தில்லி பாராளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு அபினவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் ஆதரவளித்தார். அப்போதைய பிரதமர் இந்திரா, அந்தப் போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லி அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.எல்.நந்தாவுக்கு உத்தரவிட்டார். சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
சாதுக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புரி சங்கராச்சாரியார் நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகளும், ஆச்சார்யா வினோபாபவேவும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த இந்துக்களைச் சாந்தப்படுத்த 1947ல் தன் தந்தை என்ன செய்தாரோ அதையே மகள் இந்திராவும் செய்தார்6.
1967: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.சர்கார் தலைமையில், புரி சங்கராச்சாரியார் ஜகத்குரு நிரஞ்சன்தேவ் தீர்த்த ஸ்வாமிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குருஜி கோல்வல்கர், அப்போதைய இரு மாநில முதல்வர்கள் சரன்சிங், டி.பி.மிஸ்ரா, மற்ற மாநிலங்களின் கால்நடைத்துறை அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய சக்தி வாய்ந்த உயர்நிலைகுழுவை அமைத்தார் இந்திரா. அந்தக்குழு அளித்த பரிந்துரைகள் வெளியிடப்படவே இல்லை!
1976: தேசிய வேளாண்மை ஆணையம் பின்வரும் பரிந்துரைகளை அளித்தது:
* பால் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், தரமான இறைச்சிக்காகவும் எருமைகள் வளர்ப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
* எருமை இறைச்சி ஏற்றுமதியைப் பெருக்கும் விதமாகத் தேவையான நடவடிக்கைகளை துணிவோடும் ஊக்கத்தோடும் எடுக்க வேண்டும்.
* உபயோகம் இல்லாத ஆண் எருமைக் கன்றுகளுக்கு ஊட்டம் கொடுத்துக் கொழுக்க வைத்து, இறைச்சியின் தரத்தை அதிகரிக்கும் வகையில் தேவையான மேல் நடவடிக்கைகளை எடுத்து, எருமை இறைச்சி ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.
இந்த அறிக்கையே இந்திய அரசின் கொள்கை ஆனது!
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பின்பற்றி, பல மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மாட்டிறைச்சி சாப்பிடுவது மற்றும் அதை வியாபாரம் (உள்நாடு மற்றும் ஏற்றுமதி) செய்வது ஆகியவற்றைத் தங்கள் கலாசாரமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டவர்களுக்கு எந்தவிதத்திலும் தடங்கல்கள் இல்லாதவாறு, தேவையான ஓட்டைகளுடனேயே அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
1998ல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பசுவதைத் தடை தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லாமல் போகவே, காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பசுவதைத் தடை செய்யப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். உடனடியாக பிரதமர் வாஜ்பாய், முந்தைய பிரதமர்களைப் போலவே தானும் பசுவதைத்தடை பற்றி ஆய்வு செய்வதற்கு, வரலாற்று ஆய்வாளரும் காந்தியவாதியுமான தரம்பால் தலைமையில் தேசியக் கால்நடை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் 2002ல் தன் அறிக்கையை அளித்தது. அதில், “1967ல் அமைக்கப்பட்ட சக்திவாய்ந்த உயர்நிலைக் குழு அளித்த அறிக்கை அரசின் ஆணவக் காப்பகங்களில் எங்கும் காணப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

தர்மத்தின் பாதுகாப்பு பசுப்பாதுகாப்பும்தான்

சுதந்திர இந்தியாவில் பசுவதைத் தடையை நோக்கி இவ்வளவு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்த பிறகும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசுகள் இந்நாட்டின் தர்மத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் விதமாக, பசுவதைத் தடை விஷயத்தில் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. ஆனால் அதற்கு நேரெதிராக, பசுக்கள், எருமைகள், காளைகள், கன்றுகள் என்று அனைத்தும், உயர்தரத் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், ஏற்றுமதி வியாபாரத்திற்காகவும் வதைக்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவே கசப்பான உண்மை!
பசுக்கள், காளைகள், எருமைகள், கன்றுகள் ஆகியவற்றைக் காப்பாற்றிப் பாதுகாப்பது நமது தர்மத்தின்படி இன்றியமையாதது. ஏனெனில் நமது பாரம்பரியம் வயிறு வளர்ப்பதையே பிரதானமாகக் கொண்டதல்ல. மாறாக பலவீனர்களையும் வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகும். கோசம்ரக்ஷணம் அல்லது பசுப்பாதுகாப்பு என்பது பசுக்களை மட்டுமின்றி, காளைகள், எருமைகள், காளைக்கன்றுகள், எருமைக்கன்றுகள் ஆகிய அனைத்துக் கால்நடைகளையும் காப்பதுதான். நமது தர்மத்தின்படி, அவைகள் இருக்க வேண்டிய இடங்கள் வயல்களும், கோவில்களும், கோசாலைகளும்தானே தவிர கசாப்புக் கூடங்கள் அல்ல!
உசாத்துணைகள்:
1. http://www.thehindu.com/news/national/Cow-vigilantes-%E2%80%98anti-social%E2%80%99-Modi-breaks-his-silence/article14556739.ece, http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-blasts-cow-vigilantes-calls-them-anti-social-2958427/
2. http://www.thehindu.com/news/national/other-states/modi-fears-a-pink-revolution/article5864109.ece
3. http://www.thehindu.com/news/national/india-on-top-in-exporting-beef/article7519487.ece
4. https://en.wikipedia.org/wiki/Cattle_slaughter_in_India


Posted on Leave a comment

ஜல்லிக்கட்டு: சில உண்மைகள் – அரவிந்தன் நீலகண்டன்

கடந்த இரு பொங்கல் விழாக்களிலும் தமிழ்நாட்டை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கும் விஷயம் ஜல்லிக்கட்டு. இந்த ஆண்டு அந்தக் கூட்டு உணர்ச்சி அதன் உச்சத்தை எட்டியது.
எவரும் இணைக்காமல் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் மெரீனாவில் குழுமினர். அறவழிப்போராட்டத்தை நடத்தினர். மத்திய மாநில அரசுகள் என்ன செய்வதென அறியாமல் தத்தளித்தன.  இறுதியில் மத்திய மாநில அரசுகள் பணிந்தன. என்ற போதிலும் நிரந்தரத் தீர்வு கோரிப் போராடிய மாணவர்களை அரசு காவல்துறையை ஏவித் தாக்கியது.
இன்றைக்கு பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் குறிப்பாக காட்சி ஊடகங்கள் கட்டமைக்க விரும்புவது மேற்கூறிய பார்வையைத்தான்.
ஆனால் உண்மை என்ன என்பதை சற்றே கூர்ந்து பார்த்தால் விளங்கும்.
 பொங்கலுக்குச் சில தினங்கள் முன்பாக எல்லாத் தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் ஒரு செய்தி சொல்லப்பட்டது. முக்கியச் செய்தியாக (Flash News) காட்டப்பட்டது. மத்திய மோடி அரசு பொங்கல் விடுமுறை தினத்தை கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது என்பதுதான் அது. உடனடியாக மக்களிடையே சினம் பொங்கியது. உணர்ச்சிகள் கொப்பளித்தன. உண்மை என்ன என்பதை தெளிவாக விளக்குவதற்கு முன்னரே மக்கள் கொதிநிலைக்குப் போய் மீண்டனர். பாஜக மீதும் மோடி மீதும் அவர்கள் தமிழர் விரோதிகள் எனும் ஓர் எண்ணத்தை மக்கள் மனதில் தூவ மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு அது. வெறும் வதந்தி என அதை ஒதுக்கிவிட முடியாது. ஏறத்தாழ அனைத்துச் செய்தி சானல்களிலும் அது ஒரு flash news ஆக ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படவேண்டும் என்பதன் பின்னால் எத்தனை ஒருங்கிணைப்பு இருந்திருக்க வேண்டுமென்பதை சிந்தித்தால் இத்திட்டத்தின் அறிவுபூர்வமான செயல்பாடு புரியும்.
அதன் பின்னர் மெரீனா நிகழ்வு நடந்தது. இக்கட்டுரையாளனுக்கு எப்போதுமே இத்தகைய திடீர் மக்கள் எழுச்சிகளில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவற்றுக்குப் பின்னால் நீண்ட திட்டமிடுதலும் அரசியல் மூளையும் கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு முன்னால் அண்ணா ஹசாரே தலைமையில் ஏற்பட்ட ‘எழுச்சியின் போது’ இதே போல ’காந்திய எழுச்சி’ ’இதோ இன்றைய காந்தி அழைக்கிறார்; பரிசுத்த ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது’ என புளகாங்கிதமடைந்த ஓர் இணையக் குழுமத்தில் நான் இருந்தேன். இதற்குப் பின்னால் காங்கிரஸ் கரம் இருக்கலாம். அல்லது தேச விரோத என் ஜி ஓக்கள் இருக்கலாம் எனக் கூறிய போது ‘உளறுகிறாய்’ ‘இந்துத்துவ வெறி’ என்றெல்லாம் நாகரிகமாக வசை பாடப்பட்டேன். ஒரு சில நாட்களிலேயே அப்போராட்ட குழுவிலிருந்த அக்னிவேசு என்கிற சாமியார் மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு தொலைபேசியில் அங்கே நடப்பவற்றை செய்தி அனுப்பி மேலதிக நடவடிக்கைக்குக் கேட்டுக்கொண்டிருந்த காட்சி ஒளிபரப்பாகியது. இன்றைக்கு இந்த இயக்கத்தின் விளைவு அரவிந்த் கெஜ்ரிவால். இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் மாணவர் போராட்டம் ஒன்றை அரசியல் சக்திகள் முகமூடிகளாகப் பயன்படுத்தியதன் விளைவு நாம் இப்போதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் திராவிடம் என்கிற ஆபாச அரசியல்.
இது பொதுவாக எந்த மக்கள் எழுச்சி என அடையாளப்படுத்தப்படுவதற்கும் பொருந்தும். அய்ன் ராண்ட் எனக்கு ஏற்புடையவரல்ல. எந்த பதின்மவயது மாணவனுக்கும் வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் முதல் காதல் போல, கொஞ்சம் அய்ன் ராண்ட் மோகம் எனக்கும் பதின்ம வயதில் படிக்கும் காலங்களில் இருக்கத்தான் செய்தது. அய்ன் ராண்ட் ஒரு விஷயத்தைச் சுட்டுவார். பிரெஞ்சுப் புரட்சி இறுதியில் பிரான்ஸுக்கு அளித்தது கில்லட்டினையும் படுகொலைகளையும், இறுதியில் நெப்போலியன் என்கிற போர் வெறி கொண்ட ஒரு சர்வாதிகாரியையும்தான். ரஷியாவின் ‘புரட்சி’, போல்ஷ்விக்குகளால் அபகரிக்கப்பட்டு இறுதியில் ஸ்டாலினையும் பஞ்சப் பேரழிவுகளையும் உருவாக்கியது. மாவோவினால் கொடுக்க முடிந்ததெல்லாம் கலாசாரப் புரட்சி என்கிற பெயரில் பாரம்பரிய பண்பாட்டின் பேரழிவுகளையும் பின்னர் பஞ்சத்தால் கொல்லப்பட்ட  பல லட்சம் உயிர்ப் பலிகளையும்தான்.
ஆக்கபூர்வமான மாற்றங்களை நிகழ்த்திய காந்தியின் போராட்டமும் சரி, மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்டமும் சரி, தெளிவான அரசியல் தலைமையைக் கொண்டிருந்தன. அதன் பின்னால்  இருந்த அரசியல் ஏற்பாடுகள், இயக்கத் தொடர்புகள் என அனைத்துமே வெளிப்படையாக இருந்தன.
எனவே மெரீனாவில் மக்கள் பெருமளவில் குவிய ஆரம்பித்தபோது ஒன்று தெளிவாக இருந்தது. அங்கு இந்தியத் தேசியம் சார்ந்த எந்தக் குறியீடும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆபாசத் தட்டிகள் அனுமதிக்கப்பட்டன. பிரதமரையும் முதல்வரையும் மிகக் கேவலமாக, மிகவும் ஆபாசமாகத் சித்தரிக்கும் தட்டிகளை ஏந்தியபடி, ஆண்களும் பெண்களும் நின்றார்கள். அருவருப்பான ஆபாசப் பாடல்களும், கோஷங்களும் போடப்பட்டன. பிறப்புறுப்புகள், கலவி ஆகியவற்றைக் குறிக்கும் கோஷங்கள் முதல்வருக்கும் பிரதமருக்கும் எதிராக எழுப்பப்பட்டன.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் களமிறங்கின. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஜல்லிக்கட்டை ஒரு இந்து பாகனீய காட்டுமிராண்டித்தனமென்றே கருதி வந்தவர்கள். இப்போது ஒசாமா பின்லேடன் பழனி பாபா போன்றவர்களின் படங்களுடன் இந்த இயக்கத்தில் பவனி வந்தனர். ஆனால் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் தேசியக் கொடியுடன் இயக்கத்தில் பங்கு பெற வந்தவர்கள் தாக்கப்பட்டனர். இந்த இயக்கத்தை நடத்திய முகமூடிகள் தங்கள் செயல்திட்டத்தில் தெளிவாகவே இருந்தனர்.
விஷயமென்னவென்றால் 2011ல் காளைகளை காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்த காங்கிரஸ்-திமுக கட்சியினர் குறித்து ஒரு எதிர்மறைக் கோஷம் கூட (ஆபாச கோஷங்கள் அல்ல) எழுப்பப்படவில்லை.
2014ல் இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தபோது ஜல்லிக்கட்டை நடத்தும் நாட்டு இன மாடுகள் வளர்க்கும் அமைப்பினர் சந்தித்த ஆன்மிகத் தலைவர்களில் முக்கியமானவர் காலம் சென்ற தயானந்த சரஸ்வதி அவர்கள். ஆனைக்கட்டி ஆசிரமத்தில் ஜல்லிக்கட்டு அமைப்பினர் அவரைச் சந்திக்க வந்தபோது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களிடம் அவர் பேசினார். அவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளித்தார். தொடர்ந்து சென்னையில் நடக்கும் இந்து ஆன்மிகச் சேவைக் கண்காட்சியில் ஜல்லிக்கட்டு அமைப்பினருக்குப் பிரதான இடம் அளிக்கப்பட்டது. அப்போது, இன்று ஜல்லிக்கட்டின் பேரில் மோடியை ஆபாசமாக வசைபாடும் மகஇக-வினரின் வினவு வலைத்தளம் ஜல்லிக்கட்டையும் வசை பாடியது.
இச்சூழலில் மோதி அரசாங்கத்தின் சூழலியல் அமைச்சராக அன்று இருந்த பிரகாஷ் ஜாவதேகர் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வழி செய்யும் அறிவிப்பு ஒன்றை அமைச்சகத்திலிருந்து 2016ல் வெளியிட்டார். ஆனால் பீட்டா அமைப்பினர் அதை நீதிமன்றத்தில் எதிர்த்தனர். ஆனால் நீதிமன்றத்தால் இந்த அறிவிப்பைத் தள்ளுபடி செய்ய இயலவில்லை. இடைக்காலத் தடையை மட்டுமே உருவாக்கியது. உடனடியாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்து அதைப் பின்னர் சட்டசபையில் நிறைவேற்றும்படிக் கூறினார். அன்று மாநில அரசின் நிர்வாகச் செயலின்மையால் அது நிறைவேற்றப்படவில்லை. இன்று உணர்ச்சிகளைத் தூண்டிக் கூச்சலிடுவோரும் அதற்காக மாநில அரசை நிர்ப்பந்தப்படுத்தவில்லை. மத்திய அரசுதான் நீதிமன்றத்தை தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்தில்கொண்டு அவசரப்படுத்தியது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.
இதே போன்றதொரு நீதிமன்றத் தாமதமே அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமியில் இருந்த சர்ச்சைக்குரிய கும்மட்டம் இடிபடக் காரணமானது. ஆனால் ராம ஜென்ம பூமி  இயக்கத்துக்கும் மெரீனா இயக்கத்துக்குமான வேறுபாடுகளைக் கண்கூடாகக் காண முடிந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான இழிவான கோஷங்களை எத்தருணத்திலும் போட தலைவர்கள் விடவில்லை. கட்டுக்கடங்காத கரசேவகர்கள் இருந்தபோதும் சில இஸ்லாமிய வெறுப்புக் கோஷங்கள் போடப்பட்டபோது அதனை அசோக் சிங்கல் தடுத்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உடனடியாக அப்படி கோஷம் போடுவோரைத் தடுத்தனர். அதை மீறினால் அப்புறப்படுத்தினர். அயோத்தியில் ஆயுதமற்ற கரசேவகர்களின் படுகொலை நடந்தபோதுகூட அவர்கள் அக்கும்மட்டத்தின் மீது ஏறியிருந்தனர். ஆனால் அதை உடைக்கவில்லை. இந்நிலையில் அடுத்து கல்யாண்சிங் ஆட்சி ஏற்பட்டபோது நிலக் கையகப்படுத்தும் சட்டத்தை பாஜக கொண்டு வந்தது. அப்போது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நவம்பர் 1991ல் ஒரு மாதத்துக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கூறியது. ஆனால் ஒரு வருடமாகியும் தீர்ப்பு வரவில்லை. பின்னர் நிகழ்ந்தவை வரலாறானது. அதே சமயம் ஒரு பிரபல இஸ்லாமியப் பத்திரிகையாளர் சுட்டுவதைப் போல, அங்கே பாபருக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன இஸ்லாமியருக்கு எதிராக அல்ல. அயோத்தியில் இருக்கும் பல மசூதிகளில் ஒன்றைக் கூட கரசேவகர்கள் தொடவில்லை. அக்கும்மட்டத்தை மட்டுமே அவர்கள் உடைத்தனர். முலாயமின் காவலர்கள் துப்பாக்கிச் சூடும் தடியடியும் நடத்தியபோது அசோக் சிங்கல் முன்னணியில் சென்று அடிகளை வாங்கிக்கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட அவர் கரசேவகர்களுடன் நின்றார்.
ஆனால் மெரீனாவில் உசுப்பேற்றி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டவர்கள் இறுதியில் எங்கோ சென்று மறைந்தனர். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ரத்த சாட்சிகள் மட்டுமே. இன்னும் சொல்லப் போனால் அவர்களின் ஆத்திரமே, பிரதமரும் முதல்வரும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் மிகுந்த பரிந்துணர்வுடன் ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்ட ரீதியில் அனைத்து முயற்சிகளையும் எடுத்ததுதான். உண்மையான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சந்தோஷப்படும்போதுதான் மோடி எதிர்ப்புக்கு ஜல்லிக்கட்டைப் பயன்படுத்தியவர்களின் ஆத்திரம் அளவுக்கு அடங்காமல் சென்றது. எப்படியாவது வன்முறையில் இயக்கத்தைக் கொண்டு சென்று தனித்தமிழ்நாடு இயக்கமாக அதை வளர்த்தெடுப்பது எனும் அவர்கள் அடிப்படைத் திட்டத்துக்கு பிரச்சினை வந்துவிட்டது.
ஜல்லிக்கட்டை ‘நிலப்பிரபுத்துவ காளைகளை சித்திரவதை செய்யும்’ விளையாட்டு என எழுதியவர்கள், கும்பலோடு கும்பலாக கர்ம சிரத்தையாக அதை மோடி எதிர்ப்பாக மாற்றிப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தனர். இதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நினைக்கும்போதுதான் மனம் பதைபதைக்கிறது. மகஇக கோவன் மு.கருணாநிதி முன்பு உடல் வளைந்து அடிமை போல நின்றதையும் தாண்டி மற்றொரு காட்சி கண்ணில் விரிகிறது. ‘பீப் சாங்க்’ புகழ் சிம்புவுடன் கோவன் இணைந்து மேடையில் பாடும் காட்சி. தனித்தமிழ் தேசியத்துக்காகத் தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கும் தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத ‘தோழர்கள்’தான் என்னென்ன சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது!
உண்மையாக ஜல்லிக்கட்டுக்காகவும் நாட்டு மாடு இனங்களைக் காப்பாற்றுவதற்காகவும் உழைத்த பெரியவர்களுக்குத் தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அந்த உணர்வுகளைப் பயன்படுத்தி அதைத் தங்கள் ஆபாச அரசியலுக்குப் பயன்படுத்தியவர்களைத் தமிழ்நாடு என்றுமே மன்னிக்கக் கூடாது. இதுவே மெரீனா கற்றுத்தரும் பாடம்.


Posted on Leave a comment

வலம் மே 2017 படைப்புகள்

வலம் மே 2017 இதழ் படைப்புகள்

  • அசோகமித்திரன் – நுணுக்கத்தின் மகத்துவம் – ஜடாயு
  • அசோகமித்திரன்: விடைபெற்றுச் சென்ற தனித்துவக்குரல் – பா.சி. அனீஷ் கிருஷ்ணன் நாயர்
  • திராவிட இயக்கம் என்னும் அபத்தம் – ஆமருவி தேவநாதன்
  • நாளைய நகரங்கள் – கிஷோர் மகாதேவன்
  • தமிழக விவசாயிகளின் போராட்டம்  – ராஜா ஷங்கர்
  • ஒரு நொடி – லதா ரகுநாதன்
  • பிக் டேட்டா – சுஜாதா தேசிகன்
  • மேகாலயா பயணம்: கடவுளின் தோட்டம் – திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்
  • உரையாடும் ரோபோ: சாட்பாட் (Chatbot) – ஜெயராமன் ரகுநாதன்
  • அயோத்தியில் ராமர் கோவில்: இறுதிக்கட்டத்தில் ராமஜன்ம பூமி வழக்கு – பி.ஆர்.ஹரன்
  • ஸார்… வோட் ப்ளீஸ்!  – ஜெ.ராம்கி
  • ஜக்கி வாசதேவும் ஸ்டீபன் ஜேகவுல்டும் – அரவிந்தன் நீலகண்டன்
  • அட்டைப்பட அசோகமித்திரன் ஓவியம் – லதா ரகுநாதன்
இ புத்தக ஓராண்டுச் சந்தா – http://nammabooks.com/valam-one-year-subscription
அச்சு இதழுக்கு ஓராண்டு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html


Posted on Leave a comment

வலம் ஜனவரி 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்

வலம் ஜனவரி 2017 இதழின் படைப்புகளை  முழுவதுமாக இங்கே வாசிக்கலாம்.


பைரப்பாவின் பித்தி: பெருந்துயரங்களைத் தாண்டி வாழ்தல் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அபரத்யாகராஜூ – ரஞ்சனி ராமதாஸ்


ஐசாக் அஸிமாவ்வின் புனைவுகளில் மதம் – அரவிந்தன் நீலகண்டன்


சோவைப் பற்றிப் பேசுகிறேன் – சுப்பு


ஆசிரியர் சோ – பி.கே. ராமசந்திரன்


குருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ.ராம்கி


ஜெயலலிதா மறைவு – அடுத்து என்ன? – பி.ஆர். ஹரன்


தமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் பின் – லக்ஷ்மணப் பெருமாள்


அழகிய சிக்கிம் – ஹரி வெங்கட்


சோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் – ஆமருவி தேவநாதன்


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ’என்றென்றும் அன்புடன்’ பாலா


சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் – ஜடாயு



Posted on 4 Comments

சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் – ஜடாயு

சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.
வரலாற்றிலும் இலக்கியங்களிலும் கோயில் சிற்பங்களிலும் அவருக்கும் நல்ல ஆர்வமும் ஈடுபாடும்
உண்டு.கோயிலில் உள்ள விஷயங்களையெல்லாம் நிதானமாக ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு உரையாடியபடியே
வந்தோம். நடராஜர் வீற்றிருக்கும் கனகசபையின் கூரையில் வேயப்பட்டுள்ள தங்க ஓடுகளைத்
தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தோம். “சோழனும் பாண்டியனும் போட்டி போட்டுக்கொண்டு
இந்தக் கோயிலை அலங்கரித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? ‘சென்னி அபயன் குலோத்துங்கச்
சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு’ என்று பெரியபுராணத்தில்
ஒரு இடத்தில் வருகிறது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்கு ‘கோயில் பொன்வேய்ந்த பெருமாள்’
என்றே ஒரு பட்டப்பெயர் உண்டு. தமிழ் மன்னர்கள் அன்று இங்கே கொண்டு வைத்த தங்கம் இவ்வளவு
நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எப்படி தகதகக்கிறது பாருங்கள்.” – மிகவும் நெகிழ்ச்சியுடன்
சொல்லிக்கொண்டு போனார் நண்பர்.
என் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை அரும்பியதைக் கவனித்து அவர் பேச்சை நிறுத்தினார்.
என்ன ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா என்பது போலப் பார்த்தார். “நீங்கள் சொன்னது சரிதான்.
ஆனால், அந்தப் பொன் அல்ல இப்போது நீங்கள் இங்கே பார்ப்பது” என்றேன். அவர் ஒரே நேரத்தில்
ஆச்சரியமும் பதற்றமும் அடைந்தார். அக்கோயில் வரலாற்றின் சில பக்கங்களை அவருக்கு விளக்கினேன்.
இக்கட்டுரைக்கான பின்னணி இதுதான்.


ஸ்ரீரங்கம், மதுரைக் கோயில்கள் 13-14ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் படையெடுப்புகளால்
சிதைக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டது குறித்த வரலாறு இப்போது ஓரளவு பரவலாகத்
தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. மதுரைக் கோயிலில் இது குறித்த ஒரு தகவல் பலகையும்
உள்ளது. ஆனால், சிதம்பரம் மற்றும் இன்னும் சில முக்கியக் கோயில்களும் இதே போன்ற தாக்குதல்களுக்கு
உள்ளாகிப் பிறகு அழிவிலிருந்து மீண்டெழுந்தன என்பது பலர் அறியாதது.

“மாலிக் காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான ‘பீர்தூல்’
என்ற இடத்தை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். வீரபாண்டியனின் படைகளில் பணிபுரிந்து
வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய்
மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீர்பாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான்…
காடுகளில் ஒளிந்து ஒளிந்து வெளிப்பட்டான். தன் கைகளிலிருந்து நழுவி நழுவிச் சென்ற வீரபாண்டியனைத்
துரத்திக் கொண்டு மாலிக்காபூர் சிதம்பரம் வந்தடைந்தான். ஆங்குப் பொன்னம்பலத்தை அடியுடன்
பேர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான். ஊருக்கும் தீயிட்டான். உடைமைகளைச்
சூறையாடினான். ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து வெறியாட்டயர்ந்தான்.
சிதம்பரத்தில் இருநூற்றைம்பது யானைகளைக் கைப்பற்றினான். கொள்ளையடித்த பொன்னையும் மணியையும்
யானைகளின் மேல் ஏற்றிக் கொண்டான். மீண்டும் பீர்தூலை நோக்கித் தன் படையைச் செலுத்தினான்.
ஆங்காங்கே கண்ணில்பட்ட கோயில்கள் அத்தனையும் இடித்துத் தரைமட்டமாக்கினான் (கி.பி.
1311). திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானல்லன்.” (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்”,
கே.கே. பிள்ளை, பக். 386-387).

மேற்கண்ட பிரபல வரலாற்றுப் பாடப்புத்தகத்தில்தான் இந்த வர்ணனையை நான் முதலில்
கண்டேன். இதற்கு அடிப்படையாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களே எழுதிவைத்த ஆதாரபூர்வமான
ஆவணங்கள் உள்ளன என்பது பின்னர் தெரியவந்தது.
அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவராகவும் பன்மொழி வல்லுநராகவும் இருந்த அமீர்
குஸ்ரு எழுதியுள்ள ‘வெற்றிப் பொக்கிஷங்கள்’ (Khazain-Ul-Futuh) என்ற நூலில் மாலிக்
காபூரின் படையெடுப்பு குறித்த விவரங்கள் தேதியிட்டுத் தரப்பட்டுள்ளன. இதன்படி, மாலிக்
காபூரின் தமிழ்நாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்த காலம் 1311ம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல்
25 வரை 45 நாட்கள். இப்படையெடுப்பு தொடர்பான ஒரு குறிப்பிட்ட பகுதியை அமீர் குஸ்ருவின்
சொற்களிலேயே காண்போம்.

“பிர்தூலுக்கு வந்தபிறகு, மாலிக்காபூர் ராஜாவை காண்டூருக்கு துரத்திச் சென்றான்.
ராஜா மறுபடி தப்பித்து விட்டான். எனவே, காண்டூரில் முழுப் படுகொலை ஆணையிடப்பட்டது.
அவன் ஜால்கோட்டாவுக்கு தப்பியோடி விட்டான் என்று தெரியவந்தது. அங்கு மாலிக் அவனை மீண்டும்
துரத்தினான். அவன் காடுகளுக்குள் தப்பித்து ஒளிந்திருந்தான். மாலிக் அங்கு புகமுடியவில்லை.
எனவே மீண்டும் காண்டூருக்குத் திரும்பிவந்தான். இங்கு, பிரம்ஹஸ்த்புரி என்ற இடத்தில்
உள்ள தங்க விக்கிரகத்தைப் பற்றியும் அதைச் சுற்றிலும் யானைகள் கட்டிவைக்கப்பட்டிருப்பதையும்
குறித்து அவன் அறிந்தான். அந்த இடத்தைக் குறிவைத்து மாலிக் ஒரு இரவுப் படையெடுப்பை
நிகழ்த்தினான். காலையில் இருநூற்றைம்பதுக்குக் குறையாத எண்ணிக்கையில் யானைகளைக் கைப்பற்றினான்.
பிறகு, அவன் அந்த அழகிய கோயிலை அடியோடு தகர்ப்பதற்குத் தீர்மானித்தான். அது ஷாதாதின்
சொர்க்கம் போல இருந்து, இழக்கப்பட்ட பிறகு அந்த நரகவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ராமனின்
பொன்மயமான இலங்கை போன்று இருந்தது என்று கூறலாம். மொத்தத்தில் அது ஹிந்துக்களுக்குப்
புனிதமான ஒரு இடம். மாலிக் மிகவும் கவனத்துடன் அஸ்திவாரத்தோடு அதைப் பெயர்த்து எடுத்தான்.
பிராமணர்கள் உள்ளிட்ட காஃபிர்களின் தலைகள் அவர்கள் கழுத்திலிருந்து ஆடி ஆடி அவர்கள்
கால்களின் கீழ் நிலத்தில் விழுந்தன. ரத்தம் வெள்ளமாகப் பெருகி ஓடிற்று.

லிங்க் மஹாதேவ் என்று அழைக்கப்படும் கற்சிலை அங்கு நீண்டகாலமாகவே நிறுவப்பட்டிருந்தது.
காஃபிர் பெண்கள் தங்கள் பிறப்புறுப்புக்களை இதன்மீது தேய்த்து மகிழ்ச்சியடைவார்களாம்.
இந்த அனாசாரங்களை இது நாள்வரை இஸ்லாம் என்ற குதிரை உடைத்து எறியாமல் இருந்தது. இப்போது
முஸல்மான்கள் எல்லா லிங்கங்களையும் அழித்தொழித்தார்கள். தேவ் நாரயண் கீழே விழுந்தது.
அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த மற்ற கடவுளர்கள் இலங்கைக் கோட்டையில் சென்று விழுந்தனர்.
லிங்கங்களுக்கும் கால்கள் இருந்தால் அவையும் பறந்து சென்றிருக்கும். பெருமளவிலான பொன்னும்,
விலையுயர்ந்த நகைகளும் முஸல்மான்களின் கைகளில் வந்து சேர்ந்தது. இவ்வாறு தங்கள் புனிதக்
கடமையை முடித்த பிறகு, ஹிஜ்ரி 710 ஜில்கிதா 13ம் நாள் (1311 ஏப்ரல் 4) முஸல்மான்கள்
தங்கள் அரச கூடாரத்துக்குத் திரும்பினர். பிறகு பிர்தூலில் இருந்த அனைத்துக் கோயில்களையும்
அழித்தனர். கொள்ளைகளைப் பொக்கிஷத்தில் சேர்த்தனர்.”

(மூலம்: The History of India as told by its own historians, Elliot and
Dowson: Vol II, pp 90-91)

இந்த விவரணத்தில் அமீர் குஸ்ரு பாரசீக மொழி வடிவில் கூறும் ஊர்ப்பெயர்கள் குறிக்கும்
இடங்களை வரலாற்றாசிரியர்கள் அடையாளம் காண முயன்றுள்ளார்கள். ‘பிர்தூல்’ என்பது ‘வீரதாவளம்’
எனப்பட்ட ஜெயங்கொண்ட சோழபுரம். ‘காண்டூர்’ என்பது ஹொய்சளர்களுக்கும் மதுரையிலிருந்து
ஓடிவந்த வீரபாண்டியனுக்கும் முக்கியத் தளமாக விளங்கிய கண்ணனூர். ‘ஜால்கோட்டா’ எந்த
ஊர் என்று தெரியவில்லை. கொள்ளிடத்திற்கு அருகில் இருந்த பழைய ‘நீர்க்கோட்டை’யைக் குறிக்கலாம்
என்ற ஊகம் உள்ளது. பிரஹ்மஸ்த்புரி
என்று குறிக்கப்படுவது சிதம்பரம்தான் என்று சீதாராம் கோயல்
1, ரிச்சர்ட் எம் ஈடன்2 உள்ளிட்ட பல வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். கிருஷ்ணசுவாமி
ஐயங்கார் சிதம்பரத்திற்குரிய சைவாகமப் பெயரான பிரம்மபுரி என்பதன் திரிந்த வடிவமே அது
என்கிறார். லிங்க் மஹாதேவ், தேவ் நாராயண் என்று இரு கடவுளர் பெயர்களையும் குறிப்பிடுவதால்
நடராஜர், கோவிந்தராஜர் இருவரும் உறையும் சிதம்பரம் கோயில்தான் அது என்கிறார்
3. விதிவிலக்காக,
குடவாயில் பாலசுப்ரமணியன் இது பிரகதீஸ்வரபுரி எனப்படும் தஞ்சையைக் குறிக்கலாம் என்று
கருதுகிறார். தஞ்சைப் பெரிய கோயிலின் மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை மற்றும் பிரகாரங்களிலுள்ள
சிற்பங்களில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள், இந்தப் படையெடுப்பின் போது நிகழ்ந்திருக்கலாம்
என்றும் சிவலிங்கத்தின் பீடத்தை உடைக்க முயற்சி செய்து அதில் இஸ்லாமியப் படையினர் தோல்வியுற்றனர்
என்றும் கூறுகிறார்
4. எப்படியானாலும், சோழநாட்டின் எல்லா முக்கியக் கோயில்களுமே
இக்காலகட்டத்தில் மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டன என்பதில் ஐயமில்லை.

கலைப் பெட்டகங்களாகத் திகழ்ந்த கோயில்களின் இடிப்புகளையும், தமிழ்நாட்டு மக்களின்
அழித்தொழிப்பையும் இவ்வாறு பெருமிதத்துடன் எழுதிச் செல்லும் இந்த அமீர் குஸ்ருதான்
சிறந்த பாரசீக, உருது மொழிக் கவிஞராகவும் சூஃபி ஞானியாகவும் மேதையாகவும் அறியப்படுகிறார்.
அதற்கும் மேலாக, இந்தியாவின் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் குஸ்ருவை மத நல்லிணக்க உணர்வின்
சின்னமாகவும், இந்திய கலாசாரப் பன்மையின் அடையாளமாகவும் முன்வைப்பது குரூரமான நகைச்சுவை
அன்றி வேறில்லை. இதே போன்ற விவரணங்கள் குஸ்ருவின் நண்பரும் கவிஞருமாகிய ஜியாசுதீன்
பரனி எழுதிய Tarikhi Firoz Shahi என்ற நூலிலும், வேறு சில இஸ்லாமியப் பதிவுகளிலும்
உள்ளன.

மாலிக் காபூர் படையெடுப்பின் இறுதிக் கட்டமாக மதுரை மாநகர் அழிக்கப்பட்டது.
பின்பு 1318ல் குஸ்ரூகான் தலைமையில் மீண்டும் ஓர் இஸ்லாமியப் படை தில்லியிலிருந்து
வந்து தமிழகக் கோயில்களைக் கொள்ளையடித்துச் சிதைத்துவிட்டுப் போயிற்று. 1320 முதல் சுமார் 50 ஆண்டுகள் மதுரையில்
சுல்தானியக் கொடுங்கோலாட்சி இருந்தது. தமிழக வரலாற்றின் மிக இருண்ட காலகட்டம் இது.

பின்பு தென்னாட்டின் ஒளிவிளக்காக 1336ல் விஜயநகரப் பேரரசு உருவாகி எழுந்து வந்தது.
அதன் நிறுவனர்களில் ஒருவரான புக்கராயரின் மருமகன் குமார கம்பணன் இஸ்லாமிய ஆட்சியை முறியடித்து
1371ல் மதுரையை மீட்டார். தமிழ் ஆவணங்கள் ‘வீர கம்பண உடையார்’ என்றே இவரது பெயரைக்
குறிக்கின்றன. இதன்பிறகுதான் அழிந்து வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் ஏற்றம்
பெற்றன. “துலுக்கர் கலகத்தால் நாற்பதாண்டுகள் கோயில்கள் மூடப்பெற்றிருந்தன” என்று
1370ம் ஆண்டைச் சேர்ந்த கம்பணரின் இன்னம்பூர் கல்வெட்டு (கும்பகோணம் அருகில்) கூறுகிறது.
திருவையாறு வீரசாவண உடையார் சாசனம் (1381), திருவொற்றியூர் இராஜநாராயண சம்புவரையன்
சாசனம் ஆகியவை துருக்கரால் சிதைக்கப்பட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டதைக் கூறுகின்றன.
இக்காலகட்டத்தில் சிதம்பரமும் மீண்டிருக்க வேண்டும். இப்போது நாம் காணும் கனகசபை முழுவதும்
சோழரும் பாண்டியரும் அலங்கரித்ததல்ல, விஜயநகர அரசர் எழுப்பியது என்றே கருதவேண்டும்.
பிறகு தொடர்ச்சியாக விஜயநகர மன்னர்கள் சிதம்பரம் கோயிலில் செய்த திருப்பணிகள் பற்றிய
விவரங்கள் கிடைக்கின்றன. 1428ல் மகாதேவராயர் கோயில் நிர்வாகத்தை சீரமைத்தது, 1503ல்
திம்மராயர் ஒரு கிராமத்தை நிவந்தமாக அளித்தது, 1510ல் கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தைக்
கட்டி, பல பூசைகளுக்கான கொடைகளை அளித்தது, 1529ல் அச்சுதராயர் தேர்த்திருவிழாவைச் சிறப்புற
நடத்த 38 கிராமங்களை சர்வமானியமாக வழங்கியது, 1578ல் வேங்கடதேவராயர் துறவிகளுக்கும்
பக்தர்களுக்கும் கட்டிச்சோறு வழங்க கிராமங்களை அளித்தது என்று இது தொடர்கிறது. பின்னர்
நாயக்க மன்னர்களும் இப்பாரம்பரியத்தினைப் பின்பற்றினர்.

17ம் நூற்றாண்டில், ஹைதர் அலியின் ஔரங்கசீபின்*** காலத்தில் சிதம்பரம் கோயில் மீண்டும் இஸ்லாமியத் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று. சுமார் 38 ஆண்டுகள்
கோயில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம் வேறுவேறு இடங்களில்
வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.



(*** இணையப் பதிப்பில் இந்தத் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. தவறைச் சுட்டிக்காட்டிய திரு. அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன் அவர்களுக்கு நன்றி). 

இது குறித்த ஒரு செவிவழிச் செய்தியை வைத்து உ.வே.சாமிநாதையர் ‘அம்பலப்புளி’
என்ற சுவாரஸ்யமான கட்டுரையை எழுதியிருக்கிறார் (நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம், பக்.
1-10). இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அறியவந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இரவோடிரவாக
நடராஜரின் மூர்த்தியை எடுத்துச் சென்று ஒரு சிற்றூரிலிலுள்ள புளியந்தோப்பில் புளியமரப்பொந்தில்
வைத்து அப்பொந்தை மூடிவிட்டுத் திரும்பி வந்து விடுகிறார்கள். அத்தோப்புக்குச் சொந்தக்காரர்
எதேச்சையாக அதற்குள் நடராஜரின் திருவுருவம் இருப்பதைக் கண்டு இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும்
என்று ஊகிக்கிறார். இந்த மரத்தில் தெய்வம் இருப்பதாகக் கனவு கண்டதாக ஊர்மக்களிடம் கூறிப்
பூசை செய்து வருகிறார். ஆண்டுகள் பல கடந்ததும் சிதம்பரத்தில் அமைதி திரும்புகிறது.
தீட்சிதர்கள் நடராஜரை மறைத்து வைத்த இடத்தை அடையாளம் காண முடியாமல் ஊரூராகத் தேடி அலைகிறார்கள்.
ஓரிடத்தில் “தம்பி, அந்த அம்பலப்புளியில கொண்டு போய் மாட்டைக் கட்டு” என்று ஒரு பெரியவர்
சொல்வதைக் கேட்டு அங்கு சென்று பார்க்க, நடராஜர் உருவம் அங்கு ஒரு புளியமரப்பொந்தில்
இருந்தது கண்டு பெருமகிழ்ச்சியடைந்து, அதை எடுத்துவந்து கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார்கள்.
இதன் காரணமாகவே அந்த ஊருக்கு புளியங்குடி என்று பெயர் ஏற்பட்டது என்று கூறி அதற்குச்
சான்றாக ‘சோழமண்டல சதகம்’ என்ற நூலிலிருந்து பின்வரும் பாடலையும் உ.வே.சா மேற்கோளாகத்
தருகிறார்.

தெளிவந்து அயன்மால் அறியாத தில்லைப்பதி அம்பலவாணர்
புளியம்பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள்காட்டி
எளிதிற் புளியங்குடியார் என்று இசைக்கும் பெருமை ஏருழவர்
வளருங்குடியில் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழமண்டலமே.

உ.வே.சா குறிப்பிடும் விஷயம் கற்பனையல்ல, வரலாற்றில் உண்மையாக நடந்த சம்பவங்களின்
அடிப்படையிலானதே என்பதற்கான ஆதாரம் செப்பேடுகள் மூலம் உறுதி செய்யப் படுகிறது
5. இதில் நான்கு
செப்பேடுகள் (‘தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50’ நூலின் படி, செப்பேடு எண் 45 முதல்
48) சிதம்பரத்தில் நடந்த இரண்டு கும்பாபிஷேக விழாக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை
சத்ரபதி சிவாஜியின் புதல்வரான சாம்பாஜி காலத்தியவை.

47 எண்ணுள்ள செப்பேடு 1684ல் நடந்த கும்பாபிஷேகம் பற்றிக் கூறுகிறது. இதில்
வரும் பாடலில், முதல் பாதியில் கும்பாபிஷேக ஆண்டு நாள் கிழமை விவரங்கள் உள்ளன. இரண்டாம்
பாதி இவ்வாறு கூறுகிறது –

உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராஜர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை உரைக்க எளிதோ.

‘செம்பினால் மேய்ந்திடும் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம், சோழபாண்டியர்கள்
அளித்த பொன் முழுவதும் இஸ்லாமியப் படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு மூளியாக
இருந்த சிற்சபை, சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு செம்புத் தகடுகள் வேய்ந்து திருப்பணி
செய்யப்படுகிறது என்பது புலனாகிறது. கீழே அடுத்துவரும் பாடலில் இருந்து இந்தக் கும்பாபிஷேகத்தின்போது
நடராஜரின் மூலமூர்த்தி தில்லைக்கு வெளியே இருந்தது என்பதும் தெரியவருகிறது.
45ம் எண்ணுள்ள செப்பேட்டின் படி, 1686ம் ஆண்டு, கனகசபையில் முற்றிலும் பொன்
வேய்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட செய்தி உள்ளது. இதுதான் இன்று நாம் காணும்
பொன்னம்பலம். இந்த நிகழ்வைக் குறிக்கும் கீழ்க்காணும் செப்பேட்டுப் பாடலில் நடராஜர்
தில்லையிலிருந்து வெளியேறி மீண்டும் திரும்பிவந்த காலக்கணக்கு துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருவிய சகாத்தம் ஆயிரமும் ஐநூற்றெழுப-
துக்கு மேல் சர்வதாரி
வருஷ மார்கழி மாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமாமலையில் நாற்பது மாதம்
அப்புறம் மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதிமின்-
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதி பதினாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருட்டிரத்தாதி திசமிக்கும் பத்தினில்
பாருயிரெலாம் உய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியவும்
தில்லை மாநகர் வாழவும்
தேவர்கள் துதிக்கவும் ஊருடைய முதலியார்
சிற்சபையும் மேவினாரே.

ஆக, நடராஜர் வெளியே இருந்த காலம் சகாப்தம் 1570 சர்வதாரி மார்கழி 25 (1648 டிசம்பர்
24) முதல் சகாப்தம் 1608 அட்சய வருடம் கார்த்திகை 14 (1686 நவம்பர் 14) வரை. அதாவது
37 ஆண்டுகள் 10 மாதம் 20 நாட்கள்.
மேற்கூறிய இரண்டு கும்பாபிஷேகங்களும் சாம்பாஜி மன்னரின் ஆணைப் படி நிகழ்ந்தன.
அவரது குலகுருவான முத்தைய தீட்சிதரின் வழிகாட்டலில் திருச்சிற்றம்பல முனிவர் நடத்தி
வைத்தார். பறங்கிப் பேட்டையில் மராட்டிய மன்னரின் அதிகாரியாக இருந்த கோபால் தாதாஜி
பண்டிதர் என்பவர் பொறுப்பேற்று திருப்பணிகளைக் கண்காணித்தார். இந்தச் செய்திகளும் இச்செப்பேடுகளிலிருந்து
தெரிய வருகின்றன.
இதற்குப் பின்னரும், இன்னும் ஒரு பத்தாண்டுகள், 1686 முதல் 1696 வரை மீண்டும்
நடராஜர் தில்லையிலிருந்து வெளியேறி திருவாரூரில் இருந்தார் என்ற செய்தி சிதம்பரம் கோயில்
ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது. ஔரங்கசீப்பின்
இஸ்லாமியப் படைகள் மராத்தியப் படைகளைத் துரத்தி வந்து செஞ்சியில் முகாமிட்டிருந்தது
இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சிவாஜியின் முதல் மனைவியின் மூத்த மகனாகப் பிறந்த சாம்பாஜியின் வாழ்க்கை பெரும்
போராட்டங்களும் துயரங்களும் தியாகமும் நிறைந்தது. அவர் உலகில் வாழ்ந்திருந்ததே 31 ஆண்டுகள்தான்.
ஆட்சியில் இருந்த காலம் பத்தாண்டுகள் கூட அல்ல. அவ்வளவு குறுகிய வாழ்க்கையில் இரண்டு
முறை தில்லை நடராஜரின் கும்பாபிஷேகம் அவரது ஆணையின் கீழ் நடந்திருக்கிறது என்பது மிகவும்
ஆச்சரியத்திற்குரிய விஷயம். இரண்டே
ஆண்டுகளில் சிற்சபைக்குக் கூரையிடும் அளவு பொன்னைத் திரட்டிய சாம்பாஜியின் பக்தியுணர்வும்,
முயற்சியும் வியக்க வைக்கின்றன.
1689ம் ஆண்டு சாம்பாஜி இஸ்லாமியப் படைகளால்
சிறைப்பிடிக்கப்பட்டார். ஔரங்கசீப்பின் ஆணைப் படி அவர் குரூரமாகச் சித்திரவதை செய்து
கொல்லப்பட்டார் என்பது வரலாற்றில் ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக,
ஔரங்கசீபின் முன் தலைவணங்கி இஸ்லாம் மதத்தை ஏற்றால் சாம்பாஜியை விடுவிக்கிறோம் என்று
ஆசைகாட்டப்பட்டது என்றும், சாம்பாஜி அதை மறுத்து மரணத்தைத் தழுவி தனது வீரமரபின் மேன்மையைக்
காத்தார் என்றும் மராட்டிய வீரகதைப் பாடல்கள் கூறுகின்றன. சாம்பாஜியை ‘தர்மவீரன்’ என்று
புகழ்கின்றன.

இனி அடுத்தமுறை சிதம்பரத்திற்குச் சென்றால், கனகசபையின் பொற்கலசங்களை நோக்கும்போது
இந்த வரலாறும் உங்கள் நினைவில் எழட்டும். ஸ்தலபுராணக் கதைகளோடு சேர்த்து, அந்தந்தத்
தலத்தின் புனிதத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக நமது முன்னோர்கள் தொடர்ந்து போராடிய
தியாக வரலாறுகளையும் அறிந்து கொள்வோம். அவற்றை நமது அடுத்த தலைமுறைக்கும் கூறுவோம்.

உசாத்துணைகள்:

[1] Hindu Temples: What Happened to Them: Vol. 2 (The
Islamic Evidence), Sita Ram Goel. Voice Of India, Ch. 7
[2] Temple desecration and Indo-Muslim states, Richard M
Eaton, Frontline, Jan 2001, pp 72-73
[3] இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன், பக். 487.
[4] South India and Her Muhammaden Invaders, JB Krishnaswamy
Aiyangar, pp 109.
[5] தில்லைப் பெருங்கோயில் வரலாறு (க.வெள்ளைவாரணர்), பக். 160-164

Posted on Leave a comment

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ‘என்றென்றும் அன்புடன்’ பாலா

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் என்ற பெருமை ஆண்டாள் நாச்சியாருக்குண்டு.
ஆண்டாள் என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு மார்கழி மாதமும், பாவை நோன்பிருந்து ஆண்டாள்
பாடிய திருப்பாவையும் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றன. ஆண்டாளின் திருப்பாவை அத்தனை
சிறப்புடையது. பன்னிரு ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை, நாதமுனிகள் என்ற வைணவப்பெருந்தகை
தேடித் தொகுத்து, இசையுடன் வழங்க, அதுவே நாலாயிர திவ்யப் பிரபந்தமாக வைணவக் கோயில்களில்
ஓதப்படுகிறது.

மார்கழி, என்னும் தமிழ் மாதம். ‘மாரி‘ என்ற வார்த்தையிலிருந்து உண்டானது. மார்கழிக்கு,
மழைக்காலம் கழிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். ஆயர்பாடியிலுள்ள கன்னியர்கள்,
நாட்டு நலத்திற்காகவும் பால் வளம் பெருகவும் நல்ல கணவர்களை அடையவும் நோன்பு நோற்றனர்.
மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்பட்டதால்
‘பாவை நோன்பு’ என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும்
எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி,
பார்வதி தேவியைப் பாடித் துதித்து வழிபட்டனர்.

தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள ஓர்
ஆயர்குலப் பெண்ணாகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, ‘பாவை நோன்பு’ நோற்ற சமயம் சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’.

கோதை நாச்சியார் என்ற இயற்பெயர் கொண்ட ஆண்டாள் அருளிய பிரபந்தங்கள் 2, திருப்பாவையும்,
நாச்சியார் திருமொழியும். 30 பாசுரங்கள்
கொண்ட திருப்பாவை, கோதா பிரபந்தம்/உபநிடதம் என்று வெகுவாகக் கொண்டாடப்படுகிறது.
இவற்றை
அருளிய சமயம் ஆண்டாள் பதின்ம வயதில் இருந்தாள் என்பது பாசுரங்களைப் பார்த்தாலே விளங்கும்.
அவரது பாசுரங்களை வாசித்து அனுபவிக்கையில், அந்தச் சின்னப்பெண்ணுக்குத் தமிழில் இருந்த
பெரும்புலமை பிரமிக்க வைக்கும். அதிலும் திருப்பாவை மிகக் கடினமான ‘இயல் தரவிணை கொச்சகக்
கலிப்பா’ வகையைச் சேர்ந்தது. ஆக, கோதை ஆண்டாள் தமிழையே ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில்
பதினெட்டு வயதுக்கு முன்னரே, திருப்பாசுரங்கள் அருளியவர்கள், தலையாய நம்மாழ்வாரும்,
ஆண்டாளும் மட்டுமே என்பது குறிப்பிடவேண்டியது.

ஆண்டாள் திரு ஆடிப்பூரத்து நாளில் துளசிச்செடிக்கு அருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள்,
திருப்பாவை முப்பதும் செப்பியவள், இராமானுஜருக்குத் தங்கையாகக் கருதப்படுபவள், ஒரு
நூற்று நாற்பத்து மூன்று உரைத்தவள் (நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் கொண்டது),
உயர் அரங்கர்க்கே கண்ணி (மாலை) உகந்து அளித்தவள். அதனால் அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.
பெரியாழ்வார் அரங்கனுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தான் ரகசியமாகச் சூடி கண்ணாடியில்
அழகு பார்த்து, பெருமாளை மணமுடிப்பதற்குத் தான் பொருத்தமானவளா என்றும் எண்ணிப்பார்த்துவிட்டே
கோதை அவற்றைக் கோயிலுக்கு அனுப்புவாளாம். ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு,
“இது தகாத காரியம்” என்று கடிந்து, அடுத்த முறை ஆண்டாள் சூடிப் பார்க்காத மாலையை எடுத்துச்
சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உவப்பானது; அதை எடுத்து வாரும்!”
என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து போய், ‘நம் பெண் மானுடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமிபிராட்டியின்
அம்சமாக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று தன் பெண்ணை அழைக்கலானார்.
மணப்பருவம் வந்தவுடன், கோதையை அலங்கரித்து பெரியாழ்வார் திருவரங்கத்துக்கு அழைத்து
வந்து, அரங்கனின் சன்னதியில் அவளை விட்டுவிட, கோதை அரங்கனுடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்
என்பது குரு பரம்பரை சொல்லும் ஆண்டாள் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல
நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் இருக்கின்றன.

அப்பரந்தாமனையே தனது உடைமையாக்கிக் கொண்டு, அந்த உரிமையை என்றைக்குமாகத் தக்க
வைத்துக்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவை/நாச்சியார் திருமொழிப்
பாசுரங்களில் காணப்படும் கடலை ஒத்த பேரன்பும், பிரவாகமாகப் பெருக்கெடுக்கும் பக்தி
ரசமும், கவிதை நயமும், அழகியல் உணர்வும் தனித்துவமானவை. ஒரு தெய்வப் பெண்ணின் காலத்தினால்
அழியாத தமிழ்ப் புலமைக்கும், கவித்துவ அழகுக்கும் நாம் தரும் மரியாதைக்கும் கௌரவத்திற்கும்
இன்றளவும் சாட்சிகளாக, வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும்,
பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன.
உடையவர் என்று போற்றப்பட்ட ராமானுஜர், ஆண்டாள் மீது பெரும்பக்தி கொண்டு, தினம்
பலமுறை திருப்பாவையை ஓதி வந்தார். திருப்பாவையின் மீது இருந்த ஈடுபாடே ராமானுஜருக்கு
‘திருப்பாவை ஜீயர்’ என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது.
ராமானுஜர் திருப்பாவை குறித்த உபன்யாசங்கள் செய்ததோ, விளக்கங்கள் எழுதியதோ கிடையாது.
அதற்கு ஆண்டாள் மீது உடையவருக்கு இருந்த பிரியமும், பெருமதிப்பும் ஒரு காரணம். இன்னொரு
காரணம், தான் திருப்பாவைக்கு ஈடு எழுதும் பட்சத்தில், பின்னாளில் யாரும் அதற்கு வித்தியாசமான
விளக்கம் எழுதத் துணியமாட்டார்கள் என்று அவர் கருதினார். ராமானுஜருக்கு விரிந்த தொலைநோக்குப்
பார்வை இருந்ததும், திருப்பாவையின் சீர்மையும் இதனால் நமக்குப் புரியலாம்.

ஒரு சின்னப்பெண் எழுதிய திருப்பாவையில் சின்னச்சின்ன விஷயங்கள் நம்மை வியப்பில்
ஆழ்த்தும். ஐந்து இறை நிலைகளில், முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணனே நமக்கே),
2வதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), 3வதில்
விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), 4வதில் அந்தர்யாமியாக
எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் (ஊழி முதல்வன் உருவம் போல்), 5வதில் கோயில்களில்
எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தையும் (மன்னு வடமதுரை மைந்தனை) சூடிக்கொடுத்த
நாச்சியார் பாடியிருக்கிறாள். ஆக, ஆண்டாள். வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூக,
விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடியிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பாவையின் 30 பாசுரங்கள் தரும் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல விழைகிறேன்.

முதல் பாசுரத்தில் (மார்கழித் திங்கள்), நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள்
(கண்ணன்) குறித்தும்,
2-வது பாசுரத்தில் (வையத்து வாழ்வீர்காள்), நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,
3-வது பாசுரத்தில் (ஓங்கி உலகளந்த), நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,
4-வது பாசுரத்தில் (ஆழிமழைக்கண்ணா), மழைக்காக வருணனை வேண்டியும்,
5-வது பாசுரத்தில் (மாயனை மன்னு வடமதுரை), நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை
கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,
6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரிடம்,
உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியவர் கூட்டத்தோடுச்
சேருமாறு விண்ணப்பித்தும்,
16-வது பாசுரத்தில் (நாயகனாய் நின்ற), நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை
எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,
17-வது பாசுரத்தில் (அம்பரமே சோறே), நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான்,
பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,
18-வது பாசுரத்தில் (உந்து மதக்களிற்றன்), நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன்
விழித்தெழ வேண்டியும்,
19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும்
உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,
21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப்
போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை
மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,
23-வது பாசுரத்தில் (மாரி மலை முழைஞ்சில்), கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில்
அமர வேண்டியும்,
24-வது பாசுரத்தில் (அன்று இவ்வுலகம் அளந்தாய்), அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம்
செய்தும்,
25-வது பாசுரத்தில் (ஒருத்தி மகனாய் பிறந்து), (கோபியர்) தங்களை ரட்சித்து
அரவணைக்க அவனைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,
26-வது பாசுரத்தில் (மாலே மணிவண்ணா), நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,
27-வது பாசுரத்தில் (கூடாரை வெல்லும்), பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்)
தாங்கள் வேண்டும் பரிசுகளைப் பட்டியலிட்டும்,
28-வது பாசுரத்தில் (கறவைகள் பின்சென்று), (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின்
மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை
பற்றியும்,
29-வது பாசுரத்தில் (சிற்றஞ்சிறுகாலே), எந்நாளும் பிரியாதிருந்து கண்ணனுக்குத்
திருச்சேவை செய்வதற்கு அருள வேண்டியும்,
30-வது பாசுரத்தில் (வங்கக்கடல் கடைந்த) திருப்பாவை ஓதும் அடியவர் கண்ணபிரானின்
அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்,
30 அதி அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை,
தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார் ஒரு கிருஷ்ண காவியத்தையே
படைத்துள்ளார்.

திருப்பாவைக்கு ராமானுஜ சம்பந்தம் காட்டும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. பிட்சை
பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல்தான்
செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்க ஓதியபடி செல்லும் பழக்கம் இருந்ததால்,
பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே
கருதினார்.

ஒரு சமயம், திருப்பாவையைப் பாடியபடி (திருக்கோட்டியூரில்) பிட்சைக்குச் சென்ற
ராமானுஜர், ‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்’ என்ற 18வது பாசுரத்தை பாடிய வண்ணம்
தனது குருவான திருக்கோட்டியூர் நம்பி அவர்களின் வீட்டு வாசற்கதவைத் தட்டினார். பிட்சையோடு
வந்த பெரிய நம்பியின் மகளான அத்துழாய் கைவளை குலுங்கக் கதவைத் திறக்கவும், ராமானுஜர்
‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி முடிக்கவும் சரியாக
இருந்தது. அவளைக் கண்ட மாத்திரத்தில், பாசுர வரிகளில் லயித்திருந்த ராமானுஜர், அத்துழாயை நப்பின்னை பிராட்டியாக எண்ணிக்
கொண்டு, நெடுஞ்சாண்கிடையாக அவள் கால்களில் விழுந்து சேவித்து, மயங்கிவிட்டார்.

அத்துழாய் பயந்து போய், தன் தந்தையான பெரிய நம்பியைக் கூட்டி வர, அவர் மிகச்
சரியாக ராமானுஜர் ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தைப் பாடியபோதுதான் இப்படி ஒரு நிகழ்வு
ஏற்பட்டு அவர் மயங்கியிருக்கவேண்டும் என்பதைக் கணித்து விட்டார். ஆக, இப்பாசுரம் உடையவருக்கு
மிகவும் உகந்தது. அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக
இருந்து வருகிறது.

இப்பாசுரம் தரும் வைணவச்சிந்தாந்தச் செய்தியைக் கவனித்தல் அவசியம்.

கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பந்தார் விரலி என்று பாடும்போது, கண்ணனோடு பூப்பந்து விளையாடி அதில் அவனைத்
தோற்கடித்து விட்டு, கண்ணனை ஒரு கையாலும், பூப்பந்தை ஒரு கையாலும் அணைத்த வண்ணம் கிடந்த
நப்பின்னையின் கோலம் சித்தரிக்கப்படுகிறது. ஐம்புலன்களில் ‘தொடுதல்’ என்பது மேலே சொல்லப்பட்டது.
அது போல, மற்ற நான்கு புலன்களின்அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு.

கந்தம் கமழும் குழலி – மூக்கு
உன் மைத்துனன் பேர் பாட – நாக்கு
சீரார் வளையொலிப்ப – செவி
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ – கண்

வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர்
(ஒன்றே) என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும்
(இலக்கு) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை வடமொழியில், ‘ஏக சேஷித்வம்’ என்றுரைப்பார்கள்.

திருப்பாவையின் 6-15 பாசுரங்கள் (புள்ளும் சிலம்பின காண் முதல் எல்லே இளங்கிளியே
வரை உள்ள 10 பாசுரங்கள்) ‘ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி’யாக, அதாவது ஒவ்வொரு பாசுரமும்
ஓர் ஆழ்வாரை (முறையே, பெரியாழ்வார், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார்,
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
திருமங்கையாழ்வார்) துயிலெழுப்புவதாகச் சொல்வது ஒரு வைணவ மரபு. அதற்கான சுவையான விளக்கங்களும்
உண்டு. பன்னிருவரில், ஆண்டாளும், மதுரகவியாரும் துயில் எழுப்பப்படவில்லை.

எல்லா ஆழ்வார்களுக்கும் மனதுக்கு நெருக்கமான வாமன அவதாரத்தை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*— பாசுரம் 3
அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே — பாசுரம் 17
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! — பாசுரம் 24
என்று ஆண்டாள் 3 இடங்களில் போற்றியிருக்கிறார். பெருமாள் த்ரிவிக்ரமனாக எடுத்து
வைத்த 3 அடிகளில், பூமியை அளந்த திருவடியைத்தான் கோதை நாச்சியார் போற்றியிருக்கிறார். 

விசுவரூபமெடுத்த பரமனின் பிரமாண்டத் திருவடியானது, இந்த பூமியை நீக்கமற வியாபித்ததால்,
(ஆழ்வார்களும், எந்தை இராமனுசரும் இன்னும் பல மகான்களும் வந்துதித்த) மண்ணுலகம் முழுதுமே
புண்ணிய பூமிதானே! திரிவிக்ரமனே புருஷோத்தமன் (புருஷ உத்தமன்). பரமன் வாமனனாகி மூவுலகை
அளந்த காலத்தில், அவனது திருவடியானது, அடியவர்-கொடியவர் என்று பாராமல் அனைத்து உயிர்களையும்
தொட்டு ரட்சித்தது.

முதல் மூன்று ஆழ்வார்களும் முறையே ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள்
அருளிய புண்ணியத்தலமான திருக்கோவலூரில் ‘நடந்த’ கோலத்தில் அருள் பாலிக்கும் உலகளந்த
பெருமாளை, கோதைக்கு உகந்த கண்ணனாகப் பார்க்கிறோம். எப்படி? திருக்கோவலூர் திவ்வியதேசம்
பஞ்ச கிருஷ்ண சேத்திரங்களில் முதன்மையானது. (மற்ற நான்கு, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி,
திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகியவையாம்.) ஏனெனில், இத்திருத்தலம் ஓர் ஆதி கிருஷ்ண சேத்திரம்.
இங்கு சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆகையால்,
இக்கண்ணபிரானையே (உலகளந்த பெருமாள் இருந்தாலும்) இத்திருத்தலத்தின் கதாநாயகனாகச் சொல்வது
வைணவ மரபு.

‘நாச்சியார் திருமொழி’ என்பதே, திருமால் மீது மையல்கொண்ட கோதை அவனை எப்படியாவது
அடைந்துவிடும் ஆசையை வெளிப்படுத்தும் அற்புதமான காதல் பாசுரங்கள்; எப்படியாவது தன்னை
அவ்வழகிய மணவாளனிடம் சேர்த்து விடு என்று ஆண்டாள் காமதேவனை வேண்டி நோன்பு நோற்பதில்
தொடங்கி, பின் கண்ணனின் லீலைகளில் திளைத்து, காதலில் உருகியுருகி பாடியவை அவை.

தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற குழந்தைத்தனமான
விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலின்
பெருமை பேசுதல், தூது விடுதல்; வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்யும் பிரமாண்டமான கல்யாண
ஊர்வலத்தைக் கனவு காணுதல்; அவன் ஆடையை என்மேல் வீசுங்கள், அவன் திருக்கேசத்தை அலங்கரித்த
துளசி மாலையை என் குழலில் சூட்டுங்கள், அவன் திருமார்பில் தரித்த மாலையை எனக்கு அணிவியுங்கள்,
அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள்,
அவன் திருவடி மண்ணை என் மேல் பூசுங்கள் என்று காதல் அரற்றல்கள்… இப்படி நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் ஒரு
சராசரிப் பெண்ணின் பாசாங்கற்ற அதி தீவிரக் காதல் இருப்பதை உணரலாம்.
நாச்சியார் திருமொழியில் பக்தி யோகம் தெரியவில்லையே என்று சந்தேகம் கொள்பவர்,
இது பெரும்பக்தியையும் தாண்டிய ஓர் உன்னத நிலை என்பதைப் புரிந்து உணரவேண்டும். அரங்கனைத்
தன் மணாளனாக மனதில் வரித்துக்கொண்டு, ஆண்டாள் அவன் மீது எடுத்துக்கொண்ட உரிமை, காமம்
என்ற வரையறைக்குள் வரவே வராது. அவனுடன் ‘சேர’ வேண்டும் என்பதான கோதையின் விருப்பம்,
வைகுந்த (மீள்) வாசத்திற்கான பூமிப்பிராட்டியின் ஏக்கம்.

ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண்ணைப் போலவே தன் காதல் வெற்றிக்காக நேர்ந்து கொண்டதைப்
பார்க்கலாம்.

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ

என்று நாச்சியார் திருமொழிப் பாசுரம் வாயிலாக வேண்டுதல் மேற்கொண்டவள், திருவரங்கத்திற்குப்
போய் அரங்கனின் கருவறையில் கரைந்துவிட்டாள். ‘நூறு அண்டா வெண்ணெய்யும் நூறு அண்டா
சக்கரைப்பொங்கலும்’ என்ற அவளது நேர்த்திக் கடனை யார் செலுத்துவது? சில நூற்றாண்டுகள்
கழிந்தன.

வைணவம் தழைக்க வந்த எந்தை ராமானுசமுனி என்கிற எம்பெருமானாருக்கு, ஆண்டாள் தன்
வேண்டுதலை நிறைவேற்றியிருப்பாளோ மாட்டாளோ என்ற நெருடல் ஏற்பட்டது. திருமாலிருஞ்சோலைப்
பெருமாளுக்கான கோதையின் நேர்த்திக்கடனை செலுத்தும் கடமையைத் தான் மேற்கொண்டார். பின்பு
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். வில்லிபுத்தூர் வந்தடைந்த ராமானுஜருக்கு
ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆண்டாளது கோயிலின் அர்த்தமண்டபத்தில் ராமானுஜர் நுழைந்தபோது,
அங்கே அவருக்காகக் காத்திருந்த ஆண்டாளே அவரை வரவேற்று, தனது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக
அவருக்கு நன்றி தெரிவித்தாள். அவரை ‘அம்மான்’ என்று அன்போடு அழைத்தாள் ஆண்டாள்.

அதாவது, ஒரு பொறுப்புள்ள தமையன் எப்படித் தனது தங்கையின் விருப்பத்தைப் பூர்த்தி
செய்வானோ, அப்படி ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்னான’ தனது விருப்பத்தை நிறைவேற்றிய ‘அண்ணனான’
ராமானுஜருக்காக கர்ப்பகிருகத்திலிருந்து வெளியே வந்த கோதை நாச்சியார் அதன்பிறகு உள்ளே
செல்லவே இல்லை. அன்றிலிருந்து அர்த்தமண்டபத்திலேயே, தனது மணாளன் வடபத்ரசாயியுடன் சூடிக்
கொடுத்த சுடர்க்கொடி எழுந்தருளி இருக்கிறாள். அன்றிலிருந்து ராமானுஜருக்கும் கோதக்ராஜர்
என்ற திருநாமம் வழங்கலாயிற்று. ஆண்டாளின் அன்புக்குரிய தமையன் ஆனார். அதனால்தான் இன்றும்,
ஆண்டாளுக்கு வாழி சொல்லும்போது ‘பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்கிறோம்.