Posted on Leave a comment

வலம் மார்ச் 2017 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் மார்ச் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.
  
கேமரா கனவுகள் – சுஜாதா தேசிகன்


திராவிட அரசியலின் அராஜக முனை  – ஓகை நடராஜன்


ஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் – அரவிந்தன் நீலகண்டன்


நிவேதிதா பிடே: சேவைக்கு விருது – பாலா


டி.கே.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் – மிருதங்கக் கலைஞர் ஈரோடு நாகராஜ்


கலிங்கத்துக் கோயில் பரணி – ஜெ.ராம்கி


கலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் – வல்லபா ஸ்ரீநிவாசன்


புலாலும் ஆரியமும் – பத்மன்


பட்ஜெட் 2017 – ஜெ.ரகுநாதன்


நீட்டாக ஒரு தேர்வு –  B.K. ராமச்சந்திரன்


கொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) – ராமசந்திரன் உஷா


கார்ட்டூன்கள் –  ஆர்.ஜி.


ஆதிகவியின் முதல் கவிதை – பெங்களூரு ஸ்ரீகாந்த்

Posted on Leave a comment

ஆதிகவியின் முதல் கவிதை – பெங்களூர் ஸ்ரீகாந்த்

கவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ புறத்திலும் அகத்திலும் காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனாகவும்,  சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயாகவும், புயலில் அலைவுறும் மரமாகவும், சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களாகவும் பல தோற்றங்களை ஒரே கவிஞனால் சமைக்க முடிவதற்குக் காரணம், காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே அவன் ஆகி விடுவதால் தான். அறிவைக் கொண்டு எழுதும் கவிதைகளை விட, ஆன்மாவிலிருந்து பிறக்கும் கவிதைகளே மேம்பட்டவையாக இருக்கின்றன என்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.

கவிதை புனைவது இருக்கட்டும். கவிதையைப் படித்து உணருவதற்கே எதையும் தூலமாக மட்டுமே அறியும் தட்டையான பகுத்தறிவு உதவாது. எத்தனையோ விசித்திரங்களை, அழகுகளை, அவலங்களை அது தரும் மனவெழுச்சிகளை ஆன்மாவால் கண்டுணரும்போது, இறைத்தன்மையைக் கூட உணரமுடியும். ஆனால் அதை தருக்கம் தரும் அறிவால் மட்டும் காணும்போது வெறுமையே எஞ்சுகிறது. நமது புராண இலக்கியங்களை ஆழ்ந்து படிக்கும்போது இது புரியும்.

ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் பாடல் உலகைப் படைத்த பிரமனையே ஒரு ஆதி கவிஞனாகத் தான் உருவகப் படுத்துகிறது (”தேனே ப்³ரஹ்ம ஹ்ருʼதா³ய ஆதி³கவயே”). அத்தகைய மகா கவிஞனான பிரம்மன் ஒரு மனிதனைச் சந்திக்க வருகிறான். அந்த மனிதனும் சாதாரணமானவன் அல்ல, இறைநிலை எய்தியவன். மனிதன் இறைத்தன்மையை அடையும் சில தருணங்களில் தான் மனிதனால் இறைவனைச் சந்திக்க முடிகிறது. பிரம்மனே இறங்கி வந்து சந்தித்த அந்த தருணத்தில் தான் அந்த மனிதன் தானே புதியதாக ஒன்றைப் பிறப்பித்திருக்கிறான். அது என்ன என்று அவனுக்கே இன்னும் சரிவர தெரியவில்லை. கிமித³ம் வ்யாஹ்ருதம் மயா? என்ன செய்திருக்கிறேன் நான்? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறான்.

There is pleasure in poetic pains which only poets know என்கிறார் வேர்ட்ஸ்வொர்த். வால்மீகி என்னும் அந்த மனிதனை பிரம்மன் கண்ட தருணத்தில் இருவரும் ஒன்றிப் போனார்கள். ஒருவர் தூலமான உலகைப் படைப்பவர். இன்னொருவர் நுண்ணிய மன உணர்வுகளை உருவாக்கும் கவிதை உலகைக் படைப்பவர்.  இவ்விருவரும் சந்திப்பதே ஒரு கவித்துவமான நிகழ்வுதான்.

***
வால்மீகி முனிவர் பிரசேதஸ் என்பவரின் பத்தாவது பிள்ளை. சில புராணக் கதைகளின்படி காட்டில் வேடனாகவும், திருடனாகவும் இருந்தவர். பின்னர் ஒரு காலகட்டத்தில் மனம் மாறுதல் அடைந்து துறவு கொண்டு, நீண்ட நெடிய காலம் தவம் மேற்கொள்கிறார். தவத்தின் பலனாக அவர் இவ்வுலகில் இன்பமோ, வேறொரு உலகத்தில் சுகமோ தேடியதாகத் தெரியவில்லை. மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து எழுந்து வந்த அவரது வாழ்வில், தேடல் என்பது மனித வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள், அவற்றுக்கு காரணமாக அமையும் நல்வினை தீவினை ஆகியவற்றை அறிந்து கொள்ள அவர் மனம் ஏங்குகிறது.

ஒரு நாள் நாரதரைச் சந்திக்கிறார். நாரதர் பிரம்மனின் பிள்ளை என்று புராணங்கள் கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது. நாரதரிடம் வால்மீகி கேட்கும் சில கேள்விகளே நமக்கு அவரது தேடலை உணர்த்துகின்றன. இவ்வுலகில் தற்சமயம் வாழும் உன்னதமான மனிதன் யார்? நல்ல குணம் பொருந்தியவனாகவும், வீரனாகவும், தருமம் மிகுந்தவனாகவும், உண்மையும் உறுதியும் உள்ளவனாகவும், நல்ல செயல்கள் செய்தவனாகவும், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாகவும், கல்விமானாகவும், ஏற்றத்தாழ்வு பாராமல் எல்லோரையும் ஒன்றாக எண்ணக் கூடியவனாகவும், தன்னை வென்றவனாகவும், கோபத்தை அடக்கியவனாகவும், வானுறையும் தேவரும் போர் புரிய அஞ்சுபவனாகவும் இருப்பவன் யார்? இவ்விதம் உள்ள மனிதன் குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்கிறார் வால்மீகி.

இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்றால் இறைவனே மனிதனாக வந்தால் தான் உண்டு. அப்படி இறைவன் மனிதனாக வந்து வாழ்ந்த கதையைத் தான் சுருக்கமாக நாரதர் வால்மீகிக்குச் சொல்கிறார். தான் கேட்ட ராமனின் வாழ்க்கைச் சம்பவங்களை எண்ணிய படியே வால்மீகி தன் சீடருடன் தமஸா நதியின் கரையில் நடந்து செல்கிறார். அப்போது ஒன்றுடன் ஒன்று கூடிக் களித்துக் கொண்டிருக்கும் இரு புறாக்களைக் காண்கிறார். அன்பின், ஆசையின், இன்பத் தேடலின், அறத்தின் இணைநிலை அது. அந்நிலையில் சட்டென ஆண் புறா அம்பு தைக்கப் பட்டு இறந்து விழுகிறது. இணைந்திருந்த அந்த பறவைகளில் ஒன்றை நோக்கி ஒரு வேடன் அம்பெய்தி இருப்பதை வால்மீகி காண்கிறார். தன் இணை இறந்து வீழ்ந்ததை எண்ணிக் கதறிப் புலம்புகிறது பெண் புறா. இந்தக் காட்சி வால்மீகியைத் துணுக்குறச் செய்கிறது. அவர் வாயினின்று உடனே சாபச் சொல் வெளிப்படுகிறது. .

மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³ம: ஶாஶ்வதீ: ஸமா: |
யத்க்ரௌஞ்ச மிது²நாதே³கமவதீ⁴: காமமோஹிதம் ||

வேடனே! இணையான கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றை நீ கொன்றதால்,
இனி எக்காலத்திலும் நீ நிலையாக இருக்க மாட்டாய் (மரணம் அடைவாய்)!

வால்மீகியின் எண்ணமும் காட்சியும் இணைந்து மிகுந்த சோகத்தில், வால்மீகியின் நாவிலிருந்து எழுந்த இந்த கவிதையே ஆதி முதல் கவிதை என்று கருதப் படுகிறது.. ராமாயணம் கருணை,  சோகம் ஆகிய ரசங்களைப் பிரதானமாகக் கொண்ட காவியம் என்பதற்கு இந்த கவிதை வித்தாக அமைகிறது.

பெரும் அநியாயம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மனித மனத்தை உலுக்கி அதன் அபத்தங்களைக் காட்டும் காவியங்கள் ராமாயணத்துக்குப் பின்னரும் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ராமாயணமே அவற்றுக்கு முன்னோடியாக உள்ளது. ***

வால்மீகிக்கு முன்பே வேத இலக்கியங்களில் சந்தங்கள் (சந்தஸ்) இருந்தாலும், அனுஷ்டுப் சந்தஸாக இருந்த இலக்கணம் அனுஷ்டுப் ஸ்லோகமாக மாறியது வால்மீகியிடம் தான். மேலும் எழுத்தில் வடிக்க முடியாத ஸ்வரங்கள் உள்ள வேத கவிதைகளில் இருந்து மாறுபட்டு, ஸ்வரங்கள் இல்லாமல் இலக்கியங்கள் உருவாக்கப் பட முன்னோடியாக அமைந்ததும் வால்மீகியின் ராமாயணம் தான். தமிழில் மரபுக் கட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக புதுக்கவிதை பிறந்ததைப் போன்ற ஒரு உருவாக்கம் தான் இது.  பின்னாளில் ராமாயணத்தை ஒற்றியே, வேத இலக்கணத்தின் சந்தங்கள் யாவும் கவிதைக்கு உகந்த சந்தங்களாக மாறின. இத்தகைய கவிதைகள் ஸ்லோகம் என்ற பெயரைப் பெற்றதும் அப்போதுதான். வால்மீகியின் சோகத்திலிருந்து பிறந்து தான் ஸ்லோகம்.

ஶோகார்தஸ்ய ப்ரவ்ருʼத்தோ மே ஶ்லோகோ ப⁴வது நான்யதா²|
(பாலகாண்டம் 1-2-18)

சோகத்தினால் பிறந்தது ஸ்லோகம் ஆகட்டும்.

ஸ: அனுவ்யாஹரணாத் பூ⁴ய: ஶோக: ஶ்லோகத்வம் ஆக³த: |
(பாலகாண்டம் 1-2-40)

அதனைத் திரும்ப திரும்ப இசைத்ததால் சோகம் ஸ்லோகம் ஆனது.

வேதக் கவிதைகளின் சந்தங்கள் ஒரே போல அமைந்தது இல்லை. ஆர்ஷப் ப்ரயோகம் அல்லது ரிஷியின் பயன்பாடு என்ற சமாதானத்துடன் அவை இலக்கண ஒழுங்குகளை மீறுவதாகவே இருந்தன. ஆனால் வால்மீகியின் ராமாயணத்திலிருந்து தான் கவிதைகள் சந்த ஒழுங்கு பெறுகின்றன.

வால்மீகியின் அந்த முதல் கவிதைக்கு இலக்கணப் படி சந்தி பிரித்து, நேரடி அர்த்தம் பார்க்கும்போது அதன் பொருள் இவ்வாறு அமைகிறது: ஏ திருவற்ற வேடனே (ஹே அம நிஷாத³), தன் இணையுடன் காமத்தில் மூழ்கி இருந்த புறாக்களில் ஒன்றை வீழ்த்திக் (காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம்), கொன்றாய் (அவதீ⁴). ஆகையால், நீ (த்வம்) பல ஆண்டுகள் நிலைத்த நிலையை (ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ) மா க³ம: (அடையமாட்டாய்).  பறவை இணைகளில் ஒன்றைக் கொன்ற வேடனை நீ நீண்ட நாட்கள் இருக்க மாட்டாய் என்று சபிப்பதாக இது அமைந்துள்ளது.

இங்கே சற்று யோசிக்க வேண்டும். வால்மீகி போன்ற ஒரு மாமுனிவருக்கு வேட்டையாடுதல் பற்றி தெரியாதா? வேடன் தன் தொழிலைச் செய்ததற்கு மரணத்தையே சாபமாக கொடுப்பது ஏன்? வால்மீகி ராமாயணத்தின்படி  ராமனே வேட்டையாடி இருக்கிறார். மாமிசம் உண்டிருக்கிறார். வாலியிடம் உன்னைக் கொன்றது வேட்டையாடுவது போலத் தான் என்று வாதிட்டிருக்கிறார்.

ப்ரமத்தானப்ரமத்தான்வா நரா மாம்ʼஸார்தி²னோ ப்⁴ருʼஶம்|
வித்⁴யந்தி விமுகா²ம்ʼஶ்சாபி ந ச தோ³ஷோ(அ)த்ர வித்³யதே ||
(கிஷ்கிந்தா காண்டம் 4.18.38)

“மாமிசத்தை விரும்பக்கூடிய மனிதர்கள், கவனமுடைய/கவனமில்லாத மிருகங்களை வேறு பக்கம் நோக்கிக் கொண்டிருந்தாலும், கொல்கிறார்கள். இதில் தோஷம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே வேடன் ஒரு பறவையைக் கொன்றதற்காக மட்டும் வால்மீகி மகரிஷி சாபம் இட்டிருக்க முடியாது. இங்கே தான் காம மோஹிதம் என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது. தன் இணையுடன் சேர்ந்து இருக்கும் நிலையில் காமத்தில் மூழ்கி உள்ள நிலையில் என்று கூறும் போது, மரணத்தை விட கொடுமையான துன்பத்தை, அந்த இணைப் பெண் பறவைக்குக் கொடுத்ததற்காகவே சபிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணாகிய சீதையின் துன்பமே ராமாயணக் கதையாக உருவாகி உள்ளது. சீதையைப் போலவே அந்தப் பறவை துன்பப்படுவதை அவர் உணர்ந்ததாலேயே வேடனுக்குச் சாபம் அளித்திருக்கக் கூடும்.

ஒப்பு நோக்கில், மஹாபாரதத்திலும் இத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. காட்டில் வேட்டைக்குச் சென்ற பாண்டு, இரண்டு மான்கள் கூடி இருக்கும் நிலையில் ஒரு மானை அம்பால் அடித்து விடுகிறான். உண்மையில் ஒரு ரிஷி குமாரன் மான் உருக்கொண்டு தன் இணையுடன் சேர்ந்து இருந்த நிலை அது. இறக்கும் தருவாயில் தன் மனித உருப்பெற்ற ரிஷி குமாரன், சபிக்கிறான்.

ம்ருʼக³ரூபத⁴ரம்ʼ ஹத்வா மாம் ஏவம்ʼ காமமோஹிதம் |
அஸ்ய து த்வம்ʼ ப²லம்ʼ மூட⁴ ப்ராப்ஸ்யஸீத்³ருʼஶம ஏவ ஹி ||
(மஹாபாரதம் ஆதிபர்வம்)

“மூடனே, காம மோகத்தில் இந்த மிருகத்தினுடைய உருத்தரித்த என்னைக்கொன்று, இதே போன்ற என் நிலையை (மரணத்தை) நீயும் அடைவாய்”.

அதனாலேயே பாண்டு பின்னொருநாள் மனைவியுடன் கூடும் சமயத்தில் இறக்க நேரிடுகிறது. அக்காலத்தில் வேட்டையாடும் போது, இணையாக சேர்ந்து இருக்கும் மிருகங்களை கொல்லக் கூடாது என்ற தர்மம் இருந்திருக்கிறது.

***
வால்மீகியின் இந்த முதல் கவிதைக்கு வேறு பலவிதமாக அர்த்தங்களையும் அளிக்கிறார்கள்.  ராம காவியத்தின் தொடக்கமாக வரும் இந்த ஸ்லோகம், வால்மீகியின் சோகத்தில் எழுந்த சாபமாக அமைந்தது பாரம்பரிய உரையாசிரியர்களுக்கு உவப்பாக இல்லை. ஆகவே சொற்களைப் பிரித்து அர்த்தம் கூறும் தொழில் நுட்பத்தில் தேர்ந்த அவர்கள் இதற்கு வேறு விதமாகவும் சுவாரசியமாகப் பொருள் கூறுகிறார்கள்.

மா  என்றால் திரு.நிஷாத என்றால் இருப்பிடமாக இருப்பவர் (நிஷீத³ந்தி அஸ்மின் இதி நிஷாதோ³ நிவாஸ: ). அதாவது, திருவற்ற வேடன் என்று முன்பு கொண்ட பொருள் திருமகளின் உறைவிடமாக உள்ள திருமால் என்று ஆகிவிடுகிறது.

மாநிஷாத³ த்வம் ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ க³ம:

திருமகளின் உறைவிடமான திருமாலே, நீ பல்லாண்டு நீடித்த நிலையை அடைவாய்.

யத் காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴

ஏனெனில் காமத்தால் மதியிழந்து (சீதையை அபகரித்த) இரட்டையரில் (ராவணன் – மந்தோதரி) ஒருவரைக் கொன்றாய்.

ராவணனைக் கொன்று மூவுலகையும் காத்ததால் என்றென்றும் நிலைபெற்ற தன்மையை அடைவாய் என்று மங்கள வாழ்த்துச் சொல்வதாக கோவிந்தராஜரின் உரை கூறுகிறது.

மற்றொரு உரையில் இந்த ஒரு ஸ்லோகத்திலிருந்தே ராமாயணத்தின் ஏழு காண்டங்களில் உள்ள உட்பொருளும் உரைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதாவது  மா நிஷாத³ என்பது ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த பால காண்டத்தையும், ப்ரதிஷ்டா²மக³ம: ஶாஶ்வதீ: ஸமா: என்ற சொற்களில் ராமன் பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அரச போகத்தை தியாகம் செய்து பெரும்புகழ் அடைந்த அயோத்யா காண்டத்தையும், க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴ என்ற சொற்களில், ஆரண்யகாண்டத்தில் ராமனும் சீதையும் பிரிந்ததையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி – தாரை இணைகளில் வாலியின் வதமும், ராமனும் சீதையும் பிரிவுத் துயர் படும் சுந்தர காண்டமும், ராவணன் – மந்தோதரி இணையில் ராவண வதம் நிகழும் யுத்த காண்டமும், ராமனை சீதை நிரந்தரமாக பிரியும் உத்தர காண்டமும் குறிப்பால் உணர்த்தப் படுவதாக கூறப் படுகிறது.

வேறொரு உரை இந்த சம்பவங்களில் நவரசங்களும் இருப்பதாகக் கூறுகிறது. ஆரம்பிக்கும்போது, காட்டு வர்ணனையில் சாந்த ரசமும், கிரௌஞ்ச பறவைகளின் களிப்பில் சிருங்கார ரசமும், ரௌத்திரம், பயம் ஆகிய ரசங்கள் வேடன் ஆண் பறவையை அடித்துக் கொன்ற நிகழ்விலும், இணையை இழந்து கதறும் பறவையின் ஓலத்தில் பீபத்ஸ (அருவருப்பு) ரசமும், தன் இணையைப் பிரிந்தது குறித்த சோகத்தில் கருணா ரசமும், இதையெல்லாம் கண்டு அதிசயிக்கும் கவி, அவரைக் காண படைப்பின் கடவுளின் வருகை ஆகியவற்றில் அத்புத ரசமும் வெளிப்படுவதாகக் கூறுகிறது.

***

ஆதி கவி முதல் கவிதை சமைத்த அந்த தருணத்திற்காக முதலில் பிரமனின் பிள்ளையான நாரதர் வருகிறார். பின்னர் பிரமனின் மனைவி சரஸ்வதி ஸ்லோக ரூபமாக வால்மீகியின் நாவில் வருகிறாள். பின்னர், இணையற்ற ஒரு காவியத்தை உலகுக்கு தருமாறு கேட்க பிரம்ம தேவனே வருகிறார். அப்படிப் பிறந்த காவியத்துக்கு இன்றளவும் மனித மனத்தைத் தொடும் மகத்தான ஆற்றல் இருப்பதில் வியப்பில்லை. ஆதி சங்கரர் கவி என்கிற சொல்லுக்கு க்ராந்த தர்சி என்று விளக்கம் கூறுகிறார். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் வாழ்வை ஆழமாகவும் அகலமாகவும் உணரக்கூடியவர். இந்த அடைமொழி வால்மீகிக்கு சாலப் பொருந்தும்.

“ராமாயணக் கதையின் உட்கருத்தில், அதன் ஆன்மாவில் எல்லோராலும் நுழைந்து விட முடிவதில்லை. ஆனால் அப்படி நுழைந்தவர்கள் அதற்குப் பிறகு இந்த உலகில் தோன்றிய வேறு எந்த காவியத்தையும் ராமாயணத்துக்கு மிஞ்சியதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்கிறார்  ஸ்ரீஅரவிந்தர். . நவீனயுகத்தின் நுகர்வுக் கலாசாரத்தில் கவிதைக்கு இடமிருக்குமா என்று விசனப் படவும் செய்கிறார் –   “வரலாற்றின் கண்களுக்கு மட்டுமே தெரிந்த மக்களைக் கொண்ட இறந்த காலத்தின் முடிவற்ற அமைதியிலிருந்து, அந்த கால கட்டத்தை உணர்த்தவும், மறைந்து விட்ட மாந்தர்களின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தவும் ஒரு சில குரல்கள் மட்டுமே எழுகின்றன. இக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தான் கவிஞர்கள். எது நேரடியாக உபயோகப் படுத்த முடிகிறதோ, நுகர்வின்பத்திற்கும், அதிகார பலத்திற்கும் எது இட்டுச் செல்கிறதோ அதற்கே மனிதர்கள் மதிப்பளிக்கும் இக்காலத்தில், நுகர்வுக் கலாசாரமும், அறிவியல் சிந்தனைகளும் நமது ஆன்மாவை வற்ற வைத்து விட்ட நிலையில், கவிதை என்பதையே ஒதுக்கி வைத்து அலட்சியப் படுத்தும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறோம். ஓவியம், சிற்பம் போன்ற பழங்கால கலைகளை நம்மால் தற்காலத்தில் எப்படி ஒருக்காலும் அதே சிறப்புடன் உருவாக்க முடியாதோ அதே போல கவிதை எனும் மகத்தான கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இச்சமூகம் கவிஞர்களின் உபயோகத்தை மறந்து விட்டது”

ஆனால், ராமகாதை இன்றளவும் காலத்தை வென்று நிற்கிறது. ”மலைகள் ஆறுகள், கடல்கள் எத்தனை காலம் இருக்குமோ, அத்தனை காலம் இந்த உலகில் உன் ராமாயணக் கவிதை வாழும்” என்று படைப்புக் கடவுளான பிரம்மனே அன்றோ வால்மீகியை வாழ்த்தியிருக்கிறார் !  

Posted on Leave a comment

கொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) – ராமசந்திரன் உஷா

ஹொரா எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாய் வந்தது. நாலு நாள் பயணம் என்பதால் லக்கேஜ் அதிகமில்லை. சின்ன சூட்கேசை சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு நிமிரும்பொழுது, “எதுக்கு தனியாய் டிரெயின்ல போகணும், பேசாம பிளைட்டுலேயே போயிருக்கலாம்” என்று முணுமுணுத்தவரை பார்த்து, “நானூத்தி நாற்பத்தி நாலாவது தடவை இந்த ஒரு வாரத்தில் சொல்லியாச்சு” நான் சிரித்துக்கொண்டே சொன்னதைக் கேட்டு ஒரு முறை முறைத்தார்.

யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினால் ஓய்வுபெற்ற  அலுவலக சகா அசோக்.

“என்ன மேடம் எங்க பயணம்” என்றவரை கணவருக்கு அறிமுகம் செய்துவிட்டு, “புவனேஸ்வர்ல ஒரு கான்ஸ்பரன்ஸ். அதுதான்.” நான் முடிக்கும் முன்பு, “நீங்க பிளைட்டுலேயே போயிருக்கலாமே, எலிஜீபிலிட்டி இருக்குமே” என்றதும், “இவளுக்கு ரெயில் ஜேர்ன்னிதான் பிடிக்கும்…” என்று ஆரம்பித்த கணவரை, “நீங்க கெளம்புங்க” என்றேன்.

“சரி வரேன். ரொம்ப சுத்தாதே, பார்த்து… ஜாக்கிரதை” என்று சொல்லி இறங்கவும், ரயில் கிளம்பியது.

எதிர் சீட்டிலேயே திரு, திருமதி அசோக். சாப்பாட்டு மூட்டையை ஜன்னல் ஓரத்தில் இரண்டு சீட்டுக்கும் நடுவில் இருந்த சின்ன மேடையில் வைக்கப் போனேன்.

“அங்க வைக்காதீங்க. ஸ்வாமி வைத்திருக்கேன். எங்க போனாலும் பூஜையை விடமாட்டேன்” என்றார் திருமதி அசோக்.

அழகாய் டவல் விரித்து வானிட்டி பேக் மாதிரி ஒன்று உட்கார்ந்திருந்தது. நான் என் சாப்பாட்டு மூட்டையை சீட்டில் வைத்தேன்.

“நா பிளைட்டுல போகலாம்ன்னு எவ்வளவோ சொன்னேன். இவர் கேட்கல.” புலம்பலாய் ஆரம்பித்தாள் திருமதி அசோக்.

“இல்லே மேடம், குரூப்பா புவனேஸ்வர், கல்கத்தா போறோம். நாம மட்டும் பிளைட்டுல போனா நல்லா இருக்குமா?  இன்னைக்கு நைட்டு கிளம்பினா நாளைக்கு நைட்டு போய் சேர்ந்திடலாம்.”

கொஞ்ச நேரம் பழைய நண்பர்களைப் பற்றிப் பேசிவிட்டுப் படுக்கையைப் பிரித்துப் போட ஆரம்பித்தனர்.

நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். காதில் எம்பி3 பிளேயரில் இளையராஜா.

திருமதி. அசோக் ஏதோ சொல்வது போல் இருந்தது. ஹெட் போனை எடுத்ததும்,

“அது என்ன டிரெயின்ல போவது ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னீங்க? திரும்ப திரும்ப என்ன வர போகுது” என்றவளிடம், “பச்சை பசேல்ன்னு ஆந்திரா நெல்லு வயல், கோதாவரி, சில்கா ஏரின்னு எனக்கு எத்தனை பார்த்தாலும் அலுக்காது.” என்னமோ சரி என்பதைப் போல தலை அசைந்தது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், “கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம். அதை பார்த்துல இருந்து கோதாவரி நதி இன்னும் பிடிச்சிப் போச்சு” என்றேன்.

“பக்தி படம்தானே? நம்ப மாதிரி கிடையாது. ஆந்திரால பக்தி அதிகம். கோதாவரி நதிக்கரைக் கோவில்கள்ன்னு பக்தி மலர்ல படிச்சிருக்கேன்.”

“இல்லே இல்லே இது சும்மா ஃபீல் குட் மூவி. கதை முழுக்க கோதாவரி நதியில் நடக்கும்” என்றவள், அங்கதான் ஹீரோவை மீட் பண்ணுவா என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

“சினிமா எல்லாம் போறதேயில்லை.. என்னமோ இன்னைக்கு சிவராத்திரிதான்” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார் அந்த அம்மையார்.

விளக்குக்கள் அணைந்தன. ஜன்னல் ஓர இருக்கை. இருட்டில் தூரத்தில் தெரியும் வெளிச்சப் புள்ளிகள். இதமான ஏசி குளிர். காதில் எஸ்.பி.பி “இது மெளனமான நேரம்” என்று குழைய ஆரம்பித்தார்.

தாலாட்டு போல ரயில் ஆட்டத்தில் நல்ல தூக்கம். ஏதோ கோவில் மணிச் சத்தம், பாட்டுச் சத்தம் கேட்டது.

கண்விழுத்துப் பார்த்தால் நடுநாயகமாய் திருமதி. அசோக், வானிட்டி பேகுக்குத் தீபாரதனை காட்டிக்கொண்டு இருந்தாள். சுற்றிலும் ஏழெட்டு பேர்கள்.

மெல்ல எழுந்து பல் தேய்த்துவிட்டு வந்தால், உலர் பழங்கள் பிரசாதமாய்க் கிடைத்தன.

“பர்ஸ்ட் ஏசில குளிக்க நல்ல வசதி. டவல், சோப் எல்லாம் தராங்க. எங்க குரூப் ஆளுங்க அங்கேயும் ரெண்டு பேர் இருக்காங்க, குளிச்சதால் பூஜை பண்ண முடிந்தது” என்றார் மாமி பெருமையாய்!

மூன்றாம் வகுப்பு ஏசியில் பஜனை நடக்கிறது என்று கிளம்பிப் போனவர் ஒரு மணி நேரத்தில் நாலைந்து பேருடன் வந்தார்.

ஒருவர் கையில் இருந்த லேப் டாப்பை சீட்டில் வைத்தார்.  ஜன்னல் சீலைகள், பர்த் சீலைகள் இழுக்கப்பட்டு இருட்டாக்கப்பட்டது. முந்தின நாள் சீரியல்கள் ஓட தொடங்கின. நல்லவேளையாய் சைட் பர்த் ஆசாமியும் எட்டிப் பார்க்க, அவரை என் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு, வெளியே அவர் இடத்தில் அமர்ந்தேன்.

நானும் ஜன்னல் ஓரக் காட்சிகளில், இளையராஜாவுடன் ஐக்கியம் ஆனேன்.

மறுநாள் முழுக்க கான்ஃபரன்ஸ் ஓடியது. அடுத்த நாள் காலை பத்து மணிவாக்கில் பல நாள் கனவான கொனாரக் போய்ச் சேர்ந்தேன். முன் மண்டபம் தாண்டிப் போனதும் திரை விரிந்தது போல பிரமாண்டம். அப்படியே வாய் அடைத்துப் போனேன். முன் மண்டபம் முழுக்க நாட்டிய நங்கைகள். வித வித போஸ்கள். மெயின் சூர்ய தேவன் கோவில் முழுக்க திருக்குறளின் மூன்றாவது பால். கொனாரக்கின் பிரபல சூரிய சக்கரங்கள்.

எது கை, கால் என்று தெரியாமல் ஓர் அற்புதச் சிலை. பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது, எப்படி மேடம் இருக்கீங்க என்று திருமதி.அசோக் அருகில் வந்து, சிலையைக் கூர்ந்து நோக்கியவள், மகாலஷ்மி என்று தொட்டுக் கும்பிட்டாள்.

மகாலஷ்மிக்கும் இந்த போஸ்க்கும் ஓர் ஒற்றுமை கூட என் கண்ணில் படவில்லை. முணங்கலாய், “இது மகா லஷ்மி இல்லேயே” என்று சொன்னேன்.

“நீங்க வெளி மண்டப சிற்பங்கள் பார்த்தீங்களா, ரெண்டு கை, ரெண்டு கால் இருக்கும். அதெல்லாம் நம்ம மாதிரி சாதாரண மனுஷனுங்க. இங்க பாருங்க, நாலு கை… சுவாமி சிலைன்னா இப்படித்தான் கைங்க இருக்கும்” என்று விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது அவங்க குரூப் ஆளுங்க போல நாலைந்து பேர் வர, திருமதி அசோக், ‘மகா லஷ்மி’ சிலையைக் காட்டினாள். சில பெண்கள் பக்தியுடன் தொட்டுக் கும்பிட ஒரு மாமா மட்டும் சந்தேகம் கேட்க, அதிக்க கையிருந்தால் ஸ்வாமி சிலை என்று எடுத்துச் சொன்னாலும், அந்த மாமா எந்த உணர்வும் காட்டாத முக பாவத்துடன் சட்டென்று இடத்தை விட்டு நகர்ந்தார்.

அதே சமயம், நான்கு வட நாட்டு பெண்மணிகள் வந்ததும், அதே மகாலஷ்மி புராணம் ஓட்டை ஹிந்தியில் சொல்லப்பட்டது. பய பக்தியுடன் கைகளை உயரத் தூக்கி அவர்களது பாணியில் வணங்கத் தொடங்க, வெடித்து வரும் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு வேகமாய் இடத்தை விட்டு நகர்ந்தேன்.

செல் அடித்தது. எடுத்தவுடன் சிரிக்கத் தொடங்கினேன்.

என்ன விஷயம் என்று கேட்டவரிடம் “இங்கே ஒரு Erotic pose. கை எது கால் எங்கேன்னு தெரியலை… எங்கூட டிரெயினில் வந்தாளே, மிஸஸ் அசோக், அவ வந்து ஒரு சிலையைப் பார்த்து மகாலஷ்மின்னு கன்னத்துல போட்டுக்கிறா. அதுக்கு ஒரு எக்ஸ்பிளனேஷன் தந்தா பாருங்க…” முடிக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினேன்.

“நீ சொல்லுவது எதுவும் புரியலை. ஒண்ணு சிரிச்சிட்டு சொல்லு, இல்லே சொல்லிட்டு சிரி” என்றார்.

விளக்கமாய்ச் சொன்னதும், “பாவம் விடு. Ignorance is bliss” என்றார்.

“ஆமாம். இந்த இன்னெசெண்டும் அழகுதான். எந்த விதக் கேள்வியும் மனசுல வராம அப்படியே ஏத்துக்குவதும் ஒரு கிஃப்ட்தான். தொந்தரவு இல்லை பாருங்க.”

“உன்ன மாதிரியா… கண்டதையும் படிச்சிட்டு மூளைய குழப்பிக்க வேண்டியது. சரி  சரி கிளம்பு, மணியாச்சு, இப்ப கிளம்பினா சரியா இருக்கும்” என்றவரிடம், “வாட்ஸ் அப்புல அந்தப் படம் அனுப்புறேன். பாருங்களேன்.”

“வேணா வேணாம். கேமிரா கொண்டு போனே இல்லே, அந்த மகாலஷ்மியை நானும் தரிசிக்கிறேன். குளோசப் நாலு எடுத்துக்கிட்டு வா. கை கால் எங்கேன்னு கண்டுப்பிடிக்கலாம். நாமும் டிரை பண்ணலாம்” என்றதும், “அய்யே போதுமே. வைங்க போனை” என்றேன்.

Posted on Leave a comment

நீட்டாக ஒரு தேர்வு – BK ராமச்சந்திரன்

இந்திய மருத்துவக் கவுன்சில் தந்திருக்கும் தகவலின்படி இந்தியாவில் 462 மருத்துவக் கல்லூரிகளில் சற்றேறக்குறைய அறுபத்து நான்காயிரம் மாணவர்கள் வருடாவருடம் சேருகிறார்கள்.1 இந்தியாவில் மருத்துவப்படிப்பு, அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகக் கற்பிக்கப்படுகிறது.

மொத்த இடங்களில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகம் என்ற மூன்று மாநிலங்களில் மட்டும் பத்தொன்பதாயிரம் இடங்கள் உள்ளன. அதாவது இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் மொத்த இடங்களில் 30 % இடங்கள் உள்ளன.

தொடக்கக் கல்வி முதல் உயர் கல்விவரை லாபநோக்கில்லாத நிறுவனங்களும், தர்மஸ்தாபனங்களும்தான் கல்வி நிறுவனங்களை நடத்தமுடியும் என்ற விதி இந்தியாவில் இருக்கிறது. அதாவது கல்வி என்பது விற்பனைக்கில்லை என்ற உயரிய நோக்கில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் வேறாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் மிகப் பெரும்பான்மை நிறுவனங்கள் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ கல்வியை அளிப்பதில்லை. அந்தக் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி, அங்கே படித்து முடிப்பவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு அல்லது அவர்களுக்குக் கிடைக்கும் கிடைக்கும் வேலை வாய்ப்பு இவற்றைப் பொருத்துச் சில ஆயிரங்களில் இருந்து பல லட்சம் வரை இந்த நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கின்றன. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இதை வெளிப்படியாகப் பேசும் ஆட்களின் எண்ணிக்கை என்பது இல்லவே இல்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒரு குறிப்பிட்ட அளவிலான இடங்களை நிரப்புகிறது. மீதி உள்ள இடங்களைத் தனியார் நிறுவனங்களே நிரப்புகின்றன. இந்தச் சேர்க்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல லட்சங்களில் பணம் வசூலிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் அரசாங்கத்தின் கணக்குக்குள் வராமலேயே கறுப்புப் பணமாகவே பரிமாற்றம் நடக்கிறது.

இதுபோக அரசு மருத்துவக் கல்லூரிகளும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்களது மொத்த இடங்களில் 15% இடங்களை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து, அந்த இடங்களை மத்திய அரசு நிரப்புகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. +2 மதிப்பெண்களின் தரவரிசையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில் பல மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருவதும் எல்லோரும் அறிந்த உண்மை. இப்படியான பல தேர்வுகள் என்பது மாணவர்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் உருவாக்குகிறது.

உலகில் பல நாடுகளில் இப்படி பல்வேறு தேர்வு நடப்பது இல்லை. ஒரே தேர்வின் மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்மூலமே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த முறைக்கான முதல்படிதான் NEET தேர்வு. இது ஒரு தேசிய அளவிலான தகுதித் தேர்வு. இந்த முறைப்படி மாணவர்கள் ஒரே தேர்வை மட்டுமே எழுதினால் போதும். அந்தத் தேர்வின்படி மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். அதன்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்விநிலையங்களில் மத்திய அரசு வசமுள்ள 15% இடங்களுக்கும், மாநில அரசு நிரப்பும் இடங்களுக்கும், தனியார்க் கல்வி நிறுவனங்கள் நிரப்பும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகம் நிரப்பும் இடங்களுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு நடக்கும். இந்தத் தேர்வானது 180 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். நான்கு பதில்களுக்குள் சரியான பதிலை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும். இந்தக் கேள்விகள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) பாடங்களில் இருந்து கேட்கப்படும்.

ஆனால், தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இந்த நுழைவுத்தேர்வை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்களையும் அதன் உண்மைகளையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

1. இதனால் இடஒதுக்கீடும் சமூக நீதியும் பாதிக்கப்படும்

உண்மை என்னவென்றால் மத்திய அரசு ஒதுக்கீடு போக மீதி உள்ள 85% இடங்களை மாநில அரசு அவர்கள் வைத்திருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி நிரப்பிக்கொள்ளலாம். சேர்க்கப்படும் மாணவர்கள் நீட் தேர்வின் தரவரிசைப்படி இருக்கவேண்டும் என்பது தவிர இடஒதுக்கீட்டில் மத்திய அரசு தலையிடவில்லை.

2. இந்தத் தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது

நாம்தான் நமது சமச்சீர் கல்வி முறை இந்திய அளவிலில்லை, உலக அளவுக்கான தரத்தில் உள்ளது என்று சொல்லிவந்தோம். இப்போது CBSE பாடத்திட்டத்தின் தரத்திற்கு நமது கல்விமுறை இல்லை என்றால் மாற்ற வேண்டியது பாடத்திட்டத்தையா அல்லது தேர்வு முறையையா? தமிழக மாணவர்களின் கல்வித்தரம் என்பது மிகவும் கவலைப்படும் அளவில்தான் இருக்கிறது என்றே ஆய்வுகள் கூறுகின்றன.2 ஏழுமுதல் பதினான்கு வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்களில் 21% மாணவர்களே ஒன்றாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் தகுதியில் இருக்கிறார்கள்.

கலைப்பிரிவில் படித்தால் பொறியியல் படிக்க முடியாது என்பது தெரியாமலே பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள்.3

இந்திய நாட்டின் எல்லாக் கல்விமுறைகளும் தேசியக்கல்வித் திட்டத்தின் ( 2005) கீழேதான் வடிவமைக்கப்படுகிறது.4 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்தியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் வெறும் எட்டுப் பேர் மட்டுமே தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்5 என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வெறும் மனப்பாடம் செய்யும் முறையையே நமது தேர்வுமுறை முன்னெடுக்கிறது. அதனால் பத்தாம் வகுப்பு வரை மத்தியக் கல்வி முறையில் பயிலும் பல மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சுலபமாகப் படித்தே அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டிலோ இடம்பெற, மாநிலக் கல்வி முறைக்கு மாறிக்கொள்கிறார்கள்.

3. தேர்வு பிராந்திய மொழிகளில் நடைபெறவேண்டும்

தொடக்கத்தில் இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் தமிழ் உள்பட சில பிராந்திய மொழிகளிலும் நடைபெறுகிறது.

மாணவர்களின் தாய்மொழியில் தேர்வு நடக்கவேண்டும் என்பது சரியான கருத்துதான் என்றாலும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளின் பாடப்புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் இருப்பது தவறாக ஆகிவிடாது.

நுழைவுத்தேர்வைத் தாய்மொழியில் எழுதவேண்டும் என்று கூறுபவர்கள், மேற்படிப்பிற்கான பாடங்களைத் தாய்மொழியில் பயிலத் தேவையான பாடப்புத்தகங்களைத் தாய்மொழியில் தயாரிப்பதைப் பற்றிப் பேசுவதே இல்லை.

4, இது ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தடையாக இருக்கும்.

அதாவது தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். இப்போது உள்ள நடைமுறைப்படி பதினொன்றாம் வகுப்புப் பாடங்களைப் படிக்காமல், இரண்டு வருடமும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே படித்து அதன் மூலம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துவிட முடியும். ஆனால் இந்த நுழைவுத்தேர்வை எழுத ஆறாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையான பாடங்களைப் புரிந்து படித்தால் மட்டுமே முடியும்.

எனவே தனியார் பயிற்சி நிலையங்களில் பயிற்சி எடுப்பது அல்ல, புரிந்து படிப்பதே தேவை. பள்ளிகளில் சரியான முறையில் பாடம் நடத்தினால் தனிப்பயிற்சி என்பதே தேவையில்லை என்பதே உண்மை.அதுபோக அரசே இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இந்தத் தேர்வுக்கான பயிற்சியை அளிக்கலாம்.

ஏற்கனவே உள்ள சேர்க்கை முறையில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரிய அளவில் சேர்ந்திருக்கும் வாய்ப்பு இல்லை. பெரும்பாலான இடங்கள் தனியார் கல்விநிலையங்களில் படித்த மாணவர்களாலே நிரப்பப்படுகிறது.

தேவையான மாற்றங்கள்

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்தத் தேர்வை நடத்தாமல் TOFEL, GMAT, GRE முதலான தேர்வுகளைப் போல வருடத்தின் எந்த நேரத்திலும் மாணவர்கள் இந்தத் தேர்வை கணினி மூலமாக எதிர்கொள்ளும் வகைக்கு மாற்றப்படவேண்டும். இரண்டு முறை மட்டுமே நடக்கும் தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் ஒரு மாணவன் ஐந்து முறை இந்தத் தேர்வை எழுதும் வாய்ப்பும், அதில் அவனுக்குக் கிடைப்பதில் மிக அதிகபட்ச மதிப்பெண் எதுவோ அதையே அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இப்போது இந்தத் தேர்வில் இருந்து விலக்களிப்பப்பட்டு உள்ளன. அவையும் இதற்குள்ளே கொண்டுவரப்பட வேண்டும். இந்த மூன்று மாநிலங்களில் ஏறத்தாழ ஏழாயிரம் இடங்கள் உள்ளன.

எந்த ஒரு திட்டமும் நூறுசதவிகிதம் குறையே இல்லாமல் இருக்காது. குறைகளைக் களைந்து, அதனைச் சரிப்படுத்தவேண்டுமே தவிர, உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் செய்வதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவது இல்லை. மாறிவரும் காலத்தில் நமது மாணவர்கள் உலகளவிலான போட்டிகளுக்குத் தயாராகவேண்டியது மிக அவசியம்.

அரசியல் கூச்சல்களாலும், உணர்ச்சியைத் தூண்டுவதாலும் மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது சரியான வழிமுறை அல்ல.

ஆதாரங்கள்

1. http://www.mciindia.org/InformationDesk/ForStudents/ListofCollegesTeachingMBBS.aspx

2. http://examswatch.com/only-21-of-rural-children-in-tamil-nadu-can-read-basic-text/

3. http://www.nisaptham.com/2016/12/blog-post_19.html

4. http://www.ncert.nic.in/rightside/links/pdf/framework/english/nf2005.pdf

5. http://www.justgetmbbs.com/2016/07/cbse-students-incompetent-Tamil-Nadu-MBBS.html

Posted on Leave a comment

பட்ஜெட் 2017 – ஜெ. ரகுநாதன்


“பாதையைக்கண்டு பயமேன்!
உம்முன் நாங்கள் நடக்கிறோம்
வாருங்கள்!
வந்து சேர்ந்துகொள்ளுங்கள்…!”

பாராளுமன்றத்தில் அருண் ஜெயிட்லி கவிதை சொல்லி, புன்னகை செய்து, சக பாராளுமன்றத் தோழர்களை இந்தப்பொருளாதார ‘புதிய சாதாரண’ப் பாதையில் (The New Normal) தன்னுடன் நடந்து வருமாறு விளித்து, தன் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். அவரின் பேச்சில் தன்னம்பிக்கையும் சாதனையின் வெற்றிப் புன்சிரிப்பும் கலந்திருந்து, இரண்டரை மணி நேரத்தை தொய்வின்றிக்கடக்க உதவியது! முந்திய நிதி அமைச்சர்களான ப.சிதம்பரம், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் கவிதைகளையும் புகழ்பெற்ற வாசகங்களையும் எடுத்துச்சொல்லுவது உண்டு. ஆனால் அவர்கள் போல் இல்லாமல் அருண் ஜெயிட்லி தன் கவிதை வரிகளை எங்கிருந்து எடுத்தார் என்பதைச்சொல்லாமலே ரகசியம் காத்துவிட்டார். அவரின் பட்ஜெட் முடிவுகளும் திட்டங்களும் அதன் உள் விவகாரங்களும் அவற்றின் தோற்றம் தெரியாமல் ‘எடுக்கப்பட்டதா, கோக்கப்பட்டதா’ என்பது ரகசியமாகவே இருந்தது!

“என்னது, டெலிகாம் துறையில் 1,72,000 கோடி ஊழலா?”

“நிலக்கரி சுரங்க ஊழலில் 1.86 லட்சம் கோடிக்கு மேலா?”

இந்த விஷயங்கள் மாறிப்போய்விட்டதால், கடந்த இரு வருடங்களாக மக்களின் பேச்சில் தட்டுப்படும் விஷயங்களும் மாறித்தான் இருக்கின்றன.

“ஹெலிகாப்டர் ஊழல் கண்டு பிடிக்கப்பட்டாச்சா?”

“அட! 11 லட்சம் கோடி ரூபாய் பாங்குகளுக்குத் திரும்ப வந்திருக்கா?”

எந்த ஊழலில் எத்தனை கோடி இழந்திருக்கிறோம் என்னும் செய்திகளை விட்டு, எத்தனை கோடி கண்டுபிடித்திருக்கிறோம் என்று மக்கள் பேசுவது எத்தனை பெரிய மாற்றம்!

நம் பிரதமர் பேசினதில் உண்மையும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டின் அரசியல் சூழலில் மக்களின் மன உணர்வு மாற்றமும் இருக்கிறது என்பது கண்கூடு.

பிரதமரின் டிசம்பர் 31ம் தேதி உரையில் உரத்துச்சொல்லப்பட்ட விஷயமான ஊழலின் ஊற்றுக்கண்ணைத்தாக்கி அழிக்க வேண்டும் என்னும் வீரியத்தையும் அதற்கான செயல்பாடுகளின் முனைப்பையும் இந்த பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. அரசியக் கட்சிகளுக்குத் தரப்படும் ரொக்கம், அதாவது காசு, பணம், துட்டு, ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல் அனுமதிக்கப்படக்கூடாது என்னும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அறிவித்திருக்கிறார்கள். பிரதமரின் வார்த்தைகளான “அரசியல்வாதிகளான நாம் எப்போதும் மக்களின் குரலை மறந்துவிடலாகாது” என்பதை வலியுறுத்துகிறது இந்த அறிவிப்பு. அதோடு கட்சிகளுக்கு நிதி தர விழைவோர் ரிசர்வ் வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி அளிக்கலாம் என்னும் புதிய வழிமுறையையும் புகுத்தி, முடிந்த வரையில் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்குமான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் நல்ல செய்கையை நம் நிதி அமைச்சர் செய்திருக்கிறார். இன்று இந்தியா வேகமாக முன்னேறும் பொருளாதாரத்தை முன்னிறுத்திச் செயல்படும்போது இந்த நிழல் பொருளாதாரம் (Shadow Economy) ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதின் வெளிப்பாடு இந்த மாற்றம். செயல் வடிவில் இது பயனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பணமதிப்பிழப்புச் செயல்பாட்டினால் உண்டான அல்லல்களுக்கு நடுவில் கோடிக்கணகான பழைய நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்ததில் வெற்றிதான் என்று அரசும், தோல்விதான் என்று எதிர்க்கட்சிகளும் முழங்கினாலும் ‘நடந்தது என்னமோ நல்லதுக்குத்தான்’ என்னும் பரவலான எண்ணம் நாட்டு மக்களிடையே ஓடுவது தெரிகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்த பொருளாதார மற்றும் நாணயக் கொள்கையின் தொடர்ச்சியாக இந்த அரசின் நிலையான பொருளாதாரப் போக்கை தொடர்ந்திருப்பதும், லஞ்ச ஒழிப்பு, தீவிரவாதத் தடுப்பு, கறுப்புப்பண இணைப்பொருளாதாரச் சிதைப்பு என்னும் முனைப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் இந்த வருட பட்ஜெட் அமைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கூடவே பணமதிப்பிழப்புச் செயல்பாட்டினால் உண்டான இன்னல்களுக்குப் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் முயற்சியும் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. அடித்தட்டு மற்றும் கிராமப்புற மக்களுக்காகவும் சிறிய தொழில்களுக்காகவும் இந்த பட்ஜெட் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பெரும் கம்பெனிகளுக்கும் முதலாளிகளுக்கும் கடுப்பு உண்டாக்கும் பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது.

“என்னா பட்ஜெட்டுப்பா! நேரா அரிசி வெல குறைஞ்சிடும்!”

“டீவீ மேல இருந்த வரிய நீக்கிட்டாங்களாமே! இப்ப என்ன ஏழாயிரம் ரூபாய்க்கே கெடச்சுடுமா?”

“இங்கேர்ந்து கும்மோணத்துக்கு டிக்கட் அறுபது ரூவா கம்மியாய்டுச்சா! பேஷ்!”

மேலே சொன்னது போன்ற சாதாரண மக்களின் கைதட்டல் விசில்களுக்கேற்ப, அதுவும் ஐந்து மாநிலங்களில் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு, அருண் ஜெட்லி மிகச்சுலபமாக அதிகச்சலுகைகளை அள்ளி வீசியிருக்க முடியும். நிதிப்பற்றாக்குறை விகிதத்தையும் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அதிகக்கடன் உள்ள பட்ஜெட்டைக் கொடுத்திருந்தாலும் பெரிய எதிர்ப்பு எழுந்திருக்காது. ஆனாலும், அந்த மலின வித்தைகள் எதுவும் செய்யாமல் நடுவாக நின்று இந்தியப்பொருளாதாரத்தின் இன்றைய நிலமையை மனதில் கொண்டு ஓரளவுக்கு நேர்மையாக இந்த பட்ஜெட்டைக் கொடுத்திருக்கிறார்.

இன்று உலகப்பொருளாதரம் ஒரு குழப்ப நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் சோபையிழந்து நொண்டிக்கொண்டிருக்க, சைனா காற்றில் ஆடும் விளக்குத் திரியாகத் துடித்துக்கொண்டிருக்க, அமெரிக்கா டிரம்ப்பின் தலைமையில் கதவுகளைச் சாத்திக்கொண்டிருக்கிறது.

“அதெல்லாம் முடியாது! எங்க கம்பெனிகளை உள்ள அனுமதிச்சுத்தான் ஆகணும்!”

“கோக் பெப்ஸியெல்லாம் இல்லாம உங்க மக்கள் எப்படி உயிர் வாழலாம்!”

“உலக மயமாக்கினால்தான் எங்க ஆதரவு உண்டு. இல்லேன்னா உலக வங்கி கடன் கிடையாது. அதோட, பாகிஸ்தானுக்கு ஆயுதம் தருவோம்!”

தன் வியாபார மற்றும் ஆயுத முதன்மை, டாலரின் உயர் நிலையை வைத்துக்கொண்டு நம்மைப்போன்ற ஆசிய நாடுகளை உங்கள் தொழில்களுக்கு மட்டும் சலுகை கொடுப்பது தகாது. ஆகவே பொருளாதாரக் கொள்கைகளை இலகுவாக்க வேண்டும் என்று மிரட்டிக்கொண்டு தங்கள் நாட்டுத் தொழில்களை இந்தியாவுக்குள்ளும் மற்ற முன்னேறும் நாடுகளுக்குள்ளும் புகுத்தி அமெரிக்கா லாபம் சம்பாதித்த காலம் இருந்ததை போன மாசக்குழந்தை கூட அறியும். ஆனால் இப்போது நேர்மாறாக டிரம்ப், ‘தனக்கு வந்தால் தெரியும் தலை வலியும் திருகு வலியும்’ என்பது போல அமெரிக்காவின் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கான சட்டதிட்டங்களை கடுமையாக்கிக்கொண்டு வருகிறார். விஸா நிலமையோ இன்னும் ரகளை! நம்ம ராமசுப்ரமணியன்களும் ராகவேந்திர ராவ்களும் கேதார்நாத் கௌடாக்களும் எப்படா ப்ளேன் ஏத்தி திருப்பி அனுப்பிடப்போகிறான் என்ற பீதியுடன் ஒவொரு முறை டெலிஃபோன் மணி அடிக்கும்போதும் திடுக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக்  காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் ஜொலித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இத்தனைக்கும் “இந்த உலகளாவியp பொருளாதார இருளில் இந்தியா ஒரு ஒளிரும் விளக்கு” என்று சர்வதேச நாணய நிதியம் பாராட்டியிருந்தாலும், இந்தியாவுக்குள் வந்த அந்நிய முதலீட்டில் கிட்டத்தட்ட பத்து பில்லியன் டாலர்கள் போன மூன்று மாதங்களில் வெளியேறியிருக்கின்றது. கூடவே கடந்த இரண்டு வருடங்களில் நம் மாநிலங்களின் நிதி நிலைமை தடுமாற்றத்தில்தான் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலில் மிகக்கடுமையான நிதி நிலை மேலாண்மையைச்செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய அரசின் சோதனைகளை இந்த பட்ஜெட்டின் மூலம் நிதி அமைச்சர் சரியாகவே லகானைப்பிடித்திருக்கிறார்.
நமது பொருளாதாரத்தின் இன்னொரு பெரிய சவால் பொது முதலீட்டை அதிகரிச்செய்யவேண்டிய வலுக்கட்டாயம். போன பட்ஜெட்டில் இந்தப்பொது முதலீட்டைத் திட்டமிடும்போது நாம் கோட்டை விட்டுவிட்டோம். திட்டமிட்ட பொது முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.6% ஆக இருந்தாலும், நல்ல வேளை, செயலாற்றும்போது இந்த அரசு பொது முதலீட்டை 1.9% வரை உயர்த்தி விட்டிருந்தது. இந்த பட்ஜெட்டிலும் அதே அளவு பொது முதலீடு செய்வதற்கான வரையறை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதோடு கூடவே செலவினங்களையும் இந்த அரசு கட்டுப்படுத்தியிருப்பதால் (போன வருடத்தை விட இந்தவருடம் 6% மட்டுமே அதிகம்), இந்த இரட்டைச் செலவினங்களின் மொத்தத் தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு, பொருளாதாரக் காரணிகள் (Macroeconomic management) ஆரோக்கியமாக நிர்வாகம் செய்யக்கூடிய நிலையில் உள்ளது.

சீர்திருத்தங்கள் என்னும் நெடுங்கால குறிக்கோளையும் இந்த பட்ஜெட் கைவிடவில்லை. Foreign Investment Promotion Board (FIPB) என்னும் அந்நிய முதலீட்டை மேம்படுத்தும் வாரியத்தை இழுத்து மூடிவிடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே வெளிநாட்டு முதலீட்டில் உள்ள சில விதிகளையும் சுலபமாக்கும் முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், நாம் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் என்ற சைகையைக் கொடுத்திருக்கிறோம். Make in India என்னும் பிரதமரின் கோஷத்திற்கு அந்நிய முதலீடு அவசியம் என்பதோடு, அந்நிய முதலீட்டினுடன் அதிக வேலை வாய்ப்பும், உயர்ந்த, நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு முறைகளும், புதுமைகளும் நீண்டகால மேலாண்மைச் சூட்சுமங்களும் நம் நாட்டுக்குள் வரும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

பொது நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை சந்தையில் விற்பதன் மூலம் அரசு கிட்டத்தட்ட 72,000 கோடி ரூபாய்களைப் பெறும் திட்டத்தில் இருக்கிறது. இந்த வரவேற்கத்தக்க முடிவு அரசுக்குப் பெரும் வருவாய் தருவதோடு மந்தமாகச் செயல்பட்டு நாட்டின் வளங்களைச் சரியாகப் பயன்படுத்தாத பொது நிறுவனங்கள் தனியார் மேலாண்மையின் கீழ் இன்னும் வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட உதவும்.  

பணமதிப்பிழப்பினால் நடுத்தர, கீழ்த்தர மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டதை முன்னிறுத்திச் சுலபமாக ‘சகலகலாவல்லவன்’ ரேஞ்சுக்கு ஜனரஞ்சக பட்ஜெட் அளித்திருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதியை விடாது பற்றி, நிதிப்பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கடுமையான முயற்சியாக பட்ஜெட் 2017 இருப்பது நமது பொருளாதாரத்திற்கு நல்லதே. பற்றாக்குறை 3.5% வரை இருந்திருந்தால் கூட அப்படி ஒன்றும் பொருளாதார வல்லுநர்களும் புலம்பியிருக்க மாட்டார்கள். ஆனாலும் அதை 3.2%க்குள் கட்டுப்படுத்தி, மேலும் அடுத்த இரு வருடங்களில் பற்றாக்குறை 3%க்குள் வரவேண்டும் என்னும் கண்டிப்பையும் காட்டியிருக்கிறார் நிதி அமைச்சர்.

இந்த பட்ஜெட்டில் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்குமான சரி சம முக்கியத்துவம் இருக்கிறது என்று, நான் மட்டுமில்லை, மிகப்பெரிய தொழிலதிபரான குமார மங்களம் பிர்லாவே சொல்லுகிறார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம், அடுத்த ஐந்து வருடங்களில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முனைப்பு என்பவையும் வரவேற்கத் தக்கவையாகும். பயிர்க் காப்பீடு, நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்களின் சந்தைப்படுத்துதலுக்குத் தரப்பட்ட ஒதுக்கீடும் மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்கு 51,026 கோடி ரூபாய்கள், போன வருடத்தை விட 6% அதிகம். பயிர்க் காப்பீட்டின் விஸ்தீரணம் இந்த முறை 40% ஆக உயர்ந்திருக்கிறது (போன வருடம் 30%). மேலும் NABARD மூலம் ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தைகளையும் 250இலிருந்து 585ஆக உயர்த்தும் திட்டமும் உள்ளது. இவற்றைச்செயல்படுத்தினால் விவசாயத்துறைக்கு நல்ல ஊக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. பருவ மழை பொய்க்காது போனால் இந்தத்துறையின் வளர்ச்சி ஆரோக்கியமான 4.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இன்னொரு நல்ல விஷயம் கிராமப்புற நடவடிக்கைகளுக்கான இவ்வருட ஒதுக்கீடு போன வருடத்தை விட 24% அதிகரிக்கப்பட்டுள்ளது.

“அதெல்லாம் சரி! திட்டம் போடும்போது நல்லா யோசிச்சுத்தான் போடறாய்ங்க! செயல்படுத்தும்போது கோட்டை விட்டுடறாங்களே!”

பயிர்க்காப்பீட்டில் அதிகம் பயனடைந்தவர்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள்தாம் என்றும், காப்பீட்டுத்தொகை அதிகமாகிக்கொண்டே போகிறது என்றும் குற்றச்சாட்டுகள் நம் காதில் விழாமலில்லை.

இந்த பட்ஜெட் இளைய சமுதாயத்திற்கும் வேண்டிய அளவு கவனத்தை வழங்கியிருக்கிறது. முக்கியமாக இரண்டாம்நிலைக் கல்வித்தரத்தை உயர்த்தும் பணிகளில் முனைப்புக் காட்டியிருக்கிறது. மிக அதிகமான இளைய சமுதாயம் மொபைல் மற்றும் இணையத்தளத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தகவல் தொழில்தொடர்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதீத முனைப்புக் காட்டியிருக்கிப்பதை பாராட்டத்தான் வேண்டும். ஸ்வயம் என்னும் பெயரில் 350 இணையப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பது இளைய சமுதாயத்திற்கு, குறிப்பாக வேலை செய்துகொண்டே படிக்க விரும்பும் சாரருக்கு பெரிய வரமாகும். இதற்கான அஸ்திவாரமாக ஒண்ணரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்கள் இணையத்தில் கொண்டு வரும் திட்டமும் ஆப்டிக் ஃபைபர் கேபிள் விரிவாக்கப்படும் திட்டமும் சரியான  கிரியா ஊக்கிகள்.

ஐம்பது கோடி ரூபாய்க்குக்குறைவாக விற்பனை செய்யும் மிகச்சிறிய மற்றும் சிறிய வியாபார நிறுவனங்களின் வருமானவரி 30% இலிருந்து 25%ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சலுகை ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு வரம் என்று சிலர் சொன்னாலும் மாற்றுக்குரலும் கேட்கிறது.

“இது வெறும் ஜுஜூபி! இந்த நிறுவனங்கள் பாதிக்கு மேல் லாபமே ஈட்டுவதில்லை. மேலும் நாட்டின் மொத்த வியாபாரத்தில் பார்த்தால் இந்த வகைக் கம்பெனிகளின் வியாபாரம் 1%க்கும் கீழ்தான். அதனால் இந்தச் சலுகையால் சொல்லக்கூடிய முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை!”

மிகப்பெரிய ரிகார்டாக இந்த முறை 48,000 கோடி ரூபாயை மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு (MGNREGA) ஒதுக்கியிருப்பது மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.

“இல்லீங்களா பின்ன, உ.பி தேர்தல் வருதில்ல” என்னும் குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் இந்த ஒதுக்கீடு மிகப்பெரும் பயனைத் தரவல்லது என்பதை மறுக்க முடியாது.

குறைந்த வருமான மக்களின் சந்தோஷத்தை உயர்த்தும் வகையில் நமது நிதியமைச்சர் 10% இலிருந்து 5% வருமான வரி குறைப்பு மற்றும் சில ஒத்தடங்கள் கொடுத்திருப்பதில் பணப்புழக்கம் கொஞ்சம் அதிகரித்து விலை குறைந்த பொருட்களின் தேவையை அதிகரிக்கக் கூடும்.இதன் எதிரொலியாக FMCG கம்பெனிகளின் (இந்துஸ்தான் யூனிலீவர், காட்ரெஜ், பதஞ்சலி, ஐ டி சி) பங்குகள் பட்ஜெட் தினத்தன்றே விலையேற்றம் கண்டன.

உள்கட்டுமானத் தொழிலுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய ஊக்கம் கிடைத்திருக்கிறது. அதிக ஒதுக்கீடு, மலிவு விலை வீடுகள் கட்டும் தொழில் உள்கட்டமைப்பின் (Infrastructure Projects) கீழ் கொண்டு வந்தது, மற்றும் ரயில்வே துறைக்கான அதிக ஒதுக்கீடு போன்றவை இங்கு அதிக முதலீடு வரப்போவதைக் கட்டியம் கூறுகின்றன. இந்தத் துறைக்கு அரசு ஒதுக்கியிருப்பது 3.9 லட்சம் கோடி ரூபாய்கள் (போன வருடம் 3.4 லட்சம் கோடி). இதில் கிட்ட்த்தட்ட 2.4 லட்சம் கோடி போகுவரத்துத் துறைக்கு போவது (தரை, ராயில் மற்றும் நீர் வழி) மிகவும் வரவேற்க்கத்தக்கதாகும். கட்டுமான கம்பெனிகளுக்கு இந்த வருடம் நல்ல வியாபரம் ஆகுமென்பதால் லார்சன் அண்ட் டூப்ரோ, ஏஸி ஸி, ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ஏஷியன் பெயிண்ட் போன்ற கம்பெனிகளின் பங்குச்சந்தை விலை ஏறியதைப் பார்த்தோம். அதுபோலவே ஸ்டீல் தொழிலும் நல்ல வளத்தைப் பெறக்கூடிய வாய்ப்பை இந்த பட்ஜெட் தந்திருக்கிறது. உள்கட்டமைப்புதான் எந்த ஒரு தேசத்துக்குமான முன்னேற்றத்தின் முதல் படி. வாஜ்பேயி காலத்திய தங்க நாற்கரத்தால் நாம் அடைந்த முன்னேற்றம் கண்கூடு. அதுபோல உள்கட்டமைப்பின் பெருக்கம் நீண்ட கால இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய உரமாகும் என்ற வகையில் இது இந்த பட்ஜெட்டின் மிக நல்ல அம்சம். ஆனால் இதைச்செயல்படுத்தும் முறை அதைவிட மிக முக்கியமானதாகும். சிங்கப்பூர் தென்கொரியா நாடுகளில் அரசாங்கம் தனியார் துறையுடன் கைகோர்த்து இந்த உள்கட்டமைப்பைப் பெருக்கி முன்னேற்றம் கண்டது வரலாறு. இதில் இரு பக்கத்தினருக்கும் சமத்தொலைநோக்குடன் இருப்பது மிக அவசியமான  ஒன்றாகும். இதன் மூலம் உள்கட்டமைப்பு பெருகுவதுடன் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் சாத்தியங்களும் உண்டு.

சென்ற சில பட்ஜெட்டுகளில் இல்லாத ஒன்று இந்த பட்ஜெட்டில் இடம் பிடித்திருக்கிறது. சமூக நலச்செயல்பாடுகள் பலவற்றை டிஜிட்டல் வரையறைக்குள் கொண்டு வரும் முயற்சி நல்ல முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது. முதன்மை விவசாயக்கடன் சொசைடிக்களை இணைப்பதற்கு ரூபாய் 1900 கோடி, ஸ்வயம் என்னும் இணையக் கல்வித் திட்டங்கள், சீனியர் குடிமக்களின் உடல் நல விஷயங்களை உள்ளடக்கிய, ஆதாருடன் இணைக்கப்பெற்ற ஸ்மார்ட் அட்டை, முழுக்க முழுக்க இணையம் மூலமே கொடுக்கப்படும் ராணுவ பென்ஷன், கிராமப்புறங்களை இணையம் மூலம் தொடர்பு படுத்தும் ‘டிஜி கிராமம்’, அதிவேக ஆப்டிக் ஃபைபர் மூலம் ஒண்ணரை லட்சக் கிராமங்களை இணையத்தில் கொண்டு வரும் திட்டம் எனப் பல தகவல் தொழில்தொடர்புத் திட்டங்கள் இந்தியாவை மேலும் மேலும் டிஜிட்டல் முறைக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. எல்லோருக்கும் இணைய மருத்துவம், இணையக்கல்வி மற்றும் தொழிற்கல்வி அளிக்க இந்த இந்த டிஜிட்டல் கிராமத் திட்டத்தின் மூலம் வழி வகை செய்யப்படும் என்று அறிவித்திருப்பதும் இன்னொரு பாராட்டத்தக்க முயற்சியே. வரும் காலத்தில் எங்கும் இணையம் எதிலும் இணையம் என்னும் டிஜிட்டல் கட்டுமானம்  கிராமப்புறமெங்கும் விரவி இந்தியப் பொருளாதாரத்தைக் கணிசமாக உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இந்த பட்ஜெட்டினால் நல்ல ஊக்கம் கிடைத்திருக்கிறது. முன்னமேயே சொன்னபடி மலிவு விலை வீடுகள் கட்டும் தொழில் இப்போது உள்கட்டமைப்பு என்னும் தகுதி பெற்றவையாகின்றன. அதனால் இவைகளுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாவதோடு, உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் அரசு மானியங்களும் சலுகைகளும் இவற்றுக்கு இனிமேல் கிடைக்கும். மலிவு விலை வீடுகளாகக் கருதப்படுவதற்கான சில விதி முறைகளின் தளர்ப்பு, வருமானவரிச்சலுகைகள், நீண்டகால மூலதன லாப (Long Term Capital Gains) வரிக் குறைப்புக்கான மாற்றங்கள் போன்றவை ஒரளவுக்கு ரியல் எஸ்டேட் தொழிற்துறையை வளரவைக்கும் ஊக்கிகள்.

“அப்ப இந்த பட்ஜெட்டில் குறையான அம்சங்கள் ஏதுமே இல்லியா” என்று எதிர்க்கட்சிகள் போலக் கேட்கலாம்.

நிச்சயம் குறைகள் இருக்கின்றன.

கார்ப்பரேட் செக்டார் எனப்படும் தனியார்த் துறை, முக்கியமாகப் பெரிய கம்பெனிகள் ஒரு பாட்டம் அழுகின்றன. ஆட்சிக்கு வந்த போதே நிதி அமைச்சர் படிப்படியாக கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து 25% க்கு கொண்டு வந்துவிடுவோம் என்று சொன்னார். ஆனால் இப்போதும் அவை 29% இல் இருந்து குறையவே இல்லை. கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து அவற்றை இன்னும் லாபகரமாக்கினால்தான் அவற்றால் மேல்நாட்டுத் தொழில் நிறுவங்களுடன் போட்டி போட முடியும். அமெரிக்காவே தம் உள்நாட்டு கம்பெனிகளுக்குச் சலுகைகள் தரும்போது இங்கும் தந்திருக்க வேண்டும் என்று ஒரு புலம்பல் கேட்பதை ஒதுக்கிவிட முடியாது.

நம் பொருளாதாரத்தில் வளர்ச்சி இருந்தாலும் அது பூஞ்சையான வளர்ச்சிதான் என்று ஒரு சாரார் வாதாடுகின்றனர். நம் நாட்டின் வளர்ச்சியில் சேவைத்துறை மிக அதிகமாக வளர்ந்துகொண்டிருக்க, உற்பத்தித் துறையும் விவசாயமும் அவளரவில்லை. இது நீண்ட கால நோக்கில் அபாயகரமானது. உற்பத்தித் துறையில் பல இடங்களில் அதிகமாக பயன்படாத்திறன் விரயமாகிக்கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் பொது முதலீடு எங்கெல்லாம் பாயப்போகிறது என்பது மிக முக்கியம். இந்த உற்பத்தித் துறைக்கு பயன்படாத எந்த முதலீடும் பிற்கால இந்தியாவுக்கு கேடு விளைவிக்கும். கடந்த இரண்டு வருடங்களில் விவசாயம் 2% க்கு மேல் வளரவேயில்லை. பருவ மழை பொய்த்துப் போனது முக்கியக் காரணமாக இருந்தாலும் இந்த குறுகிய வளர்ச்சி நம்மைப் பாதித்திருப்பதென்னவோ உண்மை. ஆகவே இந்த பட்ஜெட்டில் சும்மா 24% அதிக ஒதுக்கீடு என்று சொல்லியிருப்பது திருப்தி அளிக்கவில்லை. எப்படியெல்லாம் இந்த ஒதுக்கீடு செலவிடப்படும் என்பதில்தான் வெற்றியோ தோல்வியோ இருக்கிறது.

MGNREGA வுக்கு 48,000கோடி ஒதுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய நன்மையாக இருந்தாலும் இதன் பயன்பாடு பெரிய கேள்விக்குறிதான். இதை செயல்படுத்தப் போவதென்னவோ மாநில அரசுகள்தாம். இந்த விஷயத்தில் அவை மெத்தனமாக நடந்து வருவதை நாம் கடந்த இரு வருடங்களாகப் பார்த்துவருகிறோம். மத்திய அரசு முன்முனைப்போடு மாநில அரசுகளை விரட்டினால்தான் முழுப்பயன்பாடும் கிடைக்கும். ஆனால் இந்த மத்திய அரசுக்குப் பல மாநில அரசுகளுடன் சுமுகமான உறவும் இல்லாத நிலையில் இந்த ஒதுக்கீட்டின் முழுப்பயன் மக்களைச் சென்றடையுமா என்பது சந்தேகத்து இடம் அளிக்கிறது.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், வேலை வாய்ப்புப் பெருக்கம். விவசாயம் 4% அளவில் உயர்ந்தால்தான் அங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதற்குப் பருவ மழையை நம்பியிருக்கிறோம். ஆக உண்மையான வேலை வாய்ப்பு பெருக உற்பத்தித் துறையில்தான் கவனம் வேண்டும். இந்த MGNREGA வால் வேலை வாய்ப்பு உண்டாகும் என்பது உண்மைதான். ஆனால் அந்த வேலைகள் நிரந்தர வேலைகள் இல்லை. அவற்றின் மூலம் குளங்கள் வெட்டலாம். ஆனால் குளங்கள் வெட்டுவது மட்டும் வேலை வாய்ப்பு இல்லையே. வருடம் முழுவதும் குளம் வெட்டிக்கொண்டிருக்க முடியாது. நிரந்தர வேலைவாய்ப்புப் பெருக வேண்டுமானால் உற்பத்தித் துறையில்தான் வேலை வாய்ப்பு பெருக வேண்டும். இந்தத் துறையில் வருடாவருடம் 2% வேலை வாய்ப்புகள் பெருகும் அளவுக்கு முனைய வேண்டும். நடக்கக் கூடியதுதான், ஏனென்றால் போன இருபது வருடங்களாக குஜராத்தில் மட்டும் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 15%, வருடா வருடம்! இந்தியாவிலும், முனைந்தால் முடியும்!

இதிலும் ஓரிரு ஒப்பாரிகள் கேட்கலாம்.

“கிட்டத்தட்ட 45% கூலிப்பணம் இன்னும் விநியோகிக்கப்படவே இல்லை. அதனால் 231கோடி ரூபாய்கள் வேலை செய்தவர்களுக்கு வரவேண்டியிருக்கிறது! இந்த அழகில் இன்னும் ஒதுக்கீடு கொடுப்பதால் நிலைமை முன்னேறும் என்ற நம்பிக்கை இல்லை” என்கிறார் மஸ்தூர் கிசான் சங்காதனத்தைச்சேர்ந்த அருணா ராய்!

வங்கிகளின் நிலைமை, முக்கியமாகப் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை ஆட்டம் கண்டிருக்கும் காலம் இது. வாராக்கடன்களின் அளவு மிக உயர்ந்து வங்கிகளின் ஸ்திரத்தன்மையையே அசைத்துப்பார்க்கும் அளவிற்கு அவை வலுவாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு மல்லையாவைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இந்த வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் இன்னும் எத்தனையோ மல்லையாக்கள் ஒளிந்து கிடக்கிறார்கள். இந்த நிலை இன்னும் ஓராண்டு நீடித்தால் சில பொதுத்துறை வங்கிகள் திவாலாகிவிடும் அபாயமே இருப்பதாகக் காற்றில் செய்திகள் கசிகின்றன. இந்த பட்ஜெட்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் வங்கிகளின் முதலாக அரசே கொடுக்கப் போவதாக பட்ஜெட் சொல்கிறது. இது ஓரளவுக்கு சில வங்கிகளின் நிதி நிலைமையை அண்டைக் கொடுத்தாலும், மொத்த வாராக்கடன்களின் தொகையை வைத்துப்பார்க்கும்போது இந்த பத்தாயிரம் கோடி போதவே போதாது என்கிறார்கள் விற்பன்னர்கள். தேவையென்றால் இன்னும் கூட அரசு வங்கிகளுக்கு நிதி உதவி தர இயலும் என்று அருண் ஜெயிட்லி உத்தரவாதம் அளித்திருக்கிறார். ஆனால் இந்த ஒதுக்கீடு மட்டுமே வங்கிகளின் நிலமையைச் சீர் செய்யப் போதாது. தனியார் வங்கிகள் மிகச்சீராய்ச் செயல்படும்போது பொதுத்துறை வங்கிகள் மட்டும் இப்படி ஆட்டம் கண்டிருப்பது அவற்றின் மேலாண்மைக் குறைபாடுதான். வங்கிக்கடன் அளிக்கும் வகைமுறைகளை முழுமையாகச் சீர் செய்து, வங்கியின் நிதி மேலாண்மையைப் பல மடங்கு மேம்படுத்துதல் அத்தியாவசியமாகும்.

ஆக நிதியமைச்சர் ஒரு விதமாகப் பல நல்ல மாற்றங்களைத் தந்து நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் சரியான கட்டமைப்பில் எடுத்துச்செல்லும் வழிமுறைகளை இந்த பட்ஜெட்டில் கொண்டு வந்திருந்தாலும், சில குறைகளும், விடுபட்டுப்போன முக்கிய நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டின் வீரியத்தை மட்டுப்படுத்தவே செய்கின்றன.

“இது அடாஸான பட்ஜெட்! ஒண்ணுத்துக்கு பிரயோஜனமில்லை” என்று ராஹுல் காந்தி, சீதாரம் யெச்சூரி , நிட்டிஷ் குமார் போன்றவர்கள் சொல்ல ,
“அருமையான கம்பி மேல் நடக்கும் வித்தை! இந்தியாவுக்கு இன்றைய காலகட்டத்தின் மிகத்தேவையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய அற்புதமான பட்ஜெட்” என்று பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்கும் நடுவில்தான் எங்கோ இந்த பட்ஜெட்டின் உண்மையான நிலைமை இருக்கவேண்டும் என்பதாகத்தான் நமக்குப் புலப்படுகிறது!

Posted on 1 Comment

புலாலும் ஆரியமும் – பத்மன்

முகநூல் (பேஸ்புக்) சமூக வலைத்தளத்தில், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் குளிப்பாட்டி வணங்கிவிட்டு ஆட்டை வெட்டித் தின்னலாமா என்று ஒரு நண்பர் கருணை உள்ளத்தோடு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள மற்றொரு நண்பர், இப்படியெல்லாம் ஆரியத்தனமாக கேள்வி எழுப்பலாமா என்று அங்கலாய்த்திருந்தார்.

ஆங்கிலேயன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகச் சொன்ன ஆரிய – திராவிட வாதம் சுத்த அபத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜீவ காருண்யம் என்பது ஆரியத்துக்கு மட்டுமே சொந்தமா? ஆரியர் என்பவர் பார்ப்பனர் மட்டும்தானா? க்ஷத்திரியர், வைசியர் எல்லாம் ஆரியர் கணக்கில் அடங்க மாட்டார்களா? ஆரியர் என்போர் வடநாட்டார் அனைவருமேவா? இல்லை, அதிலும் திராவிடச் சான்றிதழ் பெற்றவர் உள்ளனரா?

ஆரியர் கணக்கில், கொல்லாமையை வலியுறுத்திய வடநாட்டுப் புத்தரும், மகாவீரரும் இடம் பெறுகிறார்களா, இல்லையா? நமது திருவள்ளுவர்கூட, ‘கொல்லாமை’ மற்றும் ‘புலால் மறுத்தல்’ என இரண்டு அதிகாரங்களைப் படைத்து, இருபது குறள்களை எழுதியுள்ளாரே? அவையெல்லாம் ஆரியத்தின் குரலா?

“அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும்,  “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

ஒருவேளை திருவள்ளுவர் வாக்கெல்லாம் ஆரிய மாயையில் அகப்பட்டதன் வெளிப்பாடா? அல்லது இன்றளவும் ஆறாத, பொய்மான்கரடாய் ஆரியம்(!) வெறுக்கும் திராவிட ஆவேசப் புளுகுவாதத்தை மறுதலிக்கும் இலக்கிய ஆதாரங்களா?

சமணத்தைப் பின்பற்றும் நயினார் என்றழைக்கப்படும் தமிழ்ச் சாதியினர், வைதீகர்களைக் காட்டிலும் மிகத் தீவிரமக புலால் மறுப்பை வலியுறுத்திக் கடைப்பிடிக்கிறார்களே? அவர்களும் ஆரியரோ? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வடிவான வள்ளலார் ஆரிய இனத்தவரோ? அவர் காட்டும் சமரச சன்மார்க்க நெறியிலும், அதற்கு முன்பிருந்தே சுத்த சைவ நெறியிலும், புலால் மறுக்கும் வைணவ நெறியிலும் வாழும் தமிழர் எல்லாம் ஆரியக் கலப்புற்றனரோ? அன்றி ஆரியக் கலகத்துக்கு ஆட்பட்டனரோ?

அதுசரி, யார் ஆரியர்? பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் மொழியையே தாய்மொழியாய்க் கொண்டு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிவரும் பார்ப்பனர்கள், தமிழர் அல்லரோ? தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிக்காத அறிவிலிகளின், பகுத்தறிவாளர் என்ற பிரகடனத்தைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு பகுத்தறிவின் வாசம் இம்மியும் அறியாத கசடர்களின் கவைக்கு உதவாத பேச்சு அது.

குறிஞ்சிக்கோர் கபிலன் என்று புகழ்பெற்ற பண்டைக் கவிஞரும், மன்னன் பாரி வள்ளலின் மகள்களை மூவேந்தர் பகையையும் பொருட்படுத்தாமல் வளர்த்த மானுடப் பண்பாளருமான கபிலர், தன்னை “அந்தணன் புலவன்” என்றுதான் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார். அந்தக் குறிஞ்சிப் பாட்டே, ஆரிய மன்னன் பிருகதத்தனுக்கு தமிழ் உணர்த்துவதற்காக உரைக்கப்பட்டது என்று மொழியப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்தணர் (பார்ப்பனர்) ஆகிய கபிலர், ஆரியர் அல்லர் என்பது அறியப்படுகிறது. அவ்வாறெனில், ஆரியர் யார்? ஆரிய மன்னர் கனக, விசயர்கள் என்று சிலப்பதிகாரத்திலும் பிற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளனவே? எனில், வடநாட்டு மன்னர்களில் சிலர் ஆரிய என்று பட்டம் சூட்டிக்கொண்டார்கள். ஆரிய என்பதற்கு, சிறந்த, உயர்ந்த என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதனால்தான் புத்தர்கூட, தனது சங்கத்தை ஆரிய சங்கம் என்று அழைத்தார். (பிராமணத்துவம் என்பது அடையக் கூடிய தகுதியே அன்றி, பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல என்பதையும் அவர் நன்கு விளக்கியிருக்கிறார், இது இக்கால பிராமணர்களுக்கு மட்டுமின்றி, பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்.)

ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த என்று பொருள் இருப்பதால்தான், சமணப் பெண் துறவிகளுக்கு ஆர்யை என்று பெயர். விவசாயத்திலும், கல்வியிலும், போர்களிலும் சிறந்து விளங்கிய வட இந்தியாவின் ஒரு பகுதி ஆர்ய  வர்த்தம் என்று அழைக்கப்பட்டது. அம்மன்னர்களில் ஒரு பிரிவினர் ஆரிய என்ற பட்டம் சூட்டிக்கொண்டனர். (இந்தியாவின் வடபகுதி மட்டுமல்ல, இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ய மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது ஆய்வுக்குரிய கிளைச் செய்தி.)

ஆர்ய என்பது இனம் அல்ல. அது உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்பதை மகாகவி பாரதியார் அறிந்திருந்ததால்தான், “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்” என்றும் “அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்” என்றும் அடித்துச் சொல்ல முடிந்தது. (அவரையும், அழியும்நிலையில் இருந்த தமிழ் நூல்  சுவடிகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்து முதன்முதலில் பதிப்பித்தவருமான உ.வே.சாமிநாத ஐயரையும் பிறப்பால் பிராமணர் என்பதால் ஆரியர் என்றே நினைக்கிறது, அழைக்கிறது, உதாசீனப்படுத்துகிறது ஓர் அறியாக் கூட்டம்.)

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்லர் என்பதற்கு, பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில்கூட அந்தச் சாதியினர் ஆரியர் என்று குறிப்பிடப்படவில்லை என்பதே சான்று. பார்ப்பனர், அந்தணர், மறையோர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் ஏன் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை? சிலப்பதிகாரத்தில்கூட, கண்ணகி – கோவலன் திருமண நிகழ்வை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டித் தீவலம் வந்து மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி, ஆரியர் காட்டிய “தீவழியில்” திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

கபிலர் மட்டுமின்றி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிப் பரவிய மாங்குடி மருதனார், நக்கீரர், பதுமனார், வடம வண்ணக்கண் பேரிச் சாத்தனார், வடம வண்ணக்கண் தாமோதரனார் (வடமர் என்பவர் தமிழ்ப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்), மலைபடுகடாம் இயற்றிய பெருங் கௌசிகனார், கள்ளில் ஆத்திரையனார், கடம்பனூர் சாண்டில்யனார் (கௌசிகம், ஆத்ரேயம், சாண்டில்யம் என்பதெல்லாம் பிராமணர்களின் கோத்திரப் பெயர்கள் – கோத்திரம் என்பது இன்ன முனிவர் கால்வழியில், அதாவது பரம்பரையில், தோன்றியவர் என்பதைக் குறிக்கும் சொல்) உள்ளிட்ட பழந்தமிழ்ப் புலவர்களும் பார்ப்பனர்களே. தூய தமிழில் அகமும், புறமும் பாடிய இந்தப் புலவர்கள் எல்லாம் அந்தணர் என்பதால் அன்னியர் ஆகிடுவாரோ?

இதுபோல் சங்கப்பாடல் இயற்றிய புலவர் பெயரில் எல்லாம் ஆரிய என்ற முன்னொட்டு இல்லை. கபிலர், ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ் உரைத்தார் என்பதை முன்னர் கண்டோம். தமிழ் கற்றுக்கொண்ட மற்றொரு  ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடல், எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில், 184வது பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆக, அரசர்கள் மட்டுமே ஆரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும், அக்காலப் பார்ப்பனர்கள் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.

வேதவழியைப் பின்பற்றிய வேந்தர்கள் சங்க காலந்தொட்டே அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, மகாபாரதப் போரில் இருதரப்பாருக்கும் உண்டி கொடுத்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோரின் பெயர்களும், அவர்தம் பெருமை குறித்த பாடல்களும் இவற்றை நமக்கு விளக்குகின்றன.

மேலும் ஒரு விஷயம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள்தாம் புலால் உண்ணாதவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள், குறிப்பாக வங்காள பிராமணர்கள் மீனையும், ஒரிய பிராமணர்கள் அனைத்துவித புலாலையும் உண்ணும் வழக்கமுடையோர். (அக்காலத்திலே, பல்வேறு பிராமணர்களும் மாமிசம் உண்டு மகிழ்ந்தவர்கள்தாம் என்றும், கொல்லாமை என்ற அறக்கோட்பாட்டின் செல்வாக்குக்கு ஆட்பட்டும், ஆன்மீக வளர்ச்சியின் விளைவாகவும் புலால் உணவுப் பழக்கத்தைத் துறந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.)

பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் என்றும், தமிழர்கள் அல்லர் என்றும் கருதுவது அறியாமையே. தமிழ் இலக்கியங்களையும், கலாசார மாண்புகளையும் முறையாக அறியாததால் ஏற்பட்டுள்ள மதிமயக்கமே அது. அந்த மயக்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட்டு சுய நினைவுக்கு, சுயம் பற்றிய நேர்மைப் புரிதலுக்குத் திரும்பவிடாமல் சில சில்லறை அமைப்புகளும், சில்லறை மனிதர்களும் பாடுபட்டு, பாடுபடுத்தி வருகின்றன(ர்).

ஆகையினால் புலால் மறுப்பு என்பது ஆன்மீக ரீதியிலும், ஜீவகாருண்யம் மற்றும் இயற்கை நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடைப்பிடிக்கப்படும் கொள்கையே அன்றி வேறொன்றுமல்ல. இதற்கு இனவாதமும், மொழிவாதமும் அவசியமில்லை.

முடிவாக ஒரு விஷயம்: எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி, எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி, நல்லோர் நியதி. இயற்கை, மனிதர்களுக்காக இதரபிற  உயிரினங்களை உருவாக்கவில்லை,  இயற்கையின் தன்மையான பல்லுயிர்ப் பெருக்கத்தில் மனிதனும் ஓர் அங்கம் என்பதே உண்மை. இதுவரையான பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் உள்ள ஓர் அங்கம், அவ்வளவே. அந்த வகையில் மனிதனுக்குப் பிற உயிரினங்கள் மீது உள்ள உரிமையைவிட, அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமையே அதிகம். இதைத்தான் நமது பாரதப் பண்பாடு, ஹிந்து தர்மம் போதிக்கிறது.

Posted on Leave a comment

கலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் – வல்லபா ஶ்ரீநிவாசன்

கலைச் செல்வங்கள் நிறைந்த நம் திருநாட்டில் கோயிற் சிற்பக்கலை தனித்துவம் பெற்று விளங்குகிறது. திராவிட, நகரி, யோகினி எனக் கட்டமைப்பில் பலவகை வித்தியாசங்களுடன், மண்டபங்கள் மற்றும் தூண்களிலும் கலை வடிவங்களிலும் பல நுணுக்கமான வேறுபாடுகளைக் காட்டியவண்ணம் இக்கோயில்கள் நமக்குக் காட்சியளிக்கின்றன. கோயில்களின் சுற்றுச்சுவர்களும் அதிலுள்ள கோஷ்டங்களும், விமான, கோபுரங்களும் விதவிதமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

கர்ப்பக்ருஹ தெய்வத்தை மட்டுமே கும்பிட்டுப் பழகிய நம்மில் பலர் இந்தச் சிற்பங்களில் பல்வேறு தெய்வ ஸ்வரூபங்களும் வடிவங்களும் எண்ணற்ற கலை வேலைப்பாடுகளும் படைக்கப் பட்டிருப்பதைச் சிறிதேனும் கவனிப்பதில்லை. ஆனாலும் அவை நம்மை நோக்கிப் பல நூற்றாண்டுகளாகப் புன்னகைத்த வண்ணம் பல புராணக் கதைகளைச் சொல்லியபடி இருக்கின்றன.

சமீபத்தில் எங்களது (தமிழ் பாரம்பரியக் குழு) உத்கல நாடு (ஒரிசா) பயணத்தில் பல கோயில்களுக்குச் சென்றோம்.  ஒரிசாவில் தேவாலயம் என்பது தியோலா என மருவி அழைக்கப்படுகிறது. அமலகாவையும் கலசத்தையும் தாங்கியபடி வானுயர்ந்து நிற்கும் விமானம், பிரமிடு வடிவக் கூரையுடன் ஜக்மோகனா எனப்படும் முன்மண்டபம், நாட்டிய மண்டபம், போகசாலை என கலிங்கக் கோயில்கள் ஒரு வடிவத்தில் காணப்படுகின்றன. இவற்றில் கர்ப்பக்ரஹத்தின் மேலான விமானத்திலும் ஜக்மோகனாவிலும் பலவிதமான மூர்த்தங்களையும் சிற்ப வேலைப்பாடுகளையும் காணலாம். கோயில் என்பது தமிழ்நாட்டில் ஒரு வடிவம் பெறும் முன்னரே ஒரிசாவில் இந்த வானுயர் விமானங்கள் இருந்ததாக அறிகிறோம். இவற்றில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் அழகு மிகுந்தனவாகவும் கடினமான சிற்ப வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன. இதில் பல முக்கியத்துவம் வாய்ந்தவை.

பா ரிலீஃப் (bas-relief) எனப்படும் புடைப்புச் சிற்பம் அதன் செதுக்கப்பட்ட ஆழத்தைப் பொருத்து லோ, மிட், ஹை என்று மூன்று விதமாக அறியப்படுகிறது. பாசோ ரிலீவோ, மெசோ ரிலீவோ, ஆல்டோ ரிலீவோ. இதில் மூன்றாவதான ஆல்டோ ரிலீவோ (alto-relievo) என்ற ஹைரிலீஃப் மிகச் சிறந்ததாகும். அதாவது ஒரே கல்லிலேயே ஓர் உருவத்தைச் செதுக்கி அது கல்லிலிருந்து முன்வந்து காட்சியளிக்குமாறு செய்வது பா ரிலீஃப். அத்தகைய சிற்பமானது முழுமையாகவே வெளிக் கொணர்ந்து காட்டப்பட்டு தனிச் சிற்பமாகவே காட்சியளிப்பது ஹை ரிலீஃப் அல்லது ஆல்டோ ரிலீவோ.

வலைத்தளத்தில் ஆல்டோ ரிலீவோ என்று தேடுவீர்களானால் க்ரேக்க, ரோமானிய சிற்பங்களையே பெரும்பாலும் பார்ப்பீர்கள். ஆனால் அவை நம் கோயில்களில் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. ஒரு கல்லில் செய்த ரிலீஃப் மட்டுமல்லாது பல கற்களை அடுக்கி அதில் தொடர்ச்சியாகச் சிறிதும் பிசிறின்றிப் பல சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஓர் உருவத்தின் உடல் ஒரு கல்லிலும், கால் ஒரு கல்லிலுமாகச் செதுக்கப்பட்டிருந்தாலும் பார்வைக்கு ஒருமித்து எழிலோடு தோற்றமளிக்கின்றன.

இத்தகைய சிற்பங்களை கிமு 3ம் நூற்றாண்டிலிருந்து ஒரியக் கோயில்களில் காண முடிகிறது. நம் சங்க காலத்திற்கு (2nd 1st century BCE) இணையான காலத்தில் கந்தகிரி, உதயகிரி குகைக் கோயில்களிலும், புத்த விகாரங்களிலும் இத்தகைய சிற்பங்களையும், நுணுக்கமான வேலைப்பாடுகளையும் காண்கிறோம். இப்படி மௌரியர் காலத்தில் தொடங்கி காரவேலர், குஷானர், சாதவாகனர், குப்தர், சைலோத்பவர் என இந்த சிற்பக்கலை வளர்ந்த வண்ணமிருக்கிறது. சைலோத்பவர் காலத்தில், அதாவது ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் கோயில் ஒரு வடிவம் பெறுவதைக் காண முடிகிறது. மூர்த்தங்களிலும், தெய்வ வடிவங்களிலும் பல மாறுதல்களைக் கண்டு கொண்டே வருகிறோம். சில அழகான சிறப்பான வடிவங்களைப் (iconography) பார்ப்போம்.

நடராஜர்: சிவமூர்த்தங்களில் மிகவும் அறியப்பட்டதான நடராஜ வடிவம் முதன்முதலில் ஒரியக் கோயிலிலேயே காணப்படுவதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கிபி 650ம் ஆண்டில் சைலோத்பவா காலத்தில் கட்டப்பட்டதான புவனேஷ்வரில் உள்ள பரசுராமேஸ்வர் கோயிலின் விமான முன்முகப்பில் இந்த நடனமாடும் சிவரூபத்தைப் புடைப்புச் சிற்பமாகக் காணப் பெற்றோம். மிட் ரிலீஃபாக இருக்கும் இந்தச் சிற்பமும் அதனைச் சுற்றியுள்ள வேலைப்பாடுகளும் நயம் மிகுந்தவை. நடராஜரைச் சுற்றியுள்ள முத்துச் சர வரிசையின் அழகிலேயே இதை உணரமுடியும். ஒரிசாவின் பல கோயில்களிலும் இந்த நடராஜ மூர்த்தி எட்டு, பத்து கைகளுடனும், அர்த்தநாரீஸ்வரராகவும், ஆனந்தத் தாண்டவம், ஊர்த்வத் தாண்டவம், சதுரத் தாண்டவம் எனப் பல ஆடல் வடிவங்களில் காட்சியளிக்கிறார்.

லகுலீசர்: ஒரியக் கோயில்களில் பரவலாகக் காணப்படும் மற்றொரு சிற்பம் லகுலீசர். கதை போன்ற தடியைத் தூக்கிப்பிடித்தபடிக் காணப்படும். சிவனின் அவதாரமாகக் கருதப்படும் லகுலீசரை நின்றபடியும், யோக முத்திரையுடன் அமர்ந்தபடியும் இருப்பதைக் காணலாம்.

இந்த மூர்த்தங்களுடன், எழிலுடன் பெண்கள் சூழக் காணப்படும் பிக்ஷ்ஷாடனர், கயிலாயத்தில் அமர்ந்திருக்கையில் ராவணனால் தூக்கப்படும் ராவணானுக்ரஹமூர்த்தி, கல்யாண சுந்தரர் போன்ற சிவ வடிவங்களையும் காண்கிறோம்.

விஷ்ணு வடிவங்களில் பூவராகமூர்த்தி, நரசிம்மர், த்ரிவிக்ரமர் போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. பூரி ஜகந்நாதர் கோயிலில் படியேறி மேலே சென்று பார்க்கும்படியான பிரமாண்டமான நரசிம்மர், வராகர் யாவும் பிரமிக்கத்தக்கவை.

பார்ஷ்வ தேவதா எனப்படும் கோஷ்டச் சிற்பங்களில் கணேசர், கார்த்திகேயர், மகிஷாசுரமர்த்தினி, இவை தவிர, சூரியன், வருணன், வாயு, இந்திரன், யமதர்மர் போன்றோர் அவர்களுக்கான குணாதியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இன்னும் சப்தமாத்ரிகா, கங்கா யமுனா, அகோரக் காட்சி தரும் சாமுண்டி எனஅடுக்கிக்கொண்டே போகலாம்.

புத்தர் : சாந்தம் நிரம்பிய முகத்துடன் வெகு அழகாகச் செதுக்கப்பட்டிருக்கும் இச்சிலைகளின் கைகள் காட்டும் முத்திரைகளை வைத்துப் பெயர் அறியலாம்.

ஒரு கை மடியிலிருக்க மறு கை கீழ் நோக்கிப் பூமியைக் காட்டியவாறு இருப்பது பூமிஸ்பரிச முத்ரா. இந்த புத்தர் அக்‌ஷோப்யா எனப்படுகிறார். தர்மசக்ர முத்ராவுடன் காணப்படுபவர் வைரோசனா. தியான முத்ராவிலிருக்கும் அமிதாபா, வரத முத்ராவிலிருக்கும் ரத்னசம்பவா எனப் பல புத்த வடிவங்களைச் சிறிய வேறுபாடுகளின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

போதிசத்துவர்: நிர்வாண நிலை அடைந்து புத்தர் ஆவதற்கு சபதம் கொண்டிருப்பவர்கள் போதிசத்துவர்கள். கையில் ஏந்தும் பொருள், அணிகலன்கள், தலையின் கிரீடம் போன்ற சிறு வித்தியாசங்களுடன் இச்சிற்பங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. தாமரை மலரை ஏந்தியவர் அவலோகிதேஸ்வரா /பத்மபாணி, வஜ்ரம் ஏந்தியவர் வஜ்ரபாணி, நீலோத்பல மலரை பிடித்தவண்ணமிருப்பவர் மஞ்சுஶ்ரீ, நாககேசர மலரைத் தாங்கியிருப்பவர் மைத்ரேயர் என போதிசத்துவர்களை கண்டறியலாம்.

தெய்வங்களைத் தவிர பலவிதமான மனித உருவங்களும் பறவைகளும் விலங்குகளும் காணப்படுகின்றன. மிதுன சிற்பங்கள் ஒரியக் கோயில்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை தவிர, பூவேலைப்பாடுகள், அலங்காரங்கள். முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

ஹலசகன்யா: நளினத்துடன் பலவிதத் தோற்றங்களில் காணப்படும் பெண் சிற்பம் அலசகன்யா எனப்படுகிறது. ரேகா தியோல் எனப்படும் விமான சுற்றுச் சுவர்களிலும், ஜக்மோகனாவிலும் ஆங்காங்கே இவர்கள் எழிலுடன் காட்சியளிப்பார்கள். வாயிலின் ஒரு கதவைத் திறந்தவாறு எட்டி வெளியே பார்த்தபடி நிற்கும் சிற்பக் கன்னிகையை நிறைய இடத்தில் காண்கிறோம்.

சாலபஞ்சிகா: அலசகன்யா ஓர் அழகென்றால் கொடியைப் பற்றியவண்ணம் கொடியிடையுடன் காணப்படும் சாலபஞ்சிகா அதை மிஞ்சும்படியான அழகான தோற்றம். இந்நாயகிகள் வளைத்துப் பிடித்திருக்கும் கொடியின் இலைகளும், பூக்களும் அவர்களுக்கு மேலும் அழகூட்டிய வண்ணம் இருக்கும். இவ்வகை சாலபஞ்சிகா கொடியழகிகளை தமிழகக் கோயில்களிலும் காணலாம்.

கீர்த்திமுகா: பெரிய விழிகளுடன் சிங்கமுகம் கொண்டு திறந்த பல்வரிசையுடன் காணப்படும் இந்த முகங்களை நீங்கள் நம் கோயில்களில் பார்த்திருப்பீர்கள். இது தோன்றியதும் கலிங்கத்தில்தான். இந்த கீர்த்திமுகா தன் திறந்த வாயின் வழியாக முத்துச் சரங்களைக் கொட்டியவாறு இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முத்துச்சரங்கள் கோயில் கட்டியவரின் புகழ் எனக் கருதப் படுகிறது. அதாவது கட்டியவரின் புகழ் இந்த முடிவிலா முத்துச் சரங்களைப் போல் சிறப்புற்று இருக்கும் என்ற பொருள். ஒவ்வொரு முத்தும் முழுமையாகக் கல்லில் செதுக்கப்பட்டு ஏதோ களிமண்ணில் செய்து ஒட்ட வைத்தது போல ஒரு தோற்றம். உருண்டை உருண்டையாகச் சரம் சரமாக மற்ற சிற்பங்களை அலங்கரித்த வண்ணமிருக்கும் இவை கண்ணுக்கு விருந்து. சீடை சீடையாக எப்படிச் செய்திருப்பான் என்று எங்களை வியக்க வைத்தது இந்த கலைப்படைப்பு.

அமலகா: வான்னோக்கி உயர்ந்து நிற்கும் விமானத்தின் மேலே வட்டமான ஒரு கலச அமைப்பு. இதன் அளவு உங்களை பிரமிக்க வைக்கும். நெல்லிக்காயைப் பிளந்தால் இருக்கும் தனித் துண்டுகளைப் போலக் கல்லில் செய்து அத்துண்டுகளை வட்டமாகச் சேர்த்து இருநூறு அடி விமானத்தின் உச்சியில் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பல துண்டுகள் சேர்ந்தது அமலகா. அதை உச்சியில் கொண்டு வைக்க என்னவொரு உழைப்பும், திறமையும் வேண்டியிருந்திருக்கும்? ஒரு துண்டானது சுமார் நான்கு மனிதர்களை உள்ளடக்கும் அளவு பெரியது. இப்படிப் பல துண்டுகள் சேர்ந்தது அமலகா. இந்த உச்சியிலிருக்கும் அமலகாவைத் தவிர பூமி அமலகா எனப்படும் பல சிறிய அமலகாக்கள் விமானத்தின் பல்வேறு தளங்களின் ஓரங்களை அலங்கரித்தவாறு இருக்கும்.

மந்திரசாரிணி: ஓர் அற்புதப் படைப்பு. உச்சியிலிருக்கும் அமலகாவின் பேகி எனப்படும் கழுத்துப் பகுதியில் விமான மேல்தளத்தில் அமர்ந்திருக்கும் மனித உருவம். இவை நான்கு புறமும் காணப்படுகின்றன. ப்ரம்மேஸ்வரா கோயிலில் உயரே இருக்கும் மந்திரசாரிணி சுமார் எட்டடி உயரம் இருக்கும் என அனுமானிக்கிறேன். கைகளை இரண்டு கால்களுக்கும் நடுவே தரையில் ஊன்றியபடி ஒரு 45 டிகிரியில் முன்சாய்ந்தபடி அமர்ந்திருக்கும். முகத்தில் அது புன்னகையா? இல்லை. சற்றே கிண்டலடிப்பது போல ஒரு சிரிப்பு. கீழே நிற்கும் நாம் மேல் நோக்கினால் சரியாக நம்மைப் பார்த்தபடி இருக்கும்.

கோயிலில் கீழே நின்றபடி புத்தகமும் கையுமாக ஒவ்வொரு சிலையாகப் பார்த்து நண்பர்களுடன் அளவளாவி அதன் சிவில் இன்ஜினியரிங் டிசைன், ஆர்டிஸ்டிக் மார்வெல் என்று வியந்து பேசியபடியே வெளிவந்து மேலே நோக்கினேன். “என்ன? கோயில் பார்த்தாச்சாக்கும்?” என்று சிரித்துக்கொண்டே கேட்பது போல இருக்க, சற்றே திடுக்கிட்டுப் போனேன். அவ்வளவு உயிரோட்டமுள்ள முகம்! அற்புதம்!

கஜவிடாலா: யானையின் மீது ஏறியபடி இருக்கும் சிங்க உருவம். விடாலா என்பது வியாளா என்ற யாளியைக் குறிக்கும் சொல்லிலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. கால்களைத் தூக்கி முன்னே பாய்ந்தபடி யானையின் மேல் இருக்கும் இந்தச் சிற்பத்தை மீண்டும் மீண்டும் கலிங்கத்துக் கோயில்களில் பார்க்கலாம். ராஜா ராணி கோயில் சுற்றுச் சுவர்களில் பக்கவாட்டில் நின்றவாறும், முன்னோக்கியும் பல இடங்களில் இதைக் காண்கிறோம்.

முக்கியமாக ரேகா தியோலின் அதாவது கர்ப்பக்ரகத்தின் மீதான விமானத்தின் மேலே அதன் பல அடுக்கு உயரக் கட்டுமானத்தைப் பலப்படுத்தும் விதமாக ஒரு குறுக்குத் தூண் (beam) காணப் படுகிறது. இது சுமாராக விமானத்தில் பாதி உயரத்திற்கு மேலே குறுக்கே செல்லும். இந்தத் தூண் இருபுறமும் விமான முகப்பிலிருந்து சற்றே வெளியே நீட்டியபடி இருக்கிறது. இதன்மேல் இந்த சிங்கமானது பாயும்படி அமைக்கப்பட்டிருக்கும்.

நாக நாகினிகள்: முக்தேஸ்வரா கோயிலில் பிரகாரச் சுவர்களில் ஆங்காங்கே புன்னகைத்த வண்ணம் இந்த நாக நாகினி உருவங்கள். உடலின் மேல் பாகம் மனித உருவமாகவும், கீழே நாகமாகவும் தூணைச் சுற்றியபடி வெகு இயற்கையாகச் செதுக்கப்பட்டிருக்கும் அழகு. தனியாகவும் பின்னிப் பிணைந்தபடியும் காட்சியளிக்கும். அதன் உடலில் செதில்கள் கூடத் தத்ரூபமாக இருப்பதைக் காணலாம்.

விலங்குகள்: சிங்கம், யானை, குரங்கு, மான், கிளிகள், அன்னங்கள் என இதர பல உயிரினங்களும் அவற்றின் இயற்கைத் தோற்றத்திலேயே செதுக்கப்பட்டிருக்கின்றன. புத்த, சமணக் கோயில்களில் மான்கள் துள்ளி ஆடுவது போலவும், யானைகள் பழக்கப்படுத்தப்படுவது போலவும் பல காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

அது மட்டுமல்லாது சில சிற்பங்களில் மனித குணாதிசயங்களுடன் விலங்குகள் சித்தரிக்கப்பட்டிருக்கும் அற்புதத்தைக் காண முடிகிறது. இதைப் புரிந்துகொள்ள தற்கால அனிமேஷன் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். குங்ஃபு பான்டா அல்லது மடகாஸ்கரில் வரும் சிங்கம் என ஏதாவது ஒன்றை நினைத்துப் பாருங்கள். அவை கவலைப்படுவது போலவும், சிரிப்பது போலவும் காட்சிகள் இருக்கும். மனித குணங்களான இதை இவ்வாறு விலங்குகளிடம் கொண்டு வருவது ஒரு அருமையான கலை. இதைக் கல்லிலே கொண்டு வந்த அற்புதத்தைக் கண்டு அசந்தே போனேன்.

இதோ இந்த நந்திகேஸ்வரரைக் கூர்ந்து கவனியுங்கள். என்ன ஒரு மந்தஹாசம்! அதில் சிறிதே ஒரு வெட்கம். சிவபெருமானும் பார்வதி தேவியும் காதலில் இருக்க கீழே இவர் புன்னகைத்தவாறு… என்ன ஓர் அருமையான கற்பனை!

பூஜாடிகள்: கலசம் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஜாடி வரிசைகள். ஒவ்வொன்றிலும் பூவேலைகள். ஒவ்வொன்றிலிருந்தும் பூக்களும் இலைகளும் நிரம்பி வழியும். இவ்வாறான பல கலசங்கள் சேர்ந்து இருக்கும்படியான ஓர் அலங்கார வரிசை!

கவாக்‌ஷா: ஜன்னல் போன்றதான ஒரு அமைப்பு. ஜன்னல்களே காற்றோட்டத்திற்காக அலங்காரமாகவே குடையப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஜன்னலும் ஒரு விதம். ஒரு அழகு. பலவற்றில் அதிலும் தனிச் சிற்பங்கள். ஜாலி வேலை எனப்படும் கல்லைக் குடைந்தெடுக்கும் வேலைப்பாடு. இவ்வாறு ஜன்னல்களில் மட்டுமன்றி தனியாகவும் அலங்காரத்திற்கு குடையப்படுபவை இந்த கவாக்‌ஷா. இதில் பல அழகு நெளிவுகள்.

காட்சிகள்: இவ்வாறு தனிப்பட்ட வடிவங்களைத் தவிர பல புராணக் கதைகளும் காட்சிகளும் நாடகச் சிற்பங்களாக காணக் கிடைக்கின்றன. சிறிய பானல்களிலும், வாயில் தோரண அலங்காரங்களிலும், ஜங்கா எனப்படும் விமான அடுக்குகளிலும், வாயில் மேற்புறத்திலும் பல காட்சிகள் காணக் கிடைக்கின்றன. ராமாயணம், கிருஷ்ண லீலை, பஞ்ச தந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் எனப் பலவற்றிலிருந்தும் உயிரோட்டக் காட்சிகளை கல்லில் செதுக்கியிருப்பதைக் காணலாம். பூரி ஜகந்நாதர் கோயிலில் கோபுர வாசல் முன்னரே அருமையாக முழுமையாகச் செதுக்கி எடுக்கப்பட்ட காட்சிச் சிற்பங்கள் கலைப் பொக்கிஷங்கள்.

நகைகள் அலங்காரங்கள்: மனித உருவங்கள் பலவிதமான நகைகளை அணிந்தவாறு தோற்றமளிக்கின்றன. எத்தனை விதமான டிசைன்கள்! ஒவ்வொன்றும் அழகு. சாலபஞ்சிகாவும் அலசகன்யாவும் அணிந்திருக்கும் வளையல்கள், கழுத்து மாலைகள், ஆரங்கள், காதணிகள், ஒட்டியாணம் ஒவ்வொன்றிலும் அருமையான டிசைன்கள். தெய்வ ரூபங்கள் அணிந்திருக்கும் நகைகளோ அதைவிடப் பிரமாதம். யோகினி என்ற வட்டமான தாந்திரிக கோயில் ஒன்றில் வட்டமாக பல யோகினிகளைப் பார்க்கலாம். இவர்களை பூஜித்தால் சக்தி வரும் என்பது ஐதீகம். ஒவ்வொரு யோகினியும் ஒரு விதமான போஸ், ஆடை அலங்காரங்கள். அது மட்டுமல்ல. தலையாலங்காரங்கள் ஒவ்வொன்றும் பிரமாதமாக இருக்கும். இன்றைய அழகூட்டும் நிலையங்கள் செய்வது ஒன்றுமில்லை. கல்லிலே அதைவிட அழகான கொண்டைகள், பின்னல்கள்.

அலங்கார வேலைப்பாடுகள்: ரசித்துப் பார்க்க அற்புதமான பூவேலைப்பாடுகள்! கொடிகளும், பூக்களும், விதவிதமான டிசைன்களும் காணக் கிடைக்கின்றன. எப்படிச் செய்திருப்பார்கள் என மலைக்கும் அளவு சிறப்பான சிற்ப வேலைகள் லிங்கராஜா கோயிலில் நிறையக் காணக் கிடைக்கின்றன. உள்ளே பார்வதி கோயில் ஒன்று இருக்கிறது. அதில் கிட்டத்தட்ட பஞ்ச்சிங் மிஷினில் செய்தது போல வேலைப்பாடுகள். புகைப்படம் அனுமதி இல்லாததால் எடுக்க முடியவில்லை. அதனால் மனக் கண்ணில் நன்றாகவே பதிந்திருக்கிறது. சதுரங்க அட்டையைப் போல வடிக்கப்பட்ட சுவர்கள். ஆங்கிலத்தில் லேஸ் ஒர்க் என்பார்களே, அதைப் போல மெல்லிய வேலைப்பாடுகள்! இவ்வளவும் கல்லில்.

இந்தக் கோயில்களில் உபயோகப்படுத்தப்பட்ட கற்கள் சான்ட்ஸ்டோன் அல்லது பசால்ட் வகையைச் சேர்ந்தவை. க்ரானைட் போலக் கடினமானது இல்லையென்றாலும், பேலூர், ஹலபேடு ஹொய்சலா கோயில்களின் சோப்ஸ்டோன் கல்வகையைவிடக் கடினமானதே.

இத்தகைய பொக்கிஷங்களை நாம் எவ்வாறு போற்றுகிறோம்? அதை நினைத்தால் மனம் துடித்துப் போகும். பாதுகாப்பின்றி பல இடிந்து போயின. பல வேண்டுமென்றே இடிக்கப்பட்டன. படையெடுப்பும் மதவெறியும் பல கோயில்களை, சிற்பங்களை அழித்தன. அன்று மட்டுமா? இப்போதும் புதுப்பித்தல் என்ற கொடுமையினால், இவற்றின் அருமை அறியாதவர்களால் சிற்பங்கள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. அதில் பெயின்ட் அடிப்பதும், சான்ட் ப்ளாஸ்டிங்கும், சிலைகளை எடுத்து விற்பதுமாக இந்த நாச வேலைகள் எண்ணிலடங்கா.

நாம் இதுவரை பார்த்தது கட்டுமானம், சிற்பம், அழகு என ஒரு கலைப்பார்வை மட்டுமே. ஒவ்வொரு சிற்பத்தின் பின்னும் புராணக் கதைகள் இருக்கின்றன. அவற்றையும் அறிந்து பார்க்கும்போது நம் அனுபவம் இன்னும் மேம்படுகிறது. அவற்றுடன் ஆன்மிக உணர்வையும் ஒருமிக்கச் செய்வோமானால் இந்த அனுபவம் பன்மடங்காகிறது.

Posted on Leave a comment

கலிங்கத்துக் கோயில் பரணி – ஜெ. ராம்கி

புவனேஷ்வரின் பெரிய கோயிலான லிங்கராஜா கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த அந்த சின்னக் கோயில், முதலில் பயணத் திட்டத்தில் இல்லை. நந்தவனத்துக்கு நடுவே சிதைந்திருந்த கோயில், பல கோணங்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை ஞாபகப்படுத்தியது. இடதுபுற கோஷ்டத்தில் ஒரு கையில் கலசமேந்தி, இன்னொரு கையில் கடக முக முத்திரையோடு நடன வடிவில் முகமெங்கும் புன்னகையோடு பிள்ளையார் எங்களை வரவேற்றார். புவனேஸ்வரில் புள்ளமங்கை வாசம்! திராவிட உட்கல ஜாத்ராவை அங்கிருந்து ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருந்தது.

தாளேஸ்வரா தியால் என்ற அந்த சின்ன சிவன் கோயிலின் விமானம் இடிந்திருக்கிறது. மற்றவையெல்லாம் ஒரிசா கோயில்களின் கலிங்க பாரம்பரியக் கட்டமைப்பை ஒத்திருந்தது. தியோல் என்பது கோயில். ரேகா என்பது கர்ப்பகிரகம். கர்ப்பகிரகத்தை சுற்றி பார்ஷ தேவதா என்னும் கோஷ்ட தெய்வங்களைப் பார்க்கமுடிகிறது. இடதுபுறம் பிள்ளையார். நம்மூர்க் கோயிலின் பின்புறம் சிவா, விஷ்ணு அல்லது பிரம்மா இருப்பார். இங்கே கார்த்திகேயன் என்னும் முருகன் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக துர்க்கையம்மன்.

எந்தக் கோயிலாக இருந்தாலும் கோஷ்ட தெய்வங்கள் மூன்றுதான். சிவன் கோயிலாக இருந்தால் பிள்ளையார், கார்த்திகேயன் & பார்வதி அல்லது துர்க்கை. விஷ்ணு கோயிலாக இருந்தால், நரசிம்மா, திரிவிக்ரமா & வராகா. சக்த என்னும் சூரிய வழிபாட்டுக்கோயிலாக இருந்தால் மூன்று இடங்களிலும் சூரியனின் வெவ்வேறு நிலையில் உள்ள சிற்பங்களைப் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு கோயிலில் வாசலிலும் சிவனின் பல்வேறு அவதாரங்களுக்குப் பிரதான இடமுண்டு. ஏகபாத சேகரன், ஒடிசா கோயில்களில் பரவலான இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைவு. நுழைவாயிலின் மேற்பகுதியில் கஜ லெட்சுமிக்குப் பதிலாக நவக்கிரகங்களின் உருவம் உள்ளது. சில இடங்களில் நவக்கிரக வரிசைக்குக் கீழே கஜலெட்சுமி உருவமும் உண்டு. நவக்கிரகங்களில் எட்டுப் பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கேது, பெரும்பாலான கோயில்களில் இடம்பெறுவதில்லை. ராகுவின் முகம், சற்றே பெரிதாக குளோஸப்பில் காட்டப்படுகிறது.

புவனேஷ்வரில் மட்டுமல்லாமல் ஒடிஷா முழுவதும் உள்ள கோயில்களை கலிங்கா கட்டமைப்பாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ரேகா, பீடா, காக்ரா. முதல் இரண்டு வகையையும் இணைத்துக் கட்டப்பட்ட பல கோயில்களே தற்போது எஞ்சியிருக்கின்றன. கருவறையின் மீது நீளவாக்கில் கட்டப்பட்ட அமைப்புதான் ரேகா தியோல்.

ரேகா தியோலுக்கு முன்னால் இருப்பது ஜகன்மோகனா. நம்மூரின் முக மண்டபத்தோடு இதை ஒப்பிடலாம். இதையே பீடா தியோல் என்பார்கள். ரேகா தியோல் போல் அல்லாமல் பீடா தியோல், அகலவாக்கில் விஸ்தாரமாகக் கட்டியிருக்கிறார்கள். இங்கிருந்துதான் கர்ப்பகிரகத்தில் உள்ள இறைவனை வழிபடவேண்டும்.

ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக் கோயில்களில் ரேகாவும், ஜகன்மோகனாவும் மட்டுமே இருந்திருக்கின்றன. பிற்காலத்திய கோயில்களில் ஜகன்மோகனா சற்றே விரிவுபடுத்துப்பட்டு அதற்கு முன்னர் இன்னும் சில மினி ஜகன்மோகனா மண்டபங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. நட மந்திர் என்றும் சொல்லப்படக்கூடிய நடன மண்டபமும், போக மண்டபம் என்னும் மடப்பள்ளியும், பூரி, லிங்கராஜா போன்ற பெரிய கோயில்களில் காணமுடிகிறது.

தரைத்தளத்தின் அமைப்பு, கோயிலுக்கு ஏற்றபடி வேறுபடுகிறது. பிஷ்டா என்னும் தரைத்தளத்தின் மீதுதான் ரேகாவும், ஜகன்மோகனாவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. உயரம், கோயிலுக்குக் கோயில் மாறுபட்டிருக்கிறது. அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள பகுதியை படா என்கிறார்கள். படா வரை ரேகாவும் ஜகன்மோகனாவும் ஒரே அளவில் தென்படுகின்றன. படாவுக்கு பின்னர் வருவது காந்தி. காந்தியின் வெளிப்புறச் சுற்றுச்சுவர்தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ஏராளமான சிற்பங்களும், அதை ஒட்டிய வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.

பாபகா, ஜங்கா, வரண்டா என்னும் மூன்று பகுதிகள் கொண்ட படாவைப் பெரும்பாலான கோயில்களில் பார்க்கமுடிகிறது. பூரி, லிங்கராஜா போன்ற கோயில்களில் ஐந்து வகையான படாவைக் காணலாம். பாபகா, தல ஜங்கா, பந்தனா, உப ஜங்கா & வராண்டா. ரேகாவைச் சுற்றியுள்ள வெளிப்புறச் சுவர்களை 5,7,9 ஒன்று வெவ்வேறு அளவுகளில் செய்திருக்கிறார்கள். ஐந்து விதமான மடிப்புகள் கொண்ட பஞ்சரத ரேகாவை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு புரொஜெக்ஷனுக்கும் தனித்தனியே பெயரும் உண்டு. ராகா, கனிகா, அனுராதா!

படா மற்றும் காந்தியின் வெளிப்புறங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் அமைப்பின் மீது சில உருவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், கர்ப்பகிரகத்தின் மேலிருந்து பாய்ந்துகொண்டிருப்பது போல் செய்திருக்கிறார்கள். இதென்ன தேவையில்லாமல் நீட்டிக்கொண்டிருக்கிறதே என்று தோன்றலாம். ரேகா தியோல் அமைப்பின் மொத்த எடையையும் குறுக்கு நெடுக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான உருளை வடிவ அமைப்புகளே தாங்கிக்கொண்டிருக்கிறன. அவ்வாறு வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை சிங்கமாகவும், கீர்த்திமுகமாகவும், கஜசிம்ஹாவாகவும் அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

ரேகாவையும், ஜகன்மோகனாவையும் சுற்றி, ஏராளமான சுதைச் சிற்பங்களைக் காணமுடிகிறது. பெரும்பாலும் அலசா கன்யா என்னும் ஆடல் மகளிரின் சிற்பங்கள் விதவிதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நடுவே பாதி மனித உடலுடனும் பாதி பாம்பு உடலுடனும் தென்படும் நாகா மற்றும் நாகி ஆகிய உருவங்களும் அவர்களின் சல்லாபங்களும் உண்டு. சாலபஞ்சிகா என்னும் சிற்றின்பத்தில் திளைக்கும் மகளிர் உருவங்கள், குறிப்பாக மரங்களின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்தபடி நிற்பதும், கிளைகளைத் தழுவியபடிக் காமப்பார்வை பார்ப்பதும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

யானையைக் காலடியில் இட்டு மிதித்தபடி, பிரம்மாண்டமாய் நெருப்பைக் கக்கியபடி விண்ணில் பாயத்துடிக்கும் விட்டலா என்னும் பாயும் சிங்கத்தை ஒவ்வொரு கோயிலிலும் பார்க்கமுடிகிறது. சிவன் கோயிலாகட்டும், விஷ்ணு கோயிலாகட்டும், கனிகா என்னும் வெளிப்புற சுவர் நீட்சியின் ஒவ்வொரு உள்ளடங்கிய பகுதியிலும் விட்டலாவைக் காணமுடிகிறது. சிறு வடிவங்களில் ஆரம்பித்துப் பெரிய அளவு வரை ஏராளமான விட்டலா உருவங்கள் கோயிலின் பிரம்மாண்டத்துக்குத் துணை சேர்க்கின்றன.

சுற்றுப்புறச் சுவரின் அலங்காரங்களுக்கு நடுவே மினியேச்சர் வடிவக் கோயிலைக் காணமுடிகிறது. புடைப்புச் சிற்பமாக தென்படும் இந்த மினியேச்சர் கோயில்களில் உள்ளே மூர்த்திகளும் உண்டு. பெரும்பாலும் நவக்கிரகங்கள் அல்லது சிவ வடிவங்களே காணப்படுகின்றன. ஒட்டுமொத்த மினியேச்சர் அமைப்பையும் முண்டி என்கிறார்கள். கோயிலின் அமைப்புக்கு ஏற்றபடி காக்ரா முண்டி, பீடா முண்டி என்றும், அளவில் சிறியதும் பெரியதுமான சிறிய மினியேச்சர் கோயில்களை படா முதல் காந்தி வரை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.

நாம் இதுவரை பார்த்தவையெல்லாம் அடிப்படைக் கட்டுமான வடிவங்கள். இதே சாயலில் புவனேஷ்வர் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் காணமுடியும். அளவில் பெரியதும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பெரிய கோயில்களாக புவனேஷ்வரின் லிங்கராஜா கோயிலையும், பூரியின் ஜெகநாதர் கோயிலையும் குறிப்பிடலாம். இரண்டையும் விடப் பெரிய கோயிலாக கோனரக் சூரியக் கோயில் இருந்திருக்க வேண்டும். கோனரக்கில் ஜக்மோகனாவும், நட மந்திரும் மட்டும் எஞ்சியிருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுமானமும் தொடர்ந்து இருந்திருக்கும் பட்சத்தில் ஆசியாவிலேயே பிரம்மாண்டான கோயிலாக இருந்திருக்கக்கூடும்.

ஓடிசாவுக்கே உரிய கலிங்கக் கோயில்கள், பல நூறு ஆண்டுகளாகப் பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும், ஒருசில அடிப்படைக் கட்டுமான விஷயங்கள் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்திக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். கலிங்க பாணியிலான முதல் கோயில், ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னால் இத்தகைய கோயில்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், முதலாம் நூற்றாண்டு தொடங்கி, ஏராளமான கோயில்கள் இருந்திருக்கின்றன என்பது உண்மை. அவை கலிங்க பாணியிலான கோயில்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. காரவேலர்களின் ஹத்தி கும்பா கல்வெட்டிலிருந்து, அப்போதே கோயில்கள் இருந்ததும், கடவுள் சிலைகள் பழுதுபார்க்கப்பட்டதும் தெரியவருகிறது. ஆனால், கோயில்களின் கட்டமைப்பு பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யக்ஷா, நாகா வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

கிடைத்த தடயங்களின்படி, கலிங்கக் கட்டமைப்பிலான கோயில்களின் வரலாறு ஆறாம் நூற்றாண்டில் சைலேத்பவர்களின் ஆட்சியில் தொடங்குகிறது. ஒன்பது மற்றும் பதினோராம் நூற்றாண்டுகளில் பரவலானது. ஒரிசா பகுதியை ஆண்டு கொண்டிருந்த சோமவம்ஷியின் ஆட்சிக்காலங்களில் எண்ணிக்கையளவில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் தொடர்ந்த கங்கர்களின் காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக பதிமூன்றாம் நூற்றாண்டின் முடிவில் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. 800 ஆண்டுகள் தொடர்ந்த கலிங்கக் கோயில் கட்டுமான பாரம்பரியத்தின் உச்சம், கோனராக்கின் சூரியக் கோயிலில் நிறைவு பெற்றது என்று சொல்லலாம்.

பூரியின் ஜெகந்நாதர் கோயில் கி.பி 1150ல் அனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. தஞ்சையை ஆண்ட முதலாம் குலோத்துங்கனின் மருமகன். சைவராக வாழ்க்கையைத் தொடங்கி, பூரிக்கு விஜயம் மேற்கொண்ட ராமானுஜரால் வைஷ்ணவனாக மாறியவன். இடிந்து கிடந்த ஜெகந்நாதர் கோயிலை, பிரம்மாண்டமான கோயிலாக எழுப்பியவன்.

மாலை நேரம். நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். பூரி கோயிலில் சகல விஷயங்களுக்கும் பாத்யதை பெற்ற பாண்டா குழுவைச் சேர்ந்த ஒருவர், முதுகில் கொடிகளைக் கட்டியபடி, நட மந்திரிலிருந்து ஜக்மோகனாவில் மீது தாவி ஏறுகிறார். பின்னர் அங்கிருந்து கர்ப்பகிரத்தின் மீது தாவி, விறுவிறுவென்று மேலே ஏற ஆரம்பிக்கிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நூறு அடி உயரம் கொண்ட ரேகா தியோலைக் கடந்து பேக்கி என்னும் ஆளுயுர இடத்தை அடைகிறார். அங்கிருக்கும் விஷ்ணுவுக்கு ஆரத்தி நடைபெறுகிறது.

அங்கிருந்து சங்கிலியைப் பிடித்தபடியே அமலக்காவின் மீது ஏறுகிறார். கரணம் தவறினால் மரணம்! அமலாக்காவைத் தாண்டி காபூரி என்னும் தளத்தை அடைகிறார். பூரி கடற்கரையிலிருந்து வரும் காற்று, ஆளைத் தள்ளிவிடுகிறது. அங்கிருக்கும் கலசத்தின் வழியாக சுதர்சன சக்கரத்தின் மீதேறி ஒரு கையால் பிடித்தபடியே இன்னொரு கையால் கொடியை மாற்றுகிறார். கூட்டம் பரவச நிலைக்குச் செல்கிறது, ஜெய் ஜெகந்நாத்!

சிவப்புக் கொடிக்கு பதிலாக மஞ்சள் கொடி. மழையும் புயலும் இருந்தாலும் கூட தினந்தோறும் தொடரும் சடங்கு என்கிறார்கள். இதுவரை ஒருமுறை கூட அசம்பாவிதம் நடைபெற்றதில்லையாம். கீழிறிங்கி வரும் பாண்டாவிடமிருந்து பழைய கொடிகளை வாங்கிக்கொள்ள நூறு ரூபாய் நோட்டுகளுடன் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஓர் அபாயகரமான சடங்கு, ஒரு மாபெரும் சாகசமாக இங்கே சித்தரிக்கப்படுகிறது. 214 அடி உயர கோபுரத்தைக் கட்டிமுடித்த கையோடு, சொந்தத் தாய்மாமனின் படைத்தலைவனான கருணாநகரத் தொண்டைமானால் தோற்கடிக்கப்பட்டு வீழ்ந்த அனந்தவர்மனின் கதை, இன்னொரு இடத்தில் சாகசமாக்கப்பட்டு, கலிங்கத்துப் பரணி என்னும் அபாயகரமான இலக்கியமாக்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

Posted on Leave a comment

T.K.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் – ஈரோடு நாகராஜ்

இரண்டு கைலயும் வாசிப்பிங்களா?

இல்ல பத்து விரல்லயும்.

என்ன வித்யாசம்?

பத்து விரல்களும், நாலு யுனிட்டா, மூணு யுனிட்டா, ரெண்டு யுனிட்டா, ஒரே யுனிட்டா, ஒரே விரல் மட்டும்… இப்படியெல்லாம் பிரிஞ்சு வாசிக்கும். உதாரணமா, ஒரு தனி ஆவர்த்தனத்தோட க்ளைமாக்ஸ்ன்னு வெச்சுக்குங்களேன், அப்ப வலது கைல நாலு விரல், இடது கைல நாலுவிரல் சேர்ந்து, ஒரே நேரத்துல ரெண்டு பக்கமும் தித், தாம் கிட-ன்னு ஆரம்பிக்கும்.

ஓ… பொதுவாத் தெரிஞ்சுக்கறத விட, இன்னும் நுணுக்கமா இருக்குன்றீங்க.

ஆமாம். நிறைய இருக்கு, ஆனா ஸங்கீதம் பாருங்க; பாடற விஷயத்த பேசினாலே கொஞ்சம்தான் புரியும், எழுதினா சொல்லவே வேணாம்.

அப்ப, இசை, இசைக் கலைஞர்களப் பத்தியெல்லாம் படிக்கும்போது இதுலேந்து ஒண்ணும் புரியாதுன்னு நெனச்சுகணுமா?

அப்படியில்ல, இதுல சொன்னது, நமக்கு புரிஞ்சது போக, இன்னும் நிறைய இருக்குங்கற ஞாபகத்தோட படிச்சா சொன்னா எழுதினா போதும்.

அவர் சற்று உயரம் குறைவாக இருந்தார். மேடையில் அமர்ந்து, இருகைகளையும் மூன்று யுனிட்டுகளாகக் கொண்டு வாசிக்கவே கடினமாகத் தோன்றும் ‘நம்,கிடதக தின்,கிடதக தின’ என்ற சொல்லை அதிவேகமாய் ஒரே கையின் வெறும் மூன்று விரல்களால் போட்டதும் நான் பிரமித்தேன். என் சிறுவயதில் முதன்முதலில் ஈரோட்டில் அவர் கச்சேரி கேட்க, முன்னதாகவே பந்தலில் சென்று அமர்ந்திருந்தபோது, என் சீனியரான சீனிவாசன், ‘மூர்த்தின்னு அவர் பேர வெறும்ன கூட சொல்லக்கூடாது. மூர்த்தி சார்னுதான் சொல்லணும். என்ன கணக்கெல்லாம் வாசிப்பார் தெரியுமா’ என்றான். தா,,,,,, தீ,,,,,, கி,,,,,, ண,,,,,, தொம்,,,,,, என்று நீண்ட கார்வைகளில் ஆரம்பித்துக் குறைத்துக்கொண்டே வந்து அது ‘ததிகிணதொம் ததிகிணதொம் ததிகிணதொம்’ என்று ஆதி தாளத்தின் கடைசி மூன்று அடியில் விரலுக்குவிரல் வந்ததும்தான் அது கண்ட கதி என்றே தெரிந்தது. (கண்டம் என்றால் ஐந்து. ஐந்தைந்தாக வாசிப்பது கண்டகதி, தகதகிட தகதகிட என்பது போல்.)

அவர் ‘தரிகிட கிடதக தாத் தொம்’ என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்தால் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கேட்கும். அத்துணைப் பளீரிடும் தெளிவு, எந்தச் சொல்லாயினும். இருபது வருடங்களுக்கு முன் வாணிமஹாலில் சேஷகோபாலனுக்கு அவர் வாசித்த கச்சேரி இன்றும் நினைவில் உள்ளது. முக்கியக் காரணம், அன்று நகுமோமு கனலேனியை ஆரம்பிக்கும்பொழுது காலப்ரமாணம் 72 pulses per minute. (RPM போல ஒரு நிமிடத்திற்கு எத்தனை துடிப்பு/தாளத்தின் விரல் எண்ணிக்கை என்ற கணக்கு.) பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மேல் அசாத்ய சங்கதிகளுடன் அந்தப் பாடல், கீழ்க்கால மேல்கால ஸ்வரங்கள் முடிந்து தனியாவர்த்தனம் வாசித்து முடித்து மீண்டும் பாடலின் முதல் வரியை எடுக்கும்போது அதே 72. அத்துணைக் காலப்ரமாண சுத்தம்.

 இயல்பான மனித உள்ளம் கால ஒழுங்கைச் சீராக ஆரம்பித்த வேகம் போலவே இறுதிவரை தக்கவைக்க மிகவும் பிரயத்தனப் படவேண்டும் (அனேகமாக முடியாது என்பதன் இடக்கரடக்கல்). ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமாகவோ நிறையவோ ஓடிவிடும் (வேகம் அதிகரித்துவிடும்) அல்லது இழுத்துவிடும் (குறைந்துவிடும்). அது, வெகு சிலருக்கே கைகூடும். அவ்வெகுசிலரில், மூர்த்தி மாமா ஒருவர். சென்ற ஜூன் 2016ல், தன் 92 வயதில் அவர் வாசித்த கச்சேரியும் தனியும் அத்தனை சிறப்பு. ஸங்கீதமானது, நிறைய நிறைய ஞாபகமும், புத்தி கூர்மையும், விரலோ குரலோ மங்காத வித்தையையும், அனிச்சையாய் ஆனால் சரியான மற்றும் சிறப்பான முறையில் உடனுக்குடன் க்ரஹித்து, க்ரஹிக்கும் போதே மேலும் அழகு செய்து, பாட்டுடன் இணைந்து வினையாற்றும் பண்பு போன்ற தன்மைகளை இன்றியமையாததாகக் கொண்டது.

எனக்கு இப்போதே எதை எங்கே வைத்தோம் என்று மறந்துவிடுகிறது. ஆனால், என் குருநாதர் ஸ்ரீ சிவராமன் சாருக்கு 82 வயதாகிறது; மூர்த்தி மாமாவுக்கு 93 ஆகிறது. அவர்களின் சுறுசுறுப்பும் விழிப்பும் லயம் வழிந்தோடும் கச்சேரிகளையும் கேட்டால் வாழ்வில் அவர்கள் கைக்கொண்ட ஒழுங்கு, சின்ன வயதிலேயே செய்த அசுர சாதகம், எடுத்துக்கொண்ட கலையே மனமாயிருத்தல் என நம்மை வியக்க வைக்கும், நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.

மிருதங்கக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயரவர்களின் சிஷ்யருள் மிகுந்த புகழும் ஸ்தானமும் அடைந்தவர்கள் என பாலக்காடு ஸ்ரீ மணி ஐயர், ஸ்ரீ T.K.மூர்த்தி, என் குருநாதர் ஸ்ரீ உமையாள்புரம் K.சிவராமன், கஞ்சிரா ஸ்ரீ V.நாகராஜன் எனப் பலரைச் சொல்லலாம். முதல் மூவருமே ஸங்கீத கலாநிதிகளும் கூட. ஆகஸ்ட் 13, 1924ல் தாணு பாகவதர்-அன்னப்பூரணி அம்மையாரின் மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார் மூர்த்தி. அவர் தமையனார் கோபாலகிருஷ்ணன் லய வித்வான் என்பதால், காதுகளின் கண்களின் வழியே தன்னையறியாமல் லயம் உண்டு வளர்ந்தது சிறுவனின் மனம்…

முதலில் பாட்டுதான் பயின்றார். பள்ளி விழாக்களில் தன் நண்பனான செல்லமணியுடன் (பாடகர் ஹரிஹரனின் தந்தை) பாடுவது வழக்கம். ஆனால் விரல்கள் ஸ்லேட்டில் வாசித்து வாசித்து அடிக்கடி உடைந்து போனதை கவனித்த ஆசிரியர் ஒரு விழாவில் ‘செல்லமணி பாடட்டும்; நீ மிருதங்கம் வாசி’ என்று சொல்லிவிட்டார். அன்று அங்கு வந்திருந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா அவ்வாசிப்பில் மகிழ்ந்து யாரிடம் பயில்கிறாய் எனக்கேட்க, ‘யாருமில்ல. நானே வாசிக்கறேன்’ என்றார். மஹாராஜா ஒரு தங்க மெடல் பரிசளிக்கிறார். மூர்த்தியின் தந்தை எதையோ உணர்ந்து மூன்று ரூபாய்க்கு (இப்பொழுது வாங்கவேண்டுமென்றால் பதினைந்தாயிரம் ஆகும்) ஒரு மிருதங்கத்தை வாங்கித் தருகிறார். இந்நிலையில் ஒரு முறை, தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயர் முன்னிலையில் வாசிக்க நேர்கிறது.

நல்ல கையும், பரிமளிக்கக்கூடிய அம்சங்களும் தென்பட்டால் அவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்டு, பின் ஸ்புடம் போட்டு மின்ன வைக்கும் பேராற்றல் வாய்ந்த வைத்யநாத ஐயரவர்கள், ஒன்பது வயதான மூர்த்தியைத் தன் தத்துப் புத்திரனாகவே தஞ்சைக்கு அழைத்து வருகிறார். ‘அப்பவே கேட்டார்; இன்னும் ரெண்டு மாசம் ஆகட்டும்னு அம்மா சொன்னா. அந்த ரெண்டு மாசத்துல என்னோட அம்மா காலமாயிட்டா. அப்பா என்னை வைத்தா அண்ணாவாத்துல விட்டா’. அவரை விடப் பன்னிரு அகவைகள் மூத்தவரான பாலக்காடு மணி ஐயர் அச்சமயம் அங்கே பயின்று வந்தார்.

இரு வருடங்கள் கழித்து, தன் பதினோராவது வயதில் குருவுடன் சேர்ந்து துக்காராம் படத்துக்காக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பாடிய முசிறி ஸ்ரீ ஸுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்கிறார். பிறகு மைசூர் சமஸ்தானத்தில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரியில் சௌடய்யா வயலினுடன் குரு ஸ்ரீ வைத்தா அண்ணா வாசிக்க, மூர்த்தியும் உடன் வாசிக்கிறார். சிட்டு என்று செல்லாமாக அழைக்கப்பட்ட மூர்த்தியின் வாசிப்பில் மகிழ்ந்து மைசூர் மஹாராஜா அந்நாளில் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறார். அதோடு, தேர்ந்த பக்கவாத்தியக் கலைஞனாக தனியே இவர் வாசித்துக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் மறுநாள் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து கேட்டு உவந்து அன்றும் ஆயிரம் ரூபாய்கள் வழங்கினார். பதினைந்து வயதில் மாஸ்டர் மூர்த்தி என்ற பெயர் ஸங்கீத உலகில் வ்யாபிக்கிறது.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிலிருந்து அரியக்குடி, செம்பை, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.என்.பி., மாலி, எம்.எஸ்., மேண்டலின் என்று அவர் பக்கவாத்யம் வாசித்த உன்னதக் கலைஞர்களின் பட்டியல் வெகு நீளம். ஒரு முறை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி வைத்தா அண்ணாவின் இல்லத்துக்கு வர, ‘இது யாரு தெரியுமா, ரொம்ப நன்னா வாசிப்பான்’ என்று அறிமுகப்படுத்தி அன்று மாலை வீட்டிலேயே ஒரு கச்சேரியை நடத்தினார் வைத்தா அண்ணா. அதன் பின் ஐம்பத்தைந்து வருடங்கள் மூர்த்தி தொடர்ந்து எம்.எஸ்ஸுக்கு வாசித்திருக்கிறார். UNO-வில் வாசித்திருக்கிறார். அந்நாளில் பெண்களுக்கு வாசிப்பதில் இருந்த மனத் தடைகளைக் கடந்து D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, K.B.சுந்தராம்பாள், பிருந்தா-முக்தா எனப் பலருடைய கச்சேரிகளையும் தன் வாசிப்பினால் அலங்கரித்திருக்கிறார்.
         
குரு சிஷ்யப் பரம்பரை என்று எடுத்துக்கொண்டால், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் – ராமனாதபுரம் சங்கர சிவம் – மதுரை T.N.சேஷகோபாலன் – நெய்வேலி சந்தானகோபாலன் – ஸ்ரீராம் பார்த்தசாரதி என்று ஐந்து தலைமுறைக்கு வாசித்த பெருமையையுடையவர். அவரின் கச்சேரி அனுபவத்துக்கே இப்போது ஸதாபிஷேகம் ஆகிவிட்டது. ‘நாங்க எல்லாம் அப்புறம் நிறைய மாத்திண்டோம், (தனக்கென ஒரு பாணி உருவாகி வந்ததைச் சொல்லுகிறார்.) ஆனா மூர்த்தி வாசிப்பு இன்னைக்கும் அண்ணா (ஸ்ரீ வைத்யநாத ஐயர்) சொல்லிக்குடுத்ததெல்லாம் அப்படியே இருக்கும்’ என்று மணி ஐயர் ஒருமுறை பேசியதாக மூத்த கலைஞர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். லய ரத்னாகர, ம்ருதங்க பூபதி, தாளவிலாஸ், சங்கீத நாடக அகாதமி, ஸங்கீத கலாநிதி என்று விருதுகளின் நீண்ட வரிசைக்குச் சொந்தக்காரர் மூர்த்தி அவர்கள்.

மனோபலம் மிக்கவர். தொண்ணூறுகளில் ஒரு கச்சேரியில் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரோக் வந்து, வலது கையும் காலும் ஸ்வாதீனமில்லாமல் போயிற்று. ஆபரேஷன் செய்யவேண்டும் எனக்கூறிய நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியிடம், ‘டாக்டர்… நான் ம்ருதங்கம் வாசிக்கறத்துக்குத்தான் பொறந்தேனேயொழிய, சாப்டுட்டுத் தூங்கறத்துக்கில்லை. நான் வாசிக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுத்துன்னா, என்ன அனுப்சிருங்கோ… நான் போறத்துக்கு ரெடியா இருக்கேன். நான் கவலப்படலேன்னேன்’ என்றார்.

அதன்பின் மனம் தளராது சில மாதங்கள் பயிற்சிகள்; பிறகு அதே கம்பீரமாய் வாசித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவு நேசம் தன் கலையில்.

மூர்த்தி மாமாவின் பேச்சு அலாதியான ரசிப்பும் போலச் செய்தலும் கிண்டலும் அன்பும் நிறைந்தது. ஒரு முறை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது மழை பெய்துகொண்டிருந்தது. ஆட்டோக்காரர் அதையே காரணமாகச் சொல்லி அதிகம் பணம் கேட்டார். இவரும் ஏறி அமர்ந்துவிட்டார். ஸ்டார்ட் செய்யக் குனிந்த நேரம், ‘இரு… மழை விடட்டும்’ என்றார். எக்மோரில் நிறையப் பணம் கேட்டவரிடம், ‘நீ என்ன கொண்டுவிட்டா போறும்; திருப்பியும் இங்க கூட்டிண்டு வரவேண்டாம்.’

அவருக்கு சிஷ்யர்கள் ஏராளம். ம்ருதங்க தத்வம் என்ற கருத்துருவாக்கத்தின் முயற்சியாய் அவருக்கும் முன்பிருந்த மேதைகள் பற்றியும் தஞ்சாவூர் பாணி என்பதனை உலகெங்கும் மூர்த்தி அவர்களின் பார்வையில் கூறியும் வாசித்தும் ஆவணப்படுத்தியுள்ளனர். நான் முதல்முதலாய் வாங்கிய தனியாவர்த்தன கேஸட் இவருடையதுதான். அதில் கொன்னக்கோலும்1 சொல்லியிருப்பார். அதிலும் அவர் வித்தகர். கடம் கஞ்சிராவும் வாசிப்பார். 35 தாளங்கள், 108 தாளங்கள் என்று பலவித தாள அமைப்புகளுக்கும் வாசித்துள்ளார். நிறைய கோர்வைகள் கம்ப்போஸ் செய்திருக்கிறார்.

இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருக்கிறது மத்திய அரசு. சந்தோஷம், நன்றி. ஆனால், மூர்த்தி மாமா அந்த நிலைக்கும் மேலே வந்து, எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள்ளேனும் சரியான சமயத்தில் அவரவர் கலைகளையும் தாம் சார்ந்திருக்கும் துறைக்கு அவர்கள் அளித்த கொடையையும் அங்கீகரித்து விருது வழங்கவேண்டும். பிறகு இன்னும் சற்று வயதான பின், அதற்கும் மேலுள்ள பத்மபூஷன் பத்மவிபூஷன் விருதுகளை அளிக்கட்டும், பரவாயில்லை. விருது பெற்ற அன்றோ, அதற்கடுத்த நாளோ அவர்கள் அங்கே வாசிப்பதாய்க் கொள்ளுவோம். தன் கலையின் சிறப்புகளை முழுவதுமாய் வெளிப்படுத்தும் உடல்-மன நிலையுடன் அவர்கள் இருந்தால் தன் கலையை அங்கே நிகழ்த்துபவருக்கும் கேட்பவர்களுக்கும் எத்தனை ஆனந்தம். பருவத்தே பயிர், காலத்தினால் செய்வது, ஞாலத்தின் மாணப் பெரிது என்பதையெல்லாம் தருண்விஜய் போன்றோர் தானும் பயின்று அரசுக்கும் எடுத்துச் சொல்வாராக. நான் ஹிந்தி கற்றுக்கொண்டு மோடியிடம் பேசி முறையிடுவதை விட அது எளிது.

(நன்றி: அவர் வாசிப்பையும் பேச்சையும் கேட்டு அனுபவித்ததனால் எனக்கும், மூர்த்தி மாமாவின் பத்திரிகைப் பேட்டிகளுக்கும், யூடியூபுக்கும். T.K.Murthy, Mridanga Tatvam என்று கூகிள் செய்து அவர் வாசிப்பின் துளியை நுகரலாம்)

(கட்டுரையாசிரியர் பிரபல  மிருதங்கக் கலைஞர்). 

அடிக்குறிப்பு:

1. கொன்னக்கோல் என்பது மிருதங்கத்தில் வாசிக்கப்படும் சொற்களை ஜதிகளாகச் சொல்லி, பாட்டுக்குப் பக்கவாத்யமாக சொல்லி இசைக்கும் கலை. நத்தின்தின்னா நணதின்தின்னா / தகதிமிதகஜணு என்பது போல.