Posted on Leave a comment

விடாது கறுப்பு! – கே. ஜி. ஜவர்லால்

பிரதமரின் அதிரடித் திட்டமான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றம் நல்ல திட்டம் என்றாலும் பாராட்டுக்களை விட விமர்சனங்களை அதிகமாகச்  சம்பாதித்திருக்கிறது.

வழக்கமாகப் பிரதமர் மோடியையும், பா.ஜ.க அரசாங்கத்தையும் விமர்சிப்பதே கொள்கையாக இருக்கிற இரண்டு பிரிவுகள் உண்டு. பெரும்பாலான மைனாரிட்டிகளுக்கு பா.ஜ.கவின் மீது இருக்கும் அச்சம் புரிந்து கொள்ளக் கூடியதே. அது நியாயமானதா அல்லவா என்பதைப் பற்றிய விவாதம் இப்போதைக்குத் தேவையானதல்ல.

எந்த அரசியல் சார்பும், மதச் சார்பும், சாதிச் சார்பும் இல்லாத சாதாரண மக்களையும் இது முணுமுணுக்க வைத்திருக்கிறது. காரணம் வெளிப்படையானது,  அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்கள். ‘என் மேல் எந்தத் தப்பும் இல்லாதபோது நான் ஏன் இந்தச் சிரமத்தை அனுபவிக்க வேண்டும்?’ என்கிற அவர்களின் கேள்வியும் நியாயமானதே. அந்தக் கேள்விக்கு ரெண்டு மார்க் கேள்விக்கு பதில் எழுதுவது போல இன்ன காரணத்தால் நீ சிரமத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்றோ, பத்து மார்க் கேள்வி போல ஒரு பத்தியிலோ பதில் சொன்னால் போதாது.

அடிப்படைப் பொருளாதாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கறுப்புப் பணமும் கள்ள நோட்டுகளாக உள்ள பணமும் எவ்விதமாய் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும், நேர்மையையும், நிம்மதியான வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கிறதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அடிப்படைப் பொருளாதாரத்தை தேவைக்கும் (Demand) வழங்கலுக்கும் (Supply) இருக்கும் உறவின் அடிப்படையிலேயே புரிந்துகொண்டு விடலாம். இரண்டும் சமமாக இருந்தால் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள். இரண்டில் எந்த ஒன்று அதிகமானாலும் அது ஆரோக்கியமான சூழல் அல்ல.

ஒருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் பொருட்களும் (Product) கொஞ்சம் சேவைகளும் (Services) உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த மதிப்புக்கு  Gross Domestic Produce (GDP) என்று பெயர்.  அந்த நாட்டில் கொஞ்சம் பணமும் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றின் மதிப்புக்களைப் பொருத்து மூன்று விதமான நிலைகள் உண்டாகலாம்.

1.        புழக்கத்தில் இருக்கும் பணம் GDPக்கு  சமமாக இருப்பது மிகவும் ஆரோக்கியமான பொருளாதார நிலையைக் காட்டும். ஆனால் இதை அப்படிப் பராமரிப்பதுதான் நாட்டை ஆள்பவர்களுக்கும், பொருளாதார நிபுணர்களுக்கும் இருக்கும் சவால். இவை இரண்டையும் பத்து சதவீத வேறுபாட்டில் நிலையாக வைக்க முடிந்து விட்டால்கூட அது பெரிய சாதனையாக இருக்கும்.

2.        உற்பத்தியைக் காட்டிலும் பணம் அதிகமாக இருப்பதற்கு ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது.  இதில் இரண்டு வகை உண்டு. பணம் பரவலாக எல்லாரிடமுமே அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியம். மக்களின் Buying Power அதிகரித்திருப்பதாக இதற்குப் பொருள். அதைச் சரிக்கட்டும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்கலாம். அது இன்னும் ஆரோக்கியமான சூழலுக்கு வழி வகுக்கும்.

உடம்பு எல்லா இடத்திலும் பெருத்தது என்றால் பெருத்திருக்கிறான் என்கிறோம். ஒரு இடம் மட்டும் பெருத்தால்? வீங்கியிருக்கு என்கிறோம் இல்லையா?

அதுபோலவே பணம் ஒரு பிரிவில் மாத்திரம் வலுத்தது என்றால் ஒட்டுமொத்த நாட்டில் பணம் அதிகமாக இருப்பது போன்ற தோற்றம்தான் இருக்கும். அதனால்தான் அதைப் பண வீக்கம் (Inflation) என்கிறோம். பண வீக்கம் உண்டாகும்போது உற்பத்தியைக் கூட்ட முடியாது. விலைவாசிகள் ஏறும். ஏனென்றால் பணம் நிறைய இருக்கிறது, பொருள் குறைவு. டிமாண்ட் அதிகமாக இருப்பதால் விலை ஏறும். ஏற்கெனவே பத்து ரூபாய்க்கு வாங்கின பொருளைப் பதினைந்து ரூபாய்க்கோ, இருபது ரூபாய்க்கோ வாங்க வேண்டியிருக்கும். ரூபாயின் மதிப்பு குறைவது இது போன்ற சூழலில்தான். நேற்றைய பத்து ரூபாய் இன்று உண்மையில் ஏழரை ரூபாய்தான் என்கிறார்போல் ஆகிவிடும்.

3.        பணத்தைக் காட்டிலும் உற்பத்தி அதிகமாக இருப்பது இன்னொரு சூழல். இது போன்ற சந்தர்ப்பத்தில் விலைவாசி குறையும். ஆஹா.. தங்கமாய்ப் போச்சு, வேறென்ன வேணும், இதுவல்லவோ சிறந்த நிலை என்று நீங்கள் நினைக்கலாம். உற்பத்தியை எப்போது அதிகம் என்று சொல்வோம்? ஒரு நாட்டில் ஆண்டு தோறும்  16,000 டன் இரும்பு தேவை என்று வைத்துக் கொள்ளலாம். உற்பத்தி 18,000 டன் என்றால் வீண்! விலை குறைத்துத்தான் விற்க வேண்டும். எவ்வளவு குறைந்தாலும் உற்பத்தியானது முழுவதும் விற்றுத் தீராது. ஆண்டு தோறும் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் விற்கும். மிஞ்சியது அந்தப் பொருளின் Shelf Life ஐப் பொருத்து வீணாகும். அடுத்த ஆண்டில் மிஞ்சியதற்கு இணையான அளவு உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால் அந்தத் தொழிலுக்கு Supply செய்கிறவர்களும் குறைக்க வேண்டும். இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இருப்பதால் நாட்டின் உற்பத்தியே அடுத்த ஆண்டு ஒட்டுமொத்தமாய்க் குறையும். அடுத்த ஆண்டு பணவீக்கம் ஆகிவிடும்.

ஆகவே உற்பத்திப் பெருக்கம் என்பது தேவைப் பெருக்கம் உண்டாயின் மட்டுமே நடக்க வேண்டும். எவ்வளவு உற்பத்திப் பெருக்கமோ அவ்வளவு பணம் அச்சடிக்கப்பட வேண்டும்.

இவையெல்லாம் அடிப்படைப் பொருளாதாரம். இவையே மொத்தமும் அல்ல.

கறுப்புப் பணம் என்பது புழக்கத்திலிருந்து மறைக்கப்பட்ட பணம். அது புழக்கத்தில் இருப்பதாக அரசாங்கம் நினைத்திருக்கும்போது உண்மையில் குறைவான அளவு பணமே புழக்கத்தில் இருக்கிறது. ஆகவே உற்பத்தியின் அளவு அதிகமாக இருக்கும். உற்பத்தியானது உபயோகிக்கப்படாமல் மிஞ்சி வீணாகும். மேலே சொன்ன பாயிண்ட் நம்பர் 3ல் சொல்லப்பட்ட எல்லாம் நடக்கும். மெல்ல மெல்லத் தேக்கம் உண்டாகி கறுப்புப் பணத்தின் பரிமாணத்தைப் பொருத்து அது மிகப் பெரிய Industrial Recession ஆக உருவெடுக்கலாம்!

அதாவது கறுப்பின் அளவு அதிகமாக அதிகமாக நாட்டில் உற்பத்தி குறைந்துகொண்டே போகும்.

ஒரு நாட்டின் செல்வ நிலையை தனிநபர் வருமானத்தைக் கொண்டு அளப்பார்கள். Per Capita income. அதாவது  GDP என்று சொல்லப்பட்ட மதிப்பை மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு. ஆண்டுதோறும் GDP குறைந்து ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் இருந்தால் Per Capita income குறைந்து கொண்டே போய் உலக அரங்கில் நாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடாகத் தெரிவோம்.

ஆகவே கறுப்புப் பணம் என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டியது. மிதமிஞ்சிப் போகும்போது வேகமாகக் களையெடுப்பு செய்யப்பட வேண்டியது. அதுதான் இப்போது நிகழ்ந்திருப்பது. இது ஒரு பகுதி.

கள்ளப் பணம் என்ன செய்யும்?

பாயிண்ட் நம்பர் 2ல் சொன்னது போல புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவை அதிகமாக்கிப் பணவீக்கத்தை உண்டாக்கும். விலைவாசி ஏறும். சேமிப்பு குறையும். மெல்ல மெல்ல எல்லாரும் ஏழைகளாகவும் கடனாளிகளாகவும் ஆவார்கள். ஒட்டுமொத்த நாடு பின்னடைவைச் சந்திக்கும் சூழல்.

இப்போது சில புத்திசாலிகள் ஒரு கேள்வி கேட்கலாம்.

கறுப்புப் பணமும் கள்ளப் பணமும் ஒன்றுக்கொன்று எதிரான தன்மை கொண்டவை என்பதால் இரண்டும் இருந்துவிட்டுப் போகட்டும், கூட்டிக் கழிச்சிப் பார்த்தா கணக்கு சரியாத்தான வரும் என்று சொல்லலாம். ஆனால் இரண்டுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதபோது அப்படியான சமநிலை வராது. அது ஒரு மாதிரி Virtual Balance. பிரேக்கில் ஒரு காலும், ஆக்ஸிலேட்டரில் ஒரு காலும் வைத்தபடி ஒரு காரை ஓட்டுவது போலாகும்.

அடுத்தபடியாக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறவர்கள் கேட்கிற ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

கறுப்புப் பணத்தை ரொக்கப் பணமாகக் (லிக்விட் கேஷ்) கையிலேவா வைத்திருப்பார்கள்? தங்கம் வாங்க மாட்டார்களா? நிலம் வாங்க மாட்டார்களா?

நன்றாக வாங்கட்டும். ஆனால் கணக்கில் வராத பணத்தில் தங்கம், நிலம், வெள்ளி, பிளாட்டினம், லொட்டு லொஸ்க்கு எதை வாங்கினாலும் ரசீது வாங்க மாட்டார்கள். ரசீது இல்லாமல் செய்த வியாபாரத்தை விற்றவனும் கணக்கில் காட்ட முடியாது. அது ஒரு கறுப்பு டு கறுப்பு டிரான்ஸாக்ஷன். ரொக்கம் கைமாறிக்கொண்டே இருக்குமே ஒழிய எப்போதும் அது வெள்ளை ஆகாது. ஆகவே 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தால் அந்தப் பணம் எங்கே இருந்தாலும் (ஹவாலா புரோக்கர்கள் வசம் இருந்தாலும்) குப்பைக் காகிதம்தான்.

ஐடியா கறுப்புப் பணத்தை மதிப்பில்லாமல் ஆக்குவதுதான். அது செவ்வனே நடந்தாகிவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

லிக்விட் கேஷாக இருக்கவே இருக்காது என்கிற வாதத்தை ஏற்கவே முடியாது. அது சிறுபிள்ளைத்தனமானது. தேர்தலில் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று தருகிறார்களே, அதுவும் எல்லாத் தரப்பினரும்! அதெல்லாம் அவரவர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தா தருகிறார்கள்? அல்லது வங்கியில் கடன் வாங்குகிறார்களா? எல்லாம் கறுப்புதானே? ஒவ்வொரு தொகுதியிலும் ஐம்பது கோடியாவது புழங்கும். 234 தொகுதிகளில் எவ்வளவு? தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு (சுமார் 1500 கோடி, ஒரு தேர்தலின்போது மட்டும்) என்றால் நாடு முழுக்க எவ்வளவு லிக்விட் கேஷ் இருக்கும்?

இதெல்லாம் கண்ணிலேயே படாதது போல எப்படிப் பேசுகிறார்கள்?

இன்னொரு சுவாரஸ்யமான கேள்வி பெருமதிப்புக்குரிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் கேட்டிருப்பது. ரூ.400 கோடி கள்ள நோட்டுக்களை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியமா? அதாவது இந்த நடவடிக்கையில் கறுப்புப் பணத்துக்கு எதிராக எதுவுமே இல்லை போல, இது வெறும் கள்ள நோட்டுக்கு எதிரான நடவடிக்கை போலக் கேட்டிருக்கிறார்.

முதலில் அவர் சொல்லும் 400 கோடி என்பது எவ்வளவு சரியான தகவல் என்பது தெரியாது. கட்டாயம் அதைக் காட்டிலும் அதிகம் இருக்கும். ஒரு பேச்சுக்கு அவ்வளவுதான் என்று வைத்துக் கொள்வோம். அப்படியே விட்டு விடலாமா? அது வெறும் 400 கோடியோடு நின்று விடுமா? அந்த நோட்டு அடிக்கும் பிளாக்குகள், உள்நாட்டிலும் பாகிஸ்தானிலும் யார் யார் அடிக்கிறார்களோ அவர்கள் வசம் இருக்கிறதே? தொடர்ந்து அடித்த வண்ணம்தானே இருப்பார்கள்? இது அவருக்குத் தெரியாதா? நிஜமாகவே தெரியாது என்றால் அப்படி ஒரு நிதியமைச்சர் இருந்ததற்கு நாம்தான் வருத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றும் மாவோயிஸ்ட்டுகள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

மக்கள் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் இதன்  நன்மைகளை உணர முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்தச் சிரமத்தின் வலிகள் ஓய்ந்த பிறகு நிச்சயமாக நன்மைகளை அவர்களால் உணர முடியும்.

கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால் பணத்தையே ஒழித்தால்தான் முடியும். அதாவது நூறு ரூபாய்க்கு அதிகமான எல்லாப் பரிவர்த்தனைகளும் கார்ட் மூலம் அல்லது காசோலை மூலம்தான் நடக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். நூறு நூறாகப் பலமுறை செய்வதைத் தடுக்க அதிக பட்சம் ஒரு நாளில் இத்தனை முறைதான் என்கிற உச்ச வரம்பு வர வேண்டும்.

இதற்கு உடனடியாக வரப்போகும் ஆட்சேபம், சிறு வியாபாரிகள் எப்படி கார்டு வசதி அமைத்துக் கொள்வார்கள் என்பதே. வேறு வழியில்லை. போதிய அவகாசம் தந்து செய்துகொள்ளச் சொல்ல வேண்டியதுதான். அடுத்த ஆட்சேபம், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்பது. அவர்கள் பணம் தந்தால் அந்த மதிப்புக்கு கார்டு தரும் செண்ட்டர்கள் (மொபைல் ரீசார்ஜ் நிலையம் போல) அமைக்கலாம். அதை ஸ்வைப் செய்து பொருட்கள் வாங்கலாம்.

பஸ்கள், ரயில்களில் கூட இப்படி ரீசார்ஜபிள் கார்டுகள் ஸ்வைப் பண்ணுகிற சிஸ்டம் வர வேண்டும். சில்லறைத் தட்டுப்பாடும் இருக்காது. திருட்டுப் பயமும் இருக்காது. புழக்கத்தில் மிகச் சிறிய அளவே கரன்ஸி இருந்தால் பொருளாதாரம் மிக ஆரோக்கியமாக இருக்கும். வெளுப்புப் பணமே இல்லாத போது கறுப்புப் பணம் எங்கிருந்து வரும்? கார்டு மூலமோ செக் மூலமோ லஞ்சம் கொடுத்தால் வருமான வரித்துறைக்கு இணையம் மூலம் தகவல் போய்விடும். ஒட்டுமொத்த கேஷ்லெஸ் எகானமி என்பது இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்பது உண்மைதான். எனவே கட்டுப்படுத்தப்பட்ட கேஷ்லெஸ் எகானமியை நோக்கி நாம் முன்னேறியாகவேண்டும்.

குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக ரொக்கம் வங்கியிலிருந்து எடுத்தால் எதற்காக என்பது சொல்லப் படவேண்டும். அந்தப் பரிவர்த்தனையின் ரசீது ஒப்படைக்கப்பட வேண்டும். பான் கார்ட் எண் குறிப்பிடப்பட்டாகவேண்டும்.

இப்போதே, பான் கார்டு இல்லாமல் தங்கம் வாங்க முடியாது என்கிற நிலை ஏறக்குறைய வந்தாகி விட்டது. இதில் தங்க உச்சவரம்பும் அவசியம். அதேபோல பழைய நில உச்ச வரம்பும் திரும்ப வந்தாக வேண்டும். நிலப் பதிவும் பான் கார்டு இல்லாமல் நடக்கக் கூடாது. ரொக்கத்தில் நடக்கக் கூடாது.

இப்படிச் செல்லவேண்டிய தொலைவு அதிகம் உள்ளது. இந்த நீண்ட பயணத்தில் மிக முக்கியமான முதல் அடி மட்டுமே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லாவற்றையும் எப்படி மத்திய அரசு கண்காணித்து வெற்றி கொள்ளப்போகிறது என்பதே மத்திய அரசின் முன் உள்ள சவால்.