Posted on Leave a comment

வலம் டிசம்பர் 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்

வலம் டிசம்பர் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்

அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்களும் அறநிலையத்துறை நிர்வாகமும் | பி.ஆர்.ஹரன்

இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி | ஆமருவி தேவநாதன்

பிட்காய்ன்: பணத்தின் வருங்காலம் | ப.சந்திரமௌலி

சில பயணங்கள் சில பதிவுகள் 4 – தொடர் | சுப்பு

இரத்தத்தால் ஒரு முற்றுப்புள்ளி | கோ.எ.பச்சையப்பன்

பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாண்டுகள் | B.K. ராமச்சந்திரன், ஹரன் பிரசன்னா

டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா? | திருமலை ராஜன்

Posted on 1 Comment

டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா? – திருமலை ராஜன்

டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைச் சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பாரதப் பிரதமர் மோதி திடீரென்று அறிவித்தார். இந்தியாவையே கலக்கிய, உலகத்தையே அசரச் செய்த அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்து விட்டது.  பிரதமர் மோதி இதைத் தன் கட்சிக்காகவோ அல்லது தன் சுயநலனுக்காகவோ எடுக்கவில்லை. முழுக்க முழுக்க இந்தியாவின் ஒட்டுமொத்த நலன் கருதியும் நாட்டில் நிலவி வரும் கள்ளப் பொருளாதாரம், கள்ளப் பணம், கறுப்புப் பணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை இது. இது அவரது கட்சிக்கே பாதிப்பு ஏற்படுத்தி விடும், அதன் எதிர்கால வெற்றியைப் பாதித்துவிடும் என்ற அபாயங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.

இதற்கு முன்னால் இதைச் செயல்படுத்தியபொழுது அவையெல்லாமே பலத்த தோல்வியை மட்டுமே தழுவின. இந்தியாவில் ஏமாற்று நோக்கமுடைய கறுப்புப் பண முதலைகளும் அரசியல்வாதிகளும் கள்ளக் கணக்கு வைத்திருந்த நிறுவனங்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள், அவர்கள் எந்தவொரு திட்டத்தையும் முறியடித்து விடுவார்கள் என்ற பயங்கரமான நிதர்சனமும் முன்னால் பூதாகரமாக நின்றது. அதைச் செயல்படுத்தப்போகும் ரிசர்வ் வங்கியும், வங்கிகளும், பிற அரசுத் துறைகளும் பெரும்பாலும் காங்கிரஸ் கால அலுவலர்களினாலும் கம்யூனிச யூனியன் ஊழியர்களினாலும் நிரப்பப்பட்டவை. அவர்கள் இந்தத் திட்டத்தினை தோல்வி அடையவே செய்வார்கள் என்ற பயங்கரமான யதார்த்தமும் முன்னால் நின்றது. இந்த எச்சரிகைகளை, அபாயங்களை எல்லாம் மீறி, நாட்டு நலன் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு மிகத் துணிவாக இந்த நடவடிக்கையை எடுத்தார் மோதி.

இந்தத் திட்டம் தோல்வி என்று மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் இன்னும் பலரும் சொல்கிறார்கள். இந்தத் திட்டம் படுதோல்வி என்று எதிர்க்கட்சியினரும் சில பாஜகவினரும் கூடச் சொல்கிறார்கள்.

இத்திட்டத்தினை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள்?

*  இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஆட்கள், மோசடி வியாபாரிகள், பணத்தைப் பதுக்கிய டாக்டர்கள், கல்வி வியாபாரிகள், அரசியல்வாதிகள், வரி கட்டாமல் கறுப்புப் பணத்தை ஒளித்து வைத்திருந்தவர்கள், மோசடிப் பேர்வழிகள் என்று இதனால் பாதிக்கப்பட்ட அனைவருமே மோதியைக் கடுமையாகத் தாக்கி இது தோல்வி என்று சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்கள்

*  70 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் கறுப்புப் பணத்தையும் ஊழல்களையும் மெத்தனமான நீதி அமைப்புகளையும் சீர் செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ஓட்டைகள் வழியாகத் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சொத்து சேர்த்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள், திராவிடக் கட்சிக்காரர்கள் இன்னும் பல ஊழல் கறை படிந்த மாநிலக் கட்சிக்காரர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தினைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

* இன்னொரு தரப்பினர், மோதி ஒழியவேண்டும் என்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்கள். இந்தியா அழிந்தாலும் பரவாயில்லை, மோதி ஒழியவேண்டும் என்பது இவர்களது தரப்பு. ஒரு பக்கம் ஊழல் ஒழியவேண்டும், லஞ்சம் அழியவேண்டும் என்று பேசிக்கொண்டே மறுபக்கம் இந்தத் திட்டம் தோல்வி என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காந்திய நேருவியவர்கள். இந்தியாவை காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆள முடியும் என்று நம்பும், வேறு மாற்றுத் தலைமையை ஏற்க மறுக்கும், காலத்தால் உறைந்து போனவர்கள்.

* இன்னொரு தரப்பினர் அதிகம் யோசிக்க இயலாதவர்கள். இந்தத் திட்டம் துவங்கிய அன்றே இதை வசை பாடியவர்கள் இவர்கள். இது என்ன ஏது என்று எதுவும் தெரியாது. இதன் மூலம் லாபமோ நஷ்டமோ எதுவும் இவர்களுக்கு இருக்காது. இருந்தாலும் கருத்து மட்டும் சொல்வார்கள். எதைப் பற்றியும் எதிராக மட்டுமே பேசுவார்கள். பத்திரிகைகளின் வரும் கருத்துகளின் அடிப்படையில் இந்தியாவுக்கு எதிரான கருத்தை உருவாக்கிக்கொண்டு அதன்படிப் பேசுபவர்கள் இவர்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம்

நரேந்திர மோதி பதவியேற்பதற்கு முன்பாகத் தன் தேர்தல் பிரசாரங்களின்பொழுது இந்தியாவில் கணக்கில் வராத, வரி கட்டப் படாத கறுப்புப் பணத்தை எங்கு ஒளித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் மீட்டுக் கொண்டு வருவேன் என்று கூறினார். தலைக்கு 15 லட்சம் தருவேன் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. அப்படி மீட்டெடுத்து வந்தால் அது தலைக்கு 15 லட்சம் வீதமாக இருக்கும் அளவுக்குப் பெரிய தொகை என்று கூறினார்.

அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அவருக்கும் தெரியும். அதற்கு அவர் முழு மூச்சாக இறங்கினால் அவர் கொலை கூடச் செய்யப்படக் கூடும் என்ற அபாயமும் அவருக்குத் தெரியும். இருந்தாலும் அந்தக் காரியத்தில் பல்வேறு வழிகளில் இறங்க முடிவு செய்தார்.

வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்பது ஒரு நடவடிக்கை. உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வெளியே கொண்டு வந்து பணப்புழக்கத்தை அதிகரிப்பதும் அதன் மூலமாக வரி வருவாயைப் பெருக்குவதும் இன்னொரு நடவடிக்கை.

உள்நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர அவர் முயற்சித்ததுதான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. உள்நாட்டில் ரிசர்வ் வங்கி அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்த பெரிய மதிப்புப் பணமான 1000/500 ரூபாய் கரன்ஸிகள் அனேகமாக அன்றாட வர்த்தகப் புழக்கத்திற்கு வரவில்லை. அவை பெரும் அளவில் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளதாக நம்பப்பட்டது. ஆகவே அவற்றைச் செல்லாததாக ஆக்குவதன் மூலமாக வெளியே கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சி இது.

*

2016 நவம்பர் 9 அன்று ரூபாய் நோட்டுகள் செல்லாதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 31 வரையிலும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். கணக்கில் காட்டாத பணத்தை வங்கிகளில் கட்டத் துணிய மாட்டார்கள். ஆகவே அவை வெளியே வராது. அப்படித் திரும்பி வராத பணம் எப்படியும் ஒரு 5 லட்சம் கோடிகள் இருக்கும். அவ்வளவும் அரசாங்கத்துக்குச் சொந்தமாகிவிடும் என்று பலரும் கனவு கண்டார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரி ஆனது. கிட்டத்தட்ட 99% பணம் திருப்பி வங்கிகளில் வந்து சேர்ந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது.

இப்படி 99% பணம் திரும்பி வங்கிகளுக்கே வந்து சேர்ந்து விட்டபடியால் இந்தத் திட்டம் ஒரு மாபெரும் தோல்வி என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனென்றால் வெளியே இருக்கும் பணத்தின் எண்ணிக்கை என்ன என்பதிலேயே ஒரு திட்டவட்டமான தெளிவு ரிசர்வ் வங்கியிடம் இல்லை. இதை இந்தப் பெரும் அளவில் திரும்பிய பணம் நிரூபிக்கிறது. இது, ரிசர்வ் வங்கி கரன்ஸிக் கணக்கு வைக்கும் முறை மீது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவே இந்த நடவடிக்கையில் ஏற்பட்ட முதல் விளைவாகும்.

ரிசர்வ் வங்கியின் கணக்கின் மீதான அவநம்பிக்கை

ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டதாகக் கணக்குக் காட்டிய அத்தனை 1000/500 கரன்ஸிகளும் வங்கிகளுக்குத் திரும்பி வருகிறது என்றால் இந்தியாவில் எல்லோரும் யோக்கியர்களா? ஒருத்தனிடம் கூட கறுப்புப் பணம் இல்லையா? அப்படி இருக்கவே முடியாது. அது சாத்தியமே அல்ல.

இப்பொழுது 99% திருப்பி வந்து விட்டது என்று சொல்வதைப் பார்க்கும் பொழுது ரிசர்வ் வங்கி சொல்லும் கணக்கில் ஏதோ தவறு உள்ளது என்பது உறுதியாகிறது. ஆனால் இன்னும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பணம், நேபாளம் மூலமாக வரப் போகும் பணம், இன்னும் எண்ணப் படாத என்.ஆர்.ஐக்களின் பணம் எல்லாம் சேர்த்தால் ஒரு 120% கணக்கு வருமா? ரிசர்வ் வங்கி அச்சடித்ததோ 100%. ஆனால் திருப்பி வருவதோ 120%? அதெப்படி? இன்று அச்சடித்து வெளியில் விட்டதாகச் சொல்லப் படும் கரன்ஸிகளை விட அதிகமான பணம் மீண்டும் உள்ளே வரும் சாத்தியமிருப்பது, பல சந்தேகங்களை எழுப்புகிறது.

மோதி அரசாங்கம் பணமதிப்பிழப்புக்கான நடைமுறைகளைத் தனியே செயல்படுத்தி விட முடியாது. மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள், வருமான வரித் துறை மற்றும் பிற நிதித் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய வேலை. இதில் முக்கியமான அங்கம் ரிசர்வ் வங்கி. ஆனால் ரிசர்வ் வங்கியோ ரகுராம் ராஜன் என்பவர் தலைமையில் இருந்தது. அவரை நம்பி இதில் இறங்க முடியாது என்பதற்காகப் பொறுமையாக அவர் வெளியேறும் வரை காத்திருக்க வேண்டி வந்தது. ரகுராம்ராஜனும் அவருக்கு முன்பாக கவர்னராக இருந்தவர்களும் அளித்த கணக்குகளின் அடிப்படையிலேயே மோதி அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் நிலவியது. ரிசர்வ் வங்கி சொல்லும் கணக்கை மட்டுமே நம்ப வேண்டும். வேறு வகைகளில் அதைச் சரிபார்க்க முடியாது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ரிசர்வ் வங்கி, கணக்கில் இல்லாமல் அதிகமான நோட்டுக்களை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டிருக்கலாம். அப்படி விட்டிருந்தால் அந்தப் பணம் என்றும் கணக்கில் வரப் போவதில்லை. ஒரு வேளை அப்படி ஒரே சீரியல் நம்பர்களில் இரண்டு தாள்களை அச்சடித்து வெளியிட்டிருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தை இந்த நடவடிக்கையின் விளைவு ஏற்படுத்துகிறது.

ரிசர்வ் வங்கியை மேற்பார்வை செய்ய எந்த அமைப்பும் கிடையாது. அவர்கள் சொல்வதே கணக்கு. அதன் கவர்னர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் விசுவாசிகளாக இருந்தவர்கள். இதுவரை வெளியிட்டிருந்த முழு பணத்தையும் கணக்கில் வைத்திருந்தால், கணக்குக்குத் திரும்பாத கறுப்புப் பணம் திரும்பாத பணம் அரசுக்குச் சொந்தம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆகவே இந்த நடவடிக்கையின் முதல் விளைவு, ரிசர்வ் வங்கியின் கரன்ஸி கணக்கின் மீது ஏற்பட்டிருக்கும் மாபெரும் சந்தேகம். ஏன் மோதி அரசு எல்லாரையும் விசாரித்து அப்படி ஏதேனும் இரட்டைப் பணம் அச்சடிக்கப்பட்டுள்ளதா என்ற உண்மையை வெளியே கொண்டு வரக் கூடாது என்று கேட்கலாம். அது மோதியினால் மட்டும் அல்ல, அந்தக் கடவுளினால் கூட முடியாது. ஏன்?

மோதி அரசாங்கம் திருடவில்லை என்றாலும் கூட முந்தைய அரசுகள் திருடியதைக் கூட வெளியில் சொல்ல முடியாத நிலை. ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இப்படி எங்கள் ரிசர்வ் வங்கியே முந்தைய ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் கள்ள நோட்டு அடித்து வெளியில் விட்டு நாட்டின் பொருளாதாரத்தை செயற்கையாக அதிகரித்து ஏமாற்றியுள்ளது என்பதை உலக நாடுகளிடம் சொல்ல வேண்டி வரும். அது இந்தியாவின் நம்பிக்கையின் மீதான பெரும் அடியாக இருக்கும். இந்தியா உலக அளவில் மாபெரும் மோசடி நாடாக அறியப்பட்டு இந்தியாவின் பண மதிப்பும் ஒட்டுமொத்த அங்கீகாரமும் அதல பாதாளத்துக்குப் போய் விடும்.

ரிசர்வ் வங்கி நோட்டுக்களைக் கணக்கில் காட்டாமல் அதிகமாக அச்சடித்திருக்கலாம் என்ற அச்சம் ஒருவேளை உண்மையாக இருந்தாலும்கூட ஊமை கண்ட கனவு போல ஒருவரிடமும் சொல்லாமல் வலியை உள் வாங்கிக் கொள்வதைத் தவிர இன்றைய அரசுக்கு வேறு வழியில்லை.

*

இதற்கு முன்பாக 1978ல் மொரார்ஜி தேசாய் பிரதமராகவும் ஹெச்.எம்.பட்டேல் நிதி மந்திரியாகவும் இருந்த சமயத்தில் இதே போன்றதொரு டிமானிடைசேஷன் நடந்தது. மொரார்ஜியின் ஜனதா அரசு திடீரென்று ஜனவரி 16, 1978 அன்று புழக்கத்தில் இருந்த 1,000,5,000,10,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. அப்பொழுதும் கூட கையில் இருக்கும் செல்லாத கரன்ஸிகளை வங்கியில் செலுத்துமாறு சொல்லப்பட்டது. அப்பொழுது அச்சடித்துப் புழக்கத்தில் இருந்த மொத்த 1,000/5,000/10,000 கரன்ஸிகள் மொத்தமே 180 கோடி ரூபாய் மட்டுமே. அப்பொழுது வங்கிகளுக்குத் திருப்பி வந்த பணம் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய். மீதமுள்ள 20 கோடி ரூபாய் மட்டுமே கறுப்புப் பணமாகக் கருதப்பட்டது

அதாவது 180 கோடியில் 20 கோடி என்பது கிட்டத்தட்ட 11%. அதாவது புழக்கத்தில் இருந்த பணம் வெறும் 180 கோடிகளாக இருந்த காலத்தில்கூட 11% கறுப்புப் பணம், அதாவது வரி கட்டாமல் ஏய்த்த பணம், ஒளித்து வைக்கப்பட்ட பணம் திரும்பி வந்துள்ளது. அப்பொழுது புழக்கத்தில் இருந்துள்ள மொத்த கரன்ஸிகளில், 1,000/5,000/10,000 கரன்ஸிகள் வெறும் 10% மட்டுமே. மீதமெல்லாம் சிறு மதிப்பு கரன்ஸிகளே. ஆக 10% புழக்கத்தில் இருந்த பெரு மதிப்பு கரன்ஸிகளில் 11% திருப்பி வராமலேயே அரசாங்கத்துக்கு வருமானமாகக் கருதப்பட்டது. இது 1978ன் நிலமை.  இன்று 39 வருடங்கள் கழித்து, புழக்கத்தில் உள்ள 1000/500 கரன்ஸிகளின் மதிப்பு, ரிசர்வ் வங்கியின் கணக்குப் படி 87%. அதாவது பெரும்பாலான பணம் இந்த அதிக மதிப்புப் பணங்களாகவே காலப்போக்கில் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இப்பொழுது புழக்கத்தில் அச்சடித்து விடப்பட்ட 15.44 லட்சம் கோடி பணத்தில் 15.28 லட்சம் கோடி ரூபாய்கள் வங்கிகளுக்குத் திருப்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. அதாவது அச்சடித்து வெளியிட்ட மொத்த 15.44 லட்சம் கோடி கரன்ஸிகளில் 16,000 கோடி ரூபாய் மட்டுமே அதாவது வெறும் 1%க்கும் குறைவான கரன்ஸிகள் மட்டுமே திரும்பி வரவில்லை.

1978ல் 11% திருப்பிச் செலுத்தாமல், காணாமல் போன பணம், 2017ல் வெறும் 1% ஆகச் சுருங்கியது எப்படி? ஆக 39 ஆண்டுகளில் இந்தியர்கள் மாறி விட்டார்களா? ஒட்டுமொத்த இந்தியாவுமே தூய்மையாகி விட்டதா? இந்தியாவில் கறுப்புப் பணம் என்பதே இல்லையா என்ன? ரிசர்வ் வங்கி திருப்பி வந்ததாகச் சொல்லும் கணக்கில் தவறு இருக்கும் என்று சொல்ல முடியாது. அது சரியாகவே இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் குறைவாகக் கூட வெளியில் சொல்லப்பட்டிருக்கலாம். அப்படியானால் அது அச்சடித்து வெளியிட்டதாகச் சொல்லும் 15.44 லட்சம் கோடிகளில்தான் தவறு இருக்கவேண்டும்.

இந்த நடவடிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்ன?

1. ரிசர்வ் வங்கியிடம் அச்சடித்து வெளியிட்ட பணத்திற்கான சரியான கணக்கு விபரம் இல்லை. ஒழுங்காகக் கணக்கு வைக்கவில்லை.
அல்லது
2. ரிசர்வ் வங்கி கணக்கில் காட்டியதை விடவும் அதிக அளவில் கரன்ஸிகளை அடித்து யாருக்கோ கொடுத்துள்ளது. அப்படிக் கொடுத்திருந்தால் அதற்குப் பெயர் அரசாங்கமே அச்சடித்தக் கள்ளப் பணம். அது உலக வர்த்தகத்தையும் இந்திய மக்களையும் ஏமாற்றும் செயல். இந்திய மக்களின் மீதான ஒரு பொருளாதாரப் பயங்கரவாதம். உலக நாடுகளை ஏமாற்றிய ஒரு மாபெரும் பொருளாதார மோசடி.

யூகம் 1 சரியாக இருக்க வாய்ப்புக் குறைவு. ஏனென்றால் தான் அச்சடிக்கும் பணத்திற்கான கணக்கை ரிசர்வ் வங்கி தப்பாக வைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு நமது அக்கவுண்ட்டிங் முறை மோசமாக இருக்க முடியாது. அப்படியானால் யூகம் 2 மட்டுமே சரியாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் இப்பொழுது ஆர்.பி.ஐ கரன்ஸி அச்சடிக்கும் முறையில் எங்கோ தவறு செய்கிறது என்பது இந்த டிமானிடைசேஷன் மூலமாக வெளி வந்துள்ளது.

அப்படியே திரும்பி வராத 16,000 கோடி ரூபாயும் கூட இந்திய அரசுக்கு லாபம் என்று சொல்லி விட முடியாது, ஏனென்றால் அதற்கும் மேலாகப் புது நோட்டு அச்சடிக்க செலவு செய்திருக்கிறார்கள்.

ஆக, மொத்தமாக இந்த டிமானிடைசேஷனினால் நஷ்டம் என்று சொல்லி விடலாமா? இதுபோக ஒட்டுமொத்த ஜிடிபி குறைவினால் ஏற்பட்ட இழப்புகளையும் இந்தக் கணக்கில் சொல்லி மாபெரும் தோல்வி என்று சொல்லி விடலாமா? அப்படித்தான் பி.சிதம்பரமும், ரகுராம் ராஜனும் சொல்லுகிறார்கள். ஆனால் அது உண்மையா? இதில் வேறு பலன்களே கிடையாதா? உண்டு. இந்த மேலோட்டமாகத் தெரியும் நஷ்டத்தை விடவும் அரசாங்கம் ஒட்டுமொத்தமாகப் பல நேரடியான மறைமுகமான குறுகிய கால/நீண்ட கால பலன்களை அடைந்துள்ளது.

கள்ளப் பணத்தின் பெரும்புழக்கம்

இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் தலைவலியாக இருந்தது பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு நேபாளம், கேரளா வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட கள்ளப் பணம். இது கறுப்புப் பணம் அல்ல. இந்திய ரிசர்வ் வங்கியினால் அச்சடிக்கப்படாமல் பாகிஸ்தானிலும் இந்தியாவுக்குள்ளாகவும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட போலி கரன்ஸிகள். இந்திய ரூபாய் தாள்களைப் போலவே தோற்றமளிக்கும் இந்தப் போலி கரன்ஸிகள் மிக அதிக அளவு, அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பொருளாதாரத்தையுமே அசைத்துப் பார்த்து விடும் அளவு நாட்டிற்குள் புழங்கிக் கொண்டிருந்தது.

இந்தக் கள்ளப் பணம் பெரும்பாலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளினாலும் இந்திய விரோதிகளினாலும் கள்ளப் பண விநியோகிப்பாளர்களினாலும் புழக்கத்தில் விடப்பட்டு ஒன்று. இவற்றைக் கண்டுபிடிப்பதும் சிரமம். இந்தக் கள்ளப் பணத்தின் உதவியினால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்தன. காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. கட்டுப்படுத்த முடியாத விதத்தில் மிக அதிக அளவு கள்ளப் பணம் புழக்கத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியாவின் இருப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு வளரும் அபாயகரமான கட்டத்தை எட்டியபொழுது அதைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் இந்த டிமானிடைசேஷன் கொண்டு வரப்பட்டது

இந்த நடவடிக்கையின் ஆகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று கள்ளப் பணத்தின் புழக்கம் அறவே ஒழிக்கப்பட்டது. கள்ளப் பணங்கள் பெரும்பாலும் 1000/500 நோட்டுகளாகவே அச்சடிக்கப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டன. அந்த வகையான கள்ளப் பணங்கள் வங்கிகளுக்குள் நுழைய முடியாது என்பதினால் அப்படி அச்சடிக்கப்பட்ட அத்தனை கள்ள போலி கரன்ஸிகளும் பயனில்லாமல் எரிக்கப்பட்டன. அந்த வகையில் இந்தியாவில் ஊடுருவிய கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டது. அதன் மூலமாக இந்தியாவில் நிலவி வந்த மாற்றுப் பொருளாதாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. டிமானிடைசேஷனுக்குப் பிறகு புதிய ரூபாய் தாள்களுக்கு இணையான போலி கரன்ஸிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. உள்ளே வந்த போலி கரன்ஸிகளும் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக ஒழிக்கப்பட்டன.

கறுப்புப் பணம்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அச்சடித்தாகச் சொல்லும் அனைத்து கரன்ஸிகளுமே உள்ளே வந்திருக்கலாம். ஆனால் அவை உள்ளே வந்ததினாலேயே அவை வரி கட்டப்பட்ட பணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையின் மூலமாக ஏராளமான கறுப்புப் பணப் பதுக்கல்காரர்கள் தாங்கள் வரி கட்டாமல் ஒளித்து வைத்திருந்த கறுப்புப் பணத்தை எல்லாம் பினாமிகள் மூலமாக அவர்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். அப்படி வங்கிகளுக்குச் சந்தேகமான முறையில் வந்துசேர்ந்த அத்தனை பரிமாற்றங்களும் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றன. அவற்றிற்கான வரி கட்டப்பட்ட தகவல்கள் அளிக்கப்படாமல் போனால் அவை கறுப்புப் பணமாகக் கருதப்பட்டு வரிகளும் அபராதங்களும் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படவிருக்கின்றன.

மென்பொருள் துறையின் பிக் டேட்டா அனாலிடிக்ஸ் மென் பொருட்கள் மூலமாக அப்படி சந்தேகத்துக்கிடமான வகையில் செலுத்தப்பட்ட கணக்குகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 17.74 லட்சம் சந்தேகத்துக்கிடமான வங்கிக் கணக்குகள் இப்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்தக் கணக்குகளில் உள்ள 3.68 லட்சம் கோடி ரூபாய் குறித்து இப்பொழுது விசாரிக்கப்பட்டு வருகிறது. உரிய வரி செலுத்தப்பட்ட விபரம் தரப்படாமல் போகும்பட்சத்தில் பெரும் வரி விதிப்பும் அபராதக் கட்டணமும் விதிக்கப்படும். ஆக இந்த 3.68 லட்சம் கோடிகளில் பெரும்பான்மையான பணம் கறுப்புப் பண மீட்பாகவே கருதப்பட வேண்டும்.

இந்திய மக்கள் தொகையான 150 கோடி மக்களில் வெறும் 1.5 லட்சம் பேர்கள் 5 லட்சம் கோடிகளை வங்கிகளில் கொண்டு வந்து செலுத்தியுள்ளார்கள். அது மூன்றில் ஒரு பங்கு திருப்பிக் கொணரப்பட்ட பணமாகும். அதாவது 0.011% மக்கள் 33% பணத்தை மீண்டும் வங்கிக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இவை அனைத்துமே சந்தேகத்துக்கிடமான, வருமான வரி கட்டாமல் ஏய்க்கப்பட்ட பணமாகும். இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு உரிய வரியும் அபராதத் தொகையும் வசூலிக்கப்படும்.

கிட்டத்தட்ட 2 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அவற்றின் கணக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

வருமான வரி ஏய்ப்பிற்காக மட்டுமே துவக்கப்பட்ட நிழல் நிறுவனங்கள் (ஷெல் நிறுவனங்கள்) இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை மூலமாக அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கான உரிமைகள் ரத்து செய்யப்பட்டு இழுத்து மூடப்பட்டன. கிட்டத்தட்ட 2 லட்சம் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு மூடப்பட்டுள்ளன. அவை விசாரிக்கவும் படுகின்றன. ஒரு சில கணக்குகளில் டிமானிடைசேஷனுக்கு முன்பாக வெறும் 63 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்க டிமானிடைசேஷனுக்குப் பிறகு 18 கோடி ரூபாய் அதற்குள் கொண்டு வரப்பட்டு எடுக்கப்பட்டுள்ளன. டிமானிடைசேஷனின் பொழுது 53,000 வங்கிக் கணக்குகளில் 35,000 போலி நிறுவனங்கள் 17,000 கோடி ரூபாயைப் போட்டு எடுத்துள்ளன. இவை அனைத்துமே இப்பொழுது விசாரணையின் பிடியில் சிக்கியுள்ளன. இந்த நிழல் நிறுவனங்களின் இருப்புகளோ அதை வைத்திருப்பவர்களின் விபரங்களோ இந்த நடவடிக்கை இல்லாமல் போனால் வெளி வந்திருக்காது.

ஜிபிடியும் கரன்ஸியும்

எந்தவொரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பான ஜிடிபிக்கும் அந்த நாட்டில் வெளியே புழங்கும் கரன்ஸிக்கும் உள்ள விகிதாசாரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் வெளியே மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்துக்கும் இந்தியாவின் ஜிடிபிக்குமான விகிதம் 4% வரை குறைந்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதார ஆரோக்கியத்தின் ஒரு முக்கியமான அளவுகோலாகும். இப்பொழுது இந்தியாவின் கேஷ் டு ஜிடிபி ரேஷியோ எனப்படும் அளவீட்டு எண், வளர்ந்து முன்னேறிய நாடுகளான ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் நிலவும் மதிப்பிற்கு நிகராகக் குறைந்துள்ளது. டிமானிடைசேஷனுக்கு முன்பாக 12.2% ஆக இருந்த இந்த விகிதாசாரம் டிமானிடைசேஷனுக்குப் பிறகு 8.8% ஆகக் குறைந்து ஆரோக்கியமான ஓர் அளவுகோலை எட்டியுள்ளது.

ரியல் எஸ்டேட்

இந்தியாவில் கறுப்புப் பணம் அதிக அளவில் புழங்கிய வர்த்தகமாக ரியல் எஸ்ட்டேட் என்னும் வீடு கட்டும் துறை இருந்து வந்தது. பெரும்பாலான வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மனைகள் உள்ளிட்ட வர்த்தகப் பரிமாற்றங்கள் எவையுமே அதன் உண்மையான பண மதிப்பில் பதியப்படுவதில்லை. மேலும் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்களது லஞ்ச ஊழல் பணங்களை பினாமி பெயர்களில் ரியல் எஸ்டேட்களிலேயே முடக்கி வந்தனர். ஆகவே அபரிதமான கறுப்புப் பணப் புழக்கத்தினால் ஊழல் பேர்வழிகளிடம் இருந்த கறுப்புப் பணம் நிலங்களாகவும், வீடுகளாகவும், மனைகளாகவும், அப்பார்ட்மெண்டுகளாகவும் மாற்றப்பட்டன. அப்படி இந்தத் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்கியதினால் சாதாரண மக்களின் சொந்த வீட்டுக் கனவு என்றும் கனவாகவே தேங்கிப் போனது. விண்ணை எட்டிய ரியல் எஸ்டேட் விலைகளின் காரணமாக சாதாரண மக்கள் வீடுகள் வாங்குவது அவர்கள் வாழ்நாளில் இயலாமல் போன ஒரு கனவாகவே இருந்து வந்தது

இந்த நிலை டிமானிடைசேஷனுக்குப் பிறகு வெகுவாக மாறியுள்ளது. டிமானிடைசேஷன் காரணமாக அரசியல்வாதிகள், பணக்காரர்கள், ஊழல் அதிகாரிகள், வரி கட்டாத டாக்டர்கள் ஆகியோரிடம் இருந்த கறுப்புப் பணம் பினாமிகள் மூலமாக வங்கிகளுக்குள் வந்துவிட்டபடியால் வெளியே இருந்த கறுப்புப் பணம் அனேகமாக இல்லாமல் போனது. இதன் காரணமாகக் கறுப்புப் பணம் மூலமாக ரியல் எஸ்டேட் வாங்குவது வெகுவாகக் குறைந்தது. மேலும் பண பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட அதிகமாக உன்னிப்பாக வருமான வரித் துறையினால் கவனிக்கப்படுவதினால் கறுப்புப் பணம் கொண்டு ரியல் எஸ்டேட் வாங்குவது மிகவும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக சந்தையில் வீடு வாங்குபவர்கள் குறைந்தனர். வாங்குபவர்கள் இல்லாமல் வீட்டு விலைகளும் சரிய ஆரம்பித்துள்ளன. மேலும் வங்கிகள் வீடு வாங்கும் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளது. இவை அனைத்தினாலும் ரியல் எஸ்டேட் சந்தை சாதாரண மக்கள் வாங்கும் நிலைக்கு இறங்கி வருகின்றது.

பயங்கரவாத நிகழ்வுகள்

கள்ளப் பணம் கறுப்புப் பணம் தடுப்பினால் மாவோயிஸ்டுகள் / நக்சலைட்டுகளிடமும் காஷ்மீர் பயங்கரவாதிகளிடமும் புழங்கிய பணம் காணாமல் போய் அவர்கள் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதமும் சரி, மாவோயிஸ்டுகளின் நக்சல் பயங்கரவாதங்களும் சரி, காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான கல்லெறி சம்பவங்களும் சரி, எல்லாமே கறுப்புப் பண ஆதாரம் மூலமாகவே நிகழ்த்தப்பட்டு வந்தன. இந்த நடவடிக்கையினால் திடீரென்று கள்ளப் பணமும் கறுப்புப் பணமும் காணாமல் போய்விட, தங்களது பயங்கரவாதங்களைத் தொடர நிதி ஆதாரம் இல்லாமல், ஆயுதங்கள் வாங்க முடியாமல், கலவரங்களில் ஈடுபடுவோருக்குக் காசு கொடுக்க முடியாமல், தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் பயங்கரவாதிகள். இதன் காரணமாக பெரும் அளவு பயங்கரவாத நடவடிக்கைகளும் நக்சல் நடவடிக்கைகளும் குறைக்கப்பட்டன.

முந்தைய வருடத்தை விடவும் காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான கல்லெறித் தாக்குதல் 75% குறைந்தது. அது போலவே மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நிகழ்வுகளும் 20% குறைந்திருக்கின்றன.

வங்கிக் கடன் வட்டி விகிதம் குறைப்பு

டிமானிடைசேஷன் நடவடிக்கையினால் வங்கிகளில் சேமிப்புகள் அதிகரித்தன. ஒளிக்கப்பட்ட கறுப்புப் பணம் மற்றும் வெளியே உலாவிய அத்தனை கரன்ஸிகளையும் தங்கள் அக்கவுண்டுகளிலோ அல்லது தங்களது பினாமி அக்கவுண்டுகளிலோ கொண்டு வந்து கட்டினார்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள். அதில் பல கணக்குகளில் இருந்து மீண்டும் பணத்தைத் திருப்பி எடுக்க முடியாதபடி முடக்கப்பட்டதாலும் வங்கிகளில் பணத்தை வைத்திருப்பதே பத்திரம் என்ற உணர்வினாலும் வங்கிகளில் சேமிப்புகள் பல மடங்கு அதிகரித்தன. இதனால் வங்கிகளின் சேமிப்பு இருப்பும் அதன் மூலமான வட்டிகளும் அதிகரித்தன. வங்கிகளின் கடன் கொடுக்கும் சக்தியும் இதனால் அதிகரித்தது. விளைவு, அதிக இருப்பினால் வங்கிகள் தங்கள் கடன்களை மிக அதிகமானோருக்கு வழங்கும் விதமாகக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. வீட்டுக் கடன், கல்விக் கடன், தொழில் துவங்கக் கடன், முத்ரா கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் கிட்டத்தட்ட 1% அளவு குறைக்கப்பட்டது.

வங்கிகளில் சேமிப்பு

பணத்தை மறைத்தோ ஒளித்தோ வைக்க முடியாத நிலையில் கட்டாயமாக தங்களிடம் உள்ள கணக்கில் காட்டாத பணத்தை எப்படியாவது வெளியே கொண்டு வர முயன்றனர். விளைவு, தங்களுக்கு இருந்த கடன்களையெல்லாம், வரி பாக்கிகளையெல்லாம், அரசாங்கத்துச் சேர வேண்டிய கட்டணங்களையெல்லாம் உடனடியாகக் கட்டினர். அதுபோக சேமிப்பு கணக்குகளிலும், பங்குச் சந்தை மற்றும் பிற ஃபண்டுகளிலும் இன்ஷூரன்ஸ்களிலும் ஏராளமான பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக சேமிப்பு அபரிதமான அளவில் அதிகரித்தது. இந்த டிமானிடைசேஷனுக்குப் பிறகு சேமிப்பின் அளவு மொத்த சேமிப்பு அளவீட்டு எண்ணில் கிட்டத்தட்ட 47% அதிகரித்துள்ளது. ம்யூச்சுவல் ஃபண்டுகளில் சேமிக்கப்பட்ட பணமானது கிட்டத்தட்ட 20 லட்சம் கோடியை எட்டியது. தனி நபர்களின் பெட்டிகளிலும் மறைவிடங்களிலும் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பணமானது, தேசத்தின் பொருளாதாரத்தில் கலந்து ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இந்த அபரிதமான சேமிப்பு இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை இல்லாவிட்டால் நடந்திருக்காது. பணம் ஒளிக்கப்பட்டு எவருக்கும் பயன் இல்லாமல் வீணாகக் கிடந்திருக்கும்.

கரன்ஸி புழக்கம்

நாட்டில் புழக்கத்தில் உள்ள பெரும் மதிப்பு கரன்ஸிகளான 1000/500 ரூபாய் நோட்டுக்கள் கிட்டத்தட்ட மொத்த கரன்ஸி மதிப்பில் 84% இருந்ததை முன்பு பார்த்தோம். அந்த அளவுக்கு ஏன் 1000/500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்க வேண்டும்? ஏன் அவ்வளவு பெரிய விகிதத்தில் அச்சடித்தார்கள்? ஏனென்றால் அரசியல்வாதிகளுக்குப் பெரிய மதிப்புப் பணத்தைப் பதுக்குவதும் கடத்துவதும் மிக எளிதாக இருந்ததுதான். அதற்காகவே முந்தைய காங்கிரஸ் அரசு 1000/500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சிட்டது. 1000/500 நோட்டுக்களின் வெளிப் புழக்கம் 18 லட்சம் கோடிகளில் இருந்து 12 லட்சம் கோடிகளாக இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கைக்குப் பிறகு குறைந்துள்ளது. மாறாகச் சிறிய கரன்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வரி கட்டுவோர் எண்ணிக்கை

டிமானிடைசேஷன் காரணமாக வங்கிகளில் பணத்தைக் கட்டியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இதற்கு முன்னால் வரி கட்டியிராதவர்கள். இப்பொழுது வங்கிகளில் கொண்டு போய்ப் பணத்தைக் கட்டிய பின்னர் வேறு வழியில்லாமல் வருமான வரியைக் கட்டவேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள். ஆகவே நாட்டில் வரி கட்டுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. நாட்டில் வரி கட்டுவோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 26.6% அதிகரித்துள்ளது. வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை 64.53 லட்சத்தில் இருந்து 84.21 லட்சமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும் இன்னும் பல லட்சம் பேர்கள் விசாரணைக்குப் பிறகு வருமான வரி வலைக்குள் கொண்டு வரப் படுவார்கள் என்பது இதன் நீண்டகால பயனாகும்.

டிஜிடல் பரிமாற்றம்

கரன்ஸி புழக்கம் குறைக்கப்பட்டு டிஜிட்டல் பொருளாதாரம் என்னும் கிரிடிட் கார்டுகள். டெபிட் கார்டுகள், செல் ஃபோன் செயலிகள் போன்ற கரன்ஸியற்றப் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன

இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட தற்காலிக கரன்ஸி தட்டுப்பாட்டின் காரணமாக ஏராளமான மக்கள் டிஜிடல் பரிவர்த்தனைக்குள் சென்றார்கள். டிஜிடல் பரிவர்த்தனைகள் முந்தைய ஆண்டின் 87 கோடிகளில் இருந்து இந்த ஆண்டில் 168 கோடியாக வளர்ந்துள்ளது. ஒரு வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தில் கரன்ஸியின் புழக்கம் குறைவாகவும் மற்ற பரிவர்த்தனைகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருத்தலே ஊழலைக் குறைக்கவும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவும். டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட், ரூபே கார்ட், செக் பரிவர்த்னைகளின் எண்ணிக்கையும் அதன் பண மதிப்பும் முந்தைய ஆண்டுகளைவிட இரு மடங்கு இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கைக்குப் பிறகு அதிகரித்துள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் பண விரயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. வங்கிகளில் கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்துள்ளது.

*

அச்சடித்து வெளியே சென்ற அனைத்து பணமும் திரும்பி வந்ததினால் அரசாங்கத்துக்கு எதிர்பார்த்த வருமானம் இல்லை என்ற ஏமாற்றம் இந்தத் திட்டத்தின் சிறிய நஷ்டம் என்றாலும்கூட, மேலே சொல்லப்பட்டுள்ள ஏராளமான பயன்களினால் இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை மாபெரும் வெற்றி என்றே கருதப்பட வேண்டும். இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை மட்டும் துணிவாகச் செயல்படுத்தப்படாமல் போயிருந்தால் அரசாங்கம் பெரும் பொருளாதாரச் சிக்கலில் தவித்திருக்கும். இந்தியாவின் வளர்ச்சி பெரும் அளவில் முடங்கிப் போயிருந்திருக்கும். கறுப்புப் பண முதலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தங்கள் இந்திய எதிர்ப்புச் செயலில் ஈடுபட்ட வண்ணம் இருந்திருப்பார்கள்.

அந்த வகையில், கடுமையான எதிர்ப்புகளையும் பொய்யான பிரசாரங்களையும் மீறி இந்த அளவுக்கு இந்த டிமானிடைசேஷன் வெற்றி அடைந்திருப்பது மோதி அரசாங்கத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று. உலக அளவிலும் கூட இந்த அளவுக்குப் பிரமாண்டமான ஒரு நடவடிக்கையை இந்த அளவுக்குப் பரந்து விரிந்த நாட்டில் மிகக் குறைந்த பாதிப்புகளுடன் நடத்தியது மோதி ஒருவராக மட்டுமே இருக்கமுடியும். மோதிக்கு ஒவ்வொரு இந்தியனும் நன்றிக் கடன்பட்டிருக்கிறான்.

இந்த நடவடிக்கைளினால் சில சங்கடங்கள் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இருந்தன. இந்தத் திட்டம் அமுல்படுத்தும் சமயத்தில் பல்வேறு தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய குறைபாடுகள் இருந்தன. இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்பது சிறிய குறைதான். ஆனால் இந்தத் திட்டம் சாதித்திருக்கும் விஷயங்களின் முன்னால் இவையெல்லாம் சிறிய குறைகள் மட்டுமே.

இந்தத் திட்டத்தின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை ஏய்ப்பாளர்களையும் தொடர்ந்து சென்று அவர்களிடம் வசூலிப்பது இன்னும் பெரிய ஒரு இமாலய சவாலாக இருக்கும். இருந்தாலும். அனைத்தையும் மீறி, இந்தத் திட்டம் பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்டு, நீண்ட கால பயன்களை அளித்திட்ட ஒரு மாபெரும் வெற்றி திட்டம் என்பதில் சந்தேகமில்லை.

Posted on Leave a comment

இரத்தத்தால் ஒரு முற்றுப்புள்ளி – கோ.எ.பச்சையப்பன்


சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் கடந்த நிலையில் தெற்காசியாவின் வலிமை வாய்ந்த ஜனநாயக நாடாக இந்தியா தன்னுடைய மீட்சியை அடைந்துள்ளது. நூற்றாண்டுகளாக ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கும், தொடர்ந்து சூரியன் அஸ்தமிக்காதப் பேரரசு எனத் தற்பெருமை பேசிய பிரிட்டிஷ் அரசுக்கும் அடிமைப்பட்டிருந்த ஒரு நாடு, தன் இருப்பை அசைக்க முடியாத அளவிற்கு நிரூபித்துக்கொண்டது, வரலாற்றாசிரியர்களாலும், சமூகவியல் வல்லுநர்களாலும் விதந்தோதப்படுவது முற்றிலும் நியாயமே.

(ஜவாஹர்லால் நேரு, இஸ்மே, மௌண்ட்பேட்டன், ஜின்னா)

பொதுவாக இந்திய வரலாறு விடுதலைப் போராட்டத்தை மட்டும் விரிவாகப் பேசுகிறதே அன்றி, துலாக்கோல் பிடித்துக்கொண்டு பிரெஞ்சுக்காரர்களால் விலையேற்றம் செய்யப்பட்ட ஏலம் மற்றும் கிராம்பினை நேரடியாகக் கொள்முதல் செய்ய கடல் வழியாக வந்த வெள்ளையன், எவ்விதம் செங்கோலைப் பிடித்தான் என்பதை அதிகம் பேசுவதில்லை. அந்த வரலாறு முற்றிலும் தம்மைத்தாமே அடிமையாக்கிக் கொண்ட ஓர் இனத்தின் வரலாறு. வெள்ளையனிடம் மட்டுமல்ல, பாரதம் கடந்த 1000 ஆண்டுகளாக டச்சு, பிரெஞ்சு, மொகலாய அரசுகளால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது. இன்றைய ஆப்கானிஸ்தானின் காந்தகார் முதல் இலங்கை வரை பாரதப் பேரரசு ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்தது. மகாபாரதத்தில் பேசப்படும் காந்தாரியின் நாடான ‘காந்தாரம்’ காந்தகார்தான் என்பது சில வரலாற்றாசிரியர்களின் கருத்து. பலநூறு ஆண்டுகளாகப் பகுதிபகுதியாக பாரதம் நிலப்பரப்பில் சுருங்கிக்கொண்டே வந்தது. விடுதலை பெறும்போது 542 சமஸ்தானங்களாக இந்தியா பிளவுண்டிருந்தது.

“இந்தியர்கள் தம்மை ஆண்டுகொள்ளத் தகுதியற்றவர்கள். கடைசி பிரிட்டிஷ் போர் வீரன் கப்பல் ஏறிய அடுத்தகணம் பாரதம் தன் காட்டுமிராண்டித்தனத்திற்குத் திரும்பி வரும்” என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். அவருடைய ‘Never Never give up’ என்ற சொலவடை ஷேக்ஸ்பியரின் நாடக வசனத்திற்கு இணையாகப் புகழ் பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திற்கு வெற்றியை ஈட்டித்தந்த வின்ஸ்டன் சர்ச்சில், (இந்தியாவிற்கு) அதிர்ஷ்டவசமாகத் தோற்று, கிளாமண்ட் அட்லி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருந்தார். சர்ச்சிலுக்கு மாறாக காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தைத் திரும்பப் பெறுவது அட்லியின் கொள்கையாக இருந்தது இந்திய விடுதலையை விரைவுபடுத்தியது.

1947 ஆகஸ்ட் 15 – பாரதம் விடுதலை பெற்றது. ஆனால், ஜனவரி 26தான் சுதேசிகளான காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தது. காரணம், பூரண சுயராஜ்யமின்றி வேறெதையும் ஏற்பதில்லை என 1930 ஜனவரி 26ல் காங்கிரஸ் லாகூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி 26ஐ விடுதலை நாளாக அனுஷ்டித்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் 15 மௌண்ட் பேட்டனின் தேர்வு. காரணம் பிரிட்டிஷ் விசுவாசியான அந்தக் கடைசி வைஸ்ராய், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான், இங்கிலாந்திடம் சரணடைந்த ஆகஸ்ட் 15ஐத் தேர்ந்தெடுத்து தன் ராஜ்ய விசுவாசத்தை நிரூபித்தார். அதனால் நம் சுதேசிகள் ஜனவரி 26ஐ 1950ல் குடியரசு நாளாக அனுஷ்டித்துத் திருப்திப்பட்டுக்கொண்டனர்.

இந்தியா கோரியது ஒரு தேசத்திற்கான விடுதலை. ஆனால் பிரிட்டிஷார் அளித்தது இரண்டு தேசங்களுக்கான சுதந்திரம். இந்தியா துண்டாடப்பட்டு பாகிஸ்தான் என்ற புதிய தேசம் உருவாக்கப்பட்டது, இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட வேண்டிய வரலாறு.

துருக்கி கலீஃபாக்களுக்கு ஆதரவாக இந்தியாவில் கிலாஃபத் இயக்கம் நடைபெற்றபோது காந்தியின் திணிக்கப்பட்ட விருப்பத்தால் காங்கிரஸ் அதனை ஆதரித்தது. தவிர, முல்லாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காந்தி எப்போதும் தயாராக இருந்தார். காங்கிரசும், காந்தியும் முஸ்லிம்களை அரவணைத்து விட்டுக்கொடுத்துப் போக என்றென்றும் தயாராக இருந்தனர். ஆனால், அதிகாரப்பசி கொண்ட மற்றொரு முஸ்லிம் தலைவர் அதற்குத் தயாராக இல்லை. அவர் பெயர் முகம்மது அலி ஜின்னா. காந்தி கோரியது வெள்ளையனிடமிருந்து விடுதலை, ஆனால், ஜின்னா கோரியது காங்கிரஸ் அரசிடமிருந்து பாகிஸ்தானின் விடுதலை.

முகம்மது அலி ஜின்னாவும், காந்தி மற்றும் நேருவைப் போன்றே லண்டனில் பயின்றவர். தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் காங்கிரஸில் இருந்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்தபின்னர் முஸ்லிம் லீக் வடமாநிலங்களில் அடைந்த (அவை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த இடங்கள்) பெரு வெற்றி, இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம்களை ஒருங்கிணைக்க முடியும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்திற்று.

காந்தி, ஓர் உண்மையான இந்துவாக இருந்தார். சமயச் சார்பற்ற ஒரு தலைவராகவும் இருந்தார். நேருவின் வாழ்வில் மதத்திற்குக் குறிப்பிடத்தக்க இடமே இல்லை. தன்னை ஒரு நாத்திகவாதி எனக் கூறிக்கொண்டார் அவர். அவருடைய தன் வரலாற்றில் கீதையை ஒரு மேலாண்மைக் கருத்துக்கள் கொண்ட நூலாகவே அடையாளம் காணுகிறார். ஆனால் இவர்களை எதிர்த்து அரசியல் நடத்திய ஜின்னா, தன் அரசியலை மதத்தினை மையப்படுத்தியே அமைத்துக்கொண்டார். ஓர் உண்மையான முஸ்லிம் ‘ஹராம்’ எனக் கருதியவற்றை செய்தவர் ஜின்னா. அவர் மதுவை அருந்தினார். பன்றிக் கறியும் உண்டார். ஆக, இந்தியப் பிரிவினை, ஒரு மகாத்மா மற்றும் ஒரு நாத்திகவாதியும் மதவெறியருமான ஜின்னா இவர்களுக்கிடையேயான போராட்டங்களில் நிகழ்ந்தது.

பிரிவினை குறித்தான பேச்சுவார்த்தைகளின்போது உடனிருந்த ராம் மனோகர் லோகியா எழுதுகிறார்.

“பேச்சுவார்த்தைப் பொருளின் தீவிரத்தை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. மௌலானா ஆஸாத் தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்தார். நேரு ஓர் ஓரமாகச் சுருண்டிருந்தார். காந்தி, ஜின்னாவிடம் கெஞ்சியபடி இருந்தார். ஒரு கட்டத்தில் சுதந்திர இந்தியாவின் தலைமைப் பதவியைக்கூட தரத் தயாராக இருந்தது காங்கிரஸ். ஆனால், முஸ்லிம்களுக்கான ஒரு தனித் தேசத்திற்குக் குறைந்தது எதனையும் ஏற்க ஜின்னா தயாராக இல்லை. காந்தியைப் பற்றிய அவருடைய நிலைப்பாடு இதுதான். தந்திரமிக்க கிழட்டு இந்து நரி.”

கடைசியில் அது நிகழ்ந்தேவிட்டது. தேசங்களின் எல்லைகளை வரையறுக்க சர் பட்டம் பெற்ற சிரில் ராட் க்ளிப் இந்தியாவிற்குத் தருவிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசனை கூற இரண்டு முஸ்லிம்கள், ஓர் இந்து மற்றும் ஒரு சீக்கியர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தமக்குள் இட்ட சண்டையைப் பொறுக்கமாட்டாது க்ளிப் அவர்களைத் துரத்திவிட்டார். அவரிடம் இல்லாதது ஒன்றே ஒன்றுதான், அது நேரம். பிளவுபடப்போகும் இரு தேசங்களின் எல்லைகளைத் தீர்மானிக்க அவருக்கு ஆறு வாரங்களே இருந்தன.

எத்தகைய பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இன்றி உலகின் மிகப்பெரிய மக்களின் குடிபெயர்வு நடந்தேறியது. பிரிட்டிஷ் அரசின் காவல்துறை முழுக்க முழுக்க வெள்ளையர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்திற்று. ஆனால், அவர்கள் அஞ்சியதற்கு மாறாக இரத்த ஆறு ஓடியது வேறிடங்களில். வெள்ளையர்களின் விரல் நகத்திற்குக் கூடச் சேதம் ஏற்படவில்லை.

பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், ஊனமடைந்தவர்கள் பற்றிய திட்டவட்டமான தகவல்கள் ஏதும் இல்லை. உத்தேசமான தகவல்படி 15 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். எண்ணிக்கையில் இந்துக்களும், அதற்கடுத்து சீக்கியர்களுமே அதிகம். முஸ்லிம்களைப் பாதுகாக்க இங்கே காந்தியும் நேருவும் இருந்தனர். பாகிஸ்தானில் இருந்தது சந்தேகத்துக்கிடமின்றி ஒரு மதவெறியர். 1945களில் காவல்துறைக்கு விடுமுறை அளித்த கல்கத்தா முஸ்லிம் லீக் அரசு, மதப்படுகொலைகளுக்கான ஒத்திகையை நிகழ்த்தி இருந்தது. அது மீண்டும் ஒருமுறை அரங்கேற்றப்பட்டது.

ஜின்னாவால், தந்திரமிக்க இந்து கிழட்டு நரி என வர்ணிக்கப்பட்ட தலைவர்தான் இந்திய முஸ்லிம்களைப் பெருமளவு காத்தார். நவகாளி உள்ளிட்ட பல இடங்களில் காலணி இன்றி நடந்தார். உலகப்புகழ் பெற்ற தன் ஆயுதமான உண்ணாவிரதமும் இருந்தார். கிரியாட்டினின் அதிகமாக சிறுநீரகங்கள் பழுதடைந்திடும் நிலையை எய்திய பின்பும் காந்தி தன் வீரத்தைக் கைவிடவில்லை. கொதித்துப்போன இந்துக்களில் சிலர், ‘காந்தி இறந்து போகட்டும்’ என கோஷமிடும் அளவிற்கு, காந்தி முஸ்லிம்களைப் பாதுகாத்தார்.

சுதந்திர தினச் செய்தியாக காந்தியிடம் கேட்டபோது அவர் கூறியது, “நான் வெகுவாக உலர்ந்து போய்விட்டேன்” என்பதுதான். லண்டன் பி.பி.ஸி. நேருவின் மூலம் காந்தியை அணுகியபோது “எனக்கு ஆங்கிலம் மறந்துபோய்விட்டது” என அவர்களிடம் கூறுங்கள் என்றார். ‘நள்ளிரவில் பாரதம் விழித்தெழிந்து விதியுடனான தன் ஒப்பந்தம் பற்றிய’ உலகப் புகழ்மிக்க நேருவின் உரை நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தபோது நோற்பவரின் பயணம் நவகாளியில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் துண்டுகளாகச் சிதறிக்கிடந்த 542 சமஸ்தானங்களில் மூன்றைத்தவிர மற்றவை வல்லாபாய்ப் படேல் மற்றும் வி.பி.மேனன் ஆகியோரின் முயற்சியால் இணைந்தன. முரண்டு பிடித்த திருவிதாங்கூர் சமஸ்தானம், அரசர் மற்றும் அரசியைப் பொம்மைகளாக்கி ஆட்சிபுரிந்து வந்த திவான் புரட்சிப்படையால் தாக்குதலுக்கான பின்னர் இந்தியாவுடன் இணைந்தது. ஹைதராபாத் நிஜாம், ரஜாக்கர்கள் துணையுடன் வெறியாட்டம் ஆடினார். இந்திய ராணுவத்தின் துணையுடன் படேலின் இரும்புக்கரம் அவரை அடக்கிற்று. காஷ்மீர் மன்னர் ஹரிசிங், பாகிஸ்தான் ஆதரவுடன் பதான்கள் தாக்கியதும், ஆகஸ்ட் 14ம் தேதி இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். காஷ்மீர் பிரச்சினையை மௌண்ட்பேட்டனின் ஆலோசனையை ஏற்று ஐ.நா.விற்குக் கொண்டு சென்ற நேரு தன் ஆட்சிக்காலத்தின் முதல் தவற்றைச் செய்தார்.

1930களில் வேலூர் சிறையிலிருந்தபோது ராஜாஜி சுதந்திரம் பற்றித் தன் நாட்குறிப்பில் எழுதிய வரிகள் வெகு பிரசித்தி பெற்றவை. அதன் சாராம்சம் இதுதான். ‘சுதந்திரத்தின் அருமை தெரியாத மக்களிடம் அதனை அளிக்கப்போகிறோம். சுயராஜ்யத்தினால் ஏற்படும் ஒரே விளைவு, அதிகாரம் சுதேசிகளிடம் கைமாறுவது மட்டுமே. எதிர்கால ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் மக்கள் வெள்ளையர் ஆட்சியே மேல் என நினைத்தாலும் வியப்பதற்கில்லை.’

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 4: எலிசபெத் ராணியைப் போல…- சுப்பு


நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது (1961) சென்னைக்கு எலிசபெத் மகாராணியார் வந்திருந்தார். கருப்புக் காமராசரும் சிகப்பு ராணியும் கை குலுக்கும் புகைப்படத்தை ஆனந்த விகடனிலிருந்து வெட்டி எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்னொரு புகைப்படத்தில் ராணியார் நடக்க, அவர் தோளிலிருந்து தொங்கும் ஆடையை இரண்டு பேர் பிடித்துக்கொண்டே பின்னால் நடந்து வருவார்கள். அரசியாரின் இந்தக் காம்பீர்யம் என்னைக் கவர்ந்தது. அரசியின் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

எங்கள் வகுப்பில், ஓணம் கொண்டாட வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. இதற்குக் காரணம் ஓணத்தைப் பற்றிய பாடம் ஆங்கிலப் புத்தகத்திலிருப்பதா அல்லது எங்கள் ஆசிரியை ஒரு மலையாளி என்பதா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. மாணவர்கள் இது விஷயமாய் அடிக்கடி சர்ச்சை செய்வார்கள். நான் ஒரு பொழுதும் டீச்சர் கட்சியை ஆதரித்ததில்லை.

ஓணம் கொண்டாடுவதில் வேலைப் பங்கீடு செய்யப்பட்டது. என் இயலாமையை மறைக்க சுறுசுறுப்பாய் ஒரு யோசனை சொன்னேன். பூக்கோலத்திற்குப் பூ எடுத்து வருவதாகச் சொல்லி உதவிக்கு இரண்டு மாணவிகளுடன் காந்தி மண்டபம் போனேன். எங்கள் வகுப்பில் நான்கு பையன்களும், நாற்பத்தெட்டு சிறுமிகளும் இருந்தார்கள் என்பதை இங்கு அவசியம் தெரிவிக்க வேண்டும்.

காந்தி மண்டபத்து வேலியிலிருந்து பூக்களையெல்லாம் நான் பறித்துப் போட, பையில்லாத காரணத்தால் தோழிகள் பாவாடையை மடக்கிப் பிடித்து அவற்றில் பூக்கள் நிரப்பப்பட்டன. இரண்டு பக்கமும் பூக்களைத் தாங்கியபடி அவர்கள் வர நடுவில் ராஜகம்பீரமாக நான் நடந்து என்னுடைய எலிசபெத் ராணி கனவை நிறைவேற்றிக் கொண்டேன்.

*

பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழைவேன். வாசலறையில் வாரியங்காவல் முதலியார் யாராவது உட்கார்ந்திருப்பார்கள். “என்ன, அதிகமாப் படிக்கறாரு போலிருக்குது” என்பார்கள். என் சட்டைப் பையில் மை கசிந்திருப்பதை அவர் கவனித்திருக்கிறார் என்பதை நாமறிய வேண்டுமாம். ‘இந்த ஊர்க்காரர்களுக்கு வேற ஜோக்கே தெரியாதோ” என்று யோசிக்கும் அளவுக்கு இது நடந்திருக்கிறது. பேனாவில் மை கசிவும், அதைத் தொடர்ந்து பெரியம்மாவின் தொந்தரவும் தாங்க முடியாமல் இது விஷயமாகத் தீவிர ஆலோசனை செய்தேன். அண்ணன்மார் பேனா மட்டும் ஒழுங்காயிருக்கிறதே என்ற எண்ணத்தில் ஆங்காரம் ஏற்பட்டு ஒருநாள் அவர்கள் எல்லோருடைய பேனாவிலும் மூடியை மட்டும் கழற்றிப் பக்கத்துக் குட்டையில் வீசி எறிந்துவிட்டேன். அன்றிரவு தூக்கத்தில், அண்ணன்மாரெல்லாம் வரிசையாக ஒலிம்பிக் வீரர்கள் மாதிரி ஓடிவருகிறார்கள். கையில் ஆளுக்கொரு மூடியில்லாத பேனா. இதைக்கண்டு நான் சிரித்துச் சிரித்து, சிரிப்பின் நடுவே தூக்கம் கலைந்து படுக்கையிலிருந்து எழுந்துவிட்டேன்.

*

தீபாவளியின்போது பட்டாசு வாங்கிக் கொடுத்தார்கள். அவனவனுக்குத் தனிப்பெட்டி, ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாங்கள் பட்டாசு வெடிக்கும்போது தியாகு மட்டும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். வெடித்தால் பட்டாசு தீர்ந்து போய்விடும் என்ற எண்ணம். ‘நீங்க வெடிக்கறத நான் ஜாலியா பாத்துக்கிறேன். உங்க பட்டாசெல்லாம் தீர்ந்தபிறகு நான் வெடிப்பேன்” என்று எங்களைக் கேலி செய்வான். நாங்கள் வெடிப்பதே அவனுடைய பெட்டியைத் திறந்து, அவனுடைய பட்டாசைத்தான் என்பது அவனுக்குத் தெரியாது. தெரிந்த பிறகு அழுதாலும் “நல்ல நாளும் அதுவுமாய் ஏன் அழுகிறாய்?” என்று அவனைத்தான் திட்டுவார்கள்.

*

பெரியண்ணன் ஒரு ஆட்டோகிராப் நோட்டு வைத்திருந்தான். அதில் மல்யுத்த வீரர் கிங்காங்குடைய கையெழுத்திருந்தது. அதை நான் பார்க்க விரும்பினேன். கிங்காங்குடைய கையெழுத்தும் குண்டாயிருக்குமா என்பது நியாயமான கேள்வி. அண்ணன் என்னுடைய சந்தேகங்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவனிடம் கெஞ்சியும் பிரயோஜனமில்லை. ஆகவே, அண்ணனில்லாதபோது ஒருநாள் அந்த ஆட்டோகிராப் நோட்டை எடுத்துப் பார்த்துவிட்டு மீதமிருந்த பக்கங்களிலெல்லாம் என்னுடைய கையெழுத்தைப் போட்டுவிட்டேன்.

*
ஃபான்டம் (முகமூடி) காமிக்ஸ் படித்ததிலிருந்து அடுத்தவனை அடித்து முத்திரை பதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாயிற்று. இது தீபாவளி சமயத்தில் நிறைவேறியது. கம்பி மத்தாப்பு எரிந்தபிறகு செந்தணலாய் இருக்கும். அதைப் பையன்களின் பின்பக்கத்திலோ, தொடையிலோ இழுப்பது எனக்குத் தொழிலாயிற்று. பையன்கள் பூங்காவில் இருக்கும் சறுக்கு மரத்திலிருந்து வேகமாக சறுக்கிக்கொண்டே வரும்போது கீழே அவர்கள் இறங்கும் இடத்தில் சுடச்சுடக் கம்பி மத்தாப்பு. எங்கள் வீட்டுப் பக்கத்திலுள்ள பையன்கள் பலருக்கு இவ்வாறு ஃபான்டம் முத்திரை என்னால் போடப்பட்டது.

*

காந்தி நகரில் சுமார் இருநூற்று ஐம்பது வீடுகள் இருந்தன. கிட்டத்தட்ட அக்ரகாரம் போலத்தான். பிராமணர் அல்லாதாரும் பிராமணரைக் காப்பி அடிக்க முயற்சிப்பார்கள். அனந்தபத்மநாபஸ்வாமி கோவிலில் ராதா கல்யாணம் நடக்கும். ராதா கல்யாணத்தின்போது யாரும் வீட்டில் சமைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் கோவிலில் சாப்பிட்டுக் கொள்ளலாம். ராதா கல்யாணத்திற்காக உஞ்சவிருத்தி நடக்கும். உஞ்சவிருத்தி நடக்கும்போது சிறு பையன்கள் பைலட் மாதிரி முதலில் போய் ‘உஞ்சவிருத்தி வருகிறது’ என்று அறிவிப்பார்கள். இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் சொன்னவுடனே அவர்கள் தயாராகிறார்கள் என்பதில் ஒரு பெருமை.

உஞ்சவிருத்திப் பிரசித்தமான புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர், பெரியம்மா வீட்டில் வந்து தங்கினார். அவரோடு நாங்களும் உஞ்சவிருத்திக்குப் போனோம். கோட்டும், டையும் போட்டுக்கொண்டு கல்லூரிக்குப் போகும் பெரியப்பா, சட்டையில்லாமல் நடந்து வந்தது எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஒரு வீட்டு வாசலில் நாங்கள் போனபோது, வீட்டுக்கார அய்யர் மாமியை ‘அடியே’ என்ற சத்தம் போட்டு அழைத்தார். அந்த வீட்டுக்கு அன்றுமுதல் ‘அடியே வீடு’ என்று பெயரிடப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெயருண்டு. பெரியம்மா வீட்டுக்கு புரபசர் வீடு என்று பெயர். இன்னொரு வீட்டுக்கு டான்ஸ் வீடு என்று பெயர். அந்த வீட்டுப் பெண்கள் நாட்டியமாடுவதற்காக ஒரு மேடை கட்டியிருந்ததால் டான்ஸ் வீடு என்று பெயர்.

டான்ஸ் வீட்டுப் பையன் ரவி என் வகுப்பிலேயே படித்துக் கொண்டிருந்தான். நல்ல வசதியான குடும்பம். வகுப்பிலும் முதல் இடம் அவனுக்குத்தான். பெரியம்மா என்னைத் திட்டுவதற்கு இவனும் வகை செய்தான். அவன் கண்ணில்படும் போதெல்லாம் அவனோடு ஒப்பிட்டு எனக்கு ஒரு சமாராதனை நடக்கும். நாம் படித்து இவனை ஜெயிக்க முடியாது என்பதால் இவனை ஃபெயில் ஆக்க என்ன வழி என்று மண்டையைக் குடைந்து கொண்டேன். அருமையான வழி பிறந்தது.

மந்தவெளியிலிருக்கும் இன்னொரு பள்ளிக்கும் எங்களுக்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடப் புத்தகம்தான். எங்களுக்குத் தேர்வு நடப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்பே அவர்களுக்குத் தேர்வு நடக்கும். அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் என்னுடைய சொந்தக்காரப் பையன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பரீட்சை முடிந்ததும் அவனுடைய கேள்வித்தாளைக் கைப்பற்றினேன். கேள்வித்தாளில் பள்ளிக்கூடத்தின் பெயரை அச்சிடவில்லை. இது என் வேலையை சுலபமாக்கியது.

கேள்வித்தாளோடு ரவி வீட்டுக்குப் போனேன். பள்ளியின் கேள்வித்தாள் அவுட் ஆகிவிட்டதென்றும், அதிர்ஷ்டவசமாக அது என் கைக்கு வந்திருப்பதாகவும் கூறினேன். அதை அவன் கண்ணில் காட்டுவதற்கச் சில சட்டங்களையும் விதித்தேன். அவன் வீட்டு ஊஞ்சலில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடுவேன். அவன் என்னைத் தடுக்கக்கூடாது. அவனிடமிருந்து ‘துப்பறியும் சாம்புவை’ நான் என் வீட்டுக்கு எடுத்துப்போய்ப் படிப்பேன். அவன் அதைத் திருப்பித்தா என்று கெடுபிடி செய்யக்கூடாது போன்ற பல சட்டங்கள். ரவி அத்தனை சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு எனக்கு எல்லா சௌகரியங்களையும் செய்த பிறகு கேள்வித்தாளை அவனிடம் ஒப்படைத்தேன். அந்தமுறை அந்தப் பரீட்சையில் அவன் தப்பித்ததே பெரிய விஷயம்.

*

இந்த நேரத்தில் என்னோடு பழகியவர்களில் மகேஷைப் பற்றிக் கட்டாயம் சொல்லியாக வேண்டும். மகேஷ் பணக்கார வீட்டுப் பையன். மகேஷுடைய அண்ணன் ஒருவன் காணாமல் போய்விட்டான். அவன் யோகியாகிவிட்டான் என்று ஒரு வதந்தி இருந்தது. மகேஷுக்கும் என் வயதுதான். என்னை மாதிரியே படிப்பில் சுமார். குறும்பில் முன்னணி. மகேஷ் வீட்டில் அவன் வைத்ததுதான் சட்டம். அப்பா, அம்மா வீட்டிலிருக்கமாட்டார்கள். மரத்தில் ஏறி பக்கத்து வீட்டு மாங்காயைப் பறிக்கலாம். ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் குடிக்கலாம். சமையற்கட்டிலிருந்தோ, புத்தக அலமாரியிலிருந்தோ எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். இத்தனையையும் நாங்கள் செய்வதை மகேஷ் அனுமதிப்பான். ஆனால் எப்போதாவது ஒருமுறை அவன் Paul Brunton, விவேகானந்தா என்று ஆங்கிலத்திலும், அழகுத் தமிழிலும் பேசுவான். சுத்தானந்த பாரதியார் எழுதிய ஆதிசங்கரர் வரலாற்றை வரிக்குவரி அபிநயித்துக் காட்டுவான். இந்த பிரக்ஞை எங்களுக்கும் ஏற்பட வேண்டுமென்று அயராது பாடுபடுவான்.

மகேஷுக்கு யோகத்தில் நாட்டம். மகான்கள் சரிதத்தைப் பற்றி விவரிப்பது சலிக்காத விஷயம். அடிக்கடி திருவண்ணாமலை போய் வருவான். வீட்டிலேயே அறையைத் தாளிட்டுக் கொண்டு மணிக்கணக்கில் தியானம் செய்வான். ஆனால் மகேஷின் விசேஷத் தன்மைகள் அன்றைய நிலையில் என்னை ஈர்க்கவில்லை. அவன் சொல்ல வந்ததை ஒரு பொழுதும் நான் கவனித்துக் கேட்டதில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு இளமைக் காலத்தில் எனக்கு தியானத்தில் ஈடுபாடு வந்தபோது இதனால் எனக்குப் பலனிருந்தது.

*

ஒருமுறை புல் அப்ஸ் எடுக்க முயன்று, தவறி சுவரில் மோவாய் மோதிக் காயம் ஏற்பட்டது. முகமெங்கும் ரத்தக் கலவையாய் இருந்த என்னை அருகிலிருந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த டாக்டருக்கோ ஊசி போடத் தெரியாது. செலவுக்குப் பயந்து வேறிடம் போக வீட்டார் தயாராக இல்லை. விளைவு – மயக்க மருந்து இல்லாமல் நாலு பேர் என்னை அமுக்கிப் பிடித்துக் கொள்ள, மிருகத்தைத் தைப்பது போல் தாடையில் ஐந்து தையல்கள். காயம், ரணம், வலி, வசவு ஆகியவை என் நாட்குறிப்பில் தவறாமல் இடம் பெற்றன.

*

ஏழாம் வகுப்பு படிக்கும்போது, இடைவேளையில் வீட்டுக்கு வந்தவன் உள்ளறையிலிருந்த தந்தியைக் கண்டேன். ‘குஞ்சம்மா பாட்டி இறந்துவிட்டார்.’ இவ்வளவு பெரிய துக்கத்தை நான் இதுவரை அனுபவித்ததில்லை. யாரும் என்னிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. நான் ஊருக்குப் போக விரும்புகிறேனா என்று யாரும் என்னைக் கேட்கவில்லை. பகல் பொழுதும், மாலையும் கடந்து செல்வது மிகக் கடினமாயிருந்தது. இரவின் வரவை எதிர்ப்பார்த்துப் பொறுமையாயிருந்தேன். இரவு சாப்பாடு முடிந்தது. எல்லோரும் படுத்துவிட்டார்கள். எல்லோரும் தூங்கிவிட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரியும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தேன். பிறகு போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, மனம்விட்டு, வாய்விட்டு வெகுநேரம் அழுதேன்.

– தொடரும்

Posted on Leave a comment

பிட்காய்ன்: பணத்தின் வருங்காலம் – ப.சந்திரமௌலி

பிட்காய்ன் என்பது ஒரு நாணயம். அது கணினிகளிலேயே உருவாகி, அவற்றின் வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதெப்படி கணினிகளிலேயே உருவாகும்? யார் அதை உருவாக்குகிறார்கள்? அதன் மதிப்பு எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? அது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? அதில் அப்படியென்ன தனித்துவமான, மற்ற நாணயங்களில் இல்லாத வசதிகள் இருக்கின்றன? இப்படிப் பலப்பலக் கேள்விகள் நமக்குள் எழுவது இயற்கையே.

பணவாட்டப் பொருளாதாரக் கொள்கையை (deflationary economics) அடிப்படையாகக் கொண்டு, தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் மூலம் பிட்காய்ன் உருவாக்கமும் பரிவர்த்தனைகளும் நடைபெறுகின்றன. ஆகவே, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாகவே நாமும் பிட்காய்னைப் புரிந்துகொள்வோம்.

பொருளாதாரக் கூறுகள்

பணத்திற்கு மூன்று முக்கியச் செயல்பாடுகள் இருக்கின்றன.

1. பொருட்களையோ, சேவைகளையோ பரிமாறிக்கொள்ள ஒரு சாதனம் (medium of exchange) – கடைக்காரரிடம் ஒரு பொருளை வாங்கிவிட்டு நாம் அதற்குப் பணம் தருவது.

2. பொருட்கள் மற்றும் சேவைகளை மதிப்பீடு செய்யும் ஓர் அலகு (unit of account) -வீட்டை நிர்வாகம் செய்யும் மகளிரோ அல்லது அலுவலகத்தில் உள்ள ஒரு நிர்வாகியோ, பட்ஜெட் விவரங்களைத் தயாரிக்கும்போது இன்னின்ன பொருள் இவ்வளவு விலை என்று குறித்து அதற்கேற்றவாறு வரவு-செலவுகளைத் திட்டமிடுவது.

3. மதிப்பைச் சேமித்து வைக்கும் ஒரு கருவி (store of value) – குழந்தைகளின் மேற்படிப்புச் செலவுக்காகவோ, எதிர்காலத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டுப் பயணச் செலவுக்காகவோ பணத்தைப் பெட்டியிலோ அல்லது வங்கியிலோ போட்டு வைத்திருப்பது.

உலகின் எல்லா மூலைகளிலும் இந்த மூன்று செயல்களை எது செய்கிறதோ அதுவே பணம். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இந்தச் செயல்களைச் செய்யும் பணத்தை அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது. காரணம் ரொம்பச் சுலபம் – எப்படி மின்சாரம் முழுக்கத் துண்டிக்கப்படாது என்றும், வாகனங்கள் செல்லச் சாலைகள் திறந்தே இருக்குமென்றும் அரசாங்கத்தை நம்புகிறோமோ, அப்படியே பெரும்பாலும் நிலையானதொரு மதிப்பீட்டுடன் மேற்சொன்ன மூன்று செயல்களையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பணம் செய்யமுடியும் என்று நம்புகிறோம்.

ஆனால், ஒரே ஒரு சின்ன பிரச்சினை – உலகிலுள்ள பெரும்பாலான அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நாணயங்கள், ‘பணவீக்க’ நாணயங்கள். அதாவது, வருடாவருடம் அந்த நாணயங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும்; எனவே அவற்றின் மதிப்பு குறைந்துகொண்டே போகும். (ஜப்பான் இதற்கு விதிவிலக்கு. அங்கே அரசாங்கத்தின் ‘யென்’ என்ற நாணயம் ‘பணவாட்ட’ நாணயம் – அதாவது, நாணயத்தின் எண்ணிக்கை மொத்த உற்பத்தி மற்றும் நுகர்வை வைத்துப் பார்க்கும்போது வாடிக்கொண்டே / குறைந்துகொண்டே போகும்; எனவே அவற்றின் மதிப்பு கூடிக்கொண்டே போகும்.) ஒருவகையில், இது ‘கோழி வந்ததா, முட்டை வந்ததா’ பிரச்சினைதான் – அதிக அளவில் நாணயங்களை அச்சடித்தால் இருக்கும் நாணயங்களின் மதிப்பு குறைந்து விலைவாசி ஏறும். அவ்வாறு ஏறும்பொழுது, அதைச் சமாளிக்க மேலும் நாணயங்களை அச்சடிக்க வேண்டியிருக்கும். (இது கொஞ்சம் மிகையான எளிமைப்படுத்தல்தான்.)

2008ம் வருடப் பொருளாதார நெருக்கடியின் போது, அமெரிக்க அரசாங்கம் ஃபெடரல் ரிசர்வின் உதவியுடன் பணப் புழக்கத்தை அதிகரித்தது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் தவறான நடவடிக்கைகளால் விளைந்த பொருளாதாரச் சரிவுக்கு, மக்கள் வரிப்பணத்தில் தீர்வு காண நினைத்தது. இது சமூகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மொத்தத்தில் அரசாங்கம் பெருநிறுவனங்களின் சார்பாகவே செயல்படுவதாக ஒரு கருத்து நிலவியது. இந்தக் கருத்து சரியா, தவறா என்பது இங்கே பொருட்டல்ல; ஆனால், பிட்காய்னின் வரலாற்றில் இந்தக் கருத்து ஒரு முக்கியப் பங்கு வகித்தது.

இதற்கிடையில், மின்னணுப் பணப்பரிவர்த்தனை உலகில் பெருமளவில் பரவ ஆரம்பித்தது. மக்கள் கடன் அட்டைகளிலும் (கிரெடிட் கார்ட்), பற்று அட்டைகளிலும் (டெபிட் கார்ட்) இணையம் வழியாகத் தங்கள் பணப் பரிவர்த்தனைகளைப் பெருமளவில் செய்தனர். இப்படிச் செய்யப் பல இடைநிலை நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கு தேவைப்பட்டது. இதிலும் சில பிரச்சினைகள் இருந்தன. ஒரு சிறுவணிகர் தன் கடையில் அட்டை மூலமாகவோ இணையம் வழியாகவோ பெற்றுக்கொள்ளும் பணம், அவருக்கு உடனே வந்து சேராமல் நாட்கணக்கிலோ, வாரக்கணக்கிலோ தாமதமாக ஆரம்பித்தது.

அதுமட்டுமில்லாமல், ஒருவரின் தனியுரிமை சுலபமாக பாதிக்கப்படக் கூடிய நிலையும் இதில் உருவானது. அட்டைகள் மற்றும் இணையம் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள், அவற்றைச் செய்பவரின் அடையாளத்துடனே நடப்பதால், இடைநிலை நிறுவனங்கள் அந்தத் தகவல்களைத் தவறாகப் பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டது.

மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஒருவருக்கு உறுத்தியது. அவர் பெயர் ‘சதோஷி நகமோதோ.’ (இந்தப் பெயரே ஒரு புனைப்பெயர்தான். இந்தப் பெயரில் உள்ளவர் யார் என்பதும், அவர் ஆணா, பெண்ணா அல்லது ஒரு குழுவா என்பதெல்லாமும் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. நம் சௌகரியத்துக்காக, ‘அவர்’ என்ற மரியாதைப் பன்மையிலேயே குறிப்பிடுவோம்.) பணம் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல், மனிதனுக்கு மனிதன் (peer-to-peer) பரிமாறிக்கொள்ளும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த எண்ணத்தின் விளைவாக உருவானதே பிட்காய்ன்.

சரி, பிட்காய்ன் எப்படி மேலே சொல்லியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்? இந்தக் கேள்விக்கு விடை, பொருளாதாரத்தைத் தாண்டி, தகவல் தொழில்நுட்பத்திலேயும் கணிதத்திலேயுமே இருக்கிறது.

பிட்காய்ன் உருவாவது எப்படி?

முன்னொரு காலத்தில், நாணயங்கள் தங்கம், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களினால் செய்யப்பட்டிருந்தபோது, அந்த உலோகங்களைச் சுரங்கங்களிலிருந்து வெளிக்கொணர்ந்து பின்பு நாணயங்கள் செய்தார்கள். ஓரளவு சுலபமாகக் கிடைக்கும் உலோகங்கள் குறைந்த மதிப்புடைய பொருட்களுக்கும், அரிதாகக் கிடைக்கும் உலோகங்கள் அதிக மதிப்புடைய பொருட்களுக்கும் விலையாய்க் கொடுக்கப் பயன்பட்டன.

பிட்காய்னும் ஒருவகையில் இப்படிச் சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்படும் உலோகம் போலத்தான். பிட்காய்னுக்கென்று ஒரு நிரல் (program) உள்ளது. அதைத் தரவிறக்கி அதில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு கணிதப்புதிருக்கு விடை கண்டுபிடித்தால் பிட்காய்ன் உடனே அந்தக் கணினியில் உருவாகிவிடும். அந்தப் புதிர்தான் என்ன? சுரங்கவேலை போல மிகவும் நேரமும், உழைப்பும் எடுக்கக்கூடிய ஒரு கடினமான வேலையை நிகழ்த்துவதற்கான ஒரு வழிமுறைதான் அந்தப்புதிர்!

உதாரணத்திற்கு – சென்னையில் நீலநிற வண்ணம் அடித்து, பக்கத்தில் வாழைமரமும் உள்ள வீட்டை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்று ஒரு சவால்! நீலநிற வண்ணம் அடித்த வீடுகள் பல இருக்கலாம். ஆனால் அருகில் வாழைமரத்துடன் இருக்கும் வீடு என்றதும் அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்கும் சாத்தியக்கூறு குறைகிறதல்லவா? அதுபோல, ஒரு கடின இலக்கு ஒன்றை அந்த நிரல் உங்களுக்கு அளிக்கும். அந்த இலக்கு 40 பூஜ்யங்களுடன் (உதாரணத்திற்கு) தொடங்கவேண்டும் என்பதாக இருக்கும். அதைக் கணக்கிடுவது அவ்வளவு சுலபமல்ல! இந்தக் கணக்கைச் செய்வதற்கென்றே ASIC என்று கூறப்படும் ஒருவித கணினிகளைப் பயன்படுத்தி இதைச் செய்வார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் விடை ஒரு தொகுதியின் (block) பெயராக வைக்கப்படும். இதை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டீர்களென்றால், அந்தத் தொகுதி உருவானதும் அதற்குள்ளேயே குறிப்பிட்ட அளவு பிட்காய்ன்கள் உருவாகி அந்தப் பரிவர்த்தனைக்கான ஒரு பொது முகவரியில் (public address) அது சேர்ந்துவிடும். இந்தத் தொகுதி ஒருவகையில் ஒரு பணப்பை போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கு இதில் கிடைக்கும் பிட்காய்ன் தவிர, இந்த நெட்ஒர்க்கில் மற்றும் பலர் செய்துள்ள பிட்காய்ன் பரிவர்த்தனைகளை நீங்கள் புகுத்தவேண்டும். பின்பு அதை நெட்ஒர்க்கில் மீண்டும் பரப்பவேண்டும்.

ஆஹா, பிட்காய்ன்தான் கிடைத்து விட்டதே; இதை வைத்து மசால்வடையோ, மாளிகையோ எதையோ வாங்கியே ஆகவேண்டும் என்று உடனே கிளம்பிவிட முடியாது! நீங்கள் கண்டுபிடித்த விடை சரியா என்பதை இன்னும் பலர் சரிபார்க்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்குக் கிடைத்த பிட்காய்னும், மேலும் அந்தத் தொகுதிக்குள் இருக்கும் மற்றும் பலரின் பரிவர்த்தனைகளும் ‘முறையானது’ என்றாகும். அதாவது நீங்கள் நியாயமாகவே ‘சுரங்க வேலை’ செய்துதான் அந்த விடையைக் கண்டுபிடித்ததாக நிரூபிக்கப்படும்.

ஆனால் அப்படிச் சரிபார்க்க ஒவ்வொருவருக்கும் நெடுநேரம் ஆகாது. வாழைமரம் அருகில் உள்ள நீலநிற வண்ணம் அடிக்கப்பட்ட வீட்டைப் பற்றிப் பார்த்தோமல்லவா? நீங்கள் அந்த வீட்டைக் கண்டுபிடித்தபின், அதன் வழியைப் பொதுவெளியில் அறிவித்தீர்களென்றால், அந்த வழியை வைத்து நீங்கள் அடைந்த வீடு சரியானதுதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வது சுலபம்தானே. அதேபோலத்தான் பிட்காய்னிலும். உங்கள் விடையையும், உள்ளீட்டையும் நீங்கள் கொடுத்துவிட்டால், சரிபார்ப்பவர்கள் நீங்கள் பயன்படுத்திய அதே வழிமுறையை (அல்கோரிதம்) உபயோகப்படுத்தி வெகு சீக்கிரம் சரிபார்த்துவிடுவார்கள். அப்புறம் என்ன? உங்கள் விருப்பப்படி நீங்கள் மசால்வடை வாங்கச் செல்லலாம். (கொஞ்சம் பொறுங்கள். மசால்வடையைப் பற்றிப் பின்னர் மீண்டும் பேச வேண்டியிருக்கும்.)

அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் இப்படிச் செய்து பிட்காயின்களை உருவாக்கிடமுடியுமா? முன்னே கூறியிருப்பது போல, ASIC கணினிகளைப் பெருமளவில் வாங்கி உபயோகப்படுத்தி யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். உலகளவில் இந்த வேலையைச் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அவர்களும் தாங்களாகவே இதை முழுமையாகச் செய்வதில்லை; செய்வதும் சுலபமில்லை. எனவே, அவர்கள் ஒரு குழுவை (mining pool) உருவாக்கி பொதுமக்களை அந்தக் குழுவின் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்வார்கள். அதில் ASIC கணினிகள் வாங்கப்பட்டு, பிட்காய்ன் உருவாக்கும் வேலை நிகழும். அப்படி வரும் பிட்காயின்கள் அவரவரின் பங்களிப்பு மற்றும் விதிகளுக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும்.

பிட்காய்ன் பரிவர்த்தனைகள்

வெற்றிகரமாக இப்போது பிட்காய்ன் உருவாகிவிட்டது. இனி, இதை வைத்து எப்படிப் பரிவர்த்தனைகள் செய்வது என்று பார்ப்போம்.

பிட்காய்ன் நிரலில் உங்களிடம் உள்ள மொத்தப் பணத்தின் எண்ணிக்கையும் ஒரே பதிவாக இருக்காது. உதாரணத்துக்கு, முகவரி 1ல் 5 பிட்காய்னும் முகவரி 2ல் 3 பிட்காய்னும் உங்களுக்குக் கிடைத்ததென்றால், அவை அதே வடிவில் தனித்தனியாக இருக்குமே தவிர ‘உங்களிடம் மொத்தம் 8 பிட்காய்ன் உள்ளது’ என்ற வடிவில் இருக்காது. ஒருவகையில் உங்கள் கையில் இருக்கும் பணத்தைப் போலத்தான் இது. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் நீங்களே அதைக் கூட்டித் தெரிந்து கொள்ள முடியுமே. இதற்குச் சில காரணங்கள் உண்டு. ஆனால், அது கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டிய விஷயம்.

இப்படித் தனித்தனியாக இருக்கும் பிட்காய்ன்களை எப்படிச் செலவு செய்வது? இதுவும் பணத்தைச் செலவு செய்வது போலத்தான். நீங்கள் 6 பிட்காய்ன்களை ஒருவருக்குத் தரவேண்டும் என்றால், உங்களிடம் உள்ள 5 மற்றும் 3 பிட்காய்ன்களை அவருடைய பொதுமுகவரிக்கு அனுப்ப வேண்டும். மீதி 2 பிட்காய்ன்களை உங்களுக்கென்று இன்னொரு முகவரியில் வாங்கிக் கொள்ளலாம்.

பிட்காய்ன் பரிமாற்றத்துக்குப் பொதுமுகவரி மிகமுக்கியம். உங்கள் பொதுமுகவரியிலிருந்து வாங்குபவரின் பொதுமுகவரிக்கு நீங்கள் பணத்தை அனுப்பலாம். இந்த முகவரியை நீங்கள் உருவாக்க உங்களுக்கு முதலில் இரு குறியீட்டு எண்கள் (சாவிகள்) வேண்டும். உங்களுக்கென்று தனியாக ஒன்று (private key), உங்கள் அடையாளமாகப் பிறருக்குத் தரக்கூடிய ஒன்று (public key) – இப்படி இரண்டு குறியீட்டுச் சாவிகளை வைத்துத்தான் உங்கள் பொது முகவரியை உருவாக்க முடியும். (இது எப்படியென்றால், முதலில் சாவியைத் தயாரித்துவிட்டு பின்பு அதற்கான பூட்டைச் செய்து, பின்பு உங்கள் முகவரியை உருவாக்கி, அந்த முகவரியில் உள்ளதைப் பூட்டுவது போல.)

குறிப்பாக அந்தத் தனிப்பட்ட குறியீட்டு எண் (private key) பத்திரம்! தொலைத்துவிட்டால் டூப்ளிகேட் எல்லாம் கிடைக்காது. மொத்த பிட்காய்னும் அம்பேல்தான்.

பிட்காய்னின் பொருளாதாரம்

நாடுகள் தங்கள் நாணயத்தை அடிப்பதற்கும் (சிலேடைக்கு மன்னிக்கவும்!), பிட்காய்ன் உருவாவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ஒரு நாட்டில் பொதுவாக எவ்வளவு பணம் புழக்கத்தில் இருக்குமென்பதும், அது வருடாவருடம் எப்படி மாறுமென்பதும் யாராலும் துல்லியமாகக் கணிக்கமுடியாது. ஆனால் பிட்காய்ன் அப்படியல்ல. மொத்தமாக 2.1 கோடி பிட்காய்ன்கள் மட்டுமே மொத்தமாகப் புழக்கத்துக்கு வரும். அவையும் எவ்வளவு நேரத்தில் எவ்வளவு பிட்காய்ன்கள் உருவாகும் என்பதை ஓரளவு துல்லியமாகவே சொல்லிவிடலாம். ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை, பிட்காய்ன் உருவாக்கம் என்பது முந்தைய அளவிலிருந்து பாதியாகக் குறையும். சென்ற வருடத்தின் தொடக்கத்தில், ஒரு தொகுதிக்கு (block) 12.5 பிட்காய்ன்கள் என்ற விகிதத்தில் இருந்தது, வரும் 2020 வருடத்தில், ஒரு தொகுதிக்கு 6.25 பிட்காய்ன்கள் என்று குறைந்துவிடும். இப்படிப் படிப்படியாகக் குறைந்து, 2140ம் வருட வாக்கில் மொத்த பிட்காய்ன் உற்பத்தியும் நடந்தேறிவிடும்.

வெறும் 2.1 கோடி பிட்காய்ன்களை வைத்துப் பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? எப்படி ரூபாய் என்பது பைசாக்களாகப் பகுக்கப்படுகிறதோ, அதுபோல பிட்காய்னுக்கும் பகுப்புகள் உண்டு. ஒரு பிட்காய்னில் நூறு கோடியில் ஒரு பங்கு ‘சதோஷி’ எனவும், பத்து லட்சத்தில் ஒரு பங்கு ‘மைக்ரோ பிட்காய்ன்’ எனவும், ஆயிரத்தில் ஒரு பங்கு ‘மில்லி பிட்காய்ன்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் ஒரு பிட்காய்ன் இந்திய பிட்காய்ன் சந்தைகளில் ஐந்து லட்சம் ரூபாய்! எனவே இன்று 20 மைக்ரோ பிட்டுகள் இருந்தால் போதும் – 10 ரூபாய் பெறுமானமுள்ள மசால்வடையை வாங்கிவிடலாம்.

ஆனால் ஒன்றை யோசித்துப் பாருங்கள். அதிகபட்ச எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்ட – அதாவது நீண்டகால நோக்கில் தங்கத்தைப் போல அரிதாகவே கிடைக்கும் பிட்காய்னை மசால்வடை, டீ போன்ற தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்துவோமா? இந்தக் கேள்விக்குத் தீர்மானமான பதில் இல்லை. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்கள் மற்றும் குறியாக்கவடிவ நாணயங்கள் (cryptocurrencies) பற்றி அறிந்த நிபுணர்களும், இன்னுமே இந்தக் கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிட்காய்ன் சந்திக்கும் சவால்கள்

உலகின் எல்லாக் கண்டுபிடிப்புகளும் அவற்றின் ஆரம்பக்கட்டங்களில் அவநம்பிக்கைகளையும் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தே இருக்கின்றன. அவற்றிற்கிடையே வென்று மேலெழும்பி சமுதாயத்தில் பரவலான பயன்பாட்டுக்கு வந்தவையும் உண்டு; தோல்வியடைந்து பெட்டிக்குள் முடங்கியவையும் உண்டு. பிட்காய்னும் அதன் ஆரம்பக்கட்டமான இன்றைய நிலையில் பல சவால்களைச் சந்திக்கிறது.

முதலாவதும் முக்கியமானதுமாக, பிட்காய்னின் மீது அரசாங்கங்கள் விதிக்கும் கட்டுப்பாடு. மனிதனுக்கு மனிதன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும் வகையில் ஒரு நாணயம் இருந்தால், அது நிச்சயம் ஒரு அரசாங்கத்துக்குத் தலைவலிதான். வரும் வருமானத்துக்குச் சரியான வரி கட்டப்படுகிறதா, வரும் வருமானமே முறையாக வந்ததுதானா, தவறான நோக்கங்களுக்காக இது பயன்படுத்தப் படுகிறதா – இப்படிப் பலப்பல சந்தேகங்கள் அரசாங்கத்துக்கு நிச்சயம் வரும். எனினும் இதைத் தடைசெய்வது எளிதல்ல. பிட்காய்ன் முகவரிகள் அநாமதேயமான அடையாளங்கள். அது யாரைச் சார்ந்தது என்று கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம். எனவே தடை என்று வந்தால், கள்ளமார்கெட் போல பிட்காய்ன் மார்கெட் வளர்வதும் உறுதி.

இரண்டாவது, பிட்காய்னைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமம். இன்றைக்கு பிட்காய்னை வாங்கி விற்கவென்று இணையச் சந்தைகள் இருக்கின்றன. இந்தச் சந்தைகளை உபயோகப்படுத்திக்கொள்வது சுலபம். ஆனால், இதிலும் இரண்டு பிரச்சினைகள் உண்டு. இந்தச் சந்தைகள் உங்கள் தனிப்பட்ட குறியீட்டு எண்ணை (private key) அவையே வைத்திருக்கும். (தனிப்பட்ட குறியீட்டு எண் முக்கியம் என்று பார்த்தோமல்லவா!) இப்படி தனிப்பட்ட குறியீட்டுச் சாவியை இன்னொருவரிடம் விட்டுவைத்திருப்பது நல்லதல்ல. மேலும், நாம் எல்லோரும் உபயோகிக்கும் வகையில் சுலபமான வடிவில் பிட்காய்ன் இன்னும் வரவில்லை. கடனட்டை போல ஒரு சுலபமான முறையில் பரிவர்த்தனைகள் செய்யும்படி இருந்தால் மட்டுமே பிட்காய்ன் பொதுவரவேற்பைப் பெறும்.

மூன்றாவது, சமூகப் பார்வை. பிட்காய்னை போன்சி (ponzi) திட்டங்களுடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். இது ஒரு தவறான கண்ணோட்டம் என்றே படுகிறது. ஆனால், பிட்காய்னை இன்றைய தேதியில் பங்குச் சந்தை போலப் பார்க்கலாம். மற்ற கரன்சியைக் கொடுத்து பிட்காய்ன் வாங்குவது இன்று நிறையவே நடக்கிறது. ஆனால், இதன் ஏற்ற இறக்கம் மிகவும் அதிகமானதாக இருக்கிறது. திடீரென்று 4,50,000 ரூபாய் பெறுமானமுள்ள பிட்காய்ன், மறுநாளே 5,00,000 ரூபாயாகவும், அதற்கு அடுத்த வாரம் மீண்டும் 4,25,000 ரூபாயாகவும் என்று ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. இது ஓரளவு சமநிலை அடையும் வரை, சமூகத்தால் இது ஏற்றுக்கொள்ளப்படுவதும் சந்தேகமே.

பிட்காய்னின் வருங்காலம்

பிட்காய்ன் எந்தத் தனிமனிதரையும் நிறுவனத்தையும் நம்பியோ சார்ந்தோ இல்லை. ஒரு வகையில், இது ஜனநாயக முயற்சி போலத்தான். கூட்டுமுயற்சியின் மூலம் மட்டுமே நிலைத்திருக்கும் பிட்காய்ன் ஏதோ ஒரு வடிவத்தில் உலகில் பல மூலைகளில் பலரால் பயன்படுத்தப்பட்டு ஏதோ ஒரு வடிவில் வாழ்ந்துகொண்டே இருக்குமென்றே தோன்றுகிறது.

Posted on Leave a comment

இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி – ஆமருவி தேவநாதன்

இஸ்ரேல் என்றதும் ‘துப்பாக்கிகள், கொலை, காட்டுமிராண்டித்தனம், எதேச்சாரதிகாரம், ஆரஞ்சுகள்’ என்று உங்கள் நினைவிற்கு வந்தால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நமக்கெல்லாம் ‘போதிக்கப்பட்டிருக்கும்’ இஸ்ரேல் அதுவே. ஆனால் உண்மையில் ‘எது இஸ்ரேல்?’ என்று உணர்த்துவது ‘Start-up Nation’ என்னும் அந்த நாட்டைப் பற்றிய இந்த நூல்.

‘A mournful expanse’ என்று மார்க் ட்வெயின் வர்ணித்த பாலைவனப் பிரதேசம் இன்று இஸ்ரேல் என்ற பெயருடன் உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் உருவான கதையை விவரிக்கிறது இந்த நூல்.

இயற்கையால் வஞ்சிக்கப்பட்டாலும் பகைவர்களால் சூழப்பட்டாலும் இஸ்ரேலியர்கள் என்ற மாபெரும் மனித ஆற்றலின் அளப்பரிய முயற்சியால் அந்த நாடு உயிர் பெற்று, துளிர்த்து, மிளிர்ந்து, தொழில்நுட்பத்திலும் வேளாண்மையிலும் உலகிற்கே வழிகாட்டுவதாய் விளங்கும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகளை விளக்குகிறது ‘Start-up Nation’ என்னும் இந்தப் புத்தகம்.

வான் வழியில் ஏவுகணை மழை பொழிந்து வந்தாலும் தரைக்கடியில் மென்பொருள் எழுதும் மக்களின் அபரிமிதமான ஆற்றலை நமது முகத்தில் அறைந்து தெரிவிக்கும் இந்த நூல், அப்படியான மக்களைத் தூண்டுவது எது என்பதையும் விரிவாக விளக்குகிறது. தாங்கள் யூதர்கள், தங்களுக்கு என்று இருக்கும் ஒரே இடம் இஸ்ரேல் என்னும் பாலைவனம். அதில் மனித ஆற்றலும், எண்ண ஒருங்கிணைவும் சேர்ந்தால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை முரசறைந்து தெரிவிக்கும் இந்த நூல் அந்நாட்டின் வரலாறு, கலாசாரம், தொழில் முனைவோரின் ஊக்க சக்திகள் என்று பல தளங்களில் பயணிக்கிறது.

நூல் முழுவதும் பயணிக்கும் ஒற்றைச் சரடு – 8200 என்னும் எண். இஸ்ரேலிய ராணுவத்தின் உயர் தொழில்நுட்பப் பிரிவான 8200ல் சேரும் இளைஞர்கள் எவ்வாறு தங்கள் பணிக்காலத்திலும், பின்னர் துணை ராணுவப் பிரிவுகளிலும் இருக்கும்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணியில் இருந்து வெளியேறியதும் தொழில் முனைவோராகிறார்கள் என்று தெளிவாக விளக்குகிறது இந்நூல். 8200ல் சேர்வது எத்துணை கடுமையானது என்பதையும், அதில் சேர மாணவர்கள் இளம் வயதிலேயே தயாராவது பற்றியும் விவரிக்கும் ஆசிரியர், பிற்பாடு 8200 என்பதே எத்துணை பெரிய உயரிய அங்கீகாரம் என்பதையும், அது எவ்வகையில் இஸ்ரேலைத் தொழில் முனைவோரின் பெருங்கூட்டமாக ஆக்க உதவியது என்பதையும் விவரிக்கிறார்.

இஸ்ரேலில் ஆள்பற்றாக்குறை இருந்தது பற்றியும், அதை நீக்கப் பாலையில் விவசாயம் செய்ய ‘கிப்புட்ஸ்’ என்னும் கம்யூன் வகையைலான கூட்டமைப்புக்களை உருவாக்கிய பென் கியூரியன் முதலான பெருந்தலைவர்கள் பற்றியும், சொட்டு நீர்ப்பாசன முறையை உலகில் முதலில் உருவாக்கி அதன் மூலம் வேளாண்மை செழிக்க இஸ்ரேலியர்கள் செய்த முயற்சிகள், ஒவ்வொரு இஸ்ரேலியனும் எப்படி நாட்டின் தூதனாகச் செயல்படுகிறான் என்பதையும் மிக நீண்டு விளக்கும் ஆசிரியர், இஸ்ரேலியரின் வீரத்தையும், சமயோசித அறிவுப் பயன்பாட்டையும் பல இடங்களில் விவரிக்கிறார்.

உலகில் மிக வறிய நாடாக இருந்த ஒரு பாலைப் பிரதேசம், உலகின் வளம் கொழிக்கும் நாடாக மாறியதை, இஸ்ரேலிய முறையைப் பின்பற்றினாலும் அந்நாட்டின் அளவிற்குச் சுய தொழில் முனைவோரை உருவாக்க முடியாத சிங்கப்பூர், தென் கொரியா முதலிய நாடுகளைப் பற்றியும் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கும் ஆசிரியர், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இஸ்ரேலிய முறையைப் பின்பற்றத் துவங்கியதைக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அரபு நாடால் எவ்வாறு இஸ்ரேல் அளவிற்கு முன்னேற இயலாது என்று ஆசிரியர் ஆதாரபூர்வமாக விவரிப்பது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்று.

துவக்கத்தில் சோஷலிசப் பாதையில் பயணித்த இஸ்ரேல் சந்தித்த சவால்கள், அந்நாட்டின் பண வீக்கம் 400 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது ஏன் என்பதற்கான காரணங்கள், அந்நாடு அப்பாதையில் இருந்து விலகிப் பொருளியலில் பெற்ற ஏற்றம் மற்றும் அதற்கான காரணங்கள், இஸ்ரேலின் மக்கட்தொகைப் பெருக்கத்திற்கான காரணங்கள், அதன் மூலம் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்று பல பார்வைகளை வழங்கும் இந்த நூல் தமிழகப் பள்ளிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட வேண்டிய அளவிற்கு மனவெழுச்சி ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நூல் முழுவதும் வந்து செல்கிற ஒரு செய்தி: சுய சிந்தனை. ராணுவமாகட்டும், பள்ளிகளாகட்டும், நிறுவனங்களாகட்டும் – எங்கும் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பதே இல்லாமல், அதிகாரக் கட்டமைப்பில் எந்த நிலையில் இருந்தாலும், நிறுவனம் தவறான முடிவுகளை எடுக்கிறது என்று தெரிந்தால் உடன் அதனைச் சரிப்படுத்தும் வேலையில் கடைநிலை ஊழியரும் கூட இறங்குகிறார்கள், அதிகாரிகளைக் கேள்வி கேட்கிறார்கள், நிறுவனத்தையும் நாட்டையும் முன்னேற்றுகிறார்கள்.

சுற்றியுள்ள பகை நாடுகளால் தங்களது வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும்போது, இஸ்ரேலியர் உலகப் பயணங்களை விடாமல் மேற்கொண்டு உலக நிகழ்வுகளையும், உலக நிகழ்வுகளால் இஸ்ரேலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் கற்றறிந்தவண்ணமே உள்ளனர். ஒவ்வொரு இஸ்ரேலியனும் தன்னை நாட்டின் தூதுவனாகவே உணர்கிறான். தனது நிறுவனத்திற்கான வியாபாரப் பயணங்களில் கூட இஸ்ரேலைப் பற்றியே பேசுகிறான். இத்தகைய தேசப்பற்று வேறெந்த நாட்டிலும் இருக்குமா என்பது ஐயமே.

இண்டல் நிறுவனம் தனது பெண்டியம் சில்லுகளை வடிவமத்த பின், ஏ.எம்.டி. முதலான புதிய நிறுவனங்களின் வருகையால் திகைத்து நின்றிருந்த காலத்தில், அந்நிறுவனத்தின் இஸ்ரேலியப் பொறியாளர்கள் சென்றினோ சில்லை வடிவமைத்து, அதன் மூலம் மடிக்கணினிகள் அதிக அளவு பெருக வழி வகுத்ததையும், அதன் மூலம் இண்டல் நிறுவனமே காப்பாற்றப்பட்டதையும் காட்டும் பகுதிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவெழுச்சியை அளிப்பன.

பேபால் (Paypal) நிறுவனத் தலைவரைச் சந்திக்கும் சிறுவன் கள்ளப்பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் தனது புதிய மென்பொருளைக் காட்டுவதும், அதனை நம்பாத தலைவர் அவனிடம் கடுமையான சோதனை வைப்பதும், அதனை ஓரிரு நாட்களிலேயே அச்சிறுவன் தனது மென்பொருளின் துணை கொண்டு செய்து முடிப்பதும், பின்னர் அச்சிறுவனின் ஃபிராடு சையின்ஸஸ் (Fraud Sciences) நிறுவனத்தை பேபால் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்குவதையும் படிக்கும் இடங்களில் ஒரு தேர்ந்த ஹாலிவுட் திரில்லர் திரைப்படம் காண்பது போன்ற உணர்வதைத் தவிர்க்க முடியாது.

நல்ல நண்பன் என்று நம்பியிருந்த பிரான்ஸ் நாடு மிக முக்கியமான போர் நேரத்தில் தன்னைக் கைவிட்ட நிகழ்வை மறக்காத இஸ்ரேல், ‘இனியும் யார் தயவையும் நம்பியிருத்தல் முடியாது’ என்று தானே போர் விமான உற்பத்தியில் இறங்கிய நிகழ்வு வரும் பகுதி படிப்பவர்களுக்குப் பெரும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இஸ்ரேலிய அரசின் விமானத்துறை உருவான விதமும், அத்துறையில் தன்னை நிலை நாட்டிக் கொள்ள இஸ்ரேல் உலகச் சட்டத்தினுட்பட்டும், அவற்றை ஏமாற்றியும் செய்துள்ள அளப்பரிய செயல்கள், அந்நாட்டின் மீதும் அதன் ஆட்சியாளர்களின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்துகின்றன.

இஸ்ரேலில் தொழில்முனைவோருக்குப் பண உதவி செய்ய அந்நாளில் யாரும் முன்வராத போது, அரசாங்கமே தற்போது எங்கும் பரவலாக உள்ள ‘Venture Capital’ என்று முறையை முதன்முதலாக மேற்கொண்டு உயர் தொழில்நுட்பத்தில் இஸ்ரேலில் பல புதிய சிறு நிறுவனங்கள் உருவாக வழி செய்தது என்பதை நூலின் வாயிலாக அறியும்போது 40 ஆண்டுகளுக்கும் முன்னமேயே அந்நாட்டரசின் தீர்க்கதரிசனத்தை எண்ணிப் பெரும் வியப்பே ஏற்படுகிறது.

முதல் வளைகுடாப்போரில் சதாம் ஹுசேன் இஸ்ரேல் மீது தினம் சில ஸ்கட் ஏவுகணைகளைப் பொழிந்தபோது இஸ்ரேலிய அரசு தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது. வீட்டின் பதுங்கு அறைகளில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது. ஆயினும், அரசாணையைப் புறந்தள்ளி இண்டல் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தொழிற்சாலைக்கு வேளைக்கு வந்து கடமையாற்றிக்கொண்டிருப்பதையும், ஒரு நாள் இரவு ஏவுகணைத் தாக்குதல் முடிவுற்றவுடன் இண்டலின் தலைவர் இரவோடிரவாகத் தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பார்க்க விரைவதையும், ஆனால் அவ்விடத்தில் ஊழியர்கள் இரவிலும் வேலை செய்துவந்ததைக் கண்டு கண்ணீர் மல்குவதையும் காணும் போது இதைவிட தேசபக்தி வேறென்ன இருக்க முடியும் என்கிற எண்ணமே ஏற்படுகிறது. போர் தொடர்ந்தபோது இண்டலின் ஊழியர்கள் அலுவலகத்திலேயே பால்வாடி அமைத்துச் சிறு பிள்ளைகளைப் பாதுகாத்தவாறே நிறுவனத்திற்கு உழைத்ததையும், ‘ஏன் இப்படி உழைக்கிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு ‘இஸ்ரேலில்தான் போரே தவிர, எமது வாடிக்கையாளர்களுக்குப் போர் இல்லை’ என்கிற தெளிவான பதிலுடன் பணியாற்றிய அதி தீவிர தேச பக்த இஸ்ரேலியர்களைக் கையெடுத்துக் கும்பிட வைக்கிறார் ஆசிரியர்.

புதிய குடியேறிகளை ஊக்குவிக்கும் நாடுகள் முன்னேற்றத்தையே கண்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் முதலிய நாடுகள் உதாரணம். இதன் காரணம் – புதிய குடியேறிகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அதிக துணிச்சலுடன் தீவிரமாக உழைப்பர், புதிய தொழில்கள் துவங்குவர். இஸ்ரேல் நாடே அப்படிப் புதியதாகத் துவங்கப்பட்ட நாடாகையால், புதிய குடியேறிகளைப் பெருமளவில் வரவேற்றது. அதன் பலன் – ரஷ்யாவிலிருந்து அணு விஞ்ஞானிகள், கணிதப் பேராசிரியர்கள், அமெரிக்காவிலிருந்து உயர் கல்வி கற்ற பொறியாளர்கள், எத்தியோப்பியா முதலிய நாடுகளில் இருந்தும் உழைக்க அஞ்சாத யூதப் பெருமக்கள் என்று பலதரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் குடியேறினர். அதன் மூலமும் இஸ்ரேல் தற்போதைய வியக்க வைக்கும் பெருவெற்றிகளைப் பெற்றது.

பெண்களுக்குக் கல்வி, சம உரிமை, சமூகத்தில் அவர்களுக்கான அவர்களுக்கான உயரிய இடம் என்று அளித்து, அவர்களையும் தனது புத்தாக்கப் பயணத்தில் ஈடுபடுத்தியது இஸ்ரேல். ஆனால், அருகில் உள்ள அரபு நாடுகளோ இதற்கு நேரெதிராக நடந்துகொண்டு தங்கள் நாட்டின் பெரும் வளமான பெண்கள் குலத்தைச் சரியான வகையில் பயன் படுத்தாததாலும், அவர்களுக்குச் சரியான கல்வி அளிக்காததாலும் அளப்பரிய எண்ணெய் வளங்கள் இருந்தாலும் எண்ணெய் தவிர்த்த பொருளியல் வளர்ச்சியோ, புத்தாக்கமோ இல்லாமல் பண்டைய காலத்திலேயே தேங்கி நிற்கின்றன. துபாய் போன்ற ஓரளவு முற்போக்கான நாடுகள் கூட தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் இல்லாமல் மந்த நிலையில் இருப்பதையும் ஆசிரியர் சுட்டுகிறார்.

உதவாத இயற்கை, சுற்றுப்புற நாடுகள் பகை, உலக நாடுகளில் யூதர்கள் பட்ட அவதி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி எடுத்து குருதி பிழிந்த ஏகாதிபத்திய, எதேச்சாதிகார நாடுகளின் வஞ்சகம் என்ற பல்முனைத் தாக்குதல்கள் தாண்டி, மக்களின் அயராத உழைப்பு, அரசுகளின் நேர்பட்ட பார்வை, தங்களின் மேன்மையை விட நாட்டின் மேன்மையே அத்தியாவசியம் என்கிற யூதர்களின் ஒன்றுபட்ட சிந்தனை போன்றவை ஒன்றிணைந்து இஸ்ரேலை சொர்க்கமாக மாற்றியிருப்பதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது.

இஸ்ரேலின் அளப்பரிய சாதனைகளுக்கும், அசுர வளர்ச்சிக்கும் காரணிகள் இவையே:

1. கட்டாய ராணுவச் சேவை.
2. ராணுவத்தின் உயர் தொழில்நுட்பக் குறிக்கோள்.
3. ராணுவத் தொழில்நுட்பங்களை மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவது.
4. அதிகார மட்டத்தைக் கண்டு அஞ்சாமல் சிந்திக்கும் மக்கள் மன நிலை.
5. லாபகரமான தேசப்பற்று (Profitable Patriotism ) என்னும் கருதுகோள்.
6. பெண்களின் சக்தியைப் புரிந்து சமூகத்துடன் ஒன்றிணைத்தது.
7. கல்விக்கு முதலிடம்.
8. யூதர்கள் யாராக இருந்தாலும் விசா இல்லாமல் சென்று தங்க என்று உலகில் ஒரு தேசம் தேவை என்ற பல நூற்றாண்டுகால எண்ண ஓட்டம்.

உடனடியாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூல் ‘Startup Nation’.

Posted on 3 Comments

அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்களும் அறநிலையத்துறை நிர்வாகமும் – பி.ஆர்.ஹரன்

தமிழகத்தில் பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்டது. பெரும்பான்மையான ஆலயங்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, விஜயநகர மன்னர்களால் அற்புதமான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டவை. அவ்வாலயங்களைக் கட்டியதோடு மட்டுமல்லாமல் அம்மன்னர்கள் அவற்றிற்கு ஏராளமான சொத்துக்களையும் வழங்கியிருந்தனர். நிலங்கள், தோப்புகள், மனைகள், கட்டடங்கள், வெள்ளி, தங்கம், நகைகள் என்று பலவகையான சொத்துக்கள் கோவில்களுக்கு உண்டு.

இந்நிலையில், கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும், கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம். ஏன், கோவில் விக்கிரகங்கள் கூடக் கொள்ளையடிக்கப்படுகின்றன. அயல்நாடுகளுக்குக் கடத்தி விற்கப்படுகின்றன.

இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளது. ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால், கோவில் சொத்துக்கள் குறைந்துகொண்டு வருகின்றன; அதனால் அவற்றின் மூலம் கிடைக்கவேண்டிய வருமானமும் குறைந்துகொண்டு வருகின்றது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமணக் கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக 2014ம் ஆண்டு அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் – 5 ஆகஸ்டு 2014).

திராவிட மாயையில் கோவில் நிலங்கள் காணாமல் போவதற்கும், வருவாய் வராமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில். அது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்கள்

சென்னையில் உள்ள பழமையான கோவில்களில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலும் அடங்கும். 1959ம் ஆண்டிலிருந்து தமிழக அரசின் இந்து அறைலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது இக்கோவில்.

இந்தக் கோவிலுக்குச் சொந்தமாகத் தற்போது வணிக மனைகள் 1,80,374 சதுர அடிகள்; குடியிருப்பு மனைகள் 11,16,445 சதுர அடிகள்; வணிக மனைகள் 89,550 சதுர அடிகள்; குடியிருப்புக் கட்டிடங்கள் 52,738 சதுர அடிகள் உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக மனைகளிடமிருந்து வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தொகை ரூபாய் 739.37 லட்சம்.

குடியிருப்பு மனைகளிடமிருந்து வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தொகை ரூபாய் 420.68 லட்சம்.

ஆனால் இன்றைய வழிகாட்டி மதிப்பின்படி (ஒரு சதுர அடி குறைந்தபட்சம் சுமார் 8,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட) சில ஆயிரம் கோடிகளுக்குச் செல்லும்.

சட்டத்துக்குப் புறம்பான விற்பனை

தற்போது இருக்கும் இந்தச் சொத்துக்குச் சம அளவிலான சொத்து ஏற்கெனவே சட்டத்திற்குப் புறம்பாகக் கடந்த பல ஆண்டுகளில் தனியார்களுக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டது.

இதில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையை ஒட்டிய சொக்கட்டான் சாலையில், 10 கிரவுண்ட் (சர்வே எண்.451/1,452/1) நிலங்களை (கிட்டத்தட்ட 10 கிரவுண்ட் அளவிலான நிலங்கள்) அப்போது தர்மகர்த்தாவாக இருந்தவரும், செயல் அலுவலராக இருந்தவரும் சேர்ந்து போலிப் பத்திரங்கள் தயார் செய்து தனியாருக்கு விற்றுவிட்டனர்.

1978ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பரம்பரை அறங்காவலர், அதே பகுதியில் இருந்த ஒரு கிறிஸ்தவருக்கு விற்றுள்ளார். அந்தக் கிறிஸ்தவர் 06.12.1968 அன்று முதல் கோவில் நிலத்தில் வாடகைதாரராக மட்டுமே பதிவு செய்யப்பட்டவர். இவர் ஏற்கெனவே இருந்த குத்தகைதாரரிடம் உள்வாடகைக்குச் சென்றவர். அந்தக் குறிப்பிட்டக் குத்தகைதாரர் சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவின்படி, நிலத்தை வாங்குவதற்கான உரிமை பெற்றவர். ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரம்பரை அறங்காவலர் அவருடைய குத்தகையை ரத்து செய்யுமாறு கோரி 1974ம் ஆண்டு, வழக்கு (O.S.No:1186) தொடர்ந்துள்ளார்.

பிறகு, மேல்குறிப்பிடப்பட்ட கிறிஸ்தவர் அந்நிலத்தை (I.A.No: 7389 of 1974) சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவின்படி விற்பனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மனு செய்தார். அதனைத் தொடர்ந்து 15 ஜூலை 1976 அன்று நகர சிவில் நீதிமன்ற 5வது துணை நீதிபதி குறிப்பிட்ட சொத்தை ரூ.2,700/-க்கு அவருக்கு விற்பனை செய்யுமாறு கோவில் அறங்காவலருக்கு இறுதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்பேரில், கிறிஸ்தவர் ரூ.2,700ஐ 30-12-1976 அன்று நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, நகர சிவில் நீதிமன்ற 10வது துணை நீதிபதி முன்பு, அந்நிலத்தைத் தன் பெயருக்குப் பதிவு செய்து விற்பனைப் பத்திரம் (Sale Deed) அளிக்க உத்தரவிடுமாறு மனு (CMP 1150 of 1977) சமர்ப்பித்தார். அதன்படி நகர சிவில் நீதிமன்றமும் உத்தரவிட, பரம்பரை அறங்காவலர், அகஸ்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, சர்வே எண் 452/1 நிலத்தில் இருந்த சொத்துக்கள் முழுவதையும் அந்தக் கிறிஸ்தவர் பெயருக்குப் பதிவு செய்து விற்பனைப் பத்திரமும் அளித்துள்ளார்.

கோவில் சொத்துக்களை குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ விடுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. அவற்றை விற்க அனுமதி இல்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகத் துறை அலுவலர்களின் உதவியோடு தர்மகர்த்தா விற்றுள்ளார். இந்தச் சட்டத்திற்குப் புறம்பான விற்பனையினால் ஏற்பட்ட நெருக்கடியைத் தவிர்க்க அந்த தர்மகர்த்தாவின் மனைவி, “எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று நோட்டீஸ் அடித்து நுங்கம்பாக்கம் பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஆலயங்களைச் சுற்றி அமைந்துள்ள கோவில் நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணைதான்.

அரசு ஆணை எண் 4508 (05-12-1957) மற்றும் அரசு ஆணை எண் 689 (18.03.1957) ஆகியவற்றில், கோவில் நிலங்களை விற்றுக் கிரயம் செய்யக்கூடாது என்றும், குத்தகைக்கு மட்டுமே விடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு குத்தகைக்கு விடும்போது, மாற்று மதத்தவருக்கு விடக்கூடாது என்றும் குறிப்பிடப்படுள்ளது. மாற்று மதத்தவருக்கு விடும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் கோவில் திருவிழாக்களும் மற்ற நிகழ்ச்சிகளும் பாதிக்கப்படலாம், சுமுகமாக நடைபெறாமல் போகலாம் என்கிற காரணத்தால், ஆணையர் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், குத்தகைக்கு எடுப்பவரும் மாற்று மதத்தவருக்கு மறுகுத்தகைக்கோ வாடகைக்கோ விடக்கூடாது என்றும், மாற்று மதத்தவரைக் குடியேறவும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டமும், அரசு ஆண்களும் தெளிவாக இருக்கின்றபோது, பரம்பரை அறங்காவலரும், கிறிஸ்தவ வாடகைதாரரும் அறநிலையத்துறை அலுவலர்கள் உதவியுடன் மேற்கொண்ட இந்தச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை நகர சிவில் நீதிமன்றமும் எப்படி அனுமதித்தது என்பதும் இங்கே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

கோவில் நிலத்தில் மசூதி

அகஸ்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மற்றொரு இடத்தில் ஒரு இஸ்லாமியர் வாடகைதாரராக இருந்தார். பிறகு அவ்விடத்தில் மசூதி ஒன்றைக்கட்ட முயற்சித்தார். அதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவரை வெளியேற்றக் கோரி ஒரு மனு (No: 136 of 1971) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் வாடகையும் சரியாகக் கொடுக்காமல் இருந்தார். ஆயினும் அந்த இஸ்லாமியர் சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவை உபயோகித்து அந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக ஆக்கிக்கொண்டார். தவணை முறையில் வாடகைக் கொடுப்பதற்கு ஏற்பட்ட தாமதத்தையும் அங்கீகரிக்கக் கோரி மனு (M.P. 203 / 1980) ஒன்றைச் சமர்ப்பித்து அதையும் சாதித்துக்கொண்டார். அவ்வாறு அவர் செய்வதற்கு அப்போதைய பரம்பரை அறங்காவலரும், அறநிலையத்துறை அலுவலர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் பதிவாளர் அதற்கான விற்பனைப் பத்திரத்தைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.

அதன் பிறகு அந்த இஸ்லாமியர் அந்தச் சொத்தை நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கம் என்னும் அமைப்பிற்கு விற்பனை செய்தார். அவ்வமைப்பு அவ்விடத்தில் மசூதி ஒன்றை எழுப்பியது. பெரும்பான்மையாக ஹிந்துக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பகுதியில், மாநகராட்சியின் அனுமதியின்றி ஒரு மசூதியைக் கட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது. கோவில் நிர்வாகம், இஸ்லாமியருக்கு ஆதரவாக அளித்த மனுவை (A.S.No.87/1993) ஏற்றுக்கொண்ட சென்னை மாநகர சிவில் நீதிமன்றம், கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமலே விற்பனைப் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், விற்பனைப் பத்திரம் கொடுப்பது போன்ற சிறு வழக்குகள் நீதிமன்றப் பதிவாளரின் அதிகார எல்லைக்குள் இல்லை என்றும் கூறி, சட்டத்திற்குப் புறம்பான அந்த விற்பனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விற்பனைப் பத்திரம் செல்லாது என்பதால், இஸ்லாமிய நபர் நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கத்திற்கு அந்தச் சொத்தை விற்றதும் செல்லாது என்று கூறி, இரண்டு மாதங்களுக்குள் அந்தச் சொத்தைக் கோவில் நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவை உபயோகித்து விற்பனைப் பத்திரம் பெற்றாலும். அதே சட்டத்தின் 9(1)(b) பிரிவின்படி, சொத்தின் விலையில் ஒரு தவணையைக் கட்டாமல் விட்டாலும், மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்கிற குறிப்பையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, குறிப்பிட்ட இஸ்லாமியரும், நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கமும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி G.ஜெயச்சந்திரன் அவர்கள், சொத்தின் விற்பனையும், மசூதி கட்டப்பட்டதும் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், சொத்தைக் கோவில் நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், கீழ் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை உறுதி செய்து இவ்வருடம் (2017) ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று உத்தரவிட்டார்.

அதாவது கோவில் பரம்பரை அறங்காவலரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பாக மாற்று மதத்தவருக்கு மோசடிகள் மூலம் விற்பனை செய்த கோவில் சொத்தை, மீண்டும் பெறுவதற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட வேண்டியிருந்தது.

அரசின் அக்கறையின்மை

2003ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சி.பி.ராமசாமி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துக்களை மீட்டுள்ளதாகச் சட்டசபையில் தெரிவித்தார், ஆனால் சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் 2009, 2010, 2011 ஆண்டுகளில் கேட்டபோது அவர் சட்டசபையில் கூறியது பொய் என்பதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்போர், யாரிடம் வாடகை கொடுக்கின்றனர், என்ன விதமான ஒப்பந்தம் செய்திருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களும் அறநிலையத் துறையிடம் இல்லை. கோவிலுக்குச் சொந்தமான இடங்கள், போலி பட்டாக்கள் மூலம் விற்கப்பட்டுள்ளன என்பதை, 2010ல் அப்போதைய அறநிலையத் துறை ஆணையரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அறநிலையத்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு தகவல் ஆணையமும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது. அதாவது, 2011ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடத்தப்பட்ட விசாரணையில், 451/1 மற்றும் 452/1 ஆகிய சர்வே எண்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிடில் துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு தகவல் ஆணையம் உறுதிப்படக் கூறியுள்ளது

இவ்வாறான சூழ்நிலையில், ஹிந்து ஆலய வழிபடுவோர்கள் அனைவரும், 21 செப்டம்பர் 2015 அன்று ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவைச் சந்தித்தனர். கோவிலில் உள்ள ஆவணங்களைச் சரிபார்க்க வந்த அந்தக் குழுவினரைச் சந்தித்த பக்தர்கள் தங்கள் அதிருப்தியையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். கோவில் சொத்துக்களை விரைவில் மீட்டால் அவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை போன்ற வருமானத்தைக் கோவிலின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று தங்கள் கருத்தையும் தெரிவித்தனர்.

தற்போது அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலின் நிலங்களையும் சொத்துக்களையும் மீட்க வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. அறலையத்துறையின் அலட்சியமான நிர்வாகத்திற்கு அகஸ்தீஸ்வரர் கோவில் ஒன்றே உதாரணமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் இருக்கும் ஒரு கோவிலில் மட்டுமே இவ்வளவு பிரச்சினை என்றால், மாநிலம் முழுவதும் உள்ள 36,000க்கும் மேற்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றின் கணக்குகளையும் சரிபார்த்து விசாரணை செய்தால் எவ்வளவு பூதங்கள் புறப்படும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அடிக்குறிப்புகள்:

ஆதாரம்: தினமலர் 9 மே 2013 http://www.dinamalar.com/news_detail.asp?id=709082

தினமலர் 5 ஆகஸ்டு 2014 http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126

https://indiankanoon.org/doc/148856916/

Posted on Leave a comment

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் – கிருஷ்ணன் சுப்பிரமணியன்

அது 1984ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி. டெல்லியின் திரிலோக்புரி பகுதியில் ஒரு குறுகிய சந்தில் இருந்த தன் வீட்டில் ஜோகிந்தர் சிங் தனது குடும்பத்தினருடன் மறைந்து கொண்டிருந்தார். ஒரே ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் அந்தக் குடும்பத்தில் உள்ள ஆண்களின் தலைமுடியை மழித்துக் கொண்டிருந்தார்கள். சீக்கியர்கள் உயிர்தப்ப வேண்டுமென்றால் அவர்கள் தங்கள் தலையிலும் முகத்திலும் உள்ள முடிகளை நீக்கிவிடுவது நல்லது என்று அந்தப் பகுதி மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருந்தது. ஆனால் ஜோகிந்தர் சிங் இந்த அறிவுரையை ஏற்க மறுத்தார். அப்படி ஒரு செயலைச் செய்வது தங்களது மதக் கடமைகளுக்குத் தான் செய்யும் இழுக்கு என்று நினைத்தார். தூரத்திலிருந்து தாக்குதல் நடத்த வரும் கூட்டத்தின் சப்தம் கேட்கும்போதெல்லாம், அந்தக் குடும்பம் ஒடுங்கி ஒளிந்துகொண்டிருந்தது. ஒருமுறை கலவரக்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவைத் தட்டியபோது வங்காளம் தெரிந்த, தன் தலைமுடியை மழித்த அவரது குடும்பத்தவர் ஒருவர் அவர்களிடம் சமயோஜிதமாகப் பேசி அவர்களைத் தப்புவித்திருந்தார். ஆனால் இப்போது மற்றுமொரு ஆபத்து அவர்களை நெருங்கியது. மன அழுத்தத்தைத் தாங்க இயலாமல் ஜோகிந்தர் சிங்கின் மூத்த மருமகளுக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே பிரசவ வலி எடுத்திருந்தது. வேறு வழியில்லாமல், ஒரு சிறு துணியின் மறைவில் குடும்பத்திலிருந்த பெண் உறுப்பினர்களின் உதவியைக் கொண்டே தன்னுடைய குழந்தையைப் பிரசவித்தார் அவருடைய மருமகள். அடுத்த நாள் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு வந்தது. அவர்கள் பகுதியில் நுழைந்த ராணுவம் அவர்களை வெளியே வருமாறு அறிவுறுத்தியது. அப்போது கூட அந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லை. கதவிடுக்கிலிருந்து பார்த்து வந்தது ராணுவ வீரர்கள் என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே அவர்கள் கதவைத் திறந்தனர். ஒரு லாரிமூலம் அந்தக் குடும்பத்தினர் அகதிகள் முகாமிற்குப் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், ஜோகிந்தர் சிங்கைப் போன்ற மிகச் சில சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே உயிர்தப்பிக்கும் அதிர்ஷ்டம் படைத்தவர்களாக இருந்தனர். சுதந்தரத்தின்போது பிரிவினைக் கலவரத்திலிருந்து தப்பிப் பிழைத்து இந்தியா வந்த பாண்டா சிங்கின் கதையைப் பார்ப்போம். அவரது வீட்டைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் தனது அண்டை வீட்டுக்காரரின் வீட்டில் பதுங்கியிருந்தார். தனது இரு மகன்கள், மருமகள்கள் ஆகியோரின் நிலை என்ன என்று அறியாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்களைப் பற்றி பின்னால் அவர் அறிந்துகொண்டதை இப்படிக் கூறினார்…

“என் மூத்த மகனை அவர்கள் உயிரோடு எரித்தனர். அப்போது அவன் கேட்டதெல்லாம் தண்ணீர் மட்டும்தான். அவனை அந்த நிலையில் விட்டுவிட்டு அந்தக் கூட்டம் சென்றபோது அக்கம்பக்கத்திலிருந்த பெண்கள் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தனர். குற்றுயிராக இருந்த அவனை, மீண்டும் அங்கே வந்த கலவரக்காரர்கள் இரும்புத் தடிகளால் தாக்கிக் கொன்றுவிட்டனர். எங்கோ ஒளிந்திருந்த என் இரண்டாவது மகனை கலவரக்காரர்கள் அந்த இடத்திலிருந்து வெளியே இழுத்து அடுத்த நாள் அதிகாலை அவனையும் தாக்கிக்கொன்றனர்.”

இப்படி டெல்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் வசித்து வந்த சீக்கியர்களுக்கு இன்று நினைத்தாலும் பெரும் அச்சத்தைத் தந்த ஒரு காலகட்டம் அது. இப்படிப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்டதின் காரணம் என்ன? ராஜீவ் கூறியது போல் ‘ஒரு பெரிய மரம் சாயும்போது, பூமி அதிர்வது இயற்கை என்பது போன்ற சாதாரண நிகழ்வா இது?

இந்தக் கலவரத்திற்கான விதை 1984ம் ஆண்டு நடந்த பொற்கோவில் தாக்குதலின்போதே (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்) போடப்பட்டு விட்டது. அதற்கான மூலக் காரணத்தைத் தேடிப்போனால், இந்திராவினால் வளர்க்கப்பட்ட பிந்தரன்வாலேதான் நம்முன் நிற்பார். கத்தி எடுத்தவர் அதனாலேயே பலி ஆவார் என்ற பழமொழி இந்த விஷயத்தில் மெய்ப்பிக்கப்பட்டதாகவே நாம் கொள்ளவேண்டும். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்த்தோமானால், சுதந்தரம் அடைந்தது முதல், சீக்கியர்களுக்குத் தாங்கள் இந்தியாவில் சரியாக நடத்தப்படவில்லை என்ற உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. பிரிவினையின்போது தங்கள் சொத்துக்களை அப்படியே பாகிஸ்தானில் போட்டுவிட்டு ஏதிலிகளாக இந்தியாவிற்குக் குடிபுகுந்ததும், அப்போது பெருமளவில் தங்கள் இனம் கொல்லப்பட்டதும் அவர்கள் மனத்தில் ஆறாத வடுவாகப் பதிந்திருந்தது. அவர்களுடைய இந்த மனத்தாங்கலைப் போக்கி, சீக்கிய சமூகத்தின் நம்பிக்கையைப் பெற அப்போதைய ஆட்சியாளர்கள் முயலவில்லை என்பது பெரும் துயரம். கடும் உழைப்பாளிகளான சீக்கியர்களின் திறனைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தொழில்வளர்ச்சி, விவசாய முன்னேற்றத்திற்கான உதவிகள் ஆகியவற்றை அளிக்கத் தவறியது அப்போதைய அரசு.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், பஞ்சாபிற்கென்று ஒரு தலைநகரை உருவாக்கும் முயற்சியிலும் பல குழப்படிகள். சீக்கியர்கள் விரும்பியது பஞ்சாபி மொழி பேசப்படும் தனி மாநிலம் ஒன்றை. இனரீதியான பிரிவாக அதை அவர்கள் அப்போது கருதவில்லை. ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு இப்படி ஒரு மாநிலத்தை உருவாக்குவது இனரீதியாகப் பிரிக்கும் முயற்சி என்று நினைத்தது. இந்தக் சிக்கல் நீடிக்கவே, குர்முகி எழுத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாபி ஆட்சி மொழியாக இருக்கும் தனி மாநிலம் ஒன்றைக் கோரி, அகாலிதள இயக்கமும் பஞ்சாபி சுபா இயக்கமும் போராட்டத்தில் இறங்கின. ஆனால், 1966ம் ஆண்டு ஒட்டுமொத்த பஞ்சாப் பகுதியை ஹிந்தி மொழி பேசும் ஹிமாசலப் பிரதேசம், ஹர்யான்வி மொழி பேசப்படும் ஹரியானா, பஞ்சாபி மொழி பேசப்படும் பஞ்சாப் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து சீக்கியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது அரசு. நீர்வளம் மிக்க பல பகுதிகள் ஹிமாசலுக்கும் ஹரியானாவுக்கு சென்றதை சீக்கியர்கள் அறிந்துகொண்டபோது இந்த அதிர்ச்சி ஆவேசமாக மாறியது. சுதந்தரத்திற்கு முன்பு, பாகிஸ்தானில் உள்ள பகுதியையும் சேர்த்து ஒரு பெரும் மாகாணமாக இருந்த பஞ்சாப் இப்படிச் சுருங்கிப் போனதை சீக்கியர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவேயில்லை.

ரஞ்சித் சிங் போன்ற சீக்கிய வம்சத்தின் முன்னோடிகள் ஆட்சி செய்ததும், தங்களுடைய பெருமை மிக்க தலைநகருமான லாகூர் பாகிஸ்தானிடம் சென்றதனால் அதற்கு இணையாக சண்டிகரை அழகாக வடிவமைத்திருந்தனர் பஞ்சாபிகள். ஆனால் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும், சண்டிகரின் மக்கள்தொகையைக் கணக்கில்கொண்டு அது ஹரியானாவைச் சேரவேண்டும் என்று ஷா கமிஷன் அறிவித்திருந்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற இந்த அறிவிப்பால் மீண்டும் சீக்கியர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஒருவழியாக இந்திரா சண்டிகர் பஞ்சாபிற்கே என்றும் அதற்கு ஈடாக அபோஹர், பஸில்கா என்ற பகுதிகளை ஹரியானவுக்குத் தரும்படி உத்தரவிட்டார். பருத்தி வளம் அதிகமான இந்தப் பகுதிகளை ஹரியானாவிற்கு அளிப்பதை அகாலிகள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இந்த உத்தரவு அப்படியே நின்று போனது. சண்டிகரும் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இரு மாநிலங்களுக்கும் பொதுத்தலைநகராக இன்று வரை உள்ளது. இந்தக் காரணங்களால் தொடர்ந்து தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாகச் சீக்கியர்கள் கருதினர்.

அகாலிகளில் மிதவாதிகள் 1973ம் ஆண்டு அனந்தபூர் என்ற சீக்கியர்களின் புனிதத் தலமொன்றில் கூடி தன்னாட்சித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். அனந்தபூர் சாகிப் தீர்மானம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் நாட்டைத் துண்டாடும் ஒரு முயற்சி என்று கூறி காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து அகாலி தளத்தின் தலைவரான லோங்கோவால், இதில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து அரசால் ஏற்கக்கூடிய வடிவம் ஒன்றைத் தர முனைந்தார். இந்தத் திருத்தப்பட்ட வடிவத்தில் மாநில சுயாட்சி அதிகமாக வற்புறுத்தப்பட்டிருந்தது. தவிர, சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆராய்ந்து அவற்றைச் சரி செய்ய குழு ஒன்றை அமைக்குமாறும், சண்டிகரைப் பஞ்சாபிற்கே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் காங்கிரஸோடு அகாலிகள் கூட்டணி ஒன்றை அமைத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும். இருப்பினும் இந்தத் தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே 1980 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, போராட்டம் ஒன்றை அகாலிகள் அறிவித்தனர். உலக நாடுகளின் பார்வை இந்தியாவில் இருக்கும் அத்தருணத்தில் சிக்கல் ஏதும் நிகழ அப்போதைய பிரதமர் இந்திரா விரும்பவில்லை. எனவே பஞ்சாப் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன, அதைத் தாண்டும் அனைவரும் கடும் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே அனுமதிக்கப்பட்டனர். இது சீக்கியர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியது. இந்த ஆத்திரத்திற்கான வடிகாலை அளிக்க முன்வந்தவர் ஜர்னயில் சிங் பிந்தரன்வாலா என்ற இளைஞர்.

அனந்தபூர் சாகிப் தீர்மானத்தின் மூல வடிவை அடிப்படையாகக் கொண்டு தனது போராட்டங்களை அறிவித்த பிந்தரன்வாலா, சீக்கியர்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கையை நாளடைவில் முன்வைத்தார். தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த அகாலிகளைக் கட்டுக்குள் வைக்க விரும்பிய இந்திராவும், ஜெயில் சிங் மூலமாக பிந்தரன்வாலேயின் கரத்தைப் பலப்படுத்த முன்வந்தார். இதனால் தன்னிச்சையாகச் செயல்படத்துவங்கிய பிந்தரன்வாலே தனக்கு எதிராகச் செயல்பட்ட எவரையும் கொல்லத்துவங்கினார். அகாலி தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் அவரால் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

பிறப்பிலேயே அடிப்படைவாதியான பிந்தரன்வாலே மாற்று நம்பிக்கை உடைய சீக்கியர்களையும் விட்டு வைக்கவில்லை. ஜலந்தரில் இருந்து வந்து கொண்டிருந்த சீக்கியர்களின் மாற்றுப் பிரிவினரான நிரங்காரிகளின் ஆதரவுப் பத்திரிகையான ஹிந்த் சமாசாரின் ஆசிரியர் 1981ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் பிந்தரன்வாலே இருந்ததாகக் கூறி அரசு அவரைக் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாபில் பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்குவதற்குப் பதிலாக அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங், பிந்தரன் வாலேவுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பிந்தன்வாலே விடுதலை செய்யப்பட்டார்.

இதன் காரணமாக பெரும் ஊக்கமடைந்த பிந்தரன்வாலே மேலும் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுடன் பொற்கோவில் வளாகத்தில் குடிபுகுந்தார். சீக்கியர்களின் புனிதமான அந்த இடத்திற்குள் நுழைந்து தன்னைக் கைது செய்ய அரசு இயந்திரத்தால் இயலாது என்று எண்ணினார் அவர். அங்கு தங்கியிருந்து தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார். அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க வந்த போலீஸ் அதிகாரி ஒருவரையும் அவருடைய இயக்கத்தினர் கொலை செய்தனர். பொற்கோவில் வளாகத்திலேயே மிகப் புனிதமான இடமான அகால் தக்தில் ஆயுதங்களுடன் குடிபுகுந்தது மட்டுமின்றி, பொற்கோவில் வளாகத்தில் காலிஸ்தான் கொடியையும் ஏற்றினார்.

1984 மே மாதம் தீவிரவாதம் பஞ்சாப் எங்கும் கொடிகட்டிப் பறந்தது. உடனடியாக நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருந்த மத்திய அரசு பொற்கோவிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்றும் பொறுப்பை லெப்டினண்ட் ஜெனரல் குல்தீப் சிங் ப்ராரிடம் ஒப்படைத்தது. ஆனால் கோவிலை விட்டு வெளியேற மறுத்து பிந்தரன்வாலே முரண்டு பிடித்தார். அகாலி தளத் தலைவர்களான தோரா போன்றோர் கோரிக்கை விடுத்தும் அதற்குச் செவிகொடுக்காமல் பொற்கோவில் வளாகத்தை ஆயுதக் கிடங்காக மாற்ற முயன்றார் பிந்தரன்வாலே. முடிவில் ஜுன் 5ம் தேதி இரவு ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. ராணுவம் எவ்வளவோ பொறுமையுடன் செயல் பட்டும் பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க இயலவில்லை. பிந்தரன்வாலேயும் அவர் சார்ந்த இயக்கத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். அகாலித் தலைவர்களான தோரா, பாதல், லோங்கோவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு மீட்கப்பட்டனர். இரு தரப்பிலும் கடுமையான சண்டை நடந்ததால் ஒரு கட்டத்தில் டாங்கிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ராணுவம் தள்ளப்பட்டது. இந்த டாங்குகளின் தாக்குதல்களினால் அகால் தக்த் சேதமடைந்தது. சீக்கியர்களின் குருமார்கள் அமர்ந்து ஆட்சிசெய்த அகால்தக்திற்குச் சேதம் நேர்ந்ததை சீக்கியர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ராணுவத்தின் பேரில் வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தீயைப் போலப் பரவின. அவற்றில் பெரும்பாலானவை இட்டுக்கட்டப் பட்டவையாக இருந்தபோதிலும் சீக்கியர்கள் அவற்றை நம்பினர். தங்களது புனித இடத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே இந்த ராணுவ நடவடிக்கையை அவர்கள் கருதினர். பொற்கோவிலின் புனிதத்தை அங்கு ஆயுதங்களைக் கொண்டுசென்று சீர்குலைத்தது பிந்தரன்வாலேதான் என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதியவே இல்லை. நீறுபூத்த நெருப்பாகப் பழிவாங்கும் உணர்ச்சி அவர்கள் மனத்தில் கனன்றுகொண்டே இருந்தது.

அக்டோபர் 31, 1984, டெல்லி நகரம் வழக்கமான குளிருடன் விடிந்தது. காலை 9 மணி வாக்கில் பிரதமர் இந்திராவை பீந்த் சிங் தன்னுடைய கைத்துப்பாக்கியால் அவரது அடிவயிற்றில் மூன்று குண்டுகளைச் சுட்டார். தலைகுப்புற விழுந்த அவரின் மேல் சத்வந்த் சிங் தன்னுடைய இயந்திரத் துப்பாக்கியினால் முப்பது முறை சுட்டார். அதன்பின் இருவரும் தங்களது துப்பாக்கிகளைக் கீழே போட்டனர். ‘நான் செய்யவேண்டியதைச் செய்துவிட்டேன். நீங்கள் செய்யவேண்டியதைச் செய்யுங்கள்’ என்று பீந்த் சிங் கூறினார்.

அதிர்ச்சியடைந்திருந்த பாதுகாவலர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களைக் கொண்டுசெல்லும்போது பீந்த் சிங் காவலர் ஒருவருடைய துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்தார். அப்போது நடந்த கைகலப்பில் பீந்த் சிங் கொல்லப்பட்டார். சத்வந்த் சிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், இந்தக் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, சத்வந்த் சிங்கிற்கும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக கேகர் சிங் என்பவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு 1989ல் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

ஆனால், இவையெல்லாம் நடப்பதற்கு முன், இந்திரா சுட்டுக்கொல்லப்பட்டவுடன், அவரைக் கொன்றது சீக்கியர்கள் என்ற செய்தி நாடெங்கும் பரவியவுடன், மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். இந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரைப் பார்க்க வந்த ஜெயில் சிங்கின் கார் மீது கல்லெறி வீச்சு நடந்தது. அன்று இரவு நாடெங்கும் துக்கத்தில் மூழ்கியிருந்தபோது ஒரு பெரும் கலவரத்திற்கான திட்டம் தீட்டப்பட்டது. ‘கூன் கா பத்லா கூன்’ (ரத்தத்திற்கு ரத்தம்) என்ற கோஷங்கள் எழுந்தன. அதற்கான கூட்டங்களில் காங்கிரஸ் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. குறிப்பாக சஜ்ஜன் குமார் பல இடங்களில் சென்று தன் ஆதரவாளர்களுடன் பேசினார் என்றும், இந்திரா தன் அன்னையைப் போன்றவர், அவரைக் கொன்றவர்களைப் பழி தீர்க்கவேண்டும் என்றும் அவர் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சாராயம் தாராளமாகப் புழங்கியது. கலவரத்தில் ஈடுபட முனைந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் தரப்பட்டது. இரும்புத் தடிகள், மூங்கில் கம்புகள், கத்திகள் ஏன் துப்பாக்கிகள் போன்ற ஆயதங்கள் கலவரக்காரர்களுக்கு அளிக்கப்பட்டன. அரசு அவர்கள் கையில் இருந்ததால் வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டுகளில் உள்ளோர் பட்டியல் என்று தெருவாரியாக சீக்கியர்களின் பட்டியல் அவர்களிடம் தரப்பட்டது. இவற்றைக் கொண்டு சில இடங்களில் சீக்கியர்கள் வீடுகளில் அடையாளக் குறிகளும் இடப்பட்டன. தெருக்களில் நடமாடும் சீக்கியர்களைத் தாக்குவது போதாதென்று வீடுவீடாகச் சென்று அவர்களைத் தாக்கும் எண்ணம் இதன்மூலம் தெளிவாயிற்று. உதாரணமாக, பொகாரோ, கோஆப்பரேடிவ் காலனியில் வசித்து வந்த ஏழு குடும்பங்களில் சீக்கிய சமூகத்தைச் சார்ந்த ஒரே ஒருவராக ஓங்கார் சிங் பிந்த்ரா என்பவர் இருந்தார். அந்த இடத்தைக் கூட்டம் தாக்கியபோது, வீட்டின் உரிமையாளர் இங்கு சீக்கியர்கள் யாரும் இல்லை என்று கூறினாலும், ஓங்கார் வசித்து வந்த இடத்தை தாக்குதல் நடத்த வந்தவர்கள் துல்லியமாக அடையாளம் காட்டினர்.

நவம்பர் 1ம் தேதி சீக்கியர்கள் மீதான இந்த வெறித்தாக்குதல் துவங்கியது. கிழக்கு டெல்லியில் பலியான சீக்கிய இளைஞர் ஒருவர்தான் கலவரக்காரர்களின் முதல் பலி. படிப்படியாகக் கலவரம் டெல்லியில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சுல்தான்புரி, திரிலோக்புரி, மோங்கோல்புரி, பாலம் காலனி ஆகியவற்றிற்குப் பரவியது. சீக்கியர்களின் குருத்வாராக்கள் தாக்கப்பட்டன. கலவரத்திற்குப் பின் கிட்டத்தட்ட 131 குருத்வாராக்கள் பழுது பார்க்கப்பட்டன என்று ஒரு செய்தி அறிவிக்கிறது.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், உயர்ந்த நிலையில் இருந்தாலும், தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், எந்த ஒரு பெரும் பதவியை வகித்துக்கொண்டிருந்தாலும், பாரபட்சமில்லாமல் தாக்கப்பட்டனர். 1971ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவரும், அதற்காக விருது பெற்றவருமான காப்டன் மன்மோகன் சிங்கின் வீட்டை நவம்பர் 1ம் தேதி காலை ஒரு கூட்டம் முற்றுகையிட்டது. தான் ஒரு விமானப் படைத் தளபதி என்று அவர்களிடம் பலமுறை கூறியும் அவர்கள் வீட்டை விட்டு நகர மறுத்தனர். மதியம் ஒரு பேருந்து முழுவதும் கலவரக்காரர்கள் கூட்டம் ஏற்கெனவே அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டது. கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் கொண்ட குழுவை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. வீட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் இரும்புத் தடிகளால் அவரையும் அவர் குடும்பத்தாரையும் தாக்கத் துவங்கினர். வேறு வழியில்லாமல், அவர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை விரட்டினார் மன்மோகன் சிங். விடாமல், பக்கத்து வீட்டிற்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்து பெட்ரோல் குண்டுகள் மூலம் அவர் வீட்டைத் தாக்க முயன்றனர் கலவரக்காரர்கள். இரவு 8:30 மணியளவில் அங்கே வந்த போலீசார் அவரையும்
குடும்பத்தினரையும் தங்களிடம் சரணடையும் படியும் அதன்மூலமே தாங்கள் அவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று கூறினர். அதை ஏற்றுச் சரணடைந்த அவர் மீது மூன்று கொலை வழக்குகளைத் தொடுத்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதுபோன்று சீக்கியர்களைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டது மட்டுமின்றி அவர்கள் மீது பல்வேறு தவறான வதந்திகளும் பரப்பப்பட்டன. டெல்லியின் குடிநீர் ஆதாரங்களில் சீக்கியர்கள் விஷத்தைக் கலந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதற்குக் காவல்துறையினரே உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது. டெல்லியின் ஷாத்ரா பகுதியில், பஞ்சாபில் உள்ள ஹிந்துக்கள் பலரைச் சீக்கியர்கள் கொன்றுவிட்டதாகவும் அவர்களின் உடல்களைப் புகைவண்டிகளில் அனுப்பிக்கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறினர். இது போன்ற வதந்திகள் மேலும் பலரை சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியது. படித்தவர்கள் கூட சீக்கியர்களின் மேல் ஆத்திரம் கொண்டு தாக்குதலில் இறங்கியதாகக் கலவரத்தை நேரில் பார்த்த பலர் கூறினர். அந்தக் கூட்டத்தின் தாக்குதலுக்கு ஆளான சீக்கியர்கள் யாரும் தப்ப இயலவில்லை. திரிலோக்புரியில் ஒரு குருத்வாராவைப் பாதுகாத்துக்கொண்டிருந்த சீக்கியர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறித்தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியது. அங்கிருந்து தப்பி ஓடி இரு சீக்கியர்கள் வயலில் மறைந்துகொண்டனர். அந்த வயலைக் கொளுத்திய அந்தக் கூட்டம், அவ்விரண்டு சீக்கியர்களையும் உயிரோடு எரித்தது.

இப்படி ஆண்களைக் கொன்று குவித்தது மட்டுமில்லாமல் பெண்களையும் கலவரக்காரர்கள் மானபங்கப்படுத்தினர். இதைப் பற்றி தனது ‘மானுஷி’ பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர் மது கிஷ்வர், திரிலோக்புரியில் குர்தீப் கௌர் என்பவருக்கு நிகழ்ந்ததைப் பற்றிக் கூறுகையில், “ஒரு கும்பல் குர்தீப்பின் கணவரையும் அவரது மூன்று மகன்களையும் கொன்றது. குர்தீப்பை அவரது இளைய மகன் முன்னால் பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அதன் பின் அவனைக் கொன்றனர் அவர்கள்.” என்கிறார். ஒன்பது வயதுச் சிறுமி முதல் எண்பது வயதுக் கிழவி வரை சீக்கியப் பெண்கள் கூட்டம்கூட்டமாகப் பாலியல் வன்முறைக்கு இலக்காகினர். நவம்பர் 1ம் தேதி ஒரு பூங்காவில் கிட்டத்தட்ட 200 பெண்கள் சரண் புகுந்திருந்தனர். அங்கு வந்த ஒரு கும்பல், அவர்களை இழுத்துச் என்று அடித்து உதைத்து இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இத்தனை கலவரங்கள் நடந்துகொண்டிருந்த போதிலும், அப்போதிருந்த ஒரே தொலைக்காட்சியான தூர்தர்ஷன் இந்திராவுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதையும் அவரது இறுதி ஊர்வலத்தையும் மட்டுமே ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. கலவரத்தைப் படம் பிடிக்க முயன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிருபர்கள் தாக்கப்பட்டனர். ஏபிசி டிவியின் நிருபர்கள் தாக்கப்பட்டு அவர்களது காமிராக்கள் பறிக்கப்பட்டு உடைக்கப்பட்டன. இத்தாக்குதலைக் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தாக்குதல்களைப் பொருட்படுத்தாது பல நிருபர்கள் களத்தில் இறங்கி செய்தி சேகரித்தனர். கலவரத்தை விசாரிக்க மிஸ்ரா கமிஷன் நியமிக்கப்பட்டபோது அதன் முன் ஆஜராகி சாட்சியும் அளித்தனர்.

கலவரங்கள் கட்டுக்கடங்காது நடந்துகொண்டிருந்தபோது அதைத் தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஒரு வரலாற்றுத் துயரமாகும். உதவி கோரி பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த அழைப்புகளுக்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. தாக்குதல்கள் பலவற்றை நேரில் பார்த்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, கேப்டன் மன்மோகன் சிங்கிற்கு நடந்தது போல், தற்காப்புத் தாக்குதலில் ஈடுபட்ட சீக்கியர்கள் பலர்மேல் குற்றம்சாட்டி வழக்குத் தொடுத்தனர் காவல்துறையினர். கலவரக்காரர்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் தாக்குதல்களில் தலையிடக்கூடாதென்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகப் பல போலீசார் பின்னால் தெரிவித்தனர். நிலைமை எல்லைமீறிப் போயும் கூடப் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவும் அவர்கள் மறுத்தனர். தங்களிடம் சரணடைந்த சீக்கியர்கள் பலரை சித்தரவதை செய்த போலீசாரின் கதைகளும் பின்பு தெரியவந்தன. இந்தக் கலவரங்களைப் பற்றிய ஆவணங்களையும் சாட்சிகளையும் திட்டமிட்டு அழித்தது காவல்துறை. நவம்பர் 2ம் தேதி ராணுவம் வரவழைக்கப்பட்ட போதிலும் அவர்களோடு ஒத்துழைக்க மறுத்தனர் காவல்துறையினர். இது உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிலைமையின் தீவிரம் புரியவைக்கப்பட்ட பிறகே, நவம்பர் 3ல் ராணுவம் முழுவதுமாகக் களமிறங்கி நிலைமையைச் சிறிது சிறிதாகக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் சுமார் 2,800 பேர் கொல்லப்பட்டனர் என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதில் 2,100 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி 8,000 சீக்கியர்கள் இந்தத் தாக்குதலின்போது கொல்லப்பட்டிருந்தனர். சீக்கியர்கள் மீதான இந்த வன்முறை வெளிநாட்டுப் பத்திரிகைகளாலும் மனித உரிமைக் குழுக்களாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட பின்பே அரசு இயந்திரம் விழித்துக்கொண்டது. தாக்குதலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதில் நாற்பத்து ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. ஆறு போலீஸ் அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களை விசாரிப்பதற்காகப் பல கமிஷன்களையும் கமிட்டிகளையும் அரசு நியமித்தது. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது 1985ல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைந்த மிஸ்ரா கமிஷன். திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறப்பட்ட இந்தக் கலவரத்தைப் பற்றி விசாரிக்குமாறும், இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க செய்யவேண்டியவற்றைப் பரிந்துரைக்குமாறும் அந்தக் கமிஷன் பணிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானோர், பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், டெல்லியின் நிர்வாக அதிகாரிகள் போன்ற பல்வேறு தரப்பினரும் கமிஷனால் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணைகள் ரகசியமாகவே நடைபெற்றன. இதனால் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரங்கள் வெளியே தெரியவரவில்லை. ஆனால் கமிஷனின் முன் சாட்சியம் அளித்த டெல்லி நிர்வாகத்தினர், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்லவென்றும், பிரதமரின் படுகொலைக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டுக் கிளம்பிய கும்பலின் எதிர்வினை மட்டுமே என்று கூறிய தகவல்கள் வெளியாயின.

ஆகஸ்ட் 1986ம் ஆண்டு மிஸ்ரா கமிஷன் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால், சீக்கியர்களுக்கு இந்த அறிக்கை பெரிதும் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கீழ் மட்ட அதிகாரிகள் மீதே குற்றம் சாட்டியிருந்தது இந்தக் கமிஷன். காவல்துறை தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த செய்திகளையும் மறுத்தது அது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை, மக்கள் உணர்ச்சிவசப்பட்டுச் செய்ததுதான் என்று தன் அறிக்கையை நிறைவு செய்திருந்தது மிஸ்ரா கமிஷன்.

இப்படித் தொடர்ந்து நியமிக்கப்பட்ட கமிட்டிகள் அதிருப்தியைத் தோற்றுவித்ததால், 2000ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ஜி டி நானாவதி தலைமையில் ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. இந்த கமிஷனும் பல்வேறு தரப்பினரை விசாரணை செய்து தனது அறிக்கையை 2004ம் ஆண்டு சமர்ப்பித்தது. ‘காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கம் அளித்ததாக’ கடுமையாகச் சாடியிருந்த நானாவதி கமிஷனின் அறிக்கை, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜகதீஷ் டைட்லரை நேரடியாகக் குற்றம் சாட்டியிருந்தது. சீக்கியர்களுக்கு எதிரான இந்தக் கலவரத்தில் அவருடைய பங்களிப்பு இருந்தது என்று தெரிவித்திருந்தது அது. இதனைத் தொடர்ந்து டைட்லர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 2009ம் ஆண்டு சிபிஐயே அவர் குற்றமற்றவர் என்று சொல்லி அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. இதனால் ஆத்திரமடைந்த சீக்கியர் ஒருவர் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ ஒன்றை வீசிய நிகழ்வும் நடந்தது. அவரை எதிர்த்து சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட முயல்வதாக அறிந்த டைட்லர் தான் மக்களவைக்குப் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்து விலகினார்.

இன்றுவரை இந்தக் கலவரத்திற்கான உறுதியான தண்டனை, தாக்குதலைத் தூண்டிய குறிப்பிடத்தக்க பிரமுகர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதே நிதர்சனம். தண்டிக்கப்பட்டதெல்லாம், கீழ்மட்ட அதிகாரிகள் சிலரும் கலவரத்தில் ஈடுபட்ட சாதாரணப் பொதுமக்களும்தான். இச்செயல்களைத் தங்கள் மீதான தொடர் தாக்குதல்களின் ஒன்றாகக் கருதிய சீக்கியர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். பஞ்சாப் முழுவதும் தீவிரவாதம் தழைத்தோங்கி அது யுத்த பூமியாக மாறியது. கலவரத்திற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட லலித் மக்கான் போன்றோர் சீக்கியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கேபிஎஸ் கில் போன்ற ஒரு திறமையான அதிகாரி பொறுப்பேற்று பஞ்சாப் தீவிரவாதத்தை அழிக்கும் வரை இந்நிலை தொடர்ந்தது. இருப்பினும் 1984ல் நடைபெற்ற கலவரத்தை ஒரு இனப்படுகொலையாகவே சீக்கியர்கள் இன்று வரை கருதிவருகின்றனர். அதற்கு மூலகாரணமாகச் செயல்பட்டவர்கள் தகுந்த தண்டனை பெறவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

Posted on Leave a comment

வலம் – டிசம்பர் 2017 இதழ் அறிவிப்பு

வலம் – டிசம்பர் இதழ் 2017 அறிவிப்பு

இதழின் உள்ளடக்கம்:

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்

அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்களும் அறநிலையத்துறை நிர்வாகமும் | பி.ஆர்.ஹரன்

இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி | ஆமருவி தேவநாதன்

பிட்காய்ன்: பணத்தின் வருங்காலம் | ப.சந்திரமௌலி

சில பயணங்கள் சில பதிவுகள் – தொடர் | சுப்பு

இரத்தத்தால் ஒரு முற்றுப்புள்ளி | கோ.எ.பச்சையப்பன்

பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாண்டுக

ள் | B.K. ராமச்சந்திரன், ஹரன் பிரசன்னா

டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா? | திருமலை ராஜன்

அச்சுப் புத்தகத்துக்கான சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

இபுத்தகத்துக்கான ஆண்டுச் சந்தா செலுத்த: http://nammabooks.com/valam-one-year-subscription?filter_name=valam&page=2

இந்த இதழை ஆன்லைனில் வாசிக்க: கிண்டில் | நம்ம புக்ஸ்  | மேக்ஸ்டர்