இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்
உலகில் எல்லாரையும்விடச் சிறுபான்மையானவன் தனிமனிதன்தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களைச் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக்கொள்ள முடியாது.
– அயன் ராண்ட்
ஆசிரியர்களைப் பணி நிமித்தம் செய்வது தொடர்பாக தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகள் ஓர் அரசாணையைப் பிறப்பித்திருந்தன.(1) அதன்படி ‘அரசு, அரசு உதவிபெறும் தனியார்ப் பள்ளிகள் மற்றும் உதவிபெறாப் பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியப் பணியில் அமர்த்த, ஆசிரியர்கள் TET (Teacher Eligibility Test) தேர்வில் வெற்றி பெற்று, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதை எதிர்த்து 300 க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 24, 2016ல், ‘சிறுபான்மைப் பள்ளிகளுக்கு இந்த ஆணை செல்லாது என்றும், சிறுபான்மைப் பள்ளிகள் அரசு உதவிபெறும் மற்றும் அரசு நிதியுதவி பெறாத பள்ளிகள், தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த அரசாணை சிறுபான்மையினரின் பண்பாடு மற்றும் கல்வி உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது என்பதை சட்டப் பிரிவு 30ஐ மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பை(2) வழங்கியுள்ளது.
இந்தியா விடுதலையடைந்தபோது, சிறுபான்மையினரின் நலன்கள், வழிபாட்டு உரிமைகள், கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள், மொழி உரிமைகள் எவ்விதத்திலும் பெரும்பான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், வேறுபாடுகள் காட்டப்பட்டுவிடக்கூடாது என்றும், சிறுபான்மையினர் தமது உரிமையில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கிலும்தான் இந்தச் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று இது சம்பந்தமான எந்த வழக்குகள் வந்தாலும், நீதிமன்றங்கள், அரசாணைகளின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், இவை சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்தாது என்று தொடர்ச்சியாகத் தீர்ப்புகள் வழங்கி வருவதைக் காண முடிகிறது.
நடைமுறையில் இந்துக்களின் பெரும்பான்மை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அரசு உதவிபெறும் தனியார் இந்துப் பள்ளிகள், உதவி பெறா இந்துப் பள்ளிகளுக்கு இந்த அரசாணைகள் செல்லும் என்பதும், சிறுபான்மையினருக்குப் பொருந்தாது என்பதும் எவ்வகையில் சரி என்பது விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன, சிக்கல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு சட்டப்பிரிவு 30ல் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
சட்டப்பிரிவு 30 சிறுபான்மையினரின் கல்வி உரிமைகள் பற்றிப் பேசுகிறது.
a) மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினர். இவர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் மற்றும் கல்வி நிலையங்களை நிர்வகித்தலில் தமது விருப்பம்போல செயல்படலாம்.
b) இந்திய அரசு, மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ கல்வி நிலையங்களை உருவாக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
Article 30 in The Constitution Of India 1949
30. Right of minorities to establish and administer educational institutions
(1) All minorities, whether based on religion or language, shall have the right to establish and administer educational institutions of their choice
(2) The state shall not, in granting aid to educational institutions, discriminate against any educational institution on the ground that it is under the management of a minority, whether based on religion or language.
மத அடிப்படையில் நோக்கினால், இந்தியாவில் இந்துக்கள் தவிர்த்த அனைத்து மதத்தினரும் சிறுபான்மையினர். முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜெயின்கள் ஆகியோர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய பாராளுமன்ற சட்டப் பிரிவு 2 C குறிப்பிடுகிறது. மொழியைப் பொருத்தமட்டில் ஒரு மாநில அரசு ஆட்சி மொழியாக உள்ள மொழியைத் தவிர்த்து, மற்ற மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினர். உதாரணமாக தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள். வேலைவாய்ப்புக் கருதி மகாராஷ்டிராவில் குடியேறும் குஜராத்திகள், குஜராத்தில் குடிபெயரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்.
மௌலானா அபுல்கலாம் ஆசாத் இந்திய முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது “இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம்கள்” என்கிறார்.(4) அவர் முஸ்லிம்களைச் சிறுபான்மைச் சமூகத்தவராகக் கருதவில்லை. இந்தியாவில் பார்சிகள் மக்கள்தொகை வெறும் 69,000 மட்டுமே. ஜெயின்கள் 44 லட்சம் மட்டுமே. இவர்களை சிறுபான்மையினர் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. 17.22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களும்(5) இந்தியாவில் சிறுபான்மையினர் என்பது எவ்வகையில் சரி?
எந்த எண்ணிக்கையில், எந்த சதவீதத்தில் மக்கள்தொகை இருந்தால் அவர்கள் சிறுபான்மையினர் கிடையாது என்று சட்டத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. முஸ்லிம்கள் மக்கள்தொகை இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 9.9% ஆக இருந்தது. 2011ன் கணக்குப்படி 14.3% ஆக உயர்ந்துள்ளது. இன்னும் முப்பது ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கப்போகிறது.
எனக்குத் தெரிந்த ஓர் அரசு உதவிபெறும் கிறித்துவ மேலாண்மைப்பள்ளியில், TET தேர்வில் வெற்றி பெறாதவர் 10 லட்சம் கொடுத்து சேரத் தயாராக உள்ளார் என வைத்துக்கொள்வோம். அதே பள்ளியில் TET தேர்ச்சி பெற்ற ஒருவர் 1 லட்சம் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார். இப்போது இவர்களில் யாரை ஒரு கிறித்துவப் பள்ளி பணியில் அமர்த்தும்? 10 லட்சம் கொடுப்பவரை பணியில் அமர்த்தும் செயலை கிறித்துவ, மதராஸாக்கள் செய்யலாம். ஆனால் அதை இந்துப் பள்ளிகள் செய்யக்கூடாது. இவ்வாறான தீர்ப்பைத்தான் நீதிமன்றங்கள் கொடுக்கின்றன. இங்கு எழும் கேள்வி, இந்துக்களும் எவரையும் பணியில் அமர்த்த ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதல்ல. எவரும், தகுதியில்லாத ஒருவரைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதே.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய 25% ஏழை மாணவர்களை அனைத்துப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாணை பிறப்பித்த வழக்கிலும், இது அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளுக்குப் பொருந்தாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் 2012 ல் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் TET தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆணை பிறப்பித்தன. ஏழை மாணவர்களுக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துப் பள்ளிகளும் 25% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றது.(3) ஆனால் இவையனைத்தையும் அரசு நிதிஉதவி பெறாத இந்துப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதான தீர்ப்பும், முஸ்லிம், கிறித்துவ மற்றும் இதர சிறுபான்மைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டியதில்லை என்பதும் எவ்வகையில் சரி?
சட்டப்பிரிவு 30ன் நோக்கம் சிறுபான்மைச் சமூகத்தினர், பெரும்பான்மைச் சமூகத்தினரைப் போல சரிசமமாக நடத்தப்படவேண்டும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே! ஆனால் இன்று உரிமை என்ற பெயரில் சிறப்புச் சலுகைகள் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்லாது, இந்துப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற தீர்ப்பினை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இச்சட்டத்தில் நிறைய மாற்றங்களைக்கொண்டு வந்து, அனைவருக்கும் சமமான நிலையைக் கொண்டுவர விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும்.
இந்தச் சட்டத்தை அறவே நீக்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அனைத்து மதத்தினரும், சிறுபான்மை மொழிச் சமூகத்தினரும் கல்வி நிலையங்கள் தொடங்க, ‘சட்டப்படி இந்தியர் ஒவ்வொருவரும் கல்வி நிலையங்கள் தொடங்க விரும்பினால் எந்தத் தடையுமில்லை’ என்ற ஒரு உறுதியான நிலையே போதுமானது. கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உண்டு. ஒருவேளை தனியார்க் கல்வி நிலையங்களுக்கு அரசால் நிதி உதவி வழங்கமுடியவில்லை என்றால், அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கச் சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், அங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடு இருக்கக்கூடாது..
யார் இந்துக்கள் என்பதைக்கூடப் பெரும்பான்மை மக்களுக்கான எளிய சட்டவடிவத்தைப் பிறப்பித்து, அதன்கீழ் நடக்கவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிபாடு செய்யும் மக்களையும் ஒரு பிரிவின் கீழ் ஒன்றுபடுத்தியுள்ளோம். இன்றும் கூட இந்துக்களை வெவ்வேறு வழிபாட்டுப் பிரிவினர் என்று பிரித்தால் இந்தியாவில் அனைவரும் சிறுபான்மையினரே!
சட்டப்பிரிவு 30ஐ நீக்க / மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனூடே யார் சிறுபான்மையினர், அதற்கான அளவீடு என்ன என்ற விவாதங்களையும் நடத்தி, சிறுபான்மையினர் சட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே பாகுபாடுகளைக் களையமுடியும்.
இந்தியா சிறுபான்மையினரின் நலனைப் பேணிக்காக்கும் தேசமாக இருப்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. உண்மையில் சிறுபான்மையினரின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு நாடாகவே இந்தியா இன்றும் இருக்கிறது. ஆனால் உரிமைகளும், சலுகைகளும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே என்பதும், பெரும்பான்மையினருக்குக் கிடையாது என்பதும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
அடிக்குறிப்புகள்:
1)http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/60-marks-in-teacher-eligibility-test-mandatory-for-recruitment/article2654889.ece
2) http://www.business-standard.com/article/pti-stories/no-tet-required-for-teachers-of-minority-institutions-hc-116082401616_1.html
3)https://indiankanoon.org/doc/1983234/
4) http://censusindia.gov.in/Census_And_You/religion.aspx
5) http://www.gktoday.in/article-29-30-cultural-educational-rights-in-indian-constitution/
-oOo-
Recent Posts
Recent Comments
- Suseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்
- hari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு
- gnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்
- Rajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்
- Parthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்
Archives
- March 2021
- February 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- September 2020
- July 2020
- June 2020
- May 2020
- April 2020
- March 2020
- December 2019
- November 2019
- October 2019
- September 2019
- August 2019
- July 2019
- June 2019
- May 2019
- April 2019
- March 2019
- January 2019
- December 2018
- November 2018
- September 2018
- July 2018
- June 2018
- May 2018
- April 2018
- March 2018
- February 2018
- January 2018
- December 2017
- November 2017
- October 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- May 2017
- April 2017
- March 2017
- February 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- September 2016
Categories