Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா?

இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்

உலகில் எல்லாரையும்விடச் சிறுபான்மையானவன் தனிமனிதன்தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களைச் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக்கொள்ள முடியாது.
– அயன் ராண்ட்

ஆசிரியர்களைப் பணி நிமித்தம் செய்வது தொடர்பாக தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகள் ஓர் அரசாணையைப் பிறப்பித்திருந்தன.(1) அதன்படி ‘அரசு, அரசு உதவிபெறும் தனியார்ப் பள்ளிகள் மற்றும் உதவிபெறாப் பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியப் பணியில் அமர்த்த, ஆசிரியர்கள் TET (Teacher Eligibility Test) தேர்வில் வெற்றி பெற்று, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதை எதிர்த்து 300 க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 24, 2016ல், ‘சிறுபான்மைப் பள்ளிகளுக்கு இந்த ஆணை செல்லாது என்றும், சிறுபான்மைப் பள்ளிகள் அரசு உதவிபெறும் மற்றும் அரசு நிதியுதவி பெறாத பள்ளிகள், தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த அரசாணை சிறுபான்மையினரின் பண்பாடு மற்றும் கல்வி உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது என்பதை சட்டப் பிரிவு 30ஐ மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பை(2) வழங்கியுள்ளது.

இந்தியா விடுதலையடைந்தபோது, சிறுபான்மையினரின் நலன்கள், வழிபாட்டு உரிமைகள், கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள், மொழி உரிமைகள் எவ்விதத்திலும் பெரும்பான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், வேறுபாடுகள் காட்டப்பட்டுவிடக்கூடாது என்றும், சிறுபான்மையினர் தமது உரிமையில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கிலும்தான் இந்தச் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று இது சம்பந்தமான எந்த வழக்குகள் வந்தாலும், நீதிமன்றங்கள், அரசாணைகளின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், இவை சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்தாது என்று தொடர்ச்சியாகத் தீர்ப்புகள் வழங்கி வருவதைக் காண முடிகிறது.

நடைமுறையில் இந்துக்களின் பெரும்பான்மை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அரசு உதவிபெறும் தனியார் இந்துப் பள்ளிகள், உதவி பெறா இந்துப் பள்ளிகளுக்கு இந்த அரசாணைகள் செல்லும் என்பதும், சிறுபான்மையினருக்குப் பொருந்தாது என்பதும் எவ்வகையில் சரி என்பது விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன, சிக்கல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு சட்டப்பிரிவு 30ல் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சட்டப்பிரிவு 30 சிறுபான்மையினரின் கல்வி உரிமைகள் பற்றிப் பேசுகிறது.

a) மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினர். இவர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் மற்றும் கல்வி நிலையங்களை நிர்வகித்தலில் தமது விருப்பம்போல செயல்படலாம்.

b) இந்திய அரசு, மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ கல்வி நிலையங்களை உருவாக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

Article 30 in The Constitution Of India 1949

30. Right of minorities to establish and administer educational institutions

(1) All minorities, whether based on religion or language, shall have the right to establish and administer educational institutions of their choice

(2) The state shall not, in granting aid to educational institutions, discriminate against any educational institution on the ground that it is under the management of a minority, whether based on religion or language.

மத அடிப்படையில் நோக்கினால், இந்தியாவில் இந்துக்கள் தவிர்த்த அனைத்து மதத்தினரும் சிறுபான்மையினர். முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜெயின்கள் ஆகியோர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய பாராளுமன்ற சட்டப் பிரிவு 2 C குறிப்பிடுகிறது. மொழியைப் பொருத்தமட்டில் ஒரு மாநில அரசு ஆட்சி மொழியாக உள்ள மொழியைத் தவிர்த்து, மற்ற மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினர். உதாரணமாக தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள். வேலைவாய்ப்புக் கருதி மகாராஷ்டிராவில் குடியேறும் குஜராத்திகள், குஜராத்தில் குடிபெயரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் இந்திய முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது “இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம்கள்” என்கிறார்.(4) அவர் முஸ்லிம்களைச் சிறுபான்மைச் சமூகத்தவராகக் கருதவில்லை. இந்தியாவில் பார்சிகள் மக்கள்தொகை வெறும் 69,000 மட்டுமே. ஜெயின்கள் 44 லட்சம் மட்டுமே. இவர்களை சிறுபான்மையினர் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. 17.22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களும்(5) இந்தியாவில் சிறுபான்மையினர் என்பது எவ்வகையில் சரி?

எந்த எண்ணிக்கையில், எந்த சதவீதத்தில் மக்கள்தொகை இருந்தால் அவர்கள் சிறுபான்மையினர் கிடையாது என்று சட்டத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. முஸ்லிம்கள் மக்கள்தொகை இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 9.9% ஆக இருந்தது. 2011ன் கணக்குப்படி 14.3% ஆக உயர்ந்துள்ளது. இன்னும் முப்பது ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கப்போகிறது.

எனக்குத் தெரிந்த ஓர் அரசு உதவிபெறும் கிறித்துவ மேலாண்மைப்பள்ளியில், TET தேர்வில் வெற்றி பெறாதவர் 10 லட்சம் கொடுத்து சேரத் தயாராக உள்ளார் என வைத்துக்கொள்வோம். அதே பள்ளியில் TET தேர்ச்சி பெற்ற ஒருவர் 1 லட்சம் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார். இப்போது இவர்களில் யாரை ஒரு கிறித்துவப் பள்ளி பணியில் அமர்த்தும்? 10 லட்சம் கொடுப்பவரை பணியில் அமர்த்தும் செயலை கிறித்துவ, மதராஸாக்கள் செய்யலாம். ஆனால் அதை இந்துப் பள்ளிகள் செய்யக்கூடாது. இவ்வாறான தீர்ப்பைத்தான் நீதிமன்றங்கள் கொடுக்கின்றன. இங்கு எழும் கேள்வி, இந்துக்களும் எவரையும் பணியில் அமர்த்த ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதல்ல. எவரும், தகுதியில்லாத ஒருவரைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதே.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய 25% ஏழை மாணவர்களை அனைத்துப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாணை பிறப்பித்த வழக்கிலும், இது அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளுக்குப் பொருந்தாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் 2012 ல் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் TET தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆணை பிறப்பித்தன. ஏழை மாணவர்களுக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துப் பள்ளிகளும் 25% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றது.(3) ஆனால் இவையனைத்தையும் அரசு நிதிஉதவி பெறாத இந்துப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதான தீர்ப்பும், முஸ்லிம், கிறித்துவ மற்றும் இதர சிறுபான்மைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டியதில்லை என்பதும் எவ்வகையில் சரி?

சட்டப்பிரிவு 30ன் நோக்கம் சிறுபான்மைச் சமூகத்தினர், பெரும்பான்மைச் சமூகத்தினரைப் போல சரிசமமாக நடத்தப்படவேண்டும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே! ஆனால் இன்று உரிமை என்ற பெயரில் சிறப்புச் சலுகைகள் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்லாது, இந்துப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற தீர்ப்பினை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இச்சட்டத்தில் நிறைய மாற்றங்களைக்கொண்டு வந்து, அனைவருக்கும் சமமான நிலையைக் கொண்டுவர விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும்.

இந்தச் சட்டத்தை அறவே நீக்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அனைத்து மதத்தினரும், சிறுபான்மை மொழிச் சமூகத்தினரும் கல்வி நிலையங்கள் தொடங்க, ‘சட்டப்படி இந்தியர் ஒவ்வொருவரும் கல்வி நிலையங்கள் தொடங்க விரும்பினால் எந்தத் தடையுமில்லை’ என்ற ஒரு உறுதியான நிலையே போதுமானது. கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உண்டு. ஒருவேளை தனியார்க் கல்வி நிலையங்களுக்கு அரசால் நிதி உதவி வழங்கமுடியவில்லை என்றால், அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கச் சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், அங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடு இருக்கக்கூடாது..

யார் இந்துக்கள் என்பதைக்கூடப் பெரும்பான்மை மக்களுக்கான எளிய சட்டவடிவத்தைப் பிறப்பித்து, அதன்கீழ் நடக்கவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிபாடு செய்யும் மக்களையும் ஒரு பிரிவின் கீழ் ஒன்றுபடுத்தியுள்ளோம். இன்றும் கூட இந்துக்களை வெவ்வேறு வழிபாட்டுப் பிரிவினர் என்று பிரித்தால் இந்தியாவில் அனைவரும் சிறுபான்மையினரே!

சட்டப்பிரிவு 30ஐ நீக்க / மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனூடே யார் சிறுபான்மையினர், அதற்கான அளவீடு என்ன என்ற விவாதங்களையும் நடத்தி, சிறுபான்மையினர் சட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே பாகுபாடுகளைக் களையமுடியும்.

இந்தியா சிறுபான்மையினரின் நலனைப் பேணிக்காக்கும் தேசமாக இருப்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. உண்மையில் சிறுபான்மையினரின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு நாடாகவே இந்தியா இன்றும் இருக்கிறது. ஆனால் உரிமைகளும், சலுகைகளும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே என்பதும், பெரும்பான்மையினருக்குக் கிடையாது என்பதும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அடிக்குறிப்புகள்:

1)http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/60-marks-in-teacher-eligibility-test-mandatory-for-recruitment/article2654889.ece

2) http://www.business-standard.com/article/pti-stories/no-tet-required-for-teachers-of-minority-institutions-hc-116082401616_1.html

3)https://indiankanoon.org/doc/1983234/

4) http://censusindia.gov.in/Census_And_You/religion.aspx

5) http://www.gktoday.in/article-29-30-cultural-educational-rights-in-indian-constitution/

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்

நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்

நான் இதுகாறும் சொல்லிவந்த அல்லது இன்னும் சரியாகச் சொல்வதெனில் கோடிகாட்டி வந்த விஷயங்கள் இவைதான்: நாம் இழந்துவிட்டவை பற்றி, அல்லது இருப்பன பற்றிக்கூட பிரக்ஞையே அற்று இருப்பது பற்றி. பின்னர் இதற்கெல்லாம் மேலாக, இல்லாதவற்றை இருப்பனவாக நாம் உலகத்தின் முன்வைத்துப் பறையறிவித்து நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது பற்றி.

என் சிறுவயதுப் பருவத்தில், அதாவது, பின் முப்பதுகளும் முன் நாற்பதுகளுமான காலத்தில் சென்னையை இந்தியாவின் அறிவார்த்த தலைநகரம் (intelectual Capital of India) என்று சொல்லக் கேட்டதுண்டு. அக்காலங்களில் நாட்டின் சிறந்த கல்விமான்கள், டாக்டர்கள், வக்கீல்கள் பிறந்து வாழ்ந்த, புகழ் ஈட்டிய இடமாக இது இருந்தது. இவர்கள்தாம் சுதந்திரப் போராட்டத்திலும் பங்குகொண்டு, தமிழ்நாட்டிற்கு விழிப்புணர்வு ஊட்டியவர்கள்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது, அறிவார்த்த தலைநகரமாகச் சென்னை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு, கல்கத்தா, பம்பாய், அலஹாபாத் போன்ற நகரங்களும் இருந்தன என்று தோன்றுகிறது. ஆனால் அந்த நகரங்களுக்கு இல்லாத ஒரு பெருமை தமிழ்நாட்டிற்கு, சென்னைக்கு உண்டு. இதை அதிக நியாயத்தோடு பண்பாட்டுத் தலைநகரம் என்று சொல்லியிருக்கலாம். நடனமும், சங்கீதமும், தொன்மையான வரலாறும் வளமையும் கொண்ட மொழி. இத்தனையும் வேறு எந்த மொழிப்பிராந்தியத்திற்குமோ நகரத்திற்குமோ இருந்ததில்லை.

நடனம் என்ற ஒன்று வேறு எங்கும் காணப்படாதது. ஒடிஸ்ஸி பின்னரே, ஐம்பதுகளுக்குப் பின்னரே, திரும்பக் கண்டெடுக்கப்படுவதாக இருந்தது. கதக் ஒரு கலை என்றோ, நடனம் என்றோ சொல்வதற்கு அருகதை அற்றது. வெறும் தட்டாமாலை சுற்றுவார்கள். கால்களால் தாளம் போடுவார்கள். நுண்ணிய பார்வையும், தீர்க்கமான ரசனையும் கொண்ட (சங்கீதம், நடனம் விஷயங்களில்) மனதுக்குப் பட்டதைச் சொல்லும் தைரியமும் பெற்ற சுப்புடு, ஏதோ கதக் நாட்டியத்தில் பாவம் சிறப்பாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கதக்கில் ஏது பாவம்? அதற்கு அபிநயமும் கிடையாது. முத்திரையும் கிடையாது. மணிப்புரி நடனம் இருந்தது. பார்க்க அழகாக இருக்கும். மெல்லிய, மிருதுவான சலனங்கள். ஆனால் அதற்கு அதிக முத்திரைகளோ, அபிநயங்களோ விஸ்தாரமாகக் கிடையாது. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தாக இருக்கும்.

ஆனால் மிகச் சிறந்த சங்கீத மேதைகள் இருந்தார்கள். அவர்களைப் பற்றி ஜனங்களுக்குத் தெரியாது. சங்கீதமும் சங்கீத மேதைகளும் நவாப் தர்பார்களில் அடிமைப்பட்டுக் கிடந்தனர். தர்பாருக்கு வெளியே யாரும் சங்கீதம் கேட்டதில்லை. அது நவாபி, elitist கலை. மாறாக இங்கு சங்கீதம் மக்களை, ஊர் தெருக்களை, திருவிழாக்களை, மண விழாக்களை, கோவில் உற்சவங்களை வந்து நிரப்பிய கலை. இன்றும்தான். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, சமஸ்தானங்களும் நவாபுகளும் சரித்திரத்தில் மறைந்து, இன்று சங்கீதக் கலைஞர்கள் அரசாங்கத்தின் பராமரிப்பில் வந்துவிட்ட நிலையிலும்கூட, வடக்கே சங்கீதம் மக்களைச் சார்ந்ததாக இல்லை. தெற்கேதான், தமிழ்நாட்டிலும்தான் அது, நடனமும் சரி, சங்கீதமும் சரி, Classical ஆகவும், popular ஆகவும் இருந்து வருகின்றன. இங்கு கோவில்களில் ஆழ்வார்ப் பாசுரங்கள், தெருக்களில் தேவாரப் பதிகங்கள் என்ற மரபிற்கு ஒரு நீண்ட வரலாறு – 1,500 வருடங்கள் நீண்ட வரலாறு உண்டு. காற்றில் சங்கீதமும் தெருக்களில் கோலங்களும், கோவில் மணியோசை கேட்டுக் காலம் நிர்ணயிக்கப்படும் அன்றாட வாழ்வும் வேறு எங்கும் இருந்ததில்லை. நடன நிலைகள் சிற்பங்களாகிக் கோவில்களை அலங்கரிக்கும்.

கோவில்கள் என்று பேசும்போது, அவை ஒவ்வொன்றும் ஒரு சிற்பக் காட்சியகம் என்பதையோ, ஒரு புராதன கட்டக் கலைப் படிமம் என்பதையோ நாம் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ‘சாமி கும்மிடப் போகும் இடம்’, அவ்வளவே. தேங்காய், பழம், புஷ்பங்களோடு நேரே கர்ப்பக்கிரஹத்திற்குப் போவதும், அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி தீபாராதனைக்குப் பிறகு அரைமூடி தேங்காயும் புஷ்பமுமாக நேரே வந்த வழியே அதே நேர்க்கோட்டிலேயே திரும்புதலும்தான் ஒரு சாரார் அறிந்தது. மற்றொரு சாரார் பகுத்தறிவுக்காரர்கள். கோவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து கபளீகரம் செய்வதற்குத்தான் அவர்களுக்குக் கோவில் வேண்டும்.

இக்கோவில்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளிலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரையிலான சரித்திரத்தைத் தன்னுள் கொண்ட ஒரு கலைப் பொருள் என்பதை இவ்விரு சாராரும் அறிந்ததாகத் தெரியவில்லை. நாஸ்திகமும் ஆஸ்திகமும் கலைக்கு விரோதமான நிலைப்பாடுகளோ, கருத்தோட்டமோ, மனநிலையோ அல்ல. ஆஸ்திகமும் கலை படைக்கும். நாஸ்திகமும் கலை படைக்கும். இரண்டும் வெற்றுச் சடங்குகளாகவோ, வாய் உதிர்க்கும் அர்த்தம் இழந்த ஒலிகளாகவோ சீரழிந்துள்ளது நமது இன்றைய சோகம். ஆஸ்திகம், இருக்கும் கோவில்களைப் பராமரிக்க வேண்டுகிறது. ஆனால் அது வெறும் கட்டடப் பராமரிப்பு, கலையின் பராமரிப்பு அல்ல. இப்படி, பூஜை புனஸ்காரங்களோடு வாழும் கோயில்கள், மேஸ்திரித்தனமான பராமரிப்புகளால், சடங்கார்த்தமான கும்பாபிஷேங்களால் வாழ்ந்தும் அழிந்து வருகின்றன.

மதுரை மீனாட்சி கோவிலை விடவா வாழும் கோயில், பராமரிக்கப்படும் கோயில் இருக்கிறது? இருப்பினும், அது கலைப் பொருளின் பராமரிப்பு அல்ல. நான் 1945-47களில் பார்த்த பொற்றாமரைக் குளத்துச் சுற்றுச் சுவர்களில் இருந்த நாயக்கர் காலச் சுவர் ஓவியங்கள் அனைத்தும் இன்று அழிக்கப்பட்டுவிட்டன. காஞ்சிபுரம் கோவில்களின் சிற்பங்கள், சிற்பங்களாக இல்லை. காரையும் சுண்ணாம்பும் பூசி, சிதைந்த சிற்பங்களை முழுமையாக்குவது அசிங்கப்படுத்துவதாகும். கிரேக்க வீனஸ் சிற்பம் இரண்டு கைகளும் உடைந்த நிலையில்தான் உள்ளது. சிமெண்டிலோ, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸிலோ அது ஒட்ட வைக்கப்படவில்லை. எத்தனை ஊர்களில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முந்திய சின்னச் சின்னக் கோவில்கள் சிதிலமடைந்து கழிப்பறைகளாகச் சீரழிந்து கிடக்கின்றன. இவ்வளவு சோகமான ஓர் நிலை, நமக்கு சரித்திர உணர்வும் இல்ல, கலை உணர்வும் இல்லை, பக்தி உணர்வும் அதன் உண்மை நிலையில் இல்லை என்பதற்கே சாட்சியங்கள்.

சமீபத்தில் கள்ளிக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததுமே, இது ஜான் ஆபிரஹாம் நடமாடிய மண் என்று எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜான் அபிரஹாம் மலையாளிகளுக்கு ஒரு icon. ஆராதிக்கப்படும் ஓர் ஆளுமை. மிகப்பெரிய புரட்சிகரக் கனவுகள் கொண்டவர். சினிமா தயாரிப்பையே ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியவர். ஆனால் அவர் படங்கள்தான் அவர் கனவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது போய்விட்டன. மிக இளம் வயதில் இறந்துவிட்டதும், ஓர் லட்சியக் கனவு கண்டு வாழ்ந்ததும் அவரை ஒரு icon ஆக்கியுள்ளன,

மலையாளிகளின் இதயங்களில் சாதனைகள் என்று சொல்ல ஏதும் அதிகம் இல்லை. இருப்பினும், இந்த மண்ணில் அவர் வாழ்ந்தவர் என்ற பெருமை, கர்வம், பெருமிதம் அவர்களுக்கு. ஜான் ஆபிரஹாமின் ஒரே ஒரு படத்துடன்தான் அவருடனான என் உறவு. வெகு குறுகிய கால உறவு. இருப்பினும் 40 வருடகாலமாக நான் தமிழில் தமிழனைப்பற்றி, தமிழ் வாழ்வு பற்றி அதன் பெருமைகளையும், க்ஷீணங்களையும் பற்றி எழுதி வந்திருக்கிறேன். 40 வருடகாலம் நான் தமிழில் எழுதியதற்கு என்னை மதிக்கும், என்னைத் தெரிந்து வைத்திருக்கும் தமிழர்களை விட, ஜான் ஆபிரஹாமுடன் ஒரு வருட காலம் கொண்ட உறவிற்கு என்னைத் தெரிந்துவைத்திருக்கும், மதிக்கும் மலையாளிகள் மிக மிக அதிகம். ஜானை விடப் பெரும் சாதனையாளர்களான ஒரு தி.ஜானகிராமனையோ, புதுமைப்பித்தனையோ நினைவுகூர்ந்து, இது ஜானகிராமன் வாழ்ந்த தெரு’ என்றோ, ‘இந்த வீட்டில்தான் புதுமைப்பித்தன் வசித்தார்’ என்றோ எந்தத் தமிழனும் பெருமையாகச் சொல்லிக்கொண்டதை நான் மயிலாப்பூரிலோ, கும்பகோணத்திலோ, திருவல்லிக்கேணியிலோ கேட்டதில்லை.

இவ்வளவுக்கும் ஜான் பிறந்த இடமல்ல கள்ளிக்கோட்டை. வைக்கம் முகமது பஷீரும் அங்கு பிறக்கவில்லை. அவருக்கும் அங்கு ஒரு நினைவாலயம் இருந்தது. எஸ்.கே. பொற்றக்காடுக்கும். எஸ்.கே. பொற்றக்காடின் நினைவு இல்லத்தில் அவர் சம்பந்தப்பட்ட அவர் பயன்படுத்திய அத்தனை பொருள்களும், அவர் கையெழுத்துப் பிரதிகள், டைப்ரைட்டர், பெற்ற விருதுகள், போட்டோக்கள், தினக்குறிப்புப் புத்தகங்கள் எல்லாம் இருந்தன.

எஸ்.கே. பொற்றக்காடைவிடப் பெரிய இலக்கிய ஆகிருதிகள் தமிழ்நாட்டில் இருந்தனர். அவர்களுக்கு ஞானபீடப் பரிசும் இல்லை. சமூகக் கௌரவமும் இல்லை. நாம் மதிப்பது இந்தத் தமிழ்ச் சமூகத்தைச் சுரண்டிச் சுரண்டி ஆபாசத்திற்குத் தள்ளும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும்தான். அகலமற்று நெருக்கடியான ஒரு முச்சந்தியில் பிரம்மாண்டமான, மார்பளவு சிலை ஒன்று எஸ்.கே. பொற்றக்காடினது. இந்தக் கடைத்தெருவைப் பற்றிப் பொற்றக்காடு எழுதி இந்தத் தெருவிற்கு அமரத்துவம் தந்துவிட்டார் என்று எனக்குச் சொல்லப்பட்டது.

என் மனம் நெகிழ்ந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததைச் சரித்திரமாக்கி அமரத்துவம் தருகிறீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தந்த பதில் என்ன தெரியுமா? என் தமிழர்களுக்கு நான் அதை அடிக்கோடிட்டு எழுத வேண்டும். உரத்து வீட்டுக்கூரை மேல் நின்று பறையறிவிக்க வேண்டும். ஏனெனில் இது தமிழர்களைப் பற்றியது. இப்போது நன் சொன்ன பிறகும் அவர்களுக்கு விளங்காதது. அவர் சொன்னார், ‘இது என்ன பெரிய விஷயம்? தமிழ்நாடு சென்றால் உங்கள் ஒவ்வொரு ஊரும் சரித்திரம் சொல்கிறதே!’

சட்டெனப் பொட்டில் அறைந்த மாதிரி விழும் உண்மை. இது மதுரை, காஞ்சி, மகாபலிபுரம் என்று மாத்திரம் இல்லை. ஒவ்வொரு ஊரும் சிறு சிறு குக்கிராமமும் மிக நீண்ட சரித்திரம் கொண்டது. அந்த சரித்திரத்தை மன்னர்கள் மட்டுமல்ல. நம் புலவர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாடி நிரந்தரத்துவம் கொடுத்துள்ளார்கள். அந்த நிரந்தரத்துவத்தின் இலக்கியப் பதிவுகளை நாம் பெரும்பகுதி இழந்துவிட்டோம். ஆனால் நிறைய சிற்ப, ஓவிய, கட்டடப் பதிவுகள் ஒவ்வொரு கிராமத்திலும் சிதைந்து கிடக்கின்றன. நம்மூர் முடுக்கு, பிள்ளையார் கோவில்கள் போல கேரளம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஒவ்வொரு பகவதி காவும் புனித ஸ்தலங்களாக உள்ளன. ஒன்றுகூட சிதைந்து, கேட்பாரற்றுக் கிடப்பதில்லை. காரணம், நமக்கு சரித்திரப் பிரக்ஞையோ, கலை உணர்வோ, சமூகப் பொறுப்புணர்வோ கூட கிடையாது. தலைவன் என்று சொல்லிக் கொள்பவன்கூட, தனக்கு சொத்து சேர்த்துக்கொள்கிறானே ஒழிய, தமிழ்நாட்டைப் பற்றிய கவலை அவனுக்குக் கிடையாது.

அன்று குடிசைகள், தெருக்கள் சுத்தமாகத்தான் இருந்தன. இன்று நகரங்கள் கூடக் குப்பைக் கூளங்களாகக் காட்சியளிக்கின்றன. பஸ் ஸ்டான்டுகளில் கழிவுநீர் துர்நாற்றம் பரவிக் கிடக்கிறது. எந்தப் பொது இடத்தின் சுவர்களுமோ, தனியான வீட்டுச் சுவருமோ சுத்தமாகக் காட்சி தருவதில்லை. தமிழ்நாடே வெகு வெகு ஆபாசமான சுவரொட்டிக் கலாச்சாரத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. இந்தச் சுவரொட்டிகள் நாட்டை ஒரு குப்பை மேடாக்கியுள்ளன. சாக்கடைகள் அன்றும்தான் இருந்தன. இன்று அவை பாலித்தீன் பைகளால் அடைபட்டு ஓட்டமற்று தேங்கி, சமயங்களில், சாலைகளில் வழிகின்றன. நம் நகரம் ஒவ்வொன்றையும், கிராமங்களையும், சிற்றூர்களையும் அசுத்தப்படுத்துவது சாக்கடைகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளது கூச்சல்கள் மாத்திரமல்ல, அவர்களது சுவரொட்டிகளும்தான், சினிமாக் கூச்சலும்தான். தமிழ்நாடே ஒரு பிரம்மாண்ட சாக்கடையாக, குப்பைத் தொட்டியாகத்தான் எனக்குக் காட்சி தருகிறது.

நான் சிறுவயதில் பார்த்த தமிழ்நாடு ஏழ்மையில் வாடிய தமிழ்நாடாயிருந்தாலும் அது அழகானது. சுத்தமானது. மனதுக்கும் கண்களுக்கும் ரம்மியமானது. ‘சென்னை – நூறு வருடங்களுக்கு முன்’ என்றொரு புத்தகம் சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்திருந்தது. அதில் ஒரு புகைப்படம். கூவம் நதியின் புகைப்படம். அதில் குளித்துக் கரையேறின ஒரு பிராமணர் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து சந்தியாவந்தனம் செய்கிறார். அன்றைய கூவம் அதுவாக இருந்தது. குளித்துக் கரையேறும் கூவம்.

கூவம் இன்று பெற்றுள்ள அலங்கோலத்தைத்தான், நமது நாடு, கிராமங்கள், சுவர்கள், தெருக்கள், நமது அரசியல், நமது கலாசாரத் தலைமைகள், நமது அரசியல் தலைமைகள் எல்லாம் அடைந்துள்ளன. வறுமை அல்ல அலங்கோலத்திற்குக் காரணம். அழகுணர்வு அற்றுவிட்டதான் காரணம். கூச்சலும், ஆபாசமும் அமைதியின் இடத்தைப் பறித்துக்கொண்டுள்ளன.

நமது அன்றைய வீடுகள், எளிய வீடுகளும் கூட, அழகானவை. அமைதியானவை. ஆரோக்கியமானவை. அவை இன்று அழிந்து வருகின்றன. நமது திண்ணைகளும், கூடங்களும், தாழ்வாரங்களும் ஆரோக்கியமாக, காற்றோட்டமாக மிதமான வெப்பத்திலும் நாம் வாழ உதவுகிறவை. தெருவிலிருந்து பார்த்தால் இடைகழி, தாழ்வாரம், பின்கட்டு எல்லாம் தாண்டி, கொல்லைப்புறக் கதவுக்கு அப்பால் நிற்கும் தோட்டமும் ஆட்களும் தெரியும். இக்காட்சியின் அடுக்கடுக்கான ஒளி, பரவியும் நிழல் தருவதும் மாறி மாறி வரும் காட்சி கவித்வமானது. பாரம்பரிய இக்கட்டட ஞானம் ஐ.ஐ.டி.யில் கற்றுத்தரப்படாத மரபு வழி வந்த ஞானம். ஆராக்கியத்திற்கும், வாழும் வசதிக்கும் ஏற்றதாக இருந்ததோடு அழகானதாகவும், எளிமைத் தோற்றத்திலும் கவித்வம் நிறைந்ததாகவும் இருந்தது. இதன் பதிவுகளை டி.எஸ்.நாகராஜனின் புகைப்படங்களில் காணலாம். ந.முத்துசாமியின் கதைகளில், ஜானகிரராமனின் கதைகளில் காணலாம். கிரிஷ் காஸரவல்லியின் படங்களில், சத்யஜித் ரேயின் படங்களில் அந்தந்தப் பிராந்தியத்தின் கிராமத்தின் வீடு நமக்களிக்கும் கவித்துவத்தைக் காணலாம். இக்கவிதையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. சத்யஜித் ரேயின் முத்திரையேயாகிப் போனவை இக்காட்சிகள். முற்றம், தெருவை நோக்கித் திறந்திருக்கும் முன்கதவின் நீள்சதுரச் சட்டம் தரும் தெருவின் பிரகாசம். திரும்பத் திரும்ப ரேயின் படங்களில் வரும் காட்சி நம் வாழ்வில் இரைந்து கிடந்த இக்காட்சி, நமது எந்தத் திரைப்படத்திலும் பதிவானதில்லை.

ஒரு ‘பாபா’ படத்திற்கு, ‘ஆளவந்தான்’ படத்திற்கு ஆகும் செலவில், செட்டிநாடு முழுவதும் உள்ள பாழடையும் வீடுகள் அனைத்தும் பாதுகாக்கப்படக்கூடும். ஆனால் நமது முனைப்புகள், மதிப்புகள் வேறு. இப்படங்களுக்குச் செலவழிக்கப்படும் பல பத்து கோடிகளில் நமக்குப் பெருமை அளிக்கும் இந்த வீடுகள் காப்பாற்றப்படுவது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. இன்று இந்த வீடுகளின் மரப்பகுதிகள் பெயர்க்கப்பட்டுக் கதவுகளும், உத்தரங்களும் விற்கப்படுகின்றன. வீடுகள் பாழடைகின்றன. நாசமாக்கப்படுகின்றன. யாரும் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்தியதாகத் தெரியவில்லை.

அவ்வளவாக சரித்திரம் நீளாத ஐரோப்பிய நாடுகளில் (உதாரணமாக ஜெர்மனி, இங்கிலாந்து போன்றவை) ஒரு நூற்றாண்டு இரு நூற்றாண்டுப் பழமையான வீடுகள், தெருக்கள்கூடப் பழமையின் சின்னமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நமக்கு ஆயிரம் வருஷக்கணக்கில் சரித்திரமும் பழமையும் உண்டு. சம்பந்தர் 1300 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த ஊர் இதோ என்று சீர்காழியைக் காட்ட முடியும். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை திருத்தலம் இதோ என்று திருப்பரங்குன்றத்தைக் காட்டமுடியும். இன்றும் அவை வாழும் ஊர்கள்.

யாரும் அதிகம் அறியாத என் சொந்தக் கிராமம் உடையாளூரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் உண்டு. அதன் கல்வெட்டுகளின் ஒரு படி அச்சிடப்பட்டு கண்ணாடிச் சட்டமிடப்பட்டிருக்கும். 47,48க்குப் பிறகு போன வருடம் போனபோது, அது எங்கோ தொலைக்கப்பட்டுவிட்டது. அதுபற்றிக் கேட்டபோது அர்ச்சகருக்கு அது பற்றியே ஏதும் தெரியாது எனத் தெரிந்தது.

(21.6.2002 அன்று எழுதியது.)

சந்தியா பதிப்பகத்தின் வெளியீடான ‘கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ என்ற நூலில் இருந்த நீண்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி

வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி 
– சொல்வனம் ரவிஷங்கர்

அறுபதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்தில் உலவிய ஒரு விமர்சகரும், எழுத்தாளருமான வெங்கட் சாமிநாதனுடன் எனக்கு நேரடிப் பழக்கம் குறைவுதான். கடிதங்கள் மூலம், அவரோடு பல வருடங்கள் பழகிய அனுபவம் உண்டு.

அவர் எழுதியதில் பகுதியைத்தான் நான் படித்திருக்கிறேன். நான் விட்டிருக்கிறவற்றில் அவர் அடைந்த வளர்ச்சி பரிணாம வளர்ச்சி என்பது பிற்காலத்து எழுத்தில் தெரிந்தது. இக்கட்டுரை,அவரின் அளிப்பைப் புரிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவரை வேறெந்தச் சமகால ஆளுமைகளுடனும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை என்பது குறிக்கப்பட வேண்டியது.

***

முதல் சந்திப்பிலிருந்து, முதல் கடிதத்திலிருந்து புலப்பட்ட அவருடைய பல குணங்களும், தேர்வுகளும், என் குணங்கள், தேர்வுகளிலிருந்து நிறைய விலகியவை. இந்த இடைவெளி துவக்கத்திலிருந்தே அவரைத் தள்ளி நின்று நோக்கும் நிலைக்கு என்னைச் செலுத்தி இருந்தது. அதே நேரம் எதிரிடையான நிலை இல்லை என்பதால் அகன்ற இடைவெளியைக் கடந்து பல கலை இலக்கியத் தேர்வுகள் மூலம் ஓரளவு இணைப்பும் சாத்தியமாகி இருந்தது.

தனிமனிதர் தேர்ந்தெடுக்கும் நிலைப்பாடுகளுக்கு வாழ்வின் தூல நிலைகள் ஓரளவு காரணமாக இருக்கும் என்று கருதுபவன் நான். தமிழல்லாத அயல் பண்பாடுகளில் பல வருடம் வாழ நேர்ந்தபோது தன்னடையாளத்தின் பல கூறுகளில் எவை உயிரோட்டம் உள்ளவை, எவை இரண்டாம், மூன்றாம் பட்சம் என்பது புரியத் துவங்கியது. இதனால், இந்தியத்தை மதிக்கத் துவங்கி உள்ளவனாக நான் ஆகி இருந்தாலும், பிற இந்திய மொழிப் பண்பாடுகளில் வெகு காலம் வாழ்ந்திருக்கிற அவருடைய இந்தியம் ஒப்பீட்டில் வலுவானது. இந்த வேறுபாட்டுக்குப் பல காரணங்கள் உண்டு. வளர்ந்தவராக வாழ்வைத் துவங்குகையில் நாம் பெறும் மதிப்பீடுகளில் நம்மிடம் சாரமாகத் தங்கியவையும், பின் தொடர்ந்து நாம் சேமிக்கும் பல அனுபவங்களின் படிப்பினைகளும் வேறுபாடுகளின் தோற்றுவாய்.

இப்படித் துவக்கப் புள்ளியில் விலகி இருந்த நான், பல பத்தாண்டுகளின் உலக அனுபவங்களாலும், வேறு சமூகங்களின் படிப்பினைகளாலும் நகர்ந்து, அவர் ஏற்கெனவே இருந்த பல புள்ளிகளில் வந்து சேர்ந்தேன்.[1] இப்போது, அவருடைய கருத்துலகின் தர்க்க நியாயம் ஓர் அளவாவது புரிந்தது. அதை அவரும் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் 2004க்குப் பிறகு அவரை நான் சந்தித்தபோது எங்களிடம் ஓரளவு நட்புணர்வு தோன்றி இருந்தது.

திரும்பிச் சந்தித்தபோதும், அவர் குறுக்கு விசாரணைக் கேள்விகளை என்பால் வீசாமல் இல்லை. ஆனால் இப்போது அவற்றை நேரடியாக எதிர்கொள்ள முடிந்தது. கூர்மையான சொற்கள், சுருக்கமான விளக்கங்களால் பேசுகிற அவருக்கு நெடிய, வார்த்தைப் பெருக்கு கொண்ட என் மசமசப்பான விளக்கங்கள் அத்தனை ருசியாக இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் கருத்துகளில், சில முடிவுகளில் அவ்வப்போது ஒற்றுமைகள் தோன்றின என்பது என்னளவில் விந்தை.

***

என் அனுபவத்தில், அவர் வயது வித்தியாசம் பாராமல் பழகுபவர். நம்மிடம் அவருக்கு ஏதும் குறை இருந்தால் நேராகக் கேட்டுவிடும் பழக்கமும், துணிவும் உள்ளவர். பாராட்டுதல்களும் அப்படியே, உடனடியாகக் கிட்டும். நாசூக்குப் பார்த்துக் கொண்டிராமல், கருத்து வேறுபாடுகளைப் பேசித் தெரிந்து கொள்வது நல்லது என்ற அணுகல் அவருடையது. இது எல்லாருக்கும் பொருந்தக் கூடிய அணுகல் இல்லை.

ஒருவரின் கருத்துத் தள நிலைப்பாடுகள் அவருடைய தனி நபர் வாழ்விலும் செயல்பட வேண்டிய அவசியத்தை, அப்படி ஓர் ஒருமையை வலியுறுத்துபவர் வெ.சா. இந்திய வாழ்வின் ஏகப்பட்ட அழுத்தங்கள், இல்லாமைகளால் தனிநபர் நடத்தையில் குறைபாடுகள் , அவ்வப்போது இடறல்கள், சறுக்கல்கள் நிகழும் என்பது அவருக்குத் தெரியும். அந்தச் சறுக்கல்களை நேராக ஒத்துக்கொண்டு பொறுப்பேற்பது தார்மிக நடத்தை என்பதே அவர் நிலை. எதிரிடையான நடத்தையை சகஜமாகவே கொண்டவர்கள், உன்னத அற நிலைகளை உலகுக்கு அறிவுறுத்துவது அவருக்கு ஏற்கவொண்ணாதது. இதை அவர் பகிரங்கமாகச்சொன்னார் என்பது சூழலால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தமிழ் எழுத்தாளர்களில் பலரும் நேரடியாகத் தம் கருத்துகளை எடுத்து முன்வைத்து, மற்றவரிடமிருந்தும் அப்படியே கருத்துகளைப் பெற முயல்பவர்கள் அல்ல. அதுவும் நேருக்கு நேர் வேறுபாடுகளை முன்வைத்து எதிர்ப்புத் தெரிவிக்கும் பழக்கம் அனேகரிடம் கிடையாது. எனக்கும் இப்படி எதிர் நிலைகளை முன்வைத்து, கறாராகக் கேள்விகள் கேட்டு வறுத்தெடுப்பது முடியாத செயல். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நான் பார்ப்பது, கருத்துத் தள நிலைப்பாடுகளுக்கும், சொந்த வாழ்வில் நடத்தைகளுக்கும் தொடர்பறுந்த நிலைதான். இதை அறப்பிறழ்வு என்று பார்க்க முடியும். ஆனால் இதோடு போருக்குப் போக ஒரு வகைத் தீவிரம் தேவை. அந்தத் தீவிரத்தைத் தன் ஐம்பதாண்டு இயக்கத்தில் தொடர்ந்து காட்டி வந்த விதத்தில் எனக்கு வெங்கட் சாமிநாதன் புதுமையானவராகத் தெரிந்தார், ஆனால் அதனாலேயே ஓரளவு பழமையானவரும்கூட.

***

எனக்கு முந்தைய தலைமுறையினரில்,விரி-குடும்ப உறவினர்களில் பலர், இப்படி எதையும் முகத்துக்கு நேராகக் கேட்கும் பழக்கமுள்ளவர்கள் என்பது என் அனுபவம். ஒப்பீட்டில் என் தலைமுறையினரிடையே, நேரடியாக வேறுபாடுகளின் வேர்கள் என்ன என்பதைக் கேட்டறிய முயல்வோர் குறைவு என்பது என் அனுபவம். இதைப் பொதுமைப்படுத்தலாமா என்பது குறித்து எனக்குத் தயக்கம் இருக்கிறது. ஆனால் வேறெப்படியும் மேலே செல்லப் பாதை இல்லை.

இதற்குக் காரணம் உண்டா என்று யோசித்தால் முந்தைய தலைமுறையினர், பேச்சு வழியே உருவமைக்கப்பட்டு, அப்படியே பெருமளவும் செயல்பட்ட சமூகத்தில் வாழப் பயின்றவர்கள். இளம் வயதிலிருந்தே உரையாடல்கள் வழியே சமூகத்தில் பொருத்தப்படுபவர்கள், அதன் வழியே பற்பல வேறுபாடுகளையும் தீர்த்துக் கொள்ளமுயல்வது சகஜம். அது அவர்களைப் பொருத்து சாதாரண நிகழ்வு.

அவருடைய தலைமுறையிலிருந்து வித்தியாசப்படும் வகையில் என் தலைமுறையினரில் நிறையப் பேர் படிப்பு மூலம், அதுவும் மௌன வாசிப்பு மூலம் சமூக மதிப்பீடுகளை அறிந்து கொள்வதிலும், அவற்றுக்கு ஏற்ப நடப்பதிலும் அதிகம் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். எழுத்து, புத்தகம், வாசிப்பு என அச்சுப் பிரதிகளின் மூலமே அதிகளவும் சமூக உறுப்பினராக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். குடும்பங்களிலும், சிறு குழுக்களிலும் உரையாடல் என்பதை எதையும் அறியச் சிறந்த வழியாக நோக்காமல், ஊடகங்களின் வழிக் கற்பதை நாடிப் போகக் காரணம் இதுவாக இருக்கலாம்.

கடந்த 60 ஆண்டுகளில் குறைந்தது இரண்டு தலைமுறைகளாவது இந்த நெடிய மௌனத்தில் பயின்றவர்கள். அதற்கடுத்த தலைமுறைகளோ வாசிப்பை இழந்து, பிம்பங்களின், இசையின், இன்னும் பற்பல ஓசைகளின் உலகில் எதையும் கற்பவர்கள். உரையாடலோடு, எழுதுவதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். தொலைபேசிகளில் பேசுவதைக் கூடக் குறைத்துக் கொண்டு சுருக்கக் கடிதங்களில், சங்கேதங்கள் வழி கருத்துப் பரிமாற்றத்தில் சமூக வயப்படுகிறார்கள். அபிப்பிராயப் பரிமாற்றத்துக்கு ஒற்றைச் சொல் விவரணையே போதுமானதாகக் கருதும் பெரும் திரளே கூட உருவாகி இருக்கிறது. இந்த மாறுதல்களால் இந்தியாவிலும், தமிழிலும் கலை வெளிப்பாடுகள் என்ன வடிவ, உள்ளடக்க மாறுதல்களைப் பெறும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

***

வெங்கட் சாமிநாதன் தன் வாழ்வுப் பாதை பற்றி எழுதிய கட்டுரைகள் பலவற்றை ‘சொல்வனம்’ இதழில் வெளியிட்டிருக்கிறோம், அவற்றில் வெங்கட் சாமிநாதனின் சிறு பிராயத்திலிருந்து அவருடைய 60களின் இறுதி வரையான வாழ்வுப் பாதை தெரிந்தது. 1960களின் இறுதிப் பாதியில், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தெளிவாகவே பாதை பிரிந்து சென்ற ஒரு தலைமுறையினருக்கும், முந்தைய தலைமுறைகளுக்கும் இடையே அவர் ஒரு பாலமாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது. சாதனங்கள் பெருகத் துவங்கியதால், மரபு வழிநடத்தும் வாழ்விலிருந்து தமிழ்ச் சமூகம் அகலத் துவங்கிய காலத்தில் தன் சொந்த வாழ்வைத் துவங்கியவருக்கு முந்தைய சமூகத்தில்நல்ல பயிற்சியும் இருந்தது. அடுத்த நகர்வுக்கான பல முன் ஆயத்தங்களிலும் அவரே பங்கெடுத்திருக்கிறார் என்பதால் அடுத்தடுத்த தலைமுறைகளோடு அவரால் இயல்பாக உரையாட முடிந்திருக்கிறது.

சிற்றூரில் துவங்கி, மாநகர வாழ்வில் பல்லாண்டுகள் ஊறி, பன்மொழிப் பண்பாட்டில் சகஜமாக உலவிய அனுபவம் கொண்ட அவருக்கு, தமிழ் இலக்கியத்தினர் இந்தியத்தை அறவே ஒதுக்கி, அவர்களுக்குச் சிறிதும் நேரடிப் பரிச்சயமோ, மொழித் தேர்ச்சியோ இல்லாத, யூரோப்பிய, லத்தீன் அமெரிக்க மதிப்பீடுகள், அரசியல் நிலைப்பாடுகள் மூலம் தம் சொந்த அனுபவங்களை எடை போட முயன்றனர் என்பது கேலிக் கூத்தாகத் தெரிந்தது. இது, அடுத்த தலைமுறைகளில் சிலரிடமிருந்து அவரைவிலக்கி நிறுத்தியது என்றாலும், தமக்குக் கிட்டிய கடப்பு நிலைக்கு அவர் ஒரு காரணம் என்பதையும் பல படைப்பாளிகள் அறிந்திருந்தனர். தொடர்ந்து இளைஞர்கள் அவரைத் தேடிச் சென்று உரையாடியதை நாம் பல பத்தாண்டுகளிலும் பார்க்கலாம்.

அவர் உரையாடுவதில் வல்லவர் என்பதோடு மௌனத்தையும் கனமாக, அர்த்தத்துடன் பயன்படுத்தக் கூடியவர். எழுத்து வடிவில் அவர் கொடுத்தவற்றூடே உரையாடல் வழக்கம் முக்கியமாக இருப்பதாகவே நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நாம் இன்று அவருடைய எழுத்துகளை அனேகமாக மௌன வாசிப்பு வழியேதான் பெறுகிறோம். அது அவருடைய ‘தானே ஒரு பாலமாகும்’ முயற்சியில் கிட்டுவது.

உரையாடல் என்பதன் சமூக அவசியம் குறையத் துவங்கியபோது,இலக்கியத்திலும் பேச்சுமரபு படிப்படியாக ஈர்ப்பு இழந்துபோனதை, கரிச்சுரங்கத்துக்குள் கொல்லும் வாயுவை இனம் காட்ட, முன்னதாகக் கொண்டு போகப்படும் கூண்டுப் பறவையை ஒத்த கவிதைப்படைப்பு வெளிக்காட்டி விட்டிருந்தது. ஒலியொழுங்கிற்குத்தலைமை கொடுக்கும் வழக்கத்திலிருந்து கவிதை நகர்ந்து, புதுக்கவிதை எனப்படும் மாற்று வழியால், மௌன வாசிப்புக்கு வாசகர்களைக் கொணர்ந்ததற்குக் காரணம், அப்படி ஒரு வாழ்முறை மனிதருக்குப் பரந்த சமுதாயத்தில் நிறைய அமைந்ததுதான்.

புதுக்கவிதையை ஆதரித்த வெங்கட் சாமிநாதனுக்கு இது முதலிலேயே புலப்பட்ட மாறுதல். அவர் விரும்பிய வகைச் சினிமாவுமே, ஏற்கெனவே நாடகத்தை விலக்கிய, பேச்சைக் குறைத்த, அனேகமாக மௌனமான, காட்சி வழியேகதை சொல்வதை முன்னிலைப்படுத்திய சினிமாதான். (அவருடைய அபிமான இயக்குநர் பிரெஸ்ஸோன்.)

தமிழில்,பெருமளவும் பேச்சால் கதையை நகர்த்திய, அன்று பிரபலமாக இருந்த நாடகீயச் சினிமாவை ஒதுக்க அவருடைய காரணம் அதுவே. அவர் விரும்பிய நாடகமும் உடல் இயக்கத்தை மைய வலுவாகக் கொண்டு கதை சொல்லும் கூத்து வகை நாடகம். கூத்தில் இசை, நடனம், கதை சொல்லல், சிறிதளவு வசனம் ஆகியன உண்டு என்றாலும், பாவம் சார்ந்த நடனம் மையம் பெறும். அவர் ஒதுக்கிய அன்றைய தமிழ் நாடகங்கள் வசன ஒப்பித்தலும், ஸ்தம்பித்த உடல் பாவங்களும் கொண்ட ஒற்றைத் தடப் பாதைகளே.

மரபை நீட்டிப்பதற்காக மட்டுமே கூத்து என்பதை ஒரு நல்ல வேர்மூலமாக அவர் கருதவில்லை. விமர்சனச் சிந்தனை அற்ற மரபு வழி ஒழுகலைக் கூத்து எளிதாகவே அடியறுக்கிறது, அதே நேரம் மரபை அது அழிக்கவும் இல்லை, அது சுவடிகளைத் தாண்டி, அன்றாட அனுபவ உலகின் படிப்பினைகளை முதன்மைப்படுத்தி, மரபைப் புதுப்பிக்க வழி கோலுகிறது. அதன் இந்த இருமுகத் தன்மை அவருக்கு ஏற்ற அணுகல்.

கூத்து என்ற நாடக மரபு, வேர்ச்சமூகங்களின் தன்னியல்புகளை வெளிக்கொணரும் அதே நேரம்,ஏட்டுப் படிப்பைப் பரவலாகப் பயன்படுத்தாத சமூகங்கள், நெடும் பாரம்பரியமான இந்தியக் கூட்டுச் சமுதாயத்தின் பன்முகக் கவனிப்புகளையும், மதிப்பீடுகளையும் இழக்காமல் காத்து, அவற்றைத் தலைமுறைகளிடையே கைமாற்றிக் கொடுக்க உதவியதை அவர் கவனித்தார். அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்வனுபவங்களும் அரங்கேறி, சமூகம் தன் வெளிப்பாட்டைப் பெறவும், விமர்சனத்துக்கு உரியனவற்றை விலக்கத் தேவையான தர்க்கத்தை உண்டாக்கியும், சமூகங்கள் பரிணாம வளர்ச்சி பெற இது இடம் கொடுத்தது என்று களத்தகவல்களிலிருந்தும் நேரடி அனுபவத்திலிருந்தும் அவருக்குப் புரிந்திருந்தது.

தகவலாகவும், கேளிக்கையாகவும் நிகழ்த்த வந்த வேறு வகை ஊடகங்கள், தனி வாழ்விலும் ஊடுருவி, சமூக உறவுகளையும் பாதிக்குமளவு வளர்ந்து, ஒரு கட்டத்தில் சமூக இணைப்பு அமைப்புகளைத் தாமே கூட உருவாக்குமளவு ஆகிருதி பெறத் துவங்கிய கட்டத்தில், தனி நபர் உரையாடல்கள் அனேகமாகப் பொது அரங்கில் நடந்தேறும் ஆரவார நிகழ்வுகள் பற்றியனவாகவே மாறுகின்றன.

அங்கு ஒரு புரட்டல் நேர்வதை நாம் பலரும் கவனிக்கிறோம், ஆனால் நிஜமாகப் புரிந்து கொள்வதில்லை.

தனிநபர் உரையாடல்களால் உருவாகும் சமூக நிகழ்வுகள், பழக்கங்கள், தேர்வுகள் ஆகியனவற்றைப் பற்றியதாகப் பொது அரங்க நிகழ்வுகள் இருப்பது சமூகத்துக்குத் தன் முகத் தரிசன வாய்ப்பாக இருக்கலாம். மாறாக, சமூக உரையாடல்கள் பொது அரங்க நிகழ்வுகளையே தமக்கு வழிகாட்டியாகக் கருதத் துவங்குகையில் தனி மனிதர், தம் ஆளுமையை இழக்கிறார்கள். இந்த ஊடகங்கள் நவீன மயமாதலின் கருவிகள். உறுப்பினராக இயங்கும் மனிதரை உருவிழந்த உதிரிகளாக்குவது இவற்றின் ‘சாதனை’.

இப்படித்தான் நவீனத்தின் தாக்கம், அன்றாடப் பரிமாற்றங்கள் வழியே வாழ்வனுபவங்களின் தொகுப்பும், மாறுபட்ட பார்வையுள்ளவர்களின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பும் ஆங்காங்கே உள்ள மனிதரிடையே அவர் தேவைக்கேற்ற வழிகளில் நடப்பதை நிறுத்துகிறது. தம் வாழ்வின் தேவைகளைத் தாமே எடை போட்டு முடிவுக்கு வரும் தன்னாளுமையை இழக்கும் மனிதர், தொடர்ந்து திரளில் பொருந்தி, அனேக நேரம் செயலற்ற பார்வையாளராகி விடுகிறார். திரளில் உறுப்பினர்களின் பாரம்பரியத்தை வேரறுப்பது ஒப்பீட்டில் எளிது.

நவீனம் என்றால், முந்தையதை அழிப்பதாகவும், பாரம்பரியத்தோடு சமூகத்துக்கு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் அறுப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதோடு, பழமை என்பது மாறுதலை ஏற்காமல், புதிய எதையும் அழிக்கத் துடிப்பதுதான் என்றும், கடந்த காலத்தின் இயல்பான ஓட்டத்தைப் பொய்யாகச் சித்திரிப்பதன் மூலம் அந்த அழிப்பை நியாயப்படுத்தவும் வேண்டும் என்பதும் மேற்கத்திய அணுகல்.

தம் விருப்பத்துக்குச் சமூகம் இணங்காவிடில் சமூகத்தையே கொளுத்தி, வேரோடு அழிக்கலாம் என்ற அணுகலே முரணைத் தீர்க்கும் வழி என்பது செமிதிய/ யூரோப்பியக் கருத்தியல். 60களில், இவற்றை இறக்குமதி செய்வதுதான் தரமான கல்வி என்ற கற்பிதம் தமிழ்நாட்டில் வேரூன்றத் துவங்கியது. அன்றாட வாழ்வில் இத்தனை ஆண்டுப் பிரசாரங்களுக்குப் பிறகும் செல்வாக்குப் பெறாத இது, கருத்தியல் உலகில் கோலோச்சத் துவங்கி 60-70 வருடங்களாவது ஆகி இருக்கும்.

இப்படி ஊறி இருக்கும் ஒரு கருத்தியலை, வெ.சா. துவக்கத்திலிருந்து எதிர்த்திருக்கிறார். முரண் என்பது இந்தியப் பாரம்பரியத்தின் கண்ணோட்டத்தில் சகஜமாக நேர்வது, மாற்றம் வேண்டும் நோக்கு. இதை மாற்றுக்கான அவசியத்தை வலியுறுத்தல் என்றும், உரையாடல் மூலமும், இணை இயக்கங்கள் மூலமும் பாதை மாறிப் பயணிப்பதைக் கோரும் முயற்சி என்றும் நாம் அறிய முடியும். வேரோடு பொசுக்குவது என்பது தேவை இல்லாத இந்த நோக்குதான் வெங்கட் சாமிநாதனின் மொத்த அணுகலையும் வழி நடத்தியது என்று நான் கருதுகிறேன்.

***

வெங்கட் சாமிநாதனுக்கு அரசியலை இலக்கியத்தில் பேசுவது என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் இலக்கியத்தை அரசியலாக்குவது பிரச்சினை. இலக்கியம் என்பதில் மட்டுமல்ல, இதர கலைகளிலும் அப்படியே அவர் பார்வை இருந்தது. அவருடைய பார்வையில், மரபு என்பதோ, பாரம்பரியம் என்பதோ, பண்பாடு என்பதோ அழித்து ஒழித்துப் பின் மறுபடி புதிதாக களிமண்ணைக் குழைத்து அச்சு வார்த்துக் கட்டப்பட வேண்டியவை அல்ல. சக்கரத்தை மறுபடி மறுபடி கண்டுபிடிப்பதைப் போல ஓர் அறிவிலித்தனம் ஏதும் இல்லை. இதை அவர் பல பத்தாண்டுகள் சொன்னார் என்பது என் புரிதல். கேட்கத் தயாரில்லாதவர்கள் கொணர்ந்த பண்பாடு ‘பாலை’யாக இருந்தது என்பது அவர் வருணனை.

அவர் ஒரு பல்கலைவளாகத்து அறிவாளர் அல்ல. எந்தத் துறையிலும் முறையாகப் பயின்று அந்தக் கடிவாளங்களின்படிச் செலுத்தப்படாதவர் என்பதால், சுயமாகக் கற்றவர்களுக்கே உரிய சிதறலான அணுகலோடு இந்தப் பிரச்சினையை அணுகி இருக்கிறார். அதனாலோ, அல்லது தெரிந்தே தான் வகுத்துக்கொண்ட ஒரு வழிமுறையாலோ, வெங்கட் சாமிநாதனின் விமர்சன இயக்கத்துக்கு ஒற்றை முகம் இல்லை. ஒற்றைக் கருத்தியல் இல்லை. கோட்பாட்டு வழியே சென்று கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அவர் பார்க்கவும் இல்லை. ஆக, இந்த அணுகலில் மேலாளர்கள் கிடையாது. உள்வட்டம் பற்றிப் பேசியவர் அதை உருவாக்க முயலாதது , இந்த வட்டம் தன்னியல்பாக எழுந்து, மாறி வரும் என்று அவர் கருதியதை நமக்குச் சுட்டுகிறது.

இந்த எதிர்பார்ப்பு நம்மை நாமே மதிக்கக் கோருவது. நம்மிடம் போதுமான அளவு திறனும் ஆழமும் உண்டு என்பதை அடிப்படை அறிதலாகக் கொண்டு இயங்கச் சொல்வது. அண்மைப் பண்பாடுகளோடு ஆழ்ந்த பரிச்சயம் பெற வேண்டும் என்று கேட்பது. திரளாக ஒடிந்து அமராமல், ஊக்கமுள்ள சமூக உறுப்பினராக, படைப்புத் திறனோடு வாழ நம்மைக் கோருவது. உன்னதம் யாருக்கும் சாத்தியம், அதற்கான உழைப்பும், பிடிவாதமும், சீர்மையும் தேவை என்றும் சலியாமல் பறை சாற்றுவது.

இதை ஒரு குறையாக, இன்று அரசியல்தான் இலக்கியம் என்று நினைத்து இயங்கும் கூட்டம் தொடர்ந்து முன்வைக்கிறது. அவர்கள் வெங்கட் சாமிநாதனின் இயக்கத்தையோ, அதன் உள்ளீட்டையோ புரிந்துகொள்ள முடியாததற்குக் காரணமே அவர்கள் அணிந்திருக்கும் அந்த ஒற்றைக் கோட்பாட்டுக் கண்பட்டிதான். அது முற்றிலும் யூரோப்பியமும், செமிதியமும் விட்டுச் சென்ற கண்பட்டி.இவர்களுக்குப் பலபண்பாட்டியத்தைத் தன்னியல்பாகக் கொண்டு இயங்கிய வெங்கட் சாமிநாதன் போன்றாரின் தன்மையோ, நன்மையோ புலப்பட்டிருந்தால்தான் நான் வியந்திருப்பேன்.

[1] நேற்று இஸ்ரேலில் வசிப்பவரோடு நடந்த ஓர் உரையாடல் பற்றிக் கேட்டேன். மறுபுறம் இருந்த நபர், ஒரு யூதர். இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்குச் சில பத்தாண்டுகள் முன்னர் குடி பெயர்ந்தவராம், ‘இந்தியாவில் நான் யூதன், இஸ்ரேலில் நான் ஒரு இந்தியன்’ என்று சொல்லிச் சிரித்தாராம். அவரிடம் பேசியவர் தெரிவித்தார்.

-oOo-

Posted on Leave a comment

வலம் – அக்டோபர் 2016 இதழ் – கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்

கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்

எத்தனையோ வருடங்களாகிவிட்டன. உலகத் திரைப்பட விழா ஒன்றில் பார்த்த இத்தாலியப் படம் ‘லெப்பர்ட்’ (புலி). லாம்ப்படூஸோ என்ற இத்தாலியரின் நாவலை ஆதரித்த திரைப்படம். ஒரு ராஜவம்சம் அழிகிறது. அதற்கு எதிரான, அதை அழிப்பதற்கான நியாயமான காரணங்கள் எத்தனையோ இருக்கலாம். படத்தின் முடிவில் ராஜவம்சம் அழிகிறது. புரட்சியாளர்களின் கோலாகலக் கொண்டாட்டத்தோடு படம் முடிகின்றது. அந்த முடிவு எவ்வளவுதான் சரித்திர நியாயங்கள் கொண்டிருந்தாலும், மாற்றங்கள் எவ்வளவுதான் தவிர்க்க இயலாதது என்றாலும், புரட்சியாளர்களின் கோலாகலம், அநாகரிகமாகவும், கண்ணியமற்றதாகவும், ஓர் அராஜகத்தின் வெளிப்பாடாகவும் (இந்தப் புரட்சியை, அராஜகத்தை எதிர்த்த புரட்சி என்பது ஒரு விடம்பனம்) இருந்தது. காரணம், முந்தைய சமுதாயம் சார்ந்தது எதுவாயினும் – அது கலைப் பொருளோ, கலை உணர்வோ – அது வேண்டப்படாததே, அழிக்கப்பட வேண்டியதே என்பதே புரட்சியாளரின் எண்ணமாக இருந்து வருகிறது.

இது வரலாறு முழுவதும் திரும்பத் திரும்ப நிகழும் காட்சி. வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் அதே வரலாற்று நிகழ்வைத் திரும்பவும் நிகழ்த்திக் காட்டும் சாபத்திற்காளாவார்கள் என்ற ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. இதை அறிந்தவர்களும் திரும்பத் திரும்ப இதையே செய்துவருவது ஒரு விடம்பனம். எல்லாப் புரட்சியாளர்களும் தரும் ஒரு கொள்கை விளக்கம் உண்டு. மதிப்பீடுகளின் மாற்றம் என்பார்கள். அம்மதிப்பீடுகளைத் தாம் நிராகரிப்பதாகவும் சொல்வார்கள். ஆனால் கலைப்பொருட்களும் கலை உணர்வுகளும் இம்மதிப்பீடுகளையெல்லாம் மீறி எழுபவை.

ஒரு சமூக நிலையை, கட்டுமானத்தை, எதிர்த்தெழும் புரட்சியாளர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் செயலாற்றுபவர்களாகவும், கலை உணர்வு இல்லாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அத்தோடு வேறு எவ்விதச் சிந்தனையையும் அனுமதிக்காதவர்களாக, தம் பார்வைக்கு மீறியவற்றைச் சகித்துக் கொள்ளாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

உலகிலேயே அதற்கு இணையான ஒரு கலைச் சின்னம் இல்லை எனப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான, பாமியான் புத்தர் சிலையைக் குண்டு வைத்துத் தகர்த்த தாலிபான் தீவிரவாதிகளின் காரணம் அத்தகைய ஒன்று. சங்கீதம், ஓவியம், நாடகம், சிற்பம் என எந்தக் கலையின் வெளிப்பாடும், அது அம்மதத்தீவிரவாதிகளின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டது. எண்ணற்ற கிரேக்க, பௌத்த கலைப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆப்கன் அருங்காட்சியகங்கள் சின்னாபின்னப் படுத்தப்பட்டன. அவை தம் ஆட்சி எல்லையிலிருந்து அகற்றப்பட்டால் போதும் என்ற அளவில்கூட அவர்கள் பகைமை கட்டுப்பட்டதல்ல. பாமியன் புத்தகரைப் பாதுகாப்பாகத் தம் நாட்டிற்கு தம் செலவில் எடுத்துச் செல்ல அனுமதி கோரிய ஸ்ரீலங்காவின் கோரிக்கை மறுக்கப்பட்டு, அச்சிலைகள் தகர்க்கப்பட்டன.

இத்தீவிரம் சில இடங்களில் சில காலங்களில் அதிக காலம் நீடிப்பதில்லை. சீனப் புரட்சியின்போதும் பின் அது தீவிரமடைந்து, கலாசாரமே அல்லாத ‘கலாச்சாரப் புரட்சி’ என்று பெயரிடப்பட்ட அராஜகம் தலைவிரித்தாடிய போதும், அநேக சரித்திரச் சின்னங்கள், புராதனக் கட்டடங்கள் அழிக்கப்பட்டன. இவை அத்தனையும் கவிஞர் என்று சொல்லப்பட்ட மாவோவின் வழிகாட்டுதலில், அவரது ஆணைப்படி நடந்தன. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகப் போகிறது. அச்சின்னங்களை, கட்டடங்களை மீண்டும் பழைய வடிவில் புனரமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. கலைப்பொருட்கள், கலை உணர்வு மாறிவரும் சமூக மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவை என்பது மாவோ என்ற கவிஞருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவருக்குப் பின் வந்த வெறும் கட்சிப் பிரமுகர்களுக்கு, தலைவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பாமியான் புத்தரைத் திரும்ப உருவாக்குவது எப்படி? ஆப்கன் அருங்காட்சியகத்திலிருந்த கிரேக்க, பௌத்த கலைப் பொருட்களைத் திரும்பப் பெறுவது எப்படி?

இம்மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடும் மனதில் எழும் பகைமை உணர்வு, பொறாமையையும் தன்னுள் ஒரு தூண்டுணர்வாகக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆப்கன் பாலைவனத்தில் விஸ்தாரத்தில் இக்கலைப் பொருட்களையும் சின்னங்களையும் அழித்துவிட்டால், நிகழ்ந்த சரித்திரத்தை அழித்து விட்டதான வெற்றிக் களிப்பும் தோன்றும்.

சில வருஷங்களுக்கு முன்பு, நான் டெல்லியில் இருந்த காலத்தில் சிற்சில இடைப்பட்ட காலங்களில் பாகிஸ்தான் தொலைக்காட்சியைப் பார்க்க முடிந்தது. பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை அது தடைப்படுத்தப்பட்டது. அப்போது பார்க்க இயன்ற காலங்களில், மதப்பிரச்சாரம் பற்றியோ, குர் ஆன் பாடங்கள் பற்றியோ வரும் பகுதிகளில், இஸ்லாம் தோற்றம், முகம்மது நபியின் தோற்றம் அல்லது குர் ஆனின் தோற்றம் பற்றிச் சொல்லும்போது, அதற்கு முன் உலகம் இருள் சூழ்ந்திருந்ததாகவும் முகம்மது நபியின் வாயிலாக, குர் ஆன் தோற்றத்தோடுதான் உலகில் ஒளியே தோன்றியதாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும். கி.பி. 570க்கு முந்திய உலகமே இருள் சூழ்ந்த உலகம்தான் அவர்களுக்கு.

இந்த உணர்வுத் தீவிரம்தான் பாமியான் புத்தரைக் குண்டு வெடித்து அழிக்கச் செய்திருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த சிற்பங்களிலேயே புத்தரின் உருவம்தான் உன்னதமான சிகரப் படைப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சில புத்த வடிவங்களைப்போல அழகும் சாந்தமும் நிறைந்த, இவற்றுக்கு இணையாகச் சிற்ப வடிவங்கள் இருக்கக்கூடுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும். சிலர் மோனலிஸா புன்னகையைப் பற்றிச் சொல்லி மாய்ந்து போவார்கள்.

அதுபோன்ற ஒரு மாய, புதிர்த்தன்மை கொண்ட தெய்வீகப் புன்னகை புத்தர் வடிவங்கள் பலவற்றின் இதழ்களில் தவழும். சாதாரணமாக, இயல்பான சூரிய ஒளியில் பார்க்கும்போதே. சிறந்த தேர்ச்சி பெற்ற ஒளி அமைப்பாளனின் ஒளி வண்ண அமைப்பில் அதன் அழகுச் சின்னம் பளிச்சிட்டுத் தெரியும். அது ஒரு மாயப்புன்னகைதான்.

அத்தகைய புன்னகைக்கு இணை எங்கு இருக்கிறது என்று ஒருசமயம் கேள்வி எழுந்தபோது, பம்பாய்க்கு அருகே ஓர் தீவில் இருக்கும் எலிஃபெண்டா குகையில் இருக்கும் திருமூர்த்தியின் வடிவம் என் நினைவுக்கு வந்தது. அதன் பிரம்மாண்டம், அதன் தேர்ந்த கலை வடிவம், அதன் அழகு, அந்த இதழ்களில் வடியும் புன்னகை, சில புத்த வடிவங்களுக்கு இணையான புன்னகையாகும். அதன் அழகினும் கலை நேர்த்தியும் அவற்றில் உண்டு. நம் சிறந்த பொக்கிஷங்களில் இத்திருமூர்த்தி உருவமும் ஒன்று. திருவெண்காடு ரிஷபவாகன மூர்த்தி வெண்கலச் சிற்பம்போல, தீதார்கஞ்ச் யக்ஷியைப்போல, ஒரு சிகரப் படைப்பு என்று அச்சிற்பத்தைக் கூறலாம். 17ம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்கள் இங்கு கால் பதித்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு, இம்மூர்த்திகளைக் குறியாகக் கொண்டார்களாம். இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர்களின் அதிகக் கொடூரமான மதமாற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அக்காலத்தில் போர்ச்சுகீசியர்களாகவே இருந்தனர்.

அவர்களது துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குக் குறி எலிஃபெண்டா குகை திருமூர்த்திச் சிற்பம். தாலிபான்களுக்கு பாமியான் புத்தர் சிலை. ஈராக் யுத்தம் தொடங்கும்முன் அமெரிக்கர்கள் தம் துப்பாக்கிப் பயிற்சிக்குக் குறியாகப் பயன்படுத்தியது ஸதாம் ஹூஸேனின் உருவம்.

இதன் விளைவுகள் பாமியான் புத்தர் சிலை சின்னாபின்னப்படுத்தப்பட்டதற்குக் குறைந்ததல்ல. இத்தாக்குதலுக்கு உந்துதலாக இருந்த வெறியுணர்வு தாலிபான்களின் மதவெறி உணர்வுக்குச் சற்றும் குறைந்ததல்ல.

அமெரிக்கர்கள் நீண்ட நெடிய சரித்திரம் அற்றவர்கள். ஒரு நாகரிகம், பண்பாட்டு வரலாறு என சொல்லிக் கொள்ளத் தகும் அளவுக்கு ஏதும் அற்றவர்கள். கலைகளில் அவர்கள் உலகுக்கு அளித்தது ஏதும் சொல்லிக்கொள்ளும் தகுதி அற்றது. ஆக்டபஸ் தன் கால்களைப் பரப்பி, தன் ஆக்கிரமிப்பை நிலைநிறுத்துவதுபோல, தம் ஆக்கிரமிப்பின் வழியிலேயே தம்முடையது எதையும் – தரமற்றதைக் கூட நிலைநிறத்திக் கொள்ளும் குணத்தவர்கள் அமெரிக்கர்கள். எதிலும் அவர்களது பங்களிப்பு, பிரம்மாண்டமே. பிரம்மாண்டமே ஒன்றின் குணத்தையும், பலத்தையும், நிரூபிப்பதாக ஸ்தாபித்துவிடும் மரபு அவர்களது. அவர்களுடைய கட்டடங்கள், சாலைகள் அத்தகையன.

(13.5.2003 அன்று எழுதப்பட்டது)

(சந்தியா பதிப்பகத்தின் வெளியீடான ‘கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)

-oOo-
Posted on Leave a comment

வலம் நவம்பர் 2016 இதழ் (மலர் 1, இதழ் 2)

வலம் நவம்பர் 2016 இதழில்

  • புள்ளிகள் கோலங்கள் – பாஸ்கர் நடராஜன்
  • கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் – பி.ஆர்.ஹரன்
  • ஊழலும் கலாசாரமும் – அருணகிரி
  • பெர்சிபோலிஸ் – அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ – சந்திரசேகரன் கிருஷ்ணன்
  • மின்னாற்றல் பற்றாக்குறையும் சில தீர்வுகளும் – சுதாகர் கஸ்தூரி
  • பகைவனுக்கருள்வாய்: இந்தி சீன் பாய் பாய் – ஆமருவி தேவநாதன்
  • மூத்த குயில் எஸ். ஜானகி – ரஞ்சனி ராம்தாஸ்
  • அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – ராஜேஷ் குமார்
  • ஆலயங்களைப் பாதுகாத்த நீதிமன்றம் – எஸ்.பி. சொக்கலிங்கம்
  • இந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் – ஹரன் பிரசன்னா
  • எல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி – அரவிந்தன் நீலகண்டன்
  • காவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள் – ஜடாயு
  • தமிழகத்தில் பள்ளிக்கல்வி – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

வலம் இதழுக்கு ஆன்லைனில் சந்தா செலுத்த:  https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

வலம் இதழை ஆன்லைனில் இ-புத்தகமாக வாசிக்க: டெய்லி ஹண்ட் | கூகிள் புக்ஸ்