![](https://valamonline.in/wp-content/uploads/2017/03/valam2Bdecember2Bwrapper.png)
வலம் டிசம்பர் 2016 இதழ் – முழுமையான படைப்புக்கள்
![](https://valamonline.in/wp-content/uploads/2017/03/valam2Bdecember2Bwrapper.png)
![]() |
ராஜீவ் மல்ஹோத்ரா |
![]() |
அரவை இயந்திரம் |
‘பேச்சுரிமை மறுக்கப்படுகிறது’, ‘கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது’, ‘சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’, ‘பாசிச அடக்குமுறைகள் அவிழ்த்து விடப்படுகின்றன’ போன்ற கூக்குரல்கள் கடந்த இரு ஆண்டுகளாக ‘அறிவுஜீவி’களால் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ‘மனம் உடைந்து’, முன்னர் அரசிடமிருந்து பெற்ற விருதுகளைத் திருப்பித்தர பேரறிவாளர்கள் முனைந்து செயல்பட்டதும், இது உண்மை என்று நம்பிய அயல்நாட்டுப் பத்திரிகைகள் ஓலமிட்டு அழுததும் நாம் சமீபத்தில் கண்டவை.
அப்படிக் கூக்குரலிட்டவர்களில் முதன்மையானவர் நயந்தாரா சேஹல் என்னும் எழுத்தாளர். இவர் பண்டித நேருவின் உறவினர். தனக்கு அளிக்கப்பட்ட சாஹித்ய விருதைத் திரும்ப அளித்தார் இந்த எழுத்தாளர். இவரும், இவரைப்போன்ற பலரும் அடிக்கடிப் பேசிவரும் மொழி, ‘பாரதத்தில் பேச்சுரிமையை நிலை நாட்டியவர் நேரு; அவர் கடைசி வரை பத்திரிகைச் சுதந்திரம், பேச்சுரிமை என்பதையே முழுமூச்சாகக் கொண்டிருந்தார். அவரது கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன’ என்பதே. அது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம்.
விடுதலை அடைந்த பின் 17 ஆண்டுகள் பாரதத்தை வழிநடத்திய பண்டித நேரு அவர்கள், பத்திரிகை சுதந்திரம் தூக்கிப் பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பலமுறை, பல கூட்டங்களில் சொல்லியே வந்திருந்தார். மார்ச் 8, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது,(1) நேரு பேசியது: “நாங்கள் பத்திரிகைகளிடம் அளவுக்கதிகமாகவே நீக்குப் போக்காக இருந்து வருகிறோம். அவர்கள் எங்கள் கொள்கைகளுக்கு எதிராக எழுதினாலும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதைத் தெரியப்படுத்தி இருக்கிறோம்” என்றார். நாடு அன்று இருந்த சூழலில் அவர் அப்படிப் பேசியது அவரைப் பெரிய முற்போக்காளர் என்றே காட்டியது.
பின்னர் டிசம்பர் 3, 1950 அன்று நாளேடுகளின் ஆசிரியர்கள் கூட்டத்தில் நேரு பேசியது மிக முற்போக்கான ஒன்றாகப் பார்க்கப்பட்டது(2). “பத்திரிகைகள் எடுத்துக்கொண்டுள்ள உரிமைகள் அளவுக்கதிகமானவை, ஆபத்தானவை என்று அரசு நினைத்தாலும், பத்திரிகைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை… அடக்கப்பட்ட, சுதந்திரங்களற்ற ஊடகங்களைக் கொண்டிருப்பதைக்காட்டிலும், ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக் கூடிய, கட்டுப்பாடற்ற சுதந்திரங்களைக் கொண்ட இதழ்களை இயங்க அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடே” என்றே பேசினார்.
ஆசிய ஜோதி பண்டித நேரு அவர்களின் வாக்கில் கருத்துச் சுதந்திர தேவி நடமாடாத நாளே இல்லை என்னும்படியாக, பெருவாரியான பொதுக்கூட்டங்களில், பத்திரிகையாளர் சந்திப்புக்களில் என்று பல நேரங்களில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.
நாட்டிற்குத் தீமை விளையும் என்றாலும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் காப்போம் என்பதாக இருந்த நேருவின் நிலைப்பாடு ஓராண்டிலேயே தலைகீழாக மாறியது.
சென்னையில் இருந்து ரொமேஷ் தாப்பர் என்பார் நடத்திய ‘க்ராஸ் ரோட்ஸ்’ என்னும் இடதுசாரிப் பத்திரிகை நேருவின் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியபடி இருந்தது. இது காங்கிரஸாருக்குப் பெரும் நெருடலாகவே இருந்து வந்தது. இப்பத்திரிகையை எதிர்த்து அன்றைய சென்னை மாகாண அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து, ‘அரசியலமைப்புச் சட்டத்தின் படி பேச்சுரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை மறுத்து பத்திரிகையைத் தடை செய்ய இயலாது’ என்று தீர்ப்பளித்தது(3). இது காங்கிரஸ் அரசையும் நேருவையும் பாதித்தது.
அதேநேரம் பஞ்சாப் அரசு ‘ஆர்கனைசர்’ என்னும் பத்திரிகையையும் தடை செய்ய வேண்டி பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. சென்னை வழக்கு போன்றே ‘அடிப்படை உரிமை’யை மறுக்க முடியாது என்னும் விதமாக இந்த வழக்கும் தோல்வி அடைந்தது.
இந்த இரு தீர்ப்புகளும் காங்கிரஸ் அரசை மிகவும் பாதித்தன. ‘அடிப்படை உரிமை’ என்பதால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. பலவாறு குழம்பிய காங்கிரஸ் மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடிவெடுத்தது. ஆம். ஜனவரி 26, 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், ஓராண்டுக்குள், முதல் முறையாக, பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் என்னும் அடிப்படை உரிமைகள் விஷயமாகத் திருத்தப்பட வேண்டும் என்று முடிவானது. இந்த முயற்சியை முன்னெடுத்தவர், அதுவரை பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலனாக அறியப்பட்ட நேருவேதான்.
மே 10, 1950 அன்று சுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மே 29 அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது நேரு, “பத்திரிகைச் சுதந்திரம் என்பது கட்டற்றது அல்ல. அதற்கான கட்டுப்பாடுகளுக்குள் அது அடங்குவதாக இருக்கவேண்டும். நடைமுறையையும், நாட்டின் சட்டங்களையும் மனதில் கொண்டு பத்திரிகைகள் நடந்துகொள்ள வேண்டும்”(4) என்றார். ஜூன் 18, 1951ல் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது சட்டத் திருத்தம்.
‘கட்டுப்பாடற்ற சுதந்திரம்’ என்பது அல்ல என்றாகி, ‘வரைமுறைகளுக்குள் அடங்கும் சுதந்திரம்’ (Reasonable Freedom) என்று ஆனது. 1950 டிசம்பர் மாதம் துவங்கி 1951 ஜூன் மாதத்திற்குள் கருத்துச் சுதந்திரம் மலை முகட்டிலிருந்து அதல பாதாளத்தில் விழுந்தது.
பாரதத்தில் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி நூல்கள் தடை செய்யப்படும் போதும், இதே ‘நேரு கொடி’ தூக்கப்படும். ஆனால் எழுத்தாளரான நேருவின் காலத்திலேயே நூல்கள் தடை செய்யப்பட்டன என்பதை யாரும் வெளியே சொல்வதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபக மறதி நோய் பரவுகிறதோ என்னவோ.
நேரு காலத்தில் தடை செய்யப்பட்ட நூல்கள் இவை:
Nine hours to Rama – Stanley Wolpert
1962ல் இந்திய அரசு, கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய ‘Nine hours to Rama’ என்னும் நாவலைத் தடை செய்தது. மஹாத்மா காந்தியின் இறுதி நாள் பற்றிய புனைவு நூலான இது, அரசு, காந்திக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என்னும் கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தது.
Lotus and the Robot – Arthus Koestler
ஆர்தர் கோஸ்லர் என்பார் எழுதிய ‘Lotus and the Robot ‘ என்னும் நூலை 1960ல் இந்திய அரசு தடை செய்தது. கோஸ்லர் தனது ஜப்பானிய மற்றும் இந்தியப் பயணங்களைப் பற்றி எழுதிய இந்த நாவலில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இருண்ட எதிர்காலமே இருப்பதாக எழுதியிருந்தார்.
The Heart of India – Alexander Campbell
அலெக்ஸாண்டர் கேம்பெல் எழுதிய ‘The Heart of India’ என்னும் நூல், இந்தியாவின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளைக் கேள்வி கேட்பதாக இருந்தது. நேரு பற்றியும், காங்கிரஸ் கட்சி பற்றியும் அவதூறான கருத்துக்களை இந்த நூல் கொண்டிருந்தது.
Lady Chatterle’s Lover – D.H.Lawrence
டி.எச்.லாரன்ஸ் எழுதிய ‘Lady Chatterle’s Lover – D.H.Lawrence’ என்னும் நூலில் பாலியல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பிரிட்டன் முதலில் தடை செய்தது. பின்னர் தடை நீக்கப்பட்டாலும், இந்திய உச்ச நீதிமன்றம் இந்த நூலைத் தடை செய்தது. ஆயினும் இந்தத் தடையில் நேருவின் பங்கு பற்றி தெரியவில்லை.
பிறந்த குழந்தையைப் பாதுகாக்க வேண்டி சில முன்னேற்பாடுகள் செய்வது போல், விடுதலை அடைந்த சில ஆண்டுகளுக்குள் பாரதத்தின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் போக்குடைய ஏடுகளை நேரு அடக்கி வைத்து நாட்டைக் காப்பாற்ற முயன்றார் என்று நாம் இன்று நினைத்துப்பார்க்கலாம். ஆனால் அதேபோல் இன்னும் பல மடங்கு ஊறு விளைவிக்கக்கூடிய விஷமப் பிரசாரம் செய்யும் ஊடகங்கள் நாட்டில் பெருகிவிட்ட நிலையில், ஊடக தர்மம் என்பதே தேசியத்தை எதிர்ப்பதுதான் என்னும் விதமாக ஆகிவிட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவது தெரியும் நிலையிலும்கூட, அவர்களை அடக்கவென்று சட்டங்களில் மாற்றங்கள் ஏதும் நடைபெறாத தற்காலத்தில், ‘கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்னும் கூக்குரல் எழுவது என்ன நியாயம்?
விரைவில் உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் வர இருக்கும் வேளையில், கருத்துச் சுதந்திரப் போராளிகள் மறு அவதாரம் எடுக்கலாம். விருதுகளைத் திரும்ப வழங்கும் ஆராதனைகள் துவங்கலாம். அப்போது நாம் நினைவில் கொண்டு கேட்க வேண்டிய கேள்வி: கருத்துச் சுதந்திரத்தை முதலில் களங்கப்படுத்தியது யார்?
அடிக்குறிப்புகள்:
(1), (2) மற்றும் (4) – https://www.sarcajc.com/Nehru_on_Indian_Press.html
(3) https://indiankanoon.org/doc/456839/
தாத்தா… தாத்தா…
அரைக்காசுக்கு ரெண்டு வாழைப்பழம் வாங்கினேன்
ஒண்ணைத் தின்னேன் ஒண்ணை பொந்துக்குள்ள வச்சேன்
பொந்தும் பொந்தும் பொருதிப் போச்சு
பொந்த வெட்டித் தராத தச்சன்
தச்சன அடிக்காத ராஜா
ராஜா காட்டை அழிக்காத மான்
மானைப் பிடிக்காத வேடன்
வேடன் வலையைக் கடிக்காத எலி
எலியைப் புடிக்காத பூனை
பூனையைக் கட்டி வைக்காத பாட்டி
பாட்டியை அடி தாத்தா
பழத்தை எடுக்கவும், எடுக்க வைக்கவும் ஒவ்வொரு ஆளாகக் குருவி மேல்முறையீடு செய்யும். ஒவ்வொரு ஆளிடமும் கதையைத் தொடக்கத்தில் இருந்து சொல்லும். குழந்தைகள் இதைக் கேட்கையில் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் ஆற்றல் வளரும்.
தச்சனில் இருந்து பாட்டி வரை செய்ய மறுத்ததை தாத்தா கருணைகொண்டு செயல்படுத்துவார். தாத்தா பாட்டியை அடிக்கப்போக, பாட்டி பூனையைக் கட்டிப் பிடிக்க, அது எலியைத் துரத்த, வேடனுடைய வலையை எலி கடிக்க என்று பின்னாலேயே போய், கடைசியில் தச்சன் குருவிக்கு மரப்பொந்தைத் திறந்து வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்து விடுவான். கேட்க மிகவும் சுவாரசியமாய் இருக்கும் இந்தக் கதையில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது.
உணவுச் சங்கிலி (food chain) பற்றிப் படித்திருப்போம். தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் கரியமில வாயுவை நீருடன் சேர்த்து கார்போஹைட்ரேட்களை உற்பத்தி செய்யும். அவற்றைத் தாவர உண்ணிகள் சாப்பிட, மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகளை வேட்டையாடி உண்பதன் மூலம், தாவரங்கள் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெறுகின்றன. இவை எல்லாம் இறந்த பின்னர் வல்லூறு போன்ற பிணந்தின்னிகள் (scavengers) அந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாமிசத்தை உண்ணும். மீதம் கிடக்கும் எலும்பு உரமாகும். இப்படித்தான் உணவுச் சங்கிலி நிறைவடையும். இந்தச் சங்கிலியில் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்தாலும் சிக்கல்தான். உதாரணமாய் புலிகள் குறைந்தால் தாவர உண்ணிகளுக்குக் கொண்டாட்டம். அவை ஏகத்துக்கும் பெருகி காடு முழுக்க மேயும். மரமாக எதையும் வளர விடாமல் செடியிலேயே மொட்டையடிக்கும். மண்ணில் புல்லோ செடியோ இல்லையெனில் மண் அரிக்கப்படும். சத்து நிறைந்த மண் அரிக்கப்பட்டுவிட்டால் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும். இதை எப்படிச் சரிசெய்வது என்பதன் ஒரு வழியைத்தான் நாம் முதலில் சொன்ன கதையில் பார்த்தோம். அதில் நாம் பார்த்த தச்சன், ராஜா என எல்லோரையும் ஒன்றன்மேல் ஒன்றாய் இருக்கும் உணவுச் சங்கிலிபோல் எடுத்துக் கொள்வோம். பிரச்சினை உள்ள ஒரு சங்கிலியில், அதன் மேல்மட்ட ஆளை சரிசெய்கையில் எல்லாம் வழிக்கு வருகிறதல்லவா? உணவுச் சங்கிலியில் இப்படிப்பட்ட மேல்மட்ட ஆளை apex predator என்கிறார்கள். ஆற்றலை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகையில், அதிக உயிரிகள் இருக்கும் பாதையையே இயற்கை தேர்ந்தெடுக்கும். நிறைய வயிறுகள் நிறைகையில் அது சமநிலையுடன் இயங்கும். அப்படிக் கொன்று புசிக்கும் ஓர் உயிரினம் மறையத் தொடங்கினால் அது சூழியலுக்குப் பெரும் சேதமாக முடியும்.
இவ்வாறு வேட்டையாடும் ஒரு விலங்கின், உணவுச் சங்கிலியின் மேல்மட்டத்தில் இயங்கும் ஒரு விலங்கின் எண்ணிக்கை மாறுவது, அடிமட்டம் வரை பாதிக்கும். இதனை trophical cascading என்கிறார்கள். Troph என்னும் சொல் உணவு தொடர்பானது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை சில காரணங்களால் குறையத் தொடங்கியது. ஓநாய்களின் உணவான கடமான்கள் (Elk) அதிகம் வேட்டையாடப்பட்டதால் உணவு குறைந்தும், பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை வேட்டையாடப் போகையில் சுடப்பட்டும் ஓநாய்கள் நூற்றுக் கணக்கில் இறந்தன. இதன் காரணமாய்க் கடமான்களை உணவாகக் கொள்ள ஆளில்லாமல், வசவசவென்று பெருகி புல்வெளிகளையெல்லாம் மேய்ந்து தீர்த்தன. வில்லோ மரங்களின் கன்றுகளை அவை தின்றதால், புதிதாய் மரங்கள் இன்றி, மண் அரிப்பும் பறவைகள் இடம் பெயர்வதும் நடந்தது. கொல்ல ஆளில்லை என்னும் கர்வத்தில் அவை பேட்டை வஸ்தாது போல் திரிந்தன. கொரித்துண்ணி (Rodents) வகைகளில் காடுகளின் நலனுக்கு முக்கியமானதாய்க் கருதப்படும் பீவர்கள் (Beavers), மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துக் கொண்டு போய் அணை கட்ட, மரம் இல்லை. அணை இல்லாமல் நீர் தேங்காததால் மீன்வளம் பாதிக்கப்பட்டது. பீவர்கள் கட்டும் அணையில் தேங்கும் நீரே மண்ணின் ஈரப்பதத்துக்கு ஆதாரம். அணையும் எனவே நீரும் இல்லாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்தது. இது மண்ணின் நுண்ணுயிரி விகிதத்தைப் பாதித்தது. அங்குள்ள வ்யோமிங் (Wyoming) மாகாணத்தின் Yellowstone National Park இந்தச் சூழியல் சிக்கலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் சூழியல் ஆராயப்பட்டு, வனவியல் மற்றும் சூழலியர் அறிஞர்கள் Trophical Cascadingஐ நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டனர். அதற்காக அருகில் இருக்கும் காடுகளில் இருந்து 41 ஓநாய்கள் இங்குக் கொண்டு வந்து விடப்பட்டன. அதன்பிறகு நடந்த மாற்றங்கள் ஆச்சரியமூட்டுபவை.
1. ஓநாய்கள், அங்குப் பல்கிப் பெருகியிருந்த கடமான்களை வேட்டையாடின. இதனால் அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது.
2. தன்னை வேட்டையாடும் ஓர் உயிரினம் இருப்பதை உணர்ந்த அந்த மான்கள், இடம்விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருந்தன. அதனால் ஒரு மரம் முழுவதுமாக மொட்டையடிக்கப்படுவது நின்று போனது.
3. மாட்டிக்கொண்டால் தப்புவதற்கு கடினமான பள்ளத்தாக்குகளும் தாழ்வான பகுதிகளும் ஆபத்து என்று உணர்ந்து, அங்கெல்லாம் செல்வதை மான்கள் தவிர்த்தன. இதனால் அங்குப் புற்களும் மரங்களும் செழித்து வளர்ந்தன.
4. மரங்கள் வளரத் தொடங்கி, மண்ணை வேர்கள் பிடித்துக் கொண்டதால், காற்றாலும் நீராலும் ஏற்படும் மண் அரிப்பு தடுக்கப்பட்டது.
5. செழித்து வளர்ந்த மரங்கள், வண்டுகளையும் தேனீக்களையும் அழைத்துவந்தன. அவற்றால் நிறையப் பழங்கள் உருவாகவும், கரடிகளும் பறவைகளும் வந்தன.
6. மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துப்போய் பீவர்கள் அணைகட்டின. பீவர் அணைகளுக்கு வில்லோ மரங்கள் முக்கியம். நிறைய வில்லோ மரங்கள் இருக்கவும் அவை நிறைய அணைகள் கட்டின. அங்குத் தேங்கிய நீரில் மீன்கள் வளர்ந்தன. மண்ணை அரிக்காத நதி தன் பாதையை சீர்செய்துகொண்டு அழகாகப் பாயத்தொடங்கியது. ஓநாய்கள் வருவதற்கு முன் ஒரே ஒரு பீவர் அணை இருந்த பூங்காவில் இன்று ஒன்பது அணைகள் இருக்கின்றன.
இப்படி கண்ணுக்குத் தெரிய பல மாற்றங்கள். அந்த ஓநாய்கள் பல மிருகங்களைக் கொன்று தின்பது மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் அவை ஏகப்பட்ட உயிர்களை வாழ வைக்கின்றன. புல் நுனியில் இருந்து பூதாகரமான கரடிகள் வரை. 2015ம் வருடத்தில், ஓநாய்கள் கொண்டுவந்து விடப்பட்ட பத்தாவது ஆண்டில், அந்தப் பூங்கா ஆச்சர்யப்படத்தக்க வகையில் மாறியிருக்கிறது. வெறும் 41 ஓநாய்களை அங்கு விடுதல் என்பது ஒரு முழு உணவுச் சங்கிலியை மீட்டெடுத்துக் கொண்டுவந்திருக்கிறது.
ஓர் உயிரினத்திற்கு வலுவான சந்ததி உண்டாவது வலுவான பெற்றோரால் மட்டுமே சாத்தியம். அப்படி வலுவில்லாத ஓர் உயிருக்குப் பிறக்கும் உயிரும் வலுவில்லாமல்தானே இருக்கும். அதைச் சரிசெய்ய, வேட்டையாடுகையில் வலுவில்லாத விலங்கைக் குறிவைத்து வேட்டையாடி உண்டு, அந்த விலங்கின் ஜீன் தொகுப்பை (gene pool) ஓநாய்கள் செறிவூட்டி வைக்கும்.
இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நமக்குள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
● நம்முடைய காடுகளையும், தேசியப் பூங்காக்களையும் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?
● மேற்குத் தொடர்ச்சி மலைகள், சுந்தரவனக் காடுகள் – இப்படித் தனிச்சிறப்பு வாய்ந்த காடுகளின் உணவுச் சங்கிலியை நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோமா?
● ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கும் மரங்கள் மற்றும் உயிரிகளை (Endemic species) பற்றியும் அவற்றின் உணவுச் சங்கிலிப் பங்களிப்பு பற்றியும் ஆய்வுகள் இருக்கின்றனவா?
● இருக்கிறதெனில் சமநிலை பிறழ்ந்த வனங்களில் இதுபோன்ற trophic cascading செய்ய வாய்ப்புகள் உண்டா என்று ஆராய்ந்திருக்கிறோமா?
● குறிப்பிட்ட உயிரினங்களின் முக்கிய உணவாக (staple food) இருக்கும் மரங்களையும், குறிப்பிட்ட உயிர்களாலேயே பரப்பப்படும் மர விதைகளையும் பற்றிய பட்டியல் இருக்கிறதா?
வெறுமனே விலங்குகளையும் காடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்று குரல்கொடுப்பது வேலைக்காகாது. வனவியல் அறிஞர்கள், காட்டில் வாழும் காட்டை வீடாகக் கொண்ட பூர்வகுடிகளின் தொல்லறிவோடு கை கோக்காத வரை இதற்குத் தீர்வு கிடைக்காது. அறுப்பதற்கு அல்லாமல் கொஞ்சம் அணைப்பதற்கும் நம் கைகள் வனங்களை நோக்கி நீளட்டும். அங்கிருந்து கிளைகள் எல்லாம் ஆதூரமாக நம்மை நோக்கி நீளும். அதுதான் நாம் அந்த இயற்கை அன்னைக்குச் செய்யும் உண்மையான கைம்மாறு.
-நா. முத்துக்குமார்
வங்கக்கடலில் புயல் மையம் கொண்டால் மாயவரத்தில் மழை வரும். பெருமழைக் காலங்களில் கொல்லைப்புறத்துக் கிணறு மழை நீரால் நிரம்பி வழியும். இரும்புச் சகடையும் கயிறும் இல்லாமல் தண்ணீரை மொண்டு, தரையில் விடுவது மழைக்காலங்களில் எங்களுக்குப் பிடித்தமான மெகா விளையாட்டு. கோடைக்காலங்களில் கிணறு வேறுவிதமாகக் காட்சியளிக்கும். கிணற்றடியில் பல்லாங்குழி விளையாடுவது கோடையின் வெம்மையைக் குறைக்கும். கவிஞர் முத்துக்குமாரின் கவிதையைப்போல் தூர் வாருவது வருடாந்திர உற்சவம். முத்தாட்சியம்மன் கோயில் தெரு டவுசர் பையன்களுக்கு அம்பிகாவை போஸ்டரில் பார்ப்பதைவிடக் கிறங்கடிக்கும் இன்னொரு விஷயமும் உண்டு. தூர் வாரும் சட்டி மேலே தூக்கிக் கொண்டு வரும் விளையாட்டுப் பொருட்களை வேடிக்கை பார்ப்பதுதான்.
பின்னாளில் ஓமலூரில் நண்பர் வீட்டுத் தோட்டத்தில் பிரமாண்டமான கிணற்றைப் பார்க்க முடிந்தது. மாயவரத்துக் கிணறுகளைவிட நூறு மடங்கு பெரியதாக இருந்தது. கிணறுகளில் தண்ணீர் இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதை தர்மபுரி, செங்கல்பட்டு மாவட்டத்துக் கிணறுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. படிக்கட்டு வசதியெல்லாம் இருந்தும், கிணற்றின் பிரமாண்டம் பயமுறுத்தியதால் உள்ளே இறங்குவதற்குத் தைரியமில்லை.
கிணறுகள், எண்பதுகளோடு இறந்து போய்விட்ட ஒரு பொற்காலத்தின் மிச்சம். அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன், குஜராத் செல்லும் வரை.
குர்ஜரி யாத்ரா என்று பெயரிட்டிருந்தாலும் நதியைத் தேடி ஒரு நெடும்பயணம் (ஜனவரி 2014ல் சென்ற பயணம்) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் பாரம்பரியக் குழுவின் சார்பில் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் நகரங்களான தோலவீரா, லோத்தல் போன்ற இடங்களில் உள்ள நீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் பயணத்தின் நோக்கம்.
டெல்டாவில் கிணறுகள் இருப்பதும், அதில் 365 நாட்களும் போதுமான தண்ணீர் இருப்பதும் ஆச்சரியமான விஷயமல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறத்தையே பார்க்கமுடியாத ஒரு உப்புப் பாலைவனமான கட்ச் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான கிணறுகள் உண்டு என்கிற செய்திதான் ஆச்சரியமளித்தது.
5ம் நூற்றாண்டு தொடங்கி 15 ம் நூற்றாண்டு வரை கட்ச் வளைகுடாவை உள்ளடக்கிய குஜராத்தில் படிக்கிணறுகளே பிரதான நீர் ஆதாரமாக இருந்திருக்கின்றன. லோத்தல், தோலவீரா செல்வதற்கு முன்னர், மழை நீர் சேகரிப்பில் முக்கியமானதாகவும் குஜராத்தின் கலை, கலாசார அங்கமாகவும் உள்ள படிக்கிணறுகளைப் பார்வையிட முடிவு செய்திருந்தோம்.
குஜராத் படிக்கிணறுகளில் முக்கியமானது ராணி கி வாவ். ஆனால், ராணி கி வாவின் பிரமாண்டத்தை உள்வாங்கிக்கொள்வதற்கு முன்னர் அதைவிட அளவில் சிறியதும், நீண்ட காலமாக அறியப்பட்டதுமான ஓர் இடத்தை முதலில் பார்த்தாகவேண்டும். அதுதான் அடாலஜ்.
அகமதாபாத்திலிருந்து அரைமணி நேரப் பயணம். புதிதாகக் கட்டப்பட்டுள்ள நர்மதா கால்வாயைக் கடந்து, காந்தி நகர் சாலையில் பயணித்தால் அடாலஜ் என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். தொலைவிலிருந்து பார்க்கும்போது நாயக்கர் காலத்து மண்டபங்களை ஞாபகப்படுத்தும். அருகே செல்லும்போதுதான் ஓர் அற்புதத்தின் தரிசனம் நிகழும்.
ஐந்து அடுக்கு மாடிகளைப் போல், ஐந்து அடுக்கு தரைத்தளங்களைக் கொண்டிருக்கிறது அடாலஜ் படிக்கிணறு. படிப்படியாக இறங்கிச்சென்று தண்ணீர் எடுக்கும்படியான அமைப்பு. ஒவ்வொரு தளத்திலும் காணப்படும் சிற்பம் மற்றும் தூண் வேலைப்பாடுகள் கண்களைக் கவருகின்றன. கடைசி படிக்கட்டில் நின்று, அடாலஜின் உயரத்தைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டம் புரியும்.
ஓர் அரிய கலைப் பொக்கிஷத்தைத் தரையில் புதைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு வழிபாட்டுக்குரிய கோவிலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைவிடப் பலமடங்கு அதிக முக்கியத்துவம், சாமானியர்கள் புழங்கும் கிணற்றுக்குக் கொடுத்திருப்பதன் உயர்வான எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
குஜராத் வரலாற்றுப் புத்தகத்தில் அடாலஜ் படிக்கிணறுக்கு சர்வ நிச்சயமாக ஒரு பக்கம் உண்டு. வகேலாவின் மன்னனாக இருந்த வீரசிம்மாவின் மனைவி ராணி ரூடாபாய், தன்னுடைய கணவனின் நினைவாகக் கட்டி முடித்ததுதான் இந்தப் படிக்கிணறு. அடாலஜ் என்றால் ‘சொர்க்கத்தின் ஆறு’ என்று அர்த்தம்.
11ம் நூற்றாண்டில் வீரசிம்மாவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, ரூடாபாயால் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மொத்த செலவு 7 லட்சம் டான்கஸ். (டான்கஸ் – இஸ்லாமிய ஆட்சியில் கூலி. 7 லட்சம் டான்கஸ் என்பது தோராயமாக ஐந்து லட்ச ரூபாய்க்குக் கூடுதலாக மதிப்புடையது.) அடாலஜின் முதல் தளத்தின் இரண்டாவது அடுக்கில் தென்படும் கிழக்கு நோக்கிய கல்வெட்டு வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சம்ஸ்கிருதத்தில்,தேவநகரி பாணியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு, ரூடாபாய் பற்றிக் குறிப்பிடுகிறது.
குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் முஸ்லிம்களால் ஆளப்பட்டபோது, வகேலா மட்டும் தனித்து ஆளப்பட்டு வந்திருக்கிறது. சுல்தான் மெஸ்முத் பெகடா மற்றும் வீரசிம்மாவுக்கு இடையேயான யுத்தத்தில் வீரசிம்மா கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வீரசிம்மாவின் மறைவுக்குப் பின்னர் சுல்தான், ரூடாபாய் தன்னை மணந்துகொள்ளக் கட்டாயப்படுத்தினான். ரூடாபாயும் சம்மதித்தாள். அதற்கு முன்னதாக, வீரசிம்மாவால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் இருந்த அடாலஜ் படிக்கிணற்றைக் கட்டி முடித்த பின்னரே திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று நிபந்தனை விதிக்கிறாள். சுல்தானும் ஒப்புக்கொள்கிறான்.
திட்டமிட்டபடி, படிக்கிணறு கட்டி முடிக்கப்படுகிறது. இந்து / முஸ்லிம் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களை உள்வாங்கிக்கொண்டு அடாலஜ், முக்கியமான கலாசாரச் சின்னமாக எழுப்பப்பட்டது. ரூடாபாய் அதில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கிறது இன்னொரு தரப்பு.
குஜராத் போன்ற வறண்ட மாநிலங்களில் மழை நீரைச் சேமிக்கவும், சேமித்ததைக் குடிப்பதற்குப் பயன்படுத்தவும் படிக்கிணறுகள்தான் உதவியிருக்கின்றன. அரச குடும்பத்தினர் மட்டுமல்ல, சாதாரணக் குடியானவர்களும் குடிநீர்த் தேவைகளுக்குப் படிக்கிணற்றையே நம்பியிருந்தார்கள். தண்ணீர்த் தேவைக்காக மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடமாகவும், வழிபாட்டு இடமாகவும், பயணம் மேற்கொள்பவர்கள் தங்குமிடமாகவும் இருந்திருக்கிறது படிக்கிணறு.
பெரு மழைக்காலங்களில் கிணறு நிரம்பி, முதல் தளத்திலேயே தண்ணீர் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தண்ணீர் குறையும்போது, அடுத்தடுத்த தளங்களுக்கு இறங்கிச்சென்றாக வேண்டும். 16ம் நூற்றாண்டு வரை, இப்பகுதியில் 700 படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கிணறுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் சில படிக்கிணறுகள் வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
தெற்கு வடக்காக நீண்டிருக்கும் அடாலஜ் படிக்கிணற்றை நாம் மூன்று வழிகளில் அணுக முடியும். தென்புறம் உள்ள மூன்று நுழைவாயில்கள் ஏதேனும் ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து, ஒவ்வொரு தளமாக இறங்கி, படிகளைக் கடந்தால், முடிவில் கிணற்றை அடைந்துவிடலாம். படிக்கிணற்றின் மொத்த நீளம் 75.3 மீட்டர். அகலம் 10 மீட்டர் இருக்கலாம்.
நுழைவாயில் எண்கோண வடிவைப் பெற்றிருக்கிறது. மூன்று நுழைவாயில்களையும் இணைக்கும் மண்டபமாக இருக்கிறது. எண்கோண வடிவிலான தளத்தை, 16 தூண்களும் தாங்கி நிற்கின்றன.
நுழைவாயிலின் கிழக்கிலும் மேற்கிலும் S வடிவ மாடம் உண்டு. மாடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் இலை மற்றும் சுருள் வடிவப் பட்டைகளால் நிரப்பப்பட்டுள்ளன. பெரிய பட்டை வடிவ உத்தரங்களில் விலங்குகளே பிரதானமாகத் தென்படுகின்றன. சண்டையிடும் யானை, குதிரையை அடக்கும் மனிதன் என விதவிதமான பாணிகளில் சிற்பங்களைப் பார்க்கமுடிகிறது.
நுழைவாயிலைத் தாண்டி வந்தால் அடுத்தடுத்து இரண்டு தளங்களைப் பார்க்கமுடியும். குடா என்னும் தளங்களைச் சிறிதும் பெரிதுமான தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. முதலிரண்டு கூடங்களில் தூண்கள் மூன்று வரிசைகளில் காணப்படுகின்றன. மூன்றாவது கூடமான இறுதிக்கட்டத்தில் தூண்கள் நான்கு வரிசைகளில் அமைந்துள்ளன.
தூண்களின் அடித்தளம் சிறியதாக இருந்தாலும், மேல்நோக்கி நீளும்போது வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய தூண்களாகக் காட்சியளிக்கின்றன. தொங்கும் இலை அல்லது கழுத்தில் தொங்கும் மணிமாலை போன்ற வேலைப்பாடுகளுடன் சின்னஞ்சிறிய வளைவுகளும் முன்வரிசைத் தூண்களில் குறிப்பிடும்படியாக உள்ளன.
ஒவ்வொரு தளத்தின் முகப்பிலும், சிற்பங்களின் தொகுதியைப் பார்க்கமுடியும். இரண்டாவது தளத்தின் கிழக்குப்பகுதியில் நவக்கிரகங்களைப் பார்க்கலாம். இருபுறமும் பணியாள் சகிதம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அரசன், தயிர் கடையும் மனிதன், பைரவர், நடனமாடுபவர்கள், இசை விற்பன்னர்கள், நுழைவாயிலில் பார்த்தது போல் யானை, குதிரை, கஜ சர்டுலா, சக்தி வடிவங்கள், நாணயங்கள், கீர்த்தி முகங்களுக்கும் குறைச்சலில்லை.
ஒவ்வொரு தளத்திற்கு மேலும் ஒரு மேல்தளம் உண்டு. அவற்றை ஒரே அளவிலான உயரங்கள் கொண்ட தூண்கள் தாங்கிப்பிடிக்கின்றன. மேல்தளத்திற்குச் செல்ல சரியான வழியில்லை. ஒரு பாதம் அளவு சுற்றுப்பட்டை மீது கால் வைத்துத்தான் மேல்தளத்திற்குச் செல்லமுடியும்.
மேல்தளத்தின் இருபுறமும் அலங்காரமான மாடங்கள் உண்டு. பெரிய அளவிலான சிற்பங்கள் நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இறைவடிவங்கள், குறிப்பாகச் சக்தி வடிவங்கள் தென்படுகின்றன. குஜராத் முழுவதும் சக்தி வடிவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், குதிரை போன்ற சக்தியின் வாகனங்களும் சக்தி வடிவங்களாகப் போற்றப்படுகின்றன.
ஒரு சிங்கம் தன்னுடைய முதுகில் திரிசூலத்தைச் சுமந்து செல்கிறது. இன்னொரு மாடத்தில் வெறும் சிங்கத்தை மட்டும் பார்க்கமுடியும். பாய்ந்து செல்லத் தயாராக நிற்கும் குதிரையைச் சுற்றிப் பூக்களும், நாணயங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
மூன்று குடங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு மூன்று வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. 9 குடும்பங்கள் உள்ளடக்கிய இந்த அமைப்பும் ஒரு சக்தி வடிவமாகக் கருதப்படுகிறது. இன்னொரு மாடத்தில் மூன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒரு குடம் தொங்கிக்கொண்டிருக்கிறது. இலைகளும், அதன் காம்புகளும் இணைந்த ஒரு புதுவிதமான வடிவத்தை இன்னொரு இடத்தில் பார்க்கமுடிந்தது.
அடாலஜ் படிக்கிணற்றின் முக்கியமான அம்சம், கடைசிப் பகுதியான எண்கோண வடிவ அமைப்புதான். 9 மீட்டர் அளவுள்ள சதுரங்கள் இணைந்து ஒரு எண்கோண வடிவை ஏற்படுத்துகின்றன. அவற்றை 12 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. ராஜசேனகா, வேதிகா, அசனபட்டா, காக்சாசனா என நான்கு தளங்கள் இணைந்து, இப்படியொரு உருளை போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.
கிணற்றின் விட்டம் 7 மீட்டர். கீழிருந்து மேலே பார்க்கமுடியும். மேலிருந்து கீழே பார்க்கத் தற்போது அனுமதி இல்லை. கிணற்றில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. அவற்றைச் சுற்றி வேலைப்பாடுகள் கொண்ட பட்டையும் காணப்படுகிறது.
நீர், ஆவியாகிவிடுவதைத் தடுப்பதற்கே இப்படிச் சிக்கலான அடுக்குத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 6 டிகிரி சாய்வில் உள்ள எண்கோண அமைப்பின் ஊடாகச் சூரிய ஒளியானது ஒரு நாளில் அதிகபட்சமாக ஆறு நிமிடங்களே ஊடுருவ முடியும்.
ஒவ்வொரு உத்திரத்தின் மையப்பகுதியிலும் நிறையச் சிறு உருவ அமைப்புகளைப் படிக்கிணறு முழுவதும் காண முடியும். புகைப்படத்துக்குள் உள்ள ஓவியம் போல் சற்று சதுர வடிவமான அமைப்பில் உட்கார வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிள்ளையார், ஹனுமான் தவிர அதிகமாக நம்மைக் கவருவது கீர்த்திமுகம்தான்.
யானைகளின் சிற்பத் தொகுதி, நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான யானைகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. மரங்களைப் பிடுங்கி, தும்பிக்கையில் ஏந்தியபடி நிற்கின்றன. சில இடங்களில் யானைகள் போர்க்கள ஆடை அணிந்து, போருக்குத் தயாராக மிடுக்குடன் தென்படுகின்றன.
விலங்குகளின் தொகுதியில் ஒரு சில விசித்திரமான விலங்குகளும் உண்டு. பாதி யானை, பாதி சிங்கம், நடுவே மனிதன். தன்னுடைய கூரிய அலகுகளால் இலைகளைப் பறித்துக்கொண்டிருக்கும் கொக்குகள். மழைக்காலங்களில் கிணறு நிறைந்து தண்ணீரின் அளவு உத்திரத்தை எட்டும்போது மண்ணாலான கொக்குகள், நிஜமான தண்ணீரில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்.
கட்ச் வளைகுடாவில் கோடைக்கு மறுபெயர் கொடுமை. இமயமலையின் பனி போல், கட்ச் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை நிற உப்பளங்களை மட்டுமே பார்க்கமுடியும். கிணறுகள், கட்ச் வளைகுடா பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த வகையில் படிக்கிணறுகளை வழிபாட்டுக்குரிய இடங்களாகக் கருதுவதில் எந்தத் தவறுமில்லை.
இனி, ஓ காதல் கண்மணி. அடாலஜின் மேல்தளத்திலிருந்து கல்லெறியும் நாயகனை, தரைத்தளத்திலிருந்து நாயகி நிமிர்ந்து பார்ப்பதை க்ளோஸ்-அப் காட்சியாக காமிரா விழுங்குகிறது. மணிரத்னத்தின் மற்ற படங்களில் வருவது போலவே, மும்பையிலிருந்து அடாலஜ் வரை துரத்தி வரும் நாயகன், சற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் காதலைத் தெரிவிக்கிறான். அடலாஜ் வரை வந்துவிட்டு, ஒரே ஒரு காட்சி மட்டுமே வைத்த பி.சி.ஸ்ரீராம் மீது கோபம்தான் வருகிறது. அடாலஜை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குஜராத்தையும் பி.சி.ஸ்ரீராமின் காமிரா போல் ஒரேவிதமாகத்தான் பார்க்கிறார்கள். அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறோம்.