Posted on Leave a comment

நம்மை எதிர்நோக்கும் பணி – குருஜி கோல்வல்கர் (தமிழில்: கிருஷ்ணன் சுப்ரமணியன்)

திப்பிற்குரிய ஸ்ரீ சூரிய நாராயண ராவ் நவம்பர் 18ம்
தேதி மறைந்தார். பாரதத்தின் சமூக ஆன்மிக வரலாற்றில் மிக உச்சமான ஒரு மைல்கல் –
1969ல் கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநாடு.
இம்மாநாட்டில்தான், பாரதத்தின் வெவ்வேறு சம்பிரதாயங்களைச் சார்ந்த துறவியர்களை இணைத்து
ஒரே மேடையில் அமர வைத்து ‘தீண்டாமைக்கு சாஸ்திர அங்கீகாரம் எதுவும் கிடையாது. அது சாஸ்திர
விரோதமானது. அனைத்து இந்துக்களும் சகோதரர்’ எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரலாற்று
முக்கியத்துவம் மிக்க இம்மாநாட்டுக்கான பொறுப்புகளை நிர்வகித்து, பரம பூஜனீய குருஜியின்
வழிகாட்டுதலில் அதை நடத்தியவர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ சூரிய நாராயண ராவ். 1970களிலும்
80களிலும் தமிழ்நாட்டில் சங்கத்தை வளர்த்தவர். 1990களில் அகில இந்திய சேவை அமைப்புகளுக்கான
பொறுப்பில் பாரதம் முழுவதும் சென்று தேசப்பணி செய்தவர். பெரும் விபத்தொன்றில் மிக மோசமாக
பாதிக்கப்பட்ட பின்னரும் எவ்விதத் தொய்வும் இல்லாமல் சங்கப் பணி ஆற்றியவர். எத்தனை
வயதானாலும் புதிய நல்ல விஷயங்களில் அவர் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் ஈடுபடுவார்.
தொடர்ந்து வாசித்தார். ஒரு மகா மனிதரை சங்க குடும்பமும் தேசமும் இழந்திருக்கிறது. பாரத
வரலாற்றில் நவீன காலகட்டங்களில் இந்து சமுதாயத்தின் பொன்னேட்டு நிகழ்ச்சியை உருவாக்கிய
சிற்பிகளில் ஒருவர் அமரத்துவம் அடைந்தார். முழுமையான தியாகத்தால் பரிபூரணத்துவமடைந்த
ஒரு வாழ்க்கை, நம் அனைவரிலும், நாம் இருக்கும் நிலைகளிலிருந்து பண்புகளால் உயர்ந்திடவும்
தேசத்துக்காக வாழ்ந்திடவும் தூண்டும். ஓம் சாந்தி.
ஸ்ரீ சூரியநாராயண ராவ்
உடுப்பி
மாநாட்டின் செயலரான ஸ்ரீ சூரிய நாராயண ராவுக்கு ஸ்ரீ கோல்வல்கர் எழுதிய கடிதம்.

நம்மை எதிர்நோக்கும் பணி
(குருஜி கோல்வல்கர்
எழுதிய கடிதத்தின் முழு வடிவம்)

தமிழில்: கிருஷ்ணன்
சுப்ரமணியன்
விஸ்வ ஹிந்து
பரிஷத்தின் கர்நாடக மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டின் அமைப்பாளர்கள்,
தொண்டர்கள் சிலரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புக்கு மேலாகவே அது பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது.
இயல்பாகவே, இந்த வெற்றி எல்லாருடைய மனத்திலும் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துள்ளது.
ஆனால் மந்திரம் போட்டது போல உடனடியாக எல்லாமே நல்லபடியாக மாறிவிடும் என்ற எண்ணம் சரியல்ல
என்று நான் நினைக்கிறேன். கடுமையான, தொடர்ச்சியான உழைப்பு இங்கே தேவைப்படுகிறது. ஹிந்துக்களின்
முழுமையான ஒருங்கிணைப்புக்காகவும்  நல்வாழ்வுக்காகவும்
தொய்வில்லாத உழைப்பைக் கோரும் அறைகூவலை இந்த மாநாடு விடுத்திருக்கிறது. அதே வேளையில்,
இந்த மாநாட்டின் வெற்றி, நம்மை மெத்தனமாக இருக்க வைத்துவிடக்கூடாது.
உதாரணமாக: தீண்டாமையைக்
குறித்த, ஆச்சாரியர்களாலும், தர்மகுருக்களாலும், மடாதிபதிகளாலும், நம்முடைய மற்ற பிரிவுகளைச்
சேர்ந்த பிற புனிதர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட தீர்மானத்தை வெறும் சொற்களால் மட்டுமே
நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த இயலாது. நூற்றாண்டுகளாக இருந்து வந்த தவறான பழக்கங்கள்,
வார்த்தைகளாலும் கனவு காண்பதாலும் மறைந்துவிடாது. கடும் உழைப்புடன் கூடிய சரியான பிரசாரத்தை
ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், வீடுவீடாக மேற்கொள்ளவேண்டும். நவீன காலத்தின்
அழுத்தங்களினால் ஏற்பட்ட மாற்றமாக மட்டும் இது இருந்துவிடக்கூடாது. கடந்த காலத் தவறுகளுக்கு
ஒரு பரிகாரமாக,  வாழ்க்கையின் ஒரு அங்கமாக,
உறுதியான கொள்கையாக அனைவரும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்தத் தீர்மானம்
போதிக்கப்படவேண்டும். தார்மீக மற்றும் உணர்வுபூர்வமான வகையில் மக்களின் சிந்தனையிலும்
செயலிலும் இந்த மாற்றம் ஏற்படவேண்டும். பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்வில்,
பொருளாதார, அரசியல் ரீதியான மேம்பாட்டை ஏற்படுத்தி, மற்றவர்களோடு தோளுக்குத் தோள் சரிசமமாக
நிற்கும் நிலையை உருவாக்குவது மிகவும் கடினமான பணி. ஆனால் இது மட்டும் போதாது. ஏனெனில்
இந்த ‘சமத்துவம்’, பிரிவினை உணர்வு அற்றதாக இருக்கவேண்டும். நாம் வேண்டுவதும் உழைப்பதும்
பொருளாதார, அரசியல் சமத்துவத்திற்காக மட்டுமல்ல. நமக்குத் தேவை உண்மையான மாற்றத்துடன்
கூடிய முழுமையான ஒருங்கிணைப்பு. இது அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சக்திக்கு
அப்பாற்பட்டது. ஒருங்கிணைப்பு என்ற பெயரில் தொடர்பில்லாத வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்
அரசியல் கட்சிகளைத் திறமையாக வளைப்பதின் மூலம் கூட இதைச் செய்துவிட முடியாது. இதயத்தின்
அடியாழத்திலிருந்து புறப்பட்டு தினசரி நடவடிக்கைகளில் வெளிப்படும் கடும் உழைப்பு, அதாவது
ஆன்மிக, தார்மீக, சமூகத் தளங்களில் மேற்கொள்ளப்படும் பணி இதற்குத் தேவைப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களும், வெளியிலிருந்து ஆதரவுக்காரம் நீட்டியவர்களும் இம்முயற்சிக்குக்
கைகொடுத்து, காலங்காலமாக இருந்துவரும் முறையில்லாத பாரபட்சங்களைத் தூள் தூளாக்கிட முன்வரவேண்டும்.
மற்றொரு முக்கியமான
பணி, தர்மத்தைப் பற்றிய கொள்கையையும் அதன் செயல்பாட்டையும் மக்களுக்குப் போதிப்பதாகும்.
இது இரண்டு வகையில் இருக்கவேண்டும். அதாவது அனைத்தையும் உள்ளடக்கிய பொதுவான ஒன்றாகவும்,
ஒருவர் பிறந்த அல்லது பின்னர் ஏற்றுக்கொண்ட ஒரு பிரிவின் விதிமுறைகளைப் பற்றியதாகவும்
இருக்கவேண்டும். இந்தக் கல்வி நம்மிடமிருந்தே தொடங்கவேண்டும். ஏனெனில், தாம் கற்றுக்கொண்டு,
அதை தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல், எதைப் போதிக்கவேண்டும் என்று தெரியாமல்,
ஒருவர் மற்றவர்களுக்குத் திறமையாக கற்பிக்க இயலாது. ஆழ்ந்த நம்பிக்கை, முழு ஈடுபாடு,
நடத்தையிலும் சொல்லிலும் உணர்விலும் செயலிலும் தூய்மை ஆகியவை மட்டுமே மற்றவர்களுக்குப்
போதிக்கும் அதிகாரத்தை ஒருவருக்கு வழங்கமுடியும். எனவே இந்தக் குணங்களை சிரத்தையோடு
நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குருஜி கோல்வல்கர்
இந்தக் கல்வியை
நாம் நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். மூடநம்பிக்கைகள் கலந்த
சடங்குகள் மட்டுமே தர்மம் என்று கருதுபவர்களுக்கு இதைக் கொண்டு செல்லவேண்டும். தொலைதூரக்
கிராமங்களில், தர்மத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் அதைக் கடைப்பிடித்து வாழவும் வாய்ப்பில்லாதவர்களுக்கு
இதை எடுத்துச் செல்லவேண்டும். மலைகளிலும், அடர்ந்த காடுகளில் வாசிப்பவர்களிடமும் இதைக்
கொண்டு சேர்க்கவேண்டும். இந்தப் பணியில் பல சிரமங்கள், தொல்லைகள், சோதனைகள் ஏற்படலாம்.
இது ஒரு உபயோகமில்லாத வேலை என்று நாம் எண்ணலாம். ஆனால், உடனடி பலன்களையும், அற்புதங்களையும்
எதிர்பார்க்காமல், எல்லையற்ற பொறுமையுடன் இந்தக் கடினமான பணியை ஒரு கர்மயோகியைப் போல
வெற்றிகரமாக நாம் செய்து முடிக்கவேண்டும்.
பல தொண்டர்கள்,
எல்லாப் பிரச்சினைகளுக்குமான காரணத்தை அடுத்தவர் மேல் சுமத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சிலர் அரசியல் முறைகேடுகள் மீதும், இன்னும் சிலர் கிறித்துவ, இஸ்லாமிய போன்ற மதப் பிரசாரகர்களின்
முரட்டுத்தனமான நடவடிக்கைகள் மீதும் பழி சுமத்துகிறார்கள். நம்முடைய தொண்டர்கள் இதுபோன்ற
சிந்தனைகளை விட்டுவிட்டு, மனதை ஒருநிலைப்படுத்தி, நம்முடைய மக்களுக்காகவும், நமது தர்மத்திற்காகவும்
சரியான முறையில் பணி புரியவேண்டும். உதவி தேவைப்படும் நம் சகோதரர்களுக்கு கைகொடுத்து,
துன்பத்தை நீக்கப் பாடுபடவேண்டும். இந்தச் சேவையில் மனிதர்களுக்கிடையே எந்தவிதமான பாகுபாடும்
பார்க்கக்கூடாது. அனைவருக்கும், கிறித்துவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் வேறு
எந்தப் பிரிவைக் சேர்ந்த மனிதராக இருந்தாலும், நம்முடைய சேவை தரப்படவேண்டும். ஏனென்றால்,
அழிவுகள், துன்பங்கள், துரதிருஷ்டவசமான நிகழ்வுகள், எந்த வேறுபாடும் இன்றி எல்லோரையும்
பாதிக்கின்றன. துன்பங்களை நீக்கப் பாடுபடும்போது, நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழிறங்கி
வருகிறோம் என்றோ இரக்கத்தினால் உதவி செய்கிறோம் என்றோ எண்ணக்கூடாது. எல்லோருடைய உள்ளத்தில்
குடியிருக்கும் கடவுளுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி அதைச் செய்யவேண்டும். நமக்குத்
தந்தையாகவும் தாயாகவும் சகோதரராகவும் நண்பராகவும் 
எல்லாமாகவும் இருக்கும் இறைவனின் சேவைக்காக நம்முடையது அனைத்தையும் அளிக்கும்
நமது தர்மத்தின் உண்மையான கோட்பாட்டைப் பின்பற்றி இந்தச் சேவையை மேற்கொள்ளவேண்டும்.
என்றும் நிலைத்திருக்கும்
– சனாதன – எல்லையற்ற – தர்மத்தின் புகழையும் பேரொளியையும் வெளிக்கொணரும் வகையில் நம்முடைய
செயல்கள் வெற்றிபெறுவதாக.
எம்.எஸ்.கோல்வல்கர் 
 

மகரசங்கிரமணம், சக 1891.                         
14-01-1970

Leave a Reply