Posted on Leave a comment

வலம் ஜூன் 2017 இதழ் உள்ளடக்கம்

மோதியின் இலங்கைப் பயணம் – அரவிந்தன் நீலகண்டன்

இலங்கைத் தேநீர் இன்று சர்வதேச புகழ் பெற்ற ஒரு பெயராக மாறியிருப்பதன் பின்னால் இந்த அப்பாவித் தமிழர்களின் தலைமுறைகளின் பேருழைப்பு பேசப்படுவதே இல்லை. காலனிய வரலாற்றின் இருட்டடிப்புப் பக்கங்களில் மறைந்துவிட்டவர்கள் இப்பாவப்பட்ட ஜன்மங்கள். அவர்களுக்கான குரலாக குஜராத் ரயில்வே நிலையத்தில் சிறுவனாக தேநீர் விற்ற பாரதப் பிரதமர் பேசியிருக்கிறார்: “உலக மக்கள் அனைவருக்கும் இச்செழிப்பான பிரதேசத்திலிருந்து உருவாகி வரும் சிலோன் தேநீர் குறித்துத் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயமென்னவென்றால் உங்கள் வியர்வையும் நீங்கள் பட்ட பாடுகளுமே இலங்கைத் தேநீரை உலகமெங்கும் விரும்பி அருந்தும் தரமுள்ள தேநீராக மாற்றியிருக்கிறது.” இவ்வார்த்தைகள் மூலமாக பாரதப் பிரதமர் இலங்கைத் தேநீர் சர்வதேச சமுதாயத்தினால் விரும்பப்படும் தேநீராக திகழ்வதன் பின்னால் தமிழர்களின் வியர்வையும் கண்ணீரும் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

சத்தீஸ்கர் தாக்குதல் – பி.ஆர்.ஹரன்

இந்தியாவை உடைக்க விரும்பும் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அந்நாடுகளின் கிறிஸ்தவ சபைகள்), மத்தியக் கிழக்கு நாடுகள் (அந்நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள்), அவர்கள் மூலமாக இந்தியாவில் இயங்கும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் (NGOs), ஆகியவை இந்தக் கம்யூனிஸக் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நிதியுதவியும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து வருகின்றன.

இந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி –  லக்ஷ்மணப் பெருமாள்

உலக மயமாதலுக்கு முன்பு அதாவது சோஷலிச பொருளாதாரக் காலகட்டத்தில் இந்தியாவில் மின் நிறுவுத் திறன் ஒரு விஷயத்தைப் புரியவைக்கிறது. அரசே அனைத்துத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரை உட்படுத்தும் எந்தவொரு கொள்கை முடிவும் மக்களுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்பட்டது. 

முடி-மனிதன்-மிருகம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்

வைக்கோல் படுக்கை, சுடுநீர், நண்பரின் உதவி, சில சிசர்ஸ், ஸ்கால்பெல், ஃபோர்செப்ஸ், நிறைய எதிர்பார்ப்பு, கொஞ்சம் தைரியம் இவற்றுடன் ஹெரியாட் அறுவை சிகிச்சை செய்கிறார். முடிப் பந்தை மாண்டியின் இரைப்பையில் இருந்து வெளியே எடுத்து, கன்றினைக் காப்பாற்றுகிறார்! முதல்நாள் பேதியாவதற்குக் கொடுத்த எண்ணெய், ஜுர மருந்து, வயிற்றின் அமிலங்கள் எல்லாம் சேர்ந்து, பளபளப்பாக முடிப் பந்து, ஹெரியாட்டைப் பார்த்து கண் சிமிட்டுவதைப் போலிருந்தது! மயக்கம் தெளிந்த மாண்டி, அன்புடன் ஹெரியாட்டைப் பார்த்துத் துள்ளிக் குதித்தது.

சித்ர சூத்ர (விஷ்ணு தர்மோத்தர புராணம் பகுதி 3) – அரவக்கோன்

உலகில் எழுதப்பட்ட முதல் ஓவிய நூல் என்று சிறப்பிக்கப்படும் சித்ர சூத்ர என்னும் இந்நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் ஸ்டெல்லா க்ராம்ரிஷ் (STELLA KRAMRISCH) என்னும் அமெரிக்கப் பெண்மணியால் மொழிபெயர்த்து எழுதப்பட்டு 1928ம் ஆண்டில் 2ம் பதிப்புக் கண்டது. பின்னர் 1960களில் சென்னை அருங்காட்சியக்கூடப் பொறுப்பாளராக இருந்த சி.சிவராமமூர்த்தி (Clambur.Sivaramamurthi) ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணு தர்மோத்தர’ (Chitrasutra of the Vishnudharmottara – 1978) என்னும் தலைப்பில் மூல நூலிலிருந்து தேவநாகரி லிபியில், ஸ்லோகங்களுக்கான ஆங்கில விளக்கவுரைகளுடன் ஆங்கிலத்தில் நூல் ஒன்றைக் கொணர்ந்தார்.

2001ல் IGNCA – Mothilaal Banarasidhas இணைந்து ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணுதர்மோத்தர புராண’ (Chitrasutra of the Vishnudharmottara Purana) என்னும் நூலை ஆங்கிலத்தில் தேவநாகரி லிபி ஸ்லோகங்களுடனும் விரிவுரைகளுடனும் வெளியிட்டது. இதன் ஆசிரியை பருல் தவே முகர்ஜி ஆவார். இந்தக் கட்டுரை ஸ்டெல்லா க்ராம்ரிஷ் எழுதிய நூலைப் பின்புலனாகக் கொண்டது.
செவ்வியல் ஓவியம் (நுண்கலைகள்) மட்டுமே இந்தியக் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்று எண்ணிவிடக்கூடாது. அதற்கு இணையாகக் கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பும் உண்டு.

டயட் – ஹாலாஸ்யன்

 1960கள் முதலே இந்த மெடிட்டரேனியன் டயட் மேற்குலகில் பிரபலம். ஆலிவ் ஆயில் பேரல் பேரலாகக் கொள்முதல் செய்யப்பட்டது. உடற்பருமன், இருதய நோய் போன்றவை வந்த, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரிக்கப்பட்ட ஒரு சமூகம் இந்த டயட்டிற்கு அடிமையானது.
ஆண்டாள், திருப்பாவையில் முழங்கை வரை நெய் ஒழுகுகிற அக்கார அடிசிலை “கூடி இருந்து குளிர்ந்தேலொர் எம்பாவாய்” என்றுதான் சொல்கிறாள்.
ஊர்த் திருவிழாவுக்கு ஒருவர் வீட்டிலும் அடுப்பெரியாமல் பெரும் சமையலாய்ச் செய்து ஒன்றாய் உண்கிற மரபு நமக்கு இருக்கிறது.

சுழல் (சிறுகதை) – ராமசந்திரன் உஷா

எனக்குத் தேவையிருக்கும்பொழுது, என்னால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் கடவுளை நம்பியிருக்கிறேன். இப்பொழுது பிரச்சினைகள் வந்தாலும் பணமும் அந்தஸ்தும் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையைத் தந்துள்ளதா என்ன? ஆக, நாத்திகம் என்பது இவ்வளவுதானே? 

வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி – அரவிந்த் சுவாமிநாதன்

இலக்கிய விமர்சகர் க.நா.சு, தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ என்ற கட்டுரையில், “அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்” என்று நினைவுகூர்கிறார்.
இந்நூலில் நகைப்பிற்கிடமாகவும் சில விஷயங்கள் உள்ளன. சான்றாக, “தென்கலை நாமம் சனி பகவானைக் குறிக்கிறது. வடகலை நாமம் வியாழன் என்னும் தேவேந்திரனைக் குறிக்கிறது. மாத்வ பிராமணர்கள் நெற்றில் கரிக்கோடிட்டுக் கொள்வது ராகுவைக் குறிக்கிறது. ‘ராகுகாலம்’ என்பதை நாம் பழக்கத்தில் ‘ராவு காலம்’ என்றே சொல்கிறோம். ‘ராவு’ என்ற பட்டப்பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்வது இதற்கு இன்னொரு சான்றாகும்” என்று அவர் குறித்திருப்பதைச் சொல்லலாம்.

கொல்கத்தா: காளியின் நகரம் – ஆர்.வி.எஸ்

சன்னிதியை நெருங்கிவிட்டோம். என் முன்னால் சென்ற நண்பர் “ம்… திரும்பிப் பாருங்க…” என்றார். சன்னிதி உள்ளே பார்வை நுழைந்ததும் மேனி சிலிர்த்தது.
யோகானந்தா தியானத்தில் மூழ்கிவிடுகிறார். கோயில் நடை சார்த்தும் வேளை வந்துவிட்டது. சதீஷ் குதியாய்க் குதிக்கிறார். நிஷ்டையில் யோகானந்தா. கடைசியில் கண் விழித்துப் பார்த்த போது சதீஷ் எதிரில் நின்று “கோயிலும் சார்த்திவிட்டார்கள். என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டுவிட்டாய்… உன்னோடு கோயிலுக்கு வந்ததன் பலன்” என்று எகிறினார். அப்போது அக்கோயிலின் பாண்டா பொறுமையாக பரமஹம்ஸ யோகானந்தரிடம் வந்தார். “உங்களிடம் ஒரு தீட்சண்யம் இருக்கிறது. உங்களைப் பார்த்தவுடனேயே நான் உங்கள் குடும்பத்திற்கான உணவை தனியே எடுத்து வைத்திருக்கிறேன். இது அன்னைக் காளியின் அனுக்ரஹம்” என்றார். சத்தமிட்ட சதீஷின் முகம் வெளிறியது. அவர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.

பாகுபலி: ஓர் இந்திய அனுபவம் – ஓகை நடராஜன்

இது ஓர் இந்துப் படம் என்பதாகக் குற்றச்சாட்டாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் படத்தின் இந்துத் தன்மை மறைக்கப்படுகிற சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால் அது தேவையே இல்லை. இது உரக்கச் சொல்லவேண்டிய ஒரு விஷயம். இந்தப் படம் எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பை வெற்றிப் படம் எடுக்க விரும்புபவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. பிரம்மாண்டத் திரைப்படம் எடுக்க இயலும், இந்தியாவின், அதுவும் தென்னிந்தியாவின் வல்லமையை மட்டுமல்ல; தென்னிந்தியாவின் பண்டைக் கலாசாரம் சமரசமில்லாத கற்பனையில் சொல்லப்படுமானால் அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் செல்லுபடியாகிற சரக்கு என்பதையும் இப்படம் சொல்லிக் கொடுக்கிறது. இப்படம் பார்க்கும்போது உலகம் இந்திய நாட்டின் ஒரு சித்தரிப்பைத் தூலமாகப் பார்க்கிறது. இந்துவின் பொலிவான ஒரு தோற்றம் இவ்வாறு சரியாகக் காட்டப்படும்போது அத்தோற்றத்தின் ஒரு கசிவு உலகில் ஊடுருவும் வல்லமை தெரிகிறது. 

இத்துடன் ஆர்.ஜியின் கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது.

இந்த இதழை மட்டும் ஆன்லைனில் வாசிக்க: கிண்டில் அமேசான் | நம்மபுக்ஸ்

வலம் அச்சு இதழுக்கு சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

வலம் இ-இதழுக்கு சந்தா செலுத்த:  http://nammabooks.com/valam-one-year-subscription 

Leave a Reply