
இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில், இத்தகைய மக்கட்பெருக்கம் என்பது ஒரு மிகப்பெரிய சவால். இதனை ‘லாபப்பங்கீடாக’ மாற்றுவது என்பது பலரும் நினைப்பதுபோல அவ்வளவு நேரடியானதோ எளிதானதோ அல்ல என்பதே நிதர்சனம். தற்போதைய கணக்குப்படி, 2017ம் ஆண்டில் இந்திய இளைஞர்களில் 30% பேர் எந்தவேலையும் செய்யாமலும், கல்வியிலோ அல்லது தொழிற்பயிற்சியிலோ ஈடுபடாமலும் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன [3]. ஆயினும், இதன் பக்கவிளைவாக பெரிய அளவில் தெருக்கலவரங்களோ, உடல்/மன நிலை பாதிக்கப்படுவதோ அல்லது போராட்டங்களோ எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால், இந்தியாவின் குடும்ப அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் பற்றிய எதிர்பார்ப்புகள் மிகக்குறைவாக இருப்பது, தற்காலிக எடுபிடிவேலைகள், மத்திய மாநில அரசுகள் தரும் அற்பசொற்ப சலுகைகள் இலவசங்கள் போன்ற பல காரணிகளால் இத்தகைய இளைஞர்கள் ஜீவித்திருப்பதும் அமைதியாக நடந்துகொள்வதும் சாத்தியமாகிறது. மற்ற பல நாடுகளில் இதுபோன்ற ஒரு நிலைமையை நாம் கற்பனை செய்யக் கூட முடியாது. ஆனால், இதே நிலைமை தொடர்ந்தால், இத்தகைய இளைஞர்களின் எண்ணிக்கை வருடாவருடம் மேன்மேலும் அதிகரிக்கும். அப்போது இது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து ‘லாபப்பங்கீடு’ என்று வர்ணிக்கப்பட்ட விஷயம் ஒரு கொடுங்கனவாகவும் ஆகக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தும் கூட, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை வேலைகளில் ஈடுபடுத்த முடியாமைக்கு, தேவையான திறன்கள் அவர்களிடம் இல்லை என்பது ஒரு முக்கியமான ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா இந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளது தெரியவரும். நாட்டின் பணியாளர் / தொழிலாளர் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், அதில் முறையான பயிற்சியும் திறனும் பெற்றவர்களின் (Formally Trained and skilled workforce) சதவீதம் அமெரிக்காவில் 52%, பிரிட்டனில் 75%, ஜெர்மனியில் 80%, ஜப்பானில் 80%, தென் கொரியாவில் 96%. சீனாவில் கூட, 25%. ஆனால், இந்தியாவில் இது வெறும் 5%தான் [4]. பெருமளவிலான இந்தியத் தொழிலாளர்கள், போதிய திறன்கள் இல்லாமலேயே (Unskilled labor) ஏதேதோ பணிகளில் கிடந்து உழல்பவர்கள்தான்.
இதனை நன்கு உணர்ந்திருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ‘திறன் மேம்பாட்டிற்கான தேசியக் கொள்கை’ (National Policy on Skill Development) ஒன்றை 2009ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி 2022க்குள்ளாக 50 கோடி இளைஞர்களுக்குப் பல்வேறு திறன்களில் பயிற்சியளிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்தத் திட்டத்திற்குக் குறைந்த இலக்குகளே நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான தீவிரம் ஏதுமின்றி மிகவும் தொய்வாகவே இயங்கியது.
2011-12: திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான இலக்கு 46.5 இலட்சம் இளைஞர்கள். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 45.7 இலட்சம்.
2012-13: இலக்கு 72.5 இலட்சம். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 51.9 இலட்சம்.
2013-14: இலக்கு 73.4 இலட்சம். பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 76.4 இலட்சம்.
2014ம் ஆண்டு மே மாதம், நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், இலக்கு மிகக் குறைவாக உள்ளது உடனடியாக உணரப்பட்டு, உயர்த்தப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை.
2014-15: இலக்கு 1.5 கோடி. பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 76.1 இலட்சம்.
எனவே, மோதி அரசு இதனைப் பெரிய அளவில் முடுக்கி விடவேண்டும் என்ற எண்ணத்துடன், 2015ல் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக் கொள்கையை (National Policy for Skill Development and Entrepreneurship) அறிவித்தது. ‘திறன் இந்தியா’ (Skill India) என்ற உத்வேகமான வாசகமும் உருவாக்கப்பட்டது. 2022ல் 50 கோடி என்ற முந்தைய அசாத்தியமான இலக்கு, 40.2 கோடி என்று திருத்தப்பட்டது. அடுத்த 7 வருடங்களில், புதிதாக உருவாகி வரும் 10.4 கோடி இளைஞர்களுக்கும், ஏற்கெனவே பல்வேறு விவசாயம் மற்றும் விவசாயமல்லாத துறைகளில் தொழிலாளர்களாக திறன்களின்றி வேலை செய்து கொண்டிருக்கும் 29.8 கோடி பேருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று வரையறை செய்யப்பட்டது. இதற்காக தேசிய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம் என்று மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டது. தற்போது ராஜீவ் பிரதாப் ரூடி இதன் அமைச்சராக (தனிப்பொறுப்பு) உள்ளார். மேலே கூறப்பட்ட சதவீதங்களும் புள்ளி விவரங்களும் இந்த அமைச்சகத்தின் இணையதளத்திலிருந்து [5] எடுக்கப்பட்டவைதான்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடந்த இரு வருடங்களிலும் கூட இத்துறையின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்பது சோகம்.
2015-16: இலக்கு 1.25 கோடி, பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 1.04 கோடி.
2016-17: இலக்கு 99.4 இலட்சம், பயிற்சியளிக்கப் பட்டவர்கள் 19.6 இலட்சம் (டிசம்பர் 2016 வரையிலுள்ள கணக்குப்படி).
சில விவரங்களைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு தொழில் துறையிலும் எத்தனை பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சாத்தியங்கள் உள்ளன என்று கணக்கிடப்பட்டு, 24 முக்கியத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் முதலில் உள்ள 15 துறைகளின் பட்டியல் கீழே [6].
இந்தப் பட்டியலில் மருத்துவத்துறை 18வது இடத்திலும், ஐ.டி. துறை 22வது இடத்திலும், ஊடகம் & பொழுதுபோக்கு 24வது இடத்திலும் உள்ளன. 2017-2022 கால அளவில், விவசாயத்தைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விவசாயத்தில் சுமார் ஒன்றரைக் கோடி வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். விவசாயம் வர்த்தக (கார்ப்பரேட்) மயமாதல் மற்றும் நவீன விவசாய முறைகள் போன்ற காரணங்களால் இது நிகழும் என்று தோன்றுகிறது.
இந்த வேலைவாய்ப்புகளுக்குத் தேவைப்படும் திறன்களைக் கண்டறிந்து பயிற்சியளிக்கும் மையங்களை உருவாக்கி நடத்துவதே திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்குத் தரப்பட்ட பணி. இதற்காக, 50க்கும் மேற்பட்ட திட்டங்களை மற்ற அமைச்சகங்களின் கீழ்வரும் 20-25 மத்திய அரசுத் துறைகளுடனும், மாநில அரசுகளுடனும் இணைந்து திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
சில முக்கியமான திட்டங்கள்:
· Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)
· National Apprenticeship Promotion Scheme (NAPS)
· EAP – STRIVE (Skills Strengthening for industrial value enhancement)
· EAP – SANKALP
· பள்ளிகளில் திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல்.
· 1500க்கும் மேற்பட்ட பல்திறன் பயிற்சி நிறுவனங்களை நிறுவுதல் (Multi Skill Training Institutes – MSTI).
பிரச்சினைகளும், தீர்வுகளும்
2016-17 நிதியாண்டில் திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஒட்டுமொத்த நிதி ரூ.8500 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.3000 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியும் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
பயிற்சி மையங்களை நடத்த முன்வரும் தனிநபர்களையும் அமைப்புகளையும் தர அடிப்படையில் தேர்வு செய்து பிராஞ்சைஸ் (Franchise) முறையில் அவற்றிற்கு உரிமம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலீடாகக் கடன்தொகையும் வழங்கப்பட்டது. ஆனால், இவை திரும்பிவாராக் கடன்களாக ஆனதோடு மட்டுமின்றி, பல மையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இது குறித்து அரசு கறாரான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகங்களில் தொடர்ந்து திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்த நேர்மறை / எதிர்மறை செய்திகள் கலந்து வந்து கொண்டிருக்கின்றன. போதிய பயிற்சியாளர்களை உருவாக்குதல், பயிற்சிகளின் தரம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். பயிற்சிகளை முடித்தவர்களுக்குப் பணிகள் கிடைப்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் மையங்களின் தரப்படுத்தலும் வழங்கப்படும் தொகையும் நிர்ணயிக்கப்படவேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துகொண்டு வருகின்றன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனியார் தொழில் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. தங்களது பழைய, புதிய பணியாளர்களுக்கான பயிற்சிகளில் இந்நிறுவனங்கள் செலவிடும் தொகையும் தேசத்தின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டின் ஒரு அங்கம்தான். இதனையும் அரசு கணக்கில்கொண்டு தனியார் தொழில் நிறுனங்களையும் இத்திட்டத்தின் பங்காளிகளாக ஆக்க வேண்டும்.
வாகன உற்பத்தி உட்பட்ட பல தயாரிப்புத் துறைகளில் தானியங்கு இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்து மனிதப் பணியாளர்களின் தேவையைக் குறைக்கும் திசையில்தான் தொழில்நுட்பம் சென்று கொண்டிருக்கிறது. ஐ.டி துறையில்கூட, செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence), தானே கற்றுக்கொண்டு இயங்கும் இயந்திரங்கள் (Machine Learning) போன்ற தொழில்நுட்பங்கள் மனிதப் பணியாளர்களில் ஒரு சாரார் இதுநாள்வரை செய்து கொண்டிருந்த வேலைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பல்வேறு விதமான புதிய சேவைத்துறைகளும் (Service Sector), ஊடகம் போன்ற படைப்பு சார்ந்த துறைகளுமே இனிவரும் காலங்களில் வரும் இளைய தலைமுறையினருக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக இருக்கும். அத்தகைய துறைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவைப்படும் திறன்களைப் பயிற்றுவிப்பதும் இந்த அரசுத் திட்டத்தில் முக்கியமான ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.
தற்போது இந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள சில சரிவுகளை வைத்து, இது தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். அதைவைத்து இத்தகைய ஒரு திட்டத்தை இழுத்து மூடுவது பேச்சுக்கே இடமில்லை. இதிலுள்ள குறைகளைக் களைந்து கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் கூட தனது இலக்கை இத்திட்டம் அடைந்தே தீரவேண்டும்.
சான்றுகள்:
[1] எர்னஸ்ட் & யங் நிறுவனத்தின் ஆய்வறிக்கை – http://www.ey.com/Publication/vwLUAssets/EY-Government-and-Public-Sector-Reaping-Indias-demographic-dividend/$FILE/EY-Reaping-Indias-promised-demographic-dividend-industry-in-driving-seat.pdf
[2] இந்திய அரசு புள்ளிவிபரம்: http://planningcommission.nic.in/plans/planrel/fiveyr/11th/11_v1/11th_vol1.pdf
[3] ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தகவல் விவரங்கள்: https://www.bloomberg.com/news/articles/2017-07-06/rising-tide-of-india-s-jobless-a-risk-for-modi-before-key-poll
[4] தேசிய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம் ஆண்டறிக்கை 2015-16 (பக்கம் 9) – http://msde.gov.in/assets/images/annual%20report/Annual%20Report%202015-16%20eng.pdf
[5] http://www.skilldevelopment.gov.in/
[6] தேசிய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம் ஆண்டறிக்கை 2016-17 பக்கம்-12ல் இந்தப் பட்டியல் உள்ளது – http://msde.gov.in/assets/images/annual%20report/Annual%20Report%202016-2017%20-%20English.pdf