Posted on Leave a comment

பிரிவினைவாதிகளின் பிடியில் அமர்நாத் யாத்திரை – தமிழ்ச்செல்வன்


கடந்த ஜுலை மாதம் 10ம் தேதி திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து மீது லஷ்கர்-இ-தைபா பயங்கவராதிகள் சரமாரியாகச் சுட்டதில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டார்கள்; 32 பேர் காயமுற்றனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்தப் பேருந்து அகப்பட்டுக்கொண்டதாக ஒரு செய்திக்குறிப்பு கூறுகின்றது. பதுகாப்புப் படையினரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒன்றும் செய்ய முடியாமல் போன வெறுப்பில், யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது சரமாரியாக பயங்கரவாதிகள் சுட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும், குறிப்பிட்ட பேருந்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ யாத்திரையின் வண்டித்தொடரில் பங்குபெறவில்லை என்றும், அந்தப் பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தில் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது.

 அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தில் பதிவு செய்து, அரசின் அதிகாரபூர்வ யாத்திரையில் பங்கு பெற்றுள்ள பேருந்துகள் தக்க பாதுகாப்புடன் அனுப்பப்படுகின்றன. வழியெங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளும், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளும், பாகிஸ்தான் ஆதரவு பெற்றுள்ள காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளும், அமர்நாத் யாத்திரையைக் குலைக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மிரட்டல் விடுவதாலும், தாக்குதல் நடத்த முயல்வதாலும், அமர்நாத் யாத்திரையை அரசும், அமர்நாத் தேவஸ்தானமும் இணைந்து நடத்தி வருகின்றன. தேவஸ்தானத்தில் பதிவு செய்து, அரசு வழங்கும் பாதுகாப்புடன்தான் யாத்திரை மேற்கொள்ள முடியும். தனியார் அமைப்புகள் யாத்திரை நடத்த அனுமதியில்லை. இருப்பினும் ஒரு சிலர் தாங்களாக யாத்திரைகள் மேற்கொள்வதும் நடக்கிறது. அவ்வாறு தெரிய வரும்போது, அரசு அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி, அரசு அங்கீகாரம் பெற்ற வண்டித்தொடருடன் சேர்த்து விடுவதும் உண்டு.

இவ்வாறாக அரசும் அமர்நாத் கோவில் தேவஸ்தானமும் இணைந்து பலத்த பாதுகாப்புடன் யாத்திரையை நடத்தினாலும், பயங்கரவாத அச்சுறுத்தலும் தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.

அமர்நாத் யாத்திரையின் புனிதத்துவம்1

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் தோன்றி வளர்ந்த வேத நகரீகத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசார ஆன்மிகப் பாரம்பரிய வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் பாரத தேசத்து மக்களான ஹிந்துக்கள். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வது, மலைக்கோவில்களுக்குச் செல்வது, குலதெய்வ வழிபாடுகள், நீத்தார் வழிபாடுகள் ஆகியவை ஹிந்துக்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. அவற்றுள் மிகவும் முக்கியமாக அவர்கள் கருதுபவை, கயிலாய யாத்திரை, காசி-ராமேஸ்வரம் யாத்திரை போன்றவை. அமர்நாத் யாத்திரையும் அவற்றுக்குச் சமமான யாத்திரையாகும்.

புராணத்திலும், ஹிந்து நூல்களிலும் அமர்நாத் தலம் பற்றிய வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.

ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம், “நீங்கள் என்றிலிருந்து இந்த மண்டையோடு மாலையை அணிய ஆரம்பித்தீர்கள்? ஏன் அதை அணிகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சிவபெருமான், “நீ ஒவ்வொரு முறை பிறக்கும்போதும் நான் ஒவ்வொரு தலையைச் சேர்த்துக்கொள்கிறேன்” என்று பதிலளிக்க, பார்வதி தேவி, “நான் அடிக்கடி இறந்து பிறக்கிறேன். ஆனால் நீங்கள் இறப்பே இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறீர்கள். இதற்கான காரணம் யாது?” என்று கேட்டார். சிவபெருமான், “இறவா நிலை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீ ‘அமரத்துவக் கதை’ அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி, எந்த உயிரினமும் கேட்க முடியாத, எந்த உயிரினமும் இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பி, அமர்நாத் குகைக்கு பார்வதியைக் கூட்டிச் செல்கிறார்.

போகும் வழியில், பஹல்கம் என்கிற இடத்தில் நந்தியையும், சந்தன்வாரி என்கிற இடத்தில் தன் முடியில் சூட்டியிருந்த சந்திரனையும், சேஷ்நாக் ஏரியில் தான் அணிந்திருந்த சர்ப்பங்களையும் (பாம்புகள்), மஹாகுண பர்வதத்தில் தன் பிள்ளை விநாயகரையும், பஞ்சதாரணி என்கிற இடத்தில் பஞ்ச பூதங்களையும் விட்டுவிட்டு, பார்வதி தேவியுடன் அமர்நாத் குகைக்குச் சென்று அமர்கின்றார். தான் பார்வதிக்குச் சொல்வதை வேறு உயிரினங்கள் எதுவும் கேட்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக, காலாக்னியை மூட்டி, குகையைச் சுற்றிப் பாதுகாப்பாக நெருப்பு வளையத்தை உண்டாக்குகிறார். அதன் பிறகு இறவாத்தன்மையின் ரகசியத்தை பார்வதி தேவிக்குச் சொல்கிறார். அத்தகைய புனிதத்துவம் மிகுந்த குகைக்கோவில் அமர்நாத். (இவ்வளவு பாதுகாப்புடன் சிவபெருமான் பார்வதி தேவிக்குச் சொல்லியும், அதை ஒரு ஜோடிப்புறாக்கள் கேட்டுவிட்டு, அவையும் இறவாத்தன்மை பெற்றதாகவும், இப்போதும், சில யாத்ரீகர்கள் அந்தப் புறாக்களைக் கண்டதாகவும் நம்பப்படுகிறது.)

சைவம் தோன்றி வளர்ந்த புண்ணிய பூமியான காஷ்மீரம் காஷ்யப மஹரிஷியின் பெயரினாலேயே அந்தப் பெயரைப் பெற்றது. அவருடைய காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு மிகப்பெரிய ஏரியில் மூழ்கியிருந்தது. அதை உடைத்துப் பல்வேறு ஆறுகளாகவும், ஓடைகளாகவும் பிரித்தவர் காஷ்யப மஹரிஷி. அதன் பிறகுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கு வெளியே வந்தது. அந்தச் சமயத்தில் கயிலாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பிருகு மஹரிஷி, அங்கே வந்து அமர்நாத் குகையைக் கண்டறிந்து பனி லிங்கத்தையும் தரிசனம் செய்தார். அமர்நாத் பனி லிங்கத்தை முதன் முதல் தரிசனம் செய்தவர் என்கிற பெருமையையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து மக்கள் வழிபடும் தலமாக அமர்நாத் இன்றுவரைத் திகழ்கிறது. பனி லிங்கத்தின் அருகே மேலும் இரண்டு சிறிய பனி லிங்கங்கள் தோன்றுகின்றன. அவை பார்வதியாகவும், விநாயகராகவும் வழிபடப்படுகின்றன. ஆடி-ஆவணி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலுமிருந்து அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு சிவபெருமானைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

பஹல்காம் என்கிற இடத்திலிருந்து 46 கிலோமீட்டர் தூரத்தில், லிட்டர் பள்ளத்தாக்கில் பூமியிலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. பஹல்கம் ஸ்ரீநகரிலிருந்து 96 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்தக் குகையில் அமர்நாத் பனி லிங்கமாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அமர்நாத் ஜி என்று அன்பும் மரியாதையும் பக்தியும் கலந்து மக்கள் அவரை வழிபடுகின்றார்கள்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைப் பிறகு, பாகிஸ்தான் காஷ்மீரைத் தன்னுடைய பகுதியாக உரிமை கோரியது. தொடர்ந்து அங்கே பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் வளர்த்து வருகின்றது. சுதந்திரத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பிரதம மந்திரிகள் செய்த தவறுகளினால் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் இன்றுவரை ஆக்கிரமித்து வருவதுடன், இந்தியப் பகுதியிலும் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றது. இதன் விளைவாக 1990ம் ஆண்டு காஷ்மிர் ஹிந்துக்களான பண்டிட் சமுதாயத்தினர் லட்சக்கணக்கில் அடித்துத் துரத்தப்பட்டனர். வெளியேற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஹிந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். குழந்தைகளும் கூடக் கொல்லப்பட்டனர். அவர்களுடைய வீடுகளும் வியாபாரத் தலங்களும் சூறையாடப்பட்டன. நூற்றுக்கணக்கான கோவில்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமாக முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அப்போதிலிருந்து, அமர்நாத் யாத்திரையும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளானது.2

2 ஆகஸ்டு 2000: பயங்கரவாதிகள் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 21 யாத்ரீகர்கள் உட்பட 89 பேர் இறந்தனர்.

20 ஜூலை 2001: அமர்நாத் குகை அருகிலேயே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பக்தர்கள் கொல்லப்பட்டனர்.

30 ஜூலை 2002: ஸ்ரீநகரில் அமர்நாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரவாதி கிரேனைட் குண்டு வீசியதில் காரில் பயணித்த யாத்ரீகர்களில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமுற்றனர்.

6 ஆகஸ்டு 2002: பஹல்காமில் அமர்நாத் யாத்ரீகர்களுக்கான முகாம் மீது லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டு 27 பேர் படுகாயமுற்றனர்.

21 ஜூன் 2006: யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது கிரேனைட் குண்டுகளைப் பயங்கரவாதிகள் வீசியதில் 5 பேர் படுகாயமுற்றனர்.

26 மே 20083: மத்திய அரசும் மாநில அரசும் முடிவுசெய்து அமர்நாத் யாத்ரீகர்களின் வசதிக்காக 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் கோவில் தேவஸ்தானத்துக்கு அளித்தன. அதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். பல்வேறு போராட்டங்களை காஷ்மீரில் நடத்தினர். அப்போதைய மாநில அரசு தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கியது. மத்திய காங்கிரஸ் அரசும் மௌனம் சாதித்தது. அதனைத் தொடர்ந்து, முடிவை மாநில அரசு வாபஸ் வாங்கியதை எதிர்த்து ஜம்முவில் உள்ள ஹிந்துக்கள் போராட்டங்கள் நடத்தினர். அப்படியும் மாநில அரசு பின்வாங்கும் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

2010: மாநில அரசு அமர்நாத் யாத்திரையில் செல்லும் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ரூ 2,000 வரி விதித்தது. 7 நாட்களுக்குப் பிறகு அம்மாநிலத்தில் ஓடும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ 2,000/- வரி என்றும் அறிவித்தது. அப்போதைய எதிர்க்கட்சியான பா.ஜ.க எதிர்த்தும் அந்த வரி விதிப்பை வாபஸ் பெறவில்லை.

காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும், பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்பது உலகறிந்த ரகசியம். பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ (ISI – Inter Services Intelligence) மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகிய அமைப்புகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தைபா, ஜெயிஷ்-இ-முகம்மது போன்றவற்றிற்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவ்வமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கும் உதவி வருகின்றன. நிதியுதவியும் செய்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி திங்கட்கிழமை நடந்த தாக்குதலைக்கூட பாகிஸ்தான் லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதியான இஸ்மாயில் என்பவர்தான் திட்டமிட்டுள்ளார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த பயங்கரவாதி இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரைத் தேடிப்பிடிக்கச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை இந்தியாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தும்போதும், நம் நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை விடுப்பது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. அந்தச் சம்பிரதாயம் இம்முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் ஆரம்பித்து, அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள் என்று பலரும் கண்டன அறிக்கைகள் விடுத்துள்ளனர். பயங்கரவாதிகள் கோழைகள் என்றும், அப்பாவி யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமான செயல் என்றும், இம்மாதிரியான செயல்களால் இந்தியாவின் இறையாண்மையையும் மக்களின் ஒற்றுமையையும் குலைத்துவிட முடியாது என்றும் அவ்வறிக்கைகள் கூறின.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு முந்தைய அரசுகள் போல் இல்லாமல் பயங்கரவாத அமைப்புகள் மீதும், அவற்றுக்கு உதவுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தேச விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகளின் (NGOs) உரிமத்தை ரத்து செய்து அவற்றைத் தடை செய்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிபவர்கள் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 500 மற்றும் 1000 ரூபாய்களை முடக்கிய நடவடிக்கையினால் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டங்கள் நடத்துவதும், கல்லெறிதல் நடத்துவதும் வெகுவாகக் குறைந்து போனது. சமீப காலமாக போராட்டங்களும் கல்லெறிதலும் மீண்டும் ஆரம்பித்திருந்தாலும், மத்தியக் காவல் படையினரின் பதிலடி கடுமையாக இருந்து வருகிறது. பல பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையோர ராணுவ முகாம்களும் Surgical Operations என்கிற ராணுவ நடவடிக்கையினால் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆயினும், கடந்த ஜூலை 10-ம் தேதி நடத்தப்பட்டுள்ள தாக்குதல், நேரம் பார்த்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றே சொல்ல வேண்டும். பிரதமரின் இஸ்ரேல் விஜயத்தைத் தொடர்ந்தும், பூட்டான் எல்லையில் சீனாவின் எல்லை மீறலைத் தொடர்ந்தும், அமர்நாத் யாத்திரை தொடங்கிய சமயத்திலும் இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவினால் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் மூலம், நாங்கள் பயங்கரவாதத்தைக் கைவிட மாட்டோம்; அமர்நாத் யாத்திரையைக் குலைக்கத் தொடர்ந்து முயற்சி செய்வோம்; காஷ்மீர் மீதான எங்கள் உரிமையைக் கைவிட மாட்டோம் என்கிற செய்தியைத்தான் சொல்கிறது பாகிஸ்தான். ஆகவே, இந்த மாதிரியான தாக்குதல்களுக்கும், காஷ்மீர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் பின்வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாக வேண்டும்.

· அரசியல் அமைப்புச் சட்டத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒன்றிணைக்கப்படாமல் காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து தரும் க்ஷரத்து 370 ரத்து செய்யப்பட வேண்டும்.

· காஷ்மீர் மாநிலத்திற்காக மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கும் சிறப்புச் செலவினங்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

· காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாதுகாப்புச் செலவுகளை மத்திய அரசு இனி ஏற்கக்கூடாது. அவர்கள் இத்தனை வருடங்களாக ஈடுபட்டுக்கொண்டிருந்த தேச விரோத, பிரிவினைவாத செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு மீதியிருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

· தங்களுடைய சொந்த நிலங்களும், வீடுகளும், சொத்துக்களும் பிடுங்கப்பட்டு, அவற்றை விட்டுத் துரத்தப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் காஷ்மீர் ஹிந்துக்களான பண்டிட்டுகளை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த வேண்டும்.

· மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ள பண்டிட் சமூகத்தினரின் பாதுகாப்புக்காக முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினரையும் காஷ்மீரில் குடியேற்ற வேண்டும்.

· ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகராக ஜம்முவே நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். சட்டமன்றம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் என்று ஆட்சியின் அனைத்துத் தலைமையகங்களும் ஜம்முவிலேயே இயங்கவேண்டும்.

· பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சட்டமன்றத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

· முஸ்லிம்களுக்குத் தற்போது கொடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினச் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும்.

· பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும், பாதுகாப்புப் படையினர் மீது கல் எறிதலில் ஈடுபடுபவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

· ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA – Armed Forces Special Powers Act) தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும்.

· இந்திய அரசியல் அமைப்பில் மற்ற மாநிலங்கள் எப்படி நடத்தப்படுகின்றனவோ, அப்படியே ஜம்மு காஷ்மீர் மாநிலமும் நடத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தினால், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும். தேசிய இறையாண்மையும் ஒருமைப்பாடும் தொடர்ந்து காப்பாற்றப்படும்.

ஆதாரங்கள்:

1.   (http://www.shriamarnathjishrine.com/the-holy-shrine.html)
2.   http://www.firstpost.com/india/amarnath-yatra-devotees-have-faced-repeated-terror-attacks-heres-the-blood-soaked-history-of-pilgrimage-3799091.html
3.   (https://en.wikipedia.org/wiki/Amarnath_Temple )

Leave a Reply