Posted on Leave a comment

வலம் டிசம்பர் 2018 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் டிசம்பர் 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

சபரிமலைத் தீர்ப்பு – ஒரு பார்வை |  லக்ஷ்மணப் பெருமாள்

சபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

சபரிமலை கோவில் தீர்ப்பு | கோபி ஷங்கர்

பிரபுஜி – அஞ்சலி | அபாகி

சில பயணங்கள் சில பதிவுகள் – 15 | சுப்பு

விறகுக்கட்டில் தேள் | சுதாகர் கஸ்தூரி

உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையா? | ஜடாயு

இரட்டைப்படகு சவாரி செய்த அலிக் பதம்ஸீ | ஜெயராமன் ரகுநாதன்

பரமார்த்த குருவும் பஞ்சதசீயும் | அரவிந்தன் நீலகண்டன்

இந்திய கலாசாரமும், அறிவுசார் சொத்துரிமை பதிவுகளும் – 3 | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

தாயம் (சிறுகதை) | சத்யானந்தன்

Posted on Leave a comment

தாயம் (சிறுகதை) | சத்யானந்தன்

“உன்னை விவாகரத்துப் பண்ணிட்டுத் தாண்டி அவனைத் தேடணும் நாட்பூரா நான் சேல்ஸ் டார்கெட்டுனு அலைஞ்சிட்டு இத்துப்போயி ராத்திரிதான் வர்றேன். வூட்டுலேயே குந்திக்கினு டிவி பாத்துக்கினு இன்னாடி கவனிச்சே கார்த்திக்கை? சனியனே.”

ஒற்றை அறை, கூடம், சமையல் பொந்து, ஒரு குளியலறை / கழிப்பறை என அந்தச் சின்னஞ்சிறு குடியிருப்பில் ஒருவர் பெருமூச்சு விட்டாலே பக்கத்து ஒண்டுக் குடித்தனத்துக்குக் கேட்டுவிடும். கூடத்தில் அமர்ந்திருக்கும் தனது நாத்தனார் மனதில் இந்தப் பேச்சு பாலை வார்த்திருக்கும் என நினைத்துக் கொண்டார் (குடும்பத்) தலைவி. அழுது அழுது அவரது முகம் வீங்கி இருந்தது.

தூங்காததால் கண்களைச் சுற்றிக் கருவளையம். இரண்டு நாட்களாக உண்ணாததால், எழுந்து நடமாட முடியவில்லை. காவல்துறையிடம் போகவேண்டாம் எனத் (குடும்பத்) தலைவன் முடிவெடுத்து விட்டார். கார்த்திக்கு ஒரே ஒரு மாமன்தான். அவனும் ‘கல்ஃப்’ வேலைக்குப் போய் இரண்டு வருடங்களாகிறது. அப்பா அம்மாவிடம் சொல்வதைத் தள்ளிப்போடும் அளவு அவர்கள் சிலநாட்கள் நிம்மதியாக இருக்கட்டும்.

*

“என்னடி அஞ்சு நிமிசத்துக்கு ஒருதபா நீ மொபைல எடுத்துப் பாத்துக்கினே இருப்பே. இப்போ கம்முனு இருக்க?” என்றாள் தோழி மாணவியிடம். மாணவியின் கண்கள் கலங்கி இருந்ததைக் கவனித்தாள்.

“கார்த்திக் பதில் போட்டானா?” ஆம் எனத் தலையை அசைத்தாள் மாணவி.

“எங்கே இருக்கானாம்?” பதிலுக்கு மாணவி உதட்டைப் பித்துக்கினாள். முக்கியமான கேள்வியைக் கேட்கத் தனிமை வாய்க்கவில்லை. மாலை இருவரும் சைக்கிள்களை எடுக்கும்போது யாரும் இல்லை. மெல்லிய குரலில் “ஏண்டி ரொம்ப ஒருமாதிரி இருக்க? எதாவது செஞ்சிட்டானா?” என்றாள் தோழி.

“அப்படீனா?”

“அப்டீனா? தொட்டானானு கேட்டேன்.”

“நீ எவன் கூடவாவது படுக்கறியா?” வெடித்தாள். தோழி திடுக்கிட்டாள்.

“அப்பறம் ஏண்டி என்ன மட்டும் கேக்குறே? நா அவன் இருக்குற இடம் தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.”

*

தலைவனின் அண்ணன் தலைவன் இருவருக்கும் பொதுவாக ‘பிளாஸ்டிக் கப்’ இரண்டு மது நிறைந்து இருந்தன. “நீ வேற எந்த சொந்தக்காரங்களையும் தேடிப் போகாதே. நானே உனக்காக எல்லாருக்கிட்டேயும் பேசிட்டேன்.” தலைவன் கண்கள் பனித்தன.

“என்ன குறை வெச்சேன்? ஏன் ஓடிப் போனான்?”

“நீ போலீஸுக்கு ஏன் போகல? யாராவது கடத்தி இருந்தா?”

“ஏழை பாழைப் பையன யாரு கடத்துவா?”

“உனக்குத் தெரியல. கிட்னி திருடவங்களா இருக்கலாம்.”

“எனக்குப் போலீஸ் எதுவும் செய்வாங்கங்கிற நம்பிக்கை இல்ல.”

*

சீர்காழி போய் வர தலைவன் சிதம்பரத்தில் அறை எடுத்தபோதோ அல்லது அன்று இரவில் அவரது நெருக்கத்தின் போதோ தோழி அவரைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன்- குழந்தைகள் அவளை 24 மணிநேரமும் தேடுவார்கள் என்பதால் அவசரமாகத் தன்னைக் கேட்கக்கூடாது என்னும் புரிந்துணர்வை அவரோடு தோழி ஏற்படுத்தியவர்தான். இந்தமுறை அதற்கு விதிவிலக்கு தந்திருந்தார்.

நாடி ஜோசியரைப் பார்க்கப்போனபோது தலைவனும் உடன்வா என வலியுறுத்தவில்லை. இவரும் முன்வரவில்லை. அறையின் தனிமை ஒருவிதத்தில் இனிமையாகவே இருந்தது. தனிமை என்பது வாய்த்தால்தான். உண்மையில் தலைவனும் இல்லாமல் இதே அறையில் இன்னும் இரண்டுநாள் தங்க இயன்றால்கூட நிம்மதியாகத்தான் இருக்கும். ஜோசியரைப் பார்த்தபின் தலைவன் முகம் இன்னுமே கலக்கமாக ஆகிவிட்டது. “உயிரோடு இருக்கான்னாரு. எங்கே இருக்கான்னோ அல்லது திரும்பி வருவானான்னோ சொல்ல முடியலை அவராலே” என்றார்.

*

 “ஒன் ப்ளஸ் 6 போனோட வருவேன்னான். அதான் ஒடியே போய்ட்டான்” என்றான் கார்த்திக்கின் பள்ளித்தோழன் 1.

“வெறும் நூறு ரூபாதான் பெட்கட்டி இருந்தான்” என்றான் 2.

“அவன் போனப்புறம் யாருடாக் ‘கட்டிங்’ வாங்கித்தர்றான்” என்றான் 3.

“எப்பிடியும் நீ ஓசிதான். யாரு வாங்கிக்கொடுத்தா உனக்கென்னடா?” என்றான் 4. அவன் ஸ்கூலுக்குக் கட் அடிச்சி காசு சேத்தாண்டா. உன்னால ஸ்கூல் பையையே தூக்க முடியலே” என்றான்.

இரவு மணி எட்டு. பள்ளிக்கூடக் காவலாளி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார். ஒரு மோட்டார் சைக்கிளைக் கண்டதும் அவரது கண்கள் பிரகாசித்தன. அது தள்ளிப்போய் பக்கத்தில் உள்ள முட்டுச்சந்தில் நின்றது. காவலாளி கொண்டு வந்த புகைப்படத்தைத் தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார் இருசக்கர வாகன ஓட்டுனர். அவரிடமிருந்து தனக்குப் பணம் கைமாறியதும் காவலாளி முகம் இன்னும் மலர்ந்தது.

*

‘உயர்நிலைப்பள்ளியில் இருந்து மாயமான மாணவன்’ என்று பெட்டிச் செய்தித் தலைப்பு தொடங்கியது. அரசு உயர்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் கார்த்திக்கைக் காணவில்லை. பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. இரு சக்கரவாகனம் பழுதுபார்க்கும் வேலைசெய்து பணம் சேர்த்த கார்த்திக் போனது எங்கே?

தினசரியை தலைமை ஆசிரியருக்கும் கல்வித்துறை அதிகாரிக்கும் இடையே இருந்த மேஜை மீது வைத்துச் சுட்டிக் காட்டினார் காவல்துறை உதவி ஆணையர். “சார் … உங்க பள்ளிக் கூடத்துல ஒரு பையன் வர்றானா வரதில்லையா… என்ன விஷயம் என்ன காரணம் எதையுமே நீங்க கவனிக்கிறதில்லையா?” என்றார் தலைமை ஆசிரியரைப் பார்த்து. கல்வி அதிகாரி “என்ன பதில் சொல்லப் போறீங்க?’ என்றார்.

ஓரிரு நொடிகள் மௌனம் காத்தபின் தலைமை ஆசிரியர், “டிஈஓ சாருக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. கவர்மெண்ட் ஸ்கூல்ல பசங்களோட பேரண்ட்ஸுக்கு எஸ்எம்எஸ் கொடுக்கவோ அல்லது ஆட்களை வெச்சுத் தேடவோ எந்த வசதியும் கிடையாது. இந்தப் பையன் எப்பவுமே ரெகுலரே வர்றது இல்லை. ஆதி திராவிடர் விடுதிப் பையன்கள் விஷயத்துலே எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கிறோம். இவன் டே ஸ்காலர் சார்.”

“பசங்களுக்கு எப்படி எடுக்கிறீங்களோ தெரியாது, எனக்கு நல்லாப் பாடம் எடுக்கறீங்க. மீடியாவுக்கு நியூஸ் போனப்பறம்தான் நமக்கே தெரியவருது. நீங்க என்கிட்டே பேசற மாதிரி நான் சீஇஓ கிட்டே பதில் சொல்ல முடியாது. சட்டசபையிலே இது கேள்வியா மாறும். அப்போ உங்க மேலே நடவடிக்கை எடுக்கவேண்டி கூட வரலாம்.”

“பசங்களை ரொம்பக் கஷ்டப் பட்டுத்தான் மேனேஜ் பண்ரோம். ஆக்ஷன்னா எல்லா ஊர் ஹெச்எம் மேலேயும் எடுக்க வேண்டி வரும்.”

*

“கார்த்திக் எங்கே இருக்கான்?”

“எனக்கு எப்படி சார் தெரியும்?”

“என்னடா…. உன்கிட்டே வேலை செஞ்சவன் காணாப் போயிருக்கான். எதிர்க் கேள்வி போடுற?”

“முதல்லேடா போட்டு பேசறத நிறுத்துங்க. கம்யூனிஸ்ட் கட்சி மெம்பர் நானு.”

“சரீங்கண்ணே. கார்த்திக் எங்கேன்னு சொல்லிட்டுப் போங்கண்ணே.”

“அவன் என் மெக்கானிக் ஷாப்புல எப்பவாவதுதான் வேலைக்கி வருவான். அவன தினமும் நான்வரச் சொன்னதுமில்ல. என்கிட்ட வேல பாக்குறவன் அவனுக்கு நண்பன். அவன் சொல்லித்தான் இவனுக்கு நான் எப்பவாச்சும் டெம்பொரரியா வேலை கொடுத்தது.”

“சின்னப் பையனை வேலைக்கி வைக்கிறது குத்தம் தெரியுமா உனக்கு?”

“ஒரு சின்ன மெக்கானிக் ஷாப் சார் என்னுது. நான் மட்டும்தான் தினமும் வேலை பாக்குறவன். வேற யாருமே எனக்கு ஆர்டர் கிடைச்சா அப்பப்போ வந்துட்டுப் போறவங்க. நிறைய விசாரணை செஞ்சு வேலைக்கி வைக்கிற அளவு பெரிய கம்பெனி ஒண்ணும் இல்லை.”

*

தலைமை ஆசிரியர் அறையில் கார்த்திக்கின் 1,2,3,4,5 வரிசைப்படுத்தப்பட்டார்கள். “படிக்கிற பசங்க நீங்க… குழந்தைப் பசங்க… இல்லேன்னா நாங்க விசாரிக்கிற விதமே வேறே தெரியுமில்ல?”

“பதில் சொல்லுங்கப்பா” என்றார் தலைமை. “தெரியும் சார்” என்றான் 1.

மற்ற நாலவரும் தலையை அசைத்தனர்.

“எங்க தண்ணி அடிப்பீங்க?”

மௌனம்.

அவர் தலைமை ஆசிரியரைப் பார்த்து, “கொஞ்சம் வெளியிலே இருங்க சார். மைல்ட் பீட்டிங் தரணும்” என்றார்.

“வேண்டாம் சார்” என்றான் 2.

நாங்க ராத்திரி தெப்பக்குளக்குட்டிச் சுவத்து மேலே வெச்சுக் கொஞ்சமாக் குடிப்போம்” என்றான்.

“பணப் பிரச்சனையா? கொலை பண்ணிட்டீங்களா?”

“ஐயோ…” என்று அலறினான் 5.

“அம்மா மேலே சத்தியம் சார். அவனை நாங்க எதுவும் பண்ணலை. அவன் வேலைக்கிப் போயி புதுபோன் வாங்கினான். எப்பவாச்சும் குடிக்க செலவு பண்ணுவான் சார்.”

“அவன் போன் நம்பர கொடுங்க. நாளைக்கிப் பின்னே அவனோட பாடி எங்கேயாவது தென்பட்டது தொலைஞ்சீங்க” என்றதும் 4 ஒருசீட்டில் ஒரு கைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தான்.

அவர்கள் சென்றதும் தலைமை, “அவன் போன் நம்பரை நீங்க பேரண்ட்ஸ்கிட்டேயே வாங்கி இருக்கலாமே சார்” என்றார்.

“சார்.. அவங்களுக்கு அவன் போன் வெச்சிருந்ததே தெரியாது. அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்… அதான் அவன் அவங்களுக்குத் தெரியாமலேயே மறைச்சிருக்கான்.”

*

சாதாரணமான புடைவை அணிந்திருந்த பெண் போலீஸ் ஆசிரியைகள் அறையில் மாணவியிடம், “கார்த்திக், உன்கிட்டே கூடச் சொல்லலியா?” இல்லை எனத் தலையை அசைத்தாள் அவள் கண்ணீருடன்.

“ரொம்பவே லவ் போல” என்ற போலிஸின் உதிர்ப்பு அவள் கண்ணீரை இன்னும் அதிகப்படுத்தியது.

“அப்பா அல்லது அம்மா யாருக்காச்சும் தெரியுமா?”

“இல்லை.”

“படிக்கிற வயசுக்கு இது அதிகம். அவன் போன் பண்ணினான்னா எங்ககிட்டே சொல்லு. எதையும் மறைச்சே யூனிபார்மில் உன்வீட்டுக்கே வருவேன்.” கட்டுக் கடங்காமல் அழுதாள் மாணவி.

*

தலைவிரிக் கோலமாகத் தரையில் புரண்டு அழும் சகுனியின் மனைவியின் தனிமைத் தேவை கருதித் தாதிகள் வெளியேற்றப்பட்டனர். கைத்தாங்கலாக ஒரு தாதி அழைத்துவர அந்த அறைக்குள் நுழைந்த காந்தாரியின் காலில் சிறிய மரத்துண்டு உரசி நகர்ந்து விழுந்தது.

“என்ன அது?” என்றார் காந்தாரி.

“பகடைக்காய்கள் இரண்டுள் ஒன்று அம்மா.” என்றாள் பணிப்பெண்.

சகுனியின் மனைவி அருகே சென்ற காந்தாரி, “அண்ணன் வீரமரணம் அடைந்ததால் நான் என் ரத்த உறவுகள் மூத்தவரை இழந்தேன். அவர் இல்லாமல் நான் அனாதை” என்றார்.

“அவருடன் வாழ்ந்த நாட்களில் அச்சம் தினசரி கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருந்தது. இன்று துக்கம் என்னையே விழுங்கிக் கொண்டிருக்கிறது.” விம்மலுடன் சொற்கள் உதிரியாக வந்தன.

“சோகத்தைப் பங்கு போட்டுக் கொள்ள முடியாது. அதுவே நம்மை அடித்து ஓயும். அஸ்தினாபுரத்தின் சோகம் ஓயும்போது யாருமே எஞ்சி இருக்க மாட்டோம்.”

*

மீரட் நகரிலிருந்து புதுடெல்லி செல்லும் நெடுஞ்சாலை ஓரம் ஒரு அரைவட்டவடிவ கன ரக வாகனம் நிறுத்தும் இடத்தில் இரண்டு மூன்று லாரிகள் நின்று கொண்டிருந்தன. ஒன்றின் அடியில் படுத்து எதையோ முடுக்கிக் கொண்டிருந்தான் கார்த்திக். அவனுக்கு இணையாக எண்ணெய்க் கறை பட்ட கால் சராய் மேற்சட்டை அணிந்த ஒருவன் லாரிக்குக் கீழே குனிந்து அவனை அழைத்தான். வெளியில் வந்தபோது வெய்யிலின் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது.

“கைசேஹோ? படியா?” என்றான் கார்த்திக்.

“ஹிந்தி ஓரளவு பேசுகிறாய்” என்ற மற்றவன், “உனக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்” என்றான்.

“என்ன?” கருப்பாய் நாற்பக்கமும் சதுரமான ஒருமரத் துண்டு. சின்னஞ்சிறியது. அதிகம் ஹிந்தி பேசாமல் என்ன இதில் விசேஷம் என சைகையால் கேட்டான் கார்த்திக்.

“மீரட் மெட்ரொ ரயில் வேலையில் என் அப்பா. கூலி. அவர் தோண்டும்போது பழைய செப்புக்காசுகளுடன் இதுவும் கிடைத்தது. அஸ்தினாபுரத்துடையது என்கிறார் அப்பா” என்றவன் சாலை ஓரத்தில் அதன் ஒரு பக்கத்தை மெல்லிய உரசலாகப் பல தடவை உரசி கார்த்திக்கிடம் காட்டினான்.

தாயம் என்பதைக் குறிக்கும் ஒற்றைப்புள்ளி ஆழமாய்.

“சொக்கட்டான் காய்போல” என்றான் நண்பன்.

*

Posted on Leave a comment

இந்திய கலாசாரமும், அறிவுசார் சொத்துரிமை பதிவுகளும் – 3 | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

முன்பெல்லாம், இந்தியா போன்ற நாடுகளில், எல்லாப் படைப்புகளையும், சமூகத்தில் அனைவருக்கும் பொதுவாக வைப்பதன் மூலமோ, அல்லது மனதளவில் அவற்றில் கலப்படம் செய்வது குற்றம் என மக்கள் நினைக்கும்படி அறிவுசார் சொத்துக்களைக் கோவில், கடவுள், சாதி, இவற்றோடு இணைத்து வைப்பதன் மூலமோ, அதில் செய்யும் பிழைகள் அவர்களையே தாக்கும் எனும் ஒரு நம்பிக்கையை (மூட நம்பிக்கை??) ஏற்படுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலமோ, அவற்றைப் பாதுகாக்கும் வேலையையும் கலாசாரம் எனும் பெயரில் சேர்த்தே செய்தார்கள்.

இன்றைய இந்தியனுக்குச் சாதியால் பிரச்சினைகள் வருகிறபடியால் சாதி, கடவுள் போன்றவை வேண்டாம் எனச் சொல்கிறான். அப்படி சொல்கையிலேயே, சாதி, கடவுள் இவற்றைப் பயன்படுத்தி அதுவரை என்னவெல்லாம் சாதித்தார்களோ அவற்றிற்கான பாதுகாப்பையும் சேர்த்தே செய்ய வேண்டிய கடமை இன்றைய இந்தியனுக்கு இருக்கிறது அல்லவா?

இதனை ஒட்டியே, நாமுமே, அறிவுசார் சொத்துக்களை இன்ன பிற நாடுகளைப் போலப் பதியும் முடிவை ஏற்றுக் கொண்டு விட்டோம். முந்தையக் கட்டுப்பாட்டிலிருந்து வெளி வந்து, பதிவு செய்யும் கலாசாரத்திற்கு இந்தியா மாறிக்கொண்டே வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில்தான், இதுவரை இந்தியர்களுடையதாக இருந்த அறிவுசார் சொத்துரிமைகள் களவாடப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

எவற்றிற்கெல்லாம் அறிவு சார் சொத்துரிமை உண்டு என்பது குறித்த அறியாமை இங்கே மிக அதிகமாக இருக்கிறது.

ஒரு ஊரின், நாட்டின் இயற்கை வளத்தாலோ, அல்லது அந்த ஊர் மக்களின் சிறப்புத் திறமையாலோ மட்டுமேதான் ஒரு பொருளை உற்பத்தி செய்ய முடியும் என, தயாரிக்கப்படும் ஒரு பொருளுக்குச் சிறப்பு அந்தஸ்து இருந்தால், அதுபோன்ற பொருட்களுக்கு, அந்தத் தொழில் செய்யும் குழுவுக்குப் புவிசார் குறியீடு கிடைக்கும். உதாரணமாக ‘பத்தமடை பாய்’. இது பத்தமடை எனும் ஊரின் கோரைப் புற்களைக்கொண்டு அந்த ஊர் ஆட்களால் பரம்பரை பரம்பரையாகத் தயாரிக்கப்படுகிறது. இதேபோல வேறொரு ஊரின் புல்லை வைத்தும் பாய் தயாரிக்கலாம்தான். ஆனால், அவற்றை ‘பத்தமடைப்பாய்’ எனும் பெயரில் விற்க இயலாது. காரணம், அந்த ஊரின் புல்லின் தரத்தை அந்தப் பெயர் மட்டுமே வெளிப்படுத்தும்.

அது போலவே, ஒரு ஊரின் நாட்டு விலங்குகள். இன்று அறிமுகமாகி இருக்கும், செயற்கைக் கருத்தரிப்பு முறைகளும், விந்தணு விற்பனையும் கூட இந்தச் சட்டத்தின் கீழ் வருபவையே.

யுவராஜ் எனும் எட்டு வயது எருதின் இன்றைய விலை ஏழு கோடி. காரணம் அதீதp பால் சுரப்பு. இந்த எருது பிறந்தபின்னும் அதன் தாய் எருமை இன்றும் நாள் ஒன்றுக்கு 28 லிட்டர் பால் சுரக்கிறது.

இதனால், இப்போது இந்த யுவராஜின் விந்தணு ஒரு டோஸ் முந்நூறு ரூபாய்களுக்கு என விற்கப்படுகிறது. இதை விற்கவும் சட்ட அனுமதி பெறவேண்டும். இந்தியாவை விட்டு வெளி நாடுகளுக்கு விற்க / அனுப்ப இரு நாடுகளின் சட்ட அனுமதி இருக்கவேண்டும். ஆந்திராவின் ஓங்கோல் இன மாடுகளும், இதே போன்ற சில சட்ட அனுமதிகளுக்குட்பட்டவையே. ஏனெனில் இவை பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அருகிவிட்டன. அவற்றின் தரமோ மிக அதிகம். இந்த மாடுகளை வைத்திருப்பவர்கள், ‘விந்தணு விற்பனைக்கு’ சிறப்பு அனுமதி பெற வேண்டும். இன்றையத் தேதியில் இவற்றை வெளிநாட்டு மாடுகளோடு இணைத்து இனப்பெருக்கம் செய்வதால், அங்கே அந்த மாடுகள் அதிக தாங்கும் திறனோடும், அதிக பால்சுரப்போடும் விளங்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இதனால், இந்த விந்தணுக்கள் கூடக் களவாடப்பட்டுக் கொள்ளையடிக்கப்படுகின்றன.

சட்டத்தின் பார்வையில் பதிப்புரிமைகளுக்கும், காப்புரிமைகளுக்கும் வேறுபாடு உண்டு. பதிப்புரிமை என்பது பொதுவாக ஒரு கலைப் படைப்பாக இருக்கும். எழுதிய கட்டுரை, இயற்றிய இசை இவையெல்லாம் பதிப்புரிமைகளாகும். இவற்றை எப்போது இயற்றிப் பதிப்பிக்கிறோமோ அந்த வினாடியிலேயே அதைப் படைத்தவரின் உரிமை ஆகிவிடும். அப்படிப் பதிப்பிக்கப்படுவதே அதன் காலத்தைச் சொல்லும் சான்றாகிவிடும். அதுவே அதற்குப் பாதுகாப்பும் கூட. ஆனால் அதற்கும் மேற்பட்டு ஒரு பாதுகாப்பு தேவை எனில், அந்தப் படைப்பை இந்திய காபிரைட் போர்டில் பதிந்து கொள்ளலாம்.

காப்புரிமை என்பது கண்டுபிடிப்புகளுக்கானது. அப்படியான கண்டுபிடிப்பை, காப்புரிமை அலுவலகத்தில் பதிந்து கொண்டால் மட்டுமே அதற்கு அந்த உரிமை கிடைக்கும். அதேபோல, அவற்றைக் கண்டுபிடித்து, அந்தக் கண்டுபிடிப்பு குறித்த அனைத்துத் தகவல்களையும் பொதுவெளியில் வைத்துவிட்டால் அதன்பின் அதற்கு பேடண்ட் எனப்படும் காப்புரிமை கிடைக்காது. காரணம், காப்புரிமையின் அடிப்படை அம்சம் அதன் புதுமை மட்டுமே. அதை வெளியில் சொல்வதன் மூலம் அதன் புதுமைத் தன்மை இல்லாமல் போகிறது. அந்தக் கண்டுபிடிப்புத் தகவல்களை வைத்து, இன்னொருவர் அதே பொருளைத் தயாரித்து, இவருக்கு முன்னர் காப்புரிமைக்கு விண்ணப்பித்து காப்புரிமை பெற்று விட முடியும்.

புதிய கண்டுபிடிப்புத் தகவல்களை வெளியே சொன்னாலுமே, அதற்குக் காப்புரிமை கிடைக்க சில விதிவிலக்குகளைச் சட்டம் சொல்கிறது. அந்த விதிவிலக்குகளில் புகுந்து பல இந்தியக் காப்புரிமைகளும் களவாடப்படுகின்றன.

சட்டப்படி, விண்ணப்பத்தின் பேரில், ஒரு கண்டுபிடிப்பைச் செய்பவருக்கு அதன் காப்புரிமை கிடைக்கும் எனினும், அவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கையில், அந்த நிறுவனத்தின் அறிவியற்கூடத்தைப் பயன்படுத்தி, அந்தக் கண்டுபிடிப்பைச் செய்திருந்தால், அந்த நிறுவனத்தின் பேரிலேயே காப்புரிமை கிடைக்கும். ஏனெனில், அந்தக் கண்டுபிடிப்பில் அந்த நிறுவனத்தின் உழைப்பும், பொருட்களும் பயனாகி முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதால்.

ஆனால், இந்திய அளவில், பேடண்ட் செய்யக்கூடிய கண்டுபிடிப்பு கான்ஸப்ட் இருப்பவர்களுக்கான வேட்டையே வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களால் செய்யப்படுகிறது. ஏற்கெனவே ஒரு இந்திய மாணவன் ஒரு அறிவியல் கான்ஸப்டை வைத்திருப்பான். அதை மேற்கொண்டு விரிவாக்க வசதி இல்லாதிருப்பான். இந்நிலையில் அவனை ஒரு வெளிநாட்டு நிறுவனம் இனம் கண்டுகொண்டால், நிச்சயம் அந்தக் கண்டுபிடிப்பு அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கே கிடைக்கும். அதற்காக அந்நிறுவனம் என்ன விலையையும் கொடுக்கும். அதற்கு அந்த அரசும் உதவும்.

இந்திய அரசாங்கத்திற்கும் இது தெரியும் என்றாலும், கல்விக்கான உதவியைவிடப் பசி போக்கும் தேவையே இங்குப் பிரதானமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.

Brain drain என்பது இந்திய மாணவர்கள் இந்தியக் கல்விக்குப் பின் அந்த அறிவை வெளிநாடுகளில் பயன்படுத்தி அந்நாட்டை வளப்படுத்துவது மட்டும் அல்ல. இந்தியக் காப்புரிமைகள் வெளிநாடுகளுக்குப் போவதால், அதன் பின்னிட்டு இந்தியா அந்த அறிவை விலைகொடுத்துத்தான் அங்கிருந்து இனி பெற முடியும் எனும் சூழலும் எழுகிறது. இன்றையத் தேவைக்கு இது ஒரு பிரச்சினை இல்லை எனத் தோன்றலாம். ஆனால் வரும் காலத்தில் இதுவே பிரச்சினையாகக்கூடும். குறிப்பாக மருத்துவத் துறையில்.

சமீபத்தில் சைனா-அமெரிக்காவுக்கு இடையில் அறிவுசார் சொத்துரிமை காரணமாக, பல ஒப்பந்தங்கள் பிரச்சினைக்குள்ளானது நாம் அறிந்ததுதானே?

அதே போல, இந்தியப் பள்ளி கல்லூரிகள். ஒரு கண்டுபிடிப்பு குறித்த தகவல்களைப் பொது வெளியில் வைத்தால், அதற்குக் காப்புரிமை கிடைக்காது; ஆனால், அதற்குச் சட்டம் சில விதிவிலக்குகளை வைத்திருக்கிறது எனவும் பார்த்தோம் அல்லவா? (அவற்றில் சில சூழல் பற்றி இந்திய காப்புரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 29 முதல் 34 வரை பேசுகிறது.)

அதன்படி பள்ளி கல்லூரிகளில் அறிவியல் காட்சிகளாக வைக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகளை, விதிவிலக்குகளைச் சட்டம் தருகிறது. ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே இல்லை. அந்த அறியாமையைப் பயன்படுத்திக்கொள்ளும் கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில், பள்ளியில், இது போன்ற அறிவியல் காட்சிகளை வைக்க வேண்டும் என்றால், அந்த மாணவர்களுக்கு முதலில் காப்புரிமை பற்றிய அறிமுக வகுப்பு நடத்தப்படுகின்றது. அறிவியல் காட்சி நடந்ததில் இருந்து ஓராண்டுக்குள் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனும் தகவலும் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. வெல்லும் மாணவனுக்கு ஒரு நிறுவனம் ஸ்பான்ஸர் செய்து, காப்புரிமை பெற உதவுகிறது. இந்த உதவியே பரிசாகவும் அறிவிக்கப்படுகிறது.

நாம்?

‘பரிட்சைக்குத் தயாரிக்கப்படும் கேள்வித் தாட்களுக்குக் கூட அதைத் தயாரித்த ஆசிரியருக்கு, கல்வி நிறுவனத்துக்குப் பதிப்புரிமை உண்டு’ எனும் தகவல்கூட ஆசிரியர்களுக்கே பெரிதும் தெரிவதில்லை. சமீபத்தில், அண்ணா பல்கலையில் நடந்த கேள்வித்தாள் திருட்டும் சர்ச்சையுமே இதற்கு சாட்சி.

Posted on Leave a comment

இரட்டைப்படகு சவாரி செய்த அலிக் பதம்ஸீ | ஜெயராம் ரகுநாதன்

“Alyque Padamsee swam against the tide for contentious campaigns whose time had come – his Kamasutra Condom ads with Pooja Bedi blew sex out of the closet……

Vikram Phuken, The Hindu

இந்த வாக்கியங்கள் அலிக் பதம்ஸியை மிகச்சரியாக விவரிக்கின்றன எனலாம். நவம்பர் 18, 2018ல் தன் 90வது வயதில் காலமான பதம்ஸி இந்திய விளம்பர உலகில் முடி சூடா மன்னராகவே இருந்தவர். விளம்பரம் மட்டுமில்லமல் அவர் ஒரு மிகத்திறமையான தியேட்டர் ஆசாமியும் கூட. சினிமாவிலும் தலை காட்டியிருக்கிறார்.

நான் ஒண்ணரை வருடப் பயிற்சி முடித்து மேலாளராகப் பதவி ஏற்றதும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்டின் அழகு சாதனப்பொருட்கள் பிரிவில் சேர்ந்தேன். அந்தப் பிரிவிலிருந்துதான் இன்றைய பிரபல லிரில் சோப், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற அழகு சாதனப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள். அன்றைய பிரிவின் தலைவர் சித்தார்த் சென் என்பவர் அன்றைய மார்க்கெட்டிங் உலகின் உஸ்தாத் என்று அறியப்பட்டவர். பதம்ஸீயின் நல்ல நண்பர். இருவருமாகச் சேர்ந்துதான் மிக மிக வெற்றிகரமான அந்த நீர் வீழ்ச்சியில் இளம் பெண் குளிக்கும் லிரில் சோப் விளம்பரத்தை உண்டாக்கியவர்கள்.

1985ல் பத்து வருடங்களுக்கு முந்தைய லிரில் சோப்பின் விளம்பரப் படத்தை மீண்டும் எடுக்கத் திட்டம் போடப்பட்டபோது அந்தப் பிரிவின் நிதி மேலாளர் என்னும் முறையில் பல கூட்டங்களில் நானும் பங்கேற்றிருக்கிறேன். நேரிடையாக பதம்ஸீயின் அணுகுமுறையைக் கண்டவன் என்னும் வகையில் எனக்கு அவர் மேல் சிவாஜி கணேசன் போல ஒரு மதிப்பு ஏற்பட்டது. மும்பையின் லீவர் ஹௌஸ் என்னும் எங்கள் அலுவலகத்தின் கான்ஃபெரென்ஸ் அறையில் தெலுங்குப்பட தேவலோகக் காட்சி போல சிகரெட் புகை சூழ சித்தார்த் சென்னும் அலிக் பதம்ஸீயும் விவாதித்து, வினாடி வினாடியாக அந்த லிரில் பட விளம்பரத்தை உருவாக்கியதை ஓரளவுக்குக் கண்ணால் கண்டவன் நான். படைப்புத்திறம் என்பது அங்குலம் அங்குலமாகச் செதுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நிதரிசனமாகப் புரிந்துகொண்ட தருணங்கள் அவை. ஒரு விளம்பரம் எவ்வாறெல்லாம் மக்களைச் சென்றடையும், அதன் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் இருக்கக்கூடும், அது எங்ஙனம் ஒரு பொருளின் விற்பனைக்குச் சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்னும் இயலைக் கசடறக்கற்றவர் அலிக் பதம்ஸீ.

இந்த இருவரின் விவாதங்களில் ஒரு சுவாரஸ்ய அம்சம் – சர்வ சகஜமாகக் கெட்ட வார்த்தைகள் இறையும். ‘நான்கு எழுத்து ஆங்கிலச் சொல்’ ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டாவது இருப்பதைக் கவனித்திருக்கிறேன்!

பதம்ஸி உருவாகின லைஃப் பாய் விளம்பரம் பட்டி தொட்டிகளிலெல்லாம் அந்த சோப்பைக் கொண்டுபோய்ச் சேர்த்ததை நாமறிவோம். வடஇந்தியாவில் அப்போதெல்லாம் கடைகளில் பெயர்கூடச் சொல்லாமல் ‘லால்வாலி சோப்’ (சிகப்பு கலர் சோப்) என்றே கேட்டு வாங்குவார்களாம். நிதி மேலாளராக இருந்த நான் லைஃப்பாய் சோப்பின் விற்பனை எப்படியெல்லாம் உயர்ந்தது என்பதை அறிவேன்.

பதம்ஸீயின் இன்னொரு அபார உருவாக்கம் செர்ரி பிளாசம் ஷூ பாலிஷ். மிகச் சாமர்த்தியமாக சார்லி சாப்ளினை அதன் பிராண்ட் அம்பாசடாராக்கி பள்ளி போகும் குழந்தைகளின் செல்ல பிராண்டாக்கிவிட்டார். அம்மாக்கள் கடைகளில் சார்லி சாப்ளின் ஷூ பாலிஷ் என்று கேட்டு வாங்குவார்களாம்.

லலிதாஜியும் சர்ஃப் துணி சோப்பும் தெரியாத நடுத்தரப் பெண்மணி இன்று இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்குப் பெண்களை ஈர்த்த விளம்பரம். இந்த விளம்பரத்துக்குப்பின் கவிதா சௌத்ரி இன்னும் உயரத்துக்குப்போனது தெரிந்த விஷயம்.

பதம்ஸீயின் இன்னொரு மாஸ்டர் ஸ்ட்ரோக் காமசூத்ரா ஆணுறை விளம்பரம். நான்கு சுவர்களுக்குள் மட்டுமே நடந்த சமாசாரத்தை விளம்பரத்தின் மூலம் வீட்டின் அறைக்குள் கொண்டுவந்தார் என்று அவர் மேல் குற்றச்சாட்டு உண்டு. இந்தியாவின் விளம்பர உலகம் வயதுக்கு வந்துவிட்டது என்று இந்தியர்களுக்கே உணர்த்தியவர் பதம்ஸீ. இந்த விளம்பரத்தில் நடித்த பூஜா பேடி மிகப் பிரபலமனது இன்னொரு சுவாரஸ்யம்.

மார்க்கெட்டிங் உலகில் பொருளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் இருக்கும் பெரிய மேலாளர்கள் இந்த விளம்பரங்கள் எப்படி வரவேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டுவார்கள். அவர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி ஒரு நல்ல பிராண்ட் விளம்பரம் கொண்டு வருவது மிக மிகக் க‌ஷ்டமான செயல். பதம்ஸீ அந்தக் கடுமையான சவால்களைத் தன் அபாரத் திறமையாலும் ஆளுமையாலும் அனாயாசமாகக் கையாண்டு வெற்றி பெற்றார்.

பதம்ஸிக்குள் ஒரு நடிகர் இருந்தார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் முதலில் நடித்தது தன் சொந்தச் சகோதரரின் நாடகக்குழுவில், ஏழே வயதில்! ஷேக்ஸ்பியரின் வெனீஸின் வியாபாரி நாடகத்தில் நடித்தார். என்ன வேடம் போட்டார் என்பது பற்றிச்செய்தி இல்லை. அடுத்த 70 வருடங்களில் அவர்களுடைய குழுவின் நாடகங்களை இயக்கியது பதம்ஸீ அல்லது அவரின் மனைவி பேர்ல் பதம்ஸி. நாடக உலகிலும் பல புதுமைகளைச் செய்தவர் பதம்ஸீ.

1974ல் ஆண்ட்ரு லாயிட் வெபெர் (ஆம் ஸ்லம் டாக் மில்லியனரின் இசையமைப்பாளரேதான்!) ‘ஜீஸஸ் கிரைஸ்ட் சூப்பர்ஸ்டார்’ என்னும் பிராட்வே ரக இசை நாடகத்தை அரங்கேற்றி இந்தியாவில் இதுபோன்ற நாடகங்களுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தினார். பதம்ஸீ ஓரளவுக்கு வெகுஜன வகை நாடகங்களையே இயக்கினார் என்றாலும் புதுமைகளும் செய்யாமலில்லை. கிரிஷ் கர்நாடின் துக்ளக் நாடகத்தை இவர் மேடையேற்றியது நாடக உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இவர் மீது விமரிசகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு இவர் தன் படைப்புக்களில் வணிகத்தன்மையும் மேட்டிமைத்தன்மையுமே ஆதரித்தார் என்பார்கள். முக்கியமாக விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார் போன்றவர்களின் அடித்தட்டுக் கதைக்கருவை இவர் அதிகம் தீண்டியதில்லை என்னும் விமரிசனத்துக்குள்ளானவர். பதம்ஸீ இதற்கெல்லாம் கவலைப்பட்டுப் பதில் சொன்னாரில்லை.

உலகளாவிய நிலையில் நடிப்புக்காக பதம்ஸீயின் பெயர் வெளி வந்தது, ரிச்சார்டு அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் இவரின் ஜின்னா வேடத்துக்காகத்தான். ஒரு காக்டெயில் விருந்தில் இவரின் அனாயாச பர்சனாலிடியைப் பார்த்த அட்டான்பரோ இவர்தான் ஜின்னா என்று அப்போதே முடிவெடுத்தார் என்பார்கள். அந்தப் படத்தில் இவர் அணிந்து வந்த தலையை ஒட்டிய குல்லாயும் ஒற்றை மூக்குக்கண்ணாடியும் புதிதாகப் பிறக்கவிருக்கும் ஒரு தேசத்தின் படபடப்பை நிதரிசனமாகத் திரையில் கொண்டு வந்த அற்புதத்தை நாம் பார்த்தோம்.

பல நடிப்புக் கல்லூரிகளுக்குச்சென்று பாடம் எடுத்திருக்கிறார். இன்றைய விளம்பர உலகத்தின் பல விற்பன்னர்கள் பதம்ஸீயின் புகைப்படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்திருப்பதாகச் சொல்லுவார்கள்.

இந்தியாவின் விளம்பர உலகின் ‘பிராண்ட்’ தந்தை என்றே சொல்லும் தகுதி பெற்றவர் பதம்ஸீ. அவருடைய படைப்பாற்றலால் மட்டுமே இந்தியாவில் நூறுக்கும் மேற்பட்ட பிராண்டுகள் உருவாகியிருக்கின்றன.

அலிக் பதம்ஸீக்கு விளம்பர உலகத்தின் ஆஸ்கார் என்று கருதப்படும் International Clio Hall of Fame nomination கிடைத்திருக்கிறது. இதைப்பெற்ற ஒரே இந்தியர் இவர்தான் என்பது விசேஷம்.

லிரில் சோப் விளம்பரத்தில் பிரீதி சிந்தாவுக்கு முன்பு முதன்முதலில் நடித்த கரென் லூனல் என்னும் நடிகை, “அலிக் பதம்ஸீ இந்த விளம்பரத்தின் நுணுக்கங்கள் பற்றி ஷூட்டிங் தினங்களில் தினமும் பேசிப்பேசி என் மூடை உருவாக்கினார். எனக்கான புகழ் அவருக்குப் போய்ச்சேர வேண்டும்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இத்தனைக்கும் இந்த விளம்பரத்துக்கான கதைக்கரு (ஸ்டோரி போர்ட்) என்ன தெரியுமா? “நீர் வீழ்ச்சியில் இளம் பெண்!” அவ்வளவுதான்.

அதுதான் அலிக் பதம்ஸீ!

Posted on Leave a comment

விறகுக்கட்டில் தேள் – சுதாகர் கஸ்தூரி

அம்பாசமுத்திரத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாகப் படித்துக்கொண்டிருந்த காலம். வீடுகளில் திண்ணை தாண்டி சிறு உள்தாழ்வாரத்தில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். அடுத்த வீட்டில் ஒருநாள் அலறல் கேட்டது. ஓடிப்போய்ப் பார்த்தோம். ஆண்டாள் மாமி, வலது கை ஆள்காட்டி விரலைப் பிடித்துக்கொண்டு வலியில் கத்திக்கொண்டிருந்தாள். “தேள்.. விறகுக்கட்டுல தேள்.. கொட்டிருத்து.” அண்ணன் விறகுக்கட்டை அவசரமாக விலக்க, தேள் ஒன்று கொடுக்கை உயர்த்தியபடி அவசரமாக உள்ளே ஓடி மறைந்தது. மாமிக்கு யாரோ, ஸேஃப்ட்டி பின் கொண்டு, தேள் கொட்டிய இடத்தில் மெல்லத் தோண்டி, சிறு கொடுக்குத் துண்டை வெளியே எடுத்து… கையில் சுண்ணாம்பு வைத்து… அதற்குள் மாமி வலியில் துவண்டு விட்டாள்.

கிட்டத்தட்ட ஆறு மாதகாலம், மாமியின் விரல் வளைந்தே இருந்தது. “கையில் என்ன மாமி?” என்றால் போதும் “அதேண்டா கேக்கறாய்.. ஒரு பெரிய தேள்.. நட்டுவாக்காலியோ என்னமோ.. கொட்டிடுத்து” கிட்டத்தட்ட அழுதுவிடும் குரலில் ஒவ்வொரு முறையும் சொல்லுவாள். ‘அது தேள் குஞ்சு’ என்றான் அண்ணன். நட்டுவாக்காலியெல்லாம் இல்லை. ஆனால் ஆண்டாள் மாமி அதனை உறுதியாக நம்பினாள்.

அதன்பின் விறகு எடுக்கவே பயந்தாள். “அம்பி வந்து ரெண்டு விறகு எடுத்துக்கொடுத்துட்டுப் போடா” என்பாள். அம்பி, இல்லாதபோது “டேய், இவனே, செத்த வந்து ரெண்டு விறகு உருவிப் போட்டுட்டுப் போ” என்பாள், என்னைப் போன்ற சிறுவர்களிடம். பிள்ளைகள் விளையாட்டில் பந்து எதாவது செடிகளில் சென்றுவிட்டால் “டேய்.. அங்க போகாதே. தேள் எதாச்சும் இருக்கப்போறது.” அங்கு புதரில் பாம்பு இருக்கச் சாத்தியமிருந்தது. ஆனால் அவளுக்குப் பயம் தேள்தான்.

விறகு எடுத்துக்கொடுக்க யாராவது வந்தால்தான் உண்டு. மற்ற அனைத்துக் காரியங்களும் செய்யக்கூடிய ஆண்டாள் மாமிக்கு விறகு என்றால் தேள் நினைவு. மடங்கிய விரல் பல மாதங்கள் கழித்து நீண்டதா என்பது நினைவில்லை. ஆனால், அவரை மிகவும் தாக்கியது ஒரு குஞ்சுத் தேள் கொடுக்குதான் என்பதும், அவரது நடைமுறை வாழ்க்கையை மாற்றிப்போட்டது அந்த சிறுநிகழ்வுதான் என்பதும் எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. நானே சிலநாட்களில் விறகுக்கட்டைகளை எடுத்துப் போட்டிருக்கிறேன். (“பாத்துடா, உள்ள தேள் இருந்து வைக்கப் போறது.”)

சிலவேலைகளில் மட்டும் நாம் காலதாமதம் செய்வதற்கும், தவிர்ப்பதற்கும், ஏதாவது முன் அனுபவமோ, பிறரது அனுபவத்தைப் பார்த்து / கேட்டு உள்வாங்கியதோ காரணமாக இருக்கலாம். நமக்கு எப்போது தேள் கொட்டியது என்பதை விலகி நின்று ஆராய்ந்தால், அது குஞ்சுத்தேள்தான், நட்டுவாக்காலியல்ல என்பதும், நமது விரல் சில நாட்களிலேயே பலதேவைகளுக்கு நீண்டுவிட்டது என்பதும், விறகு எடுக்க மட்டும் வளைந்து வலியெடுக்கிறது என்பதும் தெரியவரும்.

பயங்களில் சில காரணமற்றவையாக இருக்கலாம். சில உள்மறைக் காரணங்களால் வந்திருக்கும். நமது நட்டுவாக்காலி நம்பிக்கைகளை நம்பாது, கொட்டிய தேள் எது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டால், விரல்வளைவுகளையும் விறகு எடுக்கத் தவிர்ப்பதையும் தவிர்க்க முடியும்.

“பயங்களை வெற்றி கொள்ள முக்கியமாகத் தேவைப்படுவது அதனை எதிர்த்தான இயக்கம்” என்கிறார் ஸ்காட் ஆலன், தனது பிரபலமான ‘The Discipline of Masters’ என்ற புத்தகத்தில். “தோல்வி கொண்டுவரும் முதல் தடைக்கல் – பயம்” என்றே ‘சுய-தோல்வியடையச் செய்யும் தடைகள்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். தள்ளிப்போடுதல் என்பதில் நாம் சொல்லும் சாக்குகள் பல இருப்பினும், அதில் முக்கியமானதைக் கவனியுங்கள் – ஒரு பயத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.

“உங்கள் பயங்களை வெற்றி கொள்ளுங்கள்” என்று பல புத்தகங்களிலும், உற்சாகமூட்டும் பேச்சுகளிலும் பார்க்கலாம். ஆனால் இது அத்தனை எளிதில் சாத்தியமல்ல. நமது பயங்களின் ஆதிமூலம் தெரியாமல், தற்போது நமது பயத்தின் நீட்சி எதனால் என்பது தெரியாமல் நம்மால் நமது பயங்களை எதிர்கொள்ள முடியாது. மிக ஆழமான, வலி நிறைந்த பயமாக இருக்குமானால், மனநல ஆலோசகர்களை அணுகுவதுதான் சரியான வழி.

மற்றபடி, “லைட் இல்லைன்னா, உள் ரூமுக்குப் போகமாட்டேன்” என்று சொல்லுவதில் சிறுவயதில், திடீரென “பே” என்று அலறி பயப்பட வைத்த அண்ணன்களின் குரல்களே இன்றும் மனத்தின் ஆழத்தில் இருந்து, இருட்டான அறைக்குச் செல்லப்பயப்பட வைக்கிறது என்பதை நாமே புரிந்துகொள்வது யதார்த்தம். இதற்கும் சில உரையாடல்கள் அவசியம். “ஆமா, நான்தான், நீ அந்த ரூம் போகும்போதெல்லாம் பின்னால இருந்து ஊ ஊன்னு ஊளையிடுவேன். நீ அம்மான்னு அழுவே” என்று அண்ணன் இப்போது சிரித்துக்கொண்டே நினைவு கூர்ந்தால், அதனை மனதில் அடிக்கடிச் சொல்லிக்கொள்வதும், மெல்ல மெல்ல இருட்டிய அறையில் சென்று லைட்டைப் போட்டுப் பழகுவதும். அதனைப் பாராட்டி உற்சாகமூட்ட ஒருவர் அருகில் இருப்பதும் ஆரோக்கியமான செயல்.

சில நேரங்களில் மட்டுமே, தன்னந்தனியாக பயங்களை எதிர்கொள்ள முடியும். மனம், முன் அனுபவம் கொண்டு ‘நமக்கு இது பயப்படுத்தும் அனுபவம். தவிர்த்துவிடு’ என்றே நம்மைத் தளர்த்தும். விலக்குவதற்கான தருக்க ரீதியில் அனைத்துக் காரணங்களையும் முன்னிறுத்தும். அவை அனைத்தும் நியாயமானவையே. “இந்த வயசுல நீச்சல் கத்துகிட்டு என்ன செய்யப்போற? பேசாம உன் வேலையைப் பாரு” என்பது நாற்பத்தைந்து வயதுப் பெண்மணிக்குத் தகுந்த காரணமாக இருக்கலாம். ஆனால், தண்ணீர் மீதான பயம் அவருக்கு என்றுமே இருக்கும். கங்கையில் குளிக்கப் போனாலும் ஒரு செம்பு தேவைப்படும். சில்லென்ற நீரில் முழுகி எழும் ஆனந்தம் அவருக்கு என்றுமே கிட்டப்போவதில்லை – அவர் அதனை ஆழ்மனதில் மிக விரும்பினாலும்.

இது ஒரு கேள்வியை முன் வைக்கிறது. ‘எனது விருப்பம், எனது பயங்களைப் போக்கிவிடாதா?’ விருப்பம் (desire) என்பதற்கும், ஆழ்ப்பற்று (passion) என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கு சைக்கிள் ஓட்ட ஆசை என்பதற்கும், ‘என்ன மழையானாலும் சரி, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் சைக்கிள் ஓட்டியே தீருவேன்’ என்பதற்கும் உள்ள வித்தியாசம் அது. ஆழ்ப்பற்று நம்மை, நமது பயத்திலிருந்து விலகி வரச்செய்யும். இந்த உள்ளுணர்வு வராவிட்டால், நம்மால் மிகப் புத்திசாலித்தனமான, மிகச்சரியான, நடைமுறைக்குச் சாத்தியமான சாக்குப் போக்குகளை ஒரு பட்டியலாக அடுக்க முடியும். “சர்க்கரை வியாதிக்கு தினமும் முப்பது நிமிசம் நடக்கணும். சரி. எனக்கு நடக்கப் பிடிக்கவும் செய்யும். ஆனா, எட்டுமணிக்கே ஆஃபீஸ் கிளம்பணுமே? தவிர, எங்க நடக்க முடியுது சொல்லுங்க? ரோடெல்லாம் ஒரே ட்ராஃபிக். புழுதி… இதுல நடந்தா…” இதெல்லாம் சரிதான். நடக்க மிகவும் பிடிக்கும் என்றால், ஆறுமணிக்கே எழுந்திருக்க வைக்கும். மூக்கில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டு நடக்கத் தோன்றவும் செய்யும். இது ஆழ்ப்பற்றின் அடையாளம்.

ஆழ்ப்பற்று மட்டுமிருந்தால் போதுமா? ஒவ்வொரு பயத்தின்பின்னும் அதன் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. இத்தனை வருடம் நீரில் இறங்காமல் இருந்துவிட்டு, திடீரென நீச்சல்குளத்தில் குதிக்க முடியுமா என்ன? சைக்கிள் ஓட்டிவிட முடியுமா? ‘48 வயதில், 85 கிலோ எடையில், இப்ப நான் பரத நாட்டியம் கத்துக்கப் போறேன்னு சொன்னா, சிரிக்க மாட்டாங்களா? முதல்ல, எந்த டீச்சர் சேத்துக்குவாங்க?’

தருக்கம் சார்ந்த இந்தக் கேள்விகளும் நியாயமானவைதான். “ஆழ்ப்பற்றுடன் மற்றொரு பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்” என்கிறார் டாக்டர் ஆஞ்செலா டக்வொர்த், அவரது ‘Grit’ என்ற பிரபலப் புத்தகத்தில். அது பொறுமையுடனான விடாமுயற்சி (Perseverance). நிஜமான தடைகளைவிட, நம் மனதில், அத்தடைகளைக் குறித்துத் தோன்றும் நினைவுகளும் கேள்விகளுமே மிகப்பெரிய தடைகள்.

‘எந்த டீச்சர் வயதான என்னை டான்ஸ் கிளாஸ்ல சேத்துக்குவாங்க?’ என்ற கேள்வியைக் கொஞ்சம் தள்ளி வைத்து ‘எங்கு வயதானவர்களுக்கும் டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறார்கள்?’ என்று தேடுவதும் கேட்பதும் முதல்படி. சிலர் வியக்கலாம்; எள்ளி நகையாடலாம். பொறுமையுடனான விடாமுயற்சி என்பது ‘தெரியலையே, அப்படியெல்லாம் இருக்க சாத்தியமில்ல’ என்ற பதில்களைத் தாண்டி ‘அடுத்து’ என்று அடுத்த நண்பரிடம் கேட்கத் தூண்டும்.

எத்தனை முறை இப்படித் தோல்விகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்? “குறைந்தது நாற்பது முறை” என்கிறார் ஜாக் கான்ஃபீல்ட், தனது ‘How to Get From Where You Are To Where You Want To Be’ என்ற புத்தகத்தில், “ஒரு புத்தகத்தை எழுதிப் பதிப்பதற்கு”. அனைவரும் புத்தகம் எழுத முயல்வதில்லை என்றாலும், குறைந்தபட்சம் இருபது முறை தடைகளையும், தோல்விகளையும் எதிர்நோக்கி ‘அடுத்து’ என்பதை மீண்டும் முயலுங்கள் என்று எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

பின்னணியில், பயம் பெருமளவில் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதிலும், தேள்கொட்டிய நிகழ்வு நமக்கு எது என்பதைக் கேட்டுத் தெளிவதிலும், எந்த அளவில் தள்ளிப்போடுவதை விரும்புகிறேன் என்பதனை உணர்வதிலும், அதனை அடைய எந்த அளவில் ‘அடுத்து’ என்று இயங்க முயல்கிறேன் என்பதனை உறுதிப்படுத்துவதிலுமே, ஒரு முயற்சியைத் தள்ளிப்போடுவது என்ற பழக்கம் நலிவடைய முடியும்.

Reference

Angela Duckworth: Grit

Jack Canfield: How to Get From Where You Are To Where You Want To Be

Scot Alan: The Discipline of Masters

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 15 – சுப்பு

அரங்கம் என்ற தீவு

எனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு கடலில் கட்டுமரப் பயணம் போவதுண்டு. அலைகளைக் கடந்து ஆழமான பகுதிக்குப் போனால் நல்ல வெய்யில் நேரத்திலும் குளுமையாயிருக்கும். கட்டுமரம் கடலின் அசைவுக்கேற்றபடி மெதுவாக ஆடும். கடல் நீலநிறத்தை விட்டுக் கருப்பாகவோ, பச்சையாகவோ இருக்கும். மரத்தில் உட்கார்ந்துகொண்டு தண்ணீரில் காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு, நாங்கள் எடுத்துப்போன சாதத்தையோ, பிரட் பட்டர் ஜாமையோ சாப்பிடுவோம். வெகு நேரம் அங்கேயே தங்கியிருந்துவிட்டு மாலையில் கரைக்குத் திரும்புவோம்.

விஷ்ணுவுக்கு நீச்சல் தெரியும். அவனும் எப்போதாவது எங்களோடு சேர்ந்து கொள்ளுவான். ஆட்கள் அதிகமாயிருந்தால் இரண்டு கட்டுமரங்களை எடுத்துப் போவதும் உண்டு. இந்தக் கும்பலில் நீச்சல் தெரியாதவர்கள் நானும் பிரபாகரனும்தான். பிரபாகரன் மீனவர் குலத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் கடல் தொழிலுக்குப் போகாமல் ஐ.டி.ஐ. படித்துவிட்டதால் நீச்சல் தெரியாது. என்னையும் பிரபாகரனையும் ஆளுக்கொரு தாம்புக் கயிற்றை இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கடலில் இறக்குவார்கள். யார் முதலில் கயிற்றை அசைக்கிறார்களோ அவர்கள் அவுட். கண்களைத் திறந்தால் உப்புநீர் பட்டுக் கண் எரியும். கண்ணைத் திறக்க மாட்டேன். மூச்சுவிட முடியாமல் திணறி மூக்கில் நீரேறி தலைக்குள் போய்விடும். வாயைத் திறந்து குடித்த நீரால் வயிறு பெரிதாகிவிடும். இத்தனை கஷ்டப்பட்டாலும் நான் ஒரு நாளும் முதலில் கயிற்றை அசைத்ததில்லை.

கயிற்றை அசைத்தபிறகு இருவரையும் மேலே இழுத்து விடுவார்கள். மேலே வந்தபிறகு கட்டு மரத்தில் குப்புறப் படுத்துக்கொண்டு மூச்சு விடுவோம். வாந்தி எடுப்போம். வாந்தி எடுத்தால் பிறகு நிறைய சாப்பிடலாம் என்பது அப்போதிருந்த அபிப்பிராயம். ‘சாதிப் பெயரைக் கெடுக்கிறான்’ என்று சொல்லி நண்பர்கள் பிரபாகரனை அடிப்பார்கள்.

இவ்வாறு ஒருமுறை கடலுக்குப் போயிருந்தபோது ராட்சத அலை (Tidal wave) வந்துவிட்டது. நான் கரையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்ததால் இதைக் கவனிக்கவில்லை. என் எதிரே நின்று கொண்டிருந்தவன் திடீரென்று தண்ணீரில் குதித்துவிட்டான். எனக்குப் பின்னாலிருந்த ராஜேந்திரனும் குதித்துவிட்டான் என்பதைத் தெரிந்துகொண்டேன். இன்னொரு கட்டுமரத்திலிருந்த நால்வரும் என் கண்முன்னே தண்ணீரில் குதித்துவிட்டார்கள். ஏன் எல்லோரும் குதிக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது வானம் இருட்டிவிட்டது. வயிறு ரங்கராட்டினத்தில் போவதுபோல் சங்கடம் செய்தது. எனக்குப் பக்கத்தில் இருக்க வேண்டிய கடல்நீர் நழுவிக் கீழே போனது. அப்போதுதான் பெரிய அலை ஒன்று கட்டுமரத்தை வேகமாக இழுத்துப்போவதைப் புரிந்துகொண்டேன். கடல்பரப்புக்கு ஆறு அடி உயரத்தில் வேகமான சவாரி. இந்தப் பயணம் சில நிமிடங்கள் நீடித்தது. திடீரென்று அலை கட்டுமரத்தைத் தாண்டிப் போய்விடவே, மரம் கீழே விழுந்தது. மரம் கீழே விழும்போது புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்தேன். கட்டுமரத்தில் குந்தி உட்கார்ந்துகொண்டு குறுக்குக் கயிற்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மரம் கீழே விழுந்த வேகத்தில் மீண்டும் எகிறும்போது நான் பத்திரமாக மரத்திலேயே இருக்க முடிந்தது. இல்லாவிட்டால் மரம் என்னைத் தூக்கி எறிந்திருக்கும்.

இதற்குள் தண்ணீருக்குள் மூழ்கிய நண்பர்கள் அனைவரும் ஒரே உணர்வோடு ‘சுப்பு, சுப்பு’ என்று கத்தியபடி வெளியே வந்தார்கள். என்னைப் பார்த்தபிறகுதான் அவர்களுக்கு நிம்மதி. அவசரமாக மரங்களில் ஏறி மரங்களைக் கரையை நோக்கிச் செலுத்தினார்கள். திசையே தெரியாமல் இருட்டிவிட்டது. காற்று வேகத்தில் மரத்தைச் செலுத்த நண்பர்கள் மிகவும் போராடினார்கள். மீண்டும் மீண்டும் பெரிய அலைகள். கொந்தளிக்கும் கடலின் நுரை வெள்ளம். என்னுடைய கண்முன்னே தென்குலத்தார் சிலர் விடாப்பிடியாக வந்து நின்றார்கள்.

சரியாக ஒரு மணி நேரம் சளைக்காமல், நண்பர்கள் துடுப்பு போட்டுக்கொண்டே இருந்தார்கள். பிறகு தென்பட்டது, பேஸின் பிரிட்ஜ் டவர். அன்று உயிர் தப்பியது அதிசயம்தான். இந்த மாதிரி ராட்சத அலைகளில் சிக்கினால் அவர்கள் கட்டுமரத்தோடு கடலில் புதைக்கப்படுவார்கள். எலும்பு கூடக் கிடைக்காது என்பதைக் கரைக்கு வந்தவுடன் தெரிந்துகொண்டேன்.

வருடக் கணக்கில் மீனவர்களோடு பழகியதில் எனக்கு அவர்களுடைய விவகாரங்கள் அத்துபடி ஆயிற்று. மீன்களின் வகைகளைத் தெரிந்துகொண்டேன். காற்று ஓட்டம் பற்றியும், கடல் நீரோட்டம் பற்றியும், மீன் பிடி சாதனங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். மீன் முள் தொண்டையில் சிக்காமல் மீன் சாப்பிடுவது எப்படி, மீனவர்களின் குல ஆசாரம் என்ன என்பதெல்லாம் தெரிந்துகொண்டேன். வெகு சீக்கிரத்திலேயே இந்த ஜனங்களுக்கு நான் வேண்டப்பட்டவனாகி விட்டேன்.

எனக்கு வேலை இல்லை என்பதைப் பற்றி நொச்சிக்குப்பத்தில் யாரும் குறையாகச் சொல்லவில்லை. ஏனென்றால் இங்கிருந்த படித்தவர்களில் ஒருத்தருக்கும் வேலை கிடைக்கவில்லை. தவிர, தேர்தல் அரசியலைக் குறைத்துக்கொண்ட பிறகு ராஜேந்திரனும் நானும் இங்கு எல்லாத் தரப்பினராலும் விரும்பப்பட்டோம்.

மீன்பிடி வலை வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் என்று ராஜேந்திரனுக்கு ஒரு யோசனை. இரவு நேரங்களில் அகில இந்திய வானொலி ப்ளாட்பாரத்தில் படுத்துக்கொண்டு இதைப்பற்றி அடிக்கடி பேசி, நிறையக் கனவு கண்டு நாங்கள் பிழைப்பதற்கு இதுதான் ஒரே வழியென்று முடிவெடுத்தோம். தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லோரும் ஒரே வியாபாரியிடமிருந்துதான் தங்களுக்குத் தேவையான வலைகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த வலைகள் எங்கே தயாரிக்கிறார்கள் என்ற விவரமே யாருக்கும் தெரியாத மர்மமாயிருந்தது. அந்த வியாபாரியிடம் வேலை செய்து கொண்டிருந்த பையனிடம் நான் நெருங்கிப்பழகி, இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டேன். கர்நாடகாவில் ஹோஸ்பேட்டுக்கருகில் துங்கபத்ரா அணையில் இதற்கான மிஷின் உள்ளதென்று தெரிய வந்தது. துங்கபத்ரா எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை. அங்கே போய்வருகிற அளவுக்கு வசதியும் இல்லை.

இதற்குள் விஷ்ணு இஞ்சினியரிங் முடித்துவிட்டு சேலத்தில் வேலைக்குப் போய்விட்டான். வார இறுதியில் சென்னைக்கு வருபவனிடம் தவறாமல் மீண்டும் மீண்டும் வலை வியாபாரத்தின் செழிப்பான எதிர்காலம் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய தொந்தரவைத் தாங்க முடியாமல் விஷ்ணு 500 ரூபாய் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் ராஜேந்திரன் அதில் 300 ரூபாயைச் செலவழித்துவிட்டான். இதனால் எனக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டது. எப்படியாவது துங்கபத்ரா போய் வந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பது ராஜேந்திரன் கட்சி. அவன் 300 ரூபாயை திருப்பிக் கொடுத்தால்தான் புறப்பட முடியும் என்பது என் கட்சி. இதற்குள் ஒரு மாதம் ஆகிவிட்டது. பணத்தைக் கொடுத்த விஷ்ணுவோ என்னை நச்சரித்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் துங்கபத்ராவுக்குப் புறப்பட்டோம்.

பம்பாய் மெயிலில் ஏறி குண்டக்கல்லில் ரயில் மாறி ஹாஸ்பேட்டுக்குப் போனபோது மாலை நேரம் ஆகிவிட்டது. அங்கிருந்து துங்கபத்ராவுக்கு பஸ். துங்கபத்ராவுக்குப் போய், வலை தயாரிக்கும் தொழிற்சாலையில் நுழைந்து அந்த மிஷினைப் பார்த்ததும் “இனிமேல் நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டாம்” என்று ராஜேந்திரன் சொல்லிவிட்டான். அங்கிருந்த மேனேஜரிடம் பேசிவிட்டு, மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு வெளியே வந்தோம். லாட்ஜுக்குப் போய்த் தங்கலாமென்று நினைத்துக் கையிலிருந்த காசை கணக்குப் பார்த்தால் ஷாக். நாங்கள் அப்போதே புறப்பட்டு ஹாஸ்பெட்டில் ரயிலைப் பிடித்தால்தான் ஒழுங்காக சென்னைக்குப் போய்ச்சேர முடியும். ஒரு வேளை அதிகமாகத் தங்கினால் சாப்பாட்டுக்கே காசு கிடையாது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு ஹோஸ்பேட்டுக்குப் பஸ் கிடையாது. ரயில் தவறி விடப்போகிறதே என்ற பயத்தில் ஹோஸ்பேட் வரை தண்டவாளத்தில் ஓடிவந்து ரயிலைப் பிடித்தோம்.

பெரியவர் ஒருவரின் ஆலோசனைப்படி வஞ்சிர மீனைப் பிடிக்கும் வலை ஒன்று தயாரிப்பதென்று முனைந்தோம். சென்னையிலிருந்து நைலான் நூலை வாங்கிக்கொண்டு துங்கபத்ராவிற்குப் போனோம். துங்கபத்ராவில் நெய்த வலையை எடுத்துக்கொண்டு, ஏகப்பட்ட கனவுகளைச் சுமந்துகொண்டு சென்னைக்கு வந்தோம். இதைச் செய்வதற்கு 5000/- ரூபாய் செலவாயிற்று. இந்தத் தொகையும் விஷ்ணுவால் வழங்கப்பட்டதுதான். வியாபாரம் செய்வது ஒருபுறமிருக்க எனக்குக் கடன் வாங்குவதில் தேர்ச்சியும், ருசியும் ஏற்பட்டுவிட்டது. தேவையான அளவு பணத்தைக் கடன் கொடுப்பதற்குக் குப்பத்தில் ஆட்கள் இருந்தார்கள். எங்களுடைய அன்றாடச் செலவை ஈடு செய்வதற்காக நானும் ராஜேந்திரனும் கடன் வாங்க ஆரம்பித்தோம். எந்தவிதமான எழுத்தோ, பத்திரமோ கிடையாது. வாய் வார்த்தைதான். வட்டி மட்டும் குறைந்தது ஆண்டிற்கு அறுபது சதவீதம்.

வஞ்சிரம் வலையை வாங்க யாரும் தயாராயில்லை. பரிசோதனை முயற்சியாகப் பாதி வலையை எண்ணூர் தாழங்குப்பத்தில் இருந்த ஒருவருக்குக் கொடுத்தோம். வலையைப் பயன்படுத்தி அவர் சம்பாதித்தவுடன் எங்களுக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டுமென்று அவரிடம் கூறினோம். அவரும் உடன்பட்டார். வலையை வாங்கிக்கொண்டு போனவர் அதற்குப் பிறகு எங்களை வந்து பார்க்கவில்லை. வஞ்சிரம் வலையில் நல்ல வருமானம் என்று சேதிமட்டும் அவ்வப்போது வரும். சில மாதங்கள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே வசூலுக்குப் புறப்பட்டேன்.

ஆறு மாதம் நடையாய் நடந்தும் ஒன்றும் பெயரவில்லை. இந்தச் சமயத்தில் எனக்குக் குப்பு மாணிக்கத்தின் அறிமுகம் ஏற்பட்டது. குப்பு மாணிக்கம் ராஜேந்திரனுக்குப் பெரியம்மா. எனக்கும் பெரியம்மா ஆனார். அறுபது வயதான மூதாட்டி. விதவை. குப்பு மாணிக்கம் ஒரு விசித்திரமான பெண்மணி. கருவாடு விற்பது இவருடைய தொழில். ஆனால் மாதத்தில் பாதி நாட்கள் விரதமிருப்பார். மீன் சாப்பிட மாட்டார். எப்போதும் ஏதாவது பிரயாணத்திலேயே இருப்பார். ஏகப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள். பையன்கள் இவரை வைத்துக் காப்பாற்றத் தயாராயிருந்தாலும் இவர் சுயமாக சம்பாதிக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். வஞ்சிரம் வலையை எப்படி விற்பது என்று ஆலோசனை கேட்கப் போனவனை குப்பு மாணிக்கத்தின் அன்பு கட்டிப்போட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து பல வருடங்களில் குப்பு மாணிக்கத்தை ஆலோசிக்காமல் நான் வியாபார விஷயமாக எதுவும் செய்ததில்லை. இந்த நேரத்தில் நானும் ராஜேந்திரனும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக் கொண்டிருந்த கடன்களுக்குப் பாதிக்கு மேல் குப்புமாணிக்கம்தான் காரண்டி.

குப்பு மாணிக்கம் எங்களை அரங்கத்திற்கு அழைத்துப் போனார். நாங்கள் போவதற்கு முன்பே வஞ்சிரம் வலை அங்கே போயிருந்தது. அரங்கத்திலும் எண்ணூர் தாழங்குப்பம் பார்முலாதான். இதில் எனக்குக் கொஞ்சமும் சம்மதமில்லையென்றாலும், வியாபாரம் என்றால் வளைந்து கொடுத்துத் தீர வேண்டும் என்று ராஜேந்திரன் சாதித்துவிட்டான். அரங்கத்திற்குப் போக வேண்டுமென்றால் சென்னையிலிருந்து பழவேற்காட்டிற்கு ((Pulicat) பஸ்ஸில் போய், அங்கே படகில் ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றைக் கடந்த பிறகு பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகிலோ, கால்வாய்க்கரை ஓரமாய் நடந்தோ அரங்கத்திற்குப் போகலாம். பதினைந்து கிலோ மீட்டர் பயணம்.

அரங்கத்திற்குப் போகிறோம் என்று தெரிந்தவுடன் குப்பத்து நண்பர்கள் அரங்கத்தைப் பற்றிக் கதைகதையாகச் சொன்னார்கள். அரங்கத்தின் சட்டதிட்டங்கள் மிகக் கடுமையானவை. அங்கே குப்பை போட்டால் நூறு ரூபாய் அபராதம். ஊர்க் கிணற்றில் எச்சில் துப்பினால் ஐந்நூறு ரூபாய். ஊர்த்தலைவரை எதிர்த்துப் பேசினால் ஆயிரம் ரூபாய். இந்த ஊர்க்காரருக்கு நாம் கடன் கொடுத்துப் பணத்தை வசூல் செய்ய முடியாவிட்டால் ஊரில் புகார் செய்தால் போதும். நமக்குத் தரவேண்டிய பாக்கியை ஊர்ப்பணத்திலிருந்து கொடுத்துவிட்டு ஊரார் அவனிடம் வசூல் செய்து கொள்வார்கள். அரங்கத்தில் கன்னிப் பெண்ணை யாராவது காதல் செய்தால் அவர்களைக் கட்டிப்போட்டுக் கல்யாணம் செய்துவிடுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

உல்லாசப் படகையும், கன்னிப் பெண்களையும் கற்பனை செய்தவாறு பழவேற்காட்டைக் கடந்தவனுக்கு அக்கரைக்குப் போனவுடன் வெறுத்துவிட்டது. பதினைந்து கிலோமீட்டர் முள்ளோடு முள் மோதும் காடு. நரிகளும், சாராயம் காய்ச்சுபவர்களும்தான் இங்கே சஞ்சாரம். படகுப் பயணம் என்றால் சிந்து நதியின் மிசை நிலவல்ல. முப்பது அடி அகலமுள்ள, ஆழமில்லாத கால்வாயில் போகும் இந்தப் படகை கரையில் நடந்து போகிறவன் ஓவர்டேக் செய்துவிடலாம். படகு அரங்கத்திற்குப் போவதற்கு மூன்று மணி நேரமாகும். கிராமத்துத் தேவையான எல்லாப் பொருட்களும் படகு மூலமாகத்தான் வரும். கால்வாய் சென்னையிலிருப்பதுபோல் சாக்கடையாயிருக்காது. கலங்கிய சேற்று நீராக இருக்கும்.

அரங்கத்தில் எனக்கு வெயில் நேரத்தில் குந்தக் குடிசை கிடையாது. ஒரு பக்கம் கால்வாய், இன்னொரு பக்கம் கடல். ஊர் மேட்டிலிருக்கும். ஊரில் ஒரே ஒரு டீக்கடை. அங்கேயும் ஆட்டுப்பாலில்தான் டீ போடுவார்கள். ஆட்டுப்பாலில் ரோமம் இருக்கும். அந்த ரோமம் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதற்காக சிகிச்சை என்ன என்பதையெல்லாம் எனக்கு ஏற்கெனவே உபதேசிக்கப்பட்டிருந்தது. எனவே, நான் அரங்கத்தில் இருந்தவரை டீ குடிக்கவில்லை.

நாங்கள் போயிருந்தபோது வலையை வாங்கிப் போனவனின் தங்கைக்குத் திருமணம். திருமணத்தில் மொய்ப்பணம் வந்தவுடன் வலை பாக்கியை வசூல் செய்து கொள்ளலாம் என்பது குப்பு மாணிக்கத்தின் யோசனை. நானும் ஏற்றுக்கொண்டேன். திருமணம் சுண்ணாம்புக்குளம் என்ற ஊரில். பெண் வீட்டாரோடு நாங்களும் புறப்பட்டோம். மதியம் பதினோறு மணிக்கு அரங்கத்தில் சாப்பிட்டது. மாலை ஆறு மணிக்கு காற்றைப் பார்த்து படகு புறப்பட்டது. சுண்ணாம்புக் குளம் வந்தபோது இரவு மணி பத்து. டூரிஸ்ட் பேக் தலைக்குமேல். தொடைவரை மடிக்கப்பட்ட பேண்ட். ஒரு கையில் செருப்பு. சேற்றில் துழாவிக்கொண்டு கரைக்கு வந்தால் கண்ணே தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. கொஞ்ச நேரம் கழித்துப் பிள்ளை வீட்டார் வந்தார்கள். எனக்கும் ராஜேந்திரனுக்கும் பசி மயக்கத்தில் அடி எடுத்து வைக்க முடியவில்லை.

அப்போது புதிய சோதனை ஆரம்பாகியது. பெண் வீட்டார் பத்து அடி நடப்பார்கள். அதற்குள் பெண்ணுக்கு மாமனொருவன் குறுக்கே வந்து மறித்துக் கொள்வான். அவன் கோபித்துக் கொள்ள வேண்டுமென்பது சடங்கு. பிள்ளை வீட்டார் அவனைச் சமாதானம் செய்வார்கள். சமாதானம் செய்வதென்றால் சாராயம் கொடுப்பதென்று பொருள். கல்யாணப் பெண்ணும், மற்றப் பெண்களும், குப்பு மாணிக்கமும், நாங்களும் பசியில் தவிக்கும்போது மற்றவர்கள் உரிமைக் குடியை குடித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு ஊர்வலம் மெல்ல முன்னேறும். மீண்டும் மாமன் மறியல், சாராய சப்ளை, இத்யாதி. இரண்டு மணி நேரம் இந்த நிலைமையில் தாக்குப் பிடித்தோம். இதற்குள் ஆண்கள் எல்லோரும் என்ன நடக்கிறதென்றே தெரியாத அளவுக்குக் குடித்துவிட்டிருந்தார்கள். பிறகு குப்பு மாணிக்கத்தோடு நாங்கள் ஊருக்குள் நுழைந்தோம். மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் சாப்பாடு போடச் சொன்னோம். அங்கேயும் ஒரு சிறிய பிரச்சினை. சாராயம் குடித்துவிட்டுத்தான் சாப்பாடு என்பதில் அவர்கள் கண்டிப்பாய் இருந்தார்கள். அவர்கள் வேண்டுகோளை நிறைவேற்றினோம்.

காலையில் கல்யாணம் முடிந்தாலும் மொய்ப் பணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பெண் வீட்டாரோடு வந்த ஒரு போலீஸ்காரர் வந்த இடத்தில் கள் குடித்துவிட்டுக் காசு தராமல் கலாட்டா செய்துவிட்டார். கள் இறக்குபவரின் ஆட்கள் எங்களைச் சுற்றி வளைத்துவிட்டார்கள். நிலைமை மோசமாகிப் போனவுடன், நாங்கள் கல்யாணத்திற்கு வந்த விருந்தாளிகள் என்று சொல்லி அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.

அடுத்து வலையை விற்பதற்காக நெல்லூர் அருகிலுள்ள முத்துக்கூர் என்ற இடத்திற்குப் போனோம். அங்கும் விற்பனை இல்லை. திரும்பிவந்து நெல்லூர் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தோம். ஹவுரா மெயிலில் சென்னைக்கு டிக்கெட் வாங்கியிருந்தோம். வண்டி வந்து நின்றவுடன் தூக்கம் கலைந்தது. தூக்கக் கலக்கத்தில் வண்டியில் ஏறி ஆளுக்கொரு பர்த்தில் படுத்துக்கொண்டோம். கண் விழித்தபோது காலை மணி ஆறு. வண்டி இன்னும் ஆந்திராவையே தாண்டவில்லை. ஹெளரா மெயில் என்று நினைத்து பாசஞ்சர் ரயிலில் ஏறி விட்டிருந்தோம். கையில் காசில்லை. பசி…

(தொடரும்)

Posted on Leave a comment

பிரபுஜி – அஞ்சலி : அபாகி

விஜயபாரதம் தேசிய வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரபுஜி இலக்கிய ஆர்வலர். ஜெயமோகனின் வாசகர். ஆரம்பக் காலத்தில் ‘ஜெயன்’ என்ற பெயரில் விஜயபாரதத்தில் எழுதிய கட்டுரைகளை இன்று ஜெயமோகனே மறந்துவிட்டிருப்பார். ஆனால், பிரபுஜி சேகரித்து வைத்திருந்தார். வாசிப்பில் அப்படியொரு நாட்டம். ரயிலில் போகும்போதெல்லாம் படிப்பாராம். முகநூலும் பார்ப்பார். நான் என்னவோ பெரிய படிப்பாளி என்று அவருக்கு நினைப்பு. “முகநூல், பத்திரிகை வேலை, ஊருக்குப் போகறது இதுக்கு மத்தியில எப்படி படிக்கறீங்க ஜி? பொறாமையா இருக்கு” என்பார். பல மாதங்களாக படித்தும், படிக்காமல் இருக்கும் புத்தகத்தைப் பார்த்தபடி “ஜி… கிண்டல் பண்றீங்களா?” என்பேன். “நெஜமா சொல்றேன். ஆச்சரியமா இருக்கு?” என்பார். கிண்டில் வாங்கியபோது, புத்தகத்தைப் படிப்பதற்கும் மின் புத்தகத்துக்கும் இருந்த வேறுபாடுகளைப் பற்றித் தீவிரமாக அலசியிருப்போம்.

இலக்கியம், அரசியல், பத்திரிகைப் பணி, ஹிந்துத்துவம், சமூக மாற்றங்கள், வாலிப விஷயங்கள் எதை வேண்டுமானாலும் திறந்த மனதுடன் அவரிடம் விவாதிக்க முடியும். முகநூலை பயன்படுத்துவது பற்றி அவரிடம் கற்க வேண்டும். தேவையற்ற பதிவுகளை போட மாட்டார். பல ஆண்டுகள் தனது முகப் படத்தைத் தவிர, வேறெந்த தனிப்பட்ட படங்களையும் பகிரவில்லை. பிறகு நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிலமுறை படங்களை மாற்றினார். அவ்வளவுதான். ராமானுஜர் 1000-ஆவது ஆண்டின் போதும், நிவேதிதை 150-இன் போதும் தினசரி பதிவுகளைப் போடுவார். அதற்காக அவர்களைப் பற்றிய அனைத்துப் புத்தகங்களையும் படித்தார். முகநூலில் தனக்குப் பாதித்த, பிடித்த அனைத்துப் பதிவுகளையும் விரிவாக அலசுவார்.

பிரபு ஜி திருநின்றவூரைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே சங்க அறிமுகம். அம்பத்தூர் தாலுகாவில் சங்கப் பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அதன் பிறகு, பக்க வடிவமைப்பாளராக 1990களில் விஜயபாரதத்தில் சேர்ந்திருக்கிறார். நடுவில் மூன்று நான்கு ஆண்டுகள் சாரதா பப்ளிகேஷன்ஸில் இருந்தார். பிறகு மீண்டும் விஜயபாரதம்.

ஹிந்துத்துவப் பணிகளில் தீவிரமான நாட்டம். ஆனால், பயணம் காரணமாகப் பல நேரங்களில் உள்ளூரில் இயக்கக் காரியங்களில் ஈடுபட முடியாமல் போய்விடும். “உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கண்டுபிடிக்க முடிகிறது?” என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.

வாசிப்பு, இலக்கியம், கலை போன்ற விஷயங்களில் ஹிந்துத்துவர்கள் அதிகமில்லை என்பது அவரது ஆதங்கம். அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் ஹிந்துத்துவர்களைப் பாராட்டுவார். பல உதவிகளும் செய்வார். புனே திரைப்படக் கல்லூரி விவகாரத்தின்போது, “பார்த்தீங்களா ஜி… ஒரேயொரு கஜேந்திர சௌஹான் கிடைச்சார். அதனால போட முடிந்தது. நம்ம ஆட்கள் இன்னும் அதிகமா வரணும்” என்றார். வலம் பத்திரிகையைப் படித்து மிகவும் மகிழ்ச்சியுடன் விவாதித்தார்.

கடந்த 26-11-18 அன்று காலை எட்டு மணியளவில் அவர் மட்டும் தனியே பயணமாகிவிட்டார். “சர்க்கரை வியாதி பற்றி நண்பர்களிடம் கூடவா சொல்லக்கூடாது? பிறகு எதற்கு நட்பு?” என்ற கோபத்துடனேயே கடைசியாகப் பார்த்துவிட்டு வந்தேன். ஓம் சாந்தி.

Posted on Leave a comment

சபரிமலை கோவில் தீர்ப்பு | கோபி ஷங்கர்

சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் வரலாம் என்று தீர்ப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய ஊடகங்களிலிருந்து இந்தியாவில் உள்ள பல ஊடகங்களும் ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் வர வயது வரம்பு உள்ளது என்ற விஷயத்தைக் கூறாமல், இந்த விஷயத்தை ஒருதலைப்பட்சமாக அணுகுகிறார்கள். மாற்றுப் பாலினத்தவராகிய நான், மாற்றுப் பாலின ஒருங்கிணைவு உடையவராகிய, இடையிலிங்க நபரான நான், இந்தத் தீர்ப்பை மிகவும் வேதனையுடன்தான் பார்க்கிறேன். ஏன்னென்றால் சனாதன தர்மம் என்பது ஒருவருக்குக் கட்டுப்பட்டு, ஒரு நபர் வரையறுக்கும் எல்லைகளில் கட்டுப்படும் ஒன்றல்ல. இது மிகவும் விரிவானது. மிகவும் பன்மைத்தன்மை கொண்டது. இப்படிப்பட்ட பன்மைதன்மை வாய்ந்த தர்மத்தில், ஒருதலைபட்சமான ஒரு தீர்ப்பை இந்தியாவின் உச்சநீதிமன்றம் வழங்குகிறது. மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றமானது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பது. ஆனால் சனாதன தர்மத்தில் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஐயப்ப வழிபாடு என்பது சாஸ்தா வழிபாட்டோடு தொடர்புடையது. அவரைச் சுற்றிப் பல கதைகள், பல சம்பவங்கள், பல நபர்களால், பல்வேறு காலகட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 900 வருடங்களாக இவருடைய புராணம் மலையாள தேசத்தில் பந்தளத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கக்கூடிய ஒரு காவியமாகத் திகழ்கிறது. முக்கியக் கடவுளாக ஐயப்பன் வணங்கப்படுகிறார். சாஸ்தா வழிபாடு என்பதே ஆராய்ச்சிக்கு உட்படுத்தக்கூடிய பரந்த ஆழமான தொன்மம். அதில் பல்வேறு நாட்டார் சமய மரபுகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அடங்கியுள்ளன.

நம் சனாதன தர்மத்தில் வேதத்தில், ஸ்ருதி, ஸ்மிருதி என்ற இரு பிரிவுகளில் ஸ்மிருதிகள் என்றும் வளர்ந்துகொண்டே இருக்கும். அதில் காலத்திற்கேற்றாற் போல் பல விஷயங்கள் பக்குவமடைந்து செழிக்கும். உண்மையாகவே ஹிந்து மதத்தில் பெண்களுக்கு எதிராக, அல்லது எந்தப் பாலினத்திற்கும் எதிரான விதிகள் உள்ளனவா என்று பார்த்தால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மாற்றுப் பாலினமுள்ள நபரை, அல்லது மாற்றுப் பாலின ஒருங்கிணைவு உள்ள நபரைத் தண்டிக்க வேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும், கொல்லவேண்டும் என்று எந்தத் தரவுகளும், குறிப்புகளும் சனாதன தர்மத்தில் இல்லை. சனாதன தர்மத்தை சார்ந்த ஸ்ருதிகளிலோ, ஸ்மிருதிகளிலோ இப்படி ஒரு குறிப்பும் இல்லை.

Gender Specific Rituals என்று கூறப்படும் ஒரு பாலின சாராரை மையப்படுத்திய வழிபாட்டு முறைகள், அவர்களை ஆன்மிகத்தில் உயர்த்துவதற்காக, உலகியல் வாழ்க்கையில் இருந்து உயர்த்துவதற்காக, உலகியல் வாழ்க்கை சாராத ஓர் உன்னத நிலையை அவர்களுக்குப் புகட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அப்படி உருவாக்கப்பட்ட ஒன்றே ஐயப்ப வழிபாடு. ஐயப்ப வழிபாடு போலவே மிகவும் பிரசித்தி பெற்ற பல வழிபாடுகள், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சார்ந்த மக்களை ஆன்மீகத்தில் மேம்படுத்துவதற்காக, தர்மத்தில் மேம்படுத்துவதற்காகப் பல வழிமுறைகளை நம் முன்னோர்கள் ஸ்மிருதிகள் சார்ந்து வடிவமைத்தார்கள். அதில் குறிப்பிட்ட பல பாரம்பரியங்கள் பிராமணர்கள் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டவை. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் மாற்றுப் பாலினத்தவரின் வழிபாடு சார்ந்த விஷயங்கள். விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகளின் அரவான் வழிபாடாக இருக்கட்டும், குஜராத்தில் இருக்கும் பசுரா மாதா வழிபாடாக இருக்கட்டும், சகிபேகிகள் என்று சொல்லக்கூடிய மாற்றுப் பாலினத்தவரின் ஒரு அங்கத்தினர் கிருஷ்ணரைத் தொழும் விதமாக இருக்கட்டும், பாரதக் கண்டத்தில் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆண் – பெண் மட்டுமல்லாமல் மற்ற பாலின அடையாளங்களைத் தாங்கி நிற்கும் மக்களுக்காகவும் வழிபாட்டு முறைமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி கட்டுவார்கள். ஏன் அரவாணிகள் மட்டும் தாலி கட்ட வேண்டும், பெண்களும் ஆண்களும் கட்டக்கூடாதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. எல்லம்மா வழிபாடு, ரேணுகாதேவி வழிபாட்டில் ஆண்கள் பெண்கள் போல உடையணிந்து எல்லாம்மாவை வழிபடுவார்கள். கோட்டாங்கரை பகவதி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஆண்கள் பெண்கள் போல உடையணிந்து, அதாவது ஆண்கள் பெண்களாகத் தங்களை பாவித்துக்கொண்டு அன்னையை வழிபடுவார்கள். ஏன் ஆண்கள் மட்டும் பெண்கள் போல உடை உடுத்த வேண்டும், ஏன் பெண்கள் ஆண்கள் போல உடை உடுத்தி வழிபாடு நடத்தவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியுமா? முடியாது. நீதிமன்றம் பாரம்பரியமிக்க இது போன்ற விஷயங்களில் தலையிடுவது பல ஆன்மிக நெறிகளை வலுவிழக்கச் செய்துவிடும்.

நமது சனாதனதர்மத்தில் வாமாச்சாரம், தக்ஷிணாசாரம் என்று இரண்டு மெய்யியல் சார்ந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. வாமாச்சாரம் என்றால் அது இடதுகை வழக்கம் என்றும் தக்க்ஷிணாசாரம் என்றால் அது வலக்கை வழக்கம் என்று சொல்லுவார் ஸ்ரீ இராமகிருஷ்ணர். பெருவாரியாக தென்பாரதத்தில் நாம் பின்பற்றுவது தக்ஷிணாசாரம் சார்ந்த வழிபாட்டு முறை. வாமாச்சாரத்தில் மிகவும் விசித்திரமான தாந்திரிக முறைகள் எல்லாம் உள்ளன. வைணவத்தில் கூட லட்சுமி தந்திரம் கூறும் மிகவும் வித்தியாசமான மரபொன்று உள்ளது.

இதில் ஏன் இந்தியாவில் எல்லாம் தக்ஷிணாசாரம் போல் இல்லை, ஏன் இந்தியாவில் வடக்கு/வடமேற்குப் பகுதிகளில் வாமாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று கேள்வி எழுப்ப நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. தக்க்ஷிணாசாரம் எப்படி பாரதத்தில் முகிழ்ந்த ஓர் உன்னதமான முறையோ அப்படித்தான் வாமாச்சாரமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த ஒரு தொன்மையான பாரம்பரிய முறை. இரண்டிலும் வழிபாட்டு முறைகள் வேறுபட்டு பன்மைகொண்டு ஒற்றுமையோடு துலங்குகின்றன.

இவற்றையெல்லாம் இதைப் பின்பற்றுபவர்கள் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர, சட்டம் படித்ததனால் மட்டுமே புரிந்துகொண்டுவிட முடியாது. ஏனெனில் இந்த நிலையைப் புரிந்துகொள்வதற்கு அதில் நாம் வாழ்ந்தாக வேண்டும்.

என்னுடைய தாய்வழித் தாத்தாவானவர் ஒரு ஐயப்ப குருசாமி. அவர் பிராமணர் அல்ல. அவர் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேல் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றவர். இன, சாதி பேதமின்றி, அனைவரும், மாலையிட்டுக் கொள்ளும்போது என் தாத்தாவின் கால்களில் ஆசி பெறுவதற்காக விழுவார்கள். இதில் எந்தப் பேதமும் இல்லை.

ஐயப்பன் என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சொந்தமானவரல்ல. ஐயப்பன் கட்டுப்படுவது அங்கு வரும் பக்தர்களுக்கே. இதெல்லாம் புரியாமல் பாலினப் பாகுபாடு (Gender/Women Discrimination) என்று, பெரிய நகரங்களில் உட்கார்ந்துகொண்டு இதுபற்றி எதுவும் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் பல நபர்கள், இந்தியாவில் ஒரு பாலினத்தை உயர்த்துவதற்காகப் பல்வேறு வாய்ப்புகளை வகுத்துக்கொடுத்த இந்த சனாதன தர்மத்தை அழிக்கிறார்கள். உதாரணத்திற்கு தேவதாசி என்பது பொதுச்சொல். தேவதாசி என்பது பெண்களை மட்டும் குறிப்பதல்ல. தேவதாசி ஆண்களையும், தேவதாசியாக இருந்த இடையிலிங்க, மாற்றுப்பாலினத்தவரையும் குறிக்கிறது. இந்த சமூகத்தில் இருப்பவர்கள் மிகவும் சுதந்திரமான நபர்கள். அவர்களைக் கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தியது ஆங்கில அரசு. அதில் பிரச்சினைகள் நடந்திருக்கலாம். ஆனால் அந்த சமூகத்தில் ஒட்டுமொத்த மக்களும் பரத்தை குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. பரத்தையர்களுக்குத் தனி அங்கீகாரம் கொடுத்தது இச்சமூகம். சனாதன தர்மம். அதேவேளையில் ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அதன் நெறிமுறைகள் எப்படி இருக்கவேண்டும் என்று நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தது. இது ஆபிரஹாமிய நெறிமுறைகள் போல் அல்லாமல், பிராந்திய முக்கியத்துவத்துடன் கூடிய இந்துத் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட ஒன்றுதான் ஐயப்பன் கோவிலில் இருக்கக்கூடிய வழிபாடு.

சின்ன மஸ்தாதேவியை வழிபடுகிறோம். தாந்திரிக சாதனைகளில் வாமாச்சாரத்தில் துர்க்கையை எழுப்புவதற்கு போக்கு ரத்தம் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. தக்க்ஷிணாசாரத்தில் போக்கு ரத்தம் அப்படி இடம் வகிப்பதில்லை. தக்க்ஷிணாசாரத்தின் நிலைகள் வேறு. இங்கு ஒரு கோவிலின் கர்ப்ப பீடத்தில் புரோகிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பெருவாரியான கிராமக் கோவில்களில் அம்மனுக்கு எல்லாப் பாலினத்தை சேர்ந்த நபரும் பூஜை செய்யலாம். ஸ்ரீ சாரதா மடத்தில் (ஸ்ரீ ராமகிருஷ்ணரின் துணைவியார்) பெண் துறவிகள் மட்டுமே யாகம் செய்யவேண்டும். அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் ஆண் துறவியர் மட்டுமே ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சடங்குள் செய்ய அனுமதி. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

பெண்களுக்கு சம உரிமை என்பதைப் பற்றிப் பேசும் பெண்கள் அனைவரும் உண்மையான சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவது கிடையாது. ஒருதலைப்பட்சமாக இதுபோன்ற விஷயங்களில் தலையிடுபவர்கள், பெண்களுக்கு கத்தோலிக்க திருச்சபையில் பெண்கள் போப் ஆக முடியுமா என்பதைப் பற்றிக் கேள்வி எழுப்புவது கிடையாது. இஸ்லாமில் இருக்கும் பெண்களின் நிலையைப் பற்றிக் கேள்வி எழுப்புவது கிடையாது. பல்வேறு இனங்களில் இன்று அழிந்துகொண்டிருக்கும் பெண்களுக்குக் குரல் எழுப்ப ஆள் கிடையாது.

குறிப்பாக யசீதி இனப் பெண்கள். இன்று நதியா மூரத் அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ISIS இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தொடர்ந்து வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டவர். அப்படியிருக்கக்கூடிய ஒரு நபரைப் பற்றி இங்கு பேசுவதற்கு ஆள் கிடையாது. அவரைப் போன்ற பல பெண்களை ஒரு சில டாலருக்கு விற்றது ISIS. அதேநேரம், இங்கு நம் நாட்டில் இருக்கக்கூடிய இறையியல் கொள்கையானது, ஆண், பெண் மட்டுமின்றி, என்னைப் போன்ற இடையிலிங்கப் பாலினத்தவருக்கும் ஏற்புடைய ஒரு ஆன்மிக விழுமியங்களைத் தாங்கிய ஒரு தர்மம். அப்படிப்பட்ட ஒரு தர்மத்தில் உள்ளார்ந்த தன்மை (Inclusiveness) இல்லையென்று சொல்வது வருத்தத்துக்குரியது. வழக்குரைஞர் சாய் தீபக் என்பவர், “Not all exclusion are discrimination” என்று சொல்கிறார். அது மிக முக்கியமானது.

இச்சூழ்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆன்மீக விழுமியங்களைச் சீர் குலைப்பதாகும். இதே நீதிமன்றம் நாளை மாற்றுப்பாலினத்தவரின் மதச்சடங்குகளில் தலையிடாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஆகவே முதலில் ஐயப்பன் வரலாறு, அவர் இருந்தாரா இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதை விட, இதுபோன்ற பாலினம் சார்ந்த வழிபாட்டில் (Gender Specific Rituals) இருக்கக்கூடிய உன்னதமான விஷயத்தை நாம் உணர்ந்துகொண்டால் மட்டுமே, இதுபோன்ற சடங்குகள், காவியங்கள், காப்பியங்கள் அதைச்சுற்றி இருக்கக்கூடிய மரபுகளைப் புரிந்து நடந்துகொள்ள முடியும்.

Posted on Leave a comment

சபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் – நவம்பர் 2018) | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

கேரள மாநிலம் என்றுமே காணாத அளவுக்கு ஹிந்து மக்கள் எழுச்சி ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக குடும்பப் பெண்கள் இதில் பெருமளவு பங்குகொண்டு பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெள்ளத் தெளிவாக உரைத்து வருகிறார்கள். கேரளத்தில் இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்பது யாருமே எதிர்பாராத ஒன்று.

நன்றி: லைவ்மிண்ட்

செப்டம்பர் 28, 2018

உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்ததும் பாரம்பரியமான பக்தர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ஏற்கெனவே (தீர்ப்புக்கும் முன்னரே) உச்சநீதிமன்றத்தில் எந்த வயதுப் பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்று மனு கொடுத்திருந்த கேரள அரசு- சீராய்வு மனு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொக்கரித்தது. கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு – அரசின் கைப்பாவையாக அமைதியாகவே இருந்தது. பக்தர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், ஆன்மீக அமைப்புக்கள் யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பெண்களுக்கான சம உரிமை என்ற கோணத்தில் மட்டுமே நீதிமன்றம் பேசி இருக்கிறது. வெறும் புகழுக்காகப் பெண்ணியம் பேசும் ஒரு சிலரின் போக்குக்காக ஆலயத்துக்கான சம்பிரதாயம், பலகோடிப் பேர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.

பலரும் இதனை சதி (உடன்கட்டை ஏறுதல்), குழந்தைத் திருமணம் போன்ற செயல்களுடன் ஒப்பிட்டுப் பேட்டியளித்தார்கள். கட்டுரைகளும் எழுதினார்கள். அடிப்படைப் புரிதல் இல்லாத காரணத்தால் உண்டான அபத்தம் இது. சதியும், குழந்தைத் திருமணமும் இந்து மத நம்பிக்கை கிடையாது. அதற்கும் ஆலய வழிபாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் அவை தனியொரு பெண்ணுக்குப் பாதிப்பை உண்டாக்குபவை. சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்காத காரணத்தால் எந்த இளம்பெண்ணுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படப்போவதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலயமும் அதன் சம்பிரதாயங்களும் நம்பிக்கை உள்ளவர்களுக்கே என்ற புரிதல் முக்கியம். நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கே வரவேண்டிய அவசியம் என்ன? என்னுடைய இஷ்டப்படிதான் ஆலய விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்?

இப்படிப்பட்ட பலவிதமான மனக்குமுறல்களுடன் பக்தர்கள் கொந்தளித்தார்கள். வழக்கமான அமைதியாக அது இல்லாமல், எல்லா இடங்களிலும் அது எதிரொலித்தது.

செப்டம்பர் 30, 2018

பாலக்காட்டின் உள்ள ஐயப்ப பக்தர்களும் பெண்களுமாக சுமார் 600-700 பேர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாம ஜப யாத்திரையைத் துவங்கினார்கள்.

இதே நேரத்தில் People For Dharma, NSS போன்ற அமைப்புகள் மட்டும் (ஏற்கனவே இந்த வழக்கில் பக்தர்கள் சார்பில் ஆறு வருடங்களாக வழக்கை வாதாடியவர்கள்) – நாங்கள் மறுசீராய்வு மனு கொடுக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்லி ஆதரவு தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் அதுதான் பலருக்கும் ஆறுதல் கொடுத்தது.

அக்டோபர் 2, 2018

இரண்டொரு நாளில் இந்த அமைப்புகளுடன் இணைந்து பந்தள அரச குடும்பத்தினர் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். முடிவு செய்தது செப்டம்பர் 30ம் தேதி. அக்டோபர் 1ம் தேதி நான் அவர்களுடன் பேசியபோது 4000 பேர் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது புரிந்தது. அக்டோபர் 2ம் தேதி மாலை 4 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். 3மணிக்கு எனக்கு வந்த தொலைப்பேசியில் – இதுவரை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்றார்கள்.

இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ், பிஜேபி உட்பட பல முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பக்தர்களுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

அதன் பின்னர் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு எனத் துவங்கி உலகெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஐயப்பப் பக்தர்கள் தங்கள் மனவருத்தத்தையும் எதிர்ப்பையும் காட்டும் வண்ணம் ஆங்காங்கே கூடி கூட்டங்கள் நடத்தினார்கள்.

அக்டோபர் 5, 2018

தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் மறுசீராய்வு மனு செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். உடனடியாக பந்தளம் அரச குடும்பத்தினரும், தந்திரி குடும்பத்தினரும் தாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார்கள்.

கேரள முதல்வரோ இளம் பெண்களை சபரிமலைக்கு ஏற்றியே தீருவது என்ற தீர்மானமான முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை கண்டும் காணாமல் விடும் மாநில அரசுகள் பல. அதிலும் கேரள அரசு கேட்கவே வேண்டாம். (உதாரணமாக ஒலிபெருக்கிகளுக்கான உச்சநீதிமன்றத் தடையை இதுவரை எந்த மாநில அரசுமே அமல்படுத்தவே இல்லை. இசுலாமியர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் அதனைத் தடுத்தால் அம்மத நம்பிக்கைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாகும் என அமைதியாகவே இருக்கிறார்கள்.) ஆனால் சபரிமலைக்கு இவர்கள் ஏதோ உச்சநீதிமன்றம் சொன்னதை செய்துமுடிக்கும் அடிமைகள் போல பாவ்லா காட்டிக்கொண்டு ஆலயத்தின் நம்பிக்கைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகள் நசுக்கப்பட்டன; நம்பிக்கைகள் நொறுக்கப்பட்டன.

அக்டோபர் 8, 2018

தந்த்ரியையும், பந்தள அரச குடும்பத்தினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் கேரள முதல்வர். இளம்பெண்களை அனுமதிப்பதைத் தவிர வேறேதும் இருந்தால் பேசுவோம் என்று இருவருமே பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார்கள்.

அக்டோபர் 16, 2018

அம்மாத நடைத் திறப்புக்கு ஒருநாள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில், பக்தர்கள், சபரிமலையை அடுத்துள்ள கேந்திரமான நிலக்கல் எனும் ஊரில் நாம ஜபத்தைத் துவங்கினார்கள்.

‘இளம் பெண்களை அனுமதிக்க முடியாது’ என்ற தீர்மானமான முடிவுடன் பக்தர்கள் அங்கே குழுமத்துவங்கினார்கள். அவர்களே ஒரு செக்போஸ்ட் அமைத்து, பெண் பக்தர்களின் அடையாள அட்டைகளைச் சோதித்து அனுப்பத் தயாரானார்கள். இந்தப் பக்தர்களே ஐயப்பனின் போர்ப்படைபோல அங்கே வியூகம் அமைத்தார்கள். ‘சரண கோஷமே எங்கள் ஆயுதம்’ என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள்.

சபரிமலை ஒரு வரலாற்று மாற்றத்தைச் சந்திக்கப்போகிறது என்றெல்லாம் பலரும் காத்திருந்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலும், சோஷியல் மீடியாவிலும், டீவியிலும் இதுவே பேச்சாக இருந்தது. சபரிமலையின் வரலாறு – வரலாறாகவே தொடர்ந்தது.

திடீரென அன்று இரவு. சரண கோஷம் முழக்கியபடி காத்திருந்த பக்தர்கள் மேல் லத்தியைச் சுழற்றியது போலீஸ் படை. லத்தி சார்ஜ் செய்தபோது கலைந்து ஓடிய பக்தர்கள், பயந்து ஓடவில்லை. மீண்டும் பகவானுக்காகக் கூடினார்கள்.

அக்டோபர் 17, 2018

நடந்த சம்பங்களையெல்லாம் கண்டு மனம் நொந்த ராமகிருஷ்ணன் என்ற 80 வயது குருசுவாமி ஆதங்கம் தாளாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

17ம் தேதி ஐப்பசி மாதத்துக்கான நடைத்திறப்பு பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நடந்தேறியது.

சபரிமலையின் ஆசாரம் காக்கப்படவேண்டும் என்று போராடிய கோவிலின் முன்னாள் தேவஸ்வம் போர்டு தலைவர் ப்ரயார் கோபாலகிருஷ்ணன் முதல் தந்திரி குடும்பத்து 85 வயது மூதாட்டி தேவிகா அந்தர்ஜனம் வரை காரணமின்றிப் பலரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் யாரும் இல்லாமல் பக்தர்களின் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இதனாலெல்லாம் பக்தர்களின் கொதிப்பு அதிகமானதே தவிர எள்ளளவும் குறையவில்லை.

ஆந்திராவிலிருந்து வந்த ஒரு இளம் வயதுப் பெண்மணியை கேரள காவல்துறையினர் தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். பம்பை தாண்டிச் சிறிது தூரம் நடந்த அப்பெண்மணி தானே முன்வந்து தனக்குத் தைரியம் இல்லை என்று திரும்பி விட்டார்.

அக்டோபர் 18

‘சபரிமலைக்கு வந்தே தீருவோம்’ என்று கங்கணம் கட்டி வந்த பெண்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் நோக்கம் தெளிவாகிறது.

லிபி – என்பவர் பெண்ணியவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். சுஹாசினி ராஜ் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் நாத்திக, ஹிந்து எதிர்ப்பாளர். கவிதா ஜாக்கல் என்ற கிறிஸ்தவர். ரெஹானா பாத்திமா என்ற முஸ்லீம். மேரி ஸ்வீட்டி என்ற கிறிஸ்தவர்.

இதில் ஒருவர் கூட ஐயப்பன் மேலோ, சபரிமலை மேலே உள்ள நம்பிக்கைக்காகவோ பக்திக்காகவோ வரவில்லை. குழப்பம் விளைவிக்கவும், மத உணர்வுகளைப் புண்படுத்தவும் மட்டுமே வந்துள்ளார்கள் என்பது தெளிவு. இப்படிப்பட்டவர்கள் உள்நோக்கத்துடன் சபரிமலைக்கு வந்திருப்பதைக் கண்டு பக்தர்கள் உள்ளம் கொதித்தார்கள்.

கேரள அரசாங்கமோ ஒரு இளம் பெண்ணையாவது மேலே ஏற்றியே தீருவது என்ற தீர்மானத்துடன் அடாவடியாகப் பேசுவதும், பக்தர்களைத் தீவிரவாதிகள் போல நடத்துவதும் எனத் தகாத செயல்களைத் துவங்கியது.

பல ஊடகங்களும் ஏதோ ரௌடிகள் மட்டுமே சபரிமலையில் இருப்பது போன்ற காட்சிகளைக் காட்டியது. மக்களின் வண்டிகளை உடைத்தது யார், ரகளையில் ஈடுபட்டது யார் என்று அனைவருக்குமே தெரியும்.

இதில் முக்கியமாகப் பலரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ஊடகங்களில் பரப்பப்படும்படி, பக்தர்கள் யாரையும் தாக்கவும் இல்லை; தொல்லை தரவும் இல்லை. அவர்களைத் தொடக்கூட இல்லை என்பதே உண்மை. வீம்புக்காக வந்த இளம் பெண்கள் காலில் விழுந்து, மேலே போக வேண்டாம் என்று வயதான பெண்மணிகள் கேட்டுக்கொண்டார்கள். மீறிவந்தவர்கள் முன்பு, மனிதச்சுவர் போல நின்று சரண கோஷம் முழக்கினார்கள் ஏனைய பக்தர்கள். பம்பை முதல், அப்பாச்சி மேடு, நீலிமலை, சபரிபீடம், மரக்கூட்டம், சன்னிதானம் வரை ஆங்காங்கே சோறு-தண்ணி இல்லாமல், வெறும் கட்டாந்தரையிலும் காட்டுப்பாதையிலும் பக்தர்கள் படுத்துக் கிடந்து, சபரிமலை ஆச்சாரத்தை மீறி ஒரு இளம் பெண்ணும் ஏறிவிடாமல் காப்பதற்காக ஆறு நாட்களாகத் தவம் கிடந்தார்கள்.

அக்டோபர் 19, 2018

ஒரு மந்திரிக்குக் கூட இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 300 போலீஸ் பாதுகாப்புப் படை புடை சூழ, கவிதாவும், ரெஹானா பாத்திமாவும் காவல்துறை சீருடை, தலைக்கவசம் சகிதம் மேலே அழைத்துச் செல்லப்பட்டார்கள். பக்தர்கள் யாரையும் நெருங்கக் கூட விடாமல், கிட்டத்தட்ட 18ம் படியிலிருந்து 100 அடி தொலைவிலுள்ள நடைப்பந்தல் வரை, காவல் படையுடன் வந்துவிட்ட இவர்களை, பக்தர்கள் மனிதச்சுவர்களாக மாறி நின்று தடுத்தார்கள். லத்தி சார்ஜ் செய்ய எங்களிடம் ஆர்டர் உள்ளது என்று காவல்துறை பயமுறுத்தியது.

“நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை. எங்களை அடித்துவிட்டுத் தாராளமாக அவர்களைக் கூட்டிச்செல்லுங்கள். ஆனால் எங்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் வனபாலகனான ஐயப்பன் மீது விழும் அடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று சரண கோஷங்களை முழங்கியபடி பக்தர்கள் கூடிவிட்டார்கள்.

இதற்கிடையே இப்படிப்பட்ட பெண்களைப் காவல்துறை அழைத்து வந்திருப்பதை அறிந்து பந்தள ராஜ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, மலையில் பூஜையில் ஈடுபடும் கீழ்சாந்தி எனப்படும் பூஜகர்களும், பூஜைகளை நிறுத்தி, பதினெட்டாம் படியின் முன்பிருந்து பஜனை பாடத் துவங்கினார்கள். இளம்பெண்களை ஏற்ற முயற்சித்தால், கோவில் நடை உடனடியாக அடைக்கப்படும் என்று தந்த்ரி அறிவித்தார்.

இத்தனை எதிர்ப்பையும் எதிர்பாராத காவல்துறை ஒருவழியாகப் பின்வாங்கியது.

ரெஹானா பாத்திமா தனது இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டுவந்ததாகவும், அதனை சன்னிதியின் ஐயப்பன் முன்பு வீசி எறிய திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாயின. எந்தவிதமான ப்ரோட்டோகாலும் இல்லாத இவர்களுக்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பும், காவல்துறையின் சீருடையும் கொடுத்தது எப்படி என்று எல்லா எதிர்க்கட்சிகளும் கேள்விகள் எழுப்பினார்கள்.

அக்டோபர் 20, 2018

இதன் பின்னரும் தலித் போராளி என்ற பெயரில் மஞ்சு என்ற பெண்ணும், “ஏசுவின் சக்தி என்னை சபரிமலைக்கு அழைக்கிறது” என்று சொல்லிக்கொண்டு மேரி ஸ்வீட்டி என்ற பெண்ணும் முயற்சித்தார்கள். பக்தர்களின் விடாமுயற்சியால் அதுவும் தோல்வியுற்றது.

அக்டோபர் மாத அமர்க்களங்களுக்கு நடுவே எங்களது குழுவில் உள்ள பக்தர்களும், நானுமே சந்நிதானத்தில் இருந்தோம். பந்தள ராஜ குடும்பத்தினரும் எங்களுடன் இருந்தார்கள். அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தோம்.

அக்டோபர் 22, 2018

மேலும் மூன்று 43 வயது பெண்களை பக்தர்களே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

அன்று மாலை நடை அடைக்கும் வரை இந்தப் பரபரப்பான சூழ்நிலை தொடர்ந்தது. அன்று காலை போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் ஐயப்பனின் சந்நிதியில் நின்று கண்ணீர் சிந்தி அழுதார். பின்னர் தான் நிர்பந்திக்கப்பட்டுப் பக்தர்களுக்கு எதிராக நிற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்து அங்கிருந்து கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்றுமாலை – நடை அடைக்க இன்னும் கொஞ்ச நேரமே இருந்த நிலையில் மாறுவேஷத்தில் பெண்களை மேலே ஏற்ற திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வர, பக்தர்கள் அனைவரும் (நான் உட்பட) மனிதசங்கிலி அமைத்து அடுத்த 2 மணிநேரம் சந்நிதானத்தைச் சுற்றி நின்றுகொண்டோம். அந்த மாதத்துப் பூஜையும் நடை அடைப்பும், ஹரிவராஸனமும் பக்தர்களுக்கு இனம் புரியாத ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.

 எத்தனை முயற்சித்தும் ஒரு இளம் பெண்ணையும் அனுமதிக்கவில்லை என்ற திருப்தி ஒருபுறம். அதே சமயம் – அமைதியாக, ஆனந்தமாக பகவானின் அருளை அனுபவித்த சந்நிதானத்தில் இத்தனை போராட்டங்களும், குழப்பங்களுமா என்ற ஆதங்கம் ஒருபுறம். ஐயோ நடை அடைக்கிறார்களே என்று வருத்தப்பட்ட காலம் போய், சீக்கிரம் நடையை அடைத்து விடுங்கள் என்று சொல்லும்படியான நிலை வந்துவிட்டது.

இதற்கிடையே எப்படியாவது சபரிமலையின் ஆச்சாரத்தை அழித்தே தீருவது என்ற முடிவில் இருக்கும் சக்திகள், புதிது புதிதாக ஒவ்வொருவராக களம் இறக்கினார்கள். சபரிமலை ஒரு பௌத்த ஆலயம் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டது.

சஜீவ் என்ற ஆதிவாசி குழுத் தலைவர் சபரி கோவிலே எங்களுக்குதான் சொந்தம் என்கிற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்தார். (இது குறித்து தனிக்கட்டுரையாக விளக்கிச் சொல்கிறேன்). இது அடிப்படை ஆதாரமற்ற வெறும் குழப்பும் முயற்சி என்பது தெளிவு. சில விஷமிகளின் சதிச்செயல்.

1950களில் சபரிமலை என்பது ‘சவரிமலை’ (St. Xavier) என்று சொல்லி நடந்த தீ வைப்புச் சதி; அதன் பின்னர் 1983ல் செயிட் தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்று கூறி ஒரு சர்ச்சை – இப்போதைய பினராயி அரசு போலவே நிலக்கல்லில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அன்று நடந்தேறின.

இதன் பின்னணியில் நிற்கும் சில மதவாத சக்திகளின் சதிவேலையில் இதுவும் ஒன்று. உண்மையான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆலயத்தின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று நம்முடன் தோளோடு தோள் நிற்கவேண்டும். ஒரு சில விஷமிகள் இதுபோல ஆதிவாசிகளைத் தூண்டிச் சதிச்செயல்களில் ஈடுபட்டு மத ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார்கள்.

25 அக்டோபர், 2018

இதுவரை நாங்கள் சீராய்வு மனு கொடுக்கப்போகிறோம் என்று சொல்லிவந்த தேவஸ்வம் போர்டு, நாங்கள் மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்பதோடு, பக்தர்கள் மேல் குற்றம் சொல்லியது. 1500 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

26 அக்டோபர், 2018

புனிதமான இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டு சென்ற காரணத்துக்காக வழிபாட்டுத் தலத்தை இழிவு செய்ததாகவும், மத நம்பிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததற்காகவும் ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது முன் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரள அரசு அவர் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை சுதந்திரமாக வெளியே விட்டுவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடியது.

27 அக்டோபர், 2018

கேரளமாநிலம் கண்ணூருக்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷா “ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்கக்கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்” என்று பேட்டி கொடுக்க நிலைமை இன்னும் பரபரப்பானது.

2 நவம்பர், 2018

கடந்தமாதம் நடந்த நிலக்கல் போராட்டத்தில் காணாமல் போன சிவதாஸ் என்ற பக்தர் காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.

4-5 நவம்பர், 2018

சித்திரை அட்டத்திருநாள் என்ற காரணத்துக்காக தீபாவளியை ஒட்டி ஒரு நாள் சபரிமலை நடைத்திறப்பு இருந்ததால் வரலாறு காணாத வகையில், கிட்டத்தட்ட 2500 காவலர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட 30 பெண்காவலர்கள் உட்பட சபரிமலையில் குவிக்கப்பட்டார்கள். நடைதிறக்கும் முன்னரே இந்தப் பெண் காவலர்கள் கண்ணீர் மல்க ஐயப்பன் திருநடைக்கு முன் நின்று வணங்கிவிட்டுப் பின்னர் வேலைக்குச் சென்றார்கள்.

6 நவம்பர், 2018

தீபாவளி நாளான அன்று சபரிமலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டம் குறைவானால் இளம் பெண்களை எளிதாக ஏற்றி விடுவார்கள் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. சாதாரணமாக 1000 பேர் கூட வராத சித்திரை அட்டத் திருநாளுக்கு அன்று வந்தது 15,000 பேர். சிபிஎம் கட்சி உறுப்பினரின் மனைவியான அஞ்சு என்னும் இளம் பெண் பம்பைக்கு வந்து சேர, சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கொதிப்படைந்தார்கள்.

கூடி இருந்த பக்தர்களுடன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சேர்ந்துகொண்டு மொத்த மலையிலும் சரண கோஷத்துடன் வலம் வந்தார்கள்.

தன் கணவன் வற்புறுத்திய காரணத்தால்தான் – தனக்கு விருப்பம் இல்லாமல் இங்கு வந்ததாக அஞ்சு தெரிவித்துத் திரும்பச் சென்றார்.

11 நவம்பர், 2018

பொய்யுரைகளைப் பரப்பி சபரிமலையை ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாக கேரள முதல்வர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். ஆன்லைன் முறையில் கிட்டத்தட்ட 539 இளம் பெண்கள் சபரிமலை தரிசனத்துக்காகப் பதிவு செய்திருப்பதாக தேவஸ்வம் போர்டு தெரிவித்தது.

12 நவம்பர், 2018

பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்போவதில்லை என்று போர்டு திட்டவட்டமாக அறிவித்தது. 1947ல் ஆலயத்தைத் தனது நிர்வாகத்தில் கொண்டு வரும்போது, ஆலய சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று போர்டு தெரிவித்து ஓர் ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்டதாக பந்தள ராஜ குடும்பத்தினர் அறிவித்தார்கள். அதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காத போர்டு பிரபல உச்சநீதிமன்ற வக்கீலான அர்யம சுந்தரத்தை சபரிமலை வழக்குக்கு தேவஸ்வம் போர்டு சார்பில் நியமித்தது.

பக்தர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்களைக் கண்ட வக்கீல் சுந்தரமோ அடுத்த நாளே வழக்கிலிருந்து பின்வாங்கி விட்டார்,

13 நவம்பர், 2018

உச்சநீதிமன்றத்தில் அன்று சீராய்வு மனுக்களுக்கான பதில் வருவதாக இருந்ததால் பக்தர்களும் மற்றவர்களும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஏற்கெனவே வழக்கு நடத்திய People for Dharma, NSS தவிர, பந்தளக் குடும்பம், தந்த்ரி குடும்பம், தனிப்பட்ட பக்தர்கள், அமைப்புகள் என 49 பேர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்கள், 49 மனுக்களும் (ரிவ்யூ பெடிஷன்), 4 ரிட் பெடிஷன்களும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரணை ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய சட்ட அமைப்பைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய ஒரு வெற்றிதான். ஆனாலும் அதனை முழுதும் அனுபவிக்க விடாமல் உச்சநீதிமன்றம் ஒரு ‘…க்’ வைத்தே உத்தரவு வழங்கியது. ஜனவரி 22ம் தேதி விசாரணை நடைபெறும் வரையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்குத் தடையில்லை என்பதே அது.

ஒரு பெண் வந்துவிட்டாலும் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் பாழாகிவிடுமே என்று பரிதவித்த பக்தர்களுக்கு இது ஏமாற்றமே. மேலும் அக்டோபர் மாதப் பூஜையில் 5 நாட்கள் நடைத்திறப்பு, தீபாவளியன்று ஒரு நாள் நடைத்திறப்பு மட்டுமே. ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 56 நாள் நடை திறந்திருக்கும் மண்டல மகர காலகட்டத்தில், புற்றீசல் போல வீம்புக்காகக் கிளம்பி வரும் பெண்களை எப்படிச் சமாளிப்பது என்பது எல்லோருக்குள்ளும் இருந்த ஒரு கேள்வி.

14 நவம்பர்

இதற்கிடையே கேரள அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்தது. கேரள முதல்வர் தன் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்க எதற்காக இந்தக் கூட்டம் என்று கம்யூனிஸ்ட் தவிர அனைவருமே வெளிநடப்பு செய்தார்கள்.

அன்று மாலையே தந்த்ரி குடும்பத்துடனும் பந்தள அரச குடும்பத்துடனும் மற்றொரு கூட்டம் ஏற்பாடானது. “குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் பெண்களை அனுமதிக்கலாம். அதன் பின்னர் நீங்கள் வேண்டுமானால் சுத்தி செய்து கொள்ளுங்கள்” என்ற அற்புதமான யோசனையை கேரள முதல்வர் முன்வைத்தார். அறியாமல் செய்த தவறுகளுக்கே சுத்தி – தவறுகள் செய்ய அது லைசன்ஸ் இல்லை என்று கூறி அதனை நிராகரித்தது தாழமண் இல்லம்.

16 நவம்பர், 2018

விடியும் முன்னரே அன்றைய தினம் பரபரப்பானது அதிகாலை 4:30 மணியளவிலேயே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய், தன் தோழியர் ஆறு பெண்களுடன் கோயிலுக்குள் நுழைவேன் என்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் குழுவினரை அழைத்துச் செல்ல எந்த டாக்ஸியும் வர மறுத்து விட்டது. இதற்குள் செய்தி கேட்டு விமான நிலையத்தை அடைந்த பக்தர்கள் வாயிலை முற்றுகையிட்டு பஜனை செய்யத் துவங்கினார்கள். கிட்டத்தட்ட 19 மணி நேரம் தொடர்ந்த இந்த நாம ஜபத்தின் காரணத்தால் திருப்தி தேசாய் விமான நிலையத்தின் வாயிலைக் கூடத் தாண்ட முடியாமல் திரும்ப வேண்டிய நிர்பந்தம் உண்டானது.

நவம்பர் 18, 2018

கேரள அரசு பக்தர்களைத் துன்புறுத்தும் நோக்கில் சம்பந்தம் இல்லாத புதிய நடைமுறைகளை சபரிமலையில் அமல்படுத்தத் துவங்கினார்கள். சபரிமலையில் இரவில் யாரையும் தங்க அனுமதிக்கவில்லை. 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 5,200 போலீசார் குவிக்கப்பட்டார்கள்.

நடைப்பந்தலில் வேண்டுமென்றே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து யாரும் அங்கே தங்கமுடியாதபடி அனுப்பப்பட்டார்கள். சரண கோஷம் முழக்கியதாகக் கூறி நூற்றுக்கணக்கான ஐயப்பன்மார்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பக்தர்களிடம் போலீஸ் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது

போலீஸ் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:

1. பக்தர்கள் குழுவாகக் கோயில் வளாகத்தில் நிற்கவோ, அமரவோ கூடாது.
2. சரண கோஷங்களை இடக்கூடாது.
3. ஊடகங்களிடம் பேசக்கூடாது.
4. ஆறு மணிநேரத்துக்கு மேல் கோயில் வளாகத்தில் தங்கியிருக்கக்கூடாது.
5. ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் கோயிலை விட்டு வெளியேறுவதுடன், காவல்துறையிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.
6. இவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நவம்பர் 22, 2018

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகி விட்டது. எந்த வருடமும் இல்லாதபடி இம்முறை பக்தர்கள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. சபரிமலையில் காவல்துறையினரே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றைப் பார்த்து மும்பையிலிருந்து வந்த 110 ஐயப்பன்மார்கள், பாதி வழியில் திரும்பச் சென்று, ஆரியங்காவில் தங்கள் இருமுடியைப் பிரித்து அபிஷேகம் செய்துள்ளார்கள்.

நிலைமையைக் காணவந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாக்ருஷ்ணனிடமே நக்கலும் அதிகார தோரணையுமாக போலீஸ் அதிகாரி பேசுகிறார். “பக்தர்கள் பம்பையிலிருந்து மேலே வர 45 நிமிடங்கள் தானே ஆகும்? வாருங்கள் சாமி கும்பிடுங்கள். கிளம்புங்கள்” என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு சராசரியான நபர் மேலே ஏறி வர குறைந்தபட்சம் ஒண்ணேகால் முதல் ஒன்றரை மணிநேரம் ஆகும். 45 நிமிடத்தில் எப்படி ஏறுவது? 6 மணி நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்றால் சபரிமலையின் முக்கியச் சடங்கான நெய்யபிஷேகம் எப்படிச் செய்வது? இதையெல்லாம் தீர்மானிக்க இவர்கள் யார்?

“அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா” என்று அழைத்தோம், மலையெங்கும் பக்தர் செய்யும் அன்னதானத்தை தடுத்து விட்டார்கள்.

“ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா” என்றோம், குறைந்தது 100ரூபாய் இருந்தால்தான் நிலக்கல்லிலிருந்து பஸ்ஸில் பம்பா வர முடியும் என்றானது.

“சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா” என்றோம், சபரியில் சரணம் கூப்பிட்டால் கைது செய்யப்படுவாய் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வழிபடுவதற்கான உரிமை – Article 25- Right to Pray என்று முழக்கமிட்டு இத்தனையும் செய்தார்களோ, அந்த உரிமை – Right to Pray – இங்கே சாமானிய பக்தனுக்குப் பறிக்கப்பட்டுவிட்டது. அவன் காலம்காலமாக வழிபட்ட முறையில் அவனுக்கு வழிபட உரிமை மறுக்கப்படுகிறது. 

***** 
Posted on Leave a comment

சபரிமலைத் தீர்ப்பு – ஒரு பார்வை : லக்ஷ்மணப் பெருமாள்


 உச்சநீதிமன்றம் சமீபத்தில், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பில் ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள், அனைத்து வயதுப் பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என்றும், ஒரேயொரு பெண் நீதிபதி மட்டும் மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது அரசியல் சட்டப் பிரிவு 25க்கு முரணானது என்பதால் கோயில் நிர்வாகமோ அல்லது மதமோதான் முடிவெடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பு இந்து சமய வழிபாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு எதிரானது என்று பக்தர்களும் பொது மக்களும் நம்புவதால்தான் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் எனச் சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: (தலைமை நீதிமதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பாலி நாரிமன், சந்திர சூட், கன்வில்கர்)

1.சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க பெண்களுக்கு நீண்ட காலமாகப் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.

2.தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் காட்டக் கூடாது.

3.சபரிமலை கோவிலில் பெண்களுக்குத் தடை விதிப்பது சட்டவிரோதம். அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

4.சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபட அனுமதிக்க வேண்டும்.

5.பெண்களைத் தெய்வமாக வழிபடும் நம் நாட்டில் அவர்களை பலவீனமாகக் கருதக்கூடாது.

6.வழிபாடு என்பது அனைவருக்கும் உள்ள சம உரிமை.

நால்வரின் தீர்ப்பில் தனி நபர் அடிப்படை உரிமை, பெண்ணுரிமை, அனைவருக்கும் சம உரிமை என்பதைத்தான் மாற்றி மாற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நீதிபதி இந்து மல்கோத்ராவின் தீர்ப்பின் சாராம்சம்:

1. கோயில் வழிபாட்டு முறைகளில் உள்ள மத ரீதியான பழக்க வழக்கங்களில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது.

2. வழிபாடு நடத்துபவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

3. மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்சினைகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

4. சம உரிமை என்பதுடன் மதரீதியான பழக்கங்களைத் தொடர்புப்படுத்தக் கூடாது.

5. சபரிமலை சன்னதி மற்றும் தெய்வத்துக்கு இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26 பிரிவின் கீழ் பாதுகாப்பு உள்ளது; மத விஷயங்களில் பகுத்தறிவுக் கருத்தைப் பார்க்கக் கூடாது. இந்தியா பலவிதமான நடைமுறைகளையும் அரசியலமைப்பு அறநெறிப் பன்முகத்தன்மையையும் கொண்டிருக்கிறது. பகுத்தறிவற்ற பழக்கவழக்கத்தை நடைமுறைப்படுத்த அல்லது பின்பற்ற
சமுதாயம் சுதந்திரம் அளிக்க வேண்டும்.

தீர்ப்பைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதுக்கு முன்பாக சபரிமலை ஐயப்பன் கோயில் வரலாறு பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இந்து சமயத்தின் வழிபாட்டு நடைமுறைகளில் ஏன் ஒரு விஷயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 360 டிகிரியில் பார்க்க வேண்டிய ஒரு விஷயத்தை வெறுமனே பெண்ணுரிமை என்று சுருக்கிப் பார்த்து விட இயலுமா?

சபரிமலை ஐயப்பனின் நைஷ்டிக பிரம்மச்சாரியம்

சபரிமலை ஐயப்பனை மாளகபுரத்தம்மாள் என்ற பெண் தீவிரமாகக் காதலிக்கிறாள். அவள் தன்னை மணக்குமாறு ஐயப்பனிடம் மன்றாடுகிறாள். ஐயப்பன் நான் யாரையும் திருமணம் செய்வதில்லை என்பது ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவு. தான் நைஷ்டிக பிரம்மச்சரியத்தில் இருப்பதால் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய இயலாது, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதே தனது முடிவு என்கிறார். இருப்பினும் உன்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால் என்னை வழிபட வரும் கன்னிசாமிகள் ஏதேனும் ஒரு வருடம் வராமல் இருந்தால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உத்தரவாதம் கொடுக்கிறார். எனவேதான் ஐயப்பன் திருமணத்திற்குத் தகுதியுடைய பெண்களிடமிருந்து விலகி இருக்கிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே 10 -50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்ற வழிமுறை பின்பற்றப்பட்டிருக்கலாம். இப்போதும் சபரிமலை கோயில் அருகில் மாளகபுரத்தம்மனை வணங்கி விட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

இந்து சமயத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தல புராணம் உள்ளது. அதன் அடிப்படையை வைத்தே ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பிரசித்தம் என்ற வகையில் வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தமிழகத்தில் ஆகம விதிப்படி என்றால், கேரளத்தில் தாந்திரிக முறைப்படி வழிபாட்டு விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

இன்றும் இந்தியாவில் சில கோயில்களில் ஆண்கள் முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ அனுமதிக்கப்படுவதில்லை. சில பூஜைகளில் அவர்களுக்கு அனுமதி கிடையாது. ஆண்கள் அனுமதிக்கப்படாத முக்கியமான சில கோயில்களைப் பற்றிப் பார்க்கலாம். இது பற்றி ஆராய்ந்தால் இன்னும் பல கோயில்களிலும் இதுபோன்ற சிறப்பு வழிபாட்டு முறைகள் இருப்பதைக் கண்டறிய இயலும்.

ராஜஸ்தானிலுள்ள பிரம்மன் கோயில்

உலகிலேயே உள்ள ஒரே பிரம்மன் ஆலயம் இதுதான். ஒருமுறை பிரம்மா யக்ஞ பூஜையை புஷ்கர் நதியில் நடத்த ஏற்பாடு செய்த சடங்கிற்கு அவரது மனைவியான சரஸ்வதி வர தாமதித்ததால் காயத்ரி என்ற பெண்ணை மணந்து பூஜையை மேற்கொண்டுள்ளார். இதனால் கோபமுற்ற சரஸ்வதி திருமணமான ஆண்கள் மனைவியை மரியாதை செலுத்தும் விஷயமாக பிரம்மனை வழிபடச் செல்லக்கூடாது, அதை மீறிச் சென்றால் மனைவியை அவமதித்த செயல் என்பதாகவும் அப்படிச் செல்லும் திருமணமான ஆண்கள் வாழ்வில் பல பிரச்சினைகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதாக அக்கோயிலின் தல புராணம் சொல்கிறது. எனவேதான் இன்று வரையிலும் திருமணமான ஆண்கள் இக்கோயிலில் உள்ளே செல்ல அனுமதியில்லை.

காம்ரூப் காமாக்யா கோயில், அஸ்ஸாம் :

இந்துமதத்தில் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் கோயிலுக்கோ வீட்டிலோ பூஜை செய்யக் கூடாது என்பது பொது நடைமுறையாக இருந்தாலும் காம்ரூப் காமாக்யா கோயிலில் அத்தகைய நிலையில் உள்ள பெண்களும் உள்ளே சென்று வழிபட அனுமதி உண்டு. அதுவும் அவர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் சென்று தேவி சதியை (Maa Sati) வழிபாடு செய்யும் வழக்கமும் உள்ளது.

இக்கோயிலில் பெண்களும் அல்லது துறவி மட்டுமே பூசாரிகளாக இருக்க இயலும் என்பதும், தேவி சதியின் மாதவிடாய் துணி மிகப் புனிதமானது என்பதால் அதைப் பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையும் உள்ளது. இங்கு ஆண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை.

தேவி கன்னியாகுமரி அம்மன் கோயில், தமிழ்நாடு:

இக்கோயில் அம்மனை பகவதி அம்மன், தேவி துர்கா என்றும் வழிபடுகிறார்கள். பானா என்ற அரசன் தவமிருந்து சாகாவரம் பெற்றதாகவும் தான் இறப்பது ஒரு கன்னிப் பெண்ணின் கையால் மட்டுமே நிகழ வேண்டும் என்றும் வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அவனை வதம் செய்யவே தேவி பகவதி அம்மன் கன்னி வடிவத்தில் பிறந்ததாகவும், சிவன் அவளைத் திருமணம் செய்யமுற்பட்டபோது சேவல் கூவ, நல்ல நேரம் முடிந்து விட்டதாக எண்ணி சிவன் திருமணம் செய்யும் ஆசையைக் கைவிட்டு விட்டார். இத்தகைய தொன்மம் இருந்தாலும் தேவி கன்னி பகவதி அம்மனை அனைவரும் வணங்க இயலும் என்பதும் நடைமுறையில் உள்ளது.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஔவையார் பூஜையில் ஆண்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்ற வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மற்றும் சக்களத்துக்காவு கோயில்

இரு பகவதி அம்மன் கோயில்களிலும் ஆண்கள் சங்கராந்தி எனப்படும் பொங்கல் திருவிழாவின்போது கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்ற வழக்கமுள்ளது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கலா என்ற திருவிழா பத்து நாட்கள் நடக்கும். அப்போது மூன்று லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு கண்ணகி அம்மனை வழிபடும் வழக்கமுள்ளது. பெண்கள் மட்டுமே வழிபடும் விழாவான இது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

சக்களத்துக்காவு கோயிலில் நாரி பூஜையின் போதும் தனு பூஜையின்போதும் ஆண்களுக்கு அனுமதி கிடையாது என்பது தாந்திரிக அடிப்படையில் கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.

சந்தோஷ் தேவி விராத்

இதைப் போலவே மகாராஷ்டிராவில் இக்கோயிலில் ஆண்களுக்கு வெள்ளிக்கிழமை உள் சென்று வணங்கும் வழிபாட்டு உரிமை கிடையாது.

இதைப்போலவே சில கோயில்களில் பெண்கள் உள்ளே செல்ல சில குறிப்பிட்ட நாட்களில் அனுமதி கிடையாது. திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில், ஹரியானாவில் உள்ள கார்த்திகேயா கோயில், கேரளாவிலுள்ள ஸ்ரீ பத்மநாபா கோயில் என சில கோயில்கள் உள்ளன.

எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார். ‘எல்லா விஷயத்திலும் கேள்வி கேட்டுக் கொண்டே செயல்பட்டால் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். நீங்கள் நம்பிக்கை வைக்கும் பத்து விஷயங்களைக் கண்ணை மூடிக் கொண்டு நம்புங்கள். அது கடவுளை நீங்கள் நம்புவதாக இருந்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார். மத விஷயங்களில் கடவுள் நம்பிக்கையில் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் மாறுவதே ஏற்புடையது. உதாரணமாக கற்பூரம் ஏற்றித்தான் தீப ஆராதனை செய்ய வேண்டும் என்ற பழக்கம் இடையில் வந்தது. அதன் பிறகு கற்பூரம் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று புரிந்தவுடன் பழங்கால முறைப்படி விளக்குத் தீபம் ஏற்றும் நடைமுறையைப் பெரும்பாலான கோயில்களில் பின்பற்ற ஆரம்பித்தார்கள். அவ்வாறாகவே பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அப்படி இல்லாமல் பெண்ணுரிமை, சம உரிமை என்று கேள்வி எழுப்புவதென்பது சில கோயில்களின் சிறப்புத் தன்மையையும் வழிபாட்டு அழகியலையும் கெடுக்கச் செய்யும். இறை நம்பிக்கை விஷயத்தில் கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் கேட்டு விட்டு அதை உடைப்பது எளிது. ஆனால் நாம் வாழ்க்கையில் எதன் மீதும் நம்பிக்கையற்றவர்களாகி நிற்போம். வாழ்க்கையே நம்பிக்கையில் தான் நகர்கிறது. அதிலும் மத நம்பிக்கைகளைச் சட்டம் போட்டுத் திணிக்க முற்பட்டால் அது பெரும் வன்முறைக்கு வித்திடும்.

உச்ச நீதி மன்ற தீர்ப்பை சபரிமலை விஷயத்தில் ஏன் பக்தர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை?

நன்றி: தி நியூஸ் மினிட்

அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பில் பல முரண்கள் உள்ளன. ஆண்கள் பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது இங்கு பொருந்தாது. முதலில் வழிபாட்டு விஷயங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் சில நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டவை. அவற்றைப் பாலினம் சார்ந்த விஷயமாகச் சுருக்குவது அர்த்தமற்ற செயல். மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும். மத விஷயங்களில் மத்திய அரசு சட்டமாக்குவதன் மூலம் ஏற்றுக்கொள்ள இயலும் அல்லது அந்த மதமே அதன் வழிபாட்டு விஷயங்களில் காலப்போக்கில் கொண்டு வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதைச் சம உரிமை என்று தீர்ப்பின் மூலம் திணிக்க முற்பட்டால் இதுபோன்ற போராட்டங்கள் தான் நடக்கும்.

தனி நபர் உரிமை என்பது இவ்விஷத்திற்குப் பொருந்தாது. நாளை ஒருவர் ஒரு கோயிலில் ஆண்கள் சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்ற வழக்கம் தனக்கு ஒவ்வாத ஒன்று, நான் எந்த ஆடை அணிந்து செல்ல வேண்டும் என்பதை குருவாயூர் கோயிலோ, திருச்செந்தூர் கோயிலோ தீர்மானிக்க இயலாது, எனது உடம்பைக்காட்டிச் செல்ல இயலாது, அது எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது என வழக்குத் தொடரலாம். நீதிமன்றங்கள் ஆடையுடன் செல்வது அவரவர் உரிமை என்று தீர்ப்பு வழங்கினால் எப்படி இருக்கும்? கோயில் விஷயங்களில் கோயில் நிர்வாகம் சொல்லும் விதிகள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.

உதாரணமாக தமிழகத்தில் மது விலக்கு அமலில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதை வைத்து ஒருவர் சர்ச்சுகளில் ஒயின் வழங்குவது சட்டத்தை மீறிய செயல் என்று வழக்குத் தொடர்ந்தால் இந்திய நீதிமன்றங்கள், ‘மது உடல் நலத்திற்குக் கேடான ஒன்று, அதைச் சர்ச்சுகளில், அதுவும் தடை விதிக்கப்பட்ட மாநிலத்தில் கொடுப்பதை ஏற்க இயலாது’ என்றும் தீர்ப்பளிக்குமா? அவ்வாறான தீர்ப்பை அளிக்காது. அவ்வாறானத் தீர்ப்புகளை அளித்தால் மேற்கத்திய நாடுகளால் இந்தியாவும் சவுதியை போல அடிப்படைவாத நாடாகப் பார்க்கப்படும் என்று கருதும்.

பாராளுமன்றங்கள் மட்டுமே சட்டங்கள் இயற்ற இயலும். தற்போது நீதிபதிகள் சட்டத்தைத் தங்களுக்கேற்றவாறு பொருள்விளக்கம் செய்து அதற்கு ஏதேனும் ஒரு சட்டப்பிரிவை மேற்கோள் காட்டித் தீர்ப்பளிக்கின்றனர். அதனால்தான் சபரி மலை விஷயத்தில் நான்கு நீதிபதிகளின் கருத்து ஒரு மாதிரியாகவும், ஒரு நீதிபதியின் கருத்து வேறு மாதிரியாகவும் உள்ளது.

முத்தலாக் விஷயத்தில் சட்டமியற்றச் சொல்லும் நீதிமன்றம் சபரிமலை விஷயத்தில் ஏன் அரசுக்கு அறிவுரை சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்வதில்லை? பெண்ணுரிமை என்றால் அதே அரசியல் சட்டப்பிரிவை வைத்துப் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்ட மட்டும் நீதிமன்றம் தயக்கம் காட்டுவது ஏன்? முத்தலாக் விஷயத்தில் மட்டும் ஏன் பாராளுமன்றம் சட்டம் இயற்றட்டும் என்று அறிவுறுத்துகிறது. பெரும்பான்மை சமூகமான இந்து மதத்தினர் சார்ந்த விஷயங்களில் தங்களது தீர்ப்பாக எதைக் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள், சிறுபான்மை சமூகத்தினர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதன் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்து மதத்தில் பெண்ணுக்கான சொத்துரிமை கொண்டு வந்தபோது ஏற்றுக் கொண்டார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் பல சட்டங்களைக் கொண்டு வந்தபோது ஏற்றுக் கொண்டார்கள். திருமணம், சொத்து, விவாகரத்தானால் மனைவிக்கான நிவாரணத் தொகை என அனைத்தையும் இந்து சிவில் சட்டமாகக் கொண்டு வந்தபோது ஏற்றுக்கொண்டவர்கள்தான் கோயில் விஷயம் என்று வரும்போது நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிடுவதை மதிப்பதில்லை. இதைத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் கண்டோம். தங்களின் இந்து பாரம்பரியத்திற்கெதிராகத் தீர்ப்புகள் வந்ததால்தான், மக்களின் போராட்டம் முன்பு அரசும் உச்ச நீதிமன்றமும் அடிபணிய வேண்டி வந்தது வரலாறு.

சபரிமலை விஷயத்தில் அரசியல் நிலைப்பாடுகளும் தற்போதைய நிலையும்

ஆரம்பத்திலிருந்தே தேவஸ்வம் போர்ட் நிர்வாகிகள் அரசின் கைப்பாவையாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேரள அரசு நீதிமன்றத்தில் வழக்கின்போது அரசுத் தரப்பில் மாற்றி மாற்றித் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்தியாவின் இந்துக் கலாசார வழிபாட்டின் முழுமையையும் புரிந்து கொள்ளாமல், அடிப்படை உரிமை, சம உரிமை என்று சுருக்கிப்பார்த்துத் தீர்ப்பளித்தது. ஒருபுறம் பெண்ணியவாதிகளிடமும், முற்போக்குவாதிகளிடமும் தமது அரசு முற்போக்கு அரசு என்று காட்டிக் கொள்ளும் பினராயி விஜயனின் கம்யுனிஸ அரசு ஒரு பெண்ணையும் இதுவரை ஐயப்ப தரிசனத்திற்கு முற்றிலுமாக அழைத்துச் செல்லவில்லை. அதற்குக் காரணமுள்ளது.

இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் உட்பட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தொடர் போராட்டமும் அதற்கு பெருமளவு இந்துக்களின் தெருமுனைப் போராட்டங்களின் ஆதரவையும் பார்த்தே கம்யுனிஸ அரசு செயல்படுகிறது. முற்போக்கு அரசு என்றும் காட்டிக்கொள்ள வேண்டும், அதே வேளையில் வாக்குகளும் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கம்யுனிஸ அரசு செயல்படுகிறது. ஒருபுறம் 144 தடைச்சட்டம் போட்டுப் போராட்டங்களை ஒடுக்க முனைகிறது.

இதற்கிடையில் இத்தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிய மனுக்களை ஒருவழியாக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. கம்யுனிஸ அரசு போலவே மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், 10 to 50 வயதுக்குட்பட்ட பெண்கள் உள்ளே செல்ல இடைக்காலத் தடையும் போடவில்லை. இதையும் கம்யுனிஸ அரசின் செயல்பாடு போலவே பார்க்க வேண்டியுள்ளது. தற்போது கம்யுனிஸ அரசு, தானே இத்தீர்ப்பை அமல்படுத்த சிறிது கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டால் தனக்கு இழுக்கு என்று கருதுவதால் மீண்டும் தேவஸ்வம் போர்டைக் கைப்பாவையாக்கி தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் வேண்டுமென வழக்கைப் பதிவு செய்ய வைத்தது. இதே தேவஸ்வம் போர்ட், தீர்ப்பு வந்தவுடன் தனக்கு அதிர்ச்சி என்றது. அரசிடம் ஆலோசனை நடத்திய மறுநாளே மறுபரிசீலனைக்குத் தாம் செல்லப்போவதில்லை என்றது. இப்போது கால அவகாசம் கேட்பதுகூட நீதிமன்றமே முன்வந்து பெண்களை உள்ளே செல்ல இடைக்காலத் தடை விதிக்கட்டும் என்று எண்ணுவதால்தான்.

இந்துக்கள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தங்களின் உரிமையை நிலைநாட்டியது போலவே கம்யுனிஸ அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். என்னைப் பொருத்தவரையில் மத வழிபாட்டு விஷயங்களில் ஏற்படும் மாற்றங்கள் மதத்திற்குள்ளிருந்து வரவேண்டும். இவற்றை நீதிமன்றங்கள் தங்கள் கையில் எடுத்தால் நாட்டில் அமைதியின்மைக்கும் வன்முறைக்கும் நீதிமன்றங்களே வழிவகுத்ததாக அமைத்துவிடும். அதனால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல பாராளுமன்றச் சட்டங்கள் வாயிலாகத்தான் சட்டச் சீர்திருத்தங்கள் ஏற்படவேண்டும். ஏனெனில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் சமூகத்தை ஏற்றுக்கொள்ள வைப்பது எளிமையாக இருக்கும். நடைமுறைக்கு வரவும் உதவும்.

(இக்கட்டுரை அச்சில் வெளியான போது அதில் இருந்த தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டிய அனீஷ் கிருஷ்ணன் நாயர் அவர்களுக்கு நன்றி. இந்த ஆன்லைன் வடிவத்தில் அப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன) 

Reference:

https://indianexpress.com/article/india/sabarimala-verdict-live-updates-supreme-court-women-temples-kerala-5377598/

https://www.quora.com/What-is-your-opinion-about-the-Supreme-Court-verdict-lifting-the-ban-on-women-s-entry-to-Sabarimala-Temple

https://www.ibtimes.co.in/heres-list-8-temples-india-where-men-are-not-allowed-enter-706187

https://www.youtube.com/watch?v=LiFvKP9FhzM

https://timesofindia.indiatimes.com/india/sc-verdict-on-section-377-all-you-need-to-know/articleshow/65695884.cms

https://www.indiatoday.in/india/story/adultery-verdict-supreme-court-section-497-1350477-2018-09-27

https://tamil.thehindu.com/opinion/columns/article25093409.ece