Posted on Leave a comment

உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையா? | ஜடாயு


இன்று புழக்கத்திலுள்ள வால்மீகி ராமாயணத்தின் பாரம்பரிய வடிவத்தில் உத்தரகாண்டம் அதன் கடைசிப் பகுதி என்ற அளவில் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது அனைவராலும் ஏற்கப்படவில்லை. உத்தரகாண்டம் ஆதிகாவியமான வால்மீகி ராமாயணத்தில் உள்ளதல்ல, பின்னால் சேர்க்கப்பட்டது என்ற கருத்து ஸ்ரீ ராமபத்ராசாரியார் (சித்ரகூட்) உள்ளிட்ட ஆசாரியர்கள், பல பாரம்பரிய ராமாயணப் பண்டிதர்கள், சம்ஸ்கிருத அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் உள்ளது. அவ்வாறு கருதும் பாரம்பரியப் பண்டிதர்கள் தங்களது ராமாயண பாராயண முற்றோதலில் அந்தக் காண்டத்தை வாசிப்பதில்லை, அதனைச் சொற்பொழிவு செய்வதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்த்தரப்பாக வேறுசில அறிஞர்களின் கருத்துக்களும் உள்ளன. இந்த நீண்ட விவாதத்தின் முக்கியப் புள்ளிகளை ஒரு பறவைப் பார்வையாக இக்கட்டுரையில் பார்க்கலாம். எனது ராமாயணக் கல்வி மற்றும் ஆய்வில் நான் வந்தடைந்த கருத்து உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்பதே. எனவே அதற்கான உறுதியான வாதங்களை முதலிலும், அத்தகைய பிற்சேர்க்கைக்கான பின்னணி குறித்த எனது புரிதலை இரண்டாவதாகவும் அளித்திருக்கிறேன்.

உத்தரகாண்டத்தின் உள்ளடக்கம்: 

வால்மீகி ராமாயணத்தில் ஆறாவதாக உள்ள யுத்தகாண்டம் ராம பட்டாபிஷேகம் மற்றும் ராமராஜ்யத்தின் வர்ணனையுடன் முடிவடைகிறது. அதன் பிறகு வருவது இக்காண்டம். ‘உத்தர’ என்ற சொல்லுக்கு ‘பிறகு / பின்னால்’ என்றும் சில இடங்களில் ‘கடைசியான’ (உத்தரக்கிரியை என்பது போல) என்றும் பொருள். இதில் கூறப்படும் விஷயங்கள்:

1. ராவணாதியரின் பிறப்பு, வளர்ப்பு, தவம், மூவுலகையும் அவர்கள் படையெடுத்து வெற்றி கொள்வது. பட்டாபிஷேகத்திற்கு வந்துள்ள முனிவர்களிடம் ராமர் கேட்க, அவர்கள் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

2. குடிமக்களில் ஒருசாரார் பழிதூற்றுவதை ஒற்றர்கள் மூலம் கேட்ட ராமர் சீதையை வனத்துக்கு அனுப்ப முடிவெடுத்து, லக்ஷ்மணன் கானகத்தில் அவளை விட்டுவருவது. சீதையின் துயரம், வால்மீகி முனிவர் அவளைக் கண்டு தனது ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தல். லவ குசலர்களின் பிறப்பும் வளர்ப்பும்.

3. சத்ருக்னன் படையெடுத்துச் சென்று லவணன் என்ற அரக்கனை வதம் செய்து, மதுபுரி என்கிற மதுரா நகரை உருவாக்கி அங்கு ஆட்சிபுரிதல்.

4. தவத்திற்கு அதிகாரமில்லாத சூத்திர முனியான சம்பூகன் தவம் செய்வதால் கேடுகள் விளைவதால் அவனைத் தண்டிக்க வேண்டும் என்று நாரதர் உள்ளிட்ட ரிஷிகள் கூற, ராமர் சம்பூகனை வதம் செய்தல்.

5. ராமர் அசுவமேத, ராஜசூய யாகங்களைச் செய்தல். யாகசாலையில் வால்மீகி முனிவருடன் லவ குசர்கள் வந்து ராமாயணத்தைப் பாடுதல், தனது புதல்வர்கள் என்று அறிந்து ராமர் மகிழ்தல். (அசுவமேதக் குதிரையை லவகுசர்கள் பிடித்துக் கட்டுவது, பிறகு ராமரின் படைகளும், ராமருமே வந்து லவகுசர்களிடம் போரிட்டுத் தோற்பது ஆகியவை எதுவும் இதில் இல்லை. அவை பிற்காலத்தில் மகாகவி பவபூதி தனது உத்தர ராம சரிதம் என்ற காவியத்தில் நாடகத்தன்மைக்காக எழுதிச் சேர்த்தவை).

6. ராமரின் கோரிக்கைப் படி, வால்மீகி ஆசிரமத்திலிருந்து சீதை யாகசாலைக்குள் அழைத்து வரப்படுதல். ராமரும் சபையினரும் முனிவரும் அவளைப் புகழ்தல். சீதை பூமித்தாயை வேண்ட, பூமிபிளந்து அவளை ஏற்றுக் கொள்ளுதல்.

7. ராமர் லவ குசர்களுக்கும் பரதனது புதல்வர்களுக்கும் உரிய ராஜ்யத்தை அளித்துவிட்டு, அவதார காலம் நிறைவுற்றதை அறிந்து, சகோதரர்களும் அயோத்தி நகரத்தின் மக்களும் மற்ற உயிர்களனைத்தும் புடைசூழ சரயு நதியில் புகுந்து தனது இருப்பிடமான வைகுந்தத்தை அடைதல்.

இனி, உத்தரகாண்டம் பிற்சேர்க்கையே என்பதற்கான முக்கியமான வாதங்களைப் பார்க்கலாம். 

1. யுத்தகாண்டத்தின் இறுதி அத்தியாயம் தெளிவாக அதுவே காவியத்தின் முடிவு என்னும் வகையில் அமைந்துள்ளது. கடைசி 15 சுலோகங்கள் நூலின் பெருமைகளையும் அதைக் கற்பதால் உண்டாகும் நலன்களையும் எடுத்துரைக்கும் பலசுருதியாக உள்ளன. எனவே இதற்குப் பிறகு காவியத்தின் அடுத்த பகுதி தொடங்குவதற்கான சாத்தியம் இல்லை. (மகாபாரதத்திலும் புராணங்களிலும் பல இடங்களில் நடுநடுவிலும் அத்தியாய முடிவுகளிலும் கூட பலசுருதிகள் கூறப்பட்டுள்ளனவே என்று இதற்கு ஆட்சேபம் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி ராமயாணத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. மேலும் இந்தப் பலசுருதியில் ‘இந்தப் பகுதியை’ என்றில்லாமல் நூல் முழுவதையும் சுட்டுவதாக உள்ளது.)

2. உத்தரகாண்டத்திலுள்ள 111 சர்க்கங்களில் பாதிக்கு மேல் (55 சர்க்கங்கள்) மையக்கதையை விட்டு விலகி உபகதைகள் போன்ற வேறொன்றைக் கூறுவதாக (digression) உள்ளன. மகாபாரதத்திலும், புராணங்களிலும் இத்தகைய போக்கு மிக சகஜமானது, ஆனால் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலான காவிய அமைப்பில் இப்போக்கு மிகச்சில இடங்களில், அதுவும் சிறிய அளவிலான விலகல்கள் என்ற அளவிலேயே உள்ளது.

3. மகாபாரதத்தில் பாண்டவர்களின் வனவாசத்தின்போது மார்க்கண்டேய ரிஷி அவர்களுக்கு ராமாயணக்கதை முழுவதையும் கூறுவதாக வருகிறது (வனபர்வம், 275-289). ராமோபாக்யானம் எனப்படும் இக்காதை பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. இதில் உத்தரகாண்டக் கதை நிகழ்ச்சிகள் இல்லை. பற்பல ராஜவம்சங்களைப் பற்றிக் கூறும் மகாபாரதத்தில் லவகுசர்கள் பற்றிய குறிப்பு எங்கும் இல்லை. ஆனால் கிருஷ்ணர், நரநாராயணர்கள் பற்றிய நேரடிக் குறிப்பு உத்தரகாண்டத்தில் (53.20-22) உள்ளது. வேறு எந்தக் காண்டத்திலும் கூறப்படாத கோவிந்த, ஹரி, மாதவ, வாசுதேவ ஆகிய விஷ்ணு நாமங்கள் வருகின்றன. எனவே, உத்தரகாண்டப் பகுதி காலத்தால் மகாபாரத்திற்கும் பிற்பட்டது என்பது புலனாகிறது.

4. ராமாயண காலம் திரேதாயுகம் என பாரம்பரியமாக அறியப்படுகிறது. மற்ற காண்டங்களில் அதற்கு முந்தைய கிருதயுகம் மட்டுமே குறிப்பிட்டப் பட்டுள்ளது. ஆனால் உத்தரகாண்டத்தில் துவாபர, கலி யுகங்கள் பற்றியும் குறிப்பு உள்ளது (சர்க்கம் 74).

5. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில் வேத வேள்விகளையும், நதிகள் முதலான இயற்கை அம்சங்களையும் வணங்குதலையும் தவிர்த்து வேறுவகையான வழிபாடுகள் கூறப்படவில்லை. ஆனால் உத்தரகாண்டம் சிவலிங்க பூஜை (31.43), விஷ்ணு உருவத்தை பூஜித்தல் (109.31) ஆகியவற்றைக் கூறுகிறது. ராவணன் பிரம்மனிடம் வரம் பெற்றதாகவே முந்தைய காண்டங்களில் உள்ளது. சிவபக்தன் என்பது உத்தர காண்டத்தில் மட்டுமே உள்ளது. இவையும் பிற்காலத் தன்மைக்கு சான்றுகள்.

6. வால்மீகி ராமாயணம் என்ற கச்சிதமான ஒழுங்குடைய காவியப் பிரதியில் வேறெங்கும் கதை முரண்கள் இல்லை. ஆனால் உத்தரகாண்டத்தில் மீண்டும் கூறப்படும் சில சம்பவங்கள் முன்பு கூறப்பட்டதற்கு முரணாக உள்ளன. சில உதாரணங்கள்: பிரபலமாக அறியப்பட்டுள்ள கும்பகர்ணன் வாய்குழறி தூக்கத்திற்கான வரம் கேட்டான் என்ற கதை உத்தரகாண்டத்தில்தான் (10.45) உள்ளது. மாறாக, யுத்தகாண்டத்தில் (6.61), கும்பகர்ணன் பிறந்தவுடனேயே பிரம்மா அவனைத் தூங்குமாறு செய்துவிட்டார் என்றே உள்ளது. ஹனுமானைப் பற்றி உத்தரகாண்டத்தில் உள்ள கதை (சர்க்கம் 36), முன்பு கூறப்பட்டதற்கு (கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் 66) முரணாக உள்ளது. ராவணன் அவளது சம்மதமின்றி ஒரு பெண்ணைத் தீண்ட முயன்றால் அவன் இறப்பான் என்ற சாபம், அவன் புஞ்ஜிகஸ்தலா என்பவளை வன்புணர முயற்சித்தபோது பிரம்மாவால் இடப்பட்டது என்று யுத்தகாண்டத்தில் (சர்க்கம் 13) கூறப்பட்டற்கு மாறாக, ரம்பையை அவ்வாறு செய்ய முற்படுகையில் குபேரன் மகன் நளகூபரன் அவ்வாறு சாபமிட்டதாக உத்தரகாண்டம் (சர்க்கம் 26) கூறுகிறது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் வால்மீகி எழுதியிருக்க முடியும். இது எல்லாவற்றையும்விட, மற்ற காண்டங்களில் சிறப்பித்துக் கூறப்பட்ட ஏகபத்தினி விரதத்திற்கு முரணாக, ராமர் சீதை தவிர்த்து மற்ற பெண்களையும் மணந்து கொண்டதாக உத்தரகாண்டம் (42.22) கூறுகிறது.

6. அக்னி பிரவேசத்தின்போது தேவர்களாலும் ரிஷிகளாலும் சுவர்க்கத்திலிருந்து யுத்தகளத்தில் வானில் வந்து தோன்றிய தசரதராலும் தூயவள் என்று போற்றி ஆசிர்வதிக்கப்பட்ட சீதையைத்தான் ஏற்று ராமர் அயோத்திக்கு அழைத்து வருகிறார். ஆனால் குடிமக்களின் பழிதூற்றலைக் கேட்டு, அத்தகைய சீதையைத் துறந்து அவளை ராமர் வனத்திற்கு அனுப்பினார் என்ற கதைக் குறிப்பு, வால்மீகி ராமாயணத்தின் காவிய ஒருமையையும், ராமரின் பாத்திரப் பாங்கையுமே முற்றிலும் சிதைத்து விடுகிறது. முந்தைய ஆறு காண்டங்களில் அதை அபாரமாக வளர்த்தெடுத்து வந்த கவி-ரிஷியாகிய காவியகர்த்தா, ஏழாவது காண்டத்தில் அதை முற்றிலும் நாசமாக்கினார் என்பது போல இது உள்ளது. அந்த விவரணத்திற்குள்ளேயே பல உள்முரண்களும் குழப்பங்களும் உள்ளன.

அ) அபகீர்த்திக்குப் பயந்து சீதையைத் துறக்கிறேன் என்று ராமர் முதலில் கூறுவதாகவும், ஆனால், பின்பு கருவுற்றிருந்த அன்பு மனைவியாகிய சீதையைக் கானகத்திற்கு அனுப்பியதே பெரிய அபகீர்த்தி (52.15) என்றும் இருவேறு இடங்களில் உத்தரகாண்டம் கூறுகிறது. பின்பு சீதையைத் துறப்பதற்கான முகாந்திரம்தான் என்ன?

ஆ) லவகுசர்களை சீதையின் மறைவுக்குப் பின் ராமர் இளவரசர்களாக ஏற்கிறார். பழிதூற்றப்பட்ட அரசிக்குப் பிறந்த குழந்தைகளை அரசன் ஏற்பது சாஸ்திர சம்மதம் என்றால், அக்குழந்தைகள் பிறந்தபோதே செய்தியறிந்து அரசனாகிய ராமர் அவர்களை ஏற்றுக்கொண்டு வளர்த்திருக்கலாம். பன்னிரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

இ) லவகுசர்கள் கானகத்தில் வளர்கையில் ராமர் அவர்களது தந்தை என்பதை சீதை அவர்களுக்குக் கூறவில்லையா? கூறினாள் எனில், அவர்கள் எப்படி எந்தவிதமான கேள்விகளும் எதிர்வினைகளுமின்றி ராமாயணம் முழுவதையும் வால்மீகியிடமிருந்து கற்றார்கள்? இதுபற்றிய எந்தக் குறிப்பும் உத்தரகாண்டத்தில் இல்லை.

ஈ) தனது அபகீர்த்திக்கும் (அதனால் விளையும் நரக பிராப்திக்கும்) அஞ்சி ராமர் சீதையைத் துறந்தார் என்றால், சீதைக்கு அடைக்கலம் அளித்த வால்மீகிக்கு அந்தக் குற்றங்களும் பாவங்களும் நேராதா என்ற கேள்வி எழுகிறது.

உ) உத்தரகாண்டத்தில் இறுதியில், “துர்வாச மகரிஷியின் சாபத்தினால் ராமர் சீதையும், தனது சகோதரர்களையும் தானே தண்டனையளித்து துறக்கும் நிலை உருவாகும் என்று முன்பே கூறப்பட்டுள்ளது” என்று சுமந்திரர் லக்ஷ்மணனிடம் கூறுவதாக வருகிறது. ஆனால், சீதைக்கும் லக்ஷ்மணனுக்கும் மட்டுமே இக்கதி நேர்கிறது. பரதனையும் சத்ருக்கனையும் ராமர் இவ்வாறு செய்வதில்லை. ஏன் ரிஷியின் சாபத்திற்கான பாதிப்பலன் மட்டுமே உண்டாயிற்று என்ற கேள்வி எழுகிறது.

ஊ) தன்னை நம்பி வந்தவர்களிடமும், சரணமடைந்தவர்களிடமும் குற்றங்கள் இருந்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று விபீஷணன் அடைக்கலம் கேட்டும் வரும் தருணத்தில் ராமர் கூறுவதாக வால்மீகி கம்பீரமான மொழியில் பதிவு செய்கிறார் (யுத்த காண்டம்18.3,29,32,35):

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

“ஒரே ஒரு முறை, ‘நான் உன்னைச் சேர்ந்தவன்’ என்று கூறிக்கொண்டு என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் எந்த அச்சமும் நேராதபடி அபயம் அளிக்கிறேன். இதுவே எனது விரதம்.”

இத்தகைய ராமர், தன்னை நம்பிவந்த சீதையைப் பின்பு ஊரார் பழிக்காகத் துறப்பதாக உள்ள சித்தரிப்பு சிறிதும் பொருத்தமற்றதாக உள்ளது.

எ) “அந்த சீதைக்காக ராமர் உலகத்தையே தலைகீழாகச் செய்துவிடுவேன் என்கிறார் என்றால், அது சரியாகவே இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். மூவுலகிற்கும் அதிபதியாவது என்பதுகூட சீதையின் பேரொளியின் ஒரு கீற்றுக்கும் ஈடாகாது” என்று ஹனுமான் கூறுகிறார் (கிஷ்கிந்தா காண்டம் 15.50). இது சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் சீதையின் தரிசனத்தைப் பெறுவதற்கு முந்தைய ஹனுமானின் கூற்று. இக்கூற்றின்வழி ராமரின் இதயத்தைப் பேசுபவர் வால்மீகியேதான். அத்தகைய ராமரின் சித்திரத்தை பின்பு வால்மீகி மாற்ற வேண்டியதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

7. உத்தர காண்டத்தில் வரும் சம்புகன் வதம் வால்மீகி ராமாயணத்திலேயே அதற்கு முன்பு கூறப்பட்டதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. தசரதரால் இருட்டில் யானை என்று கருதி அம்பெய்து கொல்லப்படும் முனிகுமாரனான சிரவணனின் கதையை நாம் நன்கு அறிவோம். இறக்கும் தருவாயிலும் தசரதரைத் தன் வயதான, கண்தெரியாத பெற்றோரிடம் செல்லக் கோரும் அவன், “தான் வைசிய தந்தையாருக்கும், சூத்திர தாயாருக்கும் பிறந்தவன்” என்று கூறுகிறான் (அயோத்தியா காண்டம், 63.50). அவன் “தவத்திலும் சாஸ்திரங்களைக் கற்பதிலும் ஈடுபட்டிருப்பவன்” (63.25, 64.33) என்ற குறிப்பும் உள்ளது. அந்தப் பெற்றோர்கள் தாங்கள் உயிர்துறக்கும் முன்பு இடும் கடும் சாபத்தினால்தான் பின்பு புத்திரசோகத்தால் தசரதரே இறக்க நேரிடுகிறது எனில் அவர்களது தவத்தின் வலிமை எந்த அளவிற்கு இருந்து என்பதைப் புரிந்துகொள்ளலாம். பின்பு, கானகத்தில் வனவாசிகளான சபரர்களின் குலத்தைச் சேர்ந்த சபரி என்ற மூதாட்டியை ராமர் சந்திக்கிறார். அவளது தவத்தின் மேன்மையைப் புகழ்கிறார். அவளது தவ வலிமையால் அவள் மேன்மையான உலகங்களை அடைந்தாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது (கிஷ்கிந்தா காண்டம், 3.74). ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, உத்தரகாண்டம் சூத்திரன் தவம் செய்ய அருகதையற்றதால் அவன் தண்டிக்கப் படவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. இது பிற்சேர்க்கையன்றி வேறென்ன?

(நன்றி: இப்பகுதியில் உள்ள சில குறிப்புகளும் ஆதாரங்களும் Ramayana of Valmiki (Vol 1-7), translation by Dr. R Rangan, WEBOLIM India publication நூலிலிருந்து எடுக்கப்பட்டவை) 

பிற்சேர்க்கையும் பரவலும்: 

மகாபாரதத்தில் உத்தரகாண்டக் கதைக் குறிப்புகள் எதுவும் இல்லை என்பதை முன்பே பார்த்தோம். புராணங்களில் ஸ்ரீமத்பாகவம் (9.11.10-11) ராமாவதாரம் பற்றிய பகுதியில் சீதையை வனத்திற்கு அனுப்பியதையும் லவகுசர்கள் பிறப்பையும் இரண்டு சுலோகங்களில் சுருக்கமாகக் கூறுகிறது. பத்மபுராணத்தில் (5.56.61-64) ஊரார் பழிப்பேச்சைக் கேட்டு, பரதனிடம் ஆலோசித்து, கானகத்தில் விட்டுவர பரதனை அனுப்புவதாக உள்ளது. வேறுசில புராணங்களிலும் இருக்கலாம். எப்படியாயினும் இப்புராணங்கள் குப்தர் காலத்தியவை (பொ.பி. 3 முதல் 5ம் நூற்றாண்டு) அல்லது அதற்குப் பிற்பட்டவை என்பதே வரலாற்றாசிரியர்களின் கருத்து.

எனவே, மகாபாரதம் அதன் முழுவடிவில் தொகுக்கப்பட்டதற்குப் பின்பும், மேற்கண்ட புராணங்கள் இயற்றப்படுவதற்கு முன்பும் ஆன இடைப்பட்ட காலத்தில் இந்தப் பிற்சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. சம்ஸ்கிருத மொழியில் அதற்குப் பின்வந்த ராமாயணக் காவியங்கள் பலவற்றில் உத்தரகாண்டம் இடம்பெறுகிறது. காளிதாசரின் ரகுவம்சத்திலும் (14,15ம் சர்க்கங்கள்) பவபூதி இயற்றிய உத்தர ராம சரிதம் என்ற அற்புதமான காவிய நாடகத்திலும், அபாரமான கவித்துவத்துடன் உத்தரகாண்டக் கதை கூறப்படுகிறது. குறிப்பாக, கருணை, சோகம் ஆகிய ரசங்களை வெளிப்படுத்துவதில் பவபூதியின் காவியம் நிகரற்றதாக மதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாம் பரவலாக அறிந்துள்ள கம்பராமாயணம் யுத்தகாண்டத்துடன், ஸ்ரீராம பட்டாபிஷேகத்துடன் முடிவடைகிறது. கம்பர் காலத்தில் (பொ.பி. 11ம் நூற்) உத்தரகாண்டம் ராமாயணத்தின் ஒரு பகுதியாக பெருமளவு நிலைபெற்றுவிட்டபோதும் அவர் அதனை எழுதாது விடுத்தார். ராமாயணத்தின் காவிய அமைதியைக் குலைப்பதாக அது உள்ளது என்று அவர் கருதியதே காரணம் என்று தோன்றுகிறது. ஒட்டக்கூத்தர் எழுதியதாக உத்தர ராமாயணம் என்ற நூல் வழங்கப்படுகிறது. (உண்மையான ஆசிரியர் வாணியந்தாதன் என்போரும் உளர்.) இது பரவலாகப் பயிலப்படுவதில்லை.

துளசிதாசர் (16ம் நூற்.) ஹிந்தி மொழியில் எழுதிய ஸ்ரீராமசரிதமானஸ் காவியத்தில் உத்தரகாண்டம் என்ற பகுதி உள்ளது. ஆனால், அதில் சீதையைத் துறந்தது, யாகம் செய்தது, சம்புகன் வதம் ஆகிய கதைகள் இல்லை. தர்மம், ஞானம், பக்தி, வைராக்கியம் குறித்த ஞான உபதேசங்களே பெருமளவு உள்ளன.

பக்தி இலக்கியங்களிலும், ராமரைக் குறித்த துதிப்பாடல்களிலும் மீண்டும் மீண்டும் முதல் ஆறு காண்டங்களில் உள்ள விஷயங்களேதான் வருகின்றன. உத்தரகாண்ட செய்திகள் அனேகமாக இல்லை, அல்லது மிகமிகக் குறைவாகவே உள்ளன. ‘சீதையை தாட்சண்யமின்றி கானகத்திற்கு அனுப்பியவனே’ என்று பாடுமளவுக்கு எந்த ராம பக்தனுக்காவது கல்நெஞ்சம் இருக்குமா என்ன? உதாரணமாக, ஒட்டுமொத்த நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 3-4 வரிகளில் மட்டுமே இக்குறிப்புகள் உண்டு (“செறிதவச் சம்புகன் தன்னைச் சென்றுகொன்று செழுமறையோன் உயிர்மீட்டு…” “மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்” – குலசேகராழ்வார்). தியாகராஜ கீர்த்தனைகளில் ஒன்றிரண்டு இடங்களில் ‘குசலவ ஜனகா’ போன்ற வரிகள் உண்டு. ராமபக்தர்கள் உணர்வுபூர்வமாக உத்தரகாண்டத்தை என்றுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

எனில், ஆதியில் இந்தப் பிற்சேர்க்கைக்கான பின்னணி என்னவாக இருந்திருக்கக்கூடும்?

முதன்மையாக, ராமாயணத்தை ஒட்டுமொத்த குல/வம்ச வரலாறுகளில் பொருத்தவேண்டிய தேவை. ஏனெனில், இந்தியாவின் பண்டைய மன்னர்கள் அனைவரும் (இதில் சேர சோழ பாண்டியர்களும் அடக்கம்) தங்களது குலமுறையை சூரிய / சந்திர வம்சங்களுடன் ஏதோ ஒரு வகையில் பொருத்திக் கொண்டனர். இது அவர்களுக்கு ஒரு மகத்தான பாரம்பரியப் பெருமையையும் தார்மீக உரிமையையும் அளித்தது. மகாபாரதத்திலும் புராணங்களிலும் நாம் பல இடங்களில் நீண்ட வம்சப் பட்டியல்களைக் காண்பது இதனால்தான். ஆதிகாவியமான வால்மீகி ராமாயணம், சூரிய வம்சத்தையும், சகரன், இக்ஷ்வாகு, திலீபன், ரகு போன்ற ராமரின் குலமுன்னோர்களையும் கூறுகிறதென்றாலும் அது அடிப்படையில் வம்சகாதைப் பாடல் அல்ல. மாறாக தர்மத்தின் திருவுருவமான ராமனின் சரித்திரத்தையும் அறத்தின் பாதையையும் கூறுவதே அதன் மையநோக்கம். அதனால் அது பட்டாபிஷேகத்துடன் நிறைவடைந்துவிட்டது. பிறகு, அதற்கு ஒரு வம்சகதைத் தொடர்ச்சி அளிப்பதற்காக உத்தரகாண்டம் சில நூற்றாண்டுகள் கழித்து வலிந்து இணைக்கப்பட்டது என்று தோன்றுகிறது.

லவனது வழியில் ஓரிரு தலைமுறைகளும் குசனது வழியில் அக்னிவர்ணன் ஈறாக நீண்ட ஒரு வரிசையையும் காளிதாசரின் ரகுவம்சம் கூறுகிறது. ஒரு காவிய அவலத்தைக் கொண்டு வருவதற்காக, அக்னிவர்ணனை காமத்திலும் குடியிலும் மூழ்கி அந்த ஒளிமிகுந்த பரம்பரைக்கே களங்கமாக வந்து சேர்ந்தவனாக கவி சித்தரிக்கிறார். ஆனால், இறுதியாக, பூமிக்குள்ளிருக்கும் விதைபோல அவன் மனைவியின் கருவில் சிசு வளர்ந்து வந்தது என்று காவியத்தை நிறைவு செய்கிறார்!

சத்ருக்னன் மதுரா நகரத்தை நிறுவிய காதை, கோசல நாட்டிலிருந்து மேற்கு நோக்கி இக்ஷ்வாகு வம்சத்தினர் விரிவடைந்ததைக் குறிக்கலாம். “குசனுடைய அழகிய தலைநகரம் விந்திய மலைச்சாரலில் குசாவதீ என்றும், லவனுடைய நகரம் ஸ்ராவஸ்தீ எனவும் புகழ்படைத்ததாயிற்று (உத்தரகாண்டம் 108.4,5) என்பதை வரலாற்று ரீதியாக இந்த நகரங்களில் புதிய அரசுகளும் ராஜவம்சங்களும் உருவாகி வளர்ந்ததுடன் தொடர்புப்படுத்தலாம். பேதி (Bedi), சோந்தி (Sondhi) ஆகிய பஞ்சாபி சமூகத்தினரும், அதனைச் சார்ந்த குருகோவிந்த சிங் அவர்களும் தன்னை ராமருடைய பரம்பரையில் வந்தவர்களாகப் பிரகடனம் செய்கின்றனர். லவன் உருவாக்கிய லவபுரி என்ற நகரமே பின்பு லாகூர் ஆயிற்று என்றும் ஒரு கருத்து உள்ளது. உத்தரகாண்டம் தென்னிந்தியாவைவிட வடஇந்தியாவிலேயே மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இத்தகைய கூறுகளே காரணமாகலாம்.

சரி, வம்சத் தொடர்ச்சியே உந்துதல் என்றால் லவகுசர்கள் இளவரசர்களாக அரண்மனையில் பிறந்து வளர்ந்ததாக சித்தரித்திருக்கலாம்; சீதையைக் கானகத்திற்கு அனுப்புதல் என்ற சோகமான பிரசங்கத்தை இணைப்பதற்கான தேவை என்ன என்று கேட்கலாம். அது பல்வேறு விதமான ஊகங்களுக்கு இட்டுச்செல்லும். கல்நெஞ்சத்துடன் கூட பிரஜைகளின் கருத்துக்கு மதிப்பளிக்கும் ‘மரியாதா புருஷோத்தமன்’ என்ற ஒரு அரசனின் ஆதர்சத்தை நிலைநிறுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம். இலக்கிய நோக்கில் பார்த்தால், மங்கலமாக முடியும் காதையை அதிலிருந்து திசைதிருப்பி கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் பாணியில், சோகத்தையும் சிதைவையும் குலைவையும் நோக்கி இட்டுச் சென்று முடிக்கும் வகையில் இந்தப் பிற்சேர்க்கை நிகழ்ந்திருக்கலாம். மனித மனத்தின் போக்குகள் விசித்திரமானவை.

‘உத்தர’ என்ற சொல்லுக்கு விடை என்றும் ஒரு பொருள் உண்டு. பிற்சேர்க்கைக்கான மற்றொரு உந்துதல் என்ன என்பதை நேரடியாகவே இப்பொருளிலிருந்து ஊகிக்கலாம். ஆதிகவியின் மனத்திலிருந்து இயல்பாகப் பொங்கிப் பெருகிய ராமகாதையை அவர் அவ்வாறே சுலோகங்களாக வடித்தார். ஆனால் பின்னால் அதை வாசித்தவர்களுக்கு பல இடங்களில் கேள்விகள் எழுகின்றன. உத்தரகாண்டம் இவற்றுக்கெல்லாம் திட்டமிட்டு விடையளிப்பது போல இருக்கிறது. சில உதாரணங்கள்: அ) கிஷ்கிந்தா காண்ட முடிவில், கடலைத் தாண்டுவது பற்றி வானரர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், ஜாம்பவான் நினைவுறுத்திய பின்பே ஹனுமானுக்குத் தன் மாபெரும் பலம் பற்றிய உணர்வு ஏற்படுகிறது. அந்த வர்ணனை மிக இயல்பானது. சக்திமான்களுக்கும் கூட அடுத்தவர் சொல்வதுவரை தன் பலம் தெரிவதில்லை என்ற சமாதானமே போதுமானது. அதெப்படி ஹனுமானுக்கு தன் பலம் முற்றிலுமாக மறந்து போகும் என்ற கேள்வி அங்கு இல்லை. ஆனால் உத்தரகாண்டத்தில், அந்தக் கேள்வியை வலிந்து எடுத்துக்கொண்டு, சிறுவயதில் முனிவர்களின் ஆசிரமங்களில் குறும்புத்தனங்கள் செய்ததால், முனிவர்கள் அவ்வாறு சாபமிட்டனர் என்ற விளக்கம் தரப்படுகிறது. ஆ) வாலி, ராவணனைத் தோற்கடித்து தன் வாலில் கட்டுமளவுக்கு வீரனாக இருந்தான் என்ற கதை வாலிவதத்திற்கு முன்பும் பின்பும் எங்குமில்லை. அது உத்தரகாண்டத்தில் வருகிறது. ராவணன் அதுவரை யாராலும் தோற்கடிக்கப் படவில்லை என்பது உண்மையல்ல என்று நிறுவுவதற்காகவே இது இணைக்கப்பட்டிருக்கலாம் இ) ராவண வதத்திற்கும் பட்டாபிஷேகத்திற்கும் பிறகு உத்தரகாண்டம் ராவணனின் பூர்வகதையை, குடும்ப வரலாற்றை, வெற்றிகளை, அவன் அடைந்த சாபங்களை மிக விரிவாகக் கூறவேண்டியதற்கான அவசியம் என்ன? அது தொடர்பாக முந்தைய காண்டங்களில் எழும் கேள்விகளுக்கு (எ.கா: சூர்ப்பணகை எங்கிருந்து வந்தாள் பிறகு எங்கே போனாள்?) விடைசொல்வதற்காகத்தான். எனவே, வால்மீகி ராமாயணம் அதன் முழுவடிவை அடைந்து பரவலானதுமே அதன் முதல்கட்ட வாசகர்களால் இதில் ஏதோ சொல்லாமல் விடுபட்டிருக்கலாம், தர்க்கபூர்வமாக இந்தக் காவியம் கச்சிதமாக இல்லை ஆகிய எண்ணங்களால் உந்தப்பட்டு ‘விடைகூறும் தன்மை’யுடன் பிற்சேர்க்கையாக இந்தக் காண்டம் இணைக்கப்பட்டது என்று கருத இடமிருக்கிறது.

ராமாயணம் என்ற வற்றாத ஜீவநதி நமது பண்பாட்டின். அறவாழ்வின், கலாசாரத்தின், தேசியத்தின் இடையறாத பிரவாகமாக என்றென்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. காலம்காலமாக எத்தனையோ கிளைகளும் சிற்றாறுகளும் அதில் கலந்தும் பிரிந்தும் தடம் மாறியும் இந்த மண்ணையும் அதன் மைந்தர்களையும் வளப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே உத்தர காண்டத்தையும் கண்டு அதனைச் சமநிலையுடன் ஒரு வழியில் புரிந்துகொள்ளும் முயற்சியே இக்கட்டுரை.

உதவிய நூல்கள்: 

[1] வால்மீகி ராமாயணம் உத்தரகாண்டம்: https://sanskritdocuments.org/mirrors/ramayana/valmiki/uttarakand_1.htm

[2] ரகுவம்ச மஹாகாவ்யம் (வே.ஸ்ரீ வேங்கடராகவாசார்யார் தமிழ் உரை)

[3] ஸ்ரீமத்வால்மீகி ராமாயண ஸாரம் – ஸ்ரீ அண்ணா, ராமகிருஷ்ண மடம்

Posted on 2 Comments

பரமார்த்த குருவும் பஞ்சதசீயும் | அரவிந்தன் நீலகண்டன்


பரமார்த்த குருவும் அவருடைய சீடர்களும் ஆற்றைக் கடந்தார்கள். பிறகு அவர்களில் எவரையாவது ஆறு விழுங்கி விட்டதா இல்லையா எனத் தெரிந்துகொள்ள அவர்கள் தங்களைத் தாங்களே எண்ணிக்கொண்டார்கள். அப்படி எண்ணும்போது எண்ணுகிறவர் அவரை விட்டுவிட்டு எண்ணியதால் ஒரு ஆள் குறைந்துகொண்டே இருந்தார். அவர்கள் எல்லோரும் ஆறு ஒரு ஆளை விழுங்கிவிட்டதே என்று அழுது புலம்பினார்கள். அப்போது அந்த வழியாக வந்த வழிப்போக்கன் விஷயத்தைக் கேட்டு, ‘எனக்கு யட்சிணி வித்தை தெரியும். செத்துப் போனவனைக் கொண்டு வருகிறேன். ஆனால் அதற்கு நான் மந்திரப் பிரம்பால் உங்கள் ஒவ்வொருவரையும் அடிப்பேன். அப்போது நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லி ஒன்று இரண்டு என்று சப்தமாக எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிக் காசு வாங்கிவிட்டு அவர்கள் ஒவ்வொருவரையும் அடித்தான். அவர்கள் அனைவரும் அடி வாங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அந்த வழிபோக்கனை கௌரவித்தார்கள்.

இது, கான்ஸ்டண்டைன் பெஸ்கி என்கிற கத்தோலிக்க மதமாற்றி எழுதிய ‘பரமார்த்த குருவும் சீடர்களும்’ கதையில் வருவது. சைவ ஆதீனங்களைக் கிண்டல் செய்வதும் அவர்களை அறிவற்ற மடையர்களாகக் காட்டுவதும் என எழுதப்பட்ட நூல். நாமும் இதை ‘சிறுவர் இலக்கியம்’ என்று பிரபலப்படுத்திக் கொள்கிறோம்.

இதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் மனதில் என்னென்ன பதிவுகள் ஏற்படக் கூடும் எனக் கொஞ்சம் சிந்திப்போம். நம்முடைய ஆச்சாரியர்கள், குருமார்கள் மடையர்கள். ஆறாவது மனிதனை விழுங்குவதாவது, தங்களில் ஒருவனை ஆறு விழுங்கிவிட்டது என்று எண்ணிக்கை கூடத் தெரியாமல் புலம்புகிறார்கள். அந்த வழிப்போக்கனும் இவர்களின் மடத்தனத்தை நன்றாகப் பயன்படுத்தி அவர்களை யட்சணி வித்தை என்று சொல்லி இவர்களிடம் பணம் பிடுங்கியிருக்கிறான். இவர்களும் ஏமாந்திருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு இருக்கக் கூடிய மூளை கூட இந்த ‘பரமார்த்த’ குருவுக்கு இல்லை. எதுவானாலும் ஒட்டுமொத்த இந்துக்களும் முட்டாள்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணங்களை இந்த ‘நகைச்சுவை’ கதை மூலம் நாம் நம் குழந்தைகளுக்கு விதைக்கிறோம்.

பெஸ்கி இத்தாலி நாட்டுக்காரர். இத்தாலியில் இதைப் போல சங்கைக்குரிய போப்பாண்டையைக் கிண்டலடித்து ஒரு சிறுவர் இலக்கியம் எழுதியிருந்தால் அன்னாரின் கதி என்னவாயிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்க்விசிஷன் என்கிற புனித விசாரணையில் அவர் ‘விசாரிக்கப்பட்டிருப்பார்’. ஆனால் இந்துக்கள் இளிச்சவாயர்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இந்த ’பரமார்த்த குருவும் சீடர்களும்’ கதையில் வரும் இத்தகைய நகைச்சுவை நிகழ்வுகளெல்லாம் ஏற்கெனவே பாரதமெங்கும் கதைகளாக நிலவி வந்தவைதான். இந்துப் பண்பாட்டுச் சூழலில் அவை வெறும் கதைகளாக மட்டுமல்லாமல் அதைத்தாண்டி அவற்றுக்குச் சில பயன்பாடுகள் இருந்தன. இதோ மேலே கூறிய கதையையே எடுத்துக் கொள்வோம்.

இக்கதையை பெஸ்கிக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஸ்ரீ பாரதி தீர்த்தரும் ஸ்ரீ வித்யாரண்யரும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆதி சங்கர பகவத் பாதரால் நிறுவப்பட்ட ஸ்ரீ சாரதா பீட வியாக்கியான சிம்மாசனத்தில் ஜகத் குருக்களாக இருந்த இவர்கள் இருவரும் பூர்வாசிரம சகோதரர்கள். இவர்கள் இணைந்து பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலகட்டம் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். அன்னிய மத ஆக்கிரமிப்பாளர்களால் தென் பாரதம் சூறையாடப்பட்டு வந்த காலகட்டம். வித்யாரண்யர் சன்னியாசியாக தர்மத்தைக் காக்க ஹக்க புக்கர்களைக் கொண்டு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். இன்றைக்கும் தென்னிந்தியாவில் கோவில் கோபுரங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றனவென்றால் அதற்கு காரணம் ஸ்ரீ வித்யாரண்யரின் செயல்முறை அத்வைதத்தின் விளைவுதான் அது.

இவர்கள் இருவரும் இணைந்து இயற்றிய அத்வைத சித்தாந்த நூல் பஞ்சதசீ. பதினைந்து பிரகரணங்களைக் கொண்டது என்பதால் அந்த பெயர். ஸ்ரீ வித்யாரண்யரின் நேரடி சீடர் ஸ்ரீ ராமகிருஷ்ண பண்டிதர். இவர் பஞ்சதசீ நூலுக்கு மிக அழகான விதத்தில் மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாக வடமொழி வியாக்கியான நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நூலின் ஏழாவது அத்தியாயத்துக்கு திருப்தி தீபம் என்று பெயர். 298 சுலோகங்கள் கொண்ட இந்த அத்தியாயம்தான் பஞ்சதசீயில் மிகப்பெரிய அத்தியாயம். ஆனால் இவ்வளவு பெரிய பிரகரணம் பிரஹதாரண்ய உபநிடதத்தில் உள்ள ஒரு சுலோகத்துக்கு வியாக்கியானமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் விசேஷம் என்கிறார்கள் பெரியவர்கள். இதில்தான் மேலே கூறப்பட்ட கதை சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி எனப் பார்ப்போம்.

நேரில் தெரியாதது நேரில் தெரிவது என்பதும், அறிவு அறியாமை என்பதும், இவ்விரண்டும் எப்பொழுதும் தெரிந்து கொண்டேயிருக்கிற பதார்த்தத்தில் கூட இருக்கலாம், பத்தாயிருப்பவனில் போல. (22)


பத்தாவது மனிதன், ஒன்பது என்கிற எண்ணிக்கையால் விவேகஞானமிழந்தவனாய் அப்பொழுது அந்த ஒன்பது பேர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் பிராந்தியால் தன்னைப் பத்தாவது பேர்வழியாக நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள்வதில்லை. (23)


தானே பத்தாவதாக இருக்கையில் ‘பத்தாவது மனிதன் காணவில்லை, அவன் இல்லை’ என்று அப்பொழுது நினைத்துக் கொண்டு சொல்கிறான். அதை அக்ஞானத்தினால் ஏற்பட்ட ஆவரணம் (மறைவு) என்று கருதுகிறார்கள். (24)


பத்தாவது மனிதன் நதியில் இறந்துவிட்டான்’ என்று துக்கப்பட்டு அழுகிறான். அழுவது முதலியதை அக்ஞானத்தினால் ஏற்பட்ட ‘விக்ஷேபம்’ என்று வித்வான்கள் அறிகிறார்கள். (25)


பத்தாமவன் இறக்கவில்லை. இருக்கிறான்’ என்று ஆப்தனுடைய வார்த்தையைக் கேட்டு அப்பொழுது மறைமுகமாய்ப் பத்தாவது மனிதனை அறிகிறான். (26)’நீயேதான் பத்தாவது’ என்று எண்ணிக் காட்டப்பட்டவுடன் நேரிலேயே அறிந்து, ஸந்தோஷத்தையே அடைகிறான். அழுவதில்லை. அழுவதை நிறுத்திவிடுகிறான். (27)


1.அறியாமை, 2. ஆவரணம், 3. விக்ஷேபம், (4. பரோக்ஷ ஞானம், 5. அபரோக்ஷஞானம் என்று) இருவித ஞானங்கள், 6. திருப்தி 7. துக்க நிவிருத்தி ஆகிய இவைகளை சைதன்யமான ஆத்மா விஷயத்திலும் சேர்க்க வேண்டும். (28)


விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தக் கதை வழக்கில் உள்ள கதை. வித்யாரண்யரும் பாரதி தீர்த்தரும் இதை எப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தை எத்தனை எளிமையாக எவரும் புரியும் வண்ணம் சொல்லப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இந்தக் கதையைக் குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம் அவர்களை மிக உயர்ந்த ஒரு உண்மையை அறியும் பாதையில் செலுத்தக் கூடிய ஒரு முன்னேற்பாடு இந்தப் பண்பாட்டுக்கல்விச் சூழலில் நிலவுகிறது. மீண்டும் அதே அத்யாயத்தில் வித்யாரண்யர் கூறுகிறார்:

’பத்தாவது மனிதன் இருக்கிறான்’ என்ற பரோக்ஷ ஞானம் பிராந்தியில்லாததாகக் காணப்படுகிறது. அதைப் போலவே ‘பிரஹ்மம் இருக்கிறது என்பதும் (பிராந்தியில்லாத பரோக்ஷஞானம்). (இரண்டிடத்திலும்) அறியாமையினால் ஏற்படும் மறைவு ஒரே விதம். (57)

’பத்தாவதாக நீயே இருக்கிறாய்’ என்பதினால் எப்படி (விசேக்ஷத்தை நேரில் கிரகிக்கும் அறிவு ஏற்படுகிறதோ) அப்படியே ‘ஆத்மாவே பிரஹ்மம்’ என்ற வாக்கியத்தின் தாத்பர்யத்தை பாக்கியன்னியில் (எவ்வித ஸந்தேஹத்திற்கும் இடமன்னியில்) தீர விசாரணை செய்த பிற்பாடு (தானே ப்ரஹ்மம் என்ற பிரஹ்ம ஸ்வரூப) விசேஷம் நேரில் கிரஹிக்கப்படுகிறது. (வாக்கியத்தினால் பரோக்ஷ ஞானமும் அதே வாக்கியத்தின் அர்த்தத்தை நன்கு விசாரித்துப் பார்த்தோமானால் விசாரத்துடன் கூடைய அதே வாக்கியத்திலிருந்தே அபரோக்ஷ ஞானம் ஏற்படுகிறது. (58)

’பத்தாவது யார்?’ என்று கேட்டதற்கு ’நீயே தான்’ என்று பதில் வந்தவுடன், தன்னையும் சேர்த்து எண்ணிப் பார்த்துக் கொண்டு தான்தான் பத்தாவது என்று அறிகிறான்’ (59)

’நீதான் பத்தாவது’ என்ற வாக்கியத்தினால் ‘தான் பத்தாவது’ என்று ஏற்படும் இவனுடைய அறிவு அடிபட்டு போவதில்லை. முதலிலோ, நடுவிலிருந்தோ, கடைசியிலிருந்தோ எப்படி எண்ணிய போதிலும் ‘ஒன்பது பேர்தான்’ என்கிற ஸந்தேஹம் (மறுபடியும் ) ஏற்படுவதில்லை. (60)

’ஸத்தாகவேயிருந்தது’ இது முதலான வாக்யத்தினால் பிரஹ்மத்தின் ஸத்த்வம் (இருக்கிற வஸ்து என்ற தன்மையை) பரோக்ஷமாக கிரஹித்துக் கொண்டு, ‘தத் த்வம் அஸி’ (நீ அதுவாய் இருக்கிறாய்) இது முதலான வாக்கியத்திலிருந்து விசேக்ஷமாக (நானே ப்ரஹ்மம் என்று அத்விதீய பரஹ்மஸ்வரூபமான ஆத்மாவை) அறியலாம். (61)

ஆக இந்தக் கதையிலிருந்து வித்யாரண்யர் எங்கே செல்கிறார் என்பதைக் கவனியுங்கள். முட்டாள்கள் என அந்த வழிப்போக்கனை இழிபகடி செய்யவில்லை. மாறாக அவனிடம் இருக்கும் அதே அறியாமையின் மற்றொரு நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறார். பொதுவாகவே நல்ல நகைச்சுவை என்பதில் ஒரு சுய விமர்சனம் இருக்கும். பிறர் ஏளனம் இருப்பது மோசமான நகைச்சுவை. அது சிரிப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெறுப்பை விளைவிக்கும். இங்கு ஒரு சாதாரண கதை உலகின் ஒரு மிக பெரிய சத்தியத்தை – தத் த்வம் அஸி – என்கிற பேருண்மையைச் சுட்டப் பயன்படுகிறது.

கான்ஸ்டண்டைன் பெஸ்கிக்கு இந்த ’ஆறு விழுங்கிய பத்தாவது ஆள்’ கதை ’கோதம் நகரின் அறிவாளி மக்கள்’ என்கிற பிரபல ஐரோப்பிய நூலில் இருந்து கிடைத்திருக்கலாம். கோதம் என்கிற நகரின் வழியே அரசன் சாலை அமைக்கத் திட்டமிட்டான். அதற்கு வரி கட்ட வேண்டி வரும் என்பதுடன் அதைப் பராமரிக்கும் செலவு தங்களுக்கு ஏற்படும் என்பதால் அப்படி ஒரு சாலை அமைவதைத் தடுக்க அந்த நகர மக்கள் தாங்கள் பெரும் பைத்தியக்காரக் கூட்டம் என்பது போல் காட்டிக்கொண்டார்களாம். அக்காலத்தில் பைத்தியம் என்பது தொத்து என்கிற அச்சம் இருந்ததால் சாலை அமைக்கும் திட்டமே இதனால் கைவிடப்பட்டதாம். உண்மையோ பொய்யோ இந்த நகர மக்கள் வேடிக்கை விநோதமாக நடந்தார்கள் என்பது ஒரு நூலாக மாறியது ஆண்ட்ரூ போர்ட் (1490-1549) என்கிற யாத்திரீகரால் எனக் கருதுகிறார்கள். இந்தக் கதையில் இதே போலப் பிரம்படிபடும் கதை வருகிறது. ஆனால் அதில் பிஷப் எவரும் பகடி செய்யப்படவில்லை. பரமார்த்த குருவின் கதைகளை ஆங்கிலத்தில் 1822ல் மொழி பெயர்ப்பு செய்த பெஞ்சமின் பாபிங்க்டன் இக்கதை இந்துச் சாமியார்களைப் பகடி செய்ய எழுதப்பட்டது என்கிறார். தோமா வழி கிறிஸ்தவமே இந்து மதம் என்பது போன்ற பரப்புரைகளைச் செய்யும் ஜான் சாமுவேல் இயக்குநராக இருக்கும் ‘ஆசிய ஆராய்ச்சி மையம்’ (Institute of Asian Studies) வெளியிட்ட நூலில் இன்னும் ஒரு படி மேலே சென்று பரமார்த்த குரு கதை பகடியாக இருந்தாலும் கூட அது ‘கல்விச் செயல்பாடுகள் பரமார்த்த குரு போன்றவர்களால் கூடக் கையாளப்படும் விதமாக இருந்தது என்கிற அடிப்படை உண்மையைக் காட்டுகிறது’ (1998) என்று நகைச்சுவைப் பகடிக்குள்ளிருக்கும் விஷச்சுவை வெளியே வருகிறது.

தன்னை எண்ணாமல் ஆற்றில் மூழ்கி விட்டதாக அழும் கதை வித்யாரண்யரால் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு மற்றொரு விதத்தில் முக்கியத்துவம் அடைகிறது. ஏனெனில் இதுவே முதன் முறையாக அந்தக் கதை இலக்கியத்தில் பதியப்படுவதாகத் தெரிகிறது. வித்யாரண்யரின் அருளாசியால் உருவாக்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்ஜியத்துடன் ஐரோப்பியம் வர்த்தக உறவு வைத்திருந்ததை அறிவோம். இந்த உறவின் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றுள் இது போன்ற வழக்கு கதைகளும் ஐரோப்பா சென்றிருக்கின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு நகைச்சுவையையும் பகடியையும் தாண்டவில்லை, அவை மீண்டும் இந்துஸ்தானத்துக்கு வந்திறங்கியபோதோ அவை இந்து மதக் குருமார்களையே பகடி செய்யவும் இந்து சமுதாயத்தையும் வரலாற்றையும் கீழ்மைப்படுத்தவுமான ஒரு கதையாடலுக்கு விதையாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தக் கதையை நம் குழந்தைக்கு வித்யாரண்யரின் பார்வையில் சொல்லிக் கொடுத்தால் அந்தக் கதையும் குழந்தையின் தேடலுடன் மலரும், வளரும். அதே நேரத்தில் ‘பரமார்த்த குரு’ கதை மூலம் அதே கதையை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் இந்தக் கதையின் ஆழமும் பண்பாட்டுப் பயன்பாடும் இல்லாமல் போய்விடும். சுய பண்பாட்டு வெறுப்பை மட்டுமே அந்தக் கதை கொடுக்கும். கான்ஸ்டண்டைன் பெஸ்கியின் இறுதி நோக்கமும் அதுதான். இந்துக்கள் தம் பண்பாட்டை, தம் சமயக்குரவர்களை இழிவாக நோக்க வேண்டும். இந்தக் கதைகள் அதற்கான மனமண்டலங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன. இத்தகைய சூழலில் வளரும் குழந்தை ஒரு இலக்கியவாதியாக மாறும்போது அது சித்தரிக்கும் பாரம்பரிய மடங்கள் மடையர்களால் ஆனதாக இருக்கும். நம் பண்பாட்டின் மகோன்னதங்களைக் கூட மார்க்சிய காலனியப் பார்வையில் உள்வாங்கி அது இலக்கியப் பிரதியாக வெளிப்படும்போது நம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரம்பரிய மடங்கள் ஏளன நகைச்சுவையுடன் வெளிப்படும். அசட்டு ஆழ்வார்கள், ஏமாற்றுக்கார போஜனப் பிரிய பிராம்மண அதிகார வெறியர்கள் எனக் கதை மாந்தர்கள் உருவாக்கப்படுவார்கள். வரலாறே இப்படித்தான் இருந்ததென நம்மை அறியாமலே நாம் நம்ப ஆரம்பிப்போம்.
பொய்மையின் வெறுப்பின் ஊற்றுக்கண் விதைகள் நம் காலனிய வரலாற்றின்போது ரொம்பவே நம்மிடம் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் ஜாக்கிரதையாகவே அவற்றை எடுத்து வைக்க வேண்டியுள்ளது.

பஞ்சதசீ – ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய தமிழ் உரையுடன். வெளியீடு: ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ரப்ரதிஷ்டா டிரஸ்ட், 2010  (சென்னையில் கிடைக்குமிடம்: Sri Vidyatheertha Foundation, GB, Sai Karuna Apartments, 49, Five Furlong Road, Guindy, Chennai – 600032 Phone: 097899 99160) 

Posted on Leave a comment

வலம் நவம்பர் 2018 இதழ் – முழுமையான படைப்புகள்

வலம் நவம்பர் 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

மாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு

யார் குரு? | சுமதி ஸ்ரீதர்

ஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்

அறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் – 2  | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

நாடி ஜோதிடம் – புரியாத புதிரா? |  அரவிந்த் சுவாமிநாதன்

பொருத்தம்  (சிறுகதை) | இரா.இராமையா

சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்

Posted on Leave a comment

சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்

“எந்த ஊர் நீங்கள் எல்லாரும்?” என்று சீனமொழியில் கட்டைக் குரலில் கேட்ட டாக்சி ஓட்டுநரிடம் “இந் து” என்றேன். “ஓ..” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார். சீன மொழியில் இந்தியர்களை “இந் து” என்றுதான் அழைப்பார்கள். “மோதி.. மோதி… நலமா?” என்றார்.  “நலமாக இருக்கிறார்” என்றேன். மோதியைப் பற்றி எதோ சிரித்துக்கொண்டே சொன்னார். நான், மாண்டரின் எனக்குக் கொஞ்சம்தான் தெரியும், சில வார்த்தைகள்தான் பேசமுடியும், நீங்கள் சொல்வது எனக்கு முழுவதும் புரியவில்லை என்றேன். அவர் “பரவாயில்லை… நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள்” என்றார். இந்தப் பயணம் முழுவதுமே நான் சந்தித்த அத்தனை பேரும், எனக்குத் தெரிந்த சீன மொழியில் பேச முயற்சி செய்த போதெல்லாம், ஒரே ஆச்சரியமும் வியப்புடனும் என் சொற்பிழைகளை எல்லாம் விடுத்து என்னைப் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு ஆங்கிலத்தைவிட சீன மொழியில் பேசுவதே சௌகரியமாக இருந்தது.

சீனாவில் காலடி வைத்ததிலிருந்து முதலில் தெரிவது கடலலை போன்று அலை அலையாக முகங்கள் முகங்கள், எங்கும் முகங்கள். குழந்தைகளுக்கு ஈடாக வயது முதிர்ந்தவர்களும் ஏராளமாகத் தென்பட்டனர். முதியவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியத்துடன், உடல் தளர்வின்றி இருப்பதாகப்பட்டது. அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது, எல்லோருமே ஒரு மாதிரி இரைந்து சத்தமாகப் பேசுவதாகப் பட்டது. சாலை நடுவில், பக்கத்தில் நிற்பவரிடம் கூட சாதாரணமாகப் பேசுவதைவிடக் கொஞ்சம் சத்தமாகவே பேசிக் கொள்கிறார்கள். மேலும், இருவர் பேசும்போது, அவர்கள் பேசுகிற தொனியை மட்டும் கவனித்தால் கிட்டத்தட்ட சண்டை போட்டுக் கொள்வது போலவும், சிறிது நேரத்தில் இவர் அவரை அடித்து விடுவாரோ என்றும் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் சாதாரணமாகத்தான் ஏதாவது சாப்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

பீஜிங்கில் அகலமான சாலைகள். எட்டு அல்லது பத்து வழிச் சாலைகள் அதிகம் தென்பட்டன. நகரைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து வட்டச்சாலைகள் அமைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓரிடத்தில் நாங்கள் சென்ற ஒரு எட்டு வழிச்சாலை திடீரென்று முட்டுச் சந்தாகி விட்டது. அது இன்னும் முழுவதுமாக அமைக்கப்படவில்லை, பணிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். பீஜிங் நகரத்துக்குள் பெரிய சாலையமைப்பு பணிகள் எதுவும் நடக்காவிட்டாலும், அங்கங்கே பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காகவென்றே மேலும் பல கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.

சாலைகளில் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பெரும்பான்மையான மக்கள், சைக்கிள், மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையே உபயோகிக்கின்றனர். அதுவும் ஒவ்வொரு சாலையிலும் ஆயிரக்கணக்கில் இது போன்ற எலக்ட்ரிக் சைக்கிள்கள் இரைந்து கிடக்கின்றன. இரு பெருநிறுவனங்கள் இந்த சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். யாரும் சைக்கிள்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. மொபைல் செயலியில் சைக்கிள் மீது உள்ள கோட்-ஐ (Code) ஸ்கேன் செய்து இயக்கினால் சைக்கிள் பூட்டு திறந்து கொள்கிறது. பின்பு எவ்வளவு தூரம் செல்லவேண்டுமோ சென்ற பின் அங்கேயே சைக்கிளை விட்டுவிட்டுச் சென்று விடலாம். எவ்வளவு தூரம் சென்றோமோ அதற்குரிய தொகை நமது கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு விடும். குளிர் காலத்தில் சைக்கிளில் செல்வதற்கு சைக்கிள் மீது கோட் (Coat) மாதிரி ஒன்றைப் போடுகிறார்கள்.

சைக்கிளைத் தவிர பயணம் செய்வதற்கு ஊபர் மாதிரியான டாக்சிகளும், சப்வே ட்ரெயினும் செயல்படுகின்றன. இது தவிர பேருந்துகளும் உள்ளன. பேருந்துகள் சில இடங்களில் மின்சார ரயில் போல் மேலே மின்கம்பிகளைத் தொட்டுக் கொண்டும், அது இல்லாத இடங்களில் டீசலிலும் செல்லுகின்றன. எல்லோரும் பயமுறுத்தியதைப் போல, மாசு, புகை, மூச்சுத் திணறல் எதுவுமே நான் சென்ற பகுதிகளில் இல்லை. அங்கேயே வாழும் சீனர்களில் பலர் கூட மாசைக் கட்டுப் படுத்தும் மாஸ்க் அணிவதைப் பரவலாகக் காணமுடியவில்லை. ஓரளவு மாசு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. சாலையில் கண்ட மற்றொரு விஷயம், நடந்து செல்பவர்களுக்கு அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் சிக்னல் இல்லாதபோதும் குறுக்கே சாலையைக் கடக்க முயற்சிக்கும்போதும், யாரும் கோபப்பட்டு ஹாரன் அடித்து எரிச்சலை வெளிப்படுத்தவே இல்லை. பொதுவாகவே பல நிமிடங்கள் சாலையில் காத்திருக்கும்போதும், திடீரென்று யாராவது குறுக்கே செல்ல நேரிட்டாலும் யாரும் கோபப்படவே இல்லை.

*

அமெரிக்க நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் தனியாகவும், கடைகளும் அரசு அலுவலகங்களும் தனியாகவும் இருக்கும். ஆனால் பீஜிங்கில் நமது இந்திய நகரங்களைப் போலவே குடியிருப்புப் பகுதிகளும், அலுவலகங்களும் பெருவிற்பனைச்சாலைகளும் (mall) அருகருகே இருக்கின்றன. தெருக்களின் பெயர்கள், சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் உள்ளன. ஆனால் கடைகள், விற்பனைப் பொருட்கள், எதிலுமே சிறிதும் ஆங்கிலம் கிடையாது. ஓரிடத்தில் கொஞ்சம் பாலும் தயிரும் வாங்கலாம் என்று சென்றேன். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் தயிர் என்றால் அதில் இனிப்பு சேர்க்கப்பட்டது மட்டுமே கிடைக்குமாம், வெறும் தயிர் கிடைப்பதில்லை. எங்கும் அசைவ மயம். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தானே சமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

சீனாவின் மக்கள் தொகையோ நூற்று முப்பது கோடி. அவர்களில் நூறு கோடிப் பேர் அசைவம் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், எத்தனை கோடி மிருகங்கள் தினமும் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன, ஒரு வருடத்தில் எத்தனை மிருகங்கள் அழியும் என்று கணக்கிட்டால் வியப்பாக இருந்தது.

பீஜிங் நகரத்தில் கே.எஃப்.சி, மெக்டோனாட்ஸ் போன்ற உணவகங்களில் பன்றிக் கறி கிடைக்கிறது. இந்த உணவகங்கள் எல்லாமே உள்ளூர் பாணியில் உள்ளன. வால்மார்ட் போன்ற பெருவிற்பனைக் கூடங்களில் உயிருடன் உள்ள கடல் வாழ் உயிரினங்களை விற்கிறார்கள். சீனர்கள் உணவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எல்லா வீதிகளிலும் ஒன்றிரண்டாவது உணவகங்கள் உள்ளன.

சீனாவிலிருந்து ஆங்கிலேயர் எப்படித் தேயிலை பயிர்களைத் திருடி இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் என்ற வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து நண்பர்களுடன் பேசினோம். இரண்டாம் உலகப்போரின்போது சீனப் போர்க் கைதிகளை நமது உதக மண்டலத்திற்குக் கொண்டுவந்து தேயிலை பயிரிட ஆங்கிலேயர் பயன்படுத்திய விவரம் குறித்தும் பேசினோம். ஹுவான் சுவாங், இ சிங் போன்ற யாத்திரிகர்கள் குறித்து பேச்சு தொடர்ந்தது. ஹுவான் சுவாங் நன்கு அறியப்பட்டவர், பள்ளிகளில் பாடங்களில் அவரது பயண விவரங்கள் உண்டு என்று எங்கள் சீன நண்பர் தெரிவித்தார்.

*

இரும்புத் திரை நாடு என்பார்கள். சீனாவிற்கு செல்லும்முன்பே எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்று விரிவாகச் சொல்லி இருந்தார்கள். மதத்தைப் பரப்புதல், மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வருகிறவர்கள், சந்தேகப்படும் வகையில் நிறைய பிரசுரங்கள் புத்தகங்கள் எடுத்து வருகிறவர்கள் போன்றவர்களைக் கூட சீன நாட்டுக்குள் உள்ளே நுழைய விடமாட்டார்கள். பௌத்த விஹாரங்கள் கூட சுற்றுலா செல்லும் இடம் போலச் செயல்படுகின்றன. சர்ச்சுகளும் அப்படித்தான். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பிஷப்புகள் வாடிகனின் பிரஜைகள், அவர்கள் எதாவது குற்றச்செயலில் ஈடுபட்டாலும் முதலில் வாடிகனில் அனுமதி வாங்கித்தான் கைது செய்ய முடியும் என்று சொல்வர். ஆனால் சீனாவில் சர்ச் அந்நாட்டு கம்யூனிச அரசுக்கே தன் விசுவாசம் என்று அறிவித்துவிட்டுத்தான் செயல்படுகிறார்கள். சீனர்களிடையே பெரும்பாலான கிறிஸ்தவ மதமாற்றம், தாய்வானிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் வருகிற சீனர்களிடமிருந்தே ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில், டிவி சானல்கள் எல்லாமே சீன மொழியில்தான் இருந்தன. பிபிசி மற்றும் CNBC சேனல்கள் மட்டுமே ஆங்கிலம். அதிலும், செய்திகளில் சீனா குறித்து ஏதேனும் செய்தி இருந்தால் உடனே அந்த சானல் பல நிமிடங்களுக்குக் கருப்பாகி முடங்கி விடுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில்தான், ஹாங்காங்கில் ஒரு மாணவர் குழு, தொழிலாளர்களுக்காகப் போராட்டத்தில் இறங்கி இருந்தது; பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை ஒருவர் புகார் அளித்தும், அவரே கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் செய்திகள் பிபிசியில் வரும்போதெல்லாம் முடங்கியது. சீன மொழி சானல்களில் நான் பார்த்தவரை எல்லாமே நேர்மறையான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. ஒரு கிராமத்தில் எப்படி விவசாயம் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளது, எப்படி அங்கே எல்லாரும் செல்வந்தர்கள் ஆகி வருகிறார்கள் என்பது மாதிரியான செய்திகளே. சைனா டெயிலி போன்ற செய்தித் தாள்களிலும் இதே நிலைதான். உலகச் செய்திகளில் கூட எப்படி எல்லா நாடுகளும் சைனாவுக்கு சாதகமாக உள்ளன, அல்லது எதிராக நடந்துகொள்ளும் நாடுகள் எச்சரிக்கப்படுகின்றன என்பது போன்ற செய்திகளே காண முடிந்தது.

நான் பழகிய அளவில் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. இந்தியாவைக் குறித்து மிகக் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். நமக்கு பாகிஸ்தான் போல, சீனாவுக்கு ஜப்பான். ‘பொதுவாக நாங்கள் ஜப்பான் குறித்து எதுவும் பேசவே மாட்டோம். ஜப்பான் மீது ஆழ்ந்த வருத்தமும் கோபமும் உள்ளது’ என்றார் என் நண்பர்.

*

நாங்கள் சென்றிருந்த நேரம் Moon festival என்ற பண்டிகைக் கொண்டாட்டம். இந்தியாவில் புரட்டாசி பௌர்ணமி தினத்தை சரத் பூர்ணிமா என்று கொண்டாடுவர். சீனாவில் இந்த நாள் ஒரு அரசு விடுமுறை நாள். மதம், நம்பிக்கைகள் என்று எதுவும் இல்லாமல் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அதற்கு முதல்நாள் சீனப் பெருஞ்சுவரைக் கண்டு வந்திருந்தோம். சீனப் பெருஞ்சுவர் சிறிய குன்றுகளின் மீது வளைந்து வளைந்து செல்கிறது. பல இடங்களில் அதற்கு அடியில் சுரங்கம் (tunnel) அமைத்தும், சில இடங்களில் அதன் குறுக்கேயும் சாலைகள் அமைத்துள்ளனர்.

நாங்கள் சென்ற பகுதியில், இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களைப் போன்றே கசகசவென்று கடைகள். ஆனால் நடைபாதைகள் படு சுத்தமாக இருந்தன. சுவரின் மீது ஏறி நடந்து செல்ல பல படிகள் ஏற வேண்டி இருந்தது. பல இடங்களில் புதிதாக சிமென்ட் / கான்க்ரீட் போட்டுப் பராமரித்திருந்தனர்.  ஒரு பக்கம் ஒரு காவல் கோபுரத்தில் இருந்து இன்னொரு காவல் கோபுரத்துக்கு ஓட்டப்பந்தயம் கூட நடந்து கொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களில், டிக்கட் வாங்கும்போது இந்தியர்களுக்கு ஒரு விலை, வெளிநாட்டினருக்கு ஒரு விலை என்று வைத்திருப்பார்கள். அப்படி எதுவும் இங்கே இல்லை. எல்லாருக்குமே ஒரே விலைதான்.

அதற்கும் முந்தைய தினம், பேலஸ் ம்யூசியம் என்கிற Forbidden Cityக்கு சென்றோம். (அண்மையில்தான் மோதி இங்கே வந்து சென்றார்). தஞ்சை பெரிய கோவிலைப் போல நான்கைந்து மடங்கு பெரிய அரண்மனை இது. ஒரு காலத்தில் அரச குடும்பம் வாழ்ந்த இடம். மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டின்கூரை அமைப்பை வைத்தே ஒருவரின் சமூக மதிப்பை கூறிவிடலாமாம். சாதாரண மக்கள் வீட்டுக் கூரைகள் கருப்பு/பழுப்பு நிறத்தில் இருக்கும். அரசர்களின் வீடுகள் மட்டும் கூரை மஞ்சள் நிறத்தில் பொன்னைப் போன்று இருக்குமாம். இங்கேயும் அரண்மனைக்குள் அப்படித்தான் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. அகன்ற ஒரு மைதானம், அதைக் கடந்ததும் அகழி, அதைத் தாண்டியதும் காவல் கோபுரங்களுடன் கோட்டைக் கதவு, அதைப் பூட்ட உபயோகிக்கும் பன்னிரண்டு அடி நீள ஒற்றை மரத்துண்டு, அதற்குப் பின் அரச தர்பார். அங்கே தரையில் டிராகன், சிங்கம், புலி போன்ற படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அரசர்கள் அதன் மீது நடந்தது வருவார்களாம். அங்கங்கே ஐந்தடி அகலம், ஆறடி ஆழம் என்ற அளவில் பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்கள், நீர் சேமிக்கவாம். அரசர்கள் உபயோகித்த பொன்னாலான சிம்மாசனங்கள் கூட அங்கே வைத்திருக்கிறார்கள்.

சென்ற இடமெல்லாம் ஏராளமான கூட்டம், முக்கியமாக கொரியர்கள் நிறைய இங்கே சுற்றுலா வந்திருப்பதைக் காண முடிந்தது. ஓரிரு இந்தியர் குழுவையும் கண்டேன்.

அடுத்து நான் பார்த்த பகுதி, சீனாவின் தேசிய அருங்காட்சியகம். இங்கே சீனாவில் கிடைத்த பழங்காலப் பொருட்கள், பழங்கால மக்களின் எலும்புத் துண்டுகள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் உபயோகித்த புத்தகங்கள், மூங்கில் துண்டுகள் என்று பலவும் இருக்கின்றன. ஏராளமான வெண்கலம், தங்கம், பிற உலோகங்களில் செய்த விதவிதமான புத்தர் சிலைகள், பௌத்த மதத் தேவதைகளின் பிரதிமைகள் பலவும் இங்கே அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கின்றன. அவற்றின் பெயரை சம்ஸ்க்ருத உச்சரிப்பு மாறாமல் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நான் பேசிய பல சீன நண்பர்களுக்கு இந்து மதம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு பௌத்தம்தான் மிகவும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. பாலி மொழி குறித்து ஒரு சீன நண்பர் பல விவரங்கள் கூறினார். ஆனால் அவருக்கு சம்ஸ்க்ருதம் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தேசிய அருங்காட்சியகத்திற்கு அருகிலேயே தியானன்மென் சதுக்கம், அரசினர் மாளிகைகள் பலவும் உள்ளன. என்னுடன் வந்த சீன நண்பர் பயபக்தியுடன்  இங்கேதான் சேர்மன் இருக்கிறார். இதற்கு முன்பு சேர்மன் மாவோ இங்கிருந்துதான் அலுவல்களைக் கவனிப்பார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். 1989ம் ஆண்டு நிகழ்வுகளைப் பற்றி லேசாகக் கேட்டேன், அது எப்போதோ பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்தது, இப்போது அதெல்லாம் யாருக்கும் நினைவில் கூட இருப்பதில்லை என்று நகர்ந்து விட்டார்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாதுகாப்பும் பலமாக உள்ளது. எக்காலத்திலும் பாஸ்போர்ட், ஐடி கார்டு இல்லாமல் செல்லக் கூடாது. யாரையும் எங்கேயும் நிறுத்தி சோதனை செய்வார்கள். ஏன் இத்தனை பலமான சோதனைகள், இங்கே தீவிரவாதிகள் குறித்து பயமா என்றேன். தீவிரவாத நிகழ்வுகளை விட, ஏதாவது போராட்டங்களே அடிக்கடி நிகழும், உடனே காவல்துறை வந்து அடக்கிவிடும் என்றனர். நான் சென்ற ஒரு வாரத்துக்குள் எனக்கு அப்படி எதுவும் சிக்கலான அனுபவம் நேரவில்லை.

இந்திய நகரங்களில் பெரும்திரளான மக்களின் நடுவே இருக்குபோது ஒரு நிம்மதியற்ற நிலை இருப்பதாக எனக்குப் படும். எதிலும் ஒரு அச்சம், தற்காப்பு, சுயலாபம், உயர்ந்தது தாழ்ந்தது என்று உணரமுடியாத நிலை, அலட்சியம் எல்லாம் தென்படும். பீஜிங்கில் நான் பார்த்தவரை, எரிச்சல்படாத டாக்சி ஓட்டுநர்கள், அவசரப்படாத வாகனங்கள், பொதுமக்களிடம் விதிகளை மீறாத பழக்கங்கள் இவையே என்னைக் கவர்ந்தன. நாட்டின் தலைநகரமாகையால் இப்படி இருக்கலாம், வேறு பல நகரங்களையும் கிராமங்களையும் சுற்றித் திரிந்து பார்த்தால்தான் அந்த மக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

Posted on Leave a comment

பொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா

கல்யாண மண்டபத்தில் ‘மணமகன்’ அறையில் நான், அம்மா, அப்பா மூவரும் அமர்ந்திருந்தோம். உள்ளே குளியலறையில் அண்ணன்.

“என்னை எல்லாரும் அவமானப்படுத்தினா நான் கிளம்பி வேணும்னா போயிடுறேன்” என்றார் அப்பா.

“போயிட்டா பரவாயில்லையே” என்றான் அண்ணன் உள்ளிருந்து.

வெளியே நாதஸ்வரச் சத்தம் கேட்டது. நிச்சயதார்த்தத்திற்கு அதிக நேரம் இல்லை.

“எல்லா வீட்லயும் புருஷன் சொன்னா கேக்குற பொண்டாட்டி உண்டு” என்றார் அப்பா விரக்தியுடன்.

எனக்கு ரத்தம் கொதித்தது.

“எதுக்கு அம்மாவ இழுக்குற?” என்று கத்தினேன். “அவ என்ன பண்ணா உனக்கு?”

“டாய், நீ சும்மா இர்ரா,” என்றான் அண்ணன் உள்ளிருந்து. “நீ ஒண்ணும் அம்மாவக் காப்பாத்த வேண்டாம்.”

சற்று நேரத்தில் அண்ணன் வெளியே வரும் போது அப்பா அம்மாவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தார். அண்ணன் என்னை நோக்கிப் பாய்ந்தான். அவன் என் சட்டையைப் பிடிக்கும் தருணம் யாரோ கதவைத் தட்டினார்கள்.

ஐயர்.

“புஷ்பம் கொஞ்சம் வேணும்; அப்புறம் ரெண்டு தாம்பாளம்…” என்று இழுத்தார். அப்பா இன்னும் அம்மா பின்னால். அண்ணன் அவனே பார்த்து வாங்கிய என் புதுச் சட்டையில் இருந்து கையை எடுத்தான்.

*

ஏழாம் வகுப்பு விடுமுறையில் திருவாரூர் சென்றிருந்தோம். அங்கே பஸ் ஸ்டாண்டில் நல்ல கூட்டம். எதிர் வெயில். பஸ்சும் வரவில்லை. அப்பாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ருதி ஏறிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், ஒருவேளை பஸ் வந்தால் நான் ஜன்னலோரமா இல்லை அண்ணனா என்று ஒரு சிறு தகராறு தொடங்கியது. அங்கேயே வழக்கம் போல கத்திக் கொண்டோம்.

யாரும் எங்களைக் கவனிக்கக் கூட இல்லை. அப்பா இதுபோன்ற தகராறுகளை பொதுவாக இருவரையும் நாலு சாத்துச் சாத்தித் தீர்த்து வைப்பார். அன்றும் அதே போல நடு பஸ் ஸ்டாண்டில் செய்யப் போய் சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அம்மா தள்ளிப் போய் நின்று கொண்டாள்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எங்கள் குடும்ப அடிதடிகள் வீட்டிற்குள்தான் என்று முடிவெடுத்து கஷ்டப்பட்டுச் செயல்படுத்தியும் வந்தோம். நாலு பேராக வெளியே கல்யாணம் கார்த்தி என்று போனால் உறவினர் வீட்டில் தங்க மாட்டோம் – தனியாக ஓட்டலில் அறை எடுத்து அடித்துக் கொள்வோம்.

*

நிச்சயதார்த்தம் முடிந்து எல்லோரும் குலாவிக் கொண்டிருந்த நேரம். அண்ணன் அண்ணியுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது எங்களைப் பார்த்துக் கொண்டான். எங்கள் நால்வருக்குள்ளும் ஒரு இனம் தெரியாத பதற்றம் இருந்தது.

அப்பா, திடீரென்று என்னைக் கூப்பிட்டார். அண்ணனின் மாமனார் ஏதோ கேட்க வேண்டுமாம்.

“தம்பி எங்க இஞ்சினீர் படிச்சீங்க?” என்றார் அண்ணனின் மாமனார்.

அவர் பேசுவது முனகுவது போல இருந்தது. குரலே மேல் எழும்பவில்லை.

“திண்டுக்கல்” என்றேன்.

அவர் திரும்பி தம் மனைவியிடம் ஏதோ முனகினார். அந்த அம்மையார் என்னைப் பார்த்து அதைவிட சன்னமான குரலில் ஏதோ கேட்டார்கள். அவர் முகத்தில் சாந்தம் தவழ்ந்தது.

நான் அவர்களிடம் விடுபட்டு அண்ணன் அருகில் போனேன்.

“என்னடா அவங்க குடும்பம் இப்பிடி இருக்காங்க?” என்றேன்.

அவன் முதலில் பல்லைக் கடித்தான். பிறகு, அண்ணியைக் கண்ணால் காட்டி, “இவ அதுக்கு மேல” என்றான்.

*

பண்டிகை தினங்கள் வருவதற்குச் சில நாட்கள் முன்னாலே சிறு சிறு சச்சரவுகள் எங்கள் வீட்டில் தொடங்கும். முறுக்கு போடவா வேண்டாமா என்பதில் இருந்து பல வேறுபட்ட கேள்விகளில் முட்டிக் கொள்வோம். அப்பா ஏதாவது காரணம் சொல்லி ஓடிப் போக முயற்சி செய்வார்.

சென்னை மாற்றல் ஆகி வந்த இரண்டாவது நாள், அருகில் இருந்த வீடுகளில் சில பெண்கள் வீட்டுக்கு வரவேற்க வந்தார்கள். “என்ன ஹெல்ப் வேணா கேளுங்க” என்றெல்லாம் சொல்லிப் போனார்கள்.

ஆனால் நாங்கள் அவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை – ஏனென்றால் மறுநாள் பொங்கல்.

மறு நாள் காலை, அப்பா, “இந்த ஊர்லயாவது என்ன நீங்க எல்லாரும் மரியாதையோட நடத்தலன்னா…” என்று எங்களிடம் புலம்பினார்.

பல்லைக் கடித்துக் கொண்டு மாலை வரை தள்ளி விட்டோம். நான் உள்ளே குளிக்கப் போயிருந்தேன். திடீரென்று வெளியே கூச்சல், குழப்பம். அண்ணன் கத்துவது கேட்டது.

அரைகுறையாக வெளியே வந்து பார்த்தால் அப்பா “நான் போறேன், நான் மகாபலிபுரம் போறேன்” என்று பனியன் போட்டுக் கொண்டிருந்தார். அண்ணன், “எங்க போற? நான் கொடுக்கற பணத்துலதான இப்போ வீடு நடக்குது?” என்று பனியனைத் தாவி பிடித்தான். பனியன் டர்ரென்று கிழிந்தது. நானும் ஓடிப் போய்க் கலந்து கொண்டேன்.

யாரோ நடுவே காலிங் பெல் அடித்து விட்டுச் சிரித்தபடி ஓடிப் போனார்கள். அன்று சண்டை முடிந்த போது அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் எங்கள் லட்சணம் தெரிந்து விட்டிருக்கும்.

*

திருமணம் முடிந்து விட்டது. அண்ணன் வீட்டிற்கு அண்ணியுடன் வந்துவிட்டான். ஆரத்தி எல்லாம் எடுத்து அழைத்து வந்து விட்டார்கள்.

அண்ணிக்கு அவள் அப்பாவுக்கு மேல் சன்னமான குரல். ஏதாவது வெளியே பட்டாசு வெடித்தால் திடுக்கிட்டு எங்களைப் பார்ப்பாள்.

ஒருநாள் அவள் உள்ளே இருந்தபோது, நாங்கள் நால்வரும் ஒரு மீட்டிங் போட்டோம்.

“எவ்ளோ நாள் தாங்குமோ தெரியாது” என்றாள் அம்மா. “எல்லாரும் சுமுகமா இருக்கும் போதே, நீ தனி வீடு பார்த்திட்டுக் கிளம்பிடு.”

“ஆமா, நீ போயிடு” என்றேன் நான்.

அண்ணன் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தான். “ஏன்? நீங்க எல்லாம் போங்களேன்?” என்றான்.

“நான் ஏன்டா என் வீட்ட விட்டுப் போகணும்?” என்றார் அப்பா.

“உன் வீடா? இது அம்மா வீடும்தான்” என்று கத்தினேன் நான்.

உள்ளே இருந்து அண்ணி கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. எல்லோரும் அமைதியானோம்.

அண்ணி ஹாலிற்கு வந்தாள். “பஜ்ஜி பண்ணவா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

எங்களுக்கு அவளைப் பார்த்துப் பாவமாக இருந்தது.

*

அண்ணன் தீவிரமாகவே வீடு பார்த்தான். ஆனால் அதில் அவனுக்கு நஷ்டம்தான். அதற்கு நடுவில் அண்ணி அக்கம்பக்கத்தாருடன் நிறையப் பேசாமல் அம்மா பார்த்துக்கொண்டாள்.

“அவங்க எல்லாம் பயங்கர லோ கிளாஸ்” என்று அண்ணியிடம் சொல்லி வைத்தாள்.

அண்ணியுடன் பழகிப் பழகி நாங்கள் எல்லோரும் கூட கொஞ்சம் மெதுவாகப் பேசினோம். அவ்வப்போது நான் அண்ணனைப் பார்த்து புன்னகைப்பேன். அவனும் பதிலுக்கு. ஒரு வேளை நாங்கள் பயந்தது போல மானத்தை வாங்கிக் கொள்ள மாட்டோமோ என்று கூட நினைத்தேன்.

ஆனால் நடுவில் தீபாவளி இருந்தது.

தலை தீபாவளி என்பதால் அண்ணன் மாமனார் வீட்டிற்குப் போக வேண்டியது. ஆனால் அவர்கள் அமெரிக்கா போய் விட்டார்கள். நாங்கள் எல்லோரும் ஏர்போர்ட் போய் அனுப்பி வைத்தோம். கையைக் கூட மெதுவாக ஆட்டியபடி போய்ச் சேர்ந்தார்கள்.

தீபாவளியன்று காலை முறுக்குச் சாப்பிட்டபடி நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணன் அங்கிருந்து வந்தான்.

“அணைடா, காலங்காத்தால” என்று ரிமோட்டை எடுத்தான். பிறகு பயத்துடன் என்னைப் பார்த்தான்.

நான் அமைதியாகத் தலையாட்டி விட்டு எழுந்து போனேன்.

*

இரவு வரை அமைதி நிலவியது. சாப்பிடும் போது எல்லோரும் ஜோக் அடித்தபடி சாப்பிட்டோம்.

“மோர் எடு,” என்றான் அண்ணன்.

“அவனையே ஏண்டா எடுக்கச் சொல்ற,” என்று சிரித்தாள் அம்மா.

“ஏன்?” என்று கேட்டாள் அண்ணி, மெல்லிய குரலில். “மோர் பிடிக்காதா?”

நான் வெட்கத்துடன் தலையாட்டும் போது அண்ணன் எட்டி மோரை எடுத்தான். அது என் தட்டில் இரு துளிகள் விழுந்தன.

“என்னடா இது?” என்றேன்.

“சும்மா” என்றான்.

நான் தட்டையே பார்த்தேன். என் ரத்தம் கொதித்தது.

“ஹா ஹா” என்று கையை உதறினேன். அவன் முகம் முழுவதும் சோறு தெறித்தது.

“டாய்” என்று கத்தினான் அண்ணன்.

“சும்மா” என்றேன் நான்.

“படுபாவிகளா, படுபாவிகளா” என்று கத்தினாள் அம்மா.

“இதான், இதான், புருஷனுக்கு மரியாதை கொடுக்காட்டி, இப்படித்தான்” என்றார் அப்பா.

“இந்த மண்ணுக்குத்தான் நான் அப்பவே இவ அப்பன், அந்தாளு வீட்டுக்குப் போறேன்னேன்” என்றான் அண்ணன், முகத்தைத் துடைக்காமல்.

“கிளம்பு நீ முதல்ல” என்று நான் சொல்லத் தொடங்கினேன்.

ஆனால், இதுவரை நாங்கள் கேட்காத குரல் ஒன்று கேட்டது.

“எங்க அப்பன், அந்தாளா?” என்றாள் அண்ணி.

அண்ணன் திருதிருவென்று முழித்தான்.

“வந்து…”

“எங்க அப்பனா, அவரு? அந்தாளா?” என்றாள் அண்ணி மறுபடி. அவள் குரல் கிட்டத்தட்ட இரண்டு ஸ்தாயிகள் உயர்ந்திருந்தது.

நாங்கள் எல்லோரும் வெலவெலத்துப் போய் அண்ணியைப் பார்த்தோம்.

“நீ ஏண்டி என் புள்ளைய பாத்து இப்படிக் கத்துற?” என்று கத்தினாள் அம்மா.

‘டணார்’ என்று அண்ணி கையில் இருந்து ஒரு பாத்திரம் பறந்து சுவரில் மோதி விழுந்தது.

“புள்ளையாம் புள்ள, வளர்த்து வச்சிருக்கற லட்சணம்தான் தெரியுதே” என்று அலறினாள் அண்ணி.

அவர்கள் இருவரும் மாறி மாறி கத்திக் கொள்ளும் பொழுது, நான், அப்பா, அண்ணன் மூவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

அண்ணன் முகத்தில் சிறு நிம்மதி தெரிந்தது.

*

Posted on Leave a comment

நாடி ஜோதிடம் – புரியாத புதிரா? | அரவிந்த் சுவாமிநாதன்


ஊருக்கு ஊர் டீக்கடைகள் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு நாடி ஜோதிட நிலையம் இருக்கிறது. “முனிவர்கள் கணித்து வைத்துள்ள பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் எதிர்காலப் பலன்களை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அகத்தியர், சுகர், வசிஷ்டர், பிருகு, விசுவாமித்திரர் என்று பல முனிவர்களின் பெயரைத் தாங்கிய பெயர்ப் பலகைகளை நாம் எங்கும் பார்க்க முடியும். உண்மையிலேயே இவையெல்லாம் இம்முனிவர்களால் உருவாக்கப்பட்டதுதானா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றப் போகும் ஒருவரது வாழ்க்கைக் குறிப்புகளை, அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இம்முனிவர்களால் கணித்து எழுத முடிந்தது என்று நாடி ஜோதிடர்களிடம் கேட்டால், “அவர்கள் ஞான திருஷ்டி மிக்கவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள். காலத்தைக் கடந்தவர்கள். அவர்களால் எதுவும் முடியும்” என்பது நமக்கு பதிலாகக் கிடைக்கும்.

நம்மில் பலரும் நாடி ஜோதிடம் பார்த்திருப்போம். சிலருக்கு நாடியில் கூறியபடியே அனைத்துப் பலன்களும் நடந்திருக்கும். சிலருக்கு ஒன்றுமே நடந்திருக்காது. பொதுவில், பலன் பெற்றவர்கள் நாடி ஜோதிடம் உண்மைதான் என்பார்கள். நாடி சொன்னபடி தங்களுக்கு எதுவுமே நடக்காதவர்களோ, “சே, சுத்த ஏமாற்று வேலை, எல்லாம் பக்கா ஃப்ராடு. பொய்” என்பார்கள்.

அப்படியானால் உண்மைதான் என்ன?

நாடி ஜோதிடம் என்பது என்ன?

‘நாடி ஜோதிடம்’ என்பது தமிழர்களின் தொன்மையான ஆரூட முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா முழுமையும் இவ்வகை ஜோதிடமுறை பயன்பாட்டில் இருக்கிறது. தென்னாட்டில் அகத்தியர் நாடி, சுகர் நாடி, பிருகு நாடி, காக புஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, வசிஷ்டர் நாடி, கெளசிகர் நாடி, சிவநாடி, விசுவாமித்திரர் நாடி போன்ற பலவகை நாடிகள் காணப்படுகின்றன. இவை அந்தந்தப் பெயர்கள் கொண்ட முனிவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றன. ஆனால் வடநாட்டில் இத்தகைய முனிவர்களின் பெயர்களினால் ஆன நாடிகளை விட சூர்ய நாடி, சந்திர நாடி, சுக்ல யஜூர் நாடி, சுக்ர நாடி, கெளமார நாடி, புத நாடி, பிரம்ம நாடி, துருவ நாடி, மார்கண்டேய நாடி, பிருகு நாடி, நாரத நாடி, கர்கர் நாடி, பராசரர் நாடி போன்றவை அதிகம் காணப்படுகின்றன.

ஒரு மனிதனின் பிறப்பு, வளர்ப்புமுதல் ஆயுள்வரையிலான பலன்களை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவதே நாடி ஜோதிடம். நம் நாட்டில் பல்வேறு விதமான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகநிலைகளின்படி, அவருக்கு, அவர்தம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிய பலாபலன்களைக் கூறுவது பொதுவாக நடைமுறையில் உள்ள ஜோதிட முறை. கைரேகை ஜோதிடம், எண்கணித ஜோதிடம், கிளி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல், சோழி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் தொன்மையான ஓலைச்சுவடிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கப்படும் ஜோதிடமே நாடி ஜோதிடம் என அழைக்கப்படுகிறது. ‘நாடி’ என்பதற்கு அணுகுதல், தேடுதல், விரும்புதல் எனப் பல பொருள்களுண்டு. ‘நாடி ஜோதிடம்’ என்பதற்கு ‘நாடி வந்து பார்க்கக் கூடிய ஜோதிடம்’ என்று பொருள் கொள்ளலாம். நாடி ஜோதிடம் பார்க்க விரும்பும் ஒருவரது கைப் பெருவிரல் ரேகையினைக் கொண்டு, பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் ஆராய்ந்து நாடி ஜோதிடர்கள் பலன்களைக் கூறுகின்றனர்.

உலக அளவில் நாடி ஜோதிடம்

பல நாடுகளிலும் பலவேறு வகையான ஜோதிட முறைகள் பயன்பாட்டில் உள்ளன. சில நாடுகளில் ‘கப்பாலா’ (kabbalah) என்னும் ஓர் இரகசிய, பழமையான ஆருட முறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ‘டேரட்’ எனப்படும் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுப் பலன் கூறும் முறை சீனாவில் மிகப் பிரபலமானதாகும். இதன் மூலம் பல துல்லியமான பலன்கள் தெரிய வருகிறது என்பது அதைப் பார்த்த சிலரது கருத்தாக உள்ளது. திபெத்தில் வழங்கிவரும் Akashik Records என்பதும் கூட நாடிஜோதிடத்தின் சூட்சுமத்தை அடிப்படையாகக் கொண்டதே! சீன நாட்டிலும் இதே போன்ற ஒரு ஜோதிட முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பெயர் (Iching) ‘யீசிங்.’ ‘யீ’ என்றால் ‘மாறுதல்’ என்பது பொருள். ‘சிங்’ என்றால் ‘புத்தகம்’ என்பது பொருள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் நிகழக்கூடிய கடந்த, நிகழ்கால, எதிர்காலச் சம்பவங்களைப் பற்றி விவரிப்பதே இதன் தனித் தன்மையாகும்.

நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம் என்பது உண்மையா, பொய்யா? எதைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது? விரல் ரேகையின் மூலம் ஒருவரது எதிர்கால, கடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? எதிர்காலத்தில் நடக்க இருப்பதை எப்படி அறிய முடிந்தது? அவர்கள் ஏன் அதனை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தனர்? அந்த ஓலைச்சுவடி எழுத்துக்களை நாடி ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களால் ஏன் படிக்க இயலவில்லை?

இப்படியெல்லாம் பல கேள்விகள் நமக்குத் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கான விடைகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. காரணம், நாடி ஜோதிடர்கள் அவற்றைத் தொழில் ரகசியமாகவும், மறை பொருளாகவும் வைத்துள்ளனர். சீடர்களாகப் பயிற்சியில் சேரும்போதே இவ்வகை ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டேன் என இறைவன், குரு, அகத்தியர் போன்ற சித்தர்கள் திருவுரு முன் சத்தியம் செய்து உறுதி ஏற்கின்றனர். அதனால்தான் நம்மால் இவற்றின் ரகசியங்களை முழுமையாக அறிய முடிவதில்லை.

அதேசமயம் நாடி ஜோதிடம் பலிக்காதது போல் நாடி ஜோதிடம் குறிப்பிட்டபடி பலருக்கும் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவேதான் நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய பல்வேறு ஆய்வு முறைகள் தேவையாக இருக்கின்றன. ஒரே நபருக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு முறை நாடி ஜோதிடம் பார்த்தால்தான் அதன் உண்மைத் தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் விஷயமுமாகும்.

காண்டங்கள்

நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு காண்டங்கள் உதவியாக இருக்கின்றன. காண்டங்கள் என்றால் உட்பிரிவுகள் என்பது பொருள். நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் எதிர்காலப் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும். பொதுக்காண்டத்தில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும். அதாவது ஒருவரது பெயர், தொழில் மற்றும் குடும்ப விபரங்கள் அதில் இருக்கும். விரிவான பலன்களை அறிய அதற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும். இவ்வாறு மொத்தம் 12 காண்டங்கள் உள்ளன. அவை தவிர்த்து சாந்தி காண்டம், தீக்ஷை காண்டம், ஔஷத காண்டம், ஞான காண்டம், பிரசன்ன காண்டம் போன்றவையும் உள்ளன. துல்லிய காண்டம், அரசியல் காண்டம், எல்லைக் காண்டம் போன்றவையும் இருக்கின்றன. சூட்சுமமான விஷயங்களை, ரகசியங்களை, மறை உபதேசங்களை, இறையருள் மற்றும் ஞானம் பெறும் ரகசிய வழிமுறைகளை, சித்தர்களுடனான தொடர்புகளை, ஆலயம் அமைப்பது பற்றிய செய்திகளைப் பற்றிக் கூறும் சூட்சும காண்டமும் உள்ளது. இவையே மற்ற ஜோதிட முறைகளுக்கு இல்லாத நாடி ஜோதிடத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.

நாடி ஜோதிடம் பார்க்கும் முறைகள்

நாடி ஜோதிடர்கள், தங்கள் நிலையத்தினை நாடி வரும் நபர்களுடைய கைப் பெருவிரல் ரேகையினை (ஆண் என்றால் வலது கைப்பெரு விரல் ரேகை; பெண்ணாக இருப்பின் இடது கைப்பெரு விரல் ரேகை), முதலில் ஒரு தாளில் பதிந்து கொள்கிறார்கள். பின்னர் அதற்கான ஓலையைத் தேடி எடுக்க முற்படுகின்றனர். அதற்கான நேரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. சிலருக்கு ஓலை உடனே கிடைத்து விடும். சிலருக்கு ஓரிரு நாள் கூட ஆகலாம். மற்றும் சிலருக்கு ஓலை கையிருப்பில் இல்லை என்றால் வேறு நிலையத்திலிருந்துதான் தேடி எடுக்க வேண்டும் என்பதால் தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது.

ஓலைச்சுவடி கிடைத்ததும் நாடி வாசிப்பவர் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவரை அழைப்பார். அது அந்நபருக்குரிய ஓலைதானா என்பதனை அறியப் பல கேள்விகளைக் கேட்பார். நாடி பார்க்க வந்திருப்பவர் எந்த விபரங்களையும் (பெயர் உட்பட) முன்னதாகக் கூற வேண்டியதில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’, அல்லது ‘இல்லை’ என்று மட்டும் பதில் கூறினால் போதும்.

பொதுவாகக் கீழ்க்கண்ட கேள்விகளைப் போன்ற பொதுவான கேள்விகளையே நாடிஜோதிடர்கள் கேட்பர். சரியான ஓலைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு கேட்பதாகச் சொல்கின்றனர். ஜோதிடம் பார்க்க வந்தவர் அதற்கான சரியான பதிலைக் கூறுவதன் மூலம் அவருக்கான ஓலையினைக் கண்டறிந்து பலன் கூற முற்படுகின்றனர். ஓலைச்சுவடியில் உள்ள பாடல்களைப் படித்து விளக்கம் கூறுகின்றனர். அவற்றை ஏட்டில் எழுதியும், ஒலிப்பதிவு நாடா/குறுந்தகட்டில் பதிவு செய்தும் தருகின்றனர்.

பொதுவான கேள்விகள் சில. (இவை பொதுவான கேள்விகள் மட்டுமே. ஆளுக்கு ஆள், சுவடிக்குச் சுவடி இவ்வகைக் கேள்விகள் மாறுபடும்.)

(1) தங்களுடைய தகப்பனார் அரசாங்கப் பணியாளரா? (2) தங்கள் தாயாரின் பெயர் அம்பாளின் பெயரைக் குறிப்பதாக இருக்குமா? (3) தங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வருக்கு மேலா? (4) தங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? (5) நீங்கள் சட்டம் அல்லது மருத்துவம் பயில்பவரா? (6) உங்களுக்குக் காதல் திருமணமா? (7) முதல் குழந்தை பெண்ணா? (8) தகப்பனாரின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா? (9) மனைவி / கணவனின் பெயரில் மலரின் பெயர் வருமா? (10) உங்களுடைய பெயர் முருகக்கடவுளோடு தொடர்புடையதா? (11) உங்கள் பெயர் வல்லினத்தில் தான் ஆரம்பிக்குமா? (12) நீங்கள் வளர்பிறையில் பிறந்தவரா?

இது போன்ற சில கேள்விகளுக்கு நாடி பார்க்க வந்தவர் கூற வேண்டிய பதில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பது மட்டுமே. இத்தகைய கேள்விகள் மூலம் சரியான மூல ஓலையைக் கண்டறிந்து அதன் மூலம் விரிவான, சரியான பலன்களைத் தாங்கள் கூறுவதாக நாடிஜோதிடர்கள் சொல்கின்றனர். ஆனால், இக்கேள்விகள் மூலம் ஒருவரைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை ரகசியமாகக் குறித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பாடலில் வந்ததுபோல் படித்துக் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மேல் உள்ளது.

ஒலைச்சுவடி பற்றிய விவரங்கள்

நாடி பற்றிக் கூறும் ஓலைச்சுவடியானது சுமார் பத்து முதல் பதினொன்று அங்குல நீளத்திலும், ஒன்று முதல் ஒன்றரை அங்குல அகலத்திலும் காணப்படுகின்றது. அந்த ஓலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, நன்றாகக் கட்டிவைக்கப்பட்டுளன. ஒவ்வொரு ஓலைக்கட்டிலும் சுமார் ஐம்பதுமுதல் நூறு ஓலைகள்வரை காணப்படுகின்றன. சிலவற்றில் அதைவிடக் குறைவாகவும் ஓலைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் பின்புறமும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் காணப்படுவதில்லை. அவற்றில் உள்ள எழுத்துக்கள் கூட்டெழுத்துக்கள் என்கின்றனர் நாடி ஜோதிடர்கள். “ஒற்று நீங்கிய மிகவும் பழைய எழுத்துக்களாகக் காணப்படும் அவற்றைத் தங்களைப் போன்ற சிறப்புப்பயிற்சி பெற்றவர்களேயன்றி மற்றவர்களால் வாசிக்க இயலாது” என அவர்கள் கூறுகின்றனர். மேலும் எழுத்துக்கள் சுருக்க முறையில் குறியீடாக அதில் எழுதப்பட்டு இருக்கும் என்றும், அதனைப் பயிற்சி பெற்றுப் பல்லாண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் அனுபவம் வாய்ந்தவரே அன்றி மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இக்கூற்றை சுவடியியல் வல்லுநர்கள் மறுக்கின்றனர். “இத்தகைய எழுத்துக்களே தமிழில் இல்லை. இவையெல்லாம் வெறும் கிறுக்கல்கள். ஏமாற்றுவேலை” என்பதே அவர்களில் பலரது கருத்தாக உள்ளது.

நாடி ஜோதிடம் – சில விளக்கங்கள்

சிறு குழந்தைகளுக்கும் இறந்த நபர்களுக்கும் நாடி ஜோதிடம் பார்க்கப்படுவதில்லை. ஜாதகமே இல்லாதவர்களுக்கும் நாடி மூலம் ஜாதகம் கணித்துப் பலன்கள் கூற முடியும். சாதாரண ஜோதிடத்தை விட நாடி ஜோதிடம் பார்க்க அதிகம் பொருள் செலவாகும். அதிகக் கால விரயமும் ஏற்படும். அதேசமயம் பலன்களும் துல்லியமாக இருக்கும். பரிகாரம் செய்தால்தான் முழுப்பலன் என்று நாடி ஜோதிடம் கூறுவதால், அதுபற்றி ஒரு தெளிவான பார்வையுடன், அதாவது, செலவு, கால விரயம், அலைச்சல் போன்றவை பற்றி முன்னமேயே தீர்மானித்துத் திட்டமிட்டுக் கொண்டு நாடி பார்க்கச் செல்வது நலம். கூடுமானவரை நாடி ஜோதிடர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதனைத் தவிர வேறு எதையும் கூறாமல் இருப்பது நலம். பொதுவாக, நாடி ஜோதிடம் பார்க்கும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் ஒருவருக்கு ஒருவர் உறவினராக இருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர். தங்களுக்குள்ளே நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர்.

பெருவிரல் ரேகையை மட்டும் கொண்டு எப்படி ஒருவருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டால், “அதெல்லாம் தொழில் ரகசியம். விரல் ரேகைகளில் சங்கு, வட்டம், கோணம், சக்கரம், பூபந்தம், கொடி, மணி, சிகிரி, சுழி, கீற்று என்று பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு புள்ளி, இரு புள்ளி என்று பல உட்பிரிவுகள் உண்டு. முதலில் அவற்றைக் கண்டறிந்து அதன் மூலம் அந்த நபருக்கான சரியான ஓலையைத் தேர்ந்தெடுக்கிறோம்” என்கின்றனர் நாடி ஜோதிடர்கள்.

இவர்களுடைய சுவடிப் பரிமாற்றத் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரன் கோயில். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் உறவினர்கள் என்பதாலும், குருகுல முறைப்படி தொழிலைத் தொடர்பவர்கள் என்பதாலும், குலத்தொழில் என்பதாலும் சில நுணுக்கமான தகவல்களை, தங்களுக்குள் இரகசியமாகவே வைத்துள்ளனர். வெளிநபர்கள் யாரும் அதனை அறிவது மிக மிகக் கடினமாகும். உதாரணமாக விரல் ரேகைக்கு ஒரு நாடியில் வந்திருக்கும் பெயரானது மற்றொரு நாடியில் மாறுபடுவது ஏன் என வினவினால் சரியான விடை கிடைக்கவில்லை. கேட்டால் “தமிழ் நுணுக்கமான மொழி, ஒரே சொல்லுக்குப் பல பொருள் உண்டு, ஒவ்வொரு முனிவரும் அதனை ஒவ்வொரு மாதிரி குறிப்பிடுவர். அதன்படி மாறி இருக்கலாம் ஆனால் பலன் ஒன்றுதான்” என்று கூறுகின்றனர். ஆனால் இது பொருத்தமானதாக இல்லை.

நாடி ஜோதிடர்கள்

பெரும்பாலான நாடிஜோதிடர்கள் தூய்மையான வெண்மை நிற ஆடைகளையே உடுத்துகின்றனர். வாக்கு வன்மை பெற்றவராக இருக்கின்றனர். வருபவர்களின் சந்தேகங்களை நீக்க முனைபவராகவும் குறைகளைச் செவிமடுப்பவராகவும் உள்ளனர். இறைநாட்டம், ஒழுக்கம், பக்தி, பணிவு, திறமை கொண்ட இவர்கள், குருவினிடத்தே தீட்சை பெற்ற பின்னரே இப்பணியில் ஈடுபடுகின்றனர். பல வருடங்கள் குருகுல வாசம் இருந்து நாடி பற்றிய விவரங்கள், நுணுக்கங்கள், சூட்சுமங்களை விரிவாக அறிந்து, அனுபவ அறிவுடனும் குருவின் ஆசியுடனும் அனுமதியுடனும் இப்பணியில் ஈடுபடுவதாகச் சொல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஜோதிடம் முழுமையாகத் தெரியும் என்றும், தமிழில் பாடல் எழுதும் புலமையும் உண்டு என்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டே, பல்வேறு கேள்விகள் கேட்டு அதனைச் ஓலைச்சுவடியில் வந்தது போல் பாடலாக எழுதித் தந்து ஏமாற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

நன்கு படித்தவர்களும் கூட நாடி ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சான்றாக டாக்டர், பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றுள்ள சிலரும் வைத்தீஸ்வரன் கோவிலிலும், சென்னையிலும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதைக் கூறலாம். அவ்வப்பொழுது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டிற்கும் இவர்களைப் போன்றவர்கள் சென்று பொருளீட்டி வருகின்றனர்.

போலி நாடி ஜோதிடர்கள்

அதே சமயம் நாடி ஜோதிடர்களில் பல போலி நாடிஜோதிடர்களும் உள்ளனர். உண்மையானவர்களை விட இவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். எனவே நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இல்லாவிட்டால் ஏமாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகி விடும். ‘உங்கள் சார்பாக நாங்களே அனைத்துப் பரிகாரங்களையும் செய்து விடுகின்றோம், நீங்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும்’ என்று கூறுபவர்களிடம் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் ‘பரிகாரங்களைச் செய்யும் பொழுது தொடர்புடையவர் உறுதியாக அதில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம்தான் அவர்கள் தம் பாவங்கள் முழுமையாக நீங்குகின்றன’ என்பதே மூத்த ஜோதிடர்கள் பலரது கருத்தாக உள்ளது. போலி நாடி ஜோதிடர்கள் பல்வேறு நுணுக்கமான முறைகளைக் கையாள்வதால் நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

நாடி ஜோதிட நிலையங்கள்

தமிழகத்தின் பல இடங்களில் அகத்தியர், வசிஷ்டர், பிருகு, சுகர், சப்தரிஷி, கௌசிகர் எனப் பல முனிவர்களின் பெயரில் நாடி ஜோதிட நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தலைமைப்பீடமாகத் திகழ்வது வைத்தீஸ்வரன் கோவில். ஆனால்,

இங்கு தரகர்களின் ஆதிக்கம் அதிகம். ஊருக்குப் புதியவர்கள் வந்தாலோ, பேருந்தில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாலோ உடனே தரகர்கள் வருவோரை அணுகி, நாடி ஜோதிடம் பார்ப்பது குறித்துப் பேரம் பேச ஆரம்பிக்கின்றனர். குறிப்பிட்ட நாடி ஜோதிடர் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், “அவர் இல்லை ஊருக்குப் போயிருக்கிறார்” என்றோ, “அவர் மகன்தான் இவர்” என்றோ அல்லது “அவர் உறவினர்தான் இவர்” என்றோ அல்லது யாரோ வேறு ஒரு நபரை அறிமுகப்படுத்தி “நீங்கள் குறிப்பிட்டவர்தான் இவர்” என்றோ கூறி ஏமாற்றுகின்றனர். வருபவர்களை வழிமறித்து, மனம் குளிரப்பேசி, சில குறிப்பிட்ட நாடி நிலையங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மக்களைக் கூட்டி வருவதற்கு இவ்வகைத் தரகர்கள், வரும் நபரின் தராதரத்தைப் பொறுத்து, நபர் ஒருவருக்குத் தங்கள் கமிஷன் கட்டணமாக, ரூபாய் 50/- முதல் 100/- வரை நாடிஜோதிடர்களிடமிருந்து வாங்கிக் கொள்கின்றனர். ஆகவே இது போன்ற இடங்களுக்கு நாடி ஜோதிடம் பார்க்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பல நாடி நிலையங்களுக்குச் சென்னை, கோவை மட்டுமல்லாது இந்தியா முழுக்கக் கிளைகள் உள்ளன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் பெங்களூர், டில்லி, புனே போன்ற வெளிமாநிலங்களில் நாடிஜோதிட நிலையம் அமைத்துத் தொழில் செய்து வருகின்றனர். சான்றாக சென்னையில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கு மும்பையில் கிளை உள்ளது. தாம்பரத்தில் உள்ள ஒரு நாடிஜோதிட நிலையத்திற்கும் மும்பையில் கிளை உள்ளது.

நாடி ஜோதிடப் பாடலின் அமைப்பு

நாடியில் வரும் பாடலானது ‘அந்தாதி’ என்னும் இலக்கிய அமைப்பில் உள்ளது. ‘அந்தாதி’ என்பது ‘அந்தம் + ஆதி’ என விரியும். அதாவது முன் நின்ற பாடலின் ஈற்றசையோ, எழுத்தோ, சீரோ, அடியோ, தளையோ, தொடையோ வரும் பாடலின் முதலாவதாக வைத்துப் பாடப்படுவதே அந்தாதியாகும். சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாக ‘அந்தாதி’ விளங்குகிறது. தமிழில் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி, பொன் வண்ணத்தந்தாதி, அற்புதத் திருவந்தாதி, எனப் பல அந்தாதி நூல்கள் உள்ளன.

சான்றாக ஒருவரின் நாடி ஜோதிடக் குறிப்பில் வந்த ‘அந்தாதி’ அமைப்பில் இருக்கும் பாடல்.

காலமதில் ஒளடதபதி தலைவன் தோற்றம்
காளையிவன் அறிவு முதல் திறமை யூகம்
மேலான அத்தன் சுகம் அன்னை வீவு
மேதினியின் ஈர்வேபடல் தந்தையர்க்கு
தந்தையர்க்கு முன்குடியாள் புதல்வனாகும்
தானிவர்க்கு ஆண்துணை ஓர் அரிவை இல்லை
துணைஆணும் வேறு குல மன்றல் தொண்டு
இயம்ப அது வாகனத்தின் ஓட்டம் தன்னில்

ஆனால், “இவ்வகைப் பாடல்கள் ‘அந்தாதி’ அமைப்பில் இருந்தாலும் இவை அகத்தியர் போன்ற முனிவர்களாலோ, சித்தர்களாலோ இயற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை” என்பதும், “சங்ககாலத்தில் ‘ஆசிரியப்பா’வே ஏற்றம் பெற்றிருந்ததால், பிற்காலத்தில் தோன்றிய ‘வெண்பா’ யாப்பில் இம்முனிவர்கள் பாடியிருக்க வாய்ப்பே இல்லை” என்பதும் தமிழார்வலர்களின் கருத்தாக உள்ளது. இவற்றிற்கு விளக்கம் கூறும் நாடி ஜோதிடர்கள், “அக்காலத்தில் இருந்த ஓலைச்சுவடிகளை அப்படியே பயன்படுத்துவதில்லை. அவற்றைப் பிரதியெடுத்தும், படி ஓலை தயாரித்துமே பயன்படுத்துகிறோம். அப்படி பிரதியெடுக்கும்போது பிழை நேர்ந்திருக்கலாம்” என்கின்றனர். ஆனால், இக்கருத்து ஏற்கக் கூடியதாக இல்லை.

அகத்தியர் போன்றவர்களால் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் இவை என்பது நாடி ஜோதிடர்கள் கருத்து. ஆனால் அதில் பயின்று வரும் பாடல் வகையான அந்தாதி முறை ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இலக்கியத்தில் ஏற்றம் பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலாக, காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதி கருதப்படுகிறது. இது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாக இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.)

நாடி ஜோதிடம் சில சந்தேக விளக்கங்கள்

சுவடியியல் அறிஞர்களிடம் நாடி ஜோதிடம் பற்றிக் கேட்டால், “இவையெல்லாம் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. முதலில் பனை ஓலைகளைக் கொண்டு, ஓலைகளைத் தயாரித்து, அவற்றை நெல் ஆவியில் காட்டி பழங்கால ஓலைச்சுவடிகள் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவற்றில் எதையாவது கிறுக்கி, இது பழங்காலத் தமிழ்; எங்களால் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுகின்றனர். அவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை” என்கின்றனர்.

ஆனால் நாடி ஜோதிடர்களோ, “இவையெல்லாம் பழங்காலத் தமிழ் எழுத்துக்கள்தான். எங்களைப் போன்று அதைப் படிப்பதற்கென்றே, தனியாக குரு மூலம் பயிற்சி பெற்றவர்களால் அன்றி மற்றவர்களால் அதைப் படித்து பொருள் காண முடியாது” என்கின்றனர். மேலும் “ஒரு வித மூலிகையை உள்ளடக்கி, சில ரகசிய மந்திரங்களை உச்சாடனம் செய்து, தனிமையில் அமர்ந்து தவம் செய்தால், அந்த எழுத்துக்களைப் படிக்கும் ஆற்றலும், வாக்குப் பலிதமும் உண்டாகும்” என்று இவர்கள் கூறுவது நம்பக் கூடியதாக இல்லை.

நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளின் தொன்மை, எழுத்துக்களின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு நாடி ஜோதிடர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல; ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக் கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) அது நாடி ஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவது போல மக்களை ஏமாற்றியும் வருகின்றனர். (பார்க்க படங்கள் : 2, 3) அதுவும் மொழி தெரியாத வெளிநாட்டுக்காரர்கள், வட இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது இன்னமும் எளிது. “உங்கள் பெயர் இதோ இருக்கிறது பாருங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் முனிவர் உங்களைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் அதிர்ஷ்டசாலி; புண்ணியவான்; முனிவரின் அருள் பெற்றவர் “ என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி, ஓலைச்சுவடியைக் காட்டிப் பணம் பறிக்கின்றனர். இவர்களில் சிலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட சம்பவங்களும், சிலர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும் கூட இருக்கின்றன.

நாடி ஜோதிடம் என்பது உண்மையா பொய்யா, ‘பொய்’ என்றால் ஏன் பொய்யாகிறது, அதற்குக் காரணம் என்ன, சிலருக்கு மட்டும் ஏன் நாடியில் வந்தது போலவே பலன்கள் நடக்கின்றன, அதற்கான சூட்சும காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. “நாடி ஜோதிடத்தில் ‘யக்ஷிணி’ போன்ற சில தேவதைகளின் பயன்பாடு உண்டு” என்ற கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் மிக விரிவாக, பலர் ஒன்றிணைந்து, பல்வேறு கால கட்டங்களில் பல முறை மீள மீளச் செய்ய வேண்டிய ஆய்வுகளாகும். என்றேனும் ஒருநாள் எதிர்காலத்தில் இது சாத்தியமாகக் கூடும் என்று நம்புவோம். அதுவரை ‘உண்மை’ என்றும் ‘பொய்’ என்றும் இரு வேறு கருத்துக்களுடன் இது புரியாத புதிராகவே நீடிக்கும். 

Posted on Leave a comment

அறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் – 2 | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா

இந்திய சாஸ்த்ரிய இசையும், கலைகளும், கோவில்களோடு தொடர்புப்படுத்தப்பட்டிருந்ததே, அக்கலைகள் கலப்படம் ஆகாமல் இருக்க பேருதவியாக இருந்தன எனச் சென்ற இதழில் பார்த்தோம். (கலப்படம் ஆகிவிடக்கூடாது எனும் நோக்கத்தினால்தான் அவை கோவிலுடன் தொடர்புப்படுத்தப்பட்டிருந்தன எனக் கூற இயலாதுதான். ஆனால், அது ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.) ஆனாலும், கூட அதில் சில குழப்பங்கள் (passing-off) புகுத்தப்பட்டதையும் பார்த்தோம். அதாவது, பக்தி வேகத்தில், இறைவனைப் பற்றிய பாடல்களைப் பலரும் பாடினால், அவர்களுக்கும் பெரும் புண்ணியம் கிட்டும் எனும் நம்பிக்கையில், தான் எழுதிய பாடல்களை பிரபல பாடலாசிரியர்கள் எழுதியது எனச் சேர்ப்பதும் நடந்தேறியது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்த்தோம்.

அதைப் போலவே சிற்ப ஓவிய சாஸ்திரமும், கோவில்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டிருந்தமையாலேயே பெரிதும் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இசைக்கான விதியில் இருந்து முற்றிலும் வேறொரு வழியில்.

“சிற்ப, ஓவியக் கலைகளில் ஒரு யுனிக்னெஸை கொண்டு வருவதன் மூலம் அவற்றைப் பாதுகாக்க முயற்சி நடந்திருக்கிறது. அதற்கு வழியாக, ஆகம விதிகள், பாணிகள் அமைந்திருந்திருக்கின்றன.”

கர்நாடக இசையைப் பொருத்தவரையில், பாடலுக்கான வார்த்தைகளை எழுதியவரும், அதற்கான இசையை அமைத்தவரும் ஒருவராகவே இருக்கிறார். எனவேதான் அவர்களை ‘வாக்கேயகாரர்கள்’ எனச் சொல்கின்றனர். அதாவது வாக்கு (வார்த்தைகள்), கேயம் (இசை).

பாடல்களின் இசை (ட்யூன்) கர்நாடக இசையின் விதிகளைப் பின்பற்றி அமைந்திருந்தாலும், வார்த்தைகள் வாகேயகாரரின் எழுத்துக்களே.

இந்திய இலக்கிய/இசை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பின் வந்த காலங்களில் அவற்றில் ‘முத்திரை’ எனும் பெயரில் அதன் பாடல் வரிகளை எழுதியவரின் பெயரோ, ஏதேனும் அடையாளமோ வைக்கப்பட்டிருப்பதை ஓரளவுக்கு பாடல் வரிகளுக்கான ‘உரிமை கோரல்’ என எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக தியாகராஜரின் பாடல்களில், ‘தியாகராஜ’ எனும் வார்த்தையும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பாடல்களில், ‘குருகுஹ’ எனும் வார்த்தையும் வரும். ஆனால், தியாகராஜர் எனும் இறைவனின் பெயரில் எழுதப்பட்ட பாடல்கள் எல்லாமே தியாரராஜரின் சாஹித்யம் அல்ல என்பதை அதன் மொழிநடையின் தனித்துவத்திலிருந்து மட்டுமே அறிய இயலும்.

(அதே போல, பாடலில் இசை (tune) எந்த ராகத்தில் அமைய வேண்டும் எனவும் குறிப்பிடப்படுவதை ‘ராக முத்திரை” என்கிறார்கள். இவை எல்லாப் பாடல்களிலும் அமைவதில்லை எனினும், இவற்றை இசையை அடையாளம் காட்டும் கருவியாக மட்டுமே பயன்படுத்த இயலும்.)

அநேக சமயங்களில், ஒரு கலையை ‘போலச் செய்வதன்’ மூலமாகவே பல புதிய கலைகள் பிறக்கின்றன. நம் காலத்திய எடுத்துக்காட்டு எனில், மிமிக்ரி.

அதாவது பிரபலர்களின் நடை உடை குரல் பாவனைகளை ‘போலச் செய்வது’ உதாரணமாக, ரஜினியின் குரலும், அங்க அசைவுகளும். ரஜினியை (அசலை) நகல் செய்வது சட்டக் குற்றம் என எடுத்துக்கொண்டால், மிமிக்ரி எனும் கலையே பிறந்திருக்காது அல்லவா?

இதற்கு இன்னொரு சட்ட உதாரணமாக ஃபார்சூன் ஃபில்ம்ஸ் இண்டர்னேஷனல் எதிர் தேவ் ஆனந்த் வழக்கை எடுத்துக் கொள்ளலாம். தேவ் ஆனந்த் எனும் ஹிந்தி நடிகர், தன்னைப் போல எவரும் ‘போலச் செய்தல்’ (Mimicry) கூடாது என வழக்கிட்டிருந்தார். அந்த வழக்கு அவருக்கு எதிராகவே முடிந்தது. காரணம் ‘போலச் செய்தல்’ இன்னொரு கலையை உருவாக்கும் என்பதால்தான்.

இந்தியாவில் 1957லேயே காபிரைட் சட்டம் வந்திருந்தாலும், 1994 காபிரைட் திருத்தச் சட்டத்தில்தான் நிகழ்த்து கலைஞரின் (Perfirmer’s right) உரிமை அங்கீகரிக்கப்பட்டது. நிகழ்த்து கலைஞர் எனில், ஒரு மேடைக் கச்சேரி, மேடைப் பேச்சு, நாட்டியம், நாடகம் இப்படிப் பலவும் அவற்றை நிகழ்த்துபவரின் உரிமையும் பிற்காலத்தில்தான் ஒரு அந்தஸ்தை, அங்கிகாரத்தை அடைந்தது. ‘போலச் செய்தல்’ இருந்தாலுமே அது முழு முற்றாக ஒன்றன் முழு நகலாக இருந்தால் அது சட்ட மீறல்; அதே சமயம் அதில் அப்படி ‘போலச் செய்பவரின்’ திறமையும் உழைப்பும் இருந்தால் அது இன்னொரு கலையாகவே பார்க்கப்படும். உதாரணமாக மிமிக்ரியில் அந்தக் கலைஞர், எந்த அளவுக்கு அசலைப் போலவே செய்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு வெற்றி. அந்த அசலை நகல் எடுக்கும் நுணுக்கத்திற்கே மரியாதை. அதுவே மிமிக்ரி கலை.

இதையே சிற்பக் கலைக்கும் உதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. காரணம், ஏற்கெனவே இருக்கும் ஒரு சிலையை நகலாக மறுபடி வடிவமைக்க, சிற்பத் திறனும், நுணுக்கமும் தேவைதான். ஆனால் அந்த சிலையின் ‘முதல் வடிவம்’ (அடிப்படை வடிவம் – அடிப்படை ஸ்கெட்ச் எனச் சொல்லலாம்) என்பதில் நகல் எடுப்பவருக்கு உரிமை இல்லை. ஆனால், மிமிக்ரியில் அசலாக இருப்பதற்கு எதுவும் திறமையோ உழைப்போ தேவை இல்லை. ஆனால், நகல் எடுப்பதற்கே திறமை தேவை.

இதன் காரணமாகத்தான், சிற்ப, ஓவியக் கலைகளுக்கான விதிகள் வேறாகவும், இசை, மிமிக்ரி போன்றவற்றிற்கான விதிகள் கொஞ்சம் வேறாகவும் இருக்கின்றன.

சிற்ப, ஓவியக் கலைகளைப் பொருத்த வரையில், சட்ட மீறல் என்பதை மூன்று வகையில் பார்க்க வேண்டி இருக்கிறது. சிலை அல்லது ஓவியத் திருட்டு, சிலை அல்லது ஓவியத்தைப் பிரதி எடுத்தல், எடுத்த பிரதிகளையே ஒரிஜினல் எனச் சொல்வது.

சிற்ப சாஸ்திரத்தில், ஆகம விதிகளாக இருப்பவையே, அவை திருட்டிலிருந்தும் பிரதி எடுத்தலில் இருந்தும், எடுத்த பிரதிகளை அசல் எனச் சொல்வதிலிருந்தும் பாதுகாத்தன.

உதாரணமாக, அறுபத்து மூவர் சிலைகளைப் பல ஊர்களில் பார்க்கலாம். ஒவ்வொரு சிலையும் அந்த நாயன்மாரின் கதையை ஒட்டியே அமைந்திருக்கும். விநாயகர்/பிள்ளையார் உருவத்தைத் தவிர வேறெந்த சிலைகளும், ஒருவரின் தன் விருப்பப்படி சிற்பமாக ஆக்க ஆகம விதிகள் இடம் கொடுப்பதில்லை.

கோவில் சிற்பங்களைப் பொருத்த வரையில், அச்சிலைகள் அமையும் பீடம், கையின் வைப்பு முறை (அவற்றிற்குப் பல பெயர்கள். உதாரணமாக கடியஸ்தம்-தொடையில் விரல் மடக்கி வைப்பது, அபயஹஸ்தம்-அபயம் அளிப்பது போல வைப்பது, இப்படி) அந்த உருவத்திற்குரியவரின் இயல்பு/கதை இவற்றினைக் குறிக்கும் காரணிகள், நகைகள், இப்படிப் பலவற்றின் மூலம் ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒரு தனித்துவம் கொண்டுவரப்பட்டு விடுகிறது. அந்த தனித்துவத்தை மீறாதிருப்பதே ஆகமம் என ஆகிவிடுகிறது.

ஆகம விதிகளுக்கு அடுத்ததாக, ‘சிற்ப பாணி’ உதவுகிறது. சிற்ப சாத்திரம் அறிந்த ஒருவர், ஒரு சிலை யாருடையது என்றும், அந்தச் சிலை எந்தப் பாணியில் அமைந்தது என்றும், அந்தப் பாணியை வைத்து அது எந்த அரசர் காலத்தியது என்றும் சொல்லி விட முடியும். இதற்கு கார்பன் டேட்டிங் எல்லாம் தேவை இல்லை. அதன் நகலாக வேறெங்கேயும் சிலைகள் கிடைக்காது.

ஏனெனில், சிற்பிகள் ஆகம விதிகளை மீறக்கூடாது என்பது மிரட்டும் விதியாக வைக்காமல், இறைவனை மீறும் ஒரு செயலாக பார்க்கப்பட்டதும், அதற்கு அவர்கள் இசைந்திருக்கப் பழக்கப்படுத்தப்பட்டதுமே காரணம்.

வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகள் மூன்று வகையானவை. ஒன்று, அவை அரசர் காலத்திலேயே, போர்க்காலங்களில் வெற்றிச் செல்வமாக பிடுங்கிக் கொண்டு போகப்பட்டவை, அல்லது, இங்கிருந்து திருட்டுத்தனமாகக் கொள்ளையடிக்கப்பட்டவை, அல்லது, பிரதியெடுக்க வாய்ப்பு வந்தபின் பிரதி எடுக்கப்பட்டு, மாற்றி வைக்கப்பட்டு கொள்ளை போனவை.

இதே சூழல் வெளிநாடுகளில் வேறு வகையாகக் கையாளப்பட்டது.

(தொடர்வோம்…)

Posted on Leave a comment

ஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்


முன்குறிப்பு: உலகின் ஓரிடத்தில் நடக்கும் ஒரு கலாசாரத் திருவிழாவின் கோலாகலக் குறிப்புகள் என்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். மற்றபடி, குடி குடியைக் கெடுக்கும் என்பதிலும், குடியைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
*
ஜெர்மனியின் பவேரியத்தலைநகரமான ம்யூனிக்கில் கொண்டாடப்படும் இந்த அக்டோபர் திருவிழா (Oktoberfest) லிட்டர் லிட்டராக பியர் குடிப்பதைத்தான் முதன்மைப்படுத்துகிறது. சாராயம் குடிக்க திருவிழாவா என்று நாம் மிரட்சியுடன் கேட்டால் என்றால், அதனால் என்ன என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

நம் ஊர் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு மட்டையாவதற்கோ அல்லது காதல் தோல்வியில் புலம்புவதற்கோ அல்ல; இங்கே பியர் குடிப்பது ஒரு கலாசார அடையாளம். அதுவும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் திருவிழா 1810ம் ஆண்டு பவேரிய மன்னர் லுட்விக் (Ludwig 1786 – 1868) Saxe Altenburg என்னும் சிறிய ஜெர்மன் பிரதேசத்தின் இளவரசி தெரெஸாவைத் திருமணம் புரிந்துகொண்ட சமயத்தில் தொடங்கப்பட்ட கோலாகலம்.

தம் மன்னரின் திருமண வைபவத்தை பிரஜைகளும் கொண்டாடவேண்டும் என்பதற்காக ம்யூனிக்கின் வயல்வெளிகளில் மக்களின் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அக்டோபர்ஃபெஸ்ட் கடந்த இருநூத்திச்சொச்ச வருடங்களில் பல வடிவங்கள் மாறினாலும் இன்றும் உலகத்திலேயே மிக அதிக மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாவாகக் கருதப்படுகிறது. நகரமயமாக்கப்பட்டபின் இந்த விழாவுக்கென்றே ஒரு பெருந்திடல் அமைக்கப்பட்டு அதை தெரெஸா பசும்புல் வெளி (Theresa’s Meadow) என்றும் சுருக்கமாக ஜெர்மானிய மொழியில் வைஸென் (Wisen) என்றும் சொல்கிறார்கள்.

2018ம் வருட விழா தொடங்கிய ஞாயிறு (23 செப்டம்பர் 2018) காலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றது அலெக்ஸா. ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மரீன் ப்ளட்ஸ் என்னும், மிக அழகான ஃபௌண்டன் பன்னீர் தூவும் அந்த ராஜபாட்டையின் நடுவில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டேன். சரியாகப் பத்து மணிக்கு ஊர்வலம் நான் இருந்த பாட்டையில் வந்து முன்னேறியது.

வயதானவர்களும், பெண்களும் கட்டுமஸ்து இளைஞர்களும் சின்னப்பையன்களும் சிறுமியரும் சம்பிரதாய உடையில் கையில் அவரவர் ஊர்களின் விசேஷ சாமக்கிரியைகளுடன் (ஒரு சிலர் மிகப்பெரிய கத்தி, துருப்பிடிக்காத 18ம் நூற்றாண்டுத் துப்பாக்கி, பதப்படுத்தப்பட்ட செம்மறி ஆட்டைக் குச்சியில் தலைகீழாகக் கட்டி, கொத்துக்கொத்தாய் மலர்ப்பந்துகள் அடுக்கி என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்) கோலாகலமாக ஊர்வலம் வருகிறார்கள்.

இந்த ஊர்வலத்தின் சிறப்பு அவர்களின் உடைகள்தாம். பவேரிய உடைகளான டிரெண்டல் (Drendl) என்னும் உடையைப் பெண்கள் அணிகிறார்கள். இது மூன்று பீஸ் கொண்ட உடை – பாவாடை, பிளவ்ஸ் மற்றும் ஏப்ரன் எனப்படும் கவசம் போன்ற மார்புப்பகுதி உடை. ஆண்கள் லெதர்ஹோஸென் (Lederhosen) என்னும் தோலிலான அரை டிராயர் மற்றும் நம் ஊரில் அந்தக் காலத்தில் எலிமெண்டரி பள்ளிப் பிள்ளைகள் போட்டுக்கொள்ளும் டிராயர் பட்டி, மேலே இறுக்கமான சட்டை. ஒரு காலத்தில் இந்த டிரெண்டல் உடை, பாரில் மற்றும் எடுபிடி வேலை செய்யும் பெண்களின் உடையாக இருந்து வந்தது. அதே போல குதிரை லாயங்களில் வேலை செய்யும் ஆண்களின் உடை இந்த லெதர்ஹோஸென்! ஆனால் ஆஸ்திரிய மன்னர் ஃப்ரான்ஸ் ஜோசெஃப் (தன் திருமணத்துக்குப் போகும் வழியில் எதேச்சையாகப் பார்த்து மையல் கொண்டுவிட்ட ஸிஸ்ஸி என்னும் பவேரிய சாதாரணளைப் பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டவர்!) இந்தவித உடையை அணிந்து அதற்கு பெரும் கௌரவத்தை ஏற்படுத்திவிட்டார்.

சம்பிரதாயமாகத் தொடங்கப்பெறும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் விழாவில், முதலில் பலவித மாநிலங்கள் மற்றும் பியர் கம்பெனிகளின் சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்து வரும். அவற்றின் பின்னே தெரெசா மைதானத்தில் பணி புரியவரும் பெண்கள், காவல் காக்க வரும் ஆண்கள் என அனைவரும் அவரவர்களின் கலாசார உடையலங்காரங்களுடன் பெரும் ஊர்வலமாக வருகின்றனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூடி ஆரவாரம் செய்ய மறு ஆரவாரம் செய்து உற்சாகமூட்டுகிறார்கள். நான் கூட துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு ஆசாமியைப் பார்த்து கையை ஆட்டி வைத்தேன்.

குழு குழுவாகப் போகும் இந்த ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 90-100 குழுக்கள் ஊர்வலம் போகுமாம். அவர்களின் உற்சாகத்தில், தம் நாட்டின் பாரம்பரியத்தில் கலந்துகொள்ளும் பெருமிதம் நிரம்பி வழியும். வயது வித்தியாசமின்றி மழைத் தூறலையும் பொருட்படுத்தாத அழகான தாத்தாக்களும் பாட்டிகளும் குழந்தைகள் மாதிரிச் சிரித்துக் கைகளை வீசி ஆட்டிக்கொண்டு போகும் குதூகலம் நிச்சயம் ரசிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த ஊர்வலம் மிகப்பெரிய ஒற்றுமை ஊக்கி என்பதில் சந்தேகமில்லை.

காலை ஒன்பது மணியளவில் தொடங்கும் இந்த ஊர்வலம் ம்யூனிக்கின் முக்கிய ராஜ பாட்டையின் வழியாகச் சென்று தெரெஸா பசும்புல்வெளியை சுமார் பன்னிரண்டு மணியளவில் அடைகின்றது. அங்கே ம்யூனிக்கின் மேயர் ஒரு அடையாள சுத்தியுடன் முதல் பியர் பீப்பாயைத் தட்டி உடைத்து பியரை வழியவிட்டு முதல் ஒரு லிட்டர் பியர் கோப்பையை பவேரிய மாநிலத்தின் தலைவருக்கு அளிக்க, ஆரவாரமாகத் தொடங்குகிறது இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் பியர் திருவிழா. ஒவ்வொரு வருடமும் மேயருக்கு எத்தனை சுத்தியல் அடி தேவைப்படுகிறது என்பது பற்றி பந்தயம் எல்லாம் கட்டுகிறார்கள். இதில் சாதனை செய்திருப்பவர் தாமஸ் விம்மர் என்னும் மேயர் – 1950ஆம் ஆண்டு இவருக்கு முதல் பீப்பாயை உடைக்க 19 சுத்தியல் அடி தேவைப்பட்டதாம். மூன்றே அடிகளில் உடைத்த மேயர்களும் உண்டு.

தெரெஸா பசும்புல்வெளியில் இந்த அக்டோபர்ஃபெஸ்டிவலின் போது தரப்படும் பியர் வேறெப்போதும் கிடைக்காதாம்.

ராஜபாட்டையில் ஊர்வலம் நடந்தபோது போக்குவரத்தை முழுமையும் நிறுத்தி சாலையை துப்புரவாகத் துடைத்துவிட்டிருந்தார்கள். ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கடக்கும் இந்த ராஜபாட்டையில் போக்குவரத்து விளக்குகள் மட்டும் எப்போதும் போல இம்மி பிசகாமல் சிவப்பு ஆரஞ்சு பச்சை என்று குறிப்பிட நேரத்துக்கு மாறாமல் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒழுக்கத்தில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது என்பேன்.

தெரெசா பசும்புல்வெளியில் இப்போது புல் வெளியெல்லாம் இல்லை. ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். உள்ளே நுழையும்போதே கோலாகலத்தின் அடையாளங்கள் சந்தேகமின்றி வெளியில் தெருவிலேயே கேட்கின்றது. ஆம், அந்தச் சத்தம், பேச்சின் சளசளப்பு, சைக்கேடெலிக் வண்ணங்கள் கலந்து இழையும் விளக்குகள். பிறகு, அந்த சங்கீதம்! அபார துடிப்புமிக்க சங்கீதம். மிகப்பெரிய ‘பியர் கூடாரம்’ போட்டு, அங்கு ஆயிரக்கணக்கில் மேஜை நாற்காலிகள் போட்டு, பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் இரண்டு கைகளிலும் பியர் கோப்பைகளை அடுக்கியவாறே நடந்து சென்று விநியோகிக்க, கூட்டம் மேடையில் துடிக்கும் சங்கீதத்துக்குக் கூடவே பாடி ஆடி மாய்ந்து போகிறார்கள்.

சங்கீதம் என்று ஒரு வார்த்தையில் அதை முடித்துவிட முடியாது. தற்காலிக மேடை போட்டு சங்கீத உபகரணங்கள் வைத்து நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறார்கள். சைகேடலிக் வண்ணங்கள் ஊடாடிக் கொண்டிருக்க கிட்டத்தில் போய்ப் பார்த்தேன். அங்கே மேடையில் ஒரு குழு (Band) ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அபார சங்கீதம். அந்தத் தாளம், ரிதம், கிடாரிஸ்டுகளின் சேட்டையுடன் கூடிய வாசிப்பு, எல்லாம் நம்மை ஒரு வேறு உலகத்திற்கு அழைத்துப் போவதை உணர முடிகிறது. கொஞ்சம் நேரமாக நேரமாக, அந்த சங்கீதம் மேலே மேலே என்று போய் ஒரு உச்சத்தில் நரம்புகளைத் துடிக்க வைத்துச் சட்டென்று முடிவது, போதையான எல்.எஸ்.டி அனுபவம். முடிந்து அந்த சிம்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும் தருணத்தில் கூட்டம் முழுவதும் ஹோ வெனா ஆர்ப்பரிக்கும். ரகளை! ஆங்காங்கே ஜோடிகள். ஒரு கையில் பியர் இன்னொரு கையில் பெண் என்ற விகிதத்தில் அவ்வப்போது பியரைச் சப்பிக்கொண்டு இடையிடையே அந்தப் பெண்ணின் மூக்கை நிரடிக்கொண்டும் இருக்கும் காட்சிகள் சர்வ சாதாரணம்.

அக்டோபர் திருவிழாவில் பியர் தயாரிப்பதற்கான உட்பொருட்கள் என்ன என்பதைக்கூட 1516ம் யூனிக் சட்டம் சொல்லியிருக்கிறது. இவை தவிர இதில் ஈஸ்ட் மட்டும் கலக்க அனுமதி. ஏனென்றால் இந்தச்சட்டம் இயற்றப்பட்டபோது ஈஸ்ட் எனப்படும் சமாசாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கென்று தனி ஃபார்முலாவில் தயாராகும் பியர் மற்ற சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படக்கூடாது என்பதும், இந்த கம்பெனிகள் தவிர வேறு எந்த சாராய நிறுவனமும் இந்த அக்டோபர்ஃபெஸ்ட் பியரைத் தயாரிக்க முடியாது என்பதும் சட்டம்.

இந்த தெரெசா மைதானத்து நுழைவிலேயே கடுமையான பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். இன்றைய பாதுகாப்பற்ற காலகட்டத்தில் இந்தக் கெடுபிடி தேவைதான். ஏகப்பட்ட கூடாரங்கள் போடப்பட்டிருக்க அவற்றில் கூட்டம் கூட்டமாக ஜனம் அம்முகிறது. குறைந்த அளவு பியர் கோப்பையே ஒரு லிட்டர்தான். அதன் விலை கிட்டத்தட்ட பதினொரு யூரோக்கள் (சுமார் 900 ரூபாய்.) அதகளமாகப் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு பியர் குடித்த வண்ணம் இருக்கிறார்கள்.

கூடவே ஏகப்பட்ட உணவு வகைகளும் கிடைக்கின்றன. பவேரியன் மற்றும் ஜெர்மன் வகை உணவுகள்தாம் அதிகம். அதிலும் வறுத்த கோழி, பன்றி கட்லெட், ஸ்பாட்ஸீ என்று சொல்லப்படும் முட்டை உணவு, விதவிதமான காய்கறிகள் பழங்கள் என்று நிறைய வகைகள் இருந்தாலும் அந்தப் பச்சை மாமிச நாத்தம், நம் ஊர் போல மிளகு காரம் மசாலா சேர்க்காததாலோ என்னவோ, சில சமயம் நம் ஊர் ஊதுவத்திகளை விட மோசமாக இருக்கிறது.

லாங்கோஸ் (Langos) என்று ஒரு சாப்பிடும் வஸ்து. அங்கே கூட்டம் அல்லாடியது. என்னவென்று பார்த்தால் நம் ஊர் னான் போல, ஆனால் அப்பளமாகப் பொரிக்கப்பட்ட ஒரு மகா வட்ட சமாசாரத்தில் கொழகொழவென க்ரீம் தடவி, அதன் மேல் ஏகப்பட்ட சீஸைக்கொட்டி, மேலும் தக்காளி துண்டுகள் மற்றும் குரோய்ட்டர் என்னும் இலை தழை போன்ற சாலடுக்கான சாமக்கிரியைகளைப் பரப்பி, “உங்கள் உணவை எஞ்சாய் பண்ணுங்கள்” என்று கீச்சுக்குரலில் அழகிய இளம் பெண்கள் கௌண்டரில் தருகிறார்கள். இந்த னான் என்னும் அப்பளத்தை முகத்தில் க்ரீம் அப்பிக்கொள்ளாமல் சாப்பிடுகிறவர்களுக்கு, அதேதான், கேள்வி கேட்காமல் நம் வலது காதை வெட்டிக்கொடுக்கலாம்.

என்னுடைய ஸ்வெட்டர் காலி. மூக்குக்கண்ணாடி முழுக்க கிரீம்.

பியர் அருந்தும் ஸ்டால்களைத்தவிர குடும்பத்தோடு வருபவர்களுக்காக பலப்பலக் கேளிக்கைகளுக்கான சௌகரியங்களும் இருக்கின்றன. நம் ஊர் ஜெயண்ட் வீலின் பலதரப்பட்ட வடிவங்கள். அதன் உயரமும் சுழற்சியும் வீச்சும், புவிஈர்ப்பைக் காதலிக்கும் என் போன்ற ஆசாமிகளுக்கு வயிற்றில் ஈரப்பந்து சுருட்டிக்கொள்ள வைக்கின்றன. கூடவே உபத்திரவமில்லாத வளையம் எரிதல், துப்பாக்கிச் சுடுதல் வகை விளையாட்டுக்களும் பலப்பல உண்டு. விதவித பலூன்களைக் கொடுத்து குழந்தைகளைக் கிறீச்சிட வைக்கிறார்கள். நூல் தவறின ஒரு குழந்தையின் ஹீலியம் பலூன் வானத்தில் ஏறின காட்சியை ஏதோ பெரிய அதிசயம் போல ரசித்துப் பார்த்த கூட்டத்தில் நானும் அடக்கம்.

இந்தக் கோலாகல வட்டாரம் முழுக்கவே புகை பிடிக்க அனுமதியில்லை என்றுதான் இருந்ததாம். ஆனால் புகை பிடிக்கும் அன்பர்கள் சிணுங்கியதால் ஒரு சில இடங்களில் புகை பிடிக்க அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

இந்த அக்டோபர்ஃபெஸ்ட் என்னும் கோலாகலத்தில் இரண்டு வாரங்கள் உல்லாசமாகக் கூட்டம் கூடி லிட்டர் லிட்டராக பியர் அருந்தி, உண்டு, அனுபவித்து, அதே சமயம் ஒரு சின்ன அசம்பாவிதத்துக்கூட இடமில்லாமல் இருக்கும் அவர்களின் ஒழுக்கம் நமக்கு உணர்த்துவது என்ன என்பதை நாம் யோசிக்கத்தான் வேண்டும்.

Posted on 1 Comment

யார் குரு? | சுமதி ஸ்ரீதர்


வெள்ளையர்களிடமிருந்து விடுதலை கிடைத்த இந்த 71 ஆண்டுகளில்தான் நம் நாட்டில் செப்டம்பர் மாதம் 5ம் தேதியை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் வழக்கம் உருவாகியிருக்கிறது. ஆனால், ஆசிரியர் தினம் கொண்டாடும் வழக்கம் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்தே நம் கலாசாரத்தில் குருவின் மகத்துவத்தைக் கொண்டாடும் மரபு இருந்து வந்திருக்கிறது. ஆனி மாதம் பெளர்ணமியன்று கொண்டாடப்படும் குரு பூர்ணிமா நம் ஆச்சார்யர்களைக் கெளரவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்நாளை பெளத்தர்கள், கௌதம புத்தர் தான் பெற்ற ஞானத்தை மானிட இனத்திற்குக் கொண்டு சேர்க்க சாரநாத்தில் கொடுத்த முதல் பிரசங்கத்தைக் குறிப்பதாக நம்புகின்றனர். இந்துக்கள் இந்த நாளில் ஆதியோகியான சிவனையும், வியாச மாமுனிவரையும் நினைவு கூர்கின்றனர்.

சரி, குருவும் ஆசிரியரும் ஒன்றுதானே, பிறகு நாம் ஆசிரியர் தினம், குரு பூர்ணிமா இரண்டையும் ஏன் தனித்தனியாக கொண்டாட வேண்டும்? காரணம் இல்லாமலில்லை. ஆசிரியரும் குருவும் ஒன்றல்ல. இருவருக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆசிரியர் என்பவர் லெளகீக விஷயங்களில் நம்மைத் தேர்ச்சி பெறச் செய்பவர். ஆனால் குருவோ இந்த லெளகீகத்தைத் தாண்டி நம்மை மெய்ஞானத்தை நோக்கி கூட்டிச் செல்பவர்.

இந்திய கலாசாரத்தில் ஆசிரியரைவிட குருவின் நிலை மிக உயர்ந்தது, சொல்லப்போனால் கடவுளுக்கும் மேலே.

ஒருமுறை கவியும் ஞானியுமான கபீரிடம், “உங்கள் முன்னால் நீங்கள் பூஜிக்கும் கடவுளும் உங்களுடைய குருவும் ஒரே நேரத்தில் தோன்றினால் நீங்கள் முதலில் யார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அவர், “நான் முதலில் என் குருவின் பாதங்களைத்தான் தொழுவேன், ஏனென்றால் அவர்தானே எனக்கு என் கடவுளையே அடையாளம் காட்டியவர்” என்றார்.

கபீர் மட்டும்தான் தன் குருவைத் தன் கடவுளுக்கு மேல் வைத்தாரா என்றால் இல்லை. நம் கடவுள்களே கூட மனித அவதாரம் எடுத்தபோது குருகுலவாசம் ஏற்றுத் தங்கள் குருமார்களிடம் ஞானம் பெற்றிருக்கிறார்கள்.

அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் யோகவாசிஷ்டம் என்னும் நூல் ராமர் தன் குரு வசிஷ்டரிடம் கேட்டு அறிந்துகொள்வதுபோல் படைக்கப்பட்டுள்ளது.

சாந்தீபநி என்னும் ஒரு மிகச்சிறந்த குரு கிடைக்காவிட்டால் வெண்ணெய் திருடிய கண்ணன் ஒரு கீதாச்சாரியனாக உருவாகி இருப்பானா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

சம்ஸ்க்ருத மொழியில் ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரூ’ என்றால் விலக்குவது என்றும் பொருள். குரு என்பவர் அறியாமை என்னும் இருளைப் போக்கித் தம் சீடனைக் கடவுளுக்கு அருகே கொண்டு சேர்ப்பவர் ஆகிறார். ஞானத்துக்கும் மோட்சத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நம் சமுதாயத்தில் குருவின் பங்களிப்பு மிக அதிகம். நாம் கூறும் கதைகளிலும் அது பிரதிபலிக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு உன்னதமான குருவின் கதை திருமழிசை ஆழ்வாரின் கதை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சிறிய ஊரான திருமழிசை பாடல் பெற்ற ஸ்தலமாகும். அங்கு உறைந்திருக்கும் ஜகன்னாதப் பெருமாள் பாம்பணையில் காட்சியளிக்கிறார். பெருமாள்பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர் திருமழிசை ஆழ்வார். ஆழ்வாருக்கு கனிகண்ணன் என்னும் ஒரு சீடன் இருந்தான். அவன் தன் குருவைப் போலவே மிகுந்த ஞானம் உடையவன். இப்படிப்பட்ட தேஜஸ் கொண்ட சீடன் கிடைத்ததில் ஆழ்வாருக்கு மிகுந்த பெருமை. அவனிடம் அபரிமிதமான அன்பு கொண்டிருந்தார் அவர். ஒருநாள் கனிகண்ணன் கோவிலை வலம் வரும்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த ஒரு கூனிக் கிழவியைக் கண்டான். தன் சோர்ந்த உயிரையும், தளர்ந்த உடலையும் பொருட்படுத்தாது முழு மனதுடன் பகவத் சேவையில் ஈடுபட்டிருந்த அந்தக் கிழவியைக் கண்டு அவன் மனம் நெகிழ்ந்தான். அவளது கூனை நிமிர்த்தி அவளை மறுபடி ஒரு அழகான யுவதியாக மாற்றினான். தனக்கு மறுவாழ்வு அளித்த கனிகண்ணனுக்கு நன்றி சொன்ன அந்த யுவதி தனக்கு கிடைத்த புது வாழ்வை கோவில் நற்பணிகளிலேயே தொடர்ந்து கழிக்க முடிவு செய்தாள்.

இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட வயது முதிர்ந்த காஞ்சி மன்னன், கனிகண்ணனை அணுகி, தனக்கும் தன் இளமையை மீட்டுத் தரக் கோரினான். மன்னனுக்குத் தான் வாழ்ந்த சுகபோக வாழ்க்கையை மறுபடி வாழ ஆசை. இதையறிந்த கனிகண்ணன் பேராசை பிடித்த அந்த மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்தான். கோபமுற்ற மன்னன் கனிகண்ணனை நாடு கத்தினான். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆழ்வார் தன்னால் தன் அன்பான சீடனின்றி வாழ இயலாது என்பதை உணர்ந்து தானும் திருமழிசையை விட்டுச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அவர் செல்லும்போது தான்மட்டும் செல்லவில்லை. தான் தினந்தோறும் வணங்கும் பெருமாளையும் தன்னுடன் வரச் சொல்லிக் கட்டளையிட்டார். அவர் பெருமாளிடம், “உமது பக்தனான நானே இந்த ஊரை விட்டுச் செல்லும்போது உமக்கு இங்கென்னய்யா வேலை? நீரும் தங்களுடைய பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு என்னுடன் கிளம்பி வாருமய்யா” என்றார்.

பக்தன் கட்டளையிட்டபடி உடனே தன் நாகப்பாயான ஆதிசேஷனைச் சுருட்டிக்கொண்டு திருமழிசையை விட்டு அவரும் கிளம்பி விட்டார். ஆக கனிகண்ணனைப் பின்தொடர்ந்து ஆழ்வாரும், ஆழ்வாரைப் பின்தொடர்ந்து பெருமாளும் மூவருமாகச் சேர்ந்து காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஊரின் எல்லையைச் சென்றடைவதற்குள் இருட்டி விட்டது. அதனால் இரவுப் பொழுதை அங்கேயே கழித்துவிட்டு காலையில் மறுபடி தங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்தனர். பெருமாள் இல்லாத காஞ்சி முன்னைப்போல் செல்வச்செழிப்புடன் இருந்திட முடியுமா என்ன? திருமழிசையை விட்டு பெருமாள் செல்லும்போது தன் மார்பில் குடியிருக்கும் ஸ்ரீதேவியையும் அல்லவா கூட்டிச் சென்று விட்டார். ஸ்ரீதேவி விட்டுச் சென்ற காலி இடத்தில் மூதேவி வந்து குடி புகுந்தாள். நாடே இருளில் மூழ்கியது. தரித்திரமும் அமங்கலமும் வந்து சேர அந்நாட்டுச் செல்வந்தர்களெல்லாம் தங்கள் செல்வங்களை இழந்தனர். இந்த விபரீத நிகழ்வுகளைக் கண்ட காஞ்சி மன்னன் மிரண்டு போனான். உடனே நாட்டு எல்லைக்கு விரைந்தான். நேரே சென்று அங்கு தங்கியிருந்த பெருமாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரிடம் மறுபடி திருமழிசை திரும்பும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் பெருமாளோ தன் பக்தன் ஆழ்வாரை விட்டு தன்னால் வர முடியாது என்று கை விரித்து விட்டார். வேறுவழியில்லாமல் மன்னன் அடுத்து ஆழ்வாரின் காலைப் பிடித்தான். ஆனால் அவரோ தன்னுடைய சீடன் கணிகண்ணன் இல்லாமல் தான் திருமழிசை ஒருபோதும் திரும்ப முடியாதென்று உறுதியாகக் கூறிவிட்டார். இதைக் கேட்டு நொந்து போன மன்னன் வேறு வழி தெரியாமல் கனிகண்ணனிடம் சென்று தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டான். மறுபடி அவனை திருமழிசை திரும்புமாறு வேண்டிக்கொண்டான். உடனே கனிகண்ணன் மனமிறங்கி ஊர் திரும்ப ஒப்புக்கொண்டார். சீடனுடனேயே ஆழ்வாரும் திருமழிசை திரும்பிவிட முடிவெடுத்தார். உடனே பெருமாளிடம் சென்று “நான் ஊர் திரும்பி விட்டால் நீர் மட்டும் இங்கிருந்து என்ன செய்வீர்? உம் பாயை சுருட்டிக்கொண்டு நீரும் மறுபடி என்னுடன் ஊர் திரும்பும்” என்றார். பெருமாளும் ஆழ்வார் ஆணையிட்டபடியே திருமழிசை திரும்ப முடிவு செய்தார். ஒருவழியாக சீடன் குரு மற்றும் பகவான் மூவரும் தங்களுடைய இருப்பிடத்திற்கே மீண்டும் திரும்பினர்.

தன் சீடனுக்காக ஒரு குரு கடவுளையே தனக்குக் கீழ்ப்படியச் செய்தது ஆச்சரியம் என்றால் தன்னுடைய சீடர்களுக்காகத் தன்னையே துன்புறுத்திக் கொண்ட குருமார்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றான மணிமேகலையை இயற்றியதாகக் கூறப்படும் சீத்தலைச் சாத்தனார். தன் சீடர்கள் சரியாகப் படிக்காவிட்டால் எழுத்தாணியால் தன் தலையை தானே குத்திக் கொண்டார் என்றும், அதனால் அவர் தலை எப்பொழுதும் சீழும் ரத்தமும் ஒழுகிக் காணப்பட்டதாகவும் கூறுப்படுவதுண்டு. இதனாலேயே அவருக்கு சீத்தலைச் சாத்தனார் என்ற பெயர் வந்ததாகக் கதையுண்டு.

மேலே கூறிய இரு கதைகளிலும் குருமார்கள் தங்களது சீடர்களைவிட வயது முதிர்ந்தவர்கள். ஆனால் ஞானமென்பது வயதையொட்டியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இளைய குருவுக்கானச் சாலச் சிறந்த உதாரணம் தட்சிணாமூர்த்தி. சிவனின் அவதாரமாகக் கருதப்படும் அவர் ஒரு மௌன குரு. ஆலமரத்தின் கீழ் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் பேசுவதில்லை. ஆனாலும் சீடர்கள் அவரிடம் கேட்க இருந்த சந்தேகங்கள் எல்லாம் மாயமாக மறைந்து விடுகின்றன. தான் இயற்றிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுவது போல் ஞானத்தை போதிக்கும் குருவோ இளையவர், ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரும் தாடி நரைத்த முனிவர்கள்! ஆனால் இப்படிப்பட்ட ஞானகுருவான சிவனே ஒரு கட்டத்தில் சுவாமி மலையில் தன் மகன் முன் அடக்கத்துடன் அமர்ந்து ஓம்காரத்தின் பொருளை அறிந்துகொள்ள வேண்டி வந்தது.

ஞானபண்டிதனாக அறியப்படும் முருகனைப் பற்றிய இன்னொரு கதையுமுண்டு. கச்சியப்பர் கந்தபுராணம் இயற்றியதாகக் கருதப்படும் காஞ்சியின் குமரகோட்டத்தில் காட்சி தரும் முருகனின் பெயர் பிரம்மசாஸ்தா. படைக்கும் கடவுளான பிரம்மா பிரணவ மந்திரத்திற்குத் தவறாக அர்த்தம் சொன்னதால் முருகன் கையால் தலையில் குட்டுப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். பிரம்மாவிடமிருந்து சிருஷ்டிக்கும் பொறுப்பைத் தற்காலிகமாக கந்தசாமி ஏற்றுக்கொண்டதாகக் கதை. அதனால் அவர் பிரம்ம சாஸ்தா என்று அறியப்படுகிறார், அதாவது பிரம்மாவுக்கே ஆசான் ஆகியவர்.

இதே போல் பிஞ்சில் பழுத்த பழமாக உபநிடதங்களிலும் மகா புராணங்களிலும் பவனி வரும் குமாரர்கள் பிரம்மாவின் மானசீகப் புத்திரர்கள். இளம் பருவத்திலேயே பிரம்ம ஞானம் அடைந்தவர்கள். சாந்தோக்கிய உபநிடத்தில் மற்றும் மகாபாரதத்திலும் சனத்குமாரர் என்னும் குமாரர் நாரதருக்கு உபதேசம் செய்வதாக உள்ளது. சனத்குமாரருக்கு நிகரானவர் பௌத்தக் கதைகளில் (ஜாதகக் கதைகள்) தோன்றும் ஔடத குமாரர். இவர் புத்தரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

எப்படி வயதுக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லையோ, அப்படியே குரு என்பவர் ஒரு அந்தணராக மேட்டுக்குடியினராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர் எங்கிருந்து வருகிறார் என்பது முக்கியமில்லை, அவர் என்ன கூறுகிறார் என்பதுதான் முக்கியம் என்ற கருத்தைப் பறைசாற்றுகின்றன நம் கதைகள்.

மகாபாரதத்தின் வனபர்வத்தில் அறத்துடன் வாழ்ந்த ஒரு கசாப்புக்காரனின் கதை வருகிறது. ஒருநாள் ஒரு அடர்ந்த வனத்தில் முனிவர் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்து ஒரு கொக்கு அவர் தலையில் எச்சம் இட்டுவிட்டது. கொதித்தெழுந்த முனிவர் அந்தக் கொக்கைத் தன் பார்வையால் எரித்துக் கொன்றார். சிறிது நேரத்தில் அவருக்குப் பசி தோன்ற பிட்சை கேட்டு வாங்குவதற்காக நகரத்துக்கு வந்தார். அங்கு ஒரு வீட்டின் முன் சென்று பிட்சை கேட்டுக் குரல் எழுப்பினார். அந்த வீட்டு எஜமானி வீட்டினுள் இருந்தபடியே அவரிடம் சற்றுப் பொறுத்திருக்குமாறு கூறினாள். தன் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதாகவும் முனிவர் சற்றுப் பொறுத்திருந்தால் தான் வந்து பிட்சையிடுவதாகவும் கூறினாள். ஆனால் முனிவருக்குப் பொறுமையில்லை. அவளுக்குச் சாபமிட்டு விடுவதாக எச்சரித்தார். இதைக் கேட்ட வீட்டு எஜமானி சிறிதும் கலங்காது முனிவர் தன்னைச் சுட்டெரித்துக் கொல்ல தானொன்றும் ஒரு பாவபட்ட கொக்கல்ல என்று பதிலடி கொடுத்தாள். இதைக்கேட்ட முனிவருக்கு ஆச்சரியம்! அடர்ந்த காட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி இந்தப் பெண்மணி எப்படி அறிந்திருந்தாளென அவளிடம் கேட்டார். அதற்கு அவள் தன் கணவனுக்குப் பக்தி சிரத்தையுடன் சேவை செய்து வந்ததால் தனக்கு முக்காலமும் உணரும் சக்தி கிடைத்ததாக முனிவரிடம் கூறினாள்.

இதைக் கேட்ட அந்த முனிவர் வெட்கித் தலை குனிந்தார். தனக்கு உலகத்தில் கற்க வேண்டியது இன்னுமும் நிறைய உள்ளது என்பதை உணர்ந்தார். இதையறிந்த அந்தப் பெண்மணி முனிவரை மிதிலை மாநகரில் தன்னறத்துடன் வாழும் கசாப்புக்காரனைத் தன் குருவாக ஏற்கச் சொல்லி அனுப்பி வைத்தாள். உயர்குலத்து அந்தணனான தான் ஒரு கசாப்புக் கடைக்காரனிடம் என்ன கற்க முடியும் என்ற சந்தேகத்துடனே மிதிலைக்குச் சென்றார் அந்த முனிவர். அங்கு, கசாப்புக்காரனைச் சந்தித்து அவனிடம் இவ்வளவு இம்சை வாய்ந்த தொழில் செய்பவனுக்கு அறத்தைப் பற்றிப் பேச எவ்வாறு இயலும் என்று கேட்டார். அதற்கு அவன், எந்தத் தொழிலுமே களங்கமானதோ ஈனமானதோ இல்லை, அதன் மதிப்பு அதை நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதில் இருக்கிறது என்றான். அந்தக் கசாப்புக்காரனுக்கும் முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல் வியாத கீதை என்னும் பெயரில் அறியப்படுகிறது. ‘வியாத’ என்றால் சம்ஸ்கிருதத்தில் கசாப்புக்காரன் என்று பொருள். வியாத கீதை அறத்தைப் பற்றியும், பலனை எதிர்பாராது செய்யும் கருமத்தைப் பற்றியும் பேசுகிறது.

மறுபடி மறுபடி நம் கலாசாரத்தில் வலியுறுத்தப்படுவது என்னவென்றால் குரு என்பவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ அல்லது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. எவர் ஒருவர் நமக்கு ஞானத்தை ஊட்டக்கூடிய தகுதி பெற்றிருக்கிறாரோ அவர் எந்த குலத்திலிருந்து வந்தாலும் நமக்கு ஞானகுருவாகிறார்.

இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் ஆதிசங்கரரின் கதையிலுள்ளது. ஒருமுறை சங்கரர் வாரணாசியில் தன் சீடர்களுடன் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்படிச் செல்லும் வழியில் எதிர்பாராமல் திடீரென ஒரு சண்டாளன் வந்து விட்டான். அவன் தீண்டத்தகாதவனாகையால் சங்கரரும் அவரது சீடர்களும் அவனை ஓரமாக ஒதுங்கி அவர்களுக்கு வழிவிடச் சொல்லிக் கேட்டார்கள். பதிலுக்கு அவன் அவர்களிடம், “நீங்கள் என் உடலை நகரச் சொல்கிறீர்களா அல்லது என் ஆன்மாவையா? ஆன்மா எல்லோர்க்கும் ஒன்றுதானென்றால் உடலால் அது அசுத்தமாகாது. அத்வைத உலகில், அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபடாத உலகில், ஒரு அந்தணனும் சண்டாளனும் எப்படி வேறுபட முடியும்?” என்று கேட்டான். இதைக் கேட்ட சங்கரருக்கு அதிர்ச்சி! இவ்வளவு நுட்பமாகக் கேள்வி கேட்கும் இந்த சண்டாளன் எப்படி ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியும்? அந்த நொடியிலேயே சண்டாளனை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார் அவர். பிறகு இந்தச் சம்பவத்தை வைத்து மனீஷா பஞ்சகம் என்ற செய்யுளை இயற்றினார்.

முன்னே சொன்னதுபோல குரு என்பவர் எப்படி மேட்டுக்குடியிலிருந்து வரவேண்டியது கட்டாயமில்லையோ, அப்படி அவர் சந்நியாசியாக, முற்றும் துறந்தவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இல்லறத்தில் ஈடுபடுபவன்கூட ஒரு முதிர்ந்த ஆசானாக இருக்க முடியம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஜனகர். மிதிலைக்கு அரசனான ஜனகர் இல்லறத்தில் இருந்துகொண்டே தாமரை இலை மேல் தண்ணீராக வாழ்ந்த ஒரு பிரம்மஞானி.

ஒருமுறை வேதவியாசர் தன் மகன் சுகரை ஜனகரிடம் சென்று தீட்சை பெற்றுவர அனுப்பி வைத்தார். ஆனால் சுகருக்கு அதில் நாட்டமில்லை. இல்லறத்தில் வாழும் ஜனகர் தன்னைப் போன்ற சந்நியாசிக்கு எவ்வாறு பிரம்ம ஞானத்தை அருளிட முடியும் என்ற சந்தேகம் அவருக்கு. தன் சந்தேகத்தை சுகர் ஜனகரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். இதற்கு ஜனகர் பதில் ஏதும் கூறவில்லை. மாறாக சுகரிடம் ஒரு பால் செம்பைக் கொடுத்து அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனையை சுற்றி வரச் சொன்னார். ஆனால் பாத்திரத்திலிருந்து பால் ஒரு சொட்டுக்கூட சிந்தக்கூடாது என்பது நிபந்தனை. சுகரும் ஜனகர் ஆணையிட்டபடியே அரண்மனையைச் சுற்றி வந்தார். அவர் சென்ற வழியெங்கும் கண்ணைக் கவர்ந்து நெஞ்சை அள்ளக் கூடிய பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஆனால் அந்தப்புரத்துப் பேரழகிகள் ஆகட்டும், சமையலறை தின்பண்டங்களாகட்டும் அல்லது வழியெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆகட்டும், இவை எதுவுமே சுகரின் கண்களுக்குத் தென்படவில்லை. அவரின் கவனம் முழுவதும் அந்த பால் செம்பின் மேலேயே இருந்தது. சற்றுகூடக் கவனம் சிதறாமல், ஒரு சொட்டு பால் நிலத்தில் சிந்தாமல் ஜனகர் கூறியபடி தன் அரண்மனை வலத்தை முடித்த சுகர் வெற்றிக் களிப்புடன் ஜனகர் முன் ஆஜரானார். ஜனக மஹாராஜா அவரைப் பார்த்து, “தங்களுக்கு நான் வைத்த பரிசோதனையில் வெற்றி பெற்றுத் திரும்பி இருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம். இப.பொழுது கூறுங்கள், தாங்கள் சென்ற வழியில் தாங்கள் என்னவெல்லாம் கண்டீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்ட சுகர் தன் கவனம் முழுவதும் பால் செம்பில் இருந்ததால் மற்றவற்றில் தான் கவனம் செலுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அதற்கு ஜனகர், தானும் இல்லறத்தில் அவ்வாறே இருந்துகொண்டு பிரம்ம ஞானியாக வாழ்வதாகக் கூறினார். அறத்தைக் கடைப்பிடிப்பதில் தன் கவனம் முழுவதையும் செலுத்துவதால் தன்னைச் சுற்றியுள்ள சுகபோகங்கள் ஒருபோதும் தன்னைப் பாதிப்பது இல்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட சுகர் மனம் மாறி ஜனகரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். ஜனகருக்கும் சுகருக்கும் இடையிலான உரையாடல் மகா உபநிஷத்தில் வருகிறது.

ஆண்கள் மட்டுமல்ல, பெண் குருமார்களைப் பற்றிய கதைகளும் நம் கலாசாரத்தில் நிறைய உண்டு. திரிபுரா ரகசியம் மற்றும் யோக வாசிஷ்டம் என்னும் நூல்களில் சொல்லப்பட்டதுபோல் ஹேமலேகா மற்றும் சுபலா என்ற இரு பெண்மணிகள், தேக இன்பத்தை நாடும் தன் கணவன்மார்களைப் பிரம்மஞானத்தை நோக்கி அழைத்துச்சென்ற கதைகளும் உண்டு. எமனே குருவாக மாறி உபதேசித்த நசிகேதசின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இவ்வளவு ஏன், நம் கலாசாரத்தில் மிருகங்களும் பறவைகளும் கூட ஞானத்தை போதித்த கதைகள் உண்டு.

மேலே சொன்ன கதைகளில் கண்டது போல் குரு என்பவர் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும் சீடனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பாலமாகிறார். சாரமற்ற இந்த சம்சாரத்தை நாம் கடந்து செல்ல உதவும் ஒரு தோணியாகிறார். இந்தத் தோணியில்லாமல் நாம் கரை சேர்வது கடினம்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு


பணம் முக்கியம். அதைவிட பத்துஜீ முக்கியம்

விவேகானந்தர் பாறைக் குழு வெளியிட்ட புத்தகத்தை நானும் கண்ணனும் விற்பனை செய்தோம், சாதனை செய்தோம், ஒரு வாரத்தில் பன்னிரண்டு புத்தகங்கள் விற்றோம் என்று சொன்னேன் அல்லவா? கணக்கு தப்பு. விற்பனை பன்னிரண்டு அல்ல, தொண்ணூற்று இரண்டு.

அது ஒரு தனிக் கதை. இந்தத் தனிக்கதை வீரக் கதையா, சோகக் கதையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

நானும் கண்ணனும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போனோம். சைக்கிளில் போனால் வழி திறக்காது என்பதால் பேருந்தில் போய்விட்டு நடந்தே போனோம். அதுமட்டுமல்ல, அரை ட்ரௌசருக்கு அனுமதி கிடைக்காது என்பதால் சலவை செய்யப்பட்டு இஸ்திரி செய்யப்பட்ட முழுக்கால் சட்டையோடுதான் போனோம்.

வரவேற்பறையில் இருந்த பெண்மணிக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ் தட்டுப்படவில்லை. என்னைப் பொருத்தவரை எவ்வளவுதான் ஆங்கிலப் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்தாலும் சம்பாஷணை சமயத்தில் அது கை கொடுக்காது என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். சில நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதத்தை அங்கு வந்த ஒரு பெரியவர் கவனித்துவிட்டார். குளுகுளு லிப்டில் ஏற்றி எங்களை அவருடைய அறைக்கு அழைத்துச்சென்றார். போகிற வழியில் அவருக்குக் கிடைத்த மரியாதையை வைத்தே அவர்தான் இங்கே முதலாளி என்பதை யூகித்துவிட்டோம்.

அந்த சவேரா ஹோட்டல் முதலாளி ராமராகவ ரெட்டி எங்களுக்குக் கொடுத்தது இனிய அதிர்ச்சி. விவேகானந்தர் பாறைக்குழு பற்றியோ இந்தப் புத்தகம் பற்றியோ எதையும் நாங்கள் அவருக்கு விளக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எண்பது புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் காசோலையை வாங்கிச் செல்லும்படிச் சொல்லிவிட்டார்.

எனக்கும் கண்ணனுக்கும் இடையே எப்போதும் ஒற்றுமைகள் குறைவு, வேற்றுமைகள் அதிகம் என்பதுதான் யதார்த்தம். இருந்தாலும் சவேரா ஹோட்டல் லிப்டில் இறங்கி வாசலைக் கடந்து வெளியே வந்த பிறகுதான் இருவருடைய புத்தியும் ஒரே திசையில் பயணித்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். எண்பது புத்தகங்களை விற்றால் கமிஷன் தொகை மட்டும் ரூபாய் இரண்டாயிரம். தர்ம நியாயப்படி இதைப் பிரித்துக்கொண்டால் ஆளுக்கு ரூபாய் ஆயிரம். இதை எப்படி செலவு செய்வது என்கிற ரீதியில்தான் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தோம். கண்ணனுடைய தேர்வு புதுச் சட்டை புது பேண்ட். என்னுடைய தேர்வு எலிபன்ஸ்டன் தியேட்டரில் ஆங்கிலப் படம் என்று ஆரம்பித்து கற்பனை ஒருமாதிரி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது…

மறுநாள், பத்துஜீ என்று அழைக்கப்படும் பத்மநாபன்ஜீயை சந்தித்தோம். அவர்தான் எங்களை வழிநடத்துகிற மாலுமி. பத்துஜீ காரியத்தில் கவனமாக இருப்பார். கொள்கையில் உறுதியாக இருப்பார். நாங்கள் அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றாலும் அவர் எடுத்த முடிவை நாங்கள் ரசிக்கவில்லை. இவ்வளவு பெரிய வியாபாரம் செய்துவிட்டு அதில் இவ்வளவு ரூபாய் கமிஷன் வரும் என்று வணிக ரீதியில் கணக்குப் போடுவது தவறு என்றும், தேச சேவைக்கு வந்தவர்கள் இதற்கெல்லாம் சபலப்படக்கூடாதென்றும் சொல்லி முடித்துவிட்டார்.

பிறகு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வருத்தப்படுகிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டதால் எங்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘புத்தகங்களை டெலிவரி செய்வது, காசோலையை வாங்கி வருவது என்பதற்கெல்லாம் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

பத்துஜீ புறப்பட்டுப் போன பிறகு எனக்கும் கண்ணனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. பணம் முக்கியம் என்றாலும் அதைவிட பத்துஜீ முக்கியம் என்ற தீர்மானத்திற்கு முடிவில் வந்து அந்த விஷயத்தை அதோடு விட்டுவிட்டோம்.

காசு கம்மியாகவும் நாட்டுப்பற்று அதிகமாகவும் இருந்த அந்த நாட்களில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. நான் கண்ணன் மூன்றாவதாக வாசு பிரசன் ஆகிய மூவரும் அடையாறு பகுதியில் சங்க நடவடிக்கைகளுக்கான தளம் அமைத்துக் கொண்டிருந்தோம். வாசு பிரசன் என்னுடைய கல்லூரித் தோழரான விஷ்ணுவின் தம்பி என்பதைக் குறித்துக்கொள்ளவும். நாங்கள் அடையாறு காந்தி நகரின் ஆற்றங்கரைப் பகுதியில் ஷாகா நடத்தினோம். இதில் வாசுவுக்கு ஓரளவு கொள்கைத் தெளிவு உண்டு. எனக்கும் கண்ணனுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்பாடம். கொள்கை, தத்துவம் ஆகியவற்றில் நான் பின்தங்கியிருந்தாலும் கூட்டம் சேர்ப்பதில் எனக்குத்தான் முதலிடம். ஷாகாவிற்கு வருகிறவர்கள் இருபது இளைஞர்கள், இதில் பதினைந்து பேர் என்னால் கொண்டுவரப்பட்டவர்கள் என்கிற பெருமிதம் எனக்கு இருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியாக ஷாகாவுக்கு வருகிறார்கள். என்னுடைய பிரவேசத்தைப் பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டேன். வாசு அன்றைய நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவன். கல்லூரியைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நண்பர்கள் அழைத்த கூட்டத்திற்கு வாசு போயிருக்கிறான். அங்கு போன பிறகுதான் தெரிந்தது, அது பகத்சிங்குடைய தாயார் வித்யாவதிக்கான வரவேற்புக் கூட்டம் என்று. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. பாராட்டிப் பேசுவதற்காக சிவாஜி கணேசனை அழைத்திருந்தார்கள். இதை எல்லாம் பார்த்துப் பரவசப்பட்ட வாசு உடனே வித்யார்த்தி பரிஷத்தில் தன்னை இணைத்துக்கொண்டான். எப்படியும் தாய்க் கழகத்திலும் தன்னைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் இணைந்துவிட்டான்.

கண்ணன் நல்ல வசதியான குடும்பத்துப் பையன். எனக்கு நெருக்கமானவன். மணிக்கணக்கில் நான் சங்கத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முகபாவம் மாறாமல் கேட்டுக்கொண்டிருப்பான். ஓரளவில் எனக்கே சலித்துப்போய் நானே நிறுத்திவிடுவேன்.

சென்னை லாயட்ஸ் ரோடில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு நான் போனோன். ஆர்ய சமாஜம்தான் முகாமுக்கான இடம். நான் போனது முகாமுக்கு முதல்நாள் – சில ஏற்பாடுகள் விஷயமாக. கண்ணனையும் என்னோடு அழைத்துப்போனேன்.

போன இடத்தில் அண்ணா சாலையில் உள்ள ஒரு கடைக்கு போகச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள் – ஏதோ ஒரு மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக. குறிப்பிட்ட மருந்துள்ள குறிப்பிட்ட கடையைக் கண்டுபிடித்து அது இங்கே கிடைக்காது, இன்னொரு இடத்தில் பார்க்கவும் என்று அவர்கள் சொன்னதன் பேரில் திரும்பி வந்துகொண்டிருந்தேன்.

நான் வந்த பஸ் லாயட்ஸ் ரோடு ஆர்ய சமாஜம் அருகில் வந்ததும் இறங்கிவிட்டேன். ஆர்ய சமாஜத்தின் உள்ளே நுழையும் முன் ஒரு ஆச்சரியம் என்னைத் தாக்கியது. பாத்திரங்கள் நிரம்பிய கட்டை வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு கண்ணன் உள்ளே போய்க்கொண்டிருக்கிறான். மேலே சட்டை இல்லை, பேன்டை மடித்துவிட்டு முக்கால் சைஸ் ஆக்கிவிட்டான். உடம்பெல்லாம் வியர்வை.

கண்ணனுடைய மாற்றத்திற்கு காரணம் என்ன? மணிக்கணக்காக நான் பேசியபோதெல்லாம் ஏற்படாத மாற்றம் இரண்டு மணி நேரத்தில் ஏற்பட்டது எப்படி என்பதைப் பிறகு பல சமயங்களில் கண்ணன் விரிவாகச் சொன்னான். அதை இப்போது ஒரு வரியில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். சங்கத்தின் அதிகாரியாக இருந்த பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் அண்ணாமலைஜிதான் அந்த மாயத்தைச் செய்தவர். அவர்தான் ஆர்ய சமாஜத்தில் கண்ணனை மாற்றியமைத்திருக்கிறார்.

அடையாரின் ஆரம்ப ஷாகா நாட்களில் ஆர்வமாக இருந்தவர்கள் இரண்டு பேர். முதலில் பாலாஜி. பாலாஜியின் அப்பா அரசு வழக்கறிஞர், இனிமையானவர், அனுஷ்டானங்களுக்குட்பட்டவர். பாலாஜியை வர்ணிப்பதற்குச் சிரமப்பட வேண்டாம், இதற்கு எதிர்ப்பதம்! பாலாஜி அடையாறு ஆற்றங்கரையில் இருக்கும் செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளியின் மாணவன். தன்னுடைய வகுப்புத் தோழன் சரத்தை பாலாஜி ஷாகாவுக்கு அழைத்து வந்தான்.

சரத், சென்னைக்குப் புதுவரவு. டெல்லியிலிருந்து வந்ததால் தமிழைவிட இந்தியில்தான் பழக்கம் அதிகம். சரத்தின் தந்தை சுயமரியாதைக்காரர். சரத்தின் அண்ணன் சுதர்சன் ஏற்கெனவே எனக்கு வேண்டப்பட்டவன் ஆகிவிட்டபடியால் சரத்தும் எனது உள் வட்டத்திற்குள் வந்து ஷாகாவிற்கும் வந்துவிட்டான்.

இதில் இன்னொரு சூட்சமத்தையும் சொல்லிவிடுகிறேன். ஷாகா நடக்கிற இடம் ஏற்கெனவே நாங்கள் கபடி ஆடிக்கொண்டிருந்த இடம்தான். எனவே நண்பர்களிடம் கபடியாட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்குப் போவதற்கு முன் கொடி வணக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி சாதா கபடியை ஷாகா கபடியாக மாற்றிவிட்டேன்.

இருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய பழைய கபடியின் விளையாட்டுத் திட்டத்தில் ஒரு எழுதப்படாத விதி இருந்தது. விளையாட்டின்போது தகராறு ஏற்பட்டு யாராவது சண்டை போட்டால் அவர்களை யாரும் தடுக்கக்கூடாது; இரண்டு பேர் சண்டை போட ஆரம்பித்தவுடன் மற்றவர்கள் விலகி வட்டமாக நின்று அதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம்.

பாலாஜிக்கும் சரத்துக்கும் சண்டை வந்துவிட்டது. சண்டை வந்தவுடன் நாங்கள் வட்டம் கட்டினோம். முக்கிய சிக்ஷக்காக இருக்கிற வாசுவுக்கு இது புரியவில்லை. விசிலை ஊதினான், ஊதினான், ஊதிக்கொண்டே இருந்தான்.

பாலாஜியும் சரத்தும் காயங்களோடு வீட்டிற்குப் போய்விட்டார்கள். ஷாகாவில் சண்டை போடக்கூடாது என்பதையும் இதனால் இந்து ஒற்றுமை பாதிக்கப்படும் என்பதையும் பலவாறாக உணர்த்த வாசு முயற்சி செய்தான். எனக்கு அது சுவாரஸ்யப்படவில்லை. சண்டை போடக்கூடாது என்பதைச் சொன்னால் இருபது பேர் நம் கைவிட்டுப் போய்விடுவார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.

பத்துஜி வந்தவுடன் வாசு என்மீது குற்றப்பத்திரிக்கையை வாசித்தான். அதிகமாகச் சட்டம் போட்டால் ஆள் சேர்க்க முடியாது என்றேன் நான். பத்துஜி, “ஆள் கணக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், நாலு பேர் இருந்தாலும் ஷாகா ஒழுங்காக நடக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டார். நிலைமையைச் சமாளிப்பதற்காக ஷாகா பெசன்ட நகருக்கு மாற்றப்பட்டது.

இன்று வாசு பெங்களூருவில் இருக்கிறான். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்து பதவிப் படிகளில் ஏறி லெப்டிநென்ட் கர்னலாகி ஓய்வு பெற்று பெங்களூருவில் வசிக்கிறான். பாலாஜியின் பணி ஒரு தொண்டு நிறுவனத்தில். சரத் என்கிற சரத்குமார், தமிழகத்தின் திரைப்பட நட்சத்திரங்களில் முன்னணியில் இருக்கிறான்(ர்).

(தொடரும்.)