Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பகுதி 4 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்



குறுகிய இனவாதம்
சுதந்திரத்தைப் பெறுவதிலிருந்து நம்மைத் தடை செய்கிறது

பகுதி 
சென்ற கட்டுரையில் செய்யப்பட்ட அவதானிப்புகள் பல அறிவுசார்ந்த
கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் பிரச்சினையின் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு
வருவதற்கு முன்பு அவற்றை விரிவாக விவாதிப்பது அவசியமாகும். ஹிந்து மற்றும் இஸ்லாமிய
மதங்களும் கலாசாரங்களும் தங்களைப் பின்பற்றுபவர்களை இயற்கையாகவே ஒருவருக்கொருவர் விரோதப்
போக்குடையவர்களாக மாற்றும் அளவிற்கு அடிப்படையாக வேறுபட்டதா? அல்லது இன்னும் குறிப்பாக,
ஒன்றுக்கொன்று விரோதமானதாக இருக்கிறதா? அப்படியானால், இரண்டிற்கும் இடையில் ஒரு ஒற்றுமையை
ஏற்படுத்த நமக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன? ஹிந்து மதம் கறாராக வரையறுக்கப்பட்ட
ஒன்று அல்ல. அப்படி அதை வரையறுப்பதும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அது ஒரு வாழ்க்கை
முறை. அதில் சாதி ஒரு முக்கிய அங்கம். சாதி இருக்கும் வரை, மற்ற மத சமூகங்களுடன் எளிதான,
சாத்தியமான ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அதை சகிப்புத்தன்மையுடையதாகவோ முற்போக்கானதாகவோ
மாற்ற இயலாது.
இருப்பினும், ஒரு கடுமையான சாதி அமைப்பு மற்றும் சமூக ஒழுக்க
நெறிமுறைகள் இருந்தபோதிலும், உலகின் அனைத்து பெரிய மதங்களிலும் ஹிந்து மதம் மிகவும்
சகிப்புத்தன்மை கொண்டது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஹிந்து மதம் மற்ற மதங்களைச்
சேர்ந்த மக்களின் நம்பிக்கைகள் அல்லது விஸ்வாசத்தைக் கேலி செய்வதோ, இகழ்வதோ இல்லை:
பிற மதத்தினர் தங்கள் சொந்த நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதற்கும் அதன்மூலம் ஆன்மிக
திருப்தியைப் பெறுவதற்கும் உள்ள உரிமையை இது கேள்விக்குட்படுத்தாது. இரட்சிப்பின் ஒரே
ராஜபாட்டை என்று அது பிரத்தியேக உரிமை கோரவில்லை. மற்றவர்களை நரகத்திலிருந்தோ அல்லது
அழிவுகளிலிருந்தோ காப்பாற்றுவதாகச் சொல்லி அவர்களை மதம் மாற்ற அது முனைவதில்லை. சொல்லப்போனால்,
வெவ்வேறு நபர்களுக்கு, உடல், மன மற்றும் ஆன்மிக வளர்ச்சிகளின் வெவ்வேறு கட்டங்களில்,
கடவுளை அணுகுவதற்கும் ஆத்மதிருப்தியையும் மோட்சத்தையும் பெறுவதற்கும் வெவ்வேறு வழிகள்
உள்ளன என்பதை இது வெளிப்படையாகக் கூறுகிறது. அதைப் பின்பற்றுபவர்களுக்கு, அவர்கள் விரும்புவதை
நம்புவதற்கும், அவர்கள் விரும்பியபடி வழிபடுவதற்கும் முழு சுதந்திரத்தை ஹிந்து மதம்
அனுமதிக்கிறது.
அதன் கடுமையான சமூகக் குறியீடும் சாதி அமைப்பும் கூட இப்போது
தளர்ந்து கொண்டு வருகின்றன. முன்பெல்லாம் ஹிந்து சமூகம் அதன் உறுப்பினர்களை மிகச்சாதாரணமான
காரணங்களுக்காக, அடிப்படையற்ற குற்றங்களைச் சாட்டி அதிலிருந்து வெளியேற, அதாவது சாதிப்பிரஷ்டம்
செய்துவந்
துள்ளது. தற்போதைய
காலகட்டத்தில் அதன் சமூகக் கோட்பாடுகளைப் புறக்கணிக்கும் உறுப்பினர்களுடன் எல்லாவிதமான
சமரசங்களையும் செய்து கொள்ளத் தயாரானதோடு, அவர்களைத் தன் சமூகத்திலேயே வைத்திருக்க
மெனக்கெடுகிறது. ஒருகாலத்தில் உயர்சாதிக் குடும்பங்கள், பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள்,
பண்பட்டவர்கள் ஆகியோர் கூட ஹிந்து சமூகத்திலிருந்து அடிப்படையில்லாத காரணங்களுக்காக,
சந்தேகத்தின் பெயரிலும் மதவெறியின் பெயரிலும் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டனர். இப்போது
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட பொறுத்துக்கொள்ளப்படுகிறார்கள், மன்னிக்கப்படுகிறார்கள்,
கௌரவிக்கப்படுகிறார்கள். ஹிந்து சமுதாயத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் உள்ளனர்.
அதில் கௌரவமான, மரியாதைக்குரிய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அதன் சமூகக் கோட்பாடுகளின்
மிக முக்கியமான நியதிகளை வெளிப்படையாக மறுத்து, மீறுகின்றனர். சாதிக்கு வெளியே திருமணம்
செய்து கொண்டவர்கள், வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்தவர்கள், தடைசெய்யப்பட்ட உணவை
உண்டு அதை மறைக்காத ஆண்கள், தடைசெய்யப்பட்ட மதுபானங்களை எடுத்துக்கொள்பவர்கள், வேதங்களைக்
கேலி செய்யும் நாத்திகர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.. இவர்களில் ஹிந்து சமுதாயத்தின்
குறிப்பிடத்தக்க தலைவர்கள் சிலர் இருப்பதைக் காண்கிறோம்.
இந்த விசித்திரமான மாற்றத்தை நாம் எவ்வாறு விளக்க முடியும்?
இதற்கான காரணம் என்ன? இது எதைக் குறிக்கிறது? என்னைப் பொருத்தவரை, இந்த மாற்றம் உயர்நிலை
ஹிந்துமதம் என்பது அதன் வடிவங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மேலானது என்று அதன் சமூகம்
மற்றும் உறுப்பினர்கள் உணர்ந்ததால் ஏற்பட்டிருக்கிறது. அது மனம், உணர்வு சார்ந்த கலாசாரம்.
குறிப்பிட்ட நியதிகளின் அடிப்படையில் உண்பது, குடிப்பது, ஏன் மணம்புரிவது ஆகியவற்றைச்
சார்ந்ததல்ல. இந்த உணர்தல்தான், படிவங்களுக்கும் சூத்திரங்களுக்கும் மேலாக உயர்ந்துள்ள
ஆண்களையும் பெண்களையும் ஹிந்து மதத்தைப் பற்றி இன்னும் பெருமிதம் கொள்ள வைக்கிறது,
தங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனுக்காக அதன் உறுதிப்படுத்தப்பட்ட
தொடர்பைப் பற்றிக் கவலை கொள்ள வைக்கிறது. இந்த உணர்தல்தான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள்,
வெளிநாட்டுப் பெண்களின் கணவர்கள், வேதங்களைக் கேலி செய்பவர்கள், சுருக்கமாக, வழக்கத்திற்கு
மாறான மற்றும் வெளிப்புறமாக இந்து அல்லாத மக்களைப் போன்று தோன்றுபவர்கள் பழமைவாதிகளோடு
தோளோடு தோள் சேர்ந்து ஹிந்து மதத்தின் உரிமைக்காக, அதன் கோவில்கள், தலங்கள், விழாக்கள்,
நடைமுறைகள், ஆகியவற்றைக் காப்பதற்காக முன்னிற்பதை விளக்குகிறது. ஹிந்து மதத்தின் மீது
ஹிந்து அல்லாத மத போதகர்கள், பிரசாரம் செய்வோர் ஆகியோர் செய்யும் கண்டனங்களை அவர்கள்
கடுமையாக எதிர்க்கவும் இதுவே காரணமாக அமைகிறது.
ஆனால் இந்த நிகழ்வை விளக்கும் மற்றொரு காரணமும் உள்ளது. ஒருவரது
பொருளாதார மற்றும் அரசியல் வாய்ப்புகள் அவர் சார்ந்த சமூகத்தில் உள்ளோருடைய வாய்ப்புகளுடன்
பிணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் ஹிந்துக்களின் பெரும் பகுதியிலிருந்து தங்களைத்
தாங்களே பிரித்துக் கொண்டார்கள். அவர்களில் சிலர் தாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று பெருமிதத்துடன்
வெளிப்படையாகக் கூறினர். வகுப்புவாத அமைப்பிற்கு அரசாங்கம் அளித்த அங்கீகாரம் இந்த
நிலைமையை மாற்றியது. ஹிந்துக்கள் என்று சொன்னாலொழிய தங்களுக்கு எந்த அந்தஸ்தும் இல்லை,
அவர்கள் இஸ்லாத்தைத் தேர்வுசெய்தாலன்றி அவர்களின் குழந்தைகளுக்கும் உரிமை இருக்காது
என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்நிலைக்கு அவர்கள் தயாராக இல்லை. எனவே, அவர்கள் தங்களை
ஹிந்துக்கள் என்று அறிவித்து, முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படாத பொதுத் தொகுதிகளிலிருந்து
தேர்தல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதற்காக ஹிந்து உரிமைகளின் காவலர்கள் என்றும்
தங்களைக் கூறிக்கொள்ள வேண்டியிருந்தது.
ஹிந்து மதத்தைப் போலல்லாமல், இஸ்லாம் என்பது கோட்பாடுகள்
மற்றும் கட்டளைகள் சார்ந்த நம்பிக்கை. ஒவ்வொரு முஸல்மானும் ஒரு நொடி தவறாமல் கடவுளை
நம்புவது மட்டுமல்லாமல் (லா அல்லாஹ் இல் அல்லாஹ்), முஹம்மது அவருடைய தூதர் என்றும்,
குர்ஆன் அவருடைய வார்த்தை என்றும் நம்ப வேண்டும். பழமைவாதிகளின் கூற்றுப்படி, முஹம்மது
தூதர்களில் கடைசியானவர் என்றும் அவர் சொன்னதும் செய்ததும் அவருடைய உண்மையுள்ள சீடர்கள்
அனைவரையும் பிணைக்கிறது என்பதையும் அவர் நம்ப வேண்டும். இஸ்லாத்தை ஒரு வகையான உயர்
அமானுஷ்ய நிலைக்கு உயர்த்த முயன்றவர்கள் இருந்தனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் கணிசமான
வெற்றியை எட்டவில்லை. இஸ்லாம் அதன் அடிப்படை நோக்கங்களையும் காரணங்களையும் கொண்டு,
அதைப் பின்பற்றும் பெரும்பான்மையானவர்களுடன் கடந்த பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
இஸ்லாத்தின் ஆகப்பெரிய பிரச்சினை அது தன் கோட்பாடுகளைக் கடுமையாக வலியுறுத்துவதுதான்
என்ற என்னுடைய கருத்தை என் இஸ்லாமிய நண்பர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். அதன்
அரசியல் ரீதியான வீழ்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்தது. அதைத் திருத்தாவிட்டால், உலகளாவிய
அரசியல் காரணிகளில் ஒன்று என்ற நிலையை இஸ்லாம் மீண்டும் எட்ட இயலாது. கிறிஸ்துவம் ஒரு
காலகட்டத்தில், ஏன் இப்போதும் இருப்பதைப் போலவே இஸ்லாமும் பல பிரிவுகளாகவும், உட்பிரிவுகளாகவும்
பிரிந்து உள்ளது.
ஹிந்து மதத்தில் உள்ள பிரிவுகள், உட்பிரிவுகளைப் பொருத்தவரை
ஒரு நல்ல விஷயம் உள்ளது. ஹிந்துமதத்தின் சகிப்புத்தன்மை அவை ஒன்றையொன்று அழித்துக்கொள்ளாமல்
தடுக்கிறது. இஸ்லாம் அதுபோன்றதல்ல என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமியர்களின்
வரலாறு முழுவதும் வீரம், துணிச்சல், வைராக்கியம், கற்றல் மற்றும் பக்தி ஆகியவற்றுக்கு
இடையே கடுமையான மதவெறி இஸ்லாமியர்களிடையே இருந்து வருவதைக் காணலாம். முதல் நான்கு கலீபாக்களில்
மூன்று பேர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் மத ஆர்வலர்கள்
அல்லது அரசியல் சாகசக்காரர்களால் செய்யப்படும் இதுபோன்ற செயல்களால் நிரம்பியுள்ளன.
துருக்கி மற்றும் எகிப்தில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்வுகள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தைத்
தண்டித்திருக்கும் என்று ஒருவர் நினைத்திருப்பார். ஆனால் காபூல் அரசாங்கத்தின் உத்தரவின்
பேரில் ஒரு அஹ்மதியாவை கல்லெறிந்து கொன்றது, அந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு
இந்தியாவின் மிக முக்கியமான, படித்த சில முஸ்லீம் தலைவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது
இந்த நோய் இன்னும் புரையோடி இருப்பதையும் அதன் அசலான வன்முறையின் எந்த ஒரு பகுதியையும்
இழக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.
எகிப்தும் துருக்கியும் வேறுபட்ட ஒரு மனநிலையில் இருப்பதாகத்
தெரிகிறது. எப்படியிருந்தாலும், அவர்கள் காலத்தோடு ஒத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை
உணர்ந்து, அத்தியாவசியங்களுக்கும் அத்தியாவசியமற்றவற்றுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக்
காட்டியுள்ளனர். இந்திய ‘மௌலானாக்கள்’ அவர்களை ‘மோசமான முஸல்மான்கள்’ என்று அழைக்கலாம்,
ஆனால் தங்கள் அரசியல் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் பாதுகாக்கவும் முடியும்
வரை அவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒரு மதரீதியான ‘கெட்ட முஸல்மான்’ (ஒரு
துருக்கிய தேசியவாதி என்னிடம் சொன்னார், ஒரு இந்திய முஸல்மான் ஒருமுறை அவரை ஒரு மோசமான
முஸல்மான் என்று அழைத்தார், ஏனெனில் அவர் எப்போதாவது ஒரு பெக் [ஒரு மது பானம்] எடுத்துக்
கொண்டார். வெளிநாட்டுச் சக்திக்குத் தலை வணங்கும், அந்த அடிமைத்தனத்துக்கு சப்பைக்கட்டாகத்
தன்னுடைய ஷரியாவை பிரசாரம் செய்யும் முஸல்மானை விட எவ்வளவோ சிறந்தவராகக் கருதப்படுவார்.
துருக்கியின் ‘கெட்ட முஸல்மன்கள்’ என் பார்வையில் இந்தியாவின் பக்தியுள்ள முஸல்மான்களை
விட சிறந்தவர்கள். ஏனெனில், அவர்கள் ‘ஷரியா’ மற்றும் ‘ஹதிஸ்’ ஆகியவற்றின் முக்கியத்துவம்
அற்ற சிறிய விவரங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தியிருந்தாலும், வெளிநாட்டு அதிகாரத்துவத்தின்
கருவிகளாக இருக்கிறார்கள். கேள்விக்குரிய வழிமுறைகளின் மூலம் தங்களுக்கும் தங்களைப்
போன்ற முஸல்மான்களுக்கும் இடங்களையும் தேவையானவற்றையும் வாங்குகிறார்கள்.
முஸல்மான்களின் பக்தி ஹிந்து மதத்துடனான சண்டைகளில் அதிகமாகப்
புகழப்ப
டுகிறது. ஆனால், தெரிந்தும் தெரியாமலும் இஸ்லாமிய சட்டங்களின் புனிதமான கோட்பாடுகளை வெளிப்படையாக
மீறும் தலைவர்கள் முன்னிலையில், அது ஊமையாகவும் சக்தியற்றதாகவும் இருக்கிறது. ஹிந்துக்களைப்
போலவே, இஸ்லாமியர்களால் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிலர், குரானில் தவறுகள் இல்லை
என்று நம்ப மறுக்கிறார்கள். ‘ஹதிஸ்’ மற்றும் ‘ஃபிக்கா’ ஆகியவற்றின் மீது நம்பிக்கையில்லாமல்
இருக்கிறார்கள். வெளிப்படையாக மது அருந்துவதும், பன்றி இறைச்சி உண்பதும், வழிபடாமல்
இருப்பதும், ரம்ஜானின் போது நோன்பு நூற்காமல் இருப்பதும், பர்தா, தாடிவளர்ப்பது போன்ற
சிறிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருப்பது உண்மைதானே?
எனவே, ஹிந்துக்களும் முஸல்மான்களும் அவரவர் நம்பிக்கைகளின்
அனைத்துப் புனிதமான நியதிகளையும் வெளிப்படையாகப் பழிப்போரால் வழிநடத்தத் தயாராக இருக்கிறார்கள்.
இருந்தபோதிலும், தங்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் அனுசரிப்புகளின் தீவிரத்தை
ஒருவருக்கொருவர் அருகருகே நல்லெண்ணத்தோடு அமைதியாக வாழ்வதற்காக, துளிக்கூட விட்டுக்கொடுக்கத்
தயாராக இல்லை. ஐக்கிய இந்தியா என்பது ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய இருவருக்கும்
சுதந்திரத்தை அளிக்கும். ஆனால் அவர்களோ சுதந்திரத்தை விட, தங்கள் நம்பிக்கைகளின் பயனற்ற
மற்றும் அத்தியாவசியமற்ற கூறுகளைக் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். இது கடவுளுக்கே
கூட கண்ணீரை வரவழைக்கக்கூடிய விஷயம் அல்லவா?            
புரையோடியிருக்கும் மதம் என்ற புண் அகற்றப்படாவிட்டால், நாம்
ஒரு ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க முடியாது, சுதந்திரத்தை எந்த வடிவத்திலும் வெல்ல
முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘மஜாப்’ (அதன் குறுகிய அர்த்தத்தில்), என்
அன்பு நண்பர் ஸ்டோக்ஸ் அடிக்கடி எனக்கு நினைவூட்டுவது போல், இந்தியாவின் சாபமாக இருக்கிறது.
அது உச்சத்தில் ஆட்சி செய்யும் வரை, இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை. நாம் ‘நல்ல இந்துக்கள்’
மற்றும் ‘நல்ல முஸல்மான்கள்’ ஆக, அவற்றின் குறுகிய அர்த்தத்தில், இருந்து கொண்டே சுதந்திரத்தை
வெல்ல முடியும் என்ற எண்ணம் என்னைப் பொருத்தவரை அபத்தமானது, இது கடந்த சில ஆண்டுகளில்
அதிகமான குழப்பங்களைச் செய்துள்ளது. சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க இஸ்லாம்
மற்றும் இந்து மதத்தின் உண்மையான மற்றும் அத்தியாவசிய மனப்பான்மையிலிருந்து நாம் எந்த
வகையிலும் மாறத் தேவையில்லை என்று நான் இன்னும் நம்புகிறேன். கிரேட் பிரிட்டன், பிரான்ஸ்
மற்றும் ஜெர்மனியில் உண்மையான கிறிஸ்தவர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரட்டஸ்டன்ட்டுகள்,
ப்ரீபிர்ஸ்டிரியன்ஸ், ஆங்கிலிகன்கள், யூதர்கள் மற்றும் மற்ற ஜாதியினர் உள்ளனர், ஆனால்
அவர்களின் மத நம்பிக்கையின் ஆழம் அவர்கள் அந்தந்த நாடுகளின் சுதந்திரமான குடிமக்களாக
இருப்பதைத் தடுக்காது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு காலகட்டத்தில் யூதர் ஒருவர் கிரேட்
பிரிட்டனின் பிரதமராகவும், மற்றொருவர் வெளியுறவு செயலாளராகவும், மூன்றாவது நபர் இந்தியாவின்
வைஸ்ராயாகவும் இருப்பார் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்?
யூதர்கள் கிரேட் பிரிட்டனில் மிகச் சிறிய மதச் சமூகமாக இருக்கலாம்.
அவர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் எந்தவொரு சிறப்பு பிரதிநிதித்துவத்தையும் அல்லது
அரசாங்க பதவிகளில் எந்தவொரு குறிப்பிட்ட பங்கையும் கோரவில்லை. உண்மையில் சுமார்
150 ஆண்டுகளுக்கு முன்பு, கிரேட் பிரிட்டனில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் ப்ரட்டஸ்டன்ட்டுகளின்
இனவாத உணர்வு இன்று ஹிந்துக்கள் மற்றும் முஸல்மான்களின் உணர்வைப் போலவே தீவிரமாகவும்
பிரத்தியேகமாகவும் இருந்தது. நீண்ட காலமாக ரோமன் கத்தோலிக்கர்கள் நாடாளுமன்றத்தில்
இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். எந்தவொரு அரசாங்க அலுவலகத்திலும் அவர்களால் பணியாற்ற
முடியவில்லை. இன்னும் அவர்கள் ஒருபோதும் சிறப்புப் பிரதிநிதித்துவத்தை கோரவில்லை. இப்போது
இந்தக் குறைபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன, ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரட்டஸ்டன்ட்டுகளுக்குச்
சமமாக, மாநிலத்தில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். இந்த விஷயத்தில் கிரேட் பிரிட்டனின்
உதாரணம் ஐரோப்பாவின் அனைத்து பெரிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் பின்பற்றப்பட்டுள்ளது.
அதன் விளைவுகளையும் நாம் காண்கிறோம். துருக்கி, எகிப்து மற்றும் சிரியா ஆகியவையும்
அதையே செய்யப் போகின்றன என்பது என் மனதில் உறுதியாக உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால்,
அவர்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்க மாட்டார்கள். இந்தியா இதற்கு விதிவிலக்காக இருக்கும்
என்று யாராவது எதிர்பார்க்கிறார்களா?

Leave a Reply