Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா



ஆறாவது
கடிதம்
செல்லுலார்
சிறை
5 ஆகஸ்ட் 1917
போர்ட் ப்ளேயர்
எனதன்பிற்குரிய பால்,
ஜூலை 1916 அன்று நான் அனுப்பிய கடைசி கடிதத்திற்கு
நீ அனுப்பிய பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாங்கள் அனைவரும் இங்கு ஆரோக்கியமாகவும்
மகிழ்ச்சியாகவும் இருப்பதை நீ அறிந்து கொண்டிருப்பாய். இறைவன் அருளால் நீ கடந்த ஒரு
வருடம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பாய் என்று நினைக்கிறேன். நம்முடைய
தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை காரணமாக நம்மில் நேர்மையானவர்கள் தியாகம் செய்ய
வேண்டி இருக்கிறது. அந்தப் பாதை சோகமானதாகவும் பிரிவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
விதி நமக்கு கொடுக்கும் இத்தகைய வலி மிகுந்த அடிகளைப் பொறுத்துக்கொண்டு பழகிய நமக்கு
இந்தக் கஷ்டங்களும் ஏமாற்றங்களும் பழகித்தான் விட்டன. அதே போல ஏதேனும் நல்ல விஷயம்
நடந்தாலும் அது நிரந்தரமானதல்ல என்ற புரிதல் நமக்கு உண்டு. என்னைப் பொருத்தவரையில்
கண்ணீரில் இருந்து தப்பிக்க உதவும் எதுவும் மகிழ்ச்சியான ஒன்றுதான். இப்போது சூழல்
மாறிவருகிறது. அதற்கேற்ப பழைய நண்பர்களும் திரும்பி வருகிறார்கள். பம்பாய் உயர் நீதிமன்றத்தில்
உன்னை விட்டுப் பிரிந்த போது உன்னிடம் கை கொடுக்கக் கூட அனுமதிக்கப்படாமல் என் தொப்பியை
ஆட்டியபடி சென்றேன். அப்போது என் மனதில் நானும் அன்பிற்குரிய பாபாவும் உனக்கும் நம்
அன்பிற்குரியவர்களுக்கும் எதுவும் செய்யவில்லையே என்ற எண்ணம் என் மனதை அழுத்தியது.
இந்த இளம்வயதில் எவரும் சந்தித்திராத அளவு கஷ்டங்களை நீ சந்தித்திருக்கிறாய். இவ்வளவு
அடக்கமான உனக்கு, நண்பர்கள் என்று எவரும் இல்லை. ஆனால் உன்னை வெறுப்பவர்களோ ஏராளமானவர்கள்.
ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்கின்றாய். குடும்பம் சிதறுண்டு போய்
எந்த விதமான ஆதரவும் இல்லாத நிலையிலும் நாம் நல்லவற்றின் பக்கமே நிற்கின்றோம். தீயவற்றின்
பக்கம் செல்லவில்லை. ஆனால் நான் குருதி வடியும் இதயத்துடன் இதனை எழுதுகிறேன். கடவுளுக்காக
தன் எல்லாப் பூக்களையும் கொடுத்த பூந்தோட்டம் எப்போதும் பூத்துக் கொண்டேதான் இருக்கும்.
இந்தச் சூழலில் நம்பிக்கைகளும் கூட தகர்ந்து போகின்றன. ஆனால் நம் அன்பிற்குரிய வசந்தா,
மொட்டாக இருந்தவள், இப்போது மலர்ந்து அவள் மூலம் மொட்டுக்கள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.
அதன் மூலம் நமக்கு வசந்தா இப்போது ராமன், மேலும் கடவுளின் அருளிருந்தால் மேலும் ஒரு
குழந்தை கிடைக்கட்டும். அன்பெனும் ஒளி உன் வாழ்வில் மேலும் பிரகாசத்தைக் கூட்டட்டும்.
அதன் பிரதிபலிப்பு இருள் அடைந்த என் சிறை அறையிலும் கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சி
இருகின்றது. குட்டிக் குழந்தையின் பெயரான ரஞ்சன் எனக்கு என் தாயார் மற்றும் அந்தக்
குழந்தையின் பாட்டியான என் மாவாஷியை நினைவுபடுத்துகிறது. இது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக்
கொடுத்திருக்கும்? நான் இந்தக் குழந்தையைப் பார்ப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
ஆனால் என் அன்பை அந்தக் குழந்தைக்குத் தருகிறேன். அதற்கு இதெல்லாம் புரியுமா என்றும்
தெரியவில்லை. நீ ஏன் எனக்கு சாந்தாவைப் பற்றி எதுவும் எழுதவில்லை? நீ அந்த வேலையை வாகினியிடம்
விட்டுவிட்டாய். இது இந்திய வழக்கம் என்றாலும் நீ அடுத்த கடிதத்தில் நீயே உன் குழந்தையைப்
பற்றி எல்லாவற்றையும் எழுத வேண்டும். இந்தத் தன்னடக்கம் குழந்தைகளுக்குப் பெற்றோரின்
அன்பைப் புரிந்து கொள்ள விடாமல் தடுத்து விடும். இதனை உன்னுடைய விசேஷமான மற்றும் புனிதமான
கடமையாக நினைத்துச் செய். வாகினி பிளேக் நோயினால் அவதிபட்டாள் என்பதை அறிந்து வருந்தினேன்.
அந்தக் கொடிய நோய் நம் மண்ணை விட்டு அகன்றுவிட்டது என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அது இன்னமும் இருக்கிறது என்பதை இப்போது அறிந்துகொண்டேன். அது குறித்து நீ மிக
கவனமாக இரு. அது முன்பைப் போலவே உள்ளதா அல்லது அதன் தீவிரம் குறைந்து உள்ளதா? இதற்கு
இன்னமும் மருத்துவ விஞ்ஞானத்தில் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லையா? இனிமேல்
அது பரவுவது தெரிந்தால் நீ பம்பாயை விட்டு வெளியேறி விடு. அதனை நம்மால் ஒழிக்க இயலவில்லை
என்றால் நாம் அதனிடம் இருந்து தப்பிக்கவாவது வேண்டும்.
ஜனவரி 1916ல் எனக்குக் கடைசியாக பார்சல் வந்தது.
அதற்குப் பிறகு எங்கள் இருவருக்கும் பார்சல் எதுவும் வரவில்லை. இந்தப் பதினெட்டு மாதங்களில்
எங்களுக்கு இரண்டு பார்சலாவது வந்திருக்க வேண்டும். உன்னுடைய பாதுகாப்பைக் குறித்து
நாங்கள் கவலை கொள்ள இதுவே காரணம். அதனால்தான் நான் சூப்பரின்டன்டன்ட்டிடம் அனுமதி பெற்று
உனக்குத் தந்தி அடித்தேன். ஆனால் இது போன்ற பதட்டங்கள் ஏற்படாதவண்ணம் நாம் இனி நடந்துகொள்ள
வேண்டும். அதற்கு, குறிப்பிட்ட தேதிகளில் இயலவில்லை என்றாலும் குறிப்பிட்ட மாதங்களிலாவது
நீ கடிதங்களையும் பார்சல்களையும் அனுப்புவதே சிறந்த வழி.
இது எங்களைப் பொருத்தவரைக்குமான தீர்வு. ஆனால்
நமக்கு இடையே அரசு என்று ஒன்று இருக்கிறது. அவர்களுடைய விருப்பதிற்கு இணங்க நாம் நடக்கவேண்டும்.
உன்னுடைய சென்ற கடிதத்தில், நீ கிடைக்காமல் போன ஒரு பார்சல் பற்றி எழுதியிருந்தாய்.
அதே போல போன வருடம் என்னுடைய கடிதமும் காணாமல் போயிற்று. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்த இடத்திற்கு ஆயிரக்கணக்கான கடிதங்களும் பார்சல்களும் வருகின்றன. ஆனால் நம்முடைய
கடிதங்களும் பார்சல்களும் மட்டும் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதற்குக் காராணம்
தபால் துறையா? அப்படியிருந்தால் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுவரை அவர்களை
விடாதே. நீ அவற்றைப் பதிவு செய்துதான் அனுப்பி இருப்பாய். அப்படியென்றால் அவற்றை யார்
வாங்கியிருப்பார்கள், யாருடைய சதியினால் அவை களவாடப் பட்டிருக்கும் என்பதைப் கண்டுபிடித்து
விடலாம். ஆனால் ஒரு வேளை இதற்குத் தபால் துறை அல்லாமல் அரசாங்கம் காரணமாக இருந்தால்,
அப்போது நாம் மௌனமாக இருக்கவேண்டும். நான் பல விஷயங்கள் இல்லாமல் இங்கே வாழப் பழகிக்
கொண்டு விட்டேன். அதே போல நீ வருடத்திற்கு ஒருமுறை அனுப்பும் பார்சலும் இல்லாமல் வாழ
என்னால் முடியும். ஒரு புத்தகம் பதிப்பாளரிடம் இருந்து அச்சிடப்படும் இடம் வரை கண்காணிக்கப்பட்டு,
அதன் ஒவ்வொரு பக்கமும் வார்த்தை வார்த்தையாக ஆராயப்பட்டு, அதன் பிறகே அவை பதிப்பிக்கப்படுகின்றன.
அவற்றில் ஆட்சேபகரமாக இல்லாத பகுதிகளையாவது அவர்கள் அவற்றின் சொந்தக்காரருக்குக் கொடுத்திருக்க
வேண்டும்.
நாசிக் மாநாடு ஒரு பெரிய வெற்றி என்றுதான் கூற
வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டோம் என்று நினைத்துக்
கொண்டிருந்த நாங்கள் எங்களை நினைவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு நன்றிக்கடன்
பட்டுள்ளோம். ஒன்றாக இணைந்த பிறகு காங்கிரஸ் இதுபோன்ற விஷயங்களுக்குப் போராட ஏன் தயங்கவேண்டும்?
அதன் தலைவர்கள் தங்களுடைய முக்கியத்துவத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாக
இருக்கும். அவர்கள் தங்களை, போயர் புரட்சியில் ஈடுபட்ட போராளிகளை விடுவித்த ஜெனரல்
போத்தாவைவிட சிறந்த ராஜதந்திரியாக நினைத்து கொண்டிருக்கலாம். அல்லது ஐரிஷ் கைதிகளின்
விடுதலைக்காக அயராது பாடுபட்ட ரெட்மாண்ட்டைவிட சிறந்த தேசியவாதியாக தங்களை நினைத்து
கொண்டிருக்கலாம். மிஸ்டர் போனர்லா கூற்றான “இது ஒரு புரட்சியில் பொதுவாகக் கலந்து கொள்வது
போல” என்பது உண்மையல்ல. ஏனென்றால் இந்திய அரசியல் கைதிகள் பெரும்பாலோனோர் பொதுவாகக்
கலந்து கொண்டவர்கள்தான். மற்றவர்களில் பெண்களின் ஓட்டுரிமைக்காகப் பாடுபட்டவர்கள் உண்டு.
அவர்களும் நெடுநாள் முன்பே ஒவ்வொருவராக மிஸ்டர் அஸ்கித் அவர்களால் விசாரிக்கபட்டுத்
தண்டிக்க பட்டவர்கள். காங்கிரஸ் ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்தவுடன் எங்களுடைய
விடுதலை குறித்து ஒரு மனு பொது மக்களால் அனுப்பப் பட வேண்டும். இத்தகைய மனுக்களும்
தீர்மானங்களும் எங்களுக்கு உடனடியாக விடுதலையைப் பெற்று தராதுதான் என்றாலும் அது எங்கள்
விடுதலைக்குப் பிற்காலத்தில் உதவியாய் இருக்கும். அது மட்டுமல்லாது நாம் யாருக்காகப்
போராடினோமோ அவர்கள் நம்மை நினைவில் வைத்திருக்கவில்லை என்றால் திரும்ப அவர்களிடத்தில்
செல்வது அவமானகரமான ஒன்று என நினைப்பவன் நான். சரியோ தவறோ இந்தத் தேசத்தின் மீது அபரிமிதமான
பற்றைக் கொண்டிருக்கிறேன் நான். ஆகவே மனுவை அனுப்ப முடியுமா என்று முயன்று பார். அது
மாநாட்டுத் தீர்மானங்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது.
நம் பாபாவை நான் சந்தித்த ஒரு நிமிடத்தில் நான்
அவரிடம் பித்ருரிணம் (முன்னோர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்), தேவரிணம் (தேவர்களுக்கு
நாம் செலுத்த வேண்டிய கடன்), ரிஷிரிணம் (ரிஷிகளுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) ஆகியவை
போல புத்ரரிணம் (மகன்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) என்று ஒன்று இருக்கிறது எனக்
கூறினேன். உன்னுடைய கடிதம் கிடைத்த பின்பு அந்தக் கடன் கழிந்ததாகவே நான் உணர்கிறேன்.
நீ இப்போது படித்து முடித்து உன் சொந்தக் காலிலே நிற்கத் தயாராகி விட்டாய். இனி குறைந்தபட்சம்
அடுத்த இரண்டு வருடங்கள் உனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கப் போகிறது. உன்னால் நாங்களும்
மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் எந்த மகிழ்ச்சியும் நிரந்தரமானதல்ல. இந்த உலக வாழ்க்கை
மூன்று இதழ்கள் கொண்ட பூவைப் போன்றது. ஒரு இதழ் மகிழ்ச்சிக்கான வண்ணத்தையும் ஒரு இதழ்
துன்பத்தினால் ஏற்படும் வலிக்கான வண்ணத்தையும் மூன்றாவது இரண்டு வண்ணங்கள் கலந்ததாகவும்
அல்லது வண்ணம் இல்லாமலும் இருக்கும். இப்போது மகிழ்ச்சிக்கான இதழின் நேரம். அடுத்து
துன்பதிற்கான இதழின் நேரம் வரும். அதன்பிறகு இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
வரலாற்றை ஆராய்ந்தாலும் கூட அது பிறப்பு மற்றும் இறப்புகளின் பட்டியல்களையும் திருமணங்கள்
மற்றும் துக்கங்களின் பட்டியல்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது. ஆகவே நாம் மகிழ்ச்சியில்
திளைத்திருக்கும்போது கூட அது நிரந்தரமானது அல்ல என்ற புரிதலோடு துன்ப காலங்களையும்
நினைவில் இருத்தி வைக்க வேண்டும். இந்தியாவில் துரதிஷ்டவசமாக இந்த காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு,
துன்பம் என்னும் காலகட்டம் சஹாரா பாலைவனம் போல மிக நீண்டதாக இருக்கும். தகிக்கும் வெயிலில்
இந்தப் பாலைவனத்தில் இத்தகைய நீண்ட கொடும் பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது அவ்வப்போது
இது போன்ற பாலைவனச் சோலைகள் கண்ணில் படும். இதுவும் கடவுளின் அருளே என்று கருதி நாம்
நம் பயணத்தைக் கடமையாக பாவித்து தொடரவேண்டும். ஞானிகள் வேண்டுவதைப் போல நாமும் அடக்கத்துடன்
கடவுளிடம் ‘எனக்கு என்ன வேண்டுமோ அதனைக் கொடு, எனக்கு எதெல்லாம் தேவையில்லையோ அவற்றை
நீக்கி விடு’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு இளைஞனின் இறுதி லட்சியம்
எதையும் சேகரிப்பது அல்ல. மாறாக தியாகம் செய்வதே. கடவுளின் மாலைக்காகத் தன்னிடம் உள்ள
எல்லாப் பூக்களையும் தருகின்ற தோட்டத்தைப் போல எப்போதும் நாமும் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
என்னுடைய தாயார் எப்படி இருக்கிறார்கள்? என்னுடைய
ஒரே சகோதரியை நான் எப்படி மறக்க முடியும்? நான் என்மீதே கோபம் கொண்டு என்னுடனே கூட
பேசாமல் இருக்கலாம். இந்த மகிழ்ச்சியான காலம் நீடித்து இருக்கும்போதே எனதன்பிற்குரிய
ஷாந்தாவிற்கும் அன்பிற்குரிய ரஞ்சனுக்கும் ஏதேனும் முதலீடு செய்து சேமித்து வைக்கவும்.
மீண்டும் கஷ்டகாலம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. நம்முடைய மேடம் காமாவின்
பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. போர்க் காலத்திலும் கூட அவர் உன்னை நினைவில்
வைத்திருக்கிறார். சில சமயம் ரத்த உறவுகளைக் காட்டிலும் இத்தகைய நட்புகள் நமக்கு மிகவும்
நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இது மிகவும் சூக்ஷ்மமானது. இதனைப் புரிந்து கொள்வது
கடினம்.
என் பிரிய யமுனாவும் வாகினியும் ஒருவரோடு ஒருவர்
இணக்கமாக இருக்கிறார்களா? நான் அவர்களை அன்புடன் விசாரித்தேன் என்று கூறவும். நம் அன்பிற்குரிய
பாலு எப்படி இருக்கிறான்? நான் அவனை பம்பாய் சிறையில் பார்த்தேன். மிகவும் நேசிக்கத்தகுந்த
பையன். இப்போது பெரிய ஆளாகி இருப்பான் அல்லவா? அதே போல அன்னாவும். அவனும் வளர்ந்து
முதிர்ச்சியுள்ள பெரிய ஆளாகி இருப்பான் என்று நினைக்கிறன். என் சகோதரர்கள் தத்து, நாணா
உட்பட எல்லோரை பற்றியும் எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆவலாக
இருக்கிறது. நான் எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள மாட்டேன் என்று யமுனா நினைக்கலாம்.
ஆனால் என் முந்தைய கடிதங்களில் பல விஷயங்களை குறிப்பிடாததற்குக் காரணம் என் மறதி இல்லை
என்பது அவளுக்கும் புரிந்திருக்கும். பாபாவிற்கு அடுத்தபடியாக நான் மிகவும் நேசிக்கும்
மிகவும் மதிக்கும் குடும்பம் ஒன்று உண்டென்றால் அது அவளுடைய சிப்லுங்கர் குடும்பம்தான்.
ஆனால் என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமான அந்தக் குடும்பத்தின் துன்பத்திற்கும்
கவலைக்கும் நான் காரணமாகி விட்டேனே என்றெண்ணும் போது எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாகின்றது.
அந்தக் குற்ற உணர்ச்சியினாலேயே நான் அவர்களைப் பற்றி மேலும் விசாரிக்காமல் என் அன்பை
வெளிபடுத்தாமல் இருக்கின்றேன். இப்படிப்பட்ட மைத்துனர்கள் கிடைத்ததற்கு ஒருவர் மிகவும்
பெருமைப்படவல்லவா வேண்டும்?. என்னையும் அவர்களுள் ஒருவனாக வளர்த்த அவர்கள் குடும்பம்
எவ்வளவு அன்பானது! துறவிக்கு ஒப்பான, கடமை தவறாத அவர்கள் தாயார். அதே போலத்தான் என்
நண்பர்கள் விஷயத்திலும். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால்
அவர்கள் நன்மையைக் கருதியோ அல்லது என்னுடைய நன்மையைக் கருதியோ நான் அவர்கள் எல்லோரையும்
பெயர் சொல்லி விசாரிப்பதில்லை. என்னுடைய நண்பர் என்று சொல்லிக்கொண்டு உன்னிடம் வந்த
அந்த வழக்கறிஞர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை இன்னமும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பதற்கு
அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதே நேரம் இங்கே என்னைப் பார்த்தேன், என்னுடன்
பழகினேன் என்று கூறிக்கொண்டு உன்னிடம் வருபவர்களிடம் நீ எச்சரிக்கையாக இரு. உனக்கு
மிகுந்த அனுபவம் இருக்கின்றது. அதனால் எச்சரிக்கைகள் எதுவும் தேவையில்லைதான் என்றாலும்,
ஒன்றை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நான் எவர் மூலமாகவும் உனக்கு எந்த
ஒரு செய்தியையும் சொல்லி அனுப்ப மாட்டேன். எல்லாவற்றையும் கேட்டுகொள். ஆனால் எதையும்
அப்படியே நம்பி விடாதே. எவற்றை நம்பலாம் என்று உன் அறிவு சொல்கிறதோ அவற்றை மட்டும்
எடுத்துக்கொள். நேரமாகி விட்டது. நான் முடித்தாக வேண்டும். நீ கேட்ட விவரங்கள் உனக்கு
பாபாவின் கடிதத்தில் அனுப்பப்படும். எல்லோரையும் விசாரித்ததாகக் கூறவும். எங்களுடைய
உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். முடிந்தவரையில் உன்னுடைய உடல் ஆரோக்கியத்தை
நன்றாகப் பார்த்துக்கொள்ளவும். மனித முயற்சியைத் தாண்டி ஏதேனும் மோசமான நிலை வந்தாலும்
அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்போம். கவலை வேண்டாம்.

இப்படிக்கு

உன் அன்புள்ள

தாத்யா.

Leave a Reply