Posted on Leave a comment

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம்! | கோ.எ.பச்சையப்பன்

யக்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர
லோகோ (அ)யம் கர்ம-பந்தன:
தத் அர்தம் கர்ம கௌந்தேய
முக்த-ஸங்க: ஸமாசர     
கடமைகள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அவ்வாறற்ற மற்றவை
பௌதீக உலகத்தோடு சம்மந்தப்படுத்துபவை. உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை இறைவனுக்காகச்
செய்; எப்போதும் பந்தத்தில் இருந்து விடுபட்டு வாழ்வாய்!
(கீதை 3:9).

(Image
Thanks: LiveChennai.com)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகளில் 2016- 2017ம் கல்வி ஆண்டில் 3 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் ஒரு
லட்சத்து இருபதாயிரம் மாணவ மாணவியர் இடையே தமிழ் வாசிப்புத் திறன் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
தமிழைப் பிழையின்றி, தடங்கலின்றி வாசிக்கத் தெரிகிறதா என்பதை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட
இந்த ஆய்வில் கிடைத்த தரவு அதிர்ச்சியளித்தது. ஆம்! 44,000 மாணவர்களுக்குத் தமிழை வாசிக்கவே
தெரியவில்லை. இவர்களில் பலர் 6 முதல் 8 வகுப்பு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் பானை சோற்றுப் பதம்தான்! 2004ம் ஆண்டில்
அஸர் (ACER), ப்ரதம் (PRATHAM) ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட இந்திய அளவிலான ஆய்வுகள்
பெரிதும் விவாதிக்கப்பட்டவையே! எட்டாம் வகுப்பு மாணவனுக்கு மூன்றாம் வகுப்புக்கான எளிய
கணக்குகளைச் செய்ய இயலவில்லை என்பது ஆய்வின் ஒரு தரவு. தாய்மொழியில் எழுதப் படிக்கத்
தெரியாத மாணவர்களைப் பற்றிய தரவுகள் இன்றும் இணையத்தில் கிடைக்கின்றன. இருதயக் கோளாறு
இல்லாதவர்கள் ஓய்வாக இருக்கும்போது பாருங்கள்.
2004ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பள்ளிகளால் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகளுக்குப் பிறகுதான் கல்வித்திட்டத்தில் மட்டுமல்லாமல், ஆசிரியர் நியமனத்திலும்
மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. (அசர், ப்ரதம் ஆகிய அமைப்புகளும் தனியார்ப் பள்ளிகளும்
ஆய்வு மேற்கொண்டன என்பதைக் குறிப்பிட வேண்டும்). தகுதித்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி
பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என 2009ம் ஆண்டு மத்திய அரசு கூறிற்று.
தமிழக அரசு அதனை ஏற்று கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் அறிவுரையைப் பின்பற்றி, தகுதித்தேர்வு
வைத்து ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

ஆசிரியர் நியமனத்தில் மாற்றம் (அல்லது) சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால்
மட்டுமே கல்வித் தரம் மேம்பட்டு விடாது என்பதை உணர்ந்த மத்திய அரசு மாணவர்களின் தேர்ச்சி
முறையிலும் சீர்திருத்தத்தை நீட்டித்துள்ளது. 2001ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சர்வ சிக்க்ஷா
அபியான் (SSA)- அதாவது அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த
மாணவன் (மாணவி எனவும் சேர்த்து வாசிக்க) எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்பது அமலில்
இன்றுவரை உள்ளது. இதன் விளைவு என்ன என்பதைதான் மேலே பார்த்தோம்.

நடப்பு நவம்பர் மாதத் தொடக்கத்தில் பாளையங்கோட்டையில் பள்ளிக்குச்
செல்லாமல், பள்ளி நேரத்தில் சீருடையுடன் வெளியே சுற்றிக் கொண்டிருந்த ‘புள்ளிங்கோ’
மாணவர்களை நகரக் காவல்துறை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது. எல்லோருமே
9-10 வகுப்பு மாணவர்கள். சுமார் ‘40 மாணவக் கண்மணிகள்’! மாணவர்களின் எதிர்காலம் கருதி
‘எளிய தண்டனையாக’ எஸ்.ஐ அவர்கள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள திருக்குறளைக்
கூறச் சொன்னார்! 

யாருக்கும் தெரியவில்லை. போனால் போகிறது உங்களுக்குத் தெரிந்த குறள்கள்,
கடந்த ஆண்டுகளில் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றவையாக இருந்தால் கூடப் பரவாயில்லை,
கூறுங்கள் என்றதற்கு, ஒரு குறளைக் கூட மாணவர்களால் கூற இயலவில்லை. பின்னர் 1330 குறள்களையும்
பார்த்து எழுதித் தந்து விட்டுச் செல்ல பணித்தது தனிக்கதை.

சென்ற தலைமுறையில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் குறிப்பிட்ட
அளவு திறன்களைப் பெறாவிட்டால் அடுத்த வகுப்பிற்குச் செல்ல முடியாது. இதனால் மாணவர்கள்
இடைநிற்றல் (Drop Out) ஏற்படுவதாகக் கூறி, பள்ளியில் சேர்ந்த அனைவரும் எட்டாம் வகுப்பு
வரை பாஸ் என்று கொண்டுவரப்பட்ட நடைமுறை அரசுப்பள்ளிகளில் பெரும் பின்னடைவை மாணவர்களிடையே
ஏற்படுத்திவிட்டது. சமுதாய மாற்றம், தலைமுறை மாற்றம் மற்றும் ஊடகங்களின் வளர்ச்சி ஆகியவை
ஆசிரியர்களிடையே கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி உள்ளன.

பிரம்பைக் கையாளக் கூடாது, மாணவர்களைத் திட்டக் கூடாது என்பவை
வரவேற்கத்தக்கதாயினும் மாணவர்களைக் கண்டித்தால் கூடப் பிரச்சினைகள் ஏற்படுவதால் பாடம்
நடத்துவதோடு தன் பணி எல்லைகளைச் சுருக்கிக் கொண்டனர் ஆசிரியர்கள். விளைவு, கற்றலில்
மாணவர்களுக்கு ஈடுபாடு குறைந்து வருகிறது.

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு
ஏன் பொதுத்தேர்வு அவசியம் என்பது புரியும்.
‘பள்ளியில் சேர்ந்த அனைவரும் தேர்ச்சி’ என்ற நிலைமை மாறி ‘தரப்படுத்துதல்
சோதனை’ ஏதேனும் ஒரு கட்டத்தில் நிகழும் என்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரிந்தால்தான்
இருதரப்பும் இணைந்து செயல்படும். மேலும் பத்தாம் வகுப்பு தேறிய மாணவன் தனது சான்றிதழ்
கோரும் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியருக்கு எழுதும்பொழுது பிழைகள் இன்றி எழுதும் தகுதியையாவது
பெறுவான்.
அரசுப் பொதுத் தேர்வினை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் (?) கல்வியாளர்கள்
கூறும் காரணங்களைப் பார்ப்போம்.

1.  
மாணவர்களுக்குத் தேர்வு என்பது மன அழுத்தத்தை
விளைவிக்கும்.
பள்ளிக்கு
வருவது கூட தனக்கு மன அழுத்தத்தைத் தருவதாக மாணவன் நினைக்கக்கூடும். அதற்காக எக்கேடும்
கெட்டுப்போ என விட்டுவிட முடியுமா என்ன? 5ம் வகுப்பு மாணவனுக்கும், 8ம் வகுப்பு மாணவனுக்கும்
அவரவர் பாடப் புத்தகங்களில் இருந்து திறன்களைப் பரிசோதிக்கும் வினாக்கள் கேட்கப்படுமேயன்றி
IIT பாடங்களிலிருந்து அல்ல. மேலும் 100ற்கு 35 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி! நடைமுறையில்
25 தாண்டினால் 35 மதிப்பெண்களை மாணவன் ‘எப்படியாவது’ எட்டிப்பிடித்து விடுகிறான்.
பத்தாம்
வகுப்பு தேர்வுகள் மன அழுத்தத்தைத் தரும் என மாணவன் கூறினால் அதனை ரத்து செய்து விடலாமா
என்ற கேள்வியும் எழுகிறது. எனவே எளிய வினாக்களைத் தந்து முறையான பயிற்சிக்குப் பிறகு
நடத்தப்படும் தேர்வு இனிமையான அனுபவமே தவிர மன அழுத்தம் தரும் காரணியாக இருக்காது.
2.  
தேர்வில் தவறும் மாணவன் பள்ளிப் படிப்பைத்
தொடராமல் இடையிலேயே நின்று விடுவான்.
இன்று
14 வகை விலையில்லா (இலவசம் என்பதை ஜெயலலிதா மாற்றினார்) பொருள்கள் வழங்கப்படுகின்றன.
8, 10, 12ம் வகுப்பு SC, ST மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 12ம்
வகுப்பில் மடிக்கணினி வேறு. இவையாவும் மாணவர்களின் வருகை இருந்தாலே வழங்கப்படுகின்றது.
தவிர அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு ஊதியம், கட்டமைப்பு வசதிகள் என ஏராளமான
வரிப்பணம் செலவிடப்படுகின்றது. இவை அவசியமானதும் கூட. ஆனால் தரமற்ற ஒரு மாணவர் தலைமுறையை
இடைநிற்றல் (Drop Out) காரணம் காட்டி தேர்வுகளை தவிர்ப்பது தீர்வாகாது.
மாறாக,
Ø 
இயலாக் குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகள்
(IED மற்றும் differently-abled) ஆகியோருக்கு மட்டும் தேர்வுகளில் இருந்து விலக்கு
அளிக்கலாம் அல்லது தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் தளர்வு தரலாம்.
Ø 
பொதுத்தேர்வுகளில் தவறும் குழந்தைகளை அதே
வகுப்பில் நிறுத்தி விடாமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பிவிட்டு ஓரிரு மாதங்களுக்குள்
தவறிய பாடங்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வுகள் நடத்தலாம். ஏற்கெனவே ஒன்பதாம் வகுப்புகளில்
இது நடைமுறையில் உள்ளதுதான்.
Ø 
கல்வி உரிமைச் சட்டத்திற்கு இத்தேர்வுகள்
எதிரானவை.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது ஒரே
நாளில், யாரோ ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்துறை
முனைவர்கள் வரை பல மாதங்கள் உழைத்து வரைவு அறிவிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் கல்வியாளர்கள், பொதுமக்கள் என இலட்சக்கணக்கானவர்கள் மின்னஞ்சல்கள் மூலம் தெரிவித்த
இலட்சக்கணக்கான திருத்தங்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டது. அதில் ஒரு அம்சம்தான் 5 முதல்
8ம் வகுப்புகளுக்குத் தேர்வு.

Ø 
உலகின் சிறந்த நூல்களின் பட்டியலில் இந்தியப்
பல்கலை ஒன்று கூட இடம் பெறவில்லை.

Ø 
4000 ஆசிரியர் பயிற்சித் தேர்வு எழுதி வெறும்
105 பேர்களே நடப்புக் கல்வி ஆண்டில் நம் தமிழகத்தில் தேறியுள்ளனர்.

Ø 
கடைசியாக வைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்
தேர்வில் வெற்றி விழுக்காடு வெறும் 2%.

எனவே 5 முதல் 14 வயது வரை அனைவருக்கும்
கட்டாய இலவசக் கல்வி என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. தரமற்ற கல்வியை
அல்ல. துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையைப் பற்றி யார் வேண்டுமானாலும்
கருத்து கூறலாம். அவர்கள் நடிகர்களாக இருப்பின் அது கூடுதல் தகுதி என்றாகிவிட்டது.

தேர்வு என்பது படிப்பின் ஒரு அங்கம். ஆனால்
அது மட்டுமே கல்வி என்றாகி விடாது. தேர்வு மட்டுமே இலக்கு என்ற கல்வி முறைதான் ‘நீட்
போன்ற தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தில் வித்திடுகின்றது.
‘உராய்வு’ பற்றி அறிவியலில் ‘தவிர்க்கமுடியாத
அவசியமான தீமை’ என்பார்கள். தேர்வுகள் அவ்விதமே.

தேர்வு நம் ஜனநாயக முறை போன்றுதான். எவ்வளவுதான்
குறைபாடு கொண்டதாயினும் என்றேனும் மேம்படும் என்ற நம்பிக்கையை அளிப்பதும் மாற்று முறை
கண்டுபிடிக்கப்படும் வரை பின்பற்றத் தக்கதுமானது.

கல்வி என்பது அறிவைப் பெறும் முறை. அதனை
அளவிடும் முறையின் ஒரு அம்சம் மட்டுமே தேர்வு. அதன் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்பட்டுக்
கொண்டிருக்காமல் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் தத்தம் கடமையைச் செவ்வனே
செய்தால், அதற்குரிய நற்பலன் கட்டாயம் தேடிவரும். கடமையைச் செய்வதில்தான் நமக்கு அதிகாரம்;
பலனில் பற்று வைப்பதல்ல.

கீதை கூறும் கர்மயோகமும் இதுதான்!
Leave a Reply