Posted on Leave a comment

மறைக்கப்பட்ட உண்மைகள் – அழகியமரம் நூலின் மொழிபெயர்ப்பாளர் உரை | BR மகாதேவன்

(அழகிய மரம், தரம்பால், தமிழில்: BR மகாதேவன், கிழக்கு பதிப்பகம், ரூ
500)

(The
Beautiful Tree என்ற தரம்பாலின் ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்கம் ‘அழகிய மரம்’ என்ற
பெயரில் வெளியாகிறது. இந்த நூலும் மொழிபெயர்ப்பாளர் BR மகாதேவன் இந்த நூலுக்கு முன்னுரை.)
2000 ஆண்டுகளாக
எங்களைப் படிக்கவிடவில்லை என்பதுதான் பிராமணரல்லாதார் இயக்கமாக முன்னெடுக்கப்பட்ட திராவிட
அரசியலின் முத்திரை முழக்கம். ஆனால், பிரிட்டிஷ் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு, ‘அழகிய
மரம் – 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி’ என்ற தலைப்பில் தரம்பால் தொகுத்திருக்கும்
நூல் வேறொரு உண்மையை அழுத்தமாக முன்வைக்கிறது.
தரம்பாலின் வார்த்தைகளிலேயே
அதை இங்கு தருகிறேன்:
பழங்கால
இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகட்டத்திலும் கூடக் கல்வி என்பது பெரிதும்
மேல் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்ததாகவே நம்பப்படுகிறது.
இந்துக்களைப் பொருத்தவரையில் (மதராஸ் பிரஸிடென்ஸியில் 95% பேர் இந்துக்களே) அது பிராமணர்,
சத்ரியர், வைசியர் என்ற இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கிடைத்ததாகவே நம்பப்படுகிறது.
ஆனால்,
18-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களை எடுத்துப் பார்த்தால் நிலைமை முற்றிலும் நேர்மாறாக
இருப்பது தெரியவரும். அதிலும் தமிழ் பேசப்படும் பகுதிகளில் கல்வி கற்ற மாணவர்களில்
இரு பிறப்பாளர்களின் சதவிகிதம் தென் ஆற்காடில் வெறும் 13 மட்டுமே. மதராஸில் 23% மட்டுமே.
தென் ஆற்காடு, செங்கல்பட்டில் கல்வி கற்ற முஸ்லிம்களின் சதவிகிதம் 3க்கும் குறைவு.
சேலத்தில் 10%. ஆனால், சேலம், திருநெல்வேலியில் இருந்த பள்ளிகளில் கல்வி பெற்றவர்களில்
சூத்திர சாதி மாணவர்களின் எண்ணிக்கை 70%. தென் ஆற்காட்டில் அவர்களின் எண்ணிக்கை
84%க்கும் அதிகம்.
இந்தப் புத்தகத்தில்
தரம்பால் முன்வைக்கும் உண்மைகளை இப்படித் தொகுக்கலாம்.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு
வருவதற்கு முன்னால் உலகின் பிற பகுதிகளில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிட மேலான நிலையில்
இந்தியாவில் இருந்திருக்கிறது. கற்றுக் கொடுக்கும் முறை மிகவும் எளிமையானதாகவும் அதிகப்
பயன் தருவதாகவும் இருந்திருக்கிறது. அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து
படித்தல், மேல் வகுப்பு மாணவர்களே கீழ் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களாகவும் இருப்பது,
பெரிதும் இலவசக்கல்வி, கட்டணம் விதிக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் குறைவான கட்டணம்,
குறைவான தண்டனை, அருகமைப் பள்ளிகள், மாணவர்கள் வாழும் சமூகத்தோடு நெருக்கமான கல்வி
என இன்றைய லட்சியப் பள்ளிக்கு என்னவெல்லாம் இலக்காகச் சொல்லப்படுகின்றனவோ அவையெல்லாம்
இந்தியப் பாரம்பரியக் கல்வியில் 18ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே இருந்திருக்கின்றன.
சமஸ்கிருதம், அண்டை
மாநிலத்து மொழி போன்றவை கற்றுத் தரப்பட்ட நிலையிலும் தாய்மொழி வழிக் கல்வியே பெரிதும்
இருந்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து சாதியினருக்கும் அடிப்படைக் கல்வி கிடைத்திருக்கிறது.
மன்னர்கள், செல்வந்தர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் அந்தக் கல்வி மையங்களுக்கு
நில மானியம், பொருள் உதவி, மாணவ ஆசிரியர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் என முடிந்த
வழிகளில் எல்லாம் உதவிவந்திருக்கிறது.
வர்த்தக நோக்கில்
நுழைந்த பிரிட்டிஷார், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதும் இந்தியப் பாரம்பரியக்
கல்வியை அப்புறப்படுத்தி ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்தினார்கள். இந்தியப் பாரம்பரியப்
பள்ளிகளுக்கு அதுவரை கிடைத்து வந்த அரசு உதவிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்து அரசர்களும் இஸ்லாமிய அரசர்களும் முன்பு மானியமாகக் கொடுத்த நிலங்களுக்கு வரி
விதித்தார்கள். அல்லது அந்த மானியம் பெற்றவரிடமிருந்து அதைப் பறித்து அரசின் பொறுப்பில்
எடுத்துக்கொண்டார்கள். இதனால், அந்த மானியத்தை நம்பி நடந்துவந்த ஏராளமான குருகுலங்கள்,
திண்ணைப் பள்ளிகள், மதரஸாக்கள், பாரசீக, அரபுப் பள்ளிகள் எல்லாம் ஒரு தலைமுறை காலத்துக்குள்
அழிந்தன.
பள்ளிக்கூடம் என்றால்
பல அறைகள் கொண்ட கட்டடம் இருக்க வேண்டும், அச்சிட்ட புத்தகங்கள் இருக்கவேண்டும், முறையான
பாடத்திட்டம், தேர்வுகள் எல்லாம் இருக்கவேண்டும் என்று நவீன கல்வியை பிரிட்டிஷார் அறிமுகம்
செய்தார்கள். அப்படியான கல்வி இங்கிலாந்திலும் அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. அந்த
மேலான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் அதிகக் கட்டணம் வசூலித்தாக வேண்டும். ஒருவருக்கு
அப்படியான கட்டணம் கொடுக்க முடியவில்லையென்றால் அந்தக் கல்வியைப் பெற அவர்களுக்குத்
தகுதி இல்லை என்றே அர்த்தம் என்று விட்டேத்தியாக முடிவெடுத்தார்கள். இந்தியப் பாரம்பரியப்
பள்ளிகள் அழிந்து போயிருக்க, ஆங்கில நவீனக் கல்வி எட்டாக்கனியாக இருக்க இந்திய இடை,
கடைநிலை சாதியினர் கல்வியில் பின்தங்கிப் போக நேர்ந்துவிட்டது.
இதுதான் தரம்பால்
இந்தப் புத்தகத்தில் முன்வைக்கும் இந்தியக் கல்வியின் வரலாறு.
அப்படியாக 200 ஆண்டு
பிரிட்டிஷ் ஆட்சிக் காலகட்டத்தில் கடை, இடைநிலை சாதியினர் கல்வியில் இருந்து விலக்கப்பட்டதைத்தான்
திராவிட அரசியல் சக்திகள் 2000 ஆண்டு கால சதியாக முன்வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டிருக்கிறார்கள்.
அந்த 200 ஆண்டுகளில் சமூகத்தில் பொருளாதாரரீதியாக வசதி வாய்ப்புகளைப் பெற்று முன்னேறிய
பிராமணர்களையே அந்த சதியின் மூல காரண கர்த்தாவாக ஓர் அவதூறுப் பிரசாரத்தை முன்னெடுத்தும்
வந்திருக்கிறார்கள். கடை, இடை நிலை சாதிகளில் இருந்து அம்பேத்கர் போல் ஒருசில அறிஞர்கள்
உருவாக வழிவகுத்த அதே பிரிட்டிஷ் கல்விதான் எஞ்சிய இடை, கடைச் சாதியினரை முற்றாகக்
கல்வியில் இருந்து விரட்டியடிக்கவும் செய்திருக்கிறது. இந்தப் புத்தகம் அந்த உண்மையை
ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது.
இந்தப் புத்தகத்தில்
இடம்பெற்றிருக்கும் ஆதாரங்கள் ஒருவகையில் முழுமையற்றவையே… அதாவது இந்த நூலில் இந்தியப்
பாரம்பரியப் பள்ளிகளின் செயல்பாட்டில் பிரிட்டிஷாராகிய நாம் குறுக்கிடக்கூடாது… அந்தக்
கல்வி மையங்களுக்கான உதவித் தொகைகளை நம் அரசு கையகப்படுத்தக்கூடாது… அவர்களுக்கு
மேலும் நாம் உதவ வேண்டும் என்ற உத்தரவுகளே ஆவணமாகக் கிடைத்திருக்கின்றன. பாரம்பரியப்
பள்ளிகளுக்குத் தரப்பட்ட மானியமானது அந்த மானியம் பெற்றவர்கள் இறந்ததும் அவருடைய வாரிசுகளுக்கு
பிரிட்டிஷ் அரசால் தரப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கான சில உதாரணங்களே இடம்பெற்றிருக்கின்றன.
இவை மிகவும் தந்திரமான ஆவணப்படுத்தல். அதாவது, நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான ஏக்கர்
நிலங்களைக் கையகப்படுத்தியதையும் ஆயிரக்கணக்கான கல்வி மையங்களை முடக்கியதையும் பற்றி
எதுவும் பதிவு செய்யாமல் ஒருசில இடங்களில் செய்த உதவிகளை மட்டும் பதிவு செய்து சரித்திரமாக்கியிருக்கும்
தந்திரம். அந்த ஆவணங்களை நுட்பமாகப் பரிசீலித்தால்தான் சொல்லாமல் விடப்பட்ட உண்மைகள்
ஒருவருக்குப் புரியும்.
காந்தியடிகளுக்கும்
வேறு பல இந்திய தலைவர்களுக்கும் ஒருசில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கல்வியாளர்களுக்கும்
இந்த உண்மைகள் புரிந்திருந்தன. ஆனால், அவர்களிடம் பிரிட்டிஷாரால் இந்தியப் பாரம்பரிய
மரம் வேரோடு பிடுங்கப்பட்டுவிட்டது என்பதற்குத் தெளிவான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களாக
எதுவும் இருந்திருக்கவில்லை. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் காந்தி – சர்
ஃபிலிப் ஹெர்டாக் உடனான உரையாடல் அதையே நமக்கு உணர்த்துகிறது.
இந்தியப் பாரம்பரியக்
கல்வியை பிரிட்டிஷாராகிய நாம் அழித்துவிட்டோம் என்று சில 18ம் நூற்றாண்டு பிரிட்டிஷ்
அதிகாரிகள் கூறிய கருத்துகளையே காந்தி தனது கூற்றுக்கு ஆதாரமாகச் சொல்கிறார். ஆனால்,
அந்தக் காலகட்டத்து மக்கள் தொகை என்ன… அதில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை என்ன…
இன்றைய மக்கள்தொகை என்ன… அதில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் என்ன என்ற புள்ளிவிவரங்களின்
அடிப்படையில்தான் பேசவேண்டும் என்று ஃபிலிப் ஹெர்டாக் பிடிவாதமாக வாதிடுகிறார். அவருடைய
முன்னோர் தந்திரமாகப் பதிவு செய்யாமல் விட்ட ஆதாரங்கள் அல்லவா அவை! எனவே முன்னால் ஓடியவர்கள்
ஈட்டிக் கொடுத்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு ஹெர்டாக் வெகு உற்சாகமாக வெற்றிக்கோட்டை
நோக்கி ஓடுகிறார். ஆனால், அது தவறான திசையிலான ஓட்டம் என்பது உலகக் கல்வி வரலாற்றை
முழுமையாகப் பார்க்கும் ஒருவருக்கு எளிதில் புரியும்.
உண்மையில் பழங்கால
இந்தியாவின் கல்வி நிலை எப்படி இருந்தது என்பதை இன்றைய கல்வி நிலையோடு ஒப்பிட்டுப்
பார்க்கக்கூடாது. அதே காலகட்டத்தில் உலகில் கல்வி நிலை என்னவாக இருந்தது என்பதோடுதான்
ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அதோடு, பழங்காலக் கல்வி முறை அதன் இயல்பான வளர்ச்சிப்
பாதையில் முன்னேற வழிவகுக்கப்பட்டிருந்ததா இல்லையா என்றும் பார்க்கவேண்டும். அந்த அடிப்படையில்தான்
காந்தி பிரிட்டிஷாரை விமர்சித்தார். ஹெர்டாகோ நவீன காலத்தோடு ஒப்பிட்டுப் பழங்கால இந்தியாவை
விட பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வி நிலை மேம்பட்டுத்தான் இருக்கிறது என்று காந்தியை
மடக்கினார். இது எப்படியென்றால், எந்தக் குழந்தையும் திரும்பியே படுத்திருக்காத காலகட்டத்தில்
ஒரு குழந்தை நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில்
பிற குழந்தைகள் எல்லாம் நடக்கக் கற்றுக்கொண்டு ஓடவும் ஆரம்பித்துவிட்ட நிலையிலும் முன்பு
நடைவண்டியைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கிய குழந்தையின் இயக்கத்தை முடக்கி அதை
வெறுமனே நடக்கும் அளவுக்கு மட்டுமே ஆக்கிவைத்திருக்கிறார்கள். இப்போது ஒருவர் முன்பே
நடைவண்டியில் நடக்கத் தொடங்கிய குழந்தையை அதன் போக்கில் விட்டிருந்தால் இன்று ஓட மட்டுமல்ல
பறக்கவே செய்திருக்குமே அப்படிச் செய்ய முடியாமல் தடுத்துவிட்டீர்களே என்று சொல்கிறார்.
இன்னொருவரோ முன்பு நடைவண்டியைப் பிடித்து நடந்த குழந்தை இன்று தானாக நடக்க ஆரம்பித்திருக்கிறதே
இது சாதனைதானே என்று மடக்குகிறார். கல்வியில் மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தின் பெரும்பாலான
விஷயங்களிலும் இப்படியான குறுக்கீடே நடந்திருக்கிறது.
மேலும், தமிழர்களாகிய
நமக்கு இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் வேறொரு உண்மை மிகவும் முக்கியமானது: பிராமணர்களைவிட
அதிக எண்ணிக்கையில் பிற சாதியினரே அடிப்படைக் கல்வி பெற்றிருக்கின்றனர்.
உண்மையில் இந்தப்
புத்தகம் காலம் தாழ்த்தி வந்திருக்கும் ஒன்றுதான். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று வாழ்நாள்
முழுவதையும் சிறையில் வாடிக் கழித்த ஒருவருக்கு அவருடைய மரணத்துக்கு முந்தைய தினங்களில்
வந்து, நீ நிரபராதிதான்… உன்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்துவிட்டோம். இனி நீ போகலாம்
என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் இந்தியப் பாரம்பரியக் கல்வியை அழித்தொழித்து
ஆங்கிலக் கல்வியை ஆழமாக நிலைபெறச் செய்ததோடு பிராமண அறிவுத் தரப்பை அப்புறப்படுத்தி
திராவிட வெறுப்புக் கருத்தியலை முன்னிலை பெறச் செய்துவிட்ட பிறகு இன்று வந்து இந்தியக்
கல்வி பழங்காலத்தில் சிறப்பாகத்தான் இருந்திருக்கிறது, அனைவருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது
என்று சான்று வழங்குவது இருக்கிறது.
காலந்தாழ்த்திக்
கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குத்தானே சமம். எனினும் அப்படி முற்றாகச் சோர்ந்துபோய்
விடவேண்டியதில்லை. ஏனென்றால் இன்றும் மெக்காலே புத்திரர்கள் புதிய புதிய குற்றச்சாட்டுகளுடனும்
வழக்குகளுடனும் இந்தியாவையும் இந்து மதத்தையும் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம் கையில் இருந்த வைரக்கல்லை கண்ணாடித்துண்டு என்று குப்பைக்கூடையில் நம்மைக் கொண்டே
தூக்கி எறிய வைத்தவர்கள் இன்றும் வேறு வடிவங்களில் நம்மைச் சிறுமைப்படுத்தி வருகிறார்கள்.
இந்தப் புத்தகம் குப்பைக் கூடையில் நாம் தூக்கி எறிந்த நம் வைரக்கல்லை நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.
அதன் ஒளியில் நாம் நம்மிடம் இருக்கும் மேலும் பல ரத்தினங்களை இனம் கண்டு (அவற்றையும்
மெக்காலே புத்திரர்கள் கண்ணாடித்துண்டுகள் என்றே வீசி எறியச் சொல்கிறார்கள்) மீட்டெடுத்து
அணிந்துகொண்டாகவேண்டும். அந்த வகையில் இந்தப் புத்தகம் இன்றும் முக்கியமானது என்று
சொல்வதைவிட இன்றுதான் அது மிக மிக முக்கியமானது என்றே சொல்லவேண்டும்.
ஆனால், இந்தப் புத்தகத்தைப்
படித்த பிறகு திராவிட இயக்கத்தினர் தமது பிழையான பார்வையைத் திருத்திக்கொள்வார்கள்
என்றெல்லாம் நம்பவில்லை. ‘சரி… அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றிருக்கிறார்கள்…
ஆனால், மொத்த மக்கள்தொகையில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை வெகு குறைவுதானே. அதோடு
அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றிருந்தாலும் அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்ய அது
வழிவகுத்திருக்கிறதா… உயர்கல்வி பிராமணர்களுக்கு மட்டும்தானே கிடைத்திருக்கிறது…
பெண்களுக்கும் தலித்களுக்கும் கல்வி வெகு சொற்பமாகத்தானே கிடைத்திருக்கிறது. எனவே அது
அழகிய மரம் அல்ல… வெறும் ஒரு செடிதான்’ என்று சொல்வார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது
இந்த விமர்சனங்கள் நியாயமானவை போலவே தோன்றும். ஆனால், உலகில் எல்லாப் பகுதியிலுமே ஏட்டுக்
கல்வி புரோகித, அரச, பிரபுத்துவ குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்துவந்திருக்கிறது.
பெண்களுக்கும் தலித்களுக்கும் ஏட்டுக் கல்வி எங்குமே கிடைத்திருக்கவில்லை. வேலைகளானது
பெற்றோரிடமிருந்தே குழந்தைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தொழில் குழுமங்களுக்கு
உள்ளேயே அந்தந்த வேலைகளுக்கான பயிற்சிகள் கிடைத்து வந்திருக்கின்றன.
உயர்கல்வி என்று
அவர்கள் சொல்வதெல்லாம் பிராமணர்களின் தொழிலுக்கான கல்வி மட்டுமே. ஆய கலைகள் அறுபத்து
நான்கில் பிராமணரல்லாதாரின் கலைகள் எல்லாமும் குல வழியில் கற்றுத் தரப்பட்ட நிலையில்
பிராமணக் கலைகளும் குல வழியில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன தொழிற்புரட்சிக்கு முன்னால்
மன்னராட்சி காலத்தில் உலகில் எல்லா இடங்களிலுமே நிலைமை இதுதான். எனவே, இந்தியாவிலும்
அப்படியே இருந்திருக்கிறது. மேலும் பிற பகுதிகளில் எந்த அளவுக்கு விதிவிலக்குகள் உண்டோ
அதைவிட இந்தியாவில் விதிவிலக்குகள் அதிகம் உண்டு. அந்தவகையில் இந்தியக் கல்வி மரம்
ஒப்பீட்டளவில் சிறப்பாகவே இருந்திருக்கிறது. இயல்பான போக்கில் வளர்ச்சியடைய அனுமதிக்கப்பட்டிருந்தால்
அந்த அழகிய கல்வி மரம் நிச்சயம் அதிகம் பேருக்கு கனியும் நிழலும் தரும் அழகிய தோப்பாகச்
செழித்திருக்கும். ஆனால், மரத்தை ஆராய்ச்சி செய்கிறேன் என்ற போர்வையில் வேரைப் பிடுங்கிப்
பார்த்தவர்கள் அதன் பிறகு அப்படியே அதை மட்கிப் போக வைத்துவிட்டார்கள்.
இந்தப் புத்தகத்தை
எந்தவித முன்முடிவுகள் இன்றியும் படிக்கும் ஒருவருக்கு அந்த எளிய உண்மை புரியவரும்.
தரவுகளின் அடிப்படையில் அரசியலைத் தீர்மானிப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு
இந்தியக் கல்வி தொடர்பான தமது அரசியலை நிச்சயம் மறு பரிசீலனை செய்வார்கள். தன் அரசியலுக்கு
ஏற்பத் தரவுகளைத் திரிப்பவர்கள் பழகிய செக்குமாட்டுப் பாதையில் தலையை ஆட்டிக்கொண்டு
தமது பயணத்தைத் தொடர்வார்கள்.
மொழிபெயர்ப்பு தொடர்பாக
சில விஷயங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியப் பாரம்பரியப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு
மாணவர்கள் விசேஷ நாட்களில் கிஃப்ட்கள், பிரசெண்ட்கள் தந்தார்கள் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதைப் பரிசுகள் என்று மொழிபெயர்க்கவில்லை. ஏனென்றால்,
அவை உண்மையில் தானம், சன்மானம், தட்சணை என்ற பெயரில் நம்மால் தரப்பட்டிருக்கின்றன.
பரிசு என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு இடத்தில் பயன்படுத்திவிட்டு
அதன் பிறகு வரும் இடங்களில் தானம், சன்மானம், தட்சணை என்றே மொழிபெயர்த்திருக்கிறேன்.
விசேஷ நாட்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் புதுத் துணியைப் பரிசாகத் தந்தார்கள்
என்று மொழிபெயர்க்கும்போது அது மிகவும் அந்நியமாகப்படுகிறது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு
வஸ்திர தானம் தந்தார்கள், புதுத் துணியை சன்மானமாகத் தந்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.
அதுபோல் இந்தியப்
பெயர்களை அன்றைய ஆங்கிலத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடித்துக் குதறியிருக்கிறார்கள்.
சில இடங்களில் அவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதே நமக்குப் புரிவதில்லை. எனவே, அந்த
இடங்களில் கொஞ்சம் சுதந்தரம் எடுத்து நமக்குப் புரியும் ஒன்றாக மொழிபெயர்த்திருக்கிறேன்.
உதாரணமாக, Paurejantahpatraranum அதாவது ப(வ்)ரிஜந்தபத்ராரணம் என்று வருகிறது. இதை
பாரிஜாத புராணம் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். ஒருவேளை அது தவறென்றால் சரியானதைத்
தெரியப்படுத்துங்கள். அடுத்த பதிப்பில் சரி செய்துகொள்கிறேன்.

Leave a Reply