Posted on Leave a comment

ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்

புதிய நோய்கள் அறியப்படும் போதெல்லாம் உலகச் சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரீம்ஸ் (Reims) தீவுக்குத் திரும்பும். இங்குதான் உலகின் மிகப் பழைமையான கிருமி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான ஃபிரெடெரிக் லோஃப்லர் ஆராய்ச்சி மையம் (Friedrich Loeffler Institute) அமைந்திருக்கிறது. இது 1910ல் லோஃப்லர் எனும் விஞ்ஞானியால் ஆரம்பிக்கப்பட்டது.

ஹிட்லரின் நாஸி அரசாங்கத்தால் ரசாயனப் போர் ஆராய்ச்சிக்காகப் பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட இந்த மையம் இன்று புதிய நோய்க் கிருமிகளின் தன்மையையும், அவை மிருகங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆராய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது! 1970களில் முக்கிய நகருக்கும் இந்தத் தீவுக்கும் இணைப்புப் பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஒரே ஒரு கட்டடத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் இன்று கிட்டத்தட்ட 1.50 கிலோமீட்டர் நீளத்தில் பிரமாண்டமான ஆராய்ச்சிக் கூடமாக மாறிவிட்டது.

மிக நவீன விஞ்ஞான வசதிகள் கொண்ட இந்த ஆராய்ச்சிமையத்தில் வேலை பார்க்கும் விஞ்ஞானிகள் ஒவ்வொரு முறை நுழையும் போதும் வெளியேறும் போதும் தொற்று நீக்கும் நடவடிக்கையாக கிருமிகளை ஒழிக்கும் ஒரு அதிசக்தி வாய்ந்த ஷவர் கீழே சில நிமிடங்கள், பாதுகாப்பு உடையுடன் நின்றே செல்கிறார்கள்.

மஞ்சள் காமாலை, ரேபீஸ், காலரா தொடங்கி எய்ட்ஸ் இபோலா வரை நூற்றுக்கணக்கான கொடிய நோய்க் கிருமிகளுடன், மனிதனுக்கு நோயைப் பரப்பும் கொசுக்கள், வௌவால் போன்ற உயிரினங்களும், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் வளர்ப்புப் பிராணிகளும் இத்தீவில் அடக்கம்.

மனிதனுக்கு பரவும் நோய்க் கிருமிகளை வளர்ப்புப் பிராணிகளுக்குச் செலுத்தி இங்கு செய்யப்படும் ஆராய்ச்சிகள், நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு மட்டுமல்லாது வருங்காலங்களில் புதிதாய்ப் பரவும் நோய்களை விரைவாகக் கட்டுப்படுத்தவும் உதவும்.

இந்தத் தீவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்த 80 முதல் 120 வரை மாடுகள், ஆடுகள், காட்டுப் பன்றிகள் உட்பட நிறைய விலங்குகள் உள்ளன. ஆராய்ச்சியின் விளைவாக ஏதேனும் ஒரு மிருகத்துக்குக் குணமாக்க முடியாத அளவு தொற்றுநோய் வந்துவிட்டால் அந்த மிருகத்தை எரித்து விடுகிறார்கள். 

“மிருகங்கள் மீது உள்ள அக்கறையினால் பெரும்பாலான ஆராய்ச்சிகளுக்கு மிருகங்களை உட்படுத்துவதில்லை. ஆனாலும், கொடுமையான தொற்றுநோய்க் கிருமிகள் வரும்போது அவற்றை மிருகத்தின் உடலில் செலுத்தி ஆராய்ச்சி செய்யும் போதுதான் அந்த நோயை எதிர்ப்பதற்குத் தேவையான antibodies எனப்படும் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க முடிகிறது என்கிறார் ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆராய்ச்சித் தலைவர் மார்ட்டின் பியர் (Martin Beer).

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்குதல் உலகம் முழுவதும் பரவிவிட்டது. உலகச் சுகாதார அமைப்பின் அதிகாரபூர்வமான அறிக்கையின்படி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டி, பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா தேசிய அவசர காலச் சட்டத்தைப் (National State Emergency) பிறப்பித்துள்ளது 

இத்தாலியில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. போர் மூளாத காலகட்டத்தில் ஒரு ஐரோப்பிய நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. பல நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க 144வது பிரிவு சட்டம் அமலில் உள்ளது. 

மூன்றே மாதங்களில் உலகம் முழுமைக்கும் ஒரு நோய் பரவிவிட்டது மனிதகுல வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும். மனிதகுலம் மொத்தமும் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தினால் இந்தச் சூழலை மூன்றாம் உலகப்போர் எனக் குறிப்பிட்டாலும் அது மிகையாகாது. 

கத்தி, ரத்தம், சப்தமின்றி மூண்டிருக்கும் இந்தப் போர் மனிதனுக்கும் கிருமிக்குமான போர்! இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் துணைத்தலைவரான ஃபிரான்ஸ் கோன்ராத்ஸ் (Franz Conraths), “ஒவ்வொரு முறையும் கொரானா போல ஏதாவது பயங்கரமான வைரஸ் / அல்லது / பாக்டீரியா தாக்குதல் ஆரம்பித்தால், அதை எவ்வளவு விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று ஆராய்வதே எங்களது முக்கியக் குறிக்கோள். அதற்குத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் உடனே எடுத்து வருகிறோம் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டுகிறார். 

உதாரணமாக, கொரோனா வைரஸ் ஆடு மாடு கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கும் பரவுமா, கிருமி தாக்கிய பிராணிகளை நெருங்குவதாலோ அல்லது அவற்றின் மாமிசத்தை உண்பதாலோ மனிதனுக்குத் தொற்றுமா போன்ற ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இங்கு நிகழும் ஆராய்ச்சிகள் மிகவும் அவசியமானவை. இத்தீவில் நூற்றுக்கணக்கான வைரஸ் கிருமிகள் அவற்றின் தன்மையைப் பொருத்து நான்கு வகைகளாய்ப் பிரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. 

இரண்டாம் வகையிலிருந்து நான்காம் வகை வரையிலான ஆபத்தான கிருமிகள் பல கதவுகளைக் கொண்ட காற்று புகாத அறைகளில், மைனஸ் எண்பதிலிருந்து மைனஸ் நூற்றுத் தொண்ணூறு டிகிரி குளிரூட்டப்பட்ட கலன்களில் உறைநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இரும்புக் கம்பி வேலி, முள் கம்பி சுருள் பாதுகாப்பு போன்ற பல அடுக்குப் பாதுகாப்புகளுடன் திகழும் இத்தீவில் உயிரியல் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என நானூற்றுக்கும் அதிகமானோர் பணிபுரிந்தாலும், இபோலா, ஹென்ரா போன்ற மிகக்கொடிய நான்காம் வகைக் கிருமிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நுழையும் அனுமதி இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தொடங்கி ஒரு பத்து பேருக்கு மட்டுமே உண்டு. 

அவர்களும் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோடியாய்ச் செல்பவர்களுக்குக் காற்றழுத்தத்துடன் கூடிய கவச உடை, அந்த உடையைக் கழற்றுவதற்கு முன்னால் வெளியேறும்போது கார்போலிக் ஆசிட் கலந்த குளியல் எனப் பல கட்டாயங்கள் உண்டு.

இத்தீவில் உபயோகப்படுத்தப்பட்ட எந்த ஒரு பொருளும் முழுமையான கிருமி நீக்கத்துக்குப் பிறகே வெளியே அனுப்பப்படும். கிருமி நீக்கத்தில் சிறு சந்தேகம் எழுந்தாலும் அந்தப் பொருள் அத்தீவிலேயே மின்சாரத்தின் மூலம் பொசுக்கப்பட்டுவிடும்!

இத்தனை பாதுகாப்புகள் மற்றும் கெடுபிடிகளுடன் திகழ்வதால் இத்தீவுக்கு “வைரஸ்களின் அல்கட்ராஸ் சிறைச்சாலை என்ற பெயரும் உண்டு. காரணம்,  அல்கட்ராஸ் (Alcatraz) என்னும் சிறை அமெரிக்காவில் உள்ளது. இப்போது அது சிறையாக இல்லை (1963-ல் மூடப்பட்டுவிட்டது) என்பது வேறு விஷயம். கடலுக்கு நடுவே சின்னஞ்சிறு குன்றின் மீது அமைந்துள்ள இந்தச் சிறையிலிருந்து தப்பித்தவர் எவரும் இல்லை. தப்பிக்க முயற்சி செய்து இறந்தவர்கள் நிறைய. 

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகளை சோதனைச் சாலையில் செயற்கை முறையில் பெருக்கி, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் மிருகங்களின் உடல்களில் செலுத்தி சோதனைகளை ஆரம்பித்துவிட்டது இந்த ஆராய்ச்சி மையம்! 

சில மாதங்கள் நீடிக்கப்போகும் இந்தச் சோதனைகளின் அறிக்கை, தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றப்போவதுடன் நம்முடைய வருங்கால உணவுப் பழக்கங்கள் மற்றும் பிராணிகள் வளர்ப்பு முறைகளை நிர்ணயம் செய்வதிலும் உதவும்.

கொரோனா வைரஸ் மூன்றே மாதங்களில் உலகம் முழுமைக்கும் பரவியது பயமுறுத்தும் விஷயம் என்றாலும், அதைக் கட்டுப்படுத்தும் திறமைகளைக் கொண்ட சுகாதார அமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் இன்றைய மனிதகுலம் திகழ்வது நம்பிக்கை கொடுக்கும் செய்தி. பிணி, பஞ்சம், போர் என எத்தனையோ அவநம்பிக்கைகளைப் போராடி எதிர்த்து ஒழித்ததினால்தான் மனிதகுலம் இன்றும் காலூன்றி நிற்கிறது. 

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுடன் நில்லாமல் இனி இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொண்டு முறியடிக்கும் திறன் கொண்ட மருத்துவ வசதி உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கும் வசதியை ஏற்படுத்துவதில்தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

(தகவல் நன்றி: phys.org / Science Alert / Science / Virus Epidemiology போன்ற இணைய தளங்கள் / மற்றும் / ஸ்மித்ஸோனியன் (Smithsonian) இதழ்)

Leave a Reply