அரசன் கர்ணனும் கூட்டு அனுமதியும்
துரியோதனன், கர்ணனை அங்க தேச மன்னனாக்கிய சமயத்தில் பாரதம் சொல்லும் விவரங்கள் துரியோதனனுக்கு சுயேச்சையாக முடிவெடுக்க முடியாத நிலை இருந்ததை உணர்த்துகின்றன. இந்நிலை துரியோதனனுக்கு மட்டுமல்லாமல் திருதராஷ்டிரனுக்கும் இருந்தது என்பதையும் இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன.
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக் களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை என்ன, திருதராஷ்டிரன் வகித்தததாகச் சொல்லப்படும் பதவிதான் என்ன என்பதைப் பற்றி சில கேள்விகளை எழுப்பினோம்.
ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். இதிகாசம் நெடுகிலும் திருதராஷ்டிரன் ‘அரசர்க்கரசனே, சக்ரவர்த்தியே, ராஜனே’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறான்; துரியோதனனும் அவ்வாறு அழைக்கப்படுகிறான். ஆனால், இவர்கள் வகித்த பதவிக்கு இந்த அழைப்பு மொழி ஆதாரமாக முடியாது. வனவாச காலத்தில், அரசிழந்து வனத்தில் இருந்த தருமனையும் அவன் தம்பியர் நால்வரையும் கூடத்தான் ‘பாரத, மன்ன, அரச, மன்னர் மன்னா’ என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஐவருமே சூதாட்டத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆகவே, பிறர் அழைக்கும் விதம், அவரவர் வகித்துக் கொண்டிருக்கிற பதவியின் அடையாளம் என்பதைக் காட்டிலும், ஒரு மரபின், வழக்கத்தின் தொடர்ச்சி என்றுதான் சொல்வதற்கு அணுக்கமாக இருக்கும்.
இப்போது அர்ஜுனனோடு த்வந்த யுத்தம் செய்வதற்குக் கர்ணன் விரும்பிய அந்த ஆட்டக் களத்துக்குத் திரும்புவோம். அந்தச் சமயத்தில், கர்ணனுக்கு அங்க நாட்டு மன்னனாகப் பட்டம் சூட்டுவதற்கே அவனால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லையே! இந்த விஷயத்தில் கும்பகோணத்துத் தமிழ்ப்பதிப்பான பாரதம் சொல்வதைப் பார்ப்போம். துரோணருடைய மாணவர்கள், அவரவர் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலையில் செய்து காட்டிய ஆட்டக் களத்திலே பிரவேசித்த கர்ணன், அர்ஜுனனைத் த்வந்த யுத்தத்துக்கு அழைக்கிறான். இதற்கும் முன்னால், ஆட்டக் களத்தில் நுழைந்தபோது, கர்ணன் பேசத் தொடங்கிய முதல் வாக்கியம் “அர்ஜுனா! நீ என்ன காரியம் செய்தாயோ அதற்கு மேற்பட்ட செய்கையை, பார்த்திருக்கும் மனிதர் முன்னிலையில் செய்யப் போகிறேன். உன்னைப் பற்றியே நீ கர்வப்படாதே’ என்றான்”. (கும்பகோணப் பதிப்பு, முதல் தொகுதி, ஆதி பர்வம், நூற்று நாற்பத்தாறாவது அத்தியாயம், பக்கம் 546)
அதாவது, அர்ஜுனன் யாருடனும் யுத்தம் செய்யாமல், தான் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலயில் ‘செய்து காட்டினான்’. இன்றைய மொழியில் சொல்வதானால், டெமான்ஸ்ட்ரேட் செய்தான். அப்படியானால் “நீ என்ன காரியம் செய்தாயோ அதற்கு மேற்பட்ட செய்கையை, பார்த்திருக்கும் மனிதர் முன்னிலையில் செய்யப் போகிறேன்” என்பதற்கு என்ன பொருள் வருகிறது? கர்ணனும், அர்ஜுனன் செய்ததைப் போலவே தான் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலையில் செய்துகாட்டப் போகிறான் என்பதுதானே? இந்த நிலையில், கர்ணன் பங்கேற்க, துரோணர் அனுமதி கொடுக்கிறார். “கர்ணன், துரோணரால் அனுமதி கொடுக்கப்பட்ட பிறகு, அங்கே அர்ஜுனன் செய்தவற்றையெல்லாம் செய்தான்” (மேற்படி, பக்கம் 547). துரோணர், டெமான்ஸ்ட்ரேஷனுக்கு அனுமதியளித்தார். கர்ணன் அவ்வாறு செய்து காட்டியதும், துரியோதனன் அவனை அணுகி, நான் உன் நட்பை விரும்புகிறேன்; நீ என்னையும் கௌரவர்களுடய ராஜ்யத்தையும் உன்னிஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்” (மேற்படி.) இப்போது, தன்னிடம் பேசிய துரியோதனனுக்கு பதில் சொல்லும் போது கர்ணன், “பிரபுவே! நான் அர்ஜுனனுடன் தொந்த யுத்தம் செய்ய விரும்புகிறேன்” (மேற்படி) என்று சொன்னான்.
இப்போது, துரியோதனன், ‘நீ என்னை உன்னிஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று சொன்னது சரியே. ஏனெனில், அவனுக்குத் தன் மீது உரிமையிருக்கிறது. ஆனால், ‘கௌரவ ராஜ்ஜியத்தை’ என்றொரு இலவச இணைப்பைக் கொடுத்தான் பாருங்கள்… அங்கேதான் அவனுக்கு உரிமையில்லாத ஒன்றை, உரியவர்களின் சம்மதத்தைப் பெறும் முன்னரே சொல்லியிருக்கிறான். சற்றுப் பொறுங்கள். இதை விளக்குகிறேன். இப்போது, தொந்த யுத்தம் அல்லது த்வந்த யுத்தம் என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது.
யுத்தம், துவந்தம், சங்குலம் என்று இருவகைப்படும். சமமானவர்களுக்கு இடையில் நடப்பது துவந்த அல்லது தொந்த யுத்தம். தேராளி, தேராளியுடன்; யானை வீரன், யானை வீரனுடன்; குதிரை வீரன், குதிரை வீரனுடன்; காலாட் படைஞன் இன்னொரு காலாட் படைஞனுடன்; வில்லாளி, வில்லாளியுடன்; கதாபாணி, கதாபாணியுடன்… இப்படிக் கருவியாலும், ஏறியிருக்கும் வாகனத்தாலும், மற்ற எல்லா விதங்களிலும் சரிக்குச் சரி சமமாக இருப்பவர்களுக்கிடையில் நடப்பதே தொந்த அல்லது துவந்த யுத்தம். இந்த எந்த முறையுமே இல்லாமல் free for all முறையில் நடப்பது சங்குல யுத்தம். இது, யுத்த களத்தில், மன்னர்களோடு மன்னர்கள் மோதிக் கொள்ளும் நிலையில் உச்சகட்டப் போராக நடைபெறும் ஒன்று. இது தற்காலங்களிலும் உண்டு. தற்காலாத்தில் இன்ஃபன்ட்ரி எனப்படும் காலாட் படையினர் மோதுகையில், நேருக்கு நேர், அருகருகே நின்று போராடும் சமயத்தில் பயன்படுத்துவதற்காகத்தான், ஒவ்வொரு குண்டாகச் சுடும் துப்பாக்கிகளின் முனையில் பயனட் அல்லது கத்தி பொருத்தப் பட்டிருந்தது. இப்போது சடசடசடவெனச் சுட்டுத் தள்ளும் துப்பாக்கிகளுக்கு அது தேவையில்லாமல் போய்விட்டது.
கதைக்குத் திரும்புவோம். வெறுமனே வித்தைகளை மக்களுக்கு முன்னிலையில் செய்து காட்டத்தான் கர்ணனுக்கு துரோணர் அனுமதி வழங்கினார். கர்ணனும் தொடக்க காலத்தில் துரோணருடைய சீடனே. பின்னர் அவன் துரோணரிடம், ‘நான் அர்ஜுனனை எதிர்க்க விரும்புவதால் எனக்கு பிரமாத்திர வித்தையைக் கற்பிக்க வேண்டும்’ என்று வெளிப்படையாகவே, தான் கற்பதன் நோக்கம் அர்ஜுனனை எதிர்ப்பதற்காகத்தான் என்று சொல்லியே கேட்டபடியால், ஒரே குழுவுக்குள் யுத்தக் கலகம் விளைவதை அனுமதிக்க முடியாதவராகிய துரோணர், பல காரணங்களைக் காட்டி மறுத்ததன் பிறகுதான், கர்ணன் பரசுராமரிடத்தில் பொய் சொல்லிச் சீடனாகச் சேர்ந்தான். ஆகவே, கர்ணனும் துரோணரின் மாணவன்தான். அவனுக்கு அவர் அவன் கற்ற வித்தைகளை மக்கள் முன்னிலையில் செய்து காட்ட அனுமதி கொடுத்ததில் எந்தப் பிறழ்வும் ஏற்படவில்லை.
ஆனால், இப்போதோ கர்ணனும் துரியோதனனும் ஒன்றாகி விட்டார்கள். உண்மை என்னவென்றால், கர்ணன் துரோணரிடத்தில் பயின்ற காலத்திலேயே, சொல்லப் போனால், அதற்கு முன்னரேயே கூட துரியோதனனுடைய நெருங்கிய நண்பன்தான். இந்த உண்மையை யுத்தம் முடிந்ததன் பிறகு வரும் சாந்தி பர்வத்தில்தான் காண முடியும். இருக்கட்டும். இப்போது, திடீரென்று நட்பு பூண்ட பாவனையில் இருவரும் பேசிக் கொள்வதும், ஒருவரை ஒருவர் உற்சாகப் படுத்திக் கொள்வதும் அமளிதுமளிப் பட, இப்போது “நான் அர்ஜுனனுடன் தொந்த யுத்தம் செய்ய விரும்புகிறேன்” என்று சதுரங்கக் காய் நகர்த்துகிறான் கர்ணன். இதுவோ, அவரவர் கற்ற வித்தைகளை மக்களுக்கு முன்னிலையில் செய்து காட்டுவதற்காக அமைக்கப்பட்ட ஆட்டக் களம். சண்டக்கான அமர்க்களமன்று. (அமர்: போர்; போருக்கானகளம் என்கிறேன். இப்போது சொல்லும் பொருளிலில்லை!) சரி. இதை விலக்கி விட்டார்கள்—கிருபருடைய இடையீடும் அவர் சாதுரியமாகப் பயன்படுத்திய கேள்வியும் நமக்குத் தெரிந்தவையே. இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பின்னொரு சமயம் தனியாகப் பேசுவோம். இப்போது களத்துக்குத் திரும்புவோம்.
இந்தச் சமயத்தில், ‘இவன் மன்னனில்லை என்பதால், இவனால், எல்லா வகையிலும் சமமானவர்களுக்கிடையே மட்டுமே அனுமதிக்கப்படும் துவந்த யுத்தத்துக்கான அனுமதியைப் பெறமுடியாது என்றால், இவனை மன்னனாக்கி விடுகிறேன். அதன் பிறகு இவனும் அர்ஜுனனும் சமமாகி விடுவார்கள்’ என்று சொன்ன துரியோதனன், உண்மையிலேயே அப்படியொரு முடிவெடுக்க உரிமையுள்ளவனாக இருந்திருந்தால், தன் சுய விருப்பத்தின் பேரிலல்லவா அங்க தேசத்தின் அரசனாக, கர்ணனை நியமித்திருக்க வேண்டும்? கும்பகோணம் பதிப்பிலிருந்து குறிப்பிட்ட பகுதியைத் தருகிறேன்: “இந்த அர்ஜுனன் ராஜனல்லாதவனோடு யுத்தம் செய்ய விரும்பானாயின், அந்தக் காரணம் பற்றியே நான் இந்தக் கர்ணனை அங்க தேசத்தின் ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்கிறேன்’ என்று சொன்னான்” (மேற்படி, பக்கம் 548). பிறகு துரியோதனன் அப்படியே நேரடியாக கர்ணனுடைய பட்டாபிஷேகத்தை நடத்தியிருப்பானாயின், நான் இப்போது எழுப்பப் போகும் கேள்விக்கு இடமேயில்லை. ஆனால் என்ன செய்தான்? “பிறகு, ராஜாவான த்ருதராஷ்டிரனையும் பிதாமகராகிய பீஷ்மரையும் அனுமதி கேட்டுக் கொண்டு, அபிஷேகத்துக்கு வேண்டிய சாமக்கிரிகளைப் பிராமணர்களைக் கொண்டு சேகரித்து…” அதன் பிறகே கர்ணனுக்கு அங்க தேசத்தரசனாக மகுடாபிஷேகம் செய்விக்கிறான்.
இப்போது என் கேள்வி இதுதான். துரியோதனன் அரசனாக இல்லாவிட்டாலும், இளவரசனாகவாவது இருந்திருந்தால், தன் விருப்பப்படி முடிவெடுக்க இயலாதவனா? சரி போகட்டும். தந்தை என்ற முறையில் திருதராஷ்டிரனிடம் அனுமதி பெற்றான். அது போதாதோ? திருதராஷ்டிரன் முழுமையான தகுதிபெற்ற மன்னன் என்றால் அவனிடம் பெற்ற அனுமதி போதாதோ? பிதாமகராகிய பீஷ்மரிடம் எதற்காக அனுமதி பெற வேண்டும்? அவர்கள் அனுமதித்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவனுக்குத் தந்தையிடம் பெற்ற அனுமதி போதாமல், பீஷ்மரிடமும் பெறவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? முக்கியமாக, இரண்டுபேர் ஒன்றிணைந்து அனுமதிக்க வேண்டிய தேவை என்ன?
இதை என் ஆறாவது கேள்வியாக வைத்துக் கொள்ளுங்கள். கேள்விகளால் குடைந்தபடிச் சென்றாலொழிய சத்திய தரிசனம் கிட்டுவது இயலாது என்பதால் இந்தக் கேள்விக் கணைகளை இன்னும் சற்று காலத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்—விரைவில் விடையளிப்பேன்.
[…] மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரிகி… […]