Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 5) | ஹரி கிருஷ்ணன்

5 பாண்டவ கௌரவன்

தலைப்பு நகை முரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பதை பின்னால் பார்க்கலாம். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில் விடையளித்த பிறகு மற்ற கேள்விகளை எழுப்பத் தொடங்குவோம். நாம் எழுப்பிய முதல் கேள்வி இது: திருதராஷ்டிரன், பிறவியிலேயே கண் தெரியாதவனாக இருந்த காரணத்தால், பாண்டுவிடம் அரசு தரப்பட்டது என்றால், அரசு ஒப்படைக்கப்பட்டதா அல்லது, ஒரு மாற்று அரசனாகத் தாற்காலிகப் பொறுப்பில் பாண்டு அரசேற்றானா அல்லது, பாண்டுவின் நிலை வேறெதுவுமா?

மஹாபாரதத்தின் கதை அமைப்பின்படி, இந்தக் கேள்விக்கான விடை, பாண்டு அரசேற்ற அல்லது, திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்துச் சென்ற கட்டங்களில் இல்லை. பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தூது அனுப்பிக் கொண்டும், யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டும் இருக்கின்ற சமயமான உத்யோக பர்வத்தில்தான் வருகிறது. கிருஷ்ணர் தூது வந்திருக்கிறார். ஒவ்வொருவரும் துரியோதனனுக்கு அவன் செய்யும் தவறை எடுத்துச் சொல்லி, இதோபதேசமாக, முழு நாட்டை இல்லாவிட்டாலும் பாதி அரசையாவது கொடுக்கும்படியாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவனோ எதற்கும் செவி சாய்க்காமல், தான் பிடித்த பிடியில் நின்று கொண்டிருக்கிறான்.

அந்தச் சமயத்தில், பீஷ்மர் பேசத் தொடங்குகிறார். சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்தவர்களான சித்திராங்கதன், விசித்திரவீர்யன் ஆகிய இருவரில் சித்திராங்கதன் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டும், விசித்திரவீர்யன் நோய்வாய்ப்பட்டும் இறந்துபட, அச்சமயத்தில் அரசேற்க வேறு ஆண்மக்களில்லாததால், தாய் சத்தியவதி தன்னை (பீஷ்மரை) அரசேற்கச் சொன்னதைத் தெரிவிக்கிறார். அச்சமயத்தில் சொல்கிறார்: “தாயே! நான் குலத்துக்காகவும், முக்கியமாக உனக்காகவும்* வீர்யத்தைக் கட்டியவனும், அரசனாகாதவனுமாக இருக்கிறேன். என்னை ராஜ்யத்தைக் காப்பதில் ஏவாதே. சந்தனுவுக்குப் பிறந்த நான், கௌரவர்களின் வம்சத்தைத் தாங்குபவனாகிப் பிரதிஜ்ஞையை, வீணாகச் செய்யேன்,” (மஹாபாரதம், கும்பகோணம் பதிப்பு, நான்காம் தொகுதி, உத்யோக பர்வம், 147ம் அத்தியாயம், பக்கம் 488.) (* உனக்காகவும் = சத்தியவதிக்காகவும்).

தான் முன்னர் செய்த சபதத்தைப் பற்றி இப்போது துரியோதனனிடத்தில் எடுத்துச் சொல்கையில், பீஷ்மர் இரண்டு தன்னிலை விளக்கங்களை அளிக்கிறார்.

(1) தான் எந்தவிதமான சூழலிலும் அரச பதவியில் அமர மாட்டேன் என்ற நிலையிலிருந்து அணுவளவும் பிறழப் போவதில்லை என்பது.

(2) எல்லாவிதமான சூழல்களிலும் தான் கௌரவ வம்சத்தைத் தாங்குபவனாக, அதாவது பாதுகாப்பவனாக இருப்பேன் என்பது.

இந்த இரண்டாவது நிலைப்பாட்டைத்தான் சற்றே விளக்க வேண்டியிருக்கிறது. அதாவது, இப்போது (அதாவது, பாண்டுவின் மக்களும், திருதராஷ்டிரனின் மக்களும் அரசாட்சிக்கான போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில்) கௌரவ வம்சம் என்றால் அது யாரைக் குறிக்கும் என்பது இதில் முதன்மை பெறுகின்றது.

பொதுவாக, திருதராஷ்டிரன் மக்களையே கௌரவர்கள் என்ற அடையாளத்தால் நாம் அனைவருமே புரிந்துகொள்கிறோம் என்றாலும், இது பாண்டவர்களையும் உள்ளிட்ட பெயர் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது. அதாவது, குரு என்ற மன்னனின் வம்சமே கௌரவ வம்சம் என்றறியப்படுகிறது. பாண்டவர்களும் இதே குருவின் வம்சத்தில் உதித்த கௌரவர்களே. இரண்டு தரப்பினரும் கௌரவர்களே என்ற போதிலும், பாண்டுவின் மக்களைத் தனிப்படுத்தி அடையாளம் காட்டும் அவசியத்துக்காக அவர்களைப் பாண்டுவின் மக்கள் என்ற பொருளில், பாண்டவர்கள் என்ற பெயரால் சுட்டினார்கள். இதுபோலவே, திருதராஷ்டிரன் மக்கள் என்ற பொருளில் நூற்றுவருக்கு, ‘தார்த்ராஷ்ட்ரர்’ என்ற பெயரும் உண்டு.

இந்த விஷயம் சற்று புதிய ஒன்றைப் போலத் தென்படுவதால், இந்த முடிவுக்கான அகச்சான்றையும் தரக் கடமைப் பட்டுள்ளேன். திரௌபதியின் திருமணம் நடந்த சமயத்திலேயே ஒருமுறை நூற்றுவர் பாண்டவர்ளோடு போரிட்டுத் தோற்றிருக்கின்றனர். அவர்கள் ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பின சமயத்தில் ‘யார், யாரை மணந்தார்கள்’ என்ற விவரத்தை அறியாதவனாகிய திருதராஷ்டிரனிடத்தில், க்ஷத்தா என்ற பெயரையும் உடையவனானா விதுரன் “அரசனே! நல்ல காலமாதலால் கௌரவர்கள் விருத்தியடைந்தனர் என்று சொன்னார்… அறிவே கண்ணாகவுடைய அவ்வரசன், தன் ஜ்யேஷ்ட புத்திரனாகிய துரியோதனன், திரௌபதியினால் வரிக்கப்பட்டான் என்று அறியாமையால் நினைத்தான். உடனே, ‘கிருஷ்ணையை* அழைத்து வா’ என்றும், ‘அவளுக்கு மிகுதியான ஆபரணங்களைக் கொடு’ என்றும் தனது புத்திரனாகிய துரியோதனனுக்குக் கட்டளையிட்டான். அதன் பிறகு விதுரர், “கௌரவர்கள் என்னும் பொதுச் சொல்லால் உன் புத்திரர்களை எண்ணாதே. விருத்தியாகின்றனர் என்ற என் சொல்லினால் பாண்டவர்கள்தாம் சிறப்பிக்கப் பட்டனர்…. என்று சொன்னார்,” (கும்பகோணம் பதிப்பு, முதல் தொகுதி, ஆதிபர்வம் 219ம் அத்தியாயம், 789ம் பக்கம்,) (*கிருஷ்ணை என்பது பாஞ்சாலி, அல்லது திரௌபதியின் இன்னொரு பெயர்.)

எனவே, கௌரவர்கள் என்பது, துரியோதனாதியரையும், ஐந்து பாண்டவர்களையும் சேர்த்தே குறிக்கும் பொதுப் பெயர் என்பது, விதுரருடைய வாக்காலேயே பாரதத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ஆக, இப்போது, ‘கௌரவ வம்சத்தைத் தாங்கும்’ கடப்பாடு உடையவனாகத் தன்னைக் குறிப்பிடுபவராகிய பீஷ்மர், இரு திறத்தாரில் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆனாலும், அவர் குறிப்பிடுவது குரு வம்சத்தின் அரியணை யாருடைய பொறுப்பிலிருக்கிறதோ அவரைத்தான் என்பது இதை அடுத்து வரும் துரோணருடை உரையில் மிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது.

நடந்த நிகழ்வுகள் இன்னமும் விரிவாக அந்த உரையில் எடுத்துச் சொல்லப்படுகின்றன. அவற்றை இதற்குப் பின்னால் காண்போம். இப்போதைக்கு, தருமனோ, துரியோதனனோ பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னரேயே பீஷ்மர் சேனைகளைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தன்வசம் ஏற்றுக் கொண்டார் (அதாவது, பாண்டு வனம் புகுந்த சமயத்தில்) என்பதை மட்டும் பார்த்துக் கொள்வோம். ஆகவே, பீஷ்மர், தனக்குத் தானே பூட்டிக்கொண்ட பிரதிக்ஞை என்ற தளையால், தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், துரியோதனனுடைய பக்கத்தில் நின்று போர் செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளானார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த மேற்படி உரையின் தொடர்ச்சியில் பீஷ்மர், அம்பிகா அம்பாலிகா ஆகிய இருவருக்கும் வியாசர் முறையே திருதராஷ்டிரனையும் பாண்டுவையும் அருளியதையையும், அதன் பின்னர் நடந்தவற்றையும் விவரிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“அவர் (வியாசர்) உடனே மூன்று புத்திரர்களை உண்டு பண்ணினார். உன்னுடைய தந்தை கண்ணில்லாமல் குருடனானமையால், அரசனாகவில்லை. மகாத்மாவும் உலகத்தில் புகழ்பெற்றவனுமான பாண்டு அரசனானான். அவனே அரசன். அவர்கள் (=பாண்டவர்கள்) அவனுடைய புத்திரர்கள். பிதாவினுடைய சொத்து முதலியவைகளை அடையத் தக்கவர்கள். அப்பா! கலகத்தைச் செய்யாதே. ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடு.” என்கிறார். (உத்தியோக பர்வம், 147ம் அத்தியாயம், 469ம் பக்கம்.)

ஆகவே, அதிகாரபூர்வமாக அரசேற்றவன் பாண்டுவே என்பதும், அரசுரிமை என்பது இயற்கையான முறையில் அவனுடைய புதல்வர்களான (பாண்டு காடேகும் போது அவனுக்கோ, திருதராஷ்டிரனுக்கோ புதல்வர்கள் பிறந்திருக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்) பாண்டவர்கள் என்றறியப்படும் கௌரவர்களான தருமபுத்திரனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்குமே சேரும் என்பது வெளிப்படை. இந்த ஓரிடம் என்றில்லை. இன்னும் பல இடங்களில் இது பற்றி பற்பல சமயங்களில் பேசப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு, நம்முடைய இரண்டாம் கேள்விக்கு விடை காணத் தொடங்குவோம்.

நாம் எழுப்பிக் கொண்ட ஆறு கேள்விகளில் முதற் கேள்விக்கு விடையாக, முறைப்படி முடிசூட்டப்பட்டு அரியணை ஏறியவன் பாண்டுவே; அவனுடைய புத்திரர்களுக்கே முறைப்படி அரசுரிமை சென்றாக வேண்டும் என்ற விடையை பீஷ்மர் வாய் மொழியாகப் பார்த்தோம்.

இரண்டாவதாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தோம். அதாவது ‘கேள்வி இரண்டு. அரியணையில் அமர்ந்த பாண்டு எப்போது வேட்டைக்குச் சென்றான்? அவன் அரசாண்டானா அல்லது வேட்டை மட்டுந்தான் ஆடினானா? ஆட்சிக்கு வந்த அவன், தன் பங்காக, நாட்டை விரிவுபடுத்த ஏதேனும் செய்தானா அல்லது சும்மா ஒப்புக்கு அரியணையில் அண்ணனுக்கு மாற்றாக அமர்ந்திருந்தானா?’ இந்தக் கேள்விக்கு விடையைப் பார்த்துவிட்டு, திருதராஷ்டிரன் ஒருபோதும் சக்ரவர்த்தியாக இருந்ததே இல்லை; துரியோதனனும் இளவரசுப் பட்டம்கூட சூட்டப்படாதவனாகத்தான் இருந்தான் என்பதற்கான வெகு முக்கியமான ஆதாரத்தைப் பார்க்கலாம்.

பாண்டு அரசேற்றதும், வனம் புகுந்ததும் வெகு சுருக்கமாக ஆதி பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவன் குந்தியையும் மாத்ரியையும் மணந்திருந்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவையும் ஆதி பர்வத்தில் மிகச் சுருக்கமாகப் பேசப்படுகின்றன. இந்த இரண்டு திருமணங்களும் முடிந்த பிறகு, பாண்டுவின் திக்விஜயம் பேசப்படுகிறது. குரு வம்சத்துக்குத் தீங்கு செய்தவர்களாகிய தசார்ண தேசத்தரசர்களை முதலில் வென்று, அதன் பிறகு தீர்க்கன் என்ற மகத தேசத்தரசனைக் கொன்று அவன் நாட்டை வென்று, காசி தேசம், ஸும்ஹதேசம் என்று பல இடங்களை வென்று, குரு வம்சத்தின் புகழ்க் கொடியை திசையெங்கிலும் பறக்கவிட்டு, நாட்டைப் பேரளவில் விரிவுபடுத்தி, வென்ற அனைத்தையும் பீஷ்மருக்கும் தாயார் சத்தியவதிக்கும், விதுரருக்கும் திருதராஷ்டிரனுக்கும் காணிக்கையாக்கினான். இது ஆதிபர்வம், நூற்றிருபத்து மூன்றாவது அத்தியாயம், ஸம்பவ பர்வத்தில் விவரிக்கப் பட்டுள்ளது. ‘அந்த வீரனாகிய பாண்டுவின் பராக்கிரமத்தினால் திருதராஷ்டிரன் லக்ஷக்கணக்கான தக்ஷிணைகளுடன் அஸ்வமேதத்துக்கொப்பான அனேகம் பெரிய யாகங்களைச் செய்தான்.’ (ஆதி பர்வம் 143ம் அத்தியாயம் பக்கம் 450). கவனிக்க வேண்டும். திருதராஷ்டிரன் செய்தது அஸ்வமேதம் அல்ல; அஸ்வமேதத்துக்கு ஒப்பான பல பெரிய யாகங்களை. இரண்டுக்கும் வேறுபாடுண்டு.

ஆகவே, பாண்டு அரசேற்று ஏதோ ஒப்புக்கு அரியணையில் வீற்றிருந்திருக்கவில்லை. அவன் பெரிய திக்விஜயங்களைச் செய்து, மங்கத் தொடங்கியிருந்த குரு வம்சத்தின் புகழ் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது. “ராஜஸிம்மமான சந்தனு, சிறந்த புத்திமானான பரதசக்ரவர்த்தி இவர்களின் புகழினாலுண்டான பெயர் அழிந்து போயிருந்தது; பாண்டுவினால் மறுபடியும் கொண்டுவரப்பட்டது. கௌரவர்களின் தேசங்களையும் தனங்களையும் முன்னே எவர்கள் அபஹரித்தனரோ அவர்கள் அஸ்தினாபுரத்து ஸிம்மமான பாண்டுவினால் கப்பம் கொடுப்பவராகச் செய்யப்பட்டனர்’ என்று இவ்வாறு ராஜாக்களும் ராஜமந்திரிகளும் பட்டணத்து ஜனங்களும் சேர்ந்து மிகச் சந்தோஷமுற்றவர்களாகப் பாண்டுவினிடம் அன்புகூர்ந்து பேசினர்”. (மேற்படி, பக்கம் 449)

எனவே ஏறத்தாழ நசித்தே போயிருந்த குரு வம்சத்தின் புகழை மீண்டும் தூக்கி நிறுத்தியவனும், படையெடுக்கப்பட்டு, வெல்லப்பட்டிருந்த அஸ்தினாபுர அரசை மீண்டும் அதன் பழைய நிலையில் நிறுத்தி, அதை விஸ்தரித்தவனும் பாண்டுவே என்பது வெளிப்படை. இந்த அரசு, பாண்டுவினால் மீண்டும் உயிர்பெற்ற அரசு. இந்த திக்விஜயத்துக்குப் பின்னரே பாண்டு, நாடும் காடுமாக வேட்டையாடி சற்று பொழுதுபோக்கிய சந்தர்பத்தில்தான் அந்த முனி-மானைக் கொல்ல நேர்ந்ததும்; சபிக்கப்பட்டதும்; மனமுடைந்த நிலையில் நாட்டைத் துறந்து நிரந்தரமாகக் காடேகியதும் நடந்தன. இப்படிக் கான் புகுந்த நேரத்தில்தான் நாட்டை ஆளும் பொறுப்பை யாரிடம் ஒப்புவிப்பது என்ற சிக்கல் தோன்றியதும், விதுரர் ஆட்சியை ஏற்க மறுத்த நிலையில், நாட்டை திருதராஷ்டிரன்-விதுரர் இருவருக்குமாக சேர்ந்து கூட்டாகப் பொறுப்பை ஒப்படைத்து பாண்டு வனம் புகுந்தான். விதுரர் நிதியை மட்டும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்; பீஷ்மர் சேனைக்குப் பொறுப்பேற்றார். இந்தச் சமயத்தில் தருமபுத்திரனோ, துரியோதனனோ பிறந்திருக்கக் கூட இல்லை என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

நாம் சென்ற முறையே பார்த்ததைப் போல பாண்டு மட்டுமே முறைப்படி முடிசூட்டப்பட்ட அரசன். இப்போது நாடு இருவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு care-taker government என்ற அளவில்தான் நிற்குமேயல்லாது, திருதராஷ்டிரனுக்கு அரசுரிமை கிடைத்துவிட்டது என்று கொள்ள முடியாது. ஏனெனில், நான் முன்னரேயே பார்த்தைப் போல, அண்ணனான அவன் அரசனாவதை எது தடுத்ததோ அந்த status quo anteயில் எந்த மாற்றமுமில்லை. இப்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, அவன் முழுமையான, உரிமையுள்ள அரசனாகக் கருதப்பட முடியாதவன். எல்லா முடிவுகளையும் விதுரனுடைய சம்மதத்தின் பேரிலேயே செயல்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வளவு ஏன்? ஜயந்தம் என்ற இடத்தில் சூதாட்ட மனையைக் கட்டி, அதில் சூதாட்டத் திருவிழாவை நடத்தக் கூட, விதுரனுடைய ஒப்புதல் வேண்டியிருந்தது. விதுரனுக்குத் தனிப்பட்ட முறையில் சம்மதம் இல்லாவிட்டாலும் துரியோதனனால் நெருக்கப்பட்டு இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்குத் தள்ளப்பட்ட திருதராஷ்டிரனுடைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, சம்மதித்தது மட்டுமல்லாமல் பாண்டவர்களிடம் தூதே சென்றான். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் முடிவுகளில் விதுரனைக் கலந்து கொள்ளாமல் துரியோதனனோ, திருதராஷ்டிரனோ எடுக்க முடியவில்லை என்பது கவனத்துக்கு உரியது.

இதையெல்லாம் விடவும் முக்கியமான குறிப்பு ஒன்று உத்தியோக பர்வத்தில் கிடைக்கிறது. இதை கிஸாரி மோஹன் கங்கூலி இப்படி மொழிபெயர்க்கிறார். Those mighty car-warriors, the Pandavas (if peace be made) will install thee as the Yuvaraja, and thy father Dhritarashtra, that lord of men, as the sovereign of this extensive empire. (http://www.sacred-texts.com/hin/m05/m05124.htm) பாண்டவர்களுக்காக தூது சென்ற கிருஷ்ணன், துரியோதனனிடத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை. அதாவது, பாண்டவர்களோடு நீ சமாதானம் செய்து கொண்டால் (1) உன்னை அவர்கள் இளவரசனாக்குவார்கள்; (2) உன் தந்தையாகிய திருதராஷ்டிரனை சக்கரவர்த்தியாக்குவார்கள்.

சமாதானப் பேச்சு வார்த்தைகளில், அரசு பாண்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டால் துரியோதனாதியர்களுக்கு ஏற்படும் நன்மைகளில் இரண்டு என்று கிருஷ்ணன் கொடுக்கும் உறுதி மொழியில் உள்ள தொனியைப் பாருங்கள். துரியோதனனை இளவரசனாகவும் திருதராஷ்டிரனைச் சக்கரவர்த்தியாகவும் ‘ஆக்குவார்கள்’ என்றால், பொதுவாக நிலவி வரும் அபிப்பிராயப்படி துரியோதனன் மன்னனாக (அதாவது சூதில் கவர்ந்த நாட்டுக்கு மன்னனாக) இருந்திருந்தால், மன்னனுக்கு ‘இளவரசுப்’ பட்டம் சூட்டுவதாக உறுதிமொழி தருவதில் பொருளிருக்கிறதா? இந்தக் குறிப்பிலிருந்து நமக்குக் கிடைக்கும் மிக முக்கியமான செய்தி, (1) திருதராஷ்டிரன் எப்போதுமே சக்கரவர்த்தியாக இருந்ததில்லை (2) துரியோதனன் முறைப்படியாக இளவரசுப் பட்டம் கூட சூட்டப் பெறாதவன்.

‘இப்போதும் அதே status quo ante தொடரத்தானே செய்கிறது, இப்போது மட்டும் திருதராஷ்டிரனுக்கு எப்படி சக்கரவர்த்தியாக முடி சூட்ட முடியும்’ என்ற கேள்வி இப்போது எழும். முதல் முறை இந்தச் சிக்கல் எழுந்த போது அவனுக்கு வாரிசுகள் இல்லை. இரண்டாம் நிலையில் இருந்தபடி, முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள உதவியாளர்கள் இல்லை. இப்போது, அவனுடைய புத்திரர்களுக்குச் சமமான பாண்டவர்கள், தங்களுக்கு உரிய, சூதில் பதின்மூன்று வருட கால அளவுக்கு இழந்த அரசை, காலக் கெடு முடிவடைந்துவிட்ட காரணத்தால் கேட்கிறார்கள். அவ்வாறு திரும்ப ஒப்படைக்கப் படுமானால், தாம் அரசப் பொறுப்பில் இருந்து கொண்டு, சக்கரவர்த்தி பட்டத்தை திருதராஷ்டிரனுக்குச் சூட்டி, அவனுடைய முதன்மையை ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறார்கள் என்பது பொருள். இன்று மாறிவிட்டிருக்கும் சூழலில், இப்போது திருதராஷ்டிரனுக்குப் பட்டம் சூட்டுவது சாத்தியமே. ஏனெனில் அவன் நேரடிப் பொறுப்பு எதையும் நிர்வகிக்கப் போவதில்லை. ‘மேற்பார்வை’ அரசைத்தான் இயக்கப் போகிறான் என்பதால் இப்போதைய சூழல் இதை ஏதுவாக்குகிறது. ஆனால், பாண்டவர்கள் சார்பாக கண்ணன் அளிக்கும் உறுதி மொழி தெள்ளத் தெளிவாக நிலைமையை விளக்கி விடுகிறதல்லவா?

இப்போது மற்ற கேள்விகளை எடுத்துக் கொள்வோம்.

Leave a Reply