Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை

‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்

நாடு அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்திலேயே சுதந்திர இந்தியாவின் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்ற விவாதங்கள் பெருமளவில் நடந்து வந்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வெவ்வேறு காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்குக் கல்வித் திட்டம் பற்றிய கொள்கை முடிவுகள் நிபுணர் குழுக்களால் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரையறை செய்யப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால் இன்றையக் கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கோட்பாடு பயனற்றதாகிப் பின்தங்கிப் போயுள்ளது. புதிய சிந்தனைப் போக்குகளாலும் அறிவியல் வளர்ச்சியாலும் பல புதிய தொழிலதிபர்கள் உருவாகிவந்துள்ளனர். தாராள மயமாக்கம், தனியார் மயமாக்கம், உலக மயமாக்கம் என்பவை இன்றையக் காலகட்டத்தில் மறுக்கமுடியாத தேவையாக மாறி இருக்கிறது.

நிரந்தர வேலைவாய்ப்பு என்பது மறைந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று நாம் பார்க்கும் பல வேலைகள் இன்னும் பத்தாண்டுக் காலத்தில் இல்லாமலே போய்விடலாம். எப்படி சுருக்கெழுத்தும் தட்டச்சும் இன்று பயனற்றுப் போய்விட்டனவோ அதுபோல. பல தரப்பட்ட வேலைகள் கணினி மூலமாகவும் தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவும் செயல்படப் போகின்றன. இன்றைய நமது கல்விமுறை, தனது காலில் தானே நிற்கும் திறன்வாய்ந்த மக்களை உருவாக்குவதாகவே இருக்கவேண்டும்.

இந்திய நாட்டின் மக்கள்தொகையில் இரண்டில் ஒரு பங்கு, 25 வயதிற்கும் குறைவான இளைஞர்களே. இந்த மனிதவளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் அனைவருக்கான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். இல்லையென்றால் இந்த மனிதவளமே நாட்டிற்குப் பெரும் சவாலாக மாறிவிடும். இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தப் புதிய கல்விக்கொள்கை வரையறையைப் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

மாறிவரும் உலகில் நமது கல்வித் திட்டம் மட்டும் மாறாமல் இருக்கமுடியாது. நம்முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள நமது கல்வித் திட்டத்தில் என்னவிதமான மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று விவாதிக்க மத்திய மனித வளத் துறை ‘தேசியக் கல்விக் கொள்கை – 2016’ என்ற அறிக்கையை மக்கள்முன் விவாதத்திற்கு வைத்துள்ளது. 240 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் அத்தியாயம் இந்தியாவில் கல்வியைப் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தையும் இன்றைய நிலையையும் காட்டுகிறது. இரண்டாவது அத்தியாயம் இந்த அறிக்கைக்கான அணுகுமுறையையும் செயல்முறைகளையும் விவரிக்கிறது. மூன்றாவது அத்தியாயம் புதிய கல்விக் கொள்கையின் நோக்கத்தையும், அடுத்த இரண்டு பிரிவுகள் புதிய கல்விக் கொள்கையின் தேவையையும் கல்வி ஆளுகையையும் பற்றி விவாதிக்கின்றன. ஆறாவது அத்தியாயம் பள்ளிக் கல்வி பற்றியும் ஏழாவது அத்தியாயம் உயர் கல்வி பற்றியும் எட்டாவது பிரிவு தேசிய அளவிலான கல்வி நிலையங்களைப் பற்றியும் பேசுகின்றன. கடைசி அத்தியாயம் எல்லாத் தலைப்புகளிலும் அளிக்கப்பட்ட பரிந்துரைகளைப் பட்டியல் இட்டுத் தருகிறது.

எதிர்க்கட்சிகள் இந்த அறிக்கைமீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமாவை, இந்த வரைவறிக்கையை தயாரிக்கும்போது கல்வித்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை என்பதும், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுசெய்து இருக்கிறது என்பதும்.

இந்த அறிக்கை எப்படித் தயாரிக்கப்பட்டது என்று விளக்கப்பட்டிருக்கும் பகுதியில் இதற்கான தெளிவான பதில் இருக்கிறது. இதற்கு முந்தையக் கல்விக் கொள்கைகளை வரையறை செய்த முறைக்கும் இந்தக் கல்விக் கொள்கையை வகுத்த முறைக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. முந்தையக் கொள்கைகள் துறை சார்ந்த நிபுணர்களால் விவாதிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன. அதாவது மேலிருந்து கீழாக அது பயணித்தது. ஆனால் இந்தக் கொள்கையோ கீழிருந்து மேலாகப் பல்வேறு நிலைகளில் தொகுக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டு உள்ளது. கிராம நிலைகளில் விவாதிக்கப்பட்டு, அவை அடுத்த நிலைகளில் தொகுக்கப்பட்டு, மாவட்ட அளவிலான விவாதங்கள், பின்னர் மாநில அளவிலான விவாதங்கள் / பரிந்துரைகள் என்று தொகுக்கப்பட்டு உள்ளது. இரண்டரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் விவாதிக்கப்பட்டுப் பின்னர் ஆறாயிரம் கோட்டங்களில்

வடிகட்டப்பட்டு, அறுநூற்று எழுபதுக்கும் மேலான மாவட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மாநில அளவிலான கூட்டங்களில் தரப்பட்ட ஆலோசனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் பல்வேறு பொதுமக்களும் கல்வி பற்றிய தங்கள் கருத்துக்களை அளித்துள்ளனர். இவற்றைத் தொகுத்து ஐவர் அடங்கிய குழு தனது பரிந்துரையை அரசுக்கு வழங்கி இருக்கிறது.

இந்த அறிக்கையின் மிக முக்கியமான கருத்துகளை இவற்றைச் சொல்லலாம்:

1. நாட்டின் மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product) 6% நிதி கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும். இன்றைய நிலையில் 3.5% நிதிதான் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. அதாவது இதுவரை அளிக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இன்னும் ஒரு பங்கு கூடுதல் நிதி வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கான நிதி என்பது இந்த 6%இல் சேராது என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு தனியாக இருக்கவேண்டும் என்றும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

2. இன்று இருப்பது போல பட்டப்படிப்பு முடித்த பின்னர் ஆசிரியர் கல்வி என்றில்லாமல், பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு நான்காண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கே ஆசிரியர் பணி அளிக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இதன்படி, எப்படி மருத்துவம் / பொறியியல் / சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆயத்தமாகிறார்களோ அதுபோலவே ஆசிரியர் பணிக்கும் முன்கூட்டியே மாணவர்கள் முடிவு செய்து சேர்வதால், உண்மையாகவே ஆசிரியர் பணியில் அக்கறையும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் உருவாகி வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கிராமப் பகுதிகளிலும், மலைவாழ்ப் பகுதிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அரசின் செலவில் தகுந்த கல்வி அளித்து அவர்களையே அங்கே உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தொலைதூரத்தில் உள்ள மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இனி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில முக்கியமான குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்:

சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறதா?

உண்மையைச் சொன்னால் ஜெர்மன், பிரெஞ்சு, அரபி முதலான பல மொழிகளைப் படிக்கும் வாய்ப்பைப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கவேண்டும் என்றுதான் இந்த வரையறை கூறுகிறது.

ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநிலத்தின் மொழியிலோதான் கல்வி இருக்கவேண்டும் என்றும், தொடக்கக் கல்வியில் இரண்டாவது மொழியையும் மேல்நிலை அளவில் மூன்றாவது மொழியையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யலாமா வேண்டாமா என்பதையும், அறிமுகம் செய்வதாக இருந்தால் அவை எந்த மொழிகளாக இருக்கவேண்டும் என்ற முடிவையும் மாநில அரசாங்கங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம் என்றுதான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைவிட முக்கியமான அறிவுரை, மலைவாழ்ப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் பேசும் மொழியில் பாடங்கள் நடத்தப்படவேண்டும் என்பதும், அதற்கான பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதும்தான். ஆக சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறது என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. மொழிக் கொள்கையை என்பது மாநில அரசுதான் முடிவு செய்யும்.

யோகா திணிக்கப்படுகிறதா?

பாரதம் இந்த உலகுக்கு வழங்கிய கொடை யோகா. அதனால்தான் இன்று ஐக்கிய நாட்டுச் சபையே உலக யோகாசன தினத்தை உலகம் எல்லாம் கொண்டாட வகை செய்துள்ளது. இன்றைய மாணவர்களுக்கு உடல்பயிற்சி என்பது இல்லாமலே ஆகிவிட்டது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றுதான் கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. பல பள்ளிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இருப்பதில்லை. பல நகரங்களில் பள்ளிகள் விரும்பினாலும் இடப் பற்றாக்குறையால் மைதானங்களை உருவாக்க முடிவதில்லை. இந்த நிலையில் மாணவர்களின் உடலை உறுதி செய்ய யோகா உதவும் என்றுதான் வரையறையில் கூறப்பட்டுள்ளது. யோகாவை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களே யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிறுபான்மையினரின் சிறப்புரிமை மறுக்கப்படுகிறதா?

முதலில் சிறப்புரிமை என்பது என்ன? அரசின் எந்தச் சட்டதிட்டங்களும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என்பதா? அப்படி என்றால் அது என்ன நியாயம்? கல்விக்கான உரிமைச் சட்டம் (Right to Education Act) எல்லாக் கல்வி நிறுவனங்களும் தங்களின் மொத்த மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்தச் சட்டம் சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படத் தேவையில்லை என்றிருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை, சிறுபான்மைக் கல்வி நிலையங்களும் தங்கள் மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைத் தேவைப்படும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கூறுகிறது. இது, சமூகநீதியை முன்னெடுக்கும் கட்சிகளை ஏன் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்பது புரியாத புதிர்.

எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்பது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே என்பதால் கல்வி மறுக்கப்படுகிறதா?

நல்லெண்ணத்தின் மீதேறி நரகத்திற்கும் போகலாம் என்று ஒரு பழமொழி உண்டு. எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்யவேண்டும், தேர்வு முறையில் அவர்கள் யாரையும் தோல்வி அடையச் செய்யக்கூடாது என்று, நடைமுறையில் இருக்கும் கல்வி உரிமைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இதன்மூலம் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வின்படி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 40% மாணவர்கள் இரண்டாம் வகுப்பில் கற்கவேண்டிய கல்வியைக்கூடக் கற்றிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீண்ட விவாதத்தை நடத்தி இந்தக் கல்விக் குழு ஐந்தாம் வகுப்பு வரை எந்த மாணவர்களையும் தடை செய்யக்கூடாது என்றும் அதன் பிறகு தேர்வுகளில் தேர்ச்சி அடையும் மாணவர்களையே அடுத்தத்த வகுப்புகளுக்கு அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதில் கல்வி மறுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

ஆனாலும், இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும் என்று இந்தப் பரிந்துரை வலியுறுத்துகிறது. மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று வாய்ப்புகளாவது வழங்கவேண்டும் என்றும், தேவைப்படும் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.

தேர்வு முறையில் மாற்றங்கள் மாணவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறதா?

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவர்களில் பெரும்பாலானோர் கணக்கு மற்றும் அறிவியல் பாடத் தேர்வுகளில்தான் தோல்வி அடைந்திருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு பாடத்திலும் இரண்டு நிலையாகத் தேர்வு நடத்தலாம் என்றும் மேல்நிலைப் பாடங்களில் கணக்கோ அல்லது அறிவியலையோ பயிலாத மாணவர்களுக்கு எளிதான தேர்வு ஒன்றை அமைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பதினொன்றாம் வகுப்பில் பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களில் பலர் உயிரியல் படிப்பு படிப்பதில்லை. மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் கணக்கைப் பயில்வதில்லை. வணிகவியல் / பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடங்களைப் படிப்பதில்லை. மேல்நிலையில் என்ன பாடங்களைப் படிக்கப்போகிறோம் என்று முடிவுசெய்யும் மாணவர்கள் ஏன் தேவை இல்லாமல் கடினமான தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டும்?

இதுபோல பத்திரிகை, மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் கம்யூனிகேஷன் துறைகளைத் தேர்வு செய்யும் மாணவர்களைக் கணக்கிலும் அறிவியலிலும் கடினமான தேர்வை எதிர்கொள்ள வைப்பது தேவையானதுதானா?

இரண்டு நிலைகளில் எந்த நிலையைத் தேர்வு செய்யலாம் என்ற தெளிவு மாணவர்களுக்கு இருக்காது என்று சொன்னால், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து உயர்வகுப்பில் எந்தத் துறை சார்ந்த படிப்பைப் படிக்கப் போகிறோம் என்று தேர்வு செய்யும் தெளிவு மட்டும் இருக்குமா? இதை ஏற்றுக்கொள்ளும்போது, புதிய கல்விக் கொள்கை முன்வைக்கும் நியாயமான ஆலோசனைகளை எதிர்க்கவேண்டியதன் அவசியம் என்ன?

இதுபோக, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்வுக்குப் பதிலாக ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் ஒரு மாணவன் தேர்வெழுதும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வு என்பது பல மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை அளிக்கிறது. அதை மாற்ற இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோல வருட இறுதியில் நடைபெறும் தேர்வை வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு பதில், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறை உருவாக்கப் படவேண்டும் என்றும் ஆலோசனை உள்ளது. இந்த முறையில் மாணவர்களின் மொத்த ஆளுமைத் திறனும் அளவிடப்பட்டுச் சரியான முறையில் அவர்கள் மதிப்பிடப்படுவார்கள். தேர்வு நேரத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற செய்திகளை நாம் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையின் அறிவுரைகள் இந்த அவலநிலைக்கு ஒட்டுமொத்தமான முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளன.

இன்றைய நிலையில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே கிடைப்பதில்லை. கற்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. எங்கே கிடைக்கும் என்பதையும், எப்படிக் கற்பது என்பதையும் பள்ளிக்கூடங்கள் சரியாகச் சொல்லிக்கொடுத்தால் போதும்.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரம். இன்றையக் கல்விக் கொள்கை என்பது நாட்டை நாளை வழிநடத்தப்போகும் ஒரு முக்கியமான அறிக்கை. எனவே இதனை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, குறைந்தபட்சம் இந்த அறிக்கையை முழுவதும் படித்துவிட்டாவது அதைச் செய்யவேண்டும்.

-oOo-

Posted on 1 Comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – பழைய பாடல் (சிறுகதை)

பழைய பாடல் – சுகா

தொண்டர் சன்னதி திருப்பத்திலேயே ‘மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ’ என்று சுப்பம்மாக்காவின் குரல் சோமு மாமாவின் வீட்டிலிருந்து கசிந்து வரும். மதியச் சாப்பாட்டுக்குப் பிந்தைய உறக்கத்தில் இருக்கும் பர்வத சிங்க ராஜ தெருவை மேலும் ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் விதமாக சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். வாசல் அழியை மட்டும் பொத்தினாற் போல சாத்திவிட்டு, பட்டாசல் நடையில் தலை வைத்து சோமு மாமா தூங்கிக் கொண்டிருப்பார். அவர் கால்களை மெல்ல அமுக்கியவாறே சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். மாமாவின் தலைமாட்டில் வெற்றிலைத் தட்டும், பித்தளைச் செம்பில் தண்ணீரும் இருக்கும். தொந்தி தரையில் சரிய, ஒருச்சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கும் சோமு மாமாவின் மெல்லிய குறட்டையொலி, சுப்பம்மாக்காவின் பாட்டுக்கு ஏற்ப, தம்பூரா சுதி போல சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும். பொதுவாக கச்சேரி இல்லாத நாள்களில்தான் இப்படி நடக்கும். கச்சேரி இருந்தால் அன்றைக்கு மதியம் வயிறு நிறையச் சாப்பிடமாட்டாள் சுப்பம்மாக்கா. சோமு மாமாவுக்கும் இட்லி, தோசை, உப்புமா எனப் பலகாரம்தான் செய்து கொடுப்பாள். எப்போதுமே உப்பும் புளிப்பும் குறைவாகச் சேர்த்த சமையல்தான். சோமு மாமா கொஞ்சம் காரசாரமாகச் சாப்பிடுபவர்.

“கூட ரெண்டு மெளகாவ நுள்ளிப் போட்டா என்னட்டி?” என்று அலுத்துக் கொள்வார். சுப்பம்மாக்காவின் தம்பி ‘தபலா குமாரும்’ அந்த வீட்டில்தான் இருந்தான். அவனுக்குக் காரம் ஆகாது. இத்தனைக்கும் குமாருக்கென்று தனியாகத்தான் சட்னியோ, குழம்போ எடுத்து வைப்பாள் சுப்பம்மாக்கா. அப்படியிருந்தும் சாப்பிடும்போது கண்களில் நீர் வழிய, ‘உஸ் உஸ்’ என்றபடிச் சாப்பிடுவான்.

“ஏன் மூதி உஸ் உஸ்ஸுங்கெ? அப்படியா எரிக்கி? ஒனக்கு தனியாத்தானே செஞ்சு வச்சேன்?”

அக்காவின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் தலையை இல்லை என்று ஆட்டியபடி அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்திருப்பான் ‘தபலா குமார்’.

கச்சேரிகளில் தபலா வாசிக்கும் குமார், சோமு மாமாவை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதே இல்லை. என்ன கேள்வி கேட்டாலும் தலை குனிந்தபடிதான் பதில் சொல்லுவான். “அவன் வாய் பேசாததத்தான் வெரல் பேசுதுல்லா! பாரதி கண்ணம்மா பாட்டுக்கு அவன் உருட்டுத உருட்டுல நம்ம சேவியரு அடுத்த வரிய எடுக்காம எத்தன மட்டம் இவன் வாசிக்கதயே பாத்துட்டு நின்னிருக்கான்!” அதிகம் பேசாத தபலா குமாரின் சுபாவத்தை வயலினிஸ்ட் சந்திரன் இப்படித்தான் சிலாகிப்பார்.

சோமு மாமாவின் ‘சோமு டோன்ஸ்’ கச்சேரியின் முதல் பாடலாக ‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்’ என்கிற ‘சாந்தி நிலையம்’ பாடலைப் பாடி சுப்பம்மாக்காதான் துவங்குவாள். பாடலின் துவக்கமாக ‘இறைவன் இறைவன் இறைவன்’ என்று சுப்பம்மாக்கா பாடும்போது, “ஏட்டி! சோமு கச்சேரி ஆரம்பிச்சுட்டு. சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா” என்று பெண்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு கச்சேரிக்குக் கிளம்புவார்கள்.

மெல்லிசைக் குழு வைத்து நடத்துபவர்களுக்கு அதன்மூலம் அப்படி என்னதான் வருமானம் கிடைத்துவிடுமோ தெரியவில்லை. ஆனால் சோமு மாமா போட்ஸாகத்தான் இருந்தார். தினம் இரண்டு உடுப்பு, மைனர் சங்கிலியுடன் தங்க ருத்திராட்சம், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள், கட் ஷூ என அலங்காரத்துக்கு ஒரு குறைச்சலுமில்லை. சோமு மாமாவுக்கு கொஞ்சம் பூர்வீகச் சொத்து இருந்தது. அவரது அம்மா ஒரு பழைய பாடகி என்றும், அவருக்கு புளியங்குடியைச் சேர்ந்த ஒரு பண்ணையார் சில சொத்துக்களை எழுதி வைத்ததாகவும் அரசல்புரசலாகச் சொல்லுவார்கள்.

“நம்ம சோமு டோன்ஸ் சோமோட அப்பா நம்ம புளியங்குடி பண்ணையார்தாம் தெரியும்லா! ஒனக்கு சந்தேகமா இருந்தா ஒருநா என்கூட புளியங்குடிக்கு வா. பண்ணையார் வீட்டு வாசல்ல அவாள் போட்டோ ஒண்ணு மாட்டியிருக்கும். சாடை அப்படியே அச்சு அசல் நம்ம சோமுதான்.”

‘சோமு டோன்ஸ்’ சோமுவை வயதில் மூத்தோர் சோமு என்றும், இளையோர் ஏனோ சோமு மாமா என்றுமே அழைத்தனர். யாருமே அவரை அண்ணே என்றோ அண்ணாச்சி என்றோ அழைத்ததில்லை. சுப்பம்மாக்கா மட்டும் அவரை அத்தான் என்றுதான் அழைப்பாள். அதில் சோமு மாமாவுக்கு சங்கடம் உண்டு. எத்தனை பேர் கூடியிருக்கும் சபையிலும் சோமு மாமாவை ‘அத்தான்’ என்று சத்தம் போட்டே கூப்பிடுவாள் சுப்பம்மாக்கா. அவள் இப்படி கூப்பிடுவது தெரிந்ததும் வேக வேகமாக அவளருகில் வந்து, “எத்தன மட்டம் சொல்லியிருக்கென், இப்படி நாலு பேர் மத்தில அத்தான் நொத்தான்காதென்னு? என்ன விஷயம் சொல்லித் தொல” என்று ரகசியமாகக் கடிந்து கொள்வார். “நல்ல கதயா இருக்கெ! அத்தான அத்தான்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிட?” விகற்பமில்லாமல் சுப்பம்மாக்கா கேட்பாள். “என் தலைலெளுத்து” என்று தலையில் அடித்துக்கொள்வார் சோமு மாமா.

சுப்பம்மாக்காவை சோமு மாமா ‘ச்சுப்ப்பு’ என்றழைப்பார். கச்சேரிகளில் அவள் பெயரை சுப்பம்மா என்றே அறிவிப்பார்கள். ஆனால் சோமு மாமாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் அவள் சுப்பம்மாக்காதான். அவளை விட வயதில் மூத்தவரான ஃப்ளூட்டு கோபாலும் அவளை சுப்பம்மாக்கா என்றழைப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியாது. “கோவாலண்ணாச்சி! ஒங்க கடேசி தங்கச்சி விஜயாவும், நானும் அப்பர் கிளாப்டன்ல ஒரே செட்டு. என்னப் போயி அக்காங்கேளே! கேக்கதுக்கு நல்லாவா இருக்கு!” ஃப்ளூட்டு கோபால் அதற்கும், “இருக்கட்டும்க்கா” என்பார். தன் முதலாளி சோமுவின் மீது இருக்கும் மரியாதை காரணமாகவே கோபால் தன்னை அக்கா என்றழைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு மேலும் பேச்சை வளர்க்க மாட்டாள் சுப்பம்மாக்கா.

கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய பாடல்களை மட்டும் பாடுவார் சோமு மாமா. ‘அல்லா அல்லா, சம்போ சிவசம்போ, இக்கரைக்கு அக்கரை பச்சை, எதற்கும் ஒரு காலம் உண்டு’ போன்ற பாடல்களுக்கு மத்தியில் சுப்பம்மாக்காவுடன் இணைந்து சோமு மாமா பாடும் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல் அவரது கச்சேரியின் ஸ்பெஷல் பாட்டு. சோமு மாமாவுடன் ஒன்றாக மேடையில் நின்று பாடும்போது சுப்பம்மாக்கா அநியாயத்துக்கு வெட்கப்படுவாள்.

“பால் போலவே பாட்டெல்லாம் அஸால்ட்டா பாடீருதே! ஆனா சொல்லத்தான் நினைக்கிறேன் பாடும்போது மட்டும் அந்த பதறு பதறுதே! ஏன்?” என்று கேட்டால், “பொறவு! அவ்வொ கூட ஒண்ணா நின்னுப் பாடணும்னா வெக்கமா இருக்காதா?” என்று பதில் சொல்வாள்.

விஸ்வநாதனின் குரலில் பாடுவதைத் தவிர மற்ற சமயங்களில் ஹார்மோனியத்தில் நின்று கொள்வார் சோமு மாமா. மற்றபடி சுசீலா, ஜானகி பாடிய பாடல்கள் அனைத்தும் சுப்பம்மாக்காதான் பாடுவாள். ஈஸ்வரி, வாணி ஜெயராம் பாடல்களைப் பாடுவதற்கென்றே சோமு டோன்ஸில் உள்ள பாடகிதான் நாஞ்சில் பிரேமா. சக பாடகியான பிரேமா பாடும் பாடல்களில், ‘தீர்க்க சுமங்கலி’யின் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல், சுப்பம்மாக்காவுக்குப் பிடித்தமான ஒன்று. “சின்னப்பிள்ளைல அரசு பொருள்காச்சில வாணி ஜெயராமே பாடி கேட்டிருக்கென். ஆனா நீ பாடுததுதான் எனக்குப் புடிச்சிருக்கு பாத்துக்கொ” என்று பிரேமாவின் கைகளைப் பிடித்தபடிச் சொல்வாள் சுப்பம்மாக்கா.

சோமு மாமாவுக்கென்றே ‘நெல்லை லாட்ஜில்’ ஓர் அறை இருந்தது. மாலை நேரங்களில் சோமு மாமா நெல்லை லாட்ஜ் அறையில்தான் இருப்பார். சாயங்காலக் குளியல் முடித்து, சுப்பம்மாக்கா கையால் காபி வாங்கிக் குடித்துவிட்டு, சாலைக்குமார சாமி கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு நெல்லை லாட்ஜுக்கு சென்றாரானால் செகண்ட் ஷோ விடும் நேரம்தான் வீடு திரும்புவார். என்றைக்காவது வீடு திரும்பவில்லையென்றால் அன்று சோமு மாமா மருந்து சாப்பிட்டிருக்கிறார் என்பதை சுப்பம்மாக்கா புரிந்து கொள்வாள்.

ஆனால் நாளடைவில் மருந்து சாப்பிடாமலேயே சோமு மாமா வீட்டுக்கு வருவது குறைய ஆரம்பித்தது. கச்சேரியும் குறைய ஆரம்பித்தது ஒரு காரணமாக இருக்கலாம். சுப்பம்மாக்கா இல்லாமல் கச்சேரிகள் நடக்க ஆரம்பித்தன. அதற்கு ஒரு வகையில் சுப்பம்மாக்காவும் காரணம்தான். “இந்த மாரி அஸ்கு புஸ்கு பாட்டெல்லாம் என்னய பாடச் சொல்லாதிய” என்று சோமு மாமா நல்ல மூடில் இருக்கும்போது ஒருநாள் சொல்லி விட்டாள். அதற்குப் பிறகு சோமு மாமா கொஞ்சம் கொஞ்சமாக சுப்பம்மாக்காவை கச்சேரிக்கு அழைப்பதைக் குறைத்து, பின் சுத்தமாக நிறுத்திக் கொண்டார்.

“அவ்வொளும் என்ன செய்வா? கல்யாணக் கச்சேரி புக் பண்ணும்போதே பாட்டு லிஸ்ட் அவங்களே குடுக்காங்க. ஒரு பளைய பாட்டு இல்ல. எல்லாம் இப்பம் உள்ள இங்கிலீஸ் பாட்டுங்க. எனக்கு அதுல்லாம் வாய்லயெ நொளயாது. அதான் என்னய சங்கடப்படுத்த வேண்டாம்னு அவ்வொ கூப்பிட மாட்டங்கா… ஆனா அதுக்காக இப்படி ஒரேயடியா வீட்டுக்கு வராம இருக்கதத்தான் தாங்க முடியல.”

ரகசியமாக தன் தம்பி ‘தபலா குமாரிடம்’ சொல்லிக் கண்ணீர் சிந்துவாளே தவிர வேற்றாள்களிடம் சோமு மாமாவை சுப்பம்மாக்கா விட்டுக் கொடுத்ததே இல்லை.

‘நைட்டு லேட்டாத்தான் வந்தாக. ஒதயேத்துலயே எந்திரிச்சு சங்கரன்கோயில் கச்சேரிக்குக் கிளம்பிட்டாக’ என்று சொல்லிச் சமாளிப்பாள். ஆனால் இந்தச் சமாளிப்பெல்லாம் கொஞ்ச நாள்களுக்குத்தான் செல்லுபடியானது. சோமு மாமா வீட்டுக்கு வருவதே இல்லை என்பதை ஊரும், சுப்பம்மாக்காவும் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு அந்த விஷயம் இயல்பான ஒன்றாக ஆகிப் போனது.

“சோமு மாமாவைப் பாக்கணும்னா நெல்லை லாட்ஜ்லதான் பாக்கலாம். இல்லேன்னா பெருமாள்புரத்துக்குத்தான் போகணும். ஆனா அட்ரஸ் சரியாத் தெரியல. அவாள் யாருக்கும் பெருமாள்புரம் அட்ரஸ குடுக்கலெல்லா!”

ஹார்மோனியத்திலிருந்து கீ போர்டுக்கு மாறிய சோமு மாமா காலத்துக்கேற்றார் போல தானும் மாறி, தன் குழுவையும் மாற்றி அமைத்துக்கொண்டார்.

“முந்தில்லாம் சோமு டோன்ஸ்லதான் அத்தன வயலினைக் கேக்கலாம். சங்கீத சபால ‘ராஜபார்வை’ டைட்டில் மியூஸிக்லாம் சோமு டோன்ஸ் வாசிச்சுக் கேட்டது இன்னும் ஞாவம் இருக்கு. இப்பம் அவாளும்லா வாத்தியத்தைக் கொறச்சுட்டா. எல்லாம் கீ போர்டுலயே வாசிக்கானுவொ. நல்லாவால இருக்கு?”

சோமு மாமாவின் குழுவில் இப்போது சுப்பம்மாக்காவும் இல்லை. நாஞ்சில் பிரேமாவும் இல்லை. ஃப்ளூட் கோபால் எப்போதாவது வருகிறார். அவரது பீஸ்களையும் கீ போர்டிலேயே கிஷோர் வாசித்து விடுகிறான். வயலின், ஷெனாய், கிளாரினெட்டும் கிஷோர் கைகளுக்குள் அடைபட்டுவிட்டன. குழுவும் சுருங்கிப் போனது. புதிய பாடகி சவீதா குழுவுக்கும் சோமு மாமாவுக்கும் இணக்கமாகி விட்டாள்.

“பெருமாள்புரம் வீட்டுக்குப் போயிருந்தேன். கூட அந்த சவீதா இருக்கா.” குனிந்த தலை நிமிர்ந்து தன் அக்காவின் முகத்தைப் பார்க்க முடியாமல் சாப்பிட்டபடியே ‘தபலா குமார்’ சொன்னபோது சுப்பம்மாக்கா அதற்காகப் பெரிதாக ஒன்றும் வருத்தப்பட்டுக்கொள்ளவில்லை. “இதுல என்னலெ இருக்கு? அவ புதூ பாட்டுல்லாம் பாடுதாள்லா. சாம்பார் ஊத்தட்டுமா?” என்றாள் சுப்பம்மாக்கா.

-oOo-

Posted on Leave a comment

மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு


கத்தோலிக்க மத அதிகார பீடமான வாடிகன் இந்த வருடம் செப்டம்பர் 4 அன்று மதர் தெரசாவை ‘புனிதர்’ என்று அறிவித்தது. எல்லாத் தமிழ் ஊடகங்களும் மெய்சிலிர்ப்புடனும் புளகாங்கிதத்துடனுமே இச்செய்தியைப் பரப்பின. அத்தருணத்தில் சமூக வலைத்தளங்களிலும் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ போன்ற பிரபல இந்திய ஆங்கில ஊடகங்களிலும் மதர் தெரசா குறித்த முக்கியமான, ஆதாரபூர்வமான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அது எதுவும் துரதிர்ஷ்டவசமாகத் தமிழர்களை வந்தடையவில்லை. அந்த அளவுக்கு ‘அன்பின் அடையாளம்’ ‘சேவையின் திருவுருவம்’ என ‘அன்னை’ தெரசாவைப் பற்றிய ஒற்றைப்படையான பிம்பம் இங்குக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

“கல்கத்தா நகரத்தில் நாள்தோறும் அலைந்து குப்பைமேடுகளிலிருந்தும் சாக்கடை ஓரங்களிலிருந்தும் ஆதரவற்றவர்களைத் தான் சுமந்து வந்ததாகவும், 9,000 ஏழைகளுக்குத் தினமும் உணவளித்ததாகவும், நிர்மல் ஹிருதய் (முற்றிய நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக மதர் தெரசாவால் தொடங்கப்பட்ட இல்லம்) என்ற இல்லத்தை நாடி வந்தவர்கள் ‘அழகிய மரணத்தை’ (Beautiful Death) தழுவியதாகவும் மதர் தெரசா உலக அரங்குகளில் அறிவித்துக் கொணடார். ஆனால் இவற்றைப் பற்றி ஆராய்ந்து தேடித்துருவிப் பார்த்தால் முழு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உண்மை நிலவரம் இதற்கு நேர்மாறாக இருக்கிறது” என்கிறார் டாக்டர் அரூப் சாட்டர்ஜி.

Mother Teresa: The Final Verdict, Author: Aroup Chatterjee,
Publisher: Meteor Books, 415 pages.

கல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 1950-60களில் வளர்ந்தவர் அரூப் சாட்டர்ஜி. 1970-80களில் தீவிர இடதுசாரி செயல்வீரராக இருந்தவர். இன்றுவரை பகுத்தறிவுவாதியாகவும், நாத்திகராகவும் தொடர்பவர். மருத்துவக் கல்லூரியில் பயிலும் காலத்தில், மதர் தெரசா பணியாற்றியதாகச் சொல்லப்படும் இடங்களில் நேரடியாக நோயாளிகளுடனும், சேரி மக்களுடனும் பழகியவர். 1985ல் பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்து மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கியபோது, மதர் தெரசாவின் உலகளாவிய புகழின் ஒரு பகுதியாக இந்தியாவைப் பற்றியும் குறிப்பாக கல்கத்தா நகரம் பற்றியும் மிகவும் திரிக்கப்பட்ட மலினமான சித்தரிப்புகளும் மதிப்பீடுகளும் சேர்ந்தே பரவியிருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். அப்போது மதர் தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் அதைத் தொடர்ந்து பாரத ரத்னாவும் வழங்கப்பட்டு அவரைப் பற்றிய புனித பிம்பம் ஏறக்குறைய முழுமையடைந்து விட்டிருந்தது. அந்த நிலையில் மதர் தெரசாவின் பணிகளைப் பற்றிய உண்மைகளை உலகத்தின் முன் வைக்கவேண்டும் என்ற தேடலுடன் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மதர் தெரசாவுடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று அங்கு பணி செய்யும் கன்யாஸ்திரீகள், நோயாளிகள், பொதுமக்கள் எனப் பலரையும் தொடர்பு கொண்டார். அதன் விளைவாக அவர் திரட்டிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.

‘மதர் தெரசா நடத்திய இல்லங்களில் எந்தக் குறைந்தபட்ச மருத்துவப் பயிற்சியும் இல்லாத பணியாளர்கள், 10-15 வருடம் காலாவதியான மருந்துகளை எந்தப் பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் நோயாளிகளுக்குச் செலுத்தி வந்தனர். ஊசிகள் அடிப்படைச் சுத்திகரிப்புக் கூடச் செய்யப்படாமல் 10 முதல்15 வரையிலான நோயாளிகளின் உடலில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. அடிப்படைச் சுகாதார முறைகள் கூடக் கடைப்பிடிக்கப்படாமல் நோய்க்கிருமிகள் சூழ்ந்த போர்வைகள் உபயோகிக்கப்பட்டன’ என்பன போன்ற பல விஷயங்கள் தெரிய வந்தன.

நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதையும் வாழ வைப்பதையும்விட ‘அழகிய மரணத்தை’ நோக்கி அழைத்துச் செல்வதே மதர் தெரசாவின் மைய நோக்கமாக இருந்தது. ஆனால், அந்த மரணங்கள் நோயாளிகளுக்கு மிகக் குரூரமானதாகவும், வலிமிகுந்ததாகவும் இருந்தன. 1992ல் பதிவு செய்யப்பட்ட வீடியோ நேர்காணலில்[1], 1952 முதல் நிர்மல் ஹிருதய் இல்லத்தில் மரணமடைந்த 29,000 பேரை தான் ஞானஸ்நானம் செய்து கடைத்தேற்றியதாக மதர் தெரசா பெருமையுடன் கூறினார். 1990களில் நிர்மல் ஹிருதய் இல்லத்தில் தன்னார்வலராகச் சென்று பல மாதங்கள் பணிபுரிந்த லான்ஸெட் மருத்துவ சஞ்சிகையின் ஆசிரியர் ராபின் ஃபாக்ஸ் அந்த இல்லத்தின் பீதியூட்டும் மருத்துவக் குறைபாடுகளைத் தனது பதிவுகளில் உறுதி செய்துள்ளார்.

ஆனால் இத்தகைய விமர்சனங்களை மதர் தெரசாவின் அமைப்பு பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. கியூபாவில் பிறந்து அமெரிக்காவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்த ஹெம்லி கோன்சாலிஸ் 2008ம் ஆண்டு சேவை புரிவதற்காக இதே இல்லத்திற்கு வந்தபோது அங்குள்ள மருத்துவச் செயல்பாட்டின்மையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததைப் பதிவு செய்திருக்கிறார்.

அரூப் சாட்டர்ஜி கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனமான சேனல்-4 1994ம் ஆண்டு ‘நரகத்தின் தூதுவர் (Hell’s Angel)’ என்ற ஆவணப் படத்தை உருவாக்கியது [2]. பிரிட்டனின் புகழ்பெற்ற சமூக சிந்தனையாளரான கிறிஸ்டஃபர் ஹிட்சன்ஸ் தொகுத்து வழங்கிய இந்தப் படம் ஒளிபரப்பானபோது பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

மதர் தெரசா மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம் அவரது மதிப்பீடுகளும் தொடர்புகளும் குறித்தது. விளம்பரத்திற்காகவும், நன்கொடைகளுக்காகவும் கிறிஸ்தவமதச் சாய்வு காரணமாகவும் அன்றைய காலகட்டத்தின் சர்வாதிகார அரசியல் தலைவர்களுடன் அவர் தொடர்ந்து நட்பில் இருந்தார்.

“அன்பைத் தனது சொற்களால் மட்டுமல்ல, செயல்களாலும் வெளிப்படுத்துபவர்” என்று ஹைட்டி (Haiti) நாட்டின் செல்வங்களை முழுவதும் கொள்ளையடித்தவரும், தனது அரசியல் எதிரிகளைக் கொன்று அந்த உடல்களை நாய்களுக்கு வீசுமளவு குரூர எண்ணம் கொண்டவருமான கொடுங்கோல் ஆட்சியாளர் ஜீன் க்ளாவுட் டுவாலியர் (Jean-Claude Duvalier) குறித்து அவர் புகழாரம் சூட்டினார். அவர் அளித்த உயர் விருதையும் ஏற்றார்.

அமெரிக்கப் பொதுமக்களின் பல மில்லியன் டாலர்களைக் கொள்ளையடித்து ஏமாற்றிய முன்னணி மோசடியாளரான சார்லஸ் கீட்டிங் (Charles Keating) என்பவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவரது நடத்தை குறித்து உயரிய நற்சான்றிதழை மதர் தெரசா அளித்தார். கீட்டிங் சிலபல மில்லியன் டாலர்களை நன்கொடையாகவும் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தை மதர் தெரசாவின் அமரிக்கப் பயணங்களின் போதும் அளித்து வந்தவர்.

1984ல் இந்தியாவையே உலுக்கி, 2,500க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட போபால் விஷவாயுக் கசிவின் போது, அங்கு நேரடியாகச் சென்ற மதர் தெரசா அந்தப் பேரழிவை ‘விபத்து’ என்று வர்ணித்தார். பாவத்தின் சுமையே விபத்திற்குக் காரணம் என்றார். அந்தப் பேரழிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனம் குறித்து ஒரு சிறு கண்டனத்தைக்கூட வெளிப்படுத்தாதது மட்டுமல்ல, அதன் தலைவரான ராபின் ஆண்டர்சனைத் தப்பிக்க வைக்கும் திரைமறைவு வேலைகளுக்கு ஊக்கம் தரும் வகையில், ‘இந்திய மக்கள் அவரை மன்னிக்க வேண்டும்’ என்று உபதேசித்தார். ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிடி’ நிறுவனத்திற்கு நன்கொடைகளாகக் குவிந்திருந்த பல மில்லியன் டாலர் நிதியிலிருந்து ஒரு காசு கூட இந்தப் பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களுக்கான நிவாரணத்திற்காக மதர் தெரசா அளிக்கவில்லை. இந்தத் துயரம் எந்த அளவிற்கு உங்களைப் பாதித்துள்ளது என்று கேட்கப்பட்டபோது, “விபத்து இங்கு நடந்துள்ளதால் உங்கள் மனம் மிகவும் துயரப்படுகிறது. உலகெங்கும் நடக்கும் லட்சக்கணக்கான கருக்கலைப்புகளில் ஏற்படும் உயிரிழப்புகளை எண்ணிப் பாருங்கள்” என்று பதிலளித்தார் மதர் தெரசா[3].

அந்த மாபெரும் மானுட சோகத் தருணத்திலும் மனித நேயத்தைவிட ‘கருக்கலைப்பு பாவம்’ என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதமே மதர் தெரசாவின் மனதில் கோலோச்சியது என்பது அவரது ஆளுமையை அறிந்தவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியதல்ல. அணுஆயுதப் போட்டியும் மற்ற பல அபாயங்களும் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், நோபல் பரிசு ஏற்புரை உட்பட எல்லா இடங்களிலும் “கருக்கலைப்புகள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய குந்தகம் விளைவிக்கின்றன” என்று அவர் மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருந்தார். இந்தியாவில் இந்துமதத் தலைவர் ஒருவர் இதே போன்று ஒரு கருத்தைக் கூறியிருந்தால் அது எந்த அளவுக்கு எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதுதான். ஆனால் மதர் தெரசா விஷயத்தில் அறிவியலுக்கும் அடிப்படைப் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அவரது அபத்தக் கருத்துக்கள் வெளியில் சொல்லப்படாமலேயே பூசிமெழுகப்படுகின்றன.

மதர் தெரசாவின் வாழ்நாளிலும், அதற்குப் பின்பும் அவரது அமைப்புகளுக்கு வந்து குவிந்த பணமெல்லாம் என்ன ஆயிற்று என்பது ஒரு மிகப் பெரிய மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்த பல உண்மைகளை ஸ்டெர்ன் என்ற ஜெர்மானிய இதழில் வெளிவந்த ‘மதர் தெரசா: அவரது மில்லியன்கள் எங்கே சென்றன’ (2003) என்ற கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது [4]. இந்தக் கட்டுரை குறிப்பிடும் சில விவரங்கள்:

உலக அளவில் மதர் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள். இந்த வசூல் பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசா பெயரிலான அமைப்புகள் எதுவும் இந்த அளவுக்குப் பெரும் நிதியைச் செலவழித்தப் பெரிதாக எதையும் செய்வதாகத் தெரியவில்லை. சிஸ்டர்கள் நடத்தும் இந்த அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை – முக்கியமற்றவை – எல்லா நாடுகளிலும், உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது.

சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது. இந்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

மதர் தெரசாவின் அமைப்பு தன் கணக்கு வழக்குகளை அரசுக்கு வெளியிடும் ஒரு சில நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கே 1991ல் அவரது அமைப்புக்கு வந்த வரவில் 7% மட்டுமே செலவழிக்கப் பட்டது. மீதமுள்ள பணம் எங்கே போனது? அதில் ஒரு பகுதியைப் பிற நாடுகளில் உள்ள கிளைகளுக்கு அனுப்புவதாக வரித்தாக்கல் செய்த விவரங்கள் சொல்கின்றன. எந்த மேல்விவரமும் தரப்படவில்லை. அதில் ஒருநாடாக எப்போதும் இருப்பது ரோம் – அங்குள்ள வாட்டிகன் வங்கிக்கணக்கில் அந்த நிதி சேர்கிறது. ஆனால் அந்தப் பணம் என்ன ஆகிறது என்பது இறைவனால் கூட அறியமுடியாத ரகசியமாகும்.

சரி. இவ்வளவு குறைபாடுகளும் மோசடிகளும் இருந்தபோதும் கூட, அவர் எந்தப் பிரதிபலனும் கருதாது இந்திய சமூகத்திற்குச் சேவை செய்தாரில்லையா என்று வெள்ளந்தியாகக் கேட்டு உணர்ச்சி வசப்படும் பாமரர்கள் நிறைந்த நாடு இது. ஆனால், மதர் தெரசா தனது வாய்மொழியிலேயே அதை மறுத்திருக்கிறார். “பெருவாரியான மக்கள் சமூக சேவகர் என்று என்னைக் குறித்து எண்ணிக் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகர் அல்ல. நான் ஏசுவுக்காக ஊழியம் செய்பவள். கிறிஸ்தவ நற்செய்தியைப் பரப்புவதும் மக்களை அதன்பால் திருப்புவதுமே எனது மையமான பணி” என்று நவீன் சாவ்லாவுக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெளிவாகவே அவர் குறிப்பிட்டிருக்கிறார். (நவீன் சாவ்லா இந்தியாவின் முன்னாள் தேசியத் தேர்தல் ஆணையர். கிறிஸ்தவத்தின் தீவிர ஆதரவாளர். மதர் தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.)

இந்தியாவில் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட மக்களை – உதாரணமாக தொழுநோயாளிகள் – மற்ற எல்லாரும் கைவிட்டுவிட்டபோது அன்னை தெரசாதான் சேவை செய்தார் என்று ஒரே ஒரு நோயாளிக்கு அருகில் மதர் தெரசா நிற்கும் ஒரு புகைப்படத்தைக் காட்டி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஊடக பிரசாரம் அன்றி வேறில்லை. அல்பேனியாவிலிருந்து கல்கத்தாவின் வீதிகளுக்கு வந்த தெரசாவைப் பற்றிச் சொல்லப்படும் அளவுக்கு மிக வெற்றிகரமான வழக்கறிஞர் தொழிலையும் செல்வச் செழிப்பையும் துறந்து தனது வாழ்நாள் முழுவதையுமே தொழுநோயாளிகளுக்காக அர்ப்பணித்த இந்தியாவின் மாபெரும் சமூகப் பணியாளர் பாபா ஆம்டே குறித்து நமக்குக் கூறப்படுவதில்லை என்பதுதான் சோகம். அவருக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது. எந்த விதமான விளம்பரங்களையும் புகழுரைகளையும் விரும்பாது தன்னலம் கருதாமல் உழைத்தவர் பாபா ஆம்டே.

மதர் தெரசாவின் வருகைக்கு சில பத்தாண்டுகள் முன்பு மேற்குலகிலிருந்து இன்னொரு பெண்மணி இந்தியாவை நாடி வந்தார். அதே கல்கத்தா நகரின் காலரா பீடித்த தெருக்களிலும் சேரிகளிலும் நோயுற்ற மக்களுக்குத் தொண்டாற்றினார். பல எதிர்ப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் இடையில் நவீன இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை அந்த நகரில் தொடங்கினார். அது இன்றளவும் இயங்கி வருகிறது. கவிஞர் சுப்பிரமணிய பாரதிக்கும், அறிவியலாளர் ஜகதீஷ் சந்திரபோசுக்கும் தேசபக்தியையும் பெண் விடுதலையையும் சுதேசி அறிவியலையும் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் குருவாக விளங்கி வழிகாட்டினார் அவர். தாகூரின் கல்விப் பணிகளுக்கு உறுதுணையாக நின்றார். தன்னை முழுமையாகவே இந்தியாவிற்கு அர்ப்பணித்துக்கொண்ட, சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாதான் அந்தப் பெண்மணி.

1984ல் மதர் தெரசா தமிழ்நாட்டுக்கு வந்த போது தமிழகத்தின் மாபெரும் மக்கள் தலைவரான எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆர் வெற்றிகரமாக அனைத்துப் பள்ளிகளிலும் தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியிருந்தார். அந்தத் திட்டத்தை மதர் தெரசா புகழ்ந்தது ஒரு மிகப் பெரிய விஷயமாக சிலாகிக்கப்பட்டது. ஆனால் உண்மையில், மதர் தெரசா செய்ததாகச் சொல்லப்படும் எந்த ஒரு ‘சேவை’ப் பணியை விடவும் மிகப் பெரிய சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக எம்.ஜி.ஆரின் திட்டம் இருந்தது. 1988ல் அவரது மறைவுக்குப்பின்னரே பாரத ரத்னா விருது எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது.

புத்தர், மகாத்மா காந்தி, விவேகானந்தர், அப்துல் கலாம் போன்ற ஆளுமைகளுடன் இணைத்து, உண்மைக்கு முற்றிலும் மாறாக, மத உணர்வுகளைத் தாண்டி மனித நேயத்தை முன்நிறுத்தியவர் என்ற பிரசாரத்துடன் மதர் தெரசாவும் இந்திய வெகுஜன பிரக்ஞையில் முன்னிறுத்தப்படுகிறார். அதை முழுமைப்படுத்துவதற்கான ஓர் இறுதி முயற்சியே தற்போது சூட்டப் பட்டுள்ள புனிதர் பட்டம். அதை நன்கு உணர்ந்தும் கூட, அரசியல் சரிநிலைகளைப் பேணுவதற்காகவும், அநாவசியமான சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவும் நரேந்திர மோதியின் தலைமையிலான மத்திய அரசு தனது வெளியுறவுத் துறை அமைச்சரைப் புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு அனுப்பியது துரதிர்ஷ்டவசமானது.

சகோதரி நிவேதிதாவை நாம் பெருமளவு மறந்து விட்டோம். வரலாற்றின் போக்கில், பாபா ஆம்டேயும் எம்.ஜி,ஆரும் பிரதேச அளவிலான நாயகப் பிம்பங்களாக நிலைபெற்றிருக்கிறார்கள். ஆனால், மதர் தெரசாவுக்கு, இந்திய அளவிலான, உலகளாவிய பிம்பம் கிடைத்திருக்கிறது. அவரது கிறிஸ்தவப் பின்னணி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுத் தந்ததும், அந்தப் பரிசு குறித்த அளவுக்கதிமான மதிப்பும், அந்தப் பரிசின் பின்னுள்ள ஐரோப்பியமையவாத அரசியலை மக்களில் பெரும்பாலோர் அறியாதிருப்பதும் இதற்குக் காரணங்கள்.

இதைவிடவும் முக்கியமாக, வறுமையிலும் அறியாமையிலும் சீர்கேட்டிலும் உழலும் இந்தியச் சமூகத்தை உய்விப்பதற்காகத் தூய வெள்ளையாடை அணிந்து தூய வெள்ளையினத்தைச் சேர்ந்த தேவதை சிலுவையை ஏந்திக் கொண்டு வந்திருக்கிறாஸ்ர் என்ற கருத்தாக்கத்தை ஆழ்மனதிலும் பதியவைப்பதாக மதர் தெரசாவின் பிம்பம் இருக்கிறது. தங்களைப் பற்றிய தாழ்வுணர்விலிருந்தும், காலனிய அடிமைத்தனத்தில் விளைந்த சிந்தனைகளிலிருந்தும் இன்னமும் முற்றிலும் வெளிவராத கணிசமான இந்திய வெகுஜன மனங்களுக்கு மதர் தெரசாவின் அந்தப் பிம்பம் உவப்பானதாகவே இருக்கும். அத்தகைய மனநிலையை இன்னும் நீடிப்பதற்கும் அது துணைபுரியும்.

தனது ஆய்வு முடிவுகளையும் விமர்சனங்களையும் விரிவாகத் தொகுத்து ‘மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு’ என்ற நூலை அரூப் சாட்டர்ஜி எழுதியிருக்கிறார். தங்களது சுயத்தைப் பற்றிய பிரக்ஞையும், பண்பாட்டுணர்வும் கொண்ட இந்திய மனங்களின் கவனம் அந்தத் தீர்ப்பின் மீதே குவியுமேயன்றி புனித பிம்பங்களின் போலித் தோற்றங்களில் மயங்காது.

சான்றுகள்:

[1] https://www.youtube.com/watch?v=DMwBBgTkAdg

[2] https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4

[3] http://swarajyamag.com/politics/recall-bhopal-tragedy-to-know-real-teresa

[4] இந்தக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு : http://www.tamilhindu.com/2015/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-2/

-oOo-

Posted on Leave a comment

வலம் இதழ் – அக்டோபர் 2016 – அருகி வரும் யானைகள்

அருகி வரும் யானைகள் 
– பி.ஆர்.ஹரன்

காட்டு யானைகளின் அவலம்

ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று இருவகைகளாக யானைகள் அறியப்படுகின்றன. 2003-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 40,000 முதல் 50,000 வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 30,000 யானைகள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசிய யானைகளை, இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature and Natural Resources – IUCN) என்கிற அமைப்பு, அருகிவரும் உயிரினமாக (Endangered Species) அறிவித்துள்ளது. 1972ம் ஆண்டு இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்ட வரைவின்படி யானை அருகிவரும் உயிரினமாகப் பட்டியல்-1-ல் (Schedule-1) இடம்பெற்று, முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மிருகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருகிவரும் உயிரினமான யானைகளைப் பாதுக்காக்கும் பொருட்டு, இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 1992-ஆம் ஆண்டு ‘ப்ராஜெக்ட் எலிஃபேண்ட்’ (யானைத் திட்டம் – Project Elephant) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தது.(1) யானைகள் இருக்கும் 16 மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, அம்மாநில அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான நிதி வழங்கி யானைகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு எண்ணிக்கையை அதிகரிக்க இயலவில்லை. 2007-ல் 27,682-ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2012-ல் 30,711-ஆக உயர்ந்தாலும், அது 1990களின் எண்ணிக்கையைத்தான் ஒத்துப்போகிறது. இத்தனைக்கும், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ப்ராஜெக்ட் எலிஃபேண்ட் திட்டத்தின்படி, இந்தியாவில் மொத்தம் 58,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 32 யானைப்பாதுகாப்பிடங்களை (Elephant Reserves) பராமரித்து வருகின்றது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘யானைத் திட்டம்’ மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியலிடலாம். காடுகள் மனிதர்களாலும், அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் பரப்பளவு குறைந்து வருவது; தந்தத்திற்காகக் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுவது; யானைகள்-மனிதர் மோதல்கள்; சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (CaptiveElephants) முறையாகப் பராமரிக்கப்படாதது; ஆண்யானை-பெண்யானை விகிதாசாரம் சரியாக இல்லாதது.

யானைத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்கள், (1) யானைகள், யானைகளுக்கான இயற்கையான வாழ்விடங்கள் (Elephant Habitat), வனங்களினூடாகச் செல்லும் யானைகளின் வழித்தடங்கள் (Elephant Corridors), ஆகியவற்றின் பாதுகாப்பு.

(2) யானைகள்-மனிதர் மோதல்களுக்கான (Human-Elephant Conflicts) காரணங்களை ஆராய்ந்து அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தல். (3) சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன்.

கடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் 14,000 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை நாம் இழந்துள்ளோம். இவற்றில் சுரங்கத்தொழில்களுக்காக 4,947 சதுர கிலோமீட்டர், பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1,549 சதுர கிலோமீட்டர், நீர்மின்சக்தி திட்டங்களுக்காக 1,351 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை இழந்துள்ளோம். தற்போது, 250 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இழந்துவருகிறோம். இன்று, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில், 21.34% மட்டுமே வனப்பகுதியாக இருக்கின்றது.

வளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அழிக்கப்படும் காடுகளுக்கு நஷ்டஈடாகப் பயனாளிகள் மரங்கள் நடவேண்டும் என்கிற விதி உள்ளது. ஆயினும், காடுகள் அழிக்கப்படும்போது, மரங்கள் மட்டும் அழிக்கப்படுவதில்லை; ஓர் இயற்கை சுற்றுச்சூழலே (Ecosystem) அழிக்கப்படுகிறது. தாவர வளமும் உயிர் வளமும் (Flora & Fauna) அழிக்கப்படுகின்றன. ஆகவே வெறும் மரங்களை மட்டும் நட்டுத்தருவது ஏற்கெனவே நிலவிய சுற்றுச்சூழலுக்கு ஈடாகாது என்று வனமேலாண்மை நிபுணர்கள் ஒருமித்த கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்தை அரசும் பாராளுமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், மக்கள்தொகை பெருகுவதும் நகரமயமாக்கம் அதிகரிப்பதும் காடுகளின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 15,000 சதுரகிலோமீட்டர் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களும் அடக்கம். அவ்விடங்களில் புதிதாகக் கிராமங்கள் உருவாகி, தானியங்களும் காய்கறிகளும் பயிரிடுவதும் அதிகரிக்கின்றது. வனப்பகுதிகள் சுருங்கிவரும் சூழலில் இந்தப் பயிர்நிலங்கள் யானைகள் போன்ற மிருகங்களின் தாக்குதலுக்கு உள்ளாவது இயற்கையே. இதனால், மனிதர்-வன உயிரினங்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

யானைகள் தங்களின் விளைநிலங்களை அழிக்காமல் இருப்பதற்காக, நிலச் சொந்தக்காரர்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கின்றனர்; சிலர் ஆங்காங்கே தீ மூட்டுவதும் உண்டு. அருகில் வரும் யானைகளை விரட்ட முரசுகளை ஒலிப்பதும், பட்டாசுகள், வெடிகள் வெடிப்பதும் உண்டு. ஆனால் யானைகள் கூட்டமாக வரும்போது சில நிமிடங்களில் கிராமத்தையே அழித்துத் துவம்சம் செய்துவிடும் இயல்பு கொண்டவை. மனிதர்-யானைகள் மோதல்களால் இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் யானைகளைக் குறை சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

உலகச் சந்தையில் யானைத் தந்தத்திற்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூட தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. ஆகவே யானைகள் இவற்றுக்காகவும், பாரம்பரிய மருத்துவப் பொருள்களுக்காகவும் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கம் (Wildlife Protection Society of India – WPSI) என்கிற அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில் 121 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில் 781 கிலோ தந்தம், 69 தந்தங்கள், 31 தந்தத் துண்டுகள், 99 செதுக்கப்பட்ட தந்தங்கள், 75 தந்த வளையல்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. 1986-ஆம் வருடமே தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்துள்ளது.

கோடைக் காலங்களில் நீர்நிலைகள் வற்றி, தாவரங்களும், காய்கறிகளும் கிடைப்பது அரிதாகிவிடுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக நீரையும் உணவையும் தேடி அலையும். இந்தக் கோடைக் காலத்தைத்தான் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள் மட்டுமல்லாமல், தேக்கு மற்றும் சந்தனக் கொள்ளையர்களும் யானைகளைத் தந்தங்களுக்காகக் கொல்வதுண்டு. வீரப்பன் போன்றவர்களே இதற்கு உதாரணம். உண்மையில் தந்தக் கடத்தல் தொழிலில் ஆரம்பித்துப் பின்னர்தான் சந்தனமரக் கடத்தலுக்கு மாறினான் வீரப்பன் என்றும், தந்தக் கடத்தல் தொழிலில் இருக்கும்போது கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்றுள்ளான் என்றும் இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கத்தின் ‘கடுந்துன்பத்தில் ஒரு கடவுள்’ (A God in Distress) என்கிற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வீரப்பன் போன்றவர்கள் மட்டுமல்லாமல், உல்ஃபா (ULFA), போடோ (BODO), நாகா (NAGA) தீவிரவாதிகளும், மக்கள் போர்க் குழு (PWG) மாவோயிஸ்டுகளும் தங்களுடைய இயக்கங்களின் பணத்தேவைக்காக அவ்வப்போது யானைகளைக் கொல்வதுண்டு என்றும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.(2)

இந்திய விலங்குநல ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Veterinary Research Institute) ஓய்வுபெற்ற விஞ்ஞானியான டாக்டர் B.M.அரோரா மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 6,000க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் 1990 முதல் 2012 வரை தென்னிந்தியாவில்தான் அதிகமாக, அதாவது 3,239 யானைகள் இறந்துள்ளன. வடகிழக்கு இந்தியாவில் 1,403 யானைகளும், கிழக்கு இந்தியாவில் 1,253 யானைகளும், வடக்கு மண்டலத்தில் 378 யானைகளும் இறந்துள்ளன. ,499 யானைகள் நோய்களால் உடல்நலன் குன்றி இறந்துள்ளன; 694 யானைகள் மின்சார வேலிகளைத் தீண்டியதால் இறந்துள்ளன; 562 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன; 1,276 யானைகள் இயற்கைக் காரணங்களால் இறந்துள்ளன; 875 யானைகளின் சாவுக்குக் காரணம் தெரியவில்லை.(3) வனப் பகுதியை ஆக்கிரமித்து உருவாகியுள்ள கிராமங்களில் பலர் சட்டத்திற்குப் புறம்பாக, அனுமதியின்றி மின்சார வேலிகள் அமைக்கின்றனர். இவ்விஷயத்தில் வனத்துறையினர் சரியான கவனம் செலுத்துவதில்லை. அரசியல் அழுத்தங்களால், அத்துமீறுபவர்களும் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ரயில் வண்டிகளில் அடிபட்டு யானைகள் இறந்துபோவது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. சில இருப்புப்பாதைகள் காடுகள் வழியாகவும் அமைக்கப்படுகின்றன. அப்பாதைகள் யானைகளின் வழித்தடங்களின் ஊடாகச் செல்வதால், அந்தப் பாதைகளைத் தாண்டிப்போகும்போது யானைகள் ரயில்களில் அடிபட்டுப் பரிதாபமாக மரணமடைகின்றன. 1987 முதல் 2010 வரை இந்தியாவில் மொத்தம் 150 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துபோயுள்ளன. இதில் 2000 முதல் 2010 வரை 100 யானைகள் இறந்துபோயுள்ளன.

பல இடங்களில் இருப்புப்பாதைகள் மேடான பகுதிகளில் போடப்பட்டிருப்பதாலும், பாதையிலிருந்து கீழே நிலப்பகுதிக்குச் சரிவாக வரவேண்டியிருப்பதாலும், பருத்த உடலும் மெதுவான நகர்வும் கொண்ட யானைகள் ரயில்கள் வருவதற்குள் பாதையைக் கடக்க முடியாமல் அடிபட்டு இறந்துபோகின்றன. வழித்தடங்களை யானைகள் கடந்துசெல்லும்போது, ரயில் ஓட்டுநர்கள் ரயில்களை மெதுவாகக் குறிப்பிட்ட அளவு வேகத்தில்தான் செலுத்த வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் பல ஓட்டுநர்கள் அதைப் பின்பற்றுவது கிடையாது. ஓட்டுநர்களின் பார்வைக்கு, வழித்தடங்களைக் கடக்கும் யானைகள் தெளிவாகத் தெரிகின்ற அளவுக்கு, வழித்தடங்களில் இருக்கும் மரங்கள், பாறைகள் போன்றவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் வனத்துறையினருக்கு உண்டு.

சமீபத்தில் மேற்கு வங்க மாநில டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மஹானந்தா வன உயிரினக் காப்பகத்தின் வழியாக ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதையை நீட்டிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.(4) இந்தப் பாதையில் ஏற்கனவே 55 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உத்தர்கண்ட் மாநிலத்தில் ஹரித்வார், தேஹ்ராதூன், பௌரி கார்வால் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் ராஜாஜி தேசியப் பூங்காவில், 18 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் ரயில்பாதையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணங்கள், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதும், ரயில் ஓட்டுநர்களுக்கு ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைத்திருப்பதும், இருப்புப்பாதையை ஒட்டியிருக்கும் மேடான பகுதிகள் மற்றும் சரிவுகள் சமநிலைப்படுத்தப்பட்டதும், பார்வை மறைப்பு வளைவுகளில் (Blind Curves) உள்ள மறைப்புகளை அப்புறப்படுத்தியதும், ஓட்டுநர்கள் வேகக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும் ஆகும். இதே போன்ற நடவடிக்கைகள் மேற்குவங்க மஹானந்தா வன உயிரினக் காப்பகத்திலும் எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, இதுவரை மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 900 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும், சுற்றுச்சூழல் கெடாமல் இருக்கவும் வன உயிரினங்களின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்டிப்பாக எடுக்கும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டமும், மற்ற வழிகாட்டுதல்களும், விதிகளும் மீறப்படுவது; வனத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் மற்றும் பொறுப்பின்மை, இதனால் தொடர்ந்துகொண்டிருக்கும் வன ஆக்கிரமிப்புகள்; இவற்றின் விளைவாக வேகமாகச் சுருங்கிவரும் வனப்பகுதிகள் ஆகியவையே, அருகிவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள யானைகள் இறந்துபோவதற்கும், எண்ணிக்கை குறைவதற்கும் முக்கியக் காரணங்கள். இதில் யானைகளின் நலன் மனிதனின் கைகளில்தான் இருக்கிறது. மனிதன் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் மனிதனின் ஆக்கிரமிப்புகளாலும், வளர்ச்சித்திட்டங்களாலும், உள்கட்டமைப்புத் திட்டங்களாலும் காட்டு யானைகள் அழிந்து வரும் நிலையில், மறுபக்கம் தனியார் வசமும், வழிபாட்டுத் தலங்களிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் கடும் துன்பத்தையும் சித்தரவதையையும் அனுபவித்து இறந்துபோகின்றன. காட்டு யானைகளைப் பொருத்தவரையில் சித்தரவதை என்பது இல்லை. ஆனால் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்குக் கன்று வயது முதல் இறந்துபோகும் வரை துன்பமும் சித்தரவதையும்தான் வாழ்க்கை.

(சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் அவலங்கள் அடுத்த இதழில் வெளியாகும்.)

சான்றுகள்:

(1) https://en.wikipedia.org/wiki/Project_Elephant

(2) http://www.wpsi-india.org/images/a_god_in_distress.pdf, பக்கம் 30, 31.

(3) http://timesofindia.indiatimes.com/city/bareilly/Over-6000-elephant-deaths-in-two-decades/articleshow/47193313.cms?gclid=CMvrsMKn_c4CFdOFaAod3-wJQg

(4) https://www.scoopwhoop.com/inothernews/elephants-killed-on-railway-tracks/#.khj8bzrhv

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – மாதொரு பாகன் – என்னதான் நடந்தது?

மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்

பெருமாள் முருகன் எழுதி காலச்சுவடு வெளியிட்டிருந்த ‘மாதொருபாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விஷயம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆய்வுசெய்து ஒரு ஆய்வுக்கட்டுரை மற்றும் நூல் எழுதுவதற்காக பெருமாள் முருகன் இந்தியக் கலாசார மையம் என்னும் பெங்களூருவில் இருக்கும் அமைப்பிடமிருந்து பணம் வாங்கியதில் தொடங்குகிறது. இந்த அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாக பெருமாள் முருகன் ‘மாதொரு பாகன்’ நூல் முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார். ‘ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் திட்டம் ஒன்றிற்கு ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே நல்கை வழங்கப் பெங்களூரில் உள்ள ‘கலைகளுக்கான இந்திய மையம் (மிதிகி)’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து நல்கை பெற்றேன்’ என்கிறார். ஆய்வுக்கு நல்கை பெற்றவர் ஆய்வுக்கட்டுரைதான் எழுதினாரா என்றால் இல்லை. மாதொருபாகன் என்ற நூலைத்தான் எழுதினார். அப்படியானால் ஆய்வு? அந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டுதான் இந்த நூல் எழுதியதாகச் சொல்கிறார். நூலின் முன்னுரையில் இப்படி ஒரு வரி உள்ளது. ‘சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம்.’ அதாவது கோவிலின் ‘மிதமிஞ்சிய’ செல்வாக்கு.

நூல் வெளிவந்து சில வருடங்கள் கழித்துத்தான் சர்ச்சை ஆரம்பிக்கிறது. இந்த நூலிலே இப்படி ஒரு தரக்குறைவான விஷயம் ஆய்வு என்னும் போர்வையில் சொல்லப்பட்டிருப்பது, இந்நூல் வெளிவந்தபோது மக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. தமிழ்நூல்களைப் படிக்கும் வழக்கமே அருகிவருகிறது என்பதை அந்த நூல்களைப் பதிப்பிப்பவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அதுவும் தீவிர இலக்கியப் புனைவு என்னும் போர்வையில் வரும் புத்தகங்களை வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவே. அதிலும் இப்படிப்பட்ட இடதுசாரித்தனமான நூல்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ளே படித்துக்கொண்டு தங்களுக்குள்ளே பாராட்டுவிழாவும் நடத்திக்கொள்வார்கள் என்பதால் இந்நூல் வெளிவந்தபோது இதைப் பற்றி வெளிஉலகுக்குத் தெரிவதில்லை.

இந்நூல் எழுத காசு கொடுத்தவர்களும், இந்நூலோடு தொடர்புடைய சிலரும் சேர்ந்து கொங்கு மண்டலத்தின் மக்கள் மீது வீசிய புழுதியை உலகெங்கும் கொண்டு செல்வது எனத் தீர்மானித்து இந்த நூலுக்கு சிங்கப்பூரிலே பாராட்டு விழா நடத்தினார்கள். அதுவும் ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கு. அப்போதுதான் இந்நூல் குறித்த உண்மையான செய்திகள் மக்களுக்குத் தெரியவருகின்றன. நன்றாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கொங்கு மண்டலத்தில் எந்த இடத்திலும் இந்நூலுக்கு ஒரு விவாதமோ பாராட்டோ விழாவோ ஏற்பாடு செய்யப்படவில்லை. நேராக சிங்கப்பூர் போய்விட்டார்கள்.

ஒரு தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்பதைச் சொல்வதாக அமைந்திருக்கும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, குழந்தை வரம் என்பது கடவுளின் அருளால் கிடைப்பதில்லை, அது கோவில் திருவிழாவுக்கு வரும் ஆண்களுடன் கூடுவதால் கிடைப்பது என்றும் கோவில் திருவிழாவிலே மிகமோசமான நிகழ்வுகள் நிகழ்கின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கே கவனிக்கப்படவேண்டியது, இதை நேரடியாகச் சொல்லாமல், இப்படி ஒரு விஷயம் காலங்காலமாக நடந்து வருவதாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னணியில் மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஆதாரமற்ற மோசமான கருத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் தங்கள் ஊரும் புனிதமான கோவிலும் கேவலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த மக்கள் அகிம்சை முறையிலே எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கடையடைப்பு, அமைதியாக ஊர்வலம் என எதிர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த எதிர்ப்பைக் கண்ட கதாசிரியர் தன் நூலான ‘மாதொருபாகன்’ நாவலில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை எனவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் பல அறிக்கைகளை வெளியிட்டார். மக்களோ அந்தப் பாசாங்குக்கெல்லாம் மயங்கவில்லை. இறுதியாக மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திய அமைதிக்கூட்டத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி கையெழுத்திட்டுத் தந்துவிட்டார் நாவலாசிரியர்.

அக்கூட்டத்தில் பெருமாள் முருகனால் ஒப்புக்கொள்ளப்பட்டவை:

1. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்படவில்லை.

2. எதிர்காலத்தில் இப்புத்தகம் வெளிவந்தால் திருச்செங்கோடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறாது.

3. இது தொடர்பாக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பேட்டியோ கட்டுரையோ வெளியிடமாட்டேன்.

4. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பிரதிகளில் விற்பனையாகாமல் உள்ள புத்தகங்களைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

மாவட்டநிர்வாகம் கூட்டிய கூட்டத்தில் இப்படிக் கையெழுத்திட்டுத்தந்த கதாசிரியர் ‘அடுத்தநாள் பெருமாள் முருகனின் மரணம்’ எனச் சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இதனால் தூண்டப்பட்ட மனித உரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பவர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மாவட்ட நிர்வாகம் செய்த முயற்சிகளையும் நாவலாசிரியர் மேல் பதியப்பட்ட காவல்துறை வழக்குகளையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ‘பெருமாள் முருகன் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீக்கவேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இதில் ஒரு தரப்பாக பெருமாள் முருகன் பின்புதான் சேர்க்கப்பட்டார். அந்தக் ‘கதை’யை வெளியிட்ட பதிப்பாசிரியரும் சேர்ந்துகொண்டார். பதில் மனுக்களை இந்து இயக்கங்களும் கொங்கு மண்டல சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் பல விசித்திரங்கள் நடந்தேறின. முதலில் இந்தக் கதை ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது எனச் சொன்ன கதாசிரியர், அது வெறும் கற்பனை எனச் சொன்னார். ஆனால் அந்தப் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர் ‘அது கற்பனை அல்ல, உண்மை’ என்று வாதாடினார். மேலும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது உண்மையே எனச் சொல்ல காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்த கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் இருந்தே ஆதாரம் காட்டுகிறோம் என்ற வேடிக்கைகளும் நடந்தன. அதோடு ஏகப்பட்ட புத்தங்களைக் கொண்டுவந்து, இதிலெல்லாம் ஆதாரம் இருக்கிறது, இதைப் படித்துப் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள் என செய்ய முடியாத வேலைகளைச் செய்யச் சொன்ன விநோதங்களும் நடந்தன.

கொங்கு மண்டல சமூக அமைப்புகள் தங்கள் வாதத்தில், இப்படி எழுதப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இந்து அறநிலையத்துறையின் 100 வருட ஆவணங்களில் இப்படி எந்த ஒரு குறிப்பும் இல்லை, எனவே இப்படி உண்மைக்குப் புறம்பான விஷயங்களை எழுதியவர்கள்மீதும் அதைப் பதிப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்து மத நூல்களிலும் இப்படியான ஒரு கேவலமான செய்கை ஏதுமில்லை, சாஸ்திர சம்பிரதாயங்கள் இதை எப்போதும் சொன்னதில்லை என்பதும் முன்வைக்கப்பட்டன.

வழக்கின் தீர்ப்பு, கோவிலில் நடந்ததாக இருந்தாலும் தவறில்லை, ஏனென்றால் கோவிலில் ஓர் இடத்தில் நடந்ததாகச் சொல்வது கோவிலையோ அல்லது இந்து மதத்தையோ புண்படுத்தியதாகாது என்பதையும் அக்காலத்திய மக்களைச் சொன்னதை இப்போது இருக்கும் மக்கள் தங்களைச் சொல்வதாக நினைத்து வருத்தப்படக்கூடாது என்பதையும் உள்ளடக்கியதாக இருந்தது. பல வாதங்களைப் பயன்படுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் போட்ட மனுவை ஏற்று, மக்கள் அளித்த பதில் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டு தரப்பும் சமாதானமாகப் போகவேண்டும், காலத்தினால் இந்த வடுக்கள் ஆறும், எனவே நடந்ததை மறந்து இரண்டு தரப்பும் சுமூகமாகப் போகவேண்டும் என நீதிமன்றம் ஆலோசனையும் வழங்கியது. எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் வரவேண்டும் என எழுத்தாளருக்கு வேண்டுகோளும் விடுத்தது.

தீர்ப்புக்குப் பிறகு மனித உரிமை ஆர்வலர்களும் இன்னபிற கோஷ்டிகளும் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த விடுதலையைக் கொண்டாடி ஒரே ஒரு கட்டுரையை எழுதியதோடு சரி. நாவலாசிரியரும் ‘நான் என்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறேன், சுய தணிக்கை செய்து கொள்கிறேன்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரின் எல்லா நூல்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டே மீண்டும் வரும் எனவும் சொல்லியிருக்கிறார். டெல்லியில் ஒரு கவிதைத்தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். என்.டி.டி.வியில் பேட்டி அளித்திருக்கிறார். இதற்கு டெல்லியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காரணமா, அல்லது ஆட்சி மாறட்டும் எனக் காத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே முறையீடு செய்தால் அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக ‘நாங்களே தணிக்கை செய்து கொள்கிறோம் எனச் சொல்லி இருக்கிறோம்’ எனச் சொல்வதற்காகவா எனத் தெரியவில்லை.

இந்துக்களின், இந்நாட்டு மக்களின் வரலாற்றைக் காசு கொடுத்து திரித்து எழுதுவதற்கு ஒரு பெரும் படையே இருக்கிறது என மீண்டுமொரு முறை நீருபிக்கப்பட்டுள்ளது. அப்படித் திரித்த வரலாற்றை முட்டுக்கொடுக்கவும் ஒரு பெரும் கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சரியான வரலாற்றை நாமே ஆய்வுபூர்வமாக எழுதி நமது அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதும், இதுபோன்ற ஆய்வு என்ற பெயரில் நடக்கும் மோசடிகளுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுப்பதும் நாம் உடனடியாக முன்னெடுக்கவேண்டியவை. இவை அன்றி இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவே முடியாது.

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா?

இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்

உலகில் எல்லாரையும்விடச் சிறுபான்மையானவன் தனிமனிதன்தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களைச் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக்கொள்ள முடியாது.
– அயன் ராண்ட்

ஆசிரியர்களைப் பணி நிமித்தம் செய்வது தொடர்பாக தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகள் ஓர் அரசாணையைப் பிறப்பித்திருந்தன.(1) அதன்படி ‘அரசு, அரசு உதவிபெறும் தனியார்ப் பள்ளிகள் மற்றும் உதவிபெறாப் பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியப் பணியில் அமர்த்த, ஆசிரியர்கள் TET (Teacher Eligibility Test) தேர்வில் வெற்றி பெற்று, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதை எதிர்த்து 300 க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 24, 2016ல், ‘சிறுபான்மைப் பள்ளிகளுக்கு இந்த ஆணை செல்லாது என்றும், சிறுபான்மைப் பள்ளிகள் அரசு உதவிபெறும் மற்றும் அரசு நிதியுதவி பெறாத பள்ளிகள், தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த அரசாணை சிறுபான்மையினரின் பண்பாடு மற்றும் கல்வி உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது என்பதை சட்டப் பிரிவு 30ஐ மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பை(2) வழங்கியுள்ளது.

இந்தியா விடுதலையடைந்தபோது, சிறுபான்மையினரின் நலன்கள், வழிபாட்டு உரிமைகள், கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள், மொழி உரிமைகள் எவ்விதத்திலும் பெரும்பான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், வேறுபாடுகள் காட்டப்பட்டுவிடக்கூடாது என்றும், சிறுபான்மையினர் தமது உரிமையில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கிலும்தான் இந்தச் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று இது சம்பந்தமான எந்த வழக்குகள் வந்தாலும், நீதிமன்றங்கள், அரசாணைகளின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், இவை சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்தாது என்று தொடர்ச்சியாகத் தீர்ப்புகள் வழங்கி வருவதைக் காண முடிகிறது.

நடைமுறையில் இந்துக்களின் பெரும்பான்மை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அரசு உதவிபெறும் தனியார் இந்துப் பள்ளிகள், உதவி பெறா இந்துப் பள்ளிகளுக்கு இந்த அரசாணைகள் செல்லும் என்பதும், சிறுபான்மையினருக்குப் பொருந்தாது என்பதும் எவ்வகையில் சரி என்பது விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன, சிக்கல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு சட்டப்பிரிவு 30ல் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சட்டப்பிரிவு 30 சிறுபான்மையினரின் கல்வி உரிமைகள் பற்றிப் பேசுகிறது.

a) மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினர். இவர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் மற்றும் கல்வி நிலையங்களை நிர்வகித்தலில் தமது விருப்பம்போல செயல்படலாம்.

b) இந்திய அரசு, மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ கல்வி நிலையங்களை உருவாக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

Article 30 in The Constitution Of India 1949

30. Right of minorities to establish and administer educational institutions

(1) All minorities, whether based on religion or language, shall have the right to establish and administer educational institutions of their choice

(2) The state shall not, in granting aid to educational institutions, discriminate against any educational institution on the ground that it is under the management of a minority, whether based on religion or language.

மத அடிப்படையில் நோக்கினால், இந்தியாவில் இந்துக்கள் தவிர்த்த அனைத்து மதத்தினரும் சிறுபான்மையினர். முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜெயின்கள் ஆகியோர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய பாராளுமன்ற சட்டப் பிரிவு 2 C குறிப்பிடுகிறது. மொழியைப் பொருத்தமட்டில் ஒரு மாநில அரசு ஆட்சி மொழியாக உள்ள மொழியைத் தவிர்த்து, மற்ற மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினர். உதாரணமாக தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள். வேலைவாய்ப்புக் கருதி மகாராஷ்டிராவில் குடியேறும் குஜராத்திகள், குஜராத்தில் குடிபெயரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் இந்திய முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது “இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம்கள்” என்கிறார்.(4) அவர் முஸ்லிம்களைச் சிறுபான்மைச் சமூகத்தவராகக் கருதவில்லை. இந்தியாவில் பார்சிகள் மக்கள்தொகை வெறும் 69,000 மட்டுமே. ஜெயின்கள் 44 லட்சம் மட்டுமே. இவர்களை சிறுபான்மையினர் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. 17.22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களும்(5) இந்தியாவில் சிறுபான்மையினர் என்பது எவ்வகையில் சரி?

எந்த எண்ணிக்கையில், எந்த சதவீதத்தில் மக்கள்தொகை இருந்தால் அவர்கள் சிறுபான்மையினர் கிடையாது என்று சட்டத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. முஸ்லிம்கள் மக்கள்தொகை இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 9.9% ஆக இருந்தது. 2011ன் கணக்குப்படி 14.3% ஆக உயர்ந்துள்ளது. இன்னும் முப்பது ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கப்போகிறது.

எனக்குத் தெரிந்த ஓர் அரசு உதவிபெறும் கிறித்துவ மேலாண்மைப்பள்ளியில், TET தேர்வில் வெற்றி பெறாதவர் 10 லட்சம் கொடுத்து சேரத் தயாராக உள்ளார் என வைத்துக்கொள்வோம். அதே பள்ளியில் TET தேர்ச்சி பெற்ற ஒருவர் 1 லட்சம் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார். இப்போது இவர்களில் யாரை ஒரு கிறித்துவப் பள்ளி பணியில் அமர்த்தும்? 10 லட்சம் கொடுப்பவரை பணியில் அமர்த்தும் செயலை கிறித்துவ, மதராஸாக்கள் செய்யலாம். ஆனால் அதை இந்துப் பள்ளிகள் செய்யக்கூடாது. இவ்வாறான தீர்ப்பைத்தான் நீதிமன்றங்கள் கொடுக்கின்றன. இங்கு எழும் கேள்வி, இந்துக்களும் எவரையும் பணியில் அமர்த்த ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதல்ல. எவரும், தகுதியில்லாத ஒருவரைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதே.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய 25% ஏழை மாணவர்களை அனைத்துப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாணை பிறப்பித்த வழக்கிலும், இது அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளுக்குப் பொருந்தாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் 2012 ல் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் TET தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆணை பிறப்பித்தன. ஏழை மாணவர்களுக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துப் பள்ளிகளும் 25% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றது.(3) ஆனால் இவையனைத்தையும் அரசு நிதிஉதவி பெறாத இந்துப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதான தீர்ப்பும், முஸ்லிம், கிறித்துவ மற்றும் இதர சிறுபான்மைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டியதில்லை என்பதும் எவ்வகையில் சரி?

சட்டப்பிரிவு 30ன் நோக்கம் சிறுபான்மைச் சமூகத்தினர், பெரும்பான்மைச் சமூகத்தினரைப் போல சரிசமமாக நடத்தப்படவேண்டும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே! ஆனால் இன்று உரிமை என்ற பெயரில் சிறப்புச் சலுகைகள் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்லாது, இந்துப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற தீர்ப்பினை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இச்சட்டத்தில் நிறைய மாற்றங்களைக்கொண்டு வந்து, அனைவருக்கும் சமமான நிலையைக் கொண்டுவர விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும்.

இந்தச் சட்டத்தை அறவே நீக்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அனைத்து மதத்தினரும், சிறுபான்மை மொழிச் சமூகத்தினரும் கல்வி நிலையங்கள் தொடங்க, ‘சட்டப்படி இந்தியர் ஒவ்வொருவரும் கல்வி நிலையங்கள் தொடங்க விரும்பினால் எந்தத் தடையுமில்லை’ என்ற ஒரு உறுதியான நிலையே போதுமானது. கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உண்டு. ஒருவேளை தனியார்க் கல்வி நிலையங்களுக்கு அரசால் நிதி உதவி வழங்கமுடியவில்லை என்றால், அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கச் சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், அங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடு இருக்கக்கூடாது..

யார் இந்துக்கள் என்பதைக்கூடப் பெரும்பான்மை மக்களுக்கான எளிய சட்டவடிவத்தைப் பிறப்பித்து, அதன்கீழ் நடக்கவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிபாடு செய்யும் மக்களையும் ஒரு பிரிவின் கீழ் ஒன்றுபடுத்தியுள்ளோம். இன்றும் கூட இந்துக்களை வெவ்வேறு வழிபாட்டுப் பிரிவினர் என்று பிரித்தால் இந்தியாவில் அனைவரும் சிறுபான்மையினரே!

சட்டப்பிரிவு 30ஐ நீக்க / மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனூடே யார் சிறுபான்மையினர், அதற்கான அளவீடு என்ன என்ற விவாதங்களையும் நடத்தி, சிறுபான்மையினர் சட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே பாகுபாடுகளைக் களையமுடியும்.

இந்தியா சிறுபான்மையினரின் நலனைப் பேணிக்காக்கும் தேசமாக இருப்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. உண்மையில் சிறுபான்மையினரின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு நாடாகவே இந்தியா இன்றும் இருக்கிறது. ஆனால் உரிமைகளும், சலுகைகளும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே என்பதும், பெரும்பான்மையினருக்குக் கிடையாது என்பதும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அடிக்குறிப்புகள்:

1)http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/60-marks-in-teacher-eligibility-test-mandatory-for-recruitment/article2654889.ece

2) http://www.business-standard.com/article/pti-stories/no-tet-required-for-teachers-of-minority-institutions-hc-116082401616_1.html

3)https://indiankanoon.org/doc/1983234/

4) http://censusindia.gov.in/Census_And_You/religion.aspx

5) http://www.gktoday.in/article-29-30-cultural-educational-rights-in-indian-constitution/

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்

நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்

நான் இதுகாறும் சொல்லிவந்த அல்லது இன்னும் சரியாகச் சொல்வதெனில் கோடிகாட்டி வந்த விஷயங்கள் இவைதான்: நாம் இழந்துவிட்டவை பற்றி, அல்லது இருப்பன பற்றிக்கூட பிரக்ஞையே அற்று இருப்பது பற்றி. பின்னர் இதற்கெல்லாம் மேலாக, இல்லாதவற்றை இருப்பனவாக நாம் உலகத்தின் முன்வைத்துப் பறையறிவித்து நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது பற்றி.

என் சிறுவயதுப் பருவத்தில், அதாவது, பின் முப்பதுகளும் முன் நாற்பதுகளுமான காலத்தில் சென்னையை இந்தியாவின் அறிவார்த்த தலைநகரம் (intelectual Capital of India) என்று சொல்லக் கேட்டதுண்டு. அக்காலங்களில் நாட்டின் சிறந்த கல்விமான்கள், டாக்டர்கள், வக்கீல்கள் பிறந்து வாழ்ந்த, புகழ் ஈட்டிய இடமாக இது இருந்தது. இவர்கள்தாம் சுதந்திரப் போராட்டத்திலும் பங்குகொண்டு, தமிழ்நாட்டிற்கு விழிப்புணர்வு ஊட்டியவர்கள்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது, அறிவார்த்த தலைநகரமாகச் சென்னை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு, கல்கத்தா, பம்பாய், அலஹாபாத் போன்ற நகரங்களும் இருந்தன என்று தோன்றுகிறது. ஆனால் அந்த நகரங்களுக்கு இல்லாத ஒரு பெருமை தமிழ்நாட்டிற்கு, சென்னைக்கு உண்டு. இதை அதிக நியாயத்தோடு பண்பாட்டுத் தலைநகரம் என்று சொல்லியிருக்கலாம். நடனமும், சங்கீதமும், தொன்மையான வரலாறும் வளமையும் கொண்ட மொழி. இத்தனையும் வேறு எந்த மொழிப்பிராந்தியத்திற்குமோ நகரத்திற்குமோ இருந்ததில்லை.

நடனம் என்ற ஒன்று வேறு எங்கும் காணப்படாதது. ஒடிஸ்ஸி பின்னரே, ஐம்பதுகளுக்குப் பின்னரே, திரும்பக் கண்டெடுக்கப்படுவதாக இருந்தது. கதக் ஒரு கலை என்றோ, நடனம் என்றோ சொல்வதற்கு அருகதை அற்றது. வெறும் தட்டாமாலை சுற்றுவார்கள். கால்களால் தாளம் போடுவார்கள். நுண்ணிய பார்வையும், தீர்க்கமான ரசனையும் கொண்ட (சங்கீதம், நடனம் விஷயங்களில்) மனதுக்குப் பட்டதைச் சொல்லும் தைரியமும் பெற்ற சுப்புடு, ஏதோ கதக் நாட்டியத்தில் பாவம் சிறப்பாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கதக்கில் ஏது பாவம்? அதற்கு அபிநயமும் கிடையாது. முத்திரையும் கிடையாது. மணிப்புரி நடனம் இருந்தது. பார்க்க அழகாக இருக்கும். மெல்லிய, மிருதுவான சலனங்கள். ஆனால் அதற்கு அதிக முத்திரைகளோ, அபிநயங்களோ விஸ்தாரமாகக் கிடையாது. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தாக இருக்கும்.

ஆனால் மிகச் சிறந்த சங்கீத மேதைகள் இருந்தார்கள். அவர்களைப் பற்றி ஜனங்களுக்குத் தெரியாது. சங்கீதமும் சங்கீத மேதைகளும் நவாப் தர்பார்களில் அடிமைப்பட்டுக் கிடந்தனர். தர்பாருக்கு வெளியே யாரும் சங்கீதம் கேட்டதில்லை. அது நவாபி, elitist கலை. மாறாக இங்கு சங்கீதம் மக்களை, ஊர் தெருக்களை, திருவிழாக்களை, மண விழாக்களை, கோவில் உற்சவங்களை வந்து நிரப்பிய கலை. இன்றும்தான். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, சமஸ்தானங்களும் நவாபுகளும் சரித்திரத்தில் மறைந்து, இன்று சங்கீதக் கலைஞர்கள் அரசாங்கத்தின் பராமரிப்பில் வந்துவிட்ட நிலையிலும்கூட, வடக்கே சங்கீதம் மக்களைச் சார்ந்ததாக இல்லை. தெற்கேதான், தமிழ்நாட்டிலும்தான் அது, நடனமும் சரி, சங்கீதமும் சரி, Classical ஆகவும், popular ஆகவும் இருந்து வருகின்றன. இங்கு கோவில்களில் ஆழ்வார்ப் பாசுரங்கள், தெருக்களில் தேவாரப் பதிகங்கள் என்ற மரபிற்கு ஒரு நீண்ட வரலாறு – 1,500 வருடங்கள் நீண்ட வரலாறு உண்டு. காற்றில் சங்கீதமும் தெருக்களில் கோலங்களும், கோவில் மணியோசை கேட்டுக் காலம் நிர்ணயிக்கப்படும் அன்றாட வாழ்வும் வேறு எங்கும் இருந்ததில்லை. நடன நிலைகள் சிற்பங்களாகிக் கோவில்களை அலங்கரிக்கும்.

கோவில்கள் என்று பேசும்போது, அவை ஒவ்வொன்றும் ஒரு சிற்பக் காட்சியகம் என்பதையோ, ஒரு புராதன கட்டக் கலைப் படிமம் என்பதையோ நாம் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ‘சாமி கும்மிடப் போகும் இடம்’, அவ்வளவே. தேங்காய், பழம், புஷ்பங்களோடு நேரே கர்ப்பக்கிரஹத்திற்குப் போவதும், அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி தீபாராதனைக்குப் பிறகு அரைமூடி தேங்காயும் புஷ்பமுமாக நேரே வந்த வழியே அதே நேர்க்கோட்டிலேயே திரும்புதலும்தான் ஒரு சாரார் அறிந்தது. மற்றொரு சாரார் பகுத்தறிவுக்காரர்கள். கோவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து கபளீகரம் செய்வதற்குத்தான் அவர்களுக்குக் கோவில் வேண்டும்.

இக்கோவில்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளிலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரையிலான சரித்திரத்தைத் தன்னுள் கொண்ட ஒரு கலைப் பொருள் என்பதை இவ்விரு சாராரும் அறிந்ததாகத் தெரியவில்லை. நாஸ்திகமும் ஆஸ்திகமும் கலைக்கு விரோதமான நிலைப்பாடுகளோ, கருத்தோட்டமோ, மனநிலையோ அல்ல. ஆஸ்திகமும் கலை படைக்கும். நாஸ்திகமும் கலை படைக்கும். இரண்டும் வெற்றுச் சடங்குகளாகவோ, வாய் உதிர்க்கும் அர்த்தம் இழந்த ஒலிகளாகவோ சீரழிந்துள்ளது நமது இன்றைய சோகம். ஆஸ்திகம், இருக்கும் கோவில்களைப் பராமரிக்க வேண்டுகிறது. ஆனால் அது வெறும் கட்டடப் பராமரிப்பு, கலையின் பராமரிப்பு அல்ல. இப்படி, பூஜை புனஸ்காரங்களோடு வாழும் கோயில்கள், மேஸ்திரித்தனமான பராமரிப்புகளால், சடங்கார்த்தமான கும்பாபிஷேங்களால் வாழ்ந்தும் அழிந்து வருகின்றன.

மதுரை மீனாட்சி கோவிலை விடவா வாழும் கோயில், பராமரிக்கப்படும் கோயில் இருக்கிறது? இருப்பினும், அது கலைப் பொருளின் பராமரிப்பு அல்ல. நான் 1945-47களில் பார்த்த பொற்றாமரைக் குளத்துச் சுற்றுச் சுவர்களில் இருந்த நாயக்கர் காலச் சுவர் ஓவியங்கள் அனைத்தும் இன்று அழிக்கப்பட்டுவிட்டன. காஞ்சிபுரம் கோவில்களின் சிற்பங்கள், சிற்பங்களாக இல்லை. காரையும் சுண்ணாம்பும் பூசி, சிதைந்த சிற்பங்களை முழுமையாக்குவது அசிங்கப்படுத்துவதாகும். கிரேக்க வீனஸ் சிற்பம் இரண்டு கைகளும் உடைந்த நிலையில்தான் உள்ளது. சிமெண்டிலோ, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸிலோ அது ஒட்ட வைக்கப்படவில்லை. எத்தனை ஊர்களில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முந்திய சின்னச் சின்னக் கோவில்கள் சிதிலமடைந்து கழிப்பறைகளாகச் சீரழிந்து கிடக்கின்றன. இவ்வளவு சோகமான ஓர் நிலை, நமக்கு சரித்திர உணர்வும் இல்ல, கலை உணர்வும் இல்லை, பக்தி உணர்வும் அதன் உண்மை நிலையில் இல்லை என்பதற்கே சாட்சியங்கள்.

சமீபத்தில் கள்ளிக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததுமே, இது ஜான் ஆபிரஹாம் நடமாடிய மண் என்று எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜான் அபிரஹாம் மலையாளிகளுக்கு ஒரு icon. ஆராதிக்கப்படும் ஓர் ஆளுமை. மிகப்பெரிய புரட்சிகரக் கனவுகள் கொண்டவர். சினிமா தயாரிப்பையே ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியவர். ஆனால் அவர் படங்கள்தான் அவர் கனவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது போய்விட்டன. மிக இளம் வயதில் இறந்துவிட்டதும், ஓர் லட்சியக் கனவு கண்டு வாழ்ந்ததும் அவரை ஒரு icon ஆக்கியுள்ளன,

மலையாளிகளின் இதயங்களில் சாதனைகள் என்று சொல்ல ஏதும் அதிகம் இல்லை. இருப்பினும், இந்த மண்ணில் அவர் வாழ்ந்தவர் என்ற பெருமை, கர்வம், பெருமிதம் அவர்களுக்கு. ஜான் ஆபிரஹாமின் ஒரே ஒரு படத்துடன்தான் அவருடனான என் உறவு. வெகு குறுகிய கால உறவு. இருப்பினும் 40 வருடகாலமாக நான் தமிழில் தமிழனைப்பற்றி, தமிழ் வாழ்வு பற்றி அதன் பெருமைகளையும், க்ஷீணங்களையும் பற்றி எழுதி வந்திருக்கிறேன். 40 வருடகாலம் நான் தமிழில் எழுதியதற்கு என்னை மதிக்கும், என்னைத் தெரிந்து வைத்திருக்கும் தமிழர்களை விட, ஜான் ஆபிரஹாமுடன் ஒரு வருட காலம் கொண்ட உறவிற்கு என்னைத் தெரிந்துவைத்திருக்கும், மதிக்கும் மலையாளிகள் மிக மிக அதிகம். ஜானை விடப் பெரும் சாதனையாளர்களான ஒரு தி.ஜானகிராமனையோ, புதுமைப்பித்தனையோ நினைவுகூர்ந்து, இது ஜானகிராமன் வாழ்ந்த தெரு’ என்றோ, ‘இந்த வீட்டில்தான் புதுமைப்பித்தன் வசித்தார்’ என்றோ எந்தத் தமிழனும் பெருமையாகச் சொல்லிக்கொண்டதை நான் மயிலாப்பூரிலோ, கும்பகோணத்திலோ, திருவல்லிக்கேணியிலோ கேட்டதில்லை.

இவ்வளவுக்கும் ஜான் பிறந்த இடமல்ல கள்ளிக்கோட்டை. வைக்கம் முகமது பஷீரும் அங்கு பிறக்கவில்லை. அவருக்கும் அங்கு ஒரு நினைவாலயம் இருந்தது. எஸ்.கே. பொற்றக்காடுக்கும். எஸ்.கே. பொற்றக்காடின் நினைவு இல்லத்தில் அவர் சம்பந்தப்பட்ட அவர் பயன்படுத்திய அத்தனை பொருள்களும், அவர் கையெழுத்துப் பிரதிகள், டைப்ரைட்டர், பெற்ற விருதுகள், போட்டோக்கள், தினக்குறிப்புப் புத்தகங்கள் எல்லாம் இருந்தன.

எஸ்.கே. பொற்றக்காடைவிடப் பெரிய இலக்கிய ஆகிருதிகள் தமிழ்நாட்டில் இருந்தனர். அவர்களுக்கு ஞானபீடப் பரிசும் இல்லை. சமூகக் கௌரவமும் இல்லை. நாம் மதிப்பது இந்தத் தமிழ்ச் சமூகத்தைச் சுரண்டிச் சுரண்டி ஆபாசத்திற்குத் தள்ளும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும்தான். அகலமற்று நெருக்கடியான ஒரு முச்சந்தியில் பிரம்மாண்டமான, மார்பளவு சிலை ஒன்று எஸ்.கே. பொற்றக்காடினது. இந்தக் கடைத்தெருவைப் பற்றிப் பொற்றக்காடு எழுதி இந்தத் தெருவிற்கு அமரத்துவம் தந்துவிட்டார் என்று எனக்குச் சொல்லப்பட்டது.

என் மனம் நெகிழ்ந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததைச் சரித்திரமாக்கி அமரத்துவம் தருகிறீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தந்த பதில் என்ன தெரியுமா? என் தமிழர்களுக்கு நான் அதை அடிக்கோடிட்டு எழுத வேண்டும். உரத்து வீட்டுக்கூரை மேல் நின்று பறையறிவிக்க வேண்டும். ஏனெனில் இது தமிழர்களைப் பற்றியது. இப்போது நன் சொன்ன பிறகும் அவர்களுக்கு விளங்காதது. அவர் சொன்னார், ‘இது என்ன பெரிய விஷயம்? தமிழ்நாடு சென்றால் உங்கள் ஒவ்வொரு ஊரும் சரித்திரம் சொல்கிறதே!’

சட்டெனப் பொட்டில் அறைந்த மாதிரி விழும் உண்மை. இது மதுரை, காஞ்சி, மகாபலிபுரம் என்று மாத்திரம் இல்லை. ஒவ்வொரு ஊரும் சிறு சிறு குக்கிராமமும் மிக நீண்ட சரித்திரம் கொண்டது. அந்த சரித்திரத்தை மன்னர்கள் மட்டுமல்ல. நம் புலவர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாடி நிரந்தரத்துவம் கொடுத்துள்ளார்கள். அந்த நிரந்தரத்துவத்தின் இலக்கியப் பதிவுகளை நாம் பெரும்பகுதி இழந்துவிட்டோம். ஆனால் நிறைய சிற்ப, ஓவிய, கட்டடப் பதிவுகள் ஒவ்வொரு கிராமத்திலும் சிதைந்து கிடக்கின்றன. நம்மூர் முடுக்கு, பிள்ளையார் கோவில்கள் போல கேரளம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஒவ்வொரு பகவதி காவும் புனித ஸ்தலங்களாக உள்ளன. ஒன்றுகூட சிதைந்து, கேட்பாரற்றுக் கிடப்பதில்லை. காரணம், நமக்கு சரித்திரப் பிரக்ஞையோ, கலை உணர்வோ, சமூகப் பொறுப்புணர்வோ கூட கிடையாது. தலைவன் என்று சொல்லிக் கொள்பவன்கூட, தனக்கு சொத்து சேர்த்துக்கொள்கிறானே ஒழிய, தமிழ்நாட்டைப் பற்றிய கவலை அவனுக்குக் கிடையாது.

அன்று குடிசைகள், தெருக்கள் சுத்தமாகத்தான் இருந்தன. இன்று நகரங்கள் கூடக் குப்பைக் கூளங்களாகக் காட்சியளிக்கின்றன. பஸ் ஸ்டான்டுகளில் கழிவுநீர் துர்நாற்றம் பரவிக் கிடக்கிறது. எந்தப் பொது இடத்தின் சுவர்களுமோ, தனியான வீட்டுச் சுவருமோ சுத்தமாகக் காட்சி தருவதில்லை. தமிழ்நாடே வெகு வெகு ஆபாசமான சுவரொட்டிக் கலாச்சாரத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. இந்தச் சுவரொட்டிகள் நாட்டை ஒரு குப்பை மேடாக்கியுள்ளன. சாக்கடைகள் அன்றும்தான் இருந்தன. இன்று அவை பாலித்தீன் பைகளால் அடைபட்டு ஓட்டமற்று தேங்கி, சமயங்களில், சாலைகளில் வழிகின்றன. நம் நகரம் ஒவ்வொன்றையும், கிராமங்களையும், சிற்றூர்களையும் அசுத்தப்படுத்துவது சாக்கடைகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளது கூச்சல்கள் மாத்திரமல்ல, அவர்களது சுவரொட்டிகளும்தான், சினிமாக் கூச்சலும்தான். தமிழ்நாடே ஒரு பிரம்மாண்ட சாக்கடையாக, குப்பைத் தொட்டியாகத்தான் எனக்குக் காட்சி தருகிறது.

நான் சிறுவயதில் பார்த்த தமிழ்நாடு ஏழ்மையில் வாடிய தமிழ்நாடாயிருந்தாலும் அது அழகானது. சுத்தமானது. மனதுக்கும் கண்களுக்கும் ரம்மியமானது. ‘சென்னை – நூறு வருடங்களுக்கு முன்’ என்றொரு புத்தகம் சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்திருந்தது. அதில் ஒரு புகைப்படம். கூவம் நதியின் புகைப்படம். அதில் குளித்துக் கரையேறின ஒரு பிராமணர் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து சந்தியாவந்தனம் செய்கிறார். அன்றைய கூவம் அதுவாக இருந்தது. குளித்துக் கரையேறும் கூவம்.

கூவம் இன்று பெற்றுள்ள அலங்கோலத்தைத்தான், நமது நாடு, கிராமங்கள், சுவர்கள், தெருக்கள், நமது அரசியல், நமது கலாசாரத் தலைமைகள், நமது அரசியல் தலைமைகள் எல்லாம் அடைந்துள்ளன. வறுமை அல்ல அலங்கோலத்திற்குக் காரணம். அழகுணர்வு அற்றுவிட்டதான் காரணம். கூச்சலும், ஆபாசமும் அமைதியின் இடத்தைப் பறித்துக்கொண்டுள்ளன.

நமது அன்றைய வீடுகள், எளிய வீடுகளும் கூட, அழகானவை. அமைதியானவை. ஆரோக்கியமானவை. அவை இன்று அழிந்து வருகின்றன. நமது திண்ணைகளும், கூடங்களும், தாழ்வாரங்களும் ஆரோக்கியமாக, காற்றோட்டமாக மிதமான வெப்பத்திலும் நாம் வாழ உதவுகிறவை. தெருவிலிருந்து பார்த்தால் இடைகழி, தாழ்வாரம், பின்கட்டு எல்லாம் தாண்டி, கொல்லைப்புறக் கதவுக்கு அப்பால் நிற்கும் தோட்டமும் ஆட்களும் தெரியும். இக்காட்சியின் அடுக்கடுக்கான ஒளி, பரவியும் நிழல் தருவதும் மாறி மாறி வரும் காட்சி கவித்வமானது. பாரம்பரிய இக்கட்டட ஞானம் ஐ.ஐ.டி.யில் கற்றுத்தரப்படாத மரபு வழி வந்த ஞானம். ஆராக்கியத்திற்கும், வாழும் வசதிக்கும் ஏற்றதாக இருந்ததோடு அழகானதாகவும், எளிமைத் தோற்றத்திலும் கவித்வம் நிறைந்ததாகவும் இருந்தது. இதன் பதிவுகளை டி.எஸ்.நாகராஜனின் புகைப்படங்களில் காணலாம். ந.முத்துசாமியின் கதைகளில், ஜானகிரராமனின் கதைகளில் காணலாம். கிரிஷ் காஸரவல்லியின் படங்களில், சத்யஜித் ரேயின் படங்களில் அந்தந்தப் பிராந்தியத்தின் கிராமத்தின் வீடு நமக்களிக்கும் கவித்துவத்தைக் காணலாம். இக்கவிதையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. சத்யஜித் ரேயின் முத்திரையேயாகிப் போனவை இக்காட்சிகள். முற்றம், தெருவை நோக்கித் திறந்திருக்கும் முன்கதவின் நீள்சதுரச் சட்டம் தரும் தெருவின் பிரகாசம். திரும்பத் திரும்ப ரேயின் படங்களில் வரும் காட்சி நம் வாழ்வில் இரைந்து கிடந்த இக்காட்சி, நமது எந்தத் திரைப்படத்திலும் பதிவானதில்லை.

ஒரு ‘பாபா’ படத்திற்கு, ‘ஆளவந்தான்’ படத்திற்கு ஆகும் செலவில், செட்டிநாடு முழுவதும் உள்ள பாழடையும் வீடுகள் அனைத்தும் பாதுகாக்கப்படக்கூடும். ஆனால் நமது முனைப்புகள், மதிப்புகள் வேறு. இப்படங்களுக்குச் செலவழிக்கப்படும் பல பத்து கோடிகளில் நமக்குப் பெருமை அளிக்கும் இந்த வீடுகள் காப்பாற்றப்படுவது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. இன்று இந்த வீடுகளின் மரப்பகுதிகள் பெயர்க்கப்பட்டுக் கதவுகளும், உத்தரங்களும் விற்கப்படுகின்றன. வீடுகள் பாழடைகின்றன. நாசமாக்கப்படுகின்றன. யாரும் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்தியதாகத் தெரியவில்லை.

அவ்வளவாக சரித்திரம் நீளாத ஐரோப்பிய நாடுகளில் (உதாரணமாக ஜெர்மனி, இங்கிலாந்து போன்றவை) ஒரு நூற்றாண்டு இரு நூற்றாண்டுப் பழமையான வீடுகள், தெருக்கள்கூடப் பழமையின் சின்னமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நமக்கு ஆயிரம் வருஷக்கணக்கில் சரித்திரமும் பழமையும் உண்டு. சம்பந்தர் 1300 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த ஊர் இதோ என்று சீர்காழியைக் காட்ட முடியும். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை திருத்தலம் இதோ என்று திருப்பரங்குன்றத்தைக் காட்டமுடியும். இன்றும் அவை வாழும் ஊர்கள்.

யாரும் அதிகம் அறியாத என் சொந்தக் கிராமம் உடையாளூரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் உண்டு. அதன் கல்வெட்டுகளின் ஒரு படி அச்சிடப்பட்டு கண்ணாடிச் சட்டமிடப்பட்டிருக்கும். 47,48க்குப் பிறகு போன வருடம் போனபோது, அது எங்கோ தொலைக்கப்பட்டுவிட்டது. அதுபற்றிக் கேட்டபோது அர்ச்சகருக்கு அது பற்றியே ஏதும் தெரியாது எனத் தெரிந்தது.

(21.6.2002 அன்று எழுதியது.)

சந்தியா பதிப்பகத்தின் வெளியீடான ‘கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ என்ற நூலில் இருந்த நீண்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி

வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி 
– சொல்வனம் ரவிஷங்கர்

அறுபதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்தில் உலவிய ஒரு விமர்சகரும், எழுத்தாளருமான வெங்கட் சாமிநாதனுடன் எனக்கு நேரடிப் பழக்கம் குறைவுதான். கடிதங்கள் மூலம், அவரோடு பல வருடங்கள் பழகிய அனுபவம் உண்டு.

அவர் எழுதியதில் பகுதியைத்தான் நான் படித்திருக்கிறேன். நான் விட்டிருக்கிறவற்றில் அவர் அடைந்த வளர்ச்சி பரிணாம வளர்ச்சி என்பது பிற்காலத்து எழுத்தில் தெரிந்தது. இக்கட்டுரை,அவரின் அளிப்பைப் புரிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவரை வேறெந்தச் சமகால ஆளுமைகளுடனும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை என்பது குறிக்கப்பட வேண்டியது.

***

முதல் சந்திப்பிலிருந்து, முதல் கடிதத்திலிருந்து புலப்பட்ட அவருடைய பல குணங்களும், தேர்வுகளும், என் குணங்கள், தேர்வுகளிலிருந்து நிறைய விலகியவை. இந்த இடைவெளி துவக்கத்திலிருந்தே அவரைத் தள்ளி நின்று நோக்கும் நிலைக்கு என்னைச் செலுத்தி இருந்தது. அதே நேரம் எதிரிடையான நிலை இல்லை என்பதால் அகன்ற இடைவெளியைக் கடந்து பல கலை இலக்கியத் தேர்வுகள் மூலம் ஓரளவு இணைப்பும் சாத்தியமாகி இருந்தது.

தனிமனிதர் தேர்ந்தெடுக்கும் நிலைப்பாடுகளுக்கு வாழ்வின் தூல நிலைகள் ஓரளவு காரணமாக இருக்கும் என்று கருதுபவன் நான். தமிழல்லாத அயல் பண்பாடுகளில் பல வருடம் வாழ நேர்ந்தபோது தன்னடையாளத்தின் பல கூறுகளில் எவை உயிரோட்டம் உள்ளவை, எவை இரண்டாம், மூன்றாம் பட்சம் என்பது புரியத் துவங்கியது. இதனால், இந்தியத்தை மதிக்கத் துவங்கி உள்ளவனாக நான் ஆகி இருந்தாலும், பிற இந்திய மொழிப் பண்பாடுகளில் வெகு காலம் வாழ்ந்திருக்கிற அவருடைய இந்தியம் ஒப்பீட்டில் வலுவானது. இந்த வேறுபாட்டுக்குப் பல காரணங்கள் உண்டு. வளர்ந்தவராக வாழ்வைத் துவங்குகையில் நாம் பெறும் மதிப்பீடுகளில் நம்மிடம் சாரமாகத் தங்கியவையும், பின் தொடர்ந்து நாம் சேமிக்கும் பல அனுபவங்களின் படிப்பினைகளும் வேறுபாடுகளின் தோற்றுவாய்.

இப்படித் துவக்கப் புள்ளியில் விலகி இருந்த நான், பல பத்தாண்டுகளின் உலக அனுபவங்களாலும், வேறு சமூகங்களின் படிப்பினைகளாலும் நகர்ந்து, அவர் ஏற்கெனவே இருந்த பல புள்ளிகளில் வந்து சேர்ந்தேன்.[1] இப்போது, அவருடைய கருத்துலகின் தர்க்க நியாயம் ஓர் அளவாவது புரிந்தது. அதை அவரும் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் 2004க்குப் பிறகு அவரை நான் சந்தித்தபோது எங்களிடம் ஓரளவு நட்புணர்வு தோன்றி இருந்தது.

திரும்பிச் சந்தித்தபோதும், அவர் குறுக்கு விசாரணைக் கேள்விகளை என்பால் வீசாமல் இல்லை. ஆனால் இப்போது அவற்றை நேரடியாக எதிர்கொள்ள முடிந்தது. கூர்மையான சொற்கள், சுருக்கமான விளக்கங்களால் பேசுகிற அவருக்கு நெடிய, வார்த்தைப் பெருக்கு கொண்ட என் மசமசப்பான விளக்கங்கள் அத்தனை ருசியாக இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் கருத்துகளில், சில முடிவுகளில் அவ்வப்போது ஒற்றுமைகள் தோன்றின என்பது என்னளவில் விந்தை.

***

என் அனுபவத்தில், அவர் வயது வித்தியாசம் பாராமல் பழகுபவர். நம்மிடம் அவருக்கு ஏதும் குறை இருந்தால் நேராகக் கேட்டுவிடும் பழக்கமும், துணிவும் உள்ளவர். பாராட்டுதல்களும் அப்படியே, உடனடியாகக் கிட்டும். நாசூக்குப் பார்த்துக் கொண்டிராமல், கருத்து வேறுபாடுகளைப் பேசித் தெரிந்து கொள்வது நல்லது என்ற அணுகல் அவருடையது. இது எல்லாருக்கும் பொருந்தக் கூடிய அணுகல் இல்லை.

ஒருவரின் கருத்துத் தள நிலைப்பாடுகள் அவருடைய தனி நபர் வாழ்விலும் செயல்பட வேண்டிய அவசியத்தை, அப்படி ஓர் ஒருமையை வலியுறுத்துபவர் வெ.சா. இந்திய வாழ்வின் ஏகப்பட்ட அழுத்தங்கள், இல்லாமைகளால் தனிநபர் நடத்தையில் குறைபாடுகள் , அவ்வப்போது இடறல்கள், சறுக்கல்கள் நிகழும் என்பது அவருக்குத் தெரியும். அந்தச் சறுக்கல்களை நேராக ஒத்துக்கொண்டு பொறுப்பேற்பது தார்மிக நடத்தை என்பதே அவர் நிலை. எதிரிடையான நடத்தையை சகஜமாகவே கொண்டவர்கள், உன்னத அற நிலைகளை உலகுக்கு அறிவுறுத்துவது அவருக்கு ஏற்கவொண்ணாதது. இதை அவர் பகிரங்கமாகச்சொன்னார் என்பது சூழலால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தமிழ் எழுத்தாளர்களில் பலரும் நேரடியாகத் தம் கருத்துகளை எடுத்து முன்வைத்து, மற்றவரிடமிருந்தும் அப்படியே கருத்துகளைப் பெற முயல்பவர்கள் அல்ல. அதுவும் நேருக்கு நேர் வேறுபாடுகளை முன்வைத்து எதிர்ப்புத் தெரிவிக்கும் பழக்கம் அனேகரிடம் கிடையாது. எனக்கும் இப்படி எதிர் நிலைகளை முன்வைத்து, கறாராகக் கேள்விகள் கேட்டு வறுத்தெடுப்பது முடியாத செயல். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நான் பார்ப்பது, கருத்துத் தள நிலைப்பாடுகளுக்கும், சொந்த வாழ்வில் நடத்தைகளுக்கும் தொடர்பறுந்த நிலைதான். இதை அறப்பிறழ்வு என்று பார்க்க முடியும். ஆனால் இதோடு போருக்குப் போக ஒரு வகைத் தீவிரம் தேவை. அந்தத் தீவிரத்தைத் தன் ஐம்பதாண்டு இயக்கத்தில் தொடர்ந்து காட்டி வந்த விதத்தில் எனக்கு வெங்கட் சாமிநாதன் புதுமையானவராகத் தெரிந்தார், ஆனால் அதனாலேயே ஓரளவு பழமையானவரும்கூட.

***

எனக்கு முந்தைய தலைமுறையினரில்,விரி-குடும்ப உறவினர்களில் பலர், இப்படி எதையும் முகத்துக்கு நேராகக் கேட்கும் பழக்கமுள்ளவர்கள் என்பது என் அனுபவம். ஒப்பீட்டில் என் தலைமுறையினரிடையே, நேரடியாக வேறுபாடுகளின் வேர்கள் என்ன என்பதைக் கேட்டறிய முயல்வோர் குறைவு என்பது என் அனுபவம். இதைப் பொதுமைப்படுத்தலாமா என்பது குறித்து எனக்குத் தயக்கம் இருக்கிறது. ஆனால் வேறெப்படியும் மேலே செல்லப் பாதை இல்லை.

இதற்குக் காரணம் உண்டா என்று யோசித்தால் முந்தைய தலைமுறையினர், பேச்சு வழியே உருவமைக்கப்பட்டு, அப்படியே பெருமளவும் செயல்பட்ட சமூகத்தில் வாழப் பயின்றவர்கள். இளம் வயதிலிருந்தே உரையாடல்கள் வழியே சமூகத்தில் பொருத்தப்படுபவர்கள், அதன் வழியே பற்பல வேறுபாடுகளையும் தீர்த்துக் கொள்ளமுயல்வது சகஜம். அது அவர்களைப் பொருத்து சாதாரண நிகழ்வு.

அவருடைய தலைமுறையிலிருந்து வித்தியாசப்படும் வகையில் என் தலைமுறையினரில் நிறையப் பேர் படிப்பு மூலம், அதுவும் மௌன வாசிப்பு மூலம் சமூக மதிப்பீடுகளை அறிந்து கொள்வதிலும், அவற்றுக்கு ஏற்ப நடப்பதிலும் அதிகம் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். எழுத்து, புத்தகம், வாசிப்பு என அச்சுப் பிரதிகளின் மூலமே அதிகளவும் சமூக உறுப்பினராக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். குடும்பங்களிலும், சிறு குழுக்களிலும் உரையாடல் என்பதை எதையும் அறியச் சிறந்த வழியாக நோக்காமல், ஊடகங்களின் வழிக் கற்பதை நாடிப் போகக் காரணம் இதுவாக இருக்கலாம்.

கடந்த 60 ஆண்டுகளில் குறைந்தது இரண்டு தலைமுறைகளாவது இந்த நெடிய மௌனத்தில் பயின்றவர்கள். அதற்கடுத்த தலைமுறைகளோ வாசிப்பை இழந்து, பிம்பங்களின், இசையின், இன்னும் பற்பல ஓசைகளின் உலகில் எதையும் கற்பவர்கள். உரையாடலோடு, எழுதுவதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். தொலைபேசிகளில் பேசுவதைக் கூடக் குறைத்துக் கொண்டு சுருக்கக் கடிதங்களில், சங்கேதங்கள் வழி கருத்துப் பரிமாற்றத்தில் சமூக வயப்படுகிறார்கள். அபிப்பிராயப் பரிமாற்றத்துக்கு ஒற்றைச் சொல் விவரணையே போதுமானதாகக் கருதும் பெரும் திரளே கூட உருவாகி இருக்கிறது. இந்த மாறுதல்களால் இந்தியாவிலும், தமிழிலும் கலை வெளிப்பாடுகள் என்ன வடிவ, உள்ளடக்க மாறுதல்களைப் பெறும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

***

வெங்கட் சாமிநாதன் தன் வாழ்வுப் பாதை பற்றி எழுதிய கட்டுரைகள் பலவற்றை ‘சொல்வனம்’ இதழில் வெளியிட்டிருக்கிறோம், அவற்றில் வெங்கட் சாமிநாதனின் சிறு பிராயத்திலிருந்து அவருடைய 60களின் இறுதி வரையான வாழ்வுப் பாதை தெரிந்தது. 1960களின் இறுதிப் பாதியில், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தெளிவாகவே பாதை பிரிந்து சென்ற ஒரு தலைமுறையினருக்கும், முந்தைய தலைமுறைகளுக்கும் இடையே அவர் ஒரு பாலமாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது. சாதனங்கள் பெருகத் துவங்கியதால், மரபு வழிநடத்தும் வாழ்விலிருந்து தமிழ்ச் சமூகம் அகலத் துவங்கிய காலத்தில் தன் சொந்த வாழ்வைத் துவங்கியவருக்கு முந்தைய சமூகத்தில்நல்ல பயிற்சியும் இருந்தது. அடுத்த நகர்வுக்கான பல முன் ஆயத்தங்களிலும் அவரே பங்கெடுத்திருக்கிறார் என்பதால் அடுத்தடுத்த தலைமுறைகளோடு அவரால் இயல்பாக உரையாட முடிந்திருக்கிறது.

சிற்றூரில் துவங்கி, மாநகர வாழ்வில் பல்லாண்டுகள் ஊறி, பன்மொழிப் பண்பாட்டில் சகஜமாக உலவிய அனுபவம் கொண்ட அவருக்கு, தமிழ் இலக்கியத்தினர் இந்தியத்தை அறவே ஒதுக்கி, அவர்களுக்குச் சிறிதும் நேரடிப் பரிச்சயமோ, மொழித் தேர்ச்சியோ இல்லாத, யூரோப்பிய, லத்தீன் அமெரிக்க மதிப்பீடுகள், அரசியல் நிலைப்பாடுகள் மூலம் தம் சொந்த அனுபவங்களை எடை போட முயன்றனர் என்பது கேலிக் கூத்தாகத் தெரிந்தது. இது, அடுத்த தலைமுறைகளில் சிலரிடமிருந்து அவரைவிலக்கி நிறுத்தியது என்றாலும், தமக்குக் கிட்டிய கடப்பு நிலைக்கு அவர் ஒரு காரணம் என்பதையும் பல படைப்பாளிகள் அறிந்திருந்தனர். தொடர்ந்து இளைஞர்கள் அவரைத் தேடிச் சென்று உரையாடியதை நாம் பல பத்தாண்டுகளிலும் பார்க்கலாம்.

அவர் உரையாடுவதில் வல்லவர் என்பதோடு மௌனத்தையும் கனமாக, அர்த்தத்துடன் பயன்படுத்தக் கூடியவர். எழுத்து வடிவில் அவர் கொடுத்தவற்றூடே உரையாடல் வழக்கம் முக்கியமாக இருப்பதாகவே நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நாம் இன்று அவருடைய எழுத்துகளை அனேகமாக மௌன வாசிப்பு வழியேதான் பெறுகிறோம். அது அவருடைய ‘தானே ஒரு பாலமாகும்’ முயற்சியில் கிட்டுவது.

உரையாடல் என்பதன் சமூக அவசியம் குறையத் துவங்கியபோது,இலக்கியத்திலும் பேச்சுமரபு படிப்படியாக ஈர்ப்பு இழந்துபோனதை, கரிச்சுரங்கத்துக்குள் கொல்லும் வாயுவை இனம் காட்ட, முன்னதாகக் கொண்டு போகப்படும் கூண்டுப் பறவையை ஒத்த கவிதைப்படைப்பு வெளிக்காட்டி விட்டிருந்தது. ஒலியொழுங்கிற்குத்தலைமை கொடுக்கும் வழக்கத்திலிருந்து கவிதை நகர்ந்து, புதுக்கவிதை எனப்படும் மாற்று வழியால், மௌன வாசிப்புக்கு வாசகர்களைக் கொணர்ந்ததற்குக் காரணம், அப்படி ஒரு வாழ்முறை மனிதருக்குப் பரந்த சமுதாயத்தில் நிறைய அமைந்ததுதான்.

புதுக்கவிதையை ஆதரித்த வெங்கட் சாமிநாதனுக்கு இது முதலிலேயே புலப்பட்ட மாறுதல். அவர் விரும்பிய வகைச் சினிமாவுமே, ஏற்கெனவே நாடகத்தை விலக்கிய, பேச்சைக் குறைத்த, அனேகமாக மௌனமான, காட்சி வழியேகதை சொல்வதை முன்னிலைப்படுத்திய சினிமாதான். (அவருடைய அபிமான இயக்குநர் பிரெஸ்ஸோன்.)

தமிழில்,பெருமளவும் பேச்சால் கதையை நகர்த்திய, அன்று பிரபலமாக இருந்த நாடகீயச் சினிமாவை ஒதுக்க அவருடைய காரணம் அதுவே. அவர் விரும்பிய நாடகமும் உடல் இயக்கத்தை மைய வலுவாகக் கொண்டு கதை சொல்லும் கூத்து வகை நாடகம். கூத்தில் இசை, நடனம், கதை சொல்லல், சிறிதளவு வசனம் ஆகியன உண்டு என்றாலும், பாவம் சார்ந்த நடனம் மையம் பெறும். அவர் ஒதுக்கிய அன்றைய தமிழ் நாடகங்கள் வசன ஒப்பித்தலும், ஸ்தம்பித்த உடல் பாவங்களும் கொண்ட ஒற்றைத் தடப் பாதைகளே.

மரபை நீட்டிப்பதற்காக மட்டுமே கூத்து என்பதை ஒரு நல்ல வேர்மூலமாக அவர் கருதவில்லை. விமர்சனச் சிந்தனை அற்ற மரபு வழி ஒழுகலைக் கூத்து எளிதாகவே அடியறுக்கிறது, அதே நேரம் மரபை அது அழிக்கவும் இல்லை, அது சுவடிகளைத் தாண்டி, அன்றாட அனுபவ உலகின் படிப்பினைகளை முதன்மைப்படுத்தி, மரபைப் புதுப்பிக்க வழி கோலுகிறது. அதன் இந்த இருமுகத் தன்மை அவருக்கு ஏற்ற அணுகல்.

கூத்து என்ற நாடக மரபு, வேர்ச்சமூகங்களின் தன்னியல்புகளை வெளிக்கொணரும் அதே நேரம்,ஏட்டுப் படிப்பைப் பரவலாகப் பயன்படுத்தாத சமூகங்கள், நெடும் பாரம்பரியமான இந்தியக் கூட்டுச் சமுதாயத்தின் பன்முகக் கவனிப்புகளையும், மதிப்பீடுகளையும் இழக்காமல் காத்து, அவற்றைத் தலைமுறைகளிடையே கைமாற்றிக் கொடுக்க உதவியதை அவர் கவனித்தார். அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்வனுபவங்களும் அரங்கேறி, சமூகம் தன் வெளிப்பாட்டைப் பெறவும், விமர்சனத்துக்கு உரியனவற்றை விலக்கத் தேவையான தர்க்கத்தை உண்டாக்கியும், சமூகங்கள் பரிணாம வளர்ச்சி பெற இது இடம் கொடுத்தது என்று களத்தகவல்களிலிருந்தும் நேரடி அனுபவத்திலிருந்தும் அவருக்குப் புரிந்திருந்தது.

தகவலாகவும், கேளிக்கையாகவும் நிகழ்த்த வந்த வேறு வகை ஊடகங்கள், தனி வாழ்விலும் ஊடுருவி, சமூக உறவுகளையும் பாதிக்குமளவு வளர்ந்து, ஒரு கட்டத்தில் சமூக இணைப்பு அமைப்புகளைத் தாமே கூட உருவாக்குமளவு ஆகிருதி பெறத் துவங்கிய கட்டத்தில், தனி நபர் உரையாடல்கள் அனேகமாகப் பொது அரங்கில் நடந்தேறும் ஆரவார நிகழ்வுகள் பற்றியனவாகவே மாறுகின்றன.

அங்கு ஒரு புரட்டல் நேர்வதை நாம் பலரும் கவனிக்கிறோம், ஆனால் நிஜமாகப் புரிந்து கொள்வதில்லை.

தனிநபர் உரையாடல்களால் உருவாகும் சமூக நிகழ்வுகள், பழக்கங்கள், தேர்வுகள் ஆகியனவற்றைப் பற்றியதாகப் பொது அரங்க நிகழ்வுகள் இருப்பது சமூகத்துக்குத் தன் முகத் தரிசன வாய்ப்பாக இருக்கலாம். மாறாக, சமூக உரையாடல்கள் பொது அரங்க நிகழ்வுகளையே தமக்கு வழிகாட்டியாகக் கருதத் துவங்குகையில் தனி மனிதர், தம் ஆளுமையை இழக்கிறார்கள். இந்த ஊடகங்கள் நவீன மயமாதலின் கருவிகள். உறுப்பினராக இயங்கும் மனிதரை உருவிழந்த உதிரிகளாக்குவது இவற்றின் ‘சாதனை’.

இப்படித்தான் நவீனத்தின் தாக்கம், அன்றாடப் பரிமாற்றங்கள் வழியே வாழ்வனுபவங்களின் தொகுப்பும், மாறுபட்ட பார்வையுள்ளவர்களின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பும் ஆங்காங்கே உள்ள மனிதரிடையே அவர் தேவைக்கேற்ற வழிகளில் நடப்பதை நிறுத்துகிறது. தம் வாழ்வின் தேவைகளைத் தாமே எடை போட்டு முடிவுக்கு வரும் தன்னாளுமையை இழக்கும் மனிதர், தொடர்ந்து திரளில் பொருந்தி, அனேக நேரம் செயலற்ற பார்வையாளராகி விடுகிறார். திரளில் உறுப்பினர்களின் பாரம்பரியத்தை வேரறுப்பது ஒப்பீட்டில் எளிது.

நவீனம் என்றால், முந்தையதை அழிப்பதாகவும், பாரம்பரியத்தோடு சமூகத்துக்கு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் அறுப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும், அதோடு, பழமை என்பது மாறுதலை ஏற்காமல், புதிய எதையும் அழிக்கத் துடிப்பதுதான் என்றும், கடந்த காலத்தின் இயல்பான ஓட்டத்தைப் பொய்யாகச் சித்திரிப்பதன் மூலம் அந்த அழிப்பை நியாயப்படுத்தவும் வேண்டும் என்பதும் மேற்கத்திய அணுகல்.

தம் விருப்பத்துக்குச் சமூகம் இணங்காவிடில் சமூகத்தையே கொளுத்தி, வேரோடு அழிக்கலாம் என்ற அணுகலே முரணைத் தீர்க்கும் வழி என்பது செமிதிய/ யூரோப்பியக் கருத்தியல். 60களில், இவற்றை இறக்குமதி செய்வதுதான் தரமான கல்வி என்ற கற்பிதம் தமிழ்நாட்டில் வேரூன்றத் துவங்கியது. அன்றாட வாழ்வில் இத்தனை ஆண்டுப் பிரசாரங்களுக்குப் பிறகும் செல்வாக்குப் பெறாத இது, கருத்தியல் உலகில் கோலோச்சத் துவங்கி 60-70 வருடங்களாவது ஆகி இருக்கும்.

இப்படி ஊறி இருக்கும் ஒரு கருத்தியலை, வெ.சா. துவக்கத்திலிருந்து எதிர்த்திருக்கிறார். முரண் என்பது இந்தியப் பாரம்பரியத்தின் கண்ணோட்டத்தில் சகஜமாக நேர்வது, மாற்றம் வேண்டும் நோக்கு. இதை மாற்றுக்கான அவசியத்தை வலியுறுத்தல் என்றும், உரையாடல் மூலமும், இணை இயக்கங்கள் மூலமும் பாதை மாறிப் பயணிப்பதைக் கோரும் முயற்சி என்றும் நாம் அறிய முடியும். வேரோடு பொசுக்குவது என்பது தேவை இல்லாத இந்த நோக்குதான் வெங்கட் சாமிநாதனின் மொத்த அணுகலையும் வழி நடத்தியது என்று நான் கருதுகிறேன்.

***

வெங்கட் சாமிநாதனுக்கு அரசியலை இலக்கியத்தில் பேசுவது என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் இலக்கியத்தை அரசியலாக்குவது பிரச்சினை. இலக்கியம் என்பதில் மட்டுமல்ல, இதர கலைகளிலும் அப்படியே அவர் பார்வை இருந்தது. அவருடைய பார்வையில், மரபு என்பதோ, பாரம்பரியம் என்பதோ, பண்பாடு என்பதோ அழித்து ஒழித்துப் பின் மறுபடி புதிதாக களிமண்ணைக் குழைத்து அச்சு வார்த்துக் கட்டப்பட வேண்டியவை அல்ல. சக்கரத்தை மறுபடி மறுபடி கண்டுபிடிப்பதைப் போல ஓர் அறிவிலித்தனம் ஏதும் இல்லை. இதை அவர் பல பத்தாண்டுகள் சொன்னார் என்பது என் புரிதல். கேட்கத் தயாரில்லாதவர்கள் கொணர்ந்த பண்பாடு ‘பாலை’யாக இருந்தது என்பது அவர் வருணனை.

அவர் ஒரு பல்கலைவளாகத்து அறிவாளர் அல்ல. எந்தத் துறையிலும் முறையாகப் பயின்று அந்தக் கடிவாளங்களின்படிச் செலுத்தப்படாதவர் என்பதால், சுயமாகக் கற்றவர்களுக்கே உரிய சிதறலான அணுகலோடு இந்தப் பிரச்சினையை அணுகி இருக்கிறார். அதனாலோ, அல்லது தெரிந்தே தான் வகுத்துக்கொண்ட ஒரு வழிமுறையாலோ, வெங்கட் சாமிநாதனின் விமர்சன இயக்கத்துக்கு ஒற்றை முகம் இல்லை. ஒற்றைக் கருத்தியல் இல்லை. கோட்பாட்டு வழியே சென்று கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அவர் பார்க்கவும் இல்லை. ஆக, இந்த அணுகலில் மேலாளர்கள் கிடையாது. உள்வட்டம் பற்றிப் பேசியவர் அதை உருவாக்க முயலாதது , இந்த வட்டம் தன்னியல்பாக எழுந்து, மாறி வரும் என்று அவர் கருதியதை நமக்குச் சுட்டுகிறது.

இந்த எதிர்பார்ப்பு நம்மை நாமே மதிக்கக் கோருவது. நம்மிடம் போதுமான அளவு திறனும் ஆழமும் உண்டு என்பதை அடிப்படை அறிதலாகக் கொண்டு இயங்கச் சொல்வது. அண்மைப் பண்பாடுகளோடு ஆழ்ந்த பரிச்சயம் பெற வேண்டும் என்று கேட்பது. திரளாக ஒடிந்து அமராமல், ஊக்கமுள்ள சமூக உறுப்பினராக, படைப்புத் திறனோடு வாழ நம்மைக் கோருவது. உன்னதம் யாருக்கும் சாத்தியம், அதற்கான உழைப்பும், பிடிவாதமும், சீர்மையும் தேவை என்றும் சலியாமல் பறை சாற்றுவது.

இதை ஒரு குறையாக, இன்று அரசியல்தான் இலக்கியம் என்று நினைத்து இயங்கும் கூட்டம் தொடர்ந்து முன்வைக்கிறது. அவர்கள் வெங்கட் சாமிநாதனின் இயக்கத்தையோ, அதன் உள்ளீட்டையோ புரிந்துகொள்ள முடியாததற்குக் காரணமே அவர்கள் அணிந்திருக்கும் அந்த ஒற்றைக் கோட்பாட்டுக் கண்பட்டிதான். அது முற்றிலும் யூரோப்பியமும், செமிதியமும் விட்டுச் சென்ற கண்பட்டி.இவர்களுக்குப் பலபண்பாட்டியத்தைத் தன்னியல்பாகக் கொண்டு இயங்கிய வெங்கட் சாமிநாதன் போன்றாரின் தன்மையோ, நன்மையோ புலப்பட்டிருந்தால்தான் நான் வியந்திருப்பேன்.

[1] நேற்று இஸ்ரேலில் வசிப்பவரோடு நடந்த ஓர் உரையாடல் பற்றிக் கேட்டேன். மறுபுறம் இருந்த நபர், ஒரு யூதர். இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்குச் சில பத்தாண்டுகள் முன்னர் குடி பெயர்ந்தவராம், ‘இந்தியாவில் நான் யூதன், இஸ்ரேலில் நான் ஒரு இந்தியன்’ என்று சொல்லிச் சிரித்தாராம். அவரிடம் பேசியவர் தெரிவித்தார்.

-oOo-

Posted on Leave a comment

வலம் – அக்டோபர் 2016 இதழ் – கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்

கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்

எத்தனையோ வருடங்களாகிவிட்டன. உலகத் திரைப்பட விழா ஒன்றில் பார்த்த இத்தாலியப் படம் ‘லெப்பர்ட்’ (புலி). லாம்ப்படூஸோ என்ற இத்தாலியரின் நாவலை ஆதரித்த திரைப்படம். ஒரு ராஜவம்சம் அழிகிறது. அதற்கு எதிரான, அதை அழிப்பதற்கான நியாயமான காரணங்கள் எத்தனையோ இருக்கலாம். படத்தின் முடிவில் ராஜவம்சம் அழிகிறது. புரட்சியாளர்களின் கோலாகலக் கொண்டாட்டத்தோடு படம் முடிகின்றது. அந்த முடிவு எவ்வளவுதான் சரித்திர நியாயங்கள் கொண்டிருந்தாலும், மாற்றங்கள் எவ்வளவுதான் தவிர்க்க இயலாதது என்றாலும், புரட்சியாளர்களின் கோலாகலம், அநாகரிகமாகவும், கண்ணியமற்றதாகவும், ஓர் அராஜகத்தின் வெளிப்பாடாகவும் (இந்தப் புரட்சியை, அராஜகத்தை எதிர்த்த புரட்சி என்பது ஒரு விடம்பனம்) இருந்தது. காரணம், முந்தைய சமுதாயம் சார்ந்தது எதுவாயினும் – அது கலைப் பொருளோ, கலை உணர்வோ – அது வேண்டப்படாததே, அழிக்கப்பட வேண்டியதே என்பதே புரட்சியாளரின் எண்ணமாக இருந்து வருகிறது.

இது வரலாறு முழுவதும் திரும்பத் திரும்ப நிகழும் காட்சி. வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் அதே வரலாற்று நிகழ்வைத் திரும்பவும் நிகழ்த்திக் காட்டும் சாபத்திற்காளாவார்கள் என்ற ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. இதை அறிந்தவர்களும் திரும்பத் திரும்ப இதையே செய்துவருவது ஒரு விடம்பனம். எல்லாப் புரட்சியாளர்களும் தரும் ஒரு கொள்கை விளக்கம் உண்டு. மதிப்பீடுகளின் மாற்றம் என்பார்கள். அம்மதிப்பீடுகளைத் தாம் நிராகரிப்பதாகவும் சொல்வார்கள். ஆனால் கலைப்பொருட்களும் கலை உணர்வுகளும் இம்மதிப்பீடுகளையெல்லாம் மீறி எழுபவை.

ஒரு சமூக நிலையை, கட்டுமானத்தை, எதிர்த்தெழும் புரட்சியாளர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் செயலாற்றுபவர்களாகவும், கலை உணர்வு இல்லாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அத்தோடு வேறு எவ்விதச் சிந்தனையையும் அனுமதிக்காதவர்களாக, தம் பார்வைக்கு மீறியவற்றைச் சகித்துக் கொள்ளாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

உலகிலேயே அதற்கு இணையான ஒரு கலைச் சின்னம் இல்லை எனப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான, பாமியான் புத்தர் சிலையைக் குண்டு வைத்துத் தகர்த்த தாலிபான் தீவிரவாதிகளின் காரணம் அத்தகைய ஒன்று. சங்கீதம், ஓவியம், நாடகம், சிற்பம் என எந்தக் கலையின் வெளிப்பாடும், அது அம்மதத்தீவிரவாதிகளின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டது. எண்ணற்ற கிரேக்க, பௌத்த கலைப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட ஆப்கன் அருங்காட்சியகங்கள் சின்னாபின்னப் படுத்தப்பட்டன. அவை தம் ஆட்சி எல்லையிலிருந்து அகற்றப்பட்டால் போதும் என்ற அளவில்கூட அவர்கள் பகைமை கட்டுப்பட்டதல்ல. பாமியன் புத்தகரைப் பாதுகாப்பாகத் தம் நாட்டிற்கு தம் செலவில் எடுத்துச் செல்ல அனுமதி கோரிய ஸ்ரீலங்காவின் கோரிக்கை மறுக்கப்பட்டு, அச்சிலைகள் தகர்க்கப்பட்டன.

இத்தீவிரம் சில இடங்களில் சில காலங்களில் அதிக காலம் நீடிப்பதில்லை. சீனப் புரட்சியின்போதும் பின் அது தீவிரமடைந்து, கலாசாரமே அல்லாத ‘கலாச்சாரப் புரட்சி’ என்று பெயரிடப்பட்ட அராஜகம் தலைவிரித்தாடிய போதும், அநேக சரித்திரச் சின்னங்கள், புராதனக் கட்டடங்கள் அழிக்கப்பட்டன. இவை அத்தனையும் கவிஞர் என்று சொல்லப்பட்ட மாவோவின் வழிகாட்டுதலில், அவரது ஆணைப்படி நடந்தன. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகப் போகிறது. அச்சின்னங்களை, கட்டடங்களை மீண்டும் பழைய வடிவில் புனரமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. கலைப்பொருட்கள், கலை உணர்வு மாறிவரும் சமூக மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவை என்பது மாவோ என்ற கவிஞருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவருக்குப் பின் வந்த வெறும் கட்சிப் பிரமுகர்களுக்கு, தலைவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பாமியான் புத்தரைத் திரும்ப உருவாக்குவது எப்படி? ஆப்கன் அருங்காட்சியகத்திலிருந்த கிரேக்க, பௌத்த கலைப் பொருட்களைத் திரும்பப் பெறுவது எப்படி?

இம்மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடும் மனதில் எழும் பகைமை உணர்வு, பொறாமையையும் தன்னுள் ஒரு தூண்டுணர்வாகக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆப்கன் பாலைவனத்தில் விஸ்தாரத்தில் இக்கலைப் பொருட்களையும் சின்னங்களையும் அழித்துவிட்டால், நிகழ்ந்த சரித்திரத்தை அழித்து விட்டதான வெற்றிக் களிப்பும் தோன்றும்.

சில வருஷங்களுக்கு முன்பு, நான் டெல்லியில் இருந்த காலத்தில் சிற்சில இடைப்பட்ட காலங்களில் பாகிஸ்தான் தொலைக்காட்சியைப் பார்க்க முடிந்தது. பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை அது தடைப்படுத்தப்பட்டது. அப்போது பார்க்க இயன்ற காலங்களில், மதப்பிரச்சாரம் பற்றியோ, குர் ஆன் பாடங்கள் பற்றியோ வரும் பகுதிகளில், இஸ்லாம் தோற்றம், முகம்மது நபியின் தோற்றம் அல்லது குர் ஆனின் தோற்றம் பற்றிச் சொல்லும்போது, அதற்கு முன் உலகம் இருள் சூழ்ந்திருந்ததாகவும் முகம்மது நபியின் வாயிலாக, குர் ஆன் தோற்றத்தோடுதான் உலகில் ஒளியே தோன்றியதாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும். கி.பி. 570க்கு முந்திய உலகமே இருள் சூழ்ந்த உலகம்தான் அவர்களுக்கு.

இந்த உணர்வுத் தீவிரம்தான் பாமியான் புத்தரைக் குண்டு வெடித்து அழிக்கச் செய்திருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த சிற்பங்களிலேயே புத்தரின் உருவம்தான் உன்னதமான சிகரப் படைப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சில புத்த வடிவங்களைப்போல அழகும் சாந்தமும் நிறைந்த, இவற்றுக்கு இணையாகச் சிற்ப வடிவங்கள் இருக்கக்கூடுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும். சிலர் மோனலிஸா புன்னகையைப் பற்றிச் சொல்லி மாய்ந்து போவார்கள்.

அதுபோன்ற ஒரு மாய, புதிர்த்தன்மை கொண்ட தெய்வீகப் புன்னகை புத்தர் வடிவங்கள் பலவற்றின் இதழ்களில் தவழும். சாதாரணமாக, இயல்பான சூரிய ஒளியில் பார்க்கும்போதே. சிறந்த தேர்ச்சி பெற்ற ஒளி அமைப்பாளனின் ஒளி வண்ண அமைப்பில் அதன் அழகுச் சின்னம் பளிச்சிட்டுத் தெரியும். அது ஒரு மாயப்புன்னகைதான்.

அத்தகைய புன்னகைக்கு இணை எங்கு இருக்கிறது என்று ஒருசமயம் கேள்வி எழுந்தபோது, பம்பாய்க்கு அருகே ஓர் தீவில் இருக்கும் எலிஃபெண்டா குகையில் இருக்கும் திருமூர்த்தியின் வடிவம் என் நினைவுக்கு வந்தது. அதன் பிரம்மாண்டம், அதன் தேர்ந்த கலை வடிவம், அதன் அழகு, அந்த இதழ்களில் வடியும் புன்னகை, சில புத்த வடிவங்களுக்கு இணையான புன்னகையாகும். அதன் அழகினும் கலை நேர்த்தியும் அவற்றில் உண்டு. நம் சிறந்த பொக்கிஷங்களில் இத்திருமூர்த்தி உருவமும் ஒன்று. திருவெண்காடு ரிஷபவாகன மூர்த்தி வெண்கலச் சிற்பம்போல, தீதார்கஞ்ச் யக்ஷியைப்போல, ஒரு சிகரப் படைப்பு என்று அச்சிற்பத்தைக் கூறலாம். 17ம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்கள் இங்கு கால் பதித்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு, இம்மூர்த்திகளைக் குறியாகக் கொண்டார்களாம். இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர்களின் அதிகக் கொடூரமான மதமாற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அக்காலத்தில் போர்ச்சுகீசியர்களாகவே இருந்தனர்.

அவர்களது துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குக் குறி எலிஃபெண்டா குகை திருமூர்த்திச் சிற்பம். தாலிபான்களுக்கு பாமியான் புத்தர் சிலை. ஈராக் யுத்தம் தொடங்கும்முன் அமெரிக்கர்கள் தம் துப்பாக்கிப் பயிற்சிக்குக் குறியாகப் பயன்படுத்தியது ஸதாம் ஹூஸேனின் உருவம்.

இதன் விளைவுகள் பாமியான் புத்தர் சிலை சின்னாபின்னப்படுத்தப்பட்டதற்குக் குறைந்ததல்ல. இத்தாக்குதலுக்கு உந்துதலாக இருந்த வெறியுணர்வு தாலிபான்களின் மதவெறி உணர்வுக்குச் சற்றும் குறைந்ததல்ல.

அமெரிக்கர்கள் நீண்ட நெடிய சரித்திரம் அற்றவர்கள். ஒரு நாகரிகம், பண்பாட்டு வரலாறு என சொல்லிக் கொள்ளத் தகும் அளவுக்கு ஏதும் அற்றவர்கள். கலைகளில் அவர்கள் உலகுக்கு அளித்தது ஏதும் சொல்லிக்கொள்ளும் தகுதி அற்றது. ஆக்டபஸ் தன் கால்களைப் பரப்பி, தன் ஆக்கிரமிப்பை நிலைநிறுத்துவதுபோல, தம் ஆக்கிரமிப்பின் வழியிலேயே தம்முடையது எதையும் – தரமற்றதைக் கூட நிலைநிறத்திக் கொள்ளும் குணத்தவர்கள் அமெரிக்கர்கள். எதிலும் அவர்களது பங்களிப்பு, பிரம்மாண்டமே. பிரம்மாண்டமே ஒன்றின் குணத்தையும், பலத்தையும், நிரூபிப்பதாக ஸ்தாபித்துவிடும் மரபு அவர்களது. அவர்களுடைய கட்டடங்கள், சாலைகள் அத்தகையன.

(13.5.2003 அன்று எழுதப்பட்டது)

(சந்தியா பதிப்பகத்தின் வெளியீடான ‘கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.)

-oOo-
Posted on Leave a comment

வலம் நவம்பர் 2016 இதழ் (மலர் 1, இதழ் 2)

வலம் நவம்பர் 2016 இதழில்

  • புள்ளிகள் கோலங்கள் – பாஸ்கர் நடராஜன்
  • கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் – பி.ஆர்.ஹரன்
  • ஊழலும் கலாசாரமும் – அருணகிரி
  • பெர்சிபோலிஸ் – அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ – சந்திரசேகரன் கிருஷ்ணன்
  • மின்னாற்றல் பற்றாக்குறையும் சில தீர்வுகளும் – சுதாகர் கஸ்தூரி
  • பகைவனுக்கருள்வாய்: இந்தி சீன் பாய் பாய் – ஆமருவி தேவநாதன்
  • மூத்த குயில் எஸ். ஜானகி – ரஞ்சனி ராம்தாஸ்
  • அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – ராஜேஷ் குமார்
  • ஆலயங்களைப் பாதுகாத்த நீதிமன்றம் – எஸ்.பி. சொக்கலிங்கம்
  • இந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் – ஹரன் பிரசன்னா
  • எல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி – அரவிந்தன் நீலகண்டன்
  • காவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள் – ஜடாயு
  • தமிழகத்தில் பள்ளிக்கல்வி – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

வலம் இதழுக்கு ஆன்லைனில் சந்தா செலுத்த:  https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

வலம் இதழை ஆன்லைனில் இ-புத்தகமாக வாசிக்க: டெய்லி ஹண்ட் | கூகிள் புக்ஸ்