Posted on Leave a comment

சிங்கப்பூர் நீர் மேலாண்மை | ஆமருவி தேவநாதன்

‘You know, you can drink the water direct from the tap.’ டாக்ஸி ஓட்டுநர் லிம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.

‘What lah? See ghost already ya? Why mouth open so wide?’ லிம் மேலும் கேட்டதும் திறந்த வாய் மூடிக்கொண்டது. ‘Yes, I mean what I say lah. You drink water from tap and fall ill, I pay you $100’ என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது. இன்னும் பலப்பல ஆச்சரியங்கள் என்னை ஆட்கொள்ளப்போவதை உணராமல் மோன நிலையில் அமர்ந்திருந்தேன். Continue reading சிங்கப்பூர் நீர் மேலாண்மை | ஆமருவி தேவநாதன்

Posted on Leave a comment

திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்

‘திருக்குறள்
உலகப்பொதுமறை; சாதி, மத, மொழி, இன, நில வேறுபாடுகளைக் கடந்து எல்லா மதத்தவருக்கும்
பொதுவான மறை நூல்; மதச்சார்பற்றது.’ இந்தப்  பரப்புரையில் உண்மையின் விழுக்காடு எவ்வளது? திருக்குறள்
இறை மறுப்பு நூலா? திருக்குறளுக்கும் பாரதத்தின் ஆன்மிகக் களஞ்சியங்களான வைணவ,
சைவ, சமண, பௌத்த மதங்களுக்கும்
தொடர்பில்லையா? பார்க்கலாம்.
பலருக்கும் தெரிந்த பின்வரும் குறட்பாக்கள் வைணவத்
தொடர்பைக் காட்டுவன.
1954ல் பண்டித ரெ.திருமலை ஐயங்கார் எழுதிய ‘திருவாதிமாலை’
நூலில் ‘ஆதிபகவன்’ என்னும் சொல்லாடல் எவ்வாறு ஆழ்வார்களின் பாசுரங்களிலும்,
விஷ்ணுபுராணம் முதலிய வைணவ நூல்களிலும் கையாளப்படுகிறது என்று தெளிவாகக் கூறி,
அதனால் திருக்குறள் வைணவ நூலே, திருவள்ளுவர் வைணவரே என்பதை நிறுவுகிறார். பகவான்
என்னும் சொல் ‘பகவந்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபே என்று கூறுகிறார். இதற்கு
அவர் காட்டும் விஷ்ணுபுராண ஸ்லோகம் இதோ:
‘’ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்யதேஜான் ஸ்யசேஷத:
பகவச்சப்த வாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி:
ஏவமேஷ மஹாசப்தோ மைதேய பகவாநிதி
பரமப்ரஹ்மபூதஸ்ய வாஸுதேவஸ்ய நாக்யக:
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷாஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண அந்யத்ர ஹ்யுபசாரத:’
(ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், கீர்த்தி, செல்வம்,
ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் ‘பக’ என்னும் பதம்
வாசகமாயிருக்கிறது. பூதங்களைச் சரீரமாகக் கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பனுமான
அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் எல்லா பூதங்களிலும் வஸிக்கிறான்.
ஆகையால் அழிவற்றவனான பகவான் ‘வ’காரத்திற்கு அர்த்தமாகிறான். கீழானவையான
முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத ‘ஜ்ஞானம், ‘சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம்,
தேஜஸ்’ என்னும் எல்லா குணங்களும் ‘பகவான்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்
பெறுகின்றன. மைத்ரேயரே, இம்மாதிரியாக பகவான் என்ற இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான
வாஸுதேவனுக்கே உரியது. வேறு ஒருவரையும் குறிக்காது.)
1904ம் ஆண்டு மதுரை ஜில்லா, சிறுகூடற்பட்டி சே.சுப்பராய
ஐயர் அவர்கள் விஷ்ணுபுராணத்தைத் தமிழ்ப் பாக்களாக மொழிபெயர்த்து எழுதினார்.
அப்பாக்களில் சில பின்வருமாறு. இவற்றிலும் ‘பகவன்’ என்னும் சொல் இடம்பெறக்
காணலாம்.
‘அகமதி னினைக்க வேண்டு மப்பர மான்மா ரூபம்
பகவனென் றுரைக்கா நின்ற பதத்திற்குப் பொருளா மந்தப்
பகவனா நாம மன்னோன் பற்பல குணஞ்சொ ரூப
முகவைசால் விபவ மின்ன வுரைத்திடத் தக்க தன்றே.
மற்றுமிப் பகவ னென்னும் வாசக நாம ரூபம்
பெற்றில னாகி யன்ன பிரமத்திற் கிணையாய் நின்ற..
அவித்தையென் றிவற்றை யோர்ந்தோன் பகவனென் றறைதல் வேண்டும்…’
விஷ்ணுபுராணம் மேலும் சொல்வது :
‘ததேவ பகவத் வாச்யம் ஸ்வரூபம் பரமாத்மந:
வாசகோ பகவச்சப்தஸ் தஸ்யாத்யஸ்யாக்‌ஷயாத்ம ந:’
(அந்த பரமாத்ம ஸ்வரூபமே பகவான் எனப்படுவது. அழிவற்றவனான
அந்த ஆதிபுருஷனுக்கே வாசகமாயிருப்பது பகவச்சப்தம்.)
‘பகவாநிதி சப்தோயம் ததா புருஷ இத்யபி
நிரூபாதி வார்த்தேதே வாஸுதேவே ஸநாதநே’
(பகவான் என்னும் சப்தமும், புருஷன் என்னும் சப்தமும்
இயற்கையாகவே பழமையானவனான வாஸுதேவனிடமே விளங்குகின்றன.)
‘அந்தமிலாதியம்பகவன்’ என்று திருவாய்மொழி திருமாலைச்
சொல்கிறது. ஒன்பதினாயிரப்படி என்னும் வைணவ உரை ‘தனக்கு அந்தமின்றி எல்லார்க்கும்
தான் ஆதியாய் ஸ்வாபாவிகமாய் ஹேயப்ரத்நீகமான ஜ்ஞாநாதி கல்யாண குண பரிபூரணன்’ என்று
மஹாவிஷ்ணுவை விவரிக்கிறது. இவ்விடத்தில் ‘ஆதி’, ‘பகவன்’ என்பது வைணவத்தின் மூலமான
திருமாலைக் குறிப்பதை உணரலாம்.
இவைமட்டுமன்றி, திருவள்ளுவர் ‘எண்குணத்தான்’ என்னும்
சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்
தலை’ என்பது குறள். மாலவனின் எட்டுக் குணங்களாகச் சாந்தோக்ய உபநிஷத் சொல்வது:
பாபமின்மை, நரையின்மை, மரணமின்மை, சோகமின்மை, பசியின்மை,
தாகமின்மை, ஸத்யகாமம், ஸத்யஸங்கல்பம் என்பன. இவற்றையே திருவள்ளுவர் எண்குணத்தான்
என்கிறார். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘எண்குணத்தான்’ என்னும்
சொல்லிற்குச் சொல்லும் விரிவிரை : ‘ தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை
உயர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை,
முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை’.
இதனைத் தொடர்ந்து, ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்’ என்பதாலும், ‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை
நீடுவாழ் வார்’ என்பதாலும் அடியைத் தொழும் வைணவ மரபு சுட்டப்படுகிறது. ஆண்டாள்
எழுதிய திருப்பாவையை ‘பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்’ என்று போற்றுவதை
நாம் அறிவோம். மேலும் திருப்பாவையில் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று
வாமனாவதாரத்தைப் பாடுகிறாள். வள்ளுவரும் ‘அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு’
என்னும் போது மூவடியால் மூவுலகையும் அளந்த வாமனனைப் பற்றிப் பேசுகிறார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’
என்னும் குறட்பாவினால், எந்தப் பொருளையும் விரும்புதல்
இல்லாதவனும், வெறுத்தல் இல்லாதவனுமாகிய பரம்பொருளைப் பார்க்க முடிகிறது. இந்த
இரண்டு குணங்களும் ஒருங்கே இருப்பதால், எந்த விதப் பாபமும் இல்லாதவன் என்றாகிறது.
எனவே அவன் இயல்பாகவே பாபங்களில் இருந்து நீங்கியவன் என்பதைக் காண்கிறோம். இதுவும்
மாலவனின் எண் குணங்களில் ஒன்றே.
‘இருள் சேர் இருவினையும் சேரார் இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’
என்னும் குறளால் இறைவனது குணங்களான ஸத்யகாமம் (பழுதடையாத
இச்சை), ஸத்யஸங்கல்பம் (பழுதடையாத நினைவு) முதலியன புலனாகின்றன.
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்’
என்னும் குறளில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐந்து பொறிகள் வழியாக வந்தடையும் ஐந்து ஆசைகளையும் ஒழித்தவனது மெய்யான ஒழுக்க
நெறியின் கண் வழுவாது நின்றவர், பிறப்பில்லாமல் எக்காலத்திலும் ஒரு தன்மையராய்
வாழ்வார் என்பதாகச் சொல்லும்போது, பசியின்மை, தாகமின்மை, சோகமின்மை, மரணமின்மை
என்கிற நான்கு குணங்களையும் அறிய முடிகிறது. பசி, தாகம் இருந்தால் அவற்றை
நீக்கிக்கொள்ள வேண்டிப் புலன்களை மேயப் பொறிகள் செல்லும். சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றம் என்பன புலன்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன பொறிகள். பசி, தாகம்
முதலியன இல்லாதவனாதலால் பொறிவாயில் ஐந்தவித்தவன் ஆகிறான். பசி, தாகம் இல்லாததால்
அவற்றால் உண்டாகும் சோகம் அற்றவனாகிறான். உண்ணும் சோறும் பருகு நீரும் பசி தாகங்களை
அகற்ற உதவுகின்றன. இவை இல்லாவிட்டால் மரணமே. இறைவன் பசி, தாகம் இல்லாதவன். ஆதலால்,
உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியதில்லை. அதனால் வளர்தல், தேய்தல் அற்றவனாகிறான்.
இவற்றினால் எல்லாம் மரணம் அற்றவன் ஆகிறான்.  
இதுகாறும் திருக்குறளில் வைணவக் கோட்பாடுகள் குறித்துக்
கண்டோம்.
மணிவாசகர் பதிப்பத்தார் வெளியீட்டில் திருக்குறள்
மாமுனிவர் முனவர்.கு.மோகனராசு எழுதிய ‘திருவள்ளுவர் கண்ட கடவுள்களும்
தெய்வங்களும்’ நூலில் பாரதத்தின் பல சமயங்களின் கடவுளர்கள் திருக்குறளில் எவ்வாறு
காட்டப்பட்டுள்ளனர் என்பது பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
முனைவர் சு.மாதவன் என்பார் எழுதிய ‘சமூக மெய்யியல்
நோக்கில் திருக்குறள்’ (செம்மொழிப் பதிப்பகம், தஞ்சாவூர்) என்னும் நூலில்,
திருக்குறள் சைவ மரபை ஒத்து வருகிறது என்கிறார். அவரது பார்வை புதியது.
நிலைத்த பேருண்மையை உணர்த்த மட்டுமே திருவள்ளுவர்
‘ஏ’காரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்கிறார் முனைவர் சு.மாதவன்.
1330 குறட்பாக்களில் 114ல் மட்டுமே ஏகாரங்கள் உள்ளன.
அதாவது 133 அதிகாரங்களில் 74ல் மட்டுமே ஏகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள்
வாழ்த்தில் ஏகாரம் உண்டு. வான் சிறப்பில் இல்லை. ஏனெனில் கடவுள் என்பது நிலைத்த பேருண்மை,
வானம் அப்படியானதன்று. அவ்வப்போது மாறுபடும், நிலையானதாக இருக்காது. எனவே வான்
சிறப்பில் எந்தக் குறளிலும் ஏகாரம் இல்லை. நீத்தார் பெருமையில் ஏகாரம் உண்டு
என்பதையும் உற்று நோக்குக.
‘சுவை ஒளி ஊறு, ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.’
‘அறத்தான் வருவதே இன்பம்’
‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’
‘அமிழ்அமிழ்தினும் ஆற்ற இனிதே’
‘அன்றே மறப்பது நன்று’
பரிதியார் வியாக்கியானம்: அனந்த ஞானம், அனந்த வீரியம்,
அனந்த குணம், அனந்த தெரிசனம், கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாவியல்பு என்பன’.
‘சைவ சித்தாந்த அறிஞர் கி.லெக்ஷ்மணன் ‘தாடலை’ என்னும் சொல்
குறித்துக் கூறுவது:
‘சைவ சித்தாந்தப் படி முத்தி என்பது துன்பம் துளியும்
இல்லா நிலை மட்டுமன்றிப் போரின்பமயமான உடன்பாட்டு நிலையும் ஆகும். இம்முத்தியாலேயே
ஆன்மா இறைவனோடு இரண்டறக் கலந்தபோதும் தன் தனி இயல்பை முற்றாய் இழந்துவிடுவதில்லை.
இக்கலப்புக்குத் தமிழில் ‘தாள்’, ‘தலை’ என்னும் இரு சொற்களின் புணர்ச்சியை
உதாரணமாக காட்டுவது மரபு. தலை ஆன்மாவையும், தாள் இறைவனையும் குறிப்பனவாகக்
கொள்ளலாம். அதாவது, இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்துகிறது என்பதே
கருத்து. தாளும் தலையும் தமிழ் இலக்கண விதிப்படிப் புணரும் போது ‘தாடலை’ ஆகும்.’
இத்தாடலைக் கோட்பாட்டின் சிந்தனைக் கட்டிணைவைக் கடவுள் வாழ்த்தில் காணமுடிகிறது ‘  என்கிறார் முனைவர் மாதவன். ஆக, சைவ சித்தாந்தக்
கருத்தும் வெளிப்படுகிறது.
இவை தவிரவும் ‘மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’, ‘ஆ பயன் குன்றும் அறு தொழொலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்’, ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க் கெழுமைக்கும்
ஏமாப்புடைத்து’, ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரப்பின் இளி வந்தது இல்’
முதலிய குறட்பாக்களால் வைணவ, சைவ மத நம்பிக்கைகளான அந்தணன் ஒழுக்கம், வேதம்
ஓதுதலின் அத்தியாவசியம், பசுவின் மேன்மை, கர்ம வினை, மறுபிறப்பு முதலியன
சுட்டப்படுகின்றன. ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்னும் ஆண்டாளின் வரிகள்
நினைவிற்கு வரலாம்.
திருக்குறள் சமண நூல் என்பதற்கான சான்றுகளும் கொட்டிக்கிடப்பதாகவும்
சில நூல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக ‘திருக்குறள் – ஜைன
உரை’ என்றொரு நூலில் உள்ள சில சான்றுகளைக் காண்போம்.
திருவள்ளுவர் ஶ்ரீ குந்த குந்த ஆச்சாரியர், பத்ம நந்தி,
வக்கிர கிரீவர், கிருத்ர பிஞ்சர், ஏலாசாரியர் என்று பல பெயர்களால்
அழைக்கப்பட்டுள்ளார். இவர் கிமு 52 – கிபி 44 வரை வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
இவரைப்பற்றிய சிலாசாசனம் சிரவணபேளாகோளாவில் உள்ளது என்கிறது மேற்சொன்ன நூல்.
குந்த குந்தர், தற்போது திருப்பாதிரிப்புலியூர் என்றும்,
அன்னாட்களில் பாடலிபுரம் என்றும் அழைக்கப்பட்ட ஊரில் வாழ்ந்த சமண ஆச்சாரியர் என்று
அறியப்படுகிறார், பிராகிருத மொழியில் பல நூல்களையும், குறிப்பாக
‘பிரப்ருதத்திரயம்’ என்று அறியப்பட்ட பஞ்சாஸ்திகாயம், பிரவசனஸாரம், ஸமயஸாரம்,
மற்றும் தமிழில் திருக்குறளையும் இயற்றினார். இவரது சீடர் திருவுள்ளம் நயினார். இவரே
‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்று குறளைக்
கொண்டாடியதாகவும், அதனால் ஶ்ரீ குந்த குந்தர் அவரையே மதுரைக்குச் சென்று குறளை
அரங்கேற்றம் செய்யச்சொன்னதாகவும், பின்னர் சீடரின் பெயர் திருவுள்ளம் நயினார்
என்பதில் இருந்து திருவள்ளுவர் என்றானதாகவும் ஜைன மரபு தெரிவிக்கிறது. (‘கடுகைத்
துளைத்து’ இடைக்காடர் செய்தது என்றும் கூறுவர்).
சமணர்களின் கடவுள் வணக்கம் நான்கு வகையானது.
1. அருக சரணம்
2. சித்த சரணம்
3. சாது சரணம்
4. தர்ம சரணம்
சீவக சிந்தாமணிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியனார்
‘நல்லறத் திறை வனாகி நால்வகைச் சரணமெய்தி’ என்ற பகுதிக்கு உரை எழுதுகையில்
மேற்சொன்ன நான்கு வணக்கங்களைப் பற்றிக் கூறுகிறார்.
இந்த நான்கையும் திருக்குறளின் கடவுள் வாழ்த்து
அதிகாரத்தில் காணமுடிகிறது. அவ்வதிகாரத்தில் முதல் ஏழு செய்யுட்களால் ‘அருக
சரணமும்’, ’பொறிவாயில் ஐந்தவித்தான்’ செய்யுளால் ‘சாது துசரண’மும், ‘அறவாழி
அந்தணன்’ குறளால் ‘தர்மசரண’மும் குறிக்கப்படுகின்றன என்கிறது ‘திருக்குறள் – ஜைன
உரை’ என்னும் நூல்.
அத்துடன் ‘திருக்குறள் ஆய்வு – கவிராஜ பண்டிதர் உரை’
என்னும் நூல், ‘கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருக சரணமும் சித்த சரணமும்
அடங்கியுள்ளனவென்றும், நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள் சாது சரணமும், அறன்
வலியுறுத்தல் என்னும் அதிகாரத்துள் தரும சரணமும் கூரப்பட்டுள்ளன என்றும் ஜைன சமயப்
பெரியோர் கூறுவர்’ என்கிறது.
‘ஆதிபகவன்’ என்பது அருகரையே குறிப்பதாக ‘கயாதர நிகண்டு’
என்னும் சமண நூல் பின்வரும் செய்யுளால் தெரிவிக்கிறது:
‘கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்’.
மேற்சொன்ன செய்யுளில் திருக்குறளில் காணப்படும்
‘ஆதிபகவன்’, ‘எண்குணத்தான்’, ‘அறவாழி அண்ணல்’ என்ற சொற்கள் சுட்டப்படுகின்றன.
சமண நூலாகிய சீவக சிந்தாமணி ‘அறவாழியண்ணல் இவன் என்பார்’
என்று அருகரைக் குறிக்கிறது.
‘பண்ணவன் எண்குணன் பாத்தில் பரம்பொருள்’ என்று
சிலப்பதிகாரம் குறிப்பதும் அருகனையே.
மேரு மந்திர புராணம் என்னும் சமண நூல் ‘இறைவனீ ஈசனீ
எண்குணத் தலைவனீ’ என்று அருகனுக்கு எண்குணத்தானெனும் பெயரிட்டு அழைக்கிறது.
மேற்சொன்ன செய்யுட்கள் ஒன்று அருகனை நேரடியாகக்
குறிக்கின்றன அல்லது ஜைன சித்தபரமேட்டிகளைக் குறிக்கின்றன.
‘அந்தணர் என்போர் அறவோர்
மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’
என்னும் குறளுக்கு விளக்கம் போல அமைந்துள்ளது
பின்வரும் ஜைன மரபுக்கதை.
பரத சக்கரவர்த்தி மகாஜனங்களுக்குத் தானம்
செய்ய விழைகிறான். அரண்மனை வாயிலில் பூ, பழம், இலை முதலியன பரப்பிக்
காத்திருக்கிறான். அரசர்கள், செல்வந்தர்கள் வருகின்றனர். ஓரிரு மகாஜனங்கள் மட்டுமே
வருகின்றனர். சிலர் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் வேறு வழியில் உள்ளே வர
சம்மதிக்கின்றனர்.
‘நீங்கள் ஏன் வாயில் வழியாக வரவில்லை?’
என்று சக்கரவர்த்தி வினவுகிறான்.
‘நீ வாயிலில் பரப்பிவைத்துள்ள பொருட்கள்
ஏகேந்திரிய ஜீவன்கள். ஏகேந்திரிய ஜீவ ஹிம்சைகூட செய்யாதவர்கள் நாங்கள்’ என்கின்றனர்
அம்மகாஜனங்கள்.
‘நீங்களே உண்மையான மகாஜனங்கள்’ என்று
சொல்லி, அவர்களுக்கு ஒன்று முதல் பதினோரு சூத்திரம் ஈராக, யக்ஞோபவீதம் இட்டுச்
சன்மானம் பண்ணி ஆரிய ஷட்கர்மங்களை (ஆறு தொழில்கள்) உபதேசித்தான். இவர்களே
அந்தணர்கள். இவர்களே செந்தண்மை பூணாத, ஏகேந்திரிய ஜீவ ஹிம்சை கூட செய்யாத
அந்தணர்கள் என்கிறது ஜைன மரபு.
‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’
என்னும் குறளில் குறிக்கப்பெறும் நூல் ஜைன
வேதங்களான பிரதமாநு யோகம், கரணாநு யோகம், சரணாநு யோகம் மற்றும் திரவியாநு யோகம்
என்கிறது ‘திருக்குறள் – ஜைன உரை’ நூல்.
‘த்ரிகுப்தி’ என்னும் மூன்று அவசியமான கோட்பாடுகளை ஜைன சமயம் வலியுறுத்துகிறது.
அவையாவன ‘காயத்தின் அடக்கம்’, ‘வாக்கின் அடக்கம்’, ‘மனோவடக்கம்’. ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தின்
கீழ் உள்ள குறட்பாக்களால் ’த்ரிகுப்தி’யை அறியலாம்.
செறிவறிந்து
சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின்
அடங்கப் பெறின் – காயத்தின் அடக்கம்.
ஒன்றானும்
தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா
தாகி விடும் – வாக்கின் அடக்கம்.
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து  – மனோவடக்கம்.
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்’
என்னும் குறள் சைவ, பௌத்த சமயங்களை ஒரே
நேரத்தில் இழித்துரைப்பதாகசவும் தொனிக்கிறது. (மழித்தல் – பௌத்தத் துறவியர்
செய்வது. நீட்டல் – ஜடா முடி வளர்க்கும் சைவ சமயத் துறவியர்). இக்குறளின்
வாயிலாகவும் திருக்குறளின் ஜைனத் தொடர்பு தெரிகிறது.        
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபுர
ஆதீனத்தின் அடியார் கூட்டத்தில் ஒருவரான வெள்ளியம்பலவாண முனிவர் என்பார் ‘முதுமொழி
மேல்வைப்பு’ என்னும் நூலை இயற்றியுள்ளார். திருக்குறளைப் பின்னிரண்டடிகளில்
வைத்து, மேற்கோள் செய்தியை முன்னிரண்டடிகளில் வைத்து எழுதப்பட்ட இந்த நூலில்
திருக்குறள் ஜைன நூல் அன்று என்கிற வகையில் பல வெண்பாக்கள் உள்ளன. அவற்றுள்
பின்வரும் ஒன்று சிறப்புடையது:
‘ஒருவர் செய வேண்டா உலகியல்பா மென்னும்
அருகர் பிறர்கோள் சிதைக்குமாற்றால் – வருவது
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்’
இதன் பொருளாவது: ‘உலகில் பிச்சை எழுத்தே
ஒருவன் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தைப் படைத்தவனான இறைவன் அழியட்டும்
என்று சொல்கிறது திருக்குறள். இக்கருத்து, ஜைனக் கோட்பாடென்று அருகர் சொன்ன
‘உலகத்தை யாரும் இயற்றவில்லை, அது தானாகவே இருப்பது’ என்ற கருத்துக்கு முரணாகவன்றோ
உள்ளது?’
இதனால் 17ம் நூற்றாண்டு வரை திருக்குறள்
ஜைனை நூலாகவே அறியப்பட்டது என்பது புலனாகிறது.
மேலும் கொல்லாமை, புலால் உண்ணாமை,
கள்ளுண்ணாமை, உணவு, மருந்து முதலியன பற்றியும் குறட்பாக்கள் அமைந்துள்ளதால் சமண
அறங்களான ‘அன்ன அறம்’, ‘மருத்துவ அறம்’, ‘சாத்திர (கல்வி) அறம்’ முதலியன
சுட்டப்படுகின்றன.
‘கொடுப்பது அழுக்கறுப்பான்
சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம்
இன்றிக் கெடும்’ என்னும் ஒரு குறள் ‘தானம்’ செய்வதைக் கெடுப்பதால் ஏற்படும் கேட்டைக்
குறிக்கிறது. மற்றவனுக்குச் செய்யும் உதவியை ஒருவன் கெடுத்தால், அவனது சுற்றம் உடுக்க
உடையின்றியும், உண்ண உணவின்றியும் கெட்டழியும் என்று சாபம் இடுவதைப்போல் அமைந்துள்ளது
இக்குறள். உதவியைக் கெடுப்பவனது கேட்டைக் குறிக்காமல், கெடுப்பவனின் சுற்றத்தார் இதனால்
பெரும் இன்னலுக்கு ஆளாவர் என்றுரைத்ததால், இது பெரிய அளவில் ஜைனக் கோட்பாடான ‘தானம்’
என்னும் அறத்தை  வலியுறுத்துகிறது என்பதைக்
கணிக்க முடிகிறது. 
திருக்குறளை மேலும் ஆராய்ந்தால் பௌத்த மதக்
கருத்துகளும் புலப்படும் என்பது தெளிவு.

ஆக, ஜைன, வைணவ, சைவக் கருத்துக்களை
உள்ளடக்கிய திருக்குறள் பாரதத்தின் ஆன்மிகம் சார்ந்த பண்பாட்டின் விஸ்வரூப தரிசனம்
என்றே கொள்ளவேண்டும். எனவே, கடவுள் மறுப்பு, சனாதன மறுப்பு, மதங்களின் மறுப்பு என்று
மதச்சார்பின்மைச் சாயத்தைப் போலியாகத் திருக்குறளின் மீது ஊற்ற முயல்வது, வள்ளுவரின்
கூற்றின்படியே, ‘காயாத மண் பானையில் நீர் சேகரிப்பது’ போன்றதாகும். 

Posted on Leave a comment

சிலைத் திருட்டு – பதற வைக்கும் ஆவணம் | ஆமருவி தேவநாதன்

விஜயகுமார் என்றொரு சிங்கப்பூர் வாழ் இந்தியர், பாரத தேசத்தின் தொல்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வருவதுதான் ‘The Idol Thief’ நூலின் கரு. நல்ல திரைக்கதையாக உருப்பெறும் நிகழ்வுகள், விறுவிறுப்பான கதையோட்டம், பதறவைக்கும் உரைநடை மற்றும் நிகழ்வுகள், மனதைத் தொடும் முடிவு என்று செல்லும் கதை பெரும் வசூலை அள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்று. திரைப்படத்தின் துவக்கத்தில் ‘இதில் வரும் சம்பவங்கள் கற்பனை அன்று, பாத்திரங்களும் அப்படியே. குற்றவாளிகளாகக் குறிப்பிடப்படுபவர்கள் தற்போதும் உயிருடன் இருப்பவர்களே. அவர்கள் மனது வருத்தமடைந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை’ என்று ஒரு அறிவிப்பு செய்துவிட்டுப் பின்னர் திரைப்படமாக வெளியிடலாம். ஏனெனில், நடந்தவை அனைத்தும் உண்மை, பாத்திரங்கள் அனைவரும் நிஜமான மனிதர்கள், பலர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருபவர்கள்.

விஜயகுமார் கல்வியால் கணக்கர், தொழிலால் தனியார் கப்பல் துறை அதிகாரி, தன்முனைப்பால் கல்வெட்டு / சிற்ப ஆய்வாளர். இந்தக் கலவையால் உலகெங்கிலும் அருங்காட்சியகங்களில் உள்ள பாரதத்தின் பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுக் கொண்டு வருகிறார். எப்படிச் செய்தார், என்னென்ன செய்தார், எந்தெந்த குற்றவாளிகளைப் பிடிக்க உதவினார், எந்தெந்த தெய்வங்கள் மீண்டும் பாரதம் வந்துள்ளன என்பது பற்றிய விளக்கமே இந்த நூல்.

இது ஒரு கற்பனைக் கதை என்றால் கதையின் வடிவம், எழுத்து நேர்த்தி, பாத்திரப் படைப்பின் நிலை என்று விரிவாக ஆய்வு செய்யலாம். ஆனால், இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. மூன்றாம் மனிதரின் அனுபவங்கள் குறித்த தொகுப்பு என்றாலாவது நூலாய்வு / திறனாய்வு என்று எழுதித்தள்ளலாம். ஆனால், இது தன்மை நிலையில் இருந்து, தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதென்பதால், நூலாய்வு என்று இல்லாமல், கருவைப் பற்றியே பேசவேண்டியுள்ளது.

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலால் ஈர்க்கப்பட்ட விஜயகுமார், நூலில் கூறப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று கதைக்களனில் மூழ்குகிறார். தன்னிலை மறந்து, கல்வெட்டுக்களையும், சிற்பங்களையும் கற்கத் துவங்குகிறார். அதன் மூலம் இந்தியச் சிற்பங்களை எப்படி அறிந்துகொள்வது என்பதில் தேறுகிறார். சுயமாகக் கற்றுக் கொண்ட சிற்ப சாஸ்த்ரம் உந்த, ஒரு விசையைப் போலச் செயல்பட்டு உலக அருங்காட்சியகங்களில் உள்ள இந்தியக் கலைப் பொக்கிஷங்களைப் பற்றி ஆராய்கிறார். அவை பற்றிய ‘முன் கதைச் சுருக்கம்’ (Provenance reports) இருக்கிறனவா என்று தேடுகிறார். பல கலைக் கூடங்களில் உள்ள சிற்பங்களுடைய முன் கதைச் சுருக்கங்களில் ஓட்டைகள் இருப்பதைக் கண்டு, அருங்காட்சியகங்களின் அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்புகிறார். பதில்கள் வராததாலும், வந்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாலும் அச்சிற்பங்களைப் பற்றி இந்தியக் காவல் துறையிடம் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை முதலியவற்றைக் குடைகிறார். சிலைகள் கடத்தப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன. அரசதந்திர உத்திகளின் மூலம் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ள நாட்டின் அரசாங்கங்களுடன் போராடி, அப்பொக்கிஷங்களைத் திரும்பப் பாரதத்திடம் ஒப்படைக்க முயற்சிகள் எடுத்து வெற்றியும் காண்கிறார்.

மேற்சொன்ன முயற்சிகளில் சிலைகள் திரும்பக் கிடைத்த கதைகள், அந்நிய நாட்டுக் குற்றவாளிகள் சிறைபிடிக்கப்பட்ட கதைகள், அவர்கள் இந்தியச் சிறைகளில் இருந்து வெளிவர மேற்கொண்டுள்ள தவறான முயற்சிகள், தமிழக அற நிலையத் துறையின் அலட்சியங்கள், தமிழகக் காவல் துறையின் சிலை காப்புப் பிரிவின் செயல்பாடுகள், தனிப்பட்ட வெளிநாட்டுப் புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் பணிகள், அமெரிக்க புலனாய்வுத்துறையின் உதவிகள் என்று பலதரப்பட்ட பிரமிக்க வைக்கும் செய்திகளைக் கொண்ட திகில் திரைப்படம் போன்று செல்கிறது இந்த நூல்.

நூலில் விவரிக்கப்பட்டுள்ள பல செய்திகள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தினாலும், அற நிலையத் துறையின் அலட்சியம் பிரதானமாகத் தெரிகிறது. சுத்தமல்லி என்னும் சோழர்கால வெண்கலச் சிலைகள் உள்ள கோவிலில் சிலைகள் களவாடப்பட்டுவிட்டன என்பதை அறியாமலேயே அந்தக் கோவிலுக்குப் பாதுகாப்புக் கதவிற்கு அற நிலையத் துறை ஏற்பாடு செய்கிறது. காவல் துறையில் உள்ள சில கறுப்பாடுகள் சிலைக் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகள் குறித்த செய்திகளைக் குற்றவாளிகளுக்குக் கசியவிடுவது மனதைப் பதைபதைக்கச் செய்து, இவற்றைத் தடுக்க முடியாத நமது கையாலாகாத்தனத்தை முகத்தில் அறைந்தது போல் சொல்லிச் செல்கிறது இந்த நூல்.

இந்நூலின் மூலம் சுத்தமல்லி, ஶ்ரீபுரந்தான், பழுவூர் முதலிய சோழர்காலச் சிற்றூர்களில் நடந்த கொடும் சிலைக் கொள்ளைகள், சிலைகள் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு, மீட்டெடுப்பில் அளப்பரிய சாதனைகள் ஆற்றிய மாந்தர் என்று பல செய்திகள் மிக நுணுக்கமான முறையில் விவரிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டு CERN என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிறுவனம் தனது நுழைவாயில் முகப்பில் நடராஜர் சிலையொன்றை நிறுவியுள்ளது. பிரபஞ்ச உருவாக்கம், வளர்ச்சி, அழிப்பு, மீட்டுருவாக்கம் இவற்றைச் சித்தரிப்பதான நடராஜர் சிலை, பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கைகள் எதுவும் நிலவாத ஐரோப்பிய தேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. நடராஜர் சிலை தத்துவத்தை மறைந்த ஆங்கிலேய எழுத்தாளர் அல்டோஸ் ஹக்ஸ்லி வியந்து போற்றுகிறார். ஆனால், நடராஜர் சிலையில் தங்கம் இருக்கிறதா என்று ஆராய அவரது இடது கையை வெட்டி எடுத்துச் சோதித்துள்ள கயமை நிறைந்த தமிழ்நாட்டின் அறிவின்மையையும், திராவிட அரசியல் நம் உள்ளங்களில் இருந்து கழற்றியுள்ள ஆன்மீக உணர்வுகளையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது நூல்.

ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தம், திருமாலைப் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்று ஐந்து நிலைகளில் வழிபடச் சொல்கிறது. கலியுகத்தில் பெருமாள் ‘அர்ச்சாவதாரம்’ என்று விக்ரஹ வடிவில் அவதாரம் செய்துள்ளான் என்றே போற்றுகிறது. அவ்வளவு பெருமைகள் வாய்ந்த இறைத் திரு உருவங்களை வெறும் உலோக விற்பனைக்காகவும், வெளி நாடுகளில் பெரும் பொருள் ஈட்டும் கலைப் பொருட்களாகவும் விற்பனை செய்யும் நிலையில் நமது கல்வி முறை நமது ஆன்மீக அறிவை மழுங்கச் செய்துள்ளதையும் நூல் சொல்லாமல் சொல்கிறது.

சிலைகள் மீட்பு குறித்துப் பெரிய உதவிகள் செய்துள்ள அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரியை நம்மால் மறக்க முடியாமல் செய்துவிட்டார் ஆசிரியர். இந்திய அரசு தனது உயரிய விருதுகளை விஜயகுமாருக்கும் அந்த அமெரிக்க அதிகாரிக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மனம் ஏங்கச் செய்கிறது இந்த நூல்.

எந்த நடராஜர் சிலையையும் சிந்தனை இல்லாமல் கடந்து போக முடியாமல் செய்துவிட்டார் ஆசிரியர். இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் The Idol Thief.

Posted on Leave a comment

நம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானி – ஆமருவி தேவநாதன்


இந்திய விண்வெளித்துறையை அழிக்க நடந்த அமெரிக்கச் சதியில் பங்குகொண்டு, மாலத்தீவைச் சேர்ந்த முன்னாள் பெண் உளவாளிகள் மூலம் இஸ்ரோவின் தன்னிகரில்லா விஞ்ஞானிகள் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வை விவரிப்பதே ‘Ready to fire’ என்னும் நூல். எழுதியவர் நம்பி நாராயணன் என்னும் ஏவுகணை விஞ்ஞானி.

இந்த நிகழ்வை, கேரளத்தின் அன்றைய காங்கிரஸ் முதலமைச்சர் கருணாகரனை வீழ்த்த ஏ.கே.அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி பயன்படுத்திக் கொண்டதும், அதற்காக தேசத்தின் மிகப்பெரிய திட்டத்தையே வீழ்த்தத் துணிந்ததும், அந்த முயற்சியில் கேரளக் காவல்துறையை வெறும் ஏவல் வேட்டை நாய் போல் பயன்படுத்தியதும், இண்டெலிஜன்ஸ் பீரோ என்னும் மத்தியப் புலனாய்வுத் துறையில் அமெரிக்க ஊடுருவலும் பக்கத்துக்குப் பக்கம் அதிர வைக்கின்றன.

க்ரயோஜெனிக் ராக்கெட் இஞ்சின் தயாரிக்க இந்தியா முயல்கிறது. அதற்கு ரஷ்யா உதவுகிறது. அந்த முயற்சியில் நம்பி நாராயணன் முன்னின்று செயல்படுகிறார். அமெரிக்கா தனது க்ரயோஜெனிக் இஞ்சினை மிக அதிக விலைக்கு விற்க முயல்கிறது (935 மில்லியன்). இந்தியா மறுத்து ரஷ்யாவிடம் 235 மில்லியனுக்கு வாங்குகிறது. இதனைத் தடுக்க இயலாத அமெரிக்கா மத்திய உளவுத்துறையை ஊடுருவி, இந்திய அதிகாரிகளை விலைக்கு வாங்கி, இந்திய விண்வெளி அறிஞர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தி, இதற்கு ஒரு மாநில அரசின் உட்கட்சிப் பூசலைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க விஞ்ஞானி நம்பி நாராயணன் பட்ட பாட்டை விவரிக்கிறது இந்நூல்.

எளிமையான குடும்பப் பின்னணி கொண்ட நம்பி நாராயணன், சிறு வயதில் தந்தை தாய் இருவரையும் இழந்தது, பொறியாளராவது, கரும்பாலையில் பணியில் சேருவது, பின்னர் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்து பணியாற்றுவது என்று துவங்கும் நூல், நம்பியின் வாயிலாக அந்நாளைய விண்வெளி ஜாம்பவான்களான ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் முதலிய நட்சத்திரங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. விக்ரம் சாராபாயின் தன்னிகரில்லாத் தொண்டு, எப்பாடுபட்டாகிலும் பாரதத்தை விண்வெளித் துறையில் சிறந்த நாடாக்க வேண்டும் என்ற அவரது தணியாத தாகம், அதே உத்வேகத்தைத் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கும் ஏற்படுத்துவது என்ற அவரது எண்ணம் முதலியன பெருவியப்பளிப்பன.

நம்பி நாராயணன் தனது கதையைச் சொல்லும் வழியே இந்திய விண்வெளித்துறையின் வரலாற்றையும் சொல்லிச் செல்கிறார். தும்பாவில் Sounding Rocket ஏவப்பட்ட காலம் தொட்டு க்ரயோஜெனிக் இஞ்சின் பொருத்திய ராக்கெட் ஏவும் காலம் வரை இந்திய விண்வெளித்துறையின் அடுக்கடுக்கான வளர்ச்சியையும், ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சந்தித்த இடையூறுகளையும் வெற்றியடைவதற்கு எடுத்துக் கொண்ட சிரமங்களையும் விறுவிறுப்பான திரைப்படம் போன்று விவரித்துச் செல்கிறது நூல்.

இந்நூலின் மூலம் நம்பி மற்றும் அவருடன் பணியாற்றிய பொறியாளர்கள் முதல் களப்பணியாற்றிய வெல்டர், பிட்டர் முதலியோர் வரை அத்தனை ஊழியர்களின் பங்களிப்பும் ஆவணப்படுத்தப்படுகிறது. ஒருபுறம் சாராபாய், சத்திஷ் தவான் என்று ஜாம்பவான்கள், மறுபுறம் அதிகார அடுக்கில் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் என்று இரு வேறு நிலைகளில் உள்ள அனைவரும் பாரதத்தின் உன்னதம் கருதியே செயல்பட்டனர் என்பதைப் பார்க்கும்போது, தன்னலம் சிறிதும் அற்ற தியாகிகளைக் கொண்ட நமது பாரதத்தாயின் உன்னதத்தை உணரமுடிகிறது.

ஒரு வெல்டரை பிரான்ஸிற்கு அழைத்துச் செல்கிறார் நம்பி. அங்கு மிகத் திறமையுடன் செயலாற்றுகிறார் அந்த வெல்டர். அவரது திறமையைப் பார்த்து பிரான்ஸ் நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள முயல்கிறது. வெல்டர் மறுத்துவிடுகிறார். நான் பாரதத்தின் சேவையையே விரும்புகிறேன் என்று மீண்டும் பாரதம் திரும்பிவிடுகிறார். வந்த சில ஆண்டுகளில் இறந்துவிடுகிறார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நம்பி அவரது வீட்டைப் பார்க்கிறார். மிகவும் எளிமையான வீடு. அதுவும் கடனில் உள்ளது. நம்பி நினைப்பது – இவர் பிரான்ஸின் வேலையை ஒப்புக் கொண்டிருந்தால் இந்த வீட்டை விடப் பெரிய அளவிலான பத்து வீடுகளைக் கட்டியிருக்க முடியுமே என்று வருந்துகிறார்.

இதைப் போலவே மற்றொரு பொறியாளர் பிரான்ஸ் வருகிறார். வந்தவுடன் பாரதத்தில் அவரது சிறு குழந்தை இறந்துவிடுகிறது. அந்தச் செய்தியை அவரது தந்தையாரும் நம்பியும் மறைத்துவிடுகின்றனர். குழந்தை இறந்த செய்தி தெரியாமல் பொறியாளர் பணியாற்றுகிறார். நம்பியும் பொறியாளரும் வாரயிறுதி நாட்களில் கடைகளுக்குச் செல்லும் போது பொறியாளர் தன் குழந்தைக்குப் பொம்மைகள் வாங்குகிறார். நம்பிக்கு அடக்கமுடியாத துக்கம். இறுதியில் பொறியாளர் பணி முடிந்து பாரதம் திரும்பியவுடன் செய்தியைத் தெரிவிக்கச் செய்கிறார் நம்பி. பொறியாளரும் நிதர்சனத்தை உணர்ந்து மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுகிறார். இப்படிப் பல தியாகங்கள், கண்ணீர் பனிக்கும் நிகழ்வுகள் என்று விரிகிறது நூல்.

தொழில்நுட்பப் பணியாளர்கள்தான் பாரதத்தாயின் உன்னதத்திற்கு உழைத்தார்களா என்னும் கேள்வி எழலாம். அந்நிலையில் டி.என்.சேஷன் என்னும் பேராளுமை முன்னின்று ‘நிர்வாகத்தினரும் அவ்வாறே’ என்று சொல்கிறது. பாரதத்திற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையிலான நெருடலான ஒப்பந்தம் தயாரித்தல், பிரான்ஸ் நாட்டின் விண்வெளித்துறையின் தலைமையுடன் மோதுதல், பிரதமரின் ஆணையைப் பெற்று மஹேந்திரகிரியில் விண்வெளித்துறைக்கு இடம் வாங்கிக்கொடுத்தல், ஊழல் புகார்களை விசாரித்தல் என்று பல துறைகளிலும் டி.என்.சேஷன் தனது அறிவுத்திறத்தையும் தேசபக்தியையும் பறைசாற்றுகிறார். நூலிற்கு முன்னுரையும் அளித்துள்ளார் சேஷன்.

நூல் வழியே விண்வெளித்துறை பற்றி நமக்குத் தெரியவருவன:

* மற்ற துறைகள் போன்றே போட்டி, பொறாமை, பழிவாங்குதல் முதலியவற்றால் சூழப்பட்டுள்ளது

* திறமை, கடின உழைப்பு, துறை சார்ந்த நுண்ணறிவு பெற்ற பொறியாளர்கள்

* உட்பூசல்களால் ஏற்படும் நேர, உழைப்பு இழப்புகள்

* பொறியாளர்களும் ஊழியர்களும் கத்தி மேல் நடப்பது போன்று மிகக் கவனத்துடன் நடக்க வேண்டிய நிர்ப்பந்தம்

* இஸ்ரோவில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தொழில் நுட்ப அறிவின்மை

நூல் வழியே வேறு பல செய்திகளும் கிட்டுகின்றன. அவை: காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களின் பதவி வெறியில் பாரதத்தைப் பலிகொடுக்கத் தயங்க மாட்டார்கள். தமிழகத்தில் நிறுவப்பட இருந்த ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றதற்கு அண்ணாதுரையின் அரசே காரணம்.

எம்.ஜி.ஆர். நமது விண்வெளித்துறைக்குச் செய்த நன்மையையும் விவரிக்கிறார் நம்பி.

காமராஜர் பற்றிய ஒரு நிகழ்வு மனதை உலுக்குகிறது. நம்பி நாராயணன் கல்லூரியில் படிக்கும்போது காமராஜர் தமிழக முதல்வர். அவரைக் கல்லூரியின் விழாவிற்கு அழைக்க விரும்புகிறார் நம்பி. திராவிடத் தாக்கம் மாணவர்களிடையே இருந்த நிலையில் பலர் ஏளனம் செய்கின்றனர். பொறியியல் கல்லூரியில் அறிஞர்களை அழைத்துப் பேச வைக்க வேண்டும். காமராஜர் 6ம் வகுப்பே பயின்றுள்ளார். தற்போது ‘அறிஞர்’ என்று வலம் வரும் அண்ணாதுரையை அழைப்பதே சரி என்று பேசுகிறார்கள். நம்பிக்குக் காமராஜரை அழைக்க விருப்பம். அவரைச் சந்திக்கிறார்.

‘தம்பி, சரியா வருமாண்ணேன். நான் படிக்கவே இல்ல. நீங்களோ இஞ்சினியரிங் காலேஜ் பசங்க. நல்லா படிச்சவங்களைக் கூப்புடுங்கண்ணேன்’ என்கிறார் முதலமைச்சர் காமராஜர்.

நம்பி வற்புறுத்தவும், காமராஜர் இசைகிறார். பேச்சு பெரும் வரவேற்பைப் பெறுகிறது.இப்படியும் ஒரு முதலமைச்சர் இருந்துள்ளாரா என்று எண்ண வைக்கும் நிகழ்வை அளிக்கிறார் நம்பி நாராயணன். இதற்கு நேர்மாறான அரசு பற்றிய செய்தியும் இடம்பெறுகிறது.

விக்ரம் சாராபாய் கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். அது கிழக்குக் கடற்கரையில் அமைவது, பூமியின் சுழற்சியால் ராக்கெட்டுக்கான எரிபொருள் சேமிப்புக்கு உதவும் மற்றும் அருகில் கடல் இருப்பதால் பாதுகாப்பானதும் என்பதால். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட அமைச்சர் மதியழகன்.

மற்றொரு சமயம் தமிழகக் கடற்கரையோரக் கிராமத்தை விட்டுத்தரச் செய்ய அவ்வூரில் உள்ள தேவாலயப் பாதிரியார் ஒப்புக்கொள்வதும், பின்னர் பின்வாங்குவதும் தற்காலத்தை நினைவுபடுத்துவன.

மிக அதிகமான தொழில் நுட்ப விவரங்கள் கொண்ட இந்த நூல் பல நேரங்களில் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வதாகவும் அமைந்துள்ளது ஒரு குறையே.

இந்த நூலைப் படித்த பின் பாரதீயர்கள் நினைவில் கொள்ள வேண்டியது: ஒவ்வொரு முறை வெற்றிகரமாகப் பறக்கும் இஸ்ரோவின் ராக்கெட்டிலும், அதன் பின்னால் பல பொறியாளர்களின் உழைப்பு மற்றும் தியாகம், பல வெளி நாடுகளின் சதிகள், அவற்றை முறியடித்த இந்திய விஞ்ஞானிகளின் திறமை முதலியன பயணிக்கின்றன என்பதே.

Posted on Leave a comment

நூல் விமர்சனம் | ஆமருவி தேவநாதன்

மாரிதாஸின் ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்னும் நூல் ஒரு சாட்டையடித் தொகுப்பு. திடீரென்று முழங்கும் இடி நம்மை எப்படி துணுக்குறச் செய்யுமோ அப்படிச் செய்கிறது இந்த நூல்.

மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதில் அளித்து வந்த மாரிதாஸ் அவை அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அதுவே ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?’ என்னும் படைப்பு.

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய நூலாக மட்டும் இல்லாமல், திராவிட அரசியல், இடது சாரிகளின் துரோகங்கள், தேசத்தைச் சீரழிக்கும் அழிவுச் சக்திகள் என்று பல்வேறு தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த நூல்.

ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு கேள்வியுடன் துவங்குகிறது. கேள்விக்குப் பதிலளிக்கும் முன் கேள்வி தொடர்பான சில வரலாற்றுத் தரவுகளைத் தருகிறார் ஆசிரியர். சில கேள்விகளுக்குப் புள்ளி விவரங்களைக் கொண்டு துவங்குகிறார். இவ்வாறாக, வாசகனை பதிலுக்காகத் தயார் செய்கிறார். பின்னர் தனது வாதத்தைத் துவங்கி, கேள்விக்கான நீண்ட பதிலாக எடுத்துரைக்கிறார். மீண்டும் அப்படி ஒரு கேள்வி கேட்பதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் அமைந்துள்ளன பதில்கள்.

மோதியை எதிர்ப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள ஊடகம், அவர்களுக்குப் பண உதவி செய்யும் மத மாற்று நிறுவனங்கள், அவர்களிடம் வாங்கி உண்ணும் இடது சாரிகள், அவர்களுக்குத் துணை போகும் திராவிட இயக்கம் என்று ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் தேச விரோத இயக்கங்கள் பற்றியும், அவர்களது எண்ண ஓட்டங்கள், செயல்படும் விதங்கள் என்று பல செய்திகளைச் சித்தரிக்கும் கருத்துப் பேழை இந்த நூல்.

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்புப் பணத்தைப் பெருமளவில் வைத்திருந்த அரசியல்வாதிகளும், ஊடகங்களுமே என்பதையும், அதனாலேயே அவர்கள் பெரும் கூச்சலுடன் ஓலமிட்டழுதார்கள் என்பதையும் எளிதில் புரியும்படி விளக்குகிறார் ஆசிரியர்.

திராவிட இயக்கம் என்பது வெறும் பித்தலாட்ட, ஊழல் கொப்புளிக்கும் இயக்கம் என்பதைப் பல உதாரணங்களுடன் விளக்கும் ஆசிரியர், அவ்வியக்கங்களால் தமிழ் எவ்வாறு எந்த வளமும் பெறவில்லை என்பதையும் தெரிவிக்கிறார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லி அவ்வியக்கத் தலைவர்கள் செய்த ஊழல்கள், அதனால் தமிழ் நாடு அடைந்த கீழ்மை என்று விரியும் நூல் தமிழ்ச் சூழலில் இன்றியமையாத மைல்கல்.

ஈ.வெ.ரா. தொடர்பான பகுதிகள் சுவாரசியமானவை.  ஈ.வெ.ரா.மீது எழுப்பப்பட்டுள்ள மாய பிம்பத்தைத் தகுந்த தரவுகளுடன் உடைத்தெறியும் ஆசிரியர், இந்துமதம் பற்றி ஈ.வெ.ரா.விற்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதையும் நிறுவுகிறார். மனு ஸ்மிருதியின் சில பகுதிகளை மட்டுமே ஆதாரமாகக் காட்டிய ஈ.வெ.ரா.வைத் தோலுரிக்கும் மாரிதாஸ், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா.வின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் காட்டுகிறார். வைக்கம் போராட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வெ.ரா. பங்குகொண்டதைத் திராவிடக் கண்மணிகள் ஏதோ ஈ.வெ.ரா. தனியாகவே நின்று போராடியதைப் போன்று பேசுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். சாதி ஒழிப்பில் ஈ.வெ.ரா. தமிழகத்தில் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பதையும் ஆசிரியர் சுட்டத் தவறவில்லை.

ஆங்கில ஆட்சியால்தான் நாடு ரயில், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, வணிகம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்தது என்னும் பொய்யை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ள பகுதி, பல தரவுகளை எடுத்து அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஆங்கில ஆட்சியால் விளைந்த பொருளாதாரச் சீரழிவு, கல்வியில் தேக்கம், பஞ்சங்களின் கோர தாண்டவம், அதில் மடிந்த கோடிக்கணக்கான மக்கள் என்று விரியும் பகுதி, ஆங்கில ஆட்சியின் அடிவருடிகளுக்குச் சாட்டையடி.

யூதர்கள், இஸ்ரேல் பற்றிய பகுதி, அனேகமாக எந்த இந்தியப் பாடத்திட்டத்திலும் இருக்க வாய்ப்பிருக்காத ஒன்று. பாரதம் இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவைப் பற்றி அனேகமாக எந்த ஊடக வெளியிலும் இடம் பெறாத செய்திகளை அளிக்கிறது அப்பகுதி.

ஒரு நிறுவனம் எப்படிச் செயல்படும், அதற்கான செலவினங்கள் யாவை, நிதி ஆதாரங்களை நிறுவனங்கள் எவ்வாறு திரட்டுகின்றன, இவ்வாறு தனியார் நிறுவனங்கள் செயல்படுவதால் நாட்டிற்கு எத்தகைய நலன்கள் விளைகின்றன, என்னென்ன காரணங்களால் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தனியார் நிறுவனங்களை எதிர்க்கின்றன, அதன் வழியாக எவ்வாறு தேசத்திற்கு எதிராகச் செயலாற்றுகின்றன என்று தெளிவான விளக்கும் பகுதி தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் ‘போராட்டம்’ என்று குதிக்கும் இடதுசாரி சார்ந்த குழுக்கள் பற்றிய தெளிவான பார்வையை அளிக்கிறது.

பிரதமர் மோதியின் வெளி நாட்டுப் பயணங்களினால் விளைந்துள்ள பல பயன்களை எடுத்துக்கூறும் பகுதியில் இந்திய-ஆஸ்திரேலிய-ஜப்பானிய-அமெரிக்கக் கூட்டுறவால் விளைந்துள்ள ‘Quadrilateral Alliance’ பற்றியும், சீனாவின் OBOR முலம் விளையவிருக்கும் தீமைகள் பற்றியும் பேசியிருந்திருக்கலாம்..

இப்படி ஒரு நூலை எழுதுவதற்குப் பெரும் மனத்துணிவு வேண்டும். அதனினும் நிறைய அறிவு வேண்டும். தகவல்களைத் திரட்டி, ஒன்றோடு ஒன்று இணைத்து, தொடர்ச் சங்கிலி போன்றதொரு நிகழ்வுச்சங்கிலியை உருவாக்கி, அதனை அலுப்புத் தோன்றாவண்ணம் வாசகர்களுக்கு அளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, பாரதத்தின் மீது ஆழ்ந்த அன்பு, பக்தி இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பெற்றமைக்காக மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், 120 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றிகள் பல.

இவ்வளவு தரவுகளுடன் எழுதினாலும் ‘நான் எழுதிவிட்டேன் என்பதால் நம்பாதீர்கள். இத்தரவுகளைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்’  என்று சொல்லும் ஆசிரியர் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ என்னும் குறளை நினைவுபடுத்துகிறார்.

இந்த நூலை எழுதியதற்காக மாரிதாஸ் அவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
 

Posted on Leave a comment

இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி – ஆமருவி தேவநாதன்

இஸ்ரேல் என்றதும் ‘துப்பாக்கிகள், கொலை, காட்டுமிராண்டித்தனம், எதேச்சாரதிகாரம், ஆரஞ்சுகள்’ என்று உங்கள் நினைவிற்கு வந்தால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நமக்கெல்லாம் ‘போதிக்கப்பட்டிருக்கும்’ இஸ்ரேல் அதுவே. ஆனால் உண்மையில் ‘எது இஸ்ரேல்?’ என்று உணர்த்துவது ‘Start-up Nation’ என்னும் அந்த நாட்டைப் பற்றிய இந்த நூல்.

‘A mournful expanse’ என்று மார்க் ட்வெயின் வர்ணித்த பாலைவனப் பிரதேசம் இன்று இஸ்ரேல் என்ற பெயருடன் உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் உருவான கதையை விவரிக்கிறது இந்த நூல்.

இயற்கையால் வஞ்சிக்கப்பட்டாலும் பகைவர்களால் சூழப்பட்டாலும் இஸ்ரேலியர்கள் என்ற மாபெரும் மனித ஆற்றலின் அளப்பரிய முயற்சியால் அந்த நாடு உயிர் பெற்று, துளிர்த்து, மிளிர்ந்து, தொழில்நுட்பத்திலும் வேளாண்மையிலும் உலகிற்கே வழிகாட்டுவதாய் விளங்கும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகளை விளக்குகிறது ‘Start-up Nation’ என்னும் இந்தப் புத்தகம்.

வான் வழியில் ஏவுகணை மழை பொழிந்து வந்தாலும் தரைக்கடியில் மென்பொருள் எழுதும் மக்களின் அபரிமிதமான ஆற்றலை நமது முகத்தில் அறைந்து தெரிவிக்கும் இந்த நூல், அப்படியான மக்களைத் தூண்டுவது எது என்பதையும் விரிவாக விளக்குகிறது. தாங்கள் யூதர்கள், தங்களுக்கு என்று இருக்கும் ஒரே இடம் இஸ்ரேல் என்னும் பாலைவனம். அதில் மனித ஆற்றலும், எண்ண ஒருங்கிணைவும் சேர்ந்தால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை முரசறைந்து தெரிவிக்கும் இந்த நூல் அந்நாட்டின் வரலாறு, கலாசாரம், தொழில் முனைவோரின் ஊக்க சக்திகள் என்று பல தளங்களில் பயணிக்கிறது.

நூல் முழுவதும் பயணிக்கும் ஒற்றைச் சரடு – 8200 என்னும் எண். இஸ்ரேலிய ராணுவத்தின் உயர் தொழில்நுட்பப் பிரிவான 8200ல் சேரும் இளைஞர்கள் எவ்வாறு தங்கள் பணிக்காலத்திலும், பின்னர் துணை ராணுவப் பிரிவுகளிலும் இருக்கும்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணியில் இருந்து வெளியேறியதும் தொழில் முனைவோராகிறார்கள் என்று தெளிவாக விளக்குகிறது இந்நூல். 8200ல் சேர்வது எத்துணை கடுமையானது என்பதையும், அதில் சேர மாணவர்கள் இளம் வயதிலேயே தயாராவது பற்றியும் விவரிக்கும் ஆசிரியர், பிற்பாடு 8200 என்பதே எத்துணை பெரிய உயரிய அங்கீகாரம் என்பதையும், அது எவ்வகையில் இஸ்ரேலைத் தொழில் முனைவோரின் பெருங்கூட்டமாக ஆக்க உதவியது என்பதையும் விவரிக்கிறார்.

இஸ்ரேலில் ஆள்பற்றாக்குறை இருந்தது பற்றியும், அதை நீக்கப் பாலையில் விவசாயம் செய்ய ‘கிப்புட்ஸ்’ என்னும் கம்யூன் வகையைலான கூட்டமைப்புக்களை உருவாக்கிய பென் கியூரியன் முதலான பெருந்தலைவர்கள் பற்றியும், சொட்டு நீர்ப்பாசன முறையை உலகில் முதலில் உருவாக்கி அதன் மூலம் வேளாண்மை செழிக்க இஸ்ரேலியர்கள் செய்த முயற்சிகள், ஒவ்வொரு இஸ்ரேலியனும் எப்படி நாட்டின் தூதனாகச் செயல்படுகிறான் என்பதையும் மிக நீண்டு விளக்கும் ஆசிரியர், இஸ்ரேலியரின் வீரத்தையும், சமயோசித அறிவுப் பயன்பாட்டையும் பல இடங்களில் விவரிக்கிறார்.

உலகில் மிக வறிய நாடாக இருந்த ஒரு பாலைப் பிரதேசம், உலகின் வளம் கொழிக்கும் நாடாக மாறியதை, இஸ்ரேலிய முறையைப் பின்பற்றினாலும் அந்நாட்டின் அளவிற்குச் சுய தொழில் முனைவோரை உருவாக்க முடியாத சிங்கப்பூர், தென் கொரியா முதலிய நாடுகளைப் பற்றியும் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கும் ஆசிரியர், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இஸ்ரேலிய முறையைப் பின்பற்றத் துவங்கியதைக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அரபு நாடால் எவ்வாறு இஸ்ரேல் அளவிற்கு முன்னேற இயலாது என்று ஆசிரியர் ஆதாரபூர்வமாக விவரிப்பது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்று.

துவக்கத்தில் சோஷலிசப் பாதையில் பயணித்த இஸ்ரேல் சந்தித்த சவால்கள், அந்நாட்டின் பண வீக்கம் 400 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது ஏன் என்பதற்கான காரணங்கள், அந்நாடு அப்பாதையில் இருந்து விலகிப் பொருளியலில் பெற்ற ஏற்றம் மற்றும் அதற்கான காரணங்கள், இஸ்ரேலின் மக்கட்தொகைப் பெருக்கத்திற்கான காரணங்கள், அதன் மூலம் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்று பல பார்வைகளை வழங்கும் இந்த நூல் தமிழகப் பள்ளிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட வேண்டிய அளவிற்கு மனவெழுச்சி ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நூல் முழுவதும் வந்து செல்கிற ஒரு செய்தி: சுய சிந்தனை. ராணுவமாகட்டும், பள்ளிகளாகட்டும், நிறுவனங்களாகட்டும் – எங்கும் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பதே இல்லாமல், அதிகாரக் கட்டமைப்பில் எந்த நிலையில் இருந்தாலும், நிறுவனம் தவறான முடிவுகளை எடுக்கிறது என்று தெரிந்தால் உடன் அதனைச் சரிப்படுத்தும் வேலையில் கடைநிலை ஊழியரும் கூட இறங்குகிறார்கள், அதிகாரிகளைக் கேள்வி கேட்கிறார்கள், நிறுவனத்தையும் நாட்டையும் முன்னேற்றுகிறார்கள்.

சுற்றியுள்ள பகை நாடுகளால் தங்களது வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும்போது, இஸ்ரேலியர் உலகப் பயணங்களை விடாமல் மேற்கொண்டு உலக நிகழ்வுகளையும், உலக நிகழ்வுகளால் இஸ்ரேலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் கற்றறிந்தவண்ணமே உள்ளனர். ஒவ்வொரு இஸ்ரேலியனும் தன்னை நாட்டின் தூதுவனாகவே உணர்கிறான். தனது நிறுவனத்திற்கான வியாபாரப் பயணங்களில் கூட இஸ்ரேலைப் பற்றியே பேசுகிறான். இத்தகைய தேசப்பற்று வேறெந்த நாட்டிலும் இருக்குமா என்பது ஐயமே.

இண்டல் நிறுவனம் தனது பெண்டியம் சில்லுகளை வடிவமத்த பின், ஏ.எம்.டி. முதலான புதிய நிறுவனங்களின் வருகையால் திகைத்து நின்றிருந்த காலத்தில், அந்நிறுவனத்தின் இஸ்ரேலியப் பொறியாளர்கள் சென்றினோ சில்லை வடிவமைத்து, அதன் மூலம் மடிக்கணினிகள் அதிக அளவு பெருக வழி வகுத்ததையும், அதன் மூலம் இண்டல் நிறுவனமே காப்பாற்றப்பட்டதையும் காட்டும் பகுதிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவெழுச்சியை அளிப்பன.

பேபால் (Paypal) நிறுவனத் தலைவரைச் சந்திக்கும் சிறுவன் கள்ளப்பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் தனது புதிய மென்பொருளைக் காட்டுவதும், அதனை நம்பாத தலைவர் அவனிடம் கடுமையான சோதனை வைப்பதும், அதனை ஓரிரு நாட்களிலேயே அச்சிறுவன் தனது மென்பொருளின் துணை கொண்டு செய்து முடிப்பதும், பின்னர் அச்சிறுவனின் ஃபிராடு சையின்ஸஸ் (Fraud Sciences) நிறுவனத்தை பேபால் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்குவதையும் படிக்கும் இடங்களில் ஒரு தேர்ந்த ஹாலிவுட் திரில்லர் திரைப்படம் காண்பது போன்ற உணர்வதைத் தவிர்க்க முடியாது.

நல்ல நண்பன் என்று நம்பியிருந்த பிரான்ஸ் நாடு மிக முக்கியமான போர் நேரத்தில் தன்னைக் கைவிட்ட நிகழ்வை மறக்காத இஸ்ரேல், ‘இனியும் யார் தயவையும் நம்பியிருத்தல் முடியாது’ என்று தானே போர் விமான உற்பத்தியில் இறங்கிய நிகழ்வு வரும் பகுதி படிப்பவர்களுக்குப் பெரும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இஸ்ரேலிய அரசின் விமானத்துறை உருவான விதமும், அத்துறையில் தன்னை நிலை நாட்டிக் கொள்ள இஸ்ரேல் உலகச் சட்டத்தினுட்பட்டும், அவற்றை ஏமாற்றியும் செய்துள்ள அளப்பரிய செயல்கள், அந்நாட்டின் மீதும் அதன் ஆட்சியாளர்களின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்துகின்றன.

இஸ்ரேலில் தொழில்முனைவோருக்குப் பண உதவி செய்ய அந்நாளில் யாரும் முன்வராத போது, அரசாங்கமே தற்போது எங்கும் பரவலாக உள்ள ‘Venture Capital’ என்று முறையை முதன்முதலாக மேற்கொண்டு உயர் தொழில்நுட்பத்தில் இஸ்ரேலில் பல புதிய சிறு நிறுவனங்கள் உருவாக வழி செய்தது என்பதை நூலின் வாயிலாக அறியும்போது 40 ஆண்டுகளுக்கும் முன்னமேயே அந்நாட்டரசின் தீர்க்கதரிசனத்தை எண்ணிப் பெரும் வியப்பே ஏற்படுகிறது.

முதல் வளைகுடாப்போரில் சதாம் ஹுசேன் இஸ்ரேல் மீது தினம் சில ஸ்கட் ஏவுகணைகளைப் பொழிந்தபோது இஸ்ரேலிய அரசு தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது. வீட்டின் பதுங்கு அறைகளில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது. ஆயினும், அரசாணையைப் புறந்தள்ளி இண்டல் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தொழிற்சாலைக்கு வேளைக்கு வந்து கடமையாற்றிக்கொண்டிருப்பதையும், ஒரு நாள் இரவு ஏவுகணைத் தாக்குதல் முடிவுற்றவுடன் இண்டலின் தலைவர் இரவோடிரவாகத் தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பார்க்க விரைவதையும், ஆனால் அவ்விடத்தில் ஊழியர்கள் இரவிலும் வேலை செய்துவந்ததைக் கண்டு கண்ணீர் மல்குவதையும் காணும் போது இதைவிட தேசபக்தி வேறென்ன இருக்க முடியும் என்கிற எண்ணமே ஏற்படுகிறது. போர் தொடர்ந்தபோது இண்டலின் ஊழியர்கள் அலுவலகத்திலேயே பால்வாடி அமைத்துச் சிறு பிள்ளைகளைப் பாதுகாத்தவாறே நிறுவனத்திற்கு உழைத்ததையும், ‘ஏன் இப்படி உழைக்கிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு ‘இஸ்ரேலில்தான் போரே தவிர, எமது வாடிக்கையாளர்களுக்குப் போர் இல்லை’ என்கிற தெளிவான பதிலுடன் பணியாற்றிய அதி தீவிர தேச பக்த இஸ்ரேலியர்களைக் கையெடுத்துக் கும்பிட வைக்கிறார் ஆசிரியர்.

புதிய குடியேறிகளை ஊக்குவிக்கும் நாடுகள் முன்னேற்றத்தையே கண்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் முதலிய நாடுகள் உதாரணம். இதன் காரணம் – புதிய குடியேறிகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அதிக துணிச்சலுடன் தீவிரமாக உழைப்பர், புதிய தொழில்கள் துவங்குவர். இஸ்ரேல் நாடே அப்படிப் புதியதாகத் துவங்கப்பட்ட நாடாகையால், புதிய குடியேறிகளைப் பெருமளவில் வரவேற்றது. அதன் பலன் – ரஷ்யாவிலிருந்து அணு விஞ்ஞானிகள், கணிதப் பேராசிரியர்கள், அமெரிக்காவிலிருந்து உயர் கல்வி கற்ற பொறியாளர்கள், எத்தியோப்பியா முதலிய நாடுகளில் இருந்தும் உழைக்க அஞ்சாத யூதப் பெருமக்கள் என்று பலதரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் குடியேறினர். அதன் மூலமும் இஸ்ரேல் தற்போதைய வியக்க வைக்கும் பெருவெற்றிகளைப் பெற்றது.

பெண்களுக்குக் கல்வி, சம உரிமை, சமூகத்தில் அவர்களுக்கான அவர்களுக்கான உயரிய இடம் என்று அளித்து, அவர்களையும் தனது புத்தாக்கப் பயணத்தில் ஈடுபடுத்தியது இஸ்ரேல். ஆனால், அருகில் உள்ள அரபு நாடுகளோ இதற்கு நேரெதிராக நடந்துகொண்டு தங்கள் நாட்டின் பெரும் வளமான பெண்கள் குலத்தைச் சரியான வகையில் பயன் படுத்தாததாலும், அவர்களுக்குச் சரியான கல்வி அளிக்காததாலும் அளப்பரிய எண்ணெய் வளங்கள் இருந்தாலும் எண்ணெய் தவிர்த்த பொருளியல் வளர்ச்சியோ, புத்தாக்கமோ இல்லாமல் பண்டைய காலத்திலேயே தேங்கி நிற்கின்றன. துபாய் போன்ற ஓரளவு முற்போக்கான நாடுகள் கூட தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் இல்லாமல் மந்த நிலையில் இருப்பதையும் ஆசிரியர் சுட்டுகிறார்.

உதவாத இயற்கை, சுற்றுப்புற நாடுகள் பகை, உலக நாடுகளில் யூதர்கள் பட்ட அவதி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி எடுத்து குருதி பிழிந்த ஏகாதிபத்திய, எதேச்சாதிகார நாடுகளின் வஞ்சகம் என்ற பல்முனைத் தாக்குதல்கள் தாண்டி, மக்களின் அயராத உழைப்பு, அரசுகளின் நேர்பட்ட பார்வை, தங்களின் மேன்மையை விட நாட்டின் மேன்மையே அத்தியாவசியம் என்கிற யூதர்களின் ஒன்றுபட்ட சிந்தனை போன்றவை ஒன்றிணைந்து இஸ்ரேலை சொர்க்கமாக மாற்றியிருப்பதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது.

இஸ்ரேலின் அளப்பரிய சாதனைகளுக்கும், அசுர வளர்ச்சிக்கும் காரணிகள் இவையே:

1. கட்டாய ராணுவச் சேவை.
2. ராணுவத்தின் உயர் தொழில்நுட்பக் குறிக்கோள்.
3. ராணுவத் தொழில்நுட்பங்களை மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவது.
4. அதிகார மட்டத்தைக் கண்டு அஞ்சாமல் சிந்திக்கும் மக்கள் மன நிலை.
5. லாபகரமான தேசப்பற்று (Profitable Patriotism ) என்னும் கருதுகோள்.
6. பெண்களின் சக்தியைப் புரிந்து சமூகத்துடன் ஒன்றிணைத்தது.
7. கல்விக்கு முதலிடம்.
8. யூதர்கள் யாராக இருந்தாலும் விசா இல்லாமல் சென்று தங்க என்று உலகில் ஒரு தேசம் தேவை என்ற பல நூற்றாண்டுகால எண்ண ஓட்டம்.

உடனடியாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூல் ‘Startup Nation’.

Posted on Leave a comment

திரை: தர்மத்தின் குரல் – ஆமருவி தேவநாதன்.


இடதுசாரிச் சார்புள்ள ஒரு லிங்காயத் வகுப்புப் பெண், தனது வீட்டின் எதிர்ப்பையும்
மீறி அதே இடதுசாரிச் சார்புள்ள இஸ்லாமிய இளைஞரை மணக்கிறாள். வாழ்வு கசந்து போக, இறந்து
போன காந்தீயவாதியான தன் தந்தையின் வீட்டிற்கு வந்து அவரது நூலகத்தில் உள்ள நூல்களைப்
படிக்கிறாள். அதன் மூலம் இஸ்லாமிய அரசர்களின் செயல்பாடுகள் குறித்த இடதுசாரிகளின் பொய்யையும்
புரட்டையும் உணர்கிறாள். முகலாயர் தொட்டு நடந்த கொடுங்கோல் அரசுகளின் உண்மைகளை உலகுக்கு
எடுத்துரைக்கிறாள். இதுதான் கதை.

இடதுசாரிச் சிந்தனைகள் நமது நாட்டின் வரலாறு குறித்த பொய்யுரைகளைப் பரப்பி வந்துள்ளது
நாம் அறிந்ததுதான் என்றாலும், அவர்கள் காட்டும் வரலாறு எந்த அளவிற்கு உண்மையிலிருந்து
வேறுபடுகிறது என்பதை இந்த நூலில் கன்னட எழுத்தாளர் பைரப்பா தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
பைரப்பாவின்ன் கதை சொல்லும் உத்தி அலாதியானது. கதைக்குள் கதை வைத்து, இரண்டு
கதைகளும் ஒருங்கே நிகழும் வண்ணம் செய்துள்ளார். கதைகளில் வெளிக்கதை தற்காலத்தில் நிகழ்வதாகவும்,
அக்கதையின் கதை மாந்தர் லக்ஷ்மி (எ) ரஸியா, தான் எழுதும் வரலாற்றுக் கதையின் கதைமாந்தனான
முன்னாள் ஆணும் இந்நாள் நபும்ஸகனுமான ஒரு பாத்திரம் தனது கதையைச் சொல்வதாகப் படைத்துள்ளது,
ஒரே நேரத்தில் வரலாறு நிகழ்ந்தவண்ணம் இருக்க, அப்போதே அதற்கான விமர்சனமும் லக்ஷ்மி
பாத்திரத்தின் மூலம் கிடைக்கப்பெறுவது என்று அமைந்துள்ளது, பல நேரங்களில் நாமே நபும்ஸகனாகவும்,
அதேநேரம் நமது எண்ண ஓட்டங்களை லக்ஷ்மி வாயிலாக நாமே கேட்பதாகவும் அமைகிறது. இந்த அசாத்யமான
உத்தியினால் நாம் தற்காலத்தில் இருந்து வரலாற்றை விமர்சித்தவாறே, விமர்சிக்கும் வரலாற்றிலும்
இடம்பெறுகிறோம்.
கதைக்குள் உள்ள கதை இஸ்லாமிய அரசர்களின் கொடிய வழிமுறைகளை அப்படியே காட்டுகிறது.
அக்பர் முதல் அவுரங்கசீப் வரையிலான மன்னர்கள் புரிந்த அட்டூழியங்கள், அவர்கள் முக்கியமாகக்
கோவில்களை இடித்த வழிமுறைகள், பண்டிதர்களையும், பெண்களையும் நடத்திய விதம் என்று பக்கத்திற்குப்
பக்கம் கொடூரம். இதுவரை பொதுவெளியில் தெரியாத கொடூரங்கள்.
இஸ்லாமிய அரசர்கள் ராஜபுத்திர வம்சத்தினரை வென்றால் ஒன்று கொல்கிறார்கள் அல்லது
பிறப்புறுப்பு சிதைப்பு, விதை சிதைப்பு மூலம் நபும்ஸகர்களாக ஆக்குகிறார்கள். அம்மாதிரியானவர்களை
அந்தப்புரத்தில் ராணிகளுக்குச் சேவகம் செய்யப் பணிக்கிறார்கள். பலரை ஆண் அரசர்களே தங்களது
காம இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் இம்மாதிரியான சம்பவங்கள்
பல இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
ராஜபுத்திர இளவரசன் ஒருவனின் அனுபவங்களைக் கூறுவதாக அமைந்துள்ள இந்த நூலில்
மனதைக் கலங்க வைக்கும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கட்டிளம் காளையான இளவரசன், சரண்
அடையாததால் நபும்ஸகனாக்கப்படுகிறான். பிறகு மதம் மாற்றப்படுகிறான். அதன் பின்னர் இஸ்லாமிய
அரசனின் அந்தப்புரத்தில் பணி செய்யப் பணிக்கப்படுகிறான். பல்லாண்டுகள் கழித்து, தீயில்
விழுந்து இறந்துவிட்டதாக நினைத்த தனது மனைவியைப் பணிப்பெண் உருவில், பல இஸ்லாமிய அரசர்கள்
வழியாகப் பிறந்த குழந்தைகளோடு காண்கிறான். நம்புஸகத் தன்மையால் உண்டான கழிவிரக்கம்
மேலிடப் பேசும் முன்னாள் கணவனும், தனது கணவன் ஆண்மை இழந்து நிற்பதைக் கண்டு குமுறும்
முன்னாள் மனைவியும் சந்திக்கும் நேரத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் படிப்பவர்களைப்
பதைபதைக்கச் செய்வன.
இளவரசன் வாயிலாகக் காசி விஸ்வநாதர் ஆலயம் அழிப்பையும், ரஸியா (லக்ஷ்மி) வாயிலாக
ஹம்பி கோவில்கள் அழிப்புப் பற்றியும் நாம் அறிந்துகொள்கிறோம். இரண்டு நிகழ்வுகளும்
காலத்தால் வேறுபட்டிருந்தாலும் இரண்டையும் இணைத்து அளித்துள்ள யுக்தி மூலம் பைரப்பா
பிரகாசிக்கிறார்.
ஹம்பியில் இன்றும் உள்ள சிதைந்த நரசிங்கம், மஹாவிஷ்ணு முதலானவர்களின் சிற்பங்களை
சைவர்கள்தான் உடைத்தார்களே அன்றி, இஸ்லாமியர்களோ முகலாய மன்னர்களோ உடைக்கவில்லை என்ற
பரப்புரை வெகு காலமாக நடைபெற்று வந்துள்ள நிலையில், இந்த நூல் வாயிலாக பைரப்பா அந்தப்
பரப்புரைகளைத் தவிடு பொடியாக்குகிறார். சைவ, வைணவப் பூசல்களால் ஹம்பி அழியவில்லை என்பதைச்
சரியான தரவுகளுடன் நிறுவுகிறார் ஆசிரியர்.
இடதுசாரிப் போர்வையில் குளிர் காயும் எழுத்தாளர்கள் மூலம் பாரதத்தின் பண்டைய
வரலாற்று உண்மைகள் எப்படி இரட்டிப்பு செய்யப்படுகின்றன என்பதை இடதுசாரிப் பேராசிரியர்
ஒருவரின் பாத்திரத்தால் உணர்கிறோம். சுதந்திர பாரதத்தின் 70 ஆண்டுகால வரலாற்றில் இடதுசாரிப்
பார்வைகள், அவர்கள் சார்ந்த கல்விக் கழகங்கள், ஊடகங்கள் முதலானவை உண்மை வரலாற்றை எப்படி
மழுப்பி, மக்களைக் குழப்பி, அன்னிய சக்திகளின் உதவியுடன் எம்மாதிரியான தேசத்துரோகச்
செயல்களில் ஈடுபட்டன என்பதை நாம் அறிய உதவுகிறார் ஆசிரியர். திப்பு சுல்தான் பற்றிய
ஆய்வுகள் ஒரு உதாரணம்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் என்கிற பெயர்களில், உண்மையான வரலாற்றைச்
சிதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலர் இந்த நூல் வெளிவருவதை எதிர்த்தனர் என்பதே ஆசிரியர்
பைரப்பா சரியான வரலாற்றைத்தான் எழுதுகிறார் என்பதற்கான நிமித்தம் என்று நாம் கொள்ளலாம்.
இந்த நூலை எழுதுவதற்கு ஆசிரியர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
முகலாயர் கால ஆவணங்கள், ஆங்கிலேய, ஐரோப்பிய ஆவணங்கள் என்று சுமார் 135 ஆதாரங்களை மேற்கோள்
காட்டுகிறார் ஆசிரியர்.
கன்னடத்தில் ‘ஆவரணா’ என்று வெளியாகி, பின்னர் ‘The Veil’ என்று ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு, தற்போது தமிழில் ‘திரை’ என்று வெளிவந்துள்ள இந்த நூலை விஜயபாரதம்
வெளியிட்டுள்ளது. ஆசிரியருக்கும், வெளியீட்டாளர்களுக்கும் அனைத்து பாரதீயர்களும் நன்றிக்
கடன் பட்டுள்ளார்கள்.
இந்த நூலை ஒரே அமர்வில் படிக்க முடியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் தாக்கமும்
வடிய ஓரிரண்டு நாட்கள் பிடித்தன. பெரும் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்
வரலாற்று உண்மைகளைக் கொண்ட இந்த நூலை நமக்கு அளித்த ஆசிரியர் பைரப்பா அவர்களுக்கு நமது
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Posted on 3 Comments

திராவிட இயக்கம் என்னும் அபத்தம் – ஆமருவி தேவநாதன்

‘திராவிட இயக்கம் என்னும் மாபெரும் தமிழ் மக்கள் படை’ என்னும் பெரும் பொய் பல்லாண்டுகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. முதலில் ‘திராவிட’ என்னும் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. அதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன் அச்சொல் பயன்படுத்தப்பட்ட பிரபலமான சௌந்தர்யலஹரி ஸ்லோகம் இதோ:

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர கன்யே ஹ்ருதயத:
பய: பாரா வார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிட ஶிஶு ராஸ்வாத்ய ஸததம்
கவீநாம் ப்ரௌடாநா மஜநி கமநீய: கவயிதா

8-9ம் நூற்றாண்டின் ஆதி சங்கரர் இயற்றிய இந்த ஸ்லோகத்தில் சீர்காழியில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ – ‘திராவிடத்தின் குழந்தை’ என்று அழைக்கிறார். முதலில் ‘திராவிட’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டதாகப் பொதுவெளியில் நாம் அறிந்துள்ள பாடல் இது. இதில் ஞானசம்பந்தரும், ஆதிசங்கரருமே தற்கால ‘திராவிட விதி’களின் படி திராவிடர்கள் அல்லர். இருவரும் அந்தணர்கள். ஆதிசங்கரர் ‘திராவிட’ என்னும் சொல்லை ஒரு சாதியையோ, இனத்தையோ குறிப்பிடப் பயன்படுத்தவில்லை.

நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்னும் திருமால் குறித்த 12 ஆழ்வார்களின் பாசுரங்களில், நம்மாழ்வார் எழுதிய ‘திருவாய்மொழி’ பகுதியை ‘திராவிட வேதம்’ என்று அழைப்பது பண்டைய வைணவ மரபு. பின்னாட்களில் பிரபந்தம் முழுமையுமே அப்படி அழைக்கப்பட்டது. ஆழ்வார்களில் முன்னவரான வேளாளர் குலத் தோன்றல் நம்மாழ்வார் குறித்த தனியன் எனப்படும் துதியில் ‘திராவிட வேத சாகரம்’ என்கிற சொல்லாடல் தந்து வியக்க வைக்கிறார் நாதமுனிகள். (ஒன்பதாம் நூற்றாண்டு.)

பக்தாம்ருதம் விஸ்வ ஜனாநு மோதநம்
சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சகஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்
நமாம்யஹம் திராவிட வேத சாகரம்

‘திராவிட’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் என்ன?

மனு ஸ்மிருதியில் உரிய காலத்தில் உப-நயனம் (பூணூல் அணிவிப்பது) நடைபெறாத ஷத்ரியன், ‘விராத்ய ஷத்ரியன்’ என்று அறியப்படுகிறான். ஒரு விராத்ய ஷத்ரியனுக்கும், ஷத்ரிய மனைவிக்கும் பிறக்கும் மகன், அவன் வாழும் பிரதேசத்தை வைத்து ‘மல்லா’, ‘கல்லா’, ‘லிக்கிவி’, ‘நட’, ‘கரண’, ‘கஸா’, ‘திராவிட’ என்று வட்டாரங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டான். (மனு ஸ்மிருதி – 10:21, 10:22).

மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் இயற்றப்பட்ட ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூல், தென்னாட்டுப் பிராமணர்களை ‘திராவிட பிராம்மணர்கள்’ என்றே வழங்குகிறது. பல வடநாட்டுப் பிராமணர்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘திராவிட்’ என்று சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள். ( கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் போல.) இவர்களின் தென்னகத் தொடர்பை இது தெளிவுபடுத்துகிறது. ஆக, ‘திராவிட’ என்னும் சொல் பிராந்தியத்தைக் குறிப்பது என்பது புலனாகிறது. ( ‘திராவிட இயக்கம்- புனைவும் உண்மையும்’, மலர்மன்னன் பக்: 15.)

சமணப் பிரிவுகளில் ஒன்றான ‘நந்தி கணம்’ சார்ந்தவர்கள் ‘த்ரமிளச் சங்கம்’ அல்லது ‘திராவிடச் சங்கம்’ என்பதாகவே ஒன்றைக் கர்நாடகப் பகுதியில் நிறுவியிருந்ததாகத் தமிழறிஞர் சீனி வேங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் தெரிவிக்கிறார். இதற்குச் சான்றாக அவர் ‘EC Vol.V. Hassan Talku, 131, Arsikera Tq, IEC IV, Gundlupet Tq 27’ என்ற ஒரு சாசனத்தை மேற்கோள் காட்டுகிறார். வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி கி.பி. 5ம் நூற்றாண்டில் மதுரையில் ‘திராவிடச் சங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கினார் என்று தேவசேனர் என்பார் எழுதிய ‘தர்சனாசாரம்’ என்னும் நூலில் காணப்படுகிறது என்றும் சீனி வேங்கடசாமி தெரிவிக்கிறார். வஜ்ரநந்தி, தேவசேனர், தர்சனாசாரம் முதலிய சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்திய சமணர்கள் மதுரையிலும், கர்நாடகத்திலும் ‘திராவிட’ என்னும் பெயர் கொண்ட அமைப்புக்களைத் தென் பாரதத்தில் துவங்கியதால் ‘திராவிட’ என்னும் சொல் பிரதேசத்தைக் குறிப்பதாகும் என்பது தெளிவு.

கி.பி. 1777 – 1819 வரை வாழ்ந்த பிரன்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்னும் ஆங்கில ஆட்சியாளர் தென் பாரதத்தில் பணியாற்றவேண்டுமெனில் தென் மொழிகளில் பயிற்சி வேண்டும் என்று 1812ல் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியைத் துவங்கினார். தமிழில் ஆர்வமும் பாண்டித்யமும் கைவரப்பெற்ற இவர், தென்பாரத மொழிகளுக்கிடையே இருந்த ஒற்றுமைகளை ஆய்வு செய்து கண்டறிந்தார். திருக்குறள் மீது தனி அபிமானம் கொண்டிருந்த எல்லீஸ், அதிலிருந்து சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். நாணயம் அச்சடிக்கும் அதிகாரியாக இருந்த அவர், திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயம் வெளியிட்டார். ‘எல்லீசன்’ என்று அன்றைய தமிழ் மக்களால் அறியப்பட்ட இவர், ‘நமச்சிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தைத் துதித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு செய்யுள் இயற்றியுள்ளார்’ என்று தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை ‘கிறித்தவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூலில் தெரிவிக்கிறார்.

தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து ஏ.டி.கேப்ம்பெல் (A.D.Campbell) என்பார் எழுதிய நூலிற்கு எல்லீஸ் முன்னுரை எழுதுகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்க்ருதம் முதலிய நான்கு மொழிகளுக்கு ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விவாதிக்கிறார். ( Note to the Introduction and Grammar of the Teloogoo Language by A.D.Campbell, College of Ft.St.George, Madras, 1916.) இவ்வளவு பாண்டித்யம் உடைய ஒருவர், ஓரிடத்தில் கூட ‘திராவிட’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆக, ‘திராவிட’ என்னும் சொல், தென் இந்திய மொழிகளை இணைக்கும் ஒரு தொகைச் சொல்லாகக் கூட அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததில்லை என்று அறியலாம்.

ஆனால், பின்னாளில் வந்த கிறித்தவப் பாதிரியார் கால்டுவெல், ‘திராவிட மொழிகள்’ என்கிற பாகுபாட்டை அளித்து, திராவிட மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்திற்கும் தொடர்பில்லை என்பதாக ஒரு பிரிவினைப் பாதையை முன்வைத்தார். மொழித் தொகுப்பைக் குறிக்க ‘திராவிட’ என்னும் பிராந்திய அடையாளத்தைக் கையாண்டு, தேசப் பிரிவினைக்குப் பின்னாளில் வித்திட்ட பலருக்கு வழிகாட்டியாய் இருந்தார் பாதிரியார் கால்டுவெல். (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages.)

‘திராவிட’ , ‘திராவிடம் அல்லாத’ என்று இரு பிரிவுகளாக மொழிகளைப் பிரித்தால் மொழிவழியாக பாரத மக்களைப் பிரிக்கலாம், அவர்களைத் தன் மதத்திற்கு மாற்றலாம் என்கிற எண்ணம் கால்டுவெல்லிற்கு இருந்தது. தனது ஒப்பிலக்கண நூலின் முதற்பதிப்பில் எல்லீஸ் பற்றி மேலெழுந்தவாரியாகக் குறிப்பிடும் கால்டுவெல், மூன்றாவது பதிப்பில் எல்லீஸ் பற்றிய குறிப்பை நீக்கினார் என்கிறார் தாமஸ் டிரவுட்மேன் என்னும் மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர். (Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras, Thomas R. Trautman.)

கால்டுவெல் அத்துடன் நிற்கவில்லை. ‘The Tinneveli Shanars: Sketch of their religion and their moral condition and characteristics – with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them’ என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். சாணார்கள் வணங்குபவை பேய் பிசாசுகள் என்றும், அவை பிராமணர்கள் வழிபடும் மேனிலைத் தெய்வங்கள் அல்ல என்றும் வாதிடுகிறார். பிராமண , பிராமணரல்லாத என்று இரு பிரிவுகளை உண்டாக்கினால் தென்பாரதம் முழுமையையும் சேசுசபையின் கீழ் கொண்டு வர ஏதுவாகும் என்கிற நோக்கில் செயல்பட்ட பாதிரியார் கால்டுவெல், இன்றைய ‘திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள்’ என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களால் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

சுயமரியாதை இயக்கம், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றெல்லாம் பிராமணர் அல்லாத மேட்டுக்குடி ஜமீந்தார்களின் சங்கங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்டன. பிராமணர் அல்லாதோருக்காக அரசாங்கத்தில் பேசி, வேலை, கல்வி முதலியவற்றில் அதிக இடங்களைப் பெறுவதற்காகத் துவங்கப்பெற்ற இவை, பிரிட்டிஷ் ஆட்சியின் அடிவருடிகளாகச் செயல்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியும், விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தியும் பல செயல்களில் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. இவற்றின் தலைவர்களுக்குள் மோதல்களும் போட்டிகளும் மலிந்திருந்தன. அப்போது இவ்வியக்கங்களை ஒருவாறு ஒன்றுபடுத்தி அதன் தலைவரானவர் ஈ.வெ.ரா. இந்தியாவின் சுதந்திரத் தினத்தைக் கறுப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், திராவிட நாடு என்கிற தனி நாடு வேண்டும் என்றும் உரக்கப் பேசி வந்தார் ஈ.வெ.ரா. ‘பாகிஸ்தான்’ கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன்வைத்தபோது, ‘திராவிடஸ்தான்’ என்னும் ஒரு தேசத்தையும் சேர்த்துக் கேட்குமாறு ஈ.வெ.ரா. கேட்டிருந்தார். ஜின்னா அதைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

‘திராவிடஸ்தான்’ கோரிக்கை எடுபடாததாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோர் திராவிட நாட்டை ஏற்காததாலும், ’திராவிடம்’ என்பது தமிழகத்தை மட்டுமே குறிப்பதாகத் தற்போது பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

ஈ.வெ.ரா.வைத் திராவிட இயக்கத் தலைவர் என்பது போலித்தனத்தின் பேருருவம். கன்னட வைணவரான இவர் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று கூறியவர். சிலப்பதிகாரத்தை விலைமாது எனப் பேசியவர்.1 திருக்குறளை ‘ஆரியப் பார்ப்பன நூல்’ என்று அழைத்தார். பின்னர் பலகாலம் கழித்துத் திருக்குறள் பற்றிய தன் கருத்தை மாற்றிக்கொண்டார். வள்ளுவர் சமணர் எனத் தற்காலத்தில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும், ஆரியப் படையெடுப்பு என்பது வழக்கொழிந்து போன ஆங்கிலேயப் புனைவு என்பதும் வேறு விஷயங்கள்.

ஈ.வெ.ரா.வின் திராவிட நாட்டுப் பற்று, அவர் அதனை வலியுறுத்தி வந்த காலத்திலேயே கேள்விக்குரியதாக இருந்தது. ஒரு பக்கம் திராவிட நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராகப் பேசிக்கொண்டிருந்தார். திசம்பர் 4, 1940ல் சேலத்தில் பேசும்போது ஆட்சி அதிகாரத்தில் பிராமணர் அல்லாதோருக்கு உரிய பங்களித்தால் தமது கட்சியினர் அனைவருடனும் தானும் காங்கிரசில் சேர்ந்துவிடுவதாகக் கூறினார். ஆக, அடைந்தே தீர வேண்டியதாக இருந்த ‘திராவிட நாடு’ ஈ.வெ.ரா.வால் காற்றில் பறக்கவிடப்பட்டது.

ஈ.வெ.ரா.வின் வழி வந்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட அண்ணாதுரை ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்னும் கோஷத்தை முன்வைத்தார். ‘தனி நாடு’ கோரிக்கையை முன்வைத்தால் இந்திய அரசு இறங்கிவரும் என்று பகல் கனவு கண்ட அவரை, நேரு 1962ல் ‘தேச துரோகச் சட்டம்’ இயற்றியதன் மூலம் பணியவைத்தார். பின்னர் தனி நாடு கேட்ட அண்ணாதுரை 1967ல் இந்திய இறையாண்மையைக் காக்க உறுதிமொழி எடுத்து இந்தியத் திருநாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வராகி, ‘திராவிட நாடு’ என்னும் நகைச்சுவையை முடித்துவைத்தார்.

இந்தியத் தேசியத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படும் வெற்றுப் பிரசாரமாக மட்டுமே திராவிட இயக்கக் கோஷம் மாறிவிட்டது தற்கால அபத்தங்களில் ஒன்று. இன்று ‘திராவிட’ என்று துவங்கும் எதனையும் பற்றி நினைக்கும்போது உடனே பளிச்சிடுவது அச்சொல்லைத் தன் பெயரில் கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் ஊழல் மட்டுமே என்பது நிதர்சனம்.

*********

உதவிய நூல்கள் :

திராவிட மாயை ஒரு பார்வை – சுப்பு

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – மலர்மன்னன்

அடிக்குறிப்பு:

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51)

“…இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.”

Posted on Leave a comment

இராமானுசன் என்னும் சமதர்மன் – ஆமருவி தேவநாதன்

பாரத தேசம் யோக பூமி. கல்விக்கும் ஞானத் தேடல்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த நாடு. பாரதி – ‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் / பிரானருள் பொங்கிய நாடு’ என்கிறார். பாரத ஞான மரபு பற்றிய எதிர்மறை நோக்குகளை மார்க்சியர்கள் முன்வைத்தனர். கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இரு கிளைகளாகப் பார்த்தனர். ஆங்கில, ஐரோப்பிய ஆய்வாளர்களும் இதே நோக்கில் பாரதத்தின் ஞான மரபை அணுகினர். பாரத ஞான மரபு வைதீக, அவைதீகப் பார்வைகளைக் கொண்டது. நாம் இந்தக் கண்ணோட்டத்தில் நமது சம்பிரதாயத்தைப் பார்ப்பது சரியான வழியாக இருக்கும்.
அவைதீக மரபு பவுத்தம், ஜைனம், சார்வாகம்.
வைதீக மரபு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலானவை.
பவுத்தம், ஜைனம், சார்வாகம், லோகாயதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று பல தத்துவங்கள்
 பாரத ஞான மரபில் இவற்றின் இருப்பிடங்கள் தனித்தனி ஞான பீடங்கள்
இத்தனை பன்முகப்பட்ட மனிதக் கூட்டத்தின் பரந்த ஞானத் தேடல்களுக்கான முயற்சியில் இவற்றின் தேவை இருப்பதை உணர முடிகிறது..
பாரத ஞான மரபின் அடிப்படைக் கொள்கை : ஒன்றை ஒன்று அழிக்காமல் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது. இரண்டும் வாழ்வது. அத்வைதத்தில் இருந்து விசிஷ்டாத்வைதம் தோன்றியது. ஆனாலும் இரண்டும் வாழ்ந்தன. அனைத்துப் பாதைகளும் கொண்டு சேர்க்கும் இடம் ஒன்றே என்பது நமது பண்பாடு. ‘ஆகாசாது பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்…என்பதே நமது பண்பாட்டுப் பார்வை.
இந்தப் பிரபஞ்சம் விஷ்ணுவின் உடல் என்னும் கருத்துடன் செயல்பட்ட நமது பண்பாட்டில் அழிவு, அழிப்பது என்பன பொருந்தாதவை. தெரியாத, அறிந்துகொள்ள முடியாத, புறக்கண்ணால் தெரிந்துகொள்ள முடியாத பரம்பொருளை, பிரபஞ்ச ஞானத்தை உருவகம் மூலம் உணரும் இறை வடிவுகள். இந்த வடிவுகளையே இறைவன் என்று சொல்லி அவற்றுக்கான ஆராதனைகளை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
உதாரணமாக, ஆற்றங்கரையில் உள்ள கூழாங்கல் மலை மேலிருந்து உருண்ட பாறை, சில ஆயிர ஆண்டுகள் கழித்து இன்று நமது கையில் வட்ட வடிவமான சிறிய கல்லாக இருக்கிறது. ஆக, அக்கூழாங்கல்லின் வடிவம் அதுதானா? நமது அகக் கண்களால் நாம் காணக்கூடியது அது. முப்பரிமாணத்தில், நமது அறிவுக்கு எட்டிய அளவுகோல்களுடன் நாம் கூழாங்கல்லை சிறிய வடிவினதாகக் காண்கிறோம். ஆனால் அக்கல் பல ஆயிரம் ஆண்டுகள் விரிந்த வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கூழாங்கல் அந்த நெடிய வரலாற்றின் உருவகம். ஆனால் அக்கல்லே அதன் முந்தைய வடிவு அல்ல. ஆனாலும் அக்கல் உணர்த்துவது பெரிய உண்மைகளையே. இந்தக் கண்ணோட்டத்துடன் நாம் இராமானுசரைக் காண்கிறோம். இராமானுசர் அந்தக் கூழாங்கல் போன்றவர்.
கடைந்து வடிகட்டிய பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஞானத் தேக்கங்களை ஒன்றிணைத்து, நமது அறிவிற்குப் புலப்படும்படிச் சொன்னவர் அவர்.
விசிஷ்டாத்வைதம்: விசிஷ்டம் + அத்வைதம் விவரிக்கப்பட்ட அத்வைதம். வெறும் அத்வைதம் ஒரு பிரும்மத்தை உணர்த்தியது. மற்ற அனைத்தும் பிம்பம் என்றது. பிரதி பிம்ப வாதம் என்று உரைத்தது. சூரிய ஒளியின் கிரணங்கள் பல கண்ணாடித் துகள்களில் படுவதால் பல சூரியர்கள் இருப்பது போல் தோன்றுவது மாயை. அஞ்ஞானம் அகன்று உண்மைதெரிய, மாயை அகலும். அப்போது ஒரு சூரியன் உணரப்படும்.
ஆனால் விசிஷ்டாத்வைதத்தில், பிரும்மம் தவிர, ஜீவன், ஜடப்பொருள் முதலிய எல்லாமும் உண்மையே. ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் என்னும் முன்னரும் உண்மைகளே. எனவே பானை செய்பவரும், கை வினைஞரும் உண்மையே. சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பும் உண்மையே. அவர்களுக்கும் ஏற்றம் உண்டு. மேலும், அனைவருக்கும், அனைத்துக்கும் மோட்சம் உண்டு.
பிரும்மம் தவிர்த்த ஜீவன்கள், ஜடப் பொருட்கள் முதலியனவற்றுக்கிடையே வேற்றுமைகள் இல்லை. ஏனெனில், அனைவருள்ளும், அனைத்துள்ளும் இருக்கும் ஆத்மா ஒன்றே; உடல் ஸ்திரமற்றது; ஆத்ம அளவில் வேறுபாடு இல்லை. எனவே பிரம்மம் தவிர்த்த அனைத்தும் ஒன்றே என்பதால் அனைத்திற்கும் உய்யும் வழியும், உய்வதற்கான அதிகாரமும் உண்டு என்பது ஸ்ரீமத் இராமானுசரின் விசிஷ்டாத்வைதப் பார்வை.
ஜடப்பொருட்களும் உண்மையே என்பதில் ஒரு சிறப்பு உள்ளது. அதுதான் தற்காலத்தில் சூழியல்குறித்த பார்வை. ‘என் தேவைகளுக்காக இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது’ என்பது நமது சித்தாந்தம் இல்லையாதலாலும், ஜடப்பொருட்களுக்கும் ஆத்மா உள்ளது என்கிற சித்தாந்தப் பார்வையாலும் மரம், செடி, கொடிகளை மனிதனின் தேவைகளுக்காக அழிக்க வழி இல்லை. நவீன சூழியல் (Environmental Conservation) பார்வையும் உள்ளடங்கி இருப்பதை நாம் உணர வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பார்வையாக இராமானுசரது சித்தாந்தம் பரிணமிக்கிறது. ஆனால், இவரது பார்வை புதியது அல்ல. இராமானுசரது பார்வைக்கு முன்னோடிகள் இருந்துள்ளனர். அவர்கள் ஆழ்வார்களாவர். இவற்றுக்குப் பாசுரங்கள் துணை நிற்கின்றன. ஆக ஆழ்வார் ஆச்சாரியார்களின் அனுக்ரஹம் இருப்பதாகவே தெரிகிறது.
பெரியாழ்வாரின் பாசுர வரி ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து…’ என்பது ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்று. இந்த வரியையும் ‘கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடியாட் செய்கின்றோம்’ என்னும் வரியும் சித்தாந்தத்தை அங்கீகரித்த ஆழ்வார்களின் ஆசியுரைகள் என்று கொள்ளலாம்..
ஸமாஸ்ரயனத்தில் / பார நியாசத்தில் தாஸ்ய நாமம் என்பதையும் இணைத்து நோக்க, மனிதர்களுக்கிடையேயான சமன்வயப் பார்வை (Uniformity in treatment) குறித்த நமது சித்தாந்தப் புரிதல் எளிதாகிறது. ஊர்த்துவ புண்ட்ரத்தால் தோற்ற ஒருமை (Uniformity in appearance) புலப்படுகிறது.
தத்துவமும் செயல்பாடும் ஒன்றிணையும் நிலையை நாம் இராமானுசரிடம் காண்கிறோம். கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் இணைந்து அனைவருக்கும் மோட்சம் என்னும் பொது நன்மைக்கான வழி. பெரும் பாண்டித்யம் உள்ள தர்க்க சாஸ்திர விற்பன்னர்களும், பானை செய்பவர்களும் ஒன்றெனக் கொண்ட நிலை. ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் உடன்பாடு உடைய ஒரு சித்தாந்தம் என்று நமது இராமானுச சித்தாந்தம் விரிகிறது.
கர்நாடகப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இராமானுசர் செல்லப்பிள்ளை விக்ரகத்தைக் கொணரும்போது உதவியதும், அதனால் அவர்களை இராமானுசர் வைஷ்ணவர்களாக்கியதும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது. உபநயனம் என்னும் சம்ஸ்காரத்தாலும் ஸமாஸ்ரயணம் என்னும் ஒருமைப்படுத்தல் சடங்காலும் சமூக அளவில் ஆகப்பெரிய ஒற்றுமைப்படுத்தல் நிகழ்வை, நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் நிகழ்த்தியமையால், சொல், செயல், நடத்தை என்னும் மூன்றும் இராமானுசரிடம் ஒன்றாயிருந்ததைக் காட்டுகிறது. (மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒருமுகமாகவும் ஒரு சேரவும் இருப்பது ஆன்றோர் நடத்தை). அப்படி நடந்தவர் உடையவர்.
ஆழ்வார்கள் பல இனங்களில் இருந்தும் வந்த நிலை, இவர்களைக் கோவிலுக்குள் எழுந்தருளப்பண்ண இராமானுசர் செய்த செயல்கள் என்று அனைவரும் உட்செல்லக் கூடிய ஒரு நிலை. இதனைச் செயல்படுத்த அவர் மேற்கொண்ட பாஞ்சராத்ர ஆகம வலியுறுத்தல் முதலியன கவனிக்கத்தக்கவை. கோவிலில் மாற்றம் ஏற்பட ஆகமம் தடையென்றால், புதிய ஆகமத்தை உட்புகுத்துவதால் பெருவாரியான மக்கள் ஆலயங்களுக்குள் சென்று ஒன்றுபட இயலும் என்றால், அதற்காக அதனைச் செய்யவும் இராமானுசர் தயங்கியதில்லை என்பதே அவர் மானுட சமத்துவத்தைச் செயல்படுத்த முனைந்ததை உணர்த்துகிறது. இது நாம் இன்றளவும் நினைத்து மிகவும் பெருமைப்படத் தக்க செயல்.
திருவரங்கக் கோவிலுக்குள் பணிகளைப் பிரித்துக் கொடுத்து பல பண்டாரங்களை ஏற்படுத்தினார் உடையவர். இந்தப் பண்டார அமைப்பு நவீன கார்ப்பரேட் நிறுவங்களின் நிர்வாக அமைப்புக்களுக்கு
ஈடாக உள்ளதைக் காண்கிறோம். வேலையைப் பகிர்ந்துகொளல் (Division of Labour) என்னும் வழிமுறைகள் 1,000 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப் படுத்தப்பட்டது புரட்சியே. எந்தத்துறையும் இழிவல்ல; ஆனால் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நவீன நிறுவனங்கள் செயல்பட முடியும்.  
கோவிலையும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட, சரியான வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் கொண்டுவந்தது எம்பெருமானாரின் முன்னோக்கிய பார்வையை உணர்த்துகிறது.
பல தத்துவங்கள் ஆன்மீகத்தையே முன்னிறுத்தின. இன்னும் பல, சமூகப் பார்வையை முன்னிறுத்தின. ஆனால், இராமானுசர் உரைத்த பாதை சமூகம், ஆன்மீகம் இவற்றுடன் பொருளாதாரத்தையும் இணைத்தது. பல பிரிவினரையும் கோவிலின் அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம், அவர்களின் தொழில் திறமைகள் பயன்பட்டன. பூதொடுத்தல், மடப்பள்ளி கைங்கர்யங்கள், கணக்கு வழக்குகள் சரிபார்த்தல், காவிரியின் கரை உடையாமல் பழுது பார்த்தல் முதலிய பல திறமைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. சமூகத்தின் திறமைகள் அனைத்தும் மக்களின் ஒருங்கிணைந்து ஒற்றுமைக்கும் மேம்பாட்டுக்கும் பயன்பட்டன. சமூகத்தின் வெளிப்புறத்தில் இருத்திவைக்கப்பட்ட கைவினைஞர்கள், பொற்கொல்லர்கள் முதலானோர் சம்பிரதாயத்திற்கான தங்களது பங்களிப்பால் சமூகத்தின் உள்ளே வந்தனர். இதை இராமானுசரது சீரிய திட்டம் எனலாம்.
எந்த ஒரு பெரிய அமைப்பையும் நிறுவுபவர், அதனை சீராக வழிநடத்திச் செல்ல, தானே முன்னின்று செயல்படுவது உலக மரபு. அவர்கள் தங்களுக்குப் பின்னரும் அந்த அமைப்புகள் சரியாக நடைபெற வேண்டி பல வழிகாட்டுதல்களையும், அடுத்த கட்டத் தலைவர்களையும் உருவாக்கி, அதிகாரப் பரவல் ஏற்படும்படிs செய்வர். உடையவரும் அவ்வாறே தனக்குப் பின்னும் விசிஷ்டாத்வத சம்பிரதாயம் தழைக்க, கோவில்கள் சரிவர நடைபெற சிம்மாசனாதிபதிகளை நியமித்து சம்பிரதாயம் தொடர வழிவகுத்தார்.
இன்றைக்குஒருங்கிணைந்த சமூகம்’ (Inclusive Society) என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. இராமானுசர் இதை 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தினார். ‘சாத்திய முதலிகள்’, ‘சாத்தாத முதலிகள்என்னும் ஏற்பாடு அவரது சாதுர்யமான கையாளல் என்று தோன்றுகிறது. அதிகார அடுக்குகளை ஒரே அடியாக வீழ்த்த முடியாது என்பதால் இந்த முறை ஒரு நடுவு நிலை போல் தோற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்த முறையானது செயல்பட்டது. இன்றும் செயல் அளவில் முன்னேறியுள்ளது. சாத்தாத சாதியினரான புருஷோத்தம நாயுடு முதியோரின் உரைகள் நமக்குக் கிடைக்க இந்த அங்கீகாரம் வழிசெய்தது என்பது எத்தனை முற்போக்கான வழி என்று வியக்க வைக்கிறது.
இன்றைக்கும் கொங்கு தேசத்தில் வைணவம் செழித்து, ‘கண்ணன் கூட்டம்’ முதலான வைணவ அமைப்புகள் திருமால் பெருமையையும் வைணவ சம்பிரதாயத்தையும் பேண உதவுகின்றன என்பது உடையவரின் அதிமுற்போக்கான சமூக ஆற்றுப்படுத்தலால்தான் என்பதில் ஐயம் இல்லை.
கொங்கப்பிராட்டி வைபவம் இங்கு நோக்கத்தகக்து.
இந்திய சமயத்தினரை மட்டும் அல்லாது, துருஷ்க சமயத்தினரையும் தன்னகத்தே உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மையை விசிஷ்டாத்வைதத்தில் புகுத்திய இராமானுசர் பெரிய ராஜதந்திரியாகவும் தெரிகிறார். ஆட்சியாளர்கள் துருஷ்கர்களாக இருந்தாலும் பிற்காலத்தில் கோவில் அமைப்புகளுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது போல். துருஷ்க நாச்சியாரையும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்து, அனைவரையும் ஒருங்கிணைக்கும் சமுதாய அமைப்பை உருவாக்கிய அவரது பார்வை தீட்சண்யம் வியக்க வைக்கிறது. இதுதான் உடையவரது பார்வை என்று கொள்ள இயலாது. ஆனால் அப்படி இருந்திருக்க வாய்ப்புள்ளது.
வைணவம் வெறும் பண்டிதர்களின் கைப்பொருளாக, வழிபாட்டு முறையாக மட்டுமே இருந்திருக்குமேயானால், இன்றளவும் தழைத்து நின்றிருக்குமா என்பது கேள்வியே. விசிஷ்டாத்வைத தத்துவத்தின்படி, எண்ணம், சொல், செயல் என்று அனைத்தும் ஒன்றாக இருக்கும் / இயங்கும் ஒரு சமூக, ஆன்மீக, வழிபாட்டு முறையை உருவாக்கியதன் மூலமும், அம்முறையில் வேறுபாடுகளற்ற சமதர்மச் சூழல் ஏற்படும்படி செய்த உடையவர் திட்டம் உலகில் தோன்றிய வேறெந்த சமூக, பொருளாதார, ஆன்மீகப் புரட்சிகளுக்கும் முற்பட்ட சமதர்மப் புரட்சி எனலாம்.


Posted on Leave a comment

சோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் – ஆமருவி தேவநாதன்

100 ரூபாய் சம்பளம், ஆனால்
95 ரூபாய் வருமான வரி என்றால் நம்புவீர்களா? அப்படித்தான் இருந்தது இந்தியா. இந்திராவின்
ஆட்சியில் அதிகபட்ச அளவாக 95% வருமான வரி இருந்தது.
1
அப்படி கொடூரமான வரி விதிப்பு
இருக்கவேண்டிய காரணம் என்ன? பாரதத்தில் நெல், கோதுமை முதலியன விளையவில்லையா? ஆகவே சிங்கப்புர்
போல் உணவு தானியங்களைக் கூட இறக்குமதி செய்யவேண்டி இருந்ததா? அதனால் வேறு வழி இல்லாமல்
அரசு இவ்வளவு வரி விதித்ததா?

நேருவிய சோஷலிசம் – அதனால்
ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள் – அதே பொருளாதார வித்தை முன்னெடுத்துச் சென்று, அந்த
விஷ விதைக்கு உரமிட்டு நீரூற்றி வளர்த்ததன் பயனாக நாட்டின் வருமானம் குறைந்தது – அதனால்
இப்படியான கொடும் வரி விதிப்பு என்று செயல்பட்டது நேருவின் புதல்வி இந்திராவின் ஆட்சி.
விவரமாகப் பார்ப்போம்.

விடுதலை அடைந்தவுடன் பண்டித
நேரு அவர்கள் வேளாண்மையையும் நாட்டின் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு, தொழிற்சாலைகளைப்
பெருக்குவதில் முனைந்தார். அன்றைய சோவியத் குடியரசின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சோஷியலிசமே
பாரதம் உய்ய வழி என்று நம்பினார். பொருளாதாரத் திட்டமிடல் மத்தியில் நடைபெறவேண்டும்
என்று சோவியத் வழியில், ‘திட்டக்கமிஷன்’ என்னும் பேரதிகாரங்கள் படைத்த நிறுவனத்தைத்
துவங்கினார். மாநிலங்கள் தங்களின் வருடாந்திரத் தேவைகளுக்கு திட்டக்கமிஷனின் கடைக்கண்
பார்வைக்கு ஏங்கி டெல்லிக்கு வந்து கையேந்தி நிற்க வழிவகுத்தார். ஐந்தாண்டுத் திட்டங்கள்
என்னும் முறையையும் கொண்டுவந்து மத்தியத் திட்டமிடல் என்னும் முறையால் நாட்டின் வளர்ச்சிக்கு
ஐந்தாண்டுக்கு ஒருமுறையேனும் தடை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது திட்டக்கமிஷன்.
திட்டமிடல், உற்பத்தி,
வழங்கல் அனைத்துமே சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்பது கம்யூனிச
சர்வாதிகாரத்தின் சிந்தனை. அதுவே நேருவிய சோஷியலிசத்தின் மையக்கூறாகவும் இருந்தது.
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளும், மாநிலத்தில் செயல்படும்
உள்ளாட்சி, பஞ்சாயத்துக்களும் முறையே அதனதன் மேற்பார்வையாளரான அரசுகளிடம் கையேந்தி
நிற்க வேண்டும். டெல்லியில் அமர்ந்திருக்கும் திட்டக்கமிஷன் என்னும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத,
அதிகாரிகளின் அமைப்பு, கையேந்தி நிற்கும் மாநில அரசுகளுக்கு தானம் செய்வது போல் ஆண்டுதோறும்
நிதி வழங்கும். சோவியத் ரஷ்யாவின் அப்பட்டமான இந்தப் பொருளாதார முறையையே நேருவும் இந்தியாவில்
செய்தார்.


சோஷியலிசம் என்னும் பொருளாதார
முறையை எப்படியேனும் அமலுக்குக் கொண்டுவந்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான,
வலுவான பொருளாதார முறையாக முன்னிறுத்த நேரு உறுதி பூண்ட ஆண்டு 1927. பி.யூ.படேல் என்னும்
பொருளாதார நிபுணர் சொல்வது,
“நேருவின்
சோஷியலிசப் பொருளாதார ஈர்ப்புக்குக் காரணம், அவர் 1927ல் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று
வந்ததே ஆகும்.
” 1932, 1933ல் தனது மகள்
இந்திராவிற்குக் கடிதம் எழுதும்போது நேரு சொல்வது: “பழைய ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார
முறைகள் உடைந்துவருகின்றன… சோஷியலிசப் பொருளாதார முறைக்கு மாற வேண்டிய காலம் கனிந்துள்ளது.”
(Patel 1964; p.245)
சோவியத் ரஷ்யாவிற்கு ஒருமுறை
சென்று வந்ததாலேயே பாரதத்தின் பொருளாதார முறையையே மாற்றவேண்டும் என்று முழங்கினார்
நேரு. 1936ல் நடந்த காங்கிரசின் 49வது மாநாட்டில்: “இந்தியாவின் பிரச்சினைகளுக்கு ஒரே
தீர்வு சோஷியலிசத்தில்தான் அடங்கியுள்ளது என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இது புது வகையான பொருளாதாரம். அத்தகைய பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை சோவியத்
ரஷ்யாவின் மாநிலங்களில் நாம் காணலாம். நமது எதிர்காலம் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக
இருப்பது சோவியத் ரஷ்யா என்னும் நாடு இருப்பதாலும் அது செய்துவரும் செயற்கரிய செயல்களாலும்தான்.
சோஷலிசத்தை வெறும் பொருளாதாரக் கொள்கையாக நான் பார்க்கவில்லை. அது என் மனம், அறிவு
அனைத்திலும் வியாபித்திருக்கிறது…” என்றார்.
சோஷலிசம் பற்றி அனைத்துத்
தலைவர்களும் நேரு கொண்டிருந்த கருத்தையேதான் கொண்டிருந்தார்களா?
சோஷலிசம் பற்றிய வல்லபாய்
படேலின் பார்வை கடுமையானதாகவே இருந்தது. இளம் சோஷலிஸ்டுகள் மத்தியில் பேசுகையில் “சோஷலிசம்
பற்றிப் பேசுவதற்கு முன் உங்கள் உழைப்பால் என்ன பொருளீட்டியுள்ளீர்கள் என்று உங்களையே
கேட்டுக் கொள்ளுங்கள். உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என்று தெரிந்துகொண்டு பின்னர்
விளைச்சலை என்ன செய்யலாம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று சோஷலிச எதிர்க்குரலை
1950லேயே எழுப்பினார். நேரு காதில் வாங்கிக்கொள்வதாய்த் தெரியவில்லை.
பாரதத்தின் அரசியலமைப்புச்
சட்டத்தை இயற்றுவதில் பெரும் பங்காற்றிய அம்பேத்கர் அவர்கள் ‘சோஷியலிசம்’ என்னும் சொல்லை
அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறையில் சேர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.
பின்னாளில் பாரத மக்கள் தங்களின் அரசு எவ்வகையான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்க
வேண்டும் என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்படும் வேளையில் உறுதி செய்ய முடியாது,
எனவே அந்நாளைய பொருளாதாரக் கொள்கையைப் பின்னாளைய மக்களின் மேல் திணிக்கக் கூடாது என்பதில்
அம்பேத்கர் உறுதியாக இருந்தார். சோஷியலிசம் என்னும் சொல்லை மட்டும் அல்ல, செக்யூலரிசம்
என்னும் சொல்லையும் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சேர்க்க அவர் முன்வரவில்லை.
அம்பேத்கர் அத்துடன் நிற்கவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் ஏன் எதிர்க்கிறார்கள்
என்றும் சொல்கிறார்: “நமது அரசியல் அமைப்புச் சட்டம் தனிமனித எதேச்சாதிகாரத்தை முன்னிறுத்தவில்லை.
பாராளுமன்ற ஜனநாயகத்தையே முன்னிறுத்துகிறது. இது கம்யூனிஸ்டுகளுக்குப் பிடிக்கவில்லை.
அதேசமயம் சோஷலிஸ்டுகளுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில், இந்த அரசமைப்புச் சட்டத்தின்படி
தனியார்ச் சொத்துக்களை அவர்களால் அவர்கள் இஷ்டப்படி எந்த நஷ்டஈடும் தராமல் நாட்டுடைமையாக்க
முடியாது… இதனால் எதிர்க்கிறார்கள்…”
அம்பேத்கர் எவற்றை எதிர்த்தாரோ
இந்திரா அவற்றை நடைமுறைப்படுத்தினார். தனது தந்தையின் கொள்கைகளை அடியொற்றி, 1976, இந்திரா
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் (ப்ரியாம்பிள்) இந்த இரு சொற்களையும்
சேர்த்தார். மன்னர் மானியத்தை ஒரே அடியில் ஒழித்தார். இதனால் கம்யூனிஸ்டுகளுக்கு இடமளித்து
நாட்டின் எதிர்காலத்தை இருண்டதாக்கினார்.
சோஷலிசத்தையும் இடதுசாரி
சார்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளையும் மிகக் கடுமையாகச் சாடியவர் இராஜாஜி
அவர்கள்.
மன்னர் மானிய ஒழிப்பு பற்றி
ராஜாஜி இப்படி மனம் வெதும்பிப் பேசுகிறார். “காங்கிரஸ்காரர்கள் பேசுகிறார்கள்: இராமாயணப்
பாத்திரம் இராமன் எவ்வளவு பெரிய முட்டாள்! கொடுத்த வாக்கை நிறைவேற்றக் கானகம் சென்றானே!
மன்னர்களுக்கு வாக்குறுதி கொடுத்ததுபோல் கொடுத்துப் பின்னர் அவர்களுக்குத் துரோகம்
செய்வதுதானே புத்திசாலித்தனம்?” (Swarajya, 27.7.68) மேலும் பேசுகையில், “
மன்னர் மானியங்கள் பற்றிய பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டவர்களில் நேருவும் படேலும் காலமாகிவிட்டனர். நான் மட்டும் உயிருடன் இருந்து
வாக்கைக் காக்க முடியாமையை எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறேன்
” என்கிறார். பாரத விடுதலைக்கென்று தங்கள் ஆவியையே
பணையம் வைத்த தலைவர்களை சோஷலிசம் என்னும் மாயாவாதத்தால் மனம் ஒடிந்து அழச்செய்த பெருமை,
தன்னை சோஷலிஸ்ட் என்று அறிவித்துக்கொண்ட இந்திராவைச் சாரும்.
நேருவும் தான் கொடுத்த
வாக்கைக் காக்கவில்லை. தானியங்கள் உற்பத்தி, அவற்றுக்கான விலை நிர்ணயித்தல், கொள்முதல்,
கூட்டுறவு வேளாண்மை என்று சோஷலிச எதேச்சாதிகாரத்தை நேரு அறிமுகப்படுத்தினார். “இந்த
(சோஷலிச) ஓநாய் சங்கிலியால் பிணைக்கப்பட வேண்டும்” என்று கூறிய இராஜாஜி, ‘வன்முறையான
சோஷலிசம்’, ‘காந்தீயத்திலிருந்து பின்வாங்குதல்’, ‘நான் ஏன் சிவப்புக்கொடி காட்டுகிறேன்’
என்ற தலைப்புகளில் முறையே ’ஸ்வராஜ்யா’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’
இதழ்களில் காட்டமாக எழுதித் தனது
 ஆழ்ந்த எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பாரதத்தில் நேருவால் அமல்படுத்தப்படும்
கூட்டுறவுப் பண்ணைகள், கூட்டுறவு வேளாண்மை முதலியன “ஆழ்ந்த சிந்தனைகளின் பயனால் விளைந்தவை
அல்ல” என்றும், “தனிமனித சுதந்திரம் அற்ற, எதேச்சாதிகாரப் போக்குகள் கொண்ட, மனித உழைப்பை
அரசாணைகளின் மூலம் பெற்று நடத்தப்படும் கொத்தடிமை முறைகள் நிலவும் கம்யூனிச நாடுகளில்
மட்டுமே இவை சாத்தியம்” என்று கடுமையாகச் சாடிய இராஜாஜி, “கம்யூனிஸ்டுகளிடமிருந்து
அவர்களது பெயிண்ட் மற்றும் அதைப் பூசும் பிரஷ் இரண்டையும் காங்கிரஸ் கடன் பெறுகிறது”
என்று கேலி பேசினார். (Indian Express, 19.1.59)
நேருவின் சோஷலிசப் பற்றும்
அவரைப் பின்பற்றிய காங்கிரஸ் அமைச்சர்கள் முதலானோரின் சோஷலிச சத்தியப் பிரமாணங்களும்
நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்த வேளையில் அமைச்சர்களும் காங்கிரஸ்காரர்களும்
செல்வந்தர்களாவதைப் பார்த்து இராஜாஜி அதிசயித்தார். “காங்கிரஸ்காரர்கள் பெரும் செல்வந்தர்களாக
மாறியுள்ளனரே, ஏதாவது புதிய தொழில்கள் செய்து வருகின்றனரா?” என்று நையாண்டி செய்தார்.
(Indian Express, 28.5.56)
எப்படியாவது நாட்டை நேருவிய
சோஷலிசப் பாதையில் இருந்து விடுவிக்கவேண்டும் என்னும் நோக்கில் இராஜாஜி தனது 83-வது
வயதில் ‘சுதந்திரா’ என்னும் கட்சியைத் துவக்கினார். காங்கிரசின் சோஷலிசக் கொள்கையால்
‘லைசன்ஸ்-பர்மிட்-ராஜ்யம்’ நடைபெறுகிறது என்று கடுமையாகச் சாடிய இராஜாஜி, இதனால் காங்கிரசின்
பணக்கார ஆதரவாளர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே வழி வகுக்கப்படுகிறது
என்று மனம் வருந்திப் பேசினார்.
திட்டக்கமிஷன் நாட்டின்
உற்பத்தியைக் குலைக்கிறது என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்த இராஜாஜி, இந்திராவிடம்
அந்த நிறுவனத்தைக் கலைத்து விடும்படி வேண்டினார்.
சோஷலிசக் காதல்கொண்ட காங்கிரஸின்
உண்மை நிலை என்ன? தேர்தல் நேரங்களில் காங்கிரஸ் என்ன செய்தது? இது பற்றி இராஜாஜி சொல்வது:
“நான் சுதந்திரா கட்சியின் தேர்தல் நிதிக்காகப் பிச்சை எடுத்தபோது பெரிய கம்பெனிகளிடம்
காங்கிரஸ் எங்களைவிட ஐந்திலிருந்து இருந்து பத்து மடங்கு பணம் பெற்றிருந்தது.”
(Swarajya, 11.2.67) ‘பேசுவது மானம் இடைப் பேணுவது காமம்’ என்று கம்பன் சொன்னது இதுதான்
போல.
அப்படி சோசலிசத்தால் என்னதான் பயன் விளைந்தது? உணவுத்தட்டுப்பாடு
நீங்கியதா? மக்கள் மூன்று வேளை உணவு உண்டார்களா? தானிய உற்பத்தி அதிகரித்து, பாரதம்
வெளிநாடுகளுக்கு தானிய ஏற்றுமதி செய்ததா
என்றால் இல்லை. 17 ஆண்டுகள் சோஷலிச ஆட்சி செய்த பண்டித நேருவின் மரணத்தின்போது
இந்தியா அமெரிக்கச் சட்டம் 480ன் தயவால், அமெரிக்காவிடமிருந்து கோதுமையை மலிவு விலையில்
பெற்றுவந்தது. சோஷலிசப் பொருளாதாரம் கொண்டுவந்து கொடுத்தது நித்ய தரித்திரம் மட்டுமே.
நேருவால்தான் தரித்திரத்தை
நீக்க முடியவில்லை. இடதுசாரிப் பக்கம் முழுதுமாகச் சாய்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின்
முன்னுரையையே
சோஷலிசத்துக்காக மாற்றிய
இந்திராவாவது செய்தாரா? அதுவும் இல்லை. கடைசியில் ‘கரிபி ஹடாவோ’ (ஏழ்மையை நீக்குவோம்)
என்று வெற்று வார்த்தைகளுடன் அரசியல் நடத்தினார்.
நாட்டை அழிவுப்பாதையில்
கொண்டுசென்ற காங்கிரசின் சோஷலிசக் காதல், இந்திராவின் 95% வருமான வரியையும் தாண்டி
நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரழித்தது.
அதன் பலனாக 1991ல் சந்திரசேகர் அரசு பாரதத்தின் தங்கக் கையிருப்பை அடகு வைக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டது.நரசிம்மராவின் ஆட்சியில் இராஜாஜியின் கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டன.
2014ல் வந்த நரேந்திர மோதியின் அரசு முதல் வேலையாக திட்டக்கமிஷன் என்னும் வெள்ளையானையைக்
காட்டுக்கு அனுப்பியது.

இராஜாஜி மேலுலகில் இருந்தவண்ணம்
மகிழ்ந்திருப்பார்.

அடிக்குறிப்புகள்:

உசாத்துணைகள்:
India Since 1980 – Sumit Ganguly, Rahul Mukherji
Dr.Ambedkar’s speech in the Constituent Assembly on 15
November 1948.
Rajaji, a life – Rajmohan Gandhi
The God Who Failed: An Assessment of Jawaharlal Nehru’s
Leadership by
Madhav Godbole.