Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் (எட்டாவது கடிதம்) | சாவர்க்கர், தமிழில்: VV பாலா



எட்டாவது கடிதம்
செல்லுலர் சிறை.
போர்ட் ப்ளேயர்
21-9-1919
அன்பிற்குரிய சகோதரா,
நீ பம்பாய் சென்று
சேர்ந்ததும் தொடர்பு கொள்வாய் என்று நினைத்தேன். வழக்கத்துக்கும் மாறாக அதிக
நாள் காத்திருந்தேன். ஆனால் இதுவரையிலும் உன்னிடம்
இருந்து எந்த
த்
தகவலும் இல்லாததால் மேற்கொண்டு
காத்திராமல் நானே தொடர்பு கொள்வது எனத் தீர்மானித்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நீ என்னைப் பார்த்தபோது என் உடல்நிலை எப்படி இருந்ததோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது.
நீ வந்து பார்த்துச் சென்ற பிறகு ஒரு வாரத்திற்கு நன்றாக இருந்தது. அதன் பிறகு மலேரியாவோ
அல்லது வயிற்றுப்போக்கின் காரணமாகவோ எனது உடல் நிலை மோசமாகி, உடல் எடையும் குறைந்து
விட்டது. இது போல ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்குத் தொடர்வதால் உடல் எடை பெரிய
அளவில் குறைந்து விடுகிறது. சென்ற வருடம் நான் உனக்குக் கடிதம் எழுதும்போது என் எடை
சராசரியாக 99 பவுண்டுகள் இருந்தது. ஆனால் இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து
கடந்த சில மாதங்களில் 96 ஆகி, பிறகு 95 என்று குறைந்துவிட்டது. இப்போது எனக்கு ஓரளவு
நல்ல உணவும், ஓரளவு நல்ல அறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் என் நிலைமை
இன்னும் மோசமாக இருந்திருக்கும். என் உடல் எடை வேகமாகக் குறைந்துகொண்டு வந்தாலும் எனக்கு
நன்றாகப் பசி எடுக்கிறது. முன்பு போலில்லாமல் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் குறைந்திருக்கின்றன.
இதற்குக் காரணம் கடந்த பத்து மாதங்களாக எனக்கு உணவு மருத்துவமனையில்தான் வழங்கப்படுகிறது.
எனக்கு உடல் நிலை சரியில்லாததாலும் மலேரியா வந்ததாலும் மருத்துவமனையில் நோயாளியாகச்
சிகிச்சை அளிக்கிறார்கள். இதனால் கடுமையான வேலைகள் எனக்கு அளிக்கப்படுவதில்லை. இங்கே
சிறைவாழ்க்கையைப் பொருத்தவரை என்னுடைய உடல்நிலை மோசமான காரணத்தால் இங்குள்ள சிறை சூப்பரின்டண்டன்ட்
கூடுமான வரையில் என்னிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார். அப்படி அவர் என்மீது கூடுதல்
கவனம் செலுத்தும் போதிலும் என்னுடைய உடல் எடை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது என்பதன்
மூலம், இந்த மலேரியா மற்றும் வயிற்றுப்போக்கு எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது
என்பதைப் புரிந்துகொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது எனக்கு வயிறு சம்பந்தமான
பிரச்சினை எதாவது வந்து விடுகிறது. இங்கிருக்கும் வானிலை ஆரோக்கியத்திற்கு மிகவும்
ஊறு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இங்கே செல்லுலர் சிறையில் இத்தகைய வானிலையில்
இருப்பது என்பது இரட்டிப்பு ஆபத்தானதாக இருக்கிறது. கடுமையான உடல் உழைப்பால் நல்ல ஆரோக்கியமான
உடல் அமைப்பைப் பெற்றிருப்பவர்களும் கூட இங்கு வந்தால் அவதிப்படுவார்கள்.
இங்கிலாந்தில் அமைதிக்
கொண்டாட்டங்களின் போது இங்கே கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாகப் படிக்கப்பட்ட
உத்தரவு குறித்து இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா என்று எனக்குத்
தெரியவில்லை. அவ்வாறு தண்டனைக் குறைப்புப் பெற்றவர்கள் சிலர், இங்கே கைதிகள் காலனியில்
இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் அரசியல் கைதிகளைப் பொருத்தவரையில் வெறும்
வெற்று உத்தரவாதங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஒரு நாள் கூட தண்டனைக் குறைப்பு செய்யப்படவில்லை.
ஓரிரு பெங்காலி அரசியல் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காகத் தண்டனைக் குறைப்பு அளிக்கப்பட்டது.
உள்துறைச் செயலாளரின் பெயரில் ஒரு அறிக்கை படிக்கப்பட்டது. அரசியல் கைதிகளுக்கும் தண்டனைக்
குறைப்பு தருவதைப்பற்றி அரசு பரிசீலித்து வருவதாக அதில் கூறப்பட்டது. அந்தந்த மாகாண
அரசுகளிடம் கருத்தைக் கேட்டபின், உள்ளூர் சிறை அதிகாரிகளின் பரிந்துரையையும் கேட்டு,
கைதிகளின் நடத்தை குறித்த அறிக்கையையும் பெற்று இத்தகைய தண்டனைக் குறைப்பு வழங்கப்படுமாம்.
அதுமட்டுமல்லாமல் அந்தந்த கைதிகளின் தனிப்பட்ட கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட
பிறகே இறுதி முடிவு எடுக்கப்படுமாம். இத்தகைய நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று
எந்தத் தேதியும் குறிப்பிடப்படவில்லை. இது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். நான்கு
வருடங்களுக்கு முன்பே இந்திய அரசு என்னிடம் பொது மன்னிப்பு வழங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படும்
என்று உறுதி அளித்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் இன்னும் நான்கு
வருடங்கள் கழித்து இதேபோல மீண்டும் ஒரு உத்தரவாதம் தரப்படலாம். அதேபோல கைதிகளின் தனிப்பட்ட
கருத்துகளைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் கொஞ்சம் சிக்கலானது. ஏனென்றால்
இந்திய அரசியல் சூழல் குறித்த ஒரு அரசியல் கைதியின் தனிப்பட்ட கருத்து என்னவாக இருக்கும்?
அதனை அரசு எவ்வாறு அறிந்து கொள்ளும்? அந்த நபர் சொல்லும் கருத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளப்
போவதாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் அந்தக் கைதியைக் குறித்து மற்றவர்கள்
கூறுவதையும் மற்றும் உளவு அறிக்கைகள் கூறுவதையும் அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்க
முயல்வார்கள் என்றால், அவர்கள் இத்தகைய ஒரு நடவடிக்கையை எடுக்காமலேயே இருக்கலாம். திருடர்கள்,
கொள்ளைக்காரர்கள், தொடர்ந்து குற்றச்செயல்களைப் புரிபவர்கள் ஆகியோருக்கு மத்தியில்
வாழ்வதால் சொல்கிறேன். இவர்கள் எங்களுடைய அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொண்டிருக்க
வாய்ப்புகள் குறைவு. மேலும் அதிகாரிகள் யாரைக் குறித்தாவது இவர்களிடம் கருத்து கேட்டால்
இவர்கள் அவர்கள் மேல் வெறுப்பு கொண்டு அதனால் உண்மையைச் சொல்வார்களா என்பதும் சந்தேகமே.
ஒருவரைக் குறித்து அதிகாரிகள் இவர்களிடம் அறிக்கை கேட்டால், அந்த நபரைப் பற்றி குறை
கூறி அறிக்கை கொடுத்தால் சிறை அதிகாரியின் மதிப்பீட்டில் தாங்கள் உயர்வோம் என்று இவர்கள்
நினைத்துக்கொள்வார்கள்! இவர்கள் எல்லோரும் மிகக் கொடூரமான குற்றச்செயல்கள் புரிந்தவர்கள்.
இவர்களுடைய கருத்துக்களை எந்த அதிகாரியும் கேட்கலாகாது. இவர்கள் ஊழலின் மூலமாகத்தான்
இங்கு சிறையில் பதவிகள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அரசிற்கு இந்த விஷயங்களைப் பொது
மக்கள் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் உள்துறைச் செயலாளர் நல்ல எண்ணத்தில் ஏதாவது
செய்ய முயன்றாலும் அதனால் பெரிய பயன் எதுவும் விளையாது போகும்.
இந்த உறுதிமொழியைக்
குறித்து உனக்கு எதாவது தெரியுமா? இது பொதுவில் அறிவிக்கப்பட்டதா? ஆம் என்றால் மாகாண
அரசுகளை இது குறித்து அணுகிவிட்டார்களா? அவர்கள் கருத்துக்களைக் கொடுத்துவிட்டார்களா?
இதற்கு ஏதேனும் ஒரு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? அரசு அது குறித்து ஏதேனும்
கூறியுள்ளதா? இதனை ஒழுங்கான முறையில் அரசு செய்ய வேண்டும். இந்த அமைதிக் கொண்டாட்டங்கள்
நடந்து முடிவதற்குள்ளாக நம் பொதுமக்கள் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதில்
ஒருமித்த குரலில் அரசை வற்புறுத்தி நல்ல தீர்வைக் காண வேண்டும். இதன் பிறகு அரசு இதில்
முனைப்புக் காட்டாமல் போகலாம். இந்த உறுதிமொழி மக்களின் எண்ணவோட்டத்தைத் தெரிந்து கொள்வதற்காகக்
கூறப்பட்டுள்ளது. ஆகவே பொது மன்னிப்பு குறித்து மக்கள் தங்கள் கருத்தை அரசுக்கு வலியுறுத்தும்
வகையில் தெரிவிக்கtஹ் தவறினால் பிறகு பொது மன்னிப்பு வழங்கவில்லை என்று அரசைக் குறை
கூறிப் பயனில்லை.
என்மீது சும்த்தபட்டிருக்கும்
109, 302 ஆகிய குற்றப்பிரிவுகள் உண்மை என்று வைத்துக்கொண்டால் அது மற்றவர்கள் விஷயத்திலும்
உண்மைதான். இதன் காரணமாக அரசியல் கைதியான நான் விடுதலை செய்யப்படப் போவதில்லை என்றால்
இந்தியாவில் அரசியல் கைதி என்று யாருமே இல்லை எனலாம். நாம் எப்படிப்பட்ட வாதங்களை எடுத்து
முன்வைக்க வேண்டும் என்பதனைக் கோடிட்டுக் காண்பித்து இருக்கிறேன். நீ என்னைக் காட்டிலும்
சிறப்பாக அதனைச் செய்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாவதாக, ‘சிறையில் நடத்தை’.
கடந்த ஐந்து வருடங்களாக என்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதிகாரிகளும் இந்த விஷயத்தில்
என் மீது எந்த எதிர்க்கருத்தும் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அடுத்ததாக, என்னுடைய
தனிப்பட்ட கருத்துகள் குறித்து. இதனை நான் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிவித்து கொண்டுதான்
இருக்கிறேன். 1915 மற்றும் 1918ம் ஆண்டுகளிலேயே நான் என்னுடைய கருத்துக்களைத் தெளிவாகக்
கூறியிருக்கிறேன். அவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் என்னுடைய விடுதலையை மேலும் சிக்கலாக்கும்
என்ற விஷயத்தையும் அறிந்தே நான் அவற்றைத் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் அரசுக்கு
அனுப்பிய அறிக்கை, உனக்கு நான் சென்ற கடிதத்தில் எழுதியிருந்த அதே விஷயம்தான். அதற்கு
முன்னரே அது பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டது. ஆகவே பொது மக்களும் சரி அரசும்
சரி, என்னுடைய கருத்துகளை அறிந்தே இருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் செயல்படுத்தப் படுமானால்,
அதிலும் வைஸ் ரீகல் கவுன்சில்கள் மக்களின் குரலைப் பிரதிபலிக்கப் போகிறார்கள் என்றால்,
நானும் என்னால் இயன்ற அளவு, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அரசியல் சட்ட அடிப்படையில்
சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்க முயல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. சட்ட ஒழுங்கே சமுதாயத்திற்கு,
குறிப்பாக ஹிந்து சமுதாயத்திற்கு அடிப்படையானது. ஸ்காட் மக்களும் போயர் மக்களும் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யம் அவர்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை எடுக்கும்போது அவர்களோடு இணைந்து
பணியாற்றவில்லையா? அத்தகைய ஒரு காமன்வெல்த்தில் இந்தியா மட்டுமல்ல, வேறு எந்த நாடாக
இருந்தாலும் கலந்து கொள்வதில் தவறில்லை. அதற்கு எதிராக ஏன் இருக்க வேண்டும்? தனியாக
இருந்து அவதிப்படுவதைக் காட்டிலும் இப்படி கூடி இருப்பதால் நன்மை எனில் அது நல்லதே.
மனிதன் கூடி வாழப் பழக்கப்பட்டவன். ஒரு நாடும் அதேபோலத்தான். மனிதனுடைய இயல்பான சமூகக்
குணங்களை மேம்படுத்தும் குடும்பங்களையும் தேசங்களையும் போலவே சாம்ராஜ்யத்தின் ஆட்சியும்
ஒரு இயற்கையான வளர்ச்சியாக இருக்கும்.
எனதருமை பால், எனக்குக் கடந்த இரண்டு நாட்களாக ஜலதோஷம் இருப்பதால்
ஜூரமும் இருக்கிறது. அதனால் நான் எழுத வேண்டிய பல விஷயங்களை எழுதாமல் விடுகிறேன். நீ
உன்னுடைய உடலை நன்றாகப் பார்த்துக்கொள். எங்களைப் பற்றியோ அல்லது வேறு எதனைப் பற்றியுமோ
கவலைப்பட வேண்டாம். நீ என்னைச் சந்தித்த போது நம் குடும்ப விவகாரங்கள் குறித்து நான்
சொன்னதை மறக்க வேண்டாம். செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சி செய். எனதருமை யமுனா
எனக்கு பாதாம் மற்றும் இனிப்புகள் அடங்கிய பெரிய பார்சல் ஒன்றை விரைவிலேயே கொடுத்து
அனுப்புவதாகச் சொன்னாள். அது மிகப் பெரியதாக இருப்பதால் அதனை அனுப்பப் பல மாதங்கள்
ஆகிறது என்று நினைக்கிறேன். அவளைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவளுடைய தைரியமும்
இனிமையான குணமும் மேலும் மகிழ்ச்சியைத் தருகின்றன. ஆனால் வஹினியை (அண்ணி) நினைத்தால்
வருத்தமாக இருக்கிறது. நான் விடுதலையாகி வந்தாலும் என்னை வரவேற்க அவர் இருக்க மாட்டார்
என்பதை நினைக்கும் போது வருத்தம் அதிகமாகிறது. அவர் என்னுடைய தோழி. என்னுடைய சகோதரி
மட்டுமல்லாமல் என்னுடைய அன்னையும் கூட. பெண்கள் உடன்கட்டை ஏறுவது போல அவர் மரணித்திருக்கிறார்.
தன்னுடைய அன்புக் கணவன் சிறை சென்று திரும்பமாட்டான் என்ற போதே இந்த இந்தியப் பெண்மணிகள்
தங்கள் இதயத்தை நெருப்பில் பொசுக்கித் தியாகம் செய்து விடுகிறார்கள். தேசத்திற்காக
உயிரை விடும் தியாகிகளைப் போலவே இவர்களும் தியாகிகளே. இந்த ஹிந்துப் பெண்கள் அமைதியாக
தங்கள் தாய்நாட்டிற்காக, தங்கள் மதத்திற்காக இத்தகைய தியாகத்தைச் செய்கிறார்கள்.பெண்கள்
பொதுவாகவே மிகவும் இனிமையானவர்கள். அதிலும் ஹிந்துப் பெண்கள் மிக மிக இனிமையானவர்கள்.
அவர்கள் நமக்கு ஆறுதல் அளிப்பவர்கள். சீதாதேவியின் அமரத்துவம் வாய்ந்த கதையை நினைவில்
வைத்திருப்பவர்கள். நீ நமது தாயை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நம் அன்பிற்குரிய பாபா
கூறச் சொன்னார். அவர் வஹினியைக் காட்டிலும் இவர்களுக்காக வருத்தப்படுகிறார். நீ மகிழ்ச்சியாகவும்
ஆரோக்கியமாகவும் இருப்பதை
க்
கண்டதில் எனக்கு மிகவும் சந்தோசம்.
இதேபோல எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய். உணர்ச்சி மேலிடுவதனாலும் இங்கு
கடிதம் எழுதும் சூழ்நிலை சரியில்லாததாலும், என் மீது அன்பும் கருணையும் கொண்ட பலருக்கு
நன்றி கூற இயலாத நிலையில் இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த உணர்வு
ஒன்றுதான் எனக்கு இத்தனை மலேரியா வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகள் இருந்தபோதும் என்னைத்
தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் என்னுடன் பழகியதன்
காரணமாக நட்பினாலும் பலர் என்னைக் குறித்து நலம் விசாரிக்கின்றனர். இத்தகைய நண்பர்கள்
இருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்கு ஆறுதலைக் கொடுக்கின்றது. எனதருமை சாந்தா எப்படி
இருக்கிறாள்? அவளைப் படிக்கவும் எழுதவும் சொல்லித் தொந்தரவு செய்யாதே. ஆனால் அத்தகைய
வேலைகளை யமுனாவிடம் கூறு. நான் திரும்பி வரும்போது அவள் எனக்கு டைப்ரைட்டராக இருக்கிறேன்
என்று கூறி இருக்கிறாள். சம்பளத்திற்கு அல்ல, தேசத்தின் மேல் இருக்கும் பற்றினால்.
அன்பிற்குரிய பாபு, அண்ணா, மற்றும் மைத்துனர்களிடம் என் அன்பைக் கூறவும்.
இப்படிக்கு
தங்கள் அன்பிற்குரிய
தாத்யா.

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – ஏழாவது கடிதம் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

4-8-1918
போர்ட் ப்ளேயர்.

என் அன்பிற்குரிய சகோதரா.
உன் கடிதத்தைப் படித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வருடம் நீ குறித்த நேரத்தில் பார்சல்களையும் கடிதங்களையும் அனுப்பியதால் எங்களுக்கு மனு போட்டு அவை குறித்துக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவை சரியான நேரத்தில் கிடைத்தன. இதனால் எங்களுக்கு மன உளைச்சலும் குறைந்தது. என் கடிதத்திற்கு பதில் கடிதம், பிறகு சகோதரருக்கு நீ அனுப்பிய பார்சல், பிறகு இந்தக் கடிதம் என உன்னிடம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. இதே நடைமுறையை முடிந்த வரையில் தொடரவும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தி வரவேற்கத்தக்கது. மற்ற மாகாண மாநாடுகளைக் காட்டிலும் பம்பாய் மாகாண மாநாடு இந்த விஷயத்தில் தீவிர அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை சென்ற வருடம் உத்திரப் பிரதேச மாகாண மாநாடும் ஆந்திர மாகாண மாநாடும் கூட இதே போல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனத் தீர்மானம் இயற்றின. அதிலும் ஆந்திர மாகாணம் நிறைவேற்றிய தீர்மானம், மிகவும் ஆணித்தரமான வார்த்தைகளால் ஆந்திரர்களின் ஆதரவை விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தெரிவித்திருந்தது. இதனை நீங்கள் தொடர்ந்து எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வர வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிப்பதே இந்தியர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறைக்க ஒரே வழி என்பதை உணர்த்த வேண்டும். இவை எல்லாம் உண்மை எனும் பட்சத்தில் காங்கிரஸ் ஏன் அரசியல் கைதிகள் சார்பில் பரிந்து பேசத் தயங்குகிறது என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இந்த தேசத்திற்காக உழைத்த சக போராளிகளின்பால் குறைந்தபட்ச மனிதநேயத்தைக் கூட காங்கிரஸ் காட்ட மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அரசியல் கைதிகளிடம் கருணையுடன் பேச அவர்கள் ஏன் நடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை. சென்ற வருடம் அவர்கள் போர்க் கைதிகள் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் அரசியல் கைதிகளைப் பற்றி வாய் திறக்கவில்லை. அரசியல் கைதிகளின் நிலை நாளுக்கு நாள் இங்கு மிகவும் மோசமடைந்து வருவது என்னவோ அவர்களுக்கும் தெரியும். அரசியல் கைதிகளின் தியாகங்களும் தொண்டும் போர்க் கைதிகளின் தியாகத்திற்கும் தொண்டிற்கும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. போர்க் கைதிகளுக்காவது போர் முடிந்தவுடன் விடிவு காலம் பிறக்கும். மக்களிடையே பொறுப்பான தலைவர்கள் என்று பெயரெடுத்து உலவி வரும் ஆட்கள் இதற்காக இன்னமும் தீவிரமாகப் போராட வேண்டும். ஆனால் இங்கே பொறுப்பான என்பதுதான் பிரச்சினையே. போர்க் கைதிகளைப் பற்றிப் பேசுவது பாதுகாப்பானது. ஆனால் மற்றவர்களைப் பற்றிப் பேசினால் அவர்களது முதலாளிகளின் கண்ணோட்டத்தில் பொறுப்பான தலைவன் என்ற நிலையில் இருந்து மாறி விடக்கூடும். இல்லையென்றால் பல்வேறு மாகாண கவுன்சில்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறித் தீர்மானங்களைப் போட்டுவிட்ட பின்னும் காங்கிரஸ் அதனைத் தீர்மானமாக நிறைவேற்றாமல் இருப்பதன் காரணம் எதுவும் எனக்குப் புரியவில்லை. காங்கிரசில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிலரின் கருத்துக்களைப் பிரதிபலிப்பது மட்டுமே அதன் வேலை இல்லை. மாறாக அதற்கு ஆதரவையும் வலிமையையும் கொடுக்கும் பல்வேறு தரப்பு மக்களின் கருத்தையே அது பிரதிபலிக்க வேண்டும். பல மாகாணங்கள் பல முறை தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்னும் பல பத்திரிகைகள் இதனைப் பற்றி எழுதிய பின்னும் காங்கிரஸ் தலைவர்களே பலரும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் யாருக்காகப் போராடினோமோ அவர்கள் எங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது எங்கள் உரிமை அல்லவா? அதிலும் ஆஸ்திரி, ஐரிஷ மற்றும் போயர் மக்கள் தங்கள் நாட்டின் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தைரியமாகவும் நேர்மையுடன் குரல் கொடுக்கும்போது அதனைப் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கும் காங்கிரஸ், ஆந்திரா அல்லது மகாராஷ்டிரா மாகாணங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் போல நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட வேண்டும். சில வயதானவர்கள் இதனைச் செய்ய அஞ்சுவார்கள் என்றால் இதனை நிறைவேற்றும்போது அவர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கட்டும். இதற்குப் பயப்படும் ‘பொறுப்பானவர்கள்’ சிலரைப் போல நீங்களும் மௌனமாக இருப்பது தவறல்லவா?
மேலும் இதுபோன்ற தீர்மானங்கள் பலனுள்ளவையாக இருக்க ஒன்றிரண்டு காரியங்களை முன்னெச்சரிக்கையாக நாம் செய்யவேண்டும். பல பத்திரிகைகள் அரசியல் கைதிகளைப் பற்றி எழுதுகின்றன. ஆனால் அவை எழுதப்படும் விதம், அரசியல் கைதிகள் என்றால் என்னவென்று பாமர மக்களுக்கு மட்டுமில்லாமல் அரசாங்கத்துக்கும் கூடப் புரியாத வண்ணம் குழப்பமாக இருக்கின்றது. சில சமயம் அது போர்க் கைதிகளையும் சில சமயம் நாடு கடத்தப்பட்டவர்களையும் குறிக்கிறது. ஆனால் அரசியல் கைதிகளைப் பற்றித் தெளிவாக என்றும் சொன்னதில்லை. இதனைப் பற்றி நான் உன்னிடம் சென்ற வருடம் கூறியிருந்தேன். மிஸ்டர் போனர்லா அவர்களும் ஐரிஷ் கைதிகளை குறித்துக் கூறுகையில் அவர்கள் எவரும் தனிப்பட்ட முறையில் தீவைப்பு உட்பட எந்தக் காரணங்களுக்காவும் கைதாகவில்லை என்றார். ஆனால் மிஸ்டர் போனர்லவின் அரசு போர் துவங்கியவுடன் அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்தது. அதனால் குற்றவாளிகள் என்ற வார்த்தை இந்தியாவின் ‘பொறுப்புமிக்க’ தலைவர்களுக்கு ஏன் தயக்கம் ஏற்படுத்த வேண்டும்? அரசின் தவறுகளை, தனிப்பட்ட முறையில் செய்த குற்றங்கள் என்ற போர்வையைப் போட்டு ஏன் மூட வேண்டும்? போத்தா ஒரு பிரதமர், ரெட்மாண்ட் ஒரு பாராளுமன்ற கட்சியின் தலைவர். இருந்தும் அவர்கள் தங்கள் அரசின் எதிரிகளும் புரட்சியாளர்களுமான கைதிகளை விடுதலை செய்தனர். ஆனால் நம்முடைய காங்கிரஸ்காரர்களோ தங்களைப் பொறுப்பானவர்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். நகரத்தின் எல்லையில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் பிச்சைக்காரன் கூட இந்த நகர சபைத் தலைவர்களை விடப் பொறுப்பானவன், உயர்ந்தவன் என்று சொல்வேன். ஆகவே எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் அரசியல் கைதிகள் என்றால், குற்றவாளியோ அல்லது இல்லையோ, தனிப்பட்ட செயல்களுக்காவோ அல்லது பொதுக் காரணங்களுக்காகவோ, (இது என்ன என்று எனக்குப் புரிவதே இல்லை) அரசியல் நோக்கத்திற்காகச் செய்து கைதானவர்கள் அனைவரையும் குறிக்கும் என்று தெளிவாக்கப்படவேண்டும். செயலின் நோக்கம்தான் அது அரசியல் காரணமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு காரியமும் உள்ளபடியே அரசியலாகாது. என்னுடைய பட்டினிக்காக நான் புரட்சியில் ஈடுபட்டால் அது அரசியல் காரியமாகாது. பொது நோக்கம் பொது உரிமையைக் காப்பதற்காகச் செய்யப்படும் போராட்டமே அரசியல் செயல்பாடாகும். குண்டர்கள் போரிடுவது பொது நலத்திற்காகச் செய்யப்படும் தியாகம் என்று கருதப்படாது. ஆனால் தீவைப்பு போன்ற கொடுஞ்செயல்கள் பிரிட்டிஷ் அரசால் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்பட்டவை என்று கருதப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவோ அல்லது தனிப்பட்ட லாபம் கருதியோ அவை செய்யப்படவில்லை. மாறாகப் பொது நன்மையைக் கருதிச் செய்யப்பட்டவை. முறைகள் தவறாக இருக்கலாம், சில நேரம் அவை கொடுஞ்செயல்களாகக் கூட இருக்கலாம். ஆனால் பொது நலன் கருதி அவை செய்யப்பட்டிருந்தால் அவை மன்னிக்கப்படலாம். நான் இதனை வலியுறுத்தக் காரணம், ஒருவேளை பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருந்தால் (அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நான் நினைக்கிறேன்) இந்தக் காரணம் நமக்கு ஒரு தடையாக இருக்கும். அரசு தங்கள் விருப்பம் போல இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். ஆகவே இதனைத் தெளிவுபடுத்துவது நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இதனை மற்ற பத்திரிகையாளர்களும் தலைவர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
1)   எனக்கு நீ எழுதும் கடிதங்களில் ஏதேனும் மாகாண மாநாடுகளில் இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதையும், சென்ற வருடம் காங்கிரஸ் இதனைத் தங்கள் கமிட்டி கூட்டத்தில் விவாதித்ததா என்பதையும் பற்றி எழுது. எத்தனை பத்திரிகைகள் இதனை ஆதரித்து முழுமனதாகக் கட்டுரைகள் வெளியிட்டன என்பதையும், இந்த வருடம் இது குறித்து காங்கிரஸ் ஏதேனும் செய்ய இயலுமா என்பதையும் குறித்து எழுதவும். நீ இது குறித்து எழுதும்போது போர்க் கைதிகள் மட்டும் அல்லாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்கள் குறித்தும் எழுது.
2)   பொது மக்கள் பலராலும் மனு அளிக்கப்பட வேண்டும் என்ற விஷயம் என்னவாயிற்று? நீ இது குறித்து உன் சென்ற கடிதத்தில் எதுவும் எழுதவில்லை. அந்த உத்தேசத்தைக் கைவிட வேண்டாம். போர் முடிந்த பிறகு அதனை மேலும் பலனளிக்கும் விதத்தில் செய்யலாம் என்று ஒத்தி வைத்திருப்பாய் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அதுவும் சரியான முடிவுதான். அதேவேளையில் ‘மாண்டேகு அவர்களிடம் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து மனு ஒன்று அளிக்கப்பட்டது’ என்று ஒரு கடிதத்தில் படித்தேன். அது சரியான தகவல்தானா?
3)   கூட்டங்கள் கூட்டி பிரசாரம் செய்வது குறித்து நீ கூறியிருந்தாய். அது ஒருமுறை மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்யப்படவேண்டும்.
4)   காங்கிரசும் மாநாடுகளும், இதுகுறித்து விளக்க நடத்தப்படும் தனிப்பட்ட சந்திப்புகளும், பத்திரிகைகள் இதுகுறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதும், பாராளுமன்றத்தில் மாகாண கவுன்சிலில் இதுகுறித்துக் கேள்வி எழுப்புவதும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். இந்த விஷயத்தில் மேலும் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து உன்னுடைய ஒவ்வொரு கடிதத்திலும் எனக்கு எழுது. அதேபோல ஒவ்வொரு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போதும் அரசியல் கைதிகள் என்பவர் யார் என்பதைத் தெளிவுபடுத்த மறக்க வேண்டாம். இதுகுறித்து மக்களுக்கும் அரசுக்கும் விளங்கும் வகையில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.
இதனைப் பற்றி எழுதும்போது நான் இந்தப் போராட்டத்தின் தார்மீக விளைவுகள் குறித்து அக்கறை கொண்டேனே தவிர இதன் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அரசிற்குச் சென்ற வருடம் நான் அளித்த மனு ஒன்றில் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒரு முற்போக்கான அரசு அமைவதோடு மிகவும் தொடர்புடைய விஷயம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் அத்தகைய பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உடனடியாக வரும் என்று கூற இயலாது. இது நடக்காத காரியம் என்றாலும் நாம் இதனைத் தொடர்ந்து செய்யவேண்டும். இது தேசிய அளவில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். தியாகிகளையும் அவர்களுடைய சுதந்திரத்திற்கான போராட்டத்தைப் பற்றியும் அறியும்பொழுது பொது மக்களில் பலரும் போராட முன்வருவர். போராளிகளைக் குறித்து நன்றியுடன் நினைவுகூர்தலே மேற்கொண்டு இத்தகைய போராட்டங்களுக்குத் தொண்டர்களைச் சேர்க்கும்.
திரு மாண்டேகு அவர்களுக்கும் வைஸ்ராய் அவர்களுக்கும் நான் அனுப்பியிருந்த மனுவில் இத்தகைய பொது மன்னிப்பு குறித்து வெளிப்படையாக எழுதியிருந்தேன். அதில் இந்தியாவில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக இருந்தால், அதிலும் அவர்கள் இந்தியாவில் ஒரு பொறுப்பான அரசை ஏற்படுத்த விழைவதாக இருந்தால், எங்களை இப்படிச் சிறையில் வைத்து வாட்டுவது அந்த முயற்சியினை அர்த்தமற்றதாக ஆக்கிவிடும் என்று கூறியிருந்தேன். அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படாமல் ஒரு பொறுப்பான அரசை அமைப்பது என்பது அந்த அரசிற்கு ஒரு பெரும் பாரமாகவே அமையும். நாங்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மக்களுக்கு அந்த அரசின் மேல் ஒரு சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதனால் பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கும் அரசிற்கு அது தோல்வியாகவே முடியும். ஏனெனில் சுயாட்சி கொடுக்கப்பட்டாலும் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றால் அது மக்களிடையே அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தும். சகோதரர்கள் பிரிக்கப்பட்டு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கையில் எங்கிருந்து சமுதாயத்தில் நம்பிக்கையும் அமைதியும் ஏற்படும்? ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒரு தகப்பனோ, ஒரு சகோதரனோ, ஒரு நண்பனோ பிரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே நான் சுயலாபத்திற்காக அல்லாமல் நேர்மையுடனும் இதயச் சுத்தியுடனும் இதனைக் கூறுகிறேன். அரசியல் கைதிகளைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் எந்த விதமான பொறுப்பான அரசாங்கமும் அரசு அமைக்க இயலாது. அரசை எதிர்த்துப் பேசினால் வழக்கு, அரசு சந்தேகப்படாமல் இருக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருப்பது பொறுப்பான அரசின் நடைமுறைக்கு ஒவ்வாதது. இது சுல்தான்களின் ஆட்சிக்கு ஒப்பானது. ஆகவே சுயாட்சியும் பொது மன்னிப்பும் ஒருங்கே செயல்படுத்தப் படவேண்டியது அவசியம். என்னுடைய பொது மன்னிப்பைக் கோரி அனுப்பிய மனுவில் மேலும் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியிருக்கிறேன். இதனை அமல்படுத்த என்னுடைய விடுதலைதான் தடையாக இருக்குமென்றால் என் விடுதலையைப் புறந்தள்ள நான் தயார். அதனால் எனக்கு மனக்கவலை எதுவும் இல்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட திரு மாண்டேகு அவர்களின் நடைமுறை இந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. புரட்சியாளர்கள் தங்களுடைய தற்போதைய அணுகுமுறைகளைக் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் விதத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமையக்கூடிய பொறுப்பான காரியங்களைச் செய்ய வேண்டும். அத்தகைய அரசு என்பது வைஸ் ரீகல் கவுன்சில் என்ற மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமே அல்லாது அதிலும் மாநில கவுன்சில்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு அரசு அமையும்பட்சத்தில் அது அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதில் துவங்கவேண்டும். இங்குள்ள கைதிகள் மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நானும் என்னைப் போலவே ஒத்த கருத்துடைய பலரும் அந்த அரசியல் சாசனத்தை ஏற்போம். அரசு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அத்தகைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இதுகாறும் எங்கள் மேல் வெறுப்புக் கொண்டிருக்கும் கவுன்சில் உறுப்பினர்களுடனும் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். பெரும் ஆபத்துகள் நிறைந்த புரட்சிகளை நாங்கள் வேடிக்கைக்காகச் செய்யவில்லை. பாதுகாப்பான உயர்ந்த இலட்சியங்களுடன் கூடிய வழிமுறைகள் இருக்கும்பொழுது யாரேனும் ஆபத்தான புரட்சி வழிமுறைகளை மேற்கொள்வார்களா? அதற்கு சட்டரீதியான வழிமுறை அவர்களுக்கு இருக்கவேண்டும். அரசியல் சாசனமே இல்லாதபொழுது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் போராட்டம் என்பது கேலிக்குரியது. அதேநேரத்தில் இங்கிலாந்தில் இருப்பது போல அரசியல் சட்ட ரீதியான வழிமுறைகள் இருக்கும்போது புரட்சி என்று பேசுவது தவறு மட்டுமல்ல, குற்றமும் கூட.
நான் இதனைச் சென்ற அக்டோபர் மாதம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தேன். சமீபத்திய மாற்றங்கள் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. முறையானபடி ஒழுங்காக இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் நாம் ஏற்றுக்கொளும்படியான ஒரு வழிமுறை நமக்குக் கிடைக்கலாம். இதனை வைஸ்ராயின் கவனத்திற்கு மீண்டும் ஒருமுறை நான் கொண்டு வருகிறேன். என்னுடைய மனுவின் மேல் ஏதேனும் முடிவு எடுக்க இந்திய அரசு தீர்மானித்து இருக்கிறதா என்று கேட்கிறேன். எனக்கு 1-2-1918 அன்று வைஸ் ரீகல் அரசிடம் இருந்து, அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக பதில் கிடைத்தது. போர் முடிந்த பிறகு இந்தக் கோரிக்கையை வைக்குமாறு அரசு கூறியிருந்தது. எனக்காக நீ அதுகுறித்து விசாரிக்கவும். ஏனென்றால் இந்த அரசமைப்பில் இதுகுறித்து விசாரிக்க நான் பலரையும் குஷிப்படுத்த வேண்டியிருக்கிறது.
நீ உன்னுடைய போன கடிதத்தில் இரண்டாவது வகுப்பிற்கு நாங்கள் உயர்த்தப் பட்டிருப்பதால் என்னென்ன அனுகூலங்கள் என்று கேட்டிருந்தாய். சிறைக்கு வெளியே செல்ல அனுமதி உண்டா? இல்லை. எழுதுவதற்கான பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதி உண்டா? இல்லை. என் சகோதரனுடன் பேசுவதற்கோ அவனுடன் தங்குவதற்கோ அனுமதி உண்டா? இல்லை. கடும் பணிச்சுமைகளில் இருந்து விடுப்பு உண்டா? இல்லை. சிறையில் அடைபட்டுக் கிடைக்காமல் வார்டராகப் பதவி உயர்வு கொடுக்கப்படுமா? இல்லை. சிறையில் ஒழுங்காக நடத்தப்படுவோமா? இல்லை. கூடுதலாகக் கடிதங்களுக்கு அனுமதி உண்டா? இல்லை. வீட்டில் இருந்து பார்வையாளர்கள் வந்து பார்க்க அனுமதி உண்டா? மற்றவர்களுக்கு ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த அனுமதி உண்டு. நான் இங்கு வந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. எனக்கு அனுமதி கிடையாது. இரண்டாம் வகுப்புக் கைதியாக நாம் உயர்த்தப்பட்டு இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவுதான். வேறொரு அனுகூலமும் இதில் கிடையாது. புரிந்ததா டாக்டர்?

சிறையில் வேறு என்ன அனுகூலங்கள் இருக்கின்றன? என்னுடைய உடலில் வலு இருக்குபோழுது என்னால் இத்தகைய விஷயங்கள் எல்லாவற்றையும் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனால் இந்த வருடம் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. இதனைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, இருந்தாலும் என் கடமை என்பதனால் நான் இதனைச் சொல்கிறேன். பகவத் கீதையைப் படிக்கும் எனக்கும் என் சகோதரனுக்கும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதனைத் தாங்கும் திடம் இருக்கின்றது. வருடத்திற்கு ஒருநாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். அது வீட்டிற்குக் கடிதம் எழுதும் நாள். ஆனால் இந்த வருடம் அதைக் கூட மகிழ்ச்சியுடன் என்னால் செய்ய இயலவில்லை. பழைய நினைவுகள் பசுமையாக மனதில் வந்து வருடி மகிழ்ச்சியைத் தந்தாலும் என்னுடைய உடல் இந்தக் கடிதத்தை எழுவதற்கே சிரமப்படுகிறது. சென்ற வருடம் மார்ச் மாதத்தின் போது நான் 119 பவுண்டுகள் (54 கிலோ) இருந்தேன். இப்போது என்னுடைய எடை 98 பவுண்டுகளாகக் (44.5 கிலோ) குறைந்திருக்கிறது. நாங்கள் இங்கே வரும்போது என்ன எடை இருந்தோமோ அதுவே எங்களுடைய சாதாரணமான எடை என்று கணக்கெடுக்கிறார்கள். அது தவறு. ஏனென்றால் நாங்கள் இங்கே வருவதற்கு முன்பே பல வருடங்கள் சிறையில் இன்னல்களுக்கு ஆளாகி, பிறகுதான் இங்கே வருகிறோம். ஆனாலும் நான் இங்கே வரும்போது 111 பவுண்டுகள் இருந்தேன். கடுமையான வயிற்றுப்போக்கும், அதற்குச் சரியான மருத்துவம் பார்க்காததாலும், நோய் என்னை எலும்புக்கூடாக மாற்றிவிட்டது. எட்டு வருடங்களுக்கு நான் இத்தகைய இன்னல்களைத் தாங்கிக்கொண்டிருந்தேன். இங்குள்ள இன்னல்களும் அச்சுறுத்தும் சூழலும் எத்தகைய மன உறுதி படைத்தவரையும் நிலை குலையச் செய்து விடும். ஆனால் இவற்றைக் கடந்த எட்டு வருடங்களாகத் தாங்கும் வலிமையை எனக்குக் கடவுள் கொடுத்திருந்தார். ஆனால் இப்போது என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நாளும் நான் வலுவிழந்து வருகிறேன். சமீபத்தில் மெடிகல் சூப்பரின்டன்டென்ட் என் மீது கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டதன் விளைவாக, இப்போது மருத்துவமனையின் உணவு கிடைக்கிறது. அது கொஞ்சம் நன்றாகச் சமைக்கப்பட்டிருக்கும். இவ்வளவு பலகீனத்திலும் நான் பணி செய்து கொண்டுதான் இருக்கிறேன். மருத்துவமனையில் தங்கி இருக்கவில்லை. எனக்கு அரிசிச் சாதமும் பாலும் பிரெட்டும் இப்போது தருகிறார்கள். இது முன்பு இருந்ததை விடப் பரவாயில்லை. இதனால் ஓரளவு முன்னேற்றம் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இப்படியே வலுவிழந்து இருந்தால் இங்கே அந்தமானில் பலருடைய மரணத்திற்கும் காரணமான காச நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இங்குள்ள சூழலில் ஏதேனும் மாற்றம் வந்தால்தான் என்னால் அதிலிருந்து தப்பிக்க முடியும். சிறையில் மாற்றம் என்பது இப்போதிருக்கும் நிலையை விட மோசமான நிலைக்குச் செல்வது என்பதே. இங்கு ஒரே சூழலில் இருப்பது சோர்வை வரவழைக்கிறது. ஆனாலும் இத்தகைய சிறைச் சூழல்கள் உடனடியாகக் கொல்லாது. வலுவிழக்க வைக்கும். அதே நேரம் நீங்கள் அதைத் தாக்குப் பிடிக்கும்படியாகவும் இருக்கும். இப்படிப்பட்ட மோசமான சூழலில் தாக்குப் பிடித்து எண்பது வயது வரை வாழ்ந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். ஆகவே உடல் எவ்வளவு வலுவிழந்தாலும் பரவாயில்லை. மரணத்தை வரவழைக்கும் கொள்ளை நோய்கள் ஏதேனும் வராமல் இருந்தால் சரி.
இவை எல்லாம் உடல் ரீதியானதுதான். ஆனால் நெருப்பின் ஊடே இருக்கும் ஒரு நபர் அதன் சூட்டைத் தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் இங்குள்ள இன்னல் நிறைந்த சூழலை எதிர்கொள்ளும் நெஞ்சுறுதி இன்னமும் இருக்கிறது என்பதை நான் சொல்லவேண்டும். இதனால் மேற்கொண்டு எந்த இன்னல்கள் வந்தாலும் அவற்றையும் சமாளிக்க இயலும். சகோதரனுடைய உடல்நலம் என்னை விடக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் தலைவலி அவனுடைய உடல் எடையை 106 பவுண்டுகளாகக் குறைத்துவிட்டது.
என்னுடைய மதிப்பையும் அன்பையும் மேடம் காமாவிடம் கூறவும். அவர்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். குழந்தைகளுடன் விளையாடிப் போக்க வேண்டிய பொழுதை அவர்கள் இப்போது தலைமறைவாக வேறொரு நாட்டில் கழிக்க வேண்டியிருக்கிறது. அம்மா எப்படி இருக்கிறார்கள்? நம் சகோதரி எப்படி இருக்கிறாள்? எவ்வளவு கஷ்டங்களைச் சந்தித்தாலும் அவளிடம் சொல். அவளுடைய சகோதரர்கள் இங்கே அதை விடப் பெரிய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று. அது மட்டுமில்லாமல் அவளுடைய வசந்த் அவள் அருகில் இருக்கிறார். அவரைப் பார்த்தாலே அவளுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய்விடும். சகோதரனுடைய அன்பு அவளுக்கு எப்போதும் உண்டு என்று கூறவும். யமுனா பாயிடமும் மற்றும் நம் மைத்துனியிடமும் என் அன்பான விசாரிப்புகளைக் கூறவும். சாந்தா தேறிவருகிறாள் என்பதை அறிந்து மகிழ்ச்சி. அப்புறம், நீ உன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அன்பான டாக்டரிடம் என்னுடைய மன்னிப்புகளைத் தெரிவிக்கவும். நான் அவருடைய நட்பைப் பெரிதும் மதிக்கிறேன் என்று கூறவும். அவருக்கோ என்னுடைய மைத்துனர்களான பாலு, அண்ணா மற்றும் என் கல்லூரிக் கால நண்பர்களுக்கும் நான் எதையும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன். ஆனால் நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். என்னுடைய ரஞ்சன் குட்டி எப்படி இருக்கிறான்? அவனுக்கு என்னைத் தெரியுமா? மீண்டும் பிளேக் நோய் பரவும் அபாயம் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதனால் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும். அது மிகவும் முக்கியம்.

இப்படிக்கு
அன்புள்ள தாத்யா.

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 8 (நிறைவுப் பகுதி) | தமிழில்: ஜனனி ரமேஷ்

பகுதி 8 (நிறைவுப் பகுதி)
(27)   மத்திய அரசு
தொடர்பான எனது மனப்பாங்கு
இந்தப் பத்திரிகைச் செய்தியை நான் வெளியிட்ட
பின்னர், இந்திய அரசியலில் மிகப் பெரிய பிரளயமே ஏற்பட்டது. இந்தியாவில் விலங்குகளை
உயிருடன் அறுத்து ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்துக்குத் தலைமை வகித்து
வருகிறேன். ஆனால் 1947ம் ஆண்டு நமது தாய்நாடு பிரிவினைக்கு உள்ளானது. பாகிஸ்தான் தனி
நாடாகப் பிரிந்து சென்றாலும், அந்த இழப்பை ஈடு செய்ய, இந்துஸ்தானின் மிகப் பெரிய பகுதி
அந்நிய ஆளுமையிலிருந்து விடுதலை பெற்றது. அரசியல் விடுதலைக்காக நடைபெற்ற சுதந்திரப்
போரில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு போர் வீரனாகப் பங்கேற்றுக் கடுமையான பாதிப்புகளுக்கு
உள்ளானேன். நான் பட்ட துன்பங்களும், துயரங்களும், எனது தலைமுறையைச் சேர்ந்த வேறேந்த
நாட்டுப்பற்று மிக்கத் தலைவருக்கும் சளைத்ததல்ல. நிறைவாக நாடு விடுதலை பெற்று சுதந்திர
இந்தியா மலர்ந்தது. என் நாடு விடுதலை பெறுவதைக் கண்ணாரக் கண்டு மகிழ உயிருடன் இருப்பதற்கு
பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்றே உணர்கிறேன். எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதி இன்னும்
முழுமை பெறவில்லை என்பது உண்மை. என்றாலும், சிந்து முதல் பெருங்கடல்கள் வரை தாய்நாட்டை
மீட்டெடுத்து ஒருங்கிணைக்கும் விருப்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த நோக்கத்தை நிறைவு
செய்வதற்குக் கூட முதலில் நாம் வெற்றி பெற்ற பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால்,
எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டியது
அவசியம் என்பதை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்க முயன்றேன்.
ஆட்சிப் பொறுப்பில் எந்த மாற்றத்தை விரும்பினாலும்
அது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். வன்முறையோ, உள்நாட்டுக்
கலவரமோ ஏற்பட்டால் அது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும். அந்நிய அரசை எதிர்த்து
நான் நடத்திய போராட்டத்தின் போது புரட்சிகரமான எண்ணங்கள் தவிர்க்க முடியாதது மற்றும்
நியாயமானதுதான். என்றாலும், நமது நாட்டைப் பயங்கரமான குழப்பங்களிலிருந்தும், உள்நாட்டுக்
கலவரங்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டுமானால், ஆயுத ஒடுக்குமுறையிலிருந்து, அரசியல்
அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்துக்கு உடனடியாக மாற வேண்டும். இதை நோக்கமாகக்கொண்டே,
தற்போது நெருக்கமாகி வரும் காங்கிரஸ் மற்றும் மகாசபா ஆகிய இரு அமைப்புகளும் பொதுவான
முன்னணியை அமைத்து நமது நாட்டின் மத்திய அரசின் கரங்களை வலுப்படுத்த வேண்டுமென விரும்பினேன்.
இதன் அடிப்படையிலேயே புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டேன். உடல்நலம் குன்றியிருந்த
நிலையிலும் அனைத்துக் கட்சி இந்து மாநாட்டுக்குத் தலைமை வகிக்க தில்லி சென்று மகாசபா
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன். பெரும்பான்மை மகாசபா தலைவர்கள் மற்றும் சில காங்கிரஸ்
முன்னணி தலைவர்களும் என்னுடன் இணைந்து பொதுவான முன்னணியை அமைக்கக் கடுமையாக உழைத்துக்
கொண்டிருந்தனர். மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவளிக்க மகாசபா செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
மகாசபா தலைவர் டாக்டர் எஸ்.பி.முகர்ஜி மத்திய அமைச்சரவையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டதை
நாங்கள் அனைவரும் மனதாரப் பாராட்டி வரவேற்றோம். இந்த நீதிமன்றத்தில் இவற்றின் சில விவரங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளன (பேட்ஜ் சாட்சியம் பக்கம் 224 & 225 பார்க்கவும்). பி.டபிள்யூ
69 தாதா மகராஜும் கூறுகையில் ‘பம்பாயில் இந்து தலைவர்கள் நடத்திய மாநாட்டில் 1947 டிசம்பரில்
கலந்து கொண்டேன். வீர சாவர்க்கர் அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து அனைத்து இந்துக்களும்
ஒன்றுபட வேண்டும் என்றும், இந்தியா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும்
தங்கள் வேற்றுமைகளை மறந்து இந்திய அரசை வலுப்படுத்தி முழுமையான ஆதரவை வழங்க வேண்மென
வலியுறுத்தினார்’ என்றார். (பி.டபிள்யூ 69 பக்கம் 320).
கோட்சேவும் ஆப்தேவும் மகாசபையை நிராகரித்தனர்
இந்து மகாசபாவின் முன்னணித் தலைவர்களாக
நாங்கள் கருதப்பட்டாலும், மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்து சங்கடன்களின் பெரிய,
தீவிர மற்றும் உறுதினான பிரிவு, நாங்கள் மேற்கொண்ட இந்தக் கொள்கையை எதிர்த்ததை
1947 ஆகஸ்ட் பிரிவினையிலிருந்தே கண்டுபிடித்தோம். மகாசபா உள்ளேயும், வெளியேயும், இந்திய
யூனியனை அங்கீகரிப்பது, பாகிஸ்தானை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் எங்களை
வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். மேலும் வங்காளம் மற்றும் பஞ்சாபிலுள்ள முஸ்லிம்
தீவிரவாதிகள் லட்சக் கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்த போது அவர்களைப் பாதுகாகத்
தவறிய மத்திய அரசுடன் ஒத்துப் போவது இந்துக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் வாதாடினார்கள்.
இந்த வழக்கில் என்னைப் பாதுகாத்துக் கொள்ளத்
தேவையான விவரங்களை மட்டுமே நான் தெளிவுபடுத்தி என் வாக்குமூலத்தைக் கட்டுப்படுத்தி
கொள்ள விரும்புகிறேன். எனவே, பிரிவினை முதற்கொண்டே ஆப்தே, கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர்,
இந்தியா முழுவதுமுள்ள இந்து சங்கடன் முகாமிலுள்ள எதிர்ப்பு கோஷ்டியினருடன் கை கோத்துக்
கொண்டனர் என்பதை மட்டும் தெளிவுபடுத்துவது போதுமென எண்ணுகிறேன்.
(A) ஆப்தேவும் கோட்சேவும் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள்
அல்ல
பண்டிட் கோட்சேவும், ஆப்தேவும், மன உறுதி
மிக்கவர்கள் என்றும், இந்து மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் என்றும், தங்கள்
மனத்துக்குச் சரியென்றால் மட்டுமே ஒரு விஷயத்தைச் செய்வபர்கள் என்றும், காரணம் ஒத்துப்
போனால் மட்டுமே ஒன்றைப் பின்பற்றுவார்கள் என்றும் ப்ராசிக்யூஷன் தரப்பே சாட்சியம் அளித்துள்ளது.
ஆதலால் அவர்கள் கட்டாயப்படுத்தி வழிநடத்தப்படும் மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. இந்து
மகாசபா தலைவர் என்ற முறையில் இந்து மகாசபா ஊழியர்களாக அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களை
பராசிக்யூஷன் தரப்பு சான்றாவணங்களாகச் சமர்ப்பித்துள்ளது. அவற்றில் நான் என்ன செய்ய
வேண்டும், தலைமை உரையில் எவ்வாறு பேச வேண்டும், தலையங்கம் எவ்வாறு எழுத வேண்டும் என்று
‘யோசனையும்’, சில தருணங்களில் ‘அறிவுரையும்’ கூறியுள்ளனர். மேலும் அவர்கள் நம்பாத,
மகாசபாவின் சில தலைவர்களை நான் நம்புதுவது தவறு என்றும், அவர்கள் விருப்பம்போல் நான்
செயல்படாதது, இன்னும் குறிப்பாக, அக்ரணி பத்திரிகைக்கு நான் எழுதாததற்காக மறைமுகமாகக்
கண்டித்ததுடன், அவர்களது பத்திரிகைக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்காததால் ஏற்பட்ட இழப்புக்கு,
அவர்களுடைய வார்த்தையையே மேற்கோள் காட்டுவதென்றால், ‘மூழ்கிவிட்டது’ எனத் தங்களது அதிருப்தியை
வெளிப்படுத்தியதையும் அக்கடிதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (கடிதங்கள் ஜி1 (டி/30),
ஜி26 (பி/277), ஜி43 (பி/284), ஜி70 (பி/293) மற்றும் ஜிஏஎஸ்4 (பி/298 பார்க்கவும்).
(B) மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும் என்பதுடன் அதில் பங்கேற்கவும் ஆதரவளித்த மகாசபாவின் தீர்மானத்தை ஆப்தே,
கோட்சே மற்றும் அவர்கள் குழுவினர் கண்டித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்திய யூனியனை
அங்கீகரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளித்த டாக்டர் முகர்ஜி, பாரிஸ்டர்
என் சி சாட்டர்ஜி, டாக்டர் மூஞ்சி, போபட்கர், நான் மற்றும் ஏனைய தலைவர்கள் மகசபாவின்
‘வயதான தலைவர்கள்’ என்று அவர்களால் முத்திரை குத்தப்பட்டோம். வயதான தலைவர்கள் தலைமையில்
செயல்படும் மகாசபா, இந்து ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கத் தவறியதற்காக அவர்களது தினசரியான
‘அக்ரணி’ அல்லது ‘இந்து ராஷ்ட்ரம்’ பத்திரிகையில் தொடர்ந்து பல மாதங்கள் தாக்குதலுக்கு
உள்ளானார்கள். மேலும் இந்து இளைஞர்கள் ‘வயதான தலைவர்களின்’ தொடர்பு இல்லாமல், தனிப்பட்ட
முறையில் சுதந்திரமான ‘நடவடிக்கை அமைப்பை’ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புத்திமதி
சொல்லிக் கொண்டே இருந்தனர்.
(C) இந்த வாக்குமூலம் முழுவதும் ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சி மூலம் ஏற்கெனவே உறுதிப்படுத்திய விவரங்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.
இதிலும் கூட அப்ரூவராக மாறி மன்னிப்புக் கோரிய பேட்ஜ், சாட்சியத்தில் பதிவு செய்த சில
தொடர்புடைய வரிகளை, துல்லியமான தகவல்களை நான் மேற்கோள் காட்டுகிறேன். 1947 ஆகஸ்ட்
15 இந்திய சுதந்திரம் பெற்ற நாளன்று வீர சாவர்க்கர் தனது இல்லத்தில் இந்து மகாசபா மற்றும்
தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடியது நினைவிருக்கிறது. தேசியக் கொடியைத் தத்யாராவ் தனது
இல்லத்தில் ஏற்றியதை இந்து மகாசபாவினர் ஆட்சேபித்தது உண்மைதான். அவர் தேசியக் கொடியை
ஏற்றியதை நானும் ஆட்சேபித்தேன். கோட்சே, ஆப்தே மற்றும் பலரும் ஆட்சேபித்தனர். இந்தியப்
பிரிவினையைத் தொடர்ந்து மத்திய அரசை (நேரு அரசை) வலுப்படுத்த வேண்டும் என்பதே மகாசபையின்
கொள்கை என்பதை நானறிவேன். இந்து மகாசபா நிறைவேற்றிய தீர்மானத்தை எல் பி போபட்கர் படித்தார்.
காங்கிரஸோடு தோளோடு தோள் நின்று நாம் உழைப்பதுடன், நேரு அரசுக்கு (மத்திய அரசுக்கு)
அதரவளிக்க வேண்டும் என்பதே அத்தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். பார்சியில் நடைபெற்ற
மராட்டிய மாகாண இந்து மகாசபா முன்னிலையில் 1946 டிசம்பரில் தீர்மானம் படிக்கப்பட்டது.
கோட்சேவும், ஆப்தேவும் இத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். சமீபமாகச் சில தருணங்களில்
இந்து மகாசபாவின் கொள்கையை கோட்சேவும், ஆப்தேவும், தங்கள் ‘அக்ரணி’ மற்றும் ‘இந்து
ராஷ்ட்ரம்’ பத்திரிகைகளில் விமர்சித்தது உண்மையே (பேட்ஜ் சாட்சி பக்கம் 224 &
225).
இந்த நேரத்தில் என் உடல்நலம் மீண்டும்
பாதிக்கப்பட்டேன். தினசரிக் காய்ச்சல், 1948 ஜனவரி மாதம் முழுவதும் என்னைப் படுக்கையிலேயே
கிடத்தியது. திடீரென ஜனவரி 30ம் தேதி தில்லியில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட
அதிர்ச்சியான செய்தியைக் கேட்டேன். பத்திரிகைச் செய்தி முகமைகள் என்னைத் தொலைபேசியில்
தொடர்ந்து அழைக்கவே, நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு, 1948 பிப்ரவரி 4ம் தேதி, கீழ்க்காணும்
பத்திரிகைச் செய்தியை வெளியிட்டேன். இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் அது வெளியானது.
இந்த வாக்குமூலத்துடன் எனது பத்திரிகைச் செய்தியை உறுதிப்படுத்தப் பம்பாய் ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ 1948 பிப்ரவரி 7 ம் தேதி வெளியான செய்திக் குறிப்பை இணைத்துள்ளேன். அறிக்கை
பின்வருமாறு:-
தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் எல்
பி போபட்கர் மற்றும் செயற்குழுவின் சில உறுப்பினர்களின் கூட்டு அறிக்கை, மகாத்மா காந்தியின்
கொடூரமான படுகொலை தொடர்பான உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும் தெளிவுபடுத்தி
உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில், நானும் அவர்களது
உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின் வெறிச் செயல் காரணமாக
ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும், சகோதரத்துவ
உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட விரோதத்தை
விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான எச்சரிக்கையை
ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் – வி டி சாவர்க்கர்.
மேற்கூறிய பத்திகளில், என் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கான பதிலைச் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞர்கள்
அவர்களது வாதத்தின் போது சரியாகவும், முறையாகவும் இருக்கும் வகையில் விரிவாக எடுத்துரைப்பார்கள்.
என்னுடைய வழக்கில் தொடர்புடைய அனைத்து சட்ட விவரங்களையும் அவர்கள் கவனிப்பார்கள்.
நிறைவாக, எனக்கு எதிரான ப்ராசிக்யூஷன்
வழக்கைக் கூட்டாகவும், விரிவாகவும் ஆய்வு செய்த பிறகு கீழ்க்காணும் முக்கிய விவரங்களைச்
சமர்ப்பிக்கிறேன்:-
(A) கூறப்படும் சதித்திட்டத்தில் எனக்குத்
தனிப்பட்ட முறையில் நேரடித் தொடர்பு அல்லது பங்களிப்பு அல்லது அதன் கருத்துருவாக்கம்
அல்லது அதனைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் செயல்கள் எதிலும் நேரடிச் சாட்சி
இல்லை.
(B) என்னைக் குற்றவாளியாக்கும் வகையில்
எனது கையிருப்பிலோ, கட்டுப்பாட்டிலோ, எந்த ஆயுதமோ, வெடிமருந்தோ, அதைப் போன்ற எந்தப்
பொருளோ இல்லை
(C) பத்து ஆண்டுகளுக்கும் மேலான
கடிதத் தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களில்
என்னைக் குற்றவாளியாக்கும் வகையில் ஒரு வார்த்தை அல்லது சிறு குறிப்பு கூட இல்லை.
(D) என் மீதான முழு வழக்கு மூன்று அல்லது
நான்கு சொற்றொடர்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடரப்பட்டுள்ளது. செவிவழிச் செய்தியாகவும்,
அதுவும் அப்ரூவர் ஒருவரால் கேட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்ட செவி வழிச் செய்தியாகவும்,
எந்த தனிப்பட்ட அல்லது நம்பகத்தன்மை கொண்ட சாட்சியால் முற்றிலும் உறுதி செய்யப்படாததாகவும்
உள்ளது.
(E) மேலே உள்ள பிரிவுகளில் (பிரிவு
26 & 27) மேற்கோள் காட்டப்பட்ட எனது பத்திரிகைச் செய்தி மூலம் மகாத்மா காந்தி மற்றும்
பண்டிட் ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் நாட்டுப் பற்று மற்றும் தியாகத்தின் மீது நான் உயர்ந்த
அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது, பிரிட்டிஷ் அரசு அவர்களைக் கைது செய்த போதெல்லாம்
நான் கண்டித்தது, காந்திஜிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சோகங்களிலும், துக்கங்களிலும் பங்கேற்றது,
அவர் விடுதலையாகும் போதும் மகிழ்ந்தது, அவரது 75 ஆவது பிறந்த நாளின் போது நீண்ட காலம்
வாழ வேண்டுமெனப் பிரார்த்தித்தது, எனது 60ஆவது பிறந்தநாளுக்குக் காந்திஜி வாழ்த்துச்
செய்தி அனுப்பியது என, மேற்கண்ட விஷயங்கள் அனைத்துமே, எங்கள் இருவருக்கும் இடையே கொள்கை
ரீதியான அல்லது நிஜமான வேற்றுமைகள் இருந்தாலும், அவை பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ,
ஆழ்ந்த வெறுப்பாக மாற நாங்கள் என்றைக்குமே அனுமதித்ததில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.
இதன் காரணமாகவே திடீரென அதிர்ச்சியூட்டும்
வகையில் மகாத்மா காந்தியின் படுகொலைச் செய்தியை நான் கேட்டதுடன், பத்திரிகை செய்தி
மூலம் அதைச் சந்தேகத்துக்கு இடமற்றக் கொடூரமான, சகோதரச் சண்டை என்று வெளிப்படையாகவே
கண்டித்தேன். இன்றைக்கும் கூட மகாத்மா காந்தியின் படுகொலையை சமரசமற்றப் படுகொலை என்றே
கண்டிப்பேன்.
மேற்கூறிய முக்கிய விவரங்கள் காரணமாக
ப்ராசிக்யூஷன் தரப்பு கிரிமினல் வழக்குக்குத் தேவையான நிலையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்,
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது
எனவே வாக்குமூலத்தில் விவரிக்கப்பட்ட
எனது வாதத்தைப் படித்துப் பார்த்த பிறகு என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முழுக்க முழுக்க
சந்தேகங்களாலும், அனுமானங்களாலும் ஆனவை என்பதைப் ப்ராசிக்யூஷன் தரப்பு நம்புமெனத் தாழ்மையுடன்
சமர்ப்பிக்கிறேன். இது போன்ற சந்தேகங்கள் மற்றும் அனுமானங்களால் பிரச்சினைகளைக் குழப்பாமல்,
எனக்கு எதிராக உள்ளதைப் போன்ற வழக்கை மதிப்பீடு செய்து நீதிமன்றம் முடிவுக்கு வர உதவுவதே
அதன் கடமை என்பதை ப்ராசியூஷன் தரப்புக்கு நினைவூட்ட வேண்டுமெனக் கருதவில்லை.
எனது வாக்குமூலத்தை நிறைவு செய்வதற்கு
முன்பு ஒரு மனிதன் தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்குச் சாத்தியம் உண்டு என்பதால்
மீண்டும் உறுதியாக வலியுறுத்துகிறேன். என் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றத்தையும்
நான் இழைக்கவும் இல்லை, அதற்கான காரணமும் எதுவும் இல்லை. என் மீது குற்றம் சுமத்தப்பட்டது
போல் எந்தக் கிரிமினல் ஒப்பந்தத்துடனோ, சதித்திட்டத்துடனோ எனக்கு எந்தப் பங்களிப்பும்
இல்லை. குற்றச்சாட்டில் கூறியுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாகவும் இல்லை,
குற்றச் செயல்கள் குறித்து அறிந்திருக்கவும் இல்லை.
எனவே, மாண்புமிகு கனம் நீதிபதி அவர்களுக்குத்
தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், மேற்கூறியவை உள்ளிட்ட ஏனைய காரணங்களுக்காக,
எனது நடத்தை மீது சிறு களங்கம் கூட இல்லாமல், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும்
விடுவித்து என்னை விடுதலை செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  
தில்லி                                                
 (ஓப்பம்) வி.டி. சாவ்சர்கர்
தேதி 1948 நவம்பர் 20                                     குற்றம் சுமத்தப்பட்டவர்
இணைப்பு A 
ஏ எஸ் பிடே எழுதிய ‘வீர் சாவர்க்கர் சூறாவளிப்
பிரச்சாரம்’ என்னும் நூலின் 262 பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை (பிரிவு 26 (A) பக்கம்
46)
ஜவாஹர்லால் நேருவுக்குச் சிறைத் தண்டனை
பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு நான்கு
ஆண்டு சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு தேசாபிமானிக்கும் வருத்தமான அதிர்ச்சியைக்
கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவும் பல்வேறு தத்துவங்கள்
மற்றும் கொள்கைகள் காரணமாக நாங்கள் வேறு வேறு பாதைகளில் இயங்கிக் கொண்டிருந்தாலும்,
பண்டித ஜவாஹர்லால் நேருஜியின் பொது வாழ்வு முழுவதும் அவர் மேற்கொண்ட நாட்டுப் பற்று
மற்றும் மனிதாபிமான முனைவுகளைப் பாராட்டவும், அவர் சந்திக்கும் துன்பங்களுக்கு எனது
ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கவும் தவறினால், இந்து சபா உறுப்பினர் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்.
‘காங்கிரசுக்குள் காந்தியக் கொள்கைகளிலிருந்து
மாறுபட்ட கட்சிகளின் தேசாபிமானத் தலைவர்களான சேனாபதி பாபத், பாபு சுபாஷ் சந்திர போஸ்
மற்றும் ஏனைய தொண்டர்களும், போர் தொடங்கிய உடனேயே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் தண்டனை அளிக்கப்பட்ட போது, பண்டித ஜவாஹர்லால் நேருஜி உள்ளிட்ட காங்கிரஸின் இப்போதைய
செயற்குழுவும், வழிநடத்திய காந்திஜியும், குற்ற உணர்ச்சியுடன் அமைதியாக இருந்தார்கள்.
அத்தோடு, எந்தவொரு கண்டனத்தையோ, வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அரசின்
கொள்கையையும், அடக்குமுறையையும், இந்து மகாசபா தனது கடமையிலிருந்து விலகி எச்சரிக்கத்
தவறவில்லை. வெஸ்ட்மினிஸ்டர் ஸ்டேசரில் பரிந்துரைத்ததுபோல் டொமினியன் அந்தஸ்தை உடனடியாக
அரசு வழங்கினால் மட்டுமே இந்திய மக்களின் உண்மையான மற்றும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்
என்றும், ஒடுக்குமுறை இன்னும் ஆழமான அதிருப்தியையே ஏற்படுத்தும் என்றும், இந்து மகாசபாவின்
செயற்குழு 1940 மே மாதமே இது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தி நிறைவேற்றியது. நம்பிக்கை
ஒன்றே நம்பிக்கையை ஏற்படுத்தும். அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான மேம்பாடு மட்டுமே
தேசிய அளவிலான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும்.
‘உலக யுத்தம் வெடித்த உடனேயே பண்டித ஜவாஹர்லால்ஜி
போன்ற மாமனிதர் அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன், உலக ஜனநாயகத்தைக் காக்கும் பிரிட்டிஷுக்கு
நிபந்தனையற்ற ஒத்துழைப்பை இந்தியா வழங்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டார். பிறகு,
மனக்கசப்புடன் அனைத்து ஒத்துழைப்பையும் திடீரெனக் கண்டித்தார். ‘இதன் காரணமாக இந்தியப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்குத் தண்டனை வழங்கும்
அளவுக்கு வேறு வழியின்றி அரசு தள்ளப்பட்டிருக்கிறதா என்ன?’ என்று நான் கேட்கும் ஒரு
சாதாரண கேள்வி தொடர்பாகக் கொஞ்சம் தீவிர கவனம் செலுத்துமாறும் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உலக யுத்தம் வெடித்தவுடன் ஐரோப்பாவிலுள்ள
ஒரு நாடு உலக ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்லது சுயநலமற்ற வேறு முனைவுக்காகப் போரில் பங்கேற்றது
என்று காங்கிரஸ் வெளிப்படையாக, அவசர அவசரமாக, அதீத ஆர்வத்துடன் அறிக்கை வெளியிட்டது.
ஆனாலும், ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய நலனுக்காகவும், ஏகாதிபத்திய இலட்சியத்துக்காகவுமே
களத்தில் இறங்கின. இதன் விளைவாக இந்து மகாசபா தொடக்கம் முதற்கொண்டே தங்கள் தேசிய நலன்களைப்
பெற ஒரே வழி ‘ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு’ மட்டுமே என்று தனக்குத் தானே சொந்தக் கொள்கையை
வகுத்துக் கொண்டது.
இந்தக் கொள்கையின் கீழ் ஒத்துழைப்பு என்பதும்
தொடர்புடைய ஆக்கப்பூர்வ விளைவு என்று சுட்டிக் காட்டப்படுவதும் தெளிவாக இல்லையா? நேர்மையான
ஒத்துழைப்பைப் பெற ஒடுக்குமுறை மட்டுமே சிறந்ததாகக் கருத முடியுமா?
இந்திய அரசு இந்தியாவைத் தொழில்மயமாகவும்,
ராணுவ பலமிக்கதாகவும் மாற்றவும், எதிரிகளின் படையெடுப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பம்
ஆகியவற்றிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு மேற்கொள்ளும் அனைத்து போர்
முனைவுகளிலும், இந்து சங்கடன்கள் இன்றைய சூழலில் தங்கள் சக்திக்கு உட்பட்டு பங்கேற்க
வேண்டும். இந்து சபா உறுப்பினர் என்ற வகையில் இதில் உண்மையாகவே ஆர்வமாக உள்ளேன். அமைதி
அல்லது நிர்பந்திக்கப்பட்ட ஒத்துழைப்பைப் பெற இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
அடக்குமுறையை மட்டுமே நம்பியிருக்கிறது. இந்தியாவின் நிஜமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்,
தடையாகவும், இதை விடத் தீவிரமாக வேறேதும் இல்லை. இவற்றையெல்லாம் தாமதமாக உணர்ந்து கொள்வதற்கு
முன்பாகவே, இந்திய அரசு மயக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்தக்
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்; நல்ல ஆரம்பமாக டொமினியன் அந்தஸ்தை வழங்குவதன் மூலம் உடனடியாக
அரசியல் அமைப்புச் சட்ட வழிமுறைகளுக்கான கதவுகளைத் திறந்து விட வேண்டும். இவ்வாறு நடைபெறும்
பட்சத்தில், இந்திய தேச நலனில் தங்களுக்குக் கடமை இருப்பதுடன், அரசுடன் இணைந்து செயல்படவும்,
நேருஜி போன்ற தலைவர்கள் உணர்வதை அரசு காண வாய்ப்புண்டு. ஒரு பிரிவினர் இந்தக் கொள்கைக்கு
உடன்படவில்லை என்றாலும், இந்திய மக்களுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை
எதிர்க்கும் அவர்களது கிளர்ச்சி பொது மக்கள் மனத்தில் தானாகவே குறையத் தொடங்கும். இதனால்
அவர்களுடைய எண்ணமும் தானாகவே தோல்வி அடைந்துவிடும். எனவே இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் கடுமையான தண்டனைகள் பெறும் அளவுக்கு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.
06/11/1940
இந்து சபாக்களுக்கு எச்சரிக்கை
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், உங்கள் கடமையும்.
அனைத்து மாகாண மற்றும் உள்ளூர் உள்ளூர்
இந்து சபாக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீவிர கவனம் செலுத்த அவசர அழைப்பு விடப்படுகிறது.
ஐதராபாத் உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தைப் போன்று மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முக்கியம் மற்றும் அவசரமும் ஆகும். வரவிருக்கும்
குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு பொதுச் சேவை, சட்டமன்றங்கள் தொடர்பான அனைத்து அரசியல்
அமைப்பு விவகாரங்கள், எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவாகும் எண்கள் மற்றும்
தகவல்கள் அடிப்படையில் அட்டவணையிடப்பட்டு உறுதி செய்யப்படும்.
ஏனைய விஷயங்களைப் போன்றே காங்கிரஸின்
முட்டாள்தனமான கொள்கையால், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் புறக்கணித்த காரணத்தால்,
இந்துக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். காங்கிரஸை வழிநடத்தும் எண்ணக் கோளாறு
கொண்ட காந்திஜியின் சில புதிய ‘உள் குரல்கள்’ இம்முறை கூட இந்துக்களின் நலன்களைத் தியாகம்
செய்வதுடன், போலித்தனமான தேசியத்தையும் திருப்திப்படுத்தும், ‘சத்தியாகிரகம்’ போன்ற
நடவடிக்கையை எடுப்பார்களா என்று சொல்ல முடியாது. எனவே இதன் காரணமாக இந்து மகாசபா தொடக்கத்திலிருந்தே
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் ஜனத்தொகை வலிமையைத் துல்லியமாகப் பதிவு
செய்ய வலியுறுத்துவதுடன், இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட இந்துக்களின் நலன்களைப்
பாதுகாக்கத் தவறினால், தங்கள் வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் தங்களுக்குத் தாங்களே
இந்துக்கள் இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணர்த்தும் வகையில்,
சரியான நேரத்தில் களமிறங்கி இந்து நாட்டுக்குத் தனிப்பட்ட முனைவையும், வழிகாட்டுதலையும்
வழங்க வேண்டும்.
புயல் வேகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்
இதன் காரணமாக ஒவ்வொரு மாகாணம், மாவட்டம்
மற்றும் உள்ளூர் இந்து சபா உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் புயல் வேகப் பிரச்சாரத்தை
மேற்கொண்டு இந்துக்களின் எண்ணிக்கையை வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் துல்லியமாகப்
பதிவு செய்ய வேண்டும். அதே சமயம் சட்டத்துக்குப் புறம்பாக முஸ்லிம்கள் தங்களது எண்ணிக்கையை
மிகைப்படுத்திப் பதிவு செய்வதையும் எப்படியேனும் தடுத்தாக வேண்டும். மேலும் மக்கள்
தொகை எண்ணிக்கையின் சரியான பதிவு மட்டுமே முக்கியமல்ல. இந்துக்களின் நலன் அரசியல்,
சமூகம், மதம், பொருளாதாரம், வரலாறு என எல்லாப் பிரிவுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில்
அனைத்து விவரங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமும் கட்டாயமும்
ஆகும்.
பிரச்சாரத்துக்கான எல்லைகளை வகுக்கவும்,
முறைப்படுத்தவும், கீழ்க்காணும் சில முக்கிய அறிவுறுத்தல்களை இந்தியாவிலுள்ள அனைத்து
மாகாண, மாவட்ட, உள்ளூர் இந்து சபாக்களும் வரையறைகளுக்கு உட்பட்டு உடனடியாகப் பின்பற்ற
வேண்டும்.
மாகாண இந்து சபாக்கள் முதற்கட்டமாக மாகாண
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர் அலுவலகத்துடனான தொடர்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். மாவட்ட மற்றும் உள்ளூர் சபாக்கள் அவரவர் பகுதியில் பொறுப்பிலுள்ள மக்கள்
தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் அதேபோன்ற தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும்.
இணைப்பு B
‘பயோனீர்’ பத்திரிகை தேதியிட்ட 1943 பிப்ரவரி 22 (நகரப் பதிப்பு)
சான்றாவணம் டி.79
பிரிவு 26 (சி) பக்கம் 47 மேற்கண்டபடி
உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் காந்திஜிக்கு விண்ணப்பம்
சாவர்க்கர் ஆலோசனை
பம்பாய் பிப்ரவரி 20 : மகாத்மா காந்தியின்
உயிரைக் காப்பாற்ற அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதைத் தவிர இப்போதைக்குத்
வேறு வழியில்லை என்பதால் தேசிய அளவிலான கோரிக்கையை இந்து மகாசபைத் தலைவர் வி டி சாவர்க்கர்
பரிந்துரைத்துள்ளார்.
‘நமக்கு முன்னிருக்கும் இருண்ட சூழலை
நாம் மன உறுதியுடன் சந்தித்தே ஆக வேண்டும். நமக்கு அந்நியமாகவும், கருணையற்றும் இருக்கும்
வைஸ்ராய் லாட்ஜ் கதவுகளின் வாசலில் நிற்பதை விடுத்து மகாத்மா காந்தியின் படுக்கை அருகே
நமது கவனத்தைத் திருப்பி, எந்த தேச நலனுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டாரோ, அந்த தேசத்துக்குச்
சேவை புரியத் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்க வேண்டும்’ என்கிறார்
சாவர்க்கர்.
‘இந்த நிமிடம் வரை மகாத்மா காந்திஜியை
விடுதலை செய்து அவரது உயிரைக் காப்பாற்ற எங்களால் இயன்ற வரை அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் உண்ணாவிரதம் தொடர்பாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
மனிதாபிமான முறையில் வைக்கும் வேண்டுகோளும் அரசின் மனத்தில் எந்த வகையான மாற்றத்தையும்
ஏற்படுத்தப் போவதில்லை. அரசின் இந்த முடிவைக் கோடிக் கணக்கான மக்கள் ஏற்காமல், அதன்
மனப்பாங்கைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டே இருப்பதால்,
விமர்சனம் மற்றும் எதிர்ப்பென ஒரு நிமிடத்தைக் கூட நம்மால் வீணடிக்க முடியாது. மகாத்மாவின்
விடுதலையை நாம் அரசுக்கு வைக்கும் வேண்டுகோள், ராஜிநாமா அல்லது தீர்மானங்கள் மூலம்
பெற முடியாது.
‘மகாத்மா காந்தி உயிரிழப்பதற்கு முன்பாக
அவரது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேறெந்த நியாயமான கேள்வியும் தடையாக இருக்க முடியாது.
மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கும் போது அதை உயிருக்கான இடர்ப்பாடாகக் கருதாமல்
கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்புவதாகக் கூறினார். இதன் காரணமாக இதுவொரு திறன்
உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறினாலும்,
அதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்’.
உயர்ந்த நோக்கம்
இரண்டாவதாக, தேவையற்ற சிறு விஷயங்களுக்கு
அதிக முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்க்கும் வகையில் உயர்ந்த நோக்கம் ஒன்றுள்ளது. மகாத்மா
காந்திஜியின் வாழ்க்கை நாட்டின் சொத்து என்பதால் அவருக்கே சொந்தமானதல்ல. நமது நச்சரிப்புகள்
அல்லது முகஸ்துதிகளுக்கு அரசு இறங்கி வருவதை விடவும், தேசிய நலனுக்காக அவர் இறங்கி
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தான் எடுத்த முடிவுகள் தேச நலனுக்குக் கேடு விளைவிக்கும்
என்பதைத் தெரிந்து கொண்டாலோ, ராஜ்கோட் மற்றும் ஏனைய இடங்களில் மேற்கொண்ட சபதங்களைப்
போன்று தான் மேற்கொண்ட சபதங்களில் ஏதேனும் சிறு தவறுகள் காணப்பட்டாலோ, தேசிய நலனைக்
கருத்தில் கொண்டு அவற்றை மகாத்மா காந்திஜி பலமுறை புறக்கணித்திருப்பதை நாம் அறிவோம்.
நிறைவாக சாவர்க்கர் கூறுவதாவது: ‘எனவே
தில்லி கருத்தரங்கில் பங்கேற்கும் அனைத்து கனவான்களுக்கும் நான் தாழ்மையுடன் கேட்பது
என்னவெனில் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், மகாத்மா காந்திஜி தனது உண்ணாவிரதத்தை உடனடியாகக்
கைவிட வேண்டுமென்று நீங்கள் மட்டுமின்றி அவரது உயிரைக் காப்பாற்ற ஏற்கெனவே துடித்துக்
கொண்டிருக்கும் நாடு முழுவதுமுள்ள நூற்றுக் கணக்கான நிலையங்களிலுள்ள பிரதிநிதிகள் அனைவரும்
கூட்டாகக் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுக்க வேண்டும்’.
இணைப்பு C
ஆனந்த் பஜார் பத்திரிகை தேதி 1944 பிப்ரவரி 24 (சான்றாவணம் டி.78)
பிரிவு 26 (எஃப்) பக்கம் 50 மேற்கண்டபடி
வி டி சாவர்க்கர் கீழ்க்காணும் தந்தியைக்
மகாத்மா காந்திஜிக்கு அனுப்பி உள்ளார்:
கஸ்தூரி பாய் மரணத்துக்கு என் ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையான மனைவியாகவும், அன்பான அன்னையாகவும்,
கடவுள் மற்றும் மனிதனுக்கான சேவையில் மேன்மையான மரணத்தைத் தழுவியுள்ளார். இந்த நாடே
உங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
இணைப்பு D
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை’ 1948 பிப்ரவரி 7 பிரிவு 29,
பக்கம் 55 மேற்கண்டபடி
சாவர்க்கரின் கருத்து
பிப்ரவரி 4 அதாவது கைதாவதாற்கு முதல்
நாள் இந்து மகாசபாவின் முன்னாள் தலைவர் வி டி சாவர்க்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
‘மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாகத் தில்லியிலுள்ள இந்து மகாசபா தலைவர் மற்றும் செயற்குழு
உறுப்பினர்கள் சிலர் கூட்டாக விடுத்த அறிக்கை, தம் உணர்வுகளை அதிகாரப்பூர்வமாக சிறப்பாக
வெளியிட்டிருக்கிறது. அத்துடன், இந்து மகாசபா என்பது ஜனநாயக மற்றும் பொது அமைப்பு என்பதையும்
தெளிவுபடுத்தி உள்ளது. இந்து மகாசபையின் துணைத் தலைவர்களுள் ஒருவன் என்ற முறையில்,
நானும் அவர்களது உணர்வுகளுடன் உடன்படுகிறேன். தனிநபர் வெறுப்பு அல்லது கூட்டத்தின்
வெறிச் செயல் காரணமாக ஏற்படும் இதுபோன்ற சகோதரச் சண்டைகளை எந்தச் சமரசமும் இன்றி வன்மையாகக்
கண்டிக்கிறேன். வெற்றிகரமான நாடு தழுவிய புரட்சிக்கும், புதிதாகப் பிறந்த தேசிய அரசுக்கும்,
சகோதரத்துவ உள்நாட்டுச் சண்டையைக் காட்டிலும், குறிப்பாக அந்நிய சக்திகளால் தூண்டப்பட
விரோதத்தை விடவும், மோசமான எதிரி இருக்க முடியாது. வரலாறு உரைக்கும் இந்த உறுதியான
எச்சரிக்கையை ஒவ்வொரு நாட்டுப்பற்று மிக்க குடிமகனும் நெஞ்சில் நிறுத்தவேண்டும்.
நிறைவு
Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா



ஆறாவது
கடிதம்
செல்லுலார்
சிறை
5 ஆகஸ்ட் 1917
போர்ட் ப்ளேயர்
எனதன்பிற்குரிய பால்,
ஜூலை 1916 அன்று நான் அனுப்பிய கடைசி கடிதத்திற்கு
நீ அனுப்பிய பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாங்கள் அனைவரும் இங்கு ஆரோக்கியமாகவும்
மகிழ்ச்சியாகவும் இருப்பதை நீ அறிந்து கொண்டிருப்பாய். இறைவன் அருளால் நீ கடந்த ஒரு
வருடம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பாய் என்று நினைக்கிறேன். நம்முடைய
தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை காரணமாக நம்மில் நேர்மையானவர்கள் தியாகம் செய்ய
வேண்டி இருக்கிறது. அந்தப் பாதை சோகமானதாகவும் பிரிவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
விதி நமக்கு கொடுக்கும் இத்தகைய வலி மிகுந்த அடிகளைப் பொறுத்துக்கொண்டு பழகிய நமக்கு
இந்தக் கஷ்டங்களும் ஏமாற்றங்களும் பழகித்தான் விட்டன. அதே போல ஏதேனும் நல்ல விஷயம்
நடந்தாலும் அது நிரந்தரமானதல்ல என்ற புரிதல் நமக்கு உண்டு. என்னைப் பொருத்தவரையில்
கண்ணீரில் இருந்து தப்பிக்க உதவும் எதுவும் மகிழ்ச்சியான ஒன்றுதான். இப்போது சூழல்
மாறிவருகிறது. அதற்கேற்ப பழைய நண்பர்களும் திரும்பி வருகிறார்கள். பம்பாய் உயர் நீதிமன்றத்தில்
உன்னை விட்டுப் பிரிந்த போது உன்னிடம் கை கொடுக்கக் கூட அனுமதிக்கப்படாமல் என் தொப்பியை
ஆட்டியபடி சென்றேன். அப்போது என் மனதில் நானும் அன்பிற்குரிய பாபாவும் உனக்கும் நம்
அன்பிற்குரியவர்களுக்கும் எதுவும் செய்யவில்லையே என்ற எண்ணம் என் மனதை அழுத்தியது.
இந்த இளம்வயதில் எவரும் சந்தித்திராத அளவு கஷ்டங்களை நீ சந்தித்திருக்கிறாய். இவ்வளவு
அடக்கமான உனக்கு, நண்பர்கள் என்று எவரும் இல்லை. ஆனால் உன்னை வெறுப்பவர்களோ ஏராளமானவர்கள்.
ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்கின்றாய். குடும்பம் சிதறுண்டு போய்
எந்த விதமான ஆதரவும் இல்லாத நிலையிலும் நாம் நல்லவற்றின் பக்கமே நிற்கின்றோம். தீயவற்றின்
பக்கம் செல்லவில்லை. ஆனால் நான் குருதி வடியும் இதயத்துடன் இதனை எழுதுகிறேன். கடவுளுக்காக
தன் எல்லாப் பூக்களையும் கொடுத்த பூந்தோட்டம் எப்போதும் பூத்துக் கொண்டேதான் இருக்கும்.
இந்தச் சூழலில் நம்பிக்கைகளும் கூட தகர்ந்து போகின்றன. ஆனால் நம் அன்பிற்குரிய வசந்தா,
மொட்டாக இருந்தவள், இப்போது மலர்ந்து அவள் மூலம் மொட்டுக்கள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.
அதன் மூலம் நமக்கு வசந்தா இப்போது ராமன், மேலும் கடவுளின் அருளிருந்தால் மேலும் ஒரு
குழந்தை கிடைக்கட்டும். அன்பெனும் ஒளி உன் வாழ்வில் மேலும் பிரகாசத்தைக் கூட்டட்டும்.
அதன் பிரதிபலிப்பு இருள் அடைந்த என் சிறை அறையிலும் கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சி
இருகின்றது. குட்டிக் குழந்தையின் பெயரான ரஞ்சன் எனக்கு என் தாயார் மற்றும் அந்தக்
குழந்தையின் பாட்டியான என் மாவாஷியை நினைவுபடுத்துகிறது. இது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக்
கொடுத்திருக்கும்? நான் இந்தக் குழந்தையைப் பார்ப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
ஆனால் என் அன்பை அந்தக் குழந்தைக்குத் தருகிறேன். அதற்கு இதெல்லாம் புரியுமா என்றும்
தெரியவில்லை. நீ ஏன் எனக்கு சாந்தாவைப் பற்றி எதுவும் எழுதவில்லை? நீ அந்த வேலையை வாகினியிடம்
விட்டுவிட்டாய். இது இந்திய வழக்கம் என்றாலும் நீ அடுத்த கடிதத்தில் நீயே உன் குழந்தையைப்
பற்றி எல்லாவற்றையும் எழுத வேண்டும். இந்தத் தன்னடக்கம் குழந்தைகளுக்குப் பெற்றோரின்
அன்பைப் புரிந்து கொள்ள விடாமல் தடுத்து விடும். இதனை உன்னுடைய விசேஷமான மற்றும் புனிதமான
கடமையாக நினைத்துச் செய். வாகினி பிளேக் நோயினால் அவதிபட்டாள் என்பதை அறிந்து வருந்தினேன்.
அந்தக் கொடிய நோய் நம் மண்ணை விட்டு அகன்றுவிட்டது என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அது இன்னமும் இருக்கிறது என்பதை இப்போது அறிந்துகொண்டேன். அது குறித்து நீ மிக
கவனமாக இரு. அது முன்பைப் போலவே உள்ளதா அல்லது அதன் தீவிரம் குறைந்து உள்ளதா? இதற்கு
இன்னமும் மருத்துவ விஞ்ஞானத்தில் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லையா? இனிமேல்
அது பரவுவது தெரிந்தால் நீ பம்பாயை விட்டு வெளியேறி விடு. அதனை நம்மால் ஒழிக்க இயலவில்லை
என்றால் நாம் அதனிடம் இருந்து தப்பிக்கவாவது வேண்டும்.
ஜனவரி 1916ல் எனக்குக் கடைசியாக பார்சல் வந்தது.
அதற்குப் பிறகு எங்கள் இருவருக்கும் பார்சல் எதுவும் வரவில்லை. இந்தப் பதினெட்டு மாதங்களில்
எங்களுக்கு இரண்டு பார்சலாவது வந்திருக்க வேண்டும். உன்னுடைய பாதுகாப்பைக் குறித்து
நாங்கள் கவலை கொள்ள இதுவே காரணம். அதனால்தான் நான் சூப்பரின்டன்டன்ட்டிடம் அனுமதி பெற்று
உனக்குத் தந்தி அடித்தேன். ஆனால் இது போன்ற பதட்டங்கள் ஏற்படாதவண்ணம் நாம் இனி நடந்துகொள்ள
வேண்டும். அதற்கு, குறிப்பிட்ட தேதிகளில் இயலவில்லை என்றாலும் குறிப்பிட்ட மாதங்களிலாவது
நீ கடிதங்களையும் பார்சல்களையும் அனுப்புவதே சிறந்த வழி.
இது எங்களைப் பொருத்தவரைக்குமான தீர்வு. ஆனால்
நமக்கு இடையே அரசு என்று ஒன்று இருக்கிறது. அவர்களுடைய விருப்பதிற்கு இணங்க நாம் நடக்கவேண்டும்.
உன்னுடைய சென்ற கடிதத்தில், நீ கிடைக்காமல் போன ஒரு பார்சல் பற்றி எழுதியிருந்தாய்.
அதே போல போன வருடம் என்னுடைய கடிதமும் காணாமல் போயிற்று. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்த இடத்திற்கு ஆயிரக்கணக்கான கடிதங்களும் பார்சல்களும் வருகின்றன. ஆனால் நம்முடைய
கடிதங்களும் பார்சல்களும் மட்டும் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதற்குக் காராணம்
தபால் துறையா? அப்படியிருந்தால் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுவரை அவர்களை
விடாதே. நீ அவற்றைப் பதிவு செய்துதான் அனுப்பி இருப்பாய். அப்படியென்றால் அவற்றை யார்
வாங்கியிருப்பார்கள், யாருடைய சதியினால் அவை களவாடப் பட்டிருக்கும் என்பதைப் கண்டுபிடித்து
விடலாம். ஆனால் ஒரு வேளை இதற்குத் தபால் துறை அல்லாமல் அரசாங்கம் காரணமாக இருந்தால்,
அப்போது நாம் மௌனமாக இருக்கவேண்டும். நான் பல விஷயங்கள் இல்லாமல் இங்கே வாழப் பழகிக்
கொண்டு விட்டேன். அதே போல நீ வருடத்திற்கு ஒருமுறை அனுப்பும் பார்சலும் இல்லாமல் வாழ
என்னால் முடியும். ஒரு புத்தகம் பதிப்பாளரிடம் இருந்து அச்சிடப்படும் இடம் வரை கண்காணிக்கப்பட்டு,
அதன் ஒவ்வொரு பக்கமும் வார்த்தை வார்த்தையாக ஆராயப்பட்டு, அதன் பிறகே அவை பதிப்பிக்கப்படுகின்றன.
அவற்றில் ஆட்சேபகரமாக இல்லாத பகுதிகளையாவது அவர்கள் அவற்றின் சொந்தக்காரருக்குக் கொடுத்திருக்க
வேண்டும்.
நாசிக் மாநாடு ஒரு பெரிய வெற்றி என்றுதான் கூற
வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டோம் என்று நினைத்துக்
கொண்டிருந்த நாங்கள் எங்களை நினைவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு நன்றிக்கடன்
பட்டுள்ளோம். ஒன்றாக இணைந்த பிறகு காங்கிரஸ் இதுபோன்ற விஷயங்களுக்குப் போராட ஏன் தயங்கவேண்டும்?
அதன் தலைவர்கள் தங்களுடைய முக்கியத்துவத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாக
இருக்கும். அவர்கள் தங்களை, போயர் புரட்சியில் ஈடுபட்ட போராளிகளை விடுவித்த ஜெனரல்
போத்தாவைவிட சிறந்த ராஜதந்திரியாக நினைத்து கொண்டிருக்கலாம். அல்லது ஐரிஷ் கைதிகளின்
விடுதலைக்காக அயராது பாடுபட்ட ரெட்மாண்ட்டைவிட சிறந்த தேசியவாதியாக தங்களை நினைத்து
கொண்டிருக்கலாம். மிஸ்டர் போனர்லா கூற்றான “இது ஒரு புரட்சியில் பொதுவாகக் கலந்து கொள்வது
போல” என்பது உண்மையல்ல. ஏனென்றால் இந்திய அரசியல் கைதிகள் பெரும்பாலோனோர் பொதுவாகக்
கலந்து கொண்டவர்கள்தான். மற்றவர்களில் பெண்களின் ஓட்டுரிமைக்காகப் பாடுபட்டவர்கள் உண்டு.
அவர்களும் நெடுநாள் முன்பே ஒவ்வொருவராக மிஸ்டர் அஸ்கித் அவர்களால் விசாரிக்கபட்டுத்
தண்டிக்க பட்டவர்கள். காங்கிரஸ் ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்தவுடன் எங்களுடைய
விடுதலை குறித்து ஒரு மனு பொது மக்களால் அனுப்பப் பட வேண்டும். இத்தகைய மனுக்களும்
தீர்மானங்களும் எங்களுக்கு உடனடியாக விடுதலையைப் பெற்று தராதுதான் என்றாலும் அது எங்கள்
விடுதலைக்குப் பிற்காலத்தில் உதவியாய் இருக்கும். அது மட்டுமல்லாது நாம் யாருக்காகப்
போராடினோமோ அவர்கள் நம்மை நினைவில் வைத்திருக்கவில்லை என்றால் திரும்ப அவர்களிடத்தில்
செல்வது அவமானகரமான ஒன்று என நினைப்பவன் நான். சரியோ தவறோ இந்தத் தேசத்தின் மீது அபரிமிதமான
பற்றைக் கொண்டிருக்கிறேன் நான். ஆகவே மனுவை அனுப்ப முடியுமா என்று முயன்று பார். அது
மாநாட்டுத் தீர்மானங்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது.
நம் பாபாவை நான் சந்தித்த ஒரு நிமிடத்தில் நான்
அவரிடம் பித்ருரிணம் (முன்னோர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்), தேவரிணம் (தேவர்களுக்கு
நாம் செலுத்த வேண்டிய கடன்), ரிஷிரிணம் (ரிஷிகளுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) ஆகியவை
போல புத்ரரிணம் (மகன்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) என்று ஒன்று இருக்கிறது எனக்
கூறினேன். உன்னுடைய கடிதம் கிடைத்த பின்பு அந்தக் கடன் கழிந்ததாகவே நான் உணர்கிறேன்.
நீ இப்போது படித்து முடித்து உன் சொந்தக் காலிலே நிற்கத் தயாராகி விட்டாய். இனி குறைந்தபட்சம்
அடுத்த இரண்டு வருடங்கள் உனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கப் போகிறது. உன்னால் நாங்களும்
மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் எந்த மகிழ்ச்சியும் நிரந்தரமானதல்ல. இந்த உலக வாழ்க்கை
மூன்று இதழ்கள் கொண்ட பூவைப் போன்றது. ஒரு இதழ் மகிழ்ச்சிக்கான வண்ணத்தையும் ஒரு இதழ்
துன்பத்தினால் ஏற்படும் வலிக்கான வண்ணத்தையும் மூன்றாவது இரண்டு வண்ணங்கள் கலந்ததாகவும்
அல்லது வண்ணம் இல்லாமலும் இருக்கும். இப்போது மகிழ்ச்சிக்கான இதழின் நேரம். அடுத்து
துன்பதிற்கான இதழின் நேரம் வரும். அதன்பிறகு இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
வரலாற்றை ஆராய்ந்தாலும் கூட அது பிறப்பு மற்றும் இறப்புகளின் பட்டியல்களையும் திருமணங்கள்
மற்றும் துக்கங்களின் பட்டியல்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது. ஆகவே நாம் மகிழ்ச்சியில்
திளைத்திருக்கும்போது கூட அது நிரந்தரமானது அல்ல என்ற புரிதலோடு துன்ப காலங்களையும்
நினைவில் இருத்தி வைக்க வேண்டும். இந்தியாவில் துரதிஷ்டவசமாக இந்த காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு,
துன்பம் என்னும் காலகட்டம் சஹாரா பாலைவனம் போல மிக நீண்டதாக இருக்கும். தகிக்கும் வெயிலில்
இந்தப் பாலைவனத்தில் இத்தகைய நீண்ட கொடும் பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது அவ்வப்போது
இது போன்ற பாலைவனச் சோலைகள் கண்ணில் படும். இதுவும் கடவுளின் அருளே என்று கருதி நாம்
நம் பயணத்தைக் கடமையாக பாவித்து தொடரவேண்டும். ஞானிகள் வேண்டுவதைப் போல நாமும் அடக்கத்துடன்
கடவுளிடம் ‘எனக்கு என்ன வேண்டுமோ அதனைக் கொடு, எனக்கு எதெல்லாம் தேவையில்லையோ அவற்றை
நீக்கி விடு’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு இளைஞனின் இறுதி லட்சியம்
எதையும் சேகரிப்பது அல்ல. மாறாக தியாகம் செய்வதே. கடவுளின் மாலைக்காகத் தன்னிடம் உள்ள
எல்லாப் பூக்களையும் தருகின்ற தோட்டத்தைப் போல எப்போதும் நாமும் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
என்னுடைய தாயார் எப்படி இருக்கிறார்கள்? என்னுடைய
ஒரே சகோதரியை நான் எப்படி மறக்க முடியும்? நான் என்மீதே கோபம் கொண்டு என்னுடனே கூட
பேசாமல் இருக்கலாம். இந்த மகிழ்ச்சியான காலம் நீடித்து இருக்கும்போதே எனதன்பிற்குரிய
ஷாந்தாவிற்கும் அன்பிற்குரிய ரஞ்சனுக்கும் ஏதேனும் முதலீடு செய்து சேமித்து வைக்கவும்.
மீண்டும் கஷ்டகாலம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. நம்முடைய மேடம் காமாவின்
பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. போர்க் காலத்திலும் கூட அவர் உன்னை நினைவில்
வைத்திருக்கிறார். சில சமயம் ரத்த உறவுகளைக் காட்டிலும் இத்தகைய நட்புகள் நமக்கு மிகவும்
நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இது மிகவும் சூக்ஷ்மமானது. இதனைப் புரிந்து கொள்வது
கடினம்.
என் பிரிய யமுனாவும் வாகினியும் ஒருவரோடு ஒருவர்
இணக்கமாக இருக்கிறார்களா? நான் அவர்களை அன்புடன் விசாரித்தேன் என்று கூறவும். நம் அன்பிற்குரிய
பாலு எப்படி இருக்கிறான்? நான் அவனை பம்பாய் சிறையில் பார்த்தேன். மிகவும் நேசிக்கத்தகுந்த
பையன். இப்போது பெரிய ஆளாகி இருப்பான் அல்லவா? அதே போல அன்னாவும். அவனும் வளர்ந்து
முதிர்ச்சியுள்ள பெரிய ஆளாகி இருப்பான் என்று நினைக்கிறன். என் சகோதரர்கள் தத்து, நாணா
உட்பட எல்லோரை பற்றியும் எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆவலாக
இருக்கிறது. நான் எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள மாட்டேன் என்று யமுனா நினைக்கலாம்.
ஆனால் என் முந்தைய கடிதங்களில் பல விஷயங்களை குறிப்பிடாததற்குக் காரணம் என் மறதி இல்லை
என்பது அவளுக்கும் புரிந்திருக்கும். பாபாவிற்கு அடுத்தபடியாக நான் மிகவும் நேசிக்கும்
மிகவும் மதிக்கும் குடும்பம் ஒன்று உண்டென்றால் அது அவளுடைய சிப்லுங்கர் குடும்பம்தான்.
ஆனால் என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமான அந்தக் குடும்பத்தின் துன்பத்திற்கும்
கவலைக்கும் நான் காரணமாகி விட்டேனே என்றெண்ணும் போது எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாகின்றது.
அந்தக் குற்ற உணர்ச்சியினாலேயே நான் அவர்களைப் பற்றி மேலும் விசாரிக்காமல் என் அன்பை
வெளிபடுத்தாமல் இருக்கின்றேன். இப்படிப்பட்ட மைத்துனர்கள் கிடைத்ததற்கு ஒருவர் மிகவும்
பெருமைப்படவல்லவா வேண்டும்?. என்னையும் அவர்களுள் ஒருவனாக வளர்த்த அவர்கள் குடும்பம்
எவ்வளவு அன்பானது! துறவிக்கு ஒப்பான, கடமை தவறாத அவர்கள் தாயார். அதே போலத்தான் என்
நண்பர்கள் விஷயத்திலும். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால்
அவர்கள் நன்மையைக் கருதியோ அல்லது என்னுடைய நன்மையைக் கருதியோ நான் அவர்கள் எல்லோரையும்
பெயர் சொல்லி விசாரிப்பதில்லை. என்னுடைய நண்பர் என்று சொல்லிக்கொண்டு உன்னிடம் வந்த
அந்த வழக்கறிஞர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை இன்னமும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பதற்கு
அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதே நேரம் இங்கே என்னைப் பார்த்தேன், என்னுடன்
பழகினேன் என்று கூறிக்கொண்டு உன்னிடம் வருபவர்களிடம் நீ எச்சரிக்கையாக இரு. உனக்கு
மிகுந்த அனுபவம் இருக்கின்றது. அதனால் எச்சரிக்கைகள் எதுவும் தேவையில்லைதான் என்றாலும்,
ஒன்றை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நான் எவர் மூலமாகவும் உனக்கு எந்த
ஒரு செய்தியையும் சொல்லி அனுப்ப மாட்டேன். எல்லாவற்றையும் கேட்டுகொள். ஆனால் எதையும்
அப்படியே நம்பி விடாதே. எவற்றை நம்பலாம் என்று உன் அறிவு சொல்கிறதோ அவற்றை மட்டும்
எடுத்துக்கொள். நேரமாகி விட்டது. நான் முடித்தாக வேண்டும். நீ கேட்ட விவரங்கள் உனக்கு
பாபாவின் கடிதத்தில் அனுப்பப்படும். எல்லோரையும் விசாரித்ததாகக் கூறவும். எங்களுடைய
உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். முடிந்தவரையில் உன்னுடைய உடல் ஆரோக்கியத்தை
நன்றாகப் பார்த்துக்கொள்ளவும். மனித முயற்சியைத் தாண்டி ஏதேனும் மோசமான நிலை வந்தாலும்
அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்போம். கவலை வேண்டாம்.

இப்படிக்கு

உன் அன்புள்ள

தாத்யா.

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 7) | தமிழில்: ஜனனி ரமேஷ்



பகுதி
7
(26)எனது வாக்குமூலத்தில் இந்தக் கட்டம் வரை, எனது
பாதுகாப்பு தொடர்பான எதிர்மறை விஷயங்களை மட்டுமே கையாண்டு வந்துள்ளேன். என்னைச் சிக்க
வைக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த அனைத்து சான்றாவணங்களும் தவறென நிரூபிக்க
முயன்றுள்ளேன். கனம் நீதிபதி அவர்களை இப்போது நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் எனது
பாதுகாப்பு தொடர்பாக நான் உடன்படும் விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்.
மகாத்மா காந்திஜியின் படுகொலைக்கு நானும் உடந்தை என்றும், பண்டிட் நேருவின் உயிரைப்
பறிக்கத் தூண்டிவிட்டேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காந்திஜி மற்றும்
பண்டிட்ஜீ ஆகியோர் மீது நான் வைத்திருக்கும் தனிப்பட்ட மதிப்பையும், மரியாதையும் இத்தருணத்தில்
கனம் நீதிபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
1908ம் ஆண்டு காந்திஜி இலண்டனில் முக்கியப் புள்ளியான பண்டிட் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்குச்
சொந்தமான ‘இண்டியா ஹவுஸில்’ தங்கியிருந்த போது அவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு
என்வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அவருடனான தனிப்பட்ட மற்றும் பொதுவான உறவுகளை
இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை. அத்தருணத்தில் நானும் காந்திஜியும் நண்பர்களைப்
போலவும் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் போலவும் ஒன்றாக வசித்துப் பணியாற்றிதையும், தனது
மனைவியுடன் தனிப்பட்ட முறையில் வருகை தந்து பழைய நண்பர்கள் மற்றும் தற்போதைய அரசியல்
பற்றி பல மணி நேரம் எங்களுடன் அளாவியதையும் சுட்டிக்காட்டப் போவதில்லை. மேலும் காந்திஜி
அவரது ‘யங்க் இந்தியா’ இதழில் அவ்வப்போது என்னைப் பற்றி எழுதிய நெகிழ்வான விஷயங்களையும்
குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவும் போவதில்லை. ஏனெனில் இந்த வழக்குக்கும்,
அந்த நினைவுகளுக்கும், எந்தத் தொடர்பும் கிடையாது என்பதே முக்கியக் காரணம். சில விஷயங்களிலும்,
சித்தாந்தங்களிலும், எங்கள் இருவருக்கும் இடையே அடிப்படை வேறுபாடு நிலவினாலும், பரஸ்பர
அபிமானம் இருந்ததால், தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மரியாதையும், தனிப்பட்ட நல்லெண்ணமும்
கொண்டிருந்தோம்.
கடந்த சில வருட நிகழ்வுகளை மட்டுமே நான் கருத்தில்
எடுத்துக் கொள்கிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு 1938ம் ஆண்டு முதல் பல கடிதங்களைச் சான்றாவணங்களாகச்
சமர்ப்பிக்க இந்த நீதிமன்றம் அனுமதித்தே இதற்குக் காரணமாகும். எனவே நானும் 1940 முதல்
என்னால் வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் அச்சான ஆறு அல்லது ஏழு பத்திரிகைச் செய்திக்
குறிப்புகளை மேற்கோள் காட்ட என்னைக் கட்டாயம் அனுமதிக்கவேண்டும். என்னுடைய இந்த வாக்குமூலத்தில்
அவற்றின் சாரத்தை மேற்கோள் காட்டுகிறேன். எனது நினைவிலிருந்து அவற்றை எடுத்திருக்க
முடியாது என்பதை நிரூபிக்க அவற்றின் மூல அச்சுப் பிரதிகளையும், இந்த வாக்குமூலம் தொடர்பான
கடிதங்களையும், பல்வேறு தேதிகளில் வெளியான பத்திரிகைச் செய்திகளையும் தனித்தனியாக இணைத்துள்ளேன்.
என்னுடைய வாக்குமூலத்தை உறுதிப்படுத்த அவற்றை இந்த நீதிமன்றம் படித்துப் பார்க்கும்
பட்சத்தில், இணைக்கப்பட்ட அந்தப் அச்சுப் பிரதிகள் பயனளிக்கும். எது எப்படியிருப்பினும்,
இணைக்கப்பட்ட அச்சுப் பிரதிகளை அச்சடித்துத் தர தீடீரென இன்றைக்கு ஆணையிட்டிருக்க முடியாது
என்பதை மட்டும் இவை நிரூபிக்கும்.
இந்த வாக்குமூலத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த அச்சுப்
பிரதிகள் அனைத்துமே என் வசம் இருந்த கோப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்று ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சியான பிரதான் (எண் 129) என்பவரால் ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டவை
என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவை பிரதிவாதி சான்றாவணங்களாக எண் குறிக்கப்பட்டு
நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
(A)பண்டிட் நேரு குறித்த எனது பத்திரிகைச் செய்தி
பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு நான்கு ஆண்டு காலம்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது 1940 நவம்பர் 6ம் தேதி நான் வெளியிட்டு இந்தியா முழுவதுமுள்ள
அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியான பத்திரிகைச் செய்தி. இதன் சாராம்சம் ‘வீர் சாவர்க்கர்
சூறாவளிப் பிரசாரம்’ (Veer Savarkar’s Whirl-wind Propaganda)என்னும் எனது அறிக்கைகள்
அடங்கிய புத்தகத் தொகுப்பின் பக்கம் 262ல் காணலாம். இந்நூலை வெளியிட்டவர் திரு ஏ.எஸ்.
பிடே. இதை உறுதிப்படுத்த இதன் மூலப் பக்கங்கள் எனது வாக்குமூலத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ளன
(இணைப்பு A).
‘பண்டிட் ஜவாஹர்லால் நேருவுக்கு
விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு காலச் சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு இந்திய தேசாபிமானிக்கும்
நிச்சயம் வருத்தமளிக்கும் அதிர்ச்சியாகும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவிய பல்வேறு
கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் காரணமாக வேறு வேறு சித்தாந்தங்களின் கீழ் பணியாற்றி
வந்தாலும், பொது வாழ்க்கை முழுவதும் தொண்டாற்றிய அவரது தேசாபிமானத்துக்கும் மனிதாபிமானத்துக்கும்
எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், அவர் தொடர்ந்து சந்தித்து வரும் கொடுமைகளுக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்களயும் தெரிவிக்காவிடில், இந்து சபாவைச் சேர்ந்தவன் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்’ – சாவர்க்கர்.
(B)காந்திஜி மற்றும் நேருஜி கைது குறித்த எனது
பத்திரிகைச் செய்தி:
1942 ஆகஸ்ட்டில் தலைவர்கள் கைதானதைத் தொடர்ந்து
வெளியான பத்திரிகைச் செய்தியின் சாராம்சம் : (சான்றாவணம் டி.36)
‘தவிர்க்க முடியாதது நடந்தே
விட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னணி மற்றும் தேசாபிமானத் தலைவர்களான மகாத்மா காந்தி,
பண்டிட் ஜவாஹர்லால் நேரு மற்றும் நூற்றுக் கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். தேசாபிமானச் செயலுக்காக அவர்கள் சந்திக்கும் துயரங்களுடன் இந்து
சங்கடனைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட இரங்கல்கள் இணையும்’.
‘இந்தியாவில் நிலவும்
அமைதியின்மைக்குத் தீர்வு காண ஒரே சிறந்த வழி இந்திய – பிரிட்டிஷ் காமன்வெல்த்தில்
கிரேட் பிரிட்டனுக்கு இணையாகச் சரிசமமான உரிமைகளையும் கடமைகளையும், உள்ளடக்கிய முழு
சுதந்திரத்தையும், இணையான அந்தஸ்தையும் கொண்ட அரசியல் நிலையை வழங்குவதாக பிரிட்டிஷ்
பாராளுமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி அறிவிப்பதுடன், மேற்கண்ட அறிக்கையில் கூறியுள்ளதுபோல்
உண்மையான அரசியல் அதிகாரங்களை இந்தியாவுக்கு அளிக்க உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள
வேண்டுமென்றும், நான் மீண்டும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’ – சாவர்க்கர்.
(C)காந்திஜியின் உண்ணாவிரதம் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
சர் தேஜ் பகதூர் சாப்ரூ தலைமையில் டாக்டர் ஜெயகர்,
சர் ஜெகதீஷ் பிரசாத் மற்றும் ஏனைய தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
நானும் ஓர் உறுப்பினராக இருந்தேன். இப்பொறுப்பில் இருந்த காரணத்தால் 1943ம் ஆண்டு சிறையில்
இருந்தவாறே காந்திஜி மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்துக் கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டேன்
(சான்றாவணம் டி.79 பார்க்கவும்). (இணைப்பு B)- 1943 பிப்ரவரி 22 தேதியிட்ட ‘பயனீர்’
பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு.
‘காந்திஜியின் மோசமான
உடல் நிலை குறித்து நாம் அனைவரும் ஆழ்ந்த கவலை கொள்வதுடன், அவரது விலை மதிப்பற்ற உயிரைக்
காப்பாற்றவும், எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ, காந்தியிஜியின் உயிரைக் காப்பாற்ற நாடு தழுவிய அளவில் நாம் அனைவரும்
கூட்டாக இணைந்து மகாத்மா காந்திஜியிடமே, அவர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு
வேண்டுகோள் விடுப்பது ஒன்றுதான் இப்போதுள்ள ஒரேயொரு மிகச் சிறந்த வழி என்பதை உணர வேண்டும்.
அவர் கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக நாம் இதைச் செய்யவேண்டும். இந்த வாய்ப்பின்
மீது அதிக நம்பிக்கை வைப்பது இப்போது கூட அபாயகரமானதுதான்.
காந்திஜியின் உயிரைக்
காப்பாற்ற அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசை இணங்க வைக்க எங்களால் இயன்ற
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உண்ணாவிரதமோ, தார்மிகமோ, மனிதாபிமான வேண்டுகோளோ,
அரசின் இதயத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று இப்போது நம்புவதில் எந்தப் பயனும்
இல்லை. மரணம் உள்ளிட்ட அபாயகரமான எந்த விளைவுகளுக்கும் பொறுப்பில்லை என்று கைகளை உதறிவிட்டுத்
தெளிவாக இருக்கின்றது. நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருப்பதால் கோபிப்பதிலும், கண்டிப்பதிலும்,
எந்தவொரு வினாடியையும் வீணடிக்கக் கூடாது. அரசிடம் வைக்கும் வேண்டுகோள், ராஜினாமா அல்லது
தீர்மானம் மூலம் காந்திஜியின் விடுதலையைப் பெற முடியாது. மனிதாபிமானம் இல்லாத வைஸ்ராய்கள்
லாட்ஜ் கதவுகளின் முன்பு காத்திருப்பதை விட நமது முகங்களை காந்திஜியின் படுக்கை அருகே
திருப்பி, எந்த தேசத்துக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டாரோ, அந்த தேசத்தின் நலனுக்காக
அதை நிறுத்த வேண்டுமென்று அவரிடமே கோரிக்கை வைக்க வேண்டும்.
மரணம் என்னும் விபரீத
முடிவுக்குச் செல்வதற்கு முன்பாக இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த எந்தத் தார்மிகக் கேள்வியும்
குறிக்கே நிற்கப் போவதில்லை. தார்மிகக் கேள்விகள் அரசியல் காரணங்களுக்காகக் கேட்கப்படுகின்றன
என்பதால் அவை அவற்றின் அரசியல் பயன்பாடுகளாலேயே முக்கியமாகத் தீர்மானிக்கப்படும். காந்திஜியே
உண்ணாவிரதத்தை இரு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மேற்கொண்டார். முதலாவது அவரது உயிருக்கான
இடர்ப்பாடு என்பதை விடக் கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்பினார். இதன் காரணமாக
இதுவொரு திறன் உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அவர்
கூறினாலும், மேற்கூறிய இரு முக்கிய வரம்புகள் காரணமாக இதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்.
இரண்டாவது, இந்த அம்சம்
தவிர்த்து, ஏனைய விஷயங்களை விடவும் மேலோங்கும் வகையில், உயர்ந்த நோக்கம் உள்ளது. தனது
உயிரைப் பிணை வைத்து எந்த நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து சேவை செய்ய காந்திஜி விரும்பினாரோ,
இந்தச் சூழலில், அவரது இழப்பை விட, அவரது உயிர் விலை அளவிட முடியாத மதிப்பு கொண்டது
என அந்த நாடு உணர வேண்டும் என்பதே நோக்கமாகும்.
நமது வற்புறுத்தல் அல்லது
புகழ்ச்சிக்காக அரசு இணங்குவதை விடவும், இந்த தேசத்துக்காக அவர் இணங்குவதற்கான வாய்ப்புகள்
நிச்சயம் அதிகம். ஏனெனில் ராஜ்கோட் மற்றும் பல நடவடிக்கைகளில் அவர் எடுத்த மற்றும்
திரும்பப் பெற்றுக் கொண்ட உறுதிமொழிகள் தொடர்பான விஷயங்களை மேலோங்கும் வகையில் தேசிய
அளவிலான உயர் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே.
இதன் காரணமாகத் தில்லியில்
நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் காந்திஜி உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுகோள்
விடுக்க வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(D)ஜின்னாவுக்கு எனது பத்திரிகைச் செய்தி:
நான் சூராவார்டியை தீர்த்துக் கட்ட விரும்பியதாக
ஆப்தேவிடம் கூறியதாகத் தனது சாட்சியில் பேட்ஜ் கூறியுள்ளார். சூராவார்டி முஸ்லிமாக
இருப்பதால் என் மீது வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு இன்னும் ஏற்புடையதாக இருக்குமென
பேட்ஜ் நம்பியிருக்கலாம். சட்டம் ஒழுங்கை மதித்து வாழும் குடிமகன், இந்துவோ முஸ்லிமோ,
மத சம்பிரதாயங்கள் அல்லது அரசியல் கொள்கைகளில் மாறுபட்ட நம்பிக்கை கொண்டுள்ள யாராக
இருப்பினும், அவர்கள் மீதான உட்பகை மற்றும் சகோதர வன்முறைச் செயலை நான் தொடர்ந்து கடுமையாகக்
கண்டித்து வருகிறேன் என்பதற்கு 1943 ஜூலை 27 அன்று வெளியான பத்திரிகைச் செய்தியே சான்றாகும்.
அந்தச் செய்திக் குறிப்பில், அப்போது வரை இந்தியக் குடிமகனாகவும், சக நாட்டு மனிதனாகவும்
விளங்கிய முஸ்லிம் தலைவர் காயித்-ஏ-ஆசாம் ஜின்னா மீதான கொலை முயற்சியை நான் வன்மையாகக்
கண்டித்துள்ளேன் (சான்றாவணம் டி.8பார்க்கவும்).
‘ஜின்னாவின் மீதான கொலை
வெறித் தாக்குதலைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர் மயிரிழையில் உயிர்
பிழைத்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் மனத்தளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்குக்
காரணம், முஸ்லிம்களுக்காகத் தீவிரமாகப் பாடுபட்ட அவரை ஒரு முஸ்லிமே கொல்ல முயன்றதுதான்.
இதுபோன்ற உட்பகை, தூண்டுதலற்ற மற்றும் கொலைவெறித் தாக்குதல், அதன் நோக்கம் அரசியல்
அல்லது வெறித்தனம் எதுவாக இருப்பினும், பொது மற்றும் குடிமை வாழ்க்கையில் கறையை ஏற்படுத்தும்
என்பதால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் – வி டி சாவர்க்கர்’.
ஜின்னாவின் பதில்:
எனது செயலர் பிட்டேவிடம் மேற்கண்ட அறிக்கையின்
நகலை ஜின்னாவுக்கு அனுப்புமாறு கூறினேன். அதைப் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஜின்னா
1943 ஆகஸ்ட் 15 அன்று பிட்டேவுக்குக் கீழ்காணும் கடிதத்தை எழுதினார் (சான்றாவணம் டி/75).
மவுண்ட் பிளெசண்ட் சாலை,
மலபார் ஹில்
1 ஆகஸ்ட் 1943
அன்புடையீர்,
நீங்கள் அனுப்பிய சாவர்க்கர்
அறிக்கையின் பத்திரிகைச் செய்தி நகல் வந்து சேர்ந்தது. என் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக்
கண்டித்தும், அனுதாப அறிக்கை வெளியிட்டமைக்கும் சாவர்க்கருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
உண்மையுள்ள,
(ஒப்பம்)எம் ஏ ஜின்னா
(E)மகாத்மாஜியின் பிறந்தநாள் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
1943 அக்டோபர் 2 ஆம் தேதி காந்திஜிக்கு அனுப்பிய
கீழ்க்காணும் தந்தியைப் பத்திரிகைச் செய்தியாக வெளியிட்டேன் (சான்றாவணம் டி/77).
‘மகாத்மா காந்திஜியின்
75ஆவது பிறந்தநாளில் அவருக்கும், நம் திருநாட்டுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்க இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் – சாவர்க்கர்’.
(F)கஸ்தூரிபா மரணம் குறித்த எனது பத்திரிகைச் செய்தி:
1944 பிப்ரவரி 23 அன்று காந்திஜிக்கு நான் அனுப்பிய
தந்தியும் பின்னர் பத்திரிகையில் வெளியான செய்தியும் (சான்றாவணம் டி/78 பார்க்க). ‘அமிர்த
பஜார் பத்திரிகை’ உள்ளிட்ட ஏனைய பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்பும் இந்த வாக்குமூலத்தின்
இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது (இணைப்பு C).
‘கனத்த இதயத்துடன் கஸ்தூரிபாய்
மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசுவாசமான மனைவியாகவும்,
அன்பான அன்னையாகவும் விளங்கியவர் இறைவனுக்கும், மனிதனுக்குமான சேவையில் உன்னதமான மரணத்தைத்
தழுவிக் கொண்டார். உங்கள் துக்கத்தை இந்த நாடே பகிர்ந்து கொள்கிறது – சாவர்க்கர்’.
(G)மகாத்மாவின் விடுதலை ஒட்டி நான் விடுத்த பத்திரிகைச்
செய்தி:
சிறையிலிருந்து காந்திஜியை விடுவித்தைத் தொடர்ந்து
1944 மே 7ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையும் பத்திரிகையில் வெளியான செய்தி (சான்றாவணம்
டி/81 பார்க்கவும்).
‘காந்திஜியின் முதிர்ந்த
வயது மற்றும் சமீபத்திய நோய் காரணமாக மோசமடையும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு அரசாங்கம் அவரை விடுவித்திருப்பது குறித்து தேசமே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
இதுவொரு மனிதாபிமானச் செயல். காந்திஜி விரைந்து குணமடைய வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
அரசியல் காரணங்களுக்காக விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பண்டிட் நேரு
மற்றும் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது வெளிப்படையான நீதி விசாரணைக்கு
உத்தரவிட்ட வேண்டும். அப்போதுதான் அரசு அவர்கள் மீது சுமத்தியுள்ள உண்மையான குற்றச்சாட்டுகள்
என்ன என்பதை இந்த நாடு தெரிந்து கொள்ளும் – வி டி சாவர்க்கர்.’
(தொடரும்)

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – வீர் சாவர்க்கர் (கடிதம் 5) | தமிழில்: VV பாலா

செல்லுலார் சிறை. 

6-7.1916 
போர்ட் ப்ளேயர் 
எனதன்பிற்குரிய பால் மற்றும் இனிய சாந்தா. 

காதல் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப்போகும் உங்கள் இருவருக்கும் எனது மற்றும் என் சகோதரனுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் நீங்கள் நுழைகிறீர்கள். வாழ்வில் முதலில் நாம் கடக்க வேண்டிய நிலையான தியாகம் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றில் நீ முழுமையாகத் தேர்ந்திருக்கிறாய். சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொண்டு நீ பாரம்பரிய மற்றும் நவீன அறிவையும் பெற்றிருக்கிறாய். மருத்துவத்தில் நீ கடைசியாகத் தேர்ச்சி பெற்ற தேர்வின் மூலம் உலகத்தின் எந்த இடத்திலும் சென்று, எத்தகைய சட்ட ரீதியான இடையூறுகள் இருந்தாலும் பணியாற்றும் திறனைப் பெற்றிருக்கிறாய். உன்னுடைய கவிதை மற்றும் கட்டுரைகள் மூலம் நீ ஏற்கெனவே மகாராஷ்டிரத்தின் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். இந்தத் துறையில் நீ இதைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்று கூடச் சொல்வேன். நம் தேசத்திற்குப் பெரும் இன்னல்கள் வந்தபோது பெரும்பாலானவர்கள்போலப் புறமுதுகு காட்டாமல் நீ துணிந்து நின்று அவற்றை எதிர்கொண்டாய். எந்த உற்சாகத்தைத் தங்கள் இளைஞர்களிடம் கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கின்றனவோ, அந்த உற்சாகத்தை உன்னிடத்தில் நீ கொண்டிருக்கிறாய். சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாது போனாலும் தியாகம் செய்ய துணிந்த நீ இப்போது வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் சாந்தாவுடன் மணவாழ்வில் இணைய இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். இந்த மணவாழ்க்கை உனக்கும் சாந்தாவிற்கும் ரோஜா மலர்கள் தூவிய பாதையாக, இன்பமானதாக இருக்கட்டும். உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கட்டும். இல்லற வாழ்வின் இனிமை மட்டுமே இன்னும் அதன் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்கும் வரம் பெற்றிருக்கிறது. 

உன்னுடைய மனதை ஏதேனும் ஒரு புத்திசாலி பெங்காலி பெண் திருடினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று நான் உனக்கு இதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தது உனக்கு நினைவு இருக்கலாம். நான் எதிர்பார்த்தது கிட்டத்தட்ட நடந்துவிட்டது. நம் நாட்டில் உள்ள மக்கள் ஜாதி மற்றும் பிராந்தியம் போன்ற பிரிவுகளால் பிளவுபட்டு இருக்கிறார்கள். இந்தப் பிளவுகளை மீறி அவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்து சமுதாயத்தில் உள்ள இதுபோன்ற செயற்கையான பிரிவுகளை இல்லாமல் செய்துவிடும். அந்த நாளைக் காண நான் ஏங்குகிறேன். இத்தகைய தடைகளை உடைத்து நம் பண்பாடு காட்டாற்று வெள்ளம் போலச் சீறிப் பாய்ந்து செல்லவேண்டும். கால்நடைகளின் இனப்பெருக்கம் நல்ல முறையில் ஆரோக்கியமானதாக நடக்கவேண்டும் என்று கவலைப்படும் நாம், மனிதர்களின் வருங்கால வம்சம் குறித்து அந்த அளவு அக்கறை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பல நூற்றாண்டுகளாக குழந்தைத் திருமணம் மற்றும் பிரதிநிதி மூலம் திருமணம் ஆகியவை இங்கு நடந்து வருகின்றன. உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் மேன்மையைக் கொடுக்கக் கூடிய காதல் என்ற உணர்வு இங்கு பல நூற்றாண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் தவிர்க்கமுடியாத விளைவாக நம் இனம் வீர்யம் இன்றி வலுவிழந்து இருக்கிறது. இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் நம்மிடையே இருக்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் இதற்கு ஒரு முக்கியக் காரணம். நம் மதத்தின் அதிகார பீடங்கள் இத்தகைய காதலை மறுதலிக்காமல் அங்கீகரிக்கவேண்டும். ஆகையால், வயதும் கல்வியும் உங்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே ஏற்பட்ட பரஸ்பர கவர்ச்சியும் உங்களிடையே காதலாக மலர்ந்தது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. நமக்கு நெருக்கமானவர்கள் இதனை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதே போதுமானது. இந்த விஷயத்தில் நம் குடும்பம் பின்தங்கி இருக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன். நம் சகோதரர் இதற்கு ஒப்புக்கொண்டு ஆசீர்வதித்தார் என்பதே போதும், இது எனக்கும் விருப்பமான ஒன்றுதான் என்பதை முடிவு செய்ய. 

நீங்கள் எங்கே குடியிருக்க போகிறீர்கள் டாக்டர் அய்யா? முதல் கடிதம் போஸ்ட் ஆபீசில் தவறுதலாகத் தொலைந்து போய்விட்டதால் நேற்றுதான் இரண்டாவது கடிதம் எழுத எனக்கு அனுமதி கொடுத்தார்கள். இது உனக்குப் பதட்டத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு இதன் மூலம் உன்னுடைய தற்போதைய முகவரி கிடைத்தது. நீ தற்போது பம்பாயில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். நீ அந்த நெரிசல் மிகுந்த சுகாதாரம் குறைந்த நகரத்திலா குடியேறப் போகிறாய்? அதற்கு பதில் சாயாஜி ஆண்டுவரும், தற்போது நன்றாக வளர்ந்து வரும் பரோடா சரியான இடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் களநிலவரம் அறிந்த நீ எடுக்கும் முடிவு சரியானதாகத்தான் இருக்கும். நான் உன்னிடம் வலியுறுத்த போவது ஒன்றே ஒன்றுதான். எக்காரணம் கொண்டும் உன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உன் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்ளாதே. நம் தனிப்பட்ட நலன் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது மற்றவர்கள் விஷயத்தில் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் உனக்கு அது பொருந்தாது. நீ உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது ஆப்பிரிக்கக் காடுகளாகட்டும் அல்லது அமெரிக்காவாகட்டும், நீ படித்திருக்கும் மருத்துவப் படிப்பு உன் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உன் பாதுகாப்பிற்கும் உதவும். எங்கெல்லாம் மரணம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் டாக்டர்களும் இருப்பார்கள். இதைச் சொல்வதற்காக என்னை நீ கோபித்துக்கொள்ளாதே. நான் மருத்துவ படிப்பின் உயர்வினைக் குறிப்பிடவே இதனைச் சொன்னேன். எனவே உன் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு வரும் வகையில் எதையும் செய்யாதே, அதேபோல சாந்தாவின் உடல் ஆரோக்கியத்தையும் நன்றாகப் பார்த்துக்கொள். அவளை நிறையப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் உற்சாகப்படுத்து. ஆனால் ஒரு பெண்ணின் முதல் கவனம் அவளது ஆரோக்கியத்தில்தான் இருக்கவேண்டும். இது அவள் மட்டுமில்லாமல் அவளுடைய வருங்கால சந்ததிக்காகவும் அவள் மேற்கொள்ள வேண்டிய கடமை. அவளுடைய உடம்பில் இருந்து வீணாகும் ஒவ்வொரு துளி சக்தியும் எதிர்கால சந்ததியை பலவீனமாக்கும். அவள் நேற்றைய மற்றும் வருங்கால சந்ததியின் இணைப்புப் பாலம். வருங்கால சந்ததியின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப் போகிறவள் பெண். அதனால் ஒரு மனைவி தன்னுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மிகவும் கவனமாகப் பேணிப் பாதுகாக்கவேண்டும். அதனால் படிப்போ அல்லது பொழுதுபோக்கோ, அவளது சக்தியை வீணடிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது. மாறாக அவளுடைய அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதத்தில் மட்டுமே இருக்கவேண்டும். 

என்னைப் பற்றிக் கூறுவதற்கு விசேடமாக ஒன்றும் இல்லை. என்னுடைய கடைசிக் கடிதம் உனக்குக் கிடைத்தபோது நான் எப்படி இருந்தேனோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறேன். ஒரு கைதியின் வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக போர்ட் ப்ளேயரில் இருக்கும் கைதியின் வாழ்கையில் மாற்றம் என்ற ஒன்று அகராதியிலேயே இருக்காது. போரினால் உங்கள் பகுதியில் வாழ்கை மிகவும் பாதிப்பை உணர்ந்தது என்றாய், ஆனால் இங்கே போர்ட் ப்ளேயரில் அதன் சுவடே தெரியவில்லை. போரினால் இங்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசவையிலிருந்து பெருமையுடன் அறிக்கை வெளியிடலாம். எங்களுடைய ஏற்றுமதி இறக்குமதிகளில் எந்த மாறுதலும் இல்லை. நாங்கள் இரவெல்லாம் விளக்கை அணைக்காமல் ஏற்றியே வைத்திருக்கிறோம். எங்களுடைய சர்வதேசத் தகவல் தொடர்புகள் எல்லாம் எப்போதும் போல அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிஸ்டர் அஸ்கித் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படக் காரணங்கள் இருக்கின்றன. எங்களுக்கு சாப்பாட்டின் அளவோ அல்லது உருளைக்கிழங்கின் அளவோ குறைக்கப்படவில்லை. ஆனால் ஜெர்மானியர்களுக்கு இதுபோலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் உண்ண வேண்டியதை நாங்களே விளைவிக்கின்றோம். எங்களுடைய சிறைச் சுவர்கள் சீனப் பெருஞ்சுவர்களைக் காட்டிலும் பெருமை மிக்கவை. அந்தப் பெருஞ்சுவரினால் அந்நியர்கள் உள்ளே ஊடுருவாமல் தடுக்க மட்டும்தான் முடிந்தது. ஆனால் இந்தச் சுவர்கள் அதைச் செய்வதோடு உள்ளிருப்பவர்கள் வெளியே செல்ல முடியாத படியும் தடுக்கின்றன. மரணம் வலியில்லாததாக இருக்கிறது. போர் என்பது முடிவிற்கு வந்ததும் எங்களுடைய வாழ்கை மனித குலத்திற்கு ஒரு மாதிரி போலக் காண்பிக்கப்படலாம். மரணத்தையே வெட்கமுற வைக்கும் விதத்தில் ஒரு அமைதியான வாழ்க்கை அல்லது பிழைத்திருத்தல் என்றும் சொல்லலாம். 

நேர்காணலைப் பொருத்தவரையில் நாம் போர் முடியும்வரை காத்திருக்கலாம். அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கத் தயங்குவதின் காரணத்தை நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்ளலாம். அதற்குப் பின்னும்கூட நீ அனுமதிவேண்டி எழுதும் கடிதத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறோம் என்ற ரீதியில் இல்லாமல், ஐந்து வருடங்கள் ஆனபிறகு எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் சலுகை இது, அதனால் நமக்கும் வழங்கப்படவேண்டும் என்றே கேட்கவேண்டும். அப்போது அனுமதி மறுக்கப்பட்டாலும் இந்த இரக்கமில்லாத அந்நியர் கண்களுக்கு நம் பிரிவின் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டாமல் இருந்தோம் என்ற திருப்தியாவது இருக்கும். மேலும் இங்கு நிலைமையை சீராக்க வேண்டி நீ எந்த வேண்டுகோள் விடுப்பதாக இருந்தாலும் அதனை டெல்லிக்கு நேரடியாக எழுதவும். ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகளுக்கு நிலைமையை சீராக்கும் விதத்தில் எதனையும் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. அவர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்யாதிருக்கும் பட்சத்தில் நான் அவர்களைச் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுத்து அவற்றை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். இங்குள்ள கொடுமைகளால் நான் மனமுடைந்து போகமாட்டேன் என்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், நான் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கக் காரணமான சமூக, அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், ஒரு விஷயத்தை நினைத்துப் பார் என் சகோதரனே! அல்லல்படுவதும் ஒரு வேலைதானே. கிறிஸ்தவ மதத்திற்காக யார் அதிகம் வேலை செய்தார்கள்? வேலை செய்தவர்களா அல்லது அமைதியாக அல்லல்களை அனுபவித்தவர்களா? இருவருமேதான். ஆனால் நல்ல விஷயங்களுக்காக வெளியே வேலை செய்பவர்களைக் காட்டிலும் அதே காரணங்களுக்காகச் சிறையில் அடைபட்டு அல்லல்படுபவர்கள் கூடுதலாக வேலை செய்கிறவர்கள் என்று நான் கருதுகிறேன். அல்லல்படுவது என்பது நம்மை மேற்கொண்டு பணி செய்யத் தூண்டும் உந்து சக்தியாக இருக்கின்றது. சமுதாயத்தில் உள்ள சிறந்த மக்கள் அல்லலுராமல், மற்றவர்கள் பணி செய்ய இயலாது. இரண்டுமே மகத்தானது, அதே நேரம் இரண்டுமே தவிர்க்க இயலாதது. அதனால் இதில் இரண்டில் எதனைச் செய்ய நாம் பணிக்கப்பட்டாலும் நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். ஆகவே சகோதரா, மற்றவர்கள் எல்லாம் வெளியில் மகிழ்ச்சியாக இருக்க நான் மட்டும் இங்கே இருட்டறையில் அல்லல்படுகிறேன் என்று கவலை கொள்ளவேண்டாம். 

நம் பாரதத் தாயின் பாதங்களுக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். காத்திருந்து அல்லல்படுவோரும் அதில் அடக்கம் என்பதை நீ மனதில் கொள்ள வேண்டும்.
காத்திருத்தல் மட்டுமல்லாமல் அல்லலும் பட்டு அதனை தீரத்துடன் எதிர்கொள்வோரும் பெரும் பணி செய்பவர்கள்தான். பாறைகளை செதுக்கி அவற்றை அடுக்கும் பணி சிறப்பான ஒன்றுதான். ஆனால் தேவாலயச் சுவர்களில் இந்தப் பாறைகளைத் தாங்கும் சிமெண்டும் அதேபோல இன்றியமையாததுதான். அமைதியாகத் தியாகம் புரிவோர் இத்தகையவர்கள்தான்.

பால், உனக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கும், ஆனால் உடல் ரீதியாக நான் படும் ஒவ்வொரு அவஸ்தையும் என் அமைதியான ஆன்மாவின் சக்தியினால் காணாமல் போகின்றது. இந்த அமைதித் தென்றல் என்னை வருடிச் செல்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பவனைப் போல நான் உணர்கிறேன். நம் தாய்நாட்டின் விடுதலைக்காக நான் எதிர்கொள்ளும் பரிட்சையே இது. அதனால் இதனை நான் திருப்தியுடன் எதிர்கொள்கிறேன். விடுதலை என்ற அற்புதச் செய்திக்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். பகலில் கடுமையாக உழைக்கிறேன். அதனால் இரவுப்பொழுது நெருங்கியதும் நன்றாக உறங்கவும் செய்கிறேன். சில நாட்கள் சில கெட்ட கனவுகள் வந்து என்னைத் தொந்தரவு செய்யும். ஆனால் விழித்துக் கொண்டவுடன் மனம் மீண்டும் அமைதியாக ஆகிவிடும். சில சமயம் நான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவுடன் கடல் அலைகளின் சாத்தான் ஜன்னல் வழியாக எனக்குக் கேட்கும். தன்னைத் தானே பரிகசித்துக்கொண்டு சிரித்த ராஜனின் கதை பற்றி காளிதாசன் எழுதிய வரிகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன. நானும் என்னை அதேபோல கற்பனை செய்துகொண்டு சிரித்துக்கொள்கிறேன். கடுமையான பணிகள் ஒரு புறம், அமைதியான மனம் மறுபுறம் என்று இருப்பதினால் இதுபோன்ற சிந்தனைகள் வருகின்றன. இது சிறையில் படும் அல்லல்களினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்க உதவுகிறது. அதனால், நானும் நம் சகோதரனும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம், இந்த அடிமை வாழ்வில் வரக்கூடிய எல்லா இன்னல்களையும் ஏற்றுச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்.

உன்னுடைய திருமண வைபவம் குறித்த விபரங்கள் மிக நன்றாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை எழுதியவர் நல்ல திறன் படைத்தவர் என்றாலும் அவரின் தயக்கமே அவருக்குப் பெரிய தடைக்கல்லாக இருக்கும். அவர் முதலில் சிறிய கதைகள் சிலவற்றை எழுதி அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்பவேண்டும். அவை பிரசுரமானால் அவருக்கு அது தைரியத்தை அளிக்கும். உதாரணத்திற்கு அவர் நம் சாதி அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். அது எத்தகை தீமையை விளைவிக்கின்றது என்பதை விளக்கும் வகையில் அவர் கதை எழுதலாம். மனிதகுலம் தன் மாபெரும் இலக்கை நோக்கி முன்னேற அது எப்படி ஒரு தடைக்கல்லாக இருக்கின்றது என்பதை அதில் விளக்கலாம். அதன் பிறகு அவர் பெரிய கதைகளை எழுதலாம். அவரையும் சகோதரர் யமராஜ் அவர்களையும் நான் விசாரித்ததாகச் சொல்லவும். என்னுடைய பால்ய கால நண்பர்களையும் கல்லூரித் தோழர்களையும் மற்றும் எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். என் ப்ரிய ரிஷியின் இருப்பிடம் பற்றித் தெரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. அவன் இன்னமும் அதே அலுவலகத்தில் அதே பணியில் இருக்கின்றானா? அப்புறம் என்னுடைய புதிய நண்பர்களும். எனக்கு அவனைப் பற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அவனும் இதேபோல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டான். புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் ஒருசேரப் பெற்றவன் அவன். உன் திருமணத்தில் கலந்துகொண்ட பேராசிரியரின் பெயரை நான் மறந்துவிட்டேன். அவருக்கும் என் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மேடம் காமாவிற்கும் என் வந்தனங்கள். போரினால் மேடம் காமாவிற்கு பெரும் இன்னல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். அவருக்கு என் அன்பினைக் கூறவும். அவருடன் பாரீசில் நான் பார்த்த நண்பர்கள், அதிலும் குறிப்பாக அந்த சந்நியாசி, அவர்கள் என் நினைவில் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறவும். நீ அனுப்பி வைத்த படங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எனதன்பிற்குரிய இயேசுவாகினி மிகவும் அமைதியாக ஒரு தேவதை போலக் காட்சியளிக்கிறாள். பம்பாய் சிறையில் என்னை அவள் காண வந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரும் இதே கருத்தைச் சொன்னார். அக்காவிற்கும் சாந்தாவிற்கும் என் அன்பு நிறைந்த விசாரிப்புகளைக் கூறவும். எனக்கு அவர்கள் எல்லோரையும் நினைத்தாலே பெருமையாக இருக்கின்றது. அடுத்த முறை என் ப்ரிய யாமனேவின் கடிதத்தின் மொழிபெயர்ப்பை அனுப்ப மறக்கவேண்டாம். நல்ல குணவதி, அவளுக்கு என் அனுதாபங்கள். அமைதியாக எல்லாவற்றயும் பொறுத்துக்கொள்ளும் அவளுக்குப் பெருமைகள் உண்டாகட்டும். அவளுடைய பெற்றோர்கள் ஆட்சேபித்தால் அவளை பம்பாய் வரச் சொல்லி வற்புறுத்தவேண்டாம். அவர்களுடைய அன்பும் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் மதிக்கப்பட வேண்டும். மற்ற சகோதரர்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? அம்மாவிற்கும் சித்திக்கும் என்னுடைய வந்தனங்கள்.

அன்புடன்
உங்களுடைய தாத்யா.


Posted on Leave a comment

அந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (பகுதி 4) | தமிழில்: VV பாலா

நான்காவது கடிதம்

(புகைப்படம் நன்றி: savarkar.org)
செல்லுலார் சிறை.
9-3-1915.
போர்ட் ப்ளேயர்
எனது
அன்பிற்குரிய பால் (Bal).
உனது
கடிதம் கிடைத்து, ரிப்வான்வின்கிலைப் (
Ripvanwincle) போலத் தூங்கி கொண்டிருந்த
நான், 7 – 8 மாதங்கள் கழித்து இப்போது பதில் எழுத முனைத்திருக்கிறேன். உன்னிடமிருந்து
கடிதம் வருவது உன்னைப் பார்ப்பதற்கு சமம். அதற்கு ஒரு காரணம், உன் கடிதங்களில் நீ கொடுக்கும்
சினிமா போன்ற விவரணைகள். மற்றொரு காரணம், சிறையில் இருப்பதனால் நாம் படிக்கும் விஷயங்கள்
நமக்குக் காதால் கேட்பது போன்ற ஒரு அனுபவம் ஏற்படுகிறது என்பதும். பிறவியிலேயே பார்வை
அற்றவர்கள், கேட்கும் விஷயங்களை கற்பனை செய்து கொள்வதைப் போல, சிறையின் தனிமை நமக்கு
அது போன்றதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. நான் எப்போதெல்லாம் உன் கடிதத்தைப் படிக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னையும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நம் வீட்டில் உள்ள மற்ற சொந்தங்களையும்
அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் பார்ப்பது போல உணர்கிறேன். நீ நன்றாக ஆரோக்கியமாக இருப்பது,
நல்லபடியான வாழ்க்கை வாழ்வது எனக்கும் நம் அன்பு சகோதரர் பாபாவுக்கும் மகிழ்ச்சியைக்
கொடுக்கின்றது. எங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.
நீ சென்ற வருடம் அனுப்பிய புத்தகங்கள் மொத்தம் 16. இந்த வருடம் 13. அதில் அக்டோபரில்
இரண்டு, நவம்பரில் இரண்டு என்று நான்கு ஆங்கிலம், மற்றவை சம்ஸ்க்ரிதமும் மற்ற பிராந்திய
மொழிகளும். இந்த விவரம் சரியா என்பதை நீ எழுது. அடுத்த முறை நீ பார்சல் அனுப்பும்போது
உன் கைப்பட அதில் உள்ளவற்றைப் பட்டிலியலிட்டு அனுப்பு. இங்கே அவற்றைப் பெற்றுக்கொள்ளும்
போது சரிபார்க்க அது உதவும்.
சமாஜ
ரஹஸ்ய நாவல் நன்றாக இருந்தது. (ஏன் அதனை இரண்டு பிரதி அனுப்பி இருந்தாய்?) அது ஒரு
நல்ல புதினம். இன்னொரு விஷயம் – நம் சமுதாய அமைப்புக்களிலேயே இந்த சாதி அமைப்பு என்பது
நம் நாட்டின் மிக பெரிய சாபக்கேடு. இது இந்த மாபெரும் ஹிந்து சமுதாயத்தை அழித்து விடக்
கூடிய அபாயம் இருக்கின்றது. நாம் இதனை நான்கு சாதிகள் உள்ள அமைப்பாகக் குறைப்போம் என்ற
வாதம் எல்லாம் பயன் தராது. அது நடக்கவும் நடக்காது. இது வேரோடு பிடுங்கி களையப்பட வேண்டும்.
அதற்கான சிறந்த வழி, அதனை எதிர்த்து பிரசாரம் செய்வது. நம் இலக்கியங்கள், நாடகங்கள்,
புதினங்கள் என்று எல்லாவற்றிலும். ஒவ்வொரு தேசபக்தனும் இரட்டை நிலைப்பாடுகளை எடுக்காமல்
தன் மனதில் உள்ளதைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அதேபோல் அதனை செயலில் காட்டவும் வேண்டும்.
ஆனால் அதே நேரம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும்போது நாம் நம்முடைய சொந்தங்கள் இடையே
எந்த பிணக்கும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம்முடைய ஆட்கள் கேட்கும்
கேள்விகளுக்கு எல்லாம் திருப்திகரமாக பதில் அளிப்பது என்பது இயலாத காரியம். நான் அதற்காகத்தான்
‘சமாஜரகஸ்யம்’ போன்ற பல கதைகளை எழுத உள்ளேன். அவற்றில் இந்த சமுதாயத் தீமைகளைச் சாடுவேன்.
இவற்றால் ஒரு காலத்தில் நன்மை இருந்திருக்கலாம், ஆனால் இப்போது இது செத்து விட்டது.
அதனால் இதனை, நீ விரும்பினால் கண்ணீருடன், புதைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னைப்
பார்க்க உனக்கு அரசு இந்த வருடம் அனுமதி அளிக்க போகிறது என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியைத்
தந்தது. அதற்காக நான் அதிகாரிகளுக்கு நன்றி சொல்வேன். ஆனால் வாகினி இந்த வருடம் இந்தப்
பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று நான் கருதுகிறேன். நீ தனியாக வா. இங்குள்ள வசதிகளை
எல்லாம் பார்த்துவிட்டு அடுத்த வருடம் வேண்டுமானால் அவளையும் அன்பிற்குரிய மாயி-யையும்
(Mai) அழைத்துக் கொண்டு வா. அவர்களைப் பார்க்க கூடிய பாக்கியத்தை இந்த வருடம் நான்
தியாகம் செய்வதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும் அவர்களுடைய நன்மைக்காகத்தான்.
அதனால் இந்த வருடம் நீ தனியாக வரவும்.
இந்தியப்
படைகள் ஐரோப்பாவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவர்கள் அங்கு சென்று உலகின் மிக சக்தி வாய்ந்த ராணுவத்திற்கு எதிராக தீரத்துடன் போர்
புரிந்து பெருமை பெற்றிருகின்றனர். இந்த மண்ணில் இன்னமும் ஆண்மை மடியவில்லை. அயல்நாட்டிற்குப்
பயணம் செய்வதை நாம் ஊக்குவித்து கொண்டிருந்தோம். வருடத்திற்கு பத்து பன்னிரண்டு பேர்
அயல்நாடுகளுக்கு சென்றாலே நாம் எதோ சாதித்து விட்டதைப் போல மகிழ்ச்சி அடைவோம். ஆனால்
நம்மால் செய்ய முடியாதது இப்போது கடவுள் அருளால் தானாக நடக்கிறது. பழமையில் ஊறி இருந்த
ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் இப்போது சீக்கியர்கள் கூர்க்காக்கள் மற்றும் ராஜபுத்திரர்கள்
போல் தங்கள் நிலைகளில் இருந்து மாறி கடல் கடந்து அரசு செலவில் பயணிக்கிறார்கள். நம்
பண்டிட்கள் கடல் கடந்து போகலாமா கூடாதா என்று சாஸ்திரங்களைப் புரட்டி ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கட்டும். அனுமதி உண்டோ இல்லையோ, ஹிந்துக்கள் கடல் கடந்து சென்று விட்டார்கள்.
அவர்கள் அதன் மூலம் ஒரு புதிய சகாப்தத்தையும் படைத்து விட்டார்கள். சிலுவைப் போர்கள்
மூலம் ஆசியாவின் மேம்பட்ட நாகரீத்தோடு தொடர்பு கொண்ட ஐரோப்பியர்களுக்கு என்ன நேர்ந்ததோ,
அது இப்போது நம் வீரர்களுடன் ஐரோப்பியர்கள் தொடர்பு கொள்வதால் இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும்
ஏற்படும்.
பஞ்சாபில்
உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு அளித்த அவர்களது
கருணை மிக்க செயலுக்கு நாம் பாராட்டவேண்டியதில்லை. எங்களில் பலர் ஏற்கெனவே போர்முனைக்குச்
செல்ல முன்வந்துவிட்டோம் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். அரசாங்கமும் இது குறித்து
குறிப்பு ஒன்றை வெளிட்டு உள்ளது. ஆனால், அதற்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை.
அதே
போல பார்லிமெண்டில் எதோ ஒரு உறுப்பினர் என்னைப் பற்றி அல்லது எங்களைப் பற்றிக் கேள்வி
எழுப்பியதாக வந்த வதந்தியைப் பற்றிக் கொஞ்சம் எழுது. அது உண்மையாக இருந்தால் அது குறித்து
மேற்கொண்டு தகவல்களைக் கூறு. குரு மற்றும் ரவி குறித்த கவிதைகள் உனக்குக் கிடைத்ததா?
மதிப்பிற்குரிய
கோகலே அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை உலுக்கியது. அவர் ஒரு சிறந்த தேசபக்தர்.
ஒரு சில சமயம் அவர் அவசரத்தில் பதட்டத்தில் சில விஷயங்களைக் கூறுவார், செய்வார். பிறகு
சில மாதங்கள் கழித்து அது அவராகவே அது குறித்து வெட்கப்படுவார். ஆனால், அவருடைய வாழ்க்கை
தன்னலம் இன்றி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். அவர் எப்போதும் நாட்டின்
நலனைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அதில் துளிகூட சுயநலம் இருக்காது. வாழ்க்கை
முழுவதும் இந்தியாவுக்காகவும் அதன் நன்மைக்காகவுமே உழைத்தார். அவரை நேரில் சந்தித்து
லண்டனில் அவர் என்னிடம் கூறிய விஷயங்கள் குறித்து அவரோடு விவாதிக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் மரணம் எங்களைப் பிரித்துவிட்டது. எனக்கும்
அவருக்கும் சில விஷயங்களில் கருத்து ஒன்றிப் போகவில்லை, அதற்கு அப்போது அவர், “நல்லது
மிஸ்டர் சாவர்க்கர், நாம் ஆறு வருடங்கள் கழித்து சந்திப்போம். அப்போது இந்த குறிப்புகளை
நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்” என்றார். மகாராஷ்டிரம் கவுன்சிலுக்கு அவரைப் போல சிறந்த
நபர் ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பி வைக்க வேண்டும். அவர் சாதித்த அளவு ஒவ்வொரு இந்தியனும்
சாதித்தால் எப்படி இருக்கும்!
அடுத்த
முறை நீ புத்தகங்கள் அனுப்பும்போது ஜன்மபூமி மற்றும் கௌதமன் போன்ற நாவல்களை அனுப்பு.
சகோதரர் அவற்றைப் படிக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பால்
நீ மேடம் காமாவிடம் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விடுமே என்று நான் அஞ்சிகொண்டிருந்தேன்.
நான் இங்கு வந்த பிறகு அவர்தான் உனக்குத் தாய் போல வழிகாட்டிக் கொண்டிருந்தார். நம்முடைய
மிக கஷ்டமான நேரங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தவர் அவர். ஆனால் இத்தகைய சூழலிலும்
அவர் உனக்குக் கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்தார் என்பதைக் கேட்டு நான் மகிழ்ச்சி
அடைந்தேன். நமக்கு நெருக்கமானவர்கள் இழிக்கும் துரோகத்தால் நிலைகுலைந்து போயிருக்கையில்
இவர்களைப் போன்ற தூய அன்பு கொண்டவர்களின் தொடர்பு நமக்கு மனிதநேயத்தைக் குறித்து நம்பிக்கை
கொள்ளச் செய்கிறது. அவருடைய தூய்மையான வாழ்வு குறித்தும் கஷ்டத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு
உதவும் அவருடைய பாங்கு குறித்தும் நான் எவ்வளவு மதிப்பு கொண்டிருக்கிறேன் என்பதை அவருக்கு
நேரடியாகக் கடிதம் மூலம் என்னால் தெரிவிக்க இயலவில்லை. நம் உறவினர்களிடம் நான் அவரைக்
குறித்து விசாரித்ததைத் தெரிவிக்கும் முன், நீ இவரிடம் என் அன்பையும் விசாரிப்பையும்
தெரிவித்து விடு. அவர்களைக் காட்டிலும் இவர் நம் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.
ஏன் அவர் நமக்கு இதைச் செய்கிறார் என்பது ஆச்சரியம். அதையும் அவர் மீண்டும் மீண்டும்
செய்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்.
நீ
அனுப்பிய புத்தகங்கள் மூலம், தெலுங்கு மாகாணங்களில் பரவி வரும் இயக்கம் இங்குள்ள பலரையும்
தொற்றிக்கொண்டுள்ளது. ஆந்திர சபா ஒரு பெரிய இயக்கம்தான். ஆனால் தமிழில் இருந்து பிரிந்து
போய் தனி மாகாணமாக ஆவது என்பது சரியான போக்கு அல்ல. இத்தகைய பிராந்திய வாதங்களின் எதிரொலியாக
தேசிய அளவில் ஆந்திர மாதாகி ஜெய் போன்ற கோஷங்கள் வருவது வருத்தத்திற்குரிய ஒன்று. இது
பிற்பாடு வரபோகும் ஆபத்தான பிரிவினை வாதங்களுக்குக் கட்டியம் கூறுவது போல உள்ளது. சுதேசி
என்ற மாபெரும் இயக்கத்திற்குக் கிடைத்துள்ள எதிர்வினை இது போன்ற நிலைப்பாடுகள். இவை
ஆரம்பத்திலேயே சரி செய்யப்பட வேண்டும். வங்க தேசத்தில் பிரிவினை ஏற்பட்டபோது அதற்கும்
சுதேசிக்கும் இருந்த சிறிய தொடர்பே இத்தகைய எதிர்வினைகளுக்கு காரணம். இப்போது ஒவ்வொரு
மாகாணமும் அது போலப் பிரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறது. ஆனால் தேசம் என்ற பாதுகாப்பு
இல்லாமல் இந்தப் பிராந்தியங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? மகாராஷ்டிரா, பெங்கால்,
மெட்ராஸ் எல்லாமே செழித்து ஓங்கும், ஆனால் அது இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும்
வரைதான். எனவே, ஆந்திர மாதாகி ஜெய் என்று கோஷம் எழுப்புவதற்கு பதில் பாரத் மாதா கி
ஜெய் என்று கோஷம் எழுப்புவோம், ஆந்திரம் அதன் ஒரு பகுதிதான். அதே போல வங்க ஆபார் என்ற
கோஷத்திற்கு பதில் ஹிந்த் ஆபார் என்று கோஷம் எழுப்புவோம். ஒவ்வொரு மாகாணமும் பிரிவினை
என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒன்றாக இணைந்து மொழிகளால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும்
தடைகளையும் நீக்க வேண்டும். சிறிய தேசங்கள் குறித்து சிந்திக்கும்போது பெல்ஜியத்தில்
நடந்தது நமக்கு எச்சரிக்கை அளிக்கட்டும். தன்னை அறியாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு
நன்மை ஒன்றைச் செய்திருக்கிறது என்றால், அது நம்மிடம் உள்ள பேதங்களை எல்லாம் மறந்து
நம்மை ஒன்றிணைத்திருப்பதுதான். இப்போது இந்த ஒற்றுமையை வலுப்படுத்தாமல், நாம் நமக்குக்
கிடைத்த இந்த வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தாமல், பிரிவினை பேசி கிடைத்த வரத்தை சாபமாக
மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
எனக்குத்
தோன்றியவற்றை எல்லாம் எழுதிவிட்டேன். உன் கடிதம் மற்றும் நீ அனுப்பிய புத்தகங்கள் பற்றியும்
கேட்டு விட்டேன். அடுத்த முறை நான் அனுப்பும் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை அனுப்பு.
அவற்றை பார்சலாக அனுப்பாமல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நீ வரும்போது கொண்டு வந்தாலும்
போதும். அது முடியவில்லை என்றால் பார்சல் அனுப்பு. நம் நண்பர்களிடம் தொடர்பு கொண்ட
பிறகு இந்தக் கடிதத்திற்குப் பதில் போடு. நீ கடிதத்தில் குறிப்பிட்ட அந்த நல்ல மனிதரை
நீ சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஒரே சிந்தனை கொண்டவர்கள் ஆதலால் உங்கள் இருவருக்கும்
ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். அவரிடம் நான் விசாரித்ததாகக்
கூறவும். அவரை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். நம் பேராசிரியர் எப்படி இருக்கிறார்?
மிகுந்த போராட்டங்களை சந்தித்த பின் ஒரு பறவை இப்போது கூட்டிற்குத் திரும்பி இருக்கும்
என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. அவர் விடுதலையானது நானே விடுதலை ஆனது போல
சந்தோஷத்தை எனக்கு அளிக்கின்றது. சாகாராமும் இப்போது அங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கொண்ட கொள்கைக்காக மரணம் எய்தினான் என்றாலும் அது முட்டாள்தனமான முடிவு. இப்போது அதை
நினைத்தாலும் மனது வலிக்கின்றது.
எங்களைப்
பற்றி நீ வருத்தம் கொள்ள வேண்டாம். தண்டனை பெற்ற நிறைய கைதிகள் இங்கு விடுதலை பெற்று
வருகிறார்கள். எங்களைப் போல ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் இப்போது இங்கே இருக்கின்றோம்.
போர் நடந்து கொண்டிருக்கும் வரை அதிகாரிகளை சங்கடபடுத்தும் வகையில் எதையும் கேட்க வேண்டாம்
என்று நான் தீர்மானித்திருக்கிறேன். தற்போது எங்கள் இருவருடைய உடல் ஆரோக்கியமும் நல்ல
நிலையில் இருக்கிறது. இப்போது சிறை நிர்வாகத்தை காப்டன் மேஜர் மர்ரே என்பவர்தான் பார்த்துக்
கொண்டிருக்கிறார். அவர் இங்கு இருக்கும் வரை விதிகளை மீறி எங்களுக்கு எந்த விதமான தீங்கும்
இழைக்கப்படாது என்பதில் நீ உறுதியாய் இருக்கலாம். நீ அனுப்பும் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு
புத்தகமும் எனக்கு ஒழுங்காக வந்து சேர்ந்து விடும். எங்களுடைய தினப்படி வாழ்க்கை சென்ற
வருடத்தைப் போலவே சென்று கொண்டிருக்கிறது. இங்கு சிறையில் முதல் நாள் என்ன நடக்கின்றதோ
அதுவே தொடர்ந்து நடக்கும். இது சிறை ஒழுங்கின் சிறப்பு. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப்
போலவே ஒவ்வொருவருக்கும் நம்பர் தரப்பட்டு ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறோம். நான்
கடந்த வருடங்களில் உனக்கு எழுதி அனுப்பிய வழிகாட்டி புத்தகம், நான் இங்கு இருக்கும்
வரையில் எங்கள் சிறை வாழ்கையை சித்தரிப்பதாக இருக்கும். நாங்கள் சீக்கிரம் எழுந்து,
கடுமையாக உழைத்து நேரா நேரத்திற்குச் சாப்பிடுகிறோம். எல்லாம் அதே நேரத்தில் அதே இடத்தில
நடக்கும். ஒரே மாதிரியான உணவே இங்கு தயாரிக்கப்படும். அதே போலத்தான் மருத்துவ வசதிகளும்.
நான் வேலை முடிந்த பிறகும் சில நாட்கள் மாலையிலும் படிக்கின்றேன். சில சமயங்களில் பெயர்
தெரியாத பூக்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு அப்படியே தூங்கிப்போவேன். இங்கு சிறையைப்
பற்றி ஒன்று கூறியாக வேண்டும். இங்குள்ள கைதிகளுக்கு தாங்கள் நினைத்ததைச் செய்யவும்
சொல்லவும் சுதந்திரம் கிடையாதே தவிர, அவர்கள் கனவு காண எந்தத் தடையும் இல்லை. இந்தச்
சலுகையை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் இரவில் நான் சிறையிலிருந்து
தப்பித்து வெளியே சென்று உன்னைப் போன்ற எனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்து வருகிறேன்.
ஒவ்வொரு இரவும் இதனை நான் செய்கிறேன். ஆனால் கருணை கொண்ட சிறை அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்வதில்லை.
நீ விழித்து எழும்போது சிறையில் கண் விழித்தால் போதும் என்பதே அவர்கள் சொல்வது.
போர்
முடிந்ததும் எங்கள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பொது மனு ஒன்றினை நீ
அனுப்பு. இந்தியாவில் மட்டுமல்ல, சுயாட்சி நடக்கும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் விருப்பதிற்கு
மாறாக அரசியல் கைதிகளைச் சிறையில் வைத்திருக்க இயலாது. மக்களுடைய கோரிக்கை இன்றி எந்த
அரசாலும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க இயலாது. போர் முடிந்த பிறகு இந்தியர்களிடம்
அத்தகைய மனு ஒன்று அனுப்பப்படுமேயானால் நாங்கள் விடுதலை செய்யப்படலாம். இல்லையேல் எங்களை
விடுதலை செய்ய அரசாங்கத்தால் இயலாது. மக்கள் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லையென்றால்
நாங்கள் விடுதலை பெறுவதிலும் அர்த்தம் இல்லை. போர்ட் ப்ளேயர் எங்களை இங்கேயே வைத்துக்
கொண்டிருக்கும். எப்படி இருந்தாலும் நீ எங்களுடைய விடுதலைக்காக மனுவினை அனுப்பு. இங்கு
கூடுதல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் கூட தங்கள் குடும்பத்தை இங்கே கொண்டு வந்து
குடி அமர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் சிறை விதிகளின்படி நமக்குக்
கிடைக்க கூடிய சலுகைகளைத்தான் கேட்கிறோம். கூடுதலாக வேறெதையும் அல்ல. இதற்காகத் தொடர்ந்து
நீங்களும் நாங்களும் மனு கொடுத்துக்கொண்டிருந்தால் நமக்கு இதில் வெற்றி கிடைக்கும்.
கடந்த
வருடம் நம்முடைய அன்பிற்குரிய வாகினி எழுதிய கடிதத்தில் நமது குட்டி தோண்டி எப்படி
இருக்கிறாள் என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
அன்பிற்குரிய யமுனாவிடம் நான் விசாரித்ததாகக் கூறவும். அவளுடைய உடல்நலம் எப்படி இருக்கின்றது?
அவள் படிக்கின்றாளா? பல்வந்த் ராவ் இப்போது எந்தக் கல்லூரியில் எந்த வகுப்பு படித்துக்
கொண்டிருக்கிறான்? மற்ற குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? மதிப்பிற்குரிய அண்ணியிடம்
என் வந்தனங்களைக் கூறவும். எந்தத் தவறும் செய்யாத அவர் செய்திருக்கும் தியாகம் மிகப்
பெரியது. சென்ற வருடம் வந்த மாயியின் கடிதத்தின் மூலம், வாகினி என்னைப் பற்றி நினைவில்
வைத்திருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். நான் அவர்களையும் மற்றும் நம் நண்பர்கள்
எல்லோரையும் தினமும் நினைத்துக்கொள்வேன். என் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாலும்,
அவ்வப்போது இவர்களைப் பற்றிய நினைவு வந்து மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேரக் கலந்த
ஒரு உணர்வில் அது ஆழ்ந்துவிடும். அவர்கள் என்னை எப்போதும் மறவாதிருக்க வேண்டும் என்பதே
என் பிரார்த்தனை. என்பால் நேசம் கொண்டவர்களும் என்னை நேசிக்க அனுமதித்தவர்களும் என்
மனக்கோவிலில் எப்போதும் குடி கொண்டிருக்கிறார்கள்.
அன்பிற்குரிய
சகோதரா, உன் மருத்துவப் படிப்பு உனக்கு நல்ல பயன் தரும் என்று எண்ணுகிறேன். படிப்பிற்காக
உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். உனது உடல் எடை என்ன என்பதைக் கூறவும்.
அன்பிற்குரிய பால், உனக்கும், வசந்திற்கும், நம் சகோதரி மாயிக்கும் என் அன்பும் ஆசிர்வாதங்களும்.
விடை பெறுகிறேன்.

உன் சகோதரன்
தாத்யா. 

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 5) | தமிழில்: ஜனனி ரமேஷ்

பகுதி 5



(17)
செல்வி. மோடாக் சாட்சி (பி. டபிள்யூ 60) :
இந்த
சாட்சியின் சான்றாவணத்தில் என் வழக்கு தொடர்பாக இரண்டு அல்லது மூன்று வரிகளே உள்ளன.
தனது சான்றாவணத்தின் பக்கம் 277ல் சாட்சி கூறுவதாவதுள்: ‘1948 ஜனவரி 14 அன்று ரயில்
பயணத்தின் போது, ஆப்தே மற்றும் கோட்சே இருவருக்குமான உரையாடலிலிருந்து சிவாஜி பூங்கா
அருகிலுள்ள சாவர்க்கர் சதனுக்குப் போக விரும்பியதாகத் தெரிய வந்தது’ என்கிறார்.
கோட்சேவும்
ஆப்தேவும் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பியதாக இந்தச் சாட்சி எந்த இடத்திலும்
சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாவர்க்கர் சதனுக்குப் போவதென்றால் சாவர்க்கரைச்
சந்திக்கத்தான் செல்லவேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சாவர்க்கர் சதன்
குறித்து ப்ராஸிக்யூஷன் தரப்பே அளித்த சான்றின் அடிப்படையில், மேற்கண்ட விளக்கத்தைப்
பார்க்கும்போது, ஆப்தேவும், கோட்சேவும், சாவர்க்கர் சதனில் வாடகைக்குக் குடியிருக்கும்
பரிச்சயமான பலரை அல்லது என் செயலரின் பொறுப்பில் தரைத்தளத்தில் இருந்த இந்து சங்கதன்
அலுவலகத்தில் அடிக்கடி கூடும் அவர்களது நண்பர்களான இந்து சபா ஊழியர்களைப் பார்க்க விரும்பியிருக்கலாம்.
நான் முதல் தளத்தில் வசிப்பதால், அலுவலகத்துக்கு வரும் மக்கள் கட்டாயமாக என்னைப் பார்க்க
வர வேண்டிய அவசியமில்லை. சாவர்க்கர் சதனுக்குப் பலமுறை வந்திருந்தாலும் என்னை ஒரே ஒருமுறைதான்
பார்த்ததாக ப்ராஸிக்யூஷன் தரப்பு சாட்சியான பேட்ஜே அவரது சான்றாவணத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்
(பக்கம் 222).
வாக்குமூலம்
பக்கம் 278ல் சாட்சி மேலும் கூறுகையில் ‘சாவர்க்கர் சதனுக்கு எதிரே தனது வாகனத்தை நிறுத்தியபோது
ஆப்தேவும், கோட்சேவும் இறங்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் உண்மையில் சாவர்க்கர் சதனுக்குள்தான்
நுழைந்ததைத்தான் பார்க்கவில்லை’ என்கிறார். எனவே இந்த சாட்சிக்கு என்னைப் பொருத்தவரை
எந்த முக்கியத்துவமோ, உறுதிப்படுத்தும் மதிப்போ கிடையாது.
ஆப்தே
மற்றும் கோட்சேவை இருவராகவோ, இருவரில் ஒருவராகவோ, என் வீட்டுக்கு வந்ததை நான் பார்க்கவுமில்லை,
கேட்கவுமில்லை. மேலும் இருவரையும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, அந்நாளிலோ, அடுத்த நாள்களிலோ,
பார்க்கவுமில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
(18) டாக்டர் ஜே சி ஜெயின் (பி.
டபிள்யூ. 67)
டாக்டர்
ஜெயின் என்னை நேரடியாகவும், உறுதியாகவும், குறிப்பிடும் ஒரே பகுதி அவருடைய வாக்குமூலத்தின்
பக்கங்கள் 299-300. அவர் பதிவு செய்துள்ளதாவது: ‘அகமதுநகரில் மதன்லாலின் பணிகளைக் கேட்ட
பிறகு இந்து மகாசபாவின் வீர சாவர்க்கர் என்னை (மதன்லால்) வரச் சொல்லி இரண்டு மணி நேரம்
பேசினார்’ என்று மதன்லால் சொன்னார். மேலும் வீர சாவர்க்கர் அவருடைய முதுகில் தட்டி
“தொடர்ந்து செய்” என்றார். அவ்வளவுதான்.
டாக்டர்
ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படும் இக்கதை குறித்து எனது கருத்தைக் கீழ்க்கண்டவாறு
சமர்ப்பிக்கிறேன்:
முதலாவதாக,
நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்படவும் இல்லை, அவர் என்னைச் சந்திக்கவும் இல்லை,
அவரது பணிகள் குறித்து என்னிடம் விவரிக்கவும் இல்லை. அவருடன் எந்தச் சூழலிலும் உரையாடவும்
இல்லை. அவருடைய பணியைப் பாராட்டி அவர் முதுகில் தட்டி “தொடர்ந்து செய்” என்று சொல்லவும்
இல்லை.
இரண்டாவதாக,
என்னைச் சந்தித்த கதையை டாக்டர் ஜெயினிடம் மதன்லாலே சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும்,
அகமத் நகரில் ‘மதன்லால் பணி’ குறித்துத் தனது சான்றாவணப் பக்கம் 229ல் ஜெயின், ‘அகமத்
நகரில் தனது பணிகள் பற்றி என்னிடம் மதன்லால் விவரித்தார்’ என்று கூறியதுடன் ‘பட்வர்த்தன்
கூட்டத்தில் மதன்லால் தகராறு செய்ததுடன் என்னைத் தாக்கினார்; அகதிகள் மற்றும் இந்துக்களுக்காகத்
தன்னார்வக் குழுவை அமைத்தார்; நகரில் கட்சியைத் தொடங்கி ஆயுதங்களை வாங்கிக் குவித்ததுடன்
முஸ்லிம் பழக்கடைக்காரர்களை விரட்டி அடித்தார்’ என்றும் பதிவு செய்துள்ளார். அகமத்
நகரில் அவருடைய பணிகள் என்று ஜெயினே குறிப்பிட்டுள்ளார். பிறகு வீர சவார்க்கரைச் சந்தித்து
அகமத் நகரில் தனது பணிகளை அவரிடம் விவரித்ததாக மதன்லால் தன்னிடம் சொன்னதாகவும் ஜெயின்
குறிப்பிடுகிறார்.
இந்தத்
தொடர்ச்சியை நுணுக்கமாகக் கவனிக்கும் போது “இவற்றை” அல்லது “பணிகளில்” சிலவற்றை மட்டுமே
என்னிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. என்னை மதன்லால் சந்திக்க வந்த கதையைச் சொன்ன பிறகே
ஜெயின் அதன் பிற்பகுதியை பக்கம் 300ல் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்: ‘ஏதோவொரு தலைவரைக்
கொல்ல அவரது கட்சி சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் அந்தத் தலைவர் காந்திஜி என்றும்
கடைசியாகத் தன்னிடம் மதன்லால் தெரிவித்தாகவும்’ கூறுகிறார். எனவே இக்கதையின் தொடர்ச்சியிலிருந்து
காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் தனியான திட்டம் என்பதும், “அகமத் நகரில் மதன்லால்
பணிகள்” என்று ஜெயின் முன்னர் சொன்ன நிகழ்வுகளின் பட்டியலில் இது சேராது என்பதும் தெளிவு.
எனவே
இதன் காரணமாக மதன்லால் என்னிடம் சொன்னதாகக் கூறப்படும் விஷயங்களில் அகமத் நகர் பணிகள்
மட்டுமே அடங்கும் என்றும் காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் குறித்து என்னிடம்
எதுவும் கூறவில்லை என்பதும் தெளிவு. மேலும் மற்றும் இந்த அனுமானம் தவிர்த்துக் கவனிக்க
வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், டாக்டர் ஜெயினின் சாட்சியம் முழுவதும் காந்திஜியைக்
கொல்லும் சதித்திட்டம் பற்றி மதன்லால் என்னிடம் கூறியதற்கு ஆதரவாகவோ, அந்தக் கட்சியுடன்
எனக்குக் குறைந்தபட்சம் தொடர்போ, அறிவோ இருப்பதாகவோ, ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மாறாக, மதன்லாலின் கட்சி உறுப்பினர்களின் பெயர்களோ, ஏனைய விவரங்களோ, அவரைப் பற்றியோ
கூட அதிகம் தெரியாது என்று டாக்டர் ஜெயின் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார். (பி. டபிள்யூ
67 பக்கங்கள் 306 & 308).
கூறப்படும்
சதித்திட்டத்துடன் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புபடுத்த முடியாத சூழலில், மதன்லால்
என்னைச் சந்தித்தது குறித்த இந்தப் பதிவுக்கு எந்த சாட்சியும் இல்லை என்பதைத் தாழ்மையுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாவதாக,
டாக்டர் ஜெயின் அல்லது திரு அங்கத் சிங்க் அல்லது மாண்புமிகு திரு தேசாய் ஆகியோர் எந்த
நிலையிலும் மதன்லால் கதையை நம்பவோ அல்லது அது பற்றிய குறிப்புகளையோ பதிவு செய்யவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக்
கதையின் சாரங்கள் பிரத்யேகமாக நினைவாற்றலின் அடிப்படையில் டாக்டர் ஜெயின் அளித்திருக்கும்
பட்சத்தில், பழமொழிக்கேற்ப விலாங்கு மீனைப் போன்று மனித நினைவும் ஞாபகமும் நழுவும்
தன்மை கொண்டதால், ஒன்றுக்கொன்று மாறுபடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
மதன்லால் என்னைச் சந்திக்க வந்ததைக் குறிக்கும் அப்பகுதி, என்னைத் தொடர்புபடுத்தும்
ஒரே பகுதி, காவல் துறையின் அழுத்தம் காரணமாகப் புனையப்பட்டுள்ளது என்பது கீழ்க்காணும்
காரணங்களால் தெள்ளத் தெளிவாகிறது:
நான்காவதாக,
என்னைப் பற்றிய மதன்லாலின் கதை குறித்த டாக்டர் ஜெயினின் கருத்திலுள்ள நேர்மை தொடர்பாக
எனது மேற்கண்ட ஆட்சேபணை, சந்தேகத்துக்கு இடமின்றித் தோன்றியதற்குக் காரணம், குற்றவியல்
நீதிபதி முன்பான தனது வாக்குமூலத்தில், அவர் இதுபோல் எதையுமே பதிவு செய்யவில்லை என்பதுதான்.
குற்ற வழக்கு விசாரணை முறைத் தொகுப்புச் சட்டம் பிரிவு 161ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்தை
விட பிரிவு 164ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்துக்குச் சான்றளிப்பு ஆற்றலும் மதிப்பும்
அதிகம். ஆனால் பம்பாய் குற்றவியல் நீதிபதி முன்பு அவர் அளித்த புனிதமான உறுதிமொழி மீதான
வாக்குமூலத்தில், நீதிமன்றத்தில் இருந்து காவல் துறையை அப்புறப்படுத்தி, அழுத்தத்திலிருந்து
டாக்டர் ஜெயினின் மனச்சாட்சியை சிறிது நேரம் விடுவித்த போது, மதன்லால் என்னைச் சந்தித்தார்
என்னும் தற்போதைய பொய்யான கட்டுக்கதையை டாக்டர் ஜெயின் அப்போது கூறவில்லை.
அவர்
அதைச் சொன்னார் என்றோ, குற்றவியல் நீதிபதி அதைப் பதிவு செய்யவில்லை என்றோ பொருளல்ல.
டாக்டர் ஜெயின் அதை அவரிடம் சொல்லவே இல்லை. குறுக்கு விசாரணையின் போது பக்கம் 303ல்
தனது சாட்சியில் அவர் தெளிவுபடுத்தியதாவது: ‘வீர சாவர்க்கர் தனக்குச் சொல்லி அனுப்பியதாக
மதன்லால் கூறியதாகவோ, இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடியதாகவோ, தன் முதுகில்
தட்டி “தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொன்னதாகவோ நான் குற்றவியல் நீதிபதி முன்னிலையில்
பதிவு செய்யவே இல்லை. காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த போது கூட ‘தொடர்ந்து செய்யுங்கள்’
என்பது குறித்த எந்தப் பதிவும் இல்லை. இந்த நீதிமன்றத்தின் முன் மறு விசாரணையின் போது
டாக்டர் ஜெயின் ப்ராசிக்யூஷனை இதிலிருந்து விடுவிக்க முயன்று கடைசியில் சிக்கலை இன்னும்
அதிகமாக்கிவிட்டார். அதாவது மதன்லால் என்னைச் சந்தித்தது தொடர்பான கதையை ஏற்கெனவே காவல்
துறை மற்றும் மாண்புமிகு உள்துறை உறுப்பினர் (ஜெயின் வாக்குமூலம் பக்கம் 311) ஆகியோரிடம்
தெரிவித்துவிட்டதால், குற்றவியல் நீதிபதி முன்பு சொல்லவில்லை என்று பதிலளித்துள்ளார்.
காவல்துறை
மற்றும் அமைச்சரிடம் மதன்லால் கதையிலுள்ள முக்கிய விவரங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு
முறை ஜெயின் தனது வாக்குமூலத்தில் குற்றவியல் நீதிபதியிடம், விற்பனை செய்த புத்தகங்கள்
மற்றும் வெடி மருந்துகள் உள்படக், கூறியுள்ள நிலையில் அவரது பதில் அர்த்தமற்றதாக உள்ளது.
இருப்பினும் குற்றவியல் நீதிபதியிடம், மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படுவதை,
அதாவது, இப்போது ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராக வழக்கின் தொடக்கப் புள்ளியாக்க
எண்ணுவதை மட்டும் டாக்டர் ஜெயின் சொல்லவில்லை. இதுபோன்ற புனைந்துரைக்கப்பட்ட கதைகளை
புனிதமான உறுதிமொழியின் அடிப்படையில் உண்மையானவை என்று குற்றவியல் நீதிபதி முன்பாக
கூறும் நிலையில் டாக்டர் ஜெயின் இல்லை என்பதே உண்மையான காரணமாகும்.
ஐந்தாவதாகப்,
படுகொலை திட்டம் குறித்து டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே மதன்லால் கூறியிருந்தால் அதைத்
தடுக்கச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் ஏன் கூறவில்லை? ஒரு நல்ல குடிமகனாக குற்றவியல்
சதித் திட்டங்களை உரிய நேரத்தில் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவுவது தனது கடமை என்பதை
அறிவேன் என்று டாக்டர் ஜெயின் தனது வாக்குமூலத்தில் (பக்கம் 303) ஒப்புக் கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் இத்தகவலை முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என்று பின்னர் கடிந்து
கொண்டார். சதித் திட்டம் தொடர்பான மதன்லால் கதையைத் தான் முக்கியமாகக் கருதவில்லை என்பதே
டாக்டர் ஜெயினின் ஒரே பதிலாக இருந்தது (பக்கம் 309). ஆனால் அவரது இந்தச் சமாதானம் முற்றிலும்
பொய் என்பதற்கு, இதை முக்கியமாகக் கருதி தில்லியிலுள்ள அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக
இருக்குமாறு கூறுவார் என்ற நோக்கில் ஜெய் பிரகாஷிடம் “தில்லியில் நடைபெறவிருக்கும்
மிகப் பெரிய சதித்திட்டம்” பற்றி விவரித்ததற்கு அவரது சொந்த ஒப்புதல் வாக்குமூலமே சாட்சியாகும்
(ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
தில்லியிலுள்ள
அரசை எச்சரிக்கும் அளவுக்கு இந்தக் கதை முக்கியம் எனில் பம்பாய் அரசிடமும் தகவல் தெரிவிக்கும்
அளவுக்கு அது நிச்சயம் முக்கியம் ஆகும். பம்பாய் காவல் துறையிடம் தகவலைத் தெரிவிக்கத்
தான் அச்சப்படுவதாகவும், ஆனால் குண்டு வெடிப்பு நடந்த பிறகு எந்தத் தயக்கமும் இல்லாமல்
தொடர்பு கொண்ட பம்பாய் பிரதமரிடம் சொல்ல பயப்படவில்லை என்று இன்னொரு சமாதானம் சொல்கிறார்
டாக்டர் ஜெயின். இந்தக் குழப்பமும், சுய-முரண்பாடும் கொண்ட இச்சாட்சியின் குணமே, இப்போது
அவர் சொன்னது போன்றும், பின்னர் புனைந்தது போன்றும், மதன்லாலிடம் இருந்து எந்தவொரு
கதையையும் டாக்டர் ஜெயின் கேட்கவில்லை என்னும் தவிர்க்க முடியாத முடிவுக்கு நம்மை அழைத்துச்
செல்கிறது.
ஆறாவதாக,
குண்டு வெடிப்புக்குப் பிறகு இந்த முழுக் கதையையும் டாக்டர் ஜெயின் மற்றும் அங்கத்
சிங்க் புனையத் தூண்டிய நோக்கமும் கூட அவர்களது வாக்குமூலத்தின் உட்பொருளைக் கூர்ந்து
படித்தால் சுயமாகவே வெளிப்படையாகும். மதன்லாலுடன் டாக்டர் ஜெயின் நெருக்கமாகவே இருந்துள்ளார்.
மதன்லாலிடமிருந்து அவருக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. சில கடிதங்கள் அவர் வசம்
இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனது புத்தகங்களை விற்பதற்காக பல நபர்களை மதன்லால்
சந்தித்துள்ளதால் டாக்டர் ஜெயினுடனான மதன்லாலின் தொடர்பைப் பலர் அறிந்துள்ளனர். எனவே
1948 ஜனவரி 21 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் காந்திஜியின் பிரார்த்தனைக்
கூட்டத்தில் குண்டு வெடித்ததாகவும், குற்றத்தைச் செய்ததற்காக மதன்லால் என்பவர் கைது
செய்யப்பட்டதகாவும், அதைப் படித்தவுடன் தனக்கும் ஏதேனும் பிரச்சினை வருமோ என்று பயந்து
கவலைப்பட்டதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாகவே ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ நாளேட்டில் மதன்லால் என்ற பெயரைத் தான் படித்ததாகவும் டாக்டர் ஜெயின்
ஒப்புக் கொள்கிறார் (டாக்டர் ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
மதன்லாலுடன்
தங்களுக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு பற்றி அவர் கட்டாயம் வெளிப்படுத்துவது குறித்தும்,
அதன் தொடர்ச்சியாக ஏற்படவுள்ள இடர் பற்றியும், டாக்டர் ஜெயின் மற்றும் திரு அங்கத்
சிங்க் ஆகியோர் அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கையாகத் தங்களைத் தயார்ப்படுத்திக்
கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. சதித் திட்டம் தொடர்பாக ஏதோவொரு தகவல், உண்மையோ,
பொய்யோ, அதை அதிகாரிகளுக்குத் தெரிவித்து உதவுவதன் மூலம் தங்களை வீரம் மிக்க குடிமகன்களாகக்
காட்டிக் கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விடவும் வேறென்ன சிறப்பாக இருக்க
இயலும்? குண்டு வெடிப்பின் பின்னணியில் ஏதோவொரு சதித் திட்டம் இருப்பதாக அன்றைய காலைத்
தினசரிகள் ஏற்கெனவே குறிப்பாக செய்தி வெளியிட்டிருந்தன. டாக்டர் ஜெயின் அந்தக் குறிப்பையே
தனது கதையின் அடிப்படையாக எடுத்துக் கொண்டார்.
மதன்லால்
இந்து சிந்தனையுடன் அகதிகளிடம் பணியாற்றிக் கொண்டிருப்பதையும், நான் இந்து சங்கதான்களின்
அங்கீகரிக்கப்பட்ட தலைவராக மக்களிடையே பிரபலமாக இருப்பதையும் டாக்டர் ஜெயின் அறிவார்.
மதன்லாலுடனும் சதித் திட்டத்துடனும் என்னைத் தொடர்புபடுத்திக் கதைக்குள் பொருத்திவிட்டால்,
காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் கட்டாயம் அதுவொரு தலைப்புச் செய்தியாக மிகப் பெரிய
அளவில் பரபரப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகக் காவல் துறைக்கு முன் கூட்டியே சதித்
திட்டம் பற்றிய தகவலைத் தெரிவிக்காமல் இருந்த குற்றத்துக்காக டாக்டர் ஜெயின் கட்டாயம்
மன்னிக்கப்படுவார். எனவேதான் டாக்டர் ஜெயின் அவசர அவசரமாக உள்துறை உறுப்பினரிடம் தனது
கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். டாக்டர் ஜெயின் சாட்சியிலுள்ள இந்த முரணும், குழப்பமுமே,
இந்தக் கதையின் தோற்றம் புனைவு என்பதைச் சாத்தியமாக்குகிறது.
ஏழாவதாக,
இந்த நீதிமன்றத்தின் முன்பு மதன்லால் அளித்த வாக்குமூலத்தில் மகாத்மா காந்திக்குக்
கெடுதல் விளைவிக்கும் எந்தச் சதித்திட்டத்தையும் மறுத்ததுடன், அதுபோன்ற சதித்திட்டத்தில்
தான் எப்போதுமே ஈடுபட்டதில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் பதிவே டாக்டர் ஜெயின் கதையை
ஏற்றுக் கொள்ள முடியாததாக்கி உள்ளது.
எட்டாவதாக,
டாக்டர் ஜெயின் என்னைத் தொடர்புபடுத்தி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படுவது
பற்றி டாக்டர் ஜெயினிடம் அவர் சொன்னதைத் துல்லியம் மற்றும் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும்,
டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னது உண்மைதானா என்பதை நிரூபிக்க இது போதுமானதாக இல்லை.
மதன்லால் குறித்த ஜெயின் மற்றும் அங்கத் ஆகியோரின் கருத்து, அவர்களே சொன்ன வார்த்தைகள்
மூலமாகவே மேற்கோள் காட்டுவதெனில் ‘தன்னைப் பற்றியே அதிகம் பீற்றிக் கொள்ளும் இளைஞனின்
பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை’ என்பதே. ஆனால் இவரைப் போன்ற
இளைஞர் ஒருவர், டாக்டர் ஜெயினின் மனத்தில் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிரயாயத்தையும்,
முக்கியத்துவத்தையும் அழுத்தமாக உணர்த்த, இதுபோன்ற ஒரு கதையை, அதாவது, இந்து மகா சபையின்
தலைவரான வீர சாவர்க்கரே தன்னை அழைத்து முதுகில் தட்டி வாழ்த்தினார் என்று கூற எண்ணுவது
இயற்கையே.
மதன்லால்
என்னைச் சந்திக்க வந்த போது டாக்டர் ஜெயின் உடனில்லை என்பதுடன் மதன்லாலுக்கும் எனக்கும்
இடையே நடைபெற்றதாகச் சொல்லப்படும் உரையாடலைத் தனிப்பட்ட முறையில் அவர் கேட்கவும் இல்லை
என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படுவது,
நான் மதன்லாலிடம் கூறியதாக அவரே சொன்ன கட்டுக்கதை ஆகும். ஆகவே ஜெயினிடம் சொன்னது செவி
வழிச் செய்தியே தவிர, அதன் உண்மை மற்றும் நம்பகத் தன்மையை அவர் உறுதிப்படுத்தியிருக்க
வாய்ப்பே இல்லை. அதேபோல் மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படும் கதை தொடர்பாக அதை
நிரூபிக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பும் எந்தவொரு சான்றாவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
ஆகவே நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், டாக்டர் ஜெயின் சாட்சியின் சான்றாவணப்
பக்கங்களில் இடம்பெற்றுள்ள இப்பகுதி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கதையும் இருவருக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடலும், தெளிவற்ற, உறுதிப்படுத்தப்படாத,
நிரூபிக்கப்படாத, செவி வழிச் செய்தியே ஆகும். ஆகவே சட்டப்படி இவை ஏற்கத்தக்கதல்ல என்பதுடன்,
ஒருவேளை இவை பதிவு செய்யப்பட்டிருப்பின், இந்த நீதிமன்றம் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல்
நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கட்டுக்கதையின் ஆசிரியர் யாராக இருந்தாலும் அது முழுவதும் பொய் என்பதை மீண்டும் ஒரு
முறை தாழ்மையுடன் வலியுறுத்துகிறேன். நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்பட்டதும்
இல்லை, அவரைச் சந்தித்ததும் இல்லை.
(19)
திரு அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு தேசாய் (பி. டபிள்யூ
72 மற்றும் 78) சாட்சி குறித்து நான் சமர்ப்பிப்பது என்னவெனில்:
முதலாவதாக,
இது செவிவழிச் செய்தி என்பதாலும், அதிலும் மூன்றாம் தரச் செவிவழிச் செய்தி என்பதாலும்,
சட்டத்தின் முன்பு இதைச் சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. சாட்சிகளிடமிருந்து நீதிமன்றம்
கதையைக் கேட்கிறது. அக்கதையை டாக்டர் ஜெயினிடம் இருந்தும், அதை அவர் மதன்லாலிடம் இருந்தும்
கேட்கிறார். மொத்தத்தில், சொன்னதாகக் கூறப்படும் கதை உறுதிப்படுத்தப்படாதது, நிரூபிக்கப்படாதது
மற்றும் ஆதாரமற்றது என்பதுடன் மதன்லாலே இதுபோல் தான் யாரிடமும் சொல்லவில்லை என்றும்
அத்தனையும் பொய் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இரண்டாவதாக,
இந்தக் கதை, உண்மையோ, பொய்யோ, மதன்லால் டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே சொல்லப்பட்டது
என்பதை நிரூபிக்க மட்டுமே இவ்விருவர்களின் சான்றாவணம் எனில், நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது
என்னவெனில் ஜெயின் இதை பலரிடம் சொன்னார் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு கூட நிரூபிக்க
முடியாது. மதன்லால் இதைத் தன்னிடம் சொல்லும்போது நான் தனியாக விடப்பட்டேன் என்று ஜெயின்
தெளிவாகச் சொன்னதே இதற்குக் காரணம் ஆகும் (ஜெயின் வாக்குமூலம் பக்கக் 299). இதைத் தவிர
இந்தக் கதையை மதன்லால் டாக்டர் ஜெயினிடம் சொன்னார் என்பதை நிரூபிக்க வேறொரு சாட்சியும்
இல்லை. மதன்லால் அவரிடம் எதுவுமே சொல்லவில்லை என்றாலும் கூட ஜெயின் அதை ஏராளமான நபர்களிடம்
சொல்லி இருக்கலாம்.
மூன்றாவதாக,
இதுபோன்ற சான்றாவணம் ஐ.இ.ஏ. பிரிவு 157ன் கீழ் ஏற்கத்தக்கதல்ல என்பது கீழ்க்காணும்
(சர்க்காரின் இந்தியச் சாட்சியச் சட்டம், 7வது பதிப்பு பக்கம் 1374ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள)
சிறு சுருக்கத்திலிருந்து விளங்கும்: “உங்களின் பல நண்பர்களுக்குச் சொல்லிவிட்டுப்
பின்னர் அவர்களை நீங்கள் சொன்னது உண்மை என்று நிரூபிக்கச் சாட்சிகளாக வரச் சொல்லி சாட்சிகளை
உருவாக்குவது சுலபம். இந்தப் பிரிவு காதால் கேட்ட சாட்சியை உறுதிப்படுத்தும் சான்றாக
ஏற்றுக் கொள்வதில்லை”.
நான்காவதாக,
இந்த இரு சாட்சிகளின் சான்றாவணமும் பிரிவு 157ன் கீழ் வராததற்கு இன்னொரு காரணம் அதில்
குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை நிறைவு செய்யாமையே ஆகும்.
ஐந்தாவதாக,
அங்கத் சிங்கின் சான்றாவணம், ஒரு கதை ஒருவர் வாயிலிருந்து மற்றொருவர் வாய்க்குச் செல்லும்போது
மாறுபடுவதுடன் அபாயகரமாகவும் இருப்பதைச் சிறப்பாகத் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும்
கதை சொல்பவர்கள் எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யாத நிலையில், காதால் கேட்ட சாட்சிகளை
நம்புவது அநீதி ஆகும். இதை அங்கத் சிங்கே எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யவில்லை
என்று ஒப்புக் கொண்டுள்ளார் (அங்கத் சின் வாக்குமூலம் பக்கம் 334). உதாரணத்துக்கு அங்கத்
சிங்க் (வாக்குமூலம் பக்கம் 332 & 333ல்) கூறுவதாவது: ‘மதன்லால் தன்னிடம் (ஜெயின்)
சொன்னதாக டாக்டர் ஜெயின் கூறுவது என்னவெனில் “என்னுடைய (மதன்லால்) கட்சிக்கு ஆதரவராகச்
சாவர்க்கர் இருக்கிறார், அதாவது மதன்லால் சொல்வதுபோல் சதித் திட்டத்தின் பின்னணியில்
சாவர்க்கர் உள்ளார் என்றும் இது உண்மையாகும்” என்பதாகும். இப்போது டாக்டர் ஜெயினின்
வாக்குமூலம் முழுவதிலும், எந்தவொரு இடத்திலும், சாவர்க்கர் தனது கட்சிக்கு ஆதரவாக அல்லது
சதிக்கு உடந்தையாக இருப்பதாக மதன்லால் அவரிடம் கூறியதாக ஓரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மேலும் இந்த நெறி தவறிய கதையை அங்கத் சிங்கிடம் மீண்டும் ஒரு முறை சொன்னதாகவும் டாக்டர்
ஜெயின் பதிவு செய்யவில்லை. எனக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெயின் தனது
சாட்சியில் மீண்டும் சொன்ன இக்கதையின் தொடர்ச்சியைக் கூட அங்கத் சிங்க் திரித்துள்ளார்.
எனவே அங்கத் சிங்கின் இந்த வாக்குமூலம் செவிவழிச் செய்தி மட்டுமின்றி, தீய நோக்கம்
கொண்ட செவி வழிச் செய்தியுமாகும்.
ஆறாவதாக,
மாண்புமிகு அமைச்சர் வாக்குமூலத்தில் கவனிக்க வேண்டிய முதல் அம்சம் என்னவெனில் இது
1948 ஜனவரி 21 தொடங்குவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இதைப் படிக்க வேண்டும். இந்தக்
கதை குறித்து எந்த நேரத்திலும் எந்தக் குறிப்புகளையும் எழுதவில்லை என்பதையும் அமைச்சர்
ஒப்புக் கொள்கிறார் (பி. டபிள்யூ 78 பக்கம் 38). மேலும் டாக்டர் ஜெயின் அவரிடம் சொன்னதை
மட்டுமே தொடர்புபடுத்தி உள்ளதால், இவரது சாட்சிக்கும் திரு அங்கத் சிங்கைப் போன்றே
எந்த உண்மையான மதிப்பும் இல்லை.
ஆகவே
நான் மீண்டும் ஒருமுறை தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில் மதன்லால் என்னை ஒருபோதும்
சந்திக்கவே இல்லை என்பதுடன் நானும் அவருடன் எந்தத் தருணத்திலும் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும்
வைத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மேற்கண்ட பத்திகள்
18 மற்றும் 19 அளிக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், நான் குற்றவாளி அல்லது நிரபராதி
எப்படியிருப்பினும், டாக்டர் ஜெயின், அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு மொரார்ஜி தேசாய்
ஆகியோரின் சான்றாவணங்களைப் பரிசீலனையிலிருந்து விலக்க வேண்டுமென நீதிமன்றத்தைத் தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
(20) ட்ரங்கால் அழைப்பு
1948
ஜனவரி 9 காலை 9.20 மணிக்கு தில்லி 8024ல் இருந்து பம்பாய் 60201க்குப் பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி அழைப்பு (பி 70) தொடர்பாக இதுவரை பி.டபிள்யூ 23, பி.டபிள்யூ 40, பி.டபிள்யூ
41, பி.டபிள்யூ 42, பி.டபிள்யூ 93 என மொத்தமாக 5 சாட்சிகளை ப்ராசிக்யூஷன் தரப்பு விசாரித்துள்ளது.
நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்த பிறகு ப்ராசிக்யூஷன் தரப்பு கடைசியாக சாதித்தது என்ன?
யாரோ ஒருவர் (அவர் யார் என்று எவருக்குமே தெரியாது) தாம்லே அல்லது கசர்-க்கு (இதிலும்
தெளிவில்லை) ட்ரங்க் கால் பதிவு செய்தார் என்பது மட்டுமே. தாம்லே அல்லது கசர் என்ற
பெயரில் அப்போது யாருமே இல்லாததால் கடைசியில் அந்த ட்ரங்க் கால் அழைப்பும் பயனற்றுப்
போய்விட்டது. மேலும் ப்ராசிக்யூஷன் தரப்புக்கு அந்த ட்ரங்க் கால் அழைப்பின் உள்ளடக்கம்
கூடத் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பி.70 மற்றும் பி.59 ஆகியவற்றின்
பொருண்மைகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதால் இரண்டையுமே சேர்த்துப் படிக்க வேண்டும்.
சாவர்க்கர் சதன் தரைத்தளத்தில் படிக்கும் அறையில் ஒரு தொலைபேசி இணைப்பு இருப்பதும்,
அதை அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்களும், இந்து சங்கதான் அலுவலகத்துக்கு
வரும் இந்து மகாசபா செயலாளர்களும், ஊழியர்களும் பயன்படுத்துகின்றனர் என்பதும் ஏற்கெனவே
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (பி. டபிள்யூ 57 பக்கம் 24 & 25, பி. டபிள்யூ 130 பக்கம்
7 பார்க்கவும்). மகாசபா பணிகள் தொடர்பாக தில்லியிலுள்ள இந்து சபா பவனிலிருந்து ஏராளமான
ட்ரங்க் கால் அழைப்புகள் என் வீட்டிலுள்ள இந்து சங்கதான் அலுவலகத்துக்கு வரும்.
இந்த
ட்ரங்க் கால் தனிநபர் அழைப்பாக தாம்லே மற்றும் கசர் ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டனவே
தவிர என் அலுவலகச் செயலாளர்கள் பெயர்களில் அல்ல. தில்லியிலுள்ள தாம்லே அல்லது கசர்
ஆகியோரின் நண்பர்கள் யாரேனும் சட்ட ரீதியான பணிகளுக்காக அந்த ட்ரங்க் கால் அழைப்பைப்
பதிவு செய்திருக்கலாம். தொலைபேசி அழைப்பின் இரு முனைகளிலும் எனது பெயர் எங்கேயும் தொடர்புபடுத்தப்படவில்லை.
இருப்பினும் ப்ராசிக்யூஷன் தரப்பு இந்த ட்ரங்க் கால் அழைப்பு யாருக்கு எதிரானது என்று
யாருக்குமே தெரியாமல் நிரூபிக்க முயன்று, கடைசியில் எதையுமே நிருபிக்க முடியவில்லை
என்பதை மட்டுமே நிரூபிக்க, ஐந்து சாட்சிகளையும் மிகத் தீவிரமாக விசாரித்து வெற்றி பெற்றுள்ளது.
(21) தி இந்து ராஷ்ட்ர தளம்
இந்து
சங்கதான் இயக்கத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளப் பல இந்து தன்னார்வ அமைப்புகள் உள்ளன.
அவை பல்வேறு தளங்களில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவற்றுள் இந்து ராஷ்ட்ர தளம்
ஒன்றாகும். கோட்சே, ஆப்தே மற்றும் ஏனைய ஊழியர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். அதன்
உறுப்பினர்களுள் (பக்கம் 232) ஒருவரான பேட்ஜ் தளத்தின் நோக்கம் தேர்தல்களில் மகாசபா
வேட்பாளர்களுக்கு உதவுவது, பிரசாரப் பணிகளை மேற்கொள்வது, ஒழுங்குபடுத்துவது மற்றும்
கட்டுப்பாட்டைப் பராமரிப்பது ஆகியவை என்று தனது வாக்குமூலத்தில் (பக்கம் 245) கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் அழுத்தம் தந்தபோதும் அதன் தலைவராகவோ உறுப்பினராகவோ என்னை நான் அடையாளப்படுத்திக்
கொள்ளாததற்குக் காரணம் மகாசபாவின் தலைவர் என்ற முறையில் ஏனைய இந்து சங்கதான் துணை அமைப்புகளின்
மீது எனக்கிருக்கும் அனுதாபம் மட்டுமே ஆகும். இந்த அமைப்பு வெளிப்படையான மற்றும் மக்களுக்கான
அமைப்பாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறது. அதன் வருடந்திர முகாம்களில் கூட
நான் பங்கேற்க முடியாமல் போனதால் சில தருணங்களில் அவர்களது மன வருத்தத்தையும் சம்பாதிக்க
நேர்ந்தது. ஏனைய இந்து தன்னார்வ அமைப்புகளைப் பொதுவாக வாழ்த்தியது போலவே நான் இதையும்
வாழ்த்தினேன். அவ்வளவே.

(தொடரும்…)

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்



பகுதி 4
மூன்றாவதாக, அதே
காரணத்துக்காக பேட்ஜின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அவரே பேசியதாவது: ‘அடுத்த
5 அல்லது 10 நிமிடங்களில் ஆப்தேவும், கோட்சேவும் கீழே இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து
சாவர்க்கரும் உடனே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம் சாவர்கர் கூறியதாவது: ‘வெற்றியுடன்
திரும்பி வாருங்கள்’. இந்த வாக்கியத்தை நான் சொன்னேன் என்றே வைத்துக் கொண்டாலும், அது
நிஜாம் ஒத்துழையாமை அல்லது அக்ரணி தினசரிக்கு நிதி திரட்டுதல் அல்லது இந்து ராஷ்ட்ர
பிரகாஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்றல் அல்லது வேறெந்த சட்டப்பூர்வ விஷயத்துக்கான
பொருள்களாகவும், பணிகளாகவும் இருக்கலாம். மாடியில் என்னுடன் ஆப்தேவும் கோட்சேவும் என்ன
பேசினார்கள் என்று பேட்ஜுக்குத் தெரியாத நிலையில் ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’
என்று எது குறித்து நான் சொன்னேன் என்று அவரால் கட்டாயம் உறுதிப்படுத்த முடியாது.

நான்காவதாக என்
வீட்டை விட்டு வெளியேறி இன்னொருவர் வீட்டுக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது
நான் ஆப்தேவிடம் சொன்னதாக ஆப்தேவே பேட்ஜிடம் கூறிய ‘காந்திஜியின் நூறு ஆண்டுகள் முடிந்துவிட்டது’
என்பது வெறும் செவி வழிச் செய்தி மற்றும் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாகும்.
காரணம் அது நான் ஆப்தேவிடம் சொன்னதாகவும், அதை அவர் பேட்ஜிடம் சொன்னதாகவும் கூறப்படும்
வரியாகும். இந்த வாக்கியத்தை நான் ஆப்தேவிடம் சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்டிருக்க
முடியாது. நான் ஆப்தேவிடம் கூறியதாக பேட்ஜிடம் ஆப்தே பொய் கூட சொல்லியிருக்கலாம். நான்
ஆப்தேவிடம் சொன்னதாகக் கூறப்படுவதை நிரூபிக்கவோ உறுதிப்படுத்தவோ எந்த சாட்சியும் ஆதாரமும்
இல்லை.
எனவே, மக்களிடம்
எனக்கிருக்கும் தார்மிகச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது குற்றவியல் கூட்டுச்
சதியை வலுப்படுத்த, பேட்ஜ் பொய் சொன்னாலும் சரி அல்லது கோட்சேவும் ஆப்தேவும் பொய் சொன்னாலும்
சரி, எப்படியிருப்பினும், அந்தக் கூட்டுச் சதிக்கான குற்ற அறிவு அல்லது பங்கேற்புடன்
என்னைத் தொடர்புபடுத்தும் நேரடி மற்றும் பொருள் சான்று இல்லாத நிலையில் என்னைக் குற்றவாளியாக்க
முடியாது.
ஐந்தாவதாக, எல்லாவற்றுக்கும்
மேலாக, கோட்சேவும் ஆப்தேவும் இந்த வாக்கியங்களை பேட்ஜுடன் பேசவே இல்லை என ஆக்கப்பூர்வமாக
மறுத்துள்ளனர். 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றதாக பேட்ஜ் கூறும் நிகழ்வை முழுமையாக ஆப்தேவும்
கோட்சேவும் மறுத்துள்ளனர். மேலும் அன்றைய தினம் பேட்ஜுடனோ மற்றவர்களுடனோ, சாவர்க்கர்
சதனுக்கு வண்டியில் பயணிக்கவும் இல்லை, சாவர்க்கரைச் சந்திக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்தே மற்றும் கோட்சே கூறியிருப்பது பேட்ஜ் கூறிய முழுக் கதைக்கு முற்றிலும் மாறாக
இருப்பதால் அது பேட்ஜ் சுமத்திய குற்றச்சாட்டின் அடிப்படையையே தகர்த்துவிட்டது.
ஆறாவதாக, சாவர்க்கர்
சதனுக்கு வருகை தந்தபோது ஆப்தே மற்றும் கோட்சேவுடன் இணைந்து ஓட்டுநர் கோஷியானுக்குச்
சொந்தமான டாக்ஸியை வாடகைக்கு எடுத்ததாக பேட்ஜ் கூறியுள்ளார். இந்த டாக்ஸி ஓட்டுநர்
கோஷியான் (பி.டபிள்யூ.80) தனது வாக்குமூலத்தில் (பக்கம் 391 & 392) ‘சிவாஜி பூங்காவில்
நான் டாக்ஸியுடன் காத்திருந்தேன். நான்கு பயணிகள் கீழே இறங்கினர். நான் பார்த்தவரை
எனக்கு வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள இரண்டாவது வீடு வரை சென்றனர். ஐந்து நிமிடங்களில்
அவர்கள் மீண்டும் டாக்ஸி இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர்’ எனப் பதிவு செய்துள்ளார்.
பேட்ஜின் கதையை உறுதிப்படுத்த இப்போது இந்த டாக்ஸி ஓட்டநர் அழைக்கப்பட்டிருந்தால்,
இந்நிகழ்வுடன் என்னைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் அவர் தோல்வி அடைந்துவிட்டார் என்றே
கருத வேண்டும். டாக்ஸி ஓட்டநருக்கு என் வீட்டைச் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை;
அந்த வீட்டின் பெயர் கூடத் தெரியவில்லை; டாக்ஸியில் வந்த பயணிகள் வீட்டிலுள்ள யாரைச்
சந்திக்க விரும்பினார்கள் என்பது குறித்தும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; அது இரண்டாவது
வீடுதான் என்பதை உறுதியாகக் கூறாமல், மேம்போக்காகத், தெளிவின்றி ‘தொலைவில் நான் நின்று
கொண்டிருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது எனக்குப் வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள
இரண்டாவது வீடு’ என்றுதான் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர்கள் வீடு வரை சென்றதை
மட்டுமே பார்த்ததாகக் கூறினாரே தவிர அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்தேன் என்று
சொல்லவில்லை.
எனவே அவரது சாட்சி,
பேட்ஜ் எனது வீட்டுக்கு வந்ததையும், ஏனைய விவரங்கள் குறித்த அவரது குற்றச்சாட்டையும்
நிரூபிக்கத் தவறிவிட்டது. பேட்ஜின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு மாறாகக் கோஷியானின்
சாட்சி அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது. அவர்கள் ஐந்தே நிமிடங்களில் டாக்ஸிக்குத்
திரும்பி விட்டதாகக் கோஷியான் கூறியுள்ளார் (பக்கம் 392). மேலும் குறுக்கு விசாரணையின்போது
டாக்ஸி ஓட்டுநராக நேரத்தின் மீது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அவரது நேரத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம். பேட்ஜின் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில்
20-25 நிமிடங்களுக்குள் அவர்களால் டாக்சிக்குத் திரும்பி இருக்கவே முடியாது.
கோஷியான் தொடர்கையில்
‘டாக்சியுடன் வீடு வரை வந்து நின்றுவிட்டதாகவும் அங்கிகிருந்து அறைக்குள் செல்வதற்குக்
குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாகவது ஆகும்’ என்றார். இதனைத் தொடர்ந்து பேட்ஜ் கூறுகையில்
‘கோட்சேவும், ஆப்தேவும், மாடிக்குச் சென்று ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு
கீழே இறங்கி டாக்சிக்குத் திரும்பிவிட்டனர்’ என்றார். எனவே இருபது – இருபத்தைந்து நிமிடங்களுக்கு
முன்பாக அவர்களால் டாக்ஸிக்குத் திரும்பி இருக்கவே முடியாது. டாக்சி ஓட்டுநரின் சாட்சி
மற்றும் பேட்ஜ் கதை ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு பின்னவர் (பேட்ஜ்) சொல்வது
நம்பத் தகுந்ததாக இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே இரண்டையுமே எனக்கு எதிரான சாட்சியாக
எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதே நலம்.
பேட்ஜின் குற்றச்சாட்டை
சங்கர் மறுப்பதைப் பார்க்கவும் (இடதுபக்கம் 24-A குறிப்பைப் பார்க்கவும்).
ஏழாவதாக, இந்த நிகழ்வு
தொடர்பான பேட்ஜின் குற்றச்சாட்டைச் சங்கரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாக்சியிலிருந்து
சங்கரும் இறங்கி அவர்களுடன் (பேட்ஜ், ஆப்தே, கோட்சே) சாவர்க்கர் சதனுக்குச் சென்றது
மற்றும் அவர்கள் மூவரும் வீட்டுக்குள் நுழைந்தபோது வெளியே காத்திருக்கச் சொன்னது ஆகியவை
குறித்த பேட்ஜின் குற்றச்சாட்டு தொடர்பாகச் சங்கரிடம் நீதிமன்றம் கேள்வி கேட்டபோது
‘சிவாஜி பூங்காவுக்கு அவர்களுடன் டாக்சியில் சென்றேன். அங்கே டாக்சி நின்றது. பேட்ஜ்,
ஆப்தே மற்றும் கோட்சே மூவரும் கீழே இறங்கி எங்கோ சென்றனர். நான் அவர்களுடன் செல்லாமல்
டாக்சியிலேயே தங்கிவிட்டேன். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எனக்குத் தெரியாது.
நான் சாவர்க்கர் சதன் என்ற பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
“காந்திஜியின் நூறாண்டுகள்
எண்ணப்பட்ட வருகின்றன….” என்று ஆப்தேவிடம் தத்யாராவ் சாவர்க்கர் சொன்னதாக, பேட்ஜிடம்
ஆப்தே கூறியது உண்மையா என்று நீதிமன்றம் கேட்ட இரண்டாவது கேள்விக்கு சங்கர் அளித்த
பதில் பின்வருமாறு: ‘அவர்களுக்குள் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
நான் டாக்சியின் முன் இருக்கையில் ஓட்டுநருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்ததாலும்,
மராத்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரியாததாலும், அவர்கள் பேசியது காதுகளில் விழவும்
இல்லை, புரியவும் இல்லை.’
எனவே ஆப்தே, நாதுராம்
மற்றும் சங்கர் ஆகியோருடன் கோஷியான் ஓட்டுநருக்குச் சொந்தமான டாக்சியில் 1948 ஜனவரி
17ம் தேதி சாவ்ர்க்கர் சதனுக்குச் சென்றதாகப் பேட்ஜ் கூறும் குற்றச்சாட்டை எவருமே உறுதிப்படுத்தவில்லை
என்பதுடன், அனைவருமே முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
நன்றி:
ஃப்ரண்ட்லைன் – தி ஹிந்து
(13) பேட்ஜ் தனது
வாக்குமூலத்தில் (பக்கம் 220) ஆப்தேவுடனும், கோட்சேவுடனும் சேர்ந்து காந்திஜியையும்
மற்றவர்களையும் கொல்வதற்கு தில்லி செல்ல முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம் கோட்சேவும்,
ஆப்தேவும், பல முறை தனக்குப் பண உதவி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்; மேலும் அவர்களுடன்
எப்போதும் இணைந்து செயல்படுவதாகவும், அவர்கள் சொன்னதுபோல் செய்ததாவும் பதிவு செய்துள்ளார்;
தத்யாராவ் சாவர்க்கர் இச்செயலைச் செய்து முடிக்கத் தனக்கு ஆணையிட்டதாக ஆப்தே கூறியதாக
அவர் புரிந்து கொண்டதால், அவரது உத்தரவைச் செய்து முடிக்க வேண்டியது தனது கடமை என்று
பேட்ஜ் நினைத்திருக்கலாம்.
இது குறித்து நான்
சமர்ப்பிப்பதாவது:
முதலாவதாக, இதுபோன்ற
குற்றப் பணியைச் செய்யுமாறு நான் ஆப்தேவிடம் சொன்னதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும்
இல்லை. இந்தப் பொய்யை ஆப்தே கண்டுபிடித்திருக்கலாம் அல்லது பேட்ஜ் பொய் சொல்லியிருக்கலாம்.
எப்படி இருப்பினும், நான் மேலும் பதிவு செய்துள்ள காரணங்களின் அடிப்படையில், இந்தக்
குற்றச்சாட்டு மூலம் பேட்ஜ் என்னைக் குற்றவாளியாக்க முடியாது.
இரண்டாவதாக, பேட்ஜ்
சொல்வதுபோல் 1948 ஜனவரி 15 சதித் திட்டத்தில் சேர்ந்துகொள்ள உண்மையிலேயே முடிவெடுத்திருந்தால்,
பிறகு பேட்ஜைப் போன்ற ஒருவர், அவரது சொந்த சாட்சியத்தின்படி, அவரது உயிருக்கோ, தனிப்பட்ட
பாதுகாப்புக்கோ, பொறுப்பற்றவராகவோ மூடனாகவோ இருப்பவராகத் தோன்றவில்லை. சாதாரண மனிதனுக்குள்ள
இயல்பான குணத்தின்படி ஆப்தேவுக்கு இதுபோன்ற செயலைச் செய்ய நான் ஆணையிட்டேனா என்று அப்போதே
என்னிடம் பேட்ஜ் நேரடியாகவே கேட்டிருக்கலாம். மேலும் பேட்ஜ், அவரே கூறியதுபோல், ஆப்தேவுடனும்
கோட்சேவுடனும் சாவர்க்கர் சதனுக்கு இரு நாள்கள் கழித்து, அதாவது 1948 ஜனவரி 17 அன்று
சென்றதாகவும், பேட்ஜ் காதுகளுக்குக் கேட்குமாறு ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்’
என்று நான் அவர்களிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார். பேட்ஜ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்
வகையில் இதுபோன்ற பயங்கரமான பணியைச் செய்து முடிக்க நான் உத்தரவிட்டேனா என்று ஆப்தே
மற்றும் கோட்சே முன்னிலையில் அப்போதே உடனுக்குடன் பேட்ஜ் என்னிடம் கேட்டுத் தெளிவு
பெற்றிருக்கலாம். ஆனால் பேட்ஜ் இதுபோல் எதையும் செய்யவில்லை.
மூன்றாவதாக, பேட்ஜ்
உயிருக்கே ஆபத்தாக முடியும் ஒரு பயங்கரமான பணியைச் செய்து முடிக்கத் தில்லிக்குப் புறப்பட்டுச்
செல்லுமாறு, நான் ஆணையிட்டதாகச் சொல்லப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு மீது அவருக்கு
உண்மையிலேயே ஏதேனும் ஆச்சரியமான மற்றும் பொறுப்பற்ற மரியாதை இருக்குமானால், காந்திஜியைத்
தாக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல், சம்பவ இடத்திலிருந்து முன் கூட்டியே
ஓடியதும், தலைமறைவாக இருந்ததும், அவரே ஒப்புக் கொண்டதுபோல், ‘தன்னைக் காப்பாற்றிக்
கொள்வதைப் பற்றி மட்டுமே ஏன் எண்ணினார்?’
நான்காவதாக, பேட்ஜ்
ஒருவேளை தில்லிக்குச் சென்றிருந்தால், அது பண விஷயமாக இருந்திருக்கலாம் அல்லது தில்லி
மற்றும் பஞ்சாப்பிலுள்ள அகதிகளிடம் அவர் விற்பனை செய்து கொண்டிருந்த ‘பொருளுக்கு’ மிகப்
பெரிய தொகையை எதிர்பார்த்திருக்கலாம் அல்லது ‘ஆணை’ என்னும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைத்
தவிர வேறெந்தக் காரணமாகவும் இருந்திருக்கலாம்.
(14) பேட்ஜின் உள்நோக்கமும்
நடத்தையும்: மேலே காணப்படும் பேட்ஜ் சாட்சியத்தை விரிவாக ஆய்வு செய்தத்தில், என்னைப்
பொருத்தவரை, பெருமளவு ஜோடிக்கப்பட்டவை என்பதுடன், எனக்கு எதிராக எந்த மதிப்புமிக்க
ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபணம். எனக்கு எதிராகத் தவறான சாட்சி அளிக்க வேண்டும் என்னும்
பேட்ஜின் உள்நோக்கமும் தெளிவாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் எப்படியேனும் என்னை
இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று காவல்துறை தீவிரமாக முனைவதை பேட்ஜ் தெரிந்துகொண்டார்.
பொது வாழ்க்கையில் மதிப்போடும் கௌரவத்தோடும் வாழும் புகழ்பெற்ற மனிதரை இதுபோன்ற வழக்கில்
சிக்க வைத்தால் மட்டுமே நாடு முழுவதும் செய்தி பரபரப்பாவதுடன் சுய விளம்பரமும் கிடைக்கும்
என்றும், வேறு வழிகளில் கிடைக்காது என்றும், காவல்துறை நம்புவதை பேட்ஜ் உணர்ந்திருப்பார்.
எனவே கடுமையான குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் குற்றவாளிக் கூண்டில், கவலை மற்றும் இக்கட்டான சூழலில் உழன்று கொண்டிருக்கும்
பேட்ஜ், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘அப்ரூவராக’ மாறுவதுதான் ஒரே வழி என்பதை
அறிந்து கொண்டிருக்கிறார்; எனக்கு எதிராகச் சாட்சியம் அளித்தால் மட்டுமே காவல்துறை
தன்னைத் தவிர்க்க முடியாத அப்ரூவராக ஏற்றுக் கொள்ளும் என்னும் உட்கிடையான நிபந்தனை
காரணமாக இம்முடிவுக்கு வந்துள்ளார். ஆகவேதான் இந்த நிபந்தனையை நிறைவு செய்து தன்னைக்
காப்பாற்றிக் கொண்டுள்ளார். பேட்ஜ் புத்திசாலித்தனத்துடன், நேர்மையற்ற குணமும் உடையவர்
என்பதற்கு நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சியங்களே ஆதாரம். அவரது வாக்குமூலத்தில்
சில தருணங்களில் தற்பெருமையாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்தவர் வாழ்க்கையைப்
பற்றிக் கவலைப்படாமல் பொய் சொன்னதாகவும், தகுதி இருப்பதுபோல் போலியாக நடித்ததாவும்,
அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான அவரது சாட்சியத்தில் சில நிகழ்வுகள் பின்வருமாறு:
(a)  பேட்ஜ் கூறுகிறார்: ‘நான் உரிமம் இல்லாமலும், சட்டத்துக்குப்
புறம்பாகவும் வெடி மருந்துகளும், குண்டுகளும், விற்பனை செய்து கொண்டிருந்தேன் என்பது
உண்மைதான் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 228)
(b) கராத்தின் வீட்டில்
வெடி மருந்துகள் அடங்கிய பையை மறைத்து வைத்ததற்குக் காரணம் அது என்னிடம் இருப்பது தெரியக்
கூடாது என்னும் முக்கிய நோக்கம் மற்றும் நான் கைது செய்யப்படுவேன் என்ற அச்சமுமே ஆகும்
(அதே பக்கம்).
(c) டாக்ஸியில்
இரு ரிவால்வர் துப்பாக்கிகள் அடங்கிய பையை டாக்ஸி ஓட்டுநருக்குத் தெரியாமல் வைத்ததன்
காரணம், தேடுதலின்போது ஒருவேளை அவை கண்டுபிடிக்கப்பட்டால், டாக்சி ஓட்டுநர்தான் மாட்டிக்கொண்டு
கைதாவார், நான் தப்பித்துக் கொள்வேன் (பக்கம் 240).
(d) பேட்ஜ் தனது
உண்மைப் பெயரை மறைந்து ‘பந்தோபந்த்’ என்னும் போலியான பெயரை வைத்துக்கொண்டார் (பக்கம்
215)
(e) பயணச் சீட்டு
வாங்காமல் பேட்ஜ் பயணித்ததுடன், டிக்கெட் கலெக்டர்களுக்கு லஞ்சமும் கொடுத்துள்ளார்
(பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 237)
(f) பணத்துக்காகப்
பொய்யான தகவல்களைக் கூறியதாக அவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். ‘எனக்கு அவசரமாகப்
பணம் தேவைப்பட்டது. தீக்ஷித் மகராஜ் என்னிடம் வாங்கிய ரிவால்வர் துப்பாக்கிக்காகக்
குறைந்தபட்சம் ரூ 350/-ஆவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அவரிடம் அந்த
ரிவால்வரை நான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்று பொய் சொன்னேன். உண்மையில் அது எனக்கு
வேறொரு பொருளுக்குப் பரிமாற்றாகத்தான் கிடைத்தது.’ (பக்கம் 236).
எனவே, மேலே குறிப்பிட்டதுபோல்
நேர்மையற்ற முறையில் வாக்குமூலம் அளித்த பேட்ஜ் போன்ற ஒரு அப்ரூவர் தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளவும், மன்னிப்புப் பெறவும், என் மீது கூட தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிச் சாட்சி
அளிக்கலாம்.
(15) பேட்ஜின் சாட்சியத்தில்
என்னை நேரடியாகத் தொடர்புபடுத்திய பகுதியை மட்டுமே நான் மேலே விவரித்துள்ளேன். காந்திஜி,
நேரு அல்லது ஸுஹ்ரவார்தி ஆகியோரைத் தீர்த்துக் கட்டக் கொடுமையான ஆணையை நான் ஆப்தேவுக்கு
வழங்கியதை நிரூபிப்பதற்கு எந்தவொரு தனிப்பட்ட சாட்சியும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி
உள்ளேன். ஆகவே அரசு சாட்சியாக மாறியுள்ள அப்ரூவர் பேட்ஜ் சொன்ன கதை என்னைக் குற்றவாளியாக்க
முனைவதால் அதை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பேட்ஜின்
சாட்சியத்தில் எனக்குத் தொடர்பில்லாத சில விஷயங்கள் விவரிக்கப்பட்டு, நீதிமன்றம் ஒருவேளை
சில தகவல்களுக்காக உறுதிப்படுத்தி இருந்தாலும் கூட, ஆதாரமற்ற சதிச் செயலுடன், எனது
தனிப்பட்ட தொடர்பு அல்லது பங்கேற்பை நீரூபிக்க இயலாத பட்சத்தில், அப்போதும் கூட அவற்றை
அப்ரூவரின் சாட்சியாக எனக்கு எதிராக உறுதிப்படுத்த முடியாது. இந்த விஷயத்தை இன்னும்
சிறப்பாகத் தெளிவுபடுத்தப் பிரிவு 133 கீழ் சர்கார் சாட்சிச் சட்டம் 7ஆவது பதிப்பிலிருந்து
ஒன்று அல்லது இரு பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன்:
“பொருள் விவரங்களுடன்
சாட்சியை உறுதிப்படுத்துவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தும்
வகையில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவரை மட்டும்
உறுதிப்படுத்தினால் போதாது, சாட்சியினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அவரது சாட்சி மூலம் சிறைக் கைதியாக ஒருவர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உறுதிப்படுத்தப்படாத
மற்றொருவர் மீதான அவரது சாட்சியை ஏற்றுக் கொள்வது நடுநிலை ஆகாது.” (பக்கம் 1253).
“குற்றத்துக்கு
உடந்தையாக இருப்பவர் தனிப்பட்ட சாட்சி மூலம் அவர் குற்றம் சுமத்தும் ஒவ்வொரு நபரின்
அடையாளத்தையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமான நடைமுறைச் சட்டமாகும்.
குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் குற்றத்தின் ஒவ்வொரு சூழலையும் அறிந்திருப்பார்
என்பதால், தனது நண்பரைக் காப்பாற்ற அல்லது பகைமையைச் திருப்திப்படுத்த (அல்லது தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள) குற்றத்துக்குத் தொடர்பே இல்லாத அப்பாவியைக் குற்றவாளிகளுள் ஒருவராக
அடையாளம் காட்டத் துணிவார்.” (பக்கம் 1254).
(16) பேட்ஜின் மூன்று
கடிதங்கள்
ப்ராக்ஸிக்யூஷன்
தரப்பு மூன்று கடிதங்களைச் சாட்சி / ஆவணம் பி87, பி88 மற்றும் பி89 சமர்ப்பித்துள்ளது.
முதல் இரண்டு கடிதங்கள் 1943ல் பேட்ஜ் எனக்கு அனுப்பியவை. உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை
விற்பதற்காக அவர் நடத்திய சஸ்திர பண்டாருக்காக நன்கொடை அனுப்புமாறு அவற்றில் கோரியிருந்தார்.
பேட்ஜ் தனது வாக்குமூலத்தில் திரும்பத் திரும்ப தன்னை இந்து மஹாசபா ஊழியர் என்றும்
1947ல் உரிமை தேவையில்லாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்
(பி.டபிள்யூ 57, பக்கங்கள் 218, 229, 242). ஆயுதச் சட்டத்தை ரத்து செய்வதுடன், ஆயுத
விற்பனைக்கு உரிமம் வழங்குவது மற்றும் ராணுவப் பயிற்சியைப் பரவலாக்குவது ஆகியவற்றுக்கு
ஆதரவாக நான் வெளிப்படையாக ஓர் இயக்கம் நடத்தி வந்த காரணத்தால் இந்து மஹாசபா தலைவர்
என்ற முறையில் எண்ணற்ற கடிதங்களும், அறிக்கைகளும், நிதி உதவி கேட்டு எனக்கு வந்தன.
மூன்றாவது கடிதம்,
பேட்ஜ் நடத்திய படிக்கும் அறைக்கு இந்து சங்கதான் மற்றும் இந்து மதம் தொடர்பான சில
புத்தகங்களை இலவசமாக அனுப்பியதற்காக எனது செயலாளர் திரு வி ஜி தாம்லேவுக்கு நன்றி தெரிவித்து
அவர் அனுப்பிய ரசீதாகும். இந்த ரசீதில் துக்காராம் பாடல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்து இயக்கம் தொடர்பான
புத்தகங்களை இந்தியா முழுவதுமுள்ள நூலகங்களுக்கும், படிக்கும் அறைகளுக்கும் இலவசமாகவே
அனுப்பி வைப்பது வழக்கமாகும். தற்போது ப்ராக்ஸிக்யூஷன் வசமுள்ள எனது அலுவலகக் கோப்புகளில்
இதுபோல் ஏராளமான ரசீதுகள் உள்ளன. எனவே இதன் மூலம் நான் பணிவுடன் தெரிவிப்பது என்னவெனில்,
இந்த ஆவணங்களுக்கும், இப்போதைய வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன் இவற்றில்
குற்றம் சுமத்தும் அளவுக்கு எதுவுமில்லை என்பதுமே ஆகும்.

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலா

கடிதம் 3

திரும்பி பார்க்கையில் ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அந்த
சந்தோஷமான நாள் திரும்பவும் வந்திருக்கிறது. வீட்டில் இருந்து ஒரு செய்தி வருவதும்
வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும் எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பது சிறையில் இருக்கும்
ஒருவருக்குதான் நன்றாகத் தெரியும். நாம் நேசிக்கும் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து
நிலவொளியில் உரையாடுவதைப் போல மனதுக்கு ரம்மியமானது அது. ஒரு நிமிடம் பொறு. மணி அடித்துவிட்டது.
நான் போய் உணவு உட்கொள்ள வேண்டும். காலை மணி பத்தாகி விட்டது… நான் மற்ற கைதிகளுடன்
அமர்ந்து உணவு உட்கொண்டு திரும்பி வந்து விட்டேன். ஆமாம் நான் ஏற்கெனவே சொன்னது போல
அது மிக இனிமையானதுதான். உண்மையில் வீட்டிற்கு கடிதம் எழுதும் நாள்தான் எனக்குப் புத்தாண்டுத்
தினம் போல. என் ஆண்டுக்கணக்கை நான் அன்றிலிருந்துதான் தொடங்குவேன். எனக்கு நெருக்கமானவர்களுடன்
உரையாடும்போது எனக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைக்கின்றன. அது என்னை மேலும்
ஒரு வருடத்திற்கு ஜீவித்திருக்கச் செய்கிறது. நான் ஏற்கெனவே கடிதம் எழுதாமல் உன்னைத்
தந்தி கொடுக்க வைத்ததற்கு மன்னிக்கவும். அதிகாரிகள் எனக்கு அதை பற்றித் தெரிவித்திருந்தனர்.
கடிதம் எழுதி ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அடுத்த கடிதம் எழுத எனக்கு அனுமதி உண்டென்றாலும்
இங்குள்ள தபால் துரையின் மெத்தனத்தால் கடிதம் எழுதியபின் ஆறு அல்லது ஏழு வாரங்களுக்குப்
பிறகுதான் அது கல்கத்தாவிற்கு அனுப்பப்படுகிறது. அதனால்தான் அடுத்த கடிதத்திற்கு பதினான்கு
மாதங்கள் ஆகின்றது. ஆனால் நீ அனுப்பும் கடிதங்கள் இந்த இருவதாம் நூற்றாண்டில் எத்தனை
சீக்கிரம் வர இயலுமோ அதனை சீக்கிரத்தில் வந்து விடுகின்றது. உன்னுடைய கடிதத்தின் மூலம்
நீ ஆரோக்யமாக இருப்பதையும் நீ தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதையும்
தெரிந்து கொண்டேன். தேர்வுகள் ஒருபுறம் இருந்தாலும் நீங உன் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம்
அளிக்க வேண்டும். இளமையான ஆரோக்கியமான உன்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆவலாக
உள்ளது. நீ இப்போதுதான் இளமை பிராயத்தினுள் நுழைகிறாய். இப்போது சக்தியும் உத்வேகமும்
அதிகமாக இருக்கும். அதனை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் வீணடிக்காதே. உடல் ஆரோக்கியத்தைப்
போல மன ஆரோக்கியமும் முக்கியம். நீயே ஒரு டாக்டர் என்பதால் உன்னிடம் ஆரோக்கியத்தைப்
பற்றி வலியுறுத்துவது தேவையற்ற செயல்தான். ஆனால் இளமைப் பருவத்தில்தான் நாம் கண்மூடித்தனமாக
சில காரியங்களைச் செய்து நம் சக்தி அனைத்தையும் வீணாக்கிக் கொள்வோம். இப்போது சக்தியை
வீணாக்காமல் இருப்பது பிற்காலத்தில் நமக்குத் தேவைப்படும்போது உதவும். இல்லாமல், உன்
கண் பார்வை மங்கினால் நானே உன்னிடம், ‘டாக்டர் உங்கள உடல் நிலையை சீராக்கிக் கொள்ளுங்கள்’
என்று கோபமாகச் சொல்வேன். (நான் சொல்வதைக் கேட்டு உனக்குச் சிரிப்பு வரலாம். நான் டாக்டர்
அல்ல. அதனால் என் கண் பார்வைத் திறன் குறைவது பிரச்சினையில்லை. எல்லா வழக்கறிஞர்களுக்கும்
இந்தப் பிரச்சினை வரும்.) எனக்கு விருப்பமானவர்கள் சிலர் BA மற்றும் MA ஆகியவற்றை முடித்துவிட்டார்கள்
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது மிகவும் உயர்வானது. ஆனால் இதனைக் காட்டிலும்
உயர்வான விஷயம் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு அதில் வரக்கூடிய தடைகளை நீக்கி வெற்றி
பெறுவது. பலகலைக்கழகங்கள் வழங்கும் பதக்கங்களை விட சமுதாயம் வழங்கும் பதக்கங்களே மிக
உயர்வானவை. நான் இன்னமும் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் அந்த
வெற்றியைப் பற்றி நேரடியாகக் கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்படித் தெரிவிக்கச்
சொல்லி உன்னிடம் கூறுபவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுது.
நீ அனுப்பிய புத்தகங்கள் அருமையானவை. ‘மகாத்மா பரிச்சய’
– என்ன ஒரு அருமையான மொழிபெயர்ப்பு! அதன் அறிமுகத்தில் முதல் இரண்டு வரிகளும் பொருத்தமாகவும்
அடக்கமாகவும் இருந்தன. அதன் முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது அந்த வார்த்தைகளே
என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அதனை யார் எழுதி இருப்பார்கள் என்று எனக்குத்
தெரியும். புத்தகத்தின் சொல்வளமும் மையகருத்தும் ஒன்றுகொன்று அழகு சேர்ப்பதாய் இருந்தது.
மக்களிடையே பிரபலமாகி உள்ள ‘பாரத் கவ்ரவ் மாலா’ போன்ற தொடர்கள் அரசியல் வரலாறு, விஞ்ஞானம்,
பொருளாதாரம் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வர வேண்டும். வேதாந்த தத்துவப் புத்தகங்களைப்
பொருத்தவரை நமக்கு அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கர்களுக்கும்
ஆங்கிலேயர்களுக்கும் வேதாந்த தத்துவங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுடைய வாழ்கை முழுமையான
முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்கள் ஷத்ரியத் தன்மையில் இருந்து பிராம்மண தன்மையின்
விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தத்துவங்களை நிஜ வாழ்வில் செயல்ரீதியாகக்
கொண்டு வருவதற்கான சரியான நிலை அதுதான். ஆனால் இந்தியா தற்போது அந்த நிலையில் இல்லை.
நாம் தற்போது வேத வேதாந்தங்களைக் கற்கும் நிலையில் இல்லை.
சூத்திரர்களுக்கு வேதம் மறுக்கப்பட்டதன் மூல காரணம் இதுதான்.
அது குறுகிய மனப்பான்மையாலோ அல்லது கொடூர சிந்தனையாலோ அல்ல. அப்படியென்றால் அதே தத்துவங்களை
விவரிக்கும் புராணங்களை பிராமணர்கள் எழுதி இருக்க மாட்டார்கள். இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைப்
பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையில் நம்முடைய நாடு தற்போது இருக்கிறது. பாஜிராவ் 2 ஒரு
பெரிய வேதாந்தி, அதனாலேயே அவரால் ஒரு தேசத்திற்கும் பென்ஷனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்
புரிந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. நாம் வரலாறு, அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம்,
போன்றவற்றைப் படித்து நம் வாழ்க்கைத் தரத்தை முதலில் மேம்படுத்தி கொள்வோம். முதலில்
க்ரிகஸ்தாஸ்ரம தர்மத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்துவிட்டுப் பிறகு வானப்ரஸ்த ஆஷ்ராமத்தின்
வாயிலில் அடி எடுத்து வைப்போம். இந்த புத்தகங்கள் எல்லாம் தற்போது விதவைகள், முதியவர்கள்,
ஒய்வூதியம் பெற்று வீட்டில் இருப்போர் போன்றவர் படிக்கட்டும். அவர்கள்தான் பழைய நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் படிக்கட்டும் இந்தக் கடவுள், ஆத்மா, மனிதன் போன்றவற்றை
அலசும் புத்தகங்களை! இளைஞர்கள் எதிர்காலம் குறித்த கனவில் வாழட்டும். பெனாரஸ் ஒரு தியாகியைக்
கூட அளித்ததில்லை, அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கென எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை.
என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதுகிறேன். கடந்த ஒரு வருடத்தில்
எனக்கு எந்த நோயும் வரவில்லை. என் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. உடல் எடையும் குறையவில்லை.
அதுவே ஒரு சாதனைதான் இல்லையா? சிறையின் இந்த சிறு அறையில் நான் தினமும் சீக்கிரம் எழுந்து,
சரியான அளவு உணவை சரியான நேரத்திற்கு உண்டு, சீக்கிரமே படுத்தும் விடுகிறேன். இதனாலேயே
நான் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். வருங்கால டாக்டரான உனக்கு என்னுடைய இந்த அட்டவணை
மிகவும் உபயோகமாக இருக்கும். உடலைப் போலவே என்னுடைய மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.
இப்போது நான் இருக்கும் சிறை அறையில் தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க
முடிகிறது. அறையில் இருந்தபடியே ரோஜா, லில்லி போன்ற மலர்களைப் பார்கிறேன். அவற்றைப்
பார்க்கும்போது என் மனம் தத்வார்த்த விசாரங்களில் ஈடுபடுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக
அப்போது நான் உணர்கிறேன். சில சமயங்களில் ஒரு சிறு குழந்தை போல அழவும் செய்வேன். அப்போது
நான் கொண்ட கொள்கை எனக்கு நினைவிற்கு வந்து என்னைத் தேற்றும். தனி மனித சுகத்திற்கோ
அங்கீகாரதிற்கோ வேண்டியா நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கினோம் என்ற எண்ணம் வந்து என்னை
அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும். பெயர், புகழ், சொத்து போன்றவற்றை
எண்ணி நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. சந்தோஷமும் நம்முடைய இலக்கில்லை. இந்தப்
போராட்டத்தில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது தெரிந்தே ஈடுபட்டிருக்கிறோம்.
மற்றவர்களுக்காவும் மனித குலத்திற்காகவும் தியாகம் செய்ய வேண்டியே இதில் ஈடுபட்டிருக்கிறோம்.
அப்படி இருக்க இதில் ஏமாற்றம் எங்கிருந்து வரும்? நாம் செய்வது ஒரு தவம். நம்முடைய
சமுதாயம் மேம்பட ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறோம். இதைவிட மேலான காரியம் வேறென்ன இருக்கிறது?
இந்த சிந்தனை மனதில் படர்ந்த உடன் மனம் மறுபடியும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
மனம் அழுந்திக் கிடக்கும்போதெல்லாம் இமயமலையைப் பற்றி எண்ணிக்கொள்வேன். அது உருவாகாத
காலம் ஒன்றிருந்தது. அது இல்லாமல் போகும் காலம் ஒன்றும் வரும். இந்த நிலவு, இந்த சூரியக்
குடும்பம் பற்றி எல்லாம் சிந்திக்கத் தொடங்குவேன். பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனையில்
ஆளும்போது மனம் அதில் ஒரு சிறு துகளாகிய நம்மை மறக்கும்.
எனதருமை பால் (Bal), நாங்கள்
இருவரும் இங்கு நல்ல ஆரோக்
கியத்துடன்
இருக்கிறோம். எங்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். எங்களுக்கு இருப்பதெல்லாம் உன்
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள்தான். இவை இரண்டிற்கும் நீ உத்தரவாதம்
அளித்தால் நாங்கள் வேறு எதனைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
சிறை வாழ்க்கையினால் நாங்கள் துன்புறவில்லை. அதனையும் மீறி நாங்கள் மகிழ்ச்சியுடன்
இருக்கிறோம். நீ இங்கு வருவதற்கு அதிகாரிகளிடம் கொடுத்த மனு குறித்து எழுதியிருந்தாய்.
இங்குள்ள விதிமுறைகளின்படி நான் இந்நேரம் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இந்தத்
தீவில் வாழ அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நடத்தை நல்லபடியாகவே இருக்கிறது.
ஆனால் எங்கள் இருவரையும் வெளியே அனுப்பவில்லை. இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி அரசிடம்
வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். சீக்கிரத்திலேயே நம்முடைய பாபா ஐந்து வருடங்களைப் பூர்த்தி
செய்து விடுவார். அதன் பிறகு நீ இங்கு வர விண்ணபிக்கலாம். ஆனால் எங்கள் விடுதலையும்,
உறவினர்களை இங்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ்வதும் நடக்கும் என்று தோன்றவில்லை. மற்ற
கைதிகளுக்கெல்லாம் அது நடக்கிறது. இதற்கு இங்குள்ள அதிகாரிகளையும் குறை சொல்ல முடியாது.
ஏனென்றால் இந்திய அரசின் உத்தரவுப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே இங்குள்ள
அதிகாரிகளிடம் இருந்து ஏதேனும் தகவல் கிடைக்கவில்லை என்றால் நீ நேரடியாக இந்திய அரசிடம்
கோரிக்கை விடுக்கலாம். அரசு நியாயப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனை ஓரளவு செய்யும். நாங்களும்
அவர்களை நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம். வேறென்ன செய்வது? நீ உன்னுடைய ஆரோக்கியத்தையும்
பாதுகாப்பையும் பற்றி மட்டும் அக்கறை கொண்டால் போதுமானது. நான் உன்னிடம் உயர் நீதிமன்றத்தில்
சொன்னதை நினைவில் வைத்திரு.
அன்பிற்குறிய யமுனாவிடம் மகிழ்ச்சியான நாள் ஒன்று விரைவில்
விடியும் என்று கூறு. நம்பிக்கையுடன் காத்திருக்கச் சொல்.
நம் அன்புக்குரிய வாஹினியிடமும் நம்பிக்கையுடன்
இருக்கச் சொல்.
அவர்கள் புராணங்களை மட்டுமில்லாமல் மராத்தி இலக்கியங்களையும், உலகின் நவீன படைப்புகளையும்
படிக்கட்டும். நம் சகோதரன் சாகாராமின் மறைவுச் செய்தி கேட்டவுடன் வருந்தினேன். நாங்கள்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் சந்தித்தோம். அவன் துணிச்சலுடன் வாழ்ந்தான்,
துணிவுடன் மறைந்தான். இதைவிட வேறு என்ன வேண்டும். அவன் மனைவி ஜானகி வாகினியை நான் நேரில்
பார்த்ததில்லை. நீ வரைந்து அனுப்பிய படங்களின் மூலம்தான் பார்த்திருக்கிறேன். அவர்களின்
நிலை பரிதாபத்திற்குரியது அல்ல. மிகவும் போற்றுதலுக்கு உரியது. அது தனிமையில் இருந்தாலும்
கூட. நான் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். வசந்த் குட்டி எப்படி
இருக்கிறான்? அந்தப் பெரிய மனிதன் எனக்கு ஏதாவது எழுதுவானா? அவனுக்கு இப்போது ஏழு வயதிருக்கும்
இல்லையா? அவன் தாய் எப்படி இருக்கிறார்கள்? நான் அவர்களை டோங்கிரி சிறையில் கடைசியாகப்
பார்த்தேன். ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு ஒரு நல்ல சகோதரிதான்.
வசந்த் குட்டிக்கு என்னுடைய அன்பு முத்தங்களையும் அவனுடைய அம்மாவிற்கு என் அன்பையும்
கூறவும். நம் உறவினர் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். நான் தமாஷாக அம்மா
என்று அழைக்கும், உனக்கு உறுதுணையாக இருக்கும் அந்த சகோதரியிடமும் நான் விசாரித்ததாகக்
கூறவும். சிறையில் இருப்பதால் நான் அவர்களுடைய பெயரை குறிப்பிடவில்லை. என்னுடைய மனதிற்கு
நெருக்கமானவர்கள் யார் என்று உன்னிடம் கூறியிருக்கிறேன். அவர்கள் எல்லோரையும் நான்
விசாரித்ததாகக் கூறவும். அவர்களில் யாரேனும் தனிப்பட்ட முறையில் அவர்களை விசாரிக்க
வேண்டும் என்று கூறுவார்களேயானால் நான் அவர்களைப் பெயரைக் குறிப்பிட்டு விசாரிப்பேன்.
எனக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பி உள்ளேன். நேரமாகி விட்டது, மிகுந்த
தயக்கத்துடன் உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உன் சகோதரன்
தாத்யா.