Posted on Leave a comment

திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

காலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை. Continue reading திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

Posted on Leave a comment

மாலுமி (சிறுகதை) – பா. ராகவன்


ஆதியிலே வினாயகஞ் செட்டியார் என்றொரு தன வணிகர் மதராசப் பட்டணத்திலே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் தனது குடும்பக் கிழத்தி, குஞ்சு குளுவான்களோடு சௌக்கியமாக வசித்து வந்தார். துறைமுக வளாகத்தில் வந்திறங்கும் பர்மா ஷேல் எண்ணெய் கம்பேனியின் சரக்குகளைப் பட்டணத்தின் பல திக்குகளிலும் இருந்த அக்கம்பேனியின் சேமிப்புக் கிட்டங்கிகளுக்குக் கொண்டு சேர்க்கிற ஒப்பந்த ஊர்திகளில் ஒன்பது ஊர்திகள் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன. பர்மா ஷேல் கம்பேனியாரிடம் தாம் சம்பாதனை பண்ணும் தொகையைச் சிந்தாது சிதறாது சேகரம் பண்ணி வினாயகஞ் செட்டியார் வட்டிக்குச் சுற்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறாகப் பல ஆண்டுக்காலம் அவர் சிறுகவும் பெருகவும் சேகரித்த பணத்தைக் கொண்டு தமது முதல் இரண்டு புத்திரிகளுக்கு விமரிசையாகக் கலியாணஞ் செய்து வைத்தார்.

வினாயகஞ் செட்டியாரின் மூத்த புத்திரி வடிவம்மை, தட்டாஞ்சாவடிக்கு வாழ்க்கைப்பட்டுப் போனாள். அவளது புருஷன் முத்தையா அங்கே பலசரக்குக் கடை வைத்துப் பிழைத்துக்கொண்டிருந்தான். அதன் லாபத்தில் வட்டித்தொழில் செய்துகொண்டிருந்தான். அவர்களுக்கு இராமநாதன், லீலாவதி என்று இரண்டு மகவுகள் பிறந்தன. செட்டியாரின் இரண்டாவது புத்திரி முத்துலட்சுமி திருப்போரூருக்கு வாழ்க்கைப்பட்டுப் போனாள். அவளது புருஷன் கருப்பையா அங்கே அச்சுக்கூடம் வைத்துப் பிழைத்துக்கொண்டிருந்தான். அதில் வந்த லாபத்தில் வட்டித் தொழில் செய்துகொண்டிருந்தான். அவர்களுக்குத் திருநாவுக்கரசு என்ற மகன் பிறந்தான். மூன்றாவது புத்திரியான மகேசு என்கிற மகேசுவரியை வினாயகஞ் செட்டியார் பாண்டிச்சேரியில் வசித்து வந்த லெட்சுமணச் செட்டியார் விசாலாட்சி தம்பதியரின் ஏக புத்திரனும் பிரெஞ்சு அரசாங்கக் காரியஸ்தனுமான முத்துக்குமாரசாமிக்குக் கலியாணஞ் செய்துகொடுக்கப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்திலே வினாயகஞ் செட்டியார் வாசம் செய்துகொண்டிருந்த மதராசப் பட்டணத்துக்கு ஒரு விநாசம் வந்து சேர்ந்தது. யுத்த காலமென்பதால் பொதுவாகவே ஜனங்கள் கலவரமும் பயப்பீதியும் கொண்டு திரிந்துகொண்டிருந்தார்கள். அது போதாதென்று வான் முல்லர் என்னும் கப்பற்படைத் தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய எம்டன் என்னும் ஜெர்மானியப் போர்க்கப்பல் மதராசப் பட்டணத்தின் கடற்கரையை நெருங்கி வந்து நின்றுகொண்டது. அது ராப்பொழுது என்பதாலும் எதிரிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் படைப்பிரிவு என்று மதராசப் பட்டணத்தில் ஒன்றுமில்லாததாலும் எம்டன் கப்பல் மையம் கொண்டதை யாரும் அறிந்திருக்கவில்லை. விளக்கு வைத்து ஒரு ஜாமம் கழிந்த பொழுதில் சமுத்திரக் கரையில் இருந்து ஒன்றரை மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த எம்டன் கப்பலானது, ஒன்பதரை மணி சுமாருக்குத் தனது பீரங்கிகளை இயக்கி வெடிக்க ஆரம்பித்தது.

அது வினாயகஞ் செட்டியாரின் கெட்ட நேரம்தான் என்பதில் சந்தேகமில்லை. எம்டன் கப்பல் எறியத் தொடங்கிய முதல் முப்பது சுற்றுக் குண்டுகளும் கரையோரம் இருந்த பர்மா ஷேல் கம்பெனியின் எண்ணெய் டாங்குகளைத்தான் குறி வைத்து வந்து தாக்கின. அதுவும் வினாயகஞ் செட்டியார் எடுத்துச் சென்று சேர்ப்பிக்க வேண்டிய சரக்கு நிறைந்த டாங்குகளாக இருந்தன. அன்றைக்குச் செவ்வாய்க் கிழமை என்பதாலும் பொன் கிட்டினாலும் புதன் கிட்டாதென்னும் பழமொழியின்பால் வினாயகஞ் செட்டியாருக்குப் பிரீதி உண்டென்பதாலும் மறுநாள் விடிந்ததும் தனது வாகனங்களைத் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்க உத்தேசித்திருந்தார். ஆனால் அதற்குள் எம்டன் கப்பலில் இருந்து புறப்பட்டு வந்த பீரங்கிக் குண்டுகள் அந்த எண்ணெய் டாங்குகள் அனைத்தையும் தாக்கி நொறுக்கிவிட்டன. துறைமுகத்தில் கோடி பிணங்களைக் கொட்டிக் கொளுத்தினாற்போலே தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

வினாயகஞ் செட்டியாருக்கு சேதி வந்து சேர்ந்தபோது குண்டு வீசிய எம்டன் கப்பல் திரும்பிச் சென்று, பிரம்ம முகூர்த்தமே தொடங்கியிருந்தது. நடந்த எதையும் அறியாமல் துயில் கொண்டிருந்த செட்டியாரை அவரது விசுவாசியான ஊழியன் ஆறுமுகச் சாமி கதவைத் தட்டி எழுப்பி, பதைக்கப் பதைக்க நடந்ததைச் சொல்லி முடித்தான். செட்டியாருக்கு பூமி கிடுகிடுத்தது. ‘ஐயோ மோசம் போனோமே. இனி பர்மா ஷேல் கம்பேனியே இருக்காதே’ என்று அப்போதே தலையில் கைவைத்து அவர் புலம்ப ஆரம்பித்துவிட்டார். கம்பேனி இல்லாது போனால் ஏஜென்சி இல்லாது போகும். ஏஜென்சி இல்லாது போனால் பண வரத்து இல்லாது போகும். எண்ணெய்ப் பணம் வராது போனால் வட்டித் தொழில் சண்டித்தனம் செய்ய ஆரம்பிக்கும். உடனடிச் சிக்கல் ஒன்றுமிராது என்றபோதிலும் அவரது மூன்றாவது புத்திரி மகேசுவரியின் கலியாண காரியங்களில் சுணக்கம் ஏற்படலாம். தொழில் நொடித்துவிட்ட விவகாரம் தெரியவந்தால் பிரெஞ்சு காரியஸ்தனான பாண்டிச்சேரி மாப்பிள்ளை சற்று யோசிக்கலாம். ஏற்கெனவே ஜாதகக் கட்டங்கள் சரியில்லாத பெண்ணென்பதால் மாப்பிள்ளை பிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்து வந்தது. சொந்த ஜாதியாகவும் இருக்க வேண்டும். ஜாதகமும் பொருந்த வேண்டும். பண வசதிக்குக் குறைச்சல் இருக்கக்கூடாது. அந்தஸ்தும் ஜபர்தஸ்தும் உள்ள இடமாகவும் வேணுமென்று வினாயகஞ் செட்டியார் எங்கெங்கோ சொல்லி வைத்துத் தேடிப் பிடித்திருந்த இடம் அது. மாப்பிள்ளையானவன் பிரெஞ்சு அரசாங்க உத்தியோகஸ்தன் என்றாலும் ஏனாமில் அவனுக்கு ஒரு பெரிய அச்சுக்கூடம் இருந்தது. மாதம் ஒருமுறை மதராசப் பட்டணத்துக்கு வந்து அங்கிருந்து பாசஞ்சர் மெயிலில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து அவன் ஏனாமுக்குப் போய் வருவது வழக்கம் என்று அவனது தகப்பனார் செட்டியார் சொல்லியிருந்தார். விடுவதாவது?

அன்றையப் பொழுது விடிந்தபோது ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. குண்டு வீசிவிட்டு ஓட்டமாய் ஓடிச் சென்ற எம்டன் கப்பலானது, எப்போது வேண்டுமானாலும் திரும்ப வந்து தாக்கும் என்று மூலைக்கு மூலை ஜனம் பேசிக்கொண்டது. சாலையில் நோக்குமிடமெல்லாம் போலிஸ்காரர்கள் நடமாட்டம் பலமாக இருந்தது. வெள்ளைக்காரத் துரைகள் திறந்த ஜீப்பு வண்டிகளில் போனவண்ணமும் வந்த வண்ணமும் இருந்தார்கள். நாலாபுறமும் ஜனக்கூட்டம் ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்தது. பலபேர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அன்றே ஊரைப் பார்க்கப் புறப்பட்டிருந்தார்கள். இடுப்பிலும் தோளிலும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, பெட்டிப் படுக்கையுடன் அவர்கள் விரைந்ததைக் கண்டவண்ணம் வினாயகஞ் செட்டியார் துறைமுக வளாகத்தை ஒட்டியிருந்த பர்மா ஷேல் ஆயில் கம்பேனியின் காரியாலயத்துக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே அவரை வரவேற்கவோ முகமன் சொல்லவோ யாரும் இல்லை. உயரதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. இடைநிலைச் சிப்பந்திகளும் இப்போது ஒன்றும் பேசுவதற்கில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒருபுறம் பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்க சிந்நூறு பேர் போராடிக்கொண்டிருக்க, மறுபுறம் குண்டு வீச்சுக்கு ஆட்படாத சரக்கினங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஓரிரண்டு தினங்களில் எம்டன் கப்பலானது கட்டாயம் திரும்ப வரும் என்று துறைமுகச் சிப்பந்திகளும் சொன்னார்கள். இம்முறை அவர்கள் வீசிய குண்டுகள் வெறும் பரீட்சார்த்தம் என்றும், அடுத்த முறை வீசப்போகிற குண்டுகளில் மதராசப் பட்டணமே பஸ்பமாகிவிடும் என்றும் அவர்கள் பேசிக்கொண்டதை வினாயகஞ் செட்டியார் கேட்டார். ஆச்சியிடம் மட்டும் சொல்லிவிட்டு அன்று மாலையே அவர் பாண்டிச்சேரிக்குப் பயணமானார்.

வினாயகஞ் செட்டியார் அதற்குமுன் இரண்டு முறை பாண்டிச்சேரிக்குப் பயணம் செய்திருக்கிறார். மகேசுவின் ஜாதகத்தை லெட்சுமணச் செட்டியாரிடம் சேர்ப்பிப்பதற்காக ஒரு முறையும், சேர்ப்பித்த ஜாதகம் அவரது திருக்குமாரன் முத்துக்குமாரசாமியின் ஜாதகத்துடன் பெருமளவு பொருந்தியிருப்பதை அறிந்து செல்ல வந்த வகையில் ஒரு முறையும் ஆகும். மூன்றாவதான இப்பயணத்தில் திருமணத்தை நிச்சயஞ் செய்துவிட்டே வரவேண்டுமென்ற தீர்மானத்துடன் புறப்பட்டிருந்தார். அவரது கவலையெல்லாம் ஒன்றுதான். ஜாதகப் பொருத்தம் சரியாக அமைந்திருப்பதைத் தெரிவித்துவிட்டு, பிளெசர் காரில் மதராசுக்கு வந்து பெண் பார்த்துவிட்டுப் போன பின்பும் லெட்சுமணச் செட்டியாரிடம் இருந்து எந்தத் தகவலும் வந்திருக்கவில்லை. இத்தனைக்கும் மகேசுவை மாப்பிள்ளைப் பையனுக்குப் பிடித்திருப்பதாகப் பெண் பார்க்க வந்த தினத்தன்றே அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அத்தனைக்குப் பின்பும் தாம்பூலம் மாற்றிக்கொள்ள எதற்காக இத்தனைத் தாமதஞ் செய்ய வேண்டும் என்பதுதான் வினாயகஞ் செட்டியாருக்குப் புரியவில்லை.

என்னவானாலும் இன்றைக்குப் பேசி முடித்துவிடுவது என்ற மனோதிடத்துடன் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்த வினாயகஞ் செட்டியார் கூபர்த்து விடுதியிலே அறையெடுத்துத் தங்கி, ஸ்நானபானமெல்லாம் செய்து முடித்த பின்பு அந்துலேன் வீதியில் இருந்த லெட்சுமணச் செட்டியாரின் கிருஹத்துக்கு ஒரு ஜட்கா பிடித்துப் போனார். வழியிலே அவர் கண்ட பிரெஞ்சுக்கார சீமான்களும் சீமாட்டிகளும் ஆங்கிலேயர்களைக் காட்டிலும் சிவப்பாக இருப்பதாக அவருக்குப் பட்டது. அன்னார்தம் நடையுடை பாவனைகள் ஆங்கிலத் துரை மற்றும் துரைசானிமார்களின் நடையுடை பாவனைகளினும் லலிதமாயிருப்பதாகவும் தோன்றியது. பிழைத்துக் கிடந்து இந்தக் கலியாணம் நல்லபடியாக நடந்தேறிவிட்டால் குடும்பத்தோடு பாண்டிச்சேரிக்குக் குடிமாறி வந்துவிடலாம் என்று அவர் மனத்தில் ஓர் எண்ணம் உருவானது. உலக யுத்த களேபரங்களில் பிரெஞ்சு அரசாங்கமும் பங்கு வகித்தாலும் பாண்டிச்சேரியில் அதன் தாக்கம் மதராஸ் அளவுக்கு இல்லை என்று தோன்றியது. குடிசனங்களின் மனத்திலே பயப்பீதி உருவாகாமல் பார்த்துக்கொள்வதினும் ஓர் அரசாங்கத்தின் பணி வேறு எதுவாக இருக்கும்?

லெட்சுமணச் செட்டியார், வினாயகஞ் செட்டியாரை வரவேற்று இருக்கையளித்து உபசரித்தார். அவரது பத்தினியான விசாலாட்சி ஆச்சி, தங்கமென மின்னிய பித்தளைத் தம்ளரில் காப்பி எடுத்து வந்து கொடுத்துவிட்டு க்ஷேமலாபங்களைக் கேட்டறிந்துகொண்டு உள்ளே போய்விட்டாள். வினாயகஞ் செட்டியாருக்கு விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரிபடவில்லை. என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார். எம்டன் கப்பலைப் பற்றி. அது வீசியெறிந்த குண்டுகளைப் பற்றி. மதராஸ் துறைமுகமே பற்றியெரிந்து கொண்டிருப்பது பற்றி. அதனாலெல்லாம் தனது தொழிலும் வர்த்தகமும் பாதிக்கப்படாது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஒருவாறாக முக்கால் மணி நேரம் நாட்டு வர்த்தமானம் பேசிக் களைத்தபின் கேட்டார். நிச்சயதாம்பூலத்தை விரைவில் நடத்தி முடித்துவிட்டால் கலியாணத்துக்கு நாள் பார்க்க சௌகரியமாயிருக்கும்.

ஆஹா அதற்கென்ன என்று ஆரம்பித்த லெட்சுமணச் செட்டியாரும் எதையோ சொல்ல நினைத்துத் தயங்கிக்கொண்டிருப்பதாக வினாயகஞ் செட்டியாருக்குப் பட்டது. என்னவாக இருக்கும் என்று அவருக்குப் புரிபடவில்லை. ஏனெனில், தமது பேச்சினிடையே லெட்சுமணச் செட்டியார் அடிக்கடி ‘பிராப்தம்’ என்றும் ‘விதி’ என்றும் ‘ஆண்டவன் சித்தம்’ என்றும் பொருந்தாத இடங்களிலெல்லாம் பதப்பிரயோகம் செய்துகொண்டிருந்தார். இது வினாயகஞ் செட்டியாருக்கு தர்ம சங்கடமாயிருந்தது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவர் சொன்னார், ‘இதோ பாரும். இரண்டு மகள்களுக்குக் கலியாணஞ் செய்து புகுந்தகத்துக்கு அனுப்பினது போகவும் இன்னமும் அவர்களுக்குச் செய்யப் போகிற சீர் செலவுகள் போகவும் ஆறேழு லட்ச ரூபாய் என்வசம் சொத்து உண்டு. எல்லாமே மகேசுக்குத்தான். வண்ணாரப் பேட்டையில் இருக்கிற வீட்டின் மதிப்பு தனி. அதுபோக ஆறாவயலில் நாற்பது ஏக்கரா நிலம், தேவக்கோட்டையில் ஒரு கலியாண சத்திரம். பர்மா ஷேல் ஏஜென்சி இனிமேல் இல்லாது போனாலும் வட்டித்தொழில் இருக்கவே இருக்கிறது.’

லெட்சுமணச் செட்டியாரின் கண் கலங்கிவிட்டது. சடேரென்று எழுந்து வந்து வினாயகஞ் செட்டியாரின் கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘ஐயோ நான் மனுஷாளை மட்டுமே பார்ப்பேன். சொத்தா பெரிசு?’ என்று கேட்டார்.

‘அப்புறமெதற்கு யோசிக்கிறீர்? ஆகவேண்டியதைப் பார்க்கலாமே?’ என்றார் வினாயகஞ் செட்டியார்.

மடையறைக் கதவோரம் ஆச்சி மறைந்து நின்று சம்பாஷணையைக் கவனித்துக்கொண்டிருந்ததை வினாயகஞ் செட்டியார் அறிந்திருந்தார். சட்டென்று என்னவோ தோன்றியது. ஒருவேளை மாப்பிள்ளைப் பையன் வேறு யாராவது பெண்ணிடம் மையலாகிவிட்டானோ?

இல்லவேயில்லை என்று லெட்சுமணச் செட்டியார் சொன்னார். ‘உம்மிடம் சொல்லுவதற்கென்ன? பயலுக்கு பிரான்சுக்குப் போகவேணுமென்று ஒரு ஆவலாதி. அங்கே கூப்பிட்டு உயர் பதவியில் உட்காரவைக்க குவர்னர் வரைக்கும் சகாயம் உண்டு. ஆனால்…’

இப்போதும் அவர் இழுத்தது வினாயகஞ் செட்டியாருக்கு மேலும் கவலையளித்தது. என்னமோ இருக்கிறது. பல்லுக்கடியில் சிக்கிய பாக்கு போல மெல்லவும் வராமல் விழுங்கவும் வராமல் துப்பவும் வராமல் இம்சிக்கிற சங்கதி. இதை இப்படியே எத்தனை நேரம் இழுத்துக்கொண்டிருக்கப் போகிறார் இவர்? எனவே துணிந்து கேட்டே விட்டார். ‘என்னதான் சொல்ல வருகிறீர்? என் மகளும் பிரான்சுக்குப் போகவேண்டியதிருக்கும் என்றா? அது ஒரு பிரச்னையே இல்லை செட்டியார்வாள். இரண்டு பேரையும் தனிக்கப்பலில் தேனிலவாகவே அனுப்பிவைப்பேன்.’

லெட்சுமணச் செட்டியார் ஒரு கண நேரம் அவரை விவரிக்க முடியாத உணர்ச்சியொன்றை வெளிப்படுத்தும் பார்வை பார்த்தார். அமைதியாக எழுந்து சென்று அலமாரியொன்றைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து டீப்பாயின்மீது வைத்தார்.

‘என்னதிது?’ என்று வினாயகஞ் செட்டியார் கேட்டார்.

‘நீரே பாரும்.’

அட்டை போட்டு வைக்கப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தை வினாயகஞ் செட்டியார் பிரித்ததும் முதல் பக்கத்தில் “இழான் பத்தீட்டு திரிங்கால் அவர்களால் மொழியாக்கஞ் செய்யப்பட்ட திருவிவிலியப் புதிய ஏற்பாடு” என்ற எழுத்துகள் கண்ணில் பட்டன. வினாயகஞ் செட்டியார், லெட்சுமணச் செட்டியாரை நிமிர்ந்து பார்த்தார்.

‘அவன் இப்போதெல்லாம் இதைத்தான் வாசிக்கிறான். தேவாலயப் பிரார்த்தனைகளுக்குப் போகிறான். விரைவில் ஞானஸ்நானம் செய்துகொண்டு கிறித்தவனாகிவிடப் போகிறேன் என்று சொல்லுகிறான்.’

‘ஐயோ’ என்று அலறிவிட்டார் வினாயகஞ் செட்டியார். அதற்குமேல் அங்கே என்ன பேசுவதென்று அவருக்குப் புரியவில்லை. லெட்சுமணச் செட்டியாரின் குடும்பத்துக்குத் தன்னோடு சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பிடித்திருந்தும் ஏன் அதைச் சொல்லாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார் என்பதற்கான காரணம் விளங்கிவிட்டது. என்ன இருந்தாலும் பெற்றவர்களுக்கு இது பேரிடித் தாக்குதல்தான் அல்லவா?

‘உமது பட்டணத்தில் எம்டன் கப்பல் வீசிய குண்டுகளைப் பற்றிச் சொன்னீரே, இது அதைக் காட்டிலும் பெரிய குண்டல்லவா? என் உறவு சனங்கள் யாருக்கும் இதுவரை இந்த விவகாரம் தெரியாது. தெரியுமானால் என் மானமே போய்விடும் ஐயா! நான் பெற்ற மகன் இப்படியொரு பாதையில் போகத் தீர்மானஞ் செய்திருக்கும்போது நான் அவன் கலியாணத்தைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?’ என்று லெட்சுமணச் செட்டியார் கேட்டார்.

‘பேசிப் புரியவைக்க முடியாதா?’ என்று வினாயகஞ் செட்டியார் கேட்டார்.

‘என்னத்தைப் பேச? பாரிசுக்கு அதிகாரியாகப் போவதென்றால் கிறித்தவனாக மாறினால்தான் முடியுமாம். அப்படியொரு உத்தியோகமே வேண்டாமடா என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டேன். இப்படித்தான் என் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவீர்களென்றால் எனக்கு உமது உறவே வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்!’

அன்று மாலையே வினாயகஞ்செட்டியார் தாம் தங்கியிருந்த விடுதி அறையைக் காலி செய்து கொடுத்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டுவிட்டார். மகேசுவிடம் இந்த விவகாரத்தைத் தெரியப்படுத்தாமலே இருந்துவிட முடிவு செய்திருந்தார். பற்பல ஜாதகங்கள் பார்த்து எதுவும் தோதுப்பட்டு வராதிருந்த நிலையில் இந்த மாப்பிள்ளைப் பையன் வந்து பார்த்து, பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனதில் இருந்து அவளது நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததைச் செட்டியார் கவனித்திருந்தார். தனியே இருக்கும் பொழுதுகளில் அவள் யாருக்கும் கேட்காத குரலில் அவ்வப்போது எதையாவது பாடிக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் அவை காதல் ரசம் சொட்டும் பாடல்களாக இருந்தன. தவிர கண்ணுக்கு மை தீட்டி அழகு பார்ப்பதும் அடிக்கடி கால் கொலுசின் திருகாணியைத் திருகியபடி கனவுலகில் சஞ்சாரம் செய்வதுமாக அவளது பொழுதுகள் போய்க்கொண்டிருந்தன. மேற்படி வரன் வந்து பார்த்துச் சென்றதையாவது உறவு சனங்களிடம் தாம் சொல்லாதிருந்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. இந்த இடம் அநேகமாகக் குதிர்ந்துவிடும் என்று சொல்லி வைத்ததுதான் எத்தனை பெரும் பிழையாகப் போயிற்று! ஏதாவது இறையற்புதம் நிகழ்ந்து ஓரிரு தினங்களுக்குள் வேறொரு வரன் வந்து அமைந்துவிட்டால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டார். எல்லாம் நினைப்பதுதான். நடக்க வேண்டுமே.

மறுநாள் அவர் வீடு வந்து சேர்ந்து ஸ்நானபானங்கள் ஆன பிற்பாடு ஆச்சி என்ன ஆயிற்று என்று வினவினாள்.

‘ம்? எம்டனெல்லாம் திரும்பி வராது. இங்கே தேவையில்லாமல் பீதி கிளப்பிக்கொண்டிருக்கிறான்கள். அவன் பாண்டிச்சேரிப் பக்கம் போய்விட்டானாம். நல்லவேளை, சேதி தெரிந்து நான் பாதி வழியில் திரும்பிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியே புறப்பட்டுப் போனார்.

*****

Posted on Leave a comment

பெண் முகம் [சிறுகதை] – சித்ரூபன்


மலத்தை மிதித்துவிட்ட அருவருப்போடு அவனைப் பார்த்தேன். சிறிது நேரமாகவே பின்னாலிருந்து என்னை ரசித்தபடி மெதுவாக ஒருவன் வந்துகொண்டிருப்பதை முதுகுப்பக்கம் உணரமுடிந்தது. தினமும் இதே நேரத்தில் இதே சாலையில் பின்தொடர்பவன். இன்று மெல்லிய குரலில் அவன் விரசமாக ஏதோ வர்ணித்ததும் கேட்டது. என்னைக் கடந்து வந்து பிரயாசையுடன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான். என் முகத்தை மனதிற்குள் பதியவைத்துக்கொண்டிருப்பான். பிற்பாடு மனைவியுடனோ பிற மகளிருடனோ கூடும்போது என்னை நினைத்துக் கொள்ளுவான். இம்மாதிரி வக்ரமான ஆண்களின் அன்றாட பிரதிநிதியாகத்தான் அவன் தெரிந்தான்.

‘உன்னைக் கருத் தரித்தவளும், கணவனாக வரித்தவளும் என்னைப் போல ஒரு பெண்தான்… அவர்களை மற்ற ஆடவர்கள் காமக்கண் கொண்டு பார்ப்பதை அனுமதிப்பாயா… தரந்தாழ்த்திப் பேசுவதை சகிக்க முடியுமா… பிறன்மனை நோக்காப் பேராண்மை ஏன் உனக்கு இல்லாமற் போயிற்று… உமக்கு நாங்கள் எப்போதுமே ஒரு போதைப் பொருள்தானா.. நாங்களும் மனிதப் பிறவிதானே… எமக்கும் வலி வேதனை எதிர்பார்ப்பு ஏமாற்றம் எல்லாம் உண்டென்பதை அறிய மாட்டாயா ஆண்மகனே…’ கனத்த மனத்தோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் நடந்து வந்து அலுவலகத்தை அடைந்தேன்.

 கணினியை உயிர்ப்பித்து பயோ மெட்ரிக் முறையில் கை விரலை அழுத்தி வருகையை பதிவு செய்து, கண்களை மூடி நீண்ட பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மல்லிகைப்பூ வாசனையுடன் மென்மையாய் என்னைத் தொட்டது ஒரு கரம். என் சிநேகிதி அனுபமா.

 “வணக்கம். என்னப்பா.. காலையிலேயே ஒரு மாதிரி இருக்கே.. ஒடம்பு சரியில்லயா..” என்றாள்.

 “அதெல்லாம் ஒண்ணுமில்ல அனு.. மனசுதான் கிடந்து துடிக்குது…” என்று வரும்வழியில் நடந்ததைச் சொன்னேன்.

 “இது என்ன புதுசாப்பா.. தினமும் எல்லா எடத்துலயும் நடக்கறதுதானே..”

 “அப்டியென்ன ஒரு பார்வை? ரோட்ல போற வர எல்லா பொம்பளைங்களையும் அசிங்கமா கமென்ட்ஸ் வேறே.. செ..“

 “சரி விடுப்பா… எல்லா ஆம்பளைங்களும் அப்டியில்ல…”

 “நிறைய பேர் இந்தமாதிரிதான் அனு.. ஏன்தான் இப்டி அலையறானுங்களோ..”

 “ஓக்கே.. உணர்ச்சி வசப்படாதே..” என்றவாறே என் தோள்பட்டையில் தெரிந்த நாயுடு ஹாலை ரவிக்கைக்குள்ளே தள்ளிவிட்டாள்.

 அப்பொழுது கையில் ஹெல்மெட்டுடன் நுழைந்த லாவண்யா. “ஹாய் ஹாய்.. குமார்னிங்..” என்றாள்.

 “பறக்கும் பாவை வந்தாச்சுப்பா..” என்றாள் அனுபமா. “நீ அவகூட வண்டியில போயிருக்கியா.. அறுவதுக்கு குறைஞ்சு ஓட்டத்தெரியாது அவளுக்கு..”

 “எதுலயும் ஒரு த்ரில் வேணும் அன்ஸ்..” என்றவாறே அருகில் வந்தாள்.

 “லாவண்யா.. ‘அனார்கலி‘ சுடிதார் நல்லாயிருக்குடா…” என்றேன்.

 “ந்யூ இயருக்கு ப்ரணவ் வாங்கி குடுத்தான் மேம்ஸ்..”

 “கலர் காம்பினேஷன் வித்யாசமா இருக்குடி..” என்றாள் அனுபமா.

 “காஸ்ட்லியா இருக்கும்னு நெனைக்கறேன்.. எவ்ளோடா…”

 “தெரியல மேம்ஸ்.. அவன் எனக்குன்னா வெலையே பாக்க மாட்டான்..” என்றாள் கணவனை. “என்ன அன்ஸ்.. நெக்லெஸ் புதுசா இருக்கு…”

 “ஆமான்டி.. ஒரு நகைச்சீட்டு முடிஞ்சுது.. அந்த பணத்துல இதுவும் அவருக்கு மோதிரமும் வாங்கினேன்..”

 “எவ்ளோ சவரன் அனு..”

 “மூணு பவுன்ப்பா… இந்த மாங்கா மாலை வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை எனக்கு..”

 “குடை ஜிமிக்கியும் சூப்பரா இருக்கே அன்ஸ்…”

 “அது பழசுதான்டி..” என்றவள் என் புடவையைப் பார்த்து “பெங்கால் காட்டனாப்பா.. எலிகண்டா இருக்கு..” என்றாள்.

 “இல்ல அனு.. மால்குடி..”

 “நான் எப்பவும் ஸிந்தட்டிக் ஸாரிதான் வாங்குவேன்ப்பா.. ஸ்டார்ச் போட வேண்டாம்..”

 “மேம்ஸ்.. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு.. அவ்ளோ யூத்ஃபுல்லா இருக்கீங்க..”

 “ரெண்டு பொண்ணுக்கு அம்மான்னா யாராவது நம்புவாங்களாப்பா…”

 “ஆரம்பிச்சிட்டீங்களா.. இன்னிக்கி கோட்டாவா இது..” என்றேன். 

 அட்டென்டர் எஸ்தர் என்னிடம் வந்து “மேடம்.. மேனேஜர் உங்களை டிக்டேஸனுக்கு கூப்பிடறாரு…” என்றாள்.

 “மேம்ஸ்.. அப்டியே உள்ளே சொல்லிடுங்க… வத்ஸ், கல்ஸ் ரெண்டு பேரும் கொஞ்சம் லேட்டா வருவாங்களாம்..” என்றாள் லாவண்யா. அவள் குறிப்பிட்டது வத்ஸலா மற்றும் கலைச்செல்வியை. நான் எழுந்து பின்புறம் புடவைச் சுருக்கத்தை சரிசெய்தவாறே ஷார்ட்ஹேண்ட் நோட் பேனா சகிதம் அவரது கேபினுக்குள் நுழைந்தேன்.

 வழக்கம் போல, ஸர் ஐஸக் பிட்மன் நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை என்னால். இருநுாறு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பிறந்து மறைந்த அவரது படத்தைக்கூட நான் பார்த்ததில்லை. இருப்பினும், நோட்ஸ் எடுக்கச் செல்லும் போதெல்லாம் சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்த அவர் ஞாபகம் ஏனோ எனக்குள் படர்ந்து விரியும்.

 பத்தாவது வகுப்பின் போது அப்பா என்னை ‘கலைமகள் வணிகவியல் கல்லுாரியில்’ சேர்த்து விட்டார். அதன் உரிமையாளர் சலபதி ஸார்தான் ஷார்ட்ஹேண்ட் மாஸ்டர். பென்சிலால் ஒரு வட்டம் வரையச் சொல்லி அதன் மீது செங்குத்தாக, கிடந்த வாக்கில், குறுக்காக இருபுறமும் என்று பல கோடுகள் போட்டு பின்னர் அவற்றை தனித்தனி வரிகளாகவும் வளைவுகளாகம் பிரித்து, சாதாரணமாக எழுதினால் ஓர் அர்த்தம், அழுத்தி எழுதினால் இன்னொரு பொருள் என்று விளக்கி dipthong, grammalogue போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். ஸ்டெனோகிராஃபர் எப்போதும் பென்சிலை மட்டுமின்றி ஆங்கில அறிவையும் கூர்மையாக வைத்திருக்க வேண்டுமென்றார்.

 தட்டச்சு பயிற்றுவித்த மார்க்கபந்து ஸாருக்கு ஐம்பது வயதிற்கும். அரதப்பழசான ரெமிங்டன் மெஷினில் டைப் செய்ய கற்றுக் கொடுத்தார். பல வாரங்களுக்குப் பிறகு, சொற்றொடர்கள் அடிக்க கோத்ரெஜ் டைப்ரைட்டருக்கு மாறினேன். pack my box with five dozen liquor jugs என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப டைப்படிக்கச் சொன்னதன் மர்மம் பின்னர்தான் தெரிந்தது. தேர்வில் ‘நிமிடத்திற்கு முப்பது வார்த்தைகள்’ என்ற ஆரம்ப இலக்கிலிருந்து படிப்படியாக உச்ச வேகத்தை எட்டினேன்.

 அவ்விரு ஆசான்களின் மோசமான மறுபக்கம் அவ்வப்போது வெளிப்பட்டதும் அவர்கள் மீதான மரியாதை நீர்க்கத் தொடங்கியது. டைப்பிங் ஸார் என் கைகளை தேவைக்கதிகமாகத் தொட்டுச் சொல்லிக் கொடுத்ததை நான் விரும்பவில்லை. ஒரு மழை நாளில் ஸ்டூலில் அமர்ந்து தனிமையில் டைப்படித்துக் கொண்டிருக்கையில் மார்க்கபந்து என் பின்னால் உரசியபடி குனிந்து இருபொருள்பட ஏதோ சொல்ல என் மதிப்பேணியில் அன்றே சரிந்து போனார்… ஷார்ட்ஹேண்ட் மாஸ்டர் அடிக்கடி ‘உன்னோட curves ரொம்ப அழகா இருக்கு’ என்று சைகையோடு சொன்னது சுருக்கெழுத்தின் வளைவுகளைத்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அதன் உட்பொருள் பிறகே தெரிய வந்தது. சலபதி தினமும் என்னுடைய நோட்டில் ஷார்ட்ஹேண்டிலேயே ஒரு வாக்கியத்தை எழுதிக் கையொப்பமிடுவார். நாளடைவில் அது ‘நான் உன்னை அடைய விரும்புகிறேன்’ என்று தெரிந்ததும் அவர் பற்றிய ஆதர்ச பிம்பமும் கலைந்து போயிற்று… இத்தகைய கசப்புகளும் இன்னபிற சம்பவங்களும் பதின்ம வயதிலேயே என் ஆழ்மனதில் தேங்கி ஆண்களின் மீதான வெறுப்பு விதைகளாக உருவெடுத்தன….

 “இன்ன தேதியிட்ட உங்கள் சுற்றறிக்கையின் படி…” என்று என் சிந்தனையைக் கலைத்தார் மேலாளர். தலைமை அலுவலகத்திற்கான ஆங்கிலக் கடிதத்தை அவர் வேகமாக சொல்லிக்கொண்டே போக நான் சுருக்கெழுத்தில் பதிய வைத்துக்கொண்டேன்.

 உணவு இடைவேளையில் வத்ஸலா ஸ்பெஷலாக கொண்டு வந்திருந்த ஒரு பதார்த்தத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டாள்.

 அனுபமா, “என்னடீ இது.. சக்கரபொங்கலா… ஒரே நெய்யா இருக்கே..” என்றாள்.

 “இதுக்கு பேரு அக்காரஅடிசில்… இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோங்க அனு…”

 “போறும்டி… ஏற்கெனவே ஷுகர் பார்டர்ல இருக்கு…”

  அடுத்து உள்ளங்கையை நீட்டினாள் லாவண்யா. “என்ன மருதாணி எல்லாம் போட்டுண்டு துாள் கிளப்பற… நன்னா பத்தியிருக்கே..” என்றாள் வத்ஸலா.

  “மெஹந்தியை ரசிச்சது போதும்… சீக்கிரம் அந்த ஐட்டத்தைப் போடு…” என்றவள் மூன்று முறை வாங்கி ருசித்து விட்டு “ஸூபர்.. வத்ஸ், இதோட ரெஸிபியை எனக்கு மெயில்ல அனுப்பு.. நாளைக்கே ப்ரணவை ட்ரை பண்ண சொல்றேன்..” என்றாள்.

 “அப்ப கூட, இவ பண்றேன்னு சொல்றாளா பாருப்பா..”

 “அன்ஸ்… அவன் குக்கிங்லயும் எக்ஸ்பர்ட் தெரியுமோ..” என்று சிரித்துக் கண்ணடித்தாள்.

 “மேம் உங்களுக்கு..” என்றவளிடம், “என்ன விசேஷம் வத்ஸலா..” என்றபடி டிபன் பாக்ஸ் மூடியைக் காண்பித்தேன்.

 “இன்னிக்கி கூடாரவல்லி…”

 “மார்கழி இருபத்தேழா…”

 “கரெக்டா சொல்றீங்களே மேம்…” என்று அகலக் கண்களால் வியந்தவள் நகர்ந்து சென்று எஸ்தரிடம் பாத்திரத்தோடு ஸ்பூனை நீட்டினாள்.

 “உங்க சாமி பிரசாதம்னா.. எனக்கு வேணாங்க..”

 “வீட்லே பண்ணதுதான்..” என்று சொல்லியும் அவள் மறுத்துவிட்டாள்.

 அருகிலிருந்த கலைச்செல்வி, “இன்னிக்கி என்ன பண்டிகைன்னு சொன்னே வச்சலா… ‘குலேபகாவலி’யா..” என்று கிண்டலடித்தாள். எப்பொழுதும் இருவருக்கும் ஏழாம் பொருத்தம்.

“அவளை வாயை மூடிண்டு இருக்க சொல்லுங்க மேம்..”

 “வாயை மூடிட்டு எப்டி சாப்டறது..”

 “டாம் அன்ட் ஜெரி சண்டை ஆரம்பிச்சாச்சுப்பா..”

 “மாமிக்கு மீன் குழம்பு வேணுமா கேளுடி..” என்று வத்ஸலாவை மீண்டும் சீண்டினாள்.

 “கல்ஸ்.. எதுக்கு அவளை டீஸ் பண்றே…”

 “இல்லடி.. கல்கட்டாலே ப்ராமின்ஸ்கூட மீன் சாப்டுவாங்க… அதான் கேட்டேன்..”

  நான் பேச்சை மாற்றும் விதமாக “பொங்கலுக்கு ஊருக்கு போலியா கலை..” என்றேன்.

 “போறேன் ஜி.. இன்னிக்கி காலையிலதான் தத்கல்ல டிக்கெட் எடுத்தேன்…”

 “சனிக்கிழமை லீவு போட்டா அஞ்சு நாள் நீ குடும்பத்தோட இருக்கலாம்…”

 “நானும் அந்த ஐடியாலதான் இருக்கேன் ஜி..”

 அடிக்கடி வத்ஸலாவை வம்புக்கு இழுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாலும், கலைச்செல்வி மீது எனக்கு தனிப்பட்ட அனுதாபம் உண்டு. அவளது சொந்த வாழ்க்கையின் சோகப் பக்கங்களை என்னுடன் தனிமையில் பகிர்ந்து கொண்டவள். தினமும் தன்னை நிர்வாணமாக நமஸ்கரிக்கச் சொல்லி ரசித்த கணவனின் குரூர புத்தியையும், ஆடைகளின்றி தன்னைப் படமெடுத்து அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியே மேன்மேலும் வரதட்சணை கேட்டு வருவதையும், குடும்ப மானத்துக்குப் பயந்து காவல் துறையை நாடாமல் மெளனமாக சகித்துக் கொண்டிருப்பதையும் அவள் சொல்லக் கேட்டு மனம் கனத்திருக்கிறது எனக்கு. தென்கோடி தமிழகத்திலிருந்து பதவி உயர்வு மாற்றலில் சென்னைக்கு வந்து விடுதியில் தங்கி அவ்வப்போது விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்று வருபவள். மனஉளைச்சல்களால் உடைந்து போய் கோழைத்தனமான முடிவெதையும் நாடாமல் இறுதி வரை வாழ்க்கையைப் போராடிக் கழிப்பதென்று தீர்மானமாக வாழும் பெண்.

 ‘தாம்பரம் வரை செல்லும் அடுத்த மின்தொடர் வண்டி இரண்டாவது நடைமேடையில் இருந்து புறப்படும்’ என்று மொழிமாற்றம் செய்து ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரக் கடற்காற்று தலைமுடியைக் கலைத்தது. ஐந்தே கால் ‘யூனிட்டை’ பிடிக்க வேண்டி சற்று வேகமாக ரயில் நிலையப் படியேறும்போது எனக்கு மூச்சு வாங்கியது. சென்ற வருடம் கட்டி வளர்ந்ததால் கர்ப்பப்பையை எடுத்தாயிற்று. முன்னதாக இரண்டு பிரசவம், மூன்று கருத்தடைகள். ஹிஸ்ட்ரக்டமி ஆனதிலிருந்தே மூட்டுவலி பழகிப் போனாலும் இன்று ரொம்பவே அசதியாக இருந்தது.

 பெண்கள் பெட்டியில் வழக்கமான இடத்தில் உட்கார்ந்து இளைப்பாறினேன். கட்டுக்கட்டாக கரும்பும் மஞ்சள் கொத்தும் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, பூக்காரிகள் பெரிய மூக்குத்திகளுடன் சாமந்தியைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். ஜன்னலோர முதியவள் நெற்றி நிறைய திருநீறுடன் ‘கோளறு பதிகம்’ வாசித்துக் கொண்டிருக்க, ஒருத்தி கழுத்தில் அடையாள அட்டையுடன் மடிக்கணினியில் முகநுால் மேய்ந்து கொண்டிருந்தாள். அருகாமை பெண்ணின் கறுப்பு கோஷா உடைக்குள் மொபைலின் வெளிச்சம் மங்கலாய்த் தெரிந்தது. பின்னிருக்கையில் இரண்டு மடிசார் மாமிகளின் மெல்லிய உரையாடல் கேட்டது.

 “மாமனாருக்கு ஸ்பெஷலா தளிகை பண்ணனுமா.. என்ன சொல்றே?”

 “ஆமான்டி.. அரளி விதை அரைச்சு விட்டுக் கொழம்பு.. சயனைடு சாத்துமது.. பாதரச பச்சடி.. கள்ளிப்பால் கண்ணமது..”

 “என்ன விளையாடறயா?.. எல்லாம் வில்லங்கமான்னா இருக்கு..”

 “இது அத்தனையும் சாப்டாக்கூட அது மண்டையை போடாதுடி… எவ்ளோ வருஷம் என் உயிரை வாங்கிண்டு இருக்குமோ தெரியல கிழம்..”

 அப்பொழுது லெக்கின்சும் ஸ்லீவ்லெஸும் அணிந்து கையுயர்த்தி கம்பியைப் பிடித்தவண்ணம் வாசலருகில் நின்றிருந்த யுவதியை பிளாட்ஃபார இளைஞர்கள் ஆபாசமாய் பேசுவதறிந்து உள்ளே வந்தமரும்படி சைகை காட்டினேன். பெண் வழக்கறிஞர்கள் இருவர் கையில் கேஸ் கட்டுடன் ‘வெட்டிங்’ பற்றி அளவளாவி வந்தனர். நடுத்தர வயதினள் கோணல் வகிடும், அதீத கண்மையுமாய் மாத நாவலில் மூழ்கியிருக்க, கைதட்டி காசு கேட்கும் மூன்றாம் பாலினர் பயணிகளிடம் யாசித்துக் கொண்டிருந்தனர். கர்ப்பவதியான ஒரு சமணப் பெண் முக்காடுடன் வந்ததும் நகர்ந்து இடமளித்தேன். அவளது தலைமுடி பெண்ணினமே பொறாமைப்படும்படி நீளமாக அடர்த்தியாக இருந்தது. எதிரே வெள்ளையுடை கன்னியாஸ்திரி ‘கிண்டிலில்’ சேத்தன் பகத் படித்துக் கொண்டிருந்தாள்.

 நான் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி நாற்புறமும் பெண்களால் சூழப்பெற்ற பாதுகாப்பான தீவில் இருப்பதாய் உணர்ந்தேன். இந்த ரயில் பெட்டி போல இவ்வுலகமும் மகளிரால் மட்டுமே நிறைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்ற கற்பனையில் மகிழ்ந்தேன்…. பூ வாசனையும் வியர்வை நெடியும் விபூதியின் நறுமணமும் சென்ட் வாசமும் காற்றில் கலவையாக வந்தது போல மனதிற்குள் சிந்தனைகளும் கோர்வையற்று பின்னிப்பிணைந்தன… பெண்களுக்கு சமநீதி சமத்துவம் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே என்று தோன்றியது… புராண கால ஆதிசேடன் மேல் பரமன் படுத்திருக்க பார்யாள் அவர் காலை பிடித்து விடுவதில் தொடங்கிய பால் பேதம் இந்த ட்விட்டர் யுகம் வரை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.. இதிகாசத் தம்பதி இருவருமே பிரிந்திருந்த போதிலும் தீக்குளித்துத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் சீதைக்கு மட்டும் நேர்ந்ததேன்… ஆண் கடவுளர்கள் தன்னகத்தேயும் இருபுறமும் தேவியர்களை வைத்திருப்பது கண்களுக்குப் பழகிப்போயிற்று.. இருபது வரை ஒரு வீட்டிலும் பின்னர் இறப்பது வரை மறு வீட்டிலும் என்று இடம்பெயர வேண்டிய கட்டாயம் எங்கட்கு மட்டுமே.. கல்யாண அடையாளமாய்க் கயிற்றை சுமப்பதும் விதவையானதும் அதையே துறப்பதும் நாங்கள்தான்… மனைவியானவள் கணவனை விட ஓர் அங்குலமேனும் உயரங்குறைந்தவளாய் இருக்க வேண்டுமென்பது எந்தச் சட்டத்தின் எத்தனாவது விதி… பாலியல் தொழிலில் பெண்ணுக்கு மட்டுந்தான் அவப்பெயரும் சமூகக் கறையும்; அனுபவித்துச் செல்லும் ஆடவனுக்கு எதுவுமேயில்லை.. எந்தவொரு படிவத்திலும் ஆவணத்திலும் he/she என்று அவனுக்கே முதலிடம்.. அனைவருக்கும் பொதுவான ஆண்டவன் சந்நிதானத்தில்கூடப் பெண்பாலுக்கு அனுமதி மறுப்பு..

 வீட்டிற்குள் நுழைந்து டப்பர்வேர் டிபன் பெட்டிகளைத் தேய்க்கப் போடும்போது அலுமினியத் தொட்டி நிறைய சமையல் பாத்திரங்கள் என்னை வரவேற்றன. வேலைக்காரி வரவில்லை போலும். எனக்குக் களைப்பாக இருக்கும் நாட்களில்தான் அவளும் விடுப்பு எடுப்பதாகத் தோன்றியது. புடவையைக் களைந்து உள்ளாடைகளைத் தளர்த்தி விட்டுக்கொண்டு நைட்டிக்கு மாறினேன். துணிகளைப் போட்டு வாஷிங் மெஷினை ஆன் செய்கையில் அதுவும் இயங்கவில்லை. ‘துரதிர்ஷ்டம் எப்போதும் தனியாக வராது’ என்ற ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வந்தது. அத்யாவசியமான உடைகளை கையால் துவைக்க எடுத்தபோது என் இளைய மகளின் பள்ளிச்சீருடையில் உதிரத்திட்டுக்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாய் இருந்தது. நாப்கினை சரியாக வைத்துக்கொள்ள இன்னும் பழகவில்லை. சமீபத்தில் பருவமடைந்த அவளுக்கு இது மூன்றாவது விலக்கு. ‘சைக்கிள்’ சரிதானா என்று மனசு கணக்கு போட்டது. இந்த அவஸ்தையோடு ஏன் நடனப்பயிற்சிக்கு சென்றாள் என்று யோசித்தபடியே துணிகளைப் பிழியும்போது மணிக்கட்டு வலித்தது. பொறுத்துக்கொண்டு அவற்றைக் காயப்போட்டு இரவுணவுக்காக உருளைக்கிழங்கை வேகவைத்து விட்டு கோதுமை மாவை பிசையும்போது செல்போன் ஒலித்தது. கார் ஓட்டச் சென்றுள்ள மூத்தவள் அழைத்தாள்.

 “சொல்லுடா..”

 “மம்மி.. நாளையிலிருந்து ட்ரைவிங் க்ளாஸ் போமாட்டேன்..”

 “ஏன்டா.. நீதானே ஆசைப்பட்டு சேர்ந்தே… என்னாச்சு…”

 “ட்ரைவிங் மாஸ்டர் சுத்த மோசம் மம்மி… நான் கார் ஓட்டிட்டு இருக்கும்போது என் எடது தொடையிலேயே கையை வெச்சிட்டிருக்காரு…”

 “ஒரு பொண்ணுதானே சொல்லிக் குடுக்கறான்னு சொன்னே.. ‘லேடீஸ் டீச் லேடீஸ்’ ட்ரைவிங் ஸ்கூல்தானே..”

 “அந்த மேம் மூணு நாள் வரமாட்டாங்களாம்.. இன்னொரு ஸார் வந்தாரு இன்னிக்கி… என் தொடையை தடவிட்டே இருக்காரு மம்மி.. எனக்கு பிடிக்கவேயில்லை..”

 “அவன் கைமேலேயே ரெண்டு அடி போட வேண்டியதானே…”

 “ஸ்டியரிங்லேந்து கையை எடுக்க பயமா இருக்கு மம்மி..”

 “நிறைய ஆம்பிளைங்க இப்டிதான். வெறி பிடிச்ச நாய்ங்க.. நீயும் நாலு நாள் கழிச்சு க்ளாஸுக்கு போடா…”

 அனுதினமும் ஆண்மைத் தாக்குதல்களை எதிர்கொள்வதிலேயே எமது வாழ்க்கையின் பெரும்பகுதி கரைந்து போகிறது என்று ‘ஃபெமினா’ வில் படித்த கட்டுரை நினைவுக்கு வந்தது. பலாத்கார வன்கொடுமைகள் பற்றி உளவியல் ரீதியாக விளக்கியிருந்தாலும் அவற்றிற்குத் தீர்வு சொல்லாமல் அவசரகதியில் முடித்திருந்தாள் அதன் ஆசிரியை. எனக்கென்னமோ அத்தகைய வக்ரபுத்தி ஆண்களை bobbitize செய்துவிட வேண்டுமென்று தோன்றும். அதன் பின்னரும் அவன் கண்களாலும் மற்ற அவயங்களாலும் மனத்தாலும் பெண்மையைக் களங்கப்படுத்தக் கூடும். எனவே குற்றம் நிரூபணமானவுடன் உயிரைப் பறிப்பதே குறைந்தபட்சத் தண்டனையாக இருக்கும்.. அரசர்களை அடியோடு கொன்று குவிப்பது பரசுராமனின் அவதார நோக்கமாக இருந்தது போல், ஆண் வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதே என் பிறவிப்பயன் என்று ஆழ்மனதில் விபரீத எண்ணம் அடிக்கடி தோன்றி மின்னலாய் மறையும். அது சற்றே மிகையெனப்படுமாதலால் வாழ்நாளில் ஒரு மனிதமிருகத்தையாவது பலியிட வேண்டுமென்ற தீர்மானத்துக்கு வருவேன்… மீண்டும் அந்த சஞ்சிகையை எடுத்து வாசித்தபடியே கண்ணயர்ந்தேன்…

  இரவு வெகு நேரங்கழித்து இரு மகள்களும் தத்தமது அறையில் உறங்கிய பிறகு தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்தார் என் கணவர்.

 “ஹேப்பி ந்யூஸ் டியர்.. எனக்கு ‘ஜிஎம்’ ப்ரமோஷன் கன்ஃபர்மாயிடுச்சு…” என்றார் அதிஉற்சாகமாக, கழுத்து டையை தளர்த்தியவாறே.

 “கங்க்ராட்ஸ்” என்று ஆத்மார்த்தமாக் கை குலுக்கினேன்.

 “லேட்டாதான் ஃபேக்ஸ் வந்தது… கடைசி வரைக்கும் டென்ஷன்.. ஷார்ட் லிஸ்ட் பண்ணதுல எம்பேரும் அந்த கேரளாகாரிபேரும் பாக்கி இருந்தது.. ஸிஈஓ அவளைதான் எலிவேட் பண்ணுவான்னு நெனைச்சேன்.. நல்ல வேளை.. அழகுக்கு கிடைக்கலை.. அறிவுக்குதான் கிடைச்சுது ப்ரமோஷன்.”

  “அப்டி சொல்லாதீங்க.. அவளுக்கும் திறமை இருக்கறதாலதான் இந்த லெவலுக்கு வந்திருக்கா…”

  “ஆஹா.. எக்ஸிக்யூடிவ்ஸை மயக்கற திறமை நிறையவே இருக்கு…” என்றார் நக்கலாக. பெண்களுக்குத் தரப்படும் பதவி உயர்வுகள் தகுதிக்காக இல்லை என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு இவரும் விலக்கல்ல.

  “ஒரு பொண்ணு உங்களைத் தாண்டி மேலே போறதை ஏத்துக்க முடியலே.. அதான் இப்டி கொச்சைப்படுத்தறீங்க..”

  “யம்மா.. தாயே.. உங்க எல்லாருக்கும் உடம்பு பூரா மூளைதான்… ஒத்துக்கறேன்..”

  “எங்களுக்கும் தகுதி இருக்கறதாலதான் எல்லா எடத்துலயும் பிரகாசிக்கிறோம்.. உங்களால முடியாத சிகரங்களை நாங்க தொட்டிருக்கோம்..” என்றேன் பெருமிதத்துடன்.

  “ஆமா.. ஆமா.. நாங்க மேலிடத்துக்கு ஜால்ரா அடிச்சுதான் எல்லா ப்ரமோஷனும் வாங்கறோம்.. போறுமா..” என்று போலியாகக் கும்பிட்டார்.

  “ஆபீஸ்லயே ஒரு லேடிக்கு கீழே வேலை பண்ண முடியலே உங்களாலே… அப்பறம் எப்படி நாட்டுலே ஒரு பொண்ணு தலைமை பீடத்துக்கு வர்றதை ஏத்துக்க முடியும்..”

  “இப்போ பாலிடிக்ஸ் ரொம்ப அவசியமா…” என்றவாறே லுங்கிக்கு மாறினார் “இந்த ந்யூஸ் வந்ததிலிருந்தே ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்..”

  “சரி.. சாப்பிட வாங்க.. சுக்கா ரோட்டியும் ஸப்ஜியும் ரெடியாயிருக்கு..”

  “இல்லப்பா.. ஆபீஸ்ல ஹெவியா ட்ரீட்.. பர்கர் கோக் பீட்ஸா எல்லாம் நிறைய தின்னாச்சு.. வயத்து பசியில்ல..” என்று கண்ணடித்தவாறே என்னை நெருங்கினார்.

  அவருடைய நோக்கத்தைப் புரிந்துகொண்டவளாய், “ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னிக்கி வேண்டாமே…” என்றேன்.

  “செலிப்ரேஷன் மூட்ல இருக்கேன் டியர்…”

  “நிறைய வேலை செஞ்சு உடம்பெல்லாம் வலிக்…” என்ற என்னைப் பேச விடாமல் “ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்றவாறே இறுக்கி அணைத்தார். என் விருப்பமின்மையையும் மீறி படுக்கையில் வீழ்த்தி என் மேல் படையெடுத்தார். அவருடைய மகிழ்ச்சியான தருணத்தை மறுக்க முடியாமல் வலிகளினுாடே அவரையும் தாங்கிக் கொண்டேன்.

  பிப்ரவரி பதினான்காம் நாள் எஸ்தர் அலுவலகத்தில் இனிப்பும் காரமும் விநியோகித்து “புதுசா வந்திருக்கிற மேனேஜர் ஜாயினிங் பார்ட்டி குடுக்கறார் மேடம்..” என்றாள்.

 அனுபமா மெல்லிய குரலில் “இந்தாளு விடோயராம்ப்பா… சரியான வழிசல் பேர்வழியாம்..” என்றாள்.

  லாவண்யா “நமக்கு வசதிதான் அன்ஸ்… இந்த மாதிரி ஜொள்ஸ்ங்ககிட்ட நிறைய காரியம் சாதிச்சுக்கலாம்..” என்றாள்.

 “ஏன்டி உனக்கு இப்டியெல்லாம் புத்தி போவுது?”

 “இவர் மேல ஒரு கேஸ் இப்பதான் நடந்து முடிஞ்சுது…” என்றேன். “கல்யாண வயசுல பொண்ணு இருக்காம் இவருக்கு..” 

 “புது மேனேஜர் ரொம்ப நல்லவரா இருக்கார் மேம்…” வத்ஸலா கேபினிலிருந்து வெளியே வந்ததும் சொன்னாள்.

 “எப்டி சொல்றே வத்ஸ்.. ”

 “ஒரு ஸ்டேட்மென்ட்ல நிறைய தப்பாயிடுத்து… திட்டுவாரோன்னு பயந்துண்டே போனேன்… ஒண்ணுமே சொல்லலடி… ‘கரெக்ஷன் ஃப்ளூயிட்‘ குடுத்து மாத்த சொன்னார்… அவர் எதிரேயே நின்னுண்டு எல்லாத்தையும் சரி பண்ணி குடுத்தேன்… ‘இந்த மாதிரி ஃபிகர்ஸ் கரெக்ட் பண்ற வேலை எனக்கும் பிடிக்கும்‘னார்… ‘ஸாரி ஸார், அவசரத்துலே இப்பிடி ஆயிடுத்துன்னேன்… ‘பரவாயில்ல இதை நீயே வெச்சுக்க… என்கிட்ட ‘வொய்ட்னர்‘ நிறைய ஸ்டாக் இருக்கு’ன்னார்…”

 அனுபமா “அப்பாவியா இருக்கியே… இவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு..” என்றாள்.

  “அவர் சொன்னதோட இன்னொரு மீனிங் ஒனக்கு புரியல வத்ஸலா..” என்றேன்.

  லாவண்யா யோசித்து “வாவ்… ப்ளேபாய் டைப்பா இந்தாளு… ஸுபர்…” என்றதற்கு “என்ன ஸூபர்… அவர் பேசினதை கேட்டுட்டு இவளும் சும்மா வந்திருக்கா.. நானா இருந்தா நடக்கறதே வேறே…” என்றேன்.

  எஸ்தர் “ஸ்வீட் காரம் வாங்க பணம் குடுக்கும் போது என் கையைத் தொட்டுத் தொட்டு குடுத்தார் மேடம்… பார்வையே சரியில்ல..” என்றாள்.

  வந்த அன்றே சுயரூபத்தைக் காட்டிய புது மேலாளரை விவாதித்துக்கொண்டிருக்கையில் கலைச்செல்வியும் சேர்ந்து கொண்டு பேச்சைத் திசைமாற்றினாள்.

 “இந்த ‘விமன்ஸ் டே’க்கு எல்லாரும் ஒரே கலர்ல புடவை கட்டலாமா அனுா..”

 “நல்ல ஐடியா.. போன வருஷமே நெனைச்சேன்…” என்று நான் வழிமொழிய மற்றவர்களும் ஆமோதித்தனர்.

 “ஸாரிக்கு பதிலா எல்லாரும் சல்வார் போட்டு வந்தா என்ன கல்ஸ்?”

 “வருஷத்துல ஒருநாள் இந்த சாக்குலயாவது புடவை கட்டேன்டி..”

 “எல்லார் கிட்டயும் பொதுவா இருக்கற கலர்ல வரலாம்.. நீலம் ஓக்கேயா..?” என்றேன் என்னிடமுள்ள எம்மெஸ் ப்ளூவை மனதிற்கொண்டு.

 ஒவ்வொருவரும் காப்பர் ஸல்ஃபேட், ஆகாச நிறம், ராமர் கலர், கோபால்ட், மயில் கழுத்து என்று நீலத்தின் வெவ்வேறு சாயல்களில் தத்தமது சேலைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தனர்.

 “இதெல்லாம் சரிப்படாதுப்பா.. புதுசா ஒரே மாதிரி எல்லாரும் வாங்கிப்போம்..” என்றேன்.

 “கரெக்ட் ஜி.. அதான் பார்வைக்கும் நல்லா இருக்கும்..” என்றாள் கலைச்செல்வி.

 “எல்லார் கிட்டயும் பணம் வசூல் பண்றது வத்ஸலா உன் பொறுப்பு… நானும் லாவண்யாவும் வண்டியில போய் ஸாரீஸ் வாங்கிட்டு வரோம்.. எஸ்தர், அன்னிக்கி ஸ்வீட்-ஸ்நாக்ஸ் வாங்கிவர வேண்டியது உங்க வேலை..” என்றாள் அனுபமா.

  நான் “என் டெய்லர் ஃபிட்டிங்ஸ் எல்லாம் கரெக்டா தைப்பான்.. அதை விட முக்யமா, சொன்ன தேதியில குடுப்பான்.. அளவு ரவிக்கையை குடுங்க, எல்லாருக்கும் ப்ளவுஸ் தெச்சிட்டு வரேன்..” என்றேன்.

  கலைச்செல்வி, “எனக்கு எந்த வேலையும் இல்லயா ஜி” என்றதற்கு “நீ வத்ஸலாவை சீண்டாம இருந்தா.. அதுவே போதும்…” என்றேன்.

 மூன்று வாரங்கள் கழித்து ஒரு நாள் அனுபமா மேனேஜர் கேபினிலிருந்து நேரே என்னிடம் வந்து ”என்னப்பா இது அக்கிரமமா இருக்கு.. இந்தாளு ஆபீஸ் கம்ப்யூட்டர்ல..” குரலைத் தாழ்த்தி “போர்னோ பார்த்துட்டு இருக்கார்ப்பா.. செ.. அசிங்கம்..” என்றாள் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டே.

  அதைக் கேட்ட எனக்கும் அதிர்ச்சியாயிருந்தது. “நீ எதுக்கு உள்ளே போனே அனு?”

  “ஒரு செக்ல கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது… “

  “அப்டியே மொபைல்ல அவனையும் மானிட்டரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்திருக்க வேண்டியதானே… ராஸ்கல்..”

  “என் கையில செல் இல்ல… இருந்தாலும் எனக்கு அதெல்லாம் தோணாதுப்பா..”

  “நாம ஹெட் ஆபீஸ்க்கு கம்ப்ளெய்ன்ட் பண்றதுக்கு வசதியா இருக்கும்.. இவனுக்கும் ஒரு பயம் இருக்கும்..”

  “நான் உள்ளே போனதுக்கப்பறமும் அதை அணைக்காம என்னை பார்த்து ஒரு மாதிரி சிரிச்சுட்டே ஸைன் பண்றார்ப்பா..”

  “இந்தாளோட லீலைகள் நாளுக்கு நாள் அதிகமாயிட்டேயிருக்கு.. லாவண்யாகிட்ட அன்னிக்கி ‘டேட்டிங்’ போலாமான்னு கேட்டுட்டு ‘சும்மா வெளையாட்டுக்கு’ன்னு சொல்லி வழிஞ்சான்… முந்தாநாள் கலைகிட்ட ஏதோ வில்லங்கமா பேசி வாங்கி கட்டிட்டான்..”

  “செக்ஷுவல் ஹராஸ்மென்ட் ஆக்ட்ன்னு ஒண்ணு இருக்கே… அதும்படி நாம கம்ப்ளெய்ன்ட் குடுக்கலாமாப்பா..”

  “அதுக்கு இன்டர்நல் கமிட்டி, லோக்கல் கமிட்டின்னெல்லாம் இருக்கு அனு.. விசாரிச்சு தீர்ப்பு குடுக்கறதுக்கு மாசக்கணக்காகும்… ஏதாவது ஓட்டையில சுலபமா தப்பிச்சுடுவான்… இவனை கையும் களவுமா சாட்சியோட பிடிக்கணும்…” என் உள்மனது ‘எதாவது பண்ணு.. உடனே செயல்படு..’ என்று விரட்டியது. கைகள் பரபரத்தன. அன்று பிற்பகலே உள்ளே செல்வதற்கு வாய்ப்பாக எஸ்தர் வந்து மேனேஜர் அழைப்பதாக சொன்னவுடன் ஆக்ரோஷம் குறையாமல் சென்றேன்.

  அறையினுள் நிக்கோடின் நெடி பரவியிருக்க ஆஷ்ட்ரேயில் தீப்புள்ளி தெரிந்தது. ஏதோவொரு கடிதத்தை டிக்டேட் செய்துவிட்டு என்னைப் பெயர் சொல்லி அழைத்து, “இந்த பென் ட்ரைவ்ல இருக்கறதை ப்ரின்ட் எடுங்க… லெட்டரோட அனுப்பணும்…” என்று தொடுவது போல என்னிடம் நீட்டினான். நான் கவனமாக வாங்கிக்கொண்டு அங்கிருந்த கம்ப்யூட்டர் ‘ஸிபியூ‘வின் முன்பக்கம் அதை இணைக்க நான் குனிந்தபோது “அந்த போர்ட் சரியில்ல….” என்று சொல்லி, தானே பின்புறம் அதைப் பொருத்தி அச்செயலை இரட்டை அர்த்தத்தில் வர்ணித்தபோது அவனது விகார மனம் வெளிப்பட்டது. எனக்கு உடம்பெல்லாம் உஷ்ணமாய்த் தகித்தது. கணினி திரையில் கடவுச்சொல் கேட்க, “இதுக்கென்ன பாஸ்வேர்ட்” என்றேன். நமட்டுச்சிரிப்புடன் “கிஸ்மீ” என்றான். “என்ன சொல்றீங்க…” என்று வெகுண்டேன். “பாஸ்வேர்டே அதான்… ‘கிஸ்மீ‘ கே கேப்பிட்டல்..” என்றதும் என் ரத்தக்கொதிப்பு அதிகமாகி கைகள் நடுங்குவதை உணர முடிந்தது.

  இம்மனித மிருகத்தின் செயல்பாடுகள் எல்லை மீறிக்கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது. புகார் செய்து சட்டப்படி தண்டனை வரும்வரை காத்திருக்க எனக்கு பொறுமையில்லை. பல்லாண்டுகளாக என்னுள் படிந்திருந்த ஆண்வர்க்கத்தின் மீதான வெறுப்புக்கோபங்கள் அவனை பலி கொடுக்கச் சொல்லி உரத்தக் கூவின. வெளியே வந்து என்னிருக்கையில் அமர்ந்து ஷார்ட்ஹேண்ட் நோட்டில் kill him kill him என்று சுருக்கெழுத்தில் பக்கம் முழுவதும் அனிச்சையாய் பதிவு செய்து கொண்டிருந்தேன்.

 மனதிற்குள் ஒரு செயல் திட்டம் உருவாகிக்கொண்டிருந்தது. மாலை எல்லோரும் சென்றபிறகு CCTV இணைப்பையும் அபாய ஒலிப்பானையும் துண்டித்த பின்னர் அவனை தேன்பொறியில் சிக்கவைத்து மெய்மறந்த தருணத்தில் உயிரைப் பறிக்க வேண்டும். இதில் என் பங்கு யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தேன்… ஜெனரேடருக்கு பயன்படும் டீசல் கண்ணில் பட்டது. கேன்டீனிலிருந்து மைக்ரோவேவ் ஓவன் கையுறைகளையும், கத்தியையும் எடுத்து வந்தேன்… எரிதிரவத்தை ஊற்றி சிகரெட் லைட்டரால் தீப்பற்ற வைப்பதா, கத்தியால் மார்பில் குத்திக் கொல்வதா, சுழலும் நாற்காலியில் முதுகுக்கு பயன்படும் தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சிழக்க வைப்பதா என்று நான் குழம்பிக் கொண்டிருக்கும் போது அவன் ப்ரீஃப் கேஸோடு வேகமாக வெளியேறினான். வழக்கம்போல பிராந்திய மேலாளரின் அவசர அழைப்பால் சென்றிருக்கக் கூடும். என் திட்டத்தை மறுநாள் செயல்படுத்த ஏதுவாக இந்த வெறியையும் ஆவேசத்தையும் மனதில் தக்க வைத்துக் கொண்டேன்…

 அடுத்த நாள் சர்வதேச மகளிர் தினத்தன்று கருநீல புதுப் புடவையை ஃபால்ஸ் தைக்க நேரமின்றி நான் அப்படியே உடுத்திக் கொள்ள, ஃப்ளீட்ஸ் சரியாக அமையவில்லை. அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எல்லோரும் ஒரே மாதிரி புடவையில் ஆங்காங்கே குழுக்களாக பேசிக் கொண்டிருந்ததில் ஏதோ விபரீதம் தெரிந்தது. மேனேஜர் ஸ்கூட்டரில்அலுவலகம் வரும் வழியில் ஜெமினி அருகே சாலை விபத்தில் பலமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். இறைவனே அவனுக்கு இயற்கையாய் தண்டனையளித்து விட்டது போல் உணர்ந்தேன். நிலைமை கவலைக்கிடமாக இருப்பதையறிந்து நானும் அனுபமாவும் உடனே ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு விரைந்தோம்.

  Trauma care வார்டின் மூடிய அறையில் அவர் தலையில் கட்டுடன் மயக்க நிலையில் இளம்பச்சை போர்வையில் படுத்திருந்தார். பிராண வாயு செலுத்தப்படுவதும், ‘ட்ரிப்ஸ்’ ஏறிக்கொண்டிருப்பதும் டாக்டர்கள் கூடிப் பேசுவதும் கதவின் சதுரக் கண்ணாடியில் தெரிந்தது. உறவினர்கள் வாசலில் கவலையோடு காத்திருக்க, விபத்து பற்றிக் கேட்டறிந்தேன். ஒரு எதிர்பாராத திருப்பத்தில் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோத, தலைக்கவசம் அணியாத அவர் நிலை தடுமாறி விழந்து தலையிலும் கைகளிலும் பலத்த அடிபட்டு இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் வசமிருந்த மருத்துவமனை கோப்பில் MLC என்று எழுதி அதை அடித்துவிட்டு முதலுதவி கொடுத்த விவரங்களும் ‘தீவிர தலைக்காயம்’ பற்றிய நுணுக்கமான மருத்துவப் பிரயோகங்களும் ரத்த இழப்பை ஈடுசெய்வது பற்றியும் அடுத்தக்கட்ட சிகிச்சைகளுக்கான குறிப்புகளும் காணப்பட்டன. ‘சிடி ஸ்கேன்’ ரிப்போர்ட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

  வாய்விட்டு அழுதபடி நின்றிருந்த அவரது பெண்ணிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆறுதல் சொன்னேன். “ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் எதாவது தேவைன்னா தயங்காம கேளு..” என்றாள் அனு. தாயில்லாத அப்பெண்ணைப் பார்த்து என் மனம் கரைந்தது. மேனேஜர் மீதான நேற்றைய கொலை வெறி சிறிது சிறிதாக தணியத் தொடங்கியது.

  அருகிலிருந்த பெண்மணி “இவளுக்கு இப்பதான் கல்யாணம் நிச்சயமாயிருக்கும்மா… இந்த சமயத்துல இப்படியொரு அசம்பாவிதம் ஆயிடிச்சே…” என்று கண்ணீருடன் என் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

  “கவலைப்படாதீங்க.. அவருக்கு சரியாயிடும்.. சீக்கிரம் குணமாயிடுவாரு..”

  அறையிலிருந்து வெளிப்பட்ட டாக்டர் நர்ஸிடம் “ப்ளட் ட்ராஸ்ஃப்யூஷனுக்கு ரெடி பண்ண சொன்னேனே..” என்றார் சலிப்புடன்.

  “நம்ம கிட்ட அந்த ரேர் க்ரூப் இல்ல டாக்டர்… எல்லா ப்ளட் பேங்க்லயும் கேட்டு பார்த்துட்டோம்.. கிடைக்கலை..”

  “ரெட் க்ராஸ்ல ட்ரை பண்ணீங்களா…”

  “அங்கயும் இப்ப ஸ்டாக் இல்லயாம் டாக்டர்..”

  “நம்ம டேட்டா பேஸை பார்த்து வாட்ஸப்புல மெஸேஜ் பண்ணுங்க.. யாராவது டோனர் கிடைக்கறாங்களா பாருங்க… சீக்கிரம்..” என்று நர்ஸை விரட்டியவர் உறவினர்கள் பக்கம் திரும்பி “தலையில பலமா அடிபட்டதுல ரத்த சேதம் அதிகமா இருக்கு.. அதை சரிபண்ணிட்டுதான் மேற்கொண்டு சிகிச்சை குடுக்க முடியும்…” என்று சொல்லி நகர்ந்தார்.

  “அவரோடது என்ன க்ரூப்.. பாம்பே ப்ளட் டைப்பா…” என்றேன் நர்ஸிடம்.

  “இல்ல மேடம்… ஏபி நெகடிவ்..”

  “வேற யாரோட ரத்தமும் அவருக்கு ஒத்துக்காதாம்மா..” என்றார் உறவினர் கவலையுடன்.

  “எல்லா நெகடிவ் ரக ரத்தமும் சேரும்… அதுவுமே கிடைக்கறது ரொம்ப கஷ்டம் சார்…”

  “உடனே ரத்தம் குடுக்கலேன்னா உயிருக்கு ஆபத்தா சிஸ்டர்…” என்று அவரது பெண் அழுகையினுாடே கேட்டாள்.

  நர்ஸ் அவளை நேராகப் பார்க்காமல், “ஏறக்குறைய அப்டிதான்..” என்று சொல்ல, அவளது துக்கம் அதிகரித்தது கண்களில் பிரதிபலித்தது.

  ஏற்கெனவே அம்மாவை இழந்து தவிக்கும் அவளுக்கு அப்பாவும் இல்லையென்ற நிலை வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் என்னுள் மேலோங்கியது. அவர் மீதான ஆவேசமும் ஆக்ரோஷமும் படிப்படியாக் குறைந்து, என் மூர்க்க குணம் மாறி, மனமிளகியது. ஆண் வர்க்கம் எமக்கெதிராக எத்துணை வன்முறைகளைப் பிரயோகித்தாலும், எம்மினத்தை எவ்வளவு கொச்சைப்படுத்தி, அடக்கி ஆக்ரமித்தாலும் யாம் அவையனைத்தையும் மறந்து மன்னித்து அவர்கட்கு நல்லதையே செய்வோம். அது எங்கள் ஈர மனம். ‘இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யும்’ உயரிய குணம் படைத்தவள் பெண் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாய் உணர்ந்தேன். அவ்விளம் பெண்ணின் எதிர்காலம் கருதி முடிவெடுத்தேன்.

  செவிலியரிடம் நானே வலியச்சென்று, “சிஸ்டர்.. நான் ரத்தம் குடுக்கறேன்… என்னோடதும் ஏபி நெகடிவ் க்ரூப் தான்.. எடுத்துக்குங்க..” என்றேன்.

Posted on 1 Comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – பழைய பாடல் (சிறுகதை)

பழைய பாடல் – சுகா

தொண்டர் சன்னதி திருப்பத்திலேயே ‘மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ’ என்று சுப்பம்மாக்காவின் குரல் சோமு மாமாவின் வீட்டிலிருந்து கசிந்து வரும். மதியச் சாப்பாட்டுக்குப் பிந்தைய உறக்கத்தில் இருக்கும் பர்வத சிங்க ராஜ தெருவை மேலும் ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் விதமாக சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். வாசல் அழியை மட்டும் பொத்தினாற் போல சாத்திவிட்டு, பட்டாசல் நடையில் தலை வைத்து சோமு மாமா தூங்கிக் கொண்டிருப்பார். அவர் கால்களை மெல்ல அமுக்கியவாறே சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். மாமாவின் தலைமாட்டில் வெற்றிலைத் தட்டும், பித்தளைச் செம்பில் தண்ணீரும் இருக்கும். தொந்தி தரையில் சரிய, ஒருச்சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கும் சோமு மாமாவின் மெல்லிய குறட்டையொலி, சுப்பம்மாக்காவின் பாட்டுக்கு ஏற்ப, தம்பூரா சுதி போல சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும். பொதுவாக கச்சேரி இல்லாத நாள்களில்தான் இப்படி நடக்கும். கச்சேரி இருந்தால் அன்றைக்கு மதியம் வயிறு நிறையச் சாப்பிடமாட்டாள் சுப்பம்மாக்கா. சோமு மாமாவுக்கும் இட்லி, தோசை, உப்புமா எனப் பலகாரம்தான் செய்து கொடுப்பாள். எப்போதுமே உப்பும் புளிப்பும் குறைவாகச் சேர்த்த சமையல்தான். சோமு மாமா கொஞ்சம் காரசாரமாகச் சாப்பிடுபவர்.

“கூட ரெண்டு மெளகாவ நுள்ளிப் போட்டா என்னட்டி?” என்று அலுத்துக் கொள்வார். சுப்பம்மாக்காவின் தம்பி ‘தபலா குமாரும்’ அந்த வீட்டில்தான் இருந்தான். அவனுக்குக் காரம் ஆகாது. இத்தனைக்கும் குமாருக்கென்று தனியாகத்தான் சட்னியோ, குழம்போ எடுத்து வைப்பாள் சுப்பம்மாக்கா. அப்படியிருந்தும் சாப்பிடும்போது கண்களில் நீர் வழிய, ‘உஸ் உஸ்’ என்றபடிச் சாப்பிடுவான்.

“ஏன் மூதி உஸ் உஸ்ஸுங்கெ? அப்படியா எரிக்கி? ஒனக்கு தனியாத்தானே செஞ்சு வச்சேன்?”

அக்காவின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் தலையை இல்லை என்று ஆட்டியபடி அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்திருப்பான் ‘தபலா குமார்’.

கச்சேரிகளில் தபலா வாசிக்கும் குமார், சோமு மாமாவை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதே இல்லை. என்ன கேள்வி கேட்டாலும் தலை குனிந்தபடிதான் பதில் சொல்லுவான். “அவன் வாய் பேசாததத்தான் வெரல் பேசுதுல்லா! பாரதி கண்ணம்மா பாட்டுக்கு அவன் உருட்டுத உருட்டுல நம்ம சேவியரு அடுத்த வரிய எடுக்காம எத்தன மட்டம் இவன் வாசிக்கதயே பாத்துட்டு நின்னிருக்கான்!” அதிகம் பேசாத தபலா குமாரின் சுபாவத்தை வயலினிஸ்ட் சந்திரன் இப்படித்தான் சிலாகிப்பார்.

சோமு மாமாவின் ‘சோமு டோன்ஸ்’ கச்சேரியின் முதல் பாடலாக ‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்’ என்கிற ‘சாந்தி நிலையம்’ பாடலைப் பாடி சுப்பம்மாக்காதான் துவங்குவாள். பாடலின் துவக்கமாக ‘இறைவன் இறைவன் இறைவன்’ என்று சுப்பம்மாக்கா பாடும்போது, “ஏட்டி! சோமு கச்சேரி ஆரம்பிச்சுட்டு. சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா” என்று பெண்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு கச்சேரிக்குக் கிளம்புவார்கள்.

மெல்லிசைக் குழு வைத்து நடத்துபவர்களுக்கு அதன்மூலம் அப்படி என்னதான் வருமானம் கிடைத்துவிடுமோ தெரியவில்லை. ஆனால் சோமு மாமா போட்ஸாகத்தான் இருந்தார். தினம் இரண்டு உடுப்பு, மைனர் சங்கிலியுடன் தங்க ருத்திராட்சம், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள், கட் ஷூ என அலங்காரத்துக்கு ஒரு குறைச்சலுமில்லை. சோமு மாமாவுக்கு கொஞ்சம் பூர்வீகச் சொத்து இருந்தது. அவரது அம்மா ஒரு பழைய பாடகி என்றும், அவருக்கு புளியங்குடியைச் சேர்ந்த ஒரு பண்ணையார் சில சொத்துக்களை எழுதி வைத்ததாகவும் அரசல்புரசலாகச் சொல்லுவார்கள்.

“நம்ம சோமு டோன்ஸ் சோமோட அப்பா நம்ம புளியங்குடி பண்ணையார்தாம் தெரியும்லா! ஒனக்கு சந்தேகமா இருந்தா ஒருநா என்கூட புளியங்குடிக்கு வா. பண்ணையார் வீட்டு வாசல்ல அவாள் போட்டோ ஒண்ணு மாட்டியிருக்கும். சாடை அப்படியே அச்சு அசல் நம்ம சோமுதான்.”

‘சோமு டோன்ஸ்’ சோமுவை வயதில் மூத்தோர் சோமு என்றும், இளையோர் ஏனோ சோமு மாமா என்றுமே அழைத்தனர். யாருமே அவரை அண்ணே என்றோ அண்ணாச்சி என்றோ அழைத்ததில்லை. சுப்பம்மாக்கா மட்டும் அவரை அத்தான் என்றுதான் அழைப்பாள். அதில் சோமு மாமாவுக்கு சங்கடம் உண்டு. எத்தனை பேர் கூடியிருக்கும் சபையிலும் சோமு மாமாவை ‘அத்தான்’ என்று சத்தம் போட்டே கூப்பிடுவாள் சுப்பம்மாக்கா. அவள் இப்படி கூப்பிடுவது தெரிந்ததும் வேக வேகமாக அவளருகில் வந்து, “எத்தன மட்டம் சொல்லியிருக்கென், இப்படி நாலு பேர் மத்தில அத்தான் நொத்தான்காதென்னு? என்ன விஷயம் சொல்லித் தொல” என்று ரகசியமாகக் கடிந்து கொள்வார். “நல்ல கதயா இருக்கெ! அத்தான அத்தான்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிட?” விகற்பமில்லாமல் சுப்பம்மாக்கா கேட்பாள். “என் தலைலெளுத்து” என்று தலையில் அடித்துக்கொள்வார் சோமு மாமா.

சுப்பம்மாக்காவை சோமு மாமா ‘ச்சுப்ப்பு’ என்றழைப்பார். கச்சேரிகளில் அவள் பெயரை சுப்பம்மா என்றே அறிவிப்பார்கள். ஆனால் சோமு மாமாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் அவள் சுப்பம்மாக்காதான். அவளை விட வயதில் மூத்தவரான ஃப்ளூட்டு கோபாலும் அவளை சுப்பம்மாக்கா என்றழைப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியாது. “கோவாலண்ணாச்சி! ஒங்க கடேசி தங்கச்சி விஜயாவும், நானும் அப்பர் கிளாப்டன்ல ஒரே செட்டு. என்னப் போயி அக்காங்கேளே! கேக்கதுக்கு நல்லாவா இருக்கு!” ஃப்ளூட்டு கோபால் அதற்கும், “இருக்கட்டும்க்கா” என்பார். தன் முதலாளி சோமுவின் மீது இருக்கும் மரியாதை காரணமாகவே கோபால் தன்னை அக்கா என்றழைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு மேலும் பேச்சை வளர்க்க மாட்டாள் சுப்பம்மாக்கா.

கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய பாடல்களை மட்டும் பாடுவார் சோமு மாமா. ‘அல்லா அல்லா, சம்போ சிவசம்போ, இக்கரைக்கு அக்கரை பச்சை, எதற்கும் ஒரு காலம் உண்டு’ போன்ற பாடல்களுக்கு மத்தியில் சுப்பம்மாக்காவுடன் இணைந்து சோமு மாமா பாடும் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல் அவரது கச்சேரியின் ஸ்பெஷல் பாட்டு. சோமு மாமாவுடன் ஒன்றாக மேடையில் நின்று பாடும்போது சுப்பம்மாக்கா அநியாயத்துக்கு வெட்கப்படுவாள்.

“பால் போலவே பாட்டெல்லாம் அஸால்ட்டா பாடீருதே! ஆனா சொல்லத்தான் நினைக்கிறேன் பாடும்போது மட்டும் அந்த பதறு பதறுதே! ஏன்?” என்று கேட்டால், “பொறவு! அவ்வொ கூட ஒண்ணா நின்னுப் பாடணும்னா வெக்கமா இருக்காதா?” என்று பதில் சொல்வாள்.

விஸ்வநாதனின் குரலில் பாடுவதைத் தவிர மற்ற சமயங்களில் ஹார்மோனியத்தில் நின்று கொள்வார் சோமு மாமா. மற்றபடி சுசீலா, ஜானகி பாடிய பாடல்கள் அனைத்தும் சுப்பம்மாக்காதான் பாடுவாள். ஈஸ்வரி, வாணி ஜெயராம் பாடல்களைப் பாடுவதற்கென்றே சோமு டோன்ஸில் உள்ள பாடகிதான் நாஞ்சில் பிரேமா. சக பாடகியான பிரேமா பாடும் பாடல்களில், ‘தீர்க்க சுமங்கலி’யின் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல், சுப்பம்மாக்காவுக்குப் பிடித்தமான ஒன்று. “சின்னப்பிள்ளைல அரசு பொருள்காச்சில வாணி ஜெயராமே பாடி கேட்டிருக்கென். ஆனா நீ பாடுததுதான் எனக்குப் புடிச்சிருக்கு பாத்துக்கொ” என்று பிரேமாவின் கைகளைப் பிடித்தபடிச் சொல்வாள் சுப்பம்மாக்கா.

சோமு மாமாவுக்கென்றே ‘நெல்லை லாட்ஜில்’ ஓர் அறை இருந்தது. மாலை நேரங்களில் சோமு மாமா நெல்லை லாட்ஜ் அறையில்தான் இருப்பார். சாயங்காலக் குளியல் முடித்து, சுப்பம்மாக்கா கையால் காபி வாங்கிக் குடித்துவிட்டு, சாலைக்குமார சாமி கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு நெல்லை லாட்ஜுக்கு சென்றாரானால் செகண்ட் ஷோ விடும் நேரம்தான் வீடு திரும்புவார். என்றைக்காவது வீடு திரும்பவில்லையென்றால் அன்று சோமு மாமா மருந்து சாப்பிட்டிருக்கிறார் என்பதை சுப்பம்மாக்கா புரிந்து கொள்வாள்.

ஆனால் நாளடைவில் மருந்து சாப்பிடாமலேயே சோமு மாமா வீட்டுக்கு வருவது குறைய ஆரம்பித்தது. கச்சேரியும் குறைய ஆரம்பித்தது ஒரு காரணமாக இருக்கலாம். சுப்பம்மாக்கா இல்லாமல் கச்சேரிகள் நடக்க ஆரம்பித்தன. அதற்கு ஒரு வகையில் சுப்பம்மாக்காவும் காரணம்தான். “இந்த மாரி அஸ்கு புஸ்கு பாட்டெல்லாம் என்னய பாடச் சொல்லாதிய” என்று சோமு மாமா நல்ல மூடில் இருக்கும்போது ஒருநாள் சொல்லி விட்டாள். அதற்குப் பிறகு சோமு மாமா கொஞ்சம் கொஞ்சமாக சுப்பம்மாக்காவை கச்சேரிக்கு அழைப்பதைக் குறைத்து, பின் சுத்தமாக நிறுத்திக் கொண்டார்.

“அவ்வொளும் என்ன செய்வா? கல்யாணக் கச்சேரி புக் பண்ணும்போதே பாட்டு லிஸ்ட் அவங்களே குடுக்காங்க. ஒரு பளைய பாட்டு இல்ல. எல்லாம் இப்பம் உள்ள இங்கிலீஸ் பாட்டுங்க. எனக்கு அதுல்லாம் வாய்லயெ நொளயாது. அதான் என்னய சங்கடப்படுத்த வேண்டாம்னு அவ்வொ கூப்பிட மாட்டங்கா… ஆனா அதுக்காக இப்படி ஒரேயடியா வீட்டுக்கு வராம இருக்கதத்தான் தாங்க முடியல.”

ரகசியமாக தன் தம்பி ‘தபலா குமாரிடம்’ சொல்லிக் கண்ணீர் சிந்துவாளே தவிர வேற்றாள்களிடம் சோமு மாமாவை சுப்பம்மாக்கா விட்டுக் கொடுத்ததே இல்லை.

‘நைட்டு லேட்டாத்தான் வந்தாக. ஒதயேத்துலயே எந்திரிச்சு சங்கரன்கோயில் கச்சேரிக்குக் கிளம்பிட்டாக’ என்று சொல்லிச் சமாளிப்பாள். ஆனால் இந்தச் சமாளிப்பெல்லாம் கொஞ்ச நாள்களுக்குத்தான் செல்லுபடியானது. சோமு மாமா வீட்டுக்கு வருவதே இல்லை என்பதை ஊரும், சுப்பம்மாக்காவும் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு அந்த விஷயம் இயல்பான ஒன்றாக ஆகிப் போனது.

“சோமு மாமாவைப் பாக்கணும்னா நெல்லை லாட்ஜ்லதான் பாக்கலாம். இல்லேன்னா பெருமாள்புரத்துக்குத்தான் போகணும். ஆனா அட்ரஸ் சரியாத் தெரியல. அவாள் யாருக்கும் பெருமாள்புரம் அட்ரஸ குடுக்கலெல்லா!”

ஹார்மோனியத்திலிருந்து கீ போர்டுக்கு மாறிய சோமு மாமா காலத்துக்கேற்றார் போல தானும் மாறி, தன் குழுவையும் மாற்றி அமைத்துக்கொண்டார்.

“முந்தில்லாம் சோமு டோன்ஸ்லதான் அத்தன வயலினைக் கேக்கலாம். சங்கீத சபால ‘ராஜபார்வை’ டைட்டில் மியூஸிக்லாம் சோமு டோன்ஸ் வாசிச்சுக் கேட்டது இன்னும் ஞாவம் இருக்கு. இப்பம் அவாளும்லா வாத்தியத்தைக் கொறச்சுட்டா. எல்லாம் கீ போர்டுலயே வாசிக்கானுவொ. நல்லாவால இருக்கு?”

சோமு மாமாவின் குழுவில் இப்போது சுப்பம்மாக்காவும் இல்லை. நாஞ்சில் பிரேமாவும் இல்லை. ஃப்ளூட் கோபால் எப்போதாவது வருகிறார். அவரது பீஸ்களையும் கீ போர்டிலேயே கிஷோர் வாசித்து விடுகிறான். வயலின், ஷெனாய், கிளாரினெட்டும் கிஷோர் கைகளுக்குள் அடைபட்டுவிட்டன. குழுவும் சுருங்கிப் போனது. புதிய பாடகி சவீதா குழுவுக்கும் சோமு மாமாவுக்கும் இணக்கமாகி விட்டாள்.

“பெருமாள்புரம் வீட்டுக்குப் போயிருந்தேன். கூட அந்த சவீதா இருக்கா.” குனிந்த தலை நிமிர்ந்து தன் அக்காவின் முகத்தைப் பார்க்க முடியாமல் சாப்பிட்டபடியே ‘தபலா குமார்’ சொன்னபோது சுப்பம்மாக்கா அதற்காகப் பெரிதாக ஒன்றும் வருத்தப்பட்டுக்கொள்ளவில்லை. “இதுல என்னலெ இருக்கு? அவ புதூ பாட்டுல்லாம் பாடுதாள்லா. சாம்பார் ஊத்தட்டுமா?” என்றாள் சுப்பம்மாக்கா.

-oOo-