Posted on Leave a comment

அஞ்சலி: அருண் ஜெயிட்லி (1952-2019) | திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்

(புகைப்படம் நன்றி: India Today)

23
வயது. வழக்கறிஞர் படிப்பில் துடிப்புடன், அதுவும் தில்லியில், மேல் தட்டு பஞ்சாபி குடும்பத்தில்
பிறந்த, திரைப்பட நடிகர் போல் தோற்றம் கொண்ட ஒரு இளைஞனின் சிந்தனை எப்படி இருக்கும்?
தொழில் முறையில் எப்படி வளர்வோம், சமுதாயத்தில் தன்னுடைய அந்தஸ்தை கார், பங்களா, பெண்கள்
என்று எப்படி படாடோபமாக வெளிப்படுத்துவது என்றுதானே இருக்கும்? ஆனால் அந்த இளைஞன் அருண்
ஜெயிட்லி ஆக இருந் ததால்… அவசர நிலை மிசா பிரகடனத்தை எப்படி எதிர்ப்பது என்ற தேசிய
சிந்தனை இருந்தது. பிரதமர் இந்திராவின் கொடும்பாவியை எரிக்கும் துணிவும் இருந்தது.
ஏபிவிபி
செயலாளராக இருந்த அருண், தன் அரசியல் வாழ்க்கையின் முதல் படியில், நானாஜி தேஷ்முக்,
வாஜ்பாய், அத்வானி போன்ற, நாட்டின் பெரும்தலைவர்களுடன் 19 மாதம் சிறையில் கழித்தார்
(1975-1977). என்று, எப்படி, எவ்வாறு பொழுது புலரும் என்று தெரியாத, இந்திய சரித்திரத்தின்
கருப்பு நாட்கள் அவை. மற்ற சாதாரண இளைஞர்களின் நம்பிக்கையை அந்தச் சிறைவாசம் உடைத்திருக்கும்.
அருண்
ஜி, லோக் நாயக் ஜெ.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்தார்.
அரசியல் ஜெயிட்லி
1977ல்
ஜன சங்கம், பின்னர் 1990 முதல் பாஜக நிர்வாகக் குழுவில் உறுப்பினராக செயல்படத் துவங்கினார்.
இருப்பினும் இவர் மக்களவைத் தேர்தலில் 2014ல் மட்டுமே போட்டியிட்டார். 2014ல் பாராளுமன்றத்
தேர்தலில் காப்டன் அமரீந்தர் சிங்கிடம் தோல்வி. இது சிறிய பின்னடைவாக ஆனது சற்று வருத்தம்
அளிக்கும் விஷயம். ராஜ்ய சபை உறுப்பினராகவே, தன் அரசியல், அமைச்சகப் பணியினைத் தொடர்ந்தார்.
வழக்கறிஞர் ஜெயிட்லி
1989ல்
வி.பி.சிங் இவரை கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் ஆக்கினார். போபோர்ஸ் ஊழல் வழக்கிற்குத்
தேவையான தகவல்களைத் திரட்டும் பொறுப்பு அருண் ஜிக்கு வழங்கப்பட்டது. ஒரு சுப்ரீம் கோர்ட்
வக்கீலாக அருண் ஜீயின் கட்சிக்காரர்கள், பெப்சி, கோக் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்!
அத்வானி, ஷரத் யாதவ், சிந்தியா போன்ற பெரும் அரசியல்வாதிகள். தொழில் முறையில், அருண்
ஜி, இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
அமைச்சர் ஜெயிட்லி
உலக
வர்த்தக நிறுவனம் (WTO), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), சட்ட விரோதமான கறுப்புப் பணச்
சலவை எதிர்ப்பு (AML) போன்றவற்றில் அருண் ஜியின் பெரும் உழைப்பை நாடு பெற்றிருக்கிறது.
தகவல்,
தொலைத் தொடர்பு, சட்டம், அரசின் முதலீடு துறப்பு, கப்பல்துறை, நிதி, உள்துறை என்று
அருண் ஜியின் கைவண்ணம் கண்ட அமைச்சகங்கள் பல. ஆனால் சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய
நிதிச் சீர்திருத்தங்களான, டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி, IBC எனப்படும் நொடித்து முதலீடு
இழந்த கம்பெனிகளை சரிவர மூடி, கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் காப்பாற்றும் திட்டம், அருண்
ஜி நிதி அமைச்சராக இருக்கையில் நிறைவேறின. இவற்றைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மிகப்
பெரும் துணிச்சல் தேவை. அந்தத் துணிவு, அருண் ஜி கொடுத்த நம்பிக்கையால் நரேந்திர மோதி
அரசிடம் இருந்தது. அரசியல் வாதிகளிடமிருந்து, இலவசத்தை மட்டுமே பார்த்திருந்த இந்தியாவில்,
இந்தத் திட்டங்களும், எரிவாயு மானியக் குறைப்பும், இந்த அரசுக்கு அதன் நேர்மை கொடுத்த
துணிவு.
நண்பர் ஜெயிட்லி
2002.
கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பிற்கு எதிர்வினையாக, குஜராத்தில் வன்முறை
வெடித்தது. காங்கிரஸ் தயவில் வாழ்கின்ற இந்திய ஊடகங்கள், தங்கள் வெறுப்பினைக் குவித்து,
நரேந்திர மோதி அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தின. செக்யூலர் விஷத்தில் தீண்டப்பட்டு,
கட்சியிலேயே, குறைவான நபர்கள் மட்டுமே மோதி ஜிக்கு ஆதரவாக இருந்தார்கள். உண்மை ஏறத்தாழ
சிறு நூலிழையில் ஊசல் ஆடிக் கொண்டு இருந்தது. அப்போது அருண் ஜியின் மோதி ஆதரவுப் பேச்சு
உண்மைக்கு சுவாசம் தந்தது. பிரதமர் வாஜ்பாய் அனுமதியுடன், மோதி அரசு குஜராத்தில் தொடர்ந்தது.
ஒரு
நல்ல திறமையான வழக்கறிஞராக, பத்திரிகைகளின் பொய் ஒப்பனை விலக்கி, உண்மை நிலவரத்தைப்
புரிந்து கொள்ளவும், அதைத் தெளிவுற சபையில் எடுத்துச் சொல்லவும் அருண் ஜிக்குத் தெரிந்திருந்தது.
அந்த சம்பவம் மோதி ஜி – அருண் ஜி இருவருக்கும் இடையில் ஒரு நட்புப் பிணைப்பை உருவாக்கியது.
அந்த நட்பின் நற்பயனை, இந்நாடு பின்னாளில் அடைந்தது.
மனிதர் ஜெயிட்லி
குற்றமற்றவர்கள்,
குறை சொல்ல முடியாதவர்கள் யார்? சிதம்பரம் போன்ற, காங்கிரசின் சில முக்கியத் தலைவர்களுடன்
இவருக்கிருந்த தனிப்பட்ட நட்பினால், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் சுணக்கம்
ஏற்பட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு.
ஆனால்
குஜராத்தில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோதி, முற்றிலும் புதிய சூழலில், அதுவும்,
கயமை நிறைந்த, நுனி நாக்கு ஆங்கிலமும், வன்மமும் நிறைந்த லுட்யன்கள் / கான் மார்க்கெட்
இருட்டுக் கனவான்களை சமாளித்ததில் அருண் ஜெயிட்லியின் பங்கு மகத்தானது. இழுக்கல் உடையுழி
ஊற்றுக்கோல் போல் அருண் ஜி செயல்பட்டார்.
நாடு
ஒரு திறமையான வழக்கறிஞரை, அவரது குடும்பம் குடும்பத் தலைவனை, பாரதீய ஜனதா கட்சி ஒரு
உன்னதமான தலைவரை இழந்து சோகத்தில் தவிக்கிறது.

போய் வாருங்கள் அருண் ஜி.
பாரதீயத்தின் விதைகள், விழுதுகளாக உயிர்த்து, பாரதம் இன்று பாதுகாப்பான கைகளில் இருக்கிறது.
உங்கள் உழைப்பால் கிட்டிய பயனை, இந்த தேசம் மறவாது நெடுங்காலம் நினைவில் வைத்திருக்கும். 

Posted on 1 Comment

மேகாலயா பயணம்: கடவுளின் தோட்டம் – திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்


‘நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்’ என்று கம்பனும், ‘தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்’ என்று திரிகூடராசப்ப கவிராயரும் மேகாலயாவைப் பார்த்தால் நிச்சயம் எழுதுவார்கள். ‘எங்கு பார்த்தாலும் இயற்கைக் காட்சி’ என்னும் திரைப்பாடல்தான் மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. கடவுளின் நாடு கேரளா என்று சொல்லிக்கொண்டால், கடவுளின் தோட்டம் மேகாலயா.

நமது ஊர் ரியல் எஸ்டேட் ஆசாமிகள் இங்கு வந்தால், 11 மணி மலையாளப் படக் காலைக்காட்சியில் குளிக்கும் உன்னி மேரி தீபாவை உற்று நோக்கும் சோமன் போலாகிவிடுவர். இதை Meghalaya Transfer of Land Act ஓரளவு காப்பாற்றியுள்ளது. சில வடகிழக்கு மாநிலங்களை 371வது சட்டப் பிரிவு காப்பாற்றியுள்ளது. எனவே, உள்ளூர் ரியால்டி ஆசாமிகள் மட்டுமே இங்கு இயற்கையை நாசமாக்க முடியும்.

அரசியல்

காங்கிரஸ், மாநிலம் பிறந்த 1972 முதல் ஆண்டு வந்த இடம். அடுத்த முறை பாஜக வரும் என்று பரவலாகப் பேச்சு. மிகச்சிறிய மாநிலம். நங்கநல்லூர் கவுன்சிலர் இந்த ஊர் எம்.எல்.ஏ ஐவிட அதிக வாக்கு வாங்கியிருப்பார்.

நவம்பர் 2015ல், இந்தியாவும் பங்களாதேஷும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஷில்லாங்கிலிருந்து கொல்கத்தாவிற்கு பங்களாதேஷ் வழியே சாலைப் போக்குவரத்து 2019லிருந்து தொடங்க இருக்கிறது. இதன்மூலம் 700 கிமீ தூரமும், 20 மணி நேரமும் மிச்சம். வழக்கம்போல், நம் பத்திரிகைகளுக்கு அலியா பட்டின் முகப்பருப் பிரச்சினை முக்கியமானதால், இந்த அல்ப விஷயம் சொல்ல நேரம் கிடைக்கவில்லை.

மோதி அரசின் கவனிப்பு வடகிழக்கு மாநிலங்களை நோக்கியிருப்பதை உள்ளூர் மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். பங்களாதேஷுடன் உறவு மேம்பட்டிருப்பதையும், சாலை, நீர் வழிப்போக்குவரத்துக் கட்டமைப்பு ஆகியவை பெரிதும் முன்னேறி இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.

வாழ்க்கை முறை

இது ஒரு தாய்வழிச் சமூகம். பெண்களுக்கே சொத்தும் அதிகாரமும். சுருக்கமாகச் சொன்னால் சீதை இருக்குமிடம்தான் ராமனுக்கு மிதிலை. கட்டிய வேஷ்டியுடன் கணவன், மனைவி வீட்டுக்கு வந்துவிட வேண்டும். 70℅ அரசு வேலைகள். சிறுதொழில்கள் பெண்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண்கள் சுதந்திரமாக இரவு 12 மணி வரை நடமாடமுடியும். பெண் சிசுக்கொலை அறவே இல்லாத மாநிலம்.

பெரும்பாலும் சர்ச் ஆக்கிரமிப்பு. இருந்தாலும் தங்கள் மூதாதையர், பழங்குடியினர் பழக்கங்களிலிருந்து மாறாத மக்கள். எரிக் என்னும் கிறிஸ்தவரை, ஷாயிசா என்னும் முஸ்லீமிற்கு, வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். காரணம், இருவரும் காஷி பழங்குடியினர்.

வருத்தப் படவேண்டிய விஷயங்கள்

சில முக்கியமான இடங்களில் மோசமான சாலைகள், குறிப்பாக டாகி (Daki) பகுதியில். ஷில்லாங்கின் போக்குவரத்து நெரிசல். மோசமான பொதுஜன பேருந்துப் போக்குவரத்து. இல்லாத ரயில்வே. பெருமளவில் நடக்கும் சுண்ணாம்புக் கல், கரி குவாரி கொள்ளை. பெரும்பாலும் பங்களாதேஷிற்குக் கடத்தப்படுகிறது என்று சொல்லுகிறார்கள்.

மழையினால் மண் அரிப்பு சில இடங்களில் அபாயகரமான அளவில் இருக்கிறது. பெருமளவில் நிகழ்ந்துவிட்ட கிறிஸ்துவ மதமாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தல். போதை மருந்து பரவல் இன்னொரு முக்கியப் பிரச்சினை.

பொறாமைப் படவேண்டிய விஷயங்கள்

10 மாதம் பெருமழை. மீதம் 2 மாதமும் மழையும் தூறலும். ஷில்லாங் தவிர்த்து, பார்த்த அனைத்து இடங்களிலும் ‘மொபைல் இன்றி’ மைதானத்திலும், தெருவிலும் விளையாடும் குழந்தைகள், இளைஞர்கள். கிராமியத் தொழில்கள் (விவசாயம், மூங்கில், விளக்குமாறு தயாரித்தல்) பாதுகாப்பு. அரசின் உதவி, தலையீடு இரண்டும் இருக்கின்றது. குற்றங்கள் மிக மிகக் குறைவு.

பொதுவான விஷயங்கள்

அசைவர்களுக்குப் பிரச்சினையில்லை. சைவர்கள் என்றால், பிரட்டை க்ராண்ட் ஸ்வீட்ஸ் புளிக்காய்ச்சலில் தடவி விழுங்கும் கலையைக் கற்றுக்கொள்ளவேண்டும். ஷில்லாங்கில் போலீஸ் பஜார் என்னும் பிரபலமான கடைவீதியில் திருச்சிக்கார ராஜரத்தினம் ‘மெட்ராஸ் கபே’ வைத்திருக்கிறார். ‘மணச்சநல்லூர் பக்கத்துல நிலம் இருக்கு சார். மழைதான் இல்லை.’

சிரபுஞ்சியில் மதுரைக்காரரின் ‘ஆரஞ்சு ரெஸ்டாரெண்ட்’ இருக்கிறது என்பது ஆறுதல். அசைவர்களுக்கு பன்றி, மீன், மாடு பரவலாகக் கிடைக்கிறது.

ஆங்கிலம் அனைவருக்கும் புரிகிறது. என் ஹிந்தி சவுகார்பேட் தமிழுக்கு ஒப்பானது. இருந்தும் புரிந்து கொண்டார்கள். கவுஹாத்திக்கு விமானம் / ரயில் மூலம் வந்து கார்/பஸ்ஸில் மட்டுமே ஷில்லாங் செல்லமுடியும். பொதுவாக டாக்ஸிக்கார்கள் நம்மூர் ஆட்டோ போல் கொள்ளை இங்கும். நேரடியாக 50℅ -75% குறைத்துப் பேசப் பழகிக்கொள்ளவேண்டும்.

கொஞ்சம் பங்களாதேஷி, அசாமி, திபேத்திய, சீன, நேபாளிக் கலப்பு சாயலில் மக்கள். ஒருவர் தோற்றத்தை வைத்து பூர்விக மேகாலயர் என்று அறுதியிடுவது கடினம்.

இங்கு மட்டுமே கிடைக்கும் என்று எந்தப் பொருளும் இல்லை. வாங்கி ஏமாறவேண்டாம். திருச்சி தம்பு பெல்ட் ஸ்டோரில் அதே இடுப்பு பெல்ட் கிடைக்கிறது. பிரம்பு சாமன்களுக்கு கவுஹாத்தியில் அரசே நடத்தும் கடை இருக்கிறது.

ராணுவத் தளங்கள் இங்கு நிறைய உள்ளன. திபேத், 1962 ஹிந்தி-சீனி பாய் பாய் முட்டாள்தனம், அருணாச்சல் என்று நம்பத்தகாத கூட்டமாகவே சைனா இருந்துவருவதால் ஏகப்பட்ட பாதுகாப்பு. நம் நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் இன்னும் அவர்களின் அழுக்கு அடியாட்களாக இருக்கிறார்கள்.

நெட் – 4G அடிக்கடி போய்விடும். லேப்டாப் கொண்டுவந்து ஆஃபீஸ் வேலை செய்யலாம் என்று நினைப்பவர்கள் இதனைக் கவனத்தில் கொள்க.

தெருவெங்கும் செல்ஃபி புள்ளைகளின் அட்டகாசம். இளைஞர்கள் பல்சரில் கிங் ஃபிஷர் பாட்டில்களுடன் வருகிறார்கள். மலச்சிக்கலுடன் அர்ஜித் சிங் தவிக்கும் போது பாடிய பாடல்களை இயர்ஃபோனில் கேட்டுக்கொண்டு இளைஞிகள் வழியில் நிற்கிறார்கள். எல்லா இடத்திலும் நுழைவுக்கட்டணம். அதிகபட்சம் 20 ரூ. ஆனால் காமெராவுடன் சென்றால் 100ரூ-500ரூ. பி.சி.ஸ்ரீராம் ஆகும் உங்கள் உள்ளக் கிடக்கையைக் கண்ட்ரோல் பண்ணித்தான் ஆகவேண்டும்.

கவுஹாத்தியில் காமாக்யா கோவில், காசிரங்கா காடு, பிரம்மபுத்திரா படகு சவாரி… இவையெல்லாம் நான் அடுத்த முறை அசாம் வரும்போதுதான். எங்கள் திட்டத்தன்று தலாய் லாமா வந்திருப்பதால் ஏராளமான பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்.

பார்க்க வேண்டிய இடங்கள்

(மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 சமயத்தில் மழை அதிகம் இருக்கும் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.)

நாள் 1 & 2

Elephant falls ( ஷில்லாங்கிலிருந்து 10 கிமீ)

இந்திய விமானப்படையின் ஏர்ஃபோர்ஸ் மியூசியம் (Elephant falls அருகில்)

வியூ பாயிண்ட் ( மியூசியம் அருகில்)

ஷில்லாங் கோல்ஃப் கோர்ஸ்

ஷில்லாங் வார்ட்ஸ் ஏரி

ஷில்லாங் லேடி ஹைடர் ஏரி

ஷில்லாங் டான் பாஸ்கோ மியூசியம்.( சுவிசேஷ நெடி தூக்கல். இருந்தாலும் சில உபயோகமான தகவல்கள் உண்டு. ரூ 100 நுழைவுக் கட்டணம்)

உமியம் ஏரி ( இதுதான் தவறவிடக்கூடாதது. மாலை 4 வரை மட்டுமே).

நாள் 3

சிரபுஞ்சி ( 60 கிமீ).

வா கபா நீர்வீழ்ச்சி

நோ கா லிக்காய் நீர்வீழ்ச்சி ( சிரபுஞ்சி வழி)

மவுஸ்மாய் குகை

செவன் சிஸ்டர் நீர்வீழ்ச்சி

ராமகிருஷ்ணா மடம்

நாள் 4

ஷன் படோங் / டாகி – பங்களாதேஷ் எல்லை. 65 கிமீ. இங்கிருந்து சமவெளியைப் பார்த்தால் பங்களாதேஷிகள் அதே டாகி நதிக்கரையில் விடுமுறையை முன்னிட்டு ஈசல் போல். மேலும் அவர்கள் ஊர் மணல் கொள்ளை. வழி எங்கும் BSF செக் போஸ்டுகள். Dakiயில் படகில் செல்வதைவிட இன்னும் சற்று தூரம் மலையில் மேலே சென்று ஷான் படாங்கில் படகில் செல்லவும்.

மாவ்லிலாங் ( ஆசியாவிலேயே சுத்தமான கிராமம் – ஷான் படோங் வழி.) போகும் வழி ஒரு கவிதை. மழை நாளில் ஆஸ்ட்ரிக்ஸின் கிராமம் போலிருக்கும் என்று நினைக்கிறேன். அதிக எதிர்பார்ப்பினால், சற்று ஏமாந்த ஒரு இடம்.

மரக்கிளைகளாலான இயற்கைப் பாலம்( மாவ்லிலாங் அருகில்).

டூரிசம் வலைத்தளங்களில் நல்ல படங்களும் தகவல்களும் கிடைக்கின்றன.

ஆனால் இந்தியர்கள் நல்ல டூரிஸ்டுகள் அல்ல. இரைச்சல், குப்பை போடுவது, வழியை மறித்து நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது, இயற்கை அழகை ரசிக்காமல் சத்தமாக ஹனிசிங் பாடலோடு தண்ணியடித்து நடனமாடுவது என்று நம்மைத் தரம் தாழ்த்திக்கொண்டு விட்டோம். நம்மைப் பொருத்தவரை இந்த இடம் பார்த்தாகிவிட்டது என்ற டிக் பாக்ஸ் அப்ரோச்தான் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அடுத்த தலைமுறை அழகுணர்ச்சி இல்லாத இயந்திரங்களாகிவிட்டதைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் பெரும்பாலோர்க்கு நீர்வீழ்ச்சியைவிட நியான் விளக்கு ஃபினிக்ஸ் மால்தான் பிடித்திருக்கிறது என்பதுதான் நமது பெரிய வீழ்ச்சி.