Posted on Leave a comment

கிரிஷ் கர்னாட் | ரஞ்சனி நாராயணன்


கிரிஷ் கர்னாட் இறந்ததற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அரசு மரியாதையும்
இல்லை. மிக முக்கியமான மனிதர்களோ அவர்கள் கொண்டுவரும் பூமாலைகளோ எதுவுமே கிடையாது.
அவர் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொண்டாரோ நடத்திக் கொண்டாரோ அதே போலவே அவரது முடிவையும்
அமைத்துக் கொண்டுவிட்டார். உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்.
தவறான காரணங்களுக்காகப் பிரபலமானவர். இவரது முரட்டுத்தனம் உலகறிந்தது. வார்த்தைகளில்
நயம் என்பதே கிடையாது. முரண்பாடுகளின் மொத்த உருவம். ‘பொதுவாக இறந்தவர்களைப் பற்றி
நல்ல விதமாகத்தான் எழுதுவார்கள் ஆனால் இது என்ன இப்படிச் சொல்கிறீர்கள்
என்று நீங்கள்
கேட்கக் கூடும் ஆனால் உண்மையைத்தானே எழுத முடியும்?
வாழ்ந்த காலங்களில் தன்னை ஒரு பொறுமையற்றவராக, கஞ்சத்தனம் நிறைந்தவராக, கணக்கு
பார்ப்பவராகவே காண்பித்துக் கொண்டார். காண்பித்துக் கொண்டார் என்பதைவிட, தனது நடவடிக்கைகளையும்
வாழ்க்கையையும் அப்படிக் கட்டமைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். தத்துவப் பாடத்தை
விட்டுவிட்டு, அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்ற காரணத்திற்காக கணக்குப் பாடத்தை
எடுத்துக் கொண்டதைப் பற்றித் தனது சுயசரிதையில் விவரிக்கிறார். ‘கணக்குப் பாடத்தின்
மேல் எனக்குப் பெரிய மோகம் எதுவும் இல்லை. மேல் நாட்டில் படிக்க வேண்டுமென்று தீர்மானமாக
இருந்தேன். தந்தையிடம் பணம் இல்லை. ஸ்காலர்ஷிப் கிடைத்துவிட்டால் வெளிநாடு போய்விடலாம்.
அதற்காகவே கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டேன். கணக்குப் பாடத்தில் முதல் வகுப்பு
கிடைத்தது மட்டுமல்ல, கல்லூரியில் முதல் மாணவனாகவும் வந்தேன்
. இங்கிலாந்தில்
உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மக்டலேன் கல்லூரியில் ரோட்ஸ் உதவித்தொகை கிடைத்தது. அங்கு
தத்துவம், அரசியல், பொருளாதாரம் படித்தார்.
திரைப்பட, நாடக உலகிற்கு கிரிஷ் கர்னாட்டின் பங்களிப்பு நன்கு அறியப்பட்டது.
ஆனால் அவரது அறியாத முகம் ஒன்று இருக்கிறது. பிரித்தாளும் அரசியல், இந்து மதத்தையும்
அதைச் சார்ந்தவர்களையும் விரோதிகளாக நினைப்பது ஆகியவற்றால் ஆன முகம் அது. பிரபல பத்திரிகையாளர்
சந்தீப் பாலகிருஷ்ணா இவரைப் பற்றிக் கூறுகிறார்: ‘அரசியலில் அரைவேக்காடு, கலைநயம் மிக்க
ஏமாற்றுக்காரர், நல்ல நடிகர், சுமாரான இயக்குநர், மோசமான நாடக ஆசிரியர்
என்று.
தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே இடதுசாரி சிந்தனைகளுக்குப் பலமான ஆதரவு
கொடுத்தவர். இந்தியக் கலாசாரத்தை எதிர்த்தும், வெளிநாட்டுப் படையெடுப்புகளைக் கொண்டாடியும்
எழுதியவர். டெல்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் நாடகம் இப்படி எழுதப்பட்ட ஒரு நாடகம்.
தன்னைச் சார்ந்தவரையே கொன்று குவித்த இந்த அறிவாற்றலற்ற அரசனை நேருவுடன் ஒப்பிட்டு,
துக்ளக் மற்றும் நேரு இருவரும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத அறிவாளிகள் என்றார்.
பாசிச சக்திகளாலும், பிற்போக்குப் பிராமணவாதிகளாலும் அவர்களுக்குரிய இடம் வரலாற்றில்
மறுக்கப்பட்டது என்றார். இந்துக்களின் மீதான தனது பகைமையைக் காட்ட அடுத்தபடியாக ‘திப்புவின்
கனவு
என்றொரு நாடகம் எழுதி அதில் அவனைக் கொண்டாடினார். இந்துக்களின் கோயில்களை இடித்தவனும்,
இந்துக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தவனுமான திப்புவின் பிறந்தநாள் கர்நாடகாவில்
கொண்டாடப்பட வேண்டும் என்றார். பெங்களூரு விமான நிலையத்திற்கு பெங்களூரை நிர்மாணித்த
கெம்பே கௌடாவின் பெயரை நிராகரித்து, திப்புவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றார். திப்பு
நாட்டுப்பற்று மிக்கவன்; கெம்பே கௌடா இருந்திருந்தால் அவர் கூட திப்புவின் பெயரை ஒப்புக்கொண்டிருப்பார்
என்றார்! இந்துக்களிடம் மட்டுமே மூட நம்பிக்கைகள் இருப்பதாகச் சொல்லி அவற்றை ஒழிக்க
சட்டம் இயற்ற வேண்டும் என்றார். நாத்திகவாதம் மற்றும் சோஷலிசம் என்ற பெயரில் இந்துக்களின்
பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் தூற்றினார்.
பக்கா சந்தர்ப்பவாதி இவர். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மறைவிற்குப் பிறகு
2014ம் ஆண்டு பெங்களூரு இலக்கிய விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்த கர்னாட் அழைக்கப்பட்டார்.
அவரைப் புகழ்வதற்குப் பதிலாகத் தூற்ற ஆரம்பித்துவிட்டார். அனந்தமூர்த்தியின் மிகவும்
பிரசித்தி பெற்ற நாவல் ‘சம்ஸ்காரா
கீழ்த்தரமான, அடிப்படையே இல்லாத மேலோட்டமான படைப்பு என்று
கூறினார். அவரது கருத்துக்களை சுதந்திரமாகக் கூற அவருக்கு உரிமை இருக்கிறதே என்று நீங்கள்
கேட்கலாம். அனந்தமூர்த்தி இருக்கும்வரை வாயைத் திறக்காதவர் அவரது மறைவிற்குப் பிறகு
இதுபோலப் பேசினார் என்பதுதான் அதிலுள்ள முக்கியமான விஷயம். அந்தக் கதையின் கதாநாயகனாக
நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக் கிடைத்து அதன் மூலம் இவரது திரையுலக வாழ்க்கை மேம்பட்டது
என்பது கூடுதல் தகவல்.
இப்படிப்பட்டவர் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்தது இயற்கைதானே? சங்க பரிவாரும்
இவரது எதிரிகளே. ஆனால் இதன் காரணமாக நேரு மையத்தின் இயக்குநர் பதவியை வேண்டாமென்று
சொல்லவில்லை. வாஜ்பாய் அரசின் கீழ் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷனில் இந்திய கலாசார
அமைச்சர் பதவியையும் வகித்தார். 2014ம் ஆண்டு நரேந்திர மோதியை ஆபத்தான மனிதர் என்றார்.
ஆனால் 2014 ஜூலை மாதத்தில் நரேந்திர மோதி நல்ல நிர்வாகத்தை அளிக்கிறார் என்றார். பாசிச
அரசிற்கு எதிராக இருந்தாலும் சிலரைப்போல விருதுகளைத் திருப்பி தரவில்லை.
இந்துக்களின் புராணங்களையும், இந்திய வரலாறு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றையும்
உருக்குலைத்ததன் மூலம் நாட்டிற்கு அவமானம் தேடித் தந்தவர். அவர் பொதுவிடங்களில் நடந்து
கொண்டதெல்லாம் அவரது சொந்தக் காரணங்களுக்காகவே ஒழிய சமூகக் காரணங்களுக்காக இல்லை. செக்யூலரிசம்
என்ற பட்டியலின் கீழ் இந்துக்களுக்கும், அவர்களது உரிமைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும்
எதிராகவே செயல்பட்டார். ‘அதுதான் போய்விட்டாரே, இன்னும் என்ன இவரைப் பற்றிப் பேசுவது?
என்று சமூக வலைத்தளங்களில்
கேட்டிருந்தனர். நாமும் இத்துடன் முடித்துக் கொள்வோம்.

Posted on Leave a comment

கைபேசியை விவாகரத்து செய்யுங்கள் | ரஞ்சனி நாராயணன்

‘இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது: அப்போதுதான் எனக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு நான் பால் புகட்டிக் கொண்டிருந்தேன். குழந்தை கவனம் சிதறாமல் பால் அருந்த வேண்டும் என்பதற்காக அறையை இருட்டாக்கி இருந்தேன். அது குழந்தைக்கும் எனக்குமான நெருக்கமான நெகிழ்வான தருணம். ஒரே ஒரு விஷயம் மட்டும் சரியாக இல்லை என்று பிறகுதான் உணர்ந்தேன்.

குழந்தை என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கவனம் முழுக்க என்மேல் இருந்தது. ஆனால் என் கவனம் முழுக்க e-bay தளத்தில் எனக்குத் தேவையான பழைய காலத்திய கதவுக் கைப்பிடிகளைத் தேடுவதில் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்கள் நான் இந்தத் தேடலில் என்னை மறந்திருந்தேன். அதன்பின்தான் என் குழந்தை என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் கையிலிருந்த ஸ்மார்ட் போனின் நீலநிற ஒளியில் அவளது சின்ன முகம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவளது கவனம் என் மேல், என் கவனமோ என் ஸ்மார்ட் போன் மேல்! இந்தக் காட்சியை ஒரு வெளி ஆள் போலப் பார்த்தேன். அந்த நொடிகளை இப்போது நினைத்தாலும் என் இதயம் வலிக்கிறது. நிச்சயம் என் வாழ்வு இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளை இந்தப் பழக்கம், இது தரும் போதை, இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளான நடத்தையில் மாறுதல், கவனமின்மை, நரம்பு மண்டலப் பாதிப்பு இவை பற்றிய ஆராய்ச்சியில் கழித்தேன். எப்படி இவற்றைக் கட்டுப்படுத்துவது, ஒரு ஆரோக்கியமான உறவை ஸ்மார்ட் போனுடன் வளர்த்துக் கொள்வது என்பது பற்றி முடிவுக்கு வந்தேன்’ என்கிறார் “How to Break Up With Your Phone: The 30-day Plan to Take Back Your Life” என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் திருமதி காதரீன் ப்ரைஸ் (Catherine Price).

சராசரியாக ஐந்து மில்லியன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் அவர்கள் கையிலிருக்கும் போனுடன் கழிப்பதாக ஒரு தகவல் சொல்லுகிறது. நம்முடைய ஸ்மார்ட் போனுடன் ஆன இத்தகைய உறவு ஒரு ஆரோக்கியமான உறவு இல்லை என்று நம் எல்லோருக்குமே தெரியும்.

சரி, இதற்கு என்ன தீர்வு?

இனி நான் கைபேசியைப் பயன்படுத்தவே மாட்டேன் என்பதல்ல தீர்வு. கைபேசி என்பது நமக்குத் தேவையான ஒன்றாகிவிட்டது. அதனுடனான உறவை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம்? கைபேசியுடனான உறவு நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. நமக்கும் நமது கைபேசிக்கும் ஆன எல்லைகளை மேம்படுத்திக் கொள்ள முடியுமா? ஒரு ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள முடியுமா?

நிச்சயம் முடியும். திருமதி காதரீன் ப்ரைஸ் சொல்லும் வழிகளை நாமும் பின்பற்றிப் பார்க்கலாமே. இதோ அவர் தரும் குறிப்புகள்:

மாற்றி யோசியுங்க:

‘இனிமேல் கைபேசியுடன் நான் கழிக்கும் நேரத்தைக் குறைக்கப்போகிறேன்.’ நம்மில் நிறைய பேர் நினைப்போம். இப்படி நினைப்பதே நம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிடும். மாற்றி யோசியுங்கள். கைபேசியில் நான் செலவழிக்கும் நேரம் எனக்குப் பிடித்த, என்னை மகிழ்விக்கும் ஒரு செயலை நான் செய்யாமல் இருக்கும் நேரம் என்று நினைக்க ஆரம்பியுங்கள். ஒரு தோழியுடன் அந்த நேரத்தைக் கழிக்கலாம்; அல்லது புதிதாக ஒரு பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், ஏற்கெனவே தெரிந்த தையல் வேலையைச் செய்யலாம். ஓவியம் வரையலாம். பாதியில் நிறுத்தியிருந்த வேலையை முடிக்கலாம். மனதுக்குப் பிடித்த ஒரு விளையாட்டில் (நிச்சயம் செல்போன் விளையாட்டு அல்ல) நேரத்தைக் கழிக்கலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

செல்போனில் குறைந்த நேரம் செலவழிக்கப் போகிறேன் என்பதற்குப் பதில் என் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதில் அல்லது என் வாழ்க்கையுடன் அதிக நேரம் செலவழிக்கப் போகிறேன் என்று மாற்றி யோசியுங்கள்.

உங்கள் கவனத்தைக் காசாக்குகிறார்கள், உஷார்!

நமது வாழ்க்கையின் மேல் நமது கவனம் இருக்கவேண்டும். ஆனால் நம் கவனமோ கைபேசி மேல் இருக்கிறது. இந்த நேரத்தில் எனது கவனம் எதன் மேல் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழும்போது நம் நேரத்தை நாம் எப்படிச் செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது, இல்லையா?

நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் பலவிதமான சமூக வலைத்தளங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எதற்காக இவைகளை நமக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும்? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வரும்? எப்போதாவது இதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா? அவர்களுக்கு நமது கவனம் தேவை. நாம் நிறைய நேரம் அவற்றில் செலவிடவேண்டும். அதுதான் அவர்களது நோக்கம். அதில் விளம்பரம் செய்பவர்கள்தான் அவர்களது வாடிக்கையாளர்கள். அவர்களின் மூலம் இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. அதாவது நமது கவனத்தை அவர்கள் காசு பண்ணுகிறார்கள். இப்போது யோசியுங்கள்: உங்களது கவனம் எதில் இருக்கவேண்டும்? வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுவதிலா? கைபேசியில் நேரம் போவது தெரியாமல் மேய்வதிலா?

உங்கள் வாழ்வின் வெற்றி உங்கள் கையில்

உங்கள் குறிக்கோள்களை நினைவுபடுத்தும் தூண்டுகோல்களை உருவாக்குங்கள். அவற்றைப் பயன்படுத்தி வெற்றிக்குத் தயாராகுங்கள். நிறைய நேரம் படிப்பதில் செலவழிக்க வேண்டுமென்றால் உங்கள் படுக்கையறை மேஜையில் ஒரு புத்தகத்தை வையுங்கள். புதியதாகச் சமைக்க வேண்டுமா, அதற்கான சாமான்களை விலாவாரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் கைபேசியின் சார்ஜர் படுக்கையறைக்கு வெளியே இருக்கட்டும். அலாரம் வைக்க என்று தனியாக ஒரு கடியாரம் வாங்குங்கள்.

உங்களை உங்கள் குறிக்கோளிலிருந்து வெளியே இழுக்கும் தூண்டுகோல்களைத் தவிர்த்துவிடுங்கள். உதாரணத்திற்கு சமூகவளைத்தளச் செயலிகளை உங்கள் கைபேசியில் செயலிழக்கச் செய்யுங்கள். தகவல் சொல்லிகளை (notifications) – மின்னஞ்சல் உட்பட – தவிர்த்துவிடுங்கள். சாப்பிடும் நேரங்களில் யார் கைகளிலும் கைபேசி இருக்கக்கூடாது என்பது உங்கள் குடும்பத்தில் எழுதப்படா விதியாக இருக்கட்டும்.

வேகத் தடை

எத்தனை முறை ஜஸ்ட் ஏதாவது வந்திருக்கிறதா பார்க்கலாம் என்று செல்போனைக் கையில் எடுத்துவிட்டு மணிக்கணக்கில் அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்? இந்த வழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். இவையெல்லாம் உங்களிடத்தில் ஒரு அதிருப்தியை உண்டாக்கும். ஐயோ, இவ்வளவு நேரம் வீணாக்கிவிட்டோமே என்று உங்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும். சாலையில் எதிர்படும் வேகத் தடை போல செல்போனை கையில் எடுப்பதற்கும் தடைகள் இருக்கட்டும். உங்கள் செல்போனைச் சுற்றி ஒரு ரப்பர்பேண்ட் போட்டு வையுங்கள். அது செல்போனைத் தொடவிடாமல் உங்களைத் தடுக்கும். இல்லையென்றால் உங்கள் லாக்-ஸ்க்ரீனில் ‘போனை எடுத்துப் பார்க்க வேண்டுமா?’ இப்போது என்ன அவசரம்?’, ‘தேவையா?’, ‘எதற்கு?’ போன்ற கேள்விகளைப் போட்டு வையுங்கள்.

உடல்/மனம் சார்ந்த மாற்றங்கள்

கைபேசியில் மும்முரமாக இருக்கும்போது உங்கள் உடல்மொழிகளைக் கொஞ்சம் கவனியுங்கள்: எந்த நிலையில் உங்கள் உடல் இருக்கிறது? நேராக, நிமிர்ந்து முதுகு வளையாமல் உட்கார்ந்திருக்கிறீர்களா? நீங்கள் இப்போது உங்கள் கைபேசியில் செய்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? அதைத் தொடரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடலில் மனதில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உணர ஆரம்பித்தீர்கள் என்றால் கைபேசி தரும் போதையிலிருந்து நீங்கள் உங்களை விலக்கிக் கொள்வது சுலபமாகிவிடும்.

குறிப்பாக கேம்ஸ் ஆடும்போது ஒரு நிலையில் வெற்றி பெற்றவுடன் ஏற்படும் மகிழ்ச்சி, அடுத்த நிலையில் முதல்முறை வெற்றி கிட்டாதபோது ஏற்படும் கோபம் முதலியவற்றைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரேமுறையில் நான்கு அல்லது ஐந்து நிலைகளைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மெதுவாக உங்கள் மனதில் ஏற்படும். அது இயலாதபோது உங்கள் மனநிலையைக் கவனியுங்கள். சாதாரணமாக யாராவது வந்து பேசினால்கூட சுள்ளென்று ஒரு கோபம் பொங்கும். இதெல்லாம் நீங்கள் கைபேசியின் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதன் அறிகுறிகள். ஆரம்பத்திலேயே இந்த ஆட்டங்களிலிருந்து விடுபட்டு விடுங்கள். ‘வெற்றி பெற வேண்டுமா? நண்பர்களிடம் உதவி கேளுங்கள்’ என்று உங்களுக்கு மெல்ல வலைவிரிக்கப்படும். உஷார்!

கைபேசி இல்லா நேரங்கள்

அவ்வப்பொழுது கையில் கைபேசி இல்லாமல் பழகுங்கள். நடைப்பயிற்சியின் போது கைபேசியை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லுங்கள். மணி பார்க்க கைகடியாரத்தைக் கட்டிச் செல்லுங்கள். அலுவலகத்திற்குப் பேருந்தில் செல்லும்போது ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள். கைபேசியை எடுத்துப் பார்க்கவேண்டும் என்று கை அரிக்கும்; அடக்குங்கள். அந்த அடக்குமுறை உங்கள் உடம்பில், மனதில் என்னென்ன மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என்று கூர்ந்து கவனியுங்கள். அந்த ஆர்வம் சற்று நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.

உங்களைக் காக்கும் தொழில்நுட்பம்

நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் கைபேசியைப் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிய பலவித செயலிகள் இருக்கின்றன. அவை காட்டும் பயமுறுத்தும் தகவல்களைக் காணத் தயாராகுங்கள். உங்களை அறியாமலேயே பலமணி நேரங்களை விரயம் செய்திருப்பீர்கள். பிரச்னை கொடுக்கும் வலைத்தளங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல செயலிகள் இருக்கின்றன. சில வலைத்தளங்கள் எத்தனை நேரம் நீங்கள் கைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியும் என்று உங்களைச் சவாலுக்கு அளிக்கும். அதனைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர் எத்தனை நேரம் ‘ஆஃப்லைனில்’ இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லும்.

ஆப்பிள் போன்களில் ஒரு செயலி இணைத்திருக்கிறார்கள். இதன்மூலம் ‘வாகனம் ஓட்டும்போது தொந்திரவு செய்யவேண்டாம்’ என்று உங்கள் போனில் போட்டுவிடலாம். யாராவது உங்களை நீங்கள் வாகனம் ஓட்டும்போது கூப்பிட்டால் இந்தச் செயலி அவர்களுக்கு ஒரு தயார்நிலைச்செய்தி அனுப்பிவிடும். வாகனம் ஓட்டும்போது பேசிக்கொண்டே செல்வதைத் தடுக்கும் ஒரு நல்ல செயலி இது. ஆண்ட்ராய்ட் கைபேசியிலும் இந்தச் செயலி இருக்கிறது. நீங்கள் எவ்வளவு நேரம் கைபேசியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் லாக்-ஸ்க்ரீனில் காட்டும் இந்தச் செயலி.

ஒரு தொழில்நுட்பம் இன்னொரு தொழில்நுட்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

வெளிஉலக உந்துதல்கள்

பேருந்துகளில் செல்லும்போது அல்லது நடந்து செல்லும்போது மற்றவர்கள் தங்களது கைபேசிகளை எடுத்துப் பார்க்கும்போது உங்களுக்கும் பார்க்க வேண்டுமென்று தோன்றலாம். அப்போது உங்களது நோக்கம் என்ன என்று சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் உங்கள் கைபேசியுடன் ஆரோக்கியமான உறவை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு புதிய ஆரோக்கியமான பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நீண்ட ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டு உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.

இவை எதுவுமே உங்கள் கைபேசியை உங்களிடமிருந்து விலக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்: எத்தனை பேர் தாங்கள் இறக்கும் தருவாயில் ‘நான் முகநூலில் இன்னும் சிறிது நேரத்தைக் கழித்திருக்கலாம்’ என்று சொல்வார்கள்? மறுபடி மறுபடி ஒரு கேள்வியை உங்களிடமே கேட்டுப்பாருங்கள்: ‘இது என் வாழ்க்கை. இதில் எத்தனை நேரம் நான் கைபேசியில் வீணாகக் கழிக்கப் போகிறேன்?’

அந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

முப்பது நாட்கள் நீங்கள் இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், உங்கள் கைபேசியை விவாகரத்து செய்துவிடலாம் என்கிறார் திருமதி காதரீன் ப்ரைஸ். முயற்சி செய்யுங்களேன். 

Posted on Leave a comment

இரண்டாவது மொழி | ரஞ்சனி நாராயணன்



ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல
வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு
நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’,
‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில்
தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது,
நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே, என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம்
சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’
என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா
கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது
பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று:
‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.


ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை
பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.


எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும்
அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி
அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போதுதான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில்
பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக
ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.


என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான்
பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது – நாயெல்லாம் குலைக்கிறது – என்று
நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே
செத்து விழுந்து விடும்.


கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை
வேடிக்கை பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது
வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத
வேட்கை வந்துவிட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர்
வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும்
பொதுவான நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும்.
முற்றத்தில்தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு
வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள்
அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன்
அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.


கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும்
எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே
படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும்
என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.
இந்த சமயத்தில்தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம்
குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம்.
வரிசையாகக் குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம்,
காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப்
பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது
அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன்.
அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியைச்
சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும்
ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா என்று நினைக்கிறேன்.


பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப்
பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக்
கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்து
மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று.
ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில்
அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாகப் பல வருடங்கள் தமிழைத் தவிர
வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.


திருமணம் ஆகி, கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம்
போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும்
என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின்
அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று
கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன்
நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி
மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள்.
நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’
என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம்
எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி
எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை
எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.
ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு
என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ‘நீ
இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு
மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே
பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக்
கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.


பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ்
பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம்
கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது
சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்:
‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ்
தெரியவில்லை?’ என்று.
‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும்
ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்
ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள்.
மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம்
நினைச்சுண்டே பார்க்காதே! சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு
ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை
கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்


‘தோபஹர் (दोपहर) ………
3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)
3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு
என் பெண்ணிடம் ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!
என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது
கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!
இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு டீவியைக்
கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு
வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா.
கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம்
டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க
ஆரம்பித்தேன்.


என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த
அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து
விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ்
ஆகிவிட்டேன்.
அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி
ஒன்று புதுக் குடித்தனம் வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து
அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை,
எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு
சர்க்கரையைப் போட்டுச் சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச்
சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.


‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்;
இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது’ என்று
‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.
ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா.
ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ
எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா.
ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். 



‘வாட் இஸ் யுவர் நேம்?’
‘மை நேம் இஸ் ருசி.’
‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்
‘ஆண்டிஜி! ஐ … முஜே… ஒன்லி ஒன் … ஏக் ஹஸ்பெண்ட்…
ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்…?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை
‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா?’ என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று
ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.


அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை
பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ? கிட்டத்தட்ட பத்து நாட்கள்
ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதைவிட நான் ஹிந்தி கற்றுக்
கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை
சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை
பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.


‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’
என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ
அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே
இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.


என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ
சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள்
மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவைக் காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே
இருந்தேன். ருசியைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன்.
கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரைக் கவனித்துக் கொள்ளும்
மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.
ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா
இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச்
சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை
வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது.
அதனால்தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்சினை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு;
அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து
வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல்
வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.


இரண்டாவது மொழிதானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு
மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை.
ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன
செய்ய?



Posted on Leave a comment

வீதியோரக் குழந்தைகள் | ரஞ்சனி நாராயணன்

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. மாலைப்பொழுது. வெளியில்
போய்விட்டு வந்துகொண்டிருந்தோம். எங்கள் வண்டி சிக்னலில் நின்றிருந்தது.
நடைபாதையில் ஒரு சிறுமி – பரட்டைத்தலையும், அழுக்கு உடைகளுமாக – மிஞ்சிப்போனால்
பத்து அல்லது பதினோரு வயது இருக்கலாம். திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு வேக
வேகமாக ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கலவரம்;
கண்களில் அதீத பயம். அவள் பின்னாலேயே ஒரு சிறுவன் – அவளைவிட ஒன்றிரண்டு வயது கூட
இருக்கலாம். வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி. அரைகுறையாக வளர்ந்திருந்த மீசையும் தாடியும்
அவனை விடலையாக
க்
காட்டியது. இவள் திரும்பிப் பார்த்தவுடன் கால்களை அகட்டி நின்று கொண்டு அசிங்கமாக
சைகை காண்பித்தான். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது.
உடலெல்லாம் கூசியது. அந்தச் சிறுமி இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தாள். அதற்குள் பச்சை
விளக்கு எரியவே எங்கள் வண்டி நகர்ந்துவிட்டது. பலநாட்கள் தெருவில் கண்ட இந்தக்
காட்சியே மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

பிஞ்சிலேயே பழுத்து வக்கிரமாகிவிட்ட அந்தச் சிறுவனை யார்
கட்டுப்படுத்துவது? சமூகத்தில் இந்த மாதிரியான விடலைப் பருவத்தில் அலையும் சிறுவர்களை
யார் திருத்த முடியும்? ஒருபக்கம் படிப்பில் சூரப்புலிகளாய் சிறுவர்கள்; இன்னொரு
பக்கம் இதைப்போன்ற வீதியோரங்களில் வளரும், பிற்காலத்தில் சமூக விரோதிகளாக
உருவாகும் குழந்தைகள். இந்தக் குழந்தைகளை திசை மாற்றி நல்லவர்களாய், சமூகத்தில்
தலை நிமிர்ந்து வாழுபவர்களாய் செய்ய முடியாதா? இந்தக் கேள்விகள் மனதை குடைந்து
கொண்டிருந்தன.
இந்த மாதிரி சிறுவர்களைப் பொதுவாக வீதிக்குழந்தைகள்
என்று குறிப்பிடப்படுகிறார்கள் (street children). யூனிசெப்-பின் கருத்துப்படி
பதினெட்டு வயசுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் – வீதிகளை அல்லது மனிதர்கள்
யாருமில்லாத இடங்களை
த்
தங்களது வாழ்விடங்களாக மாற்றிக்கொண்டு
, போதுமான பாதுகாப்போ அல்லது அவர்களை
அக்கறை எடுத்து
க்
கவனிக்க யாரும் இல்லாமலோ இருப்பவர்கள் வீதிக் குழந்தைகள். சில வளர்ந்த நாடுகளில்
சில குழந்தைகள் த்ரோன்-அவே (thrown-away) குழந்தைகள் என்று ஒரு தனியான பிரிவின்
கீழ் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தாய் அல்லது தந்தை
மட்டுமே இருக்கும் ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களாக
இருக்கிறார்கள்.
இந்தக்
குழந்தைகளைப் பற்றிய முதல் ஆவணம் 1848ல் ஆலன் பால் என்பவர் எழுதிய சோவியத்
ரஷ்யாவின் கைவிடப்பட்ட குழந்தைகளைப் பற்றிய புத்தகத்தில் காணப்படுகிறது. ‘அநாதைகளாகவும்,
கைவிடப்பட்டும் வாழும் குழந்தைகள் பழங்காலத்தில் இருந்தே துன்பத்திற்கு ஆளாகி
வருகிறார்கள். அகஸ்டன் ரோமில் இருக்கும் ஆண் விபசாரிகள் பலரும் இந்தச் சிறுவர்களே’
என்று இந்த நூலில் குறிப்பு காணப்படுகிறது. லார்ட் ஆஷ்லி 1848ல் சுமார்
30,000க்கும் மேற்பட்ட நிர்வாணமான, இழிந்த நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்கள் லண்டன்
நகரத்தில் சுற்றுவதாக
க்
குறிப்பிடுகிறார். முதல் உலகப்போரில் ஏற்பட்ட அழிவிற்குப் பிறகு சுமார் 7 லட்சம்
வீதியோர
ச்
சிறுவர்கள் இருப்பதாகவும், இவர்கள் தங்களுக்குள் குழுக்களை அமைத்துக்கொண்டு சின்னச்சின்ன
திருட்டுக்களிலும் விபசாரத்திலும் ஈடுபடுவதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் சுமார் ஒரு
மில்லியன் வீதியோரக் குழந்தைகள் இருக்கின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.
அவர்களைத் தவிர சின்ன நகரங்களிலும், ஊர்களிலும் இன்னும் நிறைய பேர்கள்
இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான இந்த
ச் சிறுவர்கள் வார்த்தைகளில் விவரிக்கவொண்ணாக் கொடுமையான நரக வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் குழந்தை
த் தொழிலாளிகளாக மாறுகின்றனர்.
பாதி வயிற்றுக்கு உணவு, கொளுத்தும் வெயிலிலிருந்தும், தாங்க
இயலாத குளிரிலிருந்தும் கொட்டும் மழையிலிருந்தும் காப்பாற்றாத உடைகள், ஒரு நாகரீக
சமுதாயத்தின் அடையாளங்களான கல்வி, மருத்துவம் போன்ற வசதிகள் எதையும் அறியாமல்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த வீதியோரக் குழந்தைகள். முடிவே இல்லாத வலியும்,
வேதனைகளும் நிறைந்தது அவர்களது வாழ்க்கை. வீதியோரக் குழந்தைகள் என்பவர்கள்
சுருக்கமாகச் சொன்னால் குப்பை பொறுக்கும் சிறுவர்கள். இவர்களில் காலணிகளை பாலிஷ்
செய்பவர்கள், கூலிகள், சிறு சிறு பொருட்களை விற்பவர்கள் எல்லோரும் அடக்கம்.
இந்தக் குழந்தைகள் இப்படி வீதியோரக் குழந்தைகளாய் மாற என்ன
காரணம்?
குடும்பத்தில் நிலவும் வறுமை, குடும்பச் சண்டை. இவை தவிர, அன்போ பாசமோ பெற்றவர்களிடமிருந்து
கிடைக்காதது
.
மாற்றந்தாய்
க்
கொடுமை, பெற்றோர்களை
ச்
சிறுவயதிலேயே இழக்க நேரிடுவது ஆகியவை இவர்கள் வீதிகளில் அடைக்கலம் புகக்
காரணங்கள். இவை தவிர, சமவயதுக்காரர்களுடனான போட்டி, அவர்களை மிஞ்சி இருக்க
வேண்டும் என்ற மன உந்துதல், நகர வாழ்க்கையின் வசீகரம், சுதந்திரமாக வாழ வேண்டும்
என்கிற ஆசை, தனக்கான அங்கீகாரம் கிடைக்க ஏங்குதல் என்று பல பல
க் காரணங்களை கூறலாம்.
இந்தக் காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்கள்
கானல் நீரைத் தேடி ஓடும் மான் போல நல்ல வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டே
இருக்கிறார்கள். சிறுவயதிலேயே இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகி
த் தங்கள் குழந்தைப்
பருவத்தையும் தொலைக்கிறார்கள். ஒரு குடும்பச்சூழலில் கிடைக்கக்கூடிய அன்பு, பாசம்,
அக்கறை, வசதிகள் எல்லாவற்றையும் இழக்கிறார்கள். இளம் வயதிலேயே அடிப்படைத்
தேவைகளைக்கூட தாங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலைமைக்குத்
தள்ளப்படுகிறார்கள். இதனால் மற்ற குழந்தைகளுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள மிகப்
பெரிய வித்தியாசங்களை உணருகிறார்கள்.
தங்களுக்கென்று ஒரு போக்கிடம் இல்லை என்பதைத் தினம் தினம் உணருவதுடன்,
மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். வீதிகள் அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைக் கொடுப்பதில்லை
என்பதுடன் சமுதாயமும் அவர்களை ஏற்பதில்லை. உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும்
இந்தச் சிறுவர்கள் குப்பைத் தொட்டிகளில் தங்கள் உணவைத் தேடுகிறார்கள்; பல நாட்கள்
பசியுடன் கழிக்கிறார்கள். நீரைக் குடித்தும், சில வேளைகளில் தகாத தொடர்புகள் மூலம்
போதை மருந்துக்கு ஆளாகி, அவற்றை உட்கொண்டும் தங்கள் பசியைத் தணித்துக்
கொள்ளுகிறார்கள்.
போஷாக்குப் பற்றாக்குறையினால் பல்வேறு குறைபாடுகளால்
பாதிக்கப் படுகிறார்கள். இளம் வயதிலேயே சிகரெட், மது, போதை மருந்துகளுக்கு ஆளாகி
இவர்களது வாழ்க்கை உருப்பெறுவதற்கு முன்பே அழியத் தொடங்குகிறது. போக்குவரத்து மிகுந்த,
ஜனசந்தடி நிறைந்த இடங்களில் இருப்பதால் நாள் முழுவதும் தூசியினாலும் வேறுவிதமான
மாசுப் பொருட்களாலும் பாதிக்கப்பட்டு ஆஸ்த்துமா, மூச்சுக் குழாய் அழற்சி நோய்
எனப்படும் பிராங்கைடிஸ் மற்றும் கடுமையான காச நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் மட்டுமின்றி இந்தப் பிரச்சினை உலகளவில் காணப்படுகிறது.
சில நாடுகளில் அவர்களது கலாசாரமே குழந்தைகளுக்கு எதிரியாக
மாறி அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி செய்கிறது. காங்கோ மற்றும் உகாண்டா
நாடுகளின் சிலபகுதிகளில் பேய் பிடித்திருப்பதாக நம்பப்பட்டு சில குழந்தைகள்
அவர்களது குடும்பத்தினரால் வீதிக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு சிறுமி
கற்பழிப்பட்டாள் என்றோ அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாள் என்ற சந்தேகம்
ஏற்பட்டால், அல்லது பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணத்தை மறுத்தாலோ ஆப்கானிஸ்தான்
நாட்டில் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறார்கள். வடக்கு நைஜீரியாவில் ஒரு
பிரிவினர் தங்கள் குழந்தைகளை புனித குரானைக் கற்பதற்கென மல்லம் என்று
அழைக்கப்படும் ஆசிரியரிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு ஒப்பந்தத்தின்
அடிப்படையில் அனுப்புகிறார்கள். ஒப்பந்தக் காலத்தில் இந்தக் குழந்தைகள் தங்கள்
வாழ்வாதாரங்களை வீதிகளில் பிச்சையெடுத்து தேடிக் கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி
சம்பாதிப்பதில் குருவிற்கும் கட்டாயமாக
ப் பங்கு உண்டு. கொடுக்காத பட்சத்தில்
கடுமையான தண்டனைகளுக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள்.
புனர்வாழ்வு மையங்கள்:
இந்தக் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கோ, சிறார் சீர்திருத்த
பள்ளிகளுக்கோ, அல்லது புனர்வாழ்வு மையங்களுக்கோ அனுப்பும் முயற்சிகளை பல அரசுகள்
எடுக்கின்றன. அரசு சாராத அமைப்புகளும் இந்த
ப் பணியில் ஈடுபடுகின்றன.
தினமும் சுமார் 25 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டு, சீர்திருத்த
அமைப்புகளுக்கு அனுப்ப
ப்படுகிறார்கள்.
ஆனாலும் இன்னும் நிறைய சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
பல அமைப்புகள் இத்தகைய குழந்தைகளை
க் கண்டுபிடித்து அவர்களை மற்ற சிறுவர்களைப்
போல வாழவைக்க, எல்லாவிதமான முயற்சிகளும் செய்து வருகின்றன. இந்த அமைப்புகள் இந்தச்
சிறுவர்களை துணையில்லாத குழந்தைகள் என்று பொதுப்பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
வீதியில் வாழும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளிகள், காணாமல் போன, கடத்தப்பட்ட
குழந்தைகள், வீட்டைவிட்டு ஓடி வந்த குழந்தைகள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு
ஈர்க்கப்பட்டு ஓடிவந்த குழந்தைகள், குற்றம் புரிந்த குழந்தைகள் எல்லோரும் இந்த
த் துணையில்லாத குழந்தைகள் என்ற
வகையில் அடங்குவர்.
இந்த அமைப்புகளின் முக்கியப்பணி குழந்தைகளுக்கு நல்வாழ்வு
கொடுப்பதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் தகுந்தவாறு அவர்களது புனர்வாழ்வு
முயற்சிகளும் அமைகின்றன. கடத்தப்பட்ட குழந்தைகள், குப்பை பொறுக்கும் சிறுவர்கள்,
குழந்தை
த்
தொழிலாளிகள் ஆகியோர் மீட்டெடுக்கப்பட்ட 24மணி நேரத்திற்குள் அவர்களது
குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. குழந்தைகள் நல அமைப்பு, காவல்துறை,
மற்றும் ஒரு ஆலோச
னையாளர்
ஆகியோர் குழந்தையுடன் அதற்குத் தெரிந்த மொழியில் பேசி அதன் ஊர் மற்றும்
பெற்றோர்களைப் பற்றிய விவரங்களை அறிகிறார்கள்.
சிறுவர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார்ப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.
14 வயதுக்கு மேற்பட்ட துணையில்லாக் குழந்தைகளில் முக்கால்வாசிபேர் பள்ளிப்படிப்பை
ப் பாதியில் விட்டவர்கள்.
அவர்களுக்கென சில தொழில்கள் கற்பிக்கப்படுகின்றன. உணவக மேலாண்மை, தச்சு வேலை,
தையல் வேலை ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. சிலர் அழகு நிலையங்களிலும், ஐஸ்க்ரீம்
பார்லர்களிலும், ஷாப்பிங் மால்களிலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு
ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை – தனியாக
த் தங்கள் வாழ்க்கையைச் சமாளிக்கும் வரை – காப்பகங்களே அவர்களின்
பொறுப்புகளை ஏற்கின்றன.
நீதியின்முன் குற்றவாளிகளாக நிறுத்தப்படும் சிறுவர்கள்,
பரோலிலோ அல்லது வழக்கு விசாரணை முடிந்த பின்னரோ நல்வழிப்படுத்தும் காப்பகத்தின்
கண்காணிப்பு இல்லங்களில் வைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கென இருக்கும் சிறப்பு
இல்லங்களில் இவர்களுக்கு
த்
திருந்தி வாழ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. யோகா, தியானம் முதலியவை
கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இவர்களை வழிக்குக் கொண்டுவருவது அத்தனை சுலபமான
காரியம் அல்ல. ஆலோசனை கூறுபவர்களுடன் பேசுவதற்கே இந்த
ச் சிறுவர்கள் நீண்ட காலம்
எடுத்துக் கொள்ளுகிறார்கள். தங்களது கடந்த கால வாழ்க்கைப் பற்றி பேச
விரும்புவதில்லை. ஆரம்பத்தில் அவர்கள் ஆலோசகர்களின் முகத்தைப் பார்க்கவும்
செய்வதில்லை. அவர்கள் செய்த குற்றத்தைப் பற்றிப் பேசாமல் அவர்களது பின்னணி பற்றி
பேச ஆரம்பிப்பார்கள் இந்த ஆலோசகர்கள். அவர்களிடம் உள்ள நல்லவைகளை அதிகம் எடுத்துச்
சொல்லுவார்கள். ஆலோசகர்கள் அவர்களின் நண்பன்; அவர்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற
நம்பிக்கை வந்த பின்புதான் அவர்கள் பேசத் தொடங்குவார்கள். இந்த
க் கண்காணிப்பு இல்லங்களில்
இந்தச் சிறுவர்களுக்கு மருத்துவ வசதி, அவ்வப்போது உடல்நலப் பரிசோதனை மற்றும்
அவர்களது குடும்பத்துடன் தொடர்பு என பலவகையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
குடும்பத்தில் பலவகையான துன்பங்களுக்கு ஆளானாலும் இவர்களுக்கு
இந்த இல்லங்களுக்கு வர விருப்பம் இருப்பதில்லை என்பது வருத்தமான உண்மை. முதல் முறை
வீதிக்கு வரும்போது அந்த
க்
கொடுமையான அனுபவத்தால் பயந்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் இவர்களை மீட்டால்
நலவாழ்வு மையங்களுக்கு விருப்பத்துடன் வருவார்கள். சில நாட்கள் வீதிகளில் வாழ்ந்து
பழகிவிட்டால் அவர்களால் இந்த மையங்களுக்கு வந்து இருக்க முடியாது. எந்தக் கவலையும்
இல்லாமல் வீதிகள் தரும் சுதந்திரம் இந்த இல்லங்களில் கிடைக்காது. இல்லங்களின்
கட்டுப்பாடுகளுக்கு
க்
கட்டுப்பட்டு நடப்பதை பெரிய சுமையாக எண்ணுகிறார்கள். பொதுவாக மீட்கப்படும் ஆண்
சிறுவர்கள் அதிக நாட்கள் இங்கு இருப்பதில்லை. சமயம் கிடைக்கும்போது வெளியே
ஓடிவிடுகிறார்கள்.
தொழிற்சாலைகள், உணவகம், கட்டட வேலை நடக்கும் இடங்களில் வேலைபார்க்கும்
குழந்தை
த்
தொழிலாளிகள் மீட்கப்பட்டு
, புனர்வாழ்வு கொடுக்கப்படுகிறது. இதற்கு 3 மாதங்களில் இருந்து ஒரு
வருடம் வரை ஆகலாம். காவல்துறையின் உதவியுடன் முதல் விவர அறிக்கை பதிவு
செய்யப்படுகிறது. இந்தக் குழந்தைகளுக்கு முதலில் முறைசாராக் கல்வி
அளிக்கப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு இவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
இப்படி மீட்கப்பட்ட சிறுவர்களில் இருவர் படித்து பொறியாளர்கள் ஆகியிருக்கின்றனர்.
15 சிறுவர்கள் டிப்ளமா படிப்பு முடித்திருக்கிறார்கள் என்று மீட்பு மையங்களின்
தகவல் கூறுகிறது.
சமீபத்தில் இளம் குற்றவாளிகள் சட்டத்தில் திருத்தங்கள்
செய்யப்பட்ட போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள், இதற்கான
முறையான அமைப்புகள் இல்லாத குறை, வலுவான அரசியல் கொள்கைகள் இல்லாமை இவற்றால்
வீதிகளில் நடமாடும் சிறுவர்களை நல்வழிக்குக் கொண்டுவந்து அவர்களையும் சமுதாயத்தில்
ஒரு அங்கமாக மாற்றுவது என்பது கடினமான ஒன்று. குழந்தைகளின் உரிமை என்பது
சட்டத்தில் அத்தனை முக்கியத்துவம் பெறுவதில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.
இந்த அமைப்புகள் பொதுமக்களிடம் வைக்கும் ஒரு கோரிக்கை:
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுவிடங்களில் இந்த மாதிரிச்
சிறுவர்களைப் பார்த்தால் உடனே ஏதாவது ஒரு மையத்தை
த் தொடர்புகொண்டு விவரம்
சொல்லுங்கள். ஒரு குழந்தையின் எதிர்காலம் பாதுகாக்கப்படும், இந்த ஒரு சின்ன
செய்கையினால்.
நினைவு வைத்துக் கொள்ளுவோமாக!
Posted on Leave a comment

நேர வங்கி | ரஞ்சனி நாராயணன்

எனது மாணவர்கள் நேரமேயில்லை என்று சொல்லும்போது நான் கேட்பேன்: ‘யாருக்கெல்லாம் 25 மணி நேரம் வேண்டும் ஒரு நாளைக்கு?’ என்று. முக்கால்வாசிப் பேர் கையைத் தூக்குவார்கள், அடுத்து நான் போடப்போகும் மொக்கை ஜோக்கை அறியாமல். அவர்களது ஆவலைத் தூண்ட இன்னொரு கேள்வி கேட்பேன்: ‘நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்?’ சிலருக்கு இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் தெரிந்துவிடும், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று. ‘ப்ஸ்…’ என்று ‘உச்’ கொட்டிவிட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். ‘நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னால் எழுந்திருங்கள்’ என்று நான் விடாமல் சொல்லுவேன்.

என்னதான் சொன்னாலும், கடந்துபோன காலங்கள் போனதுதான். அவற்றை மீட்டுக் கொண்டுவர முடியாது என்பதெல்லாம் நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் நாம் செலவழித்த நேரங்களைp பிற்காலத்தில் நமக்காகp பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். எப்படி என்று மேலே படியுங்கள்.

கிறிஸ்டினாவிற்கு 67 வயது. பணிஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியை. தனியொருத்தியாக வாழ்ந்து வரும் இவர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். இவர் இருப்பது சுவிட்சர்லாந்து நாட்டில். இந்த நாட்டின் ஓய்வூதியம் மிக அதிகம். வயதான காலத்தில் சாப்பாட்டிற்கோ, மருத்துவமனை செலவுகளுக்கோ கவலைப்பட வேண்டாம். அப்படியிருக்கும்போது, இந்த வயதில் நிம்மதியாக ஓய்வெடுக்காமல் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அவர் சொல்லுகிறார்: ‘நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை. எனது நேரத்தைச் சேமிக்கிறேன். எனக்குத் தேவையானபோது அதை வங்கியிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்வேன்’ என்கிறார். நேரத்தைச் சேமிக்க முடியுமா? முடியும் என்றால் எதற்காக நேரத்தைச் சேமிக்கவேண்டும்? சேமித்து என்ன செய்வது?

சுவிட்சர்லாந்துநாட்டில் இருக்கும் செயின்ட் காலன் (St. Gallen) நகரம்தான் முதன்முதலில் இந்த நேர வங்கி என்னும் கருத்துப்படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிகவும் புதுமையான இந்த நேர வங்கி எப்படிச் செயல்படுகிறது? பணிஓய்வு பெற்றவர்கள் தங்களைவிட வயதானவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலே நாம் பார்த்த கிறிஸ்டீனா வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என்று 87 வயதான ஒரு வயோதிகரைப் பார்த்துக் கொள்ளுகிறார். பார்த்துக் கொள்வது என்றால் அவருக்காக கடைகண்ணிக்குப் போய்வருவது; அவரது வீட்டைச் சுத்தப்படுத்துவது; புத்தகம் படித்துக் காட்டுவது; மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, அவருடன் அரட்டை அடிப்பது, அவருக்குச் சமைத்துப் போடுவது போன்றவை. இதனால் கிறிஸ்டீனாவிற்கு என்ன நன்மை? இதற்காக அவருக்குப் பணம் கிடைக்காது. அதற்கு பதிலாக இந்த நான்கு மணி நேரம் அவரது ‘நேர வங்கி’ கணக்கில் சேர்த்து வைக்கப்படுகிறது. அவருக்கு உடம்பு முடியாமல் போகும்போது வேறு ஒருவரின் உதவியை அவர் நாடலாம். அவர் சேமித்து வைத்திருக்கும் நேரங்களில் இன்னொரு ஆர்வலர் வந்து இவருக்கு உதவுவார். அந்த ஆர்வலரின் வங்கிக் கணக்கில் இந்த நேரம் சேமித்து வைக்கப்படும்.
எதற்காக இப்படி என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா?

சுவிட்சர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1960ம் ஆண்டு பத்து குடிமகன்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருந்தார். இப்போது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆறு பேர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல். இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும், தினசரி வேலைகளுக்கே அடுத்தவர் உதவியை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தனை வருடங்களில் ஓய்வூதியத் தொகையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருக்கும் நான்கு பேர்களின் பங்களிப்பு பணிஓய்வு பெற்ற ஒருவரின் ஓய்வூதியத் தொகையாக மாறுகிறது. இப்போதிருக்கும் நிலையில் இன்னும் நாற்பது ஆண்டுகளில் இரண்டு பேர்கள் இந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.

வயதானவர்களின் – குறிப்பாக சிறப்புக் கவனம் தேவைப்படுபவர்களின் – எண்ணிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. செயின்ட் காலன் நகரம் சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஜெர்மனி எல்லையின் அருகில் அமைந்திருக்கிறது. இங்கு ஏற்கெனவே பல தன்னார்வத் திட்டங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருவதால் இந்த நேர வங்கி திட்டத்தையும் இங்குச் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சுவிஸ் ரெட் கிராஸின் உள்ளூர் அமைப்பு 2008ம் ஆண்டிலிருந்து இதுபோல ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியைப் பரிமாறிக்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே இங்கு நடைமுறையில் இருக்கும் இதேபோன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போடுவது இந்த நேர வங்கியின் நோக்கம் அல்ல. வயதானவர்களின் தினசரித் தேவைகளை இந்த நேர வங்கி ஆர்வலர்கள் செய்து கொடுக்கிறார்கள். இந்த சேவையின் முக்கிய நோக்கம் வயதானவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் சுதந்தரத்தை இழக்காமல் நீண்ட நாட்கள் வாழ உதவுவதுதான்.

மருத்துவமனையில் அதிகப் பொருட்செலவு என்பதுடன் வயதானவர்களுக்கு மனத் திருப்தியும் அளிப்பதில்லை. இந்த வகையில் நேர வங்கி முற்றிலும் மாறுபடுகிறது. முதியவர்களின் தனிமையும் இந்த நேர வங்கி ஆர்வலர்களின் மூலம் குறைகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்று சேரவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் முடிகிறது.

நேர வங்கி என்பதுவும் ஒருவித ஓய்வுதியம் போலத்தான். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் சுவிஸ் ஃபெடரல் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம். இளம் வயதுக்காரர்கள் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று முதியவர்களைப் பார்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தைச் சேமித்து வைக்கிறார்கள். தங்களது வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வலர்களை இந்த நேரங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு பேசத் தெரிந்தவர்களாகவும், வயதானவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு வருடம் வேலை செய்தவுடன் நேர வங்கி அவர்களுக்கு நேர வங்கி அட்டையை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது நேர வங்கி இவர்களது சேவையைப் பரிசீலனை செய்துவிட்டு இன்னொரு ஆர்வலரை இவர்களது உதவிக்கு அனுப்பி வைக்கிறது.

 மொத்த ஜனத்தொகை 72,522 உள்ள செயின்ட் காலனில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 12,000 பேர்கள் இருக்கிறார்கள். இவர்களது பங்களிப்பு இந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். 300 தன்னார்வலர்கள் ஒரு வாரத்திற்கு 2-3 மணிநேரம் என்று 42 வாரங்களுக்கு சேவை செய்வதாக இருந்தால் மொத்தம் 25,000 மணிநேரங்கள் சேமித்து வைக்கப்படும். இந்த இலக்கை அடைந்துவிட்டாலே இந்தத் திட்டம் வெற்றி என்று சொல்லலாம். ஒரு தன்னார்வலர் அதிகபட்சமாக 750 மணி நேரங்களைச் சேமித்து வைக்கலாம்.

இந்தத் திட்டம் சுவிஸ் அரசின் ஓய்வுதியச் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், வேறு சில சமூகப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்துவதுடன் கூட்டுக் குடும்பம் போன்ற பலவீனமடைந்துள்ள சமூகக் கட்டுமானங்களையும் புனரமைக்க இந்தத் திட்டம் உதவும் என்று சுவிஸ் அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த நாட்டின் குடிமக்கள் இந்தத் திட்டத்தை வரவேற்பதுடன், ஆதரவும் கொடுக்கிறார்கள். பல இளம் வயதினரும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் இதைச் சட்டபூர்வமாக அமலாக்க இருக்கிறது.

இது ஒரு தன்னார்வத் தொண்டு என்றாலும் செயின்ட் காலன் அதிகாரிகள் இதற்கென்று 150,000 சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கி இருக்கிறார்கள். உதவி தேவைப்படுபவர்களை ஆர்வலர்கள் அணுகுவதற்கு ஏதுவாக ஒரு இணையத்தளமும், ஆர்வலர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும், மற்ற நிர்வாகச் செலவுகளுக்காவும் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை என்றால் ஆர்வலர்களின் சேமிப்பு நேரத்தை ஈடுகட்டுவதற்கும் இந்தப் பணம் உதவும்.

பணிஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. மாறாக இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்ய விரும்புகிறார்கள். பணத்தேவை இவர்களுக்கு இல்லாதபோதும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நேர வங்கி இந்த எல்லா விஷயங்களையும் பூர்த்தி செய்யும்.

இந்த நேர வங்கி பற்றி Andric Ng என்பவர் mothership.sg என்னும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சிங்கப்பூரும் இதனைப் பின்பற்றலாம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். நம்மூரில் இந்தச் சேவை அதிகமான கவனத்தைக் கவரும் என்று தோன்றுகிறது. இப்போது நாங்கள் குடியிருக்கும் Gated Community-யில் வாழ்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் 65+. பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடு போய் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு வருபவர்கள். இதுகூட எத்தனை வருடங்கள் நடக்கும்? எல்லோருடைய மனதிலும் இன்னும் வயதாகி முடியாமல் போய்விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை என்ற பயம் உண்டு. உடம்பு சரியில்லை என்றால் பிள்ளை, பெண்களுக்குப் பாரமாகி விடுவோமோ என்ற பயமும் உண்டு. உடம்பு முடியவில்லை என்பதையே ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல கூனிக் குறுகிச் சொல்லிக் கொள்ளுவார்கள். இதே பிரச்சினையை சீனாவில் உள்ள பெற்றோர்களும் எதிர்கொள்ளுவதாக ஆண்ட்ரிக் எழுதியிருக்கிறார்.

இந்த நேர வங்கி நம்மூரில் பயன்படுமா?

நன்றி:
https://www.swissinfo.ch/eng/swiss-city-set-to-launch-elderly-care–bank-/32209234

mothership.sg

Posted on Leave a comment

டிஎன்ஏ சாட்சியங்கள் | ரஞ்சனி நாராயணன்

‘நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெண்’ என்று சொல்லிக்கொண்டு சில பெண்கள் வழக்காடு மன்றம் வரை போய்வந்த செய்தி பரபரப்பாக செய்தித்தாள்களில் வெளியாகி மக்களால் பேசப்பட்டது. கடைசியாக பெங்களூரிலிருந்து இப்படிச் சொல்லிக்கொண்டு வந்த அம்ருதா என்ற பெண் ஒருபடி மேலே போய் ‘ஜெயலலிதாவின் டிஎன்ஏவுடன் என் டிஎன்ஏவையும் வைத்துப் பரிசோதனை செய்யுங்கள். நான் அவரது பெண்தான் என்பது தெரிய வரும்’ என்று ஒரு சவால் விட்டார். நீதிமன்றமும் டிஎன்ஏ சோதனை செய்யலாம் என்று ஒரு யோசனையைக் கூறியிருக்கிறது. ஒரு செய்தித்தாள் அம்ருதாவின் குண்டுக் கன்னங்கள், தடித்த உதடு ஆகியவை ஜெயலலிதாவை நினைவு படுத்துகின்றன என்று வேறு எழுதியது!

பிரபலமானவர்களின் மறைவிற்குப் பிறகு இதுபோல நிகழ்வது புதியது அல்ல. சமீபத்தில் நான் எழுதி முடித்த ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ புத்தகத்திலும் இதுபோல ஒரு நிகழ்ச்சி வருகிறது. ஜோனின் மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் கறுத்த கூந்தலை உடைய பெண் ஒருத்தி ஃப்ரான்ஸ் நாட்டின் வடமேற்கு எல்லைக்கு வெளியே தொம்ரேமியிலிருந்து 50 மைல் தொலைவிலிருந்த மெட்ஸ் (Metz) நகரில் தோன்றினாள். அவள் ஜோன் போலவே இருந்தாள். அல்லது ஜோன் தன்னைச் சுற்றி மூட்டப்பட்ட நெருப்பிலிருந்து எப்படியே தப்பித்துவிட்டாள் என்று நம்ப ஆசைப்பட்ட மக்களுக்கு இவள் ஜோன் போலவே காட்சி அளித்தாள் என்றும் சொல்லலாம். ஜோனின் இரண்டு சகோதரர்கள் உட்பட பலரும் அவளை அடையாளம் தெரிந்துகொண்டதாகக் கூறினர். அவள் ஜோன் போலவே ஆண்களின் உடையை அணிந்திருந்தாள். மிக லாகவமாக, திறம்படக் குதிரை சவாரி செய்தாள். அவள் பிரபலமான அந்தக் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு மெட்ஸ் நகரின் சிறந்த வீரரான ராபர்ட் (Robert des Armoises) கணவராகக் கிடைத்தார். அவர் அந்த ஊரின் மிகப் பெரிய செல்வந்தரும் கூட. இந்த ஜோனின் நகல் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயும் ஆனாள். 1439ம் வருடம் அவள் ஆர்லியன் நகரின் மேற்குப் பகுதிக்குச் சென்றபோது, அவள் அந்த நகருக்குச் செய்த நன்மைக்காக அவளுக்கு தங்கப் பணப்பைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் 1440ம் வருடம் திரும்பவும் அவள் பாரிஸ் நகருக்கு வந்தபோது, அவள் ஜோன் இல்லை, ஏமாற்றுக்காரி என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாள். இந்த மோசடியால் எந்தவிதப் பயனும் இல்லை என்று அறிந்து அந்தப் பெண் மெல்ல மறைந்து போனாள்.

நிற்க. சிலநாட்களுக்கு முன் டிஎன்ஏ குற்றவிசாரணையில் பயன்படுத்தப்படும் விதம் குறித்து நான் படித்த கட்டுரையிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

டிஎன்ஏ என்பது ஒரு குறியீடு. பிற்காலத்தில் நாம் எந்த மாதிரி உருவாகுவோம், வளர்வோம், செயல்படுவோம் என்பதைச் சொல்லும் குறியீடு. மனிதர்களின் டிஎன்ஏக்கள் 99.9% ஒரே மாதிரி இருக்கும். மீதி இருக்கும் 0.1% டிஎன்ஏக்கள்தான் நம்மை பிறரிடமிருந்து ‘வேறுபட்டவன்’ என்று தனித்தனி மனிதர்களாகக் காட்டுகின்றன. சிம்பன்சி குரங்குகளிலிருந்து நாம் ஒரே ஒரு சதவிகிதம் டிஎன்ஏவால் வேறுபடுகிறோம் என்பது மிக முக்கியமான விஷயம். ஒரு சின்னஞ்சிறு வித்தியாசம் கூட எத்தனை மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது இதிலிருந்து புரிகிறது, இல்லையா? பொதுவாக நெருங்கிய உறவுகளின் நடுவே டிஎன்ஏக்கள் ஒன்றேபோல இருக்கும்.

நமக்கென்று தனித்துவமாக இருக்கும் டிஎன்ஏவின் சிறிய பகுதியைக் கொண்டு நம்முடைய டிஎன்ஏவின் சுயவிவரத்தை (DNA Profile) உருவாக்க முடியும். பொதுவாக இந்த சுயவிவரம் ஒரு வரைபடமாகக் (graph) காட்டப்படும். இதில் பல்வேறு உச்சங்களைக் (peak) காணலாம். நமது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நமது டிஎன்ஏ தனித்துவமாக செயல்படும் விதங்களை இந்த உச்சங்கள் காட்டுகின்றன.

An example of an STR analysis used to differentiate between DNA samples (via Wikimedia Commons)

டிஎன்ஏ சாட்சியங்கள் தற்காலத்தில் குற்ற விசாரணையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குற்ற விசாரணையில் இந்த டிஎன்ஏ சாட்சிகள் வழக்கையே மாற்றும் தன்மை படைத்தவை. ஆனால் இவை பெரிய புதிரின் ஒரே ஒரு பகுதிதான். இதை வைத்துக்கொண்டு ‘இவன்தான் செய்தான்’ என்று தெளிவாகச் சொல்வது அரிது. ஒரு குற்றத்தைப் பற்றி டிஎன்ஏ சொல்லும் தகவல்கள் ஒரு எல்லைக்குள்தான் இருக்கும் என்று கைரேகை நிபுணர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் சொல்லுகிறது. கூடவே நீதிமன்றத்தில் இந்த சாட்சி எதை நிரூபிக்கும், எதை நிரூபிக்காது என்பதும் அதனுடைய நம்பகத்தன்மையும் இன்னும் தெளிவுபடுத்தப் படவேண்டிய நிலையில் உள்ளன.

லிநெட் வொயிட் 1988ல் கொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளி என்று சிறையிலடைக்கப்பட்ட மூவரும் தவறாக தண்டனைக்கு ஆளானவர்கள் என்று தெரிய வந்தது. உண்மைக் குற்றவாளி யார், அவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரிகள் 2002ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய உத்தியின்படி பரிசோதிக்கப்பட்டன. கொலை செய்திருக்கக்கூடிய வயது அல்லாத ஓர் இளைஞனின் டிஎன்ஏவுடன் அந்த மாதிரிகள் ஒத்துப்போயின. அதனால் அவனது குடும்ப நபர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அந்த இளைஞனின் மாமா அந்தக் கொலையை தான் செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு 2003ல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

இந்த டிஎன்ஏ சுயவிவரம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை அடைய உதவியிருக்கிறது. ‘க்ரீன் ரிவர் கில்லர்’ என்ற ஒரு குற்றவாளியை இதன் மூலம் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தக் கொலையாளி சுமார் ஐம்பது பெண்களை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு வாஷிங்டன் ஸ்டேட்டில் இருக்கும் க்ரீன் நதியின் பல்வேறு இடங்களில் இந்த உடல்களைப் புதைத்து வைத்திருந்தான். இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தக் கொலைக் குற்றவாளியை டிஎன்ஏ மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.

இருப்பினும் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு தனிப்பட்ட மனிதனை இவனே குற்றவாளி என்று முடிவாகச் சந்தேகமில்லாமல் சொல்லுவதில்லை. வேறு வேறு விதமான 16 உடலியல் கூறுகள் அல்லது பண்புகள் இருந்தால் ஒரு டிஎன்ஏ மாதிரியிலிருந்து ஒரு தனி நபரின் கைரேகைகளை வரைய முடியும். ஆனால் இவை சில காரணங்களால் அதாவது ஈரம், கடுமையான உஷ்ணம் போன்றவற்றால் பழுதுபட்டிருந்தால் சில பண்புகள் மட்டுமே கிடைக்கும். அப்போது முழுமையான சுயவிவரம் (full profile) தயாரிக்க முடியாது. ஒரு பகுதிச் சுயவிவரம் (partial profile) அல்லது முழுமை அடையாத சுயவிவரத்தை தடயவியலாளர்கள் உருவாக்குவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு டிஎன்ஏ சுயவிவரம் முழுமையானதாக இருந்தால் ஒரு மனிதனின் முழு உருவத்தையும் விவரிக்கும் என்று வைத்துக்கொண்டால் இந்த முழுமை அடையாத சுயவிவரம் அந்த மனிதனின் ஒரே ஒரு விவரத்தை மட்டுமே உதாரணமாக அவரது கூந்தலின் வண்ணத்தை மட்டுமே காட்டக்கூடும்.

டிஎன்ஏவின் முழுமையான சுயவிவரம் குற்றவாளியைத் தவிர இன்னொரு மனிதனின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகக்கூடும். முழுமையடையாத சுயவிவரம் இன்னும் அதிகமான மனிதர்களின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகக்கூடும். பல மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தற்செயலாக இணைக்கப்பட்டு விடும்போது தவறுதலாக ஒரே ஒரு டிஎன்ஏ சுயவிவரம் மட்டுமே உருவாக்கப்பட்டு விஷயம் சிக்கலாகிவிடும் அபாயம் இருக்கிறது.

அந்தச் சமயத்தில் டிஎன்ஏ சுயவிவரம் ஒரு குறிப்பிட்ட தனி நபரிடமிருந்து மட்டுமே வந்திருக்கும் என்று அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒப்பீட்டு சாத்தியக்கூறுகள் – அதாவது குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏவையும், அனுமானத்தில் இருக்கும் ஒருவரின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கிடைக்கும் தகவல்கள் – பல சமயங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடும். இன்னும் கடுமையான அணுகுமுறை என்றால் நேரடியாக இரண்டு டிஎன்ஏக்களை ஒப்பிடுவதுதான். அதாவது சந்தேகத்திற்குரிய நபரின் டிஎன்ஏ மற்றும் இன்னொருவருடைய டிஎன்ஏ இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து விகிதாசாரத்தைக் கணக்கிடுவது. இந்த விகிதாசாரம் கூட டிஎன்ஏ ஆராய்ச்சிக்கு விஞ்ஞான ரீதியான ஆதரவைக் கொடுக்குமே தவிர ஆம் இல்லை என்ற பதிலைக் கொடுக்காது.

அமெரிக்கன் பார் அசோசியேஷன் (AmericanBarAssociation) டிஎன்ஏ தொழில்நுட்பத்தை ஆதரித்தபோதிலும் புள்ளிவிவரங்களை ஆராயும்போது போதுமான எச்சரிக்கை தேவை என்ற கருத்தை முன்வைக்கிறது. மேலும் வழக்கறிஞர்களும் டிஎன்ஏ சாட்சியங்களை அதிக அளவில் நம்பவேண்டாம் என்றும் நீதிமன்றங்கள் டிஎன்ஏவை ஆராயும் பரிசோதனைக் கூடங்களின் தரங்களையும் (Quality) கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகிறது. ‘சந்தேகத்திற்குரிய நபரைத் தவிர இன்னொருவருக்கும் ஒரே மாதிரியான டிஎன்ஏ முடிவுகள் இருக்கக்கூடும் என்று தீர்ப்புக் குழுவினருக்குச் சொல்வது ஏற்புடையது அல்ல’ என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஒரு குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றிய விவரங்கள், நீதிமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். எது கதை எது நிஜம் என்பது நமக்குப் புரியும். அந்த வித்தியாசம் பத்திரிகைகளில் வரும் பரபரப்புச் செய்தியினால் மங்கிப் போகக்கூடும். இதன் காரணமாக பெரும்பான்மை மக்களுக்கு விஞ்ஞான சாட்சியங்கள் என்பது பற்றிய உண்மையல்லாத சில புரிதல் இருக்கின்றன. அதுவும் டிஎன்ஏ பற்றிய தவறான புரிதல்கள் நீதியை தவறான திசைக்குத் திருப்பக்கூடும்.

சில சமயங்களில் டிஎன்ஏ சாட்சியம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்: ஒரு கொள்ளைக் குற்றம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட டிஎன்ஏவின் பகுதி சுயவிவரம் ஒரு பார்கின்சன் நோயாளியின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போனது. பாவம், அந்த நோயாளியால் நான்கு அடி கூட பிறர் உதவியின்றி நடக்க முடியாத நிலை! பார்கின்சன் நோயாளியின் வழக்கறிஞர் மேலும் பல பரிசோதனைகளைச் செய்யச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். அவற்றின் அடிப்படையில் பார்கின்சன் நோயாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இது மட்டுமல்ல; இன்னொரு சங்கடமான உண்மையும் இருக்கிறது இதில். ஒரு குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்படும் டிஎன்ஏ மாதிரி நம்முடைய டிஎன்ஏ மாதிரியுடன் – நாம் அங்கு இருந்திருக்கவே முடியாது என்றாலும் – ஒத்துப் போகலாம். குற்றம் நடப்பதற்கு முன்பாகவே யாராவது ஒருவர் அங்கு வந்திருக்கக் கூடும். பிறகு குற்றம் நடந்திருந்தால், அவரது டிஎன்ஏவும் அங்கிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த டிஎன்ஏ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. ஒருபக்கம், முன் எப்போதையும் விட இப்போது டிஎன்ஏ சாட்சியங்களை வைத்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகமாகிக்கொண்டே போகிறது. இன்னொரு பக்கம், குற்றம் நடந்த இடத்தில் கலப்படம் ஆன டிஎன்ஏ கிடைப்பது. இரண்டு நபர்கள் கை குலுக்கும்போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறும் டிஎன்ஏக்கள் (TouchDNA) விசாரணையில் குழப்பங்களை வரவழைக்கின்றன. டிஎன்ஏ சாட்சியங்களை எப்படி ஆராய்வது என்று சட்டம் மற்றும் நீதித்துறை நிபுணர்கள் பயிற்சி பெற்றாலொழிய தவறான முடிவுகளும் தவறான நீதிகளும் வருவதைத் தடுக்க முடியாது.

இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் வைக்கவேண்டும். மனிதர்கள் தங்கள் டிஎன்ஏக்களை வேறு வேறு விகிதங்களில் இழக்கிறார்கள். பொதுவாக டிஎன்ஏக்கள் நமது உடலில் உள்ள திரவங்களில் அதாவது இரத்தம், விந்து மற்றும் எச்சில் இவற்றில் இருக்கும். இவை தவிர நாம் மிக நுண்ணிய அளவில் நமது கூந்தல், தோல் ஆகியவற்றையும் இழக்கிறோம். சிலர் தோல் வியாதி காரணமாக அதிக அளவில் டிஎன்ஏக்களை இழப்பார்கள். ஒரு திருடன் ஒளிவதற்கு என்று வழக்கமான ஓரிடத்தைத் தேர்ந்தெடுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு ஒருவர் அடிக்கடி செல்கிறார். அவருக்கு தோல் வியாதி இருக்கிறது. திருடனைப் பற்றிய புகாரை காவல்துறைக்கு அவர் சொல்லுகிறார் என்றால் தடயவியல் முதலில் இவரைத்தான் அடையாளம் காட்டும். அந்த இடத்தில் இருக்கும் அவரது டிஎன்ஏவின் அளவு அவர் அந்த இடத்தில் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார் என்பதைக் காட்டும். தோல்வியாதி காரணமாக அவரது டிஎன்ஏக்கள் அங்கு அதிக அளவில் கிடைக்கும்.

இந்த மாதிரி ஆராய்ச்சியினால் தெரிய வருவது இதுதான்: குற்றப் புலன் விசாரணையில் டிஎன்ஏ சாட்சியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவி. ஆனால் அதை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அதை மட்டுமே அதிகமாக நீதிமன்றங்களில் பயன்படுத்தாமல், மற்ற சாட்சியங்களுடன் கூட பயன்படுத்த வேண்டும். உதாரணமாக உடைத்துத் திறக்கப்பட்ட ஒரு வீட்டில் சமையல் அறையில் கிடைக்கும் டிஎன்ஏக்கள் அந்த வீட்டின் சொந்தக்காரர், வந்திருந்த விருந்தாளிகள் இவர்களுடையதாக இருக்கலாம். அல்லது குற்றம் நடந்த இடத்தை ஆராய வந்த குழுவினரில் ஒருவரின் டிஎன்ஏவாகவும் இருக்கக்கூடும். கலப்படம் இல்லாமல் டிஎன்ஏக்களை சேகரிக்கவில்லையென்றால் இதுவும் சாத்தியம்.

நன்றி: படம், கட்டுரை https://daily.jstor.org/forensic-dna-evidence-can-lead-wrongful-convictions/