Posted on Leave a comment

கிளிக்காரன் (சிறுகதை) – ஜெயராமன் ரகுநாதன்

“ரமணா, வா வா. அடியே… யாரு வந்திருக்கா பாரு.”

“ரமணனா… வா வா. சௌக்கியமா இருக்கியா?”

“மன்னி. நீங்க சௌக்கியமா? சங்கரா, எப்படி இருக்கே?”

“என்ன கேள்விடா இது. 84 வயசுக்கு ஏதோ நாளை ஓட்டிண்டு இருக்கோம். ஆமா, உனக்கே 81 ஆயிடுத்தே.”

“போன தை மாசந்தானே சதாபிஷேகம் பண்ணிண்டான் ரமணன். சௌம்யா சௌக்கியமா இருக்காளா?”

“இருக்கா மன்னி. இந்த முட்டி வலிதான் அப்பப்போ படுக்கையில போட்டுடறது.”

“ஆமா எப்படி இருக்கு நம்ம ராக்கியப்ப முதலி ஸ்ட்ரீட்?”

“அப்படியேதான் இருக்கு. அட சொல்ல மறந்துட்டேன், சங்கரா. அந்த பைத்தியம் போன வாரம் செத்துப்போய்ட்டாண்டா.”

“அடடே… கிளி மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டு தெருவுலேயே சுத்திண்டு இருந்தானே அவனா? போய்ட்டானா? அவனுக்குமே 75 வயசு இருக்கும்டா.”

“ஆமா, ஆறேழு வயசு இருக்கும்போது நம்ம தெருவுக்கு வந்தான் அனாதையா.”

“இத்தனை வருஷம் தெருவுலேயேதான் இருந்தான் இல்ல?”

“ஆமா, அடிக்கொரு தரம் “எங்கப்பா அம்மா ஊருக்குப் போய்ட்டாங்க’ன்னு சொல்லிண்டே இருப்பான். அவன் ஒரு மாதிரி ராக்கியப்ப முதலி தெருவுக்கு செல்லமாயிட்டான்.”

“எனக்கு ஞாபகம் இருக்குடா ரமணா. நானும் இவளும் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு முதமுதல்ல சாப்பிட வந்தபோது, உங்கம்மா அவனுக்கும் கிணத்தடில உக்கார வெச்சு சாப்பாடு போட்டா.”

“எங்கம்மா மட்டும் இல்ல, தெருவுல எல்லார் வீட்டிலயும் அவனுக்கு ஒரு நா சாப்பாடு உண்டு. விசேஷத்துக்கு சம்மந்தி இல்லாட்டாலுங்கூட இவனுக்கு சாப்பாடு இல்லாம இருக்காது.”

“பாவம் நல்லவண்டா. அவம்பாட்டுக்கு போட்டதைச் சாப்பிட்டுண்டு தெருவுல நடமாடிண்டு, சாதுவா புழங்கிண்டு இருந்தான்.”

“சங்கரா, உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தீபாவளி சமயம், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பத்தி மூணோ நாலோ, நாம அந்த பிஎஸ் ஹை ஸ்கூல் க்ரௌண்டுல வாண வேடிக்கை பாக்கப்போனோமே, அன்னிக்குதான் இவன் ராக்கியப்ப முதலி தெருவுக்கு நம்ம பின்னாடியே வந்துட்டான்.”

“இருக்கு இருக்கு. பெரிய ராஜகோபாலந்தான் வாண வேடிக்கைன்னு நம்ம எல்லோரையும் கூப்டுண்டு போனான்.”

“மணி கூட நொண்டிண்டே வந்தான், கால்ல அடி பட்டுண்டு.”

“என்னா ஆச்சுடா அவனுக்கு? எப்படி செத்துப்போனான்?”

“ராத்திரி சௌம்யாதான் சாப்பாடு போட்ருக்கா. சாப்டுட்டு வழக்கம்போல தெருவுக்குப்போய் வாசத்திண்ணையில் படுத்துண்டுட்டான். கார்த்தால எழுந்திருக்கல. குமார்தான் போய் டாக்டர் நாராயணனைக் கூப்பிட்டு காமிச்சான். ராத்திரியே உசிர் போய்டுத்துன்னுட்டார். எல்லோருமா காசு போட்டு காரியத்தப் பண்ணிட்டோம்.”

“என்ன மாதிரி ஜென்மமாப்போயிட்டாண்டா…”

1943 அக்டோபர் மாதம்…

“என்ன துரை, கொஞ்ச நாளா ஆள கண்லயே காணுமே…”

“ரொம்ப வேல ஜாஸ்தியாய்டுச்சுங்க. இப்ப ஜப்பான்காரன் குண்டு போடப்போறான்னு பீதி வேற. வர்ற கப்பல்ல சாமாங்களை எறக்கி கோடவுன்ல கொண்டு சேர்க்கறதுக்குள்ள தாவு தீந்துடுதுங்க. ரெண்டு மடங்கு கூலி குட்த்தாலும் ஆளே இல்லை. ஜனமெல்லாம் தெற்குப்பக்கம் போய்ட்டாங்க.”

“ஹார்பர்ல என்ன பேசிக்கிறாங்க? ஜப்பான்காரன் வந்துடுவானா?”

“பயம் இருக்குதுங்க. ராணுவக்காரங்க நடமாட்டம் ஜாஸ்திதான். ஆனா ஒருத்தரும் வாயத்தொறக்க மாட்றாங்க.”

“உன் கம்பெனிக்கு யோகம்தாம்ப்பா. கொழிக்கறாரே செட்டியாரு.”

“இப்ப தானுங்களே யுத்த சமயம். இப்ப பிஸினஸ் பண்ணினாத்தானே லாபம் பாக்கமுடியும்.”

“நீதான் ஹார்பர் பக்கம் சிப்பாயிங்களோட ஸ்னேஹமாயிருக்க. என்னதாம்ப்பா ஆச்சு விசாகப்பட்ணத்துல?”

“நிச்சயமா ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஜப்பான் ப்ளேன் வந்து குண்டு போட்டதென்னவோ நெஜம்தான். ஏப்ரல்ல கார்த்தால ஏழு மணிக்கு காக்கிநாடா ஹார்பர்ல ஒத்தையா வந்து ஜப்பான்காரன் குண்டு போட்ருக்கான். ரெண்டு சரக்குக்கப்பல் சேதமாயிடுச்சி. ஒண்ணு ரெண்டு பேர் செத்துப்போய்ட்டானுங்கன்னு வேற பேச்சு. எதுவும் நிச்சயமா சொல்றதுக்கில்ல.”

“மறுபடி அஞ்சு மணிக்கு அன்னிக்கே குண்டு போட்டானாமே… எம்மாம் தைரியமப்பா அவனுக்கு. இதோ, இங்க மெட்ராஸ் வரதுக்கு எம்மாம் நேரம் ஆவப்போவுது.”

“அதெல்லாம் கஷ்டம். ஆனா கவர்மெண்ட் எல்லாத்தையும் ரகசியமா வெச்சிருக்காங்க. வெளியே இதப் பேசிடாதீங்க, சங்கடமாய்டும். சரி, நா போறேன், புள்ளாண்டான் என்னைத் தேடிக்கினு இருப்பான்.”

“வாங்க… ஏங்க இம்மாம் நேரம்?”

“வழில நம்ம ராமசாமி பேச்சுக்கொடுத்தாரு.”

“டேய் முருகேசு, என்ன பண்றே?”

“அப்பா, இன்னிக்கு கோலில செல்வத்தோட டாணா கோலிய உடைச்சுட்டேம்ப்பா.”

“போடு சக்கைன்னானாம். சரி வா சாப்டலாம்.”

“என்னங்க, எங்கனா வெளில கூப்ட்டுப்போங்க. பையன் ஏங்கிப் போயிட்ருக்கான்.”

“இப்ப எங்கடி வெளில போறது? ஊரே பயந்துகிடக்கு.”

“நாலு நாள் செட்டியாரண்ட சொல்லி லீவு எடுங்க. உத்திரமேரூர் போய் எங்கக்காவப் பாத்துட்டு வரலாம்.”

“லீவா? செட்டியார் அதோட போயிடு வராத திரும்பின்னுடுவாரு. இன்னும் ரெண்டு சரக்குக்கப்பல் வரணும் அடுத்த பத்து நாளுல. நா வூட்டுக்கு வரதே சிரமம். அத்தோட தீபாவளி வருது. புள்ளைக்கு உனக்கு புடவத்துணிமணி எடுக்கணும்னா துட்டு வாணாம்? இந்த ரெண்டு கப்பல் வேல முடிஞ்சா காசு புரளும். நல்லபடியா தீபாவளி கொண்டாடலாம். மே மாசம் போலாம் உத்திரமேரூருக்கு.”

“ஏங்க அப்படியே நம்ம வூட்டுக்கும் ஓடைச் சரிபண்ணிடணும். போனமாச மழைக்கு பிச்சிக்கிச்சு. என்னா மழ, என்னா மழ…”

“செய்வோம் செய்வோம். பசிக்குதுடி. சோத்தைப்போடு. முருகேசு, வா சாப்பிட.”

“துரை, செட்டியார் கூப்பிடறாரு உன்னை.”

“என்னங்க?”

“வா துரை. அடுத்த வாரம், அதான் பதினொண்ணாம் தேதியன்னிக்கு சரக்கு கப்பல் டாக் ஆவுதாம். நம்ம சரக்கு பதினேழு லோடாம். அத அன்னிக்கு ராவே எறக்கி, கோவிந்தப்பநாய்க்கன் கோடவுன்ல போட்டு வெச்சிரு. நீ ஹார்பர்ல பாத்துக்க. மேஸ்திரி நடேசன கோடவுன்ல இருக்கச்சொல்லி லோடெல்லாம் எண்ணிப் பாத்து எறக்க சொல்லிடு.”

“செஞ்சுடலாம் முதலாளி.”

“அடுத்த நாள் காலையில வீட்டுப்பக்கம் வா. போன கப்பலுக்கே குடுக்க வேண்டிய அம்பது ரூபாயும் சேத்து எண்பது ரூபாய் கொடுத்துடறேன். உனக்கும் தீபாவளிக்கு ஆச்சு. ஆமா பையன் எப்படி இருக்கான்? நல்லா படிக்கிறானா?”

“ரொம்ப சந்தோஷங்க. நல்ல படிக்கிறான்.”

“நல்லது. பாத்து செய்யி. ஹார்பர்ல ஆர்மிக்காரங்க நடமாட்டம் இருக்கு. வம்பு பண்ணுவானுங்க. ஒதுங்கிப்போயிடு. நமக்கு காரியம் முக்கியம்.”

“செல்லி, இன்னிக்கி சாயங்காலம் சீக்கிரமா சாப்பாடு போட்டுடு. ஏழுமணிக்கெல்லாம் கிளம்பணும். கப்பல் வருதுன்னு சொன்னேனே… ராத்திரி பன்னண்டாய்டும் வர்றதுக்கு.”

“நாளைக்கி வூட்லதான இருப்பீங்க. சினிமா போலாமா? மங்கம்மா சபதம்னு ரொம்ப நல்லா இருக்குன்னு அந்த வூட்டம்மா சொன்னாங்க.”

“போலாமே.”

“யப்போவ். இன்னாப்பா ராத்திரிக்கி ஆபீஸ் போற?”

“ஆமாண்டா, இன்னிக்கி கப்பல் வருது. சரக்கெல்லாம் எறாக்குவானுங்க, அதை பாத்துக்கணுமுல்ல?”

“என்னையும் அழச்சிட்டுபோயேம்ப்பா. நானும் கப்பல் பாக்கறேன்.”

“டேய், இது வேல நேரண்டா. உன்ன எப்படி அழச்சிட்டுப்போறது?”

“என்னங்க, இதோ இருக்குது ஹார்பர். நாங்களும் வரோமே. அப்படி ஓரமா உக்காந்து பாக்கறோம். நீங்க பாட்டுக்கு உங்க வேலய முடிங்க. எல்லாமா திரும்பி வூட்டுக்கு வந்துடலாம்.”

“ஹார்பருக்குள்ள உன்னல்லாம் வுடமாட்டாங்க செல்லி. அதும் இப்ப பதட்ட காலமா இருக்கு.”

“அட என்னங்க நீங்க… அதான் ஹார்பர்ல எல்லா கேட் கீப்பருங்களையும் உங்களுக்கு நல்லாத் தெரியுமே… வேடிக்கை பாக்கறோம்னா வாணான்னா சொல்லுவாங்க. கூட்டுட்டு போங்க.”

“சரி வாங்க.”

“இன்னா தொர, குடும்பத்தோட வண்ட்ட? இன்னிக்கு கப்பல் வருதுன்னாங்க..?”

“ஆமா சார், கப்பல் பாக்கணும்னு ஒரே தொணதொணப்பு, அதான்…”

“சரி அப்படி ஓரமா நடந்து போய் நம்ம காபின் கிட்ட இவங்கள உக்காரச்சொல்லிட்டு நீ வேலயக் கவனி. அங்க இங்க நடமாடக்கூடாது. மேலதிகாரி பாத்தா எனக்கு வேல போய்டும், என்னா?”

“அதெல்லாம் நா ஜாக்கிரதையாப் பாத்துக்கறனுங்க. வா செல்லி, வாடா முருகேசு. சாருக்கு சல்யூட் வை.”

“கமான் க்விக். அந்த ஃபையர் யூனிட்ட அனுப்பு. மூவ் மூவ்…”

“காப்டன், இதெல்லாம் இன்ஃப்ளெம்மபிள். உடனே நகர்த்தியாகணும்!”

“பாஸ், அங்க ஆயில் லீக் ஆகுது. எனக்கு இன்னொரு ஃபையர் யூனிட் வேணும்.”

“ரோட்ரிக்ஸ், சிவிலியன் காஷுயாலிடி இருக்கா?”

“சார்…”

“கம் அவுட் மேன். ஜஸ்ட் ஸ்பில் இட்.”

“இருக்கு சார்.”

“யாரு லேபரா? ஐடெண்டிஃபை பண்ணியாச்சா?”

“இல்ல சார். ஒரு ஆளும் பெண்ணும்.”

“பெண்ணா? வாட் இஸ் ஹேப்பெனிங் சோல்ஜர்?”

“ஒண்ணுமே புரியலை சார்.”

“என்ன புரியல? கால் தட் கேட் கீப்பர் இடியட்.”

“என்ன மன்னிச்சிடுங்க சார். செட்டியார் கம்பெனி சூப்பரைசர் துரையும் அவனோட சம்சாரம், புள்ளயும் வந்தாங்க. சும்மா கப்பல் பாக்கணும்னாங்கன்னு நாந்தான்…”

“புல் ஷிட், புள்ளயா? பாடி கெடச்சுடுத்தா?”

“இல்ல சார்…”

“தேடு தேடு… க்விக். என்ன ஒரு மெஸ்… மேஜர் என்னுடைய பின் பக்கத்தைக் காவு வாங்கப்போகிறார்.”

“சார், புள்ள கெடச்சுட்டான் சார்.”

“தாங்க் காட்! என்ன பண்ணப்போறோம் மூணு பாடியையும்?”

“மூணு இல்ல சார், ரெண்டுதான். பையன் உயிரோடதான் இருக்கான்.”

“வாட்… அடக்கடவுளே. இப்ப என்ன பண்றதுய்யா?”

“சார், ஐ ஹேவ் அன் ஐடியா…”

“சொல்லித் தொலை.”

“ரெண்டு பாடியையும் இங்கேயே புதைச்சுடலாம் சார். பையனை எங்கியாவது கொண்டுவிட்டுடலாம்.”

“யோவ், அவன் பேசிட்டான்னா நா, நீயெல்லாம் ராணுவ வேலயை விட்டு தோட்டம் கொத்தப் போக வேண்டியதுதான்.”

“அவன் பேசாம நா பாத்துக்கறேன் சார்.”

“என்ன பண்ணப்போற?”

“டெர்ர்ரைஸ் தான் சார். அஸால்ட் ஆன் ஐடெண்டிடி.”

“பாத்துப்பண்ணுய்யா. I don’t want any comebacks.”

“தம்பி, உம்பேரென்ன?”

“முருகேசு. எங்கப்பா அம்மா வேணும்…”

“த பாரு. உங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க. அப்படியே சொல்லு கேப்போம்…”

“இல்ல, அங்க இருந்தாங்க நேத்து ராத்திரி. வெடி வெடிச்சது.”

பளார்.

“சொல்லுடா, எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“இல்ல, அங்க…”

பளார்.

“சொல்லுடான்னா…”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“உம்பேரு என்ன?”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“உங்க வீடு எங்க?”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“நீ இங்க என்ன பாத்த?”

“எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க.”

“சார்லஸ், சாயங்காலம் ஆறு மணிக்கு, கொஞ்சம் இருட்டினப்றம் ஜீப்புல இவன அழச்சிட்டுப்போய் நல்ல நடமாட்டம் இருக்கற எடமா… தப்பாரு, ஹார்பர்லேர்ந்து தள்ளி… மைலாப்பூர் பக்கம் போ. அங்க கமுக்கமா கூட்டத்துல எறக்கிவிட்டுட்டு நீ பாட்டுக்கு திரும்பிப்பாக்காம வந்துடணும்.”

“எங்க இறக்கி விட்டே?”

“பிஎஸ் ஹைஸ்கூல்ல வாண வேடிக்கை காட்டிட்டு இருந்தாங்க. ஒரு ஏழெட்டு சின்னப்பசங்க பின்னாடி வுட்டுட்டு நழுவி வந்துட்டேனுங்க.”

“என்ன ரோட்ரிக்ஸ்? பையன்…?”

“மிஷன் கம்ப்ளீடெட் சார்.”

“ரமணா, அந்தப் பைத்தியத்தை தேடிண்டு யாருமே வரலியா இத்தனை வருஷமா…”

“எங்கேடா… அவன் வாயிலேர்ந்து இத்தனை வருஷத்துல “எங்கப்பாம்மா ஊருக்குப் போய்ட்டாங்க’ங்றதத் தவிர வேற வார்த்தை வந்தே யாரும் கேட்டது இல்லியே…”

“பாவம், என்ன படைப்போ… கடவுளோட டிசைனே புரியமாட்டேங்கறதே ரமணா.”

ரோட்ரிக்ஸின் பெண் மூன்றாம் மாடியிலிருந்து விழுந்து அடிபட்டுச் செத்துப்போனதும் சார்லஸின் மனைவி சுபேதார் ஒருவனுடன் ஓடிப்போனதும்… அது வேறு கதை.

Posted on Leave a comment

ஓலைச்சுவடிகள் – அரவிந்த் சுவாமிநாதன்

கணினியில் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் சீவகசிந்தாமணி மற்றும் புறநானூறு, பெருங்கதை நூல்கள் அச்சானது குறித்து உ.வே. சாமிநாதையர் வெளியிட்டிருந்த அந்தக் காலத்து விளம்பரக் குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.

 ஏடுகள் தேடி அலைந்த அவரது அலைச்சலும், அதனை நூலாகப் பதிப்பிப்பதற்காக அவர் உழைத்த உழைப்பும் உடனே நினைவிற்கு வந்தது. கூடவே நூல்களின் அச்சாக்கம் என்பது எந்த அளவு இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்ற பிரமிப்பும் ஏற்பட்டது. ஒவ்வொரு நூல் உருவாக்கத்திற்கும் அவர் உழைத்த உழைப்பு சாதாரணமானதில்லை. அதிலும் புறநானூறைத் தொகுப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், ஒப்பிட்டுப் பார்த்த பிரதிகள், எது சரி என்று தீர்மானித்து முடிவு செய்தது என்பதெல்லாம் சாதாரணமானவையல்ல. அதுகுறித்தெல்லாம் அவர் தனது நூல்களில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

ஒரு சான்றைப் பார்ப்போம். புறநானூற்றின் 299வது பாடல் இது.

“பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ
நெய்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’

பொன்முடி எழுதியது இந்தப் பாடல். பாடலுக்கு விளக்கமெல்லாம் வேண்டாம். “கலம் தொடா மகளிர்’ யார் என்று ஆராய்ந்தால் அது வேறு ஆராய்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆகவே, இந்தப் பாடலை மட்டும் பார்ப்போம். இந்தப் பாடலுக்காக உ.வே.சா. பயன்படுத்திய ஓலைச்சுவடிகளில் இரண்டு கிடைத்தன.

 அதைப் பாடலுடன் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்பட்டது. காரணம், சுவடிகளில் பல வரிகள் விடுபட்டுள்ளன. இதை மட்டுமில்லாமல் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பல ஏட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கி, பிரதி பேதம் பார்த்துத்தான் நூலை அச்சிட்டிருக்கிறார் உ.வே.சா. ஒரு பாடலுக்கே இத்தனை கஷ்டம் என்றால் ஒவ்வொரு நூலுக்கும் எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தன்னுடைய புறநானூற்று நூல் பதிப்பு பற்றி உ.வே.சா., “ஒரு நூலைத் திருத்தமாகப் பதிப்பிக்க வேண்டுமென்றால் பல வகையான கருவிகளை முதலில் அமைத்துக் கொள்ளவேண்டும். ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது மட்டும் போதாது. ஏட்டில் இருப்பது அவ்வளவும் திருத்தமாக இராது. பல காலமாகப் பிழையாகவே வழங்கி வந்த பாடங்களை அவற்றிற் பார்க்கலாம்; அவற்றுள் இதுதான் சுத்த பாடம் என்று தெரிந்து கொள்வதற்குப் படும் சிரமந்தான் மிகவும் அதிகம். நூலில் உள்ள கருத்துகளுக்கும் சொற்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொள்வது மட்டும் போதாது. புறநானூற்றில் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அப்புலவர்களுடைய பாடல்கள் வேறு நூல்களிலும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பார்த்தால் அப்புலவர் வாக்கின் போக்கையும், அவருக்கு விருப்பமான கருத்துகளையும், நடையையும் உணர்ந்து கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியிலிருந்து சில திருத்தங்கள் கிடைக்கும். ஆகவே சங்கப் புலவர்கள் பெயர்களை வரிசையாக எழுதிக்கொண்டு அவர்கள் இயற்றிய பாடல்கள் எந்த எந்த நூல்களிலுள்ளனவென்று தெரிந்து தொகுத்துப் படித்தேன். புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பன் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று’ என்கிறார். (என் சரித்திரம், உ.வே.சா.)

“வேணு வனலிங்க விலாசச் சிறப்பு’ (1878) என்பதுதான் உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல். இரண்டாவது “திருக்குடந்தைப் புராணம்’ (1883) அதன் பிறகு அவர் பதிப்பித்த பல நூல்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நூற்றுக்கு மேற்பட்ட இலக்கிய, புராண நூல்களை அவர் பதிப்பித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அக்காலத்தில் சி.வை. தாமோதரம் பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை உள்ளிட்ட பலரும் நூல்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர். இதில் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமைக்கும், சண்டை, சச்சரவுகளுக்கும் குறைவே இல்லை.

ஒரு சமயம் உ.வே.சா.வின் “சீவகசிந்தாமணி’ நூல் பதிப்பிற்காக புலவர் ஒருவர் சண்டைக்கு வந்தார். சீவகசிந்தாமணியை முதன் முதலில் பதிப்பித்தது (1883ல்) புதுக்கோட்டை அரங்கசாமிப் பிள்ளை என்பவர்தான் என்றும், அதன் பிறகே 1887ல் ஐயரின் பதிப்பு முழுமையான நூலாக வெளிவந்தது என்றும் பூ. முருகேசபிள்ளை என்பவர் விளம்பரம் செய்தார். அதுமட்டுமல்லாமல், உ.வே.சாவின் பதிப்பில் பல பிழைகள் உள்ளன என்றும் அறிவித்து “சீவகசிந்தாமணி வழுப்பிரகணம்’ என்ற நூல் ஒன்றையும் வெளியிட்டார். உ.வே.சா.வையும் வலிந்து வாதுக்கழைத்தார்.

நல்லவேளையாக, உ.வே.சா. அதனை ஏற்று வாதுக்குச் செல்லவில்லை. அப்படி அவர் சென்றிருந்தால் நமக்கு இன்று நூற்றுக்கணக்கான பழந்தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது. உ.வே.சா.வின் நேரம் முழுவதுமே இதுமாதிரியான சச்சரவுகளை எதிர்கொள்வதிலேயே கழிந்திருக்கும்!

இலக்கிய, புராணச் சுவடிகள்தான் என்றில்லை. தேவார, திருவாசகச் சுவடிகள், தத்துவ விளக்கங்கள், ஜோதிடம், மாந்த்ரீகம், மருத்துவம் பற்றிய சுவடிகள், சமயம் சார்ந்த சுவடிகள், நாட்டுப்புறவியல் சார்ந்த சுவடிகள் என்று பல தலைப்புகளில் ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. உ.வே.சா. இலக்கியத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால் பிற சுவடிகள் அதிகம் வரவேற்புப் பெறவில்லை. அவற்றில் பல இன்னமும் ஆதினங்களிடமும், ஆசியச் சுவடியியல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு மையம் (இங்குள்ள சுவடிகள் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன), தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், உ.வே.சா. நூலகம், கேரள பல்கலைக்கழக கீழ்த்திசைச் சுவடிகள் நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் போன்ற இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் மாந்த்ரீகச் சுவடிகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. “சாலத்திரட்டு’, “சௌமிய சாகரம்’, “குறி சொல்ல எழுதிக் கட்ட மந்திரம்’, “குறளி வித்தை’, “குறளிச் சக்கரம்’, “குரல் கட்ட மந்திரம்’ என இவற்றின் பெயர்களே வித்தியாசமாக உள்ளன. சான்றாக, “குடிசை திவால்’ என்ற சுவடியைப் பார்க்கலாம். இது ஒரு மாந்த்ரீகச் சுவடி. “குடிசை திவால்’ என்ற பெயரிலிருந்தே இது பிற்காலத்து ஓலைச்சுவடி என்பதைத் தெரிந்து கொள்ளலாம் (திவால் – தமிழ்ச் சொல் அல்ல).

இந்தச் சுவடி என்ன சொல்கிறது?

அடிக்கடி கிராமப்புறங்களில் நாம் கேள்விப்படும் செய்தி. திடீர் திடீரெனக் குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன; ஆடைகள் எல்லாம் திடீர் திடீரெனத் தீப்பிடிக்கின்றன என்பது. இதற்குக் காரணம் என்ன? தீயவர்களின் சதியா, ஏவல், பில்லி, சூனியமா, மர்ம, மாந்த்ரீகமா, சாமியார்களின் சாபமா, தெய்வத்தின் கோபமா? அல்லது யாரேனும் வெண் பாஸ்பரஸைக் கொண்டு புத்திசாலித்தனமாக சதி செய்கிறார்களா? தெரியாது. காரணமும் புரியாது. ஆனால் அவ்வப்போது செய்தித்தாள்களில் இது போன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வரும். பின்னர் அடங்கிவிடும்.

இந்த மர்மத் தீப்பிடித்தல் நிகழ்விற்கும் மேலே சொன்ன “குடிசை திவால்’ சுவடிக்கும் தொடர்பிருக்கிறது. அந்தச் சுவடியிலிருந்து ஒரு சிறு பகுதி:

“ஒரு மூஞ்சூரைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, மசானச் சாம்பலை அதிலே திணித்து, அதற்கு மேலே இளந்தீட்டுப் பெண்ணின் சீலையைத் தூக்கிச் சுத்தி, மயானத்திலே, கன்னிப்பெண் பிணம் வேகுறபோது அதிலே வைத்து, வெந்து நீறான அந்தச் சாம்பலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் வீட்டுப் பிரப்பிலே தூவினால் அந்த வீடு திவால்.’

“அந்த நீறிலே கொஞ்சம்போல அந்த வீட்டுக் கூரையிலே ஊதிப் போட்டு, “சாம்பவி, உமாதேவி, நசி மசி மசி நசி வாமா, தூமா ஓடிவா திவால்’ என 1008 தரம் ஜெபித்து உருவேற்ற அந்த வீடு திவால்.’

– இப்படி, தனக்குப் பிடிக்காதவர்களின் வீட்டைத் திவாலாக்க பல வழிகளைச் சொல்கிறது ஒரு சுவடி. இதெல்லாம் சாத்தியமா, எப்படி இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன, அது ஏன் ஏழைகள் வசிக்கும் குடிசை போன்றவை மட்டுமே எரிகின்றன. மாடி, ஓட்டு வீடுகள், பணக்காரர்கள் வசிக்கும் இல்லங்கள் எரிவதில்லையே ஏன் என்பது போன்ற கேள்விகள் நமக்கு எழத்தான் செய்கின்றன. ஆனால் விடைதான் கிடைக்கவில்லை. அதேசமயம் இந்தச் சுவடி சொல்வது அனைத்தும் உண்மை என்றும் ஏற்பதற்கில்லை. கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால், அக்காலத்தில் எதிரிகளை அழிக்க இதுபோன்ற பல வழிகளை முயற்சித்திருக்கின்றனர்; கையாண்டிருக்கின்றனர் என்பது மட்டும் பல மாந்த்ரீகச் சுவடிகள் மூலம் தெரிய வருகிறது. இவை தவிர்த்து பெண் வசியம், ஆண் வசியம், தேவதா வசியம், ஸ்தம்பனம், மாரணம், வெற்றி என பலவற்றிற்கும் பல வித சக்கரங்களையும், மந்திரங்களையும், குறியீடுகளையும் ஓலைச்சுவடிகளில் குறித்துள்ளனர்.

 ஜோதிடம் பற்றிய சுவடிகள் “கேரள மணிகண்ட சாத்திரம்’, “குரு நாடி சாத்திரம்’, “அகத்தியர் நாடி சாஸ்திரம்’, “ஆரூடக்கையேடு’, “கிரகச் சக்கர ஏடு’, “ஞானம் – 32′, “சித்தராரூடம்’, “ஆதித்தன் பலன்’ என வித விதமான தலைப்புகளில் உள்ளன. மருத்துவச் சுவடிகள் “அகத்தியர் ருண வாகடம்’, “அகத்தியர் செந்தூரம்’, “அகத்தியர் நூறு’, “அகத்தியர் கற்பம்’, “அகத்தியர் உட்கரு சாத்திரம்’, “அகத்தியர் சவுக்காரத் திறவுகோல்’ என பல தலைப்புகளில் உள்ளன. கேரள மணிகண்ட சாத்திரத்தில் அரிஷ்ட காண்டம், சகோதர காண்டம், பித்ரு காண்டம், அற்பாயுசு காண்டம், யோக காண்டம், மாதுரு காண்டம் என மொத்தம் 20 காண்டங்கள் உள்ளன. இத்தகைய சுவடிகள் பற்றிய விளக்கத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் போன்றவை நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளன.

இவ்வகை ஓலைச்சுவடிகள் பல வித அளவுகளில் இருக்கின்றன. ஒரு சில அரை அடி நீளத்தில் இருக்கின்றன. உள்ளங்கை அளவே அகலமிருக்கும் குறுஞ்சுவடிகளும் உள்ளன. சில இடங்களில் ஒரு முழ நீள அளவிற்கு மிக நீளமான ஓலைச்சுவடிகளும் காணக் கிடைக்கின்றன. சிலவற்றில் படங்கள், விளக்கக்குறிப்புகள் எனத் தற்பொழுது காணப்படும் நூல்களைப் போன்று பல்வேறு தகவல்களும் காணப்படுகின்றன. சிலவற்றில் இரு புறமும் எழுத்துகள் காணப்படுகின்றன. சிலவற்றில் ஒரு புறம் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. நாட்டுப் பாடல், கதைப்பாடல், நாடகங்கள் வடிவிலும் பல சுவடிகள் உள்ளன (சாத்தாவையன் கதை, சாத்தான் கதை போன்றன). பல சுவடிகள் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால் நிறைய ஓலைச்சுவடிகளில் என்ன உள்ளது, அது எதைப் பற்றியது என்கிற ஆய்வு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல ஓலைச்சுவடிகள் மிகவும் சிதைந்து காணப்படுகின்றன. சிலவற்றைப் படிக்க இயலவில்லை. சில படிக்க எளிதாக, பழங்காலத் தமிழ் நடையில் உள்ளன. சில தொன்மையான ஆலயங்களில் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் அலட்சியமாகக் குவித்து வைக்கப்பட்டும் கிடக்கின்றன.

 இவற்றில் நாடிஜோதிட ஓலைச்சுவடிகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. நாடி ஜோதிடர்கள் பலரும் கட்டுக்கட்டாக ஓலைச்சுவடிகளை வைத்துள்ளனர். உண்மையிலேயே அவை அனைத்தும் ஜோதிடச் சுவடிகள்தானா அல்லது வேறு துறையைச் சார்ந்தவையா என்பது ஐயமாகவே உள்ளது. மேலும் அவை அனைத்துமே உண்மையானதுதானா என்பதும் ஆய்வுக்குரியது.

சான்றாக, இந்தச் சுவடியின் படத்தைப் பாருங்கள்.

 ஒரு சுவடிக் கட்டு, ஜாதகக் குறிப்பு, ஓலைச்சுவடியைப் பார்த்து பலன் எழுத முனையும் ஒருவரின் கை எல்லாம் தெரிகிறதா? சரி, இதில் என்ன விசேஷம் என்று கூறுகிறீர்களா?

இருக்கிறது. அதில் இருக்கும் தமிழ் எழுத்துகளை உங்களால் வாசிக்க முடிகிறதா? சற்று முயன்றால் வாசிக்கலாம். வேப்பம்பட்டை, சாது மிளகு, முடக்கத்தான், வால் மிளகு என்றெல்லாம் வார்த்தைகள் தெரிகின்றன. இது ஜோதிடச் சுவடியே அல்ல; மருத்துவச் சுவடி. ஆனால் இதை வைத்துதான், இது பழங்கால முனிவர்களால் எழுதப்பட்ட நாடி ஜோதிடச் சுவடி என்றெல்லாம் கூறி, தம்மை நாடி வரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் சில நாடி ஜோதிடர்கள். குறிப்பாக, ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக்கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது யோகம், மாந்த்ரீகம் என்று வேறு எதுவாகவும் இருக்கலாம்.) அது நாடிஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவதுபோல மக்களை ஏமாற்றி வருகின்றனர். தொன்மை, எழுத்துகளின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு இவ்வகை ஓலைச்சுவடிகளை வைத்திருப்பவர்கள் ஒத்துழைப்பதில்லை.

இவ்வகை ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், முனிவர்களால்தான் எழுதப்பட்டது என்பதையும் முழுக்க ஏற்க முடியவில்லை. ஏனெனில் இவ்வகை ஜோதிடச் சுவடிகளில் பெரும்பாலான பாடல்கள் அந்தாதி யாப்பிலேயே அமைந்துள்ளன. சங்ககாலப் பாடல்களில் ஆசிரியப்பாவே ஏற்றம் பெற்றிருந்தது. சங்ககாலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இவை இயற்றப் பெற்றதாக இருந்திருந்தால் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. எனவே “அகத்தியர்’ போன்ற முனிவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும் அந்த முனிவர்களால் தான் அவை இயற்றப்பட்டன என்ற கருத்தை முழுமையாக ஏற்க இயலாது. சங்கம் மருவிய காலத்தும் அதன் பின்னரும் வெண்பா ஏற்றம் பெற்றது. எனவே அக்காலத்திற்குப் பின் தான் இவ்வகை நூல்கள் தோன்றியிருக்கும் என்பது உறுதி. குறிப்பாகக் கூறின், தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலான, காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதிக்குப் பின்னரே இவ்வகை நூல்கள் தோன்றியிருக்க வேண்டும். காரைக்காலம்மையாரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அதுபோல நாடிஜோதிடச் சுவடிகளில் சில வெறும் கிறுக்கல்களாகவும் அமைந்துள்ளன.

இவற்றை தங்களைத் தவிர வேறு யாராலும் படித்துக் கூற முடியாது என்று கூறும் நாடிஜோதிடர்களின் கருத்தும் ஏற்பதற்கில்லை. இவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. பழந்தமிழும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை என்பதே டாக்டர் நாகசாமி போன்ற வரலாற்றாய்வாளர்களின் கருத்து.

அகத்தியரால் எழுதப்பெற்றதாகக் கூறப்படும் அகத்தியர் வாகடம் என்பது உண்மையில் அகத்தியரால் எழுதப்பெற்றதுதானா என்பதும் சந்தேகமே! ஏனெனில் அதிலும் பாடல்கள் அந்தாதி முறையில் காணப்படுகின்றன. எழுத்துகளின் அமைப்பும், வடசொற்களின் ஆதிக்கமும் அவையெல்லாம் பிற்காலத்தைச் சார்ந்ததாகவே கருத இடமளிக்கின்றன. சான்றாக, அந்தச் சுவடியின் இறுதியில், ஹரி ஓம் நன்றாக வாழ்க, குருவே துணை, தம்பிரான் அண்ணாமலைப் பரதேசி, அண்ணாமலை மடம் என்ற தகவல்கள் காணப்படுகின்றன.

சமய நூல்கள் பற்றிய சுவடிகளும் சுவாரஸ்யம் மிகுந்தவை. சான்றாக இந்தச் சுவடிகளைப் பாருங்கள்.

  இது திருவாசக ஓலைச்சுவடி. ஒற்றில்லாமல் (அதாவது மெய்யெழுத்தின் மீது புள்ளியில்லாமல்) எழுதப்பட்டிருக்கும் இச்சுவடி மிகத் தொன்மையானது என்பதில் ஐயமில்லை.

முப்பூ, ரசமணி, ரசவாதம் பற்றியெல்லாம் சுவடிகள் கூறும் கருத்தை ஆராயப்புகுந்தால் அது வேறு எங்கோ சென்றுவிடும் என்பதால், இத்தோடு சுபம்.

Posted on Leave a comment

ஒரு புதிர் போடுவோம் – ஹாலாஸ்யன்

பூமியில் பாறைக்கடியில் தேங்கி நிற்கிற இதை குழாய்கள் போட்டு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சுத்தப்படுத்துகிறார்கள். மிக முக்கியமான மருத்துவ, தொழிற்சாலை பயன்பாடுகள் இதற்கு உண்டு. உலக நாடுகள் முக்கியமாக அமெரிக்கா பல வருடங்கள் பயன்பாட்டுக்காக இதைத் தேக்கிவைத்திருக்கிறது. இதன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் கத்தார் இருக்கிறது. இரானிய அடிப்படைவாதத்தை கத்தார் ஆதரிப்பதால் பிற நாடுகள் கடுப்பாகி கத்தாரில் இருந்து இந்தப் பொருள் ஏற்றுமதி செய்யப்படும் வழிகளை அடைத்திருக்கின்றன. அந்தப் பொருள் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

கச்சா எண்ணெய் என்று பதில் சொல்லுவீர்கள் என்றால் தப்பு. உண்மையில் இதற்கான பதிலை அவ்வளவு எளிதில் ஊகிக்க முடியாது. சரியான பதில் ஹீலியம்.

ஹீலியம். மூலக அட்டவணையில் இருக்கும் இரண்டாவது தனிமம். அணுக்கருவுக்குள் இரண்டு ப்ரோட்டான்கள், இரண்டு ந்யூட்ரான்கள், கருவைச்சுற்றி இரண்டு எலெக்ட்ரான்கள் இருக்கும் ஒரு தனிமம். தன்னளவில் எலெக்ட்ரான் எண்ணிக்கையில் நிறைவு பெற்றுவிட்டதால் வேதியியல் லௌகீக வாழ்வையே வேண்டாமென்று எதனோடும் வினைபுரியாமல் இருக்கும் இனர்ட் காஸ் என்றழைக்கப்படும் மந்த வாயுக்கள் தொகுதியில் சேர்ந்துவிட்டது (காதைக் கொடுங்கள். அப்படி லௌகீக வாயுவைத் துறந்ததாக நம்பப்படுகிற வாயுக்களிலேயே ஸெனான் (Xenon), க்ரிப்டான் (Krypton) போன்றவை அரிதாக சேர்மங்கள் உருவாக்குவதுண்டு. அது வேறு கதை.)

ஹீலியம் ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு. மேம்போக்காய் கொஞ்சம் சப்பென்று இருந்தாலும் அதன் பண்புகள் அதைத் தனிமைப்படுத்திக் காட்டுபவை. ஹீலியம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது பூமியில் அல்ல. சூரியனில். நிறமாலையியல் spectroscopy மூலம் சூரியனின் நிறமாலையை அலசுகையில் மஞ்சள் நிறத்தில் ஒரு தனி அலைநீளம் தென்படுகிறது. பூமியில் அதுபோன்ற நிறமாலை கொண்ட தனிமம் அதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னொரு கொசுறுத் தகவல் என்னவெனில் சூரியனின் இந்த ஹீலியமின் மஞ்சள் நிற அலைமாலையை முதலில் கண்டுபிடித்தது இந்தியாவில். 1868ல் ஜூல்ஸ் ஜான்சென் (Jules Janssen) என்ற ஃப்ரெஞ்சு வானியல் அறிஞர், குண்டூர் மாவட்டத்தில் இருந்து ஒரு முழு சூரிய கிரகணத்தன்று கண்டுபிடித்தார். அப்போது சூரியனில் இருக்கிற தனிமம் என்ற அர்த்தத்தில்தான் ஹீலியம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது (ஹீலியாஸ் (Helios) – சூரியன்). அதன்பிறகு சர் வில்லியம் ராம்சே யுரேனியம் தனிமத்தை ஆராய்கையில் கிடைத்த வாயுக்களில் ஒன்றின் நிறமாலை சூரியனில் காணப்பட்ட அந்த நிறமாலையுடன் ஒத்துப்போவதை கவனித்தபோதுதான், பூமியிலும் ஹீலியம் இருக்கிறது என்று தெரிய வருகிறது.

இத்தனைக்கும் ஹீலியம் நம் பிரபஞ்சத்தில் அதிகமாய்க் கிடைக்கக்கூடிய தனிமங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எல்லா விண்மீன்களின் உள்ளேயும் மிக எளிய தனிமமான ஹைட்ரஜன் அதன் தூரத்து உறவான ட்ரீஷியம் tritium என்னும் ஐசோடோப்புடன் சேர்ந்து ஹீலியத்தையே உருவாக்குகின்றன. இந்த அணுக்கருப் பிணைப்பு வினைதான் விண்மீன்களின் வெப்பத்துக்கும் வெளிச்சத்துக்கும் காரணம். இரவில் புள்ளியாய்த் தெரியும் விண்மீன்களின் வெளிச்சம், ஏன் பகல் முழுக்கக் காய்கின்ற சூரியனின் வெளிச்சம் அனைத்துமே ஹீலியம் தொடர்ச்சியாய் உருவாவதன் உபரிப்பொருட்கள்தான். ஆனால் பூமியில் ஹீலியம் அவ்வளவு எளிதில் தட்டுப்படாது. பூமியில் அதன் செறிவு சுமார் பத்து கோடி அணுக்களுக்கு ஐந்து ஹீலியம் அணுக்கள். காரணம் இருப்பதிலேயே அடர்த்தி குறைவான வாயுக்களாதலால் பூமியில் காற்று மண்டலத்தின் மேற்பரப்புக்கு ஓடிவிடும். மேலும் அதன் மீள் திசைவேகம் (Escape Velocity) எனப்படும் பூமியின் ஈர்ப்பை விட்டு விடுபடத் தேவையான வேகம் மிக மிகக் குறைவு. அதனால் ஜாலியாக மிதந்து விண்வெளிக்குப் போய்விடும் (நமக்கு மீள்திசை வேகம் நொடிக்கு 11.2 கி.மீ. – கவனிக்க, நொடிக்கு). அதனால்தான் இங்கு அவ்வளவு அரிதாய்க் கிடைக்கிறது. காற்றில் இருந்து ஹீலியம் எடுப்பதென்பது வெண்கலப் பூட்டை உடைத்து விளக்குமாறு திருடிய கதை. நமக்கு ஹீலியம் கிடைப்பது கதிரியக்கத்தின் காரணமாகத்தான், பூமியில் இருக்கும் யுரேனியம் ஆல்ஃபா துகள்களை வெளிவிடுகிறது. ஆல்ஃபா துகள்கள் என்பவை ஹீலியம் அணுக்கருதான். அது போகிற போக்கில் இரண்டு எலெட்க்ரான்களை எங்கிருந்தாவது தூக்கிப் போட்டுக்கொண்டு ஹீலியம் வாயுவாய் மாறிவிடும். பூமிக்கடியில் இப்படி உருவாகும் ஹீலியம் நிலத்தின் வழியே கசிந்து வழக்கம்போல பூமியை விட்டுத் தப்பிவிடும். ஆனால் சில இடங்களில் பாறைக்கடியில் தேங்கி காற்றுப்பொட்டலமாக இருக்கும். அந்தப் பாறைக்கடியில்தான் கச்சா எண்ணெயும் கிடைக்கிறது. கச்சா எண்ணெய்க்கு மேல் வாயு நிலையில் தேங்கி நிற்கும் இயற்கை எரிவாயுவுடன் ஹீலியமும் இருக்கும். அது 0.2-0.3% முதல் சில இடங்களில் 1-1.5 சதவிகிதம் கூட அமெரிக்கா. அதிகபட்சம் 3% இருக்கலாம். எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் தொடக்கத்தில் இதை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர் உலகம் முழுவதும் ஹீலியம் தேவைப்படுவதால் தனியே சுத்திகரித்து விற்க ஆரம்பித்தார்கள். கத்தாரில் ஹீலியம் உற்பத்தி செய்வது இப்படித்தான்.

சரி ஹீலியத்தால் என்ன பிரயோஜனம் என்று கேட்கிறீர்களா? நேரடிப் பிரயோஜனம் என்பது பலூன்களில் நிரப்புதல். ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் தன்னாலே மேலே போகும். ஹிண்டன்பர்க் வெடிப்பு (Hindenburg disaster) என்று அழைக்கப்படும் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட ராட்சத பலூன் வெடித்துத் தீக்கிரையானபின் பலூன்களில் ஹைட்ரஜனை விட்டுவிட்டு ஹீலியத்தை நம்ப ஆரம்பித்தார்கள்.

திரவ ஹீலியம் ஒரு மிகச்சிறந்த வெப்பக்கடத்தி. அதனால் மீகடத்தி காந்தங்களைக் (Superconducting Magnets) குளிர்விக்க திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகிறார்கள். மீகடத்திகள் அந்த அதிகுளிர் வெப்பநிலையில்தான் சரிவர இயங்கும். அந்த காந்தங்களை நாம் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். முக்கியமாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் இயந்திரங்களில். அதில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் திரவ ஹீலியத்தால் குளிர்விக்கப்படுகின்றன. ஆக மருத்துவத் துறையின் ஒரு முக்கிய சோதனைக் கருவி ஹீலியத்தை நம்பியிருக்கிறது. கடவுள் துகளைக் கண்டுபிடிக்க உதவிய சோதனைகள் நிகழ்த்தப்பட்ட Large Hadron Collider போன்ற ராட்சத ஆய்வுக் கருவிகளிலும் ஹீலியம் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.

பற்றவைப்புகளில் (Welding) ஹீலியம் ஒரு தடுப்பு வாயுவாகப் பயன்படுகிறது. மேலும் மிகச் சிறிய எதனோடும் வினைபுரியாத அணு என்பதால் முக்கியமான உலோக பாகங்கள் உற்பத்தியில் எங்கேனும் விரிசலோ கசிவோ இருக்கிறதா எனச் சோதிக்க உதவுகிறது.

நீர்மூழ்குபவர்களின் ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் சுத்தமான ஆக்ஸிஜன் மட்டும் இருக்காது. அதற்குள்ளே, நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கிறதோ அதே சதவிகிதம் ஆக்ஸிஜனும் மீதி ஹீலியமும் இருக்கும். இது அவர்கள் சுவாசிக்கும் காற்று வேகமாக எளிதாக நுரையீரலை அடைய உதவுகிறது. மருத்துவத்தில் சில சுவாசக் கோளாறுகளுக்கு ஹீலியம் ஆக்ஸிஜன் கலவையை சுவாசிக்க வைக்கிறார்கள்.

ராக்கெட் எரிபொருட்களான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் குளிர்வித்துத் திரவமாக்க திரவ ஹீலியம் அவசியம்.

உண்மையில் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி எனப் பல துறைகளில் சில சாதனங்களுக்கு ஹீலியம் அத்தியாவசியம். அதன் உற்பத்தி இயற்கை எரிவாயு அதிகமாகக் கிடைக்கும் நாடுகளை நம்பி இருக்கிறது. கிட்டதட்ட கச்சா எண்ணெய்யைப்போல ஒரு முக்கிய வளம் ஹீலியம். ஆனால் பூமியில் தொடர்ச்சியாக யுரேனியத்தின் கதிரியக்கத்தால் ஹீலியம் உற்பத்தி ஆகிக் கொண்டுதான் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா ஹீலியத்தை போருக்குத் தேவையான பொருள் என ட்க்ஸாஸ் நிலத்தடியில் தேக்கிவைக்க ஆரம்பித்தது. 1960களில் அது உலகின் மிக முக்கியமான ஹீலியம் சேமிக்கும் இடம். போரெல்லாம் முடிந்து ஹீலியத்தின் பயன்பாடுகள் பிற துறைகளில் தெரிய வரவும் எக்கச்சக்கத்துக்கு எதிர்காலத் தேவை இருக்கும் போலிருக்கிறது என்று அரசு காசு கூடக் கொடுத்து ஹீலியத்தை வாங்கி நிலத்தடியில் தேக்கி வைத்தது. ஆனால் அவ்வளவு பெரிதாக ஒன்றும் தேவை அதிகரிக்காமல் போகவே பல ஆண்டுகளுக்குத் தேவையான ஹீலியம் தேக்கத்தில் கிடந்தது. ஒரு அளவில் அந்த ஹீலியம் சேமிப்புக் கிடங்கு நஷ்டத்தில் ஓட ஆரம்பிக்கவும், 1995ல் அமெரிக்க அரசு ஹீலியத்தையெல்லாம் விற்கச் சொல்லிவிட்டு 2021ல் சேமிப்புக் கிடங்கை மூடச்சொல்லி சட்டமியற்றியது. அங்கு சேமிக்கப்பட்டது கொஞ்ச நஞ்ச ஹீலியம் அல்ல. 100 கோடி கன மீட்டர் ஹீலியம்.

அந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் சேமிப்புக் கிடங்கில் இருந்து ஹீலியம் சந்தைக்கு வர ஆரம்பித்தது. உலக ஹீலியம் பயன்பாட்டில் 20% அந்தக் கிடங்கில் இருந்தே கிடைத்துக்கொண்டிருந்தது. மீதம் அமெரிக்க மற்றும் கத்தார் எண்ணெய் வயல்களில் இருந்து கிடைத்து வந்தது. மலிவான ஹீலியம் கிடைப்பதால் பூமியில் வேறு எங்கு ஹீலியம் கிடைக்கும் என்று தேடும் பணிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள அரசியல் நெருக்கங்கள் காரணமாகவும், முழுதும் விற்றதோ இல்லையோ, 2021ல் அமெரிக்காவில் உள்ள ஹீலியம் சேமிப்புக் கிடங்கை மூடச்சொல்லி சட்டமியற்றப்படுவதாலும் ஹீலியம் பயன்படும் துறைகள் 2015ல் இருந்து லேசான சிரமங்களுக்கு ஆளாயின.

கத்தார் ஈரானிய அடிப்படைவாதத்திற்குத் துணை போவதால் ஹீலியம் டேங்கர்கள் வெளியேறும் சாலைகள் முடக்கப்படவும் உலகளாவிய ஆய்வு நிலையங்கள் அழுத்தத்துக்கு உள்ளாயின.

‘போச்சு… ஹீலியம் பலூன்களை இனி ம்யூஸியத்தில்தான் பார்க்க வேண்டும்’ என்றெல்லாம் கட்டுரைகள் எழுதப்பட்ட நிலையில் அந்த அளவுக்கெல்லாம் இல்லை. ஆனால் நிலைமை இப்படியே போவது நல்லதல்ல என துறைசார் வல்லுநர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

அதிர்ஷ்டவசமாக, டான்ஸானியாவில் பூமிக்கடியில் ஒரு பெரும் எரிவாயுப் பொட்டலம் சிக்கியிருக்கிறது. அதில் 10% வரை ஹீலியம் இருக்கிறதாம். அடியில் இருக்கும் எரிமலைகளின் சூட்டில் ஹீலியம் பொதிந்திருக்கும் பாறைகள் ஹீலியத்தை வெளியிட்டு அது இயற்கை எரிவாயுவுடன் பொதிந்திருக்கிறது. அங்கு மட்டும் 154 கன மீட்டர் ஹீலியம் இருக்கிறதாம்.

இன்னும் அரை நூற்றாண்டு வரை கவலையில்லை. ஆனாலும் இதே மாதிரி அரை நூற்றாண்டு காலம் ஓட்டியபின் வேறு எங்கும் கிடைக்காதெனில் மறுபடியும் சிக்கல் வரத்தானே செய்யும். அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. சீனா நிலாவில் இருக்கும் ஹீலியம்-3 என்கிற ஹீலியத்தின் ஐசோடோப்பு (Isotope – ஒரே ப்ரோட்டான் எண்ணிக்கை, வேறுபட்ட ந்யூட்ரான் எண்ணிக்கை கொண்ட தனிமம்) ஒன்றை எடுக்கத் திட்டமிடுகிறது. அது இப்போதே சாத்தியமில்லை என்றாலும் அது எதிர்காலத்துக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறது.

ஆனால் நாம் சிலவற்றை முன்னேற்பாடாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் ஹீலியத்தை வெளியே காற்றில் விடாமல் முடிந்தவரை அதை திரும்பப் பயன்படுத்த முயல வேண்டும். அமெரிக்க ஆய்வகங்கள் பயன்பாடு முடிந்ததும் ஹீலியத்தை திரும்பப் பிடித்துச் சுத்திகரித்து மறுபயன்பாட்டைச் சாத்தியமாக்குகிறார்கள். அதற்கான முதலீடு அதிகமாக இருந்தாலும் நாள்கணக்கில் அது லாபகரமானது. ஹீலியம் கொள்முதலை குறிப்பிடத்தகுந்த அளவு குறைக்கும்.

நம்மிடத்தில் ஹீலியம் கிடைக்கும் இடம் எதுவும் கிடையாது. ஹீலியத்தை நாம் கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் ஹீலியம் பயன்பாட்டுக்கு மாற்றாக வேறு பொருட்களிலும் ஹீலியம் மறுபயன்பாட்டுச் சாத்தியங்களைத் தேட வேண்டியிருக்கிறது. விழித்துக்கொள்வோம்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 5: சோதிடத்தை மறுத்த கிராமம் – சுப்பு


அடையாறில் பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தேன் என்று எழுதுகிறேன். என்னிடமிருக்கும் சில சிறப்புகளுக்கு பெரியப்பாதான் காரணம். எனவே, அவரைப் பற்றி இந்த இடத்தில் சொல்லிவிடுகிறேன்.

பெரியப்பாவைத் தெரிந்துகொள்ள நூறாண்டுகள் பின்னோக்கிப் பயணித்து வாரியங்காவலுக்குப் போக வேண்டும்…

சூரிய வெளிச்சம் உள்ளே வர விடாதபடி அப்படி ஓர் அடர்த்தி. தரையிலே படர்ந்திருக்கும் கிளைகளோடு முந்திரிக் காடுகள். காடுகள் விட்டு வைத்த இடைவெளியில் மல்லாக் கொட்டை விளைச்சல். ஊரின் நான்கு பக்கமும் வாரி என்கிற வாய்க்கால். இதனால் வாரியங்காவல்.

இதுதான் ‘வாரியங்காவல்’. இது இன்றைய அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது.

நெசவைத் தொழிலாகக் கொண்ட செங்குந்த முதலியார்களின் ஊர் இது. இரண்டு வீடுகள் மட்டும் பிராமணர்கள். சேரியும் உண்டு.

முதலியார்கள் தறி நூலுக்கு விறைப்பு ஏற்படுவதற்காகப் பாவு போடுவார்கள்.

வீதி நீளத்திற்குப் பாவு போட்டு அதில் கஞ்சியைத் தடவுவார்கள். மீதமிருக்கும் கஞ்சி வீதியில் சிதறிவிடும். இதனால், இந்த மண்ணின் வாசனையில் உணவின் ருசி இருக்கும்.

தறியிலே உட்கார்ந்து, உட்கார்ந்து ஊர் ஜனத்திற்கு இயற்கையாகவே ஒரு பணிவு காட்டும் வளைவு இருக்கும். முதலியார்களிடம் காசு பணம் நடமாட்டம் அதிகம் இருக்காது என்றாலும், கருணையும் கட்டுப்பாடும் கூடுதலாக இருக்கும்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த ஊர் போஸ்ட் மாஸ்டராக இருந்தார் நாராயணசாமி ஐயர். ஊராருக்கு நல்லது கெட்டதுக்கான சடங்குகளைச் செய்து வைப்பதும் இவரே. அந்தக் கால நியாயப்படி இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் மங்களம். இரண்டாவது மனைவியின் பெயர் மங்களம்! ஆமாம். அப்படி ஓர் ஒற்றுமை.

இரண்டாவது மங்களத்திற்கு ஒன்பது குழந்தைகள். அவர்களில் 1913ல் பிறந்த தலைமகன் ராமசாமிதான் என்னுடைய பெரியப்பா.

வெள்ளைக்காரன் ஆட்சியின் விளைவாக, இந்தியாவுக்கே பொதுமையாக இருந்த வறுமை வாரியங்காவலில் இன்னும் தீர்க்கமாகவே இருந்தது. ஐயர் வீட்டிலும் அப்படித்தான். பற்றாக்குறைகளை எல்லாம் பாசத்தால் நிரப்பிக் கொண்டார்கள்.

ராமசாமி பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார். படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக இருந்தார் ராமசாமி.

பரிட்சையில் தேர்ச்சி பெற்றபோது அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

நாராயணசாமி ஐயர் காலமாகிவிட்டார். விதவைத் தாயாரையும், தம்பி தங்கைகளையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு ராமசாமியின் தலையில் ஏற்றப்பட்டது.

மேற்கொண்டு என்ன செய்வது என்பதை ஆலோசிக்க ஊர் கூடியது. கிராமத்து ஜோஸியரை அழைத்து ராமுடுவின் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னார்கள். ஜோஸியருக்கு குடும்பத்தில் பொருளாதாரப் பின்புலம் தெரியாதா என்ன? ராமுடுவுக்குப் படிப்பு வராது என்று சொல்லிவிட்டார்.

மக்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள். ‘ராமுடுவுக்குப் படிப்பு வராது என்று சொல்லும் ஜோஸியரை மாற்ற வேண்டும்’ என்று ஒருவர் தீர்மானம் போட்டார். இன்னும் சிலர், ரோசமாகப் பேசினார்கள். ராமுடுவை நாமே படிக்க வைப்போம் என்றார்கள்.

ராமசாமியின் தம்பி பசுபதி குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்றொரு தம்பி அரங்கநாதன் இந்த நிலைமையிலும் விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

ராமசாமி இயற்பியல் ஆனர்ஸ் வகுப்பில் சேர்ந்தார். சத்திரமொன்றில் தங்கிக் கொண்டு, காய்கறி, குழம்பு எதுவுமில்லாமல் சோறைப் பொங்கிச் சாப்பிடுவார்.

கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டிய நேரத்தில் ஊருக்குச் சேதி போகும். ஏகாம்பர முதலியார் என்ற பெரியவர் நடு வீதியில் நின்றுகொண்டு வருவோர் போவோரை மடக்கி வசூல் செய்வார். மடியில் இருக்கும் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஓரளவு சேர்ந்த பிறகு சிதம்பரத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

பி.எஸ்ஸி., ஆனர்ஸ் படித்த பிறகு, ராமசாமி பி.டி. படித்தார். இயற்பியல் படித்தாலும் அவருடைய நாட்டம் என்னவோ தமிழில்தான். நூலகத்தில் இருந்த தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடித்தார். அப்போது கல்லூரிகளுக்கான அறிவியல் பாடப்புத்தகங்களைத் தமிழில் எழுதுவோருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆயிரம் ரூபாய் பரிசை அறிவித்தது. பேராசிரியர் விஸ்வநாதனும், அவருடைய மாணவர் ராமசாமியும் இயற்பியல் புத்தகம் எழுதி பரிசு பெற்றனர்.

பிறகு, கொல்லத்தைச் சேர்ந்த லட்சுமியை மணம் புரிந்த ராமசாமி சில வருடங்கள் கோவையில் மின்சாரத் துறையில் பணிபுரிந்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்தார். கிண்டி பொறியியல் கல்லூரிக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கம் ஐ.ஐ.இ.டி.யில் பணிபுரிந்தார்.

இந்தச் சமூகம்தான் தனக்கு வாழ்வும் கல்வியும் கொடுத்தது என்ற உணர்வோடு வாழ்ந்தார் ராமசாமி. தனிப்பட்ட முறையில் ஆயிரக்கணக்கான மாணவருக்கு அவர் இலவசமாகப் பயிற்சி அளித்தார்.

ராமசாமி பல ஆண்டுகளாக மேற்கு மாம்பலம், குப்பய்யாச் செட்டித் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். வீட்டின் உரிமையாளர் மாடியில். உரிமையாளரின் பராமரிப்பில் இருந்தது ஒரு உறவுக்கார இளைஞர். வேலைக்குப் போவதில் விருப்பமில்லாத அந்த இளைஞரின் நாட்டமோ நாடகத்தில் இருந்தது. அவர்தான் பிற்காலத்தில் தமிழகமே தலையில் வைத்துக் கொண்டாடிய திரைப்பட நடிகர் நாகேஷ்.

அறுபதுகளின் துவக்கத்தில் அடையாறில் காந்தி நகர் குடியிருப்புச் சங்கம் உருவாக்கப்பட்டது. ராமசாமி வீடு வாங்கிக்கொண்டு அங்கே குடிபெயர்ந்தார். நான் அங்கே வந்து சேர்ந்தது அதற்குப் பிறகு.

எந்தவிதமான தாக்கத்தை என்னளவில் பெரியப்பா ஏற்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

பள்ளிப் புத்தகங்களைத் தவிர மற்ற விஷயங்களில் நான் தீவிர வாசகனாக இருந்தேன். தீவிர சிந்தனையாளராகக்கூட. யோசித்து யோசித்து மனிதர்களின் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணம் பசிதான் என்று தீர்மானித்துவிட்டேன். உடம்பிலிருந்து அறுவை சிகிச்சை செய்து வயிற்றை அகற்றிவிட்டால் இந்தப் பிரச்சனையை சரிசெய்து விடலாம் என்றும் முடிவெடுத்து விட்டேன்.

என்னுடைய அண்ணன்மார்களுக்கோ, நண்பர்களுக்கோ இந்த மாதிரி ஆலோசனைகளை ரசிக்கும் பழக்கம் இல்லை. எனவே, முடிவாக என் கருத்தை பெரியப்பாவிடம் வைத்தேன். அவர் சொன்னது: ‘வயிற்றை மட்டும் எடுத்து பிரயோஜனம் இல்லைடா. அதற்குக் கீழே இன்னொன்று இருக்கிறது. அதையும் சேர்த்து எடுக்க வேண்டும்.’

எதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத எனக்கு இது சட்டென்று புரிந்துவிட்டது.

ஒரு நாள், வீடே பரபரப்பாக இருந்தது. பெரியப்பாவிற்கு பி.பி. என்று பேசிக் கொண்டார்கள். ஏதோ உடல் சம்பந்தமான பிரச்சினை என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். எனக்கு விளக்கிச் சொல்வார் யாரும் இல்லை. யாரும் கவனிக்காத ஒரு சமயத்தில் பெரியப்பா தனியாக இருந்தார். அறைக்குள் போனேன். கட்டிலில் படுத்திருந்தார்.

‘‘பி.பி.ன்னா என்ன பெரியப்பா?” என்று கேட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அறைக் கதவைத் தாளிட்டார். பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் வரைந்து காட்டினார். ‘‘உப்பு போன்ற விஷயங்கள் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்கின்றன. இந்த அடைப்பையும் மீறி இரத்தம் பாய வேண்டும். இதற்காக இதயத்தின் வேலை அதிகமாகிறது. அதை அளக்கும் முறைதான் இரத்த அழுத்தம்” என்று விளக்கினார்.

அதற்குள் வீட்டிலிருப்பவர்கள் கலவரம் அடைந்து கதவைத் தட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், பெரியப்பா அசரவில்லை. விளக்கத்தை முடித்து, நான் புரிந்து கொண்டேன் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே கதவைத் திறந்தார்.

கதவு திறக்கப்பட்டவுடன் வெளியே வந்தேன். உள்ளே என்ன நடந்தது என்று பெரியப்பாவிடம் கேட்க யாருக்கும் துணிவில்லை. என்னைக் கேட்டார்கள். இரத்த அழுத்தம் குறித்து, நான் பேச ஆரம்பித்தேன். அந்தச் சபை அதை ரசிக்கவில்லை.

காந்தி நகரில் இருப்பவர்கள் எல்லாம் வசதியானவர்கள்தான். மிராசுதாரர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். அங்கே ஒரு லேடீஸ் கிளப் இருந்தது. அதில் பலர் சீட்டாடுவார்கள், சிலர் டென்னிஸ் ஆடுவார்கள். அவ்வப்போது, பக்கத்தில் இருக்கும் சேரியில் சமூக சேவை செய்வார்கள்.

பெரியம்மாவிற்கு லேடீஸ் கிளப்பில் சேர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ரொம்பவும் தயங்கித் தயங்கி ஒருநாள் பெரியப்பாவிடம் கேட்டுவிட்டார்.

பெரியப்பா கேட்டார், ‘‘லேடீஸ் கிளப்பில் என்ன பண்றாங்க?”

‘‘அவங்க, சேரியில போய் அங்கிருக்கிற குழந்தைகளைக் குளிப்பாட்டறாங்க. பாடம் சொல்லித் தராங்க.”

‘‘அப்ப அந்த லேடீஸ் வீட்டில் இருக்கிற குழந்தைகளை யார் குளிப்பாட்டறாங்க?”

‘‘அதுக்குத்தான் வேலைக்காரி இருக்காளே…”

‘‘எதுக்கு இவ்வளவு கஷ்டம்? இவங்க போய் வேலைக்காரி வீட்டிலிருக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டணும். வேலைக்காரி இவங்க வீட்டிலே இருக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டணும். இதெல்லாம் வீண் வேலை” என்று பெரியப்பா முடித்துவிட்டார்.

Posted on Leave a comment

கைசிக புராணத்தின் கதை – சுஜாதா தேசிகன்

திருக்குறுங்குடிக்குச் சென்று கைசிக ஏகாதசியை அனுபவித்துவிட்டு வந்தபோது இரண்டு செய்திகள் கண்ணில் பட்டன.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் (குமுதத்தில்) தனது பேட்டியில் “யாழ், கோட்டு வாத்தியம் போன்ற இன்ஸ்ட்ருமென்ட்டை நாம தொலைச்சுட்டோம்” என்று கூறியிருந்தார். கிட்டதட்ட அதே சமயத்தில் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடியை ‘நீசன்’ – இழிந்த சாதியைச் சேர்ந்தவர் என்று தனது தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்டது பத்திரிகையில் வந்தது.

இந்த இரண்டு செய்திகளுக்கும் கைசிக புராணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஒன்று யாழ் மட்டும் இல்லை, மரபு வழி நாடகங்களையும் தொலைத்துவிட்டோம். இன்னொன்று நம்பாடுவான் என்ற சண்டாளன் எவ்வளவு உயர்ந்தவன் என்று சொல்லும் கைசிக புராணம்.

திருநெல்வேலிக்கு சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குறுங்குடி என்னும் ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசம். பெருமாள் அழகிய நம்பி. ஊரும் பெருமாளும் அழகு. பசுக்கள் நிறைந்த பொய்கை கரையோரத்தில்…

நெடிய பனைமரங்களிலிருந்து விழும் பனம் பழங்களை பொய்கையில் இருக்கும் வாளை மீன்கள் உண்ணுவதற்குத் துள்ளிப்பாய்கின்றன என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

விஜய சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். மனம் வருந்திய மன்னர், ஸ்ரீரங்கத்திலேயே ஒருவருடம் தங்கி அடுத்த ஆண்டு. சேவையைக் கண்டுகளித்தார். ஸ்ரீரங்கத்தில் இவர்களின் நினைவாக இரண்டாம் திருச்சுற்றில் இவர்களின் சிலைகள் இருக்கின்றன.

 இரவு சுமார் 9.30 மணிக்கு நாடகக் கலைஞர்கள் அரிதாரம் பூசிக்கொண்டு தயாராக இருந்தார்கள். பெருமாள் அங்கே இருக்கும் மண்டபத்தில் எழுந்தருளிய பின் கூட்டம் ஓடிச் சென்று நாடகம் பார்க்க முதல் சீட் பிடித்தது. கிட்டதட்ட முதல் சீட் கிடைத்த சந்தோஷத்தில் தூக்கம் கலைந்தது.

கலியுகத்தில் பக்தி செய்ய நாம சங்கீர்த்தனமே சிறந்த வழி என்று சொல்லப்படுகிறது. மீரா, துக்காராம், சூர்தாஸ், கபீர்தாஸர், ராமதாஸர், தியாகராஜர் என்று பக்தர்களின் கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். கவனித்தால் அவர்களிடம் பக்தியுடன் தம்பூரா, வீணை என்று ஏதாவது ஒரு வாத்தியம் கூடவே இருக்கும்.

ஆழ்வார்களில் பாணர் குலத்தில் உதித்த திருப்பாணாழ்வாரிடமும் கையில் பாண் என்ற இசை வாத்தியம் இருப்பதைப் பார்க்கலாம். கைசிக புராணத்தில் நம்பாடுவானும் திருப்பாணாழ்வார்போல பாணர் குலத்தில் பிறந்து ஆழ்வாரைப் போலவே பக்தியில் திளைத்து…

நம்பாடுவான் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

வராஹ புராணத்தில் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் நம்பாடுவான் பக்தியை சிலாகித்து சொன்ன பகுதியை கைசிக மகாத்மியம் என்று அழைக்கிறோம். புராணம் என்பது பிற்பாடு வந்த பெயர்.

கதை இதுதான்.

திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் பாணர் குலத்தில் வைணவ பக்தன் வாழ்ந்துவந்தான். பெயர் நம்பாடுவான். தினமும் விடிகாலையில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் குறித்து பண் இசைத்துப் பாடுவான். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திருக்குறுங்குடி அழகிய நம்பியைப் பாடி சேவித்து வந்தான்.

கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று இரவு அழகிய நம்பியைச் சேவிக்க காட்டுவழியே வரும் வழியில் அவனை பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு “நான் உன்னை உணவாக சாப்பிடப் போகிறேன்” என்றது. அதற்கு நம்பாடுவான், “நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். அழகிய நம்பியை சேவித்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்” என்று கூற அதை ராட்சசன் நம்ப மறுக்கிறான்.

அதற்கு நம்பாடுவான் “நான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பரம பக்தன். நான் பொய்சொல்ல மாட்டேன். வேண்டுமானால் நான் சத்தியம் செய்துவிட்டுப் போகிறேன்” என்று பதினெட்டு விதமான சத்தியங்களைச் சொல்லி அனுமதிக்குமாறு நம்பாடுவான் ராட்சசனிடம் மன்றாடுகிறான். ஆனால் ராட்சசன் அவனை விடுவதாக இல்லை. கடைசியாக “நான் திரும்ப வரவில்லை என்றால் வாசுதேவனை விட்டு மற்ற தேவதைகளை வணங்குபவர்களுக்கு என்ன கதி கிடைக்குமோ, நாராயணனைத் தவிர மற்ற தேவதைகளோடு சமமாக நினைப்பவர்கள் பாவத்தை நான் அடையக்கடவது” என்று சத்தியம் செய்ய அவனது விஷ்ணு பக்தியைக் கண்டு ராட்சசன் அவனை அனுப்பி வைக்கிறான்.

ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு, நம்பியைச் சேவித்துவிட்டு ராட்சசனைத் தேடி திரும்ப வரும் சமயத்தில் நம்பாடுவானைச் சோதிக்கும் பொருட்டு அழகிய நம்பி கிழவனாக அவன் முன்னே தோன்றி “இந்த வழியில் ராட்சசன் இருக்கிறான் வேறு வழியில் செல்” என்று சொல்ல, “என் உயிரே போனாலும் நான் சத்தியத்திலிருந்து தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் சொல்ல, நம்பி அவன் உறுதியைக் கண்டு அவனுக்கு அருள்புரிந்து மறைகிறார்.

நம்பாடுவான் ராட்சசனைக் கண்டு “என்னை சாப்பிடு” என்று கூற ராட்சசன் மெதுவாக இவனிடம் பேச்சு கொடுக்கிறது. அப்போது எப்படி சாபத்தால் இந்த மாதிரி பிரம்ம ராட்சசனானேன் என்ற கதையைச் சொல்லுகிறது. எனக்கு நீ பாடிய பாடலின் பலனைக் கொடு என்று கேட்க, அதற்கு நம்பாடுவான் மறுக்க, கடைசியாக கைசிக ராகத்தில் பாடிய பாட்டில் பலனையாவது எனக்குத் தர வேண்டும் என்று சரணாகதி அடைய, நம்பாடுவான் சரி என்று பலனைக் கொடுக்க கொடுக்க பிரம்ம ராட்சசன் வீடு பெற்றான் என்று கதை முடிகிறது.

கைசிக நாடகம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர ஆட்சியில் இருந்திருக்கிறது. ‘ஆமுக்த மால்யதா’ என்ற நூலில் மால்கேசரி என்ற பெயரில் நம்பாடுவானைக் குறிப்பிட்டு திருக்குறுங்குடியில் நடந்ததாகவே அவ்வரலாற்றைக் கூறியுள்ளார். 1530-1554ல் கைசிக நாடகம் நடைபெறுவதற்கு நிலங்களை தானமாக அளித்துள்ளார் அச்சுதராயரின் இரண்டாவது மனைவி! ஜி.ஆர். வெல்போன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் கைசிக நாடகத்தின் நலிந்த நிலையைக் குறித்து 1969ல் குறிப்பிட்டுள்ளார்.

தொன்றுதொட்டு தேவதாசிகள் திருக்குறுங்குடியில் வடிவழகிய நம்பியின் முன் நிகழ்த்தப்பட்ட கைசிக நாடகத்தை தேவதாசிகள் ஒழிப்பு சட்டத்துக்குப் பிறகு இந்த நாடகம் நலிவுற்றது. அதற்குப் பிறகு இந்த நாடகம் அவல நிலை அடைந்து பயிற்சி இல்லாதவர்களால் நிகழ்த்தப்பட்டு அலங்கோலமாகியது. 90களில் நிகழ்த்தப்பட்ட நாடகம் பழைய நாடகம் மாதிரி இல்லை, வெறும் 45 நிமிடம் மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நாடகம் 1997ல் மீண்டும் உயிர்பெற்றது.

இந்த நாடகத்தை மீண்டும் மீட்க முதல் முயற்சியாக இந்த நாடக மரபில் வந்த இரண்டு தேவதாசிகள் மட்டுமே திருக்குறுங்குடியில் இருந்தார்கள். ஒருவருக்கு வயது 85, மற்றொருவருக்கு 70. அவர்களின் வாரிசுகள் திருநெல்வேலியிலும், நாகர்கோயிலிலும் குடியேறியிருந்தார்கள். இவர்களை மீண்டும் மேடை ஏற்றத் தயங்கினார்கள். காரணம், ‘தேவதாசிகள்’ என்ற சமூகக் கறை, ஊர் என்ன சொல்லும் என்ற பயமும்.

சே. இராமானுஜம் அவர்கள் தமிழ் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறைப் பேராசிரியராக இருந்தபோது 1992ல் கைசிக ஏகாதசிக்கு முதல் நாள் இந்த மாதிரி நாடகம் என்று தற்செயலாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் உடனே திருக்குறுங்குடிக்குச் சென்றுள்ளார். நாடகம் அவருக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. கைசிகம் என்பது ஒரு ராகத்தின் அடைப்படையாகக் கொண்ட நாடகத்தில் இசை என்பதே இல்லை. வயது முதிர்ந்தவர்கள் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காக அங்கே வந்து சென்றார்கள்.

நாடகத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார் பேராசிரியர் இராமானுஜம். 1997ல் பிரபல நாட்டியக் கலைஞர் திருமதி அனிதா ரத்தினத்துடன் எப்படியாவது நாடகத்தை மீட்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்கள். 1999ல் திருக்குறுங்குடி ஜீயர் மடத்திலிருந்து தேடிக் கண்டுபிடித்த கைசிக புராண நாடகத்தின் ஓலைச் சுவடி ஏட்டுப்பிரதியை நகல் எடுத்துப் பார்த்தபோது பராசர பட்டர் (கி.பி. 1122) (கூரத்தாழ்வானின் திருக்குமாரர், ஸ்ரீராமானுஜரின் சீடர்) எழுதிய வியாக்கியானத்தின் அடிப்படையில் மணிப்பிரவாள நடையை ஒத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மரபு வழி வந்தவர்களைக் கொண்டு அபிநயம் பிடிக்கச் செய்து, ஓலைச்சுவடியில் உள்ள பாடல்கள், உரையாடல்களைக் கொண்டே மரபுரீதியான வடிவத்தில் மீண்டும் வடிவழகிய நம்பி முன் உயிர்பெறச் செய்திருக்கிறார்கள்.

அன்று இரவு 9.30 மணியிலிருந்து காலை மூன்று மணி வரை இந்த நாடகத்தைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். நடித்தவர்களின் எனர்ஜி லெவல் அபாரம். மிகக் கஷ்டமான நடையாக இருந்தாலும் எங்கும் மறக்காமல் நடித்தார்கள்.  நாடகத்தின் நடுவே நாடக மேடை பின்புறம் சரிந்து, கூடவே கலைஞர்கள் விழுந்துவிட, சில நிமிடங்களில் நாடக மேடையைச் சரி செய்து, மீண்டும் நடிக்கத் தொடங்கினார்கள். இந்த நாடகத்தை மீட்டெடுத்த பேராசிரியர் சே. இராமானுஜம், அனிதா ரத்தினம் பாராட்டுக்குரியவர்கள்.

கைசிக என்பது ஒரு ராகத்தின் பெயர். நம்பாடுவானின் கவிதை வரிகளில் ‘மெய், மலகிரி, காந்தாரம், துரையா, நாட்டை, தனாசு, கொல்லி, துத்தம், வசந்தா போன்ற கரையா கீதம் பல பாடி கைசிகமும் பாடினேன்’ என்பதால் கைசிகம் ஒரு ராகத்தின் பெயர் என்று தெரிகிறது. கர்நாடக சங்கீதத்தில் பைரவி ராகம் என்கிறார்கள்.

நம்பாடுவான் என்ற பெயர் கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ‘பட்டர்’ அவர் உரையில் தந்துள்ளதாகத் தெரிகிறது. வராக புராணத்தில் ‘பாடுவான்’ என்றுதான் குறிப்பு இருக்கிறது ‘நம்பெருமாள்’, ‘நம்மாழ்வார்’ ‘நம்பிள்ளை’ ‘நம் ஜீயர்’ வரிசையில் பாடுவானை ‘நம்-பாடுவான்’ என்று முதல் முதலில் பட்டர் தான் அழைத்துள்ளார் என்று தெரிகிறது.

தூய்மையான பக்தியுடன் எவனொருவன் மஹா விஷ்ணுவிடம் சரணாகதி அடைகிறானோ அவனே ஸ்ரீவைஷ்ணவன். சரணடைந்த பின் எக்குலத்தவராயினும் அவனிடம் குல வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம்.

திருப்பாணாழ்வார், நம்பாடுவான் வாழ்க்கை வரலாற்றில் இது மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர்ஆகில், நொடிப்பது ஓர்அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்; அரங்க மா நகருளானே!’

என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். இதன் அர்த்தம்,

நான்கு வேதங்கள், ஆறு வேதாந்தங்களையும் மனப்பாடம் பண்ணி, அவற்றின் பொருள்களையும் அறிந்து, போற்றப்படும் பிராமணர்களாக இருந்தாலும் அடியார்களை குலத்தைக் கொண்டு நிந்தனை செய்தால் அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சண்டாளர்களாக அறியப்படுவார்கள் என்கிறார்.

நம்மாழ்வார் இதையே,

‘குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண்
டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
கலந்தார் அடியார் தம்மடி
யார்எம் அடிகளே.’

நான்கு குலங்களிலும் தாழ்த்தப்பட்டு மிகவும் இழிவாகக் கருதப்பட்டு மனித வாழ்க்கையில் கடைசியில் வரும் சண்டாளர்களுக்கும் சண்டாளர்களாக இருப்பினும், அவர்கள் வலப்புறத்தில் சக்கரத்தைத் தாங்கி நிற்கும் மணிவண்ணனான திருமாலின் அடியார்களாகில் அவர்களுக்கு அடியவர்களாக இருப்போம் என்கிறார். இன்னொரு பாசுரத்தில் நம்மாழ்வார் இன்னும் ஒரு படி மேலே சென்று,

‘பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே’

என்ற பாசுரத்தில் பெருமாளுக்கு அடிமை செய்துகொண்டு இருப்பதைக் காட்டிலும் ஓர் அடியாருக்கு அடிமை செய்துகொண்டு இருப்பது ஏற்றம் என்கிறார்.

நாடகம் முடித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு கோயிலை விட்டு வெளியே வந்தபோது மழை தூறிகொண்டு இருந்தது.

உதவிய நூல் பட்டியல்:

கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல் – காலச்சுவடு பதிப்பகம்.

கைசிக புராணம் – ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடு.

கைசிக புராணம் – பட்டர் வ்யாக்யானத்துடன் – வானமாமலை மடம் வெளியீடு.

கைசிக புராண நாடகத்தில் இசை – இ. முகுந்தன் எம்.ஏ ஆய்வுக் கட்டுரை.

Posted on Leave a comment

நம்பிக்கைகள், நம்பிக்கைச் சிதைவுகள் மற்றும் நியாயப்படுத்தல்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

சுமார் அறுபது வருடங்களுக்கு முன் சமூக உளவியல் துறையில் ஒரு புதிய கோட்பாடு உருவானது. பொதுவாக சமூகவியல், உளவியல் போன்ற துறைகளில் கோட்பாடுகளுக்கு நீடித்த ஆயுள் இருப்பதில்லை. Leon Festinger என்னும் உளவியல் ஆய்வாளர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் Cognitive Dissonance என்னும் கருத்தை / கோட்பாட்டை முன் வைத்தார். அது இன்றளவும் மிகவும் சமூக உளவியல் துறையில் பலமான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. (அவரது மற்றொரு கோட்பாடு Social Comparison Theory.) சமூகவியலும் உளவியலும் இணையும் புள்ளியில்தான் சமூக உளவியல் என்னும் துறை உருப்பெறுகிறது. தனி நபருடைய உளவியல் என்றல்லாமல் ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் கூட்டு முடிவுகளின் உளவியலை, கூட்டு முடிவுகளின் இயங்குதலை ஆராய முயல்கிறது. இத்துறையில் இருக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கான செலுத்தி வரும் கோட்பாடுதான் Cognitive dissonance. Cognitive dissonance என்ற பதத்தை நேரடியாக மொழிபெயர்ப்பது சற்று சிரமம்தான். ஒரு நபரின் நம்பிக்கைகளுக்கும் அவரது செயல்களுக்கும் இடையே எப்போதும் ஒருமை இருக்காது. ஒரு நபர் தான் காத்து வரும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப எப்போதும் செயல்பட முடியாது. ஒருவர் கட்டிக்காத்து வரும் லட்சியத்திற்கும் அவரது செயல்பாடுகளுக்கும் இடையே வரும் ஒத்திசைவு இன்மையையே cognitive dissonance என்று சொல்வோம். அனைத்து நபர்களுக்கும் தங்கள் எண்ணப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி இல்லாவிட்டால் ஒத்திசைவு இன்மை ஏற்படும். இந்த ஒத்திசைவு இன்மையைச் சரிசெய்ய அனைவரும் முயற்சி செய்வார்கள். அதற்குப் பல வழிகளையும் கையாள்வார்கள்.

ஒரு உதாரணத்துடன் விளக்க முயல்கிறேன். தான தர்மம் செய்வது நல்ல விஷயம் என்று எண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யார் உதவி கேட்டாலும் அவருக்குத் தவறாமல் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை ஒருவர் உங்களிடம் ஆதரவற்றோர் இல்லத்திற்காக ஆயிரம் ரூபாய் கேட்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் அவருக்குப் பணம் கொடுக்கமுடியவில்லை. இந்தச் சூழலால் உங்கள் நம்பிக்கைக்கும் உங்கள் செயலுக்கும் இடையே ஒரு முரண் ஏற்படும். அந்த dissonanceஐ அதாவது ஒத்திசைவு இன்மையைச் சரி செய்ய முயல்வீர்கள். குறைந்த அதன் வீரியத்தைக் குறைக்க முயல்வீர்கள். இதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன. ஒன்று நம் செயல்பாட்டினை மாற்றலாம். அதாவது இந்த ஒருமுறை போகட்டும், அடுத்த முறையில் இருந்து தவறாமல் பணம் கொடுப்பேன் என்று முடிவு எடுப்பது. இரண்டாவது, நமது மனநிலையை லேசாக மாற்ற முயலலாம். மூன்றாவதாக அது எத்தனை முக்கியமான விஷயம் அல்ல என்று நமக்கு நாமே சமாதானம் கூறலாம். உ.ம். அப்போது உங்களிடம் பணம் ஏதும் இல்லை அல்லது உதவி கேட்டவன் மேல் நம்பிக்கை இல்லை என்பவைபோல. இத்தகைய சமாதானங்கள் ஒத்திசைவின்மையைக் குறைக்கும் ஓரளவு மன ஆறுதலையும் தரும்.

இதனை இரண்டு வரலாற்றுச் சம்பவங்கள் வாயிலாக இன்னும் தெளிவாக விளக்கலாம். இன்று Seventh Day Adventist என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கிறித்தவ மதப்பிரிவை உருவாக்கியவர்களில் அல்லது உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வில்லியம் மில்லர் (William Miller). பழைய ஏற்பாட்டில் உள்ள தானியேல் 8:14 வரியை அடிப்படையாக வைத்து ஒரு தீர்க்க தரிசனத்தைக் கூறினார். அதனை தீர்க்கதரிசனம் என்றுகூட கூறக்கூடாது. ஒரு புதிரின் விடையைக் கூறினார் என்று கூறலாம். 22.10.1844 அன்று இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும் என்றும் 1840களில் கூறிவந்தார். இதனை நம்பிய வேறு பல கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மில்லருடன் சேர்ந்து அந்த நாளுக்காகக் காத்திருந்தனர். கிறிஸ்தவ இறையியலின் அடிப்படைகள் அறிந்த அனைவருக்குமே தெரிந்த விஷயம் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் வருகை என்பது இறுதி தீர்ப்பு நாளைக் குறிக்கும் என்பது. அதாவது இரண்டாம் வருகையோடு உலகம் அழந்துவிடும். நான் 22.10.1844 அன்று இயேசு கிறிஸ்து மீண்டும் வரவில்லை என்பதைச் சொன்னது பலிக்காமல் போய்விட்டதால் அவரது மதக்குழு அப்படியே கலைந்திருக்கும் என்றுதானே எண்ணுகிறீர்கள்? அதுதான் இல்லை. பலர் அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு வெளியேறினாலும் உள்வட்ட நம்பிக்கையாளர்கள் தானியேல் 8:14 விடத் தயாராக இல்லை. அந்த வரிக்கான விளக்கம் சரிதான் என்றும், கிறிஸ்து அந்த நாளில் பூமிக்கு வருவார் என்று கணித்தது மட்டுமே தவறு என்றும் கிறிஸ்து சொர்க்கத்தின் ஒரு பகுதியில் இருந்து மேற்பட்ட மற்றொரு பகுதிக்குச் சென்ற நாள் அதுவென்றும் விளக்கங்களைக் கொடுக்கத் தலைப்பட்டனர். இது மட்டும் அல்லாமல் அந்த மாபெரும் வீழ்ச்சியில் இருந்து Seventh Day Adventists என்னும் மிகப்பெரிய கிறிஸ்தவ மத நிறுவனத்தையும் கட்டி எழுப்பினார். குறிப்பிட்ட தினத்தன்று தமது தலைவர் சொன்னபடி நடக்கவில்லை என்பதால் ஏற்பட்ட cognitive dissonanceஐ சமாளிக்கத்தான் அத்தனை தத்துவ விளக்கமும் என உளவியலாளர் கருதுவார்.

Cognitive Dissonance கோட்பாட்டை முன்வைத்த Festinger ஒரு ஆய்வை மேற்கொண்டு தமது வாதத்தை நிரூபித்துள்ளார். 1950களில் ‘Seekers’ என்ற பெயரில் உள்ள UFO + மத குறுங்குழுவிற்குள் ஊடுருவி ஆராய்கிறார். Dorothy Martin என்ற சிகாகோ பெண்மணி இந்தக் குழுவில் மீடியமாகச் செயல்படுகிறார். இவருக்கு க்ளாரியன் என்ற கிரகத்தில் இருந்து செய்திகள் வருவதாகக் கூறுகிறார். அச்செய்திகள் 21-2-1954 அன்று இரவு உலகம் அழிந்துவிடும் என்றும் Seekers குழுவினரை மட்டும் Clarion கிரகத்தில் இருந்து ஒரு விண்கலம் வந்து காப்பாற்றும் என்றும் கூறப்படுகிறது.

Seekers இச்செய்தியைக் கொண்டு பிரபலமடைய முயலவில்லை. மாறாக அவர்கள் முடிந்தமட்டும் தங்கள் இடையேயே இச்செய்தியை வைத்துக் கொள்கிறார்கள். Festinger ஆட்கள் மிகுந்த சிரமத்தோடுதான் அக்குழுவில் ஊடுருவுகின்றனர். குழு உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு 20.12.1954 அன்று ஒரு இடத்தில் கூடி விண்கலத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

21ம் தேதி பிறந்த பிறகும் எந்த விண்கலமும் வரவில்லை. உடனடியாக டாரதிமார்டின் ஒரு தற்காலிக விளக்கத்தைக் கூறுகிறார். உறுப்பினர்களிடம் உலோகப் பொருட்கள் இருந்ததுதான் விண்கலம் வராமைக்குக் காரணம் என்கிறார். தங்களுடைய வைக்கப்பட்ட பற்கள் உட்பட அனைத்து உலோகப் பொருட்களையும் உறுப்பினர்கள் வெளியே ஏறிகின்றனர். 21.12.1954 அன்று உலகமும் அழியவில்லை விண்கலமும் வரவில்லை. தங்கள் நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள ஒத்திசைவின்மையை (Cognitive Dissonance) அவர்களால் தாங்க முடியவில்லை. ஏதாவது தீர்வு வந்தாக வேண்டும். சிறிது நேரத்தில் மீடியம் டாரதி ஒரு புதுச் செய்தி கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். இவர்களுடைய பிரார்த்தனையையும் நம்பிக்கையையும் பார்த்து மகிழ்ந்த கடவுள் பூமிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துவிட்டார் என்றும் அதனால்தான் உலகம் அழியவில்லை என்றும் கூறுகிறார். ஒத்திசைவின்மை ஓரளவு சமன்படுத்தப்படுகிறது. உறுப்பினர்களும் நிம்மதி அடைகின்றனர். உடனடியாக இந்த விளக்கத்தை அனைவருக்கும் சொல்லவும் முயல்கின்றனர். அந்தக் குழுவும் 1991கள் வரை துடிப்பாகவே இயங்கி வந்தது. இந்த விவகாரத்தை ‘When Prophecy Fails: A Social and Psychological Study of a Modern Group That Predicted the Destruction of the World’ என்னும் நூலில் விளக்கியுள்ளர்.

உலகு எங்கிலும் மக்கள் நம்பிக்கை உடையும்போது, அவர்கள் நம்பிய அறங்களுக்கு மாறாகச் செயல்பட வேண்டி வரும்போது ‘Cognitive Dissonance’ஐ எதிர்கொள்கின்றனர். இந்த ஒத்திசைவின்மையை எப்படிச் சரிசெய்வது என்பதில் அதிக ஆற்றலைப் பயன்படுத்துகின்றனர்.

Cultural Studies துறையிலும் இலக்கியத்திலும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களில் ஒரு இடம் வரும். சியாமளி தனது கணவனையும் குழந்தையையும் விட்டு காதலனுடன் ஓடிப்போகத் தீர்மானம் செய்வாள். ஓடிப்போகத் திட்டமிட்ட அன்று காலையில் சாமர்த்தியமாகக் கணவனை குழந்தையையும் விலங்குக் காட்சி சாலைக்கு அனுப்பி வைப்பாள். கணவனை விட்டு வருவதில் பிரச்சனை இல்லை. ஆனால் குழந்தையை, அதுவும் பெண்குழந்தையை விட்டு வருவது அப்படி அல்லவே. ஓடிப்போனவள் மகள் என்ற பட்டத்தை அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டி இருக்கும், சியாமளிக்குத் தாய்மை என்ற கருதுகோளில் இருந்து தான் விலகத் தீர்மானித்ததால் Cognitive Dissonance வருகிறது. போதாக்குறைக்குக் காதலனும் அதனைக் குறித்துக் கேட்கிறான். சியாமளி நூதனமான முறையில் இந்த ஒத்திசைவு இன்மையைச் சரி செய்ய முயல்கிறாள். குழந்தை தன் குடும்ப ஜாடை இல்லை என்கின்றாள். குழந்தைகளுக்கு க்ரூர குணம் என்கிறாள். இதெல்லாம் Dissonanceஐக் குறைக்க அவள் எடுக்கும் முயற்சிகளே.

ஒரு வகையில் பார்த்தால் ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலே இந்த cognitive dissonance ஐ அடிப்படையாகக் கொண்டதுதான். இரண்டு இடதுசாரிகள் தாங்கள் நம்பும் சித்தாந்தம் பிறழ்கிறது என்னும்போது dissonanceம் அதனை எதிர்கொள்ளும் விதமும்தான் இந்த நாவல் என்று கூறலாம்.

சுராவின் வார்த்தைகளில் கூறுவது எனில் பலரும் மனிதனுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக ஊடகங்கள் மக்கள் தங்களுக்கு ஏற்படும் cognitive dissonance ஐக் குறைப்பதற்கான வழிமுறைகளைச் சுட்டிக்காட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் முயல்கின்றன. சமீபத்திய சர்ச்சைக்குரிய படமான ‘லஷ்மி’யை இவ்விதத்தில் பார்க்கலாம். கற்பு என்பது வள்ளுவர் காலம், சிலப்பதிகார காலம் தொட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் ஒரு அறம். திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்பது தவறானது என்பது நமது மனதில் ஆழப்பதிந்த விஷயம். எனவேதான் திருமண பந்தத்திற்கு வெளியே உள்ள உறவைக் குறித்த குற்றவுணர்ச்சி நம்மவர்களிடையே உண்டு. அதுதான் நம் பண்பாட்டையும் காக்கிறது. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவைக் குறித்து கனவு காண்கின்றவர்கள், அதில் ஈடுபடுகிறவர்களுக்குக் கடுமையான cognitive dissonance ஏற்படுகிறது. இதற்கு ஆறுதல் அளிக்கும் முயற்சியைத்தான் மேற்படி குறும்படம் செய்கிறது. அதாவது விவாகரத்து வேண்டாம் பொருந்தாத திருமணம் உறவு என்றபோது எப்போதாவது வேலிதாண்டுவதில் தவறில்லை என சொல்ல முயல்கிறது. Dissonance ஐ குறைப்பதற்கான வாதங்களைத் தருகிறது. அதுதான் அப்படத்தின் பிரபலத்தன்மைக்குக் காரணம்.

எல்லா விதமான அறமீறல்களுக்கும் நியாயம் கற்பிக்க முயல்வது மனித இயல்பே. இதில் தங்களைத் தாங்களே முட்டாள் ஆக்கிக் கொள்வதும் ஒரு பகுதி. அதற்கான உளவியல் ரீதியான அடிப்படை cognitive dissonanceல் உள்ளது. என்ன, இனி வரும் காலத்தில் ஒழுங்காக இருப்பவர்கள் அனைவரும் அசமந்தங்கள் என எதிர்தரப்பினர் கூறாமல் இருந்தால் சரிதான்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையின் இறுதி வடிவைத் தயாரித்துக்கொண்டு இருக்கும்போது குஜராத் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. ஒரு கட்சியின் வெற்றியைப் பார்த்து எதிர் தரப்பினர் வாக்களிக்கும் இயந்திரத்தை எந்த வித முகாந்திரமும் இல்லாமல் குறை கூறுகின்றனர். இதுவும் cognitive dissonanceதானோ?

Posted on Leave a comment

கோயில் நிலத்தில் பேருந்து நிலையமா? – பி.ஆர். ஹரன்

நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரிக்கு அருகே உள்ளது நந்திவரம் கிராமம். உண்மையில் பல்லவர் காலத்தில் நந்திவரம் என்கிற பெயரில் இருந்த பெரும்பகுதியே இன்று கூடுவாஞ்சேரியாக மாறியுள்ளது. இங்கே புகழ் பெற்ற சிவஸ்தலம் இருந்ததால் நந்திகேச்சுரம் என்று பெயர்பெற்று, பின்னர் நந்திவரம் என்று மருவியது. நந்தி வழிபட்ட சிவபெருமான் என்பதால் நந்தீஸ்வரர் என்று இறைவன் பெயர். இறைவி சௌந்தர்யநாயகி. மூன்றாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில் என்பதாலும் நந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நந்திவனம் என்று இவ்வூரின் பகுதியைத் தல புராணம் சொல்கிறது. காடுகள் மண்டிக்கிடந்த இப்பகுதி நந்திவனம் என்று வழங்கப்பட்டதாயும், பசுக்களை வளர்த்து வந்த ஒருவரின் பசு தினமும் மந்தையில் இருந்து விலகி வந்து அவ்வனத்தில் இருந்த ஒரு புற்றின் வாயிலில் பாலைச் சுரந்து சென்றதாகவும், அதைக் கண்ட பசுவின் சொந்தக்காரர் அந்தப் புற்றுக்குள் ஒரு சிவலிங்கத்தைக் கண்டதாகவும், அப்போது அச்சிவபெருமானுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்யச் சொல்லி அசரீரி கேட்டதாகவும், அதன்படி அவர் மன்னனிடத்துச் சொல்ல, மன்னன் நந்திவர்மன் அங்கே இறைவனுக்குக் கோயில் எழுப்பியதாகவும் தல புராணம் கூறுகின்றது. பசுக்களின் சொந்தக்காரர் புற்றைக் கலைக்க ஆயுதம் உபயோகப்படுத்தியதால், உள்ளிருந்த லிங்கத்தின் மேல் பட்டுள்ள வெட்டுக் காயம் இன்றும் காணப்படுகின்றது.

நந்தி தீர்த்தம் எனும் திருக்குளம் இருக்கின்றது. ஸ்தல விருக்ஷம் வில்வம். நூறு வருடங்களுக்கு மேலாக பிரமாண்டமாக வளர்ந்துள்ள நாகலிங்க மரம் ஒன்றும் உள்ளது. நடராஜர் சபையும் உள்ளது. பைரவர், வீர்பத்ரர், சூரிய பகவானும் உள்ளனர். இத்தலம் அப்பரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.

கோயில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம்

இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயிலின் நிலத்தில் புறநகர் பேருந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்குத் தமிழக அரசு முடிவு செய்து அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஆன்மிக ஆர்வலர்களுக்கும் கோயில் பக்தர்களுக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை எடுத்துக்கொள்ளாமல், கோயில் நிலத்தைக் கையகப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற விதி எண் 110ன் கீழ், தமது அரசின் பல்வேறு திட்டங்களை அறிவித்தபோது, ரூபாய் 376 கோடி செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 1894’ அடிப்படையில், வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை, அரசாணை (GO Ms. No.184) 10.07.2013 அன்று வெளியிட்டது. நிர்வாக அனுமதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை நில நிர்வாகத்துறை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டது.

 இந்நிலையில், ‘நிலம் கையகப்படுத்தல், மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியேற்றத்தில் இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டம் – 2013’ 2014ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அமலுக்கு வந்தது. ஆனால், அந்தச் சட்டத்திற்கான அரசு விதிகள் தயாரிக்கப்படாமல் இருந்த நிலையில், நிலம் கையகப்படுத்தல் இயலாத காரியம். எனவே, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் பரிந்துரையை தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 1894, 17(2) பிரிவின்படி பரீட்சித்துச் செயல்படுத்த இயலாது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குக் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் நில நிர்வாகத்துறை ஆணையரின் கடிதம் (Letter No: S2/12637/2014) 2014ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே, நிலம் கையகப்படுத்த இயலாத சூழலில், சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்தபடி, புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள அருள்மிகு நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20.54 ஹெக்டேர் நிலமும், அதனையொட்டி இருக்கும் அரசுப்புறம்போக்கு நிலமும் தேர்வு செய்யப்பட்டு, அந்நிலங்களில் புறநகர் பேருந்து நிலையம் கட்டலாம் என்று செங்கல்பட்டு வருவாய்க் கோட்ட அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட குறிப்புகளைச் சுட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையத் துணைத்தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அவர்கள், ‘நந்திவரம் கிராமம் அருள்மிகு நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20.54 ஹெக்டேர் நிலம் தேசிய நெடுஞ்சாலை 45-ஐ ஒட்டி இருப்பதாலும், அது தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமாக இருப்பதாலும், நிலம் கையகப்படுத்த வேண்டிய நடைமுறைகள் தேவையில்லை. தமிழகத்தின் தென்பகுதிக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகவும் உள்ளது. எனவே, அந்நிலத்தை எங்களுக்கு விற்பதன் மூலமோ அல்லது நீண்டகால குத்தகைக்கு அளிப்பதன் மூலமோ, தங்கள் துறைக்கும் பயனளிக்கும் விதமான வழிமுறைகளை ஆலோசித்து சம்மதம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அப்போதைய இந்து அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் வீர சண்முக மணிக்குக் கடிதம் (Letter No: NT1/331/2013) ஜனவரி 28, 2016 அன்று அனுப்பினார்.

 மேற்கண்ட கடிதத்திற்குப் பதிலாக, இந்து அறநிலையத்துறை ஆணையர், ‘குறிப்பிட்ட நிலத்திற்கான புல எண்கள், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், நிலத்திற்கு விலை நிர்ணயம் செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலருக்குச் சந்தை மதிப்பிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அது இதுநாள்வரை கிடைக்கப்பெறவில்லை. எனவே, மாவட்ட வருவாய் அலுவலரின் சந்தை மதிப்பினை வழங்கும் வகையில், மாவட்ட ஆட்சியருக்கு விவரம் தெரிவித்து சந்தை மதிப்பினை அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில் விரைவில் பெற்றளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலருக்குப் பதில் கடிதம் (Letter No: 5828/2016) 27 ஜூலை 2016 அன்று அனுப்பியுள்ளார்.


அரசியல் சாஸன மற்றும் சட்ட மீறல்கள்

தமிழக அரசின் மேற்கண்ட முயற்சி அரசியல் சாஸன க்ஷரத்துக்களையும் இந்து அறநிலையத்துறை சட்டப் பிரிவுகளையும் மீறுவதாக இருக்கின்றது.

முதலாவதாக, ‘ஒரு கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கோயிலின் தெய்வத்துக்குச் சொந்தமானது’ என்கிற உண்மையைப் பல மாநில உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் உறுதி செய்துள்ளன. ஆகவே, நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களும் சொத்துக்களும் அக்கோயிலின் தெய்வமான நந்தீஸ்வரருக்கு உரியவைதான்.

இரண்டாவதாக, நந்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிபவர்கள் சிவாச்சாரியார் எனப்படும் மத உட்பிரிவினர். எப்படி சிதம்பரம் கோயில் தீக்ஷிதர்கள் மத உட்பிரிவினராகக் கருதப்பட்டு அவர்களுக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளதோ, அதேபோல சிவாச்சாரியார்களுக்கும் சிறப்பு உரிமைகள் உள்ளன. சிவச்சாரியார்கள் மத உட்பிரிவினர் என்பதை அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியல் சாஸனத்தின் 26வது க்ஷரத்து, ‘மதம் மற்றும் அறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நிர்வாகம் செய்வதற்கும், அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும், அவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்களை சட்டப்படி நிர்வகிப்பதற்கும் ஒவ்வொரு மத உட்பிரிவினருக்கும் (Religious denomination) உரிமையும் மதச்சுதந்திரமும் உண்டு’ என்பதை உறுதி செய்கிறது. எனவே, நந்தீஸ்வரர் கோயில் மத உட்பிரிவுக் கோயிலாகிறது. அது மட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் சொத்துக்கள் மீதான உரிமைகள் அடிப்படை உரிமைகளின் கீழ் வந்துவிடுகின்றன.

மூன்றாவதாக இந்து அறநிலையத்துறை (1959) சட்டத்தின் 34வது பிரிவு, ‘கோயில் நிலங்களைக் கையகப்படுத்தப்படுவது கூடிய மட்டும் தவிர்க்கப்பட வேண்டும். மற்ற வழிகளை முயற்சி செய்த பிறகு மாற்று நிலங்கள் கிடைக்காத, வேறு வழியில்லை என்கிற நிலையில், பொதுநன்மைக்கும் கோயிலுக்கும் பயன் ஏற்படும் என்று இருந்தால் மட்டுமே கோயில் நிலங்களைக் கையகப்படுத்தலாம்’ என்று தெளிவாகக் கூறுகிறது. 26.09.1984 தேதியிட்ட அரசு ஆணையும் (எண் 1630) இதை உறுதி செய்கிறது.

மேலும், அறநிலையத்துறைச் சட்டத்தின் 78ம், 79ம் பிரிவுகள்  கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுப்பது போன்ற கோயிலுக்குப் பயனளிக்கும் சிறப்பான அதிகாரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அளிக்கின்றன. கோயிலுக்குப் பயனில்லாத வகையில் அதன் நிலங்களை விற்பதற்கு அல்ல.

அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பதைக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. கோயிலின் பயன் கருதிச் செயல்படும் அறங்காவலர்கள் இல்லாத நிலையில் வெறும் அரசு ஊழியர்களான நிர்வாக அலுவலர்கள் போன்றவர்கள் கோயில் சொத்துக்களைக் கையாளுவதும் அவற்றை விற்பனை செய்வதும் குற்றமாகும்.


ஆலய வழிபடுவோர் சங்கத்தின் நடவடிக்கை

அரசியல் சாஸனத்திற்கு விரோதமான இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்துடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறது ஆலய வழிபடுவோர் சங்கம். அதன் தலைவரான டி.ஆர். ரமேஷ் அவர்கள் நந்தீஸ்வரர் கோயில் நிலத்தை புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்காக கையகப்படுத்தக் கூடாது என்று கூறி, அறநிலையத்துறை ஆணையருக்கும், முன்னாள் ஆணையருக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேற்கண்ட அரசியல் சாஸன க்ஷரத்து, இந்து அறநிலையத்துறைச் சட்டப் பிரிவுகள், அரசு ஆணைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, மேற்கூறப்பட்ட அரசு அதிகாரிகள் நந்தீஸ்வரர் கோயில் நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், மீறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

புறம்போக்கு நிலங்கள் நிறைய இருக்கும் அந்தப் புறநகர் பகுதியில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்துவது தவறு என்பதை உணர்ந்து தமிழக அரசு அதற்கேற்றார்போல மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.

Posted on Leave a comment

தமிழகத்தின் முதல் இந்துத்துவப் பத்திரிகை – அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்நாடு என்றைக்குமே ஒரு இந்துத்துவப் பிரதேசமாகத்தான் இருந்திருக்கிறது. 14ம் நூற்றாண்டில் கங்காதேவியால் எழுதப்பட்ட மதுரா விஜயம் என்கிற வீர கம்பராய சரிதம், குமார கம்பண்ணர் மதுரையில் ஏற்பட்ட சுல்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றதைக் கூறும் குறுங்காவியம். இக்காவியத்தின் பாட்டுடைத்தலைவனின் வாள் குறித்து கங்காதேவி கூறுவது முக்கியமானது. பாண்டியர்களுக்கு சிவனால் வழங்கப்பட்ட சந்திரஹாச வாள். பாண்டியர்களிடமும் சோழர்களிடமும் இந்த வாள் இருந்த காரணத்தினால் அவர்கள் நாடுகளில் செல்வம் இருந்தது. ஆனால் இப்போது பாண்டிய, சோழ வம்சங்கள் நலிவடைந்துவிட்டதால் அகத்திய மாமுனி இவ்வாளை கம்பண்ணரிடம் அளிக்கிறார். மதுரையில் ஏற்பட்ட சுல்தானிய ஆதிக்கத்துக்கான எதிர்ப்பை சிவபெருமானால் அளிக்கப்பட்ட வாள், சோழ-பாண்டிய பாரம்பரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி அப்பேரரசுகளின் பண்பாட்டுத் தொடர்ச்சியாக விஜயநகரப் பேரரசை கங்கா தேவி காட்டுகிறார். இந்த வாள் உண்மையில் பாரதத்தின் வரலாற்றில் பண்பாட்டுப் பாதுகாப்பு சக்தியாகத் தொடர்ந்து இயங்கி வரும் இந்துத்துவத்தின் ஆழமான குறியீடே. பின்னர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் ‘இந்து மதமே அமரத்துவத்தை அளிக்க வல்லது. பிற மார்க்கங்கள் அதன் ஏகதேசங்கள்’ எனக் குறிப்பிடுவதும் ஐயா வைகுண்டர் முதல் பாரதி வரையிலான தொடர்ந்து எழுப்பப்பட்ட மதமாற்ற எதிர்ப்புகளும், பாரத விடுதலை இயக்கக் குரல்களும் இந்துத்துவம் எனும் சிவ-வாளின் காலத்தொடர்ச்சியான இயக்கம் என்றே கருதலாம்.

அவ்விதத்தில் பத்திரிகைத் தளத்தில் ஒரு முழுமையான இந்துத்துவப் பத்திரிகை 1940களின் இறுதியில் தென் திருவிதாங்கூர் பகுதியில் இயங்கி வந்துள்ளது. அதன் பெயர் ‘தொண்டன்’. அதன் ஆசிரியர் கே. ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாண நாவலருடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.)

தமிழகத்தின் கடைக்கோடியில் இயங்கிய இந்தப் பத்திரிகை குறித்து பொதுவாக ‘ஆராய்ச்சியாளர்கள்’ எதுவும் அதிகம் பேசாதது அல்லது கண்மூடி மௌனிப்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான். அவர்களின் அரசியல்-சமூகப் பார்வை மண்டலத்தின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் தரவுகள் இப்பத்திரிகைத் தொகுப்பில் உள்ளன. எனவே அவர்கள் இதை உதாசீனப்படுத்தியோ அல்லது மௌனமாகக் கடந்தோதான் சென்றாக வேண்டும். அவர்களுக்கு போலி ‘மறைசாட்சிகளின்’ புனித வரலாற்று புனைந்துரைகளுக்குப் பொய் சான்றளிக்கவே ஊதிய ஊழியக் காலம் போதுமானதாக இருக்கிறது. என்ன செய்வது!

எனக்குக் கிடைத்த நூல் கட்டு 1946-47 ஆண்டுகளில் உள்ள இதழ்கள்: ‘முதல் ஆண்டு முற்பகுதி ஒன்று முதல் ஆறு இதழ்கள் தொகுப்பு’. இந்நூலுக்கான வாழ்த்துகளை வழங்கியவர்களில் சிலர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, திரு.வி. கலியாண சுந்தரம், சி.பி. ராமசுவாமி அய்யர், மறை. திருநாவுக்கரசு, சுத்தானந்த பாரதியார், கி.வா. ஜெகன்னாதன், நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை ஆகியோர்.

இக்காலத்துக்குத் ‘தொண்டன்’ தேவையே என்கிறார் திரு.வி. கலியாண சுந்தரனார். ‘தங்கள் கருத்தெல்லாம் தொண்டன் மூலம் தமிழ்நாட்டை ஓம்பும் என்பதில் ஐயமில்லை.’ ‘செந்தமிழ்நாடு திருந்த வரும் தொண்டன் சந்ததம் வாழ்க தழைத்து’ என்கிறார் கவிமணி.

சுத்தானந்த பாரதி தம் கவிதை வாழ்த்தில் கூறுகிறார்:

‘ஹிந்து என்றால் ஏந்துயர் தீரன்
ஹிந்து தருமம் இன்பத் தடங்கடல்
ஹிந்து ஜாதி முந்திய அறவோர்
கூட்டம் என்று கொட்டுக முரசே!
எண்டிசையுலகிலும் இம்மதமோங்கத்
தொண்டு செய் அன்பர் துலங்குக வெற்றியே!’

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாழ்த்துரையில் இப்படிச் சொல்கிறார்:

‘வருக வருக தொண்டனே
வாழ்க மேன்மை கொண்டு நீ
தருக பெருக மங்களம்
தமிழகத்தில் எங்கணும்
வீர வாழ்வு சொல்லுவாய்
வினையின் தீமை வெல்லுவாய்

கடவுள் என்ற சக்தியைக்
கருதிடாத பித்தரின்
மடமை நீக்கும் சேவைதான்
மனிதர்க்கின்று தேவையாம்.’

இதழ்களுக்கு உள்ளே செல்கிறோம்.

1947லேயே இந்துக் கோயில்களின் நிதியைப் பொதுக்கல்விக்குப் பயன்படுத்தலாமா கூடாதா எனும் கேள்வி விவாதிக்கப்படுகிறது. பத்திரிகை ஆசிரியர் கெ. ஆறுமுகநாவலரும், வெ. இராமநாதன் செட்டியாரும் இணைந்து எழுதிய கட்டுரையில் இவ்வாறு காணப்படுகிறது:

“பிறமதத்தினர் பொது கல்விச்சாலையின் பெயரால், பொது ஆஸ்பத்திரியின் பெயரால், பொது மாணவர் விடுதியின் பெயரால், எண்ணற்ற இந்துக்களைத் தங்கள் மதத்தில் சேர்த்து வருகின்றனர். நடுநிலை தாங்கவேண்டிய அரசாங்கம் இதனை நாள்தோறும் நன்றாய் அறிந்துகொண்டே அவர்கட்கு வேண்டிய உபகாரநிதியையும் பொது நிதியிலிருந்து வழங்கி வருகிறது.

பிற மதத்தார் செய்யும் முறையில் சென்னை மாகாண இந்துமத ஆலய உபரி வருமானத்திலிருந்து பொதுக் கல்விச்சாலைகள் நடத்தலாம். அவர்களைப்போல நமது மதத்தையும் வளர்க்க பொதுக் கல்விச்சாலைகள் இந்து மத சீர்திருத்தக் கழக ஆட்சிக்குட்பட்டு அரசாங்க மேற்பார்வையில் நடத்தலாம். அரசாங்கம் பிற மதத்தினருக்கு வழங்கும் உபகார நிதியை நடுநிலைமையில் நின்று இந்து நிலையங்கட்கும் வழங்க வேண்டும். அவ்வாறு பொதுக்கல்வியை இந்து மத நிலையங்கள் வளர்ப்பது இந்து மத வளர்ச்சிக்கே ஏற்ற துணை புரியும்.

பிறமதங்கள் எத்துறையிலெல்லாம் காலநிலைக்கேற்ப பணி செய்து தங்கள் தங்கள் மதங்களை வளர்க்கின்றனவோ அவற்றைவிடப் பன்மடங்கு பணி செய்யும் தகுதி இந்து மதத்திற்குமுண்டு. ஆலயங்களின் உபரி வருமானத்தை நடுநிலை வகிக்க வேண்டிய அரசாங்கம் எடுத்து பொதுக் கல்விக்குப் பயன்படுத்துவதனால் மேற்கூறிய எந்தப் பணியும் இந்து மதத்தில் நடைபெறாமலாகி இந்து மதம் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போய்விடும்.”

அதே இதழில் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் ‘இந்துமத ஸ்தாபன நிதியை பொதுக்கல்விக்குப் பயன்படுத்தல் பொருத்தமல்ல’ என்று ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்.

‘பாராட்டுகிறோம்’ என்று ஒரு பகுதி. அதில் காணப்படும் பாராட்டுக்கள் முக்கியமானவை.

“திருவிதாங்கூர் மன்னர்பிரான் இந்துக்கள் அனைவருக்கும் ஆலயப்பிரவேச உரிமை அளித்து இந்து மத வளர்ச்சிக்கு இன்றியமையாத தொண்டுகள் புரிந்து வருதலைப் பாராட்டுகின்றோம். …எட்டையபுரம் ஜமீன் தனது சமஸ்தானத்திலுள்ள ஆலயங்கள் அனைத்திலும் எல்லா இந்துக்களுக்கும் பிரவேச உரிமை அளித்ததைப் பாராட்டுகிறோம். 16-10-46ல் மலபாரில் சரித்திரப் பிரசித்தி பெற்ற கள்ளிக்கோட்டை லோகனார்காள் என்ற ஆலயத்தில் எல்லா ஜாதி இந்துக்களுக்கும் பிரவேச உரிமை அளித்த காடாத்த நாட்டின் வலிய மகாராஜா அவர்களின் முற்போக்கான எண்ணத்தைப் பெரிதும் வரவேற்றுப் பாராட்டுகின்றோம். கொச்சி சமஸ்தானத்தில் திருச்சிவப் பேரூருக்கு அருகாமையிலிருக்கும் எய்யல் என்ற இடத்திலிருக்கும் வெள்ளித் திருத்திக் கோயிலை எல்லா இந்துக்களுக்கும் திறந்துவிட்ட அவ்வாலய நிர்வாகிகளின் செயலைப் பாராட்டுகிறோம். திருச்செந்தூர் பஞ்சாயத்துப் போர்டார் 12-10-’46ல் நடைபெற்ற விசேஷக் கூட்டத்தில் ‘ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோயிலுக்குள் ஹரிஜனங்களையும் இதுவரை அனுமதிக்கப்படாதிருந்த இதர இந்துக்களையும் ஜாதி இந்துக்கள் போய்த் தொழுகிற இடம் வரை அனுமதிப்பதென்று’ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. பஞ்சாயத்து போர்டு தலைவர் திரு. கனகசபாபதி பிள்ளை அவர்களுடையவும் இதற்காக ஒத்துழைத்த அன்பர்களுடையவும் எண்ணத்தைப் பாராட்டுகிறோம். சிவகங்கை மன்னர் அவர்கள் தமது எல்லைக்குட்பட்ட புராணப் பெருமை வாய்ந்த திருக்கோஷ்டியூர் – காளையார் கோயில் – மானாமதுரை ஆலயங்களில் நவம்பர் 15க்குள் எல்லா இந்துக்களுக்கும் பிரவேச உரிமை வழங்கி திறந்து விட முன்வந்திருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்வுடன் பாராட்டுகின்றோம்.”

இந்த இதழில் பண்டித மதன் மோகன் மாளவியாவின் அறிக்கையும் வெளியாகியுள்ளது:

“மனித வர்க்கத்திற்கே ஆபத்து ஏற்பட்டுவிட்டது என நான் நினைக்கிறேன். ஹிந்து கலாசாரத்துக்கும் ஹிந்து மதத்துக்கும் கூட ஆபத்து வந்துவிட்டது. ஹிந்து மக்கள் எல்லாம் ஒரே முகமாக ஐக்கியப்பட்டுக் கிடைக்கக்கூடிய உதவிகளையும் சகாயங்களையும் பயன்படுத்திக்கொண்டு தற்காப்பு செய்து கொள்வதுடன் சுய உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டிய அவசியமும் அவசரமுமான சமயம் நிச்சயம் வந்துவிட்டது. நவகாளி திப்பேரா அட்டூழியங்களால் ஒவ்வொரு ஹிந்துவின் நெஞ்சமும் கோபத்தால் கொதிக்க வேண்டும்… ஹிந்துக்கள் மெஜாரிட்டி வகுப்பினராயிருப்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படலாம் என்று பரவிவரும் சாவுமணியை எதிர்த்து இந்துக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும்.”

அகில இந்திய இந்து மகாசபை தலைவராக அப்போது இருந்த டாக்டர் ஷியாமா பிரஸாத் முகர்ஜி அவர்களின் கருத்துகளையும் தொண்டன் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது:

“இந்தப் பெரிய நாட்டில் இந்துக்கள் உயிர்வாழ்வதையே பயமுறுத்தும்படியான பெரும் நெருக்கடிகள் ஏற்படும் சமயத்தில் இந்துக்களின் நலன்கள், உரிமைகள் முதலியவற்றையும் இந்துப் பெண்மணிகளின் மானத்தையும் எவ்விதப் பயமும் இன்றிக் காப்பாற்றக்கூடிய இளைஞர்களைக் கொண்ட நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒழுங்கான ஸ்தாபனம் ஒன்று வேண்டுமென்ற தேவையைச் சமாளிப்பதற்காகவே இந்துஸ்தான் தேசியப் படையை நிறுவப் போகிறோம்.”

டாக்டர் முகர்ஜியின் இந்த அறிக்கை நவகாளி படுகொலை, கல்கத்தா பெருங்கொலை கலவரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்த இதழில் மிக முக்கியமான ஒரு கட்டுரை இருக்கிறது. அக்கட்டுரையின் தலைப்பு ‘நாம் இந்துக்களே’. தமிழக இந்துத்துவ வரலாற்றில் இக்கட்டுரை ஒரு முக்கிய சாசனம் என நான் கருதுகிறேன். இக்கட்டுரையிலிருந்து:

“இந்துக்களாகிய நமக்கு நேர்ந்து வரும் துன்பங்களும் கொடுமைகளும் புறச்சமயத்தவர்களால் மட்டுமன்று, நம்மவர்களாலேயே நமக்குப் பெரும்பாலும் தொல்லைகள் விளைந்து வருகின்றன என்பதை வரலாற்று நூல்களால் அறியலாம். பாருங்கள்! ஜயச்சந்திரன் என்னும் அரசன் அயல்நாட்டு முஸ்லிம் மன்னனை நம்மிந்திய நாட்டிற்கு வருவித்து தன் உறவினரான பிருதிவி மன்னனைத் தோற்கடித்தானல்லவா? அன்று மட்டுமல்ல; இன்றும் இம்மனப்பான்மையே நம்மிந்துக்களை வாட்டி வருகின்றது என்ற உண்மை இப்போதைய நிகழ்ச்சிகள் வாயிலாகச் சற்று ஆராய்ந்து பார்த்தால் வெள்ளிடை மலையென விளங்கும். இன்றும் இந்துக்களாகிய நாமும், நம் சமயமும் வாழ்கின்றோம்; வாழ்கின்றது என்றாலும் இன்று இந்துக்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளுக்கும் பகைமைகளுக்கும் இடமான குல வேற்றுமையை இன்றே கைவிட வேண்டும்; இன்றேல் இறந்தொழிய வேண்டும். வகுப்பு வேற்றுமைக் கொடுமைகளின் முன்னணியில் நிற்பது தீண்டாமை மட்டுமல்ல. வேளாளன், பார்ப்பான், படையாட்சி, நாயுடு, ரெட்டி, செட்டி முதலாய இனப்பிரிவுகளும் பகைமைகளும் இன்றே தொலைய வேண்டும். இன்றேல் இறந்தொழிய வேண்டும். குல வேற்றுமைக்குக் குறிப்பிட்ட ஒரு வகுப்பே காரணமென்று கூறிப் பழித்துப் பகைத்துத் தீயைக் கக்கும் ஒரு சார்புக் கட்சித் தலைவர்கள் தன் வகுப்புயர்வுக்கும் நன்மைக்கும் பாடுபடுவராகில் அவர்களால் இந்துக்களுக்குள் ஒற்றுமையை எப்படி வளர்க்கமுடியும்? இப்படிக் குறிப்பிட்ட வகுப்பின் மேல் அளவிறந்த வெறுப்புக் கொண்டு அவ்வகுப்பாரைப் பழிக்கும் ஆத்திரத்தில் ‘ஒரு வகுப்பார் ஆதிக்கத்தில் மதம் இருக்கின்றது, கோயில் இருக்கின்றது, ஆதலால் இந்து மதத்தையும் கோயிலையும் அழித்துவிட வேண்டுமென்று ஆரவாரம் செய்கின்றனர். தனி ஒரு வகுப்பினருக்குள்ள ஆதிக்கத்தைப் பிடுங்கும் ஆண்மையும் அறிவும் இந்துக்களில் ஒரு சாரார் தமக்கில்லை என்று நம்பும் அளவுக்குக் கோழைகளாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்துக்களின் கோயில்களையும் சமயத்தையும் அழிக்க வெறிகொண்டு திரிந்து படுகுழியில் விழும் தன்னம்பிக்கையற்ற தற்கொலையாளர்கள்போல ‘நாம் இந்துக்கள் இல்லை. நாம் திராவிடர்கள்’ என்கிறார்கள். இன்னும் சற்று எண்ணிப்பார்த்தால் அச்சாராருக்கு இனவேற்றுமையை விட இந்து சமய அழிப்பே அவர்கள் ஆர்வம் என்பது நன்கு புலனாகும். அதுமட்டுமல்ல அவர்களும் அக்கட்சிச் சொற்பொழிவாளர்களும் முஸ்லிம் லீக் முஸ்லிம் மதக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். …ஏன் முயன்று வைதீகர்களின் கொடுமையைப் போக்கி புனித இந்து மதத்திற்குத் தொண்டாற்றலாகாது? இந்நல்வழியைத்தான் நம் நாட்டிலுள்ள இந்து சமய சங்கங்கள் பின்பற்றி நம் சமயத்தை உயர்த்தப் பாடுபடுகின்றன என்பதைச் சைவ சித்தாந்த மகா சமாஜம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், வைஷ்ணவ மகா சங்கம், இராமகிருஷ்ணா மிஷன், ஆரிய சமாஜம், சமரச சன்மார்க்க சங்கங்கள் முதலிய இந்து சமய அமைப்புகள் செய்து வருகின்றன. வைதீகக் கொடுமையிலிருந்தும் இந்து சமயப் புனிதத்தை இக்கழகங்களும் இக்காலத் தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், மாளவியா, மறைமலையடிகள், சச்சிதானந்தம் பிள்ளை, வேங்கிட சாமி நாயுடு, திரு.வி.க முதலியோர் செய்து வருகின்றனர். வைதீகர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் நினைத்தல் தவறு. எல்லா வகுப்பினரிலும் வைதீகர்களும் சீர்திருத்தவாதிகளும் இருக்கின்றனர். இன்னுமொரு வியப்பும் திகைப்பும் யாதென்றால் அச்சாரார் தோல்வி மனப்பான்மையால் அரசியலில் பிற்போக்காளராகி நாட்டுணர்ச்சியையும் எதிர்க்கிறார்கள். முஸ்லிம் லீக்கை ஆதரிக்கின்றனர். சுதந்திரக் கட்சிகளைத் தாக்கி அதன் வாயிலாக பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குழைக்கின்றார்கள். இங்ஙனம் இனப்போரில் ஈடுபட்டு இறுதியில் முஸ்லிம் லீக்கை ஆதரித்து முஸ்லிம்களாக வேண்டுமென்று பேசி நம் சமய சமூக கலை நாகரிகங்களை அழிக்க முன்வந்திருக்கும் இந்த ஜெயச்சந்திரர்கள் இந்துக்கள் இல்லை. இவர்கள் இன்றே முஸ்லிம்கள் ஆகட்டும். நம் சமய சமூக நாகரிகங்களை உயர்த்த ஆணவத்துடன் உழைக்கும் நாம் இந்துக்களே.”

இக்கட்டுரையை எழுதியவர் வித்துவான் மறை. திருநாவுக்கரசு. மறைமலையடிகளின் புதல்வர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த மறைமலையடிகளின் புதல்வர் தமிழ்நாட்டில் இந்துத்துவக் குரல் எழுப்பிச் செயல்பட்ட மூத்தோரில் ஒருவர் என்பது எவ்வளவு முக்கியமானது!

அடுத்த இதழ் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆலயப்பிரவேச சட்டம் வருவதற்கான ஆயத்தங்கள் ஏற்படுகின்றன. சனாதனிகள் என தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் அதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்நிலையில் ‘தொண்டன்’ தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆலயப் பிரவேச எதிர்ப்பாளர்களை எதிர்த்து ஒரு கருத்துப்படம். இந்து மத ஞானிகளும் சான்றோர்களும் வானுலகில் இருந்து ஆலயப் பிரவேசத்துக்கு அருட்பாலிக்கின்றனர். ஆனால் சனாதனிகள் என தன்னைச் சொல்லும் ஒரு சிறு கும்பல் ‘ஐயோ மதம் அழிகிறதே’ என கூச்சலிடுகின்றனர். தலையங்கத்தில் ஆறுமுகநாவலர், சட்ட அமலாக்கத்துக்குக் காத்திருக்காமல் ஒவ்வொரு ஊரிலும் தானாகவே முன்வந்து ஆலயப்பிரவேசம் ஊர் மக்களால் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆலயப்பிரவேசத்தைத் தடுக்க முற்படுவோரின் செயல் ‘கொந்தளிப்போடு வரும் கடலை தன் கைத்துடப்பத்தால் பெருக்கித் தள்ளத்துணிந்த கிழவியின் செயலை ஒத்திருப்பதாக’க் கூறுகிறார்.

நவகாளியில் அல்லல் படும் இந்துக்களுக்கு திருப்பதி தேவஸ்தான நிதியிலிருந்து உதவியளிக்க வேண்டுமென்னும் கோரிக்கை இந்த இதழில் முன்வைக்கப்படுகிறது.

பாபு ஜகஜீவன் ராம் அவர்களின் கட்டுரை இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்பு ‘நித்தியப் புதுமை கொழிக்கும் மதம் இந்து மதம்’. மிகக் கடுமையாக சாதியக் கொடுமைகளைச் சாடும் கட்டுரை இது. அவருடைய கட்டுரைப் பட்டியல் சமுதாய மக்களின் வேதனையையும் ஹிந்து சுய கௌரவ உணர்வையும் ஒருங்கே காட்டும் கட்டுரை.

“நாங்கள் ஹிந்துக்களா இல்லையா என்று தீர்மானிக்கும் விஷயத்தை ஜாதி ஹிந்துக்களிடம் விட்டுவிட ஹரிஜனங்களாகிய நாங்கள் விரும்பவில்லை. இந்தப் பிரச்சனையை நாங்களே தீர்மானித்துவிட்டோம். நாங்கள் இந்துக்கள்தான். இந்துக்களாகவே இருப்போம். ஆலயப் பிரவேச சம்பந்தமாக ஹரிஜனங்கள் கிளர்ச்சி செய்வது கூட எனக்குப் பிடிக்கவில்லை. இந்து தெய்வங்களிடம் எனக்குப் பரம பக்தியுண்டு. ஆகவே பக்திக்கும் வணக்கத்துக்கும் பாத்திரமான இவ்விஷயத்தை மட்டமான தர்க்க ரீதிக்கு இழுக்க விரும்பவில்லை. நாங்கள் வந்தால் ஓடிப் போய்விடும் என்ற பலஹீனமான சாமி கோயில்களுக்கு நாங்கள் போக விரும்பவில்லை. இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கே இடம் தரமுடியாத அவ்வளவு கேவலமான மதமா நம் மதம் என்பதை மட்டும் என் சனாதன நண்பர்களைக் கேட்க விரும்புகிறேன்…

இதனை சனாதன நண்பர்களிடம் நேரடியாகக் கேட்கிறேன். அவர்கள் இதை யோசித்துப் பார்க்கட்டும். ஹரிஜனங்கள் நன்மைக்காக இது பற்றி அவர்கள் ஆலோசிக்க வேண்டாம். இந்து மதத்தின் நலனை முன்னிட்டு யோசிக்கட்டும். இந்து சமூகம் பூராவினுடைய நலனைக் கருத்திற்கொண்டு யோசிக்கட்டும். ஆகவே நமது மகத்தான புராதன மதத்தின் பெயரால் சனாதனிகளை நான் கேட்டுக்கொள்வது இதுதான். மதத்தில் கூறி இருப்பவைகளின்படி மனப்பூர்வமாக நடவுங்கள். பக்தியுடன் கடவுளை வணங்க விரும்பும் ஹரிஜனங்களை ஆண்டவனைத் தரிசிக்க ஆலயங்களைத் திறந்து விடுங்கள். இப்படிச் செய்தால் அழியா நித்தியப் புதுமை கொழிக்கும் மதம் இந்து மதம் என்பதை உலகத்திற்கு நீங்கள் காட்டியவர்களாவீர்கள். ஏதோ பழைய செத்துப்போன மதமல்ல என்பதைக் காட்டுவீர்கள். இல்லையேல் நம் மதம் ஜீவனின்றி தேங்கிப் போன, செத்துப் போன மதமென்றே உலகத்தவர் எண்ணுவர். இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகளிடையுள்ள வேற்றுமைகளைச் சாக்குச் சொல்லி தங்கள் ஆட்சியை நீடித்துக்கொள்ள முயலும் பிரிட்டீஷ் பிற்போக்குக் கும்பல் ஏமாறுவது நிச்சயம்.”

பெண்களும் ‘தொண்டன்’ இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். ‘கோதையின் காதல்’ என ஒரு தொடரை தூத்துக்குடியில் இருந்து இராம.சீதாபாய் எழுதியிருக்கிறார். இன்றைக்கு வாசிக்கும்போதும் அது எத்தனை ஆழமாகவும் துணிகரமாகவும் பேசுபொருளைக் கையாள்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது:

“இசையெழுவது அகக்கரணங்களிலிருந்தே. கரணங்கள் ஒரு பொருளில் பற்றுக் கொண்டு அதனோடு ஒன்றிய நிலையில் பொறிகளின் செயல் தான் விரும்பிய பொருளிலேயே லயித்துவிடுகின்றன. அந்த நிலையில்தான் இசை எழுகிறது. நீலமேனியில் அழகிய ஆபரணம் மின்ன வந்தான். அதோடு நின்றானா? இல்லை. தன்னழகிய வாயில் வெண் சங்கை வைத்து ஏதோ வெற்றியடைந்துவிட்டவன் போல் பும்… பும்… என்று முழக்கம் செய்கிறான். காதல் அதே நிமிடத்தில் பல பாணங்களாகத் தன்னை வருத்துகிறதாம். அதே நிமிடத்தில் சங்கோடு பெருமை கொள்கிறாள். அதை அவனோடு ஒப்பிடுகிறாள். ஆஹா! அந்த சங்குதான் என்ன பாக்கியம் செய்ததோ! சங்கே! நீ சொல்ல மாட்டாயா? சொல்லு சங்கே சொல்லு. அவன் பவள வாய்ச்சுவையும் வாசமும் எப்படி இருக்கின்றன? அதை வாயில் வைத்து முழக்கும்போது அதில் அவன் வாயமுதம் பட்டிருக்கும். சங்குக்கு அதன் சுவை தெரியும் என்றும் அதன் மணம் எப்படியிருக்கும் என்றும் கேட்கிறாள்.

கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆதி வெண்சங்கே

சங்கு பெற்ற செல்வம் இந்திரனும் பெறவில்லை.”

இதை இங்கே சுட்டுவதன் அவசியம். பொதுவாக இன்றைய இலக்கியவாதிகளுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. ஏதோ ஆண்டாளின் இலக்கியம் ‘உடல் இலக்கியம்’ என்றும் அதையெல்லாம் இந்துத்துவவாதிகள் பேச மாட்டார்கள் என்றும் ஒரு எண்ணம். ஆனால் அஜந்தா குகை ஓவியத்தில் உள்ள பெண் ஓவியங்களைக் கூட மார்க்சிய-விக்டோரிய மனநிலையில் கோசாம்பி போன்றவர்கள் தாழ்த்திப் பேசிய காலகட்டத்துக்கு ஒரு முப்பதாண்டுகள் முன்னர் தமிழகத்தின் இந்துத்துவப் பத்திரிகை ஒன்றில் ஆண்டாளின் காதல் அதன் உடல்மொழியுடன் ஒரு பெண்ணாலேயே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கீழ்மைப்படுத்தாமல்.

ஆலயப்பிரவேசம் அருகாமையில் வர வர அதற்கான சனாதனிகளின் எதிர்ப்பு அதிகமாகிறது. சென்னையில் பிப்ரவரி 1947ல் முதல் இந்து மாநாடு என்று ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. கோவர்த்தன மடத்தின் சங்கராச்சாரியார் கொடியேற்றித் தொடங்கி வைக்கிறார். மகாநாட்டுத் தலைவராக ஸ்ரீ.விவி. ஸ்ரீநிவாச அய்யங்கார் பேசுகிறார். அதில் அவர் ‘ஹரிஜனங்கள் மீது எனக்கு எந்தவித க்ஷாத்திரமும் இல்லை. மனிதர்களை நடமாடும் கோயில்கள் என்று கருதுபவன் நான். ஆயினும் ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை எதிர்க்கிறேன். ஹரிஜனங்களே ஆலயப் பிரவேசத்தை விரும்பவில்லை என்பது என் அபிப்பிராயம்’ என முழங்குகிறார்.

‘தொண்டன்’ பத்திரிகை இந்த மாநாட்டை மிகக் கடுமையாகத் தாக்குகிறது. அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

“சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை மாகாண இந்து மத சீர்திருத்தக் கழகம், தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, இந்து மகாசபை, ஆரிய சமாஜம், இராமகிருஷ்ணா மிஷன் ஆகிய பிரபல கழகங்கள் ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து ஆவன புரிகின்றன. இவ்வேளையிலும் சென்னை மாகாண இந்துக்கள் முதல் மகாநாடு ஆலயப் பிரவேச உரிமை விஷயத்தில் முட்டுக்கட்டை போடுவது மிகமிக வியப்பினை விளைவிக்கிறது. (மாநாட்டு) தலைவரவர்களால் நடமாடும் கோயில்களென்று நம்பப்படும் ஹரிஜனங்கள் படமாடும் கோயில்களுக்குட் புகுந்தால் விளையும் பாதகம் என்னவென்று விளங்கவில்லை. பிறமதத்தினர் பெரிதும் விரும்பி உபசரித்து உரிமையனைத்தும் வழங்கி தங்கள் தங்கள் மதங்களுக்கு நமது இந்து ஹரிஜனங்களை அழைத்துச் செல்லும் இக்காலத்தில் அம்மதங்களுக்கு மகிழ்ச்சியுடன் போகாமல் உயர்ந்த ஜாதி இந்துக்களின் திருவடிகளில் மண்டியிட்டு வேண்டி நிற்க அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது? தீண்டப்படாதார் சுப்பிரமணியன், நாராயணன், லட்சுமி, பார்வதி என்ற இந்துப் பெயர்களைத் தாங்கி இந்துக்களாயிருப்பது வரையும் அவர்களை நாமாகப் போற்றவும் மாட்டோம். ஏற்கவும் மாட்டோம். மேற்கூறியவர்களே மோஸஸ்-ஜான் – மேரி-லில்லி என்ற பெயர்களைத் தாங்கி கிறிஸ்தவர்களாகிவிட்டால் அவர்களை நண்பர்களாகக் கொண்டு விருந்தும் செய்வோம். வெள்ளைக் கிறிஸ்தவர் வந்துவிட்டால் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாவாடை போட்டு பரிவட்டம் கட்டி பாதகாணிக்கையும் வைப்போம். அவர்களே மகமதியர்களாகிவிட்டால் மதிப்பனைத்தையும் வழங்குவோம். இவ்வாறிருக்க இந்து ஹரிஜனங்கள் ஏன் இந்துக்கோயில் நுழைவை விரும்பப் போகிறார்கள்? ஹரிஜனங்கள் இஸ்லாமாகி நவகாளி, திப்போரா கொடுமையை நம் நேருக்கே செய்ய வருவார்களானால் அப்போதுதான் ஜாதி இந்துக்களுக்கு அறிவு விளங்கும். பத்ராஜலம் ஸ்ரீ இராமர் கோயில், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய பெருமை வாய்ந்த கோயில்களில் மட்டுமாவது ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை அளிக்காமல் சனாதனிகளின் மனதை சந்தோஷப்படுத்த வேண்டுமென்று இக்கழகத்தார் விரும்புவதுதான் விந்தை. இந்த நான்கு கோயில்களையும் பாகிஸ்தான் கொள்கைபோல சனாதனிகளின் பாதுகாப்பிடமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்களா?”

ஆலயப் பிரவேச எதிர்ப்பாளர்களின் சென்னை மாகாண இந்து மாநாட்டுக்கு எதிரான ‘தொண்டன்’ கட்டுரை மகாத்மா காந்தியின் மேற்கோளோடு முடிகிறது: “இந்து மதம் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் சாதிகளை எல்லாம் ஒழித்துவிட வேண்டும் என்பதேயாகும்…” இன்றைக்கும் நம்மிடையே இருக்கும் சமூக மூலதனக் கோட்பாட்டாளர்கள் படிக்க வேண்டிய ஒரு முழக்கத்தை அன்றே ‘தொண்டன்’ வெளியிட்டிருக்கிறது.

கட்டுரைகள் மட்டுமல்ல களச்செயற்பாட்டிலும் ‘தொண்டன்’ இறங்கியுள்ளது. ஏப்ரல் 1947 ‘தொண்டன்’ இதழில் பின்வரும் செய்தி பதியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஜில்லா திருக்கழுங்குன்றத்துக்கு இரண்டு கல் தொலைவில் எச்சூரில் 32 ஆதி இந்து குடும்பத்தினர் வசிக்கின்றனர். (அன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்ட ஹரிஜன் என்பதற்கு மாற்றாக ஆதி இந்து என்கிற பெயரை ‘தொண்டன்’ பயன்படுத்துகிறது.) அங்கே போய் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கிறிஸ்தவராக மதம் மாறினால் ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து நிலமும் ஆளுக்கு இருநூறு ரூபாய் பணமும் வாங்கித் தருவோம் என்று கூறி ஆசைகாட்டுகிறார். அங்கிருந்த கங்கை அம்மன் கோயிலை இடித்து மாதா கோயில் கட்ட முதல் கட்டமாக மூங்கில் கிழிகளும் தென்னங்கீற்றுக் கட்டுகளும் கொடுக்கப்பட்டன. இதை அவர்கள் மனமொப்பிச் செய்வதாக கைச்சாத்தும் வாங்கப்பட்டுவிட்டது. இதை அப்பகுதியிலுள்ள கோதண்டராமன் என்கிற இளைஞர் அதை வித்துவான் மறை.திருநாவுக்கரசரிடம் சொல்லி முறையிட்டார். இதனை அடுத்து சில ஊர்ப் பெரியவர்களுடன் மறை. திருநாவுக்கரசர் அவ்விடம் சென்று ஆதி இந்துக் குடும்பங்களிடம் பேசினார். இதன் விளைவாக அம்மக்கள் தங்களுக்கு உண்மையான இன்னல்களான சில சாதி இந்துக்களால் ஏற்படும் இன்னல்களைக் கூறினர். இனி ஒருபோதும் கிறிஸ்தவச் சூழ்ச்சிக்கு இரையாவதில்லை என்றும் இந்துக்களாகவே தாம் வாழ்வோம் என்றும் சூளுரைத்தனர். அவர்களின் இன்னல்களைப் போக்க டாக்டர் வெங்கடாசலம், பாலகிருஷ்ண நாயுடு, முத்துமணி முதலியார், கோதண்டராமன் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

இப்படி நான்கு இதழ்கள் வந்துவிட்டன. இந்நிலையில் குற்றாலத்திலிருந்து ஒரு கடிதம்:

“வணக்கம். ‘தொண்டன்’ நான்கு இதழ்கள் வெளியாகிவிட்டது. நல்ல கட்டுரைகள் வந்திருக்கின்றன. சமயத்துக்கு தீவட்டி பிடிக்கிறார்கள் வேறுபலர். நல்ல தொண்டன் தான் பத்திரிகை.”

எழுதியவரின் பெயர் டி.கே. சிதம்பரநாத முதலியார்.

என்னதான் இந்துத்துவக் கருத்துகள் இருந்தாலும் அன்றைய தமிழகத்தின் மிகச்சிறந்த ஆன்றோர்களின் ஆதரவு இருந்தாலும் தொண்டன் எப்போதுமே பணக்கஷ்டத்துடன் தான் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. விய ஆண்டு ஆவணியில் ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை, கார்த்திகை மாதம்தான் இதழ் வெளிவந்தது என எழுதுகிறார் நாவலர். நல்ல தாள் கிடைக்கவில்லை என முறையிடுகிறார். ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய், வேறு வழியில்லை இதற்கு குறைக்க முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார். ஆனால் ‘தொண்டன்’ இதழில் பல முன்னோடித் திட்டங்கள் இந்து மறுமலர்ச்சிக்காக முன்வைக்கப்படுகின்றன. ‘இந்து போதகர்கள்’ பயிற்சிக்கான தொடர் ஒன்று வெளிவந்திருக்கிறது. இப்படியெல்லாம் நடத்தப்பட்ட இதழ் மெல்ல மெதுவாக நின்று நினைவிலிருந்தும் அழிந்துவிட்டது.

ஆனால் நான் அறிந்த வரையில் இத்தனை முழுமையாக வெளிவந்த முன்னோடி தமிழ் இந்துத்துவ இதழ் ‘தொண்டன்’ பத்திரிகைதான். முற்போக்குகளும் உள்ளூர் ஆராய்ச்சித் திலகங்களும் இந்தப் பத்திரிகையையும் நாவலரையும் மறந்துவிட்டது அதிசயமல்ல. ஆனால் இந்துத்துவர்கள் என தம்மைக் கருதுவோரும் தமிழ்நாட்டில் தங்கள் பாரம்பரிய வேர்களை மறந்துவிட்டிருப்பதுதான் அவசியம். தமிழ்நாட்டில் இந்துத்துவம் என்றென்றும் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. அதனை வெளிப்படுத்த தமிழ்நாட்டு இந்துத்துவர்கள் தங்கள் குறுகிய சம்பிரதாய சுவர்களைத் தாண்டி தங்கள் முழுமையான பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும். தமிழக இந்துத்துவ இந்து சமுதாய இந்து ஆன்மிக வரலாற்றில் மையப்படுத்தி பேசப்படாத, ஆனால் மாபெரும் அருளாளர்களின் வரிசை ஒன்று உண்டு. சுவாமி சித்பவானந்தர், சுவாமி சகஜானந்தர், திருமுருக கிருபானந்த வாரியார் என நீளும் வரிசை அது. அதில் இடம் பெறத் தகுதியானவர் நாகர்கோவில் கெ. ஆறுமுக நாவலர்.

Posted on Leave a comment

தொட்டிற்பழக்கம்… – சுதாகர் கஸ்தூரி

சுரேஷ் குமார் இப்படி உட்கார்ந்திருக்கும்
ஆளில்லை.

கஃபே காஃபீ டேயில் ஒரு லாத்தேயில் நுரையால்
இதயம் வரைந்து வைத்திருந்த அழகையல்ல அவர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது என்பது
மட்டும் புரிந்தது.

“தங்கச்சி ஊர்லேந்து வந்திருக்கா.”

அவருக்கு இரு தங்கைகள். ஒருத்தி சென்னையில்,
மற்றொருத்தி போஸ்டனில். மிகப் பாசக்காரக்குடும்பம் என்பது தெரியும். அவர்களுக்குத்
திருமணமாகி பதினைந்து வருடங்களானபின்பும், ஒவ்வொரு வருஷமும் இருவருக்கும் நகை, புடவை,
அல்லது ஒரு டூ வீலர் என்று பெரிதாகச் செய்துகொண்டேயிருப்பார். அவர் மனைவி சுனிதாவும்
இந்தப் பாசத்தில் சளைத்தவரில்லை.

அவரே தொடர்ந்தார், “அமிதா சென்னையிலேர்ந்து
வந்ததுலேர்ந்தே எதோ நெருடுது. காலேல ஆறுமணிக்கு ஸ்டேஷன்லேர்ந்து கூட்டிட்டுவந்தேன்.
காஃபி குடிக்கறீங்களான்னா சுனிதா. ‘பசங்க காம்ப்ளான் மட்டும்தான் குடிப்பாங்க… காம்ப்ளான்
இல்லையா?’

சுனிதா என்னை ஏறிட்டுப் பாக்கறா. நான்
சொல்றேன், ‘அமிதா, பசங்க பால் குடிக்கட்டும்.’
‘வேணாம்ணா. எம் பிள்ளைகள் காம்ப்ளான்
இல்லேன்னா ஒண்ணும் குடிக்காதுங்க. கீழ கடை எப்ப திறப்பான்? போய் வாங்கிட்டு வந்துடறேன்.’

பிள்ளைங்களுக்கு ஏதோ நல்ல சத்துள்ள உணவு
மட்டும்தான் கொடுக்கறா போலிருக்குன்னு விட்டுட்டேன். என் வீட்டுல எல்லாரும் ப்ளாக்
டீ – இஞ்சி தட்டிப்போட்டு… என் பையனுக்கும் அவ பொண்ணு வயசுதான். வெளியிடங்கள்ல போனா
என்ன இருக்கோ அதுல அட்ஜஸ்ட் பண்ணிடுவான். ஒண்ணும் இல்லன்னா, அவனுக்கு எதுவும் வேணும்னு
அவசியமில்ல.”

“இதெல்லாம் ஒரு ப்ரச்சனைன்னு எடுத்துகிட்டு…
அவங்க வீட்டுல ஒரு பழக்கம், உங்க வீட்டுல ஒண்ணு. சட்டுனு மாத்த முடியுமா?”

“ப்ரச்சனை அதில்ல சுதாகர்” என்றார் லாத்தேயை
உறிஞ்சியபடி. “சொல்றவிதம்னு ஒண்ணு இருக்கு. கீழே கடை எப்ப திறப்பான்ங்கறது வேற விதமான
பேச்சு.”

சட்டென எனக்கும் அப்போதுதான் உறைத்தது.
நான் தனி. எனக்கு வேண்டியது வேறு. நீ உன்பாட்டுக்கு இருந்துக்கோ. நான் என்பாட்டப் பார்த்துக்
கொள்கிறேன். வீடுகளில் தீவுகள்.
“சுனிதா அன்னிக்கு சாயங்காலமே டி-மார்ட்லேந்து
காம்ப்ளான் வாங்கிட்டு வந்துட்டா. அதுலயும் சாக்லேட் ஃப்ளேவர் வேணும், வனிலா பிடிக்காதுன்னு
அமிதா பொண்ணு ஒரே அடம். அமிதா தானே போய் காம்ப்ளான் கலந்துகிட்டு வந்தா. மூணு குழந்தைகள்
வீட்டுல. அவளோட பையன், பொண்ணு, எம் பையன். அவ தன் குழந்தைகளுக்கு மட்டும் காம்ப்ளான்
கலந்துகிட்டு வர்றா. எம் பையன் அப்படியே அவளையும் சுனிதாவையும் பாக்கறான்.

சுனிதாவுக்குள்ள ஒரு விரிசல் விழுந்ததைத்
தெளிவா உணர்ந்தேன்” என்றார் சுரேஷ் பெருமூச்சுவிட்டவாறே. “காலேல நிறைய பருப்புப் போட்டு
தால் கிச்சடி பண்ணிடறேன்னா சுனிதா. இவ அவசரமா சொல்றா ‘என் பொண்ணுக்கு கிச்சடி பிடிக்காது.
தோசை மாவு இருக்கா? நானே ரெண்டு தோசை அவளுக்கு தனியா பண்ணிடறேன்.’
இதுன்னு இல்ல, மும்பை தர்ஷன் கூட்டிட்டுப்
போனேன். பஸ்ல எல்லாரும்தான் ரொம்ப நேரமா ஒக்காந்திருக்கோம். தன் பிள்ளைகளுக்குன்னு
தனியா பிஸ்லரி பாட்டில் வாங்கறா. சுனிதா ரெண்டு பாக்கெட் பிஸ்கட் எடுத்துகிட்டு வந்திருந்தா,
இவ சொல்றா ‘ஓ, என் பையனுக்கு குட் டே பிடிக்காது. க்ரீம் பிஸ்கட் இல்லையா?’ பஸ் நிக்கிறப்போ,
கீழ போய் ஒரேயொரு க்ரீம் பிஸ்கட் பாக்கெட் – தன் பையனுக்கு மட்டும்.”
பல வீடுகளில் இதனைக் காண்கிறோம். தன்
பிள்ளை, தன் பெண் என்று வரும்போது மிகக் கேவலமாக, அநாகரிகமாக, பொதுவிலேயே அதிகச் செல்லம்
காட்டி வரும் சுயநலப் பேய்களாக பலர் மாறியிருக்கிறார்கள். தன்னை வளர்த்த பெற்றோர்,
அண்ணன் தம்பி, அக்கா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதேயில்லை.
குடும்பமென்பது விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து
மகிழ்தல் என்பதன் கோயில் என்பது ஏனோ இப்போது பலருக்குப் புரிவதில்லை. தான், தன் குடும்பம்
ஒரு அசுகமும் இல்லாது இருந்தால் போதும். மற்றவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

பகிர்தலில் கொஞ்சம்தான் கிட்டும் – பெருமாள்
கோயில் சர்க்கரைப்பொங்கல் போல. அந்தச் சிறு அளவுதான் மிக அருமையாக இருக்கும், ரசிக்க
முடியும். ஒரு அண்டா நிறைய சர்க்கரைப்பொங்கலைத் தனியே தின்று பாருங்கள். திகட்டும்.
கூடியிருந்து குளிர்தலைத்தான் ஆண்டாளே திருப்பாவையில் முன்னிறுத்துகிறாள்.
ஒவ்வொரு மனிதருக்கும், அவர் குடும்பத்திற்கும்
ஒரு பழக்கங்களின் தொகுப்புக் கணம் இருக்கும். அக்கணம் சூழலுக்கு ஏற்ப விரிந்து சுருங்கும்.
அந்த மாற்றம், காலத்தின் கட்டாயத்தில் சொந்த அளவில் விட்டுக்கொடுத்தலாகவோ (காலேல 8
மணிக்கு முன்னாடி எந்திருக்க மாட்டான்; இப்ப ஸ்கூல் 7 மணிக்கு. அதுனால…), அன்றி பிறருக்காக
விட்டுக்கொடுத்தலாகவோ (அக்காவுக்கு பஸ் கஷ்டம். ஸோ, என் ஆக்டிவாவை அவகிட்ட கொடுத்துட்டேன்)
பரிணமிக்கும். இது அவசியத்தின் பொருட்டு மட்டுமன்று, அவசியத்தினை உணர்தலின் வெளிப்பாடு.
நான், என் வசதிகள் என்று இருப்பவர்களுக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் சரிப்படுவதில்லை.
உளவியலாளர்கள், சிறுபருவத்திலேயே இதன்
பரிமாணம் தெரிந்துவிடுமென்கிறார்கள். லியோன் ஸெல்ட்ஜர் என்ற ஆய்வாளர் ‘சில மனிதர்கள்
சொந்த வாழ்வில் சவால்களைச் சந்திக்க இயலாது, குற்றங்கள் செய்யுமளவு போவதற்கு, சிறுவயதில்
ஏமாற்றங்களைத் தாங்காதவர்களாக வளர்வது காரணம்’ என்கிறார். பின்னும் சொல்கிறார், ‘வளர்ந்தபின்
தோல்வியையோ, ஏற்றுக்கொள்ளப்படாததையோ தாங்கிக்கொள்ள அவர்களால் முடிவதில்லை. மன அழுத்தம்,
விரக்தி, தனிமைப்படுதல் எனப் பொதுவாக அவதிப்படுபவர்கள், சில நேரம் வன்முறையில் ஈடுபடுவதும்
எதிர்பார்க்க வேண்டியவையே.’

இது பொதுவாழ்விலும் நீடிக்கிறது. அலுவலகத்தில்
‘அந்தாளுக்கு நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணணும்? என் பாஸ் அவனுக்கு ஏன் ரெகமண்ட் பண்ணறான்?
எல்லாம் பாலிடிக்ஸ்’ என்றும், தனிவாழ்வில் ‘இவ எப்படி என் காதலை மறுக்கலாம்? எனக்கு
ஏன் இந்த வேலை கிடைக்காது?’ என்றும் விகாரமாக வெடிக்கும். இவர்களில் முக்கியமாக இரு
பலவீனங்கள் காணப்படுகின்றன.

ஒன்று – குழுவில் பணிசெய்யும் திறமை வளர்வதில்லை.
இதனை மிக அதிக அளவில் இப்போதைய சூழலில் காண்கிறேன். திறமையான இளைஞர்கள் குழுவில் பணிசெய்ய
முடியாது, விலகிச் செல்கின்றனர். இவர்களது எதிர்காலம் கேள்விக்குரியது.
இரண்டு – தனிமனித வாழ்வில் ஏமாற்றங்களையும்,
சிறு இடர்களையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளப் பக்குவம் வருவதில்லை. இது சிக்கலானது.
நீளமான வரிசையில் நிற்கப் பொறுமையின்றிக்
கத்துவது (எனக்கு வேணும்னா, உடனே கிடைக்கணும்), விண்ணப்பத்தில் குறை இருக்கிறது என்று
சொன்னால், சண்டை போடுவது, சினிமா டிக்கட், பயணச் சீட்டு வாங்க முந்துவது முதல், பிடித்த
வீடு கிடைக்க சண்டை போடுவது வரை பொறுமை, இடர் தாங்கி நிற்கும் பண்பு, தோல்வி என்ற முடிவை
ஏற்றுக்கொண்டு, அமைதியாகச் சிந்திக்கும் முதிர்வு இல்லாத மனப்பாங்கு. நிராகரிப்பு என்பது
உடல் உணரக்கூடிய வலியைப் போன்ற வலியை மூளை உணரச்செய்கிறது என்கின்றன ஆய்வுகள். இவ்வலியை
அவர்களால் தாங்க முடிவதில்லை. அவர்களைக் குடும்பமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது தனிமைப்படுத்துகின்றன.
பல விவாகரத்துகளுக்குக் காரணம் தனிமனித மன ஆளுமைக் குறைபாடுகளே என்பது பல ஆலோசகர்களும்
சொல்லும் கருத்து.

“சிறுவயதில் குழந்தைகள் கேட்டதையெல்லாம்
கொடுப்பது, ‘இவ்வுலகம் நான் விரும்பியதைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தைக்
குழந்தைகளிடம் உருவாக்குகிறது. கிடைக்காவிட்டால், அது உலகின் தவறு, தராதவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்
என்ற எண்ணத்தை அக்குழந்தைகள் உருவாக்கிக் கொள்கின்றன. இது குற்றங்களைத் தூண்டுகிறது”
என்கிறார், லோனி கூம்ப்ஸ் என்ற குற்றவியல் வழக்கறிஞர். இதனைத் தனது பேட்டிகளிலும்,
தொலைக்காட்சித் தொடர்களில் தரும் ஆலோசனைகளிலும் வெளிப்படையாகச் சொல்லிவருகிறார்.
இதனை எதிரொலிக்கிறார்கள் மும்பையில் பல
மனநல ஆலோசகர்கள். “முன்பெல்லாம் மன உளைச்சல், தளர்வு என்று வருபவர்கள் மண வாழ்வில்
பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் இருந்தார்கள். இப்போது போதைப்பொருள், காதல் தோல்வி,
நண்பர்களைப்போல் பணக்காரத்தனமாக வாழ இயலாத விரக்தி, படிப்பில் ஆர்வமின்மை என்று வருபவர்கள்
பல இளைஞர்கள். இதில் எனக்கு வேண்டியது, எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியது – கிடைக்கவில்லை
என்ற எண்ணம் ஏமாற்றமாக மாறும் நிலையில் வருபவர்கள் அதிகம்” என்றார், மும்பையில் சாந்தாக்ரூஸ்
பகுதியில் ஒரு மன நல ஆலோசகர்.

முக்கியமாக இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்,
‘எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியது – கிடைக்கவில்லை’. அதாவது நான் ஒன்றை விரும்பிவிட்டால்,
அது கிடைத்துவிடவேண்டும். கொடுப்பதற்கு உலகம் கடமைப்பட்டிருக்கிறது. மறுத்தால், கோபம்,
வன்முறை… இதுதான் தான் காதலித்த பெண், காதலிக்க மறுத்தால் அவள் முகத்தில் ஆஸிட் வீசும்
ஆத்திரத்தைக் கொண்டுவரும் மனப்பாங்கு.
‘எனக்குக் கிடைக்காதது, என் பிள்ளைகளுக்குக்
கிடைக்கட்டும்’ என்ற எண்ணம் தவறல்ல. ஆனால் அது அந்தக் குழந்தைகளை மோசமாகப் பாதிக்குமென்பது,
இளம் பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. இருப்பதில் மிக நல்லதையே என் குழந்தைகளுக்குக்
கொடுக்கவேண்டுமென்பதில், இதுமட்டுமே நல்லதல்ல என்பதும் சிந்தனையில் உறைக்கவேண்டும்.
பகிர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல், கிடைத்ததில் சமாளித்துக்கொண்டு சுகித்திருத்தல்
என்ற நற்பண்புகள் தானே வந்திடா. அவற்றிற்குச் சிறுசிறு தியாகங்கள் அவசியம் என்பதை பெற்றோர்
முன்னுதாரணமாக இருந்து காட்டுதல் அவசியம். ‘ஓ, இங்க காஃபி மட்டும்தானா? என் பொண்ணு
காஃபியே குடிக்கமாட்டா. அது விஷம்’ என்ற சொற்கள், எண்பது வயது வரை காஃபி குடித்து வந்த
பெரியோரை ஏதோ சிகரெட் குடிப்பவர்கள்போல சித்தரிக்கும்.

இதனைக் குறைக்க முதல் அடி, பெற்றோர்களே
எடுக்கவேண்டும். குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்காது இருப்பது ஒரு புறம்;
கிடைக்குமென்றாலும், கால தாமதம் ஏற்படுமென்றால் அதனைச் சகித்துக்கொள்ளும் பக்குவத்தைக்
கற்றுத்தருதல் அவசியம். பிறர் இருக்கையில், தேவைக்கேற்ப தன் தேவைகளுக்குச் சமரசம் செய்துகொள்ளுதல்
அவசியம். தனது தேவைக்கென பெருங்குரலெடுத்து அழுது, கை காலை உதைத்து நாடகமிடும் குழந்தைகளை
எப்படிக் கையாளுவது என்பதைப் பெற்றோர்கள் அறிந்திருப்பது அவசியம். பலர் முன்னே அடம்பிடிக்கும்
குழந்தையால் அவமானப்படுவதாக நினைக்கும் பெற்றோர், குரலை அடைக்க, அவை கேட்டதை வாங்கிக்
கொடுத்துவிடுவது, அந்த நேரத்தில் வேண்டுமானால் அமைதியைத் தரலாம். பின்னாளில் அக்குழந்தைக்கே
கேடு என்பதை யோசித்து, பொறுமையுடன் அந்நிகழ்வைத் தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் பெற்றோருக்கு
வேண்டும்.

‘தன் வரலாற்றை மறப்பவர்கள், அதனை மீண்டும்
அனுபவிக்க விதிக்கப்படுவர்’ என்றார் ஜார்ஜ் சாண்ட்யானா என்ற தத்துவஞானி. நாம் வந்த
பாதையை மறந்து, மிகச் செயற்கையான பாதையை, பாதுகாப்பானது, சுகமானது என்ற பொய்யான கற்பிதத்தில்
அடுத்த தலைமுறையை வளர்ப்பது, தீவுகளையே வளர்க்கும் – குடும்பத்தையல்ல.
சுரேஷ், தனது அதீதமான பாசவெளிப்பாடு,
தங்கைகளிடம் நீடிக்கிறது என்ற கசப்பான உண்மையை சுனிதாவிடம் வெளிப்படையாகப் பேசியதில்
உணர்ந்தார். திருமணமான பின்பும், தங்கைகளிடம், பாசத்தில் பலதும் செய்தது, அவர்களைத்
தேவையில்லா பாசப்பொழிவைப் பிள்ளைகளிடம் சுயநலத்தோடு காட்டத் தூண்டியிருக்கிறது என்பது
அவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ‘இந்தப் பண்புத் தொகுதியை வளர்த்தது தானே’ என்ற
பொறுப்பினை உணர்ந்தபின், தன் தங்கையுடன் தனித்துப் பேசினார். குழந்தைகளுக்குப் பாசத்தில்
கெடுதலையே விளைவிக்கிறாள் என்பதைப் பொறுமையாக எடுத்துச் சொன்னதில் அவள் திகைத்துப்
போனாள். அமிதா மாறியிருக்கிறாளா என்பதை அக்குழந்தைகள் பலவருடங்கள் கழித்து எப்படி வாழ்க்கையைச்
சந்திக்கிறார்கள் என்பது காட்டும்.

References:

“Child Entitlement Abuse” – series
1 to 5 by Leon F Seltzer,Ph.D,
https://www.psychologytoday.com/blog/evolution-the-self/200909/child-entitlement-abuse-part-1-5 


Spoiled rotten: Why you shouldn’t coddle your kids,
http://www.sheknows.com/parenting/articles/980979/why-you-shouldnt-spoil-your-kids
How Rejection turns men violent?- Diana Tourjee, https://broadly.vice.com/en_us/article/bjg8dz/how-rejection-turns-men-violent 

Rejection is more powerful than you think – Guy
Winch,
https://www.salon.com/2013/07/23/rejection_is_more_powerful_than_you_think/

Posted on Leave a comment

உடையும் இந்தியா: ஒரு பார்வை – கோ.எ. பச்சையப்பன்

* சிந்தனையாளரும் கவிஞருமான திருவள்ளுவர் அலெக்ஸாண்டிரியாவிலிருந்து அப்பகுதிக்கே உரிய தனித்தன்மையுடன் வந்த கிறிஸ்தவ மதக்கோட்பாடுகளை உள்வாங்கி இருக்கிறார். ஏசுவின் மலைப்பிரசங்கக் கருத்துகளைத் தன் நூலில் புகுத்தி இருக்கிறார். வள்ளுவருக்கு, உத்வேகம் அளித்தவற்றில் கிறிஸ்தவ மதநூல்களும் உண்டு என நான் கூறுவேன்.

* தமிழர்கள் கிறிஸ்தவத்துக்கோ அல்லது இஸ்லாமுக்கோ மாறவேண்டும். இல்லையென்றால் தி.மு.க.வில் இணைவதன் மூலம் ‘திராவிட சமயத்துக்கோ’ மதம் மாறவேண்டும்.

முதல் பத்தி ஜி.யு. போப் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் எழுதியது. இரண்டாவது பத்தி ஜூலை 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பிஷப் எஸ்ரா சற்குணம் ‘தமிழ் மெய்யியல்’ என்ற அமர்வில் பேசியது. நூற்றாண்டுகள் கடந்தும் சிந்தனையில் ஒத்திசைவாக இரண்டு ஆளுமைகளும் இயங்கியதன் உள்நோக்கத்தை அறிய ‘கயாஸ் தியரி’யை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவில் பிரிவினையைத் தூண்டிவிடுவது ஏன்?

சீனா இந்திய மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பது ஏன்?

மதமாற்ற அமைப்புகள் வட அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவுடன் பிரிவினை சக்திகளைத் தூண்டுவது ஏன்?

இந்த மூன்று கேள்விகளுக்குமான பதிலை ஐந்து வருட ஆராய்ச்சிகளின் முடிவில் பெறப்பட்ட அசைக்கமுடியாத தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட முக்கியமான புத்தகம் ‘உடையும் இந்தியா? – ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்.’ ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய நூலை அரவிந்தன் நீலகண்டன் தமிழாக்கியுள்ளார். கிழக்கு வெளியீடு.

மொகலாயர்கள், டச்சுக்காரர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக விதேசிகளால் ஆளப்பட்ட இந்தியா விடுதலைக்குப் பின்னர் தன்னுடைய வரலாற்றை துரதிர்ஷ்டவசமாக மேற்படி காலனிய ஆதிக்கவாதிகளால் எழுதப்பட்ட நூல்களின் மொழிபெயர்ப்பிலிருந்து பெருமளவு உருவாக்கிக்கொண்டது. இதன் விளைவாக, பாரதத்தில்

– மொகலாயர்களால் கலை, இசை வளர்ந்தன.

– ஐரோப்பியர்களால் அறிவியல் வளர்ந்தது.

– இந்துமத சாதி ஆதிக்கத்திலிருந்து தலித்துகள் விடுதலை பெற்றனர்.

சுருக்கமாகச் சொன்னால் ‘காட்டுமிராண்டிகளான இந்தியர்கள்’ நாகரிகம் அடைந்தனர் என்ற வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது.

வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், தத்துவங்கள், கலைகள் இவற்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக செழுமைப்படுத்தப்பட்ட இந்துமதமும் இந்தியாவும் ‘காலாசாரப் பண்பாட்டு வறுமை’யில் காலங்காலமாக இருந்ததாக வரலாறு திரிக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் வரை பரவியுள்ளது. அதனை மறுத்து உண்மையான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கிறது மல்ஹோத்ராவின் ‘உடையும் இந்தியா?’

500 பக்கங்களில் 19 அத்தியாயங்கள். அரிதான கடும் உழைப்பினால் பெற்ற தரவுகள், மேற்கோள்கள் அடங்கிய 260 பக்க பிற்சேர்க்கை எனப் புத்தகம் அரியதொரு ஆவணமாக மிளிர்கின்றது.

வீரமாமுனிவர் எழுதிய ‘பரமார்த்த குரு’ கதைகளை உவப்புடன் நமது தமிழ்மக்கள் போதிக்கின்றனர். கான்ஸ்டான்டைன் ஜோஸப் பெஸ்கி என்ற மதமாற்றம் செய்யவந்த பாதிரி, தைரியநாதராகி, பின் வீரமாமுனியாகி, இந்துமதத் துறவிகளை முட்டாள்களாகச் சித்தரிக்கும் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதே ‘பரமார்த்த குரு கதைகள்’ என்பதை அறிய இந்நூலை வாசிக்க வேண்டும்.

பிராமணர்களை தமிழர்கள் அல்லாதோர் என்றும், ஆரிய வந்தேறிகள் என்றும் நிறுவப்படும் கருத்து வரலாற்று உண்மையல்ல. 1840களில் ஸ்காட்டிஷ் மிஷனர் சொஸைட்டியினரால் அனுப்பப்பட்ட ரெவண்ட் ஜான் ஸ்டீவன்ஸனால் விதைக்கப்பட்ட புனைவு என்பதையும், ஏழாம் நூற்றாண்டில் பிராந்தியம், மொழி ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான ‘திராவிடன்’ என்ற சொல்லை முதன்முதலாக இனக்கோட்பாட்டுப் பொருளில் பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1856ல் பயன்படுத்தியதையும், ‘உடையும் இந்தியா’ ஆதாரங்களுடன் முன்வைக்கிறது.

மதமாற்றம் செய்ய வந்த ஜி.யு. போப்பும் ராபர்ட் கால்டுவெல்லும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களாக்கப்பட்டு சென்னை மெரீனா கடற்கரையில் சிலைகளாக நிற்கக் காரணம் நம் வரலாற்றினை நாம் அறியாத காரணம் என்பதைப் புத்தகம் கூறுகின்றது.

புத்தகத்தின் முக்கியமான அத்தியாயமாக நான் கருதுவது, பதினோராவது அத்தியாயமான ‘இந்தியப் பிளவுகள் குறித்த மேற்கத்திய புனைவாக்கம்’. இந்தியாவைப் பிளவுபடுத்தவும் இந்திய ஐக்கியத்திலிருந்து தமிழ்நாட்டை விண்டுபோகச் செய்யவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் நிதியாதாரம் வழங்கும் அமைப்புகள், ஆய்வு நிறுவனங்கள், கிறிஸ்தவச் சபைகள், ஊடகங்கள் ஆகியனவற்றைப் பற்றி இந்த அத்தியாயம் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் முன்வைக்கிறது. மேலும் இக்கூறுகள் இந்தியாவைத் துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளதை விளக்குகிறது.

‘ஆரிய சூழ்ச்சிக்குத் திராவிடர்கள் பலியானார்கள்’ என்று கால்டுவெல் விதைத்த நச்சுவிதையை, இனக்கோட்பாட்டினை, ஓர் அரசியல் இயக்கமாக ஈ.வெ. ராமசாமி விருட்சமாக வளர்த்தெடுத்தார். பிராமணர்களுக்கு எதிராக அதிதீவிரமான வன்முறையைச் செயல்படுத்துமாறு பேசியும் எழுதியும் அழைப்பு விடுத்தார். ஏறக்குறைய ஹிட்லர், முஸோலினி போன்றவர்களின் பிரதிபலிப்பான ‘இனச்சுத்திகரிப்பிற்கு’ அருகில் அமைந்த கோட்பாட்டினை அவர் விதைத்ததை நூல் பேசுகிறது.

இந்தியாவின் விடுதலை நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கவேண்டும் என்று ஈ.வெ.ரா கூறியது தனது ‘எஜமான விசுவாசத்தால்’ அன்றி வேறில்லை என்பதைப் புத்தகம் நிறுவுகின்றது.

தமிழக அளவில் பிரிவினைவாதத்திற்கு திராவிட அரசுகள் வித்திட்டன என்றால், இந்திய அளவில் இந்தக் குரலை சில அறிவுஜீவிகளாகத் தம்மை நிறுவிக்கொள்வோர் முன்மொழிவதை இப்புத்தகம் கூறுகின்றது. ‘தேபக்தி’ என்பதையே ஆரியச்சாதிச் சதியாகவும் இந்தியா என்ற அமைப்பையே மேல்சாதி அடக்குமுறையின் அமைப்பாகவே கூறும் ரொமிலா தாப்பர், மீரா நந்தா, விஜய் பிரசாத் மற்றும் அங்களா பி.சட்டர்ஜி போன்றோர், இந்திய அளவில் விளிம்புநிலை மக்களின் பெயரால் இயக்கங்கள் நடத்துவோருக்குத் தம் எழுத்தால் பேச்சால் சித்தாந்த மதிப்பு அளிப்பதை நூலாசிரியர்கள் விளக்குகிறார்கள். அவ்விதமே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு போன்றவை ‘தமிழ்த்தேசியம்’ பேசுவதையும், அதன் தலைவர் திருமாவளவனுக்கு 2009ல் குருகுல் லுத்தரன் கிறித்துவ அமைப்பு ‘இறையியல் முனைவர்’ (Doctor of Divinity) பட்டம் அளித்ததையும் ஆராய்கின்றனர்.

இந்தியா சமயச்சார்பற்ற நாடு, அனைத்து சமய மக்களும் வாழும் பன்மைத்துவம் கொண்ட தேசம் என்பதையே அரசியல் சட்டம் கூறுகின்றது. இந்நூல் கிறித்துவம், இஸ்லாம் இவற்றிற்கு எதிராக வெறுப்பை உமிழ்வதைப்போல் இக்கட்டுரையை வாசிப்பவர்கள் உணரக்கூடும். அதற்கான பதிலும் இந்நூலில் உள்ளது.

1982ல் மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட மதக்கலவரத்திற்குக் காரணமாக கிறிஸ்தவ மதமாற்றமே அடிப்படை என அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அமைத்த விசாரணைக்குழுவின் தலைவர் வேணுகோபால் கூறியதை மல்ஹோத்ரா விளக்குகிறார். கன்னியாகுமரி என்ற மாவட்டத்தின் பெயரை கன்னிமேரி என மாற்ற முயன்றதைச் சுட்டிக்காட்டிய நீதியரசன் வேணுகோபால், திராவிடக் கோட்பாட்டுச் சாய்வுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘திருக்குறள் கிறிஸ்தவக் கோட்பாட்டையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. சிலப்பதிகாரம் என்ற சமணகாவியமோ, தனது 33 வயதில் சுவர்க்க உடலை அடைந்த தேவகுமாரனைப் பற்றியே பேசுகிறது. கம்பனின் ராமாவதாரம் கிறிஸ்தவப் பார்வை கொண்டது’ என்று கிருஷ்ணப்பிள்ளை நிறுவுகிறார். ‘பக்தி இயக்கம் முழுக்க கிறிஸ்தவ மதிப்பீடுகளே நிறைந்து உள்ளன. பல சித்தர் பாடல்களில் ஏசு குறித்த மறைமுகக் குறிப்புகள் உள்ளன.’ இப்படிக் கூறுவது ‘புத்தம் வீடு’ என்ற நாவலைப் படைத்த ஹெப்சிபா ஜேசுதாஸன் என்ற எழுத்தாளர் என்பதை மல்ஹோத்ரா காட்டும்போது, ஒட்டுமொத்தமாக பாரதத்தின், குறிப்பாக தமிழகத்தின் மதம், காலாசாரம், மொழி, பண்பாடு போன்றவற்றினை கிறித்தவம் செரிக்க முயல்வதை அறிந்து அதிர்ந்துபோகிறோம்.

இன்றைய ஊடகங்களும் மேற்படி மதமாற்றங்களுக்கு ஒத்திசைவாக இயங்குவதைக் கண்கூடாகக் காணலாம். ‘தீபாவளி – அவசியமா? ஆடம்பரமா?’ என விவாதம் நடத்தும் தொலைக்காட்சி அக்கேள்வியை ரம்ஜான், கிறிஸ்துமஸிற்கும் நீட்டிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

பட்டாசு வெடித்து, மருதாணி வைத்து தீபாவளி கொண்டாடிய குழந்தைகள் கல்வி நிறுவனமொன்றில் தண்டிக்கப்பட்டதை செய்திகளில் வாசித்தோமல்லவா?

சனாதனமான இந்துமதத்தின் சகிப்புத்தன்மையைப் பிற மதங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பதையும் தமது மதங்களைப் பரப்ப இந்திய இறையாண்மையையே அவை பலி கேட்கின்றன என்பதையும் ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் அருமையாக விளக்குகிறார்கள். அரவிந்தன் நீலகண்டனின் தனித்துவமான மொழிபெயர்ப்பு தெள்ளிய நீரோடை போன்ற வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. இந்துமத வெறுப்பா, இந்தியா மீதான வெறுப்பா என்ற கேள்விக்கு இந்நூலில் சான்றாகக் காட்டும் நூல் ஒன்றை உதாரணமாகக் கூறலாம். சுதந்திரப் பொன்விழாவையொட்டி சேவியரின் பெயரால் நடத்தப்படும் ஏசு சபைக் கல்வி நிறுவனம் வெளியிட்ட நூல் ஒன்றில், தேசியப்பாடலான வந்தே மாதரம் பாடலை சிறுவர்கள் கீழ்க்கண்டவாறு பாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

‘வந்தே மாதரம்
வந்துருச்சே மூத்திரம்
கொண்டுவா பாத்திரம்
குடிடா சீக்கிரம்.’

‘உடையும் இந்தியா?’ ஏன் முக்கியமான நூல் என்பதை விளக்க மேற்படி ஆதாரம் ஒன்றே போதும்.