Posted on Leave a comment

‘நதியற்ற’ சிந்துவெளி நாகரிகம்: புதிய ஆய்வுகள் – ஜடாயு

உலகின் ஆகத் தொன்மையான மெசபடோமியா, எகிப்து பிரதேசங்களின் நகர நாகரிகங்களுக்கு சமகாலத்தியதாக நமது சிந்துவெளிப் பண்பாடு கருதப்படுகிறது. ‘நதிக்கரை நாகரிகம்’ என்றே இதுநாள் வரை வரலாற்றாசிரியர்களால் இது சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், சமீபத்திய அகழாய்வுகளும் அறிவியல் ஆராய்ச்சிகளும் இதுகுறித்த புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

சிந்துவெளிப் பண்பாட்டைச் சார்ந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய ஒரு சில நகரங்கள், சிந்துநதியின் கிளை ஆறுகள் பாயும் தடத்தில் உள்ளன. ஆனால் வெண்கல காலகட்டத்தைச் சேர்ந்த மிகப் பல நகரங்கள் அந்தத் தடத்திலிருந்து தொலைவில், தார் பாலைவனத்திற்கு வடக்கில் கங்கை மற்றும் சிந்து நதிப் படுகைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ளன. 1800களின் இறுதிப் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் இந்த நகரங்கள் வெளிப்பட்டபோது, ஒரு பழைய நதிப்படுகைக்கான தடயங்கள் அங்கிருக்கலாம் என்ற ஊகம் தெரிவிக்கப்பட்டது. நதியின் பிரவாகத்தின்போது இந்த நகரங்களின் நாகரிகம் வளர்ந்தது, பின்னர் நதி வறண்டவுடன் தேய்ந்து மறைந்துவிட்டது என்று ஒரு கோட்பாடாக இது விளக்கப்பட்டு, இன்றுவரை அத்தகைய புரிதலே நிலவி வந்தது. இது முற்றிலும் தவறு என்று சமீபத்திய ஆய்வுகள் கருதுகின்றன.

சுமார் 5300 ஆண்டுகள் முன்பு, இந்த நகரங்களின் கட்டுமானமும் அவற்றில் சமூக வாழ்க்கையும் நிகழ்ந்த காலகட்டத்தில், இமயமலையில் உருவாகி மேற்குநோக்கிச் செல்லும் எந்த நதியும் இந்தப் பகுதிகளில் ஓடவில்லை. இன்று காக்கர் ஹாக்ரா நதிப்படுகை (Ghaggar-Hakra River) என அறியப்படும் இந்தப் பிரதேசத்தின் நீர்த்தடத்தின் வழியாகத்தான் ஆதியில் சிந்துவின் முக்கிய கிளையான சட்லெஜ் நதி பாய்ந்தது. ஆனால், 8000 ஆண்டுகளுக்கு முன்னால் (உச்சவரம்பாக 15,000 ஆண்டுகள்) அதன் வழித்தடம் மாறி இன்னும் மேல்நோக்கியதாக (Upstream) திரும்பியது. அந்தப் பூகோள நிகழ்வுக்கு 3000 ஆண்டுகளுக்குப் பின்புதான் மக்கள் குடியேற்றங்களும், சமூக வாழ்க்கையும் அப்படுகையில் ஏற்பட்டன. முன்பு நதிபாய்ந்து உருவாக்கிச் சென்ற பள்ளமான படுகைகள் வருடாந்திர பருவ மழையின்போது பொழியும் நீரைப் பெருமளவு சேகரித்து வைப்பதற்கான இயற்கையான தேக்கம்போல அமைந்துவிட்டன. அந்த நீர்வளத்தின் உதவியுடன்தான் அங்கு விவசாயமும் அதன் உபரியால் உருவாகி வந்த நகர நாகரிகமும் செழித்தன. இதுவே ஐஐடி கான்புர் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் இணைந்து நிகழ்த்திய சமீபத்திய ஆய்வுகளின் முடிவாகும். இந்தக் கால இடைவெளியை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கும் அறிவியல்பூர்வமான சான்றுகளை, அதிநவீன தொழில்நுட்பத்தின் துணைகொண்டு, லண்டன் கல்லூரியின் படிவு இயல் நிபுணர் (Sedimentologist) சஞ்சய் குப்தா தலைமையில் செயல்பட்ட ஆய்வாளர் குழு கண்டறிந்துள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இக்குழு இதுகுறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தது.

ஒருகாலத்தில் உயிர்த்துடிப்புடன் நதி பாய்ந்து, பின்பு முற்றிலுமாக வறண்டு போய்விட்ட நீர்த்தடத்தின் பூகோள அமைப்பு பேலியோ சேனல் (Paleochannel) என்று அழைக்கப்படுகிறது. அங்கு பூமிக்கடியில் புதைந்துள்ள வண்டல், கசண்டு மற்றும் படிவுகளின் மூலமாகப் பழைய வழித்தடத்தை நிலவியலாளர்களால் (Geologists) அடையாளம் காணமுடியும். இதற்கு இந்தப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த நிலவியல் தன்மை விரிவாக ஆராயப்படவேண்டும்.

ஆய்வுக்குழு தொடக்கத்திலிருந்தே ஒரு தெளிவான திட்டத்துடன் படிப்படியாக செயல்பட்டது.

முதலில், விண்வெளியிலிருந்து செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் படங்களையும், ரேடார் படங்களையும் இணைத்து நிலப்பரப்பு வரைபடங்களை (Topographical maps) உருவாக்கினார்கள். அதன் துணைகொண்டு, காளிபங்கன் என்ற புகழ்பெற்ற சிந்துவெளி அகழாய்வுப் பகுதியில் உள்ள பேலியோ சேனல் பிரதேசத்தில், கான்பூர் ஐஐடியின் ராஜிவ் சின்ஹா மற்றும் அஜித் சிங் தலைமையிலான குழு களமிறங்கியது. அங்குள்ள மணல் படுகையில் சுமார் 131 அடிக்கு ஆழ்துளைகளை உருவாக்கி அடுக்கடுக்காக உள்ள வண்டல் மற்றும் படிவுகளைச் சேகரித்தார்கள். இது போர்வெல் தோண்டுவது போன்று கடகடவென்று ஒரேயடியாகத் துளை போடும் வேலை அல்ல. ஒவ்வொரு மூன்று அடி தோண்டிய பின்பும் மணல் வந்து மூடிவிடாமல், பரிசோதனைக்குத் தகுதியான சிதறாத படிவப் பாளங்களை (Cores of sediment that won’t crumble) பொறுமையாகச் சேகரிக்க வேண்டும். ஐந்து இடங்களில் துளையிட்டு ஐந்து வாரங்கள் இந்த சேகரிப்புப் பணி நிகழ்ந்தது.

இவ்வாறு சேகரித்த வண்டல் படிவப்பாளங்கள் பல்வேறு விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இமயத்தின் பனிமலைகளிலிருந்து உற்பத்தியாகும் நதிகளுக்கே உரியதான கரும்பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான மலைப்பாறைகளின் வண்டல்களின் தடயங்கள் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டன. அந்த வண்டல்கள் குறிப்பிட்ட எந்த நதியினுடையவை என்பதைக் கண்டுபிடிக்க, அவற்றில் படிந்துள்ள மைகா மற்றும் ஜிர்கான் (Zircon) ஆகிய உலோகங்களின் ஆயிரக்கணக்கான துகள்களின் வயதைக் கணக்கிட்டார்கள். அவை இப்போது வடக்கில் பஞ்சாப் பகுதியில் பாயும் சட்லெஜ் நதியின் வண்டல்களுடன் முழுமையாகப் பொருந்தி வந்தன.

நதிகளின் தடமாற்றம் நிலவியலில் Avulsion என்று அழைக்கப்படுகிறது. இங்கு பாய்ந்த சட்லெஜ் நதி வரலாற்றில் எந்தக் காலகட்டத்தில் இப்படித் தடம்மாறிச் சென்றது என்பது அடுத்த புதிர். அதை விடுவிப்பதற்காக, Optically Stimulated Luminescence (ஒளிக்கற்றைகளால் தூண்டப்பட்ட ஒளிர்வு) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். குவார்ட்ஸ் போன்ற படிகங்களின் துகள்கள் பூமிக்குள் புதையும்போது அவற்றைச் சுற்றியுள்ள மண்துகள்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம், இந்தப் படிகங்களில் உள்ள எலக்ட்ரான்களின் மீது தாக்கம் செலுத்துகிறது. இவ்வாறு தூண்டப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும். இது அந்தப் படிகத் துகள் சூரிய வெளிச்சத்திலிருந்து பூமிக்குள் வந்து எவ்வளவு காலமாயிற்று என்பதை அளவிட உதவும் ஒரு இயற்கையான ‘ஸ்டாப் வாட்ச்’ கடிகாரம்போல செயல்படுகிறது. இந்த அளவீட்டின் மூலம், சுமார் 4800லிருந்து 3900 ஆண்டுகள் முன்பு, அதாவது சிந்துவெளி நகர நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்தபோது, இப்பகுதிகளில் சிறுமணல் துகள்களும் சேற்று வண்டலும் மட்டுமே இருந்தன என்ற முடிவுக்கு வந்தனர். இத்தகைய ‘துகள் சூழல்’ நதி நீரோட்டத்தில் ஒருபோதும் இருப்பதில்லை.

சட்லெஜ் நதியின் இந்தத் தடமாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பூகம்பம் போன்ற இயற்கை நிகழ்வுகளோ அல்லது வானிலை மாற்றங்களின் விளைவுகளோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால், இந்தத் தடமாற்றம் உருவாக்கி விட்டுச்சென்ற பகுதியானது வெள்ளங்களால் பாதிக்கப்படும் சாத்தியம் கொண்ட நதிப்படுகையை விடவும் விவசாயத்திற்கும், வாழ்க்கைக்கும் சௌகரியமானதாக இருந்திருக்கிறது. அதுவே நாகரிகம் இங்கு செழித்ததற்குக் காரணம் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர். நதிகளைச் சாராமல் நிலத்தடி நீரை ஆதாரமாகக்கொண்டு தான் இன்றளவும் இப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சமீபகாலங்களில்தான் பல்வேறு புறச்சூழல் காரணிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவின் தொல்வரலாற்றைக் குறித்து இதுவரை நமது வரலாற்றாசிரியர்கள் சொல்லிவந்த பல விஷயங்களை ஒரேயடியாகப் புரட்டிப் போடுவதாக உள்ளன. ஏற்கெனவே காக்கர் ஹாக்ரா நதி வேதங்களிலும் இதிகாச புராணங்களிலும் கூறப்படும் சரஸ்வதி நதியே என்பது பல ஆய்வாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒரு கருத்தாக உள்ளது. மைக்கேல் டேனினோ சரஸ்வதி நதி குறித்த தனது நூலில் பல சான்றுகளுடன் இதை விளக்குகிறார். அறிவியல் ஆய்வுகள் எவ்வாறு நமது பழைய நூல்களின் விவரணங்களுடனும் பொருந்துகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

‘அன்னையரில் சிறந்தவளே, நதிகளில் சிறந்தவளே, தேவியரில் சிறந்தவளே, சரஸ்வதி!’ என்கிறது ரிக்வேதம். சரஸ்வதி சமகாலத்தில் உயிரோட்டமுள்ள ஒரு நதியாகவே ரிக்வேதத்தில் பல இடங்களில் புகழப்படுகிறது. ஆனால், மகாபாரதத்தில், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பாய்ந்து பிறகு ‘வினாசனம்’ என்ற இடத்தில் பூமிக்குள் மறைந்துவிடும் நதியாக சித்தரிக்கப்படுகிறது. பிற்காலப் புராணங்களில் ஒரு தொல்நினைவாக, அந்தர்வாஹினி என்ற பெயரில் பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நதி என்று கூறப்படுகிறது. நதியின் மறைவே, சிந்து சரஸ்வதி நதி பிரதேசங்களிலிருந்து கங்கை யமுனை பாயும் பிரதேசங்களுக்கான இடப்பெயர்வுக்கான காரணமாக ஒரு சாராரால் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய ஆய்வுகள் சரஸ்வதி படுகையின் நாகரிகமே ‘நதியற்ற’ காலகட்டத்தைச் சார்ந்தது என்ற திசையில் செல்கின்றன. இதன் மூலம், ரிக்வேதத்தில் செழுமையாக வர்ணிக்கப்பட்ட சரஸ்வதி நதி, இமயப் பனிமலையிலிருந்து பெருகிக் கடலை நோக்கிப் பாயும் பேராறு அல்ல, பெரிதும் மழைநீரைச் சார்ந்து பிரவகித்த நதி (Rain fed River) என்ற கருத்தை சில ஆய்வாளர்கள் வந்தடையக்கூடும். ரிக்வேதத்தை வரலாற்று பூர்வமாக ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ள ஸ்ரீகாந்த் தலாகேரி (Shrikant Talageri) ரிக்வேதத்தின் சூக்தங்களை மிகப்பழையவை, இடைக்காலத்தவை, இறுதிக்காலத்தவை என்று வகைப்படுத்தி, இவற்றுக்கிடையே பல நூற்றாண்டுக்கால இடைவெளி உண்டு என்றும் கருதுகிறார். ரிக்வேதத்தின் ஆறாவது, ஏழாவது மண்டலங்களில் உள்ள மிகப்பழைய சூக்தங்களில் சரஸ்வதி மையமான பெருநதியாக போற்றப்படுவதையும், இறுதியாக உள்ள பத்தாவது மண்டலத்தின் நதி சூக்தத்தில் மற்ற நதிகளின் பெயர்களுடன் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தச் சித்தரிப்பை சமீபத்திய நிலவியல் ஆய்வு முடிவுகளுடன் இணைத்து மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

எப்படியானாலும், இந்தப் புதிய வரலாற்றுப் புரிதல், ஆரியப் படையெடுப்பு என்ற பொய்யான கோட்பாட்டின் மீது அடிக்கப்பட்ட இன்னொரு சாவுமணி என்பதில் ஐயமில்லை.

சான்றுகள்:

1) News in The Hindu – http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/indus-civilisation-developed-around-extinct-river-study/article21111749.ece

2) Live Science report – https://www.livescience.com/61039-ancient-indus-civilization-survived-without-rivers.html

3) சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு – மிஷல் தனினோ, தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

Posted on Leave a comment

குஜராத் தேர்தல் முடிவுகள்: ஓர் ஆய்வு – லக்ஷ்மணப் பெருமாள்

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 18-12-2017 அன்று வெளிவந்தன. இரு மாநிலங்களிலும் பாஜக தனிப் பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இமாச்சலில் காங்கிரஸ் தனது ஆட்சியைப் பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது. குஜராத்தில் 22 ஆண்டுகளாக (1995ம் ஆண்டு முதல்) தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகளைப் பற்றியோ, காங்கிரஸ் ஏன் ஆட்சியை இழந்தது என்பதற்கான காரணங்கள் பற்றியோ கூட ஊடகங்களில் பெருமளவிற்கு விவாதிக்கப்படவில்லை. குஜராத் பிரதமரின் மண் என்பதும், பாஜக ஆட்சியைத் தொடர்வதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் மத்திய அரசின் பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவுகள், மோடி முதல்வராக இல்லாமல் மேற்கொண்ட முதல் தேர்தல் போன்ற பல காரணிகள் குஜராத் பற்றிய பல்வேறு ஆய்வுகளை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என அனைத்து இடங்களிலும் பலவாறாக ஆராயப்பட்டன.

குஜராத்:

குஜராத்தின் மொத்த இடங்கள் 182. பெரும்பான்மையை நிரூபிக்க 92 இடங்கள் தேவை. இதில் பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் எஞ்சிய 6 இடங்களையும் பிடித்தன. பாஜக 49.1% வாக்குகளையும், காங்கிரஸ் 41.4% வாக்குகளையும் பெற்றுள்ளன. 2012 சட்டசபைத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடுகையில், பாஜக 16 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் 16 இடங்களை அதிகமாகக் கைப்பற்றியுள்ளது. இரு கட்சிகளும் தத்தமது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துள்ளன. காங்கிரஸின் வாக்கு சதவிகித முன்னேற்றமும், இரு கட்சிகளுக்குமான வாக்கு சதவிகிதம் குறைந்ததுவுமே காங்கிரஸ் பாஜகவைக் காட்டிலும் 16 இடங்களை அதிகமாகப் பிடிக்க முக்கியமான காரணிகளாக இருந்துள்ளன.

1995 முதல் 2017 வரை நடந்துள்ள சட்டசபைத் தேர்தல்களில் இரு கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதமும், இரு கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் குறைவதற்கேற்ப இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் காணலாம். பாஜக 49.12% வாக்குகளை 2007ல் பெற்றபோது அக்கட்சி 117 இடங்கள் வரை பிடித்திருந்தது. அத்தேர்தலில் காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் வாக்கு வித்தியாசம் 9%. 2017ல் பாஜக Vs காங்கிரஸ் வாக்கு வித்தியாசம் 7% ஆக குறைந்துள்ளது. 2012 தேர்தலில் கணக்கிட்டால் வாக்கு வித்தியாசம் 7.7%. அவ்வாறானால் ஏன் இத்தனை இடங்களை பாஜக இழந்துள்ளது என்ற கேள்வி எழலாம்.

1. பாஜக–காங்கிரஸிற்கிடையிலான வாக்கு வித்தியாசம் குறையும்போது காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்துள்ளது. அதாவது பாஜகவின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2. சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் அதிக அளவில் வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 2007, 2012 தேர்தல்களில் சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் முறையே 11.84%, 12.27% வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த முறை 8.6% வாக்குகளை மட்டுமே சிறு கட்சிகளும் சுயேட்சைகளும் பிரித்துள்ளார்கள். எனவேதான் இந்த முறை வாக்கு வித்தியாசம் குறைவதற்கு ஏற்றாற்போல காங்கிரஸ்–பாஜகவின் இடங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இரு கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் குறைய குறைய இடங்களின் எண்ணிக்கையில் பாதிப்பு அதிகமாகிறது. 2012–2017 வாக்கு வித்தியாசத்தை (BJP Vs Congress) ஒப்பிட்டால் 0.7%தான் காங்கிரஸிற்குக் குறைந்துள்ளது. ஆனால் இடங்களின் எண்ணிக்கையில் 16 இடங்களை, கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிகமாகப் பெற்றுள்ளது.

3. கிராமப் புறப் பகுதிகளில் பாஜக அதிக இடங்களை கடந்த முறையைக் காட்டிலும் அதிக அளவில் இழந்துள்ளது.

குஜராத் தேர்தலை எப்படிப் புரிந்துகொள்வது?

குஜராத்தின் தேர்தல் முடிவுகளை சௌராஷ்டிரா-கட்ச், தென் குஜராத், வட குஜராத், மத்திய குஜராத் என நான்கு பகுதிகளாகப் பிரித்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2012 சட்டசபை முடிவுகளுடன் ஒப்பிடுகையில் பாஜக வட குஜராத்தில் 1 இடத்தையும், சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் 12 இடங்களையும், தென் குஜராத்தில் 3 இடங்களையும் இழந்துள்ளது. மத்திய குஜராத்தில் (37/61) அதே இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக 2012 தேர்தலில் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சி பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளைப் பெற்றிருந்தது. கீழுள்ள படத்தில் மற்றவர்களின் வாக்கு சதவிகிதம் 17.9% (2012) to 8.7% (2017) ஆகக் குறைந்துள்ளதைக் காணலாம். இப்பகுதியில்தான் குஜராத் பரிவர்தன் கட்சி இரு இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 2007 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2012 தேர்தலில் பாஜக சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் சில இடங்களை இழந்திருந்தது. 2012 தேர்தலில் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதியைக் காங்கிரஸிற்குச் செல்ல விடாமல் கேசுபாய் பட்டேல் தடுத்தார். 2012 தேர்தலில் கேசுபாய் பட்டேல் தமது சாதி உதவியுடன் 3.63% வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை அவ்வாக்குகளை ஹர்திக் பட்டேலின் உதவியுடன் காங்கிரஸ் குவித்துள்ளது. எனவேதான் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் காங்கிரஸிடம் குவிந்ததும், மேலும் இப்பகுதி அதிக அளவில் கிராமப் புறத் தொகுதிகள் நிறைந்தது என்பதும், விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள ஏமாற்றமும் காங்கிரஸ் அதிக அளவில் இடங்களைப் பெற உதவியுள்ளன. மற்ற பகுதிகள் பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மாநிலத்தின் நான்கு பகுதிகளிலும் பாஜகவின் வாக்கு வங்கியே அதிகமென்றாலும் இடங்களைப் பொறுத்தவரையில் தொகுதிக்கேற்ப முடிவுகள் அமையப்பெற்றுள்ளன.

ஜிஎஸ்டியின் தாக்கம் எவ்வாறாக இருந்தது? நகர்ப்புற வாக்காளர்கள் யார் பக்கம்?

ஜிஎஸ்டியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குஜராத்திகள்தான். குறிப்பாக நகர்ப்புற குஜராத்திகள். அதிக அளவில் வணிகர்கள் உள்ள மாநிலம் குஜராத். மேலும் மிகப் பெரிய அளவில் வணிகர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராடினார்கள். இது போன்ற காரணிகளால் பாஜகவின் வெற்றி பாதிக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் தேர்தலுக்கு முன்பாக தெரிவித்திருந்தார்கள். மேலும் 43% நகர்ப்புற மக்கள் தொகையுள்ள ஒரு மாநிலம் குஜராத். 42 நகர்ப்புறத் தொகுதிகளில் 36 இடங்களை பாஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படித்தவர்களும், வணிகர்களும் அதிகம் நிரம்பிய நகர்ப்புறத் தொகுதிகளை வென்றதன் வாயிலாக ஒரு செய்தி தெளிவாகிறது. குஜராத்தில் ஜிஎஸ்டியால் பாஜகவிற்குப் பெருமளவிற்குப் பாதிப்பு ஏற்படவில்லை. நகர்ப் புறங்களில் உள்ள பட்டேல் சமூகத்தினரும் பாஜகவைக் கைவிடவில்லை. ஏனெனில் ஹர்திக் பட்டேல் மிகப் பெரிய ஊர்வலத்தை சூரத் நகரில் நடத்திக் காட்டினார். நகர்ப்புற பட்டேல்களும், வணிக பட்டேல்களும் பாஜகவிற்கே ஆதரவைத் தந்துள்ளனர் என்பதை நகர்ப்புறத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பட்டேல் தொகுதிகள்:

பட்டேல்களின் இடங்களில் பாஜகவின் வெற்றி விகிதம் 50.3% (28/52).
பட்டேல்கள் தீர்மானிக்க இயலாத இடங்களில் வெற்றி விகிதம் 48.6% (71/130).
காங்கிரஸ் இரண்டிலும் 42.9%. பட்டேல்கள் அதிகமுள்ள இடங்களில் 23/52. பட்டேல்கள் தீர்மானிக்க இயலாத இடங்களில் 57/130.

40%க்கும் அதிகமாக பட்டேல்கள் உள்ள தொகுதிகளில் Gondol, Kamrej, Surat North, Katargam ஆகிய நான்கு இடங்களில் பாஜகவே வென்றுள்ளது. அதுவும் 50% to 55% வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது. காங்கிரஸ் Varachcha, Unjha தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த முறை பாஜக சௌராஷ்டிரா-கட்ச் இடங்களில் (பட்டேல்கள் உள்ள இடங்களில்) கிராமப் புறப் பகுதிகளில் பாஜக அதிக இடங்களை இழந்துள்ளது. ஆனால் மற்ற இடங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் (பட்டேல்கள் உள்ள இடங்களில்) அதிக இடங்களை அனேகமாக அனைத்து இடங்களையும் பாஜகவே வென்றுள்ளது.

கிராமப்புறத் தொகுதிகள்:

140 தொகுதிகள் கிராமப்புறத் தொகுதிகளாக அடையாளம் செய்யப்பட்டுள்ளன. 2012 தேர்தலில் பாஜக 77 இடங்களையும், காங்கிரஸ் 57 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. இந்தத் தேர்தலில் பாஜக 63 இடங்களையும், காங்கிரஸ் 71 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பாஜகவிடமிருந்து 14 இடங்களைக் காங்கிரஸ் கூடுதலாகக் கைப்பற்றியுள்ளது. பாஜக கிராமப் புறங்களில் தோற்றதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. விவசாயிகளுக்கு எந்த ஒரு மானியமும் கிடைக்கப் பெறவில்லை. 2012ல் பருத்தி 20 கிலோ 1400 ரூபாய் இருந்தது. தற்போது 600 ரூபாயாகக் குறைந்துள்ளதும் அரசு அதற்கான விலையை அதிகரிக்காமல் போனதும் கிராமப்புறங்களில் பாஜக அதிக இடங்களை இழக்கக் காரணங்கள். குறிப்பாக சௌராஷ்டிரா பகுதியில்தான் பருத்தித் தொழில் செய்பவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால்தான் அங்கு பாஜக கடந்த தேர்தலைக் காட்டிலும் 13 இடங்களை இழந்துள்ளது. பாஜக அரசு நீர்ப்பாசன வசதியை, நர்மதா அணையைக் கட்டியதை சாதனையாகச் சொன்ன போதிலும் தமிழகத்தைப்போல விவசாயத்திற்கு இலவச மின்சாரமோ, சலுகைகளோ, பருத்திக்கான விலை நிர்ணயம் போன்றவை விவசாயிகளின் எதிர் மன நிலைக்குக் காரணமாக இருக்கக் கூடும். இதைப் புதிய பாஜக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
தனித் தொகுதிகள் மற்றும் பழங்குடியினர் தொகுதிகள்:
குஜராத்தில் 40 தனி (13) மற்றும் பழங்குடியினத் தொகுதிகள் (27) உள்ளன. தனித் தொகுதிகளில் பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர் 1 இடத்தையும் வென்றுள்ளார்கள். பழங்குடியினத் தொகுதிகளில் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக, காங்கிரஸ் தலா 47.5% இடங்களைப் பெற்றுள்ளன. தலித்துகள் பாஜகவிற்கு எதிரானவர்கள் என்ற மாயை பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாஜக தலித்துகளின் வாழ்க்கையை முன்னேற்ற இன்னமும் சிரத்தை எடுக்க வேண்டும். பாஜக உயர் சாதியினரின் கட்சி என்ற இமேஜிலிருந்து பெருமளவுக்கு விடுபட பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கிய காரணம்.

கட்சிகளின் வெற்றி வாக்கு விகிதம்:

கீழே உள்ள இந்த இரு அட்டவணையைப் பார்த்தால் அனைவருக்கும் எளிமையாகப் புரியும் ஒரு விஷயம். பாஜக சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் காங்கிரஸ் சராசரியாகப் பெற்றதைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்பது புரியும். மேலும் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மொத்தம் 35 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே 40,000க்கு மேலாக வென்றுள்ளது. இதன் மூலமாக பாஜக கட்சியின் அடிப்படை எந்தளவிற்குக் கட்டமைப்புடையது, இறுதி வாக்காளரையும் வாக்களிக்க வைக்கும் முயற்சி என அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்.

குஜராத் தேர்தல் முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

1. நரேந்திர மோடி என்ற தனி நபரின் பிரசாரமும், கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புமே பாஜக வெற்றி பெற்றதற்கான மிக முக்கிய காரணம்.

2. காங்கிரஸ் குஜராத் தேர்தலில் தனது மென்மையான இந்துத்துவத்தை முன் வைத்தது. குறிப்பாக இந்துக்கள் வாக்குகள் பெருமளவிற்கு பாஜகவிற்குச் செல்வதைத் தடுக்க இந்துக்களின் வாக்குகளைச் சாதி ரீதியாகப் பிரிக்க வேண்டும். அதற்கேற்றாற்போல பாஜக பட்டேல்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்ததைத் தமது அரசியல் லாபத்திற்கு காங்கிரஸ் ஹர்திக் பட்டேலை உபயோகித்துக் கொண்டது. தாக்கூர், பட்டேல், மோவானி என சாதி இளைஞர்களை வைத்து இந்துக்கள் வாக்குகளைச் சிதறச் செய்ததில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.

3. சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் கடந்த காலத் தேர்தல்கள்போல அதிக வாக்கு சதவிகிதத்தைப் பெறாமல் போனதும், 22 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் கட்சிக்கெதிரான மன நிலையும் இந்த முறை வாக்குகளைக் காங்கிரஸின் பக்கம் குவிய உதவியது.

4. விவசாயிகள் மற்றும் பருத்தித் தொழில் செய்பவர்கள், வியாபாரிகளின் மீது மிகுந்த அக்கறையையும் அவர்கள் பலனடையும் வகையிலான சில திட்டங்களையும் பாஜக செய்ய வேண்டியது அவசியம் என்பதைப் பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.

5. தனித் தொகுதிகள் மற்றும் பழங்குடியினரின் தொகுதிகளில் இன்னமும் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை அரசு செய்து மேம்படுத்த வேண்டும்.

6. மிகச் சிறந்த மாநில நிர்வாகத்தைக் கட்டுக்குள் வைக்கும் நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது.

இமாச்சலப் பிரதேசம்:

இமாச்சலைப் பற்றி அதிகம் ஆய்வு செய்யாமல் அங்கு கட்சிகள் பெற்ற இடங்களை மட்டும் அறிந்து கொள்வோம். மொத்த சட்ட மன்ற இடங்கள் 68. பெரும்பான்மையை நிரூபிக்க 35 இடங்கள் தேவை. பாஜக 44, காங்கிரஸ் 21, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளார்கள். 2012 சட்டசபை முடிவுகளைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சைகள் முறையே 36, 26, 6 இடங்களைப் பிடித்திருந்தார்கள். பாஜக 38.83% (2012)லிருந்து 48.8% (2017) ஆக வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 43.21% (2012)லிருந்து 41.7% (2017) ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸின் ஊழல், ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளது. 1977லிருந்தே காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

உதவி வலைத்தளங்கள்:

http://eciresults.nic.in/ | https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gujarat-election-2012-keshubhais-party-dented-bjp-prospects-in-saurashtra/articleshow/17709461.cms | https://timesofindia.indiatimes.com/india/why-gujarat-verdict-heralds-a-new-bjp-3-0/articleshow/62123202.cms | https://thewire.in/206224/gujarat-assembly-elections-results-2017/ | http://indianexpress.com/elections/gujarat-assembly-elections-2017/bjp-deepens-urban-support-congress-widens-rural-reach-4989021/ | http://postcard.news/congress-actually-won-17-seats-using-dirty-trick-britishers-won-77-seats/ | http://indianexpress.com/elections/gujarat-assembly-elections-2017/bjp-deepens-urban-support-congress-widens-rural-reach-4989021/

Posted on Leave a comment

வலம் – ஜனவரி 2018 மாத இதழ் அறிவிப்பு

வலம் ஜனவரி 2018 இதழ்.

குஜராத் தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை – லக்ஷ்மணப் பெருமாள்
‘நதியற்ற’ சிந்துவெளி நாகரிகம்: புதிய ஆய்வுகள் – ஜடாயு
உடையும் இந்தியா – ஒரு பார்வை – கோ.எ. பச்சையப்பன்
தொட்டில் பழக்கம்… – சுதாகர் கஸ்தூரி
தமிழகத்தின் முதல் இந்துத்துவப் பத்திரிகை – அரவிந்தன் நீலகண்டன்
கோவில் நிலத்தில் பேருந்து நிலையமா? – பி.ஆர்.ஹரன்
நம்பிக்கைகள் நம்பிக்கைச் சிதைவுகள் மற்றும் நியாயப்படுத்தல்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்
கைசிக புராணத்தின் கதை – சுஜாதா தேசிகன்
சில பயணங்கள் சில பதிவுகள் – சுப்பு
ஒரு புதிர் போடுவோம் – ஹாலாஸ்யன்
ஓலைச்சுவடிகள் – அரவிந்த் சுவாமிநாதன்
கிளிக்காரன் – ஜெயராமன் ரகுநாதன்