Posted on Leave a comment

கொல்கத்தா: காளியின் நகரம் – ஆர்.வி.எஸ்

கொல்கத்தாவின் சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். ‘மிஷ்டர் ஆர்பியெஷ்’ என்ற இன்முகத்துடன் வரவேற்ற டாக்ஸி ட்ரைவரின் காரேறித் திரும்பும்போது கண்ணில் பட்ட காம்பௌண்ட் சுவரின் காலில் பட்டை பட்டையாய் சிகப்பு வர்ணம். பான் ராஜாங்கத்துக்குள் நாம் நுழைவதை உணர்த்தும்விதமாக, மாடர்ன் ஆர்ட் போல கலைநயமாகத் துப்பியிருந்தார்கள். கிழக்கிந்திய கம்பனியார் வாணிபம் செய்ய வந்திறங்கிய இடம்; அந்தக்கால பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த நகரம் என்ற எண்ணங்களுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சாலைகள் ஒன்றும் ராஜபாட்டையாக இல்லை. ஒரு முதிய நகரம் என்பது அதன் வீதிகளின் அமைப்பில் தெரிந்தது. கார் ஒரு சிக்னலில் நின்றது. ரோட்டோர ப்ளாட்ஃபார்மில் சுழல் நாற்காலி போட்டு காம்பௌண்ட் சுவரில் A4 சைஸ் கண்ணாடி மாட்டியிருந்தார்கள். தாகூர் தாடியுடன் ஒருவர் இளைஞன் ஒருவனுக்கு மீசை மழித்துக்கொண்டிருந்தார். பாதையோர டீக்கடை போல பாதையோர சலூன். கட்டிங் போது பறக்கும் முடி எங்கே போகும்… தரையில் சிதறும் முடி எங்கே பறக்கும் என்ற ஆதார ஐயம் எழுந்தது. சுத்தமான நகரமா? அதேபோல இன்னும் இரண்டு சேர்கள் அதே சாரியில் போட்டிருந்தது. மழைக்கு லீவு விடும் கடைகள்.

அடுத்தடுத்த சிக்னலில் மேலும் சில ஆச்சரியங்கள் கண்ணில்பட்டன. கை ரிக்ஷா இழுத்துக்கொண்டு தேசலான ஒருவர் நின்றிருந்தார். நான் ஃபோட்டோ எடுப்பதைக் கண்டு சிரிப்புடன் ஃபோட்டோவுக்கு நின்றார். கண்களில் அசதியையும் மீறி உழைக்கும் வைராக்கியம் தெரிந்தது. தமிழகத்தில் கை ரிக்ஷாக்கள் எப்போதோ ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், சிவப்பு ஆளும் பிரதேசத்தில் இன்னும் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. அடுத்து No Refusal என்று மேனியில் எழுதிய வாசங்களுடன் ஓடும் டாக்ஸிக்கள். விஜாரித்ததில், நம்மூரில் ‘இல்ல வராதுப்பா…’ என்று கழன்று கொள்ளும் ஆட்டோ ஆசாமிகள் போலில்லாமல் கூப்பிட்டால் எங்கும் வருவார்களாம்.

மாலை வேளையில் பேலூர் ராமகிருஷ்ண மடம் சென்றேன். ஆறரைக்கு மேல் ராமகிருஷ்ணருக்கு ஆரத்தி நடக்கும். ரொம்பவும் விசேஷம் என்று உள்ளூர் நண்பர் சொன்னார். சாரதா தேவிக்கும் ராமகிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னிதிகள். கோயில்கள் என்றும் சொல்லலாம். பிரம்மாண்டமான க்ரில் கதவைத் தாண்டியதும் இருபக்கங்களும் மரங்கள் சூழ்ந்திருக்கும் நடைபாதை. தூரத்தில் கொல்லைப்புற வேலிக்கப்பால் ஹூக்ளி நதி ஓடுவது தெரிகிறது. கங்கையின் மேற்குக் கரை அது. புனிதம் நிரம்பியது. காசிக்கு இணையாகப் புகழப்படுவது. சுற்றுப்புற அமைதியில் நாமும் வாயைத் திறக்காமல் நுழைகிறோம்.

சந்திர பிரபை போன்ற மாடங்கள் வைத்து, பத்து படி ஏறி நுழைய வேண்டிய ஒரு அரண்மனை போன்ற தோற்றம். ராஜதர்பார் நடக்கும் இடம் போல உள்ளே இருந்தது. அந்தப் பெரிய அறை, முழுவதும் நிரம்பியிருந்தது. கால் மடக்க முடியாதவர்களுக்காக தூண் ஓரங்களில் பிளாஸ்டிக் முக்காலிகள் கிடந்தன. வயதானவர்கள் கீழே அமர்ந்திருக்க வாலிப வயசில் சிலர் முக்காலி மேல் இருந்தார்கள். எதிரே வெண் பளிங்கு சிலையில் ராமகிருஷ்ணர் தெரிந்தார். ஆரத்தி ஆரம்பிக்கவில்லை. கையில் சிலர் கையடக்க தோத்திரப் புத்தகங்களோடு அமர்ந்திருந்தார்கள். என் பக்கத்தில் கூன் போடாமல் கண் மூடி நிமிர்ந்து அமர்ந்திருந்த இளைஞன் விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட நரேந்திரனாக இருக்கக்கூடும்.

ஆறரை மணிக்கு காவியுடையில் தலைமை சன்னியாசி வந்து ஆரம்பித்தார்கள். அதுவரை கோரஸாக பாடியதில் ‘ராம… கிருஷ்ணா…’ மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனால் அந்த தர்பார் போன்ற அறையில் அத்தனை பேர் குழுமி ஸ்ரீ ராம கிருஷ்ணரின் முன் தியான நிலையில் இருப்பதைப் பார்க்க மிகவும் ஆனந்தமாக இருந்தது. பஜனை கால் மணி நேரம் நடந்தது. பத்ம பீடம் போன்ற இடத்தில் அவரின் சிலாரூபம் அமைந்திருந்தது. அங்கும் சன்னிதி படியிலும் எதிரிலிருக்கும் பூந்தோட்டத்திலும் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டாடிய பிரகிருதிகளும் இருந்தார்கள்.

ஆற்றுக்குள் இறங்க அனுமதிக்கவில்லை. எட்டிப் பார்த்து கால் நனைத்து கங்கையின் தங்கை ஹூக்ளியின் புனிதநீரை கையில் அள்ளி ப்ரோக்ஷணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன். தக்ஷிணேஷ்வரத்தில் செய்துகொள்ளலாம். அக்கரையில் உள்ளது தக்ஷிணேஷ்வரம் என்று உடன் வந்த உள்ளூர் நண்பர் ஆறுதல் கூறினார். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் எல்லாக் கிளைகளிலும் ஒரு ஒழுங்கு காணப்படுகிறது. மடத்தின் உள்ளே சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.

தக்ஷிணேஷ்வரம் கோயிலின் உள்ளே மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்லக் கூடாது என்று, இறங்கியதும் சொன்னார்கள். உடன் வந்த சாரதியிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம். ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதா தேவியைச் சந்தித்த இடம். பவதாரிணியாக ஸ்ரீமாதா அருளாட்சி செய்யுமிடம். கோயிலின் அருகிலேயே போலிஸ் பூத் இருக்கிறது. உள்ளே நுழையும்போது மெட்டல் டிடக்டெர் வாசலுக்குப் பிறகு பைரவர்கள் படுத்திருந்தார்கள். மிதிக்காமல் உள்ளே நுழைந்தோம்.

ஏழு தாண்டிய முன்னிரவு நேரம். தூரத்தில் பஜனை ஒலி கேட்டது. வங்காள கோரஸுக்கு இதமாக ஜால்ராவும் டோலக்கியின் லயமும் என்னை என்னவோ செய்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் பவதாரிணியின் சன்னிதியின் எதிரே தியானத்தில் மூன்று நாட்கள் அமர்ந்திருந்தார் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. தனது சொந்த ஊரிலிருந்து நடந்து வந்த சாரதா தேவி தக்ஷிணேஷ்வரத்திற்கு அருகில் வரும்போது ஜுரம் வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்துவிட்டார்களாம். வயதான மூதாட்டி ரூபத்தில் வந்த பவதாரிணி ஆறுதலாகத் தலையை வருட, ஜுரம் விட்டு, விடுவிடுவென்று தக்ஷிணேஷ்வரம் வந்தார்களாம்.

நெடிய வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது ஒவ்வொரு கதையாக நினைவில் முட்டியது. யாரும் குறுக்கே புகாமல் நகர்ந்த வரிசை. வரிசையில் நின்று கொண்டிருக்கும் போதே சன்னிதியின் எதிரே இருந்த மண்டபத்தில் பஜனை பாடிக்கொண்டிருந்த குழுவின் மேல் கண்பார்வை படர்ந்தது. எட்டு ஒன்பது பேர் இருப்பார்கள். அனைவரும் சன்னிதி நோக்கி அமர்ந்திருந்தார்கள். குழுவின் எதோ ஒரு ஓரத்திலிருந்து பாடல் எழுந்து பின்னர் அனைவரும் லாவணி பாடினார்கள். நடுவில் அமர்ந்திருந்தவர் வேறொரு உலகத்தில் இருந்தார். கண்கள் சொருகி அவர் கோரஸோடு சேரும்போது இந்த வரிசையை விட்டு நடந்து சென்று அவருடன் அமர்ந்துவிட மாட்டோமா என்ற ஆவல் பிறந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி நிலைக்குச் சென்றதன் பின்னணி விளங்கியது. ஆகர்ஷணம் நிறைந்த சன்னிதி. நிற்க. இதுவரை நான் பவதாரிணியை தரிசித்ததில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்த வரிசை அப்படியே நிற்காதா, இன்னும் செவியில் அந்த பஜனாம்ருதம் பாயாதா என்ற எண்ணம் மேலோங்கியது. சன்னிதியை நெருங்கிவிட்டோம். என் முன்னால் சென்ற நண்பர் “ம்… திரும்பிப் பாருங்க…” என்றார். சன்னிதி உள்ளே பார்வை நுழைந்ததும் மேனி சிலிர்த்தது. கறுத்த தேகத்தில் சிகப்பு வஸ்திரத்துடன் மூன்றடியில் நின்ற திருக்கோலம். இரத்த நிறத்தில் வெளியே தொங்கும் நாக்கு. காலடியில் சிவன். அவருக்கும் கீழே ஆயிரம் இதழ் கொண்ட வெள்ளித் தாமரை. கரத்துக்கு ஒரு ஆயுதத்துடன் தசபுஜங்கள். உள்ளே நிற்கும் பாண்டாக்கள் கண்ணில் படவில்லை. சன்னிதியின் வெளிச்சம் தெரியவில்லை. நேரம் காலம் தெரியவில்லை. அந்த உருவத்துக்கு முன்னால் உங்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. நம்முள் ஏதோ ஒரு இனம் புரியாத அதிர்வு உண்டாகி பரவச நிலையை அடைகிறோம். சில விநாடிகளுக்கு மேல் நம்மால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை.

வெளியே வந்ததும் ஒரு பெரும் விடுதலை உணர்ச்சி. சுற்றி வரும் பிரகாரத்தில் அதே காளியை ஆளுயர படமாக்கி ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறார்கள். பக்தர்கள் தொட்டுத் தொட்டு கும்பிடுகிறார்கள். மண்டபத்தில் பஜனை இன்னமும் தொடர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் கால் இழுத்தது. சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பவளாம் இந்தக் காளி. என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தாய் என்று கேட்ட ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, ‘இல்லை.. உங்களுடன் சேர்ந்து இம்மனித குலத்திற்கு சேவை புரிய வந்தேன்’ என்று சாரதாதேவி பதிலளித்த இடமாம். தன் அண்ணனிற்குப் பிறகு ராமகிருஷ்ணர் பணிபுரிந்த கோயில் அது.

பிரகாரத்தில் சிறு சிறு சன்னிதிகளில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. அதன் ஓரத்தில் ஹூக்ளி நதியின் கிழக்குக் கரை. ஒரு சின்ன பாதை வழியாக ஹூக்ளிக்கு வருகிறோம். சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது நதி. கங்கையுடனான எனது முதல் ஸ்பரிஸம். முதலில் காலை நனைப்பதற்குப் பதிலாக குனிந்து ஒரு கை நீரை அள்ளி புரோக்ஷணம் செய்து கொண்டேன். ஜிலீர் என்றிருந்தது. ஒரு படி இறங்கி நின்றபோது மனசு நிறைந்துபோனது.

தக்ஷிணேஷ்வர் கோயில் வாசலில் இரண்டு உணவு விடுதிகள் இருக்கின்றன. பக்தர்களைச் சாப்பிடக் கூவி அழைக்கிறார்கள். பெங்காலியில் அவர்களது கூப்பாடு விசித்திரமாக இருக்கிறது. Autobiography of a Yogi யில் பரமஹம்ஸ யோகானந்தா எழுதிய ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவரது சகோதரியின் கணவர் சதீஷ் இறை நம்பிக்கையில்லாதவர். அவரை தக்ஷிணேஷ்வர் கோயிலுக்கு அழைத்துச் சென்றால் மாற்றம் நிகழலாம் என்பது அனைவரது விருப்பமும். அப்படியே அழைத்துச் சென்றார்கள். அவர் கோபத்தில் கூச்சலிட்டார். மேலும் “எனக்கு மதிய உணவு வேண்டும். இல்லையென்றால்… அவ்வளவுதான்…” என்று எச்சரித்தார். “அன்னை காளி அருளுவாள். கவலையில்லை. வாருங்கள்” என்று அழைத்துச்சென்றார் யோகானந்தா.

யோகானந்தா தியானத்தில் மூழ்கிவிடுகிறார். கோயில் நடை சார்த்தும் வேளை வந்துவிட்டது. சதீஷ் குதியாய்க் குதிக்கிறார். நிஷ்டையில் யோகானந்தா. கடைசியில் கண் விழித்துப் பார்த்த போது சதீஷ் எதிரில் நின்று “கோயிலும் சார்த்திவிட்டார்கள். என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டுவிட்டாய்… உன்னோடு கோயிலுக்கு வந்ததன் பலன்” என்று எகிறினார். அப்போது அக்கோயிலின் பாண்டா பொறுமையாக பரமஹம்ஸ யோகானந்தரிடம் வந்தார். “உங்களிடம் ஒரு தீட்சண்யம் இருக்கிறது. உங்களைப் பார்த்தவுடனேயே நான் உங்கள் குடும்பத்திற்கான உணவை தனியே எடுத்து வைத்திருக்கிறேன். இது அன்னைக் காளியின் அனுக்ரஹம்” என்றார். சத்தமிட்ட சதீஷின் முகம் வெளிறியது. அவர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.

தக்ஷிணேஷ்வரத்தில் ஏற்கெனவே மணி எட்டரை ஆகியிருந்தது. அன்று அமாவாசை. காலிகட்டில் பதினோறு மணி வரை கோயில் திறந்திருக்கும் என்று அழைத்துச் சென்றார் நண்பர். இந்த காலிகட் என்ற பெயரை வைத்துதான் இந்த நகரம் கல்கத்தா என்றழைக்கப்பட்டதாம். கங்கையின் கிளை நதியான ஹூக்ளி (பாகீரதி என்றும் அழைக்கப்படுகிறது)யின் கரையோரத்தில் அமைந்த கோயிலாதலால் காலிகட். நாட்கள் செல்லச் செல்ல நதி ஓரம் போனது என்று சொல்கிறார்கள். இப்போது ஒரு சின்னக் கால்வாய் போல ஒன்று ஓடி ஹூக்ளியில் கலக்கிறது. இதற்கு ஆதி கங்கா என்று பெயர். ஒரு சீனியர் பாண்டாவுக்குச் சொல்லி வைத்திருந்தார் நண்பர். கோயில் என்றால் நீங்கள் நினைப்பது போல பெரிய கோபுரமெல்லாம் இல்லை.

கோயிலைச் சுற்றிலும் கடைகள். எல்லாக் கடைகளிலும் பேடா விற்கிறார்கள். நம்மூர் பெருமாள் கோயில்களில் கல்கண்டு நெய்வேத்யம் செய்வது போல இங்கே பேடா நெய்வேத்யம். சீனியர் பாண்டாவுக்கும் ஒரு கடை இருந்தது. சன்னிதிக்குப் பின்னால் இருந்தது அந்தக் கடை. ஒரு தெருநாய் ஈ மொய்க்கக் காலைப் பரப்பி படுத்திருக்க பக்கத்தில் நான்கு பேர் மும்முரமாகச் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். மணி ஒன்பதரை. கோயிலென்ற புனிதத்தலத்திற்கான அறிகுறியெல்லாமில்லை. சிவப்பு அரளி போன்ற மாலை ஒன்றை வாங்கிக்கொண்டோம். சீனியர் பாண்டா உள்ளே அழைத்துச்சென்றார். ஒரு மரத்தடியில் காளியின் திருமுகம் காட்சியளித்தது. விழிகளும் நெற்றியில் பொட்டும் சிவப்பாக இருந்தது. நாக்கு தங்கத்தில் வெளியே தொங்கியது. கிட்டத்தட்ட மயிலை முண்டகக்கண்ணியம்மன் போல ஒரு சொரூபம்.

என் கையில் மலர்களைக் கொடுத்து ”ஸர்ப்ப…” என்று ஆரம்பித்த பாண்டாவை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் போதே “மங்கள…” என்றார். புரிந்துகொண்டேன். “ஸர்வ மங்கள மாங்கல்யே…”வை நானே தொடர்ந்தேன். நான் ஆரம்பிக்க அவர் நிறுத்திக்கொண்டார். மந்திரம் சொல்லி அந்தப் புஷ்பங்களை ஜெகன்மாதாவின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்தேன். ஹோமகுண்டத்திலிருந்து எடுத்த கருஞ்சாந்தை என் நெற்றியில் தரித்துவிட்டார் பாண்டா. குனிந்து அதை ஏற்றுக்கொள்ளும் போது காளியை ஓரக்கண்ணால் பார்த்தேன். ஹப்பா! ஒரு படபடப்பு வந்தது. அருட்கடாக்ஷம் மிகுந்த தெய்வம் என்பதை உணர்ந்தேன்.

காளிக்குப் பின்னால் சிவன் சன்னதி ஒன்று இருந்தது. கண்ணப்ப நாயனார் கட்டிப் பிடித்துக் களித்தது போல, ஒரு பெண்மணி லிங்கத்தைக் கட்டிப்பிடித்தபடி இருந்தார். அவரை நகர்ந்துகொள்ளச் சொல்லி ஸ்வாமி கும்பிடுவதில் எனக்கு இஷ்டமில்லை. கன்னத்தில் போட்டுக்கொண்டு நகர்ந்தேன்.

வெளியே சீட்டுக்கச்சேரி இன்னமும் தொடர்ந்துகொண்டிருந்தது. நாயின் உறக்கம் கலையவில்லை. இன்னமும் சில கடைகள் திறந்திருந்தன. காலைத் தட்டி பிச்சை கேட்பவர்கள் சிலர் இன்னமும் விழித்திருந்தார்கள். மூடிய கடையின் வாசலில் அடுப்பு மூட்டி உணவு தயார் செய்துகொண்டிருந்த புல்லாக்கு அம்மணிக்கு இரண்டு பிள்ளைகள் போலிருக்கிறது. கட்டாந்தரையில் சேலையை விரித்து தலைக்கு முண்டாசு போல சுருட்டியிருந்தார். இரண்டும் கைகோர்த்து அதன் மேல் தலைவைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. தாயே மா காளி! இவர்களைக் காப்பாற்று.

Jai Mata Di!

Posted on Leave a comment

மாய மனம் [சிறுகதை] – ஆர்.வி.எஸ்

சரோவிற்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் பேட்டை. ஒரு பாரா பயோ கீழே.

டிஏவியில் ஐந்தாவது படிக்கும் சுட்டிப் பெண் (சுபா) – மூன்றாவது படிக்கும் வால் பையன்  விஷால் (Sibling quotaவில் சேர்ந்தவன்) – லேசாக மேக்கப் போட்டால் தமிழில் முன்னணி நடிகையர்களின் மார்க்கெட் எகிறிவிடும் அழகோடு ஒரு மனைவி – ரம்யா. காரின் உதிரிபாகங்கள் தயாரித்து விற்கும் பன்னாட்டு நிறுவனத்தில் முதுகு நீண்ட சாய்மான சுழல் நாற்காலி உத்யோகம். தனக்குக் கீழ் டை கட்டிய பத்து வெள்ளைக் காலர்களையும் அவர்களுக்குக் கீழே ஐந்நூறு நீலக்காலர்களையும் மேய்க்கும் தலையாய பணி. நினைத்தாலே இனிக்கும் பாடல் போல காலையில் ஜப்பானிலும் மாலையில் ந்யூயார்க்கிலும் இரவில் தாய்லாந்திலும்… காஃபிக்காவும் காபரேக்காவும் ஜாலிக்காகவும் சுற்றுபவனில்லை… தொழிலுக்காகப் பசி தூக்கமின்றிப் பேயாய் அலைந்தவன்.

ஆனால் காரணமே தெரியாமல் ஒரு வாரமாகத் தாடி வளர்த்துச் சோம்பித் திரிகிறான். ஆஃபீஸ் போகக் கசக்கிறது. ஏதோ தகிடுதத்தம் பண்ணியது போலப் பார்வை. தட்டில் தகரம் போட்டாலும் ஐஃபோன் பார்த்துக்கொண்டே உள்ளே தள்ளுபவன் “தக்காளி ரசம் ஏன் வச்சே?” என்று சமீபத்தில்  ரம்யாவிடம் பழிச்சண்டை. கல்யாணம் ஆன புதிதில் “வக்காளி… உன் தக்காளி ரசத்துக்காகவே ஏழேழு ஜென்மத்துக்கும் உனக்கு தாலி கட்டி உன் காலடியிலேயே அடிமையாக் கிடக்கணும்” என்று ரொமான்டிக் வசனம் பேசி ரம்யாவின் கன்னங்களை ரூஜ் போடாமல் சிவக்க வைத்தவன்.

“ஏன் ஆஃபீஸ் போகலை?”

“பிடிக்கலை.”

“எதாவது கார்ப்பரேட் பாலிடிக்ஸா?”

“இல்லையே!”

“டெலிவரி ப்ரஷரா?”

“இல்லயில்ல…”

“உடம்புக்கு எதாவது பண்றதா?”

“ச்சே… ச்சே… வேலையைப் பாரு…”

முதுகுகாட்டி திரும்பிப் படுத்துவிட்டான்.

மணிரத்ன சுருக்கமாய்ப் படுக்கையறையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிக்கொண்டதுதான் கடைசி. அதற்கப்புறம் வாழ்க்கை ம்யூட் மோடில்தான் நடக்கிறது. டப்பாக் கட்டுக் கைலியோடு டைனிங்கில் வந்து காலையில் உட்கார்ந்தால் காஃபி. உடனே துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு போய்க் குளியல். திரும்பவும் டேபிள். இட்லி அல்லது தோசை. போய் மாடியில் படுக்கறையில் தஞ்சமடைந்தால் மதியம் சாப்பாட்டிற்கு இறங்கி வருவான். இரவு எட்டு மணி வாக்கில் டின்னர். பெண் “ப்பா… கேன் யூ ஹெல்ப் மீ இன் மை ப்ராஜெக்ட்?” என்று தாவாங்கட்டைப் பிடித்துக் கேட்டால் விட்டேத்தியாகப் பார்த்துவிட்டு, விடுவிடுவென்று எழுந்து சென்று பால்கனி தனிமையில். இந்தச் செய்கைகளில் ஒரு தொடர்ச்சியும் கிடையாது. சில நாட்கள் காலை டிஃபன் சாப்பிடாமல் மொட்டை மாடியில் உலாத்துகிறான். போன வாரம் ராத்திரி மாடியை விட்டுக் கீழே இறங்கவேயில்லை.

“யாராவது செய்வினை செஞ்சுருப்பாளா மாமீ?” என்று காம்பௌன்ட் அருகில் காற்றாட நின்றுகொண்டிருந்த பக்கத்து ஃப்ளாட் பரிமளம் மாமியிடம் சன்னமாகக் கேட்டாள் ரம்யா. கண்களில் ஒருவித பயம் தெரிந்தது. முன்னிரவு நேரம். சுற்றியிருந்த வீடுகளில் ஜன்னலுக்கு ஜன்னல் கட்டம் கட்டமாக வெளிச்சம் ஒளிர்ந்தது. சில உப்பரிகையில் ‘ஜாக்கி’யும் சுருணைத் துணியும் நிழலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. பரிமளம் மாமியின் சொற்ப நேர மௌன இடைவேளையைக் கீறி யார் வீட்டிலோ தத்துவமாக “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு… இதில் நீயென்ன? ஞானப்பெண்ணே” அலறியது. “நான் கேட்டு தாய் தந்தை…” ஆரம்பிக்கும் முன்னர் மாமீ பேச ஆரம்பித்தாள்.

“என்னடி தத்துப்பித்துன்னு பேசிண்டு… வாட்ஸாப் காலத்துல மையாவது மாந்திரீகமாவது?… போ… போ… ஆஃபீஸ்ல பாஸ் கூட எதாவது இருக்கப்போறது…”

“இல்லே மாமி… வாட்ஸாப் காலத்துல நாம கணபதி ஹோமம் சண்டி ஹோமம் பண்றதில்லையா… அதுமாதிரி அதர்வண வேதமும் வழக்குல இருக்குமே… அவா தெருவுல மலையாள மாந்த்ரீகம் பண்ணி ரெண்டு புள்ள பெத்தவளை சித்தப்பிரமையாக்கிட்டான்னு  எங்காத்துல மாமா தாத்தா பழங்கத ஒண்ணு சொல்லுவா…”

“இருக்கலாம்டீ. கை நிறையா சம்பாதிக்கிறான். ஒசந்த படிப்பு. படகு மாதிரி கார் வச்சுருக்கான். சிட்டில சொந்தமா ரெண்டு ஃப்ளாட். பார்க்க லக்ஷணமா ரோஜால வர்ற அர்விந்த் சாமி  மாதிரி இருக்கான். என்ன… சரியா?”  பரிமளா மாமி கடைசி வரியைச் சொல்லிவிட்டு ரம்யாவைக் கண்ணடித்து ஊடுருவிப் பார்த்தாள்.

“இவர்க்கு எதுக்கு வைக்கணும்?” தவிப்புடன் கேட்டாள் ரம்யா.

“இவனை லவட்டிண்டு போயிடலாம்னுதான்… காசு. படிப்பு. பதவி. அழகு. இன்னும் என்ன காரணம் வேணும்டீ. ம்… சரியா?”

“ஆனா எனக்கு தாலிகட்டிருக்காரே. கல்யாணமாயிடுத்தே.”

“ஹக்காங். போடி பைத்தாரி. எக்ஸ்பீரியன்ஸ் பீப்பிளுக்குதான் மௌஸு ஜாஸ்தின்னு எங்காத்து கிழம் எப்போதும் ஃபோன்ல கூவிண்டிருக்கும். கம்பெனிக்கெல்லாம் ஆள் பிடிக்கிற வேலைல இருந்தாரோன்னோ. ஆனாக்க இதோட எக்ஸ்பீரின்ஸ் என்னன்னு நேக்குத் தெரியாதா?” தலையாட்டி வாய் திறந்து சிரிப்பாள் பரிமளம் மாமி.

இதற்கு மேல் பரிமளா மாமிகிட்டே பேசினால் லஜ்ஜையில்லாமல்  ‘அ’ந்த மாதிரியான சமாச்சாரமெல்லாம் சகஜமாகப் பேசுவாள். “சரி மாமி. உள்ள வேலையிருக்கு. நான் வரேன்” என்று கழண்டு கொண்டாள் ரம்யா. பரிமளா விஷமக்காரக் கிழவி. சர்வ சுகங்களையும் ஆண்டு அனுபவித்தவள் என்பது அவளது சுவாரஸ்யமான பேச்சில் புரியும்.

“சாயங்காலமாச்சுன்னா பளிச்சுன்னு மூஞ்சியலம்பி, நெத்திக்கு இட்டுண்டு, பூஜை ரூம்ல வெளக்கேத்தி, கார்த்தாலேர்ந்து போட்டுண்டிருந்த அழுக்கு நைட்டியை விழுத்துட்டு, புடவையோ சுடிதாரோ ஜம்முன்னு உடுத்திண்டு, கமகமன்னு யார்ட்லீ சென்ட் தெளிச்சுண்டு, கண்ணுக்குத் தீனியா நிக்கணும்டீ…  நாலு இடம் போயிட்டு பேண்ட்டும் ஸ்கர்ட்டும் லோ ஹிப் சாரியுமா பார்த்துட்டு ஆஞ்சுஓஞ்சு ஆத்துக்கு வர்றவன ஏமாத்தக்கூடாதோன்னோ” என்று பக்கத்தில் சுந்தரவிநாயகர் கோயில் சதுர்த்திக்குப் போய்விட்டு வரும் போது காதில் சீக்ரெட் போல ஹஸ்கி வாய்சில் சொல்வாள்.

இன்றோடு பத்து நாட்கள்ஆயிற்று. “உங்காத்துக்காரர் மலைக்கு மாலை போட்டுருக்காரா?” என்று விஷாலின் ஃப்ரென்ட் ஷிவ்வின் அம்மா ஸ்கூல் மரத்தடி லன்ச் டைமில் கேட்டாள். வாயைத் திறக்காமல் இல்லையென்று தலையாட்டி சிரித்துவிட்டு வந்தாள் ரம்யா.  சித்த ஸ்வாதீனமில்லாமல் போனது போலவும் தெரியவில்லை. இதுவரை ஃபோனைத் தொடவில்லை. டீவி ரிமோட்டை கையிலெடுக்கவில்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு தூக்கம். அடர் மௌனம். யாரிடமும் வாய்வார்த்தையாகப் பேசவில்லை. மௌனச் சாமியார் வாழ்க்கை. யார்மேலாவது வெறுப்பா? இல்லை, உள்ளுக்குள்ளயே பேசிண்டு “நான் யார்?”ன்னு ரமணர் மாதிரி தேடுதலா?

பெரும் ஆச்சரியம் என்னவென்றால் அவனது ஆஃபீஸிலிருந்து ஒரு கால் கூட வரவில்லை. சீட்டைக் கிழித்துவிட்டார்களா? விரக்தியில் பேசாமல் இருக்கிறானா? மொபைலை சார்ஜ் செய்து பத்து நாட்கள் இருக்கும். டேபிள் அலமாரி ஷோ கேஸ் எங்கும் காணவில்லை. சுபா ஒரு ஞாயிற்றுக்கிழமை “அப்பாவுக்கு என்னாச்சுமா? பேய் பிடிச்சா மாதிரி பாக்கறார்?” என்று கேட்டபோது ரம்யாவுக்கு அடிவயிறு கலங்கியது. “அப்பனே… காப்பாத்து” என்று திருவேங்கடமுடையானுக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தாள்.

ரம்யாவிற்கு இதைத் தனியொரு ஆளாய்ச் சமாளிக்கமுடியும் என்று தோன்றவில்லை. ஊர் சுற்றிச் சம்பாதிப்பது ஒன்றுதான் சரோவின் வேலை. மளிகை, ஸ்கூல் ஃபீஸ், ட்யூஷன் ஃபீஸ், பால் பாக்கெட், வேலைக்காரி, பேப்பர்காரனுக்கு என்று சகலமும் ரம்யாதான். சரோவின் அப்பாம்மாவிடம் இங்கு வரச்சொல்லிக் கேட்கலாம். அவர்களை இவள் கூப்பிட்டாள் என்று தெரிந்தால் தாம்தூமென்று ஆகாசத்துக்கும் பூமிக்குமாய்க் குதித்தால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது.

“நன்னிலத்துலேர்ந்து நாங்க எங்கடி அந்தப் பக்கம் வர்றது? இவர்க்கு காலை மடக்கி அரை மணி உட்கார முடியலை… கும்மோணம் வரைக்கும் கூட பஸ்ல போக காலிரண்டும் மறத்த்துப் போய்டறது.  குளிர்ல கொறக்களி இழுக்கறது. ஏழெட்டு மணி நேரம் பஸ்லயோ ட்ரெயின்லயோ எப்டி வருவோம்?” வேகுவேகென்று பேசிவிட்டு ரம்யாவின் மாமியார் ஃபோனை வைத்துவிட்டாள்.

டிஸம்பரில் அரைப்பரீட்சை லீவு விட்டார்கள். பத்து நாளுக்கு துணிமணிகளை மடித்து வைத்துக்கொண்டாள். ட்ராவல்ஸில் ஒரு இன்னோவாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சரோவுடன் நேரே நன்னிலம் வந்து இறங்கிவிட்டாள்.  கிராமத்து வீட்டு வாசல்படியில் கால் வைத்ததும் சரோவின் முகம் பிரகாசமாகிவிட்டது போல இருந்தது ரம்யாவுக்கு.

“வாடீம்மா, வா…” தோளில் கிடந்த காசித்துண்டோடு மாமனார்.

“சுபா குட்டீ… என்னடீது ஈர்க்குச்சியாட்டம் வத்தலும்தொத்தலுமா இருக்கா. சாப்பாடு போடுறியா? இல்லையா? ”

“கஷ்குமுஷ்குன்னு ஆயிட்டானே விஷால். அக்காவோடதை பிடிங்கிச் சாப்பிடறயாடா? படவா.”

மாமியாருக்கு பரம சந்தோஷம். “ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் வெறிக்க வெறிக்க மூஞ்ச்சியைப் பார்த்துண்டு ஒண்டியா ஒக்காந்திருநதோம். எவ்ளோ நாளாச்சு. ஒரு பால் பாயஸம் வச்சுடறேன்.” முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டுச் சுறுசுறுப்பானாள்.

பசங்கள் இருவரும் கொல்லைத் தோட்டத்திற்குள் ஓடினர். சரோவைக் காணோம். வாசலுக்கு ஓடிவந்தாள். திண்ணை காலியாக இருந்தது. பின்னால் தோட்டத்தில் பசங்களிருவரும் கிணற்றை எட்டிப் பார்த்துக் கல்லெறிந்து கொண்டிருந்தனர். கொல்லைக் கடைசி தென்னைமரம் வரை சரோ கண்ணில்படவில்லை. இந்த சந்தர்ப்பத்திலாவது மாமியாரிடம் சொல்லிவிடவேண்டும். அந்தக்கிழவிதான் சரியான ஆள்.

சமையல்கட்டில் பரபரப்பாக ஒரு பெரிய பரங்கிக்கொட்டையைத் தரையில் போட்டு உடைத்துக்கொண்டிருந்தவள் ரம்யா தலை தெரிந்ததும் “சாம்பாருக்குதான்.  நம்மாத்து கொல்லேல காய்ச்சது.”

“அம்மா. உங்களான்ட ஒரு விஷயம் சொல்லணும். என் மனசைப் போட்டு குடையறது.”

சட்டென்று அரிவாமனையைத் தள்ளி வைத்தவள், கண்களில் கங்கை பொங்க நின்றவளிடம், “என்னாச்சுடீ? எதாவது…” என்று கலவரமானாள்.

நடந்த முழு கதையும் சொன்னாள். ஆழ்ந்த மௌனத்திற்குப் போனாள் ரம்யாவின் மாமியார். சமையல்கட்டு ஜன்னலைத் தாண்டிக் கண்கள் நிலைகுத்தியிருந்தன. எங்கிருந்தோ இறக்கை சடசடப்பிற்குப் பிறகு ஒரு அனாதரவான ‘கா…’ ஒலி. காற்றில் தென்னைமட்டைகள் உராயும் சர்க் சர்க் சப்தம். பின்னர் பேரமைதி.

“ஐஐடிக்கு படிச்சுண்டிருந்தான். பதினொன்னாவது. ராத்திரி பத்து மணி இருக்கும். வெளில நல்ல காத்தும் மழையுமா பிச்சுண்டு கொட்றது. கரன்ட் கட் ஆயிடுத்து. பொட்டு வெளிச்சம் கிடையாது. இவர் ஆஃபீஸ்ல ஆடிட்னு கோயம்புத்தூர் போயிருந்தார். நானும் சரோவும்தான் ஆத்துல இருந்தோம். சிம்னி வெளக்கு ரேழில ஏத்திவெச்சுட்டு வாசக்கட்டுல இருந்த ரூம்ல  ‘சரோ, என்னடா பண்றே?’ன்னு எட்டிப் பார்க்கறேன். சத்தத்தயே காணும்.”

ரம்யாவுக்கு மாமியார் அடுத்து என்னச் சொல்லப் போகிறாள் என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

“விடுடீ.”

“போட்டுட்டு ஓடிப்போயிடு.”
கொல்லையில் பசங்களின் விளையாட்டுச் சத்தம்.

“ரேழிலேர்ந்து சிம்னி வெளக்கை எடுத்துண்டு வந்து பார்த்தா… புஸ்தகமெல்லாம் தொறந்து கிடக்கு. பெட்ல போர்வை கலைஞ்சிருக்கு. வாசப்பக்கம் ஜன்னல் கதவு காத்துல படார் படார்னு அடிச்சுக்கிறது. இவனைக் காணல. எனக்கு பக்குன்னு ஆயிடுத்து. பத்து மணிக்கு எங்க தேடறது?”

ரம்யாவுக்கு தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வு அறுந்துபோனது.

“கொல்லைப்பக்கம் போயிருக்கானோன்னு போய் தேடினேன். ஊஹும். இல்லை. சடார்னு கொல்லைக் கதவு வாசக்கதவையும் இழுத்துப் பூட்டிட்டு இவரோட ஃப்ரென்ட் மெயின் ரோடு பக்கத்துல இருக்கார்… அவாள்ட்ட ஹெல்ப் கேக்கலாம்னு தொப்பலா நனைஞ்சுண்டே ஓடினேன்.”

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி தண்ணீர் ஊற்றி புளி கரைத்து ஊற்றினாள். ரம்யா எழுந்து பின்னால் தொடர்ந்தாள்.

“கால் ரெண்டும் பின்றது. வழி நெடுக சேத்திலயும் சகதியிலையும் விழுந்து பெரண்டு நெஞ்சை அடைச்சுக்கறது. மதுரகாளீ  காப்பாத்துன்னு படபடன்னு அடிச்சுக்கறது. முடிகொன்டான் ஆத்துல கரைபுரண்ட வெள்ளமா தண்ணீ ஓடறது. பாலத்தைத் தாண்டும்போது வலது பக்கம் கரை ஓரத்துல இருந்த ராட்சச அரசமரத்துக்குக் கீழே எதோ குமிச்சு வச்சா மாதிரி நிழலாத் தெரிஞ்சுது.”

அப்படியே நிறுத்திவிட்டு ரம்யாவைப் பார்த்தாள். ஏற்கெனவே சப்த நாடியும் அடங்கி நின்றிருந்தாள் அவள்.

“பக்கத்துல ஓடிப்போய் பார்த்தேன். கொட்ற மழையில அரசமரத்தைப் பொத்துண்டு தாரதாரையா ஊத்தறது. அதுக்கு கீழே வஜ்ராசன போஸ்ல இவன் உட்காண்டிருக்கான். ஊரே மழையில வெளில வராம தூங்கறது. ஒரு ஈ காக்கா அங்க இல்லே. கண்ணு ரெண்டும் தொறந்து ஓடற தண்ணியப் பார்த்து நிலைகுத்தி இருக்கு. எனக்கு அப்டியே திக்குன்னு ஆயிடுத்து. சரோ. டேய் சரோன்னு அவனை உலுக்கறேன். திரும்பியே பார்க்காம ஆத்தை வெறிச்சுப் பார்த்துண்டு ஸ்திரமா உட்காண்டிருந்தான்.”

“அம்மா… விஷால் என் ஜடையைப் பிடிச்சு இழுக்கறான்…” என்று உள்ளே வந்தாள் சுபா.

“ஏய்… போய் சமர்த்தா சண்ட போட்டுக்காம வெளையாடுங்கோ…” என்று துரத்தினாள். நெற்றியில் வேர்த்திருந்தது.

“…முதுகுல ரெண்டு வெச்சேன். ஊஹும். அப்புறமா படித்தொறை புள்ளையார்ட்டே போய் க்ரில்குள்ளே கையைவிட்டு கை நிறையா விபூதியை எடுத்துண்டு போய் அவன் நெத்தில பூசினேன். மழையில மொகம் பூரா வெள்ளையா வழிஞ்சிது.  எங்கருந்தோ ஒரு அசுரபலம் எனக்கு வந்துது. அவனோட முதுகுபக்கமா போயி அவனோட  கை கஷ்கட்டுல கையை விட்டுத் தூக்கினேன். எழுந்துண்டான். அப்படியே தரதரன்னு நம்மாத்துக்கு இழுத்துண்டு வந்தேன்.”

ரம்யாவின் மாமியாருக்கு இப்போது மழையில் சென்று நனைந்து வந்தது போல இரைத்தது.

“… தலையெல்லாம் துடைச்சு விட்டு பூஜை அலமாரி முன்னாடி உட்காரவெச்சு வெளக்கேத்தி நெத்திக்கு இட்டுவிட்டு நமஸ்காரம் பண்ணுடான்னு சொன்னேன். பண்ணினான். கடிகாரத்துல மணி பன்னெண்டு அடிச்சுது. சூடா காஃபி கலந்து கொடுத்தேன். குடிச்சான். அஞ்சு பத்து நிமிஷமாச்சு. கொஞ்சம் சாதாரணமாயிருந்தான். என்னடா பண்ணித்து கொழந்தேன்னு தலையைக் கோதி கேட்டேன். அப்போ அவன் சொன்னது எனக்கு உள்ளுக்குள்ளே சுரீர்னு இழுத்துது. கேட்டப்போ படபடன்னு வந்துடுத்து.”

“அம்மா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு. முழுசா கேக்கறத்துக்குள்ள மயக்கமே வரும் போல்ருக்கு. ப்ளீஸ். சீக்கிரம் சொல்லிடுங்கோ…” ரம்யா மாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“ம்மா… எனக்கு ஆத்துல இருக்கவே பிடிக்கலை. படிக்க பிடிக்கலை. சாப்ட பிடிக்கலை.”

“ஏன்டா கொழந்தே. அப்பா எதாவது வெசாளா? அம்மா ஏதும் சொல்லலைடா.”

“இல்லம்மா. படிக்காம சாப்டாம தூங்காம எதப் பத்தியும் யோசிக்காம அமைதியா ஒரு இடத்துல அப்டியே உட்கார்ந்துடனும் போல்ருக்கு.  சன்யாசி மாதிரி… ”

“அதுக்கு ஏன்டா அர்த்தராத்ரிலே ஆத்துக்கு போனே?”

“நம்ம ஆத்துக்குள்ள இருக்க வேண்டாம்னு தோணித்து. இன்னும் கொஞ்ச நாழி கழிச்சு முடிகொண்டான்குள்ள இறங்கிடனும்னு இருந்தேன். அப்டியே அது இழுத்த இழுப்புக்கு கூட போயிட்டேன்னா படிக்கவேண்டாம்… சாப்ட வேண்டாம்… தூங்கவேண்டாம்… சிரிக்க வேண்டாம்…  நிம்மதி… பூரண நிம்மதி…”

ரம்யாவுக்கு என்னவோ போல இருந்தது. செத்துப்போயிடுவானோ? உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“ஏன்டா அப்டியெல்லாம் யோசிக்கறேன்னு அதட்டினேன். நிதானமானான். இருந்தாலும் அப்பப்போ பேய் புடிச்சா மாதிரி உத்தரத்தைப் பார்ப்பான். கொஞ்ச நாள்ல எல்லாம் செரியாப் போய்டுத்து. ஐஐடில செலகட் ஆனான். நல்லா படிச்சான். நல்ல உத்யோகம். ரம்பையாட்டம் பொண்டாட்டி. தங்க ரேக்கா ரெண்டு கொழந்தேள். மாறிட்டான்னு நினச்சேன். இப்ப நீ சொல்றது என் அடிவயத்தைப் பிசையறதேடீ.”

இருவரும் எதுவும் பேசவில்லை. ரம்யா வந்ததன் நோக்கம் அறிந்துகொண்டாள் சரோவின் அம்மா. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிவிட்டார்கள்.

“எங்கடி அவன்?” சரோவின் அம்மா கேள்விக்குதான் முழித்துக்கொண்டாள் ரம்யா.

“வந்ததுலேர்ந்து ஆளைக் காணூம்மா.”

“அச்சச்சோ… ஓடுடீ… எங்க இருக்கான்னு தேடு…”

முடிகொண்டான் ஆறு மதிய வெய்யிலில் தண்ணீரில்லாமல் வாழ்விழந்த பாலையாக இருந்தது. ஹோவென்று கிளைவிரித்த அரசமரம் தனியாக நின்றது. இரண்டு கிடா ஆடுகள் முட்டி முட்டிச் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. தூரத்தில் கிழவி ஒருத்தி மாட்டுக்குப் புல் அறுத்துக்கொண்டு போவது தெரிந்தது.

கரையின் இடதுகோடியிலிருந்து வலது கோடிவரை ரம்யாவின் கண் அலசியது. யாருமில்லை. பாலம் தாண்டி மெயின் ரோடு செல்லும் சாலையில் ஏறினாள். இரண்டு பக்கமும் புளிய மரம் காவலாக நிற்கும் தார் ரோடு. செருப்பை மறந்து ஓடிவந்ததால் வெய்யில் சூட்டில் கால் பொறிந்தது.

ஊரின் பெயர்ப்பலகை தாண்டி யாரோ வெறும் கோவணத்துடன் நடந்து போவது தெரிந்தது. தகிக்கும் ரோட்டில் அவரது காலில் செருப்புக்கூட இல்லை. நடையைப் பார்த்தால் சரோ மாதிரிதான் இருந்தது. ரம்யா ஓடிப்போய்ப் பார்க்கலாமா வேண்டாமா என்று நின்றுகொண்டிருந்தாள். தூரத்தில் முடிகொண்டான் ஆற்றின் பாலத்துக்கு அக்கரையில் சுபாவையும் விஷாலையும் இருகையில் பிடித்துக்கொண்டு மாமியார் வேகுவேகென்று வந்துகொண்டிருந்தார்.

மனமென்னும் குரங்கா? ஊஹும். இதை அப்படிச் சொல்லமுடியாது.

சிவன் கோயில் பிரகாரத்தில் நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வாயில் தமிழ் மணக்க வரும் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு வலம் வந்த போது அவர் சொன்ன தேவாரம் ஒன்று ரம்யாவிற்கு இப்போது நினைவுக்கு வந்தது.

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!

ஆசைக்கடலில் தள்ளாடும் மனப்படகை மீட்கும் கயிறு எது? நீளமெத்தனை? என்ன விலை? எவரறிவார்?

சரோ உணர்ந்திருப்பானோ?