Posted on Leave a comment

புல்வாமா தாக்குதல் | கேப்டன் எஸ்.பி. குட்டி


கத்தி கூர்மையானதாக மட்டும் இருந்தால் போதாது. அதைப் பயன்படுத்தத்
தெரிந்திருக்கவேண்டும். துப்பாக்கி சிறந்ததாக இருந்தால் மட்டும் போதாது. அதைக் கையாளத்
தெரிந்திருக்கவேண்டும். ஆயுதங்கள் சிறந்தவையாக மட்டும் இருந்தால் போதாது. அவற்றைப்
பயன்படுத்தும் மனத்துணிவும் வீரமும் வேண்டும். இந்த வீரமும் மனத்துணிவும் வருவதற்கு
அடிப்படைத் தேவையான தேசபக்தியும் கொள்கைப் பிடிப்பும் இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும்
மேலாக வழிநடத்தும் தலைவர்களுக்குக் கூர்மையான ராணுவ அறிவு வேண்டும்.

பாரதப்போரில் அர்ஜுனன் மகாவீரன். ஆனால் போர்த் தந்திரம் அறியாதவன்.
தர்ம புத்திரன் மகா அறிவாளி. ஆனால் தினசரி உலக வாழ்வுக்குத் தகுதியில்லாதவன். எல்லோரிலும்
சிறந்தவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இருந்ததால் மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி
வந்து சேர்ந்தது. அஹிம்சை என்பது ஒரு நாட்டின் உலக வாழ்வுக்குச் செல்லுபடியாகாது. இந்த
உலக வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்ட பிறகு அதர்மத்தை அழித்தே தீரவேண்டும்
என்பது கண்ணனின் வாக்கு.

பிப்ரவரி 14ம் தேதி, புல்வாமாவில் 2547 சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள்
78 பேருந்துகளில் ஜம்முவிலிருந்து புறப்பட்டு ஸ்ரீநகருக்குப் போகும் வழியில் அவந்திப்புரா
என்னுமிடத்தில் வைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பேருந்தில் பயணம் செய்த
40 பேரும் ஒட்டுமொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள்
பாகிஸ்தானின் ஏவலால் இந்தியப் படைவீரர்களை ஒரே இடத்தில் 40 பேரைப் படுகொலை செய்து வெற்றி
கண்டிருக்கிறார்கள்.


தவறு எங்கே நடந்துள்ளது? வீரம் செறிந்த நம் வீர்களின் தவறா?
சரியாகத் திட்டமிடத் தெரியாத நம் தளபதிகளின் தவறா? விவேகமே இல்லாத அரசியல்வாதிகளின்
தவறா?

வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டிலுள்ள
படை வீரன், தளபதிகள், தலைவர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் ஆகிய அனைவரின் சிந்தனையும் ஒரே
குறிக்கோளை நோக்கி முனைப்புடன் செல்வதாக இருக்கவேண்டும்.

“வ்யவஸாயாத்மிகா புத்தி ஏஹேஹ குரு நந்தன
பஹுஷாகா ஹியனந்தாச்ச புத்ததயோ அவ்வியவஸாயினாம்” (கீதை
2-41)
என்பது கீதையின் வாக்கு.

தனி நபராக இருந்தாலும் ஒட்டுமொத்த நாடாக இருந்தாலும் ஒரே
சிந்தனையில்லாமல், சிந்தனை சிதறடையுமானால் வெற்றி பெறமுடியாது.
எதிரிகளைக் கொன்றுவிடு என்கிறது இஸ்லாம். மாற்று மதத்தினரை
மதம் மாற்றிவிடு என்கிறது கிறிஸ்தவம். சுயமாகக் கொள்கை எதுவுமே இல்லாமல் எல்லோருக்கும்
நண்பனாக இரு என்று இந்துமதம் சொல்வதாக இன்றுள்ள விபரமில்லாத சில ஆச்சார்யார்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இது, அன்று பிறந்த ஆட்டுக்குட்டியை ரத்த வெறி பிடித்த ஓநாய், நாய், நரிகளுக்கு மத்தியில்
விட்டுவிடுவது போன்றதுதான்.

ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியா 1947ல் சுதந்திரம்
பெற்றபோது முதல் பிரதமராக வந்தவர் ஜவஹர்லால் நேரு. ‘இந்தியாவை இனிமேல் நீங்கள்தான்
பாதுகாத்துக் கொள்ளவேண்டும்’ என்று சொல்லி அதற்காக ஒரு ராணுவ பாதுகாப்புக் கொள்கையை
வகுத்துக் கொடுத்தான் ஆங்கிலேயன். ஆனால் அந்தக் கொள்கைத் திட்டத்தைப் புறக்கணித்தார்
நேரு. இந்தியாவைப் பாதுகாத்துக்கொள்ள இங்குள்ள போலிஸ்காரர்கள் மட்டுமே போதும், பெரிய
ராணுவமோ அதற்கான ராணுவக் கொள்கைகளோ தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

யத்யத் ஆச்சரதி ச்ரேஷ்ட; தத்தத் ஏவ இதரோ ஜன (கீதை 3-24) என்பது
கீதை வாக்கு. தலைவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்பதே
இதன் பொருள். அன்று இந்தியாவின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஜவஹர்லால் நேரு எடுத்த முடிவு
அவர் வாழ்ந்திருந்த 1964 வரையிலும், அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்த
அத்தனை காலம் வரையிலும் தொடர்ந்தது. இந்தியாவின் இராணுவமும், கடற்படையும் விமானப்படையும்
போலிஸும்கூட தேவையான அளவு பராமரிக்கப்படாமல் பின்னடைவைச் சந்தித்தன.

நேருவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புக்குத் தேவையான படைக்கலன்கள்
வாங்கவேண்டிய வேண்டுகோள் பிரதமர் அலுவலகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமரின் மனதை அறிந்துகொண்ட
உயர் அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோள்களை மூடி மறைத்தனர். இதுபோன்ற உண்மைகளையெல்லாம்
ராணுவ வரலாற்றாய்வாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். நேருவின் பலவீனமான பாதுகாப்புக்
கொள்கையின் பலனை இந்தியா 1962ல் சீன தாக்குதலின்போது அனுபவித்தது.

வல்லபாய் பட்டேல் ஆலோசனையை நேரு புறந்தள்ளியதால் திபெத் என்ற
தனி சுதந்திர நாடு சீனாவின் இரும்புப் பிடிக்குள் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றது.
திபெத் சீனாவிடம் மாட்டிக்கொண்டதால் இந்தியாவின் வட எல்லை முழுவதும் சீனாவின் ஆதிக்கம்
பல மடங்கு பெருகி இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
ராணுவ வட்டாரத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘சண்டை என்று வந்துவிட்டால்
முதல் அடி உன்னுடையதாக இருக்க வேண்டும், அந்த முதல் அடியும் எதிரிக்கு மரண அடியாக இருக்க
வேண்டும்.’ இதையே கண்ணன் மகாபாரதப் போரில் செயல்படுத்திக் காட்டினான்.

சுதந்திர இந்தியாவை ஆண்ட தலைவர்களுக்கு ஆசை இருக்கின்ற அளவுக்கு
அறிவு கிடையாது. 1948ல் காஷ்மீரைக் காக்கும் போர் நடந்துகெண்டிருந்தபோது பாகிஸ்தான்
பிடித்திருந்த காஷ்மீரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை இந்தியா மீட்டுவிட்ட நிலையில்
நேரு பிரச்சினையை ஜ.நா. சபைக்குக் கொண்டு சென்று, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.

‘இன்னும் மூன்று வாரங்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள். அதற்குள்
பாகிஸ்தான் வசம் எஞ்சியிருக்கும் காஷ்மீரப் பகுதியையும் நாம் மீட்டெடுத்துவிடலாம்.
அதன் பிறகு நாம் ஐக்கிய நாட்டுச் சபைக்குப் போக வேண்டிய அவசியமே இருக்காது’ என்று நேருவிடம்
கெஞ்சினார் அன்று தலைசிறந்த தளபதியாக இருந்த ஜெனரல் கரியப்பா. ஆனால் நாட்டின் பாதுகாப்பைவிட
உலக அளவிலான தனது அரசியல் பார்வையே முக்கியம் என்று நினைத்துவிட்ட நேரு, கரியாப்பாவின்
வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவு, இன்றுவரையிலும் காஷ்மீர மாநிலத்தில்
ஆயிரம் ஆயிரமாக உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். கோடிகோடியாகச் செல்வத்தை இழந்து
கொண்டிருக்கிறோம். கணக்கிட முடியாத அளவுக்கு நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டு நிற்கிறது.
உலக நாடுகளின் மத்தியில் இந்தியா ஒரு கோழை என்று பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறது.
சீனா அணுகுண்டு வெடிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே
அணுகுண்டு வெடித்துப் பரிசோதனை செய்யும் தகுதியைப் பெற்றுவிட்டிருந்த இந்தியாவுக்கு
அதற்கான அனுமதியை நேருவின் மகள் இந்திரா கொடுக்க மறுத்ததால், அந்த நேரத்தில் அணுகுண்டு
பரிசோதனை செய்த சீனா உலக அணு வல்லரசு நாடுகளின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
கால தாமதமாக இந்திய விஞ்ஞானிகளுக்கு அந்த அனுமதி கிடைத்ததால் இன்று வரையிலும் அணு வல்லரசு
நாடுகளின் கூட்டணியில் சீனாவைப் போல் இணைய முடியாமல் இந்தியா மிகப்பெரிய இழப்புகளைச்
சந்தித்து வருகிறது.

‘ஸமத்துவம் யோஹ உச்யதே’ என்கிறது கீதை. நாட்டின் பாதுகாப்பு
உள்ளிட்ட எல்லா அம்சத்திலும் இந்தச் சமத்துவத்தைக் கட்டிக்காக்கின்ற கடமை நாட்டின்
தலைவருக்கு மட்டுமே உண்டு. நாட்டுத் தலைமை இந்தச் சமத்துவத்தைக் கைவிடுமானால், நாட்டின்
பாதுகாப்பு படுபாதாளத்துக்குச் சென்றுவிடும்.

காந்தி போதித்த சிந்தனையை ஆளாளுக்கு ஏற்றபடி புரிந்துகொண்டதால்
இந்தியர்கள் கோழைகளாகிப் போனார்கள். இதற்கு சற்குண விக்ருதி என்று பெயர். அதாவது நல்லதை
நினைத்துக்கொண்டு தவறாகச் செயல்படுவது என்று பொருள். அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு
அதர்மத்தை வளர்த்து விட்டுக்கொண்டிருக்கிறோம். விளைவு, இந்தியா இன்று உலகநாடுகள் மத்தியில்
தலைகுனிந்து நிற்கிறது.

நேரு தலைவராக இருந்து காங்கிரஸ்காரர்களுக்குப் போதித்த தவறான
பாடம் அனைத்து காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்தது. சீனாவின் ஆயுத வளர்ச்சியையும் பாகிஸ்தானின்
கூட்டணியையும் சரியாகக் கணித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள், இரு நாடுகளையும்
எதிர்கொள்வதற்குத் தேவையான அளவு நமது விமானப்படையை வலிமைப்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.
இத்தாலிய சோனியாவின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டுவந்த பிரதமர் மன்மோகன் சிங், பிரான்ஸிலிருந்து
ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு பேச்சு வார்த்தையைத் துவங்கினார். இந்திய விமானப் படையின்
அவசர வேண்டுகோள் எதுவும் மன்மோகன் சிங் காதில் விழவேயில்லை. இதற்கிடையில் இந்தியாவின்
எல்லையோரப் பகுதியான டோக்லாமில் சீனா எல்லை தாண்டும் முயற்சியில் இறங்கியது.
சீனா திபெத் முழுவதும் இந்திய எல்லைகளைக் குறிவைத்து, இந்திய
எல்லை வரையிலும் அனைத்து ராணுவத் தளவாடங்களையும் எடுத்துச் செல்லுகின்ற வகையில், நவீன
பலம் வாய்ந்த விமானத் தளங்களைக் கட்டி முடித்துவிட்டது. ஆனால் நேரு வம்சாவழியினரின்
ஆட்சியில் இன்றுகூட நமது ராணுவ வீரர்கள் சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள எல்லைப் பகுதிக்குக்
கோவேறு கழுதைகளில்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

சீனவிமானப் படையின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தகுதியான விமானத்
தளங்கள் எதுவும் கட்டப்படாமல் இருந்த அவலநிலையைப் பார்த்துப் பதறிப்போன பிரதமர் நரேந்திரமோடி
ஆக்ராவிலிருந்து லக்னோ வரையிலுள்ள சிவில் போக்குவரத்திற்கான பெருவழிச் சாலையை போர்
விமானங்கள் ஏறி இறங்குவதற்குத் தகுதியானதாக அமைத்து வைத்திருக்கிறார். இந்த ஒரு உண்மையே,
கடந்த 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்ட படுகேவலமான நிலையில் நமது
நாட்டின் பாதுகாப்பை வைத்திருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

மிகக்குறைந்த அளவு அடிப்படைத் தேவையான 45 ஸ்குவார்டன்களாக
இருந்த நமது போர் விமானங்கள் வேகமாக 30 ஸ்குவார்டன்களாகக் குறைந்துவிட்டது. இருப்பவற்றிலும்கூட
பெருமளவு MIG21 ரகப் போர் விமானங்கள். ஒவ்வொன்றாக விழுந்து உடைந்து கொண்டிருக்கின்ற
நிலையில் இன்னும் உடையாமலிருப்பவற்றை உடனடியாகத் தரையிறக்கி ஓய்வு கொடுக்க வேண்டுமென்று,
விமானப்படை, மன்மோகன் சிங்குக்குக் கொடுத்த மிகமிக அவசரமான வேண்டுகோளின் அடிப்படையில்தான்
ரஃபேல் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ஆட்சி 2008ல் ஆரம்பித்தது.
இவ்வளவு அவசரத்துக்கிடையிலும் ஆபத்துக்கிடையிலும் ஆரம்பிக்கப்பட்ட
விமான பேரத்தை 2014 வரையிலும் ஜவ்வுபோல் இழுத்தடித்து, கடைசியில் எந்த முடிவுக்கும்
வராமலும் ஒரே ஒரு விமானத்தைக்கூட வாங்காமலும் ஆட்சியை விட்டுவிட்டுப் போய்விட்டனர்.

அவசரத்திலும் ஆதங்கத்திலுமிருந்த விமானப்படை அதிகாரிகள் புதிய
பிரதமர் நரேந்திரமோடியை அணுகினர். அவர்களது பதட்டத்தையும் நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்தையும்
புரிந்துகொண்டு அனாவசியமாக காலதாமத்துக்கு காரமாயிருந்த பல பழைய சடங்குகளை ஒதுக்கித்
தள்ளிவிட்டு இன்டெர் கவர்ண்மென்டல் அக்ரிமென்ட் முறையில் (IGA) 36 ரஃபேல் விமானங்களை
மிக அவசரமாக சப்ளை செய்யச் சொல்லி பிரான்ஸ் அரசாங்கத்தோடு ஒப்பந்தம் போட்டார்.

இம்மாதிரியான IGA ஒப்பந்தம் காங்கிரஸ் அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட்
ரஷ்யாவோடு பலமுறை போடப்பட்டுள்ளது. மோடியால் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி புதிய
நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போர் விமானங்கள் 2019க்குள் இந்தியா வந்து சேர்ந்துவிடும்.
விமானப்படையின் தேவையையும் இந்தியா எதிர்நோக்கியிருக்கும்
ஆபத்தையும் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் மோடியின்
மீது புகார் அளிப்பதன் மூலம், இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாதென்று
போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு
எந்த ஆதாரங்களும் இல்லையென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னபிறகும், இத்தாலியின்
வாரிசுகள் பாதுகாப்புக்கு இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாதென்று தடுப்பதிலேயே
குறியாக இருக்கின்றனர்.

காஷ்மீரத்திற்குத் தனிச்சலுகை கொடுக்க வேண்டாம் என்றும்,
இப்படிப்பட்ட சலுகையால் அந்த மாநிலம் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் ஆசையைத்தான்
வளர்த்துவிடும் என்றும் நேருவிடம் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பட்டேல் அவர்களும், பல
காங்கிரஸ் பெருந்தலைவர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய பிறகும் கொஞ்சமும் கேட்டுக்
கொள்ளாத நேரு, தனது நண்பரான ஷேக் அப்துல்லாவுக்குத் தான் தனிப்பட்ட முறையில் கொடுத்துவிட்ட
வாக்குறுதியை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார். இந்தத் தனிச்சலுகை காஷ்மீர மக்களைக்
கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாற்றி இந்தியாவுடன் முழுமையாக இணைத்துவிடுமென்று வாதிட்டார்
நேரு. காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணைவது நடப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் அவர்களை இந்தியாவுக்கு
எதிராகத் தூண்டிவிடுவதில் வெற்றி கண்டிருக்கிறது.

மத்தியில் இந்திராவும், ராஜிவும் ஆண்டுகொண்டிருந்தபோதே இருபது
லட்சம் காஷ்மீரப் பண்டிட்டுகளை இஸ்லாமியர்கள் பாகிஸ்தானின் துணையோடு ஜம்முவுக்கும்
டெல்லிக்கும் துரத்தி அடித்துவிட்டனர். காஷ்மீரில் தீவிரவாதம் படிப்படியாக வளர்ந்து
கொண்டிருந்தபோது மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி காஷ்மீர இஸ்லாமியர்களின் வாக்குகளைக்
குறிவைத்தார்களே தவிர, அங்கு வளர்ந்து வந்த தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டனர்.

1971 வரையிலும் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பகுதியை பாங்களாதேஷ்
என்ற புது நாடாக உருவாக்கிக்கொடுத்தவர் இந்திரா. தனது நாட்டைத் துண்டாக்கிவிட்ட இந்தியாவை
பாகிஸ்தான் பழிவாங்க நினைப்பது இயற்கை. இதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு காஷ்மீரத்தைப்
பாதுகாத்திருக்கவேண்டும்.

ஆனால் எருமை மாட்டின் மீது பெய்கின்ற மழையைப் போல இந்திய
ஆட்சியாளர்கள் நாற்காலிகளைப் பிடிப்பதில் குறியாக இருந்தார்களே தவிர இந்திய ஒருமைப்பாட்டைக்
கட்டிக்காப்பது பற்றிக் கவலைப்படவே இல்லை. பாங்களாதேஷ் விடுதலையின்போது இந்திய ராணுவத்தால்
கைது செய்யப்பட்ட 93,000 பாகிஸ்தான் படையினரை இந்தியா பாதுகாத்து, சோறுபோட்டு, சம்பளமும்
கொடுத்துக் கைதிகளாக வைத்திருந்தது.
இவர்களின் விடுதலைக்காகப் போராடிய பாகிஸ்தானிய மக்களின் நிர்ப்பந்தத்தின்
காரணமாக சிம்லாவில் வைத்து பூட்டோவுக்கும் இந்திராவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் இந்தியா வைக்கும் அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் பணிந்து போகவேண்டிய நிலையில்தான்
பாகிஸ்தான் இருந்தது.

காஷ்மீரப் பகுதிகளிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றிவிடுவார்
இந்திரா என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தோம். இந்திரா அப்படிச் செய்திருந்தால் காஷ்மீரப்
பிரச்சனை அன்றோடு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் கொடுமையிலும் கொடுமையாக, பாகிஸ்தானிய
ஆக்கிரமிப்பிலிருந்த பல ஆயிரம் சதுரகிலோமீட்டர் காஷ்மீரப் பகுதிகளை 1971 போரில் இந்திய
ராணுவம் மீட்டெடுத்திருந்த நிலையில், அவற்றையெல்லாம் இந்திரா பாகிஸ்தானுக்கே திருப்பிக்
கொடுத்தார்.

இப்படிப்பட்ட வகையில்தான் சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகாலமாக
நமது நாடு ஆட்சி செய்யப்பட்டது. மறுபடியும் அப்படிப்பட்ட தேசபக்தியில்லாத, கொள்கை இல்லாத,
வீரமில்லாத அன்னிய சக்திகளின் அடிவருடிகளிடம் ஆட்சி போகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது
அனைத்து தேசபக்தர்களின் கடமை. சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டு ஒப்பாரி வைத்துப் பலனில்லை.
சுய நலத்தைத் துறந்து தியாக உணர்வோடு நாம் செயல்பட்டால் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து
நம்மைக் காத்துக்கொள்ளலாம்.