Posted on 1 Comment

ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒடிஸாவின் தலைநகரான புபனேஸ்வரும்
ஒன்று. பொ மு மூன்றாம் நூற்றாண்டுவரை பின்னோக்கி பாய்கிறது புபனேஸ்வரின் வரலாறு. கால
ஓட்டத்தின் பல சுவடுகள் படிந்து பல சமய மற்றும் கலாசார அடுக்குகள் உருவாகியிருக்கின்றன.
சமணம், பௌத்தம், சாக்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் கோல்லோச்சியதற்கான
தொல் எச்சங்கள் மாநிலமெங்கும் மூலைமுடுக்கெல்லாம் புதைந்து கிடக்கின்றன.

சைவம்

புபனேஸ்வர் பெரிய நகரம். திரும்பிய இடமெல்லாம் கோவில்கள்.
அதில் முக்கியமானவை ராஜா- ராணி கோவில், சித்தேஷ்வர்-முக்தேஷ்வர் இரட்டை ஆலயங்கள் மற்றும்
ஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயம். இவை அனைத்துமே சிவாலயங்கள். புபனேஸ்வர் என்று
ஊர் பெயரே திருபுவனத்தைக் கட்டி ஆளும் சிவபெருமானின் பெயரைத்தான் குறிக்கிறது.
இந்த மூன்று ஆலயங்களுமே பொயு 10-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
அன்றைய கலிங்கத்தை ஆண்ட மன்னர்களால் கலிங்கத்துக் கட்டடக் கலையை ஒட்டி எழுப்பப்பட்டவை.
பூரி ஐகன்நாதர் ஆலயம் உட்பட ஒடிசாவின் பெரிய ஆலயங்கள் யாவும் ரேகா தேவூள் என்ற கட்டடப்
பாணியையொற்றி உயர்ந்த கோபுரம் மற்றும் நுழைவாயில்கள் யாவும் நுட்பமான அலங்காரங்களுடன்
செதுக்கப்பட்டிருக்கின்றன.

ராஜா – ராணி கோவிலில் இன்று விக்கிரகம் ஏதும் இல்லாததால்
பூசை நடப்பதில்லை. மற்ற ஆலயங்கள் இன்றளவும் உபயோகத்தில்உள்ளன.

(சித்தேஸ்வர் முக்தேஸ்வர் ஆலயம்)

ஊரின் பிரதான தெய்வமான லிங்கராஜ் ஆலயத்தில் உறைந்திருக்கும்
சிவன் ஹரிஹரன் என்று அழைக்கப்படுகிறார். கட்டமைக்கப்பட்ட காலத்தில் அது சிவன் (ஹரன்)
கோவிலாக இருந்தாலும் மிகத் தீவிரமாகப் பரவி வந்த ஜகன்நாதர் மரபின் தாக்கத்தால் ஹரியும்
(விஷ்ணு) சேர்க்கப்பட்டது என்பது உள்ளூர் வரலாற்றாசிரியர்களின் கருத்து.

பௌத்தம்

ஒடிசா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கலிங்கத்துப் போர்.
பொ மு மூன்றாம் நூற்றாண்டில், அண்டைய ராஜ்ஜியமான மகதத்தை ஆண்ட அசோக மன்னன் கலிங்கத்தின்
மீது போர் தொடுத்து அந்நாட்டைச் சின்னாபின்னமாக்கி, குருதியாறு ஓடச்செய்ததாக வரலாறு.
போரில் ஒரு லட்சம் பேரைக் கொன்று குவித்ததாகவும் ஒரு லட்சத்து
ஐம்பதாயிரம் பேரை நாடு கடத்தியதாகவும் அசோகன் சூளுரைத்த கல்வெட்டு புபனேஷ்வரிலிருந்து
15 கிலோமீட்டர் தூரத்தில், தவளகிரி அல்லது தவுளி என்றழைக்கப்படும் சிறு குன்றின் அருகில்
உள்ளது. குன்றின் மீது ஏறி நின்று அன்றைய போர்க்களத்தைப் பார்த்தால் வயல்கள், பச்சை
மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும்அமைதிப் பூங்காவாக மிளிர்கிறது.
அசோகர் ஏன் இத்தனை பேரழிவை மேற்கொண்டார் என்பதற்கு சரித்திரப்
பேராசிரியர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அதில் முக்கியமானது கலிங்கம் இந்தியத்
துணைக்கண்டத்தின் வடகிழக்குp பகுதியின் முக்கியமான துறைமுகங்களைத் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தது என்பதுதான்.

மகதத்தை ஆண்ட மௌரியர்களின் கடல் வணிகத்திற்கு கலிங்கம் பெரும்
இடைஞ்சலாக இருந்து வந்திருக்கிறது. அசோகரின் அப்பா பிந்துசாரன் காலத்திலேயே கலிங்கத்தை
மகதப் பேரரசுடன் இணைக்கும் முயற்சி தோல்வியையே தழுவியது. மேலும், மகதப் பேரரசு தெற்கை
நோக்கி விரிவடைவதற்கான திட்டத்திற்கும் கலிங்கம் தடையாக இருந்து வந்ததும் போருக்கான
ஒரு காரணம் என்கிறார்கள். இதைத்தவிர கலிங்கத்து மக்கள் சமண சமயத்தைச் சார்ந்து இருந்ததும்
போருக்கு ஒரு காரணமாக இருந்திருக்ககூடுமோ என்ற ஐயமும் எழுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும்,
இந்தப் போர் இந்திய துணைக் கண்டம் மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பௌத்தம் பரவுவதற்கு
மிகப் பெரிய காரணமாக இருந்தது என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.
இன்று தவளகிரி குன்றின் மீது ஒடிசா அரசாங்கம் ஜப்பானியர்களுடன்
இணைந்து சாந்தி ஸ்தூபி ஒன்றை எழுப்பியிருக்கிறது. அந்த ஸ்தூபியின் மீது புத்தரின் வாழ்க்கையில்
நடந்த முக்கியமான சம்பவங்கள் மற்றும் அசோகர் கலிங்கத்துப் போருக்குப் பின் மனமாற்றம்
அடைந்ததையும் சித்தரித்திருக்கிறார்கள்.

தவளகிரியிலிருந்து இறங்கி வரும் வழியில் இந்தியாவின் மிகப்
பழமையான சிற்பங்களில் ஒன்று காணக் கிடைக்கிறது. அது அசோகர் காலத்தில் செதுக்கப்பட்ட
ஒரு யானை. இதுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் செதுக்கப்பட்ட யானை சிற்பங்களிலேயே இவ்வளவு
செம்மையாக இதுவரை வேறு எங்கும் செய்யப்படவில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
சொல்வது போல் யானை பார்ப்பதற்கு கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஆனால் முழுமையான யானை
செதுக்கப்படவில்லை. ஒரு பாறையில் இருந்து அது வெளிப்படுவதுபோல், யானையின் முன் பகுதியைச்
செதுக்கியிருக்கிறார்கள். இந்தச் சிலைக்கு புத்த மதத்தில் ஒரு சிறப்பு உண்டு. புத்தரின்
தாய் மாயா தேவியின் கர்ப்பத்தை ஒரு வெள்ளை யானை ஊடுருவியதாகவும் அதன் பின்தான் அவர்
புத்தரை கருத்தரித்தார் என்று சொல்லப்படுகிறது. தவளகிரியின் பாறையில் வடிக்கப்பட்ட
யானை மாயாதேவியின் கர்ப்பத்திலிருந்து வெளிவருவது போல் செதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட
2,300 ஆண்டுகள் பழைய சிற்பம் இத்தனை காலம் மழை வெயில் குளிர் தாண்டி இயற்கையால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது
என்றால் அது ஒரு பெரிய ஆச்சரியம்தான்.
அசோகர் காலத்தில் புத்தருக்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு
இருக்கவில்லை. அவரை வெறும் சின்னங்களைக் கொண்டே சித்தரித்தனர். ஆகையால் இங்கு புத்தரின்
வடிவத்திற்கு பதில் புத்தரின் பிறப்பைக் குறிக்கும் யானை செதுக்கப்பட்டுள்ளது.

யானை அரசு அதிகாரத்தின் சின்னமும் ஆகும். அசோகரின் அரசு பிரகடனங்கள்
அருகிலேயே ஒரு பாறையில் பிராகிருத மொழியில், பிராமி எழுத்துக்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டில் பௌத்த தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி மக்கள் தர்மத்தின் வழியில் எவ்வாறு
செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்திய, பௌத்த வரலாற்றில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அவசியம்
பார்க்க வேண்டிய இடம்.

முன்னே சொன்னது போல அசோகர் காலத்தில் புத்தருக்கு வடிவம்
கொடுக்கப்பட்டிருக்கவில்லை. குசானர் என்றழைக்கப்படும் மத்திய ஆசியாவிலிருந்து வந்து
இந்தியாவை ஆண்ட வம்சத்தினர் காலத்தில்தான் (பொ மு ஒன்றாம் நூற்றாண்டு) புத்தர் உருவக
சிலை வடிக்கும் மரபு உண்டானது.

(புத்தர் சிலை – ரத்னகிரி)

புபனேஷ்வரிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரத்னகிரி,
லலிதகிரி மற்றும் உதயகிரி என்ற மூன்று முக்கியமான பௌத்த தலங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில்
புத்தரின்பல உருவச் சிலைகள் கிடைத்துள்ளன. இந்த இடங்கள் பொ மு மூன்றாம் நூற்றாண்டு
தொடங்கி பொ பி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பௌத்தத் தலங்களாகக் கோலோச்சியிருந்தன என்பதை
நிரூபிக்கும் விதமாக அகழ்வாராய்ச்சியில் பல பௌத்த விஹாரங்களும், ஸ்தூபிகளும், பௌத்த
கோயில்களும் கிடைத்திருக்கின்றன.
இதில் முக்கியமாக ரத்னகிரியில், வஜ்ரயானம் என்ற தாந்திரிக பௌத்தம் பின்பற்றப்ப்பட்டதற்கான
ஆவணங்கள் கிடைத்துள்ளன. தாந்திரிக மரபு நம் கலாசாரத்தில் முதல் முதலாக ஒடிசாவில், வஜ்ரயானம்
மூலமாகதான் நுழைந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இங்கு கிடைத்திருக்கும் புத்தர் சிலைகளை மற்றும் வடிவங்களை
வைத்துப்பார்த்தால் ரத்னகிரி நளாந்தாவுக்கு இணையான பௌத்தத் தலமாக இருந்திருக்ககூடிய
சாத்தியகூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால், காலப்போக்கில் மக்களிடையே பௌத்த சமயத்திற்கான ஆதரவு
குறைய ஒடிசா உட்பட இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் பொ பி 13ம் நூற்றாண்டோடு பௌத்தம்
விடைபெற்றுக் கொண்டது.

சமணம்

ஒடிசாவில் பௌத்தம் தழைத்திருந்த காலகட்டத்தில், மக்களிடையே
சமண மதத்திற்கும் பேராதரவு இருந்தாகத் தெரிகிறது. புபனேஷ்வரில் உள்ள சமண மதத்தைச் சார்ந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் உதயகிரி-கண்டகிரி என்ற இரட்டைக் குன்றுகளில் குடையப்பட்ட
குகையறைகள்.
அசோகர் காலத்திற்கு பின் பொ மு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை
ஆண்ட காரவேலர் என்னும் மன்னர் காலத்தில் சமணத்துறவிகள் தங்குவதற்காகக் குடையப்பட்ட
குகையறைகள் இவை. காரவேளா சமண மதத்தைத் தழுவி இருந்தவன்.
தவளகிரியில் அசோகரின் பௌத்த தர்ம கல்வெட்டுக்கு சவால் விடுவது
போல் நேர் எதிர் கோணத்தில் 6 மைலுக்கு அப்பால் உதயகிரியில் இந்தியாவில் செதுக்கப்பட்ட
முதல் சமணக் கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு யானைக் குகை (ஒடியாவில் ஹாதி கும்ஃபா)
என்று பெயரிடப்பட்டுள்ள குகையறையின் கூரைப் பகுதியில் காணக்கிடைக்கிறது.
யானைக் குகைக் கல்வெட்டு காரவேளாவின் சமகாலச் சரித்திர நிகழ்வுகளின்
மிகப்பெரிய ஆவணம். இந்தக் கல்வெட்டு, சமண சமயத்தின் முதலாம் தீர்த்தங்கரான ஆதிநாத்தின்
(தீர்த்தங்கரர்கள் சமண மதத்தின் குரு பரம்பரையைச் சார்ந்தவர்கள்) சிலையைக் கடத்திச்சென்ற
நந்தா வம்சத்து மன்னர்களின் பிடியிலிருந்து காரவேளா மன்னன் எவ்வாறு மீட்டெடுத்தான்
என்பதைக் கூறுகின்றன.
இந்தக் கல்வெட்டில்தான் முதன்முறையாக விந்திய மலைக்கு வடக்கே
உள்ள பகுதியைக் குறிக்க ‘பாரதவர்ஷம்’ என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள்
கூறுகின்றனர். இதில் பழங்காலத் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும்
இருப்பதாகச் சொல்கிறார்கள்.
உதயகிரியில் சமணத்தீர்த்தங்கரர்களின் வடிவங்கள் ஏதும் காணக்
கிடைக்கவில்லை. ஆனால் அருகில் இருக்கும் கண்டகிரியின் குகையறையில் சமணத்தின் முதல்
9 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. சற்றுத் தள்ளி வேறொரு குகையறையில்
சமணர்கள் வழிபடும் எல்லா (24) தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருப்பதைக்
காணமுடிகிறது.
மும்பைப் பல்கலைக்கழகத்தில் சமண இறையியல் (jainology) பிரிவின்
வருகைப் பேராசிரியராகவும் பாட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரியும் ஷில்பா சேடா, “ தீர்த்தங்கரர்
வழிபாட்டு வரலாற்றைப் பொருத்தவரை உதயகிரி குகைகள் மிக முக்கியமானவை. தீர்த்தங்கரர்களின்
வழிபாடு சிறிது சிறிதாக வளர்ந்து வடிவம் பெற்றதைக் காண முடிகிறது” என்கிறார்.
தாய்த்தெய்வ வழிபாடு மேலோங்கி இருந்த சமூகத்தின் தாக்கம்
சமணத்தின் மீதும் உண்டானதற்கான முக்கிய ஆவணம் இங்குக் கிடைக்கிறது. அது யக்ஷினிகள்
எனப்படும் சமணப் பெண் காவல் தெய்வங்களின் சிற்பங்கள்.
கண்டகிரியில் தீர்த்தங்கரர்களின் வடிவங்களுக்கு அருகிலேயே
அம்பிகை என்னும் யக்ஷினியின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. யக்ஷினிகள் தீர்த்தங்கரர்களின்
காவல் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். சிற்பங்களின் உருவளவை வைத்துப் பார்த்தால் தீர்த்தங்கரர்களுக்கு
சரிசமமாக வடிக்கப்பட்டிருக்கிற அம்பிகையின் உருவம் அவள் சமணத்தில் தீர்த்தங்கரர்களுக்கு
இணையான அந்தஸ்தைப் பெற்றிருந்தது தெரிகிறது.
சமண யக்ஷினியியானஅம்பிகை காலம் செல்ல செல்ல இந்து மதத்தில்
தன்மயமாக்கப்பட்டு இன்று அம்பாளின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறாள்.
யக்ஷினிகள், இந்தியத் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபின் தாக்கத்தினால்
சமணத்தில் உருவம் பெற்று, பின்னாளில் இந்து வழிபாட்டு மரபில் இணைந்துவிட்டன. இன்று,
கண்டகிரியில் பழைய தீர்த்தங்கரர் உருவங்களைக் கொண்ட சமணக் கோயிலும் மற்றும் அம்பிகை
அம்மனின் இந்துக் கோவிலும் ஒருசேர இருப்பதைக் காணலாம்.

தாந்திரம்

அம்பிகையைப் பற்றி பேசும்போது தாந்திரத்தைப் பற்றிப் பேசாமல்
இருக்கமுடியாது. பௌத்தமும் சமணமும் ஒடிசாவில் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் தாந்திரம்
ஒடிசாவை ஆட்கொண்டது.

தாந்திரத்தின் மூலம் அதர்வ வேதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தாந்திரம் என்பது அடிப்படையில் நம் உடல் என்னும் நுண் அண்டத்தைக் (microcosm) கொண்டு
பிரம்மம் என்னும் பேரண்டத்தை (macrocosm) அறியப் பயன்படும் ஒரு மறையறிவு. யோகமும் தாந்திரத்தில்
அடக்கம்.
வஜ்ரயானம் அல்லது தாந்திர பௌத்தம் வழியாகத்தான் தாந்திரம்
முதல்முதலில் ஒடிசாவில் அறிமுகமானதாகச் சொல்கிறார்கள். பௌத்த தாந்திரத்தில் யோகம்,
மண்டலங்கள் எனப்படும் யந்திரங்கள் மற்றும் சிறப்பு மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சமணம் அம்பிகை என்னும் பெண் யக்ஷனியை உருவாக்கியதுபோல் பௌத்தம்
தாரா மற்றும் மகா மயூரி போன்ற பெண் காவல் தெய்வங்களை உருவாக்கியது. ரத்னகிரியில் இந்தப்
பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் பல கிடைத்துள்ளன.

இந்திய சமய மரபில் சைவமும், சாக்தமும் (சக்தி உபாசனை), தாந்திரமும்
ஒருங்கிணைந்தே பயணித்துள்ளன.

ஒரு காலகட்டத்தில் தாந்திரம் ஒடிசாவை ஆட்கொண்டதற்கான அத்தாட்சியை
புவனேஸ்வரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹீரப்பூர் சௌஷட் யோகினி வழிபாட்டுத்தலத்தில்
காணலாம். சௌஷட் என்றால் வடமொழியில் 64 எண்ணிக்கையைக் குறிக்கும். இங்கு 64 தேவதைகளின்
வழிபாடு நடத்தப்படுகிறது. அறுபத்து நான்கு திசைகளுக்கான தேவதைகள் இவர்கள். இந்த அறுபத்து
நான்கு தேவதைகளில் பல கிராமியத் தேவதைகளும் அடக்கம். யோகினிகளுக்கான வழிபாட்டுத்தலங்கள்
பொதுவாகக் கூரையற்று வட்ட வடிவமாக இருப்பதைக் காணலாம். இந்தியாவில், ஒடிசாவிலும் மற்றும்
மத்திய பிரதேஷ் மாநிலங்களில் மட்டும்தான் யோகினிகளை வழிபடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு
தலத்திலும் யோகினிகளின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

(ஹீரப்பூர் ஆலய யோகினிகள்)

ஹீரப்பூர் யோகினிகளில் தாரா, சாமுண்டி, வராஹி, நரசிம்ஹி,
அம்பிகா, பத்ரகாளி, கௌமாரி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியவர்கள் அடங்குவர். அறுபத்தினாலு
தேவதைகளில் முக்கியமாகக் கருதப்படுபவள் மகாமாயா தேவி. பத்து கைகள் கொண்ட மகாமாயா தேவியை
தலைமைத் தேவதையாக வணங்குகிறார்கள் ஊர்மக்கள். ஒவ்வொரு யோகினியின் சிற்பத்தின் கீழேயும்
அவளுடைய வாகனத்தையும் செதுக்கியிருக்கிறார்கள்.
ஆகமக் கோயில்களிலிருந்து ஹீரப்பூர் மாறுபட்டிருந்தாலும் இங்கே
இருக்கும் சிற்பங்கள் செவ்வியல் வடிவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு யோகினியின்
சிகை அலங்காரமும் அவள் பூண்டிருக்கும் நகைகளும் வித்தியாசமானவை. இறை வழிபாட்டுத் தலங்களில்
நமக்குக் கிடைக்கும் பொதுவான அனுபவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவம் இங்கு
கிடைக்கிறது. இறைவியல் ஆய்வாளர்கள் தவிர்க்க முடியாத ஒரு தலம் ஹீரப்பூர் யோகினி வழிபாட்டுத்தலம்.

வைணவம்

பௌத்தம், சமணம், சைவம், தந்திரம் ஆகிய எல்லா சமய மரபுகளும்
உச்ச நிலையை அடைந்து ஒருங்கிணையும் புள்ளிதான் ஜகன்நாதர் மரபு.

(நவகுஞ்சரம்)



பூரியில் உறைந்திருக்கும் ஜகன்நாதர், எல்லாருக்குமான தெய்வம்.
ஜெகன்நாதர் மரபின் சடங்குகளிலும் சரி அந்த மரபைச் சுற்றி அமைந்த கதைகளும் சரி ஒடிசாவைத்
தாக்கிய பலதரப்பட்ட சமயங்களின் தாக்கமும் மற்றும் மாநிலம் முழுவதும் மேலோங்கியிருக்கும்
பழங்குடியினரின் கலாசாரக் கலப்பும் அப்பட்டமாகத் தெரிகின்றன.

நம்முடைய அய்யப்பனுக்கு வாவர் மற்றும் ரங்கநாதனுக்கு ஒரு
துலுக்கநாச்சியார் இருந்ததைப் போல ஜகன்நாதருக்கு பொ பி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாலாபேக்
என்ற இஸ்லாமிய பக்தர் இருந்ததாகs சொல்லப்படுகிறது. பொ பி 19ம் நூற்றாண்டில் பஞ்சாப்பை
ஆண்ட சீக்கிய மன்னனான ரஞ்சித் சிங் தனது இறுதி நாட்களில் தன்னிடமிருந்த கோகினூர் வைரத்தை
பூரி ஜகன்நாதருக்கு எழுதி வைத்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

இன்றும் ஜகந்நாதரின் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால்
ஈர்க்கப்பட்டு வெவ்வேறு சமயங்களிலிருந்து பக்தர்கள் பூரி ஜகந்நாத் யாத்திரையின்போது
ஒன்று திரள்கிறார்கள்.

ஜகந்நாதர் மரபு பற்றி காலம்சென்ற வங்காள வரலாற்றாசிரியர்
ஜாதுநாத் சர்கார், ‘ஒடிசாவின் பல்வேறு சமயங்கள் காலப்போக்கில் ஒன்றுகூடி ஜகந்நாதர்
மரபில் இணைந்துள்ளன’ என்கிறார்.

ஒடிசாவின் பல அடுக்குக் கலாசாரத்தை ரத்தினச் சுருக்கமாக உணர்த்தும்
ஒரு சிறிய கதை இங்கே. இந்தக் கதை சரளா மகாபாரதம் என்று அறியப்படும் ஒடியா மஹாபாரதத்தில்
வருகிறது.

கதைப்படி ஒருமுறை அர்ஜுனன் மலையின் மீது தவம் செய்து கொண்டிருந்தான்.
அப்போது அவன் முன்னால் ஒரு வினோதமான மிருகம் வந்து நின்றது. அதன் உடல் உறுப்புகள் வெவ்வேறு
மிருகங்களுடையதாக இருந்தன. அந்த மிருகம் சேவலுடைய தலையும், மயிலுடைய கழுத்தும், எருதின்
திமிலும், சிங்கத்தினுடைய வாலும் கொண்டிருந்தது. அதனுடைய மூன்று கால்களில் ஒன்று யானையுடைய
காலாகவும், ஒன்று புலியின் காலாகவும் , மற்றொன்று குதிரையுடைய காலாகவும் இருந்தது.
மிருகத்தின் நான்காவது கால் மனிதனுடையது. மேல்நோக்கி எழும்பியிருந்த ஒரு கை ஒரு நீல
வண்ண சக்கரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. இந்த ஆச்சரியப்படவைக்கும் மிருகத்தைக் கண்டவுடன்
அர்ஜுனன் முதலில் மிரண்டு போனான். அதைக்கொல்ல அம்பு எய்தினான். ஆனால் அடுத்த நொடியே
அவனுக்கு அந்த மிருகம் யார் எனப் புரிந்தது. அந்த மிருகம் வேறு யாருமல்ல, அண்ட பிரம்மாண்டத்தை
ஆளும் நாராயணன் என்பதை அறிந்துகொண்டான். எல்லா உயிரினங்களிலும் வீற்றிருப்பது ஒரே இறைப்பொருள்தான்
என்ற உண்மையைத் தனக்கு உணர்த்தவே நாராயணன் இந்த வினோதமான மிருகத்தின் உருவத்தில் தன்
முன் தோன்றியதை உணர்ந்தான். உடனே வில்லையும், அம்பையும் கீழே இறக்கினான். அந்த மிருகத்தின்
காலில் சென்று விழுந்தான்.
அந்த மிருகத்தின் பெயர் நவகுஞ்சரம். நவகுஞ்சரத்தின் உருவம்
பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கையில் இருக்கும் நீலச்
சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

(பூரி கோவிலில் நவகுஞ்சரம்)

நவகுஞ்சரத்தைப் பற்றிப் பேசுகையில், மும்பைப் பல்கலைக்கழகத்தில்
‘கம்பாரடிவ் மிதாலஜி (comparative mythology) போதிக்கும் பேராசிரியர் உத்கர்ஷ் படேல்,
“நவகுஞ்சரத்தின் உருவமும் சரி, தத்துவக் குறியீடும் சரி, ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை,
தனிதன்மை வாய்ந்தவை. இதற்கு ஒப்பாக உலகக் கதைகளில் வேறேதும் இருப்பதுபோல் தெரியவில்லை”
என்கிறார்.
நவகுஞ்சரத்தைப் போலவே ஒடிசாவின் கலாசாரத்தன்மையும் பல பரிமாணங்கள்
கொண்ட கலவைதான். ஆனால் அந்தக் கலவையின் அடித்தளத்தில் இருப்பது பரந்து விரிந்த பிரமாண்டத்தில்
மனிதனின் இருத்தலுக்கான காரணத்தேடல்தான் என்பதில் ஐயமில்லை.

Posted on 1 Comment

யார் குரு? | சுமதி ஸ்ரீதர்


வெள்ளையர்களிடமிருந்து விடுதலை கிடைத்த இந்த 71 ஆண்டுகளில்தான் நம் நாட்டில் செப்டம்பர் மாதம் 5ம் தேதியை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் வழக்கம் உருவாகியிருக்கிறது. ஆனால், ஆசிரியர் தினம் கொண்டாடும் வழக்கம் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்தே நம் கலாசாரத்தில் குருவின் மகத்துவத்தைக் கொண்டாடும் மரபு இருந்து வந்திருக்கிறது. ஆனி மாதம் பெளர்ணமியன்று கொண்டாடப்படும் குரு பூர்ணிமா நம் ஆச்சார்யர்களைக் கெளரவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்நாளை பெளத்தர்கள், கௌதம புத்தர் தான் பெற்ற ஞானத்தை மானிட இனத்திற்குக் கொண்டு சேர்க்க சாரநாத்தில் கொடுத்த முதல் பிரசங்கத்தைக் குறிப்பதாக நம்புகின்றனர். இந்துக்கள் இந்த நாளில் ஆதியோகியான சிவனையும், வியாச மாமுனிவரையும் நினைவு கூர்கின்றனர்.

சரி, குருவும் ஆசிரியரும் ஒன்றுதானே, பிறகு நாம் ஆசிரியர் தினம், குரு பூர்ணிமா இரண்டையும் ஏன் தனித்தனியாக கொண்டாட வேண்டும்? காரணம் இல்லாமலில்லை. ஆசிரியரும் குருவும் ஒன்றல்ல. இருவருக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆசிரியர் என்பவர் லெளகீக விஷயங்களில் நம்மைத் தேர்ச்சி பெறச் செய்பவர். ஆனால் குருவோ இந்த லெளகீகத்தைத் தாண்டி நம்மை மெய்ஞானத்தை நோக்கி கூட்டிச் செல்பவர்.

இந்திய கலாசாரத்தில் ஆசிரியரைவிட குருவின் நிலை மிக உயர்ந்தது, சொல்லப்போனால் கடவுளுக்கும் மேலே.

ஒருமுறை கவியும் ஞானியுமான கபீரிடம், “உங்கள் முன்னால் நீங்கள் பூஜிக்கும் கடவுளும் உங்களுடைய குருவும் ஒரே நேரத்தில் தோன்றினால் நீங்கள் முதலில் யார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அவர், “நான் முதலில் என் குருவின் பாதங்களைத்தான் தொழுவேன், ஏனென்றால் அவர்தானே எனக்கு என் கடவுளையே அடையாளம் காட்டியவர்” என்றார்.

கபீர் மட்டும்தான் தன் குருவைத் தன் கடவுளுக்கு மேல் வைத்தாரா என்றால் இல்லை. நம் கடவுள்களே கூட மனித அவதாரம் எடுத்தபோது குருகுலவாசம் ஏற்றுத் தங்கள் குருமார்களிடம் ஞானம் பெற்றிருக்கிறார்கள்.

அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் யோகவாசிஷ்டம் என்னும் நூல் ராமர் தன் குரு வசிஷ்டரிடம் கேட்டு அறிந்துகொள்வதுபோல் படைக்கப்பட்டுள்ளது.

சாந்தீபநி என்னும் ஒரு மிகச்சிறந்த குரு கிடைக்காவிட்டால் வெண்ணெய் திருடிய கண்ணன் ஒரு கீதாச்சாரியனாக உருவாகி இருப்பானா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

சம்ஸ்க்ருத மொழியில் ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரூ’ என்றால் விலக்குவது என்றும் பொருள். குரு என்பவர் அறியாமை என்னும் இருளைப் போக்கித் தம் சீடனைக் கடவுளுக்கு அருகே கொண்டு சேர்ப்பவர் ஆகிறார். ஞானத்துக்கும் மோட்சத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நம் சமுதாயத்தில் குருவின் பங்களிப்பு மிக அதிகம். நாம் கூறும் கதைகளிலும் அது பிரதிபலிக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு உன்னதமான குருவின் கதை திருமழிசை ஆழ்வாரின் கதை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சிறிய ஊரான திருமழிசை பாடல் பெற்ற ஸ்தலமாகும். அங்கு உறைந்திருக்கும் ஜகன்னாதப் பெருமாள் பாம்பணையில் காட்சியளிக்கிறார். பெருமாள்பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர் திருமழிசை ஆழ்வார். ஆழ்வாருக்கு கனிகண்ணன் என்னும் ஒரு சீடன் இருந்தான். அவன் தன் குருவைப் போலவே மிகுந்த ஞானம் உடையவன். இப்படிப்பட்ட தேஜஸ் கொண்ட சீடன் கிடைத்ததில் ஆழ்வாருக்கு மிகுந்த பெருமை. அவனிடம் அபரிமிதமான அன்பு கொண்டிருந்தார் அவர். ஒருநாள் கனிகண்ணன் கோவிலை வலம் வரும்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த ஒரு கூனிக் கிழவியைக் கண்டான். தன் சோர்ந்த உயிரையும், தளர்ந்த உடலையும் பொருட்படுத்தாது முழு மனதுடன் பகவத் சேவையில் ஈடுபட்டிருந்த அந்தக் கிழவியைக் கண்டு அவன் மனம் நெகிழ்ந்தான். அவளது கூனை நிமிர்த்தி அவளை மறுபடி ஒரு அழகான யுவதியாக மாற்றினான். தனக்கு மறுவாழ்வு அளித்த கனிகண்ணனுக்கு நன்றி சொன்ன அந்த யுவதி தனக்கு கிடைத்த புது வாழ்வை கோவில் நற்பணிகளிலேயே தொடர்ந்து கழிக்க முடிவு செய்தாள்.

இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட வயது முதிர்ந்த காஞ்சி மன்னன், கனிகண்ணனை அணுகி, தனக்கும் தன் இளமையை மீட்டுத் தரக் கோரினான். மன்னனுக்குத் தான் வாழ்ந்த சுகபோக வாழ்க்கையை மறுபடி வாழ ஆசை. இதையறிந்த கனிகண்ணன் பேராசை பிடித்த அந்த மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்தான். கோபமுற்ற மன்னன் கனிகண்ணனை நாடு கத்தினான். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆழ்வார் தன்னால் தன் அன்பான சீடனின்றி வாழ இயலாது என்பதை உணர்ந்து தானும் திருமழிசையை விட்டுச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அவர் செல்லும்போது தான்மட்டும் செல்லவில்லை. தான் தினந்தோறும் வணங்கும் பெருமாளையும் தன்னுடன் வரச் சொல்லிக் கட்டளையிட்டார். அவர் பெருமாளிடம், “உமது பக்தனான நானே இந்த ஊரை விட்டுச் செல்லும்போது உமக்கு இங்கென்னய்யா வேலை? நீரும் தங்களுடைய பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு என்னுடன் கிளம்பி வாருமய்யா” என்றார்.

பக்தன் கட்டளையிட்டபடி உடனே தன் நாகப்பாயான ஆதிசேஷனைச் சுருட்டிக்கொண்டு திருமழிசையை விட்டு அவரும் கிளம்பி விட்டார். ஆக கனிகண்ணனைப் பின்தொடர்ந்து ஆழ்வாரும், ஆழ்வாரைப் பின்தொடர்ந்து பெருமாளும் மூவருமாகச் சேர்ந்து காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஊரின் எல்லையைச் சென்றடைவதற்குள் இருட்டி விட்டது. அதனால் இரவுப் பொழுதை அங்கேயே கழித்துவிட்டு காலையில் மறுபடி தங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்தனர். பெருமாள் இல்லாத காஞ்சி முன்னைப்போல் செல்வச்செழிப்புடன் இருந்திட முடியுமா என்ன? திருமழிசையை விட்டு பெருமாள் செல்லும்போது தன் மார்பில் குடியிருக்கும் ஸ்ரீதேவியையும் அல்லவா கூட்டிச் சென்று விட்டார். ஸ்ரீதேவி விட்டுச் சென்ற காலி இடத்தில் மூதேவி வந்து குடி புகுந்தாள். நாடே இருளில் மூழ்கியது. தரித்திரமும் அமங்கலமும் வந்து சேர அந்நாட்டுச் செல்வந்தர்களெல்லாம் தங்கள் செல்வங்களை இழந்தனர். இந்த விபரீத நிகழ்வுகளைக் கண்ட காஞ்சி மன்னன் மிரண்டு போனான். உடனே நாட்டு எல்லைக்கு விரைந்தான். நேரே சென்று அங்கு தங்கியிருந்த பெருமாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரிடம் மறுபடி திருமழிசை திரும்பும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் பெருமாளோ தன் பக்தன் ஆழ்வாரை விட்டு தன்னால் வர முடியாது என்று கை விரித்து விட்டார். வேறுவழியில்லாமல் மன்னன் அடுத்து ஆழ்வாரின் காலைப் பிடித்தான். ஆனால் அவரோ தன்னுடைய சீடன் கணிகண்ணன் இல்லாமல் தான் திருமழிசை ஒருபோதும் திரும்ப முடியாதென்று உறுதியாகக் கூறிவிட்டார். இதைக் கேட்டு நொந்து போன மன்னன் வேறு வழி தெரியாமல் கனிகண்ணனிடம் சென்று தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டான். மறுபடி அவனை திருமழிசை திரும்புமாறு வேண்டிக்கொண்டான். உடனே கனிகண்ணன் மனமிறங்கி ஊர் திரும்ப ஒப்புக்கொண்டார். சீடனுடனேயே ஆழ்வாரும் திருமழிசை திரும்பிவிட முடிவெடுத்தார். உடனே பெருமாளிடம் சென்று “நான் ஊர் திரும்பி விட்டால் நீர் மட்டும் இங்கிருந்து என்ன செய்வீர்? உம் பாயை சுருட்டிக்கொண்டு நீரும் மறுபடி என்னுடன் ஊர் திரும்பும்” என்றார். பெருமாளும் ஆழ்வார் ஆணையிட்டபடியே திருமழிசை திரும்ப முடிவு செய்தார். ஒருவழியாக சீடன் குரு மற்றும் பகவான் மூவரும் தங்களுடைய இருப்பிடத்திற்கே மீண்டும் திரும்பினர்.

தன் சீடனுக்காக ஒரு குரு கடவுளையே தனக்குக் கீழ்ப்படியச் செய்தது ஆச்சரியம் என்றால் தன்னுடைய சீடர்களுக்காகத் தன்னையே துன்புறுத்திக் கொண்ட குருமார்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றான மணிமேகலையை இயற்றியதாகக் கூறப்படும் சீத்தலைச் சாத்தனார். தன் சீடர்கள் சரியாகப் படிக்காவிட்டால் எழுத்தாணியால் தன் தலையை தானே குத்திக் கொண்டார் என்றும், அதனால் அவர் தலை எப்பொழுதும் சீழும் ரத்தமும் ஒழுகிக் காணப்பட்டதாகவும் கூறுப்படுவதுண்டு. இதனாலேயே அவருக்கு சீத்தலைச் சாத்தனார் என்ற பெயர் வந்ததாகக் கதையுண்டு.

மேலே கூறிய இரு கதைகளிலும் குருமார்கள் தங்களது சீடர்களைவிட வயது முதிர்ந்தவர்கள். ஆனால் ஞானமென்பது வயதையொட்டியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இளைய குருவுக்கானச் சாலச் சிறந்த உதாரணம் தட்சிணாமூர்த்தி. சிவனின் அவதாரமாகக் கருதப்படும் அவர் ஒரு மௌன குரு. ஆலமரத்தின் கீழ் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் பேசுவதில்லை. ஆனாலும் சீடர்கள் அவரிடம் கேட்க இருந்த சந்தேகங்கள் எல்லாம் மாயமாக மறைந்து விடுகின்றன. தான் இயற்றிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுவது போல் ஞானத்தை போதிக்கும் குருவோ இளையவர், ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரும் தாடி நரைத்த முனிவர்கள்! ஆனால் இப்படிப்பட்ட ஞானகுருவான சிவனே ஒரு கட்டத்தில் சுவாமி மலையில் தன் மகன் முன் அடக்கத்துடன் அமர்ந்து ஓம்காரத்தின் பொருளை அறிந்துகொள்ள வேண்டி வந்தது.

ஞானபண்டிதனாக அறியப்படும் முருகனைப் பற்றிய இன்னொரு கதையுமுண்டு. கச்சியப்பர் கந்தபுராணம் இயற்றியதாகக் கருதப்படும் காஞ்சியின் குமரகோட்டத்தில் காட்சி தரும் முருகனின் பெயர் பிரம்மசாஸ்தா. படைக்கும் கடவுளான பிரம்மா பிரணவ மந்திரத்திற்குத் தவறாக அர்த்தம் சொன்னதால் முருகன் கையால் தலையில் குட்டுப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். பிரம்மாவிடமிருந்து சிருஷ்டிக்கும் பொறுப்பைத் தற்காலிகமாக கந்தசாமி ஏற்றுக்கொண்டதாகக் கதை. அதனால் அவர் பிரம்ம சாஸ்தா என்று அறியப்படுகிறார், அதாவது பிரம்மாவுக்கே ஆசான் ஆகியவர்.

இதே போல் பிஞ்சில் பழுத்த பழமாக உபநிடதங்களிலும் மகா புராணங்களிலும் பவனி வரும் குமாரர்கள் பிரம்மாவின் மானசீகப் புத்திரர்கள். இளம் பருவத்திலேயே பிரம்ம ஞானம் அடைந்தவர்கள். சாந்தோக்கிய உபநிடத்தில் மற்றும் மகாபாரதத்திலும் சனத்குமாரர் என்னும் குமாரர் நாரதருக்கு உபதேசம் செய்வதாக உள்ளது. சனத்குமாரருக்கு நிகரானவர் பௌத்தக் கதைகளில் (ஜாதகக் கதைகள்) தோன்றும் ஔடத குமாரர். இவர் புத்தரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

எப்படி வயதுக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லையோ, அப்படியே குரு என்பவர் ஒரு அந்தணராக மேட்டுக்குடியினராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர் எங்கிருந்து வருகிறார் என்பது முக்கியமில்லை, அவர் என்ன கூறுகிறார் என்பதுதான் முக்கியம் என்ற கருத்தைப் பறைசாற்றுகின்றன நம் கதைகள்.

மகாபாரதத்தின் வனபர்வத்தில் அறத்துடன் வாழ்ந்த ஒரு கசாப்புக்காரனின் கதை வருகிறது. ஒருநாள் ஒரு அடர்ந்த வனத்தில் முனிவர் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்து ஒரு கொக்கு அவர் தலையில் எச்சம் இட்டுவிட்டது. கொதித்தெழுந்த முனிவர் அந்தக் கொக்கைத் தன் பார்வையால் எரித்துக் கொன்றார். சிறிது நேரத்தில் அவருக்குப் பசி தோன்ற பிட்சை கேட்டு வாங்குவதற்காக நகரத்துக்கு வந்தார். அங்கு ஒரு வீட்டின் முன் சென்று பிட்சை கேட்டுக் குரல் எழுப்பினார். அந்த வீட்டு எஜமானி வீட்டினுள் இருந்தபடியே அவரிடம் சற்றுப் பொறுத்திருக்குமாறு கூறினாள். தன் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதாகவும் முனிவர் சற்றுப் பொறுத்திருந்தால் தான் வந்து பிட்சையிடுவதாகவும் கூறினாள். ஆனால் முனிவருக்குப் பொறுமையில்லை. அவளுக்குச் சாபமிட்டு விடுவதாக எச்சரித்தார். இதைக் கேட்ட வீட்டு எஜமானி சிறிதும் கலங்காது முனிவர் தன்னைச் சுட்டெரித்துக் கொல்ல தானொன்றும் ஒரு பாவபட்ட கொக்கல்ல என்று பதிலடி கொடுத்தாள். இதைக்கேட்ட முனிவருக்கு ஆச்சரியம்! அடர்ந்த காட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி இந்தப் பெண்மணி எப்படி அறிந்திருந்தாளென அவளிடம் கேட்டார். அதற்கு அவள் தன் கணவனுக்குப் பக்தி சிரத்தையுடன் சேவை செய்து வந்ததால் தனக்கு முக்காலமும் உணரும் சக்தி கிடைத்ததாக முனிவரிடம் கூறினாள்.

இதைக் கேட்ட அந்த முனிவர் வெட்கித் தலை குனிந்தார். தனக்கு உலகத்தில் கற்க வேண்டியது இன்னுமும் நிறைய உள்ளது என்பதை உணர்ந்தார். இதையறிந்த அந்தப் பெண்மணி முனிவரை மிதிலை மாநகரில் தன்னறத்துடன் வாழும் கசாப்புக்காரனைத் தன் குருவாக ஏற்கச் சொல்லி அனுப்பி வைத்தாள். உயர்குலத்து அந்தணனான தான் ஒரு கசாப்புக் கடைக்காரனிடம் என்ன கற்க முடியும் என்ற சந்தேகத்துடனே மிதிலைக்குச் சென்றார் அந்த முனிவர். அங்கு, கசாப்புக்காரனைச் சந்தித்து அவனிடம் இவ்வளவு இம்சை வாய்ந்த தொழில் செய்பவனுக்கு அறத்தைப் பற்றிப் பேச எவ்வாறு இயலும் என்று கேட்டார். அதற்கு அவன், எந்தத் தொழிலுமே களங்கமானதோ ஈனமானதோ இல்லை, அதன் மதிப்பு அதை நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதில் இருக்கிறது என்றான். அந்தக் கசாப்புக்காரனுக்கும் முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல் வியாத கீதை என்னும் பெயரில் அறியப்படுகிறது. ‘வியாத’ என்றால் சம்ஸ்கிருதத்தில் கசாப்புக்காரன் என்று பொருள். வியாத கீதை அறத்தைப் பற்றியும், பலனை எதிர்பாராது செய்யும் கருமத்தைப் பற்றியும் பேசுகிறது.

மறுபடி மறுபடி நம் கலாசாரத்தில் வலியுறுத்தப்படுவது என்னவென்றால் குரு என்பவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ அல்லது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. எவர் ஒருவர் நமக்கு ஞானத்தை ஊட்டக்கூடிய தகுதி பெற்றிருக்கிறாரோ அவர் எந்த குலத்திலிருந்து வந்தாலும் நமக்கு ஞானகுருவாகிறார்.

இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் ஆதிசங்கரரின் கதையிலுள்ளது. ஒருமுறை சங்கரர் வாரணாசியில் தன் சீடர்களுடன் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்படிச் செல்லும் வழியில் எதிர்பாராமல் திடீரென ஒரு சண்டாளன் வந்து விட்டான். அவன் தீண்டத்தகாதவனாகையால் சங்கரரும் அவரது சீடர்களும் அவனை ஓரமாக ஒதுங்கி அவர்களுக்கு வழிவிடச் சொல்லிக் கேட்டார்கள். பதிலுக்கு அவன் அவர்களிடம், “நீங்கள் என் உடலை நகரச் சொல்கிறீர்களா அல்லது என் ஆன்மாவையா? ஆன்மா எல்லோர்க்கும் ஒன்றுதானென்றால் உடலால் அது அசுத்தமாகாது. அத்வைத உலகில், அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபடாத உலகில், ஒரு அந்தணனும் சண்டாளனும் எப்படி வேறுபட முடியும்?” என்று கேட்டான். இதைக் கேட்ட சங்கரருக்கு அதிர்ச்சி! இவ்வளவு நுட்பமாகக் கேள்வி கேட்கும் இந்த சண்டாளன் எப்படி ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியும்? அந்த நொடியிலேயே சண்டாளனை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார் அவர். பிறகு இந்தச் சம்பவத்தை வைத்து மனீஷா பஞ்சகம் என்ற செய்யுளை இயற்றினார்.

முன்னே சொன்னதுபோல குரு என்பவர் எப்படி மேட்டுக்குடியிலிருந்து வரவேண்டியது கட்டாயமில்லையோ, அப்படி அவர் சந்நியாசியாக, முற்றும் துறந்தவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இல்லறத்தில் ஈடுபடுபவன்கூட ஒரு முதிர்ந்த ஆசானாக இருக்க முடியம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஜனகர். மிதிலைக்கு அரசனான ஜனகர் இல்லறத்தில் இருந்துகொண்டே தாமரை இலை மேல் தண்ணீராக வாழ்ந்த ஒரு பிரம்மஞானி.

ஒருமுறை வேதவியாசர் தன் மகன் சுகரை ஜனகரிடம் சென்று தீட்சை பெற்றுவர அனுப்பி வைத்தார். ஆனால் சுகருக்கு அதில் நாட்டமில்லை. இல்லறத்தில் வாழும் ஜனகர் தன்னைப் போன்ற சந்நியாசிக்கு எவ்வாறு பிரம்ம ஞானத்தை அருளிட முடியும் என்ற சந்தேகம் அவருக்கு. தன் சந்தேகத்தை சுகர் ஜனகரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். இதற்கு ஜனகர் பதில் ஏதும் கூறவில்லை. மாறாக சுகரிடம் ஒரு பால் செம்பைக் கொடுத்து அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனையை சுற்றி வரச் சொன்னார். ஆனால் பாத்திரத்திலிருந்து பால் ஒரு சொட்டுக்கூட சிந்தக்கூடாது என்பது நிபந்தனை. சுகரும் ஜனகர் ஆணையிட்டபடியே அரண்மனையைச் சுற்றி வந்தார். அவர் சென்ற வழியெங்கும் கண்ணைக் கவர்ந்து நெஞ்சை அள்ளக் கூடிய பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஆனால் அந்தப்புரத்துப் பேரழகிகள் ஆகட்டும், சமையலறை தின்பண்டங்களாகட்டும் அல்லது வழியெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆகட்டும், இவை எதுவுமே சுகரின் கண்களுக்குத் தென்படவில்லை. அவரின் கவனம் முழுவதும் அந்த பால் செம்பின் மேலேயே இருந்தது. சற்றுகூடக் கவனம் சிதறாமல், ஒரு சொட்டு பால் நிலத்தில் சிந்தாமல் ஜனகர் கூறியபடி தன் அரண்மனை வலத்தை முடித்த சுகர் வெற்றிக் களிப்புடன் ஜனகர் முன் ஆஜரானார். ஜனக மஹாராஜா அவரைப் பார்த்து, “தங்களுக்கு நான் வைத்த பரிசோதனையில் வெற்றி பெற்றுத் திரும்பி இருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம். இப.பொழுது கூறுங்கள், தாங்கள் சென்ற வழியில் தாங்கள் என்னவெல்லாம் கண்டீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்ட சுகர் தன் கவனம் முழுவதும் பால் செம்பில் இருந்ததால் மற்றவற்றில் தான் கவனம் செலுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அதற்கு ஜனகர், தானும் இல்லறத்தில் அவ்வாறே இருந்துகொண்டு பிரம்ம ஞானியாக வாழ்வதாகக் கூறினார். அறத்தைக் கடைப்பிடிப்பதில் தன் கவனம் முழுவதையும் செலுத்துவதால் தன்னைச் சுற்றியுள்ள சுகபோகங்கள் ஒருபோதும் தன்னைப் பாதிப்பது இல்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட சுகர் மனம் மாறி ஜனகரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். ஜனகருக்கும் சுகருக்கும் இடையிலான உரையாடல் மகா உபநிஷத்தில் வருகிறது.

ஆண்கள் மட்டுமல்ல, பெண் குருமார்களைப் பற்றிய கதைகளும் நம் கலாசாரத்தில் நிறைய உண்டு. திரிபுரா ரகசியம் மற்றும் யோக வாசிஷ்டம் என்னும் நூல்களில் சொல்லப்பட்டதுபோல் ஹேமலேகா மற்றும் சுபலா என்ற இரு பெண்மணிகள், தேக இன்பத்தை நாடும் தன் கணவன்மார்களைப் பிரம்மஞானத்தை நோக்கி அழைத்துச்சென்ற கதைகளும் உண்டு. எமனே குருவாக மாறி உபதேசித்த நசிகேதசின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இவ்வளவு ஏன், நம் கலாசாரத்தில் மிருகங்களும் பறவைகளும் கூட ஞானத்தை போதித்த கதைகள் உண்டு.

மேலே சொன்ன கதைகளில் கண்டது போல் குரு என்பவர் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும் சீடனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பாலமாகிறார். சாரமற்ற இந்த சம்சாரத்தை நாம் கடந்து செல்ல உதவும் ஒரு தோணியாகிறார். இந்தத் தோணியில்லாமல் நாம் கரை சேர்வது கடினம்.

Posted on Leave a comment

இந்தியக் கதைகளில் ஜொலிக்கும் ஆபரணங்களும் அணிகலன்களும் | சுமதி ஸ்ரீதர்

உலகிலேயே மிக அதிகமாகத் தங்கத்தை நுகரும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருப்பது இந்தியாதான் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த தகவல்தான். இந்தியா கடந்த ஆண்டு (2017) மட்டும் சுமார் 855 டன் தங்கத்தை இறக்குமதி செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியர்களான நாம் இந்த விலைமதிப்புமிக்க மஞ்சள் உலோகத்தின் மேல் வைத்திருக்கும் அளவற்ற மோகம் இன்று நேற்றல்ல, அது நமக்குத் தொன்று தொட்டு வந்த மரபு.

சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடந்த ரோமாபுரி சாமராஜ்ஜியம் காலம் தொட்டே உலகில் பொன்னை விரும்பும் பூமியில் முதல் இடத்தில் இருந்திருக்கிறது இந்தியா.

குறு மிளகு உட்பட சமையலுக்கு நறுமணம் சேர்க்கும் ஏனைய மசாலா பொருட்களுக்கும், நம் கடல் முத்துகளுக்கும் மற்றும் நம்முடைய சிறந்த மஸ்லின் துணிகள் தவிர, அத்துணிகளுக்குப் போடப்படும் சாயத்துக்கும் மாற்றுப் பண்டமாக ரோமானியர்கள் தங்கள் கப்பல்களில் வண்டி வண்டியாகத் தங்கத்தை கொண்டு வந்து நம் நாட்டில் கொட்டியதாக சரித்திரம் கூறுகிறது. இப்படி குறு மிளகுக்கும், மஸ்லின் துணிகளுக்கும் பொன்னை வாரியிறைத்தே திவாலாகக்கூடிய தருணம் ஒன்று ரோமபுரி சாமராஜ்ஜியத்திற்கு ஏற்பட்டது என்பதற்கான சரித்திர ஆவணமும் உண்டு.

அப்படி வந்திறங்கிய தங்கத்தை வைத்து இந்தியர்கள் பல வித ஆபரணங்களையும், அணிகலன்களையும் செய்து அணிந்து மகிழ்ந்திருக்கிறார்கள். அப்படிச் செய்வதற்கான உலோகவியல் அறிவும், தேர்ச்சியும் அந்நாளிலேயே நம்மிடம் இருந்தது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

காலப்போக்கில், ஆபரணங்கள் மற்றும் அணிகலன்களின் மேல் நமக்கு இருந்த கொள்ளை ஆசை நம் கதைகளிலும் நுழைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நம் கதைகளில், தங்க நகைகளும், இரத்தினங்களும் பல விதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவை கையாளப்பட்ட விதத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் காணமுடிகிறது.

பெரும்பாலும், நகைகளை ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறிக்கும் குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் நம் கதையாளர்கள்.

இவ்வகைக் குறியீடுகளில் ஒன்று, அடையாளக் குறியீடு. இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் நகைகள் ஒருவகையான அடையாளக் குறியீடாக பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது, ஒரு நகையையோ அல்லது ஆபரணத்தையோ ஒரு குறிப்பிட்ட நபரோடு இணைக்கின்றன இக்கதைகள்.

உதாரணத்திற்கு, கர்ணனின் கவச குண்டலம். கவச குண்டலம் என்றாலே கர்ணன்தான் நம் ஞாபகத்துக்கு வருகிறான். கர்ணனை ஹஸ்தினாபுரத்தில் முதன்முதலாகக் குந்தி பார்க்க நேர்கையில் அவனை அவன் உடம்போடு ஒட்டியிருக்கும் கவச குண்டலத்தைக் கொண்டுதான் அடையாளம் காண்கிறாள்.

இராமாயணத்திலும் பல சந்தர்ப்பங்களில் நகைகள் அடையாளச் சின்னங்களாக பிரயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. சீதையை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது அவள் தான் செல்லும் வழியெங்கும் தனது நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டே செல்கிறாள். அவளின் நகைகளை அடையாளம் கொண்டுதான் இராமன் அவள் சிறையெடுத்துச் செல்லப்பட்ட பாதையைக் கண்டறிகிறான். சீதை தன் நகைகளால் விட்டுச் சென்ற தடயத்தைத் தொடர்ந்துகொண்டே அனுமன் இருக்கும் கிஷ்கிந்தாவைச் சென்றடைகிறான். அங்கு இராமன் சுக்ரீவனைச் சந்திக்கிறான். சுக்ரீவன், தனக்கு கிடைத்ததாகச் சொல்லி மேலும் சில ஆபரணங்களை இராமனிடம் காண்பிக்கிறான். இராமன் அவற்றையும் சீதையுடைதென அடையாளம் கண்டுகொள்கிறான். அந்த நகைகள் அவனுக்குச் சீதையை ஞாபகப்படுத்துகின்றன. துக்கமும் கோபமும் ஒன்று சேர இராமன் சீதையைச் சிறைபிடித்தவனைக் கொன்று தீர்க்கச் சபதம் இடுகிறான்.

அதே போல் சீதையைத் தேடி அனுமனை இலங்கைக்கு அனுப்பும்போதும் இராமன் அனுமனிடம் தனது கணையாழியைக் கொடுத்து அனுப்புகிறான் . இராமனின் கணையாழியைக் கொண்டுதான் சீதை அனுமனைத் தன் கணவனின் தூதனாக அடையாளம் காண்கிறாள்.

இதேபோல் காளிதாசனின் அபிஞ்யானசாகுந்தலத்திலும் மோதிரத்தின் கதை ஒன்று உண்டு. கதையின்படி தன் காதலியான சகுந்தலைக்குத் தனது மோதிரத்தை நினைவுப்பரிசாக அளிக்கிறான் துஷ்யந்தன். பின்னாளில், அவன் அவளை மறக்க நேரிடுகையில், அந்த மோதிரத்தைக் கொண்டுதான் சகுந்தலை துஷ்யந்தன் தன்னுடன் கழித்த காதல் தருணங்களை அவனுக்கு நினைவுபடுத்துகிறாள்.

சொல்லப்போனால், காளிதாசனின் படைப்புகளில் மணிகள் மற்றும் ஆபரணங்கள் கதையின் பல முக்கியத் திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருப்பதைப் பார்க்கலாம். மாளவிகாக்னிமித்ரம் என்ற காவியத்தில் அக்னிமித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்னும் அரசிளங்குமரிக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அக்னிமித்ரனின் மனைவி மற்றும் அரசியான தாரிணிக்கு காதலர்கள் இணைவதில் விருப்பம் இல்லை. அவள் மாளவிகாவைச் சிறை வைக்கிறாள். ஆனால், அக்னிமித்ரன் தன் விதூஸகனைக் கொண்டு தாரிணியிடம் ஒரு பொய்யைச் சொல்லி அவளுடைய கணையாழியைக் கொண்டு மாளவிகாவைச் சிறையிலிருந்து மீட்கிறான். இப்படி நகைகளை அடையாளச் சான்றாக உபயோகப் படுத்தியிருக்கிறார்கள் நம் கதையாளர்கள்.

இராமாயணத்தில் இராமனின் கணையாழியைப் பெற்றபின் சீதையும் தன் பங்கிற்குத் தனது சூடாமணியைக் கழற்றி அனுமனிடம் கொடுத்து இராமனக்குத் தான் உயிருடன் இருப்பதைத் தெரியப்படுத்துகிறாள். எப்படி அந்தச் சூடாமணி பிரிந்து வாடும் இரு காதலர்களை ஒன்று சேர்க்கிறதோ, அப்படியே விக்ரமோர்வஸ்யம் என்னும் காளிதாசனின் காவியத்தில், ஊர்வசியையும் அவளது காதலனான புருரவஸையும் இணைக்கிறது சங்கமணீயமணி.

கதையின்படி ஒரு சிறு ஊடலால் இரு காதலர்களும் பிரிய நேர்கிறது. ஊர்வசி புருரவஸிடம் கோபித்துக்கொண்டு பெண்களுக்கு அனுமதியில்லாத, சுப்ரமணியருக்குச் சொந்தமான குமரவனத்திற்குள் தவறாக நுழைந்துவிடுகிறாள். அதனால் சுப்ரமணியரின் சாபத்திற்கு ஆளாகி ஒரு கொடியாக உருமாறுகிறாள்.

விரகதாபத்தில் துடிக்கும் புருரவஸ், ஊர்வசியைத் தேடி இங்குமங்கும் அலைகிறான். அப்போதுதான் அவனுக்கு சங்கமணீயமணி கிடைக்கிறது. சங்கமணீயமணி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கக்கூடிய (சங்கமம் = சேர்க்கை) சக்தி வாய்ந்தது. அந்த மணியைக்கொண்டு புருரவஸ் ஊர்வசியோடு இணைகிறான். ஊர்வசியும் அந்த மணியால் சாபவிமோசனம் பெறுகிறாள்.

காளிதாசனின் காவியங்களைத் தவிர ஸம்ஸ்க்ருதத்தில் இன்னொரு பிரபலமான படைப்பு, ஸுத்ரகா என்னும் மன்னனால் எழுதப்பட்ட மிருச்சகடிகம் என்னும் நாடகம். மிருச்சகடிகம் என்றால் களிமண்ணினாலான சின்ன கட்டைவண்டி. கதையின் முக்கிய கதாபாத்திரம், வசந்தசேனை. அவள் ஒரு பணக்கார நாட்டியக்காரி. வசந்தசேனையின் நகைகள் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சொல்லப்போனால், அவள் ஆபரணங்களைச் சுற்றித்தான் கதையே நகர்கிறது.

ஆபரணங்கள், அடையாளக் குறியீடுகளாக மட்டுமல்ல, பல சூழ்நிலைகளில் ஒரு நபரின் புனிதத்தன்மையையும், கற்பையும் வெளிப்படுத்தும் உரைகற்களாகவும் பயன்படுகின்றன.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், சிலப்பதிகாரத்தில் வரும் சிலம்பு. கண்ணகி தன் கால் சிலம்பை உடைத்துத்தான் தன் கணவனின் குற்றமின்மையை நிரூபிக்கிறாள். உடைக்கப்பட்ட கால் சிலம்பும் அதிலிருந்து சிதறும் இரத்தினங்களும் அவள் கணவன் உத்தமன், கள்ளமற்றவன் என்பதைப் பறைசாற்றுகின்றன.

ஆனால் பாவம் கண்ணகியின் கால் சிலம்பால் ஒரு பொய்யான குற்றச்சாட்டினால் தண்டிக்கப்பட்ட கோவலனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், திருக்கடையூர் அபிராமியின் காதணியோ அபிராமி பட்டர் தவறுதலாகக் கூறிய ஒரு பொய்யை மெய்யாக்கி அவரை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறது. இந்தக் கதையில் அன்னை அபிராமியின் காதணி அபிராமி பட்டரின் புனிதத்தன்மையை, அவர் அவள் மீது கொண்ட அதீத பக்தியை உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது.

கண்ணகியின் உடைக்கப்பட்ட கால் சிலம்பை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கலாம். சிலம்பும் மற்றும் அதிலிருந்து சிதறும் இரத்தச் சிவப்பு இரத்தினங்களும் கண்ணகியின் திருப்தியடையாத பாலியல் தன்மையையும் (கோவலன் அவளை விட்டுப் பிரிந்திருந்த காரணத்தால்) மற்றும் நிறைவேறாத தாய்மையையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இதே போல் கச்சியப்பர் தன் கந்தபுராணத்தில் உமையின் உடையும் கால் சிலம்பை அவளுடைய திருப்தியின்மையின் குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார். சூரபத்மனைக் கொல்ல வேண்டி தேவர்களின் அவசரக் கோரிக்கையை ஏற்று, சிவபெருமான் தன் ஊர்த்துவரேதஸைக் (யோக சக்தியால் விந்துவை நெற்றியில் இருக்கும் குண்டலினி சக்கரத்திற்கு ஏற்றுதல்) கொண்டு கந்தனைப் படைக்கிறார். சிவனின் தேஜஸ் (விந்து) தீப்பொறியாக மிகுந்த வீரியத்தோடு வெளிப்படுகையில் சிவனின் அருகில் அமர்ந்திருக்கும் உமை தன் இருக்கையிலிருந்து பயந்து எழுந்து கொள்கிறாள். அவள் எழும்போது கால் தடுக்கி அவள் கால் சிலம்பு உடைந்து அதிலிருக்கும் இரத்தினங்கள் சிதறுகின்றன.

கந்தன், உமையின் கர்ப்பத்தில் உருவாகாமல், சிவனின் நெற்றிக்கண் பொறியிலிருந்து உருவாகிறான் என்பதுதான் இங்குக் கவனிக்கப்படவேண்டிய விஷயம். கந்தனின் படைப்பில் தன்னை ஈடுபடுத்தாத தேவர்கள் மீது கடும் கோபம் கொள்கிறாள் உமை. தேவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகச் சபிக்கிறாள்.

இங்கேயும், உமையின் உடைந்த சிலம்பும், அதிலிருந்து சிதறும் சிவப்பு இரத்தினங்களும் அவளின் நிறைவேறாத தாய்மையைச் சுட்டிக் காட்டுகின்றன.

நகைகளைத் துறந்த சீதை ஒரு களையிழந்த மாடமாக அசோக வனத்தில் உட்கார்ந்திருந்த காட்சியானாலும் சரி, அல்லது கைகேயி தசரதரிடம் வரம் வேண்டி, நகைகளைக் களைந்து, தலைவிரிக் கோலமாகக் கோபாகிருகத்தில் படுத்திருந்த கோலமானாலும் சரி, அல்லது கண்ணகி மற்றும் உமையின் உடைந்த கால் சிலம்பானாலும் சரி, நகைகளை இழந்த பெண்கள் அமங்கலமான ஒரு நிலையைக் காட்சிப் படுத்துகிறார்கள்.

நகைகளைக் கொண்டு ஒரு மனிதனின் மெய்ப்பற்றை நிரூபிக்கும் வேறு சுவாரஸ்யமான கதைகளும் உள்ளன. அதில் ஒன்று, பெரும்தேவனாரின் பாரத வெண்பாவில் கூறப்படும் கர்ணனின் கதை. கர்ணன் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தக் கதை.

ஒரு முறை, துரியோதனனின் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதியும் அவனது ஆருயிர் நண்பன் கர்ணனும் மிக சுவாரஸ்யமாகத் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வெளியே சென்றிருந்த துரியோதனன் திடீரெனத் திரும்பிவிட, அவன் வருகையைக் கண்ட பானுமதி அவனை வரவேற்க விருட்டென உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கிறாள். விளையாட்டில் மூழ்கியிருந்த கர்ணன் அவள் எழுந்திருப்பதைப் பார்த்து, அவள் விளையாட்டைப் பாதியில் விட்டுச் செல்வதாகத் தவறாகப் புரிந்துகொண்டு சட்டென அவள் இடுப்பைப் பிடித்து அவளைப் போகாமல் தடுக்க முயல, அவள் இடுப்பில் கட்டியிருந்த முத்தாலான மேகலை அறுந்து முத்தெல்லாம் கீழே சிதறுகின்றன. கணப் பொழுதில் நடந்துவிட்ட இச்சம்பவத்தைத் துரியோதனன் பார்த்துவிடுகிறான். பானுமதியோ பயத்தில் உறைந்து போகிறாள். கர்ணனும், துரியோதனன் அங்கு வந்திருப்பதை அப்போதுதான் உணர்கிறான். அறியாமல் செய்தாலும் தான் செய்த இழிவான செயலை எண்ணி வெட்கித் தலை குனிகிறான், மிகுந்த வேதனை அடைகிறான்.

ஆனால் இந்த காட்சியைக் கண்ட துரியோதனனோ ஒரு கணம்கூடத் தயங்காமல், கீழே சிதறிக்கிடந்த முத்துக்களையெடுத்து, சிரித்துக்கொண்டே பானுமதி மற்றும் கர்ணனைப் பார்த்து கேட்ட ஒரே கேள்வி, “எடுக்கவோ, கோக்கவோ?”

துரியோதனின் எதிர்வினையைக் கண்டு, அவன் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்ந்த கர்ணன் நெகிழ்ந்து போய், தன் நண்பனை ஆரத்தழுவுகிறான். இந்த இரு நண்பர்களுக்குள் இருக்கும் மேகலையின் முத்தைப் போன்ற தூய்மையான நட்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சியான கதை இது.

இதேபோல் அரிச்சந்திரன் மனைவி சந்திரமதியைப் பற்றிய செவிவழிக் கதையும் ஒன்று உண்டு. அரிச்சந்திரனின் சத்திய சோதனையில், அவன் தன் மனைவி மற்றும் மகனிடமிருந்து பிரிய நேர்கிறது. கதையின் ஒரு கட்டத்தில் அரிச்சந்திரனின் மகன் இறந்துவிடுகிறான். விதியின் கொடுமையால் சுடுகாட்டில் வேலை செய்யும் அரிச்சந்திரன், இறந்தது தன் மகன்தான் என்று தெரியாமல் ஈமக்கிரியைகளைச் செய்ய சந்திரமதியிடம் காசு கேட்கிறான். ஆனால் சந்திரமதியிடமோ தன் மகனின் இறுதிப் பயணத்திற்குச் செலவு செய்யக்கூட காசுபணம் இல்லை. அப்போது, தன் மனைவியிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாத அரிச்சந்திரன், அவளிடம் தன் கழுத்தில் தொங்கும் தாலியை விற்றுப் பணம் கொண்டுவரச் சொல்கிறான். சந்திரமதி இதைக் கேட்டு உறைந்து போகிறாள். ஏனென்றால், அவள் தாலியை, அவள் கணவன் அரிச்சந்திரனால் மட்டுமே பார்க்க முடியும். இடுகாட்டில் இருக்கும் மயானவன் தன் கணவன்தான் என்று புரிந்துகொள்கிறாள். சந்திரமதியின் கணவன் அரிச்சந்திரனக்கு மட்டுமே தெரியும் அவளது தாலி, அவள் கற்பைக் குறிக்கிறது.

கற்பு என்பது பாலியல் விசுவாசம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றில்லை, கர்ணனின் கதையில் சொன்னதுபோல அது நட்பைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். சொல்லப்போனால், பக்தியும் ஒரு விதமான கற்புடைமைதான். உதாரணத்திற்கு அனுமன் இராமன்மேல் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி. அதை அனுமனின் கற்பு என்று எடுத்துக் கொள்ளலாம். செவிவழி வந்த இன்னொரு கதையின் படி, அனுமன் பிறக்கும்போதே இரு காதணிகளோடு பிறக்கிறான். ஆனால் அவன் காதணிகள் அவனுடைய எஜமானின் கண்களுக்கு மட்டுமே தெரியக் கூடியவை. தற்செயலாக இராமனுடனான சந்திப்பில் இராமன் அனுமனின் காதணிகளைப் பற்றிப் பேச, அனுமன் இராமன்தான் தன்னுடைய நாதன் என்பதை உணர்கிறான். சந்திரமதியின் தாலியைப் போல இராமனின் கண்களுக்கு மட்டும் தெரியும் அனுமனின் காதணிகள், அனுமன் இராமனின்பால் கொண்ட அழ்ந்த பக்தி என்னும் கற்பின் சான்று.

எப்படிப் பொன் ஆபரணங்கள் ஒரு நபரின் அடையாளத்தை அல்லது புனிதத்தன்மையைக் குறிக்கின்றனவோ, அவ்வாறே மணிகள் மற்றும் இரத்தினங்களும்கூட நம் கதைகளில் பல செய்திகளைக் கூறுகின்றன. பொதுவாக ஒவ்வொரு மணிக்கும் ஒரு குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. நம் கதைகளைப் பொருத்தவரை சில மணிகள் செல்வத்தையும் செழுமையையும் வாரி வழங்கக்கூடியவை. வேறு சில மணிகள், அவற்றை ஆட்கொள்ள நினைப்பவர்களுக்குத் துன்பத்தையும், சிக்கல்களையுமே விளைவிக்கக் கூடியவை.

எப்படி புருரவஸுக்குக் கிடைத்த சங்கமணீயமணி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கக்கூடிய சக்தி படைத்ததோ, அவ்வாறே மஹாபாரதத்தில் குறிப்பிடப்படும் இன்னொரு மணி மிருதசஞ்சீவனி. அது பிரிந்த உயிரைத் திருப்பிப் பெற்றுத் தரக்கூடிய சக்தி வாய்ந்தது. கதையில் ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் மகன் பப்ருவாகனனால் கொல்லப்படுகிறான். அப்பொழுது அவன் மனைவி உலூபி, நாகர்களுக்குச் சொந்தமான மிருதசஞ்சீவனி மணியை வரவழைத்து அவனை உயிர்ப்பிக்கிறாள். மிருதசஞ்சீவனி மணி அநுகூலமான பலனையே தருகிறது.

ஆனால் பாகவதப்புராணத்தில் கூறப்படும் சியமந்தக மணியின் கதை சற்று வேறுவிதமானது. சத்ரஜீத் என்ற யாதவ குலப் பிரபுவிற்குக் கிடைக்கும் அந்த மணி அது தங்கியிருக்கும் இடத்துக்குச் சுபிட்சமும் பெருவாழ்வும் கொடுக்க வல்லது. ஆனால் கதையில் அதை ஆட்கொள்ள நினைத்த ஒவ்வொருவருக்கும் அது துரதிர்ஷ்டத்தை மட்டுமே அளிக்கிறது. ஒரு கை விட்டு இன்னொரு கை மாறும் இந்த மணியின் பயணத்தில் சத்ரஜீத், சத்ரஜீத்தைக் கொல்லும் ஸதத்வனன், சத்ரஜீத்தின் தம்பி, தம்பியை வேட்டையாடும் சிங்கம் எனப் பலர் உயிர் துறக்கின்றனர். ஒரு கட்டத்தில், சிங்கத்தைக் கொன்று, மணியை ஜாம்பவான் எடுத்துச் செல்கிறான். இதற்கிடையில், கிருஷ்ணன் மீது மணியைத் திருடியதாக பொய்க்குற்றம் சாற்றப்படுகிறது. கிருஷ்ணன், தன் மேல் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஜாம்பவானிடம் சண்டையிட்டு, மணியை மீட்கிறான்.

கிருஷ்ணனுக்கே இக்கட்டு ஏற்படுத்தியதால்தானோ என்னவோ சியமந்தக மணியைச் சிலர் கோஹினூருடன் ஒப்பிடுகிறார்கள். கோடி சூரியனின் ஒளியோடு ஜொலிக்கும் கோஹினூர் வைரம் ஆங்கிலேய அரசகுடும்பத்திற்கு, குறிப்பாக ஆண்களுக்குப் பல அல்லல்கள் விளைவித்ததாக நம்பப்படுகிறது. அதனால், கோஹினூரைப் பெரும்பாலும் அரசகுடும்பப் பெண்களே அணிந்திருக்கிறார்கள்.

கோஹினூராக இருந்தாலும் சரி, சியமந்தக மணியாக இருந்தாலும் சரி, பேராசைப் படுபவனுக்கு என்றுமே பெரு நஷ்டம்தான் என்பதுதான் இந்தக் கதைகள் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்தி. ஒரு சக்தி வாய்ந்த மணியைப் பெறுபவனுக்கு அதை ஆட்கொள்ளக்கூடிய திறனும் ஆளுமையும் இருக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட ஒருவன்தான் மஹாபாரதத்தில் வரும் அசுவத்தாமன். அவன் துரோணச்சாரியாரின் மகன். கர்ணனைப்போல், பிறக்கும்போதே நெற்றியில் ஒரு மணியோடு பிறந்தவன். அந்த மணி சிறந்த ஆரோக்கியத்தையும், வாழ்வில் வளமையையும் கொடுக்க வல்லது. அந்த மணி அதை அணிந்தவனை நோய்நொடியும் அச்சமும் நெருங்கவிடாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இப்படிப்பட்ட உயர்ந்த குணங்கள் படைத்த மணியை, அசுவத்தாமனால் கடைசிவரை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. பாரதப்போரின் முடிவில் கௌரவர்கள் தோற்றதையும், தன் நண்பன் துரியோதனின் மரணத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அசுவத்தாமன், ஆத்திரம் கொண்டு இரவில் பாண்டவர் கூடாரத்திற்குச் சென்று, தூங்கும் வீரர்கள், பாண்டவரின் கூட்டாளிகள் மற்றும் பாண்டவரின் மகன்கள் உட்பட அனைவரையும் தீக்கிரையாக்குகிறான்.

தன்னுடைய மிருகத்தனமான இச்செயலால், புனிதமான மணியை அவன் இழக்க நேரிடுகிறது. மணி இருந்த இடத்தில் வெறும் சீழும் இரத்தமும் வழிய, சிரஞ்சீவியான அசுவத்தாமன் இந்த அருவருப்பான நிலையில் புவியில் என்றென்றும் அலைந்து திரிவான் எனச் சபிக்கப்படுகிறான். எங்கெல்லாம் பாரதக் கதை சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம் அசுவத்தாமன் வந்து இருந்து கதையைக் கேட்பதாக இன்றும் நம்பப்படுகிறது.

அலங்கார ஆபரணங்களைக் கொண்டு இத்தனை செய்திகளைச் சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றன நம் கதைகள். இக்கதைகளைப் பற்றிக் கருத்து கேட்டபோது, மும்பை பல்கலைக்கழகத்தின் ஸம்ஸ்க்ருதத் துறையின் தலைவியான மாதவி நர்ஸாளே, “அலங்கார ஆபரணங்களும், வைர வைடூரியங்களும் இந்தியக் கலாசாரத்தின் இன்றியமையாத ஒரு பகுதி. இவை நம்முடைய ஆழ்ந்த அழகுணர்ச்சியையும், கைத்திறனையும், உலோகவியல் அறிவையும் எடுத்துக்காட்டுகின்றன” என்று கூறுகிறார். ஆம், நர்ஸாளே கூறுவது போல இந்தியர்களின் அழகியல் வெளிப்பாட்டிற்கு, அவர்கள் கதைகளும் ஒரு ஊடகமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லைதான்.

Posted on Leave a comment

உலகக் கலாசாரங்களில் கடல்கோள் கதைகள் | சுமதி ஸ்ரீதர்

கடந்த வருடம் ஜூலை மாதம் அண்டார்டிக்கா கண்டத்தில் மனித குலத்தின் வருங்காலத்தைப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மாபெரும் பூகோள நிகழ்வு ஏற்பட்டது பலருக்குத் தெரிந்திருக்கும். 5,000 சதுரடிக்கும் பெரிதான பனிப்பாறை ஒன்று அதைத்தாங்கும் அதைவிடப் பன்மடங்கு பெரிய பாறையிலிருந்து (Larsen c ice shelf) உடைந்து கடலுக்குள் மிதக்கத் துவங்கியது. மூன்று டிரில்லியன் டன் எடையுள்ள அந்தப் பனிப்பாறை மெல்ல மெல்ல உருகி உலகெங்கும் கடல் மட்டங்களை உயர்த்தக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் வல்லுநர்கள். இவ்வகை நிகழ்வுகளால் கடல் மட்டம் உயர்ந்து, மனித நாகரிகத்துக்குப் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய அபாயம் மனித குலத்தின் மேல் தொங்கும் கத்தி போன்றது. இந்தக் கத்தி என்றைக்கு வேண்டுமானாலும் நம் தலை மேல் விழலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மனித சமுதாயத்தைக் கடல் கொண்டு சென்றுவிடுமோ என்ற பயம் இன்று நேற்றல்ல, புராதனக் காலம் தொட்டே இருந்ததாகத் தெரிகிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்த புராதனக் கலாசாரங்கள் அனைத்திலும் இந்த பயத்தை எதிரொலிக்கும் கடல்கோள் கதைகள் (flood myths) உள்ளன.

புராதன எகிப்தியர்கள் தங்களின் ஆக்கும் கடவுளான ரா, மனிதனால் மிக துயரப்பட்டு மீண்டும் இவ்வுலகை ‘நன்’ என்னும் ஆழ்கடலுக்கே திருப்பிவிடுவார் என்று நம்பினார்கள்.

பண்டைய எகிப்தியர்கள் மட்டுமல்ல, நார்டிக் நாடுகள் எனக் கூறப்படும் வடதுருவத்தை ஒட்டிய பிரதேசங்களில் வாழும் மக்களில் ஆரம்பித்து, தென் அமரிக்காவைச் சேர்ந்த மாயா இன மக்கள், ஆஃப்ரிக்க, இந்திய, கிரேக்க, சீன மற்றும் ஆஸ்திரேலிய மக்கள் வரை உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களும் இந்தக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள் என்பது மிக ஆச்சரியமான விஷயம்.

பொதுவாக இந்தக் கதைகளில் கடவுள் மனிதனின் தவறான நடவடிக்கைகளால் கோபமுற்று, ஒரு பெரும் வெள்ளத்தை அனுப்பி, தவறு செய்யும் மனித இனத்தைப் பூண்டோடு அழித்து, மறுபடி ஒரு புதுயுகம் பிறக்க வழி செய்கிறார்.

இந்தக் கதைகளில் கடவுள் தன் திட்டத்தை நிறைவேற்ற முதலில் மனித குலத்தின் பிரதிநிதியாக ஒருவனைத் தேர்வு செய்கிறார். அந்த மனிதனிடம் ஆழி பெருக்கெடுத்து உலகம் அழியப்போவதாக எச்சரிக்கை விடுக்கிறார். வரப்போகிற வெள்ளத்தில் அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொண்டு வெள்ளம் வடிந்தபின் தன் வாழ்க்கையை மறுபடி தொடரவும் மனித குலம் மறுபடி தழைக்கவும் வழிகாட்டுகிறார்.

கடல்கோள் கதைகளில் மிகவும் புராதனமாகக் கருதப்படுவது பழங்கால சுமேரிய/பாபிலோனிய கலாசாரத்தில் சொல்லப்பட்ட கில்கமிஷ் காப்பியம். இந்த காப்பியம் சுமார் பொ.மு.18ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ‘என்லில்’ என்ற காற்றுக்கான கடவுள் (நம் புராண கதைகளின் வரும் வாயு பகவானுக்கு ஒப்பானவர்) மனித இனத்தின் பெருகும் ஜனத்தொகையையும், அதிகரிக்கும் சத்தத்தையும் கண்டு மிகவும் கோபமுற்று உலகை அழிக்க வேண்டி மாபெரும் வெள்ளத்தை அனுப்பி வைக்கிறார். என்லிலின் திட்டத்தை அறிந்த இயா என்ற தண்ணீருக்கான கடவுள், மனித குலத்தின் பிரதிநிதியாக உத்னபிஷ்டம் என்பவனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு வரப்போகும் வெள்ளத்தைப்பற்றி எச்சரிக்கை செய்கிறார். மரத்தால் ஆன தன் வீட்டை உடைத்து ஒரு படகைத் தயார் செய்யச் சொல்கிறார். உத்னபிஷ்டம் இயா கூறியவாரே செய்கிறான்.

கில்காமெஷ், அஸ்ஸீரிய சிற்பம்

தன் குடும்பத்தோடு சேர்த்து மற்ற ஜீவராசிகளையும் படகில் ஏற்றிக்கொண்டு வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாராகிறான். இயா கூறியதுபோல் பெருமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுக்கிறது. கடுங்காற்று வீசுகிறது. இவ்வாறு ஆறு இரவு ஆறு பகல் தொடர்ந்தபின் இயற்கையின் சீற்றம் மெல்ல மெல்லக் குறைகிறது. ஆனால் வெள்ளத்தில் நிலங்கள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. பார்க்கும் இடமெங்கும் மனிதர்கள் களிமண் சிலைகளாக மாறியிருக்கிறார்கள். வெள்ளத்தில் இங்கும் அங்கும் புரட்டப்பட்ட உத்னபிஷ்டத்தின் படகு இறுதியில் நிமுஷ் என்ற மலையின் மீது சென்று நிற்கிறது. ஏழாவது நாள், சற்று அமைதி புலப்பட உத்னபிஷ்டம் ஒரு புறாவைப் படகிலிருந்து வெளியே அனுப்புகிறான். ஆனால் உட்கார்ந்து கொள்ள ஒரு மரக்கிளைகூடக் கிடைக்காமல் அது படகுக்கே திரும்பிவிடுகிறது. பிறகு இன்னொரு பறவையைப் படகிலிருந்து வெளியனுப்புகிறான். அதுவும் மறுபடி படகுக்கே திரும்பி விடுகிறது. கடைசியாக அவன் ஒரு காகத்தை அனுப்புகிறான். அது திரும்புவதில்லை. சூழ்ந்திருக்கும் தண்ணீர் வடிய தொடங்கியதைப் புரிந்துகொண்டு, மற்ற ஜீவராசிகளைப் படகிலிருந்து மெல்ல மெல்ல விடுதலை செய்கிறான். உத்னபிஷ்டம் உயிரினங்களுக்கு ஆற்றிய சேவைக்காகச் சாகா வரம் பெற்று கடவுள்களோடு ஒன்றாகிறான்.

இதே கதை சிறு சிறு வித்தியாசங்களோடு அத்ரஹஸீஸ் என்ற பாபிலோனியக் காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உத்னபி்ஷ்டத்திற்கு பதில் அத்ரஹஸீஸ். மற்றபடி அதே ஏழு நாட்கள் மழை, அதே வெள்ளம், படகு என எல்லா விவரங்களும் ஒன்றுதான்.

கிட்டத்தட்ட இதே கதை மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு கிறித்துவப் புனித நூலான பைபிளிலும் மற்றும் யூதர்களின் புனித நூலான டோராவிலும் ‘நோவாவின் படகு’ என்ற கதையாக மறு பிறவி எடுத்திருக்கிறது. அத்ரஹஸீஸின் கதைக்கும் நோவாவின் கதைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. நோவாவின் படகு நாற்பது நாட்களுக்குப் பிறகு அராரத் என்ற மலையைச் சென்றடைகிறது. நோவா நிலத்தைத் தேடி மூன்று முறை புறாவைத் தூது விடுகிறான். மூன்றாவது முறை அது படகுக்குத் திரும்பாதபோது வெள்ளம் வடிந்து நிலம் தென்பட்டுவிட்டதாகப் புரிந்துக் கொள்கிறான். நோவாவைக் காப்பாற்றிய கடவுள் அவனுக்கு (மனித குலத்துக்கு) ஒழுக்கத்துடன் வாழ ஏழு கட்டளைகள் இடுகிறார். அந்த ஏழு கட்டளைகளைத்தான் ஏழு வண்ணம் கொண்ட வானவில் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது. அழகான அந்த வானவில் ஆபத்தான வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் மனிதக்குலத்தின் நம்பிக்கையின் குறியீடும் ஆகும்.

இதே கதை ‘நூ கீ கஷ்தி’ என்னும் பெயரில் இஸ்லாமிய கலாசாரத்திலும் பிரபலம்.

நம் நாட்டிலும் கடல்கோள் கதைகளுக்குப் பஞ்சமில்லை. அதில் விஷ்ணுவின் மத்ஸ்ய அவதாரக் கதை மிகவும் பிரபலம். இந்தக் கதைக்கான வித்து சதபத பிராம்மணம் என்ற யஜுர்வேத நூலில் இருந்தாலும், இந்தக் கதை பின்னாளில் இயற்றப்பட்ட மஹாபாரதத்திலும், மத்ஸ்ய புராணத்திலும் சிறு சிறு மாற்றங்களுடன் சொல்லப்படுகிறது.

சதபத பிராம்மணத்தில் சொல்லப்படும் கதையின்படி பிரஜாபதி என்ற ஆக்கும் கடவுள் ஒரு சிறிய மீன் உருவமெடுத்து மனு என்ற ஆதி மனிதனிடம் சென்று கடலில் தன்னை விழுங்கக்கூடிய பெரிய மீன்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கேட்டு தஞ்சம் புகுகிறார். (சதபத பிராம்மணம் மனுவை ஒரு அரசனாகவும் அடையாளம் காட்டுகிறது.)

மனு அந்தச் சிறிய மீனுக்கு அடைக்கலம் தருகிறான். அந்தச் சிறிய மீன் மெல்ல மெல்ல மிகப் பெரிய மீனாக வளர்ந்து மறுபடி கடலுக்கே திரும்பி விடுகிறது. திரும்பிச் செல்லும் முன் மனு தனக்காற்றிய உதவிக்கு நன்றிக்கடனாக அவனிடம் வரவிருக்கும் வெள்ளத்தைப் பற்றி எச்சரித்து ஒரு படகு செய்து தயாராகும்படிக் கூறுகிறது. அந்த மீன் எச்சரித்தபடியே, குறிப்பிட்ட நாளில் கடல் பொங்குகிறது. தக்கச் சமயத்தில் மீன் வந்து மனுவின் படகை தன் கொம்பில் கட்டி இழுத்துச் சென்று இமய மலையில் சேர்த்துவிடுகிறது. வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட மனு புதிய யுகத்தில் மறுபடி உயிரினங்கள் தழைக்க யாக-யஞ்யங்கள் செய்யத் துவங்குவதாகக் கதை முடிகிறது.

பல கோணங்களில் இந்தியக் கதைகளை ஒற்றி இருக்கும் கிரேக்கக் கதைகளிலும் கடல்கோள் கதைகள் மூன்று உண்டு. அதில், பிப்லியோதேகா என்ற கதைக் களஞ்சியத்தில் சொல்லப்பட்டிருக்கும் டியுகாலியான் என்ற கதை மிகப் பிரபலம். இந்தக் கதையில் ஜூஸ் (zeus) என்ற நம் இந்திரனுக்கு நிகரான கடவுள், கிரேக்கர்கள் மீது கொண்ட கோபத்தால் பிரளயம் ஏற்படுகிறது. இதை முன்கூட்டியே அறிந்த ப்ரொமீதியஸ் என்ற தேவன் தன் மகன் டியுகாலியானிடம் தோணி ஒன்றைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளச் சொல்கிறான். பிரளயம் வருகிறது. டியுகாலியான் மற்றும் அவன் மனைவி மட்டுமே பிழைக்கின்றனர். மழை ஓய்ந்தபின் டியுகாலியானும் அவனது மனைவியும் கடவுளின் உதவியோடு ஆண், பெண் இரு ஜாதியையும் படைக்கின்றனர். டியுகாலியான் மனித குலத்துக்கு அரசனாகி அவர்களுக்கு உழவு மற்றும் பல உபயோகமான தொழில்களைக் கற்றுவித்து அவர்களை நாகரீகப்படுத்துகிறான்.

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு கதையைக் கேட்கும்போதும், அவற்றில் இருக்கும் ஒற்றுமைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் எப்படி ஒரே மாதிரியான கதைகளைச் சொன்னார்கள்?

இப்படி உலகளவில் சொல்லப்படும் கதைகளில் உள்ள ஒற்றுமைகளை மனித சிந்தனையில் இருக்கும் ஒற்றுமையாகக் கொள்வதா அல்லது இந்தக் கதைகள் உண்மையில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்வதாக எடுத்துக்கொள்வதா?

உலகக் கலாச்சாரங்களில் கடல்கோள் கதைகளை ஆராய்ச்சி செய்த வல்லுநர்கள் இந்தக் கதைகள் உலகம் முழுவதும் பரவிக் கிடப்பதற்கு இரு வகைக் காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள்.

ஒன்று, சுமார் ஏழாயிரம் வருடங்களுக்கு முன் முந்தைய பனியுகம் முடிந்து பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டங்கள் உயர்ந்து உலகம் முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்தப் பேரழிவு நிகழ்ச்சி மனித குலத்தின் கூட்டு நினைவில் பதப்படுத்தப்பட்டு கதை உருவமெடுத்து காலம் காலமாக அடுத்து வரும் சந்ததியினருக்கு கடத்தப்பட்டிருக்கலாம்.

இதைத் தவிர வெள்ளத்திற்கு வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம். பழங்கால மக்கள் பெரும்பாலும் நதிக்கரையில் வசித்து வந்தனர். நதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் கடும் துயரம் அடைந்தனர். அவர்கள் வாழ்க்கைக்கான ஆதாரத்தை இழக்கச் செய்த இந்த அனுபவங்களே கடல்கோள் கதைகளுக்கான விதையாகவும் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டைகிரிஸ் மற்றும் யுஃப்ரேடஸ் என்ற இரு நதிகளுக்கிடையே உருவான கலாசாரம்தான் பழம்பெரும் சுமேரிய/பாபிலோனிய கலாசாரம். இந்த இரு நதிகளில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்தால் சுமேரிய மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று பூகோள வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்வுகளே கில்கமேஷ் காப்பியத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் அனுமானம்.

கடல்கோள் கதைகள் உலகெங்கும் பரவ இன்னொரு சாத்தியக்கூறும் உள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவு உலகளவில் இல்லாமல் உலகின் ஒரு சிறிய பகுதியைப் பாதித்திருக்கலாம். மனித இனம் உலகின் பல்வேறு கண்டங்களுக்குச் சென்று குடிபெயரும்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை, தங்கள் கதையை உடன் எடுத்துச் சென்று பிற இடங்களில் பரப்பியிருக்கலாம்.

ரையன் மற்றும் பிட்மன் என்ற இரு பூகோள ஆராய்ச்சியாளர்கள் இது சம்பந்தமாக ஒரு அனுமானத்தை முன் வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் ‘பிளாக் ஸீ ஹைபாதிஸிஸ்’ (Black Sea Hypothesis) என்று பெயரிட்டுள்ளார்கள். சுருக்கமாகச் சொன்னால், சுமார் பொ.மு 5,600ம் ஆண்டு அருகில் பனிப்பாறைகள் பெரும் அளவில் உருகியதால் மெடிட்டரேனியன் கடல் பொங்கி ஐரோப்பாவின் பிளாக் ஸீயை ஒட்டிய 1,55,000 சதுர கி.மீ பரப்பளவு நிலம் கடலுக்குள் மூழ்கியிருக்கக்கூடும் என்கிறார்கள். வேறு சில சாட்சியங்களை வைத்து சில அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த அனுமானத்தை ஆமோதிக்கிறார்கள். இந்தப் பெரு நிகழ்வே கடல்கோள் கதைகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

மும்பை பல்கலைக்கழகத்தில் ‘கம்பாரடிவ் மிதாலஜி’ (comparative mythology) கற்றுத்தரும் பேராசிரியர் உத்கர்ஷ் படேல், “இந்தக் கதைகளில் உள்ள அபாரமான ஒற்றுமைகளைப் பார்க்கும்போது, இந்தக் கதைகளை மற்ற கதைகள் போல் ஜனரஞ்சக நோக்கத்தோடு சொல்லப்பட்ட கதைகளாகப் பார்க்க முடியாது. இந்தக் கதைகள் அடிப்படையில் ஒரு உண்மைச் சம்பவத்தை நினைவு கூர்வதாகவே தோன்றுகிறது” என்கிறார். மகாபலிபுரத்தில் உள்ள பழங்காலத்து பகோடாக்களை (pagodas) கடல் கொண்டு சென்றதாக நமக்குச் செவி வழி வந்து சேர்ந்த கதையில் ஒரு அடிப்படை உண்மை இருந்ததை, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் கடலுக்கடியிலிருந்து வெளிவந்த இடிபாடுகள் நிரூபித்ததை நினைவுகூரும் படேல், தொடர்ந்து, “காலப்போக்கில் இந்தக் கதைகள் மெல்ல மெல்ல உருமாறி தெய்வ அம்சங்கள் சேர்க்கப்பட்டு வேறொரு பரிமாணத்தை அடைந்து விட்டதாகவே தெரிகிறது” என்கிறார்.

இந்தக் கோட்பாட்டை வலுப்படுத்தும் விதமாக உள்ளது சீனத்தின் குன்-யூ என்ற மாபெரும் வெள்ளத்தின் கதை. இந்தக் கதை சீனப் பாரம்பரியக் கலாசாரத்தின் அச்சாணியாகக் கருதப்படுகிறது. சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னால் சீனாவின் சோகம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நதியில் (yellow river) ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அடைந்த துன்பத்தைக் கூறுகிறது இந்தக் கதை.

ஆனால் பிற கடல்கோள் கதைகளிலிருந்து சீனக் கதை சற்று வித்தியாசப்படுகிறது. மற்ற கதைகளில் போல் இல்லாமல் சீனக் கதையில் வெள்ளம் கடவுளின் செயலாகக் கருதப்படுவதில்லை. மாறாக அது இயற்கையின் சீற்றமாகக் கருதப்படுகிறது. பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தை எப்படி மக்கள் சமாளித்தார்கள் என்பதையும், அதிலிருந்து என்ன பாடம் கற்றார்கள் என்பதையும் சீனக் கதைகள் மட்டுமல்ல, அந்நாட்டு சரித்திரமும் ஆவணப்படுத்துகிறது.

இந்தக் கதையில், அரசரின் கட்டளையை ஏற்று குன் என்ற இளவரசன் ஒன்பது வருடங்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த நினைத்துத் தோல்வி அடைகிறான். அரசர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார். குன்னுக்குப் பிறகு வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு அவனது மகன் யூவுக்குக் கொடுக்கப்படுகிறது. தந்தையை இழந்த யூ தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை சவாலாக எடுத்துக்கொள்கிறான். பதிமூன்று வருடங்கள் போராடி வெள்ளத் தண்ணீர் வடிய வடிகால்கள் அமைக்கிறான். ஒரு வழியாக வெள்ளத் தண்ணீர் ஊரைச் சேதப்படுத்தாமல் கடலுக்குள் வடிய ஏற்பாடு செய்கிறான். இவ்வாறு ஊர் மக்களைக் காப்பாற்றி அவர்களின் தலைவன் ஆகிறான் யூ. யூவிலிருந்து தொடங்குகிறது சீனத்தை ஆண்ட சியா வம்சம்.

இதே கதை குழந்தைகளுக்குச் சொல்லப்படும்போது கவர்ச்சியான விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. குன்னும் யூவும் தெய்வங்கள் ஆக்கப்படுகிறார்கள். கூடவே மந்திரம் தந்திரம் எல்லாம் சேர்க்கப்பட்டு அது ஒரு ஜனரஞ்சகமான கதையாகிறது.

சமீபத்தில் மஞ்சள் நதியில் ஆராய்ச்சி மேற்கொண்ட பூகோள வல்லுநர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் குன்-யூ கதையில் சொல்லப்பட்ட வெள்ளம் உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி கடல்கோள் கதைகளில் ஒளிந்திருக்கும் உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்.

இந்தக் கதைகளை உண்மைச் சம்பவங்களின் கூட்டு நினைவு என்ற கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட குறியீடுகளின் கண்ணோட்டத்திலும் ஆராயலாம். உதாரணமாக, உலகம் அழிய கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம்தான் காரணம் என்றாலும் அந்த மழையை அனுப்பி வைத்தது கடவுள்தான் என இந்தக் கதைகள் சொல்கின்றன. ஆக இந்நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஒரு தெய்வாதீனச் செயலாகவே பார்க்கப்படுகின்றன.

இந்தக் கதைகளில் வெள்ளத்தின் பேரழிவு மனிதனின் தவறுகளுக்கான தண்டனையாகவே சொல்லப்படுகிறது. தண்டனையைக் கடுமையாகக் கொடுத்தாலும் மனிதன் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள இன்னொரு வாய்ப்பையும் தருகிறார் கடவுள்.

கிட்டதட்ட எல்லாக் கதைகளிலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் மற்றும் அவனுடைய குடும்பத்தினர் மட்டுமே காப்பாற்றப்படுகிறார்கள். கடவுள் அவனைத் தேர்ந்தெடுப்பதற்கு அவன் ஒழுக்கமே காரணம் என்பதால் அவன் தன்னுடைய கலாசாரத்தின் முன்மாதிரி ஆகிறான். மேலும், அறத்தோடு இருப்பவனுக்கு அழிவில்லை என்ற நீதி போதனையையும் செய்கின்றன இந்தக் கதைகள். உதாரணமாக, மத்ஸ்ய அவதார கதையில் வரும் சிறிய மீன் நலிந்தோரைக் குறிக்கிறது. அந்தச் சிறிய மீனைk கடலில் வாழும் பெரிய மீன்களிடமிருந்து காப்பாற்றி மனு ஒரு அரசனுக்கான அறத்தைக் கடைப்பிடித்து ஒரு நல்ல மன்னனுக்கான முன்மாதிரியாகிறான்.

மேலும், எல்லாக் கதைகளிலும் ஒரு படகு வருகிறது. அதில் ஏறித்தான் கதையின் நாயகன் வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடக்கிறான். மத்ஸ்ய அவதாரக் கதையில் வரும் படகை மோட்சத்தின் குறியீடாகப் பார்க்கலாம். அந்தப் படகுதான் மனு என்ற மனிதனை மரணத்திலிருந்து மீட்டு அமரனாக்குகிறது.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், இந்தக் கதைகள் யாவும் மனிதனுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை தரும் விதமாகவே முடிகின்றன. வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின் முடிவில் ஒரு புதிய படைத்தல் காத்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில், படைத்தலும் அழித்தலும் மாறி மாறி வருவதை இந்தக் கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. பல கலாசாரங்களில் இந்த உலகே நீரிலிருந்து (primordial waters) உருவானதாக நம்பப்படுகிறது. நீரிலிருந்து தோன்றிய உலகு மறுபடி நீருக்கே திரும்பிவிடுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இம்மாதிரியான கதைகளை நாம் இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.

தொண்ணூறுகளில், கெவின் காஸ்ட்னர் என்னும் ஹாலிவுட் நடிகர் நடித்த ‘வாட்டர் வர்ல்டு’ என்ற ஆங்கிலப் படம் வெளிவந்தது. அப்படத்தில் உலக வெப்பமயமாதலால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் ஏறி, நிலங்கள், நகரங்கள் தண்ணீரில் மூழ்கிப் போயுள்ளன. படத்தின் ஹீரோ (கெவின் காஸ்ட்னர்) எஞ்சியிருக்கும் நிலத்தைத் தேடி ஒரு கப்பலில் பயணிக்கிறான். இறுதியில் அப்படி ஒரு இடத்தை எவரெஸ்ட் மலையின் உச்சியில் கண்டுபிடிக்கிறான் எனக் கதை தொடர்கிறது.

சமீபத்தில் வெளியான ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தில் கூட கடல்கோள் கதைகளின் சாயலைப் பார்க்கலாம். இந்தக் கதைகளின் மூலம் மனிதனின் ஆழ்மனதில் ஆழியின் அழிக்கும் தன்மையைக் கண்டு ஒரு பிரமிப்பு, ஒரு அச்சம் இருப்பதை உணர முடிகிறது.

இந்தக் கதைகளில் வருவதுபோல், மனிதர்களான நாம் இயற்கைச் சூழலைப் பாதிக்கும் பல தவறான செயல்களில் ஈடுபட்டிருக்கிறோம் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. நம் தவறுகளின் கொடும் விளைவுகளிலிருந்து நம்மை மீட்க யார் தோணி செய்யப் போகிறார்கள் என்பதுதான் இப்போது நம் முன் இருக்கும் கேள்வி.

Posted on Leave a comment

புராண இதிகாசங்களில் பெண் ஹீரோக்கள் – சுமதி ஸ்ரீதர்

நம்மில் பலருக்குக் குழந்தைப் பருவத்தில் இரவு உறங்கப் போகும் முன் அம்மா சொன்ன குட்டிக் கதைகள் இன்றும் ஞாபகம் இருக்கும். நகர்ப்புறத்தில் வளர்ந்த பலருக்குப் பெரும்பாலும் இந்தக் கதைகள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியான தேவதைக் கதைகள் (fairy tales) என்னும் வகைக் கதைகளாகவே இருந்திருக்கும். Cindrella, Rapunzel, Snow White, Rose Red போன்ற கதைகள் இந்த வகையைச் சார்ந்தவையே.

Medieval period எனச் சொல்லப்படும் இடைக்காலத்தைச் சார்ந்த இந்தக் கதைகளின் கரு பெரும்பாலும் ஒன்றுதான். ஒரு இளவரசியை, ஒரு அரக்கனிடம் இருந்தோ, ஒரு கொடிய மிருகத்திடம் இருந்தோ அல்லது ஒரு கொடுமைக்காரச் சிற்றன்னையின் கொடிய பிடியில் இருந்தோ ஓர் அழகான அரசகுமாரன் வந்து காப்பாற்றுவான். பொதுவாக இந்தக் கதைகளில் வரும் இளம் பெண்கள் அபலைகளாக, சுயமாகச் சிந்திக்க இயலாதவர்களாக, என்று ஒரு இளவரசன் வந்து தம்மைக் காப்பாற்றுவான் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வலிமையற்ற பெண்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் ஆணாதிக்கச் சமுதாயமாகக் கருதப்படும் இந்தியச் சமூகத்தில், இந்த வகைக் கதைகள் (இராமாயணக் கதையைத் தவிர்த்து) நம் புராண இதிகாசங்களில் அதிகம் சொல்லப்படவில்லை என்பதே.

மாறாக, நம் புராண இதிகாசங்களில், பெண்கள், தங்கள் அன்புடையவர்களை, தங்கள் கணவன்மார்களையோ அல்லது காதலர்களையோ பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றிய கதைகள்தான் அதிகம். இன்னும் சொல்லப் போனால் பெண்கள் தங்களவரை மரணத்தின் வாயிலிருந்து மீட்ட கதைகள் ஏராளம்.

ஜோசப் காம்பெல் என்ற ஒரு அமெரிக்க புராணக் கதை ஆய்வாளர் இருந்தார். அவர் பல கிரேக்கக் கதைகளை, காவியங்களை ஆய்வு செய்து ‘ஹீரோ’ என்பவனுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். அந்தக் கட்டமைப்பை ஒரு ஹீரோவுக்கான இலக்கணம் என்று சொல்லலாம். ஹீரோ என்பவன் ஒரு மிகச் சாதாரண மனிதனாக இருந்து ஒரு அசாதாரண மனிதனாக உருமாறுகிறான். சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தை நோக்கி அவன் மேற்கொள்ளும் பயணத்தை காம்பெல் ‘A hero’s journey’ என்று குறிப்பிடுகிறார்.

கதையின் நாயகன் தான் மேற்கொள்ளும் பயணத்தில் பல இடையூறுகள் மற்றும் மைல்களைக் கடக்கிறான். இந்தப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் கூட்டு அனுபவங்கள் அவனை மற்றொரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. அவன் ஆளுமையில் ஒரு மாற்றத்தை (transformation) ஏற்படுத்துகிறது. பல சிக்கல்கள் நிறைந்த தன் பயணத்தின் முடிவில் அவன் தன் இலக்கைச் சென்றடைகிறான். பிறகு தன் தேடலை முடித்துக்கொண்டு கடைசியில் அவன் தன் இருப்பிடத்திற்கே திரும்புகிறான்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹீரோக்கள் தனக்கு மிகவும் பிரியமான ஆளையோ அல்லது பொருளையோ தேடிச் செல்லும் பாதையில் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். ஆனால் துணிவுடன் அவற்றைச் சந்தித்து, எடுத்துக்கொண்ட சவாலை வென்று, தமது பயணத்தை பூர்த்தி செய்கின்றனர்.

இந்தக் கட்டமைப்பின் ஆதாரத்தின் மேல், காம்பெல், இலியட், ஒடிசி போன்ற கிரேக்க காவியங்களில் தோன்றும் ஆண் கதாபாத்திரங்களை வைத்து ‘Hero Myth’ என்னும் ஒரு கோட்பாட்டை எழுப்பினார். அந்தக் காலத்துத் திரைப்படங்களான வேதாள உலகம், பால நாகம்மா ஆகியவற்றின் கதாநாயகர்கள் காம்பெல்லின் கோட்பாட்டின்படி ஹீரோக்கள் ஆவார்கள். பல எம்ஜிஆர் படங்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.

ஆனால், இந்தியக் கதைகளை ஆராய்ந்த காம்பெல், நம் புராண இதிகாசங்களில் ஹீரோ என்றொரு கருத்துப் படிவம் இல்லை என்றே சொன்னார். நம்முடைய இராமரும் கிருஷ்ணரும் பிறவியிலேயே அசாதாரணமான சக்தி கொண்டவர்கள். அவதாரங்கள். இந்திரனும் பிற தேவர்களும் கூட அப்படித்தான். இவர்களை கதையின் நாயகர்களாகக் கொள்ளலாம், ஹீரோக்களாக அல்ல.

இதை வைத்துப் பார்த்தால், காம்பெலின் Hero with a thousand faces புத்தகத்தில் கௌதம புத்தர் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்ற விஷயம் ஆச்சரியமாகப் படவில்லை.

கௌதம புத்தர் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்து, ஒரு அசாதாரண நிலையை அடைந்து, பின் தான் கண்டுபிடித்ததை மக்களுடன் பகிர்ந்து கொள்ள மறுபடி ஒரு சாதாரண நிலைக்கே திரும்பினார் எனக் காம்பெல் கூறுகிறார்.

புத்தரின் கதையில் ஹீரோயிசத்தைத் தேடிய காம்பெல் ஏனோ நம் கதைகளில் பெண் ஹீரோக்களைத் தேடவில்லை. தேடியிருந்தால் நிறையவே கிடைத்திருப்பார்கள்.

நம் இராமாயணக் காவியத்தை எடுத்துக்கொண்டால், கைகேயி ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். இராமாயணக் கதையைக் கேட்ட நாம் அனைவரும் அவளை ஒரு கொடுமைக்கார அம்மாவாகவே கற்பனை செய்திருக்கிறோம். நம்மில் கதை கேட்ட பலருக்குத் தெரியாது அவள் ஒரு சிறந்த தேரோட்டி என்று.

தசரதர் ஒருமுறை போருக்குச் செல்லும்போது கைகேயி அவருக்குத் தேரோட்டிச் சென்றாள். போரில் தசரதர் அடிபட்டு விழுந்தபோது, அவரது தேரை லாகவமாக ஒரு பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டிச் சென்று அவரைக் காப்பாற்றினாள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தசரதர் தன் பெயருக்கேற்பத் தேரை ‘தச’ அல்லது பத்து திசைகளிலும் செலுத்தக்கூடிய வல்லுநர். அப்பேர்ப்பட்ட தசரதரே கைகேயியின் தேரோட்டும் திறமையின் மேல் நம்பிக்கை வைத்துத் தனது உயிரை அவள் கையில் ஒப்படைத்தார் என்றால், அது சாதாரண விஷயமில்லை. தன் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாகவே தசரதர் கைகேயிக்கு மூன்று வரங்கள் அளித்தார். அந்த மூன்று வரங்கள்தான் இராமாயணக் கதைக்கான விதைகள் என்பது எல்லோரும் அறிந்ததே.

நம்முடைய இன்னொரு மாபெரும் காவியமான மகாபாரதத்தில், பெண் ஹீரோக்களின் கதைகள் மண்டிக் கிடக்கின்றன.

உலூபி என்றொரு நாக கன்னிகை இருந்தாள். அர்ஜுனனை ஒருதலையாகக் காதலித்தவள். அர்ஜூனனுக்கும், அவனது இன்னொரு மனைவி சித்திராங்கதைக்கும் பிறந்த பப்ருவாகனனை அன்போடு வளர்த்தவள்.

ஒருமுறை அர்ஜுனன் தனது மகன் பப்ருவாகனனிடம் போர் புரிய நேரிட்டது. அந்தப் போரில் பப்ருவாகனன் அர்ஜுனனைக் கொன்றான். அப்போது உலூபி, நாகர்களிடம் இருக்கும் மிருதசஞ்சீவனி என்னும் உயிர் மீட்கக்கூடிய மணியைக் கொண்டு அர்ஜுனனின் மார்பில் வைத்து அவனை உயிர் மீட்டாள்.

இந்தக் கதை இன்னொரு விதமாகவும் சொல்லப்படுகிறது. அர்ஜுனன், பிதாமகர் பீஷ்மரைக் கொன்றதற்காக அவரின் சகோதரர்களான வசுக்கள் அர்ஜுனனை சபித்துவிடுகிறார்கள். இதை அறிந்த உலூபி வசுக்களின் சாபத்திலிருந்து அர்ஜுனனைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் அவன் சொந்த மகனான பப்ருவாகனனைக் கொண்டு அர்ஜுனனைக் கொல்லச் செய்ததாகச் சொல்கிறது. அதாவது, உலூபிதான் இந்தப் போர் நாடகத்தின் சூத்திரதாரி என்கிறது இந்தக் கதை.

இதே மகாபாரதத்தில், இந்திரனின் துணைவி ஷசி பற்றிய ஒரு கதையும் உண்டு. ஷசி, இந்திரனின் துணைவி மட்டும் அல்ல, அவனை இயக்கும் சக்தியும் கூட. ஒருமுறை இந்திரன், விருத்திரன் என்னும் பிராமணனைக் கொன்றதற்காக மிகவும் வெட்கப்பட்டு, பிற தேவர்களின் வசைச் சொற்களுக்குப் பயந்து தன்னுடைய இருப்பிடமான அமராவதியில் இருந்து மிகுந்த தொலைவில் ஒரு குளத்தில் இருக்கும் தாமரையின் தண்டில் போய் ஒளிந்துகொண்டான். தேவர்கள், தங்கள் தலைவனைத் தேடித்தேடித் தோற்றனர். அவன் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் வேறு வழி இன்றி நஹுஷன் எனும் மானுடனைத் தங்கள் தலைவராக நியமித்தனர்.

சிறிது காலம் நல்லாட்சி புரிந்த நஹுஷனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைக்கனம் ஏறியது. தேவலோகத்து வாசிகளை, தேவர்களை, முனிவர்களை, வாட்ட ஆரம்பித்தான். பின்பு இந்திரனின் துணைவி ஷசியையும் தனக்குத் துணைவியாக ஆகும்படி வற்புறுத்த ஆரம்பித்தான். ஆனால் இந்திராணியோ இதற்கு உடன்படவில்லை. அவள் எப்படியாவது இந்திரனைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினாள். தன் இஷ்ட தேவதையின் உதவியைக் கொண்டு காடு, மலை கடல் கடந்து இந்திரனை ஒருவாறு கண்டுபிடித்தாள். அங்கு சென்று அவனை சந்தித்து, அவனுக்கு தைரியம் கொடுத்து அவனை மீட்டெடுத்தாள். மீண்டும் அவன் இந்திர பதவி பெற உதவினாள். இவ்வாறு ஷசி தன் கணவனை மட்டும் திரும்பப் பெறவில்லை, தேவர்களுக்கு அவர்களது தலைவனையும் திரும்பப் பெற்றுக் கொடுத்தாள்.

ஷசியை போன்றே மகாபாரதத்தில் இன்னொரு பெண் ஹீரோ தமயந்தி. கலியின் சாபத்துக்கு ஆளான நளன் தன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சில காலம் அஞ்ஞாதவாசம் இருக்க நேரிட்டது. அவன் அஞ்ஞாதவாசக்காலம் முடியும் தருணம் நெருங்குகையில் நளன் எங்கு ஒளிந்திருக்கிறான் என்று தேட விரும்பினாள் தமயந்தி. அவனைக் கண்டுபிடிக்க ஒரு திட்டம் போட்டாள். தன் கணவனுக்கு மட்டுமே பதில் தெரிந்த விடுகதையைச் சொல்லித் தன் தூதனை ஒவ்வொரு ராஜ்ஜியமாக அனுப்பி வைத்தாள். இப்படி நளனைக் வலைவீசித் தேடும்போது அவன் ரிதுபர்ணன் என்னும் ராஜாவின் சபையில் பாஹுகன் என்ற பெயரில் உருவம் மாறி ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொண்டாள். ரிதுபர்ணனின் சபையில் அவள் தன் தூதனை விட்டுத் தனக்கு இரண்டாவது மணம் நடக்க இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லச் சொன்னாள். இதை நிஜம் என நம்பிய நளன் இரவோடு இரவாக தமயந்தியின் தந்தையின் வீட்டுக்கு விரைந்தான். அப்பொழுதே அவனுடைய அஞ்ஞாதவாசம் முடிய, நளன் தன் மனைவி குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்தான்.

இப்படிப்பட்டப் பெண் வீராங்கனைகளைப் பற்றிப் பேசும்போது சாவித்திரியின் கதையை நினைவுகூராமல் இருக்க முடியாது. சாவித்திரி, தன் கணவன் சத்யவானின் உயிரைக் காப்பாற்ற யமதர்மராஜனுடனேயே சொற்போர் புரிந்த வீராங்கனை. சத்யவானின் உயிரை இழுத்துக் கொண்டு போன காலனை நெடுந்தூரம் பின்தொடர்ந்து, அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, சாதுரியமாகப் பேசி, அவனிடமிருந்து தன் கணவனின் உயிரை திரும்பப் பெற்றாள்.

சாவித்திரியின் கதை ஆச்சரியப்படும் வகையில் மிக அழகாக காம்பெல்லின் Hero Myth கோட்பாட்டுக்குள் பொருந்துகிறது. சாவித்திரி மிக எளிமையாகத் தன் மணவாழ்க்கையைத் தொடங்கி, தன் கணவனின் மரணத்திற்குப் பிறகு அவன் உயிருக்கான போராட்டத்தில் ஒரு உயர்ந்த பரிணாமம் தொட்டு, அவனை உயிரோடு மீட்ட பிறகு மீண்டும் அவள் கணவனுக்குப் பின் உறுதுணையாக நிற்கும் ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கைக்கே திரும்புகிறாள்.

சாவித்திரியைப் பற்றி பேசும்போது, நம்ம ஊர் பத்தினி தெய்வமான கண்ணகியை மறந்துவிட முடியுமா? பாவம் கண்ணகி, சாவித்திரியைப் போல அவளால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்றி இவ்வுலகில் அவனோடு இணைய முடியவில்லை.

ஆனால் அவளால் கோவலனின் மேல் விழுந்த வீண் பழியைத் துடைத்தெறிய முடிந்தது. மானத்தை உயிருக்கு மேலாகக் கருதிய தமிழ்ச் சமூகத்தின் வீரத் தமிழ்மகளல்லவா அவள். கோவலனின் மானத்தைஅவள் காப்பாற்றியதே அவனை உயிருடன் திரும்பப் பெற்றுவிட்டதாக ஆகிறது. நீதி கேட்டு அரசவையில் அவள் எழுப்பிய குரல் அன்று பாண்டிய நாட்டையே வேரோடு உலுக்கியது மட்டுமல்லாமல் இன்றுவரை நம் சமூகத்தின் கூட்டு நினைவில் (collective consciousness) ரீங்காரித்துக்கொண்டே இருக்கிறது.

சாவித்திரியைப் போலவே கண்ணகியும் ஒரு சராசரிப் பெண்ணாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சந்தர்ப்பவசத்தால் தன் கணவனின் மேல் விழுந்த வீண் பழியைத் துடைக்க வேறொரு உயர் நிலைக்கு எழுந்து, அவள் வேண்டியதை அடைந்து, பின் தன் கணவனுடன் மேலுலகத்தில் ஒன்று சேர்கிறாள்.

நம் இதிகாசங்களும் காவியங்களும் மட்டும் அல்ல, நம்முடைய புராணங்களும் இப்படியான மகளிரைப் பற்றிப் பேசுகின்றன.

பாகவதப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கண்ணனின் மனைவி சத்தியபாமாவின் கதை கைகேயி – தசரதனின் கதையை நினைவுபடுத்துகிறது. சத்தியபாமா சத்ரஜித் என்னும் யாதவகுலச் சிற்றரசனின் மகள். அவள் பூமாதேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறாள். சத்தியபாமா சிறு வயதிலேயே வீரவிளையாட்டிலும், போர்க்கலையிலும் தேர்ச்சி பெற்றவள்.

கிருஷ்ணனின் நரகாசுர சம்ஹாரத்தின்போது அவருக்கு இணையாகப் போர் புரிந்தாள் என்று பாகவதம் சொல்கிறது. யுத்தத்தின் போது, நரகாசுரனின் அஸ்திரம் ஒன்று கிருஷ்ணனைப் பதம் பார்த்துவிட, அதைக் கண்டு கொதித்தெழுந்த சத்தியபாமா நரகாசுரன்மேல் அம்பு மழை பொழியலானாள். மயங்கி விழுந்த கிருஷ்ணன் அதற்குள் விழித்துக்கொள்ள, சத்தியபாமாவின் உதவியுடன் மறுபடி வில் ஏந்திப் போர் புரிந்து நரகாசுரனைக் கொன்றார்.

ஒரு பக்கம் சத்தியபாமா தன் கணவனுக்கு இணையாகப் போர் புரிந்து ஒரு கொடிய அரக்கனைக் கொல்ல உதவினாளென்றால், காமதேவனுக்குப் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்ததே அவன் மனைவி ரதிதான்.

ஸ்கந்த புராணத்தில் காமதேவன் – இரதிதேவியின் கதை கூறப்படுகிறது. அரக்கர்களை அழிக்க தேவர்களுக்கு சிவனின் குமரன் தேவைப்படுகிறான். குமாரசம்பவம் நேர்வதற்கு, சிவனும் உமையும் ஒன்று சேர வேண்டும். அதற்காக காமதேவன் சிவனின் தவத்தைக் கலைக்க முற்படுகிறான். ஆனால் சிவனோ தன் தவத்தைக் கலைத்தற்காகக் கோபம் கொண்டு காமனை எரித்து விடுகிறார். கணவனை இழந்த ரதி உமையின் உதவியை நாடி தன் கணவனை மறுபடி உயிர்பித்தெழுப்ப முயல்கிறாள். உமையின் சிபாரிசால் சிவன் காமனுக்கு உயிர்ப் பிச்சை அருளுகிறார். காமன் தன் காதலி ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய அரூபனாக (உருவமற்ற வடிவத்தில்) உயிர்த்தெழுகிறான்.

ரதி தன் காதலனை மீட்டெடுத்து எப்படி அவனுடன் மறுபடி இணைந்தாள் என்ற கதை பாகவதப் புராணத்தில் வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. காமதஹனத்திற்குப் பின், ரதி காமதேவனைத் திரும்பப் பெற கடும் தவம் மேற்கொள்கிறாள். உமையிடம் காமனுக்காகக் கோரிக்கை வைக்கிறாள். அவள் கோரிக்கையை ஏற்ற உமை, காமன் தனது அடுத்த பிறவியில் கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னனாகப் பிறப்பான் என்றும், ரதி மாயாவதியாக மறு பிறவி எடுத்துத் தன் கணவனுக்காக, சம்பாரன் என்னும் அரக்கன் வீட்டில் காத்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறாள். இதற்கு உடன்பட்டு ரதியும் மாயாவதியாக உருவமெடுத்து சம்பாரன் வீட்டுச் சமையல்காரியாகிறாள்.

அங்கு, சிறு குழந்தையாக வந்து சேரும் பிரத்யும்னனை, ரதி வளர்த்து ஆளாக்கி, அவனுக்கு மந்திரக்கலை மற்றும் போர்க்கலையைப் பயிற்றுவித்து சம்பாரனை சம்ஹாரம் செய்ய உதவுகிறாள். பின் பிரத்யும்னனுக்கு அவனது முன்கதையை நினைவூட்டி, அவன் காமதேவனின் மறுபிறப்பெனப் புரியவைத்து, அவனுடன் மீண்டும் இணைகிறாள். ரதி தனது கணவனுக்கு மனைவியாக மட்டும் இல்லாமல், அவனுக்கு ஒரு தாயாகவும், ஆசானாகவும் உருவெடுக்கும் இந்தக் கதை ஒரு பெண்ணைச் சித்தரித்த விதத்தில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

இந்த கதைகளைப் படிக்கும்போதோ, கேட்கும்போதோ கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் இப்பெண்கள், ஆண்களைப்போல் அல்லாது, கத்தியையும், வாளையும் ஏந்தாமல், தங்களது மனோ பலத்தையும், கூர்மையான அறிவாற்றலையும் மற்றும் தங்கள் சொல்வன்மையையும் (power of persuasion) மட்டுமே ஆயுதங்களாக ஏந்தி, களத்தில் குதித்திருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் பொதுவாக புராணக் கதைகளில் வரும் பெண்களைக் கற்புக்கரசிகளாக மட்டுமே சித்தரிப்பது வழக்கம். ஒரு பெண்ணின் கற்பில்தான் அவளை உடையவனது நன்மை அடங்கியுள்ளதாகவும், அவளது கற்புதான் அவனுடைய கவசம் என்றும் அச்சமூகம் நம்பியதாகத் தெரிகிறது.

ஆனால், இந்தக் கதைகளில் வரும் பெண்களை, வெறும் கற்புக்கரசிகளாக மட்டுமே சித்தரிப்பது, தன் கணவன்மார்களுக்கு அவர்கள் காட்டிய பாலியல் விசுவாசத்தை மட்டுமே வைத்து இப்பெண்களை எடை போடுவது, இவர்களை ஒரு மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும்.

பெண்ணினம் என்பது மிகவும் வலிமையான ஒரு சக்தி. அது உக்ரமானதும் கூட. அதனால்தான் நம் உக்கிர தேவதைகளில் மாரியம்மன், சூலி, நீலி பத்திரகாளி போன்ற பெண் தேவதைகள் அதிகமாக இருக்கின்றனர். தனக்குப் பிரியமான ஒன்றைக் காப்பாற்ற விண்ணையும் மண்ணையும் நகர்த்தப் கூடியவர்கள் பெண்கள். தங்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களுக்காக, தங்கள் உயிரைக்கூட பணயம் வைக்கக்கூடியவர்கள். அப்படிப்பட்ட பெண்கள் தேவை எழுந்தால் எத்தனை தூரம் வேண்டுமானாலும் தாண்டக்கூடியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

காம்பெல்லின் ஹீரோவுக்கான தேடலில், இந்தியக் கதைகளில், அவருக்கு ஆண் ஹீரோக்கள் சிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால், ஏழு மலை தாண்டி, ஏழுகடல் தாண்டிச் சென்று, தனக்கான சவாலில் வென்று, ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்த பெண் வீராங்கனைகள் நிச்சயம் கிடைத்திருப்பார்கள், அவர் மட்டும் தேடியிருந்தால்.

******