Posted on Leave a comment

திராவிட மாயை: எண்பது வருடங்களின் காத்திருப்பு | வெங்கட்குமார்



மகாத்மா
காந்தி என்பவர் வர்க்கப் போராட்டத்தின் எதிரி, ஏகாதிபத்தியத்தின் ஏவலாள், முரண்பாடுகளின்
மொத்த உருவம் என்றெல்லாம் இன்றைய இந்திய அரசியலிலும் குறிப்பாக தமிழகத்திலும் இடதுசாரிகளால்
லஜ்ஜையில்லாமல் பேசப்படுகிறது, எழுதப்படுகிறது. மகாத்மாவை விமர்சிப்பதும் அவரை வெறும்
பழைய பஞ்சாங்கமாக சித்தரிப்பதும் இடதுசாரிகளிடையே சகஜம். ஆனால் இந்திய அரசியல் வெளியில்
பெரும்பகுதி மகாத்மாவின் ஆளுமைக்கு உட்பட்டிருந்தபோது இடதுசாரிகளின் இடம் மற்றும் படிநிலை
என்ன ஆராய்ந்து பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. மகாத்மாவின் முன்பு இவர்கள்
மண்டியிடாத குறைதான். இதை உறுதிப்படுத்த அவர்கள் தரப்பு ஆவணங்களே போதும்.
‘காந்தி
– ஜோஷி கடிதப் போக்குவரத்து’ என்கிற புத்தகம் முதலில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு
பிறகு தமிழில் தோழர் இராமமூர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது (1945).
“கம்யூனிஸ்ட்
கட்சியினுடைய வரவு செலவுக் கணக்குகள் தணிக்கைக்கு உட்பட்டவையா? அப்படியாயின் நான் அதைப்
பார்க்கலாமா” என்பது மகாத்மாவின் கேள்வி. அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர் பி.சி.ஜோஷியின் பதில் இப்படியிருந்தது.
“எங்கள் கணக்குகள் ஒரு வியாபார கம்பெனியின்
கணக்குகளைப் போன்றில்லாமல் இருக்கலாம். ஆயினும், பல வருஷங்களாக சட்ட விரோதமாக இருந்த
காலத்தில் கணக்குகளை வைத்துக்கொள்வதே மிகப் பெரிய குற்றம் என்ற பரம்பரையில் வந்துள்ள
நாங்கள், இப்பொழுதுதான் கணக்கு வைத்துக்கொள்ள கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்த
விரும்புகிறேன். எனினும் உங்கள் பரிட்சையில் நாங்கள் தேர்ந்துவிடுவோம்; எங்களுக்கு
நீங்கள் பாஸ் போட்டுவிடுவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.”
மக்களால்
கௌரவிக்கப்பட்ட நம்முடைய தேசிய இயக்கத்தின் மூத்தோர்களின் முன்னே விசாரணைக்குத் தங்களை
நிறுத்திக்கொள்வது பெருமை என்பதுதான் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
1944ல்
தொடங்கிய இந்தக் கடிதப் பரிமாற்றம் 1945 மே மாதத்தில் நிறைவடைந்திருக்கிறது. இந்திய
அரசியல் வரலாற்றில் காந்தியவாதிகளுக்கும் பொதுவுடைமைகாரர்களுக்கும் இருந்த சிறப்பம்சங்களை
குறிக்கும் ஆவணமாக இதைக் கொள்ளலாம்.
எல்லாத்
திசைகளிலும் மாசுபட்டிருக்கும் இன்றைய பொதுவெளியில் இந்தக் கடிதப் போக்குவரத்தும் அதன்
பின்னால் உள்ள இரு தரப்பின் கருத்தாக்கங்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ரசிக்க
முடியாத ஒரு கடிதத்தைப் பற்றியும் சொல்கிறேன்.
இந்தக்
கடிதம் முதலில் ஈ.வெ.ராவின் ‘குடியரசு’ இதழில் வெளியிடப்பட்டது (02-03-1930). ஆனைமுத்து
தொகுத்துள்ள ‘ஈ.வெ.ரா சிந்தனைகள்’ நூலிலும் இந்தக் கடிதம் இடம்பெற்றுள்ளது. ஒரு அரை
நூற்றாண்டுக் காலமாக திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணியும் இது குறித்துப் பேசியுள்ளார்,
எழுதியுள்ளார்.
ஜகத்குரு
சிருங்கேரி சங்கராச்சாரியார் ஈ.வெ.ராவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு
ஈ.வெ.ரா பதில் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
“உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி
எங்கள் அபிப்ராயங்களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சகாயம் செய்து அனுக்கிரகிக்க வேண்டும்
என்று தேவதா பிரேரணை உண்டாக்கியிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்ம பத்தினியும்
இந்த சமஸ்தானத்துக்கு வந்து ஶ்ரீ சாரதா சந்திரமௌளீதர ஸ்வாமிகள் பிரசாத அனுக்கிரஹம்
பெற்று இப்போதிலும் அதிகமான சிரேயஸை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஶ்ரீமுகம் எழுதி வைத்து
அனுப்பலாயிற்று” என்கிறது இந்தக் கடிதம்.
இதைத்
தொடர்ந்து கௌரவமான முறையில் அழைப்பை ஏற்க மறுத்து ஈ.வெ.ரா எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையெல்லாம் படிக்கும்போது பொதுவுடைமைக்காரர்கள் போலவே பகுத்தறிவுக்காரர்கள் மீதும்
ஒரு மரியாதை உண்டாகுகிறதல்லவா.
இந்த
இடத்தில் தலையிட்டுப் பிரச்சினையை கலப்புகிறார் பத்திரிக்கையாளர் சுப்பு. இவர் எழுதிய
‘திராவிட மாயை – ஒரு பார்வை’ முதல் பகுதி புத்தகம். இந்தக் கடிதப் போக்குவரத்தின் உண்மை
நிலையை உரித்துக்காட்டுகிறது.
“1930ம் ஆண்டில் சிருங்கேரி பீடத்தில்
சங்கராச்சாரியாராக இருந்தவர் ஶ்ரீசந்திரசேகர பாரதி சுவாமிகள். ஆனால் குடியரசு வெளியிட்டுள்ள
கடிதத்தில் ஶ்ரீபிரஸ்தா வித்யானந்த நாத பாரத சுவாமிகள் என்ற பெயர் இருக்கிறது. இவர்
யார்? இவர் சிருங்கேரி பீடாதிபதியா?”
இப்படிக்
கேட்கிறார் சுப்பு.
“கடிதத்தின் தலைப்பில் உள்ள “நிஜ
சிருங்கேரி” என்ற வார்த்தையும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. சிருங்கேரி மடத்தின்
ஶ்ரீமுகத்தில் “நிஜ சிருங்கேரி” என்று எழுதும் வழக்கம் இல்லை”
என்று
போட்டுடைக்கிறார் சுப்பு.
இதில்
என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம். 1930ல் வெளியிடப்பட்ட இக்கடிதம் பற்றி 2014 வரை யாரும்
அக்கறை கொள்ளவில்லை, ஆய்வு செய்யவில்லை. தமிழ்ச் சமுதாயம் எண்பது வருடங்களாக சுப்புவிற்காகக்
காத்திருந்திருக்கிறது.
‘திராவிட
மாயை ஒரு பார்வை’ புத்தகங்களின் முதல் பகுதி 1917 முதல் 1944 வரையிலான காலகட்டம். இரண்டாம்
பகுதி 1944 முதல் 1967 வரை. மூன்றாம் பகுதி 1967 முதல் 1981 வரை.
நூறு
வருடங்களுக்கு மேற்பட்ட தமிழக அரசியல் வரலாற்றின் பகுதியைப் பற்றி புதிய கேள்விகளைக்
கேட்டதற்காக சுப்புவை அவசியம் பாராட்ட வேண்டும். புதிய தகவல்களையும் இவர் நிறையவே சேகரித்திருக்கிறார்.
“மதராஸ் ராஜதானியின் முதலமைச்சராக
இருந்த ராஜாஜியை (1952) காங்கிரஸ்காரர்கள் எதிர்த்ததற்குக் காரணம் குலக் கல்வி திட்டம்
அல்ல, ஒன்றாக இருந்த மாநிலம் ஆந்திரா, மதராஸ் என்று பிரிக்கப்பட்டப் பிறகு தமிழ்நாட்டுக்
காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியின் தயவு தேவைப்படவில்லை என்பதுதான் காரணம்”
என்கிறார்
சுப்பு.
“பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய
வகுப்பினருக்கும் இலவசக் கல்வி தருவதுதான் சமூகநீதி”
என்று
முதல்வர் சி. என். அண்ணாதுரை சட்டமன்றத்தில் பேசியதை சுப்பு பதிவு செய்துள்ளார்.
ஊழல்
குற்றச்சாட்டுகளுக்கு உட்படாத காவல்துறை அதிகாரிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வசதி
செய்துகொடுத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்கிற செய்தி மூன்றாம் பகுதியில் சொல்லப்படுகிறது.
பல
ஆண்டுகள் முயன்று உழைத்ததின் பலனாகத்தான் இந்தத் தொகுப்பு உருவாகியிருக்கிறது என்றாலும்
இது கால வரிசைப்படி இல்லை என்பது ஒரு குறை. அத்தியாயங்களின் நகர்வு நேர்க்கோட்டில்
இல்லை. நூலில் அங்கங்கே திராவிட இயக்கத்தவரின் பாஷா பிரயோகத்தை எள்ளி நகையாடும் சுப்பு
தானும் அந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்பது இன்னொரு குறை. அதைத் தவிர்த்திருக்கலாம்.
திராவிட
மாயை – ஒரு பார்வை, (மூன்று பகுதிகள்), சுப்பு, ரூ 400, RARE PUBLICATIONS
SRI
PADMAVATHI NIVAS, 2ND FLOOR, #2/9 Dr. SADASIVAM STREET, CHENNAI – 600017, MOBILE:
70100 68836.
காந்தி
– ஜோஷி கடிதப் போக்குவரத்து, மொழிபெயர்ப்பு: பி. ராமமூர்த்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரைவேட் லிமிடெட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை – 600098