Posted on Leave a comment

வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

வீர் சாவர்க்கர் நம் எல்லோருக்கும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அறிமுகமானவர். நம்நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் அவருடைய பங்கு குறித்து நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் சாவர்க்கரின் பங்களிப்பு வெறும் தேசத்திற்கான விடுதலைப் போராட்டத்துடன் முடிந்துவிடவில்லை. அவருடைய சமுதாயப் பங்களிப்பு மிகவும் உன்னதமானது, அதே நேரம் பலருக்கும் தெரியாதது. Continue reading வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

Posted on Leave a comment

அந்தமானிலிருந்து கடிதங்கள் – 9வது கடிதம் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

ஒன்பதாவது
கடிதம்
செல்லுலார்
சிறை
போர்ட்
ப்ளேயர்
6-7-1920
அன்பிற்குரிய
பால்,
நீ
இங்கு வருவதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்த போது எனக்கு மிகுந்த மன உளைச்சல் உண்டாகியது.
ஆனால் 2-6-1920 தேதியில் நீ போட்ட கடிதம் அந்த மன உளைச்சலை நீக்கியது. நீ என்னைப் பிரியும்
போது எப்படி இருந்ததோ அப்படியேதான் என் உடல் நிலை இப்போதும் இருக்கிறது. மேலும் மோசமாக
ஆகவில்லை. ஆனால் நீ சென்ற பிறகு நம் சகோதரரின் உடல் நிலை மிகவும் மோசமாக ஆகியிருக்கிறது.
பிரச்சினை அதேதான். அஜீரணமும் கல்லீரல் கோளாறும். அவருடைய தற்போதைய எடை 106 பவுண்டுகள்
(48கிலோ). நான் இப்படி எழுதுவதனால் எங்கள் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக நினைத்துவிட
வேண்டாம். அப்படி இல்லை. நான் உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். இதைவிட மோசமாக ஏதேனும் ஆனால்
அதைப் பற்றியும் நான் உனக்குத் தகவல் தெரிவிப்பேன்.
ஒருவழியாக
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நூற்றுகணக்கானோர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்காகப் பெரிய அளவில் உழைத்த பம்பாய் தேசிய யூனியன், நம் தலைவர்கள் மற்றும் இந்திய
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மாபெரும் கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்து
நடத்திய நம் தேசப்பற்று மிக்க மக்கள் ஆகியோருக்கு நன்றி. அந்த மனுவில் கையெழுத்து வாங்க
நடந்த மாபெரும் இயக்கத்தில் குறைந்த காலத்தில் கிட்டத்தட்ட 75000 பேர் கையெழுத்திட்டதனால்
அது அரசிற்கு மாபெரும் அழுத்தத்தைக் கொடுத்தது என்பது உண்மை. எப்படி இருந்தாலும் இது
அரசியல் கைதிகளின் மற்றும் அவர்கள் போராடிய நோக்கம் இரண்டின் தார்மிக நிலையையும் மேலும்
உயர்த்தியது. மேலும் நாங்கள் விடுதலை அடைய வேண்டும் மக்களே விரும்பியதால், இப்போது
நாங்கள் ஒருவேளை விடுதலை அடைந்தாலும் அந்த விடுதலை மேலும் தகுதி வாய்ந்ததாக ஆகும்.
எங்கள்பால் கருணையும் அக்கறையும் காண்பித்த நாட்டுமக்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றி
சொன்னாலும் தகும்.
நாங்கள்
எதிர்பார்த்ததையும் விட அதிகமாக அவர்கள் எங்கள்பால் அக்கறை கொண்டதாகவே நான் நினைக்கிறேன்.
அவர்கள் முயற்சிகள் முழுவதும் பலனளிக்காமலும் இல்லை. எங்கள் இரண்டு பேருக்கும் பொது
மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றாலும் எங்களுடன் இருக்கும் நூற்றுகணக்கான அரசியல் கைதிகளுக்கு
விடுதலை கிடைக்கிறது என்ற செய்தி எங்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. நாங்கள் கடந்த எட்டு
வருடங்களாக செய்த வேலைமறுப்புகள், கொடுத்த கடிதங்கள், மனுக்கள், பத்திரிகைகள் கொடுத்த
அழுத்தங்கள் எல்லாவற்றிற்கும் பலன் கிடைத்திருக்கிறது.
2-4-1920
அன்று நான் அரசு சமீபத்தில் வழங்கியிருக்கும் பொது மன்னிப்பு குறித்து ஒரு புதிய மனுவை
அளித்துள்ளேன். அதில் 1918ம் ஆண்டு நான் சமர்ப்பித்த மனுவில் நான் பொது மன்னிப்பை இன்னமும்
சிறையில் இருப்போருக்கும் மற்றும் மற்ற நாடுகளில் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும்
நீட்டிக்க வேண்டும் என கோரியிருந்தேன். அதில் இந்திய அரசியல் சூழல் குறித்த என்னுடைய
நிலைப்பாட்டையும் தெளிவாக விளக்கியிருந்தேன். குறிப்பாக அதிகாரவர்க்கத்தில் விவாதிக்கப்பட்டு
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் விளக்கமளித்திருந்தேன்.
இயற்கையில்
கிடைக்கும் வளங்களைப் பெற உழைக்கும் மனிதகுலத்தை மொத்த பூமிக்கும் குடிமகன்களாகப் பார்க்க
வேண்டும் என்ற சிந்தனையை இந்த நாடு மானுடத்திற்கு வழங்கியிருக்கிறது. சூரியனுக்குக்
கீழ் வரும் இந்த பூமியில் இருக்கும் அனைவரும் ஒரே குடியை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினைகளும்
வேறுபாடுகளும் தவிர்க்கமுடியாதவை என்றாலும் அவை செயற்கையானவையே. எனவே அரசியல் கோட்பாடுகள்
மற்றும் கலைகளின் இறுதி இலட்சியம், நாடுகள் அனைத்தும் இணைய வேண்டும் என்பதே. அவற்றின்
சுய தேவைகளுக்காக அரசியல் கோட்பாடுகள் இருக்கலாம். எப்படி ஒரு உயிரின் தேவைக்கு ஒவ்வொரு
அணுவும் இருக்கிறதோ, அப்படி குடும்பங்களும் இனக்குழுக்களும் சேர்ந்து ஒரு தேசத்திற்கான
தேவைகளை பூர்த்தி செய்யும். ஆனால் மானுடம் என்பதே எல்லாவற்றிற்கும் மேலான தேசப்பற்று.
ஆகவே பல முரண்களைக் கொண்ட இனக்குழுக்களையும் தேசங்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றி
கண்ட எந்த ஒரு ராஜ்ஜியமோ அல்லது காமன்வெல்த்தோ, அது இந்த உயர்ந்த இலட்சியத்தை அடைவதில்
ஒரு படி முன்னே சென்றிருக்கிறது என்றே அர்த்தம். அந்த காமன்வெல்த் அது பிரிட்டிஷாக
இருக்கட்டும் அல்லது இந்தியனாக இருக்கட்டும் அல்லது வேறு நல்ல பெயர் கிடைக்கும் வரை
ஆர்யன் காம்ன்வெல்த் என்று கூட அழைக்கலாம், அதற்கு அந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய நான்
மனப்பூர்வமாக ஒத்துழைப்பேன். இந்த நோக்கத்திற்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆகவே அரசு தங்கள் கண்ணோட்டத்தை மாற்றி அதன் மூலம் இந்தியா அரசியல்சட்டத்தின் அடிப்படையில்
சுதந்திரத்தை நோக்கி முன்னேற வழிவகுத்திருக்கிறது என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதன்மூலம்
என்னைபோன்ற புரட்சியாளர்கள் தங்கள் பாதையை விடுத்து இங்கிலாந்துடன் ஒரு கௌரவமான ஒப்பந்தத்திற்கு
உடன்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் முன்னேற்றத்திற்கும் ஒரு வழி இருக்கிறது.
மானுடமே
மேலான தேசபக்தி என்ற இந்தச் சிந்தனைதான் எங்களுக்கு அந்த மானுடத்தின் ஒரு பகுதி சீரழிக்கப்படும்
போது கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் நாங்கள் வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை
போன்ற புரட்சியைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் வலிமையை வலிமையால் எதிர்கொள்வது என்று நாங்கள்
முடிவெடுத்த போதும்கூட நாங்கள் எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை.ஏனென்றால் வன்முறை
என்பது உயிரை மாய்ப்பது. நான் எப்போதும் எனக்காகவோ அல்லது என் தேசதிற்காகவோ வன்முறையை
ஒரு அணுகுமுறையாக யோசித்துக்கூடப் பார்த்ததில்லை. அதனாலேயே வலிமை குன்றிய நேர்மையாளர்கள்
மீது வன்முறை பிரயோகிக்கப்படும்போது நான் அதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன்.
இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, போராளிகள் வன்முறையைக் கைக்கொள்ளும்போது
நான் அதனை எதிர்த்தே வந்திருக்கிறேன். அந்நியர்கள் இந்தியர்களை ஆள்வதை எதிர்ப்பதைப்
போலவே நான் இந்தியாவில் நிலவும் சாதி மற்றும் தீண்டாமை பிரச்சினைகளையும் எதிர்த்து
வந்திருக்கிறேன்.
நாங்கள்
வேறு வழியில்லாமல்தான் புரட்சியைத் தேர்ந்தெடுத்தோம்; அதன் மீது விருப்பம் கொண்டு அல்ல.இந்தியா
மற்றும் இங்கிலாந்தின் நோக்கங்கள் பாதுகாக்கப்பட அவற்றின் லட்சியங்கள் அமைதியான முறையில்
சுமுகமான பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமாகப் படிப்படியாக முன்னேற வேண்டும் என்றே நாங்கள்
நினைக்கிறோம். அதற்கு வாய்ப்பிருக்கும் பட்சத்தில் அமைதியான வழிமுறைகளை கைக்கொள்ளும்
முதல் ஆளாக நான் இருப்பேன். வளர்ச்சிக்கான சக்திகள் தொடர்ந்து தடையில்லாமல் முன்னேற,
புரட்சி போன்ற அரசியல் சட்ட மீறல்களை நாங்கள் கைவிடுவோம்.
எங்களுடைய
சட்ட மீறல்களுக்கான காரணங்களை அரசாங்கம் தனது மாற்றங்கள் மூலம் நீக்குமானால் அதன் காரணமாகப்
புரட்சியும் ஓயும். முன்னேற்றமே எங்கள் எல்லோருடைய லட்சியமாவும் அமையும். அத்தகைய மாற்றத்திற்கு
ஒரு தொண்டனாக நான் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். எங்கள் தலைமுறையின் மிக பெரிய
கனவான இந்த நாட்டின் சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி அது செல்லுமானால் அதற்கு நான் முழுமூச்சுடன்
உழைக்கத் தயார்.
நான்
புரட்சியாளர்களின் முகாம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த போதும் என்னுடைய கருத்து
இதுவாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு பன்னிரண்டு
வருடங்கள் ஆனபின்பும் என் எண்ணம் அதுவாகத்தான் இருக்கிறது. வாள்முனையில் எங்களுக்கு
விதிக்கப்பட்ட சட்டங்களை அனுசரிக்கவும் அவற்றிற்கு விசுவாசமாக இருப்பதும் எங்களுக்குக்
கஷ்டமாக இருப்பது உண்மைதான். அதிலும் அடக்குமுறைக்கு முகமூடியாக அரசியல்சட்டம் பயன்படுத்தப்படும்போது
அதற்கு விசுவாசமாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டே நாம் நடக்க
வேண்டும் அதுவே நம் கடமை என்றே நாங்கள் எப்போதும் நினைத்து வந்திருக்கிறோம். சமுதாயத்திற்கு
நன்மையைப் பயக்கும் எந்த சட்டத்தையும் மதிப்பது நேர்மையான மனிதர்களின் இயல்பாகவே இருந்திருகிறது.
இந்திய
காபினெட் மற்றும் உயர் அதிகாரிகள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்று. “இந்தியாவில்
இருந்த பண்டைய மன்னர்களை எதிர்த்து நீங்கள் புரட்சி செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அவர்கள் யானையின் காலால் மிதிபட வைத்திருப்பார்களே
என்பது.
அதற்கு என்னுடைய பதில்: இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்து உட்பட உலகின் பல நாடுகளிலும்
புரட்சி செய்பவர்களின் கதி அதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஏன் ஜெர்மானியர்கள் தங்களிடம்
பிடிபட்டவர்களை ஒழுங்காக நடத்தவில்லை, அவர்களுக்குப் பசிக்கு உணவாக பிரெட்டும்வெண்ணெய்யும்
கூட வழங்கவில்லை என்று உலகம் முழுக்க பிரிட்டிஷ் மக்கள் பிரசாரம் செய்கிறார்கள்? ஒரு
காலத்தில் போர்க் கைதிகளை தார் மற்றும் மொலோச் போன்ற போர்க்கடவுள்களுக்கு பலியாக கொடுக்கும்
வழக்கம் கூடத்தான் இருந்தது. ஆனால் இன்று நாம் நாகரீகத்தில் முன்னேறியிருக்கிறோம்.
அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முயற்சியால் விளைந்த ஒன்று. ஆகவே அதன் பலன் ஒட்டுமொத்த
மனிதகுலத்திற்கும் போய்ச் சேர வேண்டும். காட்டுமிராண்டித்தனமான காலங்களையும் ஒப்பிட்டு
எனக்கு ஒழுங்கான விசாரணையும் தண்டனையும் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது உண்மைதான்.
எனக்கு நரமாமிசம் சாப்பிடும் மக்கள் கூட்டம் வழங்கும் தண்டனையைவிட மேலான தண்டனையைத்தான்
வழங்கியிருக்கிறோம் என்று அரசும் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒன்றை
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பண்டைய காலங்களில் ஆட்சியாளர்கள் புரட்சி செய்பவர்களைக்
கொடுஞ்சித்ரவதை செய்ததைப் போலவே தங்கள் கை ஓங்கியவுடன் புரட்சியாளர்களும் ஆட்சியாளர்களை
சித்ரவதை செய்திருக்கிறார்கள். என்னையும் மற்ற புரட்சியாளர்களையும் நியாயமான முறையில்
நடத்தி இருக்கிறோம் என்று பிரிட்டிஷ் மக்கள் நினைத்தால் அவர்கள் ஒன்றை நினைவில் இருத்த
வேண்டும். இங்கிருக்கும் நிலைமை தலைகீழாக மாறினால் எங்கள் கைக்கு அதிகாரம் வரும்போது
நாங்கள் உங்களை இதே போல நியாயமான முறையில்தான் நடத்துவோம்.
இந்த
மனுவின் வாயிலாக எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று பெரிய நம்பிக்கை எதுவும் கொள்ள
வேண்டாம். எங்களுக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை, அதனால் விடுதலை ஆகாவிடினும்
எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமும் இல்லை. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் மனோநிலையில்
நாங்கள் இருக்கிறோம். பால், உன்னால் முடிந்ததை நீ முயன்றாய். உன் விடாமுயற்சியால் இன்று
பல அரசியல் கைதிகள் விடுதலை ஆகிறார்கள். நாங்கள் இருவர் விடுதலை ஆகாவிட்டாலும் பல நூறு
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உன் முயற்சி வழிகோலியிருக்கிறது.
உன்னை
நல்ல ஆரோக்கியத்துடன் பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நண்பர்களுக்கும் மற்ற
உறவினர்களுக்கும் என்னுடைய அன்பையும் விசாரிப்புகளையும் கூறவும்.
என்றும்
உன் அன்பிற்குரிய சகோதரன்
தாத்யா.


Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் (எட்டாவது கடிதம்) | சாவர்க்கர், தமிழில்: VV பாலா



எட்டாவது கடிதம்
செல்லுலர் சிறை.
போர்ட் ப்ளேயர்
21-9-1919
அன்பிற்குரிய சகோதரா,
நீ பம்பாய் சென்று
சேர்ந்ததும் தொடர்பு கொள்வாய் என்று நினைத்தேன். வழக்கத்துக்கும் மாறாக அதிக
நாள் காத்திருந்தேன். ஆனால் இதுவரையிலும் உன்னிடம்
இருந்து எந்த
த்
தகவலும் இல்லாததால் மேற்கொண்டு
காத்திராமல் நானே தொடர்பு கொள்வது எனத் தீர்மானித்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நீ என்னைப் பார்த்தபோது என் உடல்நிலை எப்படி இருந்ததோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது.
நீ வந்து பார்த்துச் சென்ற பிறகு ஒரு வாரத்திற்கு நன்றாக இருந்தது. அதன் பிறகு மலேரியாவோ
அல்லது வயிற்றுப்போக்கின் காரணமாகவோ எனது உடல் நிலை மோசமாகி, உடல் எடையும் குறைந்து
விட்டது. இது போல ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்குத் தொடர்வதால் உடல் எடை பெரிய
அளவில் குறைந்து விடுகிறது. சென்ற வருடம் நான் உனக்குக் கடிதம் எழுதும்போது என் எடை
சராசரியாக 99 பவுண்டுகள் இருந்தது. ஆனால் இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து
கடந்த சில மாதங்களில் 96 ஆகி, பிறகு 95 என்று குறைந்துவிட்டது. இப்போது எனக்கு ஓரளவு
நல்ல உணவும், ஓரளவு நல்ல அறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் என் நிலைமை
இன்னும் மோசமாக இருந்திருக்கும். என் உடல் எடை வேகமாகக் குறைந்துகொண்டு வந்தாலும் எனக்கு
நன்றாகப் பசி எடுக்கிறது. முன்பு போலில்லாமல் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் குறைந்திருக்கின்றன.
இதற்குக் காரணம் கடந்த பத்து மாதங்களாக எனக்கு உணவு மருத்துவமனையில்தான் வழங்கப்படுகிறது.
எனக்கு உடல் நிலை சரியில்லாததாலும் மலேரியா வந்ததாலும் மருத்துவமனையில் நோயாளியாகச்
சிகிச்சை அளிக்கிறார்கள். இதனால் கடுமையான வேலைகள் எனக்கு அளிக்கப்படுவதில்லை. இங்கே
சிறைவாழ்க்கையைப் பொருத்தவரை என்னுடைய உடல்நிலை மோசமான காரணத்தால் இங்குள்ள சிறை சூப்பரின்டண்டன்ட்
கூடுமான வரையில் என்னிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார். அப்படி அவர் என்மீது கூடுதல்
கவனம் செலுத்தும் போதிலும் என்னுடைய உடல் எடை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது என்பதன்
மூலம், இந்த மலேரியா மற்றும் வயிற்றுப்போக்கு எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது
என்பதைப் புரிந்துகொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது எனக்கு வயிறு சம்பந்தமான
பிரச்சினை எதாவது வந்து விடுகிறது. இங்கிருக்கும் வானிலை ஆரோக்கியத்திற்கு மிகவும்
ஊறு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இங்கே செல்லுலர் சிறையில் இத்தகைய வானிலையில்
இருப்பது என்பது இரட்டிப்பு ஆபத்தானதாக இருக்கிறது. கடுமையான உடல் உழைப்பால் நல்ல ஆரோக்கியமான
உடல் அமைப்பைப் பெற்றிருப்பவர்களும் கூட இங்கு வந்தால் அவதிப்படுவார்கள்.
இங்கிலாந்தில் அமைதிக்
கொண்டாட்டங்களின் போது இங்கே கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாகப் படிக்கப்பட்ட
உத்தரவு குறித்து இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா என்று எனக்குத்
தெரியவில்லை. அவ்வாறு தண்டனைக் குறைப்புப் பெற்றவர்கள் சிலர், இங்கே கைதிகள் காலனியில்
இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் அரசியல் கைதிகளைப் பொருத்தவரையில் வெறும்
வெற்று உத்தரவாதங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஒரு நாள் கூட தண்டனைக் குறைப்பு செய்யப்படவில்லை.
ஓரிரு பெங்காலி அரசியல் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காகத் தண்டனைக் குறைப்பு அளிக்கப்பட்டது.
உள்துறைச் செயலாளரின் பெயரில் ஒரு அறிக்கை படிக்கப்பட்டது. அரசியல் கைதிகளுக்கும் தண்டனைக்
குறைப்பு தருவதைப்பற்றி அரசு பரிசீலித்து வருவதாக அதில் கூறப்பட்டது. அந்தந்த மாகாண
அரசுகளிடம் கருத்தைக் கேட்டபின், உள்ளூர் சிறை அதிகாரிகளின் பரிந்துரையையும் கேட்டு,
கைதிகளின் நடத்தை குறித்த அறிக்கையையும் பெற்று இத்தகைய தண்டனைக் குறைப்பு வழங்கப்படுமாம்.
அதுமட்டுமல்லாமல் அந்தந்த கைதிகளின் தனிப்பட்ட கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட
பிறகே இறுதி முடிவு எடுக்கப்படுமாம். இத்தகைய நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்று
எந்தத் தேதியும் குறிப்பிடப்படவில்லை. இது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். நான்கு
வருடங்களுக்கு முன்பே இந்திய அரசு என்னிடம் பொது மன்னிப்பு வழங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படும்
என்று உறுதி அளித்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் இன்னும் நான்கு
வருடங்கள் கழித்து இதேபோல மீண்டும் ஒரு உத்தரவாதம் தரப்படலாம். அதேபோல கைதிகளின் தனிப்பட்ட
கருத்துகளைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் கொஞ்சம் சிக்கலானது. ஏனென்றால்
இந்திய அரசியல் சூழல் குறித்த ஒரு அரசியல் கைதியின் தனிப்பட்ட கருத்து என்னவாக இருக்கும்?
அதனை அரசு எவ்வாறு அறிந்து கொள்ளும்? அந்த நபர் சொல்லும் கருத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளப்
போவதாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் அந்தக் கைதியைக் குறித்து மற்றவர்கள்
கூறுவதையும் மற்றும் உளவு அறிக்கைகள் கூறுவதையும் அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்க
முயல்வார்கள் என்றால், அவர்கள் இத்தகைய ஒரு நடவடிக்கையை எடுக்காமலேயே இருக்கலாம். திருடர்கள்,
கொள்ளைக்காரர்கள், தொடர்ந்து குற்றச்செயல்களைப் புரிபவர்கள் ஆகியோருக்கு மத்தியில்
வாழ்வதால் சொல்கிறேன். இவர்கள் எங்களுடைய அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொண்டிருக்க
வாய்ப்புகள் குறைவு. மேலும் அதிகாரிகள் யாரைக் குறித்தாவது இவர்களிடம் கருத்து கேட்டால்
இவர்கள் அவர்கள் மேல் வெறுப்பு கொண்டு அதனால் உண்மையைச் சொல்வார்களா என்பதும் சந்தேகமே.
ஒருவரைக் குறித்து அதிகாரிகள் இவர்களிடம் அறிக்கை கேட்டால், அந்த நபரைப் பற்றி குறை
கூறி அறிக்கை கொடுத்தால் சிறை அதிகாரியின் மதிப்பீட்டில் தாங்கள் உயர்வோம் என்று இவர்கள்
நினைத்துக்கொள்வார்கள்! இவர்கள் எல்லோரும் மிகக் கொடூரமான குற்றச்செயல்கள் புரிந்தவர்கள்.
இவர்களுடைய கருத்துக்களை எந்த அதிகாரியும் கேட்கலாகாது. இவர்கள் ஊழலின் மூலமாகத்தான்
இங்கு சிறையில் பதவிகள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அரசிற்கு இந்த விஷயங்களைப் பொது
மக்கள் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் உள்துறைச் செயலாளர் நல்ல எண்ணத்தில் ஏதாவது
செய்ய முயன்றாலும் அதனால் பெரிய பயன் எதுவும் விளையாது போகும்.
இந்த உறுதிமொழியைக்
குறித்து உனக்கு எதாவது தெரியுமா? இது பொதுவில் அறிவிக்கப்பட்டதா? ஆம் என்றால் மாகாண
அரசுகளை இது குறித்து அணுகிவிட்டார்களா? அவர்கள் கருத்துக்களைக் கொடுத்துவிட்டார்களா?
இதற்கு ஏதேனும் ஒரு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? அரசு அது குறித்து ஏதேனும்
கூறியுள்ளதா? இதனை ஒழுங்கான முறையில் அரசு செய்ய வேண்டும். இந்த அமைதிக் கொண்டாட்டங்கள்
நடந்து முடிவதற்குள்ளாக நம் பொதுமக்கள் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதில்
ஒருமித்த குரலில் அரசை வற்புறுத்தி நல்ல தீர்வைக் காண வேண்டும். இதன் பிறகு அரசு இதில்
முனைப்புக் காட்டாமல் போகலாம். இந்த உறுதிமொழி மக்களின் எண்ணவோட்டத்தைத் தெரிந்து கொள்வதற்காகக்
கூறப்பட்டுள்ளது. ஆகவே பொது மன்னிப்பு குறித்து மக்கள் தங்கள் கருத்தை அரசுக்கு வலியுறுத்தும்
வகையில் தெரிவிக்கtஹ் தவறினால் பிறகு பொது மன்னிப்பு வழங்கவில்லை என்று அரசைக் குறை
கூறிப் பயனில்லை.
என்மீது சும்த்தபட்டிருக்கும்
109, 302 ஆகிய குற்றப்பிரிவுகள் உண்மை என்று வைத்துக்கொண்டால் அது மற்றவர்கள் விஷயத்திலும்
உண்மைதான். இதன் காரணமாக அரசியல் கைதியான நான் விடுதலை செய்யப்படப் போவதில்லை என்றால்
இந்தியாவில் அரசியல் கைதி என்று யாருமே இல்லை எனலாம். நாம் எப்படிப்பட்ட வாதங்களை எடுத்து
முன்வைக்க வேண்டும் என்பதனைக் கோடிட்டுக் காண்பித்து இருக்கிறேன். நீ என்னைக் காட்டிலும்
சிறப்பாக அதனைச் செய்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாவதாக, ‘சிறையில் நடத்தை’.
கடந்த ஐந்து வருடங்களாக என்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அதிகாரிகளும் இந்த விஷயத்தில்
என் மீது எந்த எதிர்க்கருத்தும் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அடுத்ததாக, என்னுடைய
தனிப்பட்ட கருத்துகள் குறித்து. இதனை நான் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிவித்து கொண்டுதான்
இருக்கிறேன். 1915 மற்றும் 1918ம் ஆண்டுகளிலேயே நான் என்னுடைய கருத்துக்களைத் தெளிவாகக்
கூறியிருக்கிறேன். அவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் என்னுடைய விடுதலையை மேலும் சிக்கலாக்கும்
என்ற விஷயத்தையும் அறிந்தே நான் அவற்றைத் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் அரசுக்கு
அனுப்பிய அறிக்கை, உனக்கு நான் சென்ற கடிதத்தில் எழுதியிருந்த அதே விஷயம்தான். அதற்கு
முன்னரே அது பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டது. ஆகவே பொது மக்களும் சரி அரசும்
சரி, என்னுடைய கருத்துகளை அறிந்தே இருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் செயல்படுத்தப் படுமானால்,
அதிலும் வைஸ் ரீகல் கவுன்சில்கள் மக்களின் குரலைப் பிரதிபலிக்கப் போகிறார்கள் என்றால்,
நானும் என்னால் இயன்ற அளவு, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அரசியல் சட்ட அடிப்படையில்
சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்க முயல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. சட்ட ஒழுங்கே சமுதாயத்திற்கு,
குறிப்பாக ஹிந்து சமுதாயத்திற்கு அடிப்படையானது. ஸ்காட் மக்களும் போயர் மக்களும் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யம் அவர்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை எடுக்கும்போது அவர்களோடு இணைந்து
பணியாற்றவில்லையா? அத்தகைய ஒரு காமன்வெல்த்தில் இந்தியா மட்டுமல்ல, வேறு எந்த நாடாக
இருந்தாலும் கலந்து கொள்வதில் தவறில்லை. அதற்கு எதிராக ஏன் இருக்க வேண்டும்? தனியாக
இருந்து அவதிப்படுவதைக் காட்டிலும் இப்படி கூடி இருப்பதால் நன்மை எனில் அது நல்லதே.
மனிதன் கூடி வாழப் பழக்கப்பட்டவன். ஒரு நாடும் அதேபோலத்தான். மனிதனுடைய இயல்பான சமூகக்
குணங்களை மேம்படுத்தும் குடும்பங்களையும் தேசங்களையும் போலவே சாம்ராஜ்யத்தின் ஆட்சியும்
ஒரு இயற்கையான வளர்ச்சியாக இருக்கும்.
எனதருமை பால், எனக்குக் கடந்த இரண்டு நாட்களாக ஜலதோஷம் இருப்பதால்
ஜூரமும் இருக்கிறது. அதனால் நான் எழுத வேண்டிய பல விஷயங்களை எழுதாமல் விடுகிறேன். நீ
உன்னுடைய உடலை நன்றாகப் பார்த்துக்கொள். எங்களைப் பற்றியோ அல்லது வேறு எதனைப் பற்றியுமோ
கவலைப்பட வேண்டாம். நீ என்னைச் சந்தித்த போது நம் குடும்ப விவகாரங்கள் குறித்து நான்
சொன்னதை மறக்க வேண்டாம். செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சி செய். எனதருமை யமுனா
எனக்கு பாதாம் மற்றும் இனிப்புகள் அடங்கிய பெரிய பார்சல் ஒன்றை விரைவிலேயே கொடுத்து
அனுப்புவதாகச் சொன்னாள். அது மிகப் பெரியதாக இருப்பதால் அதனை அனுப்பப் பல மாதங்கள்
ஆகிறது என்று நினைக்கிறேன். அவளைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவளுடைய தைரியமும்
இனிமையான குணமும் மேலும் மகிழ்ச்சியைத் தருகின்றன. ஆனால் வஹினியை (அண்ணி) நினைத்தால்
வருத்தமாக இருக்கிறது. நான் விடுதலையாகி வந்தாலும் என்னை வரவேற்க அவர் இருக்க மாட்டார்
என்பதை நினைக்கும் போது வருத்தம் அதிகமாகிறது. அவர் என்னுடைய தோழி. என்னுடைய சகோதரி
மட்டுமல்லாமல் என்னுடைய அன்னையும் கூட. பெண்கள் உடன்கட்டை ஏறுவது போல அவர் மரணித்திருக்கிறார்.
தன்னுடைய அன்புக் கணவன் சிறை சென்று திரும்பமாட்டான் என்ற போதே இந்த இந்தியப் பெண்மணிகள்
தங்கள் இதயத்தை நெருப்பில் பொசுக்கித் தியாகம் செய்து விடுகிறார்கள். தேசத்திற்காக
உயிரை விடும் தியாகிகளைப் போலவே இவர்களும் தியாகிகளே. இந்த ஹிந்துப் பெண்கள் அமைதியாக
தங்கள் தாய்நாட்டிற்காக, தங்கள் மதத்திற்காக இத்தகைய தியாகத்தைச் செய்கிறார்கள்.பெண்கள்
பொதுவாகவே மிகவும் இனிமையானவர்கள். அதிலும் ஹிந்துப் பெண்கள் மிக மிக இனிமையானவர்கள்.
அவர்கள் நமக்கு ஆறுதல் அளிப்பவர்கள். சீதாதேவியின் அமரத்துவம் வாய்ந்த கதையை நினைவில்
வைத்திருப்பவர்கள். நீ நமது தாயை ஆறுதல் படுத்த வேண்டும் என்று நம் அன்பிற்குரிய பாபா
கூறச் சொன்னார். அவர் வஹினியைக் காட்டிலும் இவர்களுக்காக வருத்தப்படுகிறார். நீ மகிழ்ச்சியாகவும்
ஆரோக்கியமாகவும் இருப்பதை
க்
கண்டதில் எனக்கு மிகவும் சந்தோசம்.
இதேபோல எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய். உணர்ச்சி மேலிடுவதனாலும் இங்கு
கடிதம் எழுதும் சூழ்நிலை சரியில்லாததாலும், என் மீது அன்பும் கருணையும் கொண்ட பலருக்கு
நன்றி கூற இயலாத நிலையில் இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த உணர்வு
ஒன்றுதான் எனக்கு இத்தனை மலேரியா வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகள் இருந்தபோதும் என்னைத்
தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் என்னுடன் பழகியதன்
காரணமாக நட்பினாலும் பலர் என்னைக் குறித்து நலம் விசாரிக்கின்றனர். இத்தகைய நண்பர்கள்
இருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்கு ஆறுதலைக் கொடுக்கின்றது. எனதருமை சாந்தா எப்படி
இருக்கிறாள்? அவளைப் படிக்கவும் எழுதவும் சொல்லித் தொந்தரவு செய்யாதே. ஆனால் அத்தகைய
வேலைகளை யமுனாவிடம் கூறு. நான் திரும்பி வரும்போது அவள் எனக்கு டைப்ரைட்டராக இருக்கிறேன்
என்று கூறி இருக்கிறாள். சம்பளத்திற்கு அல்ல, தேசத்தின் மேல் இருக்கும் பற்றினால்.
அன்பிற்குரிய பாபு, அண்ணா, மற்றும் மைத்துனர்களிடம் என் அன்பைக் கூறவும்.
இப்படிக்கு
தங்கள் அன்பிற்குரிய
தாத்யா.

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – ஏழாவது கடிதம் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

4-8-1918
போர்ட் ப்ளேயர்.

என் அன்பிற்குரிய சகோதரா.
உன் கடிதத்தைப் படித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வருடம் நீ குறித்த நேரத்தில் பார்சல்களையும் கடிதங்களையும் அனுப்பியதால் எங்களுக்கு மனு போட்டு அவை குறித்துக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவை சரியான நேரத்தில் கிடைத்தன. இதனால் எங்களுக்கு மன உளைச்சலும் குறைந்தது. என் கடிதத்திற்கு பதில் கடிதம், பிறகு சகோதரருக்கு நீ அனுப்பிய பார்சல், பிறகு இந்தக் கடிதம் என உன்னிடம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. இதே நடைமுறையை முடிந்த வரையில் தொடரவும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தி வரவேற்கத்தக்கது. மற்ற மாகாண மாநாடுகளைக் காட்டிலும் பம்பாய் மாகாண மாநாடு இந்த விஷயத்தில் தீவிர அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை சென்ற வருடம் உத்திரப் பிரதேச மாகாண மாநாடும் ஆந்திர மாகாண மாநாடும் கூட இதே போல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனத் தீர்மானம் இயற்றின. அதிலும் ஆந்திர மாகாணம் நிறைவேற்றிய தீர்மானம், மிகவும் ஆணித்தரமான வார்த்தைகளால் ஆந்திரர்களின் ஆதரவை விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தெரிவித்திருந்தது. இதனை நீங்கள் தொடர்ந்து எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வர வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிப்பதே இந்தியர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறைக்க ஒரே வழி என்பதை உணர்த்த வேண்டும். இவை எல்லாம் உண்மை எனும் பட்சத்தில் காங்கிரஸ் ஏன் அரசியல் கைதிகள் சார்பில் பரிந்து பேசத் தயங்குகிறது என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இந்த தேசத்திற்காக உழைத்த சக போராளிகளின்பால் குறைந்தபட்ச மனிதநேயத்தைக் கூட காங்கிரஸ் காட்ட மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அரசியல் கைதிகளிடம் கருணையுடன் பேச அவர்கள் ஏன் நடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை. சென்ற வருடம் அவர்கள் போர்க் கைதிகள் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் அரசியல் கைதிகளைப் பற்றி வாய் திறக்கவில்லை. அரசியல் கைதிகளின் நிலை நாளுக்கு நாள் இங்கு மிகவும் மோசமடைந்து வருவது என்னவோ அவர்களுக்கும் தெரியும். அரசியல் கைதிகளின் தியாகங்களும் தொண்டும் போர்க் கைதிகளின் தியாகத்திற்கும் தொண்டிற்கும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. போர்க் கைதிகளுக்காவது போர் முடிந்தவுடன் விடிவு காலம் பிறக்கும். மக்களிடையே பொறுப்பான தலைவர்கள் என்று பெயரெடுத்து உலவி வரும் ஆட்கள் இதற்காக இன்னமும் தீவிரமாகப் போராட வேண்டும். ஆனால் இங்கே பொறுப்பான என்பதுதான் பிரச்சினையே. போர்க் கைதிகளைப் பற்றிப் பேசுவது பாதுகாப்பானது. ஆனால் மற்றவர்களைப் பற்றிப் பேசினால் அவர்களது முதலாளிகளின் கண்ணோட்டத்தில் பொறுப்பான தலைவன் என்ற நிலையில் இருந்து மாறி விடக்கூடும். இல்லையென்றால் பல்வேறு மாகாண கவுன்சில்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறித் தீர்மானங்களைப் போட்டுவிட்ட பின்னும் காங்கிரஸ் அதனைத் தீர்மானமாக நிறைவேற்றாமல் இருப்பதன் காரணம் எதுவும் எனக்குப் புரியவில்லை. காங்கிரசில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிலரின் கருத்துக்களைப் பிரதிபலிப்பது மட்டுமே அதன் வேலை இல்லை. மாறாக அதற்கு ஆதரவையும் வலிமையையும் கொடுக்கும் பல்வேறு தரப்பு மக்களின் கருத்தையே அது பிரதிபலிக்க வேண்டும். பல மாகாணங்கள் பல முறை தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்னும் பல பத்திரிகைகள் இதனைப் பற்றி எழுதிய பின்னும் காங்கிரஸ் தலைவர்களே பலரும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் யாருக்காகப் போராடினோமோ அவர்கள் எங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது எங்கள் உரிமை அல்லவா? அதிலும் ஆஸ்திரி, ஐரிஷ மற்றும் போயர் மக்கள் தங்கள் நாட்டின் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தைரியமாகவும் நேர்மையுடன் குரல் கொடுக்கும்போது அதனைப் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கும் காங்கிரஸ், ஆந்திரா அல்லது மகாராஷ்டிரா மாகாணங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் போல நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட வேண்டும். சில வயதானவர்கள் இதனைச் செய்ய அஞ்சுவார்கள் என்றால் இதனை நிறைவேற்றும்போது அவர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கட்டும். இதற்குப் பயப்படும் ‘பொறுப்பானவர்கள்’ சிலரைப் போல நீங்களும் மௌனமாக இருப்பது தவறல்லவா?
மேலும் இதுபோன்ற தீர்மானங்கள் பலனுள்ளவையாக இருக்க ஒன்றிரண்டு காரியங்களை முன்னெச்சரிக்கையாக நாம் செய்யவேண்டும். பல பத்திரிகைகள் அரசியல் கைதிகளைப் பற்றி எழுதுகின்றன. ஆனால் அவை எழுதப்படும் விதம், அரசியல் கைதிகள் என்றால் என்னவென்று பாமர மக்களுக்கு மட்டுமில்லாமல் அரசாங்கத்துக்கும் கூடப் புரியாத வண்ணம் குழப்பமாக இருக்கின்றது. சில சமயம் அது போர்க் கைதிகளையும் சில சமயம் நாடு கடத்தப்பட்டவர்களையும் குறிக்கிறது. ஆனால் அரசியல் கைதிகளைப் பற்றித் தெளிவாக என்றும் சொன்னதில்லை. இதனைப் பற்றி நான் உன்னிடம் சென்ற வருடம் கூறியிருந்தேன். மிஸ்டர் போனர்லா அவர்களும் ஐரிஷ் கைதிகளை குறித்துக் கூறுகையில் அவர்கள் எவரும் தனிப்பட்ட முறையில் தீவைப்பு உட்பட எந்தக் காரணங்களுக்காவும் கைதாகவில்லை என்றார். ஆனால் மிஸ்டர் போனர்லவின் அரசு போர் துவங்கியவுடன் அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்தது. அதனால் குற்றவாளிகள் என்ற வார்த்தை இந்தியாவின் ‘பொறுப்புமிக்க’ தலைவர்களுக்கு ஏன் தயக்கம் ஏற்படுத்த வேண்டும்? அரசின் தவறுகளை, தனிப்பட்ட முறையில் செய்த குற்றங்கள் என்ற போர்வையைப் போட்டு ஏன் மூட வேண்டும்? போத்தா ஒரு பிரதமர், ரெட்மாண்ட் ஒரு பாராளுமன்ற கட்சியின் தலைவர். இருந்தும் அவர்கள் தங்கள் அரசின் எதிரிகளும் புரட்சியாளர்களுமான கைதிகளை விடுதலை செய்தனர். ஆனால் நம்முடைய காங்கிரஸ்காரர்களோ தங்களைப் பொறுப்பானவர்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். நகரத்தின் எல்லையில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் பிச்சைக்காரன் கூட இந்த நகர சபைத் தலைவர்களை விடப் பொறுப்பானவன், உயர்ந்தவன் என்று சொல்வேன். ஆகவே எதிர்காலத்தில் இத்தகைய தீர்மானங்கள் அரசியல் கைதிகள் என்றால், குற்றவாளியோ அல்லது இல்லையோ, தனிப்பட்ட செயல்களுக்காவோ அல்லது பொதுக் காரணங்களுக்காகவோ, (இது என்ன என்று எனக்குப் புரிவதே இல்லை) அரசியல் நோக்கத்திற்காகச் செய்து கைதானவர்கள் அனைவரையும் குறிக்கும் என்று தெளிவாக்கப்படவேண்டும். செயலின் நோக்கம்தான் அது அரசியல் காரணமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு காரியமும் உள்ளபடியே அரசியலாகாது. என்னுடைய பட்டினிக்காக நான் புரட்சியில் ஈடுபட்டால் அது அரசியல் காரியமாகாது. பொது நோக்கம் பொது உரிமையைக் காப்பதற்காகச் செய்யப்படும் போராட்டமே அரசியல் செயல்பாடாகும். குண்டர்கள் போரிடுவது பொது நலத்திற்காகச் செய்யப்படும் தியாகம் என்று கருதப்படாது. ஆனால் தீவைப்பு போன்ற கொடுஞ்செயல்கள் பிரிட்டிஷ் அரசால் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்பட்டவை என்று கருதப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவோ அல்லது தனிப்பட்ட லாபம் கருதியோ அவை செய்யப்படவில்லை. மாறாகப் பொது நன்மையைக் கருதிச் செய்யப்பட்டவை. முறைகள் தவறாக இருக்கலாம், சில நேரம் அவை கொடுஞ்செயல்களாகக் கூட இருக்கலாம். ஆனால் பொது நலன் கருதி அவை செய்யப்பட்டிருந்தால் அவை மன்னிக்கப்படலாம். நான் இதனை வலியுறுத்தக் காரணம், ஒருவேளை பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருந்தால் (அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நான் நினைக்கிறேன்) இந்தக் காரணம் நமக்கு ஒரு தடையாக இருக்கும். அரசு தங்கள் விருப்பம் போல இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். ஆகவே இதனைத் தெளிவுபடுத்துவது நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இதனை மற்ற பத்திரிகையாளர்களும் தலைவர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
1)   எனக்கு நீ எழுதும் கடிதங்களில் ஏதேனும் மாகாண மாநாடுகளில் இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதையும், சென்ற வருடம் காங்கிரஸ் இதனைத் தங்கள் கமிட்டி கூட்டத்தில் விவாதித்ததா என்பதையும் பற்றி எழுது. எத்தனை பத்திரிகைகள் இதனை ஆதரித்து முழுமனதாகக் கட்டுரைகள் வெளியிட்டன என்பதையும், இந்த வருடம் இது குறித்து காங்கிரஸ் ஏதேனும் செய்ய இயலுமா என்பதையும் குறித்து எழுதவும். நீ இது குறித்து எழுதும்போது போர்க் கைதிகள் மட்டும் அல்லாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்கள் குறித்தும் எழுது.
2)   பொது மக்கள் பலராலும் மனு அளிக்கப்பட வேண்டும் என்ற விஷயம் என்னவாயிற்று? நீ இது குறித்து உன் சென்ற கடிதத்தில் எதுவும் எழுதவில்லை. அந்த உத்தேசத்தைக் கைவிட வேண்டாம். போர் முடிந்த பிறகு அதனை மேலும் பலனளிக்கும் விதத்தில் செய்யலாம் என்று ஒத்தி வைத்திருப்பாய் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அதுவும் சரியான முடிவுதான். அதேவேளையில் ‘மாண்டேகு அவர்களிடம் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து மனு ஒன்று அளிக்கப்பட்டது’ என்று ஒரு கடிதத்தில் படித்தேன். அது சரியான தகவல்தானா?
3)   கூட்டங்கள் கூட்டி பிரசாரம் செய்வது குறித்து நீ கூறியிருந்தாய். அது ஒருமுறை மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்யப்படவேண்டும்.
4)   காங்கிரசும் மாநாடுகளும், இதுகுறித்து விளக்க நடத்தப்படும் தனிப்பட்ட சந்திப்புகளும், பத்திரிகைகள் இதுகுறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதும், பாராளுமன்றத்தில் மாகாண கவுன்சிலில் இதுகுறித்துக் கேள்வி எழுப்புவதும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். இந்த விஷயத்தில் மேலும் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து உன்னுடைய ஒவ்வொரு கடிதத்திலும் எனக்கு எழுது. அதேபோல ஒவ்வொரு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போதும் அரசியல் கைதிகள் என்பவர் யார் என்பதைத் தெளிவுபடுத்த மறக்க வேண்டாம். இதுகுறித்து மக்களுக்கும் அரசுக்கும் விளங்கும் வகையில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.
இதனைப் பற்றி எழுதும்போது நான் இந்தப் போராட்டத்தின் தார்மீக விளைவுகள் குறித்து அக்கறை கொண்டேனே தவிர இதன் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அரசிற்குச் சென்ற வருடம் நான் அளித்த மனு ஒன்றில் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒரு முற்போக்கான அரசு அமைவதோடு மிகவும் தொடர்புடைய விஷயம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் அத்தகைய பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உடனடியாக வரும் என்று கூற இயலாது. இது நடக்காத காரியம் என்றாலும் நாம் இதனைத் தொடர்ந்து செய்யவேண்டும். இது தேசிய அளவில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். தியாகிகளையும் அவர்களுடைய சுதந்திரத்திற்கான போராட்டத்தைப் பற்றியும் அறியும்பொழுது பொது மக்களில் பலரும் போராட முன்வருவர். போராளிகளைக் குறித்து நன்றியுடன் நினைவுகூர்தலே மேற்கொண்டு இத்தகைய போராட்டங்களுக்குத் தொண்டர்களைச் சேர்க்கும்.
திரு மாண்டேகு அவர்களுக்கும் வைஸ்ராய் அவர்களுக்கும் நான் அனுப்பியிருந்த மனுவில் இத்தகைய பொது மன்னிப்பு குறித்து வெளிப்படையாக எழுதியிருந்தேன். அதில் இந்தியாவில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக இருந்தால், அதிலும் அவர்கள் இந்தியாவில் ஒரு பொறுப்பான அரசை ஏற்படுத்த விழைவதாக இருந்தால், எங்களை இப்படிச் சிறையில் வைத்து வாட்டுவது அந்த முயற்சியினை அர்த்தமற்றதாக ஆக்கிவிடும் என்று கூறியிருந்தேன். அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படாமல் ஒரு பொறுப்பான அரசை அமைப்பது என்பது அந்த அரசிற்கு ஒரு பெரும் பாரமாகவே அமையும். நாங்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மக்களுக்கு அந்த அரசின் மேல் ஒரு சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதனால் பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கும் அரசிற்கு அது தோல்வியாகவே முடியும். ஏனெனில் சுயாட்சி கொடுக்கப்பட்டாலும் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றால் அது மக்களிடையே அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தும். சகோதரர்கள் பிரிக்கப்பட்டு ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கையில் எங்கிருந்து சமுதாயத்தில் நம்பிக்கையும் அமைதியும் ஏற்படும்? ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒரு தகப்பனோ, ஒரு சகோதரனோ, ஒரு நண்பனோ பிரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே நான் சுயலாபத்திற்காக அல்லாமல் நேர்மையுடனும் இதயச் சுத்தியுடனும் இதனைக் கூறுகிறேன். அரசியல் கைதிகளைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் எந்த விதமான பொறுப்பான அரசாங்கமும் அரசு அமைக்க இயலாது. அரசை எதிர்த்துப் பேசினால் வழக்கு, அரசு சந்தேகப்படாமல் இருக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருப்பது பொறுப்பான அரசின் நடைமுறைக்கு ஒவ்வாதது. இது சுல்தான்களின் ஆட்சிக்கு ஒப்பானது. ஆகவே சுயாட்சியும் பொது மன்னிப்பும் ஒருங்கே செயல்படுத்தப் படவேண்டியது அவசியம். என்னுடைய பொது மன்னிப்பைக் கோரி அனுப்பிய மனுவில் மேலும் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியிருக்கிறேன். இதனை அமல்படுத்த என்னுடைய விடுதலைதான் தடையாக இருக்குமென்றால் என் விடுதலையைப் புறந்தள்ள நான் தயார். அதனால் எனக்கு மனக்கவலை எதுவும் இல்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட திரு மாண்டேகு அவர்களின் நடைமுறை இந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. புரட்சியாளர்கள் தங்களுடைய தற்போதைய அணுகுமுறைகளைக் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் விதத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமையக்கூடிய பொறுப்பான காரியங்களைச் செய்ய வேண்டும். அத்தகைய அரசு என்பது வைஸ் ரீகல் கவுன்சில் என்ற மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமே அல்லாது அதிலும் மாநில கவுன்சில்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு அரசு அமையும்பட்சத்தில் அது அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதில் துவங்கவேண்டும். இங்குள்ள கைதிகள் மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நானும் என்னைப் போலவே ஒத்த கருத்துடைய பலரும் அந்த அரசியல் சாசனத்தை ஏற்போம். அரசு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அத்தகைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இதுகாறும் எங்கள் மேல் வெறுப்புக் கொண்டிருக்கும் கவுன்சில் உறுப்பினர்களுடனும் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். பெரும் ஆபத்துகள் நிறைந்த புரட்சிகளை நாங்கள் வேடிக்கைக்காகச் செய்யவில்லை. பாதுகாப்பான உயர்ந்த இலட்சியங்களுடன் கூடிய வழிமுறைகள் இருக்கும்பொழுது யாரேனும் ஆபத்தான புரட்சி வழிமுறைகளை மேற்கொள்வார்களா? அதற்கு சட்டரீதியான வழிமுறை அவர்களுக்கு இருக்கவேண்டும். அரசியல் சாசனமே இல்லாதபொழுது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் போராட்டம் என்பது கேலிக்குரியது. அதேநேரத்தில் இங்கிலாந்தில் இருப்பது போல அரசியல் சட்ட ரீதியான வழிமுறைகள் இருக்கும்போது புரட்சி என்று பேசுவது தவறு மட்டுமல்ல, குற்றமும் கூட.
நான் இதனைச் சென்ற அக்டோபர் மாதம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தேன். சமீபத்திய மாற்றங்கள் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. முறையானபடி ஒழுங்காக இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் நாம் ஏற்றுக்கொளும்படியான ஒரு வழிமுறை நமக்குக் கிடைக்கலாம். இதனை வைஸ்ராயின் கவனத்திற்கு மீண்டும் ஒருமுறை நான் கொண்டு வருகிறேன். என்னுடைய மனுவின் மேல் ஏதேனும் முடிவு எடுக்க இந்திய அரசு தீர்மானித்து இருக்கிறதா என்று கேட்கிறேன். எனக்கு 1-2-1918 அன்று வைஸ் ரீகல் அரசிடம் இருந்து, அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக பதில் கிடைத்தது. போர் முடிந்த பிறகு இந்தக் கோரிக்கையை வைக்குமாறு அரசு கூறியிருந்தது. எனக்காக நீ அதுகுறித்து விசாரிக்கவும். ஏனென்றால் இந்த அரசமைப்பில் இதுகுறித்து விசாரிக்க நான் பலரையும் குஷிப்படுத்த வேண்டியிருக்கிறது.
நீ உன்னுடைய போன கடிதத்தில் இரண்டாவது வகுப்பிற்கு நாங்கள் உயர்த்தப் பட்டிருப்பதால் என்னென்ன அனுகூலங்கள் என்று கேட்டிருந்தாய். சிறைக்கு வெளியே செல்ல அனுமதி உண்டா? இல்லை. எழுதுவதற்கான பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதி உண்டா? இல்லை. என் சகோதரனுடன் பேசுவதற்கோ அவனுடன் தங்குவதற்கோ அனுமதி உண்டா? இல்லை. கடும் பணிச்சுமைகளில் இருந்து விடுப்பு உண்டா? இல்லை. சிறையில் அடைபட்டுக் கிடைக்காமல் வார்டராகப் பதவி உயர்வு கொடுக்கப்படுமா? இல்லை. சிறையில் ஒழுங்காக நடத்தப்படுவோமா? இல்லை. கூடுதலாகக் கடிதங்களுக்கு அனுமதி உண்டா? இல்லை. வீட்டில் இருந்து பார்வையாளர்கள் வந்து பார்க்க அனுமதி உண்டா? மற்றவர்களுக்கு ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த அனுமதி உண்டு. நான் இங்கு வந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. எனக்கு அனுமதி கிடையாது. இரண்டாம் வகுப்புக் கைதியாக நாம் உயர்த்தப்பட்டு இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவுதான். வேறொரு அனுகூலமும் இதில் கிடையாது. புரிந்ததா டாக்டர்?

சிறையில் வேறு என்ன அனுகூலங்கள் இருக்கின்றன? என்னுடைய உடலில் வலு இருக்குபோழுது என்னால் இத்தகைய விஷயங்கள் எல்லாவற்றையும் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனால் இந்த வருடம் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. இதனைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, இருந்தாலும் என் கடமை என்பதனால் நான் இதனைச் சொல்கிறேன். பகவத் கீதையைப் படிக்கும் எனக்கும் என் சகோதரனுக்கும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதனைத் தாங்கும் திடம் இருக்கின்றது. வருடத்திற்கு ஒருநாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். அது வீட்டிற்குக் கடிதம் எழுதும் நாள். ஆனால் இந்த வருடம் அதைக் கூட மகிழ்ச்சியுடன் என்னால் செய்ய இயலவில்லை. பழைய நினைவுகள் பசுமையாக மனதில் வந்து வருடி மகிழ்ச்சியைத் தந்தாலும் என்னுடைய உடல் இந்தக் கடிதத்தை எழுவதற்கே சிரமப்படுகிறது. சென்ற வருடம் மார்ச் மாதத்தின் போது நான் 119 பவுண்டுகள் (54 கிலோ) இருந்தேன். இப்போது என்னுடைய எடை 98 பவுண்டுகளாகக் (44.5 கிலோ) குறைந்திருக்கிறது. நாங்கள் இங்கே வரும்போது என்ன எடை இருந்தோமோ அதுவே எங்களுடைய சாதாரணமான எடை என்று கணக்கெடுக்கிறார்கள். அது தவறு. ஏனென்றால் நாங்கள் இங்கே வருவதற்கு முன்பே பல வருடங்கள் சிறையில் இன்னல்களுக்கு ஆளாகி, பிறகுதான் இங்கே வருகிறோம். ஆனாலும் நான் இங்கே வரும்போது 111 பவுண்டுகள் இருந்தேன். கடுமையான வயிற்றுப்போக்கும், அதற்குச் சரியான மருத்துவம் பார்க்காததாலும், நோய் என்னை எலும்புக்கூடாக மாற்றிவிட்டது. எட்டு வருடங்களுக்கு நான் இத்தகைய இன்னல்களைத் தாங்கிக்கொண்டிருந்தேன். இங்குள்ள இன்னல்களும் அச்சுறுத்தும் சூழலும் எத்தகைய மன உறுதி படைத்தவரையும் நிலை குலையச் செய்து விடும். ஆனால் இவற்றைக் கடந்த எட்டு வருடங்களாகத் தாங்கும் வலிமையை எனக்குக் கடவுள் கொடுத்திருந்தார். ஆனால் இப்போது என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நாளும் நான் வலுவிழந்து வருகிறேன். சமீபத்தில் மெடிகல் சூப்பரின்டன்டென்ட் என் மீது கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டதன் விளைவாக, இப்போது மருத்துவமனையின் உணவு கிடைக்கிறது. அது கொஞ்சம் நன்றாகச் சமைக்கப்பட்டிருக்கும். இவ்வளவு பலகீனத்திலும் நான் பணி செய்து கொண்டுதான் இருக்கிறேன். மருத்துவமனையில் தங்கி இருக்கவில்லை. எனக்கு அரிசிச் சாதமும் பாலும் பிரெட்டும் இப்போது தருகிறார்கள். இது முன்பு இருந்ததை விடப் பரவாயில்லை. இதனால் ஓரளவு முன்னேற்றம் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இப்படியே வலுவிழந்து இருந்தால் இங்கே அந்தமானில் பலருடைய மரணத்திற்கும் காரணமான காச நோய் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இங்குள்ள சூழலில் ஏதேனும் மாற்றம் வந்தால்தான் என்னால் அதிலிருந்து தப்பிக்க முடியும். சிறையில் மாற்றம் என்பது இப்போதிருக்கும் நிலையை விட மோசமான நிலைக்குச் செல்வது என்பதே. இங்கு ஒரே சூழலில் இருப்பது சோர்வை வரவழைக்கிறது. ஆனாலும் இத்தகைய சிறைச் சூழல்கள் உடனடியாகக் கொல்லாது. வலுவிழக்க வைக்கும். அதே நேரம் நீங்கள் அதைத் தாக்குப் பிடிக்கும்படியாகவும் இருக்கும். இப்படிப்பட்ட மோசமான சூழலில் தாக்குப் பிடித்து எண்பது வயது வரை வாழ்ந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். ஆகவே உடல் எவ்வளவு வலுவிழந்தாலும் பரவாயில்லை. மரணத்தை வரவழைக்கும் கொள்ளை நோய்கள் ஏதேனும் வராமல் இருந்தால் சரி.
இவை எல்லாம் உடல் ரீதியானதுதான். ஆனால் நெருப்பின் ஊடே இருக்கும் ஒரு நபர் அதன் சூட்டைத் தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் இங்குள்ள இன்னல் நிறைந்த சூழலை எதிர்கொள்ளும் நெஞ்சுறுதி இன்னமும் இருக்கிறது என்பதை நான் சொல்லவேண்டும். இதனால் மேற்கொண்டு எந்த இன்னல்கள் வந்தாலும் அவற்றையும் சமாளிக்க இயலும். சகோதரனுடைய உடல்நலம் என்னை விடக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் தலைவலி அவனுடைய உடல் எடையை 106 பவுண்டுகளாகக் குறைத்துவிட்டது.
என்னுடைய மதிப்பையும் அன்பையும் மேடம் காமாவிடம் கூறவும். அவர்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். குழந்தைகளுடன் விளையாடிப் போக்க வேண்டிய பொழுதை அவர்கள் இப்போது தலைமறைவாக வேறொரு நாட்டில் கழிக்க வேண்டியிருக்கிறது. அம்மா எப்படி இருக்கிறார்கள்? நம் சகோதரி எப்படி இருக்கிறாள்? எவ்வளவு கஷ்டங்களைச் சந்தித்தாலும் அவளிடம் சொல். அவளுடைய சகோதரர்கள் இங்கே அதை விடப் பெரிய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று. அது மட்டுமில்லாமல் அவளுடைய வசந்த் அவள் அருகில் இருக்கிறார். அவரைப் பார்த்தாலே அவளுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய்விடும். சகோதரனுடைய அன்பு அவளுக்கு எப்போதும் உண்டு என்று கூறவும். யமுனா பாயிடமும் மற்றும் நம் மைத்துனியிடமும் என் அன்பான விசாரிப்புகளைக் கூறவும். சாந்தா தேறிவருகிறாள் என்பதை அறிந்து மகிழ்ச்சி. அப்புறம், நீ உன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அன்பான டாக்டரிடம் என்னுடைய மன்னிப்புகளைத் தெரிவிக்கவும். நான் அவருடைய நட்பைப் பெரிதும் மதிக்கிறேன் என்று கூறவும். அவருக்கோ என்னுடைய மைத்துனர்களான பாலு, அண்ணா மற்றும் என் கல்லூரிக் கால நண்பர்களுக்கும் நான் எதையும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன். ஆனால் நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். என்னுடைய ரஞ்சன் குட்டி எப்படி இருக்கிறான்? அவனுக்கு என்னைத் தெரியுமா? மீண்டும் பிளேக் நோய் பரவும் அபாயம் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதனால் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும். அது மிகவும் முக்கியம்.

இப்படிக்கு
அன்புள்ள தாத்யா.

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா



ஆறாவது
கடிதம்
செல்லுலார்
சிறை
5 ஆகஸ்ட் 1917
போர்ட் ப்ளேயர்
எனதன்பிற்குரிய பால்,
ஜூலை 1916 அன்று நான் அனுப்பிய கடைசி கடிதத்திற்கு
நீ அனுப்பிய பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாங்கள் அனைவரும் இங்கு ஆரோக்கியமாகவும்
மகிழ்ச்சியாகவும் இருப்பதை நீ அறிந்து கொண்டிருப்பாய். இறைவன் அருளால் நீ கடந்த ஒரு
வருடம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பாய் என்று நினைக்கிறேன். நம்முடைய
தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை காரணமாக நம்மில் நேர்மையானவர்கள் தியாகம் செய்ய
வேண்டி இருக்கிறது. அந்தப் பாதை சோகமானதாகவும் பிரிவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
விதி நமக்கு கொடுக்கும் இத்தகைய வலி மிகுந்த அடிகளைப் பொறுத்துக்கொண்டு பழகிய நமக்கு
இந்தக் கஷ்டங்களும் ஏமாற்றங்களும் பழகித்தான் விட்டன. அதே போல ஏதேனும் நல்ல விஷயம்
நடந்தாலும் அது நிரந்தரமானதல்ல என்ற புரிதல் நமக்கு உண்டு. என்னைப் பொருத்தவரையில்
கண்ணீரில் இருந்து தப்பிக்க உதவும் எதுவும் மகிழ்ச்சியான ஒன்றுதான். இப்போது சூழல்
மாறிவருகிறது. அதற்கேற்ப பழைய நண்பர்களும் திரும்பி வருகிறார்கள். பம்பாய் உயர் நீதிமன்றத்தில்
உன்னை விட்டுப் பிரிந்த போது உன்னிடம் கை கொடுக்கக் கூட அனுமதிக்கப்படாமல் என் தொப்பியை
ஆட்டியபடி சென்றேன். அப்போது என் மனதில் நானும் அன்பிற்குரிய பாபாவும் உனக்கும் நம்
அன்பிற்குரியவர்களுக்கும் எதுவும் செய்யவில்லையே என்ற எண்ணம் என் மனதை அழுத்தியது.
இந்த இளம்வயதில் எவரும் சந்தித்திராத அளவு கஷ்டங்களை நீ சந்தித்திருக்கிறாய். இவ்வளவு
அடக்கமான உனக்கு, நண்பர்கள் என்று எவரும் இல்லை. ஆனால் உன்னை வெறுப்பவர்களோ ஏராளமானவர்கள்.
ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்கின்றாய். குடும்பம் சிதறுண்டு போய்
எந்த விதமான ஆதரவும் இல்லாத நிலையிலும் நாம் நல்லவற்றின் பக்கமே நிற்கின்றோம். தீயவற்றின்
பக்கம் செல்லவில்லை. ஆனால் நான் குருதி வடியும் இதயத்துடன் இதனை எழுதுகிறேன். கடவுளுக்காக
தன் எல்லாப் பூக்களையும் கொடுத்த பூந்தோட்டம் எப்போதும் பூத்துக் கொண்டேதான் இருக்கும்.
இந்தச் சூழலில் நம்பிக்கைகளும் கூட தகர்ந்து போகின்றன. ஆனால் நம் அன்பிற்குரிய வசந்தா,
மொட்டாக இருந்தவள், இப்போது மலர்ந்து அவள் மூலம் மொட்டுக்கள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.
அதன் மூலம் நமக்கு வசந்தா இப்போது ராமன், மேலும் கடவுளின் அருளிருந்தால் மேலும் ஒரு
குழந்தை கிடைக்கட்டும். அன்பெனும் ஒளி உன் வாழ்வில் மேலும் பிரகாசத்தைக் கூட்டட்டும்.
அதன் பிரதிபலிப்பு இருள் அடைந்த என் சிறை அறையிலும் கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சி
இருகின்றது. குட்டிக் குழந்தையின் பெயரான ரஞ்சன் எனக்கு என் தாயார் மற்றும் அந்தக்
குழந்தையின் பாட்டியான என் மாவாஷியை நினைவுபடுத்துகிறது. இது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக்
கொடுத்திருக்கும்? நான் இந்தக் குழந்தையைப் பார்ப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
ஆனால் என் அன்பை அந்தக் குழந்தைக்குத் தருகிறேன். அதற்கு இதெல்லாம் புரியுமா என்றும்
தெரியவில்லை. நீ ஏன் எனக்கு சாந்தாவைப் பற்றி எதுவும் எழுதவில்லை? நீ அந்த வேலையை வாகினியிடம்
விட்டுவிட்டாய். இது இந்திய வழக்கம் என்றாலும் நீ அடுத்த கடிதத்தில் நீயே உன் குழந்தையைப்
பற்றி எல்லாவற்றையும் எழுத வேண்டும். இந்தத் தன்னடக்கம் குழந்தைகளுக்குப் பெற்றோரின்
அன்பைப் புரிந்து கொள்ள விடாமல் தடுத்து விடும். இதனை உன்னுடைய விசேஷமான மற்றும் புனிதமான
கடமையாக நினைத்துச் செய். வாகினி பிளேக் நோயினால் அவதிபட்டாள் என்பதை அறிந்து வருந்தினேன்.
அந்தக் கொடிய நோய் நம் மண்ணை விட்டு அகன்றுவிட்டது என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அது இன்னமும் இருக்கிறது என்பதை இப்போது அறிந்துகொண்டேன். அது குறித்து நீ மிக
கவனமாக இரு. அது முன்பைப் போலவே உள்ளதா அல்லது அதன் தீவிரம் குறைந்து உள்ளதா? இதற்கு
இன்னமும் மருத்துவ விஞ்ஞானத்தில் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லையா? இனிமேல்
அது பரவுவது தெரிந்தால் நீ பம்பாயை விட்டு வெளியேறி விடு. அதனை நம்மால் ஒழிக்க இயலவில்லை
என்றால் நாம் அதனிடம் இருந்து தப்பிக்கவாவது வேண்டும்.
ஜனவரி 1916ல் எனக்குக் கடைசியாக பார்சல் வந்தது.
அதற்குப் பிறகு எங்கள் இருவருக்கும் பார்சல் எதுவும் வரவில்லை. இந்தப் பதினெட்டு மாதங்களில்
எங்களுக்கு இரண்டு பார்சலாவது வந்திருக்க வேண்டும். உன்னுடைய பாதுகாப்பைக் குறித்து
நாங்கள் கவலை கொள்ள இதுவே காரணம். அதனால்தான் நான் சூப்பரின்டன்டன்ட்டிடம் அனுமதி பெற்று
உனக்குத் தந்தி அடித்தேன். ஆனால் இது போன்ற பதட்டங்கள் ஏற்படாதவண்ணம் நாம் இனி நடந்துகொள்ள
வேண்டும். அதற்கு, குறிப்பிட்ட தேதிகளில் இயலவில்லை என்றாலும் குறிப்பிட்ட மாதங்களிலாவது
நீ கடிதங்களையும் பார்சல்களையும் அனுப்புவதே சிறந்த வழி.
இது எங்களைப் பொருத்தவரைக்குமான தீர்வு. ஆனால்
நமக்கு இடையே அரசு என்று ஒன்று இருக்கிறது. அவர்களுடைய விருப்பதிற்கு இணங்க நாம் நடக்கவேண்டும்.
உன்னுடைய சென்ற கடிதத்தில், நீ கிடைக்காமல் போன ஒரு பார்சல் பற்றி எழுதியிருந்தாய்.
அதே போல போன வருடம் என்னுடைய கடிதமும் காணாமல் போயிற்று. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்த இடத்திற்கு ஆயிரக்கணக்கான கடிதங்களும் பார்சல்களும் வருகின்றன. ஆனால் நம்முடைய
கடிதங்களும் பார்சல்களும் மட்டும் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதற்குக் காராணம்
தபால் துறையா? அப்படியிருந்தால் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுவரை அவர்களை
விடாதே. நீ அவற்றைப் பதிவு செய்துதான் அனுப்பி இருப்பாய். அப்படியென்றால் அவற்றை யார்
வாங்கியிருப்பார்கள், யாருடைய சதியினால் அவை களவாடப் பட்டிருக்கும் என்பதைப் கண்டுபிடித்து
விடலாம். ஆனால் ஒரு வேளை இதற்குத் தபால் துறை அல்லாமல் அரசாங்கம் காரணமாக இருந்தால்,
அப்போது நாம் மௌனமாக இருக்கவேண்டும். நான் பல விஷயங்கள் இல்லாமல் இங்கே வாழப் பழகிக்
கொண்டு விட்டேன். அதே போல நீ வருடத்திற்கு ஒருமுறை அனுப்பும் பார்சலும் இல்லாமல் வாழ
என்னால் முடியும். ஒரு புத்தகம் பதிப்பாளரிடம் இருந்து அச்சிடப்படும் இடம் வரை கண்காணிக்கப்பட்டு,
அதன் ஒவ்வொரு பக்கமும் வார்த்தை வார்த்தையாக ஆராயப்பட்டு, அதன் பிறகே அவை பதிப்பிக்கப்படுகின்றன.
அவற்றில் ஆட்சேபகரமாக இல்லாத பகுதிகளையாவது அவர்கள் அவற்றின் சொந்தக்காரருக்குக் கொடுத்திருக்க
வேண்டும்.
நாசிக் மாநாடு ஒரு பெரிய வெற்றி என்றுதான் கூற
வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டோம் என்று நினைத்துக்
கொண்டிருந்த நாங்கள் எங்களை நினைவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு நன்றிக்கடன்
பட்டுள்ளோம். ஒன்றாக இணைந்த பிறகு காங்கிரஸ் இதுபோன்ற விஷயங்களுக்குப் போராட ஏன் தயங்கவேண்டும்?
அதன் தலைவர்கள் தங்களுடைய முக்கியத்துவத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாக
இருக்கும். அவர்கள் தங்களை, போயர் புரட்சியில் ஈடுபட்ட போராளிகளை விடுவித்த ஜெனரல்
போத்தாவைவிட சிறந்த ராஜதந்திரியாக நினைத்து கொண்டிருக்கலாம். அல்லது ஐரிஷ் கைதிகளின்
விடுதலைக்காக அயராது பாடுபட்ட ரெட்மாண்ட்டைவிட சிறந்த தேசியவாதியாக தங்களை நினைத்து
கொண்டிருக்கலாம். மிஸ்டர் போனர்லா கூற்றான “இது ஒரு புரட்சியில் பொதுவாகக் கலந்து கொள்வது
போல” என்பது உண்மையல்ல. ஏனென்றால் இந்திய அரசியல் கைதிகள் பெரும்பாலோனோர் பொதுவாகக்
கலந்து கொண்டவர்கள்தான். மற்றவர்களில் பெண்களின் ஓட்டுரிமைக்காகப் பாடுபட்டவர்கள் உண்டு.
அவர்களும் நெடுநாள் முன்பே ஒவ்வொருவராக மிஸ்டர் அஸ்கித் அவர்களால் விசாரிக்கபட்டுத்
தண்டிக்க பட்டவர்கள். காங்கிரஸ் ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்தவுடன் எங்களுடைய
விடுதலை குறித்து ஒரு மனு பொது மக்களால் அனுப்பப் பட வேண்டும். இத்தகைய மனுக்களும்
தீர்மானங்களும் எங்களுக்கு உடனடியாக விடுதலையைப் பெற்று தராதுதான் என்றாலும் அது எங்கள்
விடுதலைக்குப் பிற்காலத்தில் உதவியாய் இருக்கும். அது மட்டுமல்லாது நாம் யாருக்காகப்
போராடினோமோ அவர்கள் நம்மை நினைவில் வைத்திருக்கவில்லை என்றால் திரும்ப அவர்களிடத்தில்
செல்வது அவமானகரமான ஒன்று என நினைப்பவன் நான். சரியோ தவறோ இந்தத் தேசத்தின் மீது அபரிமிதமான
பற்றைக் கொண்டிருக்கிறேன் நான். ஆகவே மனுவை அனுப்ப முடியுமா என்று முயன்று பார். அது
மாநாட்டுத் தீர்மானங்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது.
நம் பாபாவை நான் சந்தித்த ஒரு நிமிடத்தில் நான்
அவரிடம் பித்ருரிணம் (முன்னோர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்), தேவரிணம் (தேவர்களுக்கு
நாம் செலுத்த வேண்டிய கடன்), ரிஷிரிணம் (ரிஷிகளுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) ஆகியவை
போல புத்ரரிணம் (மகன்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) என்று ஒன்று இருக்கிறது எனக்
கூறினேன். உன்னுடைய கடிதம் கிடைத்த பின்பு அந்தக் கடன் கழிந்ததாகவே நான் உணர்கிறேன்.
நீ இப்போது படித்து முடித்து உன் சொந்தக் காலிலே நிற்கத் தயாராகி விட்டாய். இனி குறைந்தபட்சம்
அடுத்த இரண்டு வருடங்கள் உனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கப் போகிறது. உன்னால் நாங்களும்
மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் எந்த மகிழ்ச்சியும் நிரந்தரமானதல்ல. இந்த உலக வாழ்க்கை
மூன்று இதழ்கள் கொண்ட பூவைப் போன்றது. ஒரு இதழ் மகிழ்ச்சிக்கான வண்ணத்தையும் ஒரு இதழ்
துன்பத்தினால் ஏற்படும் வலிக்கான வண்ணத்தையும் மூன்றாவது இரண்டு வண்ணங்கள் கலந்ததாகவும்
அல்லது வண்ணம் இல்லாமலும் இருக்கும். இப்போது மகிழ்ச்சிக்கான இதழின் நேரம். அடுத்து
துன்பதிற்கான இதழின் நேரம் வரும். அதன்பிறகு இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
வரலாற்றை ஆராய்ந்தாலும் கூட அது பிறப்பு மற்றும் இறப்புகளின் பட்டியல்களையும் திருமணங்கள்
மற்றும் துக்கங்களின் பட்டியல்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது. ஆகவே நாம் மகிழ்ச்சியில்
திளைத்திருக்கும்போது கூட அது நிரந்தரமானது அல்ல என்ற புரிதலோடு துன்ப காலங்களையும்
நினைவில் இருத்தி வைக்க வேண்டும். இந்தியாவில் துரதிஷ்டவசமாக இந்த காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு,
துன்பம் என்னும் காலகட்டம் சஹாரா பாலைவனம் போல மிக நீண்டதாக இருக்கும். தகிக்கும் வெயிலில்
இந்தப் பாலைவனத்தில் இத்தகைய நீண்ட கொடும் பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது அவ்வப்போது
இது போன்ற பாலைவனச் சோலைகள் கண்ணில் படும். இதுவும் கடவுளின் அருளே என்று கருதி நாம்
நம் பயணத்தைக் கடமையாக பாவித்து தொடரவேண்டும். ஞானிகள் வேண்டுவதைப் போல நாமும் அடக்கத்துடன்
கடவுளிடம் ‘எனக்கு என்ன வேண்டுமோ அதனைக் கொடு, எனக்கு எதெல்லாம் தேவையில்லையோ அவற்றை
நீக்கி விடு’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு இளைஞனின் இறுதி லட்சியம்
எதையும் சேகரிப்பது அல்ல. மாறாக தியாகம் செய்வதே. கடவுளின் மாலைக்காகத் தன்னிடம் உள்ள
எல்லாப் பூக்களையும் தருகின்ற தோட்டத்தைப் போல எப்போதும் நாமும் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
என்னுடைய தாயார் எப்படி இருக்கிறார்கள்? என்னுடைய
ஒரே சகோதரியை நான் எப்படி மறக்க முடியும்? நான் என்மீதே கோபம் கொண்டு என்னுடனே கூட
பேசாமல் இருக்கலாம். இந்த மகிழ்ச்சியான காலம் நீடித்து இருக்கும்போதே எனதன்பிற்குரிய
ஷாந்தாவிற்கும் அன்பிற்குரிய ரஞ்சனுக்கும் ஏதேனும் முதலீடு செய்து சேமித்து வைக்கவும்.
மீண்டும் கஷ்டகாலம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. நம்முடைய மேடம் காமாவின்
பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. போர்க் காலத்திலும் கூட அவர் உன்னை நினைவில்
வைத்திருக்கிறார். சில சமயம் ரத்த உறவுகளைக் காட்டிலும் இத்தகைய நட்புகள் நமக்கு மிகவும்
நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இது மிகவும் சூக்ஷ்மமானது. இதனைப் புரிந்து கொள்வது
கடினம்.
என் பிரிய யமுனாவும் வாகினியும் ஒருவரோடு ஒருவர்
இணக்கமாக இருக்கிறார்களா? நான் அவர்களை அன்புடன் விசாரித்தேன் என்று கூறவும். நம் அன்பிற்குரிய
பாலு எப்படி இருக்கிறான்? நான் அவனை பம்பாய் சிறையில் பார்த்தேன். மிகவும் நேசிக்கத்தகுந்த
பையன். இப்போது பெரிய ஆளாகி இருப்பான் அல்லவா? அதே போல அன்னாவும். அவனும் வளர்ந்து
முதிர்ச்சியுள்ள பெரிய ஆளாகி இருப்பான் என்று நினைக்கிறன். என் சகோதரர்கள் தத்து, நாணா
உட்பட எல்லோரை பற்றியும் எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆவலாக
இருக்கிறது. நான் எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள மாட்டேன் என்று யமுனா நினைக்கலாம்.
ஆனால் என் முந்தைய கடிதங்களில் பல விஷயங்களை குறிப்பிடாததற்குக் காரணம் என் மறதி இல்லை
என்பது அவளுக்கும் புரிந்திருக்கும். பாபாவிற்கு அடுத்தபடியாக நான் மிகவும் நேசிக்கும்
மிகவும் மதிக்கும் குடும்பம் ஒன்று உண்டென்றால் அது அவளுடைய சிப்லுங்கர் குடும்பம்தான்.
ஆனால் என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமான அந்தக் குடும்பத்தின் துன்பத்திற்கும்
கவலைக்கும் நான் காரணமாகி விட்டேனே என்றெண்ணும் போது எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாகின்றது.
அந்தக் குற்ற உணர்ச்சியினாலேயே நான் அவர்களைப் பற்றி மேலும் விசாரிக்காமல் என் அன்பை
வெளிபடுத்தாமல் இருக்கின்றேன். இப்படிப்பட்ட மைத்துனர்கள் கிடைத்ததற்கு ஒருவர் மிகவும்
பெருமைப்படவல்லவா வேண்டும்?. என்னையும் அவர்களுள் ஒருவனாக வளர்த்த அவர்கள் குடும்பம்
எவ்வளவு அன்பானது! துறவிக்கு ஒப்பான, கடமை தவறாத அவர்கள் தாயார். அதே போலத்தான் என்
நண்பர்கள் விஷயத்திலும். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால்
அவர்கள் நன்மையைக் கருதியோ அல்லது என்னுடைய நன்மையைக் கருதியோ நான் அவர்கள் எல்லோரையும்
பெயர் சொல்லி விசாரிப்பதில்லை. என்னுடைய நண்பர் என்று சொல்லிக்கொண்டு உன்னிடம் வந்த
அந்த வழக்கறிஞர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை இன்னமும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பதற்கு
அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதே நேரம் இங்கே என்னைப் பார்த்தேன், என்னுடன்
பழகினேன் என்று கூறிக்கொண்டு உன்னிடம் வருபவர்களிடம் நீ எச்சரிக்கையாக இரு. உனக்கு
மிகுந்த அனுபவம் இருக்கின்றது. அதனால் எச்சரிக்கைகள் எதுவும் தேவையில்லைதான் என்றாலும்,
ஒன்றை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நான் எவர் மூலமாகவும் உனக்கு எந்த
ஒரு செய்தியையும் சொல்லி அனுப்ப மாட்டேன். எல்லாவற்றையும் கேட்டுகொள். ஆனால் எதையும்
அப்படியே நம்பி விடாதே. எவற்றை நம்பலாம் என்று உன் அறிவு சொல்கிறதோ அவற்றை மட்டும்
எடுத்துக்கொள். நேரமாகி விட்டது. நான் முடித்தாக வேண்டும். நீ கேட்ட விவரங்கள் உனக்கு
பாபாவின் கடிதத்தில் அனுப்பப்படும். எல்லோரையும் விசாரித்ததாகக் கூறவும். எங்களுடைய
உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். முடிந்தவரையில் உன்னுடைய உடல் ஆரோக்கியத்தை
நன்றாகப் பார்த்துக்கொள்ளவும். மனித முயற்சியைத் தாண்டி ஏதேனும் மோசமான நிலை வந்தாலும்
அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்போம். கவலை வேண்டாம்.

இப்படிக்கு

உன் அன்புள்ள

தாத்யா.

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – வீர் சாவர்க்கர் (கடிதம் 5) | தமிழில்: VV பாலா

செல்லுலார் சிறை. 

6-7.1916 
போர்ட் ப்ளேயர் 
எனதன்பிற்குரிய பால் மற்றும் இனிய சாந்தா. 

காதல் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப்போகும் உங்கள் இருவருக்கும் எனது மற்றும் என் சகோதரனுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் நீங்கள் நுழைகிறீர்கள். வாழ்வில் முதலில் நாம் கடக்க வேண்டிய நிலையான தியாகம் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றில் நீ முழுமையாகத் தேர்ந்திருக்கிறாய். சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொண்டு நீ பாரம்பரிய மற்றும் நவீன அறிவையும் பெற்றிருக்கிறாய். மருத்துவத்தில் நீ கடைசியாகத் தேர்ச்சி பெற்ற தேர்வின் மூலம் உலகத்தின் எந்த இடத்திலும் சென்று, எத்தகைய சட்ட ரீதியான இடையூறுகள் இருந்தாலும் பணியாற்றும் திறனைப் பெற்றிருக்கிறாய். உன்னுடைய கவிதை மற்றும் கட்டுரைகள் மூலம் நீ ஏற்கெனவே மகாராஷ்டிரத்தின் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். இந்தத் துறையில் நீ இதைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்று கூடச் சொல்வேன். நம் தேசத்திற்குப் பெரும் இன்னல்கள் வந்தபோது பெரும்பாலானவர்கள்போலப் புறமுதுகு காட்டாமல் நீ துணிந்து நின்று அவற்றை எதிர்கொண்டாய். எந்த உற்சாகத்தைத் தங்கள் இளைஞர்களிடம் கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கின்றனவோ, அந்த உற்சாகத்தை உன்னிடத்தில் நீ கொண்டிருக்கிறாய். சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாது போனாலும் தியாகம் செய்ய துணிந்த நீ இப்போது வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் சாந்தாவுடன் மணவாழ்வில் இணைய இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். இந்த மணவாழ்க்கை உனக்கும் சாந்தாவிற்கும் ரோஜா மலர்கள் தூவிய பாதையாக, இன்பமானதாக இருக்கட்டும். உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கட்டும். இல்லற வாழ்வின் இனிமை மட்டுமே இன்னும் அதன் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்கும் வரம் பெற்றிருக்கிறது. 

உன்னுடைய மனதை ஏதேனும் ஒரு புத்திசாலி பெங்காலி பெண் திருடினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று நான் உனக்கு இதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தது உனக்கு நினைவு இருக்கலாம். நான் எதிர்பார்த்தது கிட்டத்தட்ட நடந்துவிட்டது. நம் நாட்டில் உள்ள மக்கள் ஜாதி மற்றும் பிராந்தியம் போன்ற பிரிவுகளால் பிளவுபட்டு இருக்கிறார்கள். இந்தப் பிளவுகளை மீறி அவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்து சமுதாயத்தில் உள்ள இதுபோன்ற செயற்கையான பிரிவுகளை இல்லாமல் செய்துவிடும். அந்த நாளைக் காண நான் ஏங்குகிறேன். இத்தகைய தடைகளை உடைத்து நம் பண்பாடு காட்டாற்று வெள்ளம் போலச் சீறிப் பாய்ந்து செல்லவேண்டும். கால்நடைகளின் இனப்பெருக்கம் நல்ல முறையில் ஆரோக்கியமானதாக நடக்கவேண்டும் என்று கவலைப்படும் நாம், மனிதர்களின் வருங்கால வம்சம் குறித்து அந்த அளவு அக்கறை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பல நூற்றாண்டுகளாக குழந்தைத் திருமணம் மற்றும் பிரதிநிதி மூலம் திருமணம் ஆகியவை இங்கு நடந்து வருகின்றன. உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் மேன்மையைக் கொடுக்கக் கூடிய காதல் என்ற உணர்வு இங்கு பல நூற்றாண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் தவிர்க்கமுடியாத விளைவாக நம் இனம் வீர்யம் இன்றி வலுவிழந்து இருக்கிறது. இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் நம்மிடையே இருக்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் இதற்கு ஒரு முக்கியக் காரணம். நம் மதத்தின் அதிகார பீடங்கள் இத்தகைய காதலை மறுதலிக்காமல் அங்கீகரிக்கவேண்டும். ஆகையால், வயதும் கல்வியும் உங்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே ஏற்பட்ட பரஸ்பர கவர்ச்சியும் உங்களிடையே காதலாக மலர்ந்தது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. நமக்கு நெருக்கமானவர்கள் இதனை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதே போதுமானது. இந்த விஷயத்தில் நம் குடும்பம் பின்தங்கி இருக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன். நம் சகோதரர் இதற்கு ஒப்புக்கொண்டு ஆசீர்வதித்தார் என்பதே போதும், இது எனக்கும் விருப்பமான ஒன்றுதான் என்பதை முடிவு செய்ய. 

நீங்கள் எங்கே குடியிருக்க போகிறீர்கள் டாக்டர் அய்யா? முதல் கடிதம் போஸ்ட் ஆபீசில் தவறுதலாகத் தொலைந்து போய்விட்டதால் நேற்றுதான் இரண்டாவது கடிதம் எழுத எனக்கு அனுமதி கொடுத்தார்கள். இது உனக்குப் பதட்டத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு இதன் மூலம் உன்னுடைய தற்போதைய முகவரி கிடைத்தது. நீ தற்போது பம்பாயில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். நீ அந்த நெரிசல் மிகுந்த சுகாதாரம் குறைந்த நகரத்திலா குடியேறப் போகிறாய்? அதற்கு பதில் சாயாஜி ஆண்டுவரும், தற்போது நன்றாக வளர்ந்து வரும் பரோடா சரியான இடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் களநிலவரம் அறிந்த நீ எடுக்கும் முடிவு சரியானதாகத்தான் இருக்கும். நான் உன்னிடம் வலியுறுத்த போவது ஒன்றே ஒன்றுதான். எக்காரணம் கொண்டும் உன் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உன் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்ளாதே. நம் தனிப்பட்ட நலன் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது மற்றவர்கள் விஷயத்தில் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் உனக்கு அது பொருந்தாது. நீ உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது ஆப்பிரிக்கக் காடுகளாகட்டும் அல்லது அமெரிக்காவாகட்டும், நீ படித்திருக்கும் மருத்துவப் படிப்பு உன் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உன் பாதுகாப்பிற்கும் உதவும். எங்கெல்லாம் மரணம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் டாக்டர்களும் இருப்பார்கள். இதைச் சொல்வதற்காக என்னை நீ கோபித்துக்கொள்ளாதே. நான் மருத்துவ படிப்பின் உயர்வினைக் குறிப்பிடவே இதனைச் சொன்னேன். எனவே உன் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு வரும் வகையில் எதையும் செய்யாதே, அதேபோல சாந்தாவின் உடல் ஆரோக்கியத்தையும் நன்றாகப் பார்த்துக்கொள். அவளை நிறையப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் உற்சாகப்படுத்து. ஆனால் ஒரு பெண்ணின் முதல் கவனம் அவளது ஆரோக்கியத்தில்தான் இருக்கவேண்டும். இது அவள் மட்டுமில்லாமல் அவளுடைய வருங்கால சந்ததிக்காகவும் அவள் மேற்கொள்ள வேண்டிய கடமை. அவளுடைய உடம்பில் இருந்து வீணாகும் ஒவ்வொரு துளி சக்தியும் எதிர்கால சந்ததியை பலவீனமாக்கும். அவள் நேற்றைய மற்றும் வருங்கால சந்ததியின் இணைப்புப் பாலம். வருங்கால சந்ததியின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப் போகிறவள் பெண். அதனால் ஒரு மனைவி தன்னுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மிகவும் கவனமாகப் பேணிப் பாதுகாக்கவேண்டும். அதனால் படிப்போ அல்லது பொழுதுபோக்கோ, அவளது சக்தியை வீணடிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது. மாறாக அவளுடைய அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதத்தில் மட்டுமே இருக்கவேண்டும். 

என்னைப் பற்றிக் கூறுவதற்கு விசேடமாக ஒன்றும் இல்லை. என்னுடைய கடைசிக் கடிதம் உனக்குக் கிடைத்தபோது நான் எப்படி இருந்தேனோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறேன். ஒரு கைதியின் வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக போர்ட் ப்ளேயரில் இருக்கும் கைதியின் வாழ்கையில் மாற்றம் என்ற ஒன்று அகராதியிலேயே இருக்காது. போரினால் உங்கள் பகுதியில் வாழ்கை மிகவும் பாதிப்பை உணர்ந்தது என்றாய், ஆனால் இங்கே போர்ட் ப்ளேயரில் அதன் சுவடே தெரியவில்லை. போரினால் இங்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசவையிலிருந்து பெருமையுடன் அறிக்கை வெளியிடலாம். எங்களுடைய ஏற்றுமதி இறக்குமதிகளில் எந்த மாறுதலும் இல்லை. நாங்கள் இரவெல்லாம் விளக்கை அணைக்காமல் ஏற்றியே வைத்திருக்கிறோம். எங்களுடைய சர்வதேசத் தகவல் தொடர்புகள் எல்லாம் எப்போதும் போல அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிஸ்டர் அஸ்கித் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படக் காரணங்கள் இருக்கின்றன. எங்களுக்கு சாப்பாட்டின் அளவோ அல்லது உருளைக்கிழங்கின் அளவோ குறைக்கப்படவில்லை. ஆனால் ஜெர்மானியர்களுக்கு இதுபோலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் உண்ண வேண்டியதை நாங்களே விளைவிக்கின்றோம். எங்களுடைய சிறைச் சுவர்கள் சீனப் பெருஞ்சுவர்களைக் காட்டிலும் பெருமை மிக்கவை. அந்தப் பெருஞ்சுவரினால் அந்நியர்கள் உள்ளே ஊடுருவாமல் தடுக்க மட்டும்தான் முடிந்தது. ஆனால் இந்தச் சுவர்கள் அதைச் செய்வதோடு உள்ளிருப்பவர்கள் வெளியே செல்ல முடியாத படியும் தடுக்கின்றன. மரணம் வலியில்லாததாக இருக்கிறது. போர் என்பது முடிவிற்கு வந்ததும் எங்களுடைய வாழ்கை மனித குலத்திற்கு ஒரு மாதிரி போலக் காண்பிக்கப்படலாம். மரணத்தையே வெட்கமுற வைக்கும் விதத்தில் ஒரு அமைதியான வாழ்க்கை அல்லது பிழைத்திருத்தல் என்றும் சொல்லலாம். 

நேர்காணலைப் பொருத்தவரையில் நாம் போர் முடியும்வரை காத்திருக்கலாம். அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கத் தயங்குவதின் காரணத்தை நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்ளலாம். அதற்குப் பின்னும்கூட நீ அனுமதிவேண்டி எழுதும் கடிதத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறோம் என்ற ரீதியில் இல்லாமல், ஐந்து வருடங்கள் ஆனபிறகு எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் சலுகை இது, அதனால் நமக்கும் வழங்கப்படவேண்டும் என்றே கேட்கவேண்டும். அப்போது அனுமதி மறுக்கப்பட்டாலும் இந்த இரக்கமில்லாத அந்நியர் கண்களுக்கு நம் பிரிவின் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டாமல் இருந்தோம் என்ற திருப்தியாவது இருக்கும். மேலும் இங்கு நிலைமையை சீராக்க வேண்டி நீ எந்த வேண்டுகோள் விடுப்பதாக இருந்தாலும் அதனை டெல்லிக்கு நேரடியாக எழுதவும். ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகளுக்கு நிலைமையை சீராக்கும் விதத்தில் எதனையும் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. அவர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்யாதிருக்கும் பட்சத்தில் நான் அவர்களைச் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுத்து அவற்றை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். இங்குள்ள கொடுமைகளால் நான் மனமுடைந்து போகமாட்டேன் என்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், நான் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கக் காரணமான சமூக, அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், ஒரு விஷயத்தை நினைத்துப் பார் என் சகோதரனே! அல்லல்படுவதும் ஒரு வேலைதானே. கிறிஸ்தவ மதத்திற்காக யார் அதிகம் வேலை செய்தார்கள்? வேலை செய்தவர்களா அல்லது அமைதியாக அல்லல்களை அனுபவித்தவர்களா? இருவருமேதான். ஆனால் நல்ல விஷயங்களுக்காக வெளியே வேலை செய்பவர்களைக் காட்டிலும் அதே காரணங்களுக்காகச் சிறையில் அடைபட்டு அல்லல்படுபவர்கள் கூடுதலாக வேலை செய்கிறவர்கள் என்று நான் கருதுகிறேன். அல்லல்படுவது என்பது நம்மை மேற்கொண்டு பணி செய்யத் தூண்டும் உந்து சக்தியாக இருக்கின்றது. சமுதாயத்தில் உள்ள சிறந்த மக்கள் அல்லலுராமல், மற்றவர்கள் பணி செய்ய இயலாது. இரண்டுமே மகத்தானது, அதே நேரம் இரண்டுமே தவிர்க்க இயலாதது. அதனால் இதில் இரண்டில் எதனைச் செய்ய நாம் பணிக்கப்பட்டாலும் நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். ஆகவே சகோதரா, மற்றவர்கள் எல்லாம் வெளியில் மகிழ்ச்சியாக இருக்க நான் மட்டும் இங்கே இருட்டறையில் அல்லல்படுகிறேன் என்று கவலை கொள்ளவேண்டாம். 

நம் பாரதத் தாயின் பாதங்களுக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். காத்திருந்து அல்லல்படுவோரும் அதில் அடக்கம் என்பதை நீ மனதில் கொள்ள வேண்டும்.
காத்திருத்தல் மட்டுமல்லாமல் அல்லலும் பட்டு அதனை தீரத்துடன் எதிர்கொள்வோரும் பெரும் பணி செய்பவர்கள்தான். பாறைகளை செதுக்கி அவற்றை அடுக்கும் பணி சிறப்பான ஒன்றுதான். ஆனால் தேவாலயச் சுவர்களில் இந்தப் பாறைகளைத் தாங்கும் சிமெண்டும் அதேபோல இன்றியமையாததுதான். அமைதியாகத் தியாகம் புரிவோர் இத்தகையவர்கள்தான்.

பால், உனக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கும், ஆனால் உடல் ரீதியாக நான் படும் ஒவ்வொரு அவஸ்தையும் என் அமைதியான ஆன்மாவின் சக்தியினால் காணாமல் போகின்றது. இந்த அமைதித் தென்றல் என்னை வருடிச் செல்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பவனைப் போல நான் உணர்கிறேன். நம் தாய்நாட்டின் விடுதலைக்காக நான் எதிர்கொள்ளும் பரிட்சையே இது. அதனால் இதனை நான் திருப்தியுடன் எதிர்கொள்கிறேன். விடுதலை என்ற அற்புதச் செய்திக்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். பகலில் கடுமையாக உழைக்கிறேன். அதனால் இரவுப்பொழுது நெருங்கியதும் நன்றாக உறங்கவும் செய்கிறேன். சில நாட்கள் சில கெட்ட கனவுகள் வந்து என்னைத் தொந்தரவு செய்யும். ஆனால் விழித்துக் கொண்டவுடன் மனம் மீண்டும் அமைதியாக ஆகிவிடும். சில சமயம் நான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவுடன் கடல் அலைகளின் சாத்தான் ஜன்னல் வழியாக எனக்குக் கேட்கும். தன்னைத் தானே பரிகசித்துக்கொண்டு சிரித்த ராஜனின் கதை பற்றி காளிதாசன் எழுதிய வரிகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன. நானும் என்னை அதேபோல கற்பனை செய்துகொண்டு சிரித்துக்கொள்கிறேன். கடுமையான பணிகள் ஒரு புறம், அமைதியான மனம் மறுபுறம் என்று இருப்பதினால் இதுபோன்ற சிந்தனைகள் வருகின்றன. இது சிறையில் படும் அல்லல்களினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்க உதவுகிறது. அதனால், நானும் நம் சகோதரனும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம், இந்த அடிமை வாழ்வில் வரக்கூடிய எல்லா இன்னல்களையும் ஏற்றுச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்.

உன்னுடைய திருமண வைபவம் குறித்த விபரங்கள் மிக நன்றாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை எழுதியவர் நல்ல திறன் படைத்தவர் என்றாலும் அவரின் தயக்கமே அவருக்குப் பெரிய தடைக்கல்லாக இருக்கும். அவர் முதலில் சிறிய கதைகள் சிலவற்றை எழுதி அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்பவேண்டும். அவை பிரசுரமானால் அவருக்கு அது தைரியத்தை அளிக்கும். உதாரணத்திற்கு அவர் நம் சாதி அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். அது எத்தகை தீமையை விளைவிக்கின்றது என்பதை விளக்கும் வகையில் அவர் கதை எழுதலாம். மனிதகுலம் தன் மாபெரும் இலக்கை நோக்கி முன்னேற அது எப்படி ஒரு தடைக்கல்லாக இருக்கின்றது என்பதை அதில் விளக்கலாம். அதன் பிறகு அவர் பெரிய கதைகளை எழுதலாம். அவரையும் சகோதரர் யமராஜ் அவர்களையும் நான் விசாரித்ததாகச் சொல்லவும். என்னுடைய பால்ய கால நண்பர்களையும் கல்லூரித் தோழர்களையும் மற்றும் எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். என் ப்ரிய ரிஷியின் இருப்பிடம் பற்றித் தெரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. அவன் இன்னமும் அதே அலுவலகத்தில் அதே பணியில் இருக்கின்றானா? அப்புறம் என்னுடைய புதிய நண்பர்களும். எனக்கு அவனைப் பற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அவனும் இதேபோல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டான். புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் ஒருசேரப் பெற்றவன் அவன். உன் திருமணத்தில் கலந்துகொண்ட பேராசிரியரின் பெயரை நான் மறந்துவிட்டேன். அவருக்கும் என் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மேடம் காமாவிற்கும் என் வந்தனங்கள். போரினால் மேடம் காமாவிற்கு பெரும் இன்னல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். அவருக்கு என் அன்பினைக் கூறவும். அவருடன் பாரீசில் நான் பார்த்த நண்பர்கள், அதிலும் குறிப்பாக அந்த சந்நியாசி, அவர்கள் என் நினைவில் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறவும். நீ அனுப்பி வைத்த படங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எனதன்பிற்குரிய இயேசுவாகினி மிகவும் அமைதியாக ஒரு தேவதை போலக் காட்சியளிக்கிறாள். பம்பாய் சிறையில் என்னை அவள் காண வந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரும் இதே கருத்தைச் சொன்னார். அக்காவிற்கும் சாந்தாவிற்கும் என் அன்பு நிறைந்த விசாரிப்புகளைக் கூறவும். எனக்கு அவர்கள் எல்லோரையும் நினைத்தாலே பெருமையாக இருக்கின்றது. அடுத்த முறை என் ப்ரிய யாமனேவின் கடிதத்தின் மொழிபெயர்ப்பை அனுப்ப மறக்கவேண்டாம். நல்ல குணவதி, அவளுக்கு என் அனுதாபங்கள். அமைதியாக எல்லாவற்றயும் பொறுத்துக்கொள்ளும் அவளுக்குப் பெருமைகள் உண்டாகட்டும். அவளுடைய பெற்றோர்கள் ஆட்சேபித்தால் அவளை பம்பாய் வரச் சொல்லி வற்புறுத்தவேண்டாம். அவர்களுடைய அன்பும் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் மதிக்கப்பட வேண்டும். மற்ற சகோதரர்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? அம்மாவிற்கும் சித்திக்கும் என்னுடைய வந்தனங்கள்.

அன்புடன்
உங்களுடைய தாத்யா.


Posted on Leave a comment

அந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (பகுதி 4) | தமிழில்: VV பாலா

நான்காவது கடிதம்

(புகைப்படம் நன்றி: savarkar.org)
செல்லுலார் சிறை.
9-3-1915.
போர்ட் ப்ளேயர்
எனது
அன்பிற்குரிய பால் (Bal).
உனது
கடிதம் கிடைத்து, ரிப்வான்வின்கிலைப் (
Ripvanwincle) போலத் தூங்கி கொண்டிருந்த
நான், 7 – 8 மாதங்கள் கழித்து இப்போது பதில் எழுத முனைத்திருக்கிறேன். உன்னிடமிருந்து
கடிதம் வருவது உன்னைப் பார்ப்பதற்கு சமம். அதற்கு ஒரு காரணம், உன் கடிதங்களில் நீ கொடுக்கும்
சினிமா போன்ற விவரணைகள். மற்றொரு காரணம், சிறையில் இருப்பதனால் நாம் படிக்கும் விஷயங்கள்
நமக்குக் காதால் கேட்பது போன்ற ஒரு அனுபவம் ஏற்படுகிறது என்பதும். பிறவியிலேயே பார்வை
அற்றவர்கள், கேட்கும் விஷயங்களை கற்பனை செய்து கொள்வதைப் போல, சிறையின் தனிமை நமக்கு
அது போன்றதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. நான் எப்போதெல்லாம் உன் கடிதத்தைப் படிக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னையும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நம் வீட்டில் உள்ள மற்ற சொந்தங்களையும்
அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் பார்ப்பது போல உணர்கிறேன். நீ நன்றாக ஆரோக்கியமாக இருப்பது,
நல்லபடியான வாழ்க்கை வாழ்வது எனக்கும் நம் அன்பு சகோதரர் பாபாவுக்கும் மகிழ்ச்சியைக்
கொடுக்கின்றது. எங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.
நீ சென்ற வருடம் அனுப்பிய புத்தகங்கள் மொத்தம் 16. இந்த வருடம் 13. அதில் அக்டோபரில்
இரண்டு, நவம்பரில் இரண்டு என்று நான்கு ஆங்கிலம், மற்றவை சம்ஸ்க்ரிதமும் மற்ற பிராந்திய
மொழிகளும். இந்த விவரம் சரியா என்பதை நீ எழுது. அடுத்த முறை நீ பார்சல் அனுப்பும்போது
உன் கைப்பட அதில் உள்ளவற்றைப் பட்டிலியலிட்டு அனுப்பு. இங்கே அவற்றைப் பெற்றுக்கொள்ளும்
போது சரிபார்க்க அது உதவும்.
சமாஜ
ரஹஸ்ய நாவல் நன்றாக இருந்தது. (ஏன் அதனை இரண்டு பிரதி அனுப்பி இருந்தாய்?) அது ஒரு
நல்ல புதினம். இன்னொரு விஷயம் – நம் சமுதாய அமைப்புக்களிலேயே இந்த சாதி அமைப்பு என்பது
நம் நாட்டின் மிக பெரிய சாபக்கேடு. இது இந்த மாபெரும் ஹிந்து சமுதாயத்தை அழித்து விடக்
கூடிய அபாயம் இருக்கின்றது. நாம் இதனை நான்கு சாதிகள் உள்ள அமைப்பாகக் குறைப்போம் என்ற
வாதம் எல்லாம் பயன் தராது. அது நடக்கவும் நடக்காது. இது வேரோடு பிடுங்கி களையப்பட வேண்டும்.
அதற்கான சிறந்த வழி, அதனை எதிர்த்து பிரசாரம் செய்வது. நம் இலக்கியங்கள், நாடகங்கள்,
புதினங்கள் என்று எல்லாவற்றிலும். ஒவ்வொரு தேசபக்தனும் இரட்டை நிலைப்பாடுகளை எடுக்காமல்
தன் மனதில் உள்ளதைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அதேபோல் அதனை செயலில் காட்டவும் வேண்டும்.
ஆனால் அதே நேரம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும்போது நாம் நம்முடைய சொந்தங்கள் இடையே
எந்த பிணக்கும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம்முடைய ஆட்கள் கேட்கும்
கேள்விகளுக்கு எல்லாம் திருப்திகரமாக பதில் அளிப்பது என்பது இயலாத காரியம். நான் அதற்காகத்தான்
‘சமாஜரகஸ்யம்’ போன்ற பல கதைகளை எழுத உள்ளேன். அவற்றில் இந்த சமுதாயத் தீமைகளைச் சாடுவேன்.
இவற்றால் ஒரு காலத்தில் நன்மை இருந்திருக்கலாம், ஆனால் இப்போது இது செத்து விட்டது.
அதனால் இதனை, நீ விரும்பினால் கண்ணீருடன், புதைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னைப்
பார்க்க உனக்கு அரசு இந்த வருடம் அனுமதி அளிக்க போகிறது என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியைத்
தந்தது. அதற்காக நான் அதிகாரிகளுக்கு நன்றி சொல்வேன். ஆனால் வாகினி இந்த வருடம் இந்தப்
பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று நான் கருதுகிறேன். நீ தனியாக வா. இங்குள்ள வசதிகளை
எல்லாம் பார்த்துவிட்டு அடுத்த வருடம் வேண்டுமானால் அவளையும் அன்பிற்குரிய மாயி-யையும்
(Mai) அழைத்துக் கொண்டு வா. அவர்களைப் பார்க்க கூடிய பாக்கியத்தை இந்த வருடம் நான்
தியாகம் செய்வதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும் அவர்களுடைய நன்மைக்காகத்தான்.
அதனால் இந்த வருடம் நீ தனியாக வரவும்.
இந்தியப்
படைகள் ஐரோப்பாவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவர்கள் அங்கு சென்று உலகின் மிக சக்தி வாய்ந்த ராணுவத்திற்கு எதிராக தீரத்துடன் போர்
புரிந்து பெருமை பெற்றிருகின்றனர். இந்த மண்ணில் இன்னமும் ஆண்மை மடியவில்லை. அயல்நாட்டிற்குப்
பயணம் செய்வதை நாம் ஊக்குவித்து கொண்டிருந்தோம். வருடத்திற்கு பத்து பன்னிரண்டு பேர்
அயல்நாடுகளுக்கு சென்றாலே நாம் எதோ சாதித்து விட்டதைப் போல மகிழ்ச்சி அடைவோம். ஆனால்
நம்மால் செய்ய முடியாதது இப்போது கடவுள் அருளால் தானாக நடக்கிறது. பழமையில் ஊறி இருந்த
ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் இப்போது சீக்கியர்கள் கூர்க்காக்கள் மற்றும் ராஜபுத்திரர்கள்
போல் தங்கள் நிலைகளில் இருந்து மாறி கடல் கடந்து அரசு செலவில் பயணிக்கிறார்கள். நம்
பண்டிட்கள் கடல் கடந்து போகலாமா கூடாதா என்று சாஸ்திரங்களைப் புரட்டி ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கட்டும். அனுமதி உண்டோ இல்லையோ, ஹிந்துக்கள் கடல் கடந்து சென்று விட்டார்கள்.
அவர்கள் அதன் மூலம் ஒரு புதிய சகாப்தத்தையும் படைத்து விட்டார்கள். சிலுவைப் போர்கள்
மூலம் ஆசியாவின் மேம்பட்ட நாகரீத்தோடு தொடர்பு கொண்ட ஐரோப்பியர்களுக்கு என்ன நேர்ந்ததோ,
அது இப்போது நம் வீரர்களுடன் ஐரோப்பியர்கள் தொடர்பு கொள்வதால் இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும்
ஏற்படும்.
பஞ்சாபில்
உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு அளித்த அவர்களது
கருணை மிக்க செயலுக்கு நாம் பாராட்டவேண்டியதில்லை. எங்களில் பலர் ஏற்கெனவே போர்முனைக்குச்
செல்ல முன்வந்துவிட்டோம் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். அரசாங்கமும் இது குறித்து
குறிப்பு ஒன்றை வெளிட்டு உள்ளது. ஆனால், அதற்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை.
அதே
போல பார்லிமெண்டில் எதோ ஒரு உறுப்பினர் என்னைப் பற்றி அல்லது எங்களைப் பற்றிக் கேள்வி
எழுப்பியதாக வந்த வதந்தியைப் பற்றிக் கொஞ்சம் எழுது. அது உண்மையாக இருந்தால் அது குறித்து
மேற்கொண்டு தகவல்களைக் கூறு. குரு மற்றும் ரவி குறித்த கவிதைகள் உனக்குக் கிடைத்ததா?
மதிப்பிற்குரிய
கோகலே அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை உலுக்கியது. அவர் ஒரு சிறந்த தேசபக்தர்.
ஒரு சில சமயம் அவர் அவசரத்தில் பதட்டத்தில் சில விஷயங்களைக் கூறுவார், செய்வார். பிறகு
சில மாதங்கள் கழித்து அது அவராகவே அது குறித்து வெட்கப்படுவார். ஆனால், அவருடைய வாழ்க்கை
தன்னலம் இன்றி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். அவர் எப்போதும் நாட்டின்
நலனைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அதில் துளிகூட சுயநலம் இருக்காது. வாழ்க்கை
முழுவதும் இந்தியாவுக்காகவும் அதன் நன்மைக்காகவுமே உழைத்தார். அவரை நேரில் சந்தித்து
லண்டனில் அவர் என்னிடம் கூறிய விஷயங்கள் குறித்து அவரோடு விவாதிக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் மரணம் எங்களைப் பிரித்துவிட்டது. எனக்கும்
அவருக்கும் சில விஷயங்களில் கருத்து ஒன்றிப் போகவில்லை, அதற்கு அப்போது அவர், “நல்லது
மிஸ்டர் சாவர்க்கர், நாம் ஆறு வருடங்கள் கழித்து சந்திப்போம். அப்போது இந்த குறிப்புகளை
நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்” என்றார். மகாராஷ்டிரம் கவுன்சிலுக்கு அவரைப் போல சிறந்த
நபர் ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பி வைக்க வேண்டும். அவர் சாதித்த அளவு ஒவ்வொரு இந்தியனும்
சாதித்தால் எப்படி இருக்கும்!
அடுத்த
முறை நீ புத்தகங்கள் அனுப்பும்போது ஜன்மபூமி மற்றும் கௌதமன் போன்ற நாவல்களை அனுப்பு.
சகோதரர் அவற்றைப் படிக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பால்
நீ மேடம் காமாவிடம் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விடுமே என்று நான் அஞ்சிகொண்டிருந்தேன்.
நான் இங்கு வந்த பிறகு அவர்தான் உனக்குத் தாய் போல வழிகாட்டிக் கொண்டிருந்தார். நம்முடைய
மிக கஷ்டமான நேரங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தவர் அவர். ஆனால் இத்தகைய சூழலிலும்
அவர் உனக்குக் கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்தார் என்பதைக் கேட்டு நான் மகிழ்ச்சி
அடைந்தேன். நமக்கு நெருக்கமானவர்கள் இழிக்கும் துரோகத்தால் நிலைகுலைந்து போயிருக்கையில்
இவர்களைப் போன்ற தூய அன்பு கொண்டவர்களின் தொடர்பு நமக்கு மனிதநேயத்தைக் குறித்து நம்பிக்கை
கொள்ளச் செய்கிறது. அவருடைய தூய்மையான வாழ்வு குறித்தும் கஷ்டத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு
உதவும் அவருடைய பாங்கு குறித்தும் நான் எவ்வளவு மதிப்பு கொண்டிருக்கிறேன் என்பதை அவருக்கு
நேரடியாகக் கடிதம் மூலம் என்னால் தெரிவிக்க இயலவில்லை. நம் உறவினர்களிடம் நான் அவரைக்
குறித்து விசாரித்ததைத் தெரிவிக்கும் முன், நீ இவரிடம் என் அன்பையும் விசாரிப்பையும்
தெரிவித்து விடு. அவர்களைக் காட்டிலும் இவர் நம் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.
ஏன் அவர் நமக்கு இதைச் செய்கிறார் என்பது ஆச்சரியம். அதையும் அவர் மீண்டும் மீண்டும்
செய்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்.
நீ
அனுப்பிய புத்தகங்கள் மூலம், தெலுங்கு மாகாணங்களில் பரவி வரும் இயக்கம் இங்குள்ள பலரையும்
தொற்றிக்கொண்டுள்ளது. ஆந்திர சபா ஒரு பெரிய இயக்கம்தான். ஆனால் தமிழில் இருந்து பிரிந்து
போய் தனி மாகாணமாக ஆவது என்பது சரியான போக்கு அல்ல. இத்தகைய பிராந்திய வாதங்களின் எதிரொலியாக
தேசிய அளவில் ஆந்திர மாதாகி ஜெய் போன்ற கோஷங்கள் வருவது வருத்தத்திற்குரிய ஒன்று. இது
பிற்பாடு வரபோகும் ஆபத்தான பிரிவினை வாதங்களுக்குக் கட்டியம் கூறுவது போல உள்ளது. சுதேசி
என்ற மாபெரும் இயக்கத்திற்குக் கிடைத்துள்ள எதிர்வினை இது போன்ற நிலைப்பாடுகள். இவை
ஆரம்பத்திலேயே சரி செய்யப்பட வேண்டும். வங்க தேசத்தில் பிரிவினை ஏற்பட்டபோது அதற்கும்
சுதேசிக்கும் இருந்த சிறிய தொடர்பே இத்தகைய எதிர்வினைகளுக்கு காரணம். இப்போது ஒவ்வொரு
மாகாணமும் அது போலப் பிரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறது. ஆனால் தேசம் என்ற பாதுகாப்பு
இல்லாமல் இந்தப் பிராந்தியங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? மகாராஷ்டிரா, பெங்கால்,
மெட்ராஸ் எல்லாமே செழித்து ஓங்கும், ஆனால் அது இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும்
வரைதான். எனவே, ஆந்திர மாதாகி ஜெய் என்று கோஷம் எழுப்புவதற்கு பதில் பாரத் மாதா கி
ஜெய் என்று கோஷம் எழுப்புவோம், ஆந்திரம் அதன் ஒரு பகுதிதான். அதே போல வங்க ஆபார் என்ற
கோஷத்திற்கு பதில் ஹிந்த் ஆபார் என்று கோஷம் எழுப்புவோம். ஒவ்வொரு மாகாணமும் பிரிவினை
என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒன்றாக இணைந்து மொழிகளால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும்
தடைகளையும் நீக்க வேண்டும். சிறிய தேசங்கள் குறித்து சிந்திக்கும்போது பெல்ஜியத்தில்
நடந்தது நமக்கு எச்சரிக்கை அளிக்கட்டும். தன்னை அறியாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு
நன்மை ஒன்றைச் செய்திருக்கிறது என்றால், அது நம்மிடம் உள்ள பேதங்களை எல்லாம் மறந்து
நம்மை ஒன்றிணைத்திருப்பதுதான். இப்போது இந்த ஒற்றுமையை வலுப்படுத்தாமல், நாம் நமக்குக்
கிடைத்த இந்த வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தாமல், பிரிவினை பேசி கிடைத்த வரத்தை சாபமாக
மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
எனக்குத்
தோன்றியவற்றை எல்லாம் எழுதிவிட்டேன். உன் கடிதம் மற்றும் நீ அனுப்பிய புத்தகங்கள் பற்றியும்
கேட்டு விட்டேன். அடுத்த முறை நான் அனுப்பும் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை அனுப்பு.
அவற்றை பார்சலாக அனுப்பாமல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நீ வரும்போது கொண்டு வந்தாலும்
போதும். அது முடியவில்லை என்றால் பார்சல் அனுப்பு. நம் நண்பர்களிடம் தொடர்பு கொண்ட
பிறகு இந்தக் கடிதத்திற்குப் பதில் போடு. நீ கடிதத்தில் குறிப்பிட்ட அந்த நல்ல மனிதரை
நீ சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஒரே சிந்தனை கொண்டவர்கள் ஆதலால் உங்கள் இருவருக்கும்
ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். அவரிடம் நான் விசாரித்ததாகக்
கூறவும். அவரை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். நம் பேராசிரியர் எப்படி இருக்கிறார்?
மிகுந்த போராட்டங்களை சந்தித்த பின் ஒரு பறவை இப்போது கூட்டிற்குத் திரும்பி இருக்கும்
என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. அவர் விடுதலையானது நானே விடுதலை ஆனது போல
சந்தோஷத்தை எனக்கு அளிக்கின்றது. சாகாராமும் இப்போது அங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கொண்ட கொள்கைக்காக மரணம் எய்தினான் என்றாலும் அது முட்டாள்தனமான முடிவு. இப்போது அதை
நினைத்தாலும் மனது வலிக்கின்றது.
எங்களைப்
பற்றி நீ வருத்தம் கொள்ள வேண்டாம். தண்டனை பெற்ற நிறைய கைதிகள் இங்கு விடுதலை பெற்று
வருகிறார்கள். எங்களைப் போல ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் இப்போது இங்கே இருக்கின்றோம்.
போர் நடந்து கொண்டிருக்கும் வரை அதிகாரிகளை சங்கடபடுத்தும் வகையில் எதையும் கேட்க வேண்டாம்
என்று நான் தீர்மானித்திருக்கிறேன். தற்போது எங்கள் இருவருடைய உடல் ஆரோக்கியமும் நல்ல
நிலையில் இருக்கிறது. இப்போது சிறை நிர்வாகத்தை காப்டன் மேஜர் மர்ரே என்பவர்தான் பார்த்துக்
கொண்டிருக்கிறார். அவர் இங்கு இருக்கும் வரை விதிகளை மீறி எங்களுக்கு எந்த விதமான தீங்கும்
இழைக்கப்படாது என்பதில் நீ உறுதியாய் இருக்கலாம். நீ அனுப்பும் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு
புத்தகமும் எனக்கு ஒழுங்காக வந்து சேர்ந்து விடும். எங்களுடைய தினப்படி வாழ்க்கை சென்ற
வருடத்தைப் போலவே சென்று கொண்டிருக்கிறது. இங்கு சிறையில் முதல் நாள் என்ன நடக்கின்றதோ
அதுவே தொடர்ந்து நடக்கும். இது சிறை ஒழுங்கின் சிறப்பு. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப்
போலவே ஒவ்வொருவருக்கும் நம்பர் தரப்பட்டு ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறோம். நான்
கடந்த வருடங்களில் உனக்கு எழுதி அனுப்பிய வழிகாட்டி புத்தகம், நான் இங்கு இருக்கும்
வரையில் எங்கள் சிறை வாழ்கையை சித்தரிப்பதாக இருக்கும். நாங்கள் சீக்கிரம் எழுந்து,
கடுமையாக உழைத்து நேரா நேரத்திற்குச் சாப்பிடுகிறோம். எல்லாம் அதே நேரத்தில் அதே இடத்தில
நடக்கும். ஒரே மாதிரியான உணவே இங்கு தயாரிக்கப்படும். அதே போலத்தான் மருத்துவ வசதிகளும்.
நான் வேலை முடிந்த பிறகும் சில நாட்கள் மாலையிலும் படிக்கின்றேன். சில சமயங்களில் பெயர்
தெரியாத பூக்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு அப்படியே தூங்கிப்போவேன். இங்கு சிறையைப்
பற்றி ஒன்று கூறியாக வேண்டும். இங்குள்ள கைதிகளுக்கு தாங்கள் நினைத்ததைச் செய்யவும்
சொல்லவும் சுதந்திரம் கிடையாதே தவிர, அவர்கள் கனவு காண எந்தத் தடையும் இல்லை. இந்தச்
சலுகையை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் இரவில் நான் சிறையிலிருந்து
தப்பித்து வெளியே சென்று உன்னைப் போன்ற எனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்து வருகிறேன்.
ஒவ்வொரு இரவும் இதனை நான் செய்கிறேன். ஆனால் கருணை கொண்ட சிறை அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்வதில்லை.
நீ விழித்து எழும்போது சிறையில் கண் விழித்தால் போதும் என்பதே அவர்கள் சொல்வது.
போர்
முடிந்ததும் எங்கள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பொது மனு ஒன்றினை நீ
அனுப்பு. இந்தியாவில் மட்டுமல்ல, சுயாட்சி நடக்கும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் விருப்பதிற்கு
மாறாக அரசியல் கைதிகளைச் சிறையில் வைத்திருக்க இயலாது. மக்களுடைய கோரிக்கை இன்றி எந்த
அரசாலும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க இயலாது. போர் முடிந்த பிறகு இந்தியர்களிடம்
அத்தகைய மனு ஒன்று அனுப்பப்படுமேயானால் நாங்கள் விடுதலை செய்யப்படலாம். இல்லையேல் எங்களை
விடுதலை செய்ய அரசாங்கத்தால் இயலாது. மக்கள் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லையென்றால்
நாங்கள் விடுதலை பெறுவதிலும் அர்த்தம் இல்லை. போர்ட் ப்ளேயர் எங்களை இங்கேயே வைத்துக்
கொண்டிருக்கும். எப்படி இருந்தாலும் நீ எங்களுடைய விடுதலைக்காக மனுவினை அனுப்பு. இங்கு
கூடுதல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் கூட தங்கள் குடும்பத்தை இங்கே கொண்டு வந்து
குடி அமர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் சிறை விதிகளின்படி நமக்குக்
கிடைக்க கூடிய சலுகைகளைத்தான் கேட்கிறோம். கூடுதலாக வேறெதையும் அல்ல. இதற்காகத் தொடர்ந்து
நீங்களும் நாங்களும் மனு கொடுத்துக்கொண்டிருந்தால் நமக்கு இதில் வெற்றி கிடைக்கும்.
கடந்த
வருடம் நம்முடைய அன்பிற்குரிய வாகினி எழுதிய கடிதத்தில் நமது குட்டி தோண்டி எப்படி
இருக்கிறாள் என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
அன்பிற்குரிய யமுனாவிடம் நான் விசாரித்ததாகக் கூறவும். அவளுடைய உடல்நலம் எப்படி இருக்கின்றது?
அவள் படிக்கின்றாளா? பல்வந்த் ராவ் இப்போது எந்தக் கல்லூரியில் எந்த வகுப்பு படித்துக்
கொண்டிருக்கிறான்? மற்ற குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? மதிப்பிற்குரிய அண்ணியிடம்
என் வந்தனங்களைக் கூறவும். எந்தத் தவறும் செய்யாத அவர் செய்திருக்கும் தியாகம் மிகப்
பெரியது. சென்ற வருடம் வந்த மாயியின் கடிதத்தின் மூலம், வாகினி என்னைப் பற்றி நினைவில்
வைத்திருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். நான் அவர்களையும் மற்றும் நம் நண்பர்கள்
எல்லோரையும் தினமும் நினைத்துக்கொள்வேன். என் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாலும்,
அவ்வப்போது இவர்களைப் பற்றிய நினைவு வந்து மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேரக் கலந்த
ஒரு உணர்வில் அது ஆழ்ந்துவிடும். அவர்கள் என்னை எப்போதும் மறவாதிருக்க வேண்டும் என்பதே
என் பிரார்த்தனை. என்பால் நேசம் கொண்டவர்களும் என்னை நேசிக்க அனுமதித்தவர்களும் என்
மனக்கோவிலில் எப்போதும் குடி கொண்டிருக்கிறார்கள்.
அன்பிற்குரிய
சகோதரா, உன் மருத்துவப் படிப்பு உனக்கு நல்ல பயன் தரும் என்று எண்ணுகிறேன். படிப்பிற்காக
உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். உனது உடல் எடை என்ன என்பதைக் கூறவும்.
அன்பிற்குரிய பால், உனக்கும், வசந்திற்கும், நம் சகோதரி மாயிக்கும் என் அன்பும் ஆசிர்வாதங்களும்.
விடை பெறுகிறேன்.

உன் சகோதரன்
தாத்யா. 

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலா

கடிதம் 3

திரும்பி பார்க்கையில் ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அந்த
சந்தோஷமான நாள் திரும்பவும் வந்திருக்கிறது. வீட்டில் இருந்து ஒரு செய்தி வருவதும்
வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும் எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பது சிறையில் இருக்கும்
ஒருவருக்குதான் நன்றாகத் தெரியும். நாம் நேசிக்கும் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து
நிலவொளியில் உரையாடுவதைப் போல மனதுக்கு ரம்மியமானது அது. ஒரு நிமிடம் பொறு. மணி அடித்துவிட்டது.
நான் போய் உணவு உட்கொள்ள வேண்டும். காலை மணி பத்தாகி விட்டது… நான் மற்ற கைதிகளுடன்
அமர்ந்து உணவு உட்கொண்டு திரும்பி வந்து விட்டேன். ஆமாம் நான் ஏற்கெனவே சொன்னது போல
அது மிக இனிமையானதுதான். உண்மையில் வீட்டிற்கு கடிதம் எழுதும் நாள்தான் எனக்குப் புத்தாண்டுத்
தினம் போல. என் ஆண்டுக்கணக்கை நான் அன்றிலிருந்துதான் தொடங்குவேன். எனக்கு நெருக்கமானவர்களுடன்
உரையாடும்போது எனக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைக்கின்றன. அது என்னை மேலும்
ஒரு வருடத்திற்கு ஜீவித்திருக்கச் செய்கிறது. நான் ஏற்கெனவே கடிதம் எழுதாமல் உன்னைத்
தந்தி கொடுக்க வைத்ததற்கு மன்னிக்கவும். அதிகாரிகள் எனக்கு அதை பற்றித் தெரிவித்திருந்தனர்.
கடிதம் எழுதி ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அடுத்த கடிதம் எழுத எனக்கு அனுமதி உண்டென்றாலும்
இங்குள்ள தபால் துரையின் மெத்தனத்தால் கடிதம் எழுதியபின் ஆறு அல்லது ஏழு வாரங்களுக்குப்
பிறகுதான் அது கல்கத்தாவிற்கு அனுப்பப்படுகிறது. அதனால்தான் அடுத்த கடிதத்திற்கு பதினான்கு
மாதங்கள் ஆகின்றது. ஆனால் நீ அனுப்பும் கடிதங்கள் இந்த இருவதாம் நூற்றாண்டில் எத்தனை
சீக்கிரம் வர இயலுமோ அதனை சீக்கிரத்தில் வந்து விடுகின்றது. உன்னுடைய கடிதத்தின் மூலம்
நீ ஆரோக்யமாக இருப்பதையும் நீ தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதையும்
தெரிந்து கொண்டேன். தேர்வுகள் ஒருபுறம் இருந்தாலும் நீங உன் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம்
அளிக்க வேண்டும். இளமையான ஆரோக்கியமான உன்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆவலாக
உள்ளது. நீ இப்போதுதான் இளமை பிராயத்தினுள் நுழைகிறாய். இப்போது சக்தியும் உத்வேகமும்
அதிகமாக இருக்கும். அதனை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் வீணடிக்காதே. உடல் ஆரோக்கியத்தைப்
போல மன ஆரோக்கியமும் முக்கியம். நீயே ஒரு டாக்டர் என்பதால் உன்னிடம் ஆரோக்கியத்தைப்
பற்றி வலியுறுத்துவது தேவையற்ற செயல்தான். ஆனால் இளமைப் பருவத்தில்தான் நாம் கண்மூடித்தனமாக
சில காரியங்களைச் செய்து நம் சக்தி அனைத்தையும் வீணாக்கிக் கொள்வோம். இப்போது சக்தியை
வீணாக்காமல் இருப்பது பிற்காலத்தில் நமக்குத் தேவைப்படும்போது உதவும். இல்லாமல், உன்
கண் பார்வை மங்கினால் நானே உன்னிடம், ‘டாக்டர் உங்கள உடல் நிலையை சீராக்கிக் கொள்ளுங்கள்’
என்று கோபமாகச் சொல்வேன். (நான் சொல்வதைக் கேட்டு உனக்குச் சிரிப்பு வரலாம். நான் டாக்டர்
அல்ல. அதனால் என் கண் பார்வைத் திறன் குறைவது பிரச்சினையில்லை. எல்லா வழக்கறிஞர்களுக்கும்
இந்தப் பிரச்சினை வரும்.) எனக்கு விருப்பமானவர்கள் சிலர் BA மற்றும் MA ஆகியவற்றை முடித்துவிட்டார்கள்
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது மிகவும் உயர்வானது. ஆனால் இதனைக் காட்டிலும்
உயர்வான விஷயம் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு அதில் வரக்கூடிய தடைகளை நீக்கி வெற்றி
பெறுவது. பலகலைக்கழகங்கள் வழங்கும் பதக்கங்களை விட சமுதாயம் வழங்கும் பதக்கங்களே மிக
உயர்வானவை. நான் இன்னமும் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் அந்த
வெற்றியைப் பற்றி நேரடியாகக் கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்படித் தெரிவிக்கச்
சொல்லி உன்னிடம் கூறுபவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுது.
நீ அனுப்பிய புத்தகங்கள் அருமையானவை. ‘மகாத்மா பரிச்சய’
– என்ன ஒரு அருமையான மொழிபெயர்ப்பு! அதன் அறிமுகத்தில் முதல் இரண்டு வரிகளும் பொருத்தமாகவும்
அடக்கமாகவும் இருந்தன. அதன் முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது அந்த வார்த்தைகளே
என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அதனை யார் எழுதி இருப்பார்கள் என்று எனக்குத்
தெரியும். புத்தகத்தின் சொல்வளமும் மையகருத்தும் ஒன்றுகொன்று அழகு சேர்ப்பதாய் இருந்தது.
மக்களிடையே பிரபலமாகி உள்ள ‘பாரத் கவ்ரவ் மாலா’ போன்ற தொடர்கள் அரசியல் வரலாறு, விஞ்ஞானம்,
பொருளாதாரம் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வர வேண்டும். வேதாந்த தத்துவப் புத்தகங்களைப்
பொருத்தவரை நமக்கு அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கர்களுக்கும்
ஆங்கிலேயர்களுக்கும் வேதாந்த தத்துவங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுடைய வாழ்கை முழுமையான
முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்கள் ஷத்ரியத் தன்மையில் இருந்து பிராம்மண தன்மையின்
விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தத்துவங்களை நிஜ வாழ்வில் செயல்ரீதியாகக்
கொண்டு வருவதற்கான சரியான நிலை அதுதான். ஆனால் இந்தியா தற்போது அந்த நிலையில் இல்லை.
நாம் தற்போது வேத வேதாந்தங்களைக் கற்கும் நிலையில் இல்லை.
சூத்திரர்களுக்கு வேதம் மறுக்கப்பட்டதன் மூல காரணம் இதுதான்.
அது குறுகிய மனப்பான்மையாலோ அல்லது கொடூர சிந்தனையாலோ அல்ல. அப்படியென்றால் அதே தத்துவங்களை
விவரிக்கும் புராணங்களை பிராமணர்கள் எழுதி இருக்க மாட்டார்கள். இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைப்
பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையில் நம்முடைய நாடு தற்போது இருக்கிறது. பாஜிராவ் 2 ஒரு
பெரிய வேதாந்தி, அதனாலேயே அவரால் ஒரு தேசத்திற்கும் பென்ஷனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்
புரிந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. நாம் வரலாறு, அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம்,
போன்றவற்றைப் படித்து நம் வாழ்க்கைத் தரத்தை முதலில் மேம்படுத்தி கொள்வோம். முதலில்
க்ரிகஸ்தாஸ்ரம தர்மத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்துவிட்டுப் பிறகு வானப்ரஸ்த ஆஷ்ராமத்தின்
வாயிலில் அடி எடுத்து வைப்போம். இந்த புத்தகங்கள் எல்லாம் தற்போது விதவைகள், முதியவர்கள்,
ஒய்வூதியம் பெற்று வீட்டில் இருப்போர் போன்றவர் படிக்கட்டும். அவர்கள்தான் பழைய நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் படிக்கட்டும் இந்தக் கடவுள், ஆத்மா, மனிதன் போன்றவற்றை
அலசும் புத்தகங்களை! இளைஞர்கள் எதிர்காலம் குறித்த கனவில் வாழட்டும். பெனாரஸ் ஒரு தியாகியைக்
கூட அளித்ததில்லை, அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கென எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை.
என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதுகிறேன். கடந்த ஒரு வருடத்தில்
எனக்கு எந்த நோயும் வரவில்லை. என் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. உடல் எடையும் குறையவில்லை.
அதுவே ஒரு சாதனைதான் இல்லையா? சிறையின் இந்த சிறு அறையில் நான் தினமும் சீக்கிரம் எழுந்து,
சரியான அளவு உணவை சரியான நேரத்திற்கு உண்டு, சீக்கிரமே படுத்தும் விடுகிறேன். இதனாலேயே
நான் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். வருங்கால டாக்டரான உனக்கு என்னுடைய இந்த அட்டவணை
மிகவும் உபயோகமாக இருக்கும். உடலைப் போலவே என்னுடைய மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது.
இப்போது நான் இருக்கும் சிறை அறையில் தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க
முடிகிறது. அறையில் இருந்தபடியே ரோஜா, லில்லி போன்ற மலர்களைப் பார்கிறேன். அவற்றைப்
பார்க்கும்போது என் மனம் தத்வார்த்த விசாரங்களில் ஈடுபடுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக
அப்போது நான் உணர்கிறேன். சில சமயங்களில் ஒரு சிறு குழந்தை போல அழவும் செய்வேன். அப்போது
நான் கொண்ட கொள்கை எனக்கு நினைவிற்கு வந்து என்னைத் தேற்றும். தனி மனித சுகத்திற்கோ
அங்கீகாரதிற்கோ வேண்டியா நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கினோம் என்ற எண்ணம் வந்து என்னை
அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும். பெயர், புகழ், சொத்து போன்றவற்றை
எண்ணி நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. சந்தோஷமும் நம்முடைய இலக்கில்லை. இந்தப்
போராட்டத்தில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது தெரிந்தே ஈடுபட்டிருக்கிறோம்.
மற்றவர்களுக்காவும் மனித குலத்திற்காகவும் தியாகம் செய்ய வேண்டியே இதில் ஈடுபட்டிருக்கிறோம்.
அப்படி இருக்க இதில் ஏமாற்றம் எங்கிருந்து வரும்? நாம் செய்வது ஒரு தவம். நம்முடைய
சமுதாயம் மேம்பட ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறோம். இதைவிட மேலான காரியம் வேறென்ன இருக்கிறது?
இந்த சிந்தனை மனதில் படர்ந்த உடன் மனம் மறுபடியும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
மனம் அழுந்திக் கிடக்கும்போதெல்லாம் இமயமலையைப் பற்றி எண்ணிக்கொள்வேன். அது உருவாகாத
காலம் ஒன்றிருந்தது. அது இல்லாமல் போகும் காலம் ஒன்றும் வரும். இந்த நிலவு, இந்த சூரியக்
குடும்பம் பற்றி எல்லாம் சிந்திக்கத் தொடங்குவேன். பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனையில்
ஆளும்போது மனம் அதில் ஒரு சிறு துகளாகிய நம்மை மறக்கும்.
எனதருமை பால் (Bal), நாங்கள்
இருவரும் இங்கு நல்ல ஆரோக்
கியத்துடன்
இருக்கிறோம். எங்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். எங்களுக்கு இருப்பதெல்லாம் உன்
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள்தான். இவை இரண்டிற்கும் நீ உத்தரவாதம்
அளித்தால் நாங்கள் வேறு எதனைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
சிறை வாழ்க்கையினால் நாங்கள் துன்புறவில்லை. அதனையும் மீறி நாங்கள் மகிழ்ச்சியுடன்
இருக்கிறோம். நீ இங்கு வருவதற்கு அதிகாரிகளிடம் கொடுத்த மனு குறித்து எழுதியிருந்தாய்.
இங்குள்ள விதிமுறைகளின்படி நான் இந்நேரம் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இந்தத்
தீவில் வாழ அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நடத்தை நல்லபடியாகவே இருக்கிறது.
ஆனால் எங்கள் இருவரையும் வெளியே அனுப்பவில்லை. இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி அரசிடம்
வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். சீக்கிரத்திலேயே நம்முடைய பாபா ஐந்து வருடங்களைப் பூர்த்தி
செய்து விடுவார். அதன் பிறகு நீ இங்கு வர விண்ணபிக்கலாம். ஆனால் எங்கள் விடுதலையும்,
உறவினர்களை இங்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ்வதும் நடக்கும் என்று தோன்றவில்லை. மற்ற
கைதிகளுக்கெல்லாம் அது நடக்கிறது. இதற்கு இங்குள்ள அதிகாரிகளையும் குறை சொல்ல முடியாது.
ஏனென்றால் இந்திய அரசின் உத்தரவுப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே இங்குள்ள
அதிகாரிகளிடம் இருந்து ஏதேனும் தகவல் கிடைக்கவில்லை என்றால் நீ நேரடியாக இந்திய அரசிடம்
கோரிக்கை விடுக்கலாம். அரசு நியாயப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனை ஓரளவு செய்யும். நாங்களும்
அவர்களை நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம். வேறென்ன செய்வது? நீ உன்னுடைய ஆரோக்கியத்தையும்
பாதுகாப்பையும் பற்றி மட்டும் அக்கறை கொண்டால் போதுமானது. நான் உன்னிடம் உயர் நீதிமன்றத்தில்
சொன்னதை நினைவில் வைத்திரு.
அன்பிற்குறிய யமுனாவிடம் மகிழ்ச்சியான நாள் ஒன்று விரைவில்
விடியும் என்று கூறு. நம்பிக்கையுடன் காத்திருக்கச் சொல்.
நம் அன்புக்குரிய வாஹினியிடமும் நம்பிக்கையுடன்
இருக்கச் சொல்.
அவர்கள் புராணங்களை மட்டுமில்லாமல் மராத்தி இலக்கியங்களையும், உலகின் நவீன படைப்புகளையும்
படிக்கட்டும். நம் சகோதரன் சாகாராமின் மறைவுச் செய்தி கேட்டவுடன் வருந்தினேன். நாங்கள்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் சந்தித்தோம். அவன் துணிச்சலுடன் வாழ்ந்தான்,
துணிவுடன் மறைந்தான். இதைவிட வேறு என்ன வேண்டும். அவன் மனைவி ஜானகி வாகினியை நான் நேரில்
பார்த்ததில்லை. நீ வரைந்து அனுப்பிய படங்களின் மூலம்தான் பார்த்திருக்கிறேன். அவர்களின்
நிலை பரிதாபத்திற்குரியது அல்ல. மிகவும் போற்றுதலுக்கு உரியது. அது தனிமையில் இருந்தாலும்
கூட. நான் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். வசந்த் குட்டி எப்படி
இருக்கிறான்? அந்தப் பெரிய மனிதன் எனக்கு ஏதாவது எழுதுவானா? அவனுக்கு இப்போது ஏழு வயதிருக்கும்
இல்லையா? அவன் தாய் எப்படி இருக்கிறார்கள்? நான் அவர்களை டோங்கிரி சிறையில் கடைசியாகப்
பார்த்தேன். ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு ஒரு நல்ல சகோதரிதான்.
வசந்த் குட்டிக்கு என்னுடைய அன்பு முத்தங்களையும் அவனுடைய அம்மாவிற்கு என் அன்பையும்
கூறவும். நம் உறவினர் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். நான் தமாஷாக அம்மா
என்று அழைக்கும், உனக்கு உறுதுணையாக இருக்கும் அந்த சகோதரியிடமும் நான் விசாரித்ததாகக்
கூறவும். சிறையில் இருப்பதால் நான் அவர்களுடைய பெயரை குறிப்பிடவில்லை. என்னுடைய மனதிற்கு
நெருக்கமானவர்கள் யார் என்று உன்னிடம் கூறியிருக்கிறேன். அவர்கள் எல்லோரையும் நான்
விசாரித்ததாகக் கூறவும். அவர்களில் யாரேனும் தனிப்பட்ட முறையில் அவர்களை விசாரிக்க
வேண்டும் என்று கூறுவார்களேயானால் நான் அவர்களைப் பெயரைக் குறிப்பிட்டு விசாரிப்பேன்.
எனக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பி உள்ளேன். நேரமாகி விட்டது, மிகுந்த
தயக்கத்துடன் உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உன் சகோதரன்
தாத்யா.

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) – சாவர்க்கர் | தமிழில்: VV பாலா

(புகைப்படம் நன்றி: சாவர்க்கர் ஸ்மார்க்)

இரண்டாவது கடிதம்
அன்புள்ள சகோதரா!
18 மாதங்கள் கழித்து
எனக்கு பேனாவையும் மையையும் தொடும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இதே
நிலை தொடர்ந்தால் எனக்கு எழுதுவதே மறந்து போகும் நிலை கூட வரலாம். இந்த
த் தாமதம் உன் ஏக்கத்தை அதிகரித்திருக்கும். ஆனால் ஜூலை மாதம் நம் அன்பிற்குரிய
பாபா அவர்களின் கடிதம் உனக்கு
க்
கிடைத்திருக்கும். அதனால் ஒரே நேரத்தில் இரு கடிதங்களையும் அனுப்பாமல் இடைவெளி
விட்டு அனுப்பினால் உனக்கும் அது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேன். நீ
மருத்துவ
ப் படிப்பு சேர்ந்து நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி. உனக்கு அந்தப் படிப்பு பிடித்திருக்கிறதா? என்னைப் பொருத்தவரையில் அது ஒரு புனிதமான படிப்பு. நீ மருத்துவம் மட்டுமில்லாமல் உடற்கூறு
அறிவியலையும் உன்னுடைய விசேட பாடமாக எடுத்து
ப் படித்தால் நன்று.
இதனை ஒரு தொழிலாக
க் கருதாமல் சேவையாகக் கருது. இதன் மூலம் தொண்டாற்ற நிறைய வாய்ப்புகள்
கிடைக்கும். ஆப்
பிரிக்கப் பழங்குடி மக்கள்
முதல் நாக
ரிக மேன்மக்கள் வரை எல்லோரும் மதிக்கும் பணி இது. ஆத்மா
குடியிருக்கும் கோவிலான உடலை
ப் பற்றிய படிப்பு. ஆத்மாவைப் பற்றிய படிப்பிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
உன்னுடைய சென்ற வருடப் புத்தக தேர்வுகள் மிகச் சிறப்பாக இருந்த. மொரோபந்த், பாரத், விவேகானந்தர்,
எல்லாம் தரமான புத்தகங்கள். நான் கேட்ட புத்தகங்களில்
ஜேய மீமாம்சம் மற்றும்அஜேய மீமாம்சம் மட்டும்
வரவில்லை. என்ன காரணம்? நான் இந்த வருடத்திற்கு ஒரு பட்டியல் அனுப்பி இருக்கிறேன்.
ஆனால் எனக்கு
ப் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பத்து
ரூபாய்க்கு மேல் செலவு செய்யவேண்டாம். ஒருவேளை நான் கொடுத்த பட்டியலின் விலை
அதற்கு மிகுமானால் கடைசியில் உள்ள புத்தகங்களை
த்
தவிர்த்து விடு. எல்லாமே புது
ப் புத்தகங்களாக
இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பழைய புத்தகங்கள் கிடைத்தாலும் வாங்கி அனுப்பு.
உனக்கு பெங்கால் பிடித்திருக்கிறதா? நவராத்திரி பண்டிகை விடுமுறை முடிந்து நீ பெங்கால் திரும்பியதும்
கிட்டத்தட்ட பெங்காலி பாபுவாகவே மாறியிருப்பாய் என்று நினைக்கிறேன். மராத்தி மொழி
நினைவிருக்கிறதா? வேறு எதையும் இழக்காமல் பார்த்து
க் கொள். அந்த
புத்திசாலி பெங்காலிகள் உன் இதயத்தை
த் திருடி
விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு பெங்காலி என் சகோதரனின்
மனைவியாக அமைந்தால் எனக்கும் சந்தோஷமே. பல மாகாணங்களில் இருக்கும் ஹிந்துக்கள்
இப்படி
த் திருமண உறவு கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். அதே நேரம் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை மணப்பது இந்தத் தருணத்தில் நம் தேசத்திற்கு நல்லதல்ல என்றும் நான் நினைக்கிறேன்.
எனதருமை பால் (Bal), என்னைப் பற்றியும்
கொஞ்சம் சொல்கிறேன். என் உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது. இந்த
ச் சிறைக்கு வந்த பிறகு என்னுடைய உடம்பிற்கு எந்தப் பெரிய
பிரச்சினையும் வரவில்லை. இங்கு வரும்போது என்ன எடை இருந்தேனோ அதே எடையை இப்போதும்
தக்க வைத்து
க் கொண்டிருக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான்
ஆரோக்
கியமாக இருக்கிறேன். ஒரு சில விஷயங்களில் வெளியில் இருக்கும்போது
இருந்ததை விட இங்கு நன்றாகவே இருக்கிறேன். சிறை ஒரு ஆளை நன்றாகவும் ஆக்கும்,
சீரழிக்கவும் செய்யும். யாரும் இங்கு வரும்போது எப்படி இருந்தார்களோ அதேபோல வெளியே
செல்லும்போது இருக்க முடியாது. வெளியே வரும்போது மேலும் நன்றாகவோ அல்லது மேலும்
மோசமாகவோதான் வருவார்கள். அதி
ர்ஷ்டவசமாக என்னுடைய
மனம் இங்குள்ள சூழலுக்கு விரைவிலேயே பழகி
க்கொண்டு விட்டது.
வெளிப்புறத்தில் அமைதியில்லாமல் இருக்கும் இயற்கை சிறைக்குள்ளே அமைதியாக இருப்பது
என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இப்படிப்பட்ட சூழல் மாற்றங்களுக்கு நம் மனம்
பழகி
க்கொள்வது என்பது இயற்கை நமக்குக் கொடுத்த வரம் என்று நான் சொல்வேன்.
நான் அதிகாலையிலும் பிறகு மாலையிலும்
சிறிது நேரம் பிராணாயாமம் செய்வேன். பிறகு நன்றாக உறங்குவேன். அப்படி உறங்குவது
எனக்கு நல்ல ஓய்வை
த் தருகிறது. மனம்
மிகுந்த அமைதியை அடையும். காலையில் எழுந்திருக்கும் போதுதான் நாம் சிறையில்
மரப்பலகையில் படுத்து
க் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு வரும். மனிதர்களுக்கே உரித்தான சாதாரண
இலக்குகளும் ஆசைகளும் எனக்கு இப்போது குறைந்துகொண்டு வருகின்றன. நல்லதொரு
கொள்கைக்காக உழைத்தோம் என்ற திருப்தி என் மனதுக்கு இருக்கிறது. அதனால் என் மனது
சஞ்சலமில்லாமல் அமைதியாக இருக்கிறது. சில நேரம் விதிவிலக்குகள் இருந்தாலும்
பொதுவாக என் மனநிலை இப்படித்தான் இருக்கிறது.
உண்மையில் சொல்லப் போனால், திடீரென்று என்னை பம்பாய் அல்லது
லண்டன் மாநகரத்தில் இறக்கிவிட்டால், ‘ஜனக்கூட்டத்தைப் பார்த்தால் தீப்பிடித்து எரியும்
வீடு போல் இருக்கிறது
என்று சாகுந்தலத்தில்
வரும் ரிஷிகுமாரனுடன் நானும் சேர்ந்து கதற வேண்டி இருக்கும்.
நாம் கேள்விப்படும் புரளிகளை எல்லாம்
வைத்து ஒருவேளை வெளியில் இருந்திருந்தால் நம் வாழ்க்கை மேலும் பயனுற
இருந்திருக்குமோ என்ற எண்ணம் வரலாம். ஆனால் வெளியில் இருப்பவர்கள் அதிகம் வேலை
செய்கிறார்களாக இருக்கலாம், ஆனால் உள்ளே இருப்பவர்கள் அதைவிட கூடுதலாக வேலை செய்துகொண்டு
இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள். என் அன்பிற்குரிய பால், இங்கு நாங்கள் படும்
துன்பங்களும் தீவிரமான பணிக்கு ஈடானதுதான் என்பதையும் புரிந்துகொள்.
நான் அதிகாலை ஐந்து மணிக்கு மணி
அடித்ததும் எழுந்து கொள்வேன். அதை
க் கேட்டதும் எனக்கு
நான்
தோ கல்லூரியில் உயர்படிப்பு படிக்கின்றாற் போல ஒரு உணர்வு வரும். பிறகு காலை பத்து மணி வரையில் எங்களுக்குக் கடுமையான பணி  இருக்கும். என் கைகளும்
கால்களும் கொடுக்கப்பட்ட வேலையை
த் தன்னிச்சையாகச் செய்து கொண்டிருக்கும். என் மனமோ இங்குள்ள கண்காணிப்புகளை எல்லாம் தாண்டி கடல்
மலை என்று ரம்மியமான விஷயங்களில் மட்டும், தேனை
க்
குடிக்கும் வண்டு போல அலைந்துவிட்டு வரும். அதன் பிறகு நான் சில வரிகளை எழுதுவேன்.
பிறகு பன்னிரண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவு உட்கொள்வோம். பிறகு மீண்டும் வேலை.
நாலு மணி முதல்
ய்வு. இந்த நேரத்தில் படிப்பேன். இதுதான் இங்குள்ள தினசரி
வாழ்க்கை.
நம் தாய்நாடு எப்படி உள்ளது என்பதை
உன் பதிலில் கூறு. காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கின்றதா?
1910ல்
அலஹாபாத்தில் செய்ததை
ப் போல வருடா வருடம்
அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்களா? டாடா அல்லது
கப்பல்
நிறுவனம் அல்லது புதிய மில்கள் போன்று தேனும் ஸ்வதேசி நிறுவனங்கள் புதிதாக உருவாக்கி இருக்கின்றனவா? சீனக் குடியரசு எப்படி இருக்கிறது? ஒரு கனவு நனவானது போல இருக்கின்றது அல்லவா? இது
வரலாற்றில் ஒரு முக்கிய
த் தருணம். சீனாவின்
இந்த மாற்றம் ஒரு நாளில் வந்தது அல்ல.
1850ம் ஆண்டில்
இருந்து அவர்கள் இதற்காக
ப் பாடுபட்டுகொண்டு
இருக்கிறார்கள். சூரியன் உதிக்கும் வரை அது எங்கிருந்து வருகிறது என்பது நம்
கண்களுக்கு
த் தெரியாது அல்லவா, அதுபோல. பெர்சியா, போர்சுகல், எகிப்து
இவற்றின் நிலை எப்படி இருக்கின்றது? தென்னா
ப்பிரிக்காவில் உள்ள
இந்தியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற
ப்பட்டு இருக்கின்றனவா? புதிய கவுன்சில் மூலமாக ஏதேனும் முக்கியச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதா? உதாரணத்திற்கு உயர்திரு கோகலே அவர்கள் கொண்டு
வந்த கல்வி மசோதா. நம் மதிப்பிற்குரிய திலகர் எப்போது விடுதலை
செய்யப்படவிருக்கிறார்
?
நீ என் கடிதத்தை எனது ஆருயிர் யமுனாவிடம்
காண்பித்தாயா? அவளுக்கு எல்லாவற்றையும் மொழிபெயர்த்து
க் கூறு. இன்னும் சில வருடங்கள்தான். அதிகபட்சம் ஐந்து வருடங்கள். அதன் பிறகு
ஒரு புதிய விடியல் பிறக்கும். ஆகவே என் அருமை மனைவியே
, எப்போதும் போல் உன் வாழ்க்கையை உன்னதமாக நடத்து. அன்பிற்குரிய அண்ணிக்கு என் மரியாதையும் நமஸ்காரங்களும். ஒரு தாயாக, சகோதரியாக,
தோழியாக என்னை வாழ்த்திக்கொண்டிருப்பவர் அவர். என் நெஞ்சம் முழுக்க மற்றொருவரும்
நிறைந்திருக்கிறார்.
சில காரணங்களுக்காக நான்
இப்போது அவருடைய பெயரை
க் கூற இயலாது. நான்
அவர்கள் எல்லோருடைய நினைவாகவே எப்போதும் இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறவும்.
அவர்களை நான் எப்படி மறப்பேன்? சிறையில் இருக்கும் ஒருவனால் எதையும் மறக்க இயலாது.
புதிய அ
னுபவங்கள் எதுவும் இல்லாதபொழுது மனது பழைய நினைவுகளிலேயே உழன்று கொண்டிருக்கும். எனவே சிறையில் இருக்கும்போது நம் நினைவில் இருப்பவை
எல்லாவற்றையும் திரும்ப திரும்ப அசை போட்டு
க் கொண்டிருப்போம்.
அதனால் மறந்து போனவர்களும் கூட
நினைவுக்கு வருவார்கள். எனதருமை
நண்பர்களே, சிறையில் நாங்கள் வற்றாத கண்ணீருடன் இருக்கிறோம். யாரேனும் வந்து
ஆறுதலாக
ப் பேசி அன்புடன் எங்கள் கண்ணீரைத் துடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறோம். சிறையில் இருக்கும்போது எப்படி
என்னால் எதையும் மறக்க இயலும்? என் அன்பிற்கு
ப்
பாத்திரமானவர்கள் எல்லோரிடமும் என் அன்பான விசாரிப்பை
க் கூறவும். ரத்த பந்தங்கள் சிலர்கூட நம்மை விட்டு வெட்கி விலகியபோது, கூட நம்முடன் இருந்து நமக்குப் பக்கபலமாய் இருந்தவர்களை
நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன் என்று கூறவும். சிறையில் இருந்து வரும் கடிதம்
ஆதலால் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.
என் ஒரே சகோதரிக்கும் என்னுடைய ஒரே நம்பிக்கையான வசந்திற்கும்
என்னுடைய ஆசிர்வாதங்களை
க் கூறவும். மாமி,
குட்டி சாம்பி ஆகியோரிடமும் விசாரித்ததாக கூறவும்.
இப்படிக்கு,

உன்னுடைய அன்பான சகோதரன்


தாத்யா.


Posted on Leave a comment

அந்தமானில் இருந்து கடிதங்கள் – கடிதம் 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலா

கடிதம் 1
ஓ தியாகிகளே
சுதந்திரதிற்கான
போராட்டம் துவங்கியது முதல்
வழிவழியாக
நாம் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்
.
இதில்
தோல்விகள் நிரந்தரம் இல்லை, வெற்றி நிச்சயம்.
இன்று மே 10ம்
தேதி. இந்தநாளில்தான்
1857ம் ஆண்டு தியாகிகளால் முதல்
சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டது. நம்முடைய அடிமைத்தளையை அறுத்தெறிய நம்
தாய்நாடு வாளேந்திய நாள். விடுதலைக்கான முதல் அடியை நம் தாய்நாடு கொடுத்த நாள்.
பரங்கியரைக் கொல்வோம் என்ற போர்முழக்கம் ஆயிரக்கணக்கான போராளிகளால் எழுப்பப்பட்ட
நாள். மீரட்டில் இருந்த சிப்பாய்கள் டெல்லி நோக்கி தங்கள் புரட்சிப் பயணத்தை
ஆரம்பித்த நாள். தங்கள் புரட்சி போராட்டத்திற்குக் கொள்கைகளை வகுத்து ஒரு
தலைவரையும், ஒரு கொடியையும் உருவாக்கிய நாள். அந்தப் புரட்சிப் போராட்டத்தை ஒரு
தேசியப் போராட்டமாகவும் ஒரு சமயப் போராட்டமாகவும் மாற்றிய நாள்.
தியாகிகளே, உங்களுக்கு பெருமை
உண்டாகட்டும். நம் நாட்டின் மதங்கள் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டபோது நம் இனத்தின்
பெருமையைக் காக்க நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினீர்கள். அதுவரை அணிந்திருந்த
தங்களின் முகமூடிகளை நீக்கி போலிகள் நம் நாட்டை அடிமை சங்கிலிக்குள் பிணைத்தனர்.
இவர்களை நம்பி நம் தாய்நாடு ஏமாந்தபோது
1857ம் வருட போராட்டத்தின் தியாகிகளே,
நீங்கள் நம் தாய்த்திருநாட்டை எழுச்சி அடையச் செய்து நம் தாய்நாட்டின் பெருமையைக்
காக்க ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பி, போர்க்களம்
புகுந்தீர்கள். தெய்வீகமும் தேசியமும் மட்டுமே உங்களது தாரக மந்திரமாக இருந்தது.
உங்களது போராட்டம் மிகச் சரியான ஒன்றுதான். நீங்கள் போராடாமல் இருந்திருந்தால்
ரத்தம் சிந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காதுதான். ஆனால் அடிமைத்தளையில் இருப்பது
அதைக்காட்டிலும் பெருத்த அவமானத்தைத் தரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அடிமைத்தளையை
எதிர்த்துப் போராடாத நம் நாட்டிற்கு விடுதலை தேவை இல்லை, நாம் அடிமையாய்
இருக்கத்தான் லாயக்கு என்று உலகம் நம்மைப் பார்த்து கூறியிருக்கும்.
1857-இலும் கூட நம் பெருமையையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள நாம் ஒன்றும்
செய்யவில்லை என்று அவர்கள் கூறியிருப்பார்கள்.
அதனால் இந்த நாளை உங்கள் நினைவுக்கு
காணிக்கையாக்குகின்றோம். இந்த நாளில்தான் நீங்கள் ஒரு புதிய கொடியை உயர்த்திப்
பறக்க விட்டீர்கள், ஒரு புதிய பாதையை வகுத்தீர்கள், அடைய வேண்டிய ஒரு புதிய இலக்கை
வரைந்தீர்கள், நம் தேசத்திற்கு விடிவு வர வேண்டும் என்று சூளுரைத்தீர்கள்.
உங்களுடைய புரட்சிப்போராட்டத்தின்போது நீங்கள்
விடுத்த அறைகூவலை நாங்கள் வழிமொழிகின்றோம். அன்னியரை வெளியேற்ற வேண்டும் என்ற
உங்கள் லட்சியம் நிறைவேற நாங்களும் உழைப்போம். அடிமைத்தளை உடைக்கப்படும் வரை,
நமக்கு சுதந்திரம் முற்றிலுமாக கிடைக்கும் வரை
1857ம் ஆண்டு துவங்கிய
போர் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. சுதந்திரதிற்காக மக்கள் எழுச்சி
அடையும் போதெல்லாம், சுதந்திர வேட்கை நம் தியாகிகளின் மனதில் தோன்றும்போதெல்லாம்
தன் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரே ஒருவன் பழி தீர்க்க எழுந்து
நின்றாலும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை என்றுதான் பொருள். புரட்சிப்
போராட்டத்தில் அமைதி ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுதந்திரம் அல்லது வீர
மரணம் என்ற இரண்டில் ஒன்றுதான் நிதர்சனம். உங்களுடைய நினைவுகள் எங்களுக்கு
உத்வேகம் அளிக்கின்றன. நீங்கள்
1857ம் ஆண்டு துவங்கிய போரை நாங்கள்
தொடர உறுதியோடுள்ளோம். நீங்கள் நடத்திய போராட்டம் இந்தப் போரின் முதல் கட்டம்
என்றே நாங்கள் கருதுகிறோம். அதில் ஏற்பட்ட பின்னடைவு போரில் தோற்றதாக
அர்த்தமாகாது. அதில் ஏற்பட்ட தோல்வியை இந்தியா ஏற்றுக்கொண்டதாக உலகம் கூறுமா என்ன?
1857ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிந்திய ரத்தம் வீணாக
போய்விடுமா? நம் தந்தையர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை அவர்களுடைய புதல்வர்கள்
நிறைவேற்றமாட்டார்களா? இந்திய தேசத்தின் வரலாற்று தொடர்ச்சி முடிந்து
போய்விடவில்லை.
1857ம் ஆண்டு மே 10ம்
தேதி துவங்கிய போர்
1908ம் ஆண்டு மே 1ம்
தேதியிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. சுதந்திரம் அல்லது வீர மரணம் இரண்டில்
ஒன்று கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடந்துகொண்டேதான் இருக்கும்.

எங்களது இந்தப் போராட்டத்தில்,
தியாகிகளாகிய நீங்களே எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றீர்கள். அந்த உத்வேகம்
இல்லையென்றால் பல சிறு வேறுபாடுகளால் சிதறுண்டிருக்கும் எங்களால் ஒன்றுபட்ட எங்கள்
தாய்த் திருநாட்டைப் பார்க்க இயலாது. அந்த ஒற்றுமையை நீங்கள் எப்படி கொண்டு
வந்தீர்கள் என்ற ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். ஹிந்துக்கள் மற்றும்
முகமதியர்களின் இசைவோடு எப்படி பரங்கியரின் அதிகாரத்தை தவிடுபொடியாக்கி சுதேசியை
மக்களிடையே பிரபலப்படுத்தினீர்கள்; சாதி, மதம் போன்ற பிடிப்புகளில் இருந்து மக்களை
எப்படி தேசம் என்ற மேலான பந்தத்தை ஏற்படுத்தினீர்கள்! பகதூர் ஷா எப்படி நாடு
முழுவதிலும் பசு வதைத் தடையை அமுல்படுத்தினார்! மாவீரரான நானா சாஹிப் எப்படி
டெல்லி சக்ரவர்த்திக்கு பீரங்கி முழக்கத்தின் மூலம் முதல் மரியாதையைத் தந்து
தன்னுடைய மரியாதையை இரண்டாவதாக ஏற்றுக் கொண்டார்! எப்படி நம் எதிரி ஒற்றுமையாக
இருந்த நம்மைப் பார்த்து, ‘இந்த இந்திய போராட்டத்தின் மூலம் நிர்வாகிகளுக்கும்
வரலாற்று ஆய்வாளர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கலாம்.
ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், பிராமணர்களும் சூத்திரர்களும்,
ஹிந்துக்களும் முகமதியர்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்த இயலும் என்கின்ற
செய்திதான் அது. இந்த நாட்டில் பல்வேறு மதம் மற்றும் இனக்குழுக்கள்
இருக்கின்றபடியால் இங்கு நாம் பாதுகாப்பாக ஆட்சி செய்ய முடியும் என்ற எண்ணம் இனி
செல்லுபடியாகாது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பரஸ்பர
மரியாதையுடன் மற்றவர்களுடைய செயல்பாடுகளை அணுகுகிறார்கள். நம்முடைய அரசு இத்தகைய
புரட்சிகள் வெடிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் ஒரு சமுதாயத்தின் மேல்
பத்திரமில்லாமல் நின்று கொண்டிருக்கிறது. இங்கு மதமும் தேசப்பற்றும் இணைந்து
இருக்கின்றது. தேசபற்றை வலியுறுத்தும் மதமும், மதச் சுதந்திரத்தை மதிக்கும்
தேசப்பற்றும் இங்கு இருக்கின்றது என்பதை நமக்கு இந்தப் புரட்சிப் போராட்டங்கள்
அடையாளப்படுத்தி இருக்கின்றன
’ என்று கூறினார்கள்.
இப்பேற்பட்ட ஒரு மாபெரும் போராட்டத்தை
நடத்தத் தேவையான சக்தியையும் அதனை ரகசியமாகச் செய்யகூடிய சூட்சுமத்தையும் எங்களுக்கும்
தாருங்கள். பசுமையான நிலத்தின் அடியில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலைக்
குழம்பு இருப்பதை அறியாத எதிரி, அதனை எதிர்கொள்ள தயாரில்லாத நிலையில் இருந்தான்.
அதுபோன்ற சாதுர்யத்தை எங்களுக்கும் தாருங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமம்தோறும்
எப்படிப் புரட்சி பற்றிய செய்திகளை சப்பாத்தி மூலம் பரப்பினீர்கள் என்ற வித்தையை
எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். ஒரே மாதத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும், ஒவ்வொரு
இளவரசனும், நகரங்கள், சிப்பாய்கள், போலீஸ்கள், ஜமீன்தார்கள், பண்டிட்கள்,
மவுல்விகள் என்று எல்லோரையும் எப்படி இந்தப் புரட்சித் தீ பற்றிக்கொண்டது,
கோவில்களிலும் மசூதிகளிலும் ‘பரங்கியரைக் கொல்வோம்’ என்ற கோஷம் எப்படி விண்ணைப்
பிளந்தது என்பதைக் கூறுங்கள். மீரட் எழுச்சி அடைந்தது, டெல்லி எழுந்தது, பெனாரஸ்
எழுந்தது, ஆக்ரா, பாட்னா, லக்னோ, அலாஹாபாத், ஜாதகல்பூர், ஜான்சி, பாண்டா, இந்தோர்,
பெஷாவரில் இருந்து கல்கத்தா வரையிலும், நர்மதாவில் இருந்து ஹிமாலயம் வரையிலும்
அந்த எரிமலை வெடித்து எல்லோரையும் புரட்சி ஆட்கொண்டது.
ஓ தியாகிகளே, இந்த மாபெரும் புரட்சியை
நடத்தும்போது நம் மக்களிடம் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்னவென்பதையும் எங்களுக்குக்
கூறுங்கள். இந்த மாபெரும் தேசிய வேள்வியில் பங்கு பெறாமல் உங்களுடைய தன்னலமற்ற
போராட்டத்தை நீர்த்து போகும்படி செய்த நபர்களின் சுயநலத்தைப் பற்றியும்
சொல்லுங்கள். ஹிந்துஸ்தானத்தின் தோல்விக்குக் காரணம் ஹிந்துஸ்தானம் மட்டுமே என்பதையும்
கூறுங்கள். பல நூற்றாண்டு கால அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற நம் அன்னை வீறுகொண்டு
எழுந்து பரங்கியரைத் தன் வலதுகையால் அவர்கள் தலையில் தாக்கும்போது, அவளுடைய இடதுகை
எதிரியைத் தாக்காமல், அவள் தலையையே தாக்கியதைப் பற்றியும் கூறுவீர். அந்த
அடியினால் அவள் ஐம்பது ஆண்டு காலம் துவண்டு போனதைப் பற்றியும் கூறுவீர்.
ஐம்பது ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் 1857ம்
ஆண்டு நீங்கள் துவங்கிய அந்த சுதந்திர வேட்கை இன்னும் தீரவில்லை. அதன் வைர விழா
கொண்டாட்டங்களின்போது உங்களுடைய கனவுகள் நிறைவேறும் என்று நாங்கள்
உறுதியளிக்கிறோம். நாங்கள் உங்கள் குரலைக் கேட்கிறோம். அதன்மூலம் எங்களுக்கு
உத்வேகம் கிடைக்கின்றது. மிகக் குறைந்த உதவிகளைக்கொண்டு நீங்கள் போரை
நடத்தினீர்கள். அந்தப் போர் வெறும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அது
துரோகத்திற்கும் எதிரான போர். துவாப்பும் அயோத்யாவும் இணைந்து நின்று போர்
புரிந்தது பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஏனைய இந்தியாவிற்கும்
எதிராகத்தான். கடினமான அந்தப் போரை நீங்கள் மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்தீர்கள்.
அந்நிய சக்திக்கு எதிரான அந்தப் போரில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றீர்கள். இது
எப்பேர்ப்பட்ட உற்சாகத்தைத் தரக்கூடியது. துவாப்பும் அயோத்யாவும் ஒரு மாதத்தில்
சாதித்ததை இந்துஸ்தானம் முழுவதும் உறுதிப்பாட்டோடு இணைந்தால் ஒரே நாளில் சாதித்து
விடலாம். இது எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. அதனால்
உங்களுடைய போராட்டத்தின் வைர விழ
1917ம் ஆண்டு நடக்கும்பொழுது
இந்திய ஒரு சுதந்திர நாடாக இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை
எங்களுக்கு இருக்கிறது.
ராணி லக்ஷ்மி பாயின் ரத்தமும் பஹதூர்
ஷாவின் எலும்புகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்கவேண்டி
காத்திருகின்றன. புரட்சிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களைக் கூற மறுத்ததனால் மரண
தண்டனை விதிக்கப்பட்ட பாட்னாவைச் சேர்ந்த போராளி பீர் அலி பரங்கியரின் காதில்
படும்படி கூறிய வார்த்தைகள் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. ‘நீங்கள் என்னை இன்று
தூக்கில் இடலாம். என்னைப் போன்ற பலரையும் நீங்கள் தூக்கில் இடலாம். ஆனால் என்னுடைய
இடத்தில் பல ஆயிரம் பேர் வருவார்கள். உங்கள் எண்ணம் ஈடேறாது.’
இந்தியர்களே, இந்த வாக்கியம்
நிறைவேற்றப்பட வேண்டும். தியாகிகளே, நீங்கள் சிந்திய ரத்தத்திற்கு நாங்கள் பழி
வாங்குவோம்.
வந்தே
மாதரம்.