Posted on Leave a comment

ஹிஜாப்பும் காவித் துண்டும்

பள்ளிகளில் ஹிஜாப் – காவித் துண்டுப் பிரச்சினை இந்திய அளவில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. நேற்று உடுப்பியில் அரசு ப்ரி யுனிவர்சிட்டி கல்லூரியில், ஒரு மாணவி பர்கா அணிந்து பள்ளிக்கு வர, சுற்றி நின்ற ஹிந்து மாணவர்கள் காவித் துண்டுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கத்த, இந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே பள்ளிக்குள் சென்றுவிட்டார். Continue reading ஹிஜாப்பும் காவித் துண்டும்

Posted on Leave a comment

ஹிந்துத்துவ அறிவியக்கச் செயல்பாடும் சென்னைப் புத்தகக் கண்காட்சியும் | ஹரன் பிரசன்னா



43வது சென்னைப்
புத்தகக் கண்காட்சி 2020 ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. பல லட்சம் மக்கள் கலந்துகொண்ட
இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் விற்பனையாயின. தமிழ்நாடு
முழுக்கப் புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் போல
மிகப் பெரிய வெற்றி பெற்ற புத்தகக் கண்காட்சி பிறிதொன்றில்லை எனலாம். இந்தியா முழுவதிலும்
நடக்கும் பல புத்தகக் கண்காட்சிகளிலும்கூட, இந்த அளவு வாசகர்கள் திரளாக வந்திருந்து
புத்தகங்கள் வாங்குவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான். அந்த அளவுக்கு
சென்னையின் ஒரு அடையாளமாகவே மாறிப் போயிருக்கிறது சென்னைப் புத்தகக் கண்காட்சி.
இந்த சென்னைப் புத்தகக்
கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஒரு பருந்துப் பார்வையில்
பார்த்தோமானால், அரசியல் புத்தகங்களில் பெரும்பாலும் கண்ணில் பட்டவை இடதுசாரிகளின்
புத்தகங்களும், திராவிட அரசியலையும் ஈவெராவையும் விதந்தோதும் புத்தகங்களும்தான். ஹிந்துத்துவ
இயக்கங்களையும் ஹிந்துத்துவத் தலைவர்களையும் பற்றிய புத்தகங்கள் மிகச் சொற்பமே. அதேபோல்
திராவிட, கம்யூனிஸ சித்தாந்தங்களை மிகக் கறாராக வெளியில் இருந்து விமர்சிக்கும் புத்தகங்களும்
மிகக் குறைவே.


இதற்கான காரணங்களை
மிக எளிதாகவே ஊகிக்கலாம்.
* ஹிந்துத்துவ இயக்கங்களையும்
ஹிந்துத்துவ சித்தாந்தத்தையும் விமர்சித்தால் மட்டுமே இங்கே செல்லுபடியாகும் என்ற நிலை
மிகத் தெளிவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத் தொடர் செயல்பாட்டின் வெற்றி
இது.
* இஸ்லாமிய, கிறித்துவ
அடிப்படைவாதத்தை ஆதரித்தாலும்கூட அந்த எழுத்தாளர்கள் முற்போக்காளர்கள் என்றே அறியப்படுவார்கள்.
ஆனால் யாரேனும் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஹிந்துத்துவக் கருத்தியலின் தேவையைப்
பற்றி மிக நடுநிலையாக ஒரு புத்தகம் எழுதினாலும் போதும், அவர் ஹிந்துத்துவ ஆதரவாளர்
என்று முத்திரை குத்தப்படுவார். தன் மீதான கறை நீங்க அவர் எதிர்முனைக்குச் சென்று ஹிந்துத்துவ
இயக்கங்களை வசைபாடினால் மட்டுமே அவர் மீதான கறை நீங்கும்.
* ஹிந்துத்துவ ஆதரவாளர்களாக
அறியப்படும் எழுத்தாளர்கள் இங்கே இருட்டடிப்புச் செய்யப்பட்டுப் புறக்கணிக்கப்படுவார்கள்.
இதனால் ஒரு எழுத்தாளர் தன்னை எக்காரணம் கொண்டும் ஹிந்துத்துவ எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள
முன்வரமாட்டார்.
* ஒருவர் ஹிந்துத்துவ
ஆதரவாளராக இருந்து, அவர் எழுதுவது தூய இலக்கியம் என்றாலும் கூட இங்கே அவர் புறக்கணிக்கவே
படுவார். எனவே இலக்கியவாதிகள்கூட தங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, ஒன்று அமைதியாக
இருப்பார்கள் அல்லது தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஹிந்துத்துவத்துக்கு எதிராகப் பேசுவார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்
யார்தான் ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்களை எழுத முன்வருவார்கள்? அப்படியே எழுதினாலும்
எத்தனை பதிப்பகங்கள் அதைப் பதிப்பக்க முன்வரும்? தொடர்ச்சியாக இத்தகைய புத்தகங்களைப்
பதிப்பிக்கும் ஒரு சில பதிப்பகங்களும் கூட முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறது
என்பதே யதார்த்தம். இன்றைய சூழலில் ஹிந்துத்துவ எதிர்ப்பாளராக இருப்பதே பல வகைகளில்
நல்லது என்பதால், அதுவே வாய்ப்பரசியல் செய்ய வசதியானது என்பதால் பலரும் ஹிந்துத்துவக்
கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள்.
இதில் நம் தரப்புக்காரர்களின்
பலவீனமும் ஒன்று உள்ளது. எதிர்த்தரப்புக்காரர்கள் எப்போதாவது ஹிந்து ஆதரவுக் கருத்துக்களை
எழுதினால், அதன் உள்நோக்கம் என்ன என்றுகூட யோசிக்காமல் உடனடியாக அதை ஆதரித்துப் பேசுவார்கள்,
எழுதுவார்கள். ஆனால் ஹிந்துத்துவ ஆதரவுத் தரப்பின் கருத்தை எந்த ஒரு நிலையில் ஹிந்துத்துவ
எதிர்ப்பாளர்கள் ஆதரித்து எழுதவோ பேசவோ மாட்டவே மாட்டார்கள். இதைப் புரிந்துகொள்வது
முக்கியம். இதைப் புரிந்துகொண்டால்தான் எப்படி ஹிந்துத்துவ ஆதரவு எழுத்தாளர்கள் இங்கே
அமைதியாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடியும்.

இப்படியான பல காரணங்களால்,
எல்லாக் கருத்துகளையும் வெளியிடும் ஒரு தளமாகச் செயல்படும் பொதுவான பதிப்பகங்கள் கூட
ஹிந்துத்துவ ஆதரவுப் புத்தகங்களை வெளியிட முன்வருவதில்லை. அல்லது நூறு ஹிந்துத்துவ
எதிர்க்கருத்துகள் அல்லது இடதுசாரிக் கருத்தியல் புத்தகங்களைக் கொண்டு வரும்போது ஒன்றிரண்டு
ஹிந்துத்துவ ஆதரவுக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.
இலக்கியவாதிகள்,
எழுத்தாளர்கள் என அனைவரும் இந்தப் போலி முற்போக்கு நடுநிலையில் பீடிக்கப்பட்டிருப்பதால்,
புத்தகக் கண்காட்சியில் எவ்விதமான புத்தகங்கள் இருக்கும்? அப்படியானால் ஹிந்துத்துவ
இயக்கங்கள் இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இந்த அறிவியக்க
சூழலைப் பற்றி இன்னும் தமிழக ஹிந்துத்துவ இயக்கங்கள் பெரிய அளவில் புரிந்து கொள்ளவில்லை
என்பது துரதிர்ஷ்டவசமானது. விஜயபாரதம் என்ற ஒரு பதிப்பகத்தை மட்டுமே ஹிந்துத்துவப்
புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகம் என்று கூறலாம். தடம் பதிப்பகம் இப்போதுதான்
சில புத்தகங்களை வெளியிடத் துவங்கி இருக்கிறது. மற்றபடி வேறு எந்த ஒரு பதிப்பகத்தையும்
இப்படி ஹிந்துத்துவக் கருத்தியல் சார்ந்த புத்தகங்களை மட்டுமே வெளியிடும் புத்தகம்
என்று சொல்லிவிடமுடியாது.
அதே சமயம் இடதுசாரி
கருத்தியல் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகம் என்றால் குறைந்தது
ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களாவது இருக்கும். அதேபோல் திராவிட இயக்கக் கருத்தியலைச்
சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் நூறாவது இருக்கும்.
இதற்கு என்ன காரணம்?
மிக முக்கியமான காரணம், ஹிந்துத்துவ இயக்கங்கள் எப்போதும் தங்கள் ஆற்றலை சேவையின்பால்
மட்டுமே செலவிட விரும்புகின்றன. அறிவியக்கச் செயல்பாடு என்பது சேவைக்குத் துணை செய்வதாகவே
இருக்கவேண்டும் என்கிற அடிப்படை மனநிலையில் இருந்து இவர்களால் வெளியே வரவே முடியவில்லை.
உண்மையில் நாம் இந்தக் கருத்தைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் இப்படி
நாம் சிக்கிக்கொள்வது நமக்கு அதிக பலனைத் தரப்போவதில்லை. நம் எதிரிகள் நம் ஆயுதங்களைத்
தீர்மானிப்பார்கள் என்பதையும் நாம் கருத்தில்கொள்ளத்தான் வேண்டும்.
மானுட சேவை என்பது
எத்தனை முக்கியமானதோ அதற்கு ஈடாக இந்த அறிவியக்கச் செயல்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும்.
இல்லையென்றால் நாம் கருத்தியல் ரீதியாக மிக பலவீனமானவர்கள் என்கிற மாயை மீண்டும் மீண்டும்
எதிர்த்தரப்புக் காரர்களால் சொல்லப்பட்டு அது உண்மை என்றாக்கப்பட்டுவிடும். ஏற்கெனவே
அப்படி ஆக்கப்பட்டுவிட்டது. இந்த நொடியிலாவது நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால்,
நம்மால் மீண்டும் சரிசெய்யவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.
அப்படியானால் ஹிந்துத்துவ
இயக்கங்களும் ஹிந்துத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் அமைப்புகளும் என்ன செய்யவேண்டும்?
* தொடர்ந்து ஹிந்த்துத்துவ
அறிவியக்கம் சார்ந்த புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அந்தப் புத்தகங்கள்
16 பக்க ப்ரவுச்சர்கள் போல் இல்லாமல், தெளிவான திட்டத்துடன் கூடிய நூலாக உருவாக்கப்படவேண்டும்.
* நூல் கட்டுமானம்,
அட்டை என எல்லாவற்றிலும் கவனம் எடுத்து மிகச் சிறப்பான தயாரிப்பில் கொண்டு வரவேண்டும்.
* அறிவியக்கம் சார்ந்தது
என்பதால் அதோடு நேரடித் தொடர்பற்ற தீவிர நவீன இலக்கியப் படைப்புகளில் இருந்து விலகி
இருக்கக்கூடாது. ஹிந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றிய நல்ல நேர்மையான புரிதல் உள்ள இலக்கியவாதிகளின்
தீவிரமான படைப்புகள் வெளிவர இயன்றவற்றைச் செய்துகொண்டே இருக்கவேண்டும். வெங்கட் சாமிநாதன்,
பைரப்பா போன்ற பிதாமகர்களை இங்கே நினைவுகூரலாம்.
* இவற்றையெல்லாம்
விட மிக முக்கியமான விஷயம், ஹிந்துத்துவப் புத்தகங்கள் வெளிவந்தால் அவற்றை வாங்கி வாசித்து
அதைப் பற்றி விவாதிக்கவோ எழுதவோ செய்யவேண்டும். இல்லையென்றால் மேலதிகப் புத்தகங்கள்
வராது என்பதோடு, எழுதுபவர்கள் தங்கள் ஊக்கத்தையும் இழந்து விடுவார்கள். அரவிந்தன் நீலகண்டன்,
ம.வெங்கடேசன் போன்ற இன்றைய எழுத்தாளர்களின் புத்தகங்களை இங்கே நினைவுகூரலாம்.
* ஹிந்துத்தவ அரசியல்
அமைப்புகள் இத்தகைய புத்தகங்களைத் தங்கள் தொண்டர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது.
தொண்டர்களை சித்தாந்த ரீதியாகத் தயார்ப்படுத்த இது போன்ற புத்தகங்களின் தேவை அவசியம்.
புத்தகங்கள் மட்டுமே தெளிவான ஒரு பார்வையை ஹிந்துத்துவ அரசியல் தொண்டர்களுக்குத் தரமுடியும்.
* ஹிந்துத்துவ ஆதரவுப்
புத்தகங்களைப் பரவலாக்குவது போலவே, ஹிந்துத்துவ எதிர்ப்புப் புத்தகங்களின் பொய்களையும்
இணையாக அம்பலப்படுத்தவேண்டும்.
* ஹிந்துத்துவ ஆதரவுப்
புத்தகங்கள் நூலக ஆணைகளில் புறக்கணிக்கப்பட்டால் அது தொடர்பாக வெளிப்படையாகப் போராட
வேண்டும். பொய்களைச் சுமந்து திரியும் புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப்பட்டால் அதை
எதிர்த்தும் போராடவேண்டும்.
இப்படிப் பல விஷயங்களைக்
கருத்தில் கொண்டு செயல்படாவிட்டால், சென்னைப் புத்தகக் கண்காட்சி என்றல்ல, எந்தப் புத்தகக்
கண்காட்சிக்குப் போனாலும் ஈவெராவும் மாவோவுமே நம்மை வரவேற்பார்கள். ஹிந்துத்துவ அரசியல்
இயக்கங்கள் இதைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டியது உடனடியாக மேற்கொள்ளவேண்டிய முக்கியமான
செயல்பாடு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது.

Posted on Leave a comment

குடியுரிமைச் சட்டத் திருத்தம் | ஹரன் பிரசன்னா

    


குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAA) லோக் சபாவிலும் ராஜ்ய சபாவிலும் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கிறதுமிக நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினை இதுபல்லாண்டுகளாக வேண்டுமென்றே காங்கிரஸ் அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் முக்கியமான சட்டங்களையெல்லாம் மோடி தலைமையிலான இந்த பாஜக அரசு தைரியமாக சட்டப்படி நிறைவேற்றிக்கொண்டு வருகிறதுஅதில் மிக முக்கியமானது இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
அஸ்ஸாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC) நிறைவேற்றப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதன் பெயரில் மத்திய அரசு அதை நிறைவேற்றியதுஇதை ஒட்டியே தேசியக் குடியுரிமை திருத்தமும் (CAA) நிறைவேற்றப்பட்டதால்இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று எதிர்க்கட்சிகள் பல வதந்திகளைக் கிளப்பி விட்டனஅஸ்ஸாமில் சட்ட விரோதமாகக் குடியேறிய ஹிந்துக்களுக்குக் குடியுரிமை தரவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றன எதிர்க்கட்சிகள்மத்திய அரசு தெளிவாக இவை இரண்டும் ஒன்றல்ல என்று சொன்னாலும் எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் நாடு முழுக்க பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கின.
தேசியக் குடியுரிமை பதிவேட்டை எல்லா மாநிலங்களிலும் இந்த அரசு கொண்டு வரப் போகிறது என்றும்அதில் முஸ்லிம்கள் மட்டுமே வேண்டுமென்றே குறிவைக்கப்படுவார்கள் என்ற பொய்யையும் பல முஸ்லிம்கள் நம்பினர்வேறு பல முஸ்லிம்கள் இதனைப் பொய் என்று தெரிந்துகொண்டாலும்இதை எதிர்க்க முன்வராமல்அமைதியாக இருந்து ஆதரித்தனர்அஸ்ஸாமில் கொண்டு வரப்பட்டது போன்ற அதே அடிப்படையில் இந்தியா முழுக்க தேசியக் குடியுரிமை பதிவேட்டைக் கொண்டு வரமுடியாது என்பது குழந்தைக்கும் தெரியும்.
இந்தியா முழுக்க தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் அனைவரும் பதிந்துகொள்ள வேண்டும் என்று ஒருவேளை ஆணை வந்தாலும்அது பல வகைகளில் இந்தியர்கள்அதாவது எந்த மதத்தைச் சேர்ந்த இந்தியராக இருந்தாலும் அவர்கள் தங்கள் குடியுரிமையை மிக எளிதாக நிரூபிக்கும் வண்ணமே இருக்கும்ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஒட்டிப் பல பொய்களை அவிழ்த்துவிட்டனர்.

(Image from:
ahmedabadmirror.indiatimes.com)

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அவதிப்பட்டு இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் மதச் சிறுபான்மையினர் (கிறித்துவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள்) மட்டுமே இந்தியர்களாக முடியும் என்பது சட்ட திருத்தத்தின் முக்கியப் பிரிவு. இதில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்தனர். முஸ்லிம்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்! இவர்கள் அங்கே மத ரீதியாகக் கொடுமை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஷியாஸுன்னி பிரச்சினையைக் கணக்கில் கொண்டாலும், முஸ்லிம்கள் தஞ்சம் புக சுற்றி ஏகப்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால், வழக்கம்போல வெகுஜன முஸ்லிம்களைப் பகடைக் காயாக்கினர் எதிர்க்கட்சிகள்.
பாஜக அரசுக்கு எதிராக எப்போது வாய்ப்புக் கிடைக்கும் கலவரம் செய்யலாம் என்று காத்திருக்கும் இந்திய எதிர்ப்புக் கட்சிகள் உடனே இந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டன. ஹிந்து விரோத திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை தொடர்ந்து தினமும் பொய்களையும் வதந்திகளையும் பரப்பின. கூடுதலாக, இலங்கையில் உள்ள ஹிந்துக்களான ஈழத் தமிழர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று திமுகவும் காங்கிரஸும் பேச ஆரம்பித்தன.
* இத்தனை வருடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் ஈழத் தமிழர்களை ஹிந்துக்களாக அங்கீகரித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?
* ஏன் திமுக இத்தனை காலம் ஈழத் தமிழர்களை இன அடிப்படையில் மட்டுமே பார்த்தது?
* இங்கே ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் (வைகோ, திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள்) ஏன் ஈழத் தமிழர்கள் ஹிந்துக்களே என்று இத்தனை நாள் சொல்லவில்லை? ஏன் இவர்கள் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்து வந்தார்கள்? ஏன் இப்போது திடீரென்று ஈழத் தமிழர்கள் ஹிந்துக்களே என்கிறார்கள்? (இதில் நெடுமாறன் தற்போது, ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்பட்டால் சிங்கள அரசு ஈழத் தமிழர்களை ஒருபோதும் ஈழத்துக்குத் திரும்ப அனுமதிக்காது என்று கருத்து சொல்லியுள்ளார்.)
* சிங்கள இனவாத அரசு என்பதுதானே இவர்களது இத்தனை நாள் முழக்கம்? சிங்கள பௌத்த மதவாத அரசு என்று ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை? எப்போதும் தமிழ்நாட்டில் பௌத்தத்தைத் தூக்கிப் பிடிக்கும் திருமாவளன் எப்படி சிங்கள பௌத்தத்தை எதிர்க்கிறார்.
* எல்.டி.டி. அழிக்கப்படுகிறது என்ற போர்வையில் தமிழ் ஹிந்துக்கள் அங்கே கொன்று குவிக்கப்பட்டபோது இந்தியாவில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்தது என்ன? அப்போது அரசில் பங்கு பெற்றிருந்த திமுக செய்தது என்ன? அன்றெல்லாம் தமிழர்கள் இன ரீதியாக இருந்தபோது இன்றெப்படி திடீரென்று ஈழத் தமிழர்கள் ஹிந்து மத ரீதியிலான மக்கள் ஆனார்கள்?
இத்தனை இரட்டை நிலைப்பாட்டுடன், பொய்யுடன் இந்தப் பிரச்சினையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அணுகுகின்றன. இதையெல்லாம் யோசிக்க விடாமல் முஸ்லிம்கள் மத ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்என்ற பொய்யையே திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன இக்கட்சிகள். உண்மையில் இந்த சட்டத் திருத்தத்துக்கும் இங்கே வசிக்கும் இந்தியர்களான முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால், இங்கே வசிக்கும் முஸ்லிம்கள் இந்தியக் குடிமக்களே என்று சந்தேகமே இல்லாமல் இந்தச் சட்டத் திருத்தம் சொல்லியுள்ளது என்பதுதான் உண்மை. இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கம், அண்டை முஸ்லிம் நாடுகளில் உள்ள மதச் சிறும்பான்மையினர் பற்றி மட்டுமே அன்றி, இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களைப் பற்றியது அல்ல.
அஸ்ஸாம் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டைப் பொருத்தவரை 1985ல் ராஜிவ் தலைமையிலான அரசு ஓர் ஒப்பந்தத்தை அசாம் மாணவர் அமைப்புடனும் வேறு சில குழுக்களுடனும் கையெழுத்திட்டது. அதன்படி 1971 மார்ச் 24ம் தேதிக்கு முன்பு அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்கமுடியாதவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் நிறைவேற்றப்படவே இல்லை.
பின்பு 2003ல் மன்மோகன் சிங், அண்டை முஸ்லிம் நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினர் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரவேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார்.
எனவே மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் திடீர் என்று வந்த ஒன்றல்ல. பல்லாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஒரு சட்டத் திருத்தம்.
அஸ்ஸாமில் குடியுரிமைப் பதிவேடு என்பது உச்சநீதிமன்றம் பலமுறை நிறைவேற்றச் சொன்ன ஒரு விஷயம். அஸ்ஸாமில் 2016 ஜனவரி 31க்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2014ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும் முதல் பதிவேட்டின் அறிக்கை டிசம்பர் 2017ல்தான் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவு ஜூலை 30,
2018
ல்தான் வெளியிடப்பட்டது. இதை எதையும் கணக்கில் கொள்ளாமல், வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, பொய்யைப் பரப்பி, இத்தனை தேவையற்ற பதற்றத்தை நாடு முழுக்கப் பரப்புகின்றன எதிர்க்கட்சிகள். குடியுரிமைப் பதிவேடு (NRC) பிரச்சினை இருக்கும்போதே குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் (CAA) மத்திய அரசு கொண்டு வந்தது வசதியாகப் போயிற்று இவர்களுக்கு.
பெரும்பாலான மக்கள் அமைதியாகவும் உண்மையை உணர்ந்தும்தான் இருக்கின்றனர். இதைக் கண்டு எரிச்சலான நடுநிலையற்ற ஊடகங்கள் இந்தியாவே பற்றி எரிவது போன்ற பிரமையை உண்டாக்குகின்றன. உண்மையில் போராடுவது பொதுமக்கள் அல்ல. நகர்ப்புற நக்ஸல்களும் கம்யூனிஸ்ட்டுகளும் இந்திய எதிர்ப்பாளர்களும் மட்டுமே. ஆனாலும், இந்தியா முழுமைக்கும் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் மக்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு அமைதியான வாழிடம், இந்தியாவில் வாழும் எந்த ஒரு மதச் சிறுபான்மையினருக்கும் உலகில் எங்கேயும் கிடைக்கமுடியாது என்பதே நிதர்சனம். அதேபோல் உலக ஹிந்துக்களுக்கான ஒரு அமைதியான வாழிடமாக இந்தியாவே இருக்கமுடியும். உலக ஹிந்துக்களை, மதரீதியாகத் துன்புறுத்தப்படும் ஹிந்துக்களை இந்தியா அங்கீகரிக்கவேண்டும். இதைச் செய்யாவிட்டால் பாஜக அரசு அமைந்து எந்த ஒரு பயனும் இல்லை. இதற்காகத்தான் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதுவும் தொடர்ச்சியாக இரண்டு முறை!
ஹிந்துக்களுக்கு, அதுவும் இஸ்லாமிய நாட்டில் மத ரீதியாகக் கொடுமைப்படுத்தப்படும் ஹிந்துக்களுக்கு ஆதரவு தருவது என்பதும், இங்கே இருக்கும் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாதது. முதலாவது உண்மை, பின்னது அநியாயமான பொய். இந்திய நாட்டில் மதவேறுபாடின்றி எந்த ஒரு இந்தியனுக்கும் ஒரே போன்ற உரிமையே உள்ளது. இது இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கிறித்துவருக்கும் நிச்சயம் நன்றாகத் தெரியும். ஆனாலும் இவர்களைக் கேடயமாக்கி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான பொய்ப்பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. அதற்கு சில முஸ்லிம்களும் கிறித்துவர்களும் துணை போகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
ஏன் எதிர்க்கட்சிகள் இப்படிச் செய்கிறார்கள்?
* பாஜகவின் தொடர் வெற்றி தரும் அச்சம்.
* முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பரவலாக பாஜக அரசின் மீது கொள்ளும் நம்பிக்கை.
* ஓட்டரசியல், மத வெறுப்பரசியல் செய்ய முடியாதபடி இந்தியர் என்ற எண்ணம் இந்திய முழுமைக்கும் பரவிவிடுமோ என்கிற அச்சம்.
* நாட்டை எப்போதும் ஒரு கொதி நிலையில் வைத்திருப்பதன் மூலம் பாஜக அரசுக்கு எப்படியாவது ஒரு கெட்ட பெயரை கொண்டு வந்துவிட முடியாதா என்கிற ஏக்கம்.
* சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்பட்டது, அயோத்தியில் ராமர் கோவில் தீர்ப்பு போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர்வுகள் எவ்வித ஒரு சிறு கீறலையும் கூட நாட்டில் கொண்டு வரவில்லை என்ற கோபம்.
எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையைப் பரப்ப இவையெல்லாம்தான் காரணம்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சொன்ன பொய்களையெல்லாம் ஒருவேளை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அவை கீழே உள்ள உண்மைகளை விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் மதச் சிறுபான்மையினரில் கிறித்துவர்களும் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்று சட்டம் அங்கீகரிக்கிறது. அப்படியானால் பாஜக அரசு கிறித்துவ சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்கிறது என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளத் தயாரா?
* மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஹிந்துச் சிறுபான்மையினரைப் பற்றி இந்த அரசு எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் இந்தச் சட்டம் மத அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?
* இலங்கைத் தமிழர்கள் ஹிந்துக்களே. அவர்களை ஏற்றுக்கொள்ள இந்த அரசு இச்சட்ட திருத்தத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியானால் இந்தச் சட்டம் ஹிந்துக்களைக் குறி வைத்து எழுதப்பட்ட சட்டத் திருத்தம் அல்ல என்று எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?
எதிர்க்கட்சிகளின் பித்தலாட்டங்களுக்கு இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்.
இலங்கையில் நடப்பது ஹிந்து ஒழிப்பே என்று பேசிய ஒரே குரல் ஹிந்துத்துவர்களின் குரல் மட்டுமே. அப்போது ஈழத் தமிழர்களை மத ரீதியாகப் பிளவு படுத்தப் பார்க்கிறார்கள் என்று இங்கிருக்கும் ஈழத் தமிழ் ஆதரவு வியாபாரிகள் கூவினார்கள். இலங்கையில் ஹிந்து நாடு ஒன்று அமையுமானால் அதை நிச்சயம் ஆதரிக்கவேண்டும் என்று எழுத்தாளரும் ஹிந்துத்துவருமான அரவிந்தன் நீலகண்டன் மிக வெளிப்படையாகவே பேசினார். அப்போதெல்லாம் அதை எதிர்த்தவர்கள், இன்று ஒரு சட்ட திருத்தம் வரவும், ஈழத் தமிழர்களும் ஹிந்துக்களே என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள் எத்தனை முறை இங்கே இருக்கும் ஈழத்தமிழர்களின் அகதி முகாமுக்குப் போயிருக்கிறார்கள்? ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை குறித்து இவர்களுக்கு என்ன அக்கறை உள்ளது? ஈழத்தமிழர்களைத் தங்கள் கொள்கை அரசியலுக்கு கருவேப்பிலையைப் போல் பயன்படுத்துவதன்றி இந்த கட்சிகள் செய்தவைதான் என்ன? இவை எதற்கும் இக்கட்சிகளிடம் நேர்மையான பதில் இருக்காது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் அண்டை இஸ்லாமிய நாடுகளில் சொல்லொணாத் துன்பத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட இழந்து வாழும் சிறுபான்மையினருக்கானது மட்டுமே. இது ஹிந்துக்களுக்கு உதவுமா என்றால், ஆம் உதவும், உதவவேண்டும், அது இந்திய அரசின் கடமை, ஒவ்வொரு இந்தியனின் கடமை, ஒவ்வொரு ஹிந்துவின் கனவு. இதைச் செய்வதால் அடுத்து வரும் தேர்தலில் இந்த அரசு தோற்றாலும் கவலையில்லை. ஓட்டுக்காக மட்டுமே நாட்டை ஆள முடியாது.
அதேபோல் இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் ஹிந்துக்களுக்கும் இந்த அரசு உரிய உரிமைகளை வழங்க ஆவன செய்யவேண்டும். இதுநாள் வரை இப்படியான அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறவேண்டும் என்று கேட்டதாக நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையை ஒட்டிப் பேசிய அகதிகள் சிலர், தாங்கள் இந்தியக் குடியுரிமை கேட்டதாகச் சொன்னார்கள். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்!
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக இங்கே தமிழ்நாட்டில் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அத்தனை பேரும் ஹிந்து எதிரிகளாகவும் இந்திய எதிரிகளாகவும் நகர்ப்புற நக்ஸல்களாகவும் இருப்பது தற்செயல் அல்ல. இப்படி இருந்தால் இங்கே தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய பிம்பம் என்னவாக இருக்கும் என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. இந்தச் சட்டத் திருத்தம் வந்த பிறகுதான் பலரின் இரட்டை நாக்குகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. ஈழத் தமிழர்கள் இனியாவது ஹிந்து, இந்திய எதிர்ப்பாளர்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவேண்டும். அதற்கான அவசியம் இப்போது மிக முக்கியமாகிறது.
ஈழத் தமிழ் அகதிகள் ஹிந்துக்களே என்று ஹிந்து விரோத திராவிடக் கட்சிகளைச் சொல்ல வைத்தது இந்த குடியுரிமைச் சட்டத்தின் ஆகப்பெரிய சாதனை. இனி ஈழத்தமிழ் ஹிந்து அகதிகள் விஷயத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இரட்டை வேடம் போட வாய்ப்பில்லை என்பது பெரிய நிம்மதி. இதை ஈழத் தமிழர்களும் நிச்சயம் உணர்ந்துகொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.


Posted on Leave a comment

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் (பகுதி 2) – தமிழில்: ஹரன் பிரசன்னா

முன்னாள்
பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு
முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல் 20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத் துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற
குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியன்
எக்ஸ்பிரஸில் வெளியிடப்படாத மீதமுள்ள பகுதிகளின் தமிழாக்கம் இங்கே.

காஷ்மீரில்
பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்! 
(பகுதி 2)
காஷ்மீர் பண்டிட்டுகள்:
உண்மையாகவும்
நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப்
போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள்
என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினை இதற்கான தெளிவான
உதாரணம்.
காஷ்மீர்
பண்டிட்டுகளின் வரலாற்றில் எப்படியான ஏற்றத்தாழ்வும் இருந்திருக்கலாம். கடந்த காலங்களில்
விதி பல அநியாயங்களை அவர்களுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இப்போது
நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. மிக
அறிவார்ந்த, பல்துறை நிபுணத்துவம் பெற்ற, பெருமை மிக்க இந்தியச் சமூகம் ஒன்று, சுதந்திர
இந்தியாவில் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய சமூகம் ஒன்றுக்கு அதற்கு இணையான
மிகப் பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்பது எப்படியான நகைமுரண்! இந்தக் கொடுமை
மதவெறிபிடித்த சிக்கந்தர் போன்ற இடைக்கால சுல்தான்களின் கீழே நடக்கவில்லை. அல்லது எதேச்சிகார
வெறிகொண்ட ஆஃப்கன் கவர்னர்களின் அரசில் நடைபெறவில்லை. மதச்சார்பற்ற தலைவர் என்று சொல்லப்படும்
உங்களைப் போன்ற, விபி சிங்கைப் போன்றவர்களின் கீழே நடைபெறுகிறது. தங்கள் தனிப்பட்ட
மற்றும் அரசியல் அதிகாரத்தின் நாணமற்ற தேடலை, காஷ்மீரத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின்
இன்றைய தாங்கமுடியாத கஷ்டங்களையும் அவர்களது கண்களில் தெரியும் எதிர்காலம் குறித்த
பயத்தையும் திட்டமிட்டே புறக்கணிப்பதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின்
வலியையும் பரிதவிப்பையும் அதிகரிக்கும் விதமாக, ‘காஷ்மீர் முன்முயற்சி குழு’ (Committee
for Initiative on Kashmir) போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அதீத ஆர்வத்தாலும் அதீத
செயல்பாட்டாலும் அவர்களது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்றன இந்த அமைப்புகள். புலம்பெயர்ந்தவர்களின்
கஷ்டகாலத்தின்போது துணை நிற்க விரும்புகிறவர்களை மதவெறியர்கள் என்று இவர்கள் முத்திரை
குத்துகிறார்கள்.
(பகுதி 1 ஐ வாசிக்க இங்கே செல்லவும்.)
இந்தியாவின்
குரூரமான ஒரு பகுதி, தன் உடலிலும் ரத்தத்திலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட
அகதிகளைக் கொடூரமாகத் தனிப்படுத்தி, அவர்களை மேய்ப்பன் இல்லாத மாடுகளாக்கி வைத்திருக்கிறது.
பரபரப்பான, இதயமற்ற, ஆன்மாவை இழந்த நகரங்களில், காஷ்மீர் பண்டிட்டுகள் ஒரு தனிப்பட்ட
சமூகமாகப் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. பிரிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட
எல்லோராலும் கைவிடப்பட்டு, அவர்கள் இன்று தனியாக நிற்கிறார்கள். தங்கள் கால்களுக்குக்
கீழே நழுவிக்கொண்டிருக்கும் சுக்கான் இழந்த உடைந்த படகை நம்பிக்கையின்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பான கரையில் நம்பிக்கையுள்ள எதிர்காலத்தில் தங்கள் பாதங்களைப் பதிப்பதற்கு
முன்பாக, மிகவும் பயங்கரமான கொந்தளிப்பான கடலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
காஷ்மீரப்
புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் இந்த பெரும் நெருக்கடி (அதனாலேயே இது ஒட்டுமொத்த
காஷ்மீரின் நெருக்கடி), உண்மையில் இந்திய மதிப்பீடுகளின் மீதான நெருக்கடி. அதாவது அரசியலமைப்பின்,
அரசியலின், சமூகத்தின், தார்மிக விதிகளின் நெறிப்பிறழ்வு. அகதிகளின் முகாம்களை நான்
பார்வை இட்டிருக்கலாம். மிகுந்த துயரில் இருக்கும் ஒரு சமூகத்துக்கு நீதியின் உறுதியான
கரத்தை நீட்டி இருக்கலாம். பணத்தைப் பிச்சையிடுவதற்குப் பதிலாக விரட்டப்பட்ட காஷ்மீர
பண்ட்டிட்டுகளின் அரசு அலுவலர்களுக்கு விடுமுறைச் சம்பளம் தர அறிவுறுத்தி இருக்கலாம்.
ஒரு தீவிரவாதியால் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் விதவையாகிப் போன அவரது மனைவி, தனக்கு
வீடு ஒன்றை (அதுவும் பணம் கொடுத்தபின்பே) ஒதுக்கவேண்டும் என்று கோரிய வேண்டுகோளை ஏற்று
ஒப்புக்கொண்டிருக்கலாம். இவற்றையெல்லாம் நான் செய்திருந்தால் நான் உடனே மதவெறியனாகி
விடுகிறேன். முஸ்லிம்களின் எதிரியாகிப் போகிறேன். என்னைப் பற்றி இட்டுக்கட்டப்பட்ட
கதைகள் பத்திரிகைகளில் பரப்பப்படுகின்றன. மாறாக, யாராவது இந்திய ராணுவத்தையும் கவர்னரின்
நிர்வாகத்தையும் பொய்யாகக் குற்றம் சாட்டினால், வீட்டுமனைகளும் வண்டிகளும் தரப்பட்டன
என்று எவ்வித நிரூபணமும் இன்றிச் சொன்னால், அதிலும் குறிப்பாக ஜெக்மோகனைத் தாக்கினால்,
அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியாகின்றன. இந்த அறிக்கைகள் தேசிய
மற்றும் பன்னாட்டு மன்றங்களில் விவாதிக்கப்படுகின்றன. உங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களால் ஆர்வத்துடன் மேற்கோள் காட்டப்படுகின்றன. இப்படிச் செய்பவர்கள் மதச்சார்பற்றவர்கள்
என்றும் முற்போக்காளர்கள் என்றும் மனித உரிமையின் காவலர்கள் என்றும் புகழப்படுகிறார்கள்.
ஜெக்மோகன் காரணி (Jagmohan Factor) என்பதற்கு
உறுதியான சான்றுகள்:
எனது
தற்பெருமைக்கு வழிவகுக்கும் எந்த ஒன்றையும் நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஆனால்,
ஜெக்மோகனின் மதவெறிக் காரணி குறித்த உங்களது திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்துடன் உங்களை
விட்டுவிடவும் தயாரில்லை. என்னைப் பற்றி இந்தப் பள்ளத்தாக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள்
என்பது பற்றிய சில அசைக்கமுடியாத ஆதாரங்களை உங்கள் கவனத்துக்கு நான் கொண்டு வரவேண்டும்.
நீங்களும்
உங்கள் ஆதரவாளர்களும் எனது இரண்டாவது கவர்னர் பதவிக்காலம் தொடர்பாகப் பொய்ப்
பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன்பு இதைச் செய்தாகவேண்டும்.
என்  மீது உருவாக்கப்பட்ட முஸ்லிம் எதிரி
என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதில், இன்றைய காஷ்மீர அரசியலின் உங்களது முதன்மை ஆதரவாளரான
டாக்டர் ஃபரூக் அப்துல்லாவுக்கும் பங்குண்டு. ஆகஸ்ட் 30, 1990ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா
பத்திரிகையில் வெளியான அவரது நேர்காணலில் அவர் சொல்கிறார், “முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
வசிக்கும் ஒரு மாநிலத்துக்கு முஸ்லிம் எதிரி என்று நன்கு அறியப்பட்ட ஒருவர் கவர்னராக
நியமிக்கப்படுகிறார்.” என்ன ஒரு பொய்ப் பிரசாரம். எத்தனை அநியாயம் இது. நவம்பர் 7,
1986ல் எனது பதவியேற்பின்போது ஃபரூக் அப்துல்லா பொதுக்கூட்டத்தில் சொன்னதை வைத்தே இதைப்
புரிந்துகொள்ளமுடியும். “கவர்னர் அவர்களே, நீங்கள் எங்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்கமுடியாத
அளவுக்கு அவசியம். மூளை வளர்ச்சி குன்றிப் போய், அழுகிக் கிடக்கும் இந்த நிர்வாகத்தை,
மிகக் குறைந்த காலத்திலேயே மிகச் சிறந்த முறையில் 
பணியாற்றி உங்களால் மாற்றமுடியும். தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஒரு வாக்குப்பெட்டி,
காங்கிரஸுக்கு ஒரு பெட்டி, உங்களுக்கு ஒரு பெட்டி என இன்று மூன்று பெட்டிகள் வைக்கப்படுமானால்,
உங்கள் பெட்டியே வாக்குகளால் நிறையும், மற்ற இரண்டு பெட்டிகளும் காலியாக இருக்கும்.”
நமது நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், உண்மைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத,
குறிக்கோளற்ற, மேம்போக்கான அரசியலுக்கு மட்டுமே அக்கறை கொள்ளும் டாக்டர் ஃபரூக் அப்துல்லா
போன்ற தலைவர்களை நாம் பெற்றிருப்பதுதான்.
மறைந்த தங்கள் அம்மாவையும் முஸ்லிம் எதிரி என்று டாக்டர் ஃபரூக் அப்துல்லா சொல்கிறார்
என்பது உங்களுக்குப் புரியவில்லையா? ஏனென்றால், 1984ல் அவர் பிரதமராக இருந்தபோதுதான்
‘வெளிப்படையான முஸ்லிம் எதிரி’ முதல் தடவையாக ‘முஸ்லிம்கள் பெரும்பான்மையான மாநிலத்துக்கு’
கவர்னராக நியமிக்கப்பட்டார்.
டாக்டர் ஃபரூக் அப்துல்லா, ஃபிப்ரவரி 15, 1990 அன்று ஒரு எழுத்துபூர்வமான அறிக்கையை
பத்திரிகைகளுக்கு உருதுவில் தந்திருக்கிறார். இதைத் தங்களுடன் கலந்தாலோசித்தே தந்ததாகத்
தெரிகிறது. அதில் அவர் சொல்கிறார், “ஹல்லாகு மற்றும் செங்கிஸ்கானின் உருவகமாக விளங்கும்
கவர்னர்  இந்தப் பள்ளத்தாக்கை மிகப்பெரிய சுடுகாடாக
மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜனவரி 20ல் இருந்து தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால்,
ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் குண்டுகளுக்கு எத்தனை பேர் பலியானார்கள் என்பதைச்
சொல்வது கடினம். எத்தனை வீடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சொல்லமுடியாது. இந்த நேரத்தில்,
காஷ்மீரிகள் தங்கள் அன்புக்குரிய நாடு இப்படி சுடுகாடாக மாற்றப்படுவதைக் கண்கூடாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு மற்றும் உலக அளவில் மனிதத்தன்மையை ஏந்திப்
பிடிப்பவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு, துணை
ராணுவப் படையினரால் காஷ்மீரிகள் கொல்லப்படுவது குறித்து உலகளாவிய விசாரணைக்கு உதவுங்கள்.”
இதோ உங்கள் ‘தேசப்பற்றாளர்’ காஷ்மீரை ‘ஆஸிஸ் வாட்டன்’ என்று சொல்வதைப் பாருங்கள்.
தனி நாடு வேண்டுமென யோசனை சொல்கிறார். இதோ உங்கள் ‘தேசத் தலைவர்’  காஷ்மீரிகள் இந்திய ராணுவத்தாலும் துணை ராணுவப்
படையாலும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக உலகளாவிய விசாரணை  வேண்டுமெனக் கேட்பதைப் பாருங்கள். இதோ உங்கள் ‘பொறுப்பு
மிக்க நண்பர்’ இந்தப் பள்ளத்தாக்கில் 25 நாளாகத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இருப்பதைப்
பற்றியும், அதனால் ‘ஆயுதம் ஏந்தாத அப்பாவி காஷ்மீரிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்’
என்பதையும் ‘எத்தனை காஷ்மீரிகளின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன’ என்பதையும்
கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதைப் பாருங்கள். அவருக்கு மிக நன்றாகவே தெரியும்,
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊரடங்கு இல்லாமல் எத்தனை நாள்கள் இருந்தன என்று. எத்தனை
பொதுமக்கள் இறந்தார்கள் என்பது பற்றி அதிகாரிகள் பட்டியலிட்டிருக்கிறார்கள். ஃபிப்ரவரி
16 வரை 40 பேர். தொடர்ந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.
அப்படி விட்டுப்போன பெயர்கள் இருந்தால் அதையும் சேர்த்து அதிகாரபூர்வ அறிக்கையை உருவாக்கமுடியும்.
‘ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள்’ இந்திய விமானப் படை அதிகாரிகளையும், எல்லைப்
பாதுகாப்புப் படை வீரர்களையும், தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மூத்த
அதிகாரிகளையும், அப்பாவி இளைஞர்களையும் எப்படி இரக்கமே இல்லாமல்  கொல்லமுடியும் என்பதை விளக்க கொஞ்சம் கூட அக்கறையற்ற
முன்னாள்  முதல்வர் ஒருவர் இங்கே இருக்கிறார்.
அதேசமயம் நீளமான, பரபரப்பான அறிக்கைகள் மூலம் மக்களைத் தூண்டத் தவறுவதில்லை. ஆனால்
அதில், இப்படியான கொடூரமான கொலைகளைக் கண்டிக்க ஒரு வார்த்தை கூட அவருக்குக் கிடைப்பதே
இல்லை.
டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் இந்தத் துரதிர்ஷ்டமான  போக்கை ஏன் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை இந்த
நாடு அறிந்துகொள்ள உரிமையில்லையா? பிப்ரவரி 7, 1991ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில்
வெளியான அவரது சமீபத்திய அறிக்கையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? “எனது கட்சிக்காரர்கள்
ரகசியமாக எல்லை தாண்டிப் போய் ஆயுதப் பயிற்சி பெற்று என்ன வேண்டுமானால் செய்துகொள்ளுங்கள்.
ஆனால் ஜக்மோகன் கையில் பிடிபட்டுவிடாதீர்கள்.”
தனிப்பட்ட முறையில் என் முதுகில் குத்துவது எனக்கு ஒரு பொருட்டே இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் இந்தப் பிரச்சினையை ஆற விடாமல் கனன்று கொண்டே
இருக்க வைப்பதன் மூலம், இன்னும் பல மரணங்களையும் பல அழிவுகளையும் கொண்டுவருகிறீர்கள்.
வேர்கள்:
ஒருமுறை நீங்கள் சொன்னீர்கள்: ‘நான் வரலாற்றைப் படிப்பவன் அல்ல, படைப்பவன்.’
வரலாற்றைப் படிக்காமலேயே படைக்க விரும்புபவர்கள் பொதுவாக மிக மோசமான வரலாற்றையே படைக்கிறார்கள்
என்பது உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன். ஒரு பிரச்சினையின் உள்ளார்ந்த போக்கையும்,
நிகழ்வுகளை வடிவமைத்து எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அடிப்படைச்
சக்திகளையும் இப்படிப்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
வரலாற்று நோக்கில் ஒரு பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததால், நீங்களும்
உங்களைப் போன்றவர்களும் இப்பிரச்சினையின் வேர்களையும், அதனால் இன்று வளர்ந்து நிற்கும்
காஷ்மீர் பிரிவினைவாதத்தையும் காஷ்மீரின் தோல்வியையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
காஷ்மீரின் ஆன்மாவில் விஷ விதைகள் நிரந்தரமாக விதைக்கப்பட்டுவிட்டன. இவற்றுக்கு மிகத்
தாராளமாக உரமும் தரப்பட்டுவிட்டது. இந்தப் பயிர்களையும் அதற்கான உரங்களையும் தடுத்து
நிறுத்தி இருக்கவேண்டியது உங்களது கடமை. ஆனால் உங்களுக்கோ வரலாற்றின் பாலபாடம் கூடத்
தெரியவில்லை. தீமையுடன் சமரசம் செய்துகொள்வது இன்னும் பெரிய தீமைகளையே கொண்டு வரும்.
நமக்கு வசதியற்ற உண்மைகளைப் புறக்கணிப்பது அதை மேலும் சிக்கலாக்கும். பலவீனமானவனைக்
கொடுமைப்படுத்துபவன் முன்பு பணிந்து போவது நாளை கசாப்புக் கடைக்காரனைக் கொண்டு வரும்.
இவை எதுவுமே உங்களுக்குப் புரியவில்லை.
எனது கருத்தை வலியுறுத்தும் பல உதாரணங்களை என்னால் தரமுடியும். ஆனால் ஒன்றிரண்டு
உதாரணங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறேன்.
மென்மையான போக்கும்
சரணடைதலும்
அக்டோபர் 2, 1988ல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று அவரது சிலை ஸ்ரீநகரில்
உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட இருந்தது. விழா அறிவிக்கப்பட்டது. இந்தியாவின்
தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார். ஆனால் சில முஸ்லிம்
வழக்கறிஞர்கள் இதை எதிர்த்தார்கள். விழாவின்போது பிரச்சினை செய்யப்போவதாக அவர்கள் மிரட்டினார்கள்.
முதலமைச்சர் கைவிட்டார். அதுவும் வேண்டுமென்றே, மிரட்டல்களுக்குப் பணிந்து அப்படி நடந்துகொண்டார்.
விழா ரத்து செய்யப்பட்டது.
நடந்தது சொல்வது என்ன? மதச்சார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியான மதச்சார்பற்ற
காஷ்மீரில், நம் தேசத்தின் மத நல்லிணக்கத்துக்காகத் தன் உயிரையே தந்த துறவியைப் போன்ற
தேசத் தந்தையின் சிலையை, இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் நீதிபதியால்கூட
நிறுவ முடியாது. இதை நிறுவுவதற்கு எதிராகக் கலகம் செய்தவர்களில் முக்கியமானவர் யார்?
வேறு யாருமில்லை, மொஹம்மட் ஷாஃபி பட். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற  வழக்கறிஞர். தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர்.
பின்னர் இவருக்கு 1989 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீநகரில் இருந்து போட்டியிட
வாய்ப்பு தரப்பட்டது. மார்ச் 7 1990ல் நீங்கள் ஸ்ரீ நகர் வந்தபோது, கவர்னரின் நிர்வாகத்துக்கு
எத்தனை கஷ்டங்களைத் தர முடியுமோ அவற்றைத் தருவதற்காக, இவருடனேதான் நீங்கள் மகிழ்ச்சியுடன்
நேரத்தைச் செலவழித்தீர்கள்.
அந்த நேரத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி (எஃப்), காங்கிரஸ் (ஐ) ஆட்சியில் இருந்தது.
இப்படித்தான் கொள்கைப் பிடிப்பில்லாமல் அவை நடந்துகொள்ளும். அரசை அமைத்த காங்கிரஸ்காரர்களின்
குணமும் இப்படிப்பட்டதுதான். அந்த விழா ரத்து செய்யப்பட்டபோது, எப்படியாவது அதிகாரத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக, அதற்கு எதிராக இவர்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.
பலவீனமானவர்களை மிரட்டுபவர்களின் பசிக்கு இதைவிடச் சிறப்பாக யாரும் படையல் அளித்திருக்கமுடியாது.
மிரட்டல்கள் இதைவிடச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கமுடியாது. மிரட்டல்காரர்களுக்கு
இதைவிடச் சாதாரணமான, உறுதியற்ற எதிரிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. இப்படிச் செய்தால்
இதைவிடப் பெரிய இலக்குடன் மிரட்டல்காரர்கள் வளர்வார்கள் என்பது இயல்புதானே? இதைவிடத்
தீவிரமான மிரட்டல்களை முன்வைத்தால் இன்னும் அட்டகாசமான முடிவுகள் கிடைக்கும் என்று
அவர்கள் நினைக்கமாட்டார்களா? காஷ்மீரின் இன்றைய சூழலில் இப்படி மென்மையான போக்குடன்
அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து மிரட்டல்காரர்களிடம் சரணடைந்தால், அது தீவிரவாதத்துக்கும்
போருக்கும் வழிவகுக்காது என்பதை அப்பாவிகளால் மட்டுமே நம்பமுடியும்.
மத நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தை (Religious
Institutions (Prevention of Misuse) Act) 1988ல் அரசு இயற்றியது. இது எல்லா மாநிலங்களுக்கும்
பொருந்தும். ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாது. ஏனென்றால், 370 பிரிவு. இந்தச்
சட்டம் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தவேண்டும் என்றால், மாநில அரசின் ஒப்புதல் வேண்டும்.
ஆனால் அது தரப்படவில்லை. ஏன்? ஏனென்றால், ஜம்மு காஷ்மீர் வேறுபட்டது! மத நிறுவனங்களின்
இருப்பிடங்களை அரசியல் நோக்கத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துவதை முற்றிலும் நீக்கும்
நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்குத் தரப்பட்ட பதில்! எப்பேற்பட்ட பதில்!
ஜம்மு காஷ்மிரைவிட இந்தச் சட்டம் மிகவும் தேவையான இடம் வேறில்லை. மத நிறுவனங்கள்
ஜம்மு காஷ்மீரைவிட வேறு எங்கும் இத்தனை தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை. விஷ விதைகளான
மதவெறியும் அடிப்படைவாதமும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கே இருக்கும் மசூதிகளின்
பிரசங்க மேடைகளில் மிகக் கவனமாக விதைக்கப்படுவது போல வேறு எங்கேயும் விதைக்கப்படுவதில்லை.
‘இந்திய ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு எதிரானது, இந்திய மதச்சார்பின்மை என்பது முஸ்லிம்களுக்கு
எதிரானது, இந்திய சோசியலிசம் முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்று இங்கே பிரசங்கம் செய்யப்படுவதைப்
போல வேறு எங்கேயும் செய்யப்படுவதில்லை. அப்படி இருந்தும் இரண்டு மதச்சார்பற்ற கட்சிகளால்
ஆளப்படுவதாகச் சொல்லப்படும் இந்த மாநில அரசும், மத்திய அரசும் இந்த விஷயத்தைத் தீவிரமாக
எடுத்துக்கொள்ளவில்லை. இதிலுள்ள சதி என்னவென்றால், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும்
100 மில்லியன் முஸ்லிம்களுக்கும் நல்லது என்று கருதப்படும் ஒரு சட்டம், காஷ்மீரின்
40 லட்சம் முஸ்லிம்களுக்கு நல்லதல்ல என்று கருதப்படுவதுதான்.
தேசிய நோக்கில் ஒரு கட்சி செயல்படாமல் போனால், தேசியவாத சக்திகள் ஒரு நாட்டை
ஆள்கிறது என்று சொல்வதில் என்ன  பயன்? மதவாதத்தின்
அரசியலில் மனப்பிறழ்ச்சி கொண்ட அடிமைகளாக அவர்கள் சிக்கி இருந்தால்… வெற்று வார்த்தைகளில்
மட்டும் நம்பிக்கை கொண்டு செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால்… நாட்டை வழிநடத்தாமல்
மிரட்டல்களுக்கு அடிபணிந்து நடந்தால்… பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடிக்காமல் அதை
ஊக்குவித்தால்… மனிதத் தன்மையிலும் ஆன்மிகத்திலும் பலமான  புதிய சமூகத்தை உருவாக்காமல், அழுகி துர்நாற்றம்
வீசும் பழைய பிரச்சினைகளை அறிந்தோ அறியாமலோ இன்னும் கிளறி இன்னும் பலம் கொண்டு எழச்
செய்து தெளிவற்ற நிலையைத் தொடரச் செய்தால்… நம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கும்
இலக்குகளுக்கும் எதிராக, இன்றைய சூழலுக்கு மட்டுமே எப்போதும் முன்னுரிமை அளித்தால்…
இவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த மூர்க்கமான அமைப்புகள் நம்மை எங்கே கொண்டு
செல்லும் என்று அறிந்துகொள்ள வித்தியாசமான நுண்ணறிவு வேண்டாமா?
எவ்வித அரசியல் அல்லது தனிப்பட்ட விருப்புவெறுப்புமின்றி அணுகும்படி மட்டும்
கேட்டுக்கொண்டு இக்கேள்வியை நம் தேசத்தின் நலம்விரும்புபவர்களிடம் விட்டுவிடுகிறேன்.
எப்படி டாக்டர் ஃபரூக் அப்துல்லா என்னை ஹல்லாகு என்றோ செங்கிஸ்கான் என்றோ அழைக்கலாம்?
என்னை ‘370வது பிரிவின் எதிரி’ என்று அம்பலப்படுத்த நீங்கள் ஸ்ரீநகர் வரை வருகிறீர்கள்.
அதே நேரம் பெனாசிர் பூட்டோ என்னை துண்டு துண்டாகக் கிழிப்பதாக சபதம் எடுக்கிறார்.
‘ஜக்மோகனை பாக்பாக் மோகன் ஆக்கவேண்டும்?’ (*பாக் என்றால் ஹிந்தியில் துண்டு துண்டாக
அதாவது பாகம் என்று பொருள்.)
காஷ்மீரின் இன்னும் பல தரப்புகள் பொய்களின் குவியல்களுக்குக் கீழே புதைக்கப்பட்டுள்ளன.  மேம்போக்கான கருத்துகளில் அவை புதைந்து போய்க் கிடக்கின்றன.
இந்தக் குவியல்களில் சிலவற்றை நீக்குவதில் இத்தனை நாள் நான் பரபரப்பாக இருந்தேன். இந்தப்
பிரச்சினையின் உண்மையான தன்மையை ஒருநாள் இந்தத் தேசம் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.
நான்தான் அவர்களின் மிகச்சிறந்த நலம்விரும்பி என்று காஷ்மீரப் பொதுமக்கள் உணர்வார்கள்.
தங்களைச் சுரண்டும் தன்னலக் குழுக்களிடம் இருந்தும், மதவாத ‘சீஸர்’களின் சூழ்ச்சிகளில்
இருந்தும், உண்மையை வேண்டுமென்றே மறைக்கும் கும்பல்களிடமிருந்தும் காஷ்மமீர மக்களை
நிரந்தரமாகக் காக்க எண்ணினேன்.
காஷ்மீரில் பாரத மாதாவைக் கைவிடும் பாவத்தை நீங்கள் ஏற்கெனவே செய்துவிட்டீர்கள்.
இப்போது இன்னொரு மாதாவையும் கைவிடும் பாவத்தையும் கூட்டிக்கொள்ளாதீர்கள். என்ன இருந்தாலும்
நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அவளை நினைவில் வையுங்கள். அவள் ஒருவேளை உங்கள் அலட்சியத்தை
மன்னிக்கக்கூடும். ஆனால், உங்கள் தவறுகளுக்காக, அதுவும் அவற்றைத் தொடர்ந்து உங்களிடம்
நினைவூட்டிக்கொண்டே இருந்த அப்பாவியையே குற்றம் சுமத்திய பாவத்துக்காக அவள் ஒருநாளும்
உங்களை மன்னிக்கமாட்டாள்.
என்னைப் பொருத்தவரை, காஷ்மீரில் மிகச் சரியான செயல்களையே செய்தேன் என்கிற சோகமான
பெருமை எனக்கு இருக்கிறது. உண்மைதான், உள்ளூர் மக்களின் நல்லெண்ணத்தை நான் தற்காலிகமாக
இழந்திருக்கிறேன் என்றே தெரிகிறது. ஆனால் நான் யாரிடமும் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை.
தேசியக் கடமையைச் செய்யவே நான் இரண்டாம் முறை கவர்னராகச் சென்றேன். நம் நாட்டின் அரசியலும்
நிர்வாகமும், ஒரு தீவிரமான பிரச்சினையை அதன் வேரோடு நீக்கவே முடியாது என்ற எண்ணத்தைக்
கொண்டுவிட்டிருக்கிறது. தேர்தல்கள் அதன் பொருளையே இழந்து நிற்கின்றன. இந்திய ஜனநாயகமும்,
அதன் அரசியலமைப்பும் ஆரோக்கியமான பண்பாட்டு அடித்தளத்தையும், மண்ணின் தூய்மையான ஆன்மாவையும்
பெறாதவரை இந்த பொருளற்ற நிலை தொடரவே செய்யும். நீதியின் விதையும், தன்னலமற்ற சேவையுமே
முளைவிட்டு மகா மரமாகப் பூக்கமுடியும். அதுவே கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை நிழலைத்
தர முடியும். இப்போது அதன் ஆன்மா இல்லாமல் போய்விட்டது. கண்பார்வையற்றவர்கள் தங்கள்
கைகளில் விளக்கை ஏற்றி நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரச்சினையிலிருந்து
இன்னொரு பிரச்சினைக்கென நாம் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு கவிஞர் சொல்வதைப் போல:
அது நிகழ்ந்தது
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அது மீண்டும் நிகழும்.
வாழ்த்துகளுடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஜக்மோகன்


(பகுதி 1 ஐ வாசிக்க இங்கே செல்லவும்.)

Posted on Leave a comment

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா



முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன்
ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல்
20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத்
துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை
இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் இங்கே.
காஷ்மீரில்
பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்!
அன்புள்ள ஸ்ரீ ராஜீவ் காந்தி,
April 21, 1990
இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுத வைத்துவிட்டீர்கள். கட்சி
அரசியலில் இருந்து தொடர்ந்து நான் விலகியே இருந்து வந்திருக்கிறேன். இருக்கும் கொஞ்சம்
திறமையையும் ஆற்றலையும், சில ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய பயன்படுத்தவே விரும்புகிறேன்.
சமீபத்தில் மாதா வைஷ்ணவோ தேவி கோவில் வளாகத்தை மேம்படுத்த உதவியது போல. இப்படிச் செய்து
நம் கலாசார மறுமலர்ச்சிக்கு உதவவில்லை என்றால், விரைவாக அழிந்துவரும் இதுபோன்ற அமைப்புகளைக்
காப்பாற்ற முடியாமலேயே போய்விடும். இந்த அமைப்புகளின் உன்னதமான நோக்கங்கள் (அவை சட்ட
அல்லது நீதி அமைப்புகளாக இருந்தாலும்) அதன் சாரத்தை இழந்துவிடும். நீதியின் ஆன்மாவும்
உண்மையும் இன்றைய அரசியல் சூழலால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும்.
நீங்களும் உங்கள் நண்பர் டாக்டர் ஃபரூக் அப்துல்லாவும் காஷ்மீர்
தொடர்பாகப் பொய்யான ஒரு சித்திரத்தை வரையப் பார்க்கிறீர்கள். உங்கள் கட்சியின் மூத்த
உறுப்பினர்கள் ஷிவ் ஷங்கர் மற்றும் என்.கே.பி.சால்வே போன்றவர்கள், வெளிப்படையாக உங்கள்
அறிவுறுத்தலின் பேரில், எனக்கெதிரான மனநிலையை உருவாக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
துர்க்மன் கேட்டில் 14 வருடங்களுக்கு முன்பு நடந்த பழைய நிகழ்ச்சியைக் கையில் எடுக்கிறார்
ஷிவ் ஷங்கர். என்.கே.பி.சால்வே எனது பேட்டியை எடுத்துக்கொண்டு, எனக்கு எதிராக மதவாதக்
குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார். அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை!
மணி சங்கர் ஐயரும் சில பத்திரிகைகளில் தன் விஷக் கருத்துகளைப்
பதிவு செய்கிறார். ஆனாலும், இந்தத் தொடர்ச்சியான மூர்க்கமான தவறான தகவல் அம்புகளுக்கு
பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தேன். ஒட்டுமொத்தமாகப் பொய்களைச் சொன்ன சில பத்திரிகைகளுக்கு
மட்டும் சரியான தகவல்களை எப்போதாவது எழுதினேன். எனது நோக்கம், இந்த நாட்டுக்கும் வரலாற்றுக்கும்
நான் செய்யவேண்டியதாக நம்பும் கல்வி மற்றும் வரலாற்று ரீதியிலான புத்தகத்தில் மட்டும்
இவற்றை எழுதினால் போதும் என்பதுதான்.
ஆனால், ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்களில் நீங்கள் பேசியவற்றின்
சில பகுதிகளை என் நண்பர்கள் காட்டினார்கள். இதுதான் எல்லை என்று அப்போதுதான் நினைத்தேன்.
உங்கள் திரிபுகளுக்கான நோக்கங்களைச் சொல்லாவிட்டால், நீங்கள் என்னைப் பற்றிய தவறான
எண்ணத்தை இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுக்கப் பரப்புவீர்கள் என்பதை உணர்ந்தேன்.
எச்சரிக்கை மணி
1988 தொடக்கம் முதலே, காஷ்மீரில் சூழத் துவங்கி இருக்கும் புயல்
பற்றிய ‘எச்சரிக்கை மணி’களை உங்களுக்கு அனுப்பத் துவங்கி விட்டேன் என்பதை நினைவுறுத்த
வேண்டுமா என்ன? ஆனால் உங்களுக்கும், உங்களைச் சுற்றி உள்ள அதிகார வர்க்கத்தினருக்கும்,
இந்த எச்சரிக்கையைப் பார்க்க நேரமோ ஆர்வமோ இதுகுறித்த தரிசனமோ இல்லை. இவற்றைப் பொருட்படுத்தாமல்
இருப்பது, உண்மையான வரலாற்றுப் பரிமாணத்துக்குத் தீங்கிழைப்பது என்று அவர்களுக்குத்
தெளிவாகத் தெரியும்.
உதாரணமாக சில எச்சரிக்கை மணிகளை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஆகஸ்ட் 1988ல், வெளிப்படையான மற்றும் மறைமுகமான சூழலை ஆய்வு செய்த பின்னர், இப்படித்
தொகுத்துச் சொல்லி இருந்தேன்: “குறுங்குழு மதவாக்காரர்களும், அடிப்படைவாதிகளும் அதிகம்
வேலை செய்கிறார்கள். நாசவேலைகள் அதிகரிக்கின்றன. எல்லை தாண்டி நடக்கும் விஷயங்களின்
நிழல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இன்னும் நிறைய நடக்கலாம்.”
ஏப்ரல் 1989ல் உடனடி நடவடிக்கை வேண்டி தீவிரமாகக் கெஞ்சினேன்.
நான் சொன்னேன்: “சூழல் மிக வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது. இனி மீட்கவே முடியாது
என்னும் ஒரு புள்ளியைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களாக, பெரிய அளவில்
தீவைத்தல், துப்பாக்கிச் சூடு, வேலை நிறுத்தம், உயிரிழப்பு என வன்முறை தலைவிரித்தாடுகிறது.
நிலைமை கை மீறிப் போய்விட்டது. ஐரிஷ் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது பிரிட்டிஷ்
பிரதமர் டிஸ்ரேலி சொன்னார், ‘முதல்நாள் உருளைக் கிழங்கு, மறுநாள் போப்’ என்று. காஷ்மீரில்
இன்று இதே நிலைதான். நேற்று மக்பூல் பட், இன்று சத்தானின் வேதங்கள் (சாத்தானிக் வெர்சஸ்).
நாளை அடக்குமுறை நாளாக இருக்கும். பிறகு வேறொன்றாக இருக்கும். முதலமைச்சர் தனித்து
விடப்பட்ட தீவு போல் இருக்கிறார். ஏற்கெனவே அவர் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும்
செயலிழந்துவிட்டார். ஒருவேளை அரசியலமைப்பு ரீதியிலான சடங்குகள் செய்யவேண்டியது மட்டுமே
பாக்கியாக இருக்கலாம். அவர் மீது சேறு நிறைந்திருக்கிறது. அவரை ஆதரிப்பது ஆபத்தானது.
இவரது தனிப்பட்ட பிறழ்ச்சிகள்கூட இவரது பொது வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறது. இந்தச்
சூழல், செயல்திறன் மிகுந்த தலையீட்டை எதிர்நோக்கி நிற்கிறது. இன்றே செயல்படுவது சரியானது.
நாளை என்பது தாமதம் என்றாகிவிடக்கூடும்.”
துணைவேந்தர்களின் பெருக்கம்
மே மாதத்தில் மீண்டும், வளர்ந்துகொண்டே போகும் என் தவிப்பை வெளிப்படுத்தி
இருந்தேன். “இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு துணைவேந்தரின் வெற்றியிலும்
அவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்களது பகைமை மத்திய அதிகாரிகளுக்கு எதிராகத்
திருப்பிவிடப்படுகிறது.” ஆனால் நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. உங்களது செயலின்மை மர்மமாக
இருந்தது. இதற்கு இணையான இன்னொரு மர்மம், இரண்டாம் முறையாக நான் நியமிக்கப்பட்டபோதும்
இருந்தது. எப்படி நான் சட்டென மதவாதி ஆனேன்? முஸ்லிம் எதிரியானேன்? இன்னும் என்னதான்
இல்லை?
ஜூலை 1989ல் நான் ராஜினாமா செய்தபோது, ஒரு வெறுப்பும் இல்லை.
தென் டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்.
பெரும்பாலும் நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்த பொதுவான வெறுப்பு எனக்கு இருந்ததால்,
அந்த வாய்ப்பை நான் மறுத்தேன். ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் இரண்டாவது முறையாகப் பதவி
ஏற்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்குமானால் நீங்கள் நேரடியான அணுகுமுறையின்
மூலம் என்னைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். கிட்டத்தட்ட இனி திரும்பவே
முடியாது என்னும் புள்ளியை அடையும் முன்பாக நான் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசித்திருப்பேன்.
பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு வந்திருக்காது.
(நன்றி:
Indian Express)
ஒருவேளை நீங்கள் உண்மையையும் எப்போதும் ஒரேபோல் இருப்பதையும்
நல்ல குணங்களாகக் கருதாமல் இருந்திருக்கலாம். நம் தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்
சத்யமேவ ஜயதே என்னும் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் என்று நினைத்திருக்கலாம். அந்த
வார்த்தைகள், நம் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி நியாயமான வழிகளில் உண்மையான இந்தியாவை
உருவாக்க உதவும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அதிகாரம்
மட்டுமே உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அதிகாரம், எந்த வழியிலும் சரி, என்ன
விலை கொடுத்தாலும் சரி!
நான் இங்கே வருவதற்கு முன்பும் பின்பும் நிலவும்
சூழ்நிலைகளின் நிதர்சனத்தை, நீங்களும் உங்கள் நண்பர்களும் தவறான வழியில்
திரிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், ஜனவரி 19, 1990ல் கவர்னர் ஆட்சி
அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இங்கே ஒட்டுமொத்தமாக மனரீதியிலான ஒப்புதல்
இருந்தது. டிசம்பர் 8, 1989ல் டாக்டர் ருபையா சயீத்தின் கடத்தலுக்கு ஒரு நாள்
முன்பு கூட, இந்த மாநிலத்தை பயங்கரவாதக் கழுகு முழு மூர்க்கத்துடன் சுழன்றடித்தது.
11 மாதத்தில் 351 வெடிகுண்டு வெடிப்புகள் உட்பட 1600 வன்முறைச் செயல்கள் அரங்கேறின.
1990 ஜனவரி 1 முதல் ஜனவரி 19 வரை, இங்கே 319 வன்முறைச் செயல்கள், 21 தாக்குதல்கள்,
114 வெடிகுண்டு வெடிப்புகள், 112 தீ வைப்புகள், 72 கும்பல் வன்முறைகள் நிகழ்ந்தன.
நாசவேலைக்காரர்கள் இங்கே அதிகார அமைப்பை முற்றிலும்
கைப்பற்றியதைக் கவனிக்க ஒருவேளை நீங்கள் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.
உதாரணமாக, உளவுத்துறை தந்த துப்பை அடிப்படையாகக் கொண்டு ஷாபிர் அஹ்மது ஷா
செப்டம்பர் 1989ல் கைது செய்யப்பட்டபோது, ஸ்ரீநகர் உதவி கமிஷ்னர் அவரைக் காவலில்
வைக்கத் தேவையான வாரண்ட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஆனந்த்நாக் என்னும்
உதவி கமிஷ்னரும் இதே போன்றே நடந்துகொண்டார். அதோடு, மாநிலத்தின் வழக்கை நடத்த
அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனது பொறுப்பை அரசாங்கத்திடமும்
கூடுதல் அட்வகேட் ஜெனரலிடமும் தள்ளிவிட அவர் முயன்றார். அவர்களும் ஆஜராகவில்லை!
 
நவம்பர் 22 1989ல் நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டெடுப்பின்போது
என்ன நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ‘வாக்களிப்பவருக்கு
இது தரப்படும்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் அதனருகில் தொலைக்காட்சிப் பெட்டிகள்
வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் நிர்வாகத்தைச் சேர்ந்த எவரும்,
அதிகாரத்தை மீறிச் செயல்படும் இந்த அறிவிப்பை நீக்க எந்த ஒரு நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
இணை அமைச்சராக இருந்த சேர்ந்த குலாம் ரசூல் கர்-ரின் சொந்த
ஊர் சோபோர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதேபோல், லெஜிஸ்லேடிவ்
கவுன்சிலின் சேர்மனான ஹபிபுல்லாவுக்கும், முன்னாள் நேஷனல் கான்ஃபரன்ஸ் எம்.பியும்
இணை அமைச்சருமான அப்துல் ஷா வகிலுக்கும் இதுதான் சொந்த ஊர். இருந்தாலும் சோபோர்
நகரத்தில் ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவாகின. அன்றைய காங்கிரஸ் (ஐ) அமைச்சர்
இஃப்திகார் ஹுசைன் அன்சாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும்
பட்டாணில் ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. இதுதான் இந்த மாநிலத்தைச் சேர்ந்த
உங்கள் தலைவர்களின் ஈடுபாடும் நிலைப்பாடும். இருந்தும் நீங்கள் நினைக்கிறீர்கள்,
நாச வேலையையும் தீவிரவாதத்தையும் இத்தகைய அரசியலாலும் நிர்வாகத்தாலும் எதிர்கொள்ள
முடியும் என்று.
 
நம்பிக்கை இழந்த காவல்துறை 
அந்த சமயத்தில் காவல்துறை நம்பிக்கை இழந்தது. உளவுத்துறை
விரைவாக செயலற்றுப் போனது. டோபாக் (TOPAC) போன்ற நாசவேலைகள் குறித்த செய்திகளை
சேவை அமைப்புகளில் ஊடுருவி இருந்தவர்கள் கொண்டு வந்தபோது, டாக்டர் அப்துல்லா
வெளிநாடு போய்க்கொண்டிருந்தார். பயங்கரமான தீவிரவாதிகள் 70 பேரை விடுதலை
செய்துகொண்டிருந்தார். இவர்கள் பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி
பெற்றவர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளோடு தொடர்பில்
இருந்தவர்கள். பாகிஸ்தானுக்குச் செல்லவும் வரவும் உதவும் குறுக்கு வழிகளை
அறிந்தவர்கள். தலைமை நீதிபதியால் கண்காணிக்கப்படும் மூன்று நபர்கள் அடங்கிய
அறிவுறுத்தல் மன்றம் இவர்களைக் காவலில் வைக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
 
அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ததால்,
நாசவேலை மற்றும் தீவிரவாத வலைப்பின்னலில் அவர்களால் முக்கியமான பதவிகளைப் பிடிக்க
முடிந்தது. இதனால் தீவிரவாதத்தின் சங்கிலித் தொடர் ஒன்று முழுமையானது. இவர்கள்
மீண்டும் பாகிஸ்தான் போய் அங்கிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து கொலைகளிலும்
ஆள்கடத்தல்களிலும் மற்ற தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டார்கள்.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவனான, கேண்டர்பாலைச் சேர்ந்த மொஹமத் தௌத் கான், அல்
பகர் என்னும் ஒரு தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான். 2500 காஷ்மீர் இளைஞர்களை
அந்த அமைப்பில் பங்கெடுக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றினான். 70 தீவிரவாதிகளை விடுவித்து
அதனால் ஏற்பட்ட பயங்கரமான குற்றங்களுக்கு யாரைக் குற்றம் சொல்லவேண்டும்? ‘ஜக்மோகன்
காரணி (Factor) என்று நீங்கள் யாரிடம் சொல்கிறீர்களோ அவர்களே இக்கேள்விக்கு
பதிலளிக்கட்டும்.
 
கிடைக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், ஜனவரி 19,
1990க்கு முன்பு அந்தத் தீவிரவாதி தலைவனாகிவிட்டான். பொதுமக்களின் மனதை
ஆக்கிரமிக்கும் அளவுக்கு, அவனுக்குத் தேவையான களம் அமைத்துக்
கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு கடலில் மீன் போல அவனால் நீந்தமுடியும். அதற்குப் பின்
கடல் அவனைச் சூழ்ந்துகொள்வதால் என்ன ஆகிவிடும்?
 
காஷ்மீர் தொடர்பான உங்களது எல்லாக் கவனக்குறைவுப்
பாவங்களையும் நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்களது சின்னத்தனமான
அரசியலுக்காக இதைச் செய்கிறீர்கள். மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் ஒரு வாக்கு
வங்கி உருவாக்குவதைத் தாண்டி இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. காஷ்மீர் முஸ்லிம்
இளைஞர்கள் உள்ளிட்ட மொத்த காஷ்மீர் மக்களும் நான் முதன்முறை ஏப்ரல் 26 1984 முதல்
ஜூலை 12 1989 வரை கவர்னாக இருந்தபோது என் மீது கொண்டிருந்த மரியாதையைக் குலைக்க
நீங்கள் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்கிறீர்கள். எல்லா உண்மைகளையும் தாண்டி,
தாக்குப் பிடிக்க முடியாத ஆதாரங்களைக்கொண்ட உங்கள் தனிப்பட்ட பிரகடனங்கள் மூலம்
என்னை முஸ்லிம்களின் எதிரி என்று முத்திரை குத்தத் தொடங்கினீர்கள்.
 
இந்த நேரத்தில், ‘டெல்லி என்னும் சுவர்களுக்குட்பட்ட நகரம்:
ஷாஜஹானாபாத்தை உயிர்ப்பித்தல்’ (Rebuilding Shahjahanabad) என்ற என் புத்தகத்தில்
முன்வைத்த மூன்று முக்கியமான யோசனைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர
விரும்புகிறேன்: ஒன்று, ஜாமா மசூதி மற்றும் ரெட் ஃபோர்ட்டுக்கு இடையே பசுமைப்
பகுதியை உருவாக்குவது தொடர்பானது. இரண்டாவது, நாடாளுமன்ற வளாகத்தையும் ஜாமா மசூதி
வளாகத்தையும் இணைக்கும் சாலையை உருவாக்குவது. மூன்றாவது, நகரின் கலாசாரத்தைப்
பறைசாற்றும் வகையில், பழம்பெரும் பண்பாட்டை புதுமையான வடிவத்தில் வெளிப்படுத்தும்
வகையில், மாதா சுந்தரி சாலை – மிண்ட்டோ சாலைக்கும் இடையே இரண்டாவது ஷாஜஹானாபாத்தை
உருவாக்குவது. இந்த யோசனைகளெல்லாம் முஸ்லிம் எதிரியான ஒருவனின் சிந்தனையில் வருமா
என்ன என்று உங்களைக் கேட்கிறேன்.
 
நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம் செய்தல் 
காஷ்மீர முஸ்லிம்களிடையே எனக்கிருக்கும் பிம்பத்தைக்
குறைக்கும் வகையில் நீங்களும் உங்கள் நண்பர்களும் நாடாளுமன்றத்தை துஷ்பிரயோகம்
செய்கிறீர்கள். எம்.பியான என்.கே.பி. சால்வே மே 25 1990ல் ராஜ்ய சபாவில் செய்தவையே
இதற்கான ஆதாரம். பாம்பேவின் வாரப் பத்திரிகையான தி கரண்ட்டில் நான் கொடுத்ததாகச்
சொல்லப்படும் பேட்டியை (அப்படி ஒரு பேட்டியை நான் தரவே இல்லை) முன்வைத்து, சால்வே
கொஞ்சம்கூட நியாயமற்ற கருத்துகளைக் கூறினார்: “மதச்சார்புக்கு ஒரு வகையான மாதிரி
உண்டு. அதை உணரமுடியும். எனவே அவர் (கவர்னர்) தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும்
நீக்கும் போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நீக்குவதான மகிழ்ச்சியில்
இருக்கிறார். தற்போது கவர்னர் தனது தகாத கொடிய வெறுப்புச் செயலுக்கு அதிகப்படியான
வெட்கமற்ற செயல் ஒன்றையும் செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள
ஒவ்வொருவரையும் போராளி என்று சொல்லி இருக்கிறார்.”
 
எனக்கு சால்வேவைத் தெரியும். அவர் செய்தது அவராகவே செய்தது
என்று நான் நினைக்கவில்லை. அவரது பின்னணிக்கும் பயிற்சிக்கும் தொடர்பற்ற ஒன்றை
அவர் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எந்த
ஒருவரும், அதுவும் சால்வேவைப் போன்ற முக்கியமான ஜூரி, இப்படி ஒரு பேட்டி என்னால்
தரப்பட்டதா என்ற சிறிய விஷயத்தை முதலில் பார்த்திருக்கவேண்டும். ஒருவேளை பேட்டி
தரப்பட்டிருந்தால், என்னைக் குறிப்பவை உண்மையிலேயே என்னால் சொல்லப்பட்டதா என்றும்
பார்க்கவேண்டும். வெளிப்படையான அவசரம் இதிலேயே தெரிகிறது. இந்தப் பிரச்சினை மே 25
அன்று எழுப்பப்பட்டது. இந்த வாரப் பத்திரிகையின் தேதி மே 26-ஜூன் 2 1990 என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் நான் கொடுக்காத இந்தப் பேட்டியை அடிப்படையாக
வைத்து நீங்கள் மே 25 அன்றே ஒரு கடிதத்தை அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி
இருக்கிறீர்கள். மதவெறிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவரை கவர்னராக
வி.பி.சிங் நியமித்ததாக நீங்கள் விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்தக் கடிதம் மே 25
அன்று பரவலாக வெளிவரும்படியும் பார்த்துக்கொண்டீர்கள்.
 
மார்ச் 7 1990ல் நடைபெற்ற ஸ்ரீநகருக்கான அனைத்துக் கட்சிக்
கூட்டத்தின்போது, நான் 370வது பிரிவை 1986லேயே ரத்து செய்ய விரும்புவதாக நீங்கள்
சொன்னீர்கள். இந்த காலகட்டம் முக்கியமான காலகட்டம். தீவிரவாதத்துக்கு எதிராக நான்
போராடிய கடுமையான காலகட்டம். நாசவேலைகளின் தீய வெளிப்பாடுகளுக்குப் பின் ஜனவரி 26
1990ல் நிலைமை கொஞ்சம் முன்னேற ஆரம்பித்த காலகட்டம். நீங்கள் நினைத்தீர்கள்,
உண்மையை எனக்கெதிராகத் திரிக்க இதுதான் சரியான சமயம் என்று. உங்களது இந்தச் செயல்
பொறுப்பானதா பொறுப்பற்றதா என்பதை நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
1986 ஆகஸ்ட் – செப்டெம்பரில் நான் உண்மையிலேயே சொன்னது: ‘370வது
பிரிவு என்பது, சொர்க்கத்தின் இதயத்தில் ஒட்டுண்ணிகள் பெருக இடமளிக்கும் களம்
அன்றி வேறில்லை. இது ஏழைகளை ஒட்டிக்கொள்கிறது. அவர்களைக் கானல் நீர் போல
ஏமாற்றுகிறது. அதிகார வர்க்கத்தினருக்கு நியாயமற்ற முறையில் பணத்தைக் கொண்டு
வருகிறது. புதிய சுல்தான்களின் ஈகோவை விசிறிவிடுகிறது. சுருக்கத்தில், இது
நீதியற்ற ஒரு நிலத்தை உருவாக்குகிறது, ரத்தமும் முரண்பாடுகளும் நிறைந்த ஒரு
நிலத்தை உருவாக்குகிறது. வஞ்சகமும் போலித்தனமும் வாய்ப்பேச்சும் கொண்ட ஒரு அரசியலை
உருவாக்குகிறது.
 
நாசவேலைகளை இது பெருகச் செய்கிறது. இரண்டு நாடுகள் என்ற
ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை இது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தியா என்னும்
கருத்தாக்கத்தை இது மூச்சுமுட்டச் செய்கிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான
சமூக, கலாசாரப் பார்வையை இது மறைக்கிறது. தீவிரவாத நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக
இது அமையக்கூடும். இதன் அதிர்வுகளால் ஏற்படும் எதிர்பார்க்கவே முடியாத விளைவுகளை
நம் நாடு முழுவதும் உணரக்கூடும்.
 
நான் சொல்லி இருந்தேன், ‘370வது பிரிவை நீக்குவது அல்லது
அமலாக்குவது பிரச்சினை தொடர்பான அடிப்படையான விஷயத்தை மறந்துவிட்டோம். அது, இது
தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இன்னும் வரும் காலங்களில், ஆளும் அரசின்
கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக இது மாறும். அதிகாரத்திலும்,
நீதித்துறையிலும் சில தனிப்பட்ட லாபங்களுக்கு இது பயன்படுத்தப்படும்.
அரசியல்வாதிகளைத் தாண்டி, செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க வசதியான ஒன்றாக இதைப்
பார்க்கிறார்கள். இந்த மாநிலத்துக்கு ஆரோக்கியமான நிதிச் சட்டங்கள் வருவதை இவர்கள்
அனுமதிப்பதில்லை.
 
சொத்து வரி, நகர்ப்புற சில வரம்புச் சட்டம், கொடை வரி
மற்றும் பல நல்ல சட்டங்கள் இந்த மாநிலத்தில் 370வது பிரிவைக் காரணக் காட்டி
அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் 370வது பிரிவு தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது,
தங்களுக்கான நீதியை மறுக்கிறது, அதேபோல் பொருளாதார முன்னேற்றத்தில் தங்களுக்குக்
கிடைக்கவேண்டிய நியாயமான பங்கைத் தடை செய்கிறது என்பதைப் பொது மக்கள் உணராத
வகையில் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.’
 
என் நிலைப்பாடு என்னவென்றால், 370வது பிரிவு என்னும் தடைச்
சுவரின் மூலம் காஷ்மீரத்து மக்கள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையான நிலை
அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படவேண்டும். இது தொடர்பாக ஏகப்பட்ட யோசனைகளை நான்
தெரிவித்திருந்தேன். அதேபோல், சீர்திருத்தம் மற்றும் நிர்வாக மறு கட்டமைப்பு
தொடர்பாகவும் சொல்லி இருந்தேன். இவை கண்டுகொள்ளப்படவில்லை. மிகச் சிறந்த வாய்ப்பு
வீணடிக்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் என் கருத்தை வலுப்படுத்தி
இருக்கின்றன. அதாவது 370வது பிரிவும் அதன் உபரி விளைபொருளான ஜம்மு காஷ்மீருக்குத்
தனி அரசியலைமப்புச் சட்டம் என்பதும் போகவேண்டும். இது சட்டத்தாலும்
அரசியலைப்பாலும் செய்யப்பட முடியக்கூடியது என்பதற்காக மட்டும் சொல்லவில்லை. நம்
கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலான காரணங்களாலும், நிகழ்கால வாழ்க்கைக்குத் தேவை
என்பதாலும் இது போகவேண்டும் என்கிறேன். ஊழல் மேட்டுக்குடியினரின் தொடர்ச்சியான
வளர்ச்சிக்கு மட்டுமே இந்தப் பிரிவு உதவுகிறது. இது இளைஞர்களின் மனதில் தவறான
கருத்தைக் கொண்டு வருகிறது. மாநில ரீதியான பதற்றத்தையும் மோதல்களையும் இது
உருவாக்குக்கிறது. சுயாட்சி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாலும், நிதர்சனத்தில்
அது சாத்தியமில்லை.
 
தனித்துவம் மிக்க கலாசாரம் கொண்ட காஷ்மீரை இந்தப் பிரிவு
இல்லாமலேயே பாதுகாக்கமுடியும். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு மாநிலத்தைச்
சேர்ந்த ஒருவரை மணந்துகொண்டால் அவர்களது உரிமைகள் பறிபோகும் என்பது
பிற்போக்குத்தனமானது. 44 வருடங்களாக இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களது
எளிய அடிப்படை உரிமையும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இது
எல்லாவற்றுக்கும் மேலே, பரந்து விரிந்த இந்தியாவின் பன்முகத் தன்மையின் தேவையோடும்
நிதர்சனத்தோடும் இது பொருந்தி வரவில்லை.
 
இன்றைய இந்தியாவின் தேவை, இந்தியாவின் ஆன்மாவையும்
ஆசைகளையும் குலைத்து, வலிமையற்ற தலைமையால் ஒரு சிறிய ‘வாழைப்பழ குடியரசாக’
மாற்றப்படும் வெற்று இறையாண்மை அல்ல. மாறாக, நீதியின்பாலும் நியாயத்தின்பாலும்,
உண்மையையும் நேர்மையும் கருணையும் கொண்ட புதிய சமூக, அரசியல் மற்றும் கலாசார
இந்தியாவே தேவை. தூய்மையான தீவிரமான துடிப்பான உள்ளார்ந்த அமைப்புதான் வேண்டும்.
இதுவே உண்மையான சுதந்திரம், உண்மையான ஜனநாயகம், உண்மையான எழுச்சியை அனைவருக்கும்
தரும்.
 
நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற
மாநிலங்கள் கூடுதல் சுயாட்சி அதிகாரத்தைக் கேட்கும்போது, அவர்கள் தனித்துப்
போகவேண்டும் என்ற பொருளில் அதைக் கேட்பதில்லை. அவர்கள் உண்மையிலேயே அதிகாரப்
பரவலாக்கலை விரும்புகிறார்கள். இதனால் நிர்வாகத்தையும் வளர்ச்சிப் பணிகளையும்
விரைவாக மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் சேவையின் தரம் கூடும். காஷ்மீரில்
370வது பிரிவைத் தொடர்ந்து வைத்திருக்க எழும் கோரிக்கை, அதாவது 1953ல் இருந்து
நீர்த்துப் போகாமல் இருப்பதாகச் சொல்லப்படும் ‘அசலான தூய்மை’, வேறொரு நோக்கத்தில்
இருந்து உருவாகி இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒரு
தெளிவான தந்திரம் இது. தனி நாடு, தனிக் கொடி, முதலமைச்சருக்கு பதிலாக ஒரு பிரதமரை
வைத்துக்கொள்ள விரும்புவது, கவர்னருக்குப் பதிலாக சாத்ர்-இ-ரியாசாத்தை
வைத்துக்கொள்வது, கூடுதல் அதிகாரம் மற்றும் ஆதரவைப் பெறுவது போன்றவற்றுக்காகத்தானே
ஒழிய, மக்களுக்கான நன்மைக்காகவோ, அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவோ அல்லது
பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை அடைவதற்காகவோ அல்ல. நியோ எலைட்டுகள் என்று
அறியப்படும் ‘நியோ ஷேக்’குகளின் தேவைகளுக்காகத்தான்.
 
வாக்கு வங்கியின் காவலாளியாகவே தொடர விரும்புபவர்கள்
தொடர்ந்து சொல்வார்கள், 370வது பிரிவு என்பது நம்பிக்கையின்பாற்பட்டது என்று.
அதற்கு மேல் சொல்லமாட்டார்கள். அவர்களை அவர்களே இப்படிக் கேட்டுக்கொள்வதில்லை:
நம்பிக்கை என்றால் என்ன? அதன் காரணம் என்ன? இந்திய அரசியலைமைப்புக்குள் இந்த மாநிலத்தைக்
கொண்டு வந்து அதற்கு கூடுதல் ஒளியுள்ள, கூர்மையான நம்பிக்கையைத் தரவேண்டாமா?
இப்படித் தருவதன் மூலம் இதை கூடுதல் நீதியும் அர்த்தமும் கொண்டதாக்கவேண்டாமா?
 
இதே ரீதியில்தான், ‘வரலாற்றுத் தேவையும் சுயாட்சியும்’
இவர்களால் அணுகப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் இவற்றுக்கான பொருள் என்ன?
வரலாற்றுத் தேவை என்பது, காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதி என்று, அதீதமாகச்
செலவு செய்து ஒரு கையால் ஒரு காகிதத்தில் எழுதித் தருவதும், நிதர்சனத்தில்,
இன்னொரு கையால் தங்கத் தட்டில் எழுதித் தருவதுமா? சுயாட்சி என்றால் என்ன? அல்லது 1953க்கு
முன் அல்லது 1953க்குப் பின் என்று சொல்லப்படும் நிலை உணர்த்துவதுதான் என்ன?
காஷ்மீரத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்ல இது வழிவகுக்காதா: ‘நீ அனுப்பு, நான்
செலவு செய்கிறேன். ஊழல் மிகுந்த, உணர்ச்சியற்ற, தன்னலம் மிகுந்த குழு ஒன்றை நான்
உருவாக்கினாலும், நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாகி டாமோக்ளெஸ்ஸின் வாள் உன் தலை
மீது தொங்கினாலும், நீ இல்லை என்று சொல்லக்கூடாது.’
 
(அடுத்த இதழில்
முடிவடையும்)

Posted on Leave a comment

சாவர்கர்: அந்தமான் சிறை அனுபவங்கள் – சிறப்புக் கட்டுரை

சாவர்க்கரைப் போல தமிழ்நாட்டில் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட,
வேண்டுமென்றே மட்டம்தட்டிச் சித்திரிக்கப்பட்ட வேறொரு தலைவர் இருக்கமுடியாது. எந்த
அளவுக்கென்றால், கருணாநிதியைத் தவிர வேறு எதையுமே அறிந்துகொள்ளாத திமுகவினர் கூட சர்வசாதாரணமாக
சாவர்க்கரை பிரிட்டிஷாரின் கால் நக்கிப் பிழைத்தவர் என்றும், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக்
கேட்டவர் என்றும் சொல்லும் அளவுக்கு. உண்மையில் எதையும் தீவிரமாக அதன் வரலாற்றுப் பின்புலத்துடன்
அறிந்துகொள்ளும் நோக்கற்றவர்களின் செயலே, இந்த மன்னிப்பு என்கிற வார்த்தையை மட்டும்
கொண்டு சாவர்க்கரை அணுகுவது. சாவர்க்கரின் வாழ்க்கையை அணுகிப் பார்த்தால் தெரியும்,
இந்தியாவின் மிகச் சிறந்த தேச பக்தர்களில், தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்களில்
சாவர்க்கர் எத்தனை முக்கியமானவர் என்று.


அவரது வாழ்க்கை முழுக்கவே போராட்டம் நிறைந்தது. எந்த நிலையிலும்
தன்னம்பிக்கையைக் கைவிடாமல், ‘இதெல்லாம் எதற்காக’ என்ற எதிர்மறைச் சிந்தனைக்குத் தன்னை
இழந்துவிடாமல், பாரத அன்னைக்கு சுதந்திர மலரை அணிவிப்பது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர்
சாவர்க்கர். பிரிட்டிஷாரால் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரே தலைவர். அதாவது
50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தன் மனைவியை, குடும்பத்தைப் பிரிந்து
அந்தமான் சிறையில் வாடியவர். இவர் மட்டுமல்ல, இவரது சகோதரர்களும் இந்திய சுதந்திரப்
போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றார்கள்.
மெர்சிலி தீவில் அவர் தப்பிக்க முயன்றதெல்லாம் நம்ப முடியாத
அளவுக்கான சாகசம். அந்தமான் சிறைத் தண்டனை குறித்து அவர் எழுதிய புத்தகம்
‘Transportation for life’ தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. (மொழிபெயர்ப்பு: எஸ்.ஜி.
சூர்யா, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை 650 ரூ). இந்தப் புத்தகம் 1927ல் மராட்டியில் முதலில் வெளியானது.
இது தொடராக வெளிவரவே பல இன்னல்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. பெரும் போராட்டத்துக்குப்
பிறகே ஆங்கிலத்தில் வெளியானது. 90 வருடங்கள் கழித்து முழுமையாகத் தமிழில் வெளியாகிறது.
இவரது நண்பரான வ.வெ.சு. ஐயர் இதன் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தக் காலகட்டங்களில் வெளியிட்டதாகத்
தெரிகிறது. முழுமையாக வெளியிட்டாரா, சில பகுதிகளை மட்டும் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.
சாவர்க்கரின் வாழ்க்கை அல்ல, அவரது புத்தகங்கள் கூட இப்படித்தான்
வெளியாகின. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று முதன்முதலில் சிப்பாய்க் கலகத்தை விளித்தவர்
இவரே. அந்தப் புத்தகம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டே வெளியானது. அவரது கையெழுத்துப்
பிரதி இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு அத்தனை முயன்றது. நாடு
நாடாகச் சென்ற அந்தப் பிரதி, மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளி வந்ததை ஒரு சாகசப்
பயணம் என்றே சொல்லலாம். (தமிழில் எரிமலை என்கிற தலைப்பில் அல்லயன்ஸ் வெளியீடாகக் கிடைக்கிறது.)
இப்படி வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளிடையேயும் போராட்டங்களிடையேயும்
வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பை அவர் சிறைக்குச் சென்ற உடனே கேட்கவில்லை.
12 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை. எப்படிப்பட்ட சிறைத் தண்டனை? ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’
புத்தகம் அதனை விவரிக்கிறது. ஆறு மாதங்கள் கைகளிலும் கால்களிலும் சங்கிலி மாட்டப்பட்டு
கொடுமைப்படுத்தப்படுகிறார். செக்கிழுக்க வைக்கப்படுகிறார். பாரிஸ்டர் படிப்பு படித்தவர்
கயிறு திரிக்க வைக்கப்படுகிறார். தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். தூக்குமேடைக்கு
எதிரே இவருக்கு அறை தரப்படுகிறது. தினம் தினம் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும்
கைதிகளின் துன்பம் இவருக்குத் தரும் பயம் மற்றும் வேதனையின் மூலம் இவரது மனச்சிதைவைத்
துரிதப்படுத்த பிரிட்டிஷ் அரசு முயல்கிறது. தினம் தினம் யாரோ ஒரு கைதி தூக்குப் போட்டுத்
தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் அல்லது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
சில கைதிகளுக்குத் தனிமைச் சிறையின் தாள முடியாத துன்பம் மனநலச் சிதைவைக் கொண்டு வருகிறது.
இத்தனைக்கும் மத்தியில் தன் வாழ்க்கை குறித்த சிந்தனைகளுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும்
இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்தையும் எண்ணி சாவர்க்கர் தவிக்கிறார். ஏன் இந்த
வாழ்க்கை என்கிற எண்ணம் தலையெடுக்கிறது. ஆனால் மிகப் பெரிய போராட்டத்துடன் அதிலிருந்து
மீள்கிறார். தற்கொலை என்பது தீர்வல்ல என்று அனைவரிடம் விவரிக்கிறார்.
சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணமும் எப்பாடுபட்டாவது சிறையில்
இருந்து தப்பிப்பது என்பதை நோக்கியே இருக்கவேண்டும் என்று மிகத் தீர்மானமாகச் சொல்கிறார்
சாவர்க்கர். ஏன்? வெளியில் சென்று, தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் தேச சேவை செய்யலாம்
என்பதே அவரது எண்ணம்.
இந்தப் புத்தகத்தில் என்னை அசர வைத்த ஒரு விஷயம். சாவர்க்கரின்
எந்த ஒரு எண்ணமும் எல்லாக் காலத்திலும் தேச சேவை என்ற ஒன்றை நோக்கியே உள்ளது. பின்பு
சாவர்க்கர் கேட்டதாகச் சொல்லப்படும் மன்னிப்பும் கூட இதன் பின்னணியிலேயே உள்ளது. விடுதலை
கிடைத்து வீட்டுக்கு வந்து சுக வாழ்க்கை வாழவில்லை சாவர்க்கர். நிபந்தனையின் பேரில்
வெளிவரும் சாவர்க்கர், இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பில்
(ரத்னகிரிக்குள் மட்டும் நடமாடும் அனுமதியோடு) வைக்கப்படுகிறார். பின்னரும் சுதந்திரப்
போராட்டத்துக்குத் தேவையான, தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார். எந்த நேரத்திலும்
பிரிட்டிஷ் அரசு தன்னைக் கைது செய்து மீண்டும் அந்தமான் இருட்டுச் சிறைக்குள் தள்ளும்
என்று தெரிந்திருந்தும் இதனைச் செய்கிறார்.
அந்தமான் சிறையில் இவருடன் அடைக்கப்பட்டிருக்கும் பல தேச பக்தர்கள்
பற்றிய குறிப்புகளை எல்லாம் நினைவில் வைத்திருந்து இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார்.
சாவர்க்கரின் நினைவாற்றலும் நன்றி உணர்ச்சியும் அபாரமானவை. இப்புத்தகத்தின் ஒவ்வொரு
வரியிலும் அதனை உணரலாம். அதேபோல் சாவர்க்கரின் வாதத்திறமை உலகப் பிரசித்தி பெற்றது.
இந்த நூல் முழுக்க சாவர்க்கர் தனது கருத்துகளை அதன் பின்னணியோடும் தர்க்க ஆதாரத்தோடும்
மிகத் தெளிவாக முன்வைக்கிறார். அதுமட்டுமல்ல, தன் கருத்துக்கான எதிர்க்கருத்தைச் சொல்லி
அது ஏன் சரியாக இருக்கமுடியாது என்பதை விவரிக்கிறார். மகாத்மா காந்தி ஜி கொலை வழக்கில்
அவர் தந்த எழுத்துபூர்வமான சாட்சியத்திலும் இதே போன்ற விவரணைகளைக் காணலாம். எந்தக்
காலத்திலும் அவர் தன் கருத்துகளை இப்படியான தர்க்க நியாயம் இல்லாமல் உதிர்த்ததே இல்லை.
அந்தமான் சிறைக்குச் செல்லும்போது சாவர்க்கரின் முன்பு பல சவால்கள்
இருந்தன. முதலில் தன்னை மீட்டுக்கொள்வது, பின்பு அங்கிருக்கும் கைதிகளுக்கு நம்பிக்கை
ஊட்டுவது, கைதிகளின் தற்கொலைகளை நிறுத்துவது, ஹிந்துக் கைதிகள் முஸ்லிம் கைதிகளால்
நடத்தப்படும் விதத்தை மாற்றுவது, பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்பது, அங்கிருக்கும்
கைதிகளுக்கு எழுத்தறிவிப்பது, அந்தமான் தீவில் சுதந்திரக் கனலைப் பரப்புவது, கட்டாயப்படுத்தி
அல்லது வேறு வழியின்றி அல்லது ஆசை காட்டி மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக் கைதிகளை தாய்மதம்
திரும்ப வைப்பது, ஹிந்துக் கைதிகளிடையே அநியாயமாகப் புகுந்துவிட்ட சாதியக் கொடுமைகளை
அகற்றுவது, அந்தமான் சிறையின் நிலையை இந்தியாவில் இருக்கும் அரசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும்
பத்திரிகைகளுக்கும் தெரிவித்து சிறையின் நிலையை முன்னேற்ற உதவுவது, இந்தியாவில் நடக்கும்
சுதந்திரப் போராட்டங்களுக்குத் தன்னால் இயன்ற கருத்துகளைச் சொல்வது, எப்படியாவது இந்தச்
சிறையில் இருந்து தப்பித்து இந்தியா சென்று இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடுவது
– இத்தனை எண்ணங்களுடன் அலைக்கழிகிறார் சாவர்க்கர்.
உங்களால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தையும் செய்து முடிக்கிறார்.
ஒருவர் ஏன் தலைவர் என்று கொண்டாடப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் இவற்றில் உள்ளன.
இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். இதனைத் தமிழில் கொண்டு வந்த ஒவ்வொருவரும், அதற்கு உதவிய
ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். பல ஆண்டுகள் நீடித்து நிற்கப் போகும் ஆவணம் இது.
அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டபோது பிரிட்டிஷாரின்
ஒரே நோக்கம், எக்காரணம் கொண்டும் சாவர்க்கர் உயிருடன் இந்தியா மீண்டுவிடக்கூடாது என்பதாகவே
இருந்தது. அஹிம்சைப் போராட்டங்களை எப்படியும் எதிர்கொண்டுவிடலாம் என்று நம்பிய பிரிட்டிஷ்
அரசு, புரட்சிப் போராட்டத்தை எதிர்கொள்ள அஞ்சியது. அதை ஒடுக்குவதே ஒரே வழி என்று புரிந்துகொண்டது.
அதுவும் வெறும் வாய் வார்த்தை பேசி அரசை மிரட்ட மட்டுமே செய்பவர் அல்ல சாவர்க்கர்,
செயலையும் நிகழ்த்திக் காட்டுபவர் என்பது புரிந்தபோது, அவரை இந்தியாவுடனான அனைத்துத்
தொடர்புகளில் இருந்தும் விலக்கி வைப்பது நல்லது என்ற முடிவுக்கு வருகிறது.
ஆனால் அந்தமான் சிறை அனுபவம் சாவர்க்கரை அவரளவில் பெரிய தலைவராக
உயர்த்துகிறது. (அதேசமயம் மக்கள் தலைவர் என்னும் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விலகவும்
செய்துவிட்டது என்பது சோகமான வரலாற்று நிகழ்வு.) பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட அந்தமானுக்கு
வந்தால் சாவர்க்கரைச் சந்திக்காமல் செல்வதில்லை. எல்லோருடனும் உரையாடத் தயாராக இருக்கும்
சாவர்க்கர், அனைவரிடமும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி விவாதிக்கிறார். சாவர்க்கரின்
பரந்துபட்ட அறிவும், இலக்கியப் பரிட்சயமும், உலக நாடுகள் பற்றிய வரலாற்று ஞானமும்,
அவரால் எத்தகைய எதிர்க்கேள்விகளையும் எதிர்கொள்ள வைக்கின்றன. இந்த நூலில் அவை அனைத்தும்
மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதமாற்றம் செய்யப்படும் ஹிந்துக் கைதிகள் பற்றிப் பேசும்போது
மிகத் தெளிவாக தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். தானாக மனம் உணர்ந்து மதம் மாறுபவர்களைப்
பற்றி சாவர்க்கருக்கு எந்தப் புகாரும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், கைதிகள்
முஸ்லீமாக மதம் மாறினால் அவர்களுக்குச் சிறையில் சில சுதந்திரங்கள் தரப்படும், ஜமேதாராகலாம்
என்பன போன்ற சலுகைகள் தரப்படுகின்றன. சிறையில் படும் கஷ்டங்கள் தாங்காமல் பலர் மதம்
மாறுகிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஹிந்துக்களிடையே உள்ள சாதி வேற்றுமை
மற்றும் சில மூட நம்பிக்கை. ஒருவன் ஒரு தடவை முஸ்லீம்களிடையே இருந்து உணவருந்தினாலும்
அவன் ஹிந்து அல்ல என்று முடிவு செய்து அவனை விலக்கி வைக்கிறார்கள். இதனால் அவன் தாய்
மதம் திரும்பும் வாய்ப்பே இல்லாமல் போய், முஸ்லீமாகவே ஆகிவிடுகிறான். அதுவும் ஒரு சக
ஹிந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் இது இன்னும் எந்த அளவுக்குப் போகும்
என்று சொல்வதற்கில்லை. சாவர்க்கர் இதையெல்லாம் எதிர்க்கிறார். முஸ்லீம்களுடன் உணவருந்திய
ஒருவருடன் இவரே அமர்ந்து உணவு உண்கிறார். பிறகு மெல்ல நான்கைந்து பேர் இவர்களுடன் சேர்ந்து
உணவு உண்கிறார்கள். பிறகு வேறு வழியின்றி அனைவரும் சேர்ந்து உணவு உண்கிறார்கள். இப்படியாக
ஒவ்வொரு செயலையும் தானே முன் நின்று செய்கிறார்.
முஸ்லிம் கைதிகள், குறிப்பாக பதான் – சிந்தி – பலூச்சி முஸ்லீம்கள்
(தமிழகம் மகாராஷ்ட்ரம் போன்ற இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள் இத்தனை கொடூரமானவர்கள்
அல்ல என்கிறார்) அடாவடி செய்யும்போது அதே போக்கில் ஹிந்துக் கைதிகளை அடாவடி செய்யத்
தூண்டுகிறார். இதனால் சிறையில் பெரிய பிரச்சினைகள் எழுகின்றன. மேலதிகாரிகளின் விசாரணையின்போது
எல்லாம் வெளிச்சத்துக்கு வர, இரு தரப்பு இந்த அடாவடிகளைச் செய்யக்கூடாது என்று முடிவாகிறது.
இதை ஒரு போராட்ட வடிவமாகவே சிறையில் செய்கிறார் சாவர்க்கர். ஹிந்துக் கைதிகளின் உணவை
வேண்டுமென்றே முஸ்லிம் கைதிகள் தொட்டுவிட்டு, அது தீட்டு என்பதால் ஹிந்துக் கைதிகள்
உணவை உண்ணாமல் இருக்க, அந்த உணவையும் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதே பாணியை
ஹிந்துக் கைதிகளை வைத்துச் செய்ய வைக்கிறார். வேறு வழியின்றி முஸ்லீம் கைதிகள் அமைதியாகிறார்கள்.
அதிகாலை நேரத்தில் தொழுகையால் வரும் பிரச்சினையையும் இப்படியே எதிர்கொள்கிறார். சங்கநாதம்
எழுப்பச் சொல்லி ஹிந்துக் கைதிகளைத் தூண்டுகிறார். முதல் உலகப் போரின்போது கெய்சர்
இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்ற செய்தியை முஸ்லீம் கைதிகள் பரப்ப, இவர் பதிலுக்கு
அவர் ஆர்யசமாஜி ஆகிவிட்டார் என்கிற செய்தியைப் பரப்பச் சொல்கிறார். உருதுவில் எழுதுவதே
மேன்மையானது என்கிற எண்ணத்தை உடைத்து, ஹிந்தியில் எழுதச் சொல்கிறார். இவையெல்லாம் சிறைக்குள்
அத்தனை இன்னல்களுக்குள் சாவர்க்கரால் செய்யப்பட்டவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
சிறையிலும் சிறைக்கு வெளியே அந்தமான் தீவிலும் தாய்மதம் திரும்புவதை
ஒரு சடங்காகவே செய்ய ஆரம்பித்தார் சாவர்க்கர். இதனால் திணறிப் போன பிரிட்டிஷ் அரசு,
சிறைக்குள் எந்த ஒரு மதத்தில் இருந்தும் இன்னொரு மதத்துக்கு மதம் மாற்றுவதைத் தடை செய்கிறது.
இதுதான் சாவர்க்கர் எதிர்பார்த்ததும்கூட!
மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரோடு முடியக்கூடியதல்ல, அடுத்தடுத்த
தலைமுறைகளில் ஒரு மதத்துக்கான அடித்தளமாக மாறும் இயல்புடையது என்கிறார். குற்றவாளியாகவே
இருந்தாலும் ஒருவர் ஹிந்து மதத்தில் தொடரவேண்டிய அவசியத்தை, அதன் அடுத்தடுத்த தலைமுறைகளை
மனதில் வைத்துச் சொல்கிறார். இதற்காக உலக வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை முன்வைக்கிறார்.
நூல் முழுக்க இப்படித்தான், எதிர்காலத்தில் என்ன நடக்கும், அதற்கான உலக வரலாற்று ஆதாரங்கள்
என்ன என்பதோடு நம் புராணங்களின் ஆதாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.
சிறைக்குள் எழுத்தறிவிக்க சாவர்க்கர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப்
பற்றிச் சொல்லவேண்டுமானால், எழுத்தறிவிப்பவன் இறைவன் என்றால் இப்படி எழுத்தறிவித்தவன்
அதற்கு மேல் என்றே சொல்லவேண்டும். மூன்று ஆர் (Reading, wRiting, aRithmetic) என்பதை
ஒருவன் எப்பாடுபட்டாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதில் சாவர்க்கருக்கு இருந்த
ஆர்வம் அளப்பரியது. சிறையின் சுவர்களையே காகிதமாக்கி, சிறையில் கிடைக்கும் ஒரு ஆணியை
மறைத்து வைத்து அதிலேயே தன் கருத்துகளை எழுதுகிறார். புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்,
புதிய கவிதை என்று எழுதுகிறார். வேறு அறைக்கு மாற்றப்பட்டால், இந்த அறை மற்ற கைதிகளுக்கு
ஒரு புத்தகமாகிறது. மாற்றப்பட்ட சிறையிலும் இப்படி வேறு ஒன்றை எழுதுகிறார்.
சிறைக் கைதிகளுக்குள்ளே ரகசிய முறையில் செய்திகளைப் பரிமாற சாவர்க்கர்
செய்யும் விஷயங்கள் எல்லாம் கற்பனைக்குள் அடங்காதவை. code முறையில் பேசிக்கொள்வது,
பானைத் துண்டுகளில் செய்திகளைப் பரப்புவது, கிடைக்கும் காகிதங்களில் எழுதி சுருட்டி
எரிந்து பரப்புவது என்று என்னவெல்லாமோ செய்கிறார். கைதிகளையும் அதில் பங்கெடுக்க வைக்கிறார்.
முதல் உலகப் போரின்போது சிறைக் கைதிகளுக்கு அரசியல் அறிவைப்
புகட்ட வாரம் தோறும் பிரசங்கம் செய்கிறார். அவர்களுடன் விவாதிக்கிறார். உலக அரசியல்
அறிவில்லாமல் சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்று விளக்குகிறார். அதே
சமயம் ஒரு கனிவான ஆசிரியர் போல அவர்களுக்கு போதிக்கிறார். அவசரப்படுவதில்லை. மெல்ல
மெல்ல சொல்லித் தருகிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது, இரண்டு ராஜா சண்டை
போட்டுக்கொள்வது போலத்தான் என்று யோசித்துக்கொண்டிருந்த கைதிகளுக்கு அரசியல் சொல்லித்
தருகிறார். இதைத் தொடர்ந்து சிறையில் நூலகம் தொடங்குகிறார். தன் சகோதரர்கள் மூலம் புத்தகங்களைச்
சிறைக்குக் கொண்டு வருகிறார். சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இதை எதிர்த்தாலும்,
கிண்டலாகப் பேசினாலும், உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று, இதை வெற்றிகரமாகச் செய்து காண்பிக்கிறார்
சாவர்க்கர்.
முதல் உலகப் போரின்போது கெய்சரின் படையினர் அந்தமான் சிறையைத்
தகர்த்து சாவர்க்கரை மீட்கப் போகிறார்கள் என்கிற புரளி வருகிறது. அந்தமான் கடற்கரையில்
கிடைக்கும் வெடிகுண்டு ஒன்றை வைத்து இந்த முடிவுக்கு வருகிறார்கள் பிரிட்டிஷ் சிறை
அதிகாரிகள். இதையெல்லாம் நம்பவேண்டாம் என்று எத்தனையோ சொன்னாலும், சாவர்க்கரை பெரிய
அளவில் கண்காணிக்கிறது பிரிட்டிஷ் அரசு.
காந்திஜியைப் பற்றிய இரண்டு அல்லது மூன்று குறிப்புகள் இந்த
நூலில் உள்ளன. மகாத்மா என்றே குறிப்பிடுகிறார் சாவர்க்கர். ஆங்கில மொழிபெயர்ப்பில்
இப்படி வருகிறதா அல்லது மராட்டியிலேயே இப்படித்தான் இருந்ததா என்பது தெரியவில்லை. மகாத்மா
என்று குறிப்பிட்டாலும் காந்தியின் தவறான அகிம்சை போதனைப் புரிதல்களைக் கிண்டலுக்கும்
விமர்சனத்துக்கும் உள்ளாக்குகிறார் சாவர்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தைவிட நமக்குத்
தேவையானது பொறுப்புள்ள ஒத்துழைப்பு (
*Responsive cooperation) என்பதுதான் என்று வாதிடுகிறார்.
ஐந்து ஆண்டுகள் அந்தமான் சிறைத் தண்டனைக்குப் பிறகு சிறைக் கைதிகளுக்குத்
தரப்படும் ஒரு உரிமை, அந்தமான் தீவில் குடும்பத்துடன் வசிக்கும் உரிமை. அது யாருக்குத்
தரப்பட்டாலும் சாவர்க்கருக்குத் தரப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பிரிட்டிஷ்
அரசு. ஒரு வழியாக அந்த அனுமதி கிடைக்கும்போது அங்கே சென்றும் சுதந்திரப் போராட்டக்
கனலைப் பரப்புகிறார். அவற்றையெல்லாம் புல்லரிப்பு இல்லாமல் படிக்கமுடியாது.
சிறைக்குள் வரும் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் சாவர்க்கருக்கு
விடுதலை என்கிற செய்தி வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. சிறையே இதனால் சந்தோஷம் கொள்கிறது.
ஆனால் ஒவ்வொரு முறையும் சாவர்க்கருக்கு மட்டும் விடுதலை தரப்படாது. புத்தகத்தைப் படிக்கும்
நமக்கே இது பெரிய அசதியைக் கொண்டு வரும் என்றால் அங்கே வாழ்ந்தவர்களின் நிலையை நினைத்துப்
பாருங்கள்.
முதல் உலகப் போரை ஒட்டி பொது மன்னிப்பு என்கிற விஷயம் எழுகிறது.
சிறையில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரையும் இந்தப் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்குமாறு
சாவர்க்கர் சொல்கிறார். அனைவரையும் விண்ணப்பிக்க வைக்கிறார். அப்படி விண்ணப்பித்தவர்களுள்
ஒருவரே சாவர்க்கர். அன்று பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளிப்பது ஒன்றே வழி. அந்த வழியையே
சாவர்க்கர் பின்பற்றினார். அதில் இருக்கும் வரிகளை மேற்கோள் காட்டி, சாவர்க்கர் இந்த
அளவுக்குப் போனார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. The Mighty alone can afford to
be merciful and therefore where else can the prodigal son return but to the
parental doors of the Government? சாவர்க்கரின் கவிதை தோய்ந்த மொழி எப்போதுமே அப்படியானதுதான்.
உருவகமும் உலகப் புகழ்பெற்ற காவியங்களின் வரிகளும் முழுக்க இழையோடித்தான் அவரால் எழுதமுடியும்.
இதில் கவனிக்கவேண்டியவை என்ன? ஒன்று, சாவர்க்கர் எல்லாக் கைதிகளையும் பொதுமன்னிப்புக்கு
விண்ணப்பிக்கச் சொல்கிறார். காரணம், சிறையில் உழன்று அழுகிச் சாவதில் பொருளே இல்லை
என்றும், ஒரு புரட்சியாளன் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே போகவேண்டும் என்றே
நினைக்கவேண்டும் என்றும், அதற்கான காரணம் அப்படி வெளியே செல்வது பாரத அன்னைக்கு சுதந்திர
மலரைச் சூட்டப் போராடுவதற்காகத்தான் என்றும் பல முறை பதிவு செய்திருக்கிறார். அனைவருக்கும்
பொது மன்னிப்பு தரப்பட்டாலும் சாவர்க்கர் சகோதர்களுக்கு மட்டும் அந்த நேரத்தில் தரப்படவில்லை!
இரண்டாவதாகக் கவனிக்கவேண்டியது, மிகத் தெளிவாக சாவர்க்கர் சொல்கிறார், “என் பொருட்டு
ஒருவேளை அனைவருக்கும் பொது மன்னிப்பு மறுக்கப்படும் என்றால், மற்ற அனைவருக்கும் பொது
மன்னிப்பு வழங்குங்கள், என்னைச் சிறையிலேயே வையுங்கள், மற்றவர்களுக்குத் தரப்படும்
மன்னிப்பு எனக்குத் தரப்படுவதைப் போன்றதே” என்கிறார். இதை வெறும் வாய் வார்த்தையாகச்
சொல்லவில்லை. இந்தப் புத்தகத்திலேயே இதைப் பல இடங்களில் பல கட்டங்களில் சொல்கிறார்.
மூன்றாவதாக, சிறையில் இவரைச் சந்தித்து உரையாடிய பிரிட்டிஷ் அதிகாரி சர் ரெஜினால் க்ரடாக்
சொல்வது: “கருணை மனுவுக்குப் பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செய்தது குறித்த
எவ்வித குற்ற உணர்ச்சியும் இவரிடம் இல்லை” என்பது. நான்காவதாக, அந்தமான் சிறையில் இருந்து
2 மே1921ல் மாற்றப்பட்டு இவர் ரத்னகிரியிலும் எரவாடா சிறையிலும் மூன்று ஆண்டுகளுக்குச்
சிறையில் வைக்கப்படுகிறார். பின்னர் ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது
என்கிற நிபந்தனையுடன் ஐந்து ஆண்டுகள் ரத்னகிரியில் கழிக்கிறார். பின்னரும் 1937 வரை
தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார். ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தில் தனது
பங்கைத் தீவிரமாகவே செலுத்துகிறார். எனவே சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டார் என்பது,
ஒற்றை வரி அரசியலைச் செய்பவர்களுக்கான வெற்றரசியல் மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
அதிக காலம் சிறையில் இருந்தவர் சாவர்க்கரே. அதுவும் கொடும் சிறை, தனிமைச் சிறை. இதைப்
புரிந்துகொள்ள தேசம் பற்றிய எண்ணமும், சுதந்திரப் போராட்டம் பற்றிய புரிதலும் வேண்டும்.
அந்தமான் சிறையிலிருந்து ரத்னகிரிக்கு மாற்றப்படும் சாவர்க்கர்
சகோதரர்கள் பாரத மண்ணில் கால் பதிக்கும்போது சாவர்க்கரின் வரிகள் பெரும் கவித்துவம்
பெறுகின்றன. நாடி நரம்பெல்லாம் தேசபக்தி உள்ளவர்களால் மட்டுமே அப்படி எழுத முடியும்,
அதைப் புரிந்துகொள்ள முடியும்.
சாவர்க்கர் எப்பேற்பட்ட சிந்தனையாளர், சுயமான தலைவர் என்பதற்கு
இந்த நூல் ஒரு ஆதாரம். இந்த நூலை வாசிக்காமல் போவது பெரிய இழப்பு. இன்னும் சொல்வதற்கு
எவ்வளவோ இருக்கின்றன. நூலை வாசித்தால் நான் சொல்வது புரியும். நான் இந்த நூலை ஆங்கிலத்திலும்
தமிழிலும் வாசித்தேன். எஸ்.ஜி. சூர்யாவின் மொழிபெயர்ப்பில் தமிழில் மிக அற்புதமாக வெளி
வந்திருக்கிறது. நண்பர் பாலாவும், நானும் இதை எடிட் செய்தோம். மிக முக்கியமான நூல்
இது. தவற விட்டுவிடாதீர்கள். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: அமேசான் | பிளிப்கார்ட் | என் எச் எம்

(வலம் 4 ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த விஜயதசமி நாளில் இந்தச் சிறப்புக் கட்டுரை வெளியாகிறது.)

Posted on Leave a comment

2019 தேர்தல் – தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வி | ஹரன் பிரசன்னா

பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு இடம் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) வெல்லாது என்று கணித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டைக் கணிக்கத் தவறிவிட்டன என்றுதான் தோன்றியது. துக்ளக்கின் இதயாவின் கணிப்புக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து ரங்கராஜ் பாண்டேவும் இதேபோன்ற கணிப்பை முன்வைத்தபோது ஆச்சரியமாகவும் பின்னர் இப்படித்தான் தீர்ப்பு வருமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. ஆனாலும் கடைசிவரை எப்படியும் பத்து இடங்களாவது என்.டி.ஏ வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரத் துவங்கிய ஒரு மணி நேரத்துக்கெல்லாம் எல்லாம் புரியத் தொடங்கியது.


ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத முதல் தேர்தல். அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் என்று பலமான கூட்டணி. இந்தியா முழுக்க மோடி அலை. ஆனாலும் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அசுர வெற்றி பெற்றிருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத நிலையில் நடக்கும் தேர்தல் என்பதால், அமமுக தனித்து நிற்கும் தேர்தல் என்பதால், தேர்தலுக்கு முன்பாகவே கணிக்கமுடியாது என்று சொல்லப்பட்டது. இது ஓரளவுக்கு இப்போதும் சரிதான். ஏனென்றால் இத்தனை வாக்கு வித்தியாசத்திலான திமுகவின் மிகப்பெரிய வெற்றியை யாருமே கணிக்கவில்லை.
அதேபோல் அமமுக, மநீம போன்ற கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக்கும் என்று கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதும் பொய்த்துப் போனது. மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பில்லை என்றே நான் நம்பினேன். அப்படித்தான் நடந்தது.
எல்லா முடிவுகளும் வந்துவிட்ட நிலையில் யோசித்துப் பார்த்தால்-

* பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இந்த வெற்றி ஸ்டாலினின் தொடர் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. இதனை பாஜக-அதிமுகவினர் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஸ்டாலினின் உழைப்பை அவர்கள் குறைவாக மதிப்பிட்டார்கள். என்னதான் மீம்கள் மூலம் கிண்டலடிக்கப்பட்டாலும் ஊர் ஊராக அவர் தைரியமாக மக்களிடம் சென்று பேசியது நிச்சயம் இந்த வெற்றிக்குப் பங்களித்திருக்கிறது. இதிலிருந்து பாஜகவுக்குப் படிக்க நிறைய இருக்கிறது என்பதை எழுத வேண்டியிருப்பதே பாஜகவுக்கு எவ்வளவு அவமானம் என்பதை பாஜகவினர் உணர வேண்டும். 

* காங்கிரஸ் தனித்துப் பெரிய பூஜ்ஜியம்தான் என்றாலும் அது திமுகவுடன் சேரும்போது பெரிய மாற்றம் நிகழவே செய்கிறது. 

* தமிழ்நாட்டில் கூட்டணி ஏற்படுத்திய கையோடு ஒரு வெற்றியைப் பெற்றதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எண்ணிக்கொண்டுவிட்டது. 

* கூட்டணிக்காகப் பெரிய அளவில் இங்கே பிரசாரம் செய்யப்படவில்லை. 

* கூட்டணியைத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது மக்களிடம் பரவும். இங்கே தலைவர்களிடம் ஒரு இணக்கமே இல்லை 

* எடப்பாடி பழனிசாமி ஒருவரைத் தவிர மற்ற அனைவரின் பிரசராமும் ஏனோதானோ என்றே இருந்தது. குறிப்பாக பாஜக தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்வதை விட்டுவிட்டுத் தங்கள் தொகுதிக்குள் மட்டுமே இருந்துகொண்டுவிட்டார்கள். 

* அதிமுகவின் பிரசாரமும் பெரும்பாலும் சட்டசபை இடைத் தேர்தல்களில் திமுகவைத் தடுத்து நிறுத்துவதை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிட்டது. 

* தங்கள் தரப்பை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதைத் தாண்டி, எதிர்த்தரப்பை எப்படி இல்லாமல் ஆக்குவது என்ற போராட்ட நிலைக்குள் எந்நிலையிலும் இக்கூட்டணியின் பிரசாரம் செல்லவே இல்லை. 

* சனாதன தர்மத்துக்கு எதிரான போர் என்று திமுக கூட்டணி அறிவித்தபோது அதை பாஜக கூட்டணி சரியாக எதிர்கொள்ளவில்லை. இதனால் ராமநாதபுரத்தில்கூட பாஜகவால் வெல்ல முடியாமல் போய்விட்டது. 

* திடீர்க் கூட்டணி தந்த சிக்கல்களை பாஜக கூட்டணியால் தாண்டமுடியவில்லை.

இனி என்ன செய்யலாம்?
ஒரு தேர்தலுக்கு சற்று முன்பு மட்டுமே கூட்டணி உருவாவதால் வரும் சிக்கல்கள், எப்போதுமே பாஜக இருக்கும் அணியைத்தான் பாதிக்கின்றன. எனவே பாஜக தனது கூட்டணியை வெகு முன்பே உருவாக்க வேண்டும். இதனால் சந்தர்ப்பவாதத் திடீர்க் கூட்டணி என்ற மாயையை உடைக்கலாம்.
2014 தேர்தலில் பாஜக மூன்றாவது அணியாகப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தக் கூட்டணி தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் வந்திருக்கும். ஆனால் தமிழகக் கட்சிகளுக்குப் பொறுமை இல்லை. தொடர்ச்சியான வெற்றி அதிலும் உடனடியான வெற்றி என்ற மாயையில் சிக்கி, அவர்கள் அக்கூட்டணியை உடைத்தார்கள். இன்றாவது அத்தவறைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
இக்கூட்டணியில் யாரால் யாருக்கு நஷ்டம் என்ற ஆய்வுகள் இனி வெள்ளம் போலப் பாயும். அதைக் கண்டுகொள்ளாமல் இக்கூட்டணி தொடரவேண்டும். இத்தேர்தலில் நடந்திருக்கும் ஒரு நல்ல விஷயம், இடைத் தேர்தல்களில் திமுக 13 இடங்களை வென்றிருப்பதற்கு இணையாக அதிமுகவும் 9 இடங்களில் வென்றிருப்பதுதான். ஸ்டாலின் முதல்வர் ஆவதை மக்கள் விரும்பவில்லை என்பதை இந்த முடிவு மெய்ப்பிக்கிறது. இப்படிச் சொல்வதை திமுகவால் நிராகரிக்கமுடியாது. ஏனென்றால், மக்களவைத் தேர்தலில் அசுர வெற்றி பெற்றிருக்கும் அதே நேரத்தில், அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தேர்தல்களில் ஏன் திமுக வெல்லவில்லை என்பதை விளக்குவது திமுகவுக்குக் கடினம். 22 இடங்களையும் திமுக வென்றிருக்குமானால் இந்நேரம் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராகி இருப்பார். அப்படி நடக்கவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லதாக இப்படி அமைந்திருக்கிறது. அதாவது பாஜக கூட்டணியில் இருந்தாலும், மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாம் புரிந்துகொள்ளலாம். எனவே யாரால் யார் தோற்றார்கள் என்பதைப் புறம்தள்ளிவிட்டு, இக்கூட்டணி தொடரவேண்டும்.
மேலும் இக்கூட்டணி தொடர்ந்தே ஆகவேண்டும் என்பதற்கான இன்னொரு காரணம், அனைத்துக் கட்சிகளுக்கும் வேறு வழி இல்லை என்பது. பாஜகவால் தனித்து இப்போதைக்கு வெல்ல முடியாது. அன்புமணிக்கு இருக்கும் முதல்வர் கனவின் நேரடிப் போட்டியாளர் ஸ்டாலின் என்பதால், அவருடன் கூட்டணி சேர்வது, தனது கனவைக் கைவிடுவதற்குச் சமம். எடப்பாடி அரசு அடுத்த தேர்தலிலும் அமையவேண்டும் என்றால் கூட்டணி இல்லாமல் அது அதிமுகவுக்கு சாத்தியமே இல்லை. தேமுதிக மீண்டும் திமுகவுடன் சேருமானால், அக்கட்சி இன்னொரு மதிமுகதான் என்று உறுதி செய்யப்பட்டுவிடும். இந்நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு, இக்கூட்டணியைத் தொடர்ந்துகொண்டே எப்படி வெல்வது என்று யோசிப்பதுதான்.
இக்கூட்டணி எவ்விதச் சிக்கலும் இல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடருமானால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சட்டசபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு முடிக்கப்பட்டுக் கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கவேண்டும். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றிப் பேசுதலை அதிகம் செய்யவேண்டும். இவையெல்லாம் மக்களிடம் ஒரு இணக்கத்தைக் கொண்டு வரும்.
மோடியின் அலை இந்தியா முழுக்க வீசிக்கொண்டிருக்க, தமிழ்நாட்டில் மட்டும் அந்த அலை இல்லாமல் போயிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகப் புகுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. தினம் எழுந்தால் ஏதேனும் ஒரு போராட்டம், ஏதேனும் ஒரு துரோகம் கண்டுபிடிப்பு என்றே ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள், போராளிகள் என்ற முகத்திரையில் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இதைத் தீவிரமாகத் தடுக்க பாஜக தரப்பு தவறிவிட்டது. இதனால்தான் கோவையில்கூட சி.பி. ராதாகிருஷ்ணனால் வெல்ல முடியவில்லை.
இனி வரும் ஐந்து ஆண்டுகளில் இது இன்னும் தீவிரமாகும். இப்படி தமிழ்நாட்டைப் போராட்டக் களமாகவே வைத்திருப்பது தேர்தலில் உதவுகிறது என்று ரத்தச்சுவை கண்டுவிட்ட கட்சிகள், இதையே இன்னும் தீவிரமாக முன்னெடுக்கும். பாஜக-அதிமுக கூட்டணி இதை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளவேண்டும்.
இந்திய எதிர்ப்பாளர்களுக்கு லாவணி பாடிக்கொண்டிருக்காமல் அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் மத்திய அரசு வைத்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது. இனியாவது பாஜக தன்னிடம் உள்ள அரசின் பலத்தையும் அதிகாரத்தின் பலத்தையும் புரிந்துகொண்டு, இந்திய நாட்டுக்கு எதிரான பிரசாரங்களை நியாயமாகக் கையாளுவது நல்லது. இல்லையென்றால் பிரிவினைவாதம் மிக எளிதாக மக்களிடம் பரப்பப்படும். இப்போதே நாட்டுப்பற்று என்பது ஒரு கிண்டலுக்குரிய விஷயம் என்று தமிழ்நாட்டு மக்கள் மனதில் விதைக்கப்பட்டாகிவிட்டது.
வலுவான, மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான மாநிலத் தலைமையுடன் பாஜக, தனது கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டால் தமிழ்நாட்டிலும் பாஜகவின் கொடி பறக்கும் நாள் தூரத்தில் இல்லை. தான் செய்த நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்வது, இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை உடைப்பது, பாஜகவுக்கு எதிரான பொய்களைத் தோலுரிப்பது, இவற்றையெல்லாம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கட்சிக்குப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றை பாஜக பெரிய அளவில் செய்வது முக்கியமானது. தனது இடம், தனது ஆதரவாளர்களின் இடம், தனது செல்வாக்கு, தனது தொகுதியில் தனது வெற்றி என்று இயங்கினால், இதேபோன்ற தோல்விகள்தான் காத்திருக்கும்.
கூட்டணி அமைப்பது நிச்சயம் ஒரு பலமே. ஆனால் அந்த பலம் மட்டுமே வெற்றியைக் கொண்டு வந்துவிடாது. மோடி அலை இருந்தும், நல்ல கூட்டணி இருந்தும், இந்தியா முழுக்க சூறாவளி பிரசாரம் செய்த மோடியின் உழைப்பே, தமிழ்நாட்டு பாஜகவுக்கு நல்ல எடுத்துக்காட்டு. அயராத உழைப்பு, வலுவான பிரசாரம், எதிர்ப்புக் குரலுக்கான தீவிரமான பதில் – இவற்றை மட்டுமே நம்பித் தேர்தலை எதிர்கொள்வது நல்லது. அப்போதுதான் அமைக்கப்படும் கூட்டணியின் பிரம்மாண்டத்துக்கு நியாயமான வெற்றி கிடைக்கும்.
ஸ்டாலின் 2014 தேர்தலிலும் சரி, 2019 தேர்தலிலும் சரி, தொடர்ந்து மக்களிடம் சென்று பேசினார். அவருக்குச் செய்யப்பட்ட கேலிகள், கிண்டல்கள் என எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தனது பலவீனத்தை இப்பிரசாரத்தின் மூலம் அவர் கடந்தார். ஆந்திராவில் இதே பாணியைப் பின்பற்றி ஜெகன்மோகன் ரெட்டி வென்றிருக்கிறார். அதாவது மக்களிடம் தொடர்ந்து சென்று உரையாடினால் அவர்கள் உங்களை நம்புவார்கள். அவர்களிடம் நிச்சயம் உங்களுக்கு எதிரான கேள்விகள் இருக்கும். நீங்கள் பதில் சொல்லமுடியாமல் போகலாம். ஆனாலும் தொடர்ந்து மக்களிடம் உரையாடினால் அவர்கள் நெருங்கி வருவார்கள். ஸ்டாலினுக்கு இது நடந்திருக்கிறது. ஸ்டாலினுக்கே நடந்திருக்கிறது. எனவே பாஜக தன்னை தமிழகத்தில் எப்படிப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கான பாதை காத்திருக்கிறது. பயணம் மட்டுமே நிகழவேண்டும்.
Posted on Leave a comment

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் | ஹரன் பிரசன்னா

நம் மரபில் ஆசிரியர்களுக்கான மதிப்பு
என்பது மிக உயர்ந்தது. தொன்றுதொட்டே அவர்கள் குருவென மதிக்கப்பட்டு தெய்வத்துக்கு இணையாகப்
போற்றப்பட்டவர்கள். குரு என்பவர் யார் ஒருவராகவும் இருக்கமுடியும். இன்றைய சமூகத்தில்
நாம் குரு என்று நினைப்பது நம் ஆசிரியர்களையே. ஒவ்வொரு தனி நபரும் தன் வாழ்நாள் முழுமைக்கும்
மறக்கமுடியாத ஆசிரியர் என்று குறைந்தபட்சம் ஒருவரையோ அல்லது பலரையோ நிச்சயம் நினைவில்
வைத்திருப்பார்கள். நமக்கு எவ்வித பேதங்களும் தெரியாத வயதில் நம்முடன் இணைந்துகொள்ளும்
ஆசிரியர்கள் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக உருக்கொள்வதில் வியப்பேதுமில்லை. இன்றும்
நம் சிறுவயதில் நமக்குக் கற்பித்த குரு ஒருவரை நினைக்கும்போது நமக்கு எழும் எண்ணங்கள்
நிகரற்றவை. ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீட்டிலும் ஆசிரியர்கள் குறித்த மதிப்பீடு இதுவாகவே
இருக்கிறது. இதனாலேயே ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட சிறிய வீழ்ச்சி கூட மிகப் பெரிய சமூக
வீழ்ச்சியாகவே விவாதிக்கப்படுகிறது.
ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த மனநிலைக்குப்
பின்னே வைத்தே நாம் பார்க்கவேண்டியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தம்,
அதிலும் இன்னும் சில நாள்களில் மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலையில்
இவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம், பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததற்கு,
ஆசிரியர்களின் மீதான இந்த ஒட்டுமொத்த மதிப்பீடும் ஒரு காரணம். இந்த மதிப்பீடு சரியா
தவறா, தேவைதானா என்பதெல்லாம் தனிப்பட்ட விவாதங்கள். யதார்த்தத்தில் இப்படியான ஒரு பொதுப்புத்தி
நிச்சயம் இருக்கவே செய்கிறது.
ஜேக்டோ (பல்வேறு ஆசிரியர் சங்கங்களின்
கூட்டமைப்பு) மற்றும் ஜியோ (அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) இணைந்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி
வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இவற்றில் உள்ள ஒன்றிரண்டு கோரிக்கைகள் மிக முக்கியமானவையே.
குறிப்பாக, இவர்களது ஓய்வூதியப் பணம் என்ன ஆனது என்பது பொதுவில் கேட்கப்படவேண்டிய கேள்வியே.
அரசு இதற்கு ஒரு பதில் அளித்தது. இவர்கள் இப்படிப் போராட்டம் செய்திருக்காவிட்டால்
அரசு நிச்சயம் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்காது. அரசு ஆசிரியர்கள் இதனைப் பல காலமாகக்
கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டுப்
பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புமாறு அரசை நிர்ப்பந்திப்பது, நிச்சயம் செயல்படுத்த
முடியாத ஒன்று.
பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, சுருக்கமாகச்
சொன்னால், அரசு ஆசிரியர் பணி ஓய்வு பெறும்போது பெறும் சம்பளத்தில் பாதியை வாழ்நாள்
முழுமைக்கும் (அவரது மரணத்துக்குப் பிறகு அவரது மனைவியின் வாழ்நாள் முழுமைக்கும்) மாதா
மாதம் பெறுவது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி (2003ல் இருந்து), அரசு ஆசிரியரின்
(அனைத்து அரசு ஊழியர்களின்) சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை (12%) அரசும் ஊழியரும்
ஓய்வூதியப் பணமாக செலுத்துவது; அதைப் பங்குச் சந்தையில் அரசே முதலீடு செய்வது; ஓய்வின்போது
ஒட்டுமொத்த பணமாக அரசு ஊழியர் பெற்றுக்கொள்வது. மாதாமாதம் ஓய்வூதியமெல்லாம் இல்லை.
2003 முதல் வேலைக்குச் சேர்ந்தவர்கள்
இதனை ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்கும்வரை அதற்காகப்
போராடுவதும், சேர்ந்த பின்பு வேறு வகையில் போராடுவதும் சரியா என்ற கேள்வி எழவே செய்கிறது.
ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்விதான். அதேசமயம்,
போராட்டத்தைத் தவிர்க்கமுடியாது என்பதும் மிக மிக முக்கியமானதே. எனவே வேலைக்குச் சேர்ந்த
பின்பு எப்படிப் போராடலாம் என்பதை விட்டுவிடலாம். அரசுக்கும் இதில் பெரிய பொறுப்பு
உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி இருந்த பல சலுகைகள் இப்போது இல்லை; அல்லது
பெறுவது கடினமாக இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், ஓய்வூதியப் பணத்தில்
இருந்து கடன் (லோன்) பெறுவது. அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதில்
உள்ள சிக்கல் மற்றும் காலதாமதம். இவையெல்லாம் அரசுத் தரப்பில் இருக்கும் எப்போதைக்குமான
சிக்கல்கள். ஆனால் அரசு இதையெல்லாம் பொதுவெளியில் சொல்வது இல்லை. அரசு ஊழியர்கள் சொன்னாலும்,
பொது மக்கள் எப்போதுமே ஒரு எரிச்சலில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அணுகுவதால்,
இதைக் கவனிப்பதோ ஏற்பதோ இல்லை.
எனவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை
ஒட்டுமொத்தமாகத் தவறு என்றோ தேவையற்றது என்றோ சொல்லிவிட முடியாது.
அதேசமயம், அரசு ஊழியர்களின் போராட்டம்
அவர்களது பணித் திறமையோடு நிச்சயம் சேர்த்தே பார்க்கப்படும். 30-01-2019 தேதியிட்ட
தமிழ் தி ஹிந்து இதழில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்த வேலை நிறுத்தத்தின்போது
அரசு ஊழியர்களின் செயல்பாடுகளைச் சொல்வது வேலை நிறுத்தத்தைத் திசை திருப்புவது என்று
சொல்லி இருக்கிறார். இதை நிச்சயம் ஏற்கமுடியாது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது
அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் இவற்றுக்கு எதிராக அவர்கள்
செய்யும் பணி, ஒப்பீட்டளவில் மற்றவர்களது வேலை மற்றும் சம்பளம் என எல்லாமும் விவாதிக்கப்படுவது
நிகழவே செய்யும். விவாதிக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும்
தாங்கள் எப்பேற்பட்ட ஒரு வேலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக்
கிடைக்கும். இதனால் பயன் இல்லாமல் போகலாம் என்பது வேறு விஷயம்.
ஒரு அரசு ஆசிரியர் ஆவேசமாகப் பேசும் வீடியோ
ஒன்றை அனைவரும் பார்த்திருக்கலாம். நாங்கள் ஏன் வேறு பணிகளைச் செய்யவேண்டும், நாங்கள்
ஏன் வேலைக்குச் சேர்ந்த பின்னரும் தேர்வெழுதி வெல்லவேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.
வேறு பணிகளைச் செய்வது அரசுக்கு நிச்சயம் தேவை. இதைத் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால்
அரசு ஆசிரியர்கள் அரசின் ஓர் அங்கம். பொதுத் தேர்வுகளின்போது நீண்ட நாள் விடுப்புக்
கிடைக்கும் ஒரே துறை அது. அப்படியானால் அவர்கள் பயன்படுத்தப்படவே செய்வார்கள். ஏன்
மீண்டும் மீண்டும் தேர்வெழுதவேண்டும் என்பது கொஞ்சம்கூடப் பொருட்படுத்த முடியாத கேள்வி.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் (அரசு ஆசிரியர், தனியார்ப் பள்ளி ஆசிரியர் என்ற பேதமில்லாமல்)
தெரியும், ஒட்டுமொத்த ஆசிரியர்களில் எத்தனை சதவீதம் பேர் சராசரிக்கு மேல் தேறுவார்கள்
என்று. உண்மையில் ஆசிரியர்களின் தகுதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் கவலைக்கிடமாக
இருக்கிறது என்பதே என்னுடைய மனப்பதிவு.
தமிழ்நாட்டுக் கல்வியைக் குறித்த ஆய்வின்
படி, கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமையைக் குறித்த புள்ளிவிவரம்:
·       
ஐந்தாம் வகுப்பில் வார்த்தையை வாசிக்கத் தெரியாதவர்கள் தோராயமாக
32% பேர்.
·       
ஆறாம் வகுப்பில் 23% பேர், ஏழாம் வகுப்பில் 15%, எட்டாம்
வகுப்பில், 9% பேர்.
·       
ஐந்தாம் வகுப்பில் கழித்தல் தெரியாதவர்கள் தோராயமாக 39% பேர்.

இன்னும் கூட்டல், பெருக்கல், வகுத்தல்,
வட்டிக் கணக்கு, செய்யுள் படித்தல், ஆங்கிலம் அறிவியல் எல்லாம் இருக்கிறது. கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்.
அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் தோராயமாக
37%. அரசு உதவி பெறும் பள்ளிகள் 19%. மீதி தனியார்ப் பள்ளிகள்.
ஜேக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தின்போது
அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்களும் பங்குகொள்ளவேண்டும் என்றாலும், அவர்கள் வேலைக்குச்
சென்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியோ
ஆணையின்படியோ இவர்கள் நடந்துகொள்வார்கள். அதேசமயம் ஜேக்டோ அமைப்புக்கு ஆதரவாகவும் இருப்பார்கள்.
அப்படியானால் முழுக்க முழுக்கப் பங்கேற்றது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே.
அதாவது, கிராப்புறங்களில் இருக்கும் மாணவர்களே இப்போராட்டத்தின் பலி.
பொதுவாகவே நம் கல்வி அமைப்பு என்பது,
குறிப்பாக கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கல்வி அமைப்பு, முழுக்க முழுக்க ஆசிரியர்களைச்
சார்ந்தது. பல்வேறு சமூக மற்றும் குடும்பச் சூழலில் இருந்து அரசுப் பள்ளி ஒன்றையே தனது
விடுதலைக்கான வழி என்று நம்பி வரும் மாணவர்களே இப்பள்ளிகளில் அதிகம் இருப்பார்கள்.
இவர்களைக் கையில் எடுத்து நல்ல கல்வி தரவேண்டிய பொறுப்பே அரசு ஆசிரியர்களின் முதன்மையான
வேலை. நம் கல்வி அமைப்பின் இன்னொரு பிரச்சினை, தேர்வு நேரங்களில் மட்டுமே பொறுப்பாகப்
படிப்பது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே காரணம்.
எனவே இந்தத் தேர்வு நேரத்தில் இப்படியான அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் எந்த வகையான
பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இதனால் பாதிப்படையப் போகும்
கிராமப்புற மக்களுக்கு அரசு ஆசிரியர்களின் என்ன பதில் உள்ளது?
இதிலுள்ள நகை முரண் என்னவென்றால், பாதிக்கப்படப்
போவது கிராமப்புற மக்கள் என்பதாலேயே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்குப் பொது
மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்பதுதான். இது கொடுமை என்றாலும், பெரும்பாலான நகர்ப்புற
மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் படிப்பதால், இவர்களது பெற்றோர்கள் அரசுத் தரப்பையும்
சரி, அரசு ஆசிரியர்கள் தரப்பையும் சரி, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் யாருக்கும்
ஒரு ஆதரவோ எதிர்ப்போ பெரிய அளவில் உருவாகி வரவில்லை. அதேசமயம் அரசு ஊழியர்கள் பெறும்
சம்பளம் குறித்த புள்ளிவிவரங்கள், பொது மக்களின் மனதில், இவர்கள் இன்னும் சம்பளம் கூடுதலாகப்
பெறவே போராடுகிறார்கள் என்ற எளிய எண்ணத்தை மட்டும் விதைத்துவிட்டது. இது அரசுக்குப்
பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. போராட்டமும் பிசுபிசுத்துவிட்டது.
பத்து வருடம் ஆசிரியர் பணியில் இருக்கும்
ஒரு அரசு ஆசிரியரின் தோராயமான சம்பளம் நிச்சயம் 65,000 ரூபாய் இருக்கலாம். தலைமை ஆசிரியரின்
சம்பளம் 85 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கலாம். எப்போதெல்லாம் மத்திய அரசு பே கமிஷனை
நியமிக்கிறதோ அப்பொதெல்லாம் கூடுமான வரையில் தமிழக அரசும் அதை ஒட்டிய சம்பளத்தை அறிவித்துவிடுகிறது.
காலதாமதமானாலும் முன்கூட்டிய தேதியிட்டு அறிவித்து ஈடுகட்டிவிடுகிறது. இந்நிலையில்
போராட்டத்தில் சம்பள உயர்வையும் (அல்லது வேறுபாடுகளைக் களைவது) சேர்த்துக்கொண்டிருப்பது
பொது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது.
3000க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதைக்
கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் தேவையற்றதே. இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் சேரும்
மாணவர்கள் குறைந்துவரும் நிலையில், தமிழ்வழிக் கல்வியின் ஆர்வம் குறைந்துவரும் நிலையில்,
பள்ளிகளை மூடுவது என்பது தவிர்க்கமுடியாதது. 35% பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது
என்றால் எப்படி அந்தப் பள்ளிகளில் சேர முன்வருவார்கள்? இந்தப் புள்ளிவிவரம் தனியார்ப்
பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் என்றாலும், ஒப்பீட்டளவில் இது அரசுப் பள்ளிகளில்தான்
அதிகம் என்பது வெளிப்படை. இந்நிலையில் மாணவர்களே இல்லாத அல்லது மாணவர்கள் குறைந்த பள்ளிகளை
மூடுவது, குறைவான அளவில் உள்ள மாணவர்களை இன்னொரு பள்ளியோடு இணைப்பது எல்லாம் நிகழவே
செய்யும்.
இதற்கான தீர்வு, அரசுப் பள்ளிகளின் தரத்தை
மேம்படுத்துவதிலேயே உள்ளது. அரசு ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதிலேயும் இருக்கிறது.
ஆனால் அரசு ஆசிரியர்களோ, எங்களுக்கு ஏன் இன்னொரு தேர்வு என்று அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அரசுக்குத் தன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லை.
பாடத்திட்டத்தை உருவாக்குவதில் உள்ள முனைப்பு, அரசுப் பள்ளிகளை ஆயத்தப்படுத்துவதில்
இல்லை. மிக முக்கியமான காரணம், அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கி என்கிற மாயை.
மாணவர்களின் தரக் குறைபாட்டுக்கு அரசும்
நிச்சயம் ஒரு காரணமே. ஆனால் தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் இருக்கும்போது
இந்த வேலை நிறுத்தம் அராஜகம் என்பதுதான் உண்மை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு
இடமாற்றத்தில் முன்னுரிமை தரப்படும் என்று அரசு சொன்னதுமே பிசுபிசுத்துப் போய்விட்டது
இந்தப் போராட்டம். தங்கள் வசதி என்று வந்ததும் ஆசிரியர்கள் உடனே வேலைக்கு வந்துவிட்டார்கள்.
இதில் கிண்டலுக்கு ஒன்றுமில்லை என்றாலும்கூட, மாணவர்களைக் குறித்தும் இவர்கள் யோசித்திருக்கலாமே
என்ற எண்ணம் வலுப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.
இந்தக் கூத்துக்கு இடையில் இன்னொன்றும்
நிகழ்ந்தது. எனக்கு (நமக்கு!) அது இன்னமும் முக்கியமானது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்துக்கான
காரணங்களில் ஒன்று, சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு ஆதரவு தருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கும்
சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கும் என்ன தொடர்பு? ஏன் நீதிபதி பரந்தாமன் ஆசிரியர்களின்
வேலை நிறுத்தத்தை நீதிமன்றம் பாகுபாடு காட்டாமல் அணுகவேண்டும் என்று மட்டும் சொல்லி,
இப்போராட்டத்தில் சபரிமலை விவகாரம் தேவையற்றது என்று சொல்லவில்லை? கம்யூனிஸம். அரசு
ஆசிரியர் சங்கங்களில் ஒன்று முற்போக்காளர்களின் சங்கம் என்ற பெயரில் இந்தக் கோரிக்கையை
நுழைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அல்ல இது. எங்கே இருந்தாலும்
தங்கள் கோரிக்கையை நுழைத்துவிடுவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். அனுபவம் மிக்கவர்கள்.
நல்லவேளையாக ஹிந்து ஆதரவு ஆசிரியர் சங்கம் ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது. ஒருவழியாக
சபரிமலைக்குப் பெண்கள் செல்லும் விஷயத்திலான கோரிக்கையைப் பொதுவில் பெரிய அளவில் ஜேக்டோ
கொண்டு செல்லவில்லை என்பது ஆறுதல்.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான
நியாயமான கோரிக்கைகளை அரசு ஆராயவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ப்ரீகேஜி வகுப்புகளுக்குச்
செல்வதை மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட
அளவில் இது எனக்குப் பெரிய விஷயமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஆனால் ஆசிரியர்களின்
உணர்வுக்கு மரியாதை அளிக்கவேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளுக்கு மாண்டெசொரி (Montessori)
தேர்ச்சி போதுமானது என்று மத்திய அரசின் வழிகாட்டும் குழு சொல்லி இருக்கிறது. இந்நிலையில்
ஆசிரியர்ப் பயிற்சி தேர்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த வகுப்புகளுக்குச் செல்வதை ஏற்காதது
நியாயமே. இந்த வருடம்தான் இது தொடங்கி இருக்கிறது என்பதால், எதிர்வரும் வருடங்களில்
அரசு இப்பிரச்சினையைச் சரி செய்யும் என்றே தோன்றுகிறது. இதுபோன்ற விஷயங்களில் அரசு
ஆசிரியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே சரியானது. அப்போதுதான் அடுத்த நகர்வாக அரசு ஆசிரியர்களின்
தர மேம்படுத்துதலை மேற்கொள்ள முடியும்.
பொதுவாகவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்
மிகவும் அரிதான காலங்களில் நடப்பது நல்லது. அதாவது வேலை நிறுத்தமே கூடாது என்ற வகையில்
இருந்துவிடுவது இனி அவர்களுக்கு நல்லது. காலம் மாறி இருக்கிறது. வேலை நிறுத்தத்தைப்
பொதுமக்கள் கொண்டாடிய அல்லது ஏற்றுக்கொண்ட காலம் போய்விட்டது. நீதிமன்றமும் சரி, மக்களும்
சரி, எந்த ஒரு அரசுத் தரப்பின் போராட்டத்தையும் இனி சட்டென ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இதனடிப்படையில் தங்கள் தேவையை அரசுத் தரப்போடு பேசியோ, நீதிமன்றத்தை அணுகியோ அரசு ஊழியர்கள்
பெற்றுக்கொள்வது நல்லது. நீதிமன்றத்தின் தலையீடு என்பது அரசு நிகழ்வதற்குச் சில பிரச்சினைகளை
உருவாக்கலாம். ஆனால் அது குறித்துக் கவலை கொள்ளவேண்டியது அரசுதானே ஒழிய, அரசு ஊழியர்கள்
அல்ல.



Posted on Leave a comment

நீதிமன்றத்தில் நீட் தேர்வு | ஹரன் பிரசன்னா


நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும் கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருந்தது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் தரச்சொல்லிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.

தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார்.

ஏற்கெனவே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால், ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால், கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு.

இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது. நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றத்தனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் மாநில அரசின் ஒப்புதலுடன் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து செல்லவேண்டிய விஷயம் அல்ல.

சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள் தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள் அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல் வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ சந்திக்க நேர்ந்திருக்காது. ஆனால் மாநில அரசு இப்பிரச்சினையைப் பற்றி எக்கருத்தையும் சொல்லாமல் தவிர்த்து வருகிறது.

ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer) சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக் கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’ இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில் 49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சிபிஎஸ்இயின் இந்தப் பொறுப்புத் துறப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடை செய்துள்ளது.

49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில் பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை. டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன். என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத் தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில் கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.

49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்வியே. அனைத்துக் கேள்விகளும் சரியாகக் கேட்கப்பட்டிருந்தால் அனைத்து மாணவர்களும் சரியாக பதில் எழுதி இருப்பார்கள் என்பதை ஏற்கமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும் கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். அல்லது, சரியான கேள்விகளுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மையமாக வைத்து, தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்களை அளித்திருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப் பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும் என்று உயர் நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக் கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன். அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால் ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிக்கொண்டது, தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம் புறக்கணிக்கமுடியாது. ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு ஏன் மாணவர்களால் தமிழில் உள்ள தவறுகளையும் மீறிப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையற்றது. ஆங்கில அறிவும், ஒரு குறிப்பிட்ட அறிவியல் பதத்துக்கான தமிழ்க் கலைச்சொல்லறிவும் வேறு வேறானவை. மேலும் நாம் எல்லா மாணவர்களின் தரத்தோடும் சேர்ந்தே, 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள் பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.

என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும் இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது. சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம். இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன. இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம் என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது. நீள பரிமாணங்கள் என்பது நீள அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி ஆகி இருக்கிறது.
 
இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக் ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள் போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான் அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத் தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான். சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய பதில்.

நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில் இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும், மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.

நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக் கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள் இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும் ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.

இன்னொரு விஷயமும் முக்கியமானது. மத்திய அரசைக் குறை சொல்பவர்கள், இதே போன்ற தவறுகள் ஒவ்வொரு வருடமும், மாநில அரசு நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளிலும் நடப்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். அப்படி யோசித்துப் பார்த்தால், இது நம் மாநில அரசின் எப்போதுமான பிரச்சினை என்பது புரிந்துவிடும்.

மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப் பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும் செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான் நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு. அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம் இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.

உச்சநீதி மன்றத்தில் வரும் இறுதித் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

Posted on Leave a comment

ஸ்டெர்லைட் கலவரம் – ஹரன் பிரசன்னா

ஸ்டெர்லைட் கலவரத்தில் 13 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பதிமூன்று பேரில் அப்பாவிகளும் உள்ளார்கள், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களும் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நம் கண்ணீர் அஞ்சலி. ஒரு போராட்டம் வன்முறையாக, கலவரமாக மாறும்போது ஏற்படும் இத்தகைய கொடூரங்களுக்கு அப்போராட்டத்தைத் திசை திருப்புபவர்களே பொறுப்பு.

தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் என்ற நிலையைச் சில சமூகவிரோதிகள் செயல்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கட்சி முன்னின்று போராட்டங்களை நடத்தும். அப்போராட்டத்தினால் கிடைக்கும் நன்மை தீமைகளுக்கு அக்கட்சியே பொறுப்பேற்கும். ஆனால் இப்போது இந்தப் போராட்ட வடிவத்தை, மக்களின் போராட்டம் என்ற போர்வையில் சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்படியும் தாங்கள் நினைத்தது நிறைவேறப்போவதில்லை என்றும் பொதுமக்களின் ஆதரவு இருக்கப்போவதில்லை என்றும் இச்சிறு குழுக்களுக்குத் தெளிவாகத் தெரியும். எனவே பொதுமக்களின் போராட்டம் என்ற போர்வையில் சில குழுக்களை முன்வைத்துப் போராட்டங்களை நடத்துகிறார்கள். அல்லது மக்கள் செய்யும் போராட்டங்களில் ஊடுருவி, தங்கள் கொள்கை முழக்கங்களையும் இந்திய எதிர்ப்புப் பிரசாரங்களையும் திணித்து, அப்போராட்டத்தையே நாசம் செய்துவிடுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும் தியாகமும் வீணாவதோடு தேவையற்ற வன்முறையும் ஏற்படுகிறது. உண்மையான பிரச்சினை பின்தள்ளப்படுகிறது.

தமிழ்நாடு என்றுமே தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகியதில்லை. தொடர்ச்சியாக தனித் தமிழ்நாடு கோஷம் ஒலித்தாலும் அது என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் இக்கோஷத்தைக் கையில் எடுப்பதும் மற்ற சமயங்களில் அதை மறந்துவிடுவதும் நாம் அறிந்ததே. இவர்களது நோக்கம் இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்குவதும் நிம்மதியின்மையைக் கொண்டு வருவதும் ஆளும்கட்சிக்கும் மத்திய அரசுக்கும் குறிப்பாக பாஜக தலைமையிலான அரசுக்குப் பிரச்சினையை உருவாக்குவதும்தான். எனவேதான் எந்த ஒரு பிரச்சினையையும் போராட்டமாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டை அறிவியலுக்கு எதிரான மாநிலம் என்ற எண்ணத்தை இந்திய அளவில் விதைத்துக்கொண்டிருக்கிறார்கள் இக்குழுக்கள். இதனால் ஏற்படும் பெருந்தீமைகளை நாம் எதிர்வரும் வருடங்களில்தான் உணரமுடியும். எனவே அடிப்படையற்ற இப்போராட்டங்களை நாம் இப்போதே வேரறுக்கவேண்டும். ஆனால் இங்கிருக்கும் வலிமையற்ற மாநில அரசோ செய்வதறியாமல் திகைத்துக் கிடக்கிறது. அரசியல் வலிமையற்ற சூழல் இக்கலவரக்காரர்களுக்குப் பெரிய வசதியாக அமைந்துவிட்டிருக்கிறது.

எந்த ஒரு அறிவியல் முன்னேற்றத்தையும் எதிர்ப்பதால் நமக்கு இழப்பே அன்றி நன்மை ஒன்றுமில்லை. ஒரு புதிய தொழிற்சாலை அமையுமானால் அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்கி, அதிலிருந்து தப்பிக்கும் வழிகளைக் கண்டறிந்து, அந்த தொழிற்சாலையைத் திறம்பட நடத்திக் காண்பிப்பதே வளர்ச்சிக்கான வழி. ஆனால் இக்குழுக்கள் விளைவுகளைப் பற்றிய பயத்தை அதீதமாக ஊட்டி, அத்தொழிற்சாலைகளையே முடக்கப் பார்க்கிறார்கள்.

அதிலும் தொழிற்சாலைகளைத் தேர்ந்தெடுத்தே முடக்குகிறார்கள். தமிழ்நாடு முழுமைக்கான ஒட்டுமொத்த ஒரே அளவிலான அளவுகோல்கள் இவர்களிடம் இல்லை. இவர்களது நோக்கம் குறுகலானது. உடனடி வாய்ப்பும் வசதியும் இவர்களுக்குத் தரவல்லது. இதனால்தான் மக்கள் போராட்டம் என்ற பெயரில் களம் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

தமிழ்நாடு முழுக்க உள்ள பல தொழிற்சாலைகளால் மாசுபாடு நிகழ்ந்தவண்ணம் உள்ளது. இதைக் கண்காணிக்கவேண்டிய அமைப்பு என்ன செய்கிறது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கவேண்டும். ஒரு தொழிற்சாலையால் காற்றோ நிலமோ மாசடையும் என்றால் அதை மூடும் முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் அரசு எடுக்கவேண்டுமே அன்றி, சில குழுக்கள் அல்ல.

இன்று ஸ்டெரிலைட்டை எதிர்த்துப் போராடும் அனைத்துக் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதில் பங்கு கொண்டிருக்கின்றன. ரிபப்ளிக் டிவி வெளியிட்ட செய்தியின் படி மொத்தம் 7 முறை ஸ்டெர்லைட் ஆலை இயங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதில் ஆறு முறை காங்கிரஸ் தலைமையிலான அரசும் ஒரு முறை பாஜக தலைமையிலான அரசும் ஒப்புதல் தந்திருக்கிறது. ஆறு முறை கலவரங்களோ துப்பாக்கிச்சூடோ இல்லை. ஏழாவது முறை சரியாக நிகழ்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஒரு கட்சிகூடப் பேசுவதில்லை. அத்தனை தூரம் அத்தனை கட்சிகளும் பயந்து போயிருக்கின்றன. திமுக இன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் அளிக்கும்போது திமுகவும் ஆதரவாகவே இருந்திருக்கிறது. அன்று அமைதியாக இருந்துவிட்டு இன்று வீராவேசம் பேசுவதெல்லாம் எந்த நியாயத்தில்வரும் எனத் தெரியவில்லை. இதற்கான காரணத்தைப் பொது மக்களுக்கு விளக்கவேண்டும் என்று கூட இவர்கள் நினைப்பதில்லை.

இன்றைய நிலையில் எப்படிக் கட்சியை வளர்ப்பது என்று தெரியாத அனைத்துக் கட்சிகளும் எவ்வித யோசனையும் இன்றி, கையில் கிடைக்கும் எந்த ஒரு போராட்டத்தையும் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றன. இதனால் போராட்டம் எந்த ஒரு வடிவமும் இன்றி, திக்குத் தெரியாத காட்டில் அலைவது போன்று தினம்தோறும் ஒரு வடிவம் கொள்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். ஆனால் இக்கட்சிகளுக்குப் பொதுமக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டதற்குக் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதும், அவர்கள் சுடுவதற்கு முன்பாக அத்தனை தேவையான அறிவிப்புகளையும் போராட்டக்காரர்களை நோக்கிச் செய்தார்களா என்பதையும் நாம் நிச்சயம் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் என்பதில் இரண்டாம் கருத்தில்லை. காவல்துறை நிச்சயம் புனிதர்களின் புகலிடம் அல்ல. எந்த ஒரு அரசின் முடிவும் அதற்கான சட்டத் தேவைகளின்படி நடந்திருக்கவேண்டும். ஆனால் இங்கே காவல்துறையின் தரப்பைப் பற்றி ஒரு கட்சிகூட யோசிக்கவில்லை. 99 நாள் சுடாத காவல்துறை 100வது நாள் ஏன் சுட்டது என்ற கேள்வியை எழுப்பினால் அவர்களைத் துரோகிகளாகச் சித்திரிக்கிறார்கள். கலவரம் நடந்து முடிந்தபின்பு வந்த வீடியோக்களில் போலிஸார் எப்படித் தாக்கப்பட்டார்கள், பொதுச் சொத்துக்கள் எப்படி வேண்டுமென்றே நாசமாக்கப்பட்டன, எப்படி கலவரக்காரர்கள் பெருங்கூட்டமாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள் என்பதையெல்லாம் பார்க்கும்போது, வேறு வழியின்றியே காவல்துறை சுடத் துவங்கியது என்பது புரிகிறது. ஒரு பெருங்கூட்டம் வன்மத்துடன் காவல்துறையினர் மீது பாயும்போது தங்களைக் காத்துக்கொள்ளவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும் பிற பொதுமக்களைப் பாதுகாப்பதும் காவல்துறையின் முக்கியக் கடமையாகிறது. இந்நிலைக்குக் காவல்துறையைத் தள்ளாமல் இருப்பதே போராட்டக்காரர்கள் செய்திருக்கவேண்டியது. ஆனால் இந்நிலைக்குப் போராட்டக்காரர்களைத் தள்ளுவதே, போராட்டத்தைப் பின்னணியில் இயக்கியவர்களின் தேவை என்பதைத் தனியே நமக்குச் சொல்லத் தேவையில்லை.

தமிழ்நாட்டில் இப்படி இந்திய எதிர்ப்பை மூலதனமாக வைத்து, தனித் தமிழ்நாடு என்ற ஒருபோதும் நடக்க இயலாத கனவுடன் திரியும் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் வைக்கவேண்டிய உச்சகட்ட நேரம் இது. இந்நேரத்தைத் தவறவிட்டால் அது தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நல்லதல்ல. ஓட்டரசியல் மட்டுமே குறி என்பவர்களுக்கு இவையெல்லாம் பெரும் அரசியல் தருணங்கள். ஆனால் தமிழ்நாடு என்றைக்குமே இத்தகைய குழுக்களுக்குப் பெரிய வெற்றியைத் தந்ததில்லை. இம்முறையும் தமிழ்நாடு தேசத்தின் ஒரு அங்கமாக நின்று இவர்களைத் தோல்வி அடையச் செய்யும் என்று நம்புவோம்.

ஸ்டெர்லைட்டை அரசு மூட எடுத்திருக்கும் முடிவு, கலவரக்காரர்களுக்குப் பயந்துதான். இது தமிழ்நாட்டுக்குப் பல வகைகளில் பின்னடைவை ஏற்படுத்தும். பல முதலீட்டாளர்கள், தொழில் ஆர்வலர்கள், இனி தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனைவரும் தயங்குவார்கள் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட்டை மூடுவதால் அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர்களுக்கும், அத்தொழிற்சாலையால் மறைமுகமாகப் பணி கிடைத்த பல்லாயிரக் கணக்கானோர்களுக்கும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ஏற்கெனவே இப்படி ஸ்டெர்லைட் மூடப்பட்டபோதெல்லாம், ஆலையைத் திறக்கக்கோரி இவர்கள் அரசுக்கு எதிராகப் போராடி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கவேண்டியது மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே. அவர்கள் இப்போது அனுமதி மறுத்தால், முன்பு ஏன் எதற்காக யார் சொல்லி அனுமதித்தார்கள் என்பதை விளக்கவேண்டும். ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்பை ஆணித்தரமாக நிரூபிக்கவேண்டும். இவை எதுவுமே இல்லாமல் கலவரக்காரர்களுக்கு பயந்து ஒரு ஆலையை மூடுவது மாநில அரசின் தோல்வியும் கையாலாகாத்தனமும்தான்.