Posted on Leave a comment

வலம் நவம்பர் 2019 – முழுமையான இதழ்

குழந்தையின் மரணமும் நியூட்ரினோவின் சாத்தியமும் | அரவிந்தன் நீலகண்டன் 

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)- லாலா லஜ்பத் ராய் (பகுதி 7) | தமிழில்: சுப்ரமணியன் கிருஷ்ணன் 

பிளாஸ்டிக் பசுக்கள் | சுஜாதா தேசிகன் 

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 7) | தமிழில்: ஜனனி ரமேஷ் 

பாண்டி இலக்கியத் திருவிழா 2019 | ஜடாயு 

க்வாண்டம் கம்ப்யூட்டர்களின் உச்ச உயர்நிலை (Quantum Supremacy) | ஆர்.ஸ்ரீதர் 

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் – புத்தக விமர்சனம் | சுப்பு 

கிருதுமாலில் ஒரு மால் (சிறுகதை)| கிரி பிரசாத் கண்ணன் 

சில நேரங்களில் சில பதிவுகள் – 24 | சுப்பு 

தைவானை இந்தியா ஆதரிக்கவேண்டும் | எஸ். நடராஜன்  

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் (பகுதி 2) – தமிழில்: ஹரன் பிரசன்னா 

Posted on Leave a comment

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் (பகுதி 2) – தமிழில்: ஹரன் பிரசன்னா

முன்னாள்
பிரதமர் ராஜீவுக்கு ஜக்மோஹன் எழுதிய கடிதம். ஜக்மோஹன் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக இரண்டு
முறை பதவி வகித்தவர். இந்தக் கடிம் ஜக்மோஹனால் ஏப்ரல் 20, 1990 அன்று ராஜீவுக்கு எழுதப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை இக்கடிதம் மிகத் துல்லியமாக அன்றே வெளிப்படுத்தியது என்ற
குறிப்புடன் ‘இந்திய எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியன்
எக்ஸ்பிரஸில் வெளியிடப்படாத மீதமுள்ள பகுதிகளின் தமிழாக்கம் இங்கே.

காஷ்மீரில்
பாரத மாதாவைக் கைவிட்டீர்கள்! 
(பகுதி 2)
காஷ்மீர் பண்டிட்டுகள்:
உண்மையாகவும்
நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப்
போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள்
என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினை இதற்கான தெளிவான
உதாரணம்.
காஷ்மீர்
பண்டிட்டுகளின் வரலாற்றில் எப்படியான ஏற்றத்தாழ்வும் இருந்திருக்கலாம். கடந்த காலங்களில்
விதி பல அநியாயங்களை அவர்களுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இப்போது
நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. மிக
அறிவார்ந்த, பல்துறை நிபுணத்துவம் பெற்ற, பெருமை மிக்க இந்தியச் சமூகம் ஒன்று, சுதந்திர
இந்தியாவில் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய சமூகம் ஒன்றுக்கு அதற்கு இணையான
மிகப் பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்பது எப்படியான நகைமுரண்! இந்தக் கொடுமை
மதவெறிபிடித்த சிக்கந்தர் போன்ற இடைக்கால சுல்தான்களின் கீழே நடக்கவில்லை. அல்லது எதேச்சிகார
வெறிகொண்ட ஆஃப்கன் கவர்னர்களின் அரசில் நடைபெறவில்லை. மதச்சார்பற்ற தலைவர் என்று சொல்லப்படும்
உங்களைப் போன்ற, விபி சிங்கைப் போன்றவர்களின் கீழே நடைபெறுகிறது. தங்கள் தனிப்பட்ட
மற்றும் அரசியல் அதிகாரத்தின் நாணமற்ற தேடலை, காஷ்மீரத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின்
இன்றைய தாங்கமுடியாத கஷ்டங்களையும் அவர்களது கண்களில் தெரியும் எதிர்காலம் குறித்த
பயத்தையும் திட்டமிட்டே புறக்கணிப்பதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின்
வலியையும் பரிதவிப்பையும் அதிகரிக்கும் விதமாக, ‘காஷ்மீர் முன்முயற்சி குழு’ (Committee
for Initiative on Kashmir) போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அதீத ஆர்வத்தாலும் அதீத
செயல்பாட்டாலும் அவர்களது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்றன இந்த அமைப்புகள். புலம்பெயர்ந்தவர்களின்
கஷ்டகாலத்தின்போது துணை நிற்க விரும்புகிறவர்களை மதவெறியர்கள் என்று இவர்கள் முத்திரை
குத்துகிறார்கள்.
(பகுதி 1 ஐ வாசிக்க இங்கே செல்லவும்.)
இந்தியாவின்
குரூரமான ஒரு பகுதி, தன் உடலிலும் ரத்தத்திலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட
அகதிகளைக் கொடூரமாகத் தனிப்படுத்தி, அவர்களை மேய்ப்பன் இல்லாத மாடுகளாக்கி வைத்திருக்கிறது.
பரபரப்பான, இதயமற்ற, ஆன்மாவை இழந்த நகரங்களில், காஷ்மீர் பண்டிட்டுகள் ஒரு தனிப்பட்ட
சமூகமாகப் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. பிரிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட
எல்லோராலும் கைவிடப்பட்டு, அவர்கள் இன்று தனியாக நிற்கிறார்கள். தங்கள் கால்களுக்குக்
கீழே நழுவிக்கொண்டிருக்கும் சுக்கான் இழந்த உடைந்த படகை நம்பிக்கையின்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பான கரையில் நம்பிக்கையுள்ள எதிர்காலத்தில் தங்கள் பாதங்களைப் பதிப்பதற்கு
முன்பாக, மிகவும் பயங்கரமான கொந்தளிப்பான கடலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
காஷ்மீரப்
புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் இந்த பெரும் நெருக்கடி (அதனாலேயே இது ஒட்டுமொத்த
காஷ்மீரின் நெருக்கடி), உண்மையில் இந்திய மதிப்பீடுகளின் மீதான நெருக்கடி. அதாவது அரசியலமைப்பின்,
அரசியலின், சமூகத்தின், தார்மிக விதிகளின் நெறிப்பிறழ்வு. அகதிகளின் முகாம்களை நான்
பார்வை இட்டிருக்கலாம். மிகுந்த துயரில் இருக்கும் ஒரு சமூகத்துக்கு நீதியின் உறுதியான
கரத்தை நீட்டி இருக்கலாம். பணத்தைப் பிச்சையிடுவதற்குப் பதிலாக விரட்டப்பட்ட காஷ்மீர
பண்ட்டிட்டுகளின் அரசு அலுவலர்களுக்கு விடுமுறைச் சம்பளம் தர அறிவுறுத்தி இருக்கலாம்.
ஒரு தீவிரவாதியால் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் விதவையாகிப் போன அவரது மனைவி, தனக்கு
வீடு ஒன்றை (அதுவும் பணம் கொடுத்தபின்பே) ஒதுக்கவேண்டும் என்று கோரிய வேண்டுகோளை ஏற்று
ஒப்புக்கொண்டிருக்கலாம். இவற்றையெல்லாம் நான் செய்திருந்தால் நான் உடனே மதவெறியனாகி
விடுகிறேன். முஸ்லிம்களின் எதிரியாகிப் போகிறேன். என்னைப் பற்றி இட்டுக்கட்டப்பட்ட
கதைகள் பத்திரிகைகளில் பரப்பப்படுகின்றன. மாறாக, யாராவது இந்திய ராணுவத்தையும் கவர்னரின்
நிர்வாகத்தையும் பொய்யாகக் குற்றம் சாட்டினால், வீட்டுமனைகளும் வண்டிகளும் தரப்பட்டன
என்று எவ்வித நிரூபணமும் இன்றிச் சொன்னால், அதிலும் குறிப்பாக ஜெக்மோகனைத் தாக்கினால்,
அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியாகின்றன. இந்த அறிக்கைகள் தேசிய
மற்றும் பன்னாட்டு மன்றங்களில் விவாதிக்கப்படுகின்றன. உங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களால் ஆர்வத்துடன் மேற்கோள் காட்டப்படுகின்றன. இப்படிச் செய்பவர்கள் மதச்சார்பற்றவர்கள்
என்றும் முற்போக்காளர்கள் என்றும் மனித உரிமையின் காவலர்கள் என்றும் புகழப்படுகிறார்கள்.
ஜெக்மோகன் காரணி (Jagmohan Factor) என்பதற்கு
உறுதியான சான்றுகள்:
எனது
தற்பெருமைக்கு வழிவகுக்கும் எந்த ஒன்றையும் நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஆனால்,
ஜெக்மோகனின் மதவெறிக் காரணி குறித்த உங்களது திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்துடன் உங்களை
விட்டுவிடவும் தயாரில்லை. என்னைப் பற்றி இந்தப் பள்ளத்தாக்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள்
என்பது பற்றிய சில அசைக்கமுடியாத ஆதாரங்களை உங்கள் கவனத்துக்கு நான் கொண்டு வரவேண்டும்.
நீங்களும்
உங்கள் ஆதரவாளர்களும் எனது இரண்டாவது கவர்னர் பதவிக்காலம் தொடர்பாகப் பொய்ப்
பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன்பு இதைச் செய்தாகவேண்டும்.
என்  மீது உருவாக்கப்பட்ட முஸ்லிம் எதிரி
என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதில், இன்றைய காஷ்மீர அரசியலின் உங்களது முதன்மை ஆதரவாளரான
டாக்டர் ஃபரூக் அப்துல்லாவுக்கும் பங்குண்டு. ஆகஸ்ட் 30, 1990ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா
பத்திரிகையில் வெளியான அவரது நேர்காணலில் அவர் சொல்கிறார், “முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
வசிக்கும் ஒரு மாநிலத்துக்கு முஸ்லிம் எதிரி என்று நன்கு அறியப்பட்ட ஒருவர் கவர்னராக
நியமிக்கப்படுகிறார்.” என்ன ஒரு பொய்ப் பிரசாரம். எத்தனை அநியாயம் இது. நவம்பர் 7,
1986ல் எனது பதவியேற்பின்போது ஃபரூக் அப்துல்லா பொதுக்கூட்டத்தில் சொன்னதை வைத்தே இதைப்
புரிந்துகொள்ளமுடியும். “கவர்னர் அவர்களே, நீங்கள் எங்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்கமுடியாத
அளவுக்கு அவசியம். மூளை வளர்ச்சி குன்றிப் போய், அழுகிக் கிடக்கும் இந்த நிர்வாகத்தை,
மிகக் குறைந்த காலத்திலேயே மிகச் சிறந்த முறையில் 
பணியாற்றி உங்களால் மாற்றமுடியும். தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஒரு வாக்குப்பெட்டி,
காங்கிரஸுக்கு ஒரு பெட்டி, உங்களுக்கு ஒரு பெட்டி என இன்று மூன்று பெட்டிகள் வைக்கப்படுமானால்,
உங்கள் பெட்டியே வாக்குகளால் நிறையும், மற்ற இரண்டு பெட்டிகளும் காலியாக இருக்கும்.”
நமது நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், உண்மைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத,
குறிக்கோளற்ற, மேம்போக்கான அரசியலுக்கு மட்டுமே அக்கறை கொள்ளும் டாக்டர் ஃபரூக் அப்துல்லா
போன்ற தலைவர்களை நாம் பெற்றிருப்பதுதான்.
மறைந்த தங்கள் அம்மாவையும் முஸ்லிம் எதிரி என்று டாக்டர் ஃபரூக் அப்துல்லா சொல்கிறார்
என்பது உங்களுக்குப் புரியவில்லையா? ஏனென்றால், 1984ல் அவர் பிரதமராக இருந்தபோதுதான்
‘வெளிப்படையான முஸ்லிம் எதிரி’ முதல் தடவையாக ‘முஸ்லிம்கள் பெரும்பான்மையான மாநிலத்துக்கு’
கவர்னராக நியமிக்கப்பட்டார்.
டாக்டர் ஃபரூக் அப்துல்லா, ஃபிப்ரவரி 15, 1990 அன்று ஒரு எழுத்துபூர்வமான அறிக்கையை
பத்திரிகைகளுக்கு உருதுவில் தந்திருக்கிறார். இதைத் தங்களுடன் கலந்தாலோசித்தே தந்ததாகத்
தெரிகிறது. அதில் அவர் சொல்கிறார், “ஹல்லாகு மற்றும் செங்கிஸ்கானின் உருவகமாக விளங்கும்
கவர்னர்  இந்தப் பள்ளத்தாக்கை மிகப்பெரிய சுடுகாடாக
மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜனவரி 20ல் இருந்து தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு இருப்பதால்,
ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் குண்டுகளுக்கு எத்தனை பேர் பலியானார்கள் என்பதைச்
சொல்வது கடினம். எத்தனை வீடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சொல்லமுடியாது. இந்த நேரத்தில்,
காஷ்மீரிகள் தங்கள் அன்புக்குரிய நாடு இப்படி சுடுகாடாக மாற்றப்படுவதைக் கண்கூடாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு மற்றும் உலக அளவில் மனிதத்தன்மையை ஏந்திப்
பிடிப்பவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு, துணை
ராணுவப் படையினரால் காஷ்மீரிகள் கொல்லப்படுவது குறித்து உலகளாவிய விசாரணைக்கு உதவுங்கள்.”
இதோ உங்கள் ‘தேசப்பற்றாளர்’ காஷ்மீரை ‘ஆஸிஸ் வாட்டன்’ என்று சொல்வதைப் பாருங்கள்.
தனி நாடு வேண்டுமென யோசனை சொல்கிறார். இதோ உங்கள் ‘தேசத் தலைவர்’  காஷ்மீரிகள் இந்திய ராணுவத்தாலும் துணை ராணுவப்
படையாலும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக உலகளாவிய விசாரணை  வேண்டுமெனக் கேட்பதைப் பாருங்கள். இதோ உங்கள் ‘பொறுப்பு
மிக்க நண்பர்’ இந்தப் பள்ளத்தாக்கில் 25 நாளாகத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இருப்பதைப்
பற்றியும், அதனால் ‘ஆயுதம் ஏந்தாத அப்பாவி காஷ்மீரிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்’
என்பதையும் ‘எத்தனை காஷ்மீரிகளின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன’ என்பதையும்
கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதைப் பாருங்கள். அவருக்கு மிக நன்றாகவே தெரியும்,
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊரடங்கு இல்லாமல் எத்தனை நாள்கள் இருந்தன என்று. எத்தனை
பொதுமக்கள் இறந்தார்கள் என்பது பற்றி அதிகாரிகள் பட்டியலிட்டிருக்கிறார்கள். ஃபிப்ரவரி
16 வரை 40 பேர். தொடர்ந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.
அப்படி விட்டுப்போன பெயர்கள் இருந்தால் அதையும் சேர்த்து அதிகாரபூர்வ அறிக்கையை உருவாக்கமுடியும்.
‘ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள்’ இந்திய விமானப் படை அதிகாரிகளையும், எல்லைப்
பாதுகாப்புப் படை வீரர்களையும், தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மூத்த
அதிகாரிகளையும், அப்பாவி இளைஞர்களையும் எப்படி இரக்கமே இல்லாமல்  கொல்லமுடியும் என்பதை விளக்க கொஞ்சம் கூட அக்கறையற்ற
முன்னாள்  முதல்வர் ஒருவர் இங்கே இருக்கிறார்.
அதேசமயம் நீளமான, பரபரப்பான அறிக்கைகள் மூலம் மக்களைத் தூண்டத் தவறுவதில்லை. ஆனால்
அதில், இப்படியான கொடூரமான கொலைகளைக் கண்டிக்க ஒரு வார்த்தை கூட அவருக்குக் கிடைப்பதே
இல்லை.
டாக்டர் ஃபரூக் அப்துல்லாவின் இந்தத் துரதிர்ஷ்டமான  போக்கை ஏன் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை இந்த
நாடு அறிந்துகொள்ள உரிமையில்லையா? பிப்ரவரி 7, 1991ல் டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையில்
வெளியான அவரது சமீபத்திய அறிக்கையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? “எனது கட்சிக்காரர்கள்
ரகசியமாக எல்லை தாண்டிப் போய் ஆயுதப் பயிற்சி பெற்று என்ன வேண்டுமானால் செய்துகொள்ளுங்கள்.
ஆனால் ஜக்மோகன் கையில் பிடிபட்டுவிடாதீர்கள்.”
தனிப்பட்ட முறையில் என் முதுகில் குத்துவது எனக்கு ஒரு பொருட்டே இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் இந்தப் பிரச்சினையை ஆற விடாமல் கனன்று கொண்டே
இருக்க வைப்பதன் மூலம், இன்னும் பல மரணங்களையும் பல அழிவுகளையும் கொண்டுவருகிறீர்கள்.
வேர்கள்:
ஒருமுறை நீங்கள் சொன்னீர்கள்: ‘நான் வரலாற்றைப் படிப்பவன் அல்ல, படைப்பவன்.’
வரலாற்றைப் படிக்காமலேயே படைக்க விரும்புபவர்கள் பொதுவாக மிக மோசமான வரலாற்றையே படைக்கிறார்கள்
என்பது உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன். ஒரு பிரச்சினையின் உள்ளார்ந்த போக்கையும்,
நிகழ்வுகளை வடிவமைத்து எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அடிப்படைச்
சக்திகளையும் இப்படிப்பட்டவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
வரலாற்று நோக்கில் ஒரு பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததால், நீங்களும்
உங்களைப் போன்றவர்களும் இப்பிரச்சினையின் வேர்களையும், அதனால் இன்று வளர்ந்து நிற்கும்
காஷ்மீர் பிரிவினைவாதத்தையும் காஷ்மீரின் தோல்வியையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
காஷ்மீரின் ஆன்மாவில் விஷ விதைகள் நிரந்தரமாக விதைக்கப்பட்டுவிட்டன. இவற்றுக்கு மிகத்
தாராளமாக உரமும் தரப்பட்டுவிட்டது. இந்தப் பயிர்களையும் அதற்கான உரங்களையும் தடுத்து
நிறுத்தி இருக்கவேண்டியது உங்களது கடமை. ஆனால் உங்களுக்கோ வரலாற்றின் பாலபாடம் கூடத்
தெரியவில்லை. தீமையுடன் சமரசம் செய்துகொள்வது இன்னும் பெரிய தீமைகளையே கொண்டு வரும்.
நமக்கு வசதியற்ற உண்மைகளைப் புறக்கணிப்பது அதை மேலும் சிக்கலாக்கும். பலவீனமானவனைக்
கொடுமைப்படுத்துபவன் முன்பு பணிந்து போவது நாளை கசாப்புக் கடைக்காரனைக் கொண்டு வரும்.
இவை எதுவுமே உங்களுக்குப் புரியவில்லை.
எனது கருத்தை வலியுறுத்தும் பல உதாரணங்களை என்னால் தரமுடியும். ஆனால் ஒன்றிரண்டு
உதாரணங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறேன்.
மென்மையான போக்கும்
சரணடைதலும்
அக்டோபர் 2, 1988ல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று அவரது சிலை ஸ்ரீநகரில்
உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட இருந்தது. விழா அறிவிக்கப்பட்டது. இந்தியாவின்
தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார். ஆனால் சில முஸ்லிம்
வழக்கறிஞர்கள் இதை எதிர்த்தார்கள். விழாவின்போது பிரச்சினை செய்யப்போவதாக அவர்கள் மிரட்டினார்கள்.
முதலமைச்சர் கைவிட்டார். அதுவும் வேண்டுமென்றே, மிரட்டல்களுக்குப் பணிந்து அப்படி நடந்துகொண்டார்.
விழா ரத்து செய்யப்பட்டது.
நடந்தது சொல்வது என்ன? மதச்சார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியான மதச்சார்பற்ற
காஷ்மீரில், நம் தேசத்தின் மத நல்லிணக்கத்துக்காகத் தன் உயிரையே தந்த துறவியைப் போன்ற
தேசத் தந்தையின் சிலையை, இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் நீதிபதியால்கூட
நிறுவ முடியாது. இதை நிறுவுவதற்கு எதிராகக் கலகம் செய்தவர்களில் முக்கியமானவர் யார்?
வேறு யாருமில்லை, மொஹம்மட் ஷாஃபி பட். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற  வழக்கறிஞர். தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர்.
பின்னர் இவருக்கு 1989 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீநகரில் இருந்து போட்டியிட
வாய்ப்பு தரப்பட்டது. மார்ச் 7 1990ல் நீங்கள் ஸ்ரீ நகர் வந்தபோது, கவர்னரின் நிர்வாகத்துக்கு
எத்தனை கஷ்டங்களைத் தர முடியுமோ அவற்றைத் தருவதற்காக, இவருடனேதான் நீங்கள் மகிழ்ச்சியுடன்
நேரத்தைச் செலவழித்தீர்கள்.
அந்த நேரத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி (எஃப்), காங்கிரஸ் (ஐ) ஆட்சியில் இருந்தது.
இப்படித்தான் கொள்கைப் பிடிப்பில்லாமல் அவை நடந்துகொள்ளும். அரசை அமைத்த காங்கிரஸ்காரர்களின்
குணமும் இப்படிப்பட்டதுதான். அந்த விழா ரத்து செய்யப்பட்டபோது, எப்படியாவது அதிகாரத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக, அதற்கு எதிராக இவர்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.
பலவீனமானவர்களை மிரட்டுபவர்களின் பசிக்கு இதைவிடச் சிறப்பாக யாரும் படையல் அளித்திருக்கமுடியாது.
மிரட்டல்கள் இதைவிடச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கமுடியாது. மிரட்டல்காரர்களுக்கு
இதைவிடச் சாதாரணமான, உறுதியற்ற எதிரிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. இப்படிச் செய்தால்
இதைவிடப் பெரிய இலக்குடன் மிரட்டல்காரர்கள் வளர்வார்கள் என்பது இயல்புதானே? இதைவிடத்
தீவிரமான மிரட்டல்களை முன்வைத்தால் இன்னும் அட்டகாசமான முடிவுகள் கிடைக்கும் என்று
அவர்கள் நினைக்கமாட்டார்களா? காஷ்மீரின் இன்றைய சூழலில் இப்படி மென்மையான போக்குடன்
அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து மிரட்டல்காரர்களிடம் சரணடைந்தால், அது தீவிரவாதத்துக்கும்
போருக்கும் வழிவகுக்காது என்பதை அப்பாவிகளால் மட்டுமே நம்பமுடியும்.
மத நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தை (Religious
Institutions (Prevention of Misuse) Act) 1988ல் அரசு இயற்றியது. இது எல்லா மாநிலங்களுக்கும்
பொருந்தும். ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாது. ஏனென்றால், 370 பிரிவு. இந்தச்
சட்டம் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தவேண்டும் என்றால், மாநில அரசின் ஒப்புதல் வேண்டும்.
ஆனால் அது தரப்படவில்லை. ஏன்? ஏனென்றால், ஜம்மு காஷ்மீர் வேறுபட்டது! மத நிறுவனங்களின்
இருப்பிடங்களை அரசியல் நோக்கத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துவதை முற்றிலும் நீக்கும்
நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்குத் தரப்பட்ட பதில்! எப்பேற்பட்ட பதில்!
ஜம்மு காஷ்மிரைவிட இந்தச் சட்டம் மிகவும் தேவையான இடம் வேறில்லை. மத நிறுவனங்கள்
ஜம்மு காஷ்மீரைவிட வேறு எங்கும் இத்தனை தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை. விஷ விதைகளான
மதவெறியும் அடிப்படைவாதமும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கே இருக்கும் மசூதிகளின்
பிரசங்க மேடைகளில் மிகக் கவனமாக விதைக்கப்படுவது போல வேறு எங்கேயும் விதைக்கப்படுவதில்லை.
‘இந்திய ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு எதிரானது, இந்திய மதச்சார்பின்மை என்பது முஸ்லிம்களுக்கு
எதிரானது, இந்திய சோசியலிசம் முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்று இங்கே பிரசங்கம் செய்யப்படுவதைப்
போல வேறு எங்கேயும் செய்யப்படுவதில்லை. அப்படி இருந்தும் இரண்டு மதச்சார்பற்ற கட்சிகளால்
ஆளப்படுவதாகச் சொல்லப்படும் இந்த மாநில அரசும், மத்திய அரசும் இந்த விஷயத்தைத் தீவிரமாக
எடுத்துக்கொள்ளவில்லை. இதிலுள்ள சதி என்னவென்றால், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும்
100 மில்லியன் முஸ்லிம்களுக்கும் நல்லது என்று கருதப்படும் ஒரு சட்டம், காஷ்மீரின்
40 லட்சம் முஸ்லிம்களுக்கு நல்லதல்ல என்று கருதப்படுவதுதான்.
தேசிய நோக்கில் ஒரு கட்சி செயல்படாமல் போனால், தேசியவாத சக்திகள் ஒரு நாட்டை
ஆள்கிறது என்று சொல்வதில் என்ன  பயன்? மதவாதத்தின்
அரசியலில் மனப்பிறழ்ச்சி கொண்ட அடிமைகளாக அவர்கள் சிக்கி இருந்தால்… வெற்று வார்த்தைகளில்
மட்டும் நம்பிக்கை கொண்டு செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால்… நாட்டை வழிநடத்தாமல்
மிரட்டல்களுக்கு அடிபணிந்து நடந்தால்… பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடிக்காமல் அதை
ஊக்குவித்தால்… மனிதத் தன்மையிலும் ஆன்மிகத்திலும் பலமான  புதிய சமூகத்தை உருவாக்காமல், அழுகி துர்நாற்றம்
வீசும் பழைய பிரச்சினைகளை அறிந்தோ அறியாமலோ இன்னும் கிளறி இன்னும் பலம் கொண்டு எழச்
செய்து தெளிவற்ற நிலையைத் தொடரச் செய்தால்… நம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கும்
இலக்குகளுக்கும் எதிராக, இன்றைய சூழலுக்கு மட்டுமே எப்போதும் முன்னுரிமை அளித்தால்…
இவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த மூர்க்கமான அமைப்புகள் நம்மை எங்கே கொண்டு
செல்லும் என்று அறிந்துகொள்ள வித்தியாசமான நுண்ணறிவு வேண்டாமா?
எவ்வித அரசியல் அல்லது தனிப்பட்ட விருப்புவெறுப்புமின்றி அணுகும்படி மட்டும்
கேட்டுக்கொண்டு இக்கேள்வியை நம் தேசத்தின் நலம்விரும்புபவர்களிடம் விட்டுவிடுகிறேன்.
எப்படி டாக்டர் ஃபரூக் அப்துல்லா என்னை ஹல்லாகு என்றோ செங்கிஸ்கான் என்றோ அழைக்கலாம்?
என்னை ‘370வது பிரிவின் எதிரி’ என்று அம்பலப்படுத்த நீங்கள் ஸ்ரீநகர் வரை வருகிறீர்கள்.
அதே நேரம் பெனாசிர் பூட்டோ என்னை துண்டு துண்டாகக் கிழிப்பதாக சபதம் எடுக்கிறார்.
‘ஜக்மோகனை பாக்பாக் மோகன் ஆக்கவேண்டும்?’ (*பாக் என்றால் ஹிந்தியில் துண்டு துண்டாக
அதாவது பாகம் என்று பொருள்.)
காஷ்மீரின் இன்னும் பல தரப்புகள் பொய்களின் குவியல்களுக்குக் கீழே புதைக்கப்பட்டுள்ளன.  மேம்போக்கான கருத்துகளில் அவை புதைந்து போய்க் கிடக்கின்றன.
இந்தக் குவியல்களில் சிலவற்றை நீக்குவதில் இத்தனை நாள் நான் பரபரப்பாக இருந்தேன். இந்தப்
பிரச்சினையின் உண்மையான தன்மையை ஒருநாள் இந்தத் தேசம் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.
நான்தான் அவர்களின் மிகச்சிறந்த நலம்விரும்பி என்று காஷ்மீரப் பொதுமக்கள் உணர்வார்கள்.
தங்களைச் சுரண்டும் தன்னலக் குழுக்களிடம் இருந்தும், மதவாத ‘சீஸர்’களின் சூழ்ச்சிகளில்
இருந்தும், உண்மையை வேண்டுமென்றே மறைக்கும் கும்பல்களிடமிருந்தும் காஷ்மமீர மக்களை
நிரந்தரமாகக் காக்க எண்ணினேன்.
காஷ்மீரில் பாரத மாதாவைக் கைவிடும் பாவத்தை நீங்கள் ஏற்கெனவே செய்துவிட்டீர்கள்.
இப்போது இன்னொரு மாதாவையும் கைவிடும் பாவத்தையும் கூட்டிக்கொள்ளாதீர்கள். என்ன இருந்தாலும்
நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அவளை நினைவில் வையுங்கள். அவள் ஒருவேளை உங்கள் அலட்சியத்தை
மன்னிக்கக்கூடும். ஆனால், உங்கள் தவறுகளுக்காக, அதுவும் அவற்றைத் தொடர்ந்து உங்களிடம்
நினைவூட்டிக்கொண்டே இருந்த அப்பாவியையே குற்றம் சுமத்திய பாவத்துக்காக அவள் ஒருநாளும்
உங்களை மன்னிக்கமாட்டாள்.
என்னைப் பொருத்தவரை, காஷ்மீரில் மிகச் சரியான செயல்களையே செய்தேன் என்கிற சோகமான
பெருமை எனக்கு இருக்கிறது. உண்மைதான், உள்ளூர் மக்களின் நல்லெண்ணத்தை நான் தற்காலிகமாக
இழந்திருக்கிறேன் என்றே தெரிகிறது. ஆனால் நான் யாரிடமும் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை.
தேசியக் கடமையைச் செய்யவே நான் இரண்டாம் முறை கவர்னராகச் சென்றேன். நம் நாட்டின் அரசியலும்
நிர்வாகமும், ஒரு தீவிரமான பிரச்சினையை அதன் வேரோடு நீக்கவே முடியாது என்ற எண்ணத்தைக்
கொண்டுவிட்டிருக்கிறது. தேர்தல்கள் அதன் பொருளையே இழந்து நிற்கின்றன. இந்திய ஜனநாயகமும்,
அதன் அரசியலமைப்பும் ஆரோக்கியமான பண்பாட்டு அடித்தளத்தையும், மண்ணின் தூய்மையான ஆன்மாவையும்
பெறாதவரை இந்த பொருளற்ற நிலை தொடரவே செய்யும். நீதியின் விதையும், தன்னலமற்ற சேவையுமே
முளைவிட்டு மகா மரமாகப் பூக்கமுடியும். அதுவே கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை நிழலைத்
தர முடியும். இப்போது அதன் ஆன்மா இல்லாமல் போய்விட்டது. கண்பார்வையற்றவர்கள் தங்கள்
கைகளில் விளக்கை ஏற்றி நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரச்சினையிலிருந்து
இன்னொரு பிரச்சினைக்கென நாம் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு கவிஞர் சொல்வதைப் போல:
அது நிகழ்ந்தது
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
அது மீண்டும் நிகழும்.
வாழ்த்துகளுடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஜக்மோகன்


(பகுதி 1 ஐ வாசிக்க இங்கே செல்லவும்.)

Posted on Leave a comment

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | சாவர்க்கர், தமிழில்: VV பாலா



ஆறாவது
கடிதம்
செல்லுலார்
சிறை
5 ஆகஸ்ட் 1917
போர்ட் ப்ளேயர்
எனதன்பிற்குரிய பால்,
ஜூலை 1916 அன்று நான் அனுப்பிய கடைசி கடிதத்திற்கு
நீ அனுப்பிய பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாங்கள் அனைவரும் இங்கு ஆரோக்கியமாகவும்
மகிழ்ச்சியாகவும் இருப்பதை நீ அறிந்து கொண்டிருப்பாய். இறைவன் அருளால் நீ கடந்த ஒரு
வருடம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பாய் என்று நினைக்கிறேன். நம்முடைய
தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை காரணமாக நம்மில் நேர்மையானவர்கள் தியாகம் செய்ய
வேண்டி இருக்கிறது. அந்தப் பாதை சோகமானதாகவும் பிரிவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
விதி நமக்கு கொடுக்கும் இத்தகைய வலி மிகுந்த அடிகளைப் பொறுத்துக்கொண்டு பழகிய நமக்கு
இந்தக் கஷ்டங்களும் ஏமாற்றங்களும் பழகித்தான் விட்டன. அதே போல ஏதேனும் நல்ல விஷயம்
நடந்தாலும் அது நிரந்தரமானதல்ல என்ற புரிதல் நமக்கு உண்டு. என்னைப் பொருத்தவரையில்
கண்ணீரில் இருந்து தப்பிக்க உதவும் எதுவும் மகிழ்ச்சியான ஒன்றுதான். இப்போது சூழல்
மாறிவருகிறது. அதற்கேற்ப பழைய நண்பர்களும் திரும்பி வருகிறார்கள். பம்பாய் உயர் நீதிமன்றத்தில்
உன்னை விட்டுப் பிரிந்த போது உன்னிடம் கை கொடுக்கக் கூட அனுமதிக்கப்படாமல் என் தொப்பியை
ஆட்டியபடி சென்றேன். அப்போது என் மனதில் நானும் அன்பிற்குரிய பாபாவும் உனக்கும் நம்
அன்பிற்குரியவர்களுக்கும் எதுவும் செய்யவில்லையே என்ற எண்ணம் என் மனதை அழுத்தியது.
இந்த இளம்வயதில் எவரும் சந்தித்திராத அளவு கஷ்டங்களை நீ சந்தித்திருக்கிறாய். இவ்வளவு
அடக்கமான உனக்கு, நண்பர்கள் என்று எவரும் இல்லை. ஆனால் உன்னை வெறுப்பவர்களோ ஏராளமானவர்கள்.
ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்கின்றாய். குடும்பம் சிதறுண்டு போய்
எந்த விதமான ஆதரவும் இல்லாத நிலையிலும் நாம் நல்லவற்றின் பக்கமே நிற்கின்றோம். தீயவற்றின்
பக்கம் செல்லவில்லை. ஆனால் நான் குருதி வடியும் இதயத்துடன் இதனை எழுதுகிறேன். கடவுளுக்காக
தன் எல்லாப் பூக்களையும் கொடுத்த பூந்தோட்டம் எப்போதும் பூத்துக் கொண்டேதான் இருக்கும்.
இந்தச் சூழலில் நம்பிக்கைகளும் கூட தகர்ந்து போகின்றன. ஆனால் நம் அன்பிற்குரிய வசந்தா,
மொட்டாக இருந்தவள், இப்போது மலர்ந்து அவள் மூலம் மொட்டுக்கள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன.
அதன் மூலம் நமக்கு வசந்தா இப்போது ராமன், மேலும் கடவுளின் அருளிருந்தால் மேலும் ஒரு
குழந்தை கிடைக்கட்டும். அன்பெனும் ஒளி உன் வாழ்வில் மேலும் பிரகாசத்தைக் கூட்டட்டும்.
அதன் பிரதிபலிப்பு இருள் அடைந்த என் சிறை அறையிலும் கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சி
இருகின்றது. குட்டிக் குழந்தையின் பெயரான ரஞ்சன் எனக்கு என் தாயார் மற்றும் அந்தக்
குழந்தையின் பாட்டியான என் மாவாஷியை நினைவுபடுத்துகிறது. இது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக்
கொடுத்திருக்கும்? நான் இந்தக் குழந்தையைப் பார்ப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
ஆனால் என் அன்பை அந்தக் குழந்தைக்குத் தருகிறேன். அதற்கு இதெல்லாம் புரியுமா என்றும்
தெரியவில்லை. நீ ஏன் எனக்கு சாந்தாவைப் பற்றி எதுவும் எழுதவில்லை? நீ அந்த வேலையை வாகினியிடம்
விட்டுவிட்டாய். இது இந்திய வழக்கம் என்றாலும் நீ அடுத்த கடிதத்தில் நீயே உன் குழந்தையைப்
பற்றி எல்லாவற்றையும் எழுத வேண்டும். இந்தத் தன்னடக்கம் குழந்தைகளுக்குப் பெற்றோரின்
அன்பைப் புரிந்து கொள்ள விடாமல் தடுத்து விடும். இதனை உன்னுடைய விசேஷமான மற்றும் புனிதமான
கடமையாக நினைத்துச் செய். வாகினி பிளேக் நோயினால் அவதிபட்டாள் என்பதை அறிந்து வருந்தினேன்.
அந்தக் கொடிய நோய் நம் மண்ணை விட்டு அகன்றுவிட்டது என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் அது இன்னமும் இருக்கிறது என்பதை இப்போது அறிந்துகொண்டேன். அது குறித்து நீ மிக
கவனமாக இரு. அது முன்பைப் போலவே உள்ளதா அல்லது அதன் தீவிரம் குறைந்து உள்ளதா? இதற்கு
இன்னமும் மருத்துவ விஞ்ஞானத்தில் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லையா? இனிமேல்
அது பரவுவது தெரிந்தால் நீ பம்பாயை விட்டு வெளியேறி விடு. அதனை நம்மால் ஒழிக்க இயலவில்லை
என்றால் நாம் அதனிடம் இருந்து தப்பிக்கவாவது வேண்டும்.
ஜனவரி 1916ல் எனக்குக் கடைசியாக பார்சல் வந்தது.
அதற்குப் பிறகு எங்கள் இருவருக்கும் பார்சல் எதுவும் வரவில்லை. இந்தப் பதினெட்டு மாதங்களில்
எங்களுக்கு இரண்டு பார்சலாவது வந்திருக்க வேண்டும். உன்னுடைய பாதுகாப்பைக் குறித்து
நாங்கள் கவலை கொள்ள இதுவே காரணம். அதனால்தான் நான் சூப்பரின்டன்டன்ட்டிடம் அனுமதி பெற்று
உனக்குத் தந்தி அடித்தேன். ஆனால் இது போன்ற பதட்டங்கள் ஏற்படாதவண்ணம் நாம் இனி நடந்துகொள்ள
வேண்டும். அதற்கு, குறிப்பிட்ட தேதிகளில் இயலவில்லை என்றாலும் குறிப்பிட்ட மாதங்களிலாவது
நீ கடிதங்களையும் பார்சல்களையும் அனுப்புவதே சிறந்த வழி.
இது எங்களைப் பொருத்தவரைக்குமான தீர்வு. ஆனால்
நமக்கு இடையே அரசு என்று ஒன்று இருக்கிறது. அவர்களுடைய விருப்பதிற்கு இணங்க நாம் நடக்கவேண்டும்.
உன்னுடைய சென்ற கடிதத்தில், நீ கிடைக்காமல் போன ஒரு பார்சல் பற்றி எழுதியிருந்தாய்.
அதே போல போன வருடம் என்னுடைய கடிதமும் காணாமல் போயிற்று. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்த இடத்திற்கு ஆயிரக்கணக்கான கடிதங்களும் பார்சல்களும் வருகின்றன. ஆனால் நம்முடைய
கடிதங்களும் பார்சல்களும் மட்டும் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதற்குக் காராணம்
தபால் துறையா? அப்படியிருந்தால் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுவரை அவர்களை
விடாதே. நீ அவற்றைப் பதிவு செய்துதான் அனுப்பி இருப்பாய். அப்படியென்றால் அவற்றை யார்
வாங்கியிருப்பார்கள், யாருடைய சதியினால் அவை களவாடப் பட்டிருக்கும் என்பதைப் கண்டுபிடித்து
விடலாம். ஆனால் ஒரு வேளை இதற்குத் தபால் துறை அல்லாமல் அரசாங்கம் காரணமாக இருந்தால்,
அப்போது நாம் மௌனமாக இருக்கவேண்டும். நான் பல விஷயங்கள் இல்லாமல் இங்கே வாழப் பழகிக்
கொண்டு விட்டேன். அதே போல நீ வருடத்திற்கு ஒருமுறை அனுப்பும் பார்சலும் இல்லாமல் வாழ
என்னால் முடியும். ஒரு புத்தகம் பதிப்பாளரிடம் இருந்து அச்சிடப்படும் இடம் வரை கண்காணிக்கப்பட்டு,
அதன் ஒவ்வொரு பக்கமும் வார்த்தை வார்த்தையாக ஆராயப்பட்டு, அதன் பிறகே அவை பதிப்பிக்கப்படுகின்றன.
அவற்றில் ஆட்சேபகரமாக இல்லாத பகுதிகளையாவது அவர்கள் அவற்றின் சொந்தக்காரருக்குக் கொடுத்திருக்க
வேண்டும்.
நாசிக் மாநாடு ஒரு பெரிய வெற்றி என்றுதான் கூற
வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டோம் என்று நினைத்துக்
கொண்டிருந்த நாங்கள் எங்களை நினைவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு நன்றிக்கடன்
பட்டுள்ளோம். ஒன்றாக இணைந்த பிறகு காங்கிரஸ் இதுபோன்ற விஷயங்களுக்குப் போராட ஏன் தயங்கவேண்டும்?
அதன் தலைவர்கள் தங்களுடைய முக்கியத்துவத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்களாக
இருக்கும். அவர்கள் தங்களை, போயர் புரட்சியில் ஈடுபட்ட போராளிகளை விடுவித்த ஜெனரல்
போத்தாவைவிட சிறந்த ராஜதந்திரியாக நினைத்து கொண்டிருக்கலாம். அல்லது ஐரிஷ் கைதிகளின்
விடுதலைக்காக அயராது பாடுபட்ட ரெட்மாண்ட்டைவிட சிறந்த தேசியவாதியாக தங்களை நினைத்து
கொண்டிருக்கலாம். மிஸ்டர் போனர்லா கூற்றான “இது ஒரு புரட்சியில் பொதுவாகக் கலந்து கொள்வது
போல” என்பது உண்மையல்ல. ஏனென்றால் இந்திய அரசியல் கைதிகள் பெரும்பாலோனோர் பொதுவாகக்
கலந்து கொண்டவர்கள்தான். மற்றவர்களில் பெண்களின் ஓட்டுரிமைக்காகப் பாடுபட்டவர்கள் உண்டு.
அவர்களும் நெடுநாள் முன்பே ஒவ்வொருவராக மிஸ்டர் அஸ்கித் அவர்களால் விசாரிக்கபட்டுத்
தண்டிக்க பட்டவர்கள். காங்கிரஸ் ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்தவுடன் எங்களுடைய
விடுதலை குறித்து ஒரு மனு பொது மக்களால் அனுப்பப் பட வேண்டும். இத்தகைய மனுக்களும்
தீர்மானங்களும் எங்களுக்கு உடனடியாக விடுதலையைப் பெற்று தராதுதான் என்றாலும் அது எங்கள்
விடுதலைக்குப் பிற்காலத்தில் உதவியாய் இருக்கும். அது மட்டுமல்லாது நாம் யாருக்காகப்
போராடினோமோ அவர்கள் நம்மை நினைவில் வைத்திருக்கவில்லை என்றால் திரும்ப அவர்களிடத்தில்
செல்வது அவமானகரமான ஒன்று என நினைப்பவன் நான். சரியோ தவறோ இந்தத் தேசத்தின் மீது அபரிமிதமான
பற்றைக் கொண்டிருக்கிறேன் நான். ஆகவே மனுவை அனுப்ப முடியுமா என்று முயன்று பார். அது
மாநாட்டுத் தீர்மானங்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது.
நம் பாபாவை நான் சந்தித்த ஒரு நிமிடத்தில் நான்
அவரிடம் பித்ருரிணம் (முன்னோர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்), தேவரிணம் (தேவர்களுக்கு
நாம் செலுத்த வேண்டிய கடன்), ரிஷிரிணம் (ரிஷிகளுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) ஆகியவை
போல புத்ரரிணம் (மகன்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்) என்று ஒன்று இருக்கிறது எனக்
கூறினேன். உன்னுடைய கடிதம் கிடைத்த பின்பு அந்தக் கடன் கழிந்ததாகவே நான் உணர்கிறேன்.
நீ இப்போது படித்து முடித்து உன் சொந்தக் காலிலே நிற்கத் தயாராகி விட்டாய். இனி குறைந்தபட்சம்
அடுத்த இரண்டு வருடங்கள் உனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கப் போகிறது. உன்னால் நாங்களும்
மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் எந்த மகிழ்ச்சியும் நிரந்தரமானதல்ல. இந்த உலக வாழ்க்கை
மூன்று இதழ்கள் கொண்ட பூவைப் போன்றது. ஒரு இதழ் மகிழ்ச்சிக்கான வண்ணத்தையும் ஒரு இதழ்
துன்பத்தினால் ஏற்படும் வலிக்கான வண்ணத்தையும் மூன்றாவது இரண்டு வண்ணங்கள் கலந்ததாகவும்
அல்லது வண்ணம் இல்லாமலும் இருக்கும். இப்போது மகிழ்ச்சிக்கான இதழின் நேரம். அடுத்து
துன்பதிற்கான இதழின் நேரம் வரும். அதன்பிறகு இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
வரலாற்றை ஆராய்ந்தாலும் கூட அது பிறப்பு மற்றும் இறப்புகளின் பட்டியல்களையும் திருமணங்கள்
மற்றும் துக்கங்களின் பட்டியல்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது. ஆகவே நாம் மகிழ்ச்சியில்
திளைத்திருக்கும்போது கூட அது நிரந்தரமானது அல்ல என்ற புரிதலோடு துன்ப காலங்களையும்
நினைவில் இருத்தி வைக்க வேண்டும். இந்தியாவில் துரதிஷ்டவசமாக இந்த காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு,
துன்பம் என்னும் காலகட்டம் சஹாரா பாலைவனம் போல மிக நீண்டதாக இருக்கும். தகிக்கும் வெயிலில்
இந்தப் பாலைவனத்தில் இத்தகைய நீண்ட கொடும் பயணத்தை நாம் மேற்கொள்ளும்போது அவ்வப்போது
இது போன்ற பாலைவனச் சோலைகள் கண்ணில் படும். இதுவும் கடவுளின் அருளே என்று கருதி நாம்
நம் பயணத்தைக் கடமையாக பாவித்து தொடரவேண்டும். ஞானிகள் வேண்டுவதைப் போல நாமும் அடக்கத்துடன்
கடவுளிடம் ‘எனக்கு என்ன வேண்டுமோ அதனைக் கொடு, எனக்கு எதெல்லாம் தேவையில்லையோ அவற்றை
நீக்கி விடு’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு இளைஞனின் இறுதி லட்சியம்
எதையும் சேகரிப்பது அல்ல. மாறாக தியாகம் செய்வதே. கடவுளின் மாலைக்காகத் தன்னிடம் உள்ள
எல்லாப் பூக்களையும் தருகின்ற தோட்டத்தைப் போல எப்போதும் நாமும் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
என்னுடைய தாயார் எப்படி இருக்கிறார்கள்? என்னுடைய
ஒரே சகோதரியை நான் எப்படி மறக்க முடியும்? நான் என்மீதே கோபம் கொண்டு என்னுடனே கூட
பேசாமல் இருக்கலாம். இந்த மகிழ்ச்சியான காலம் நீடித்து இருக்கும்போதே எனதன்பிற்குரிய
ஷாந்தாவிற்கும் அன்பிற்குரிய ரஞ்சனுக்கும் ஏதேனும் முதலீடு செய்து சேமித்து வைக்கவும்.
மீண்டும் கஷ்டகாலம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. நம்முடைய மேடம் காமாவின்
பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. போர்க் காலத்திலும் கூட அவர் உன்னை நினைவில்
வைத்திருக்கிறார். சில சமயம் ரத்த உறவுகளைக் காட்டிலும் இத்தகைய நட்புகள் நமக்கு மிகவும்
நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இது மிகவும் சூக்ஷ்மமானது. இதனைப் புரிந்து கொள்வது
கடினம்.
என் பிரிய யமுனாவும் வாகினியும் ஒருவரோடு ஒருவர்
இணக்கமாக இருக்கிறார்களா? நான் அவர்களை அன்புடன் விசாரித்தேன் என்று கூறவும். நம் அன்பிற்குரிய
பாலு எப்படி இருக்கிறான்? நான் அவனை பம்பாய் சிறையில் பார்த்தேன். மிகவும் நேசிக்கத்தகுந்த
பையன். இப்போது பெரிய ஆளாகி இருப்பான் அல்லவா? அதே போல அன்னாவும். அவனும் வளர்ந்து
முதிர்ச்சியுள்ள பெரிய ஆளாகி இருப்பான் என்று நினைக்கிறன். என் சகோதரர்கள் தத்து, நாணா
உட்பட எல்லோரை பற்றியும் எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆவலாக
இருக்கிறது. நான் எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள மாட்டேன் என்று யமுனா நினைக்கலாம்.
ஆனால் என் முந்தைய கடிதங்களில் பல விஷயங்களை குறிப்பிடாததற்குக் காரணம் என் மறதி இல்லை
என்பது அவளுக்கும் புரிந்திருக்கும். பாபாவிற்கு அடுத்தபடியாக நான் மிகவும் நேசிக்கும்
மிகவும் மதிக்கும் குடும்பம் ஒன்று உண்டென்றால் அது அவளுடைய சிப்லுங்கர் குடும்பம்தான்.
ஆனால் என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமான அந்தக் குடும்பத்தின் துன்பத்திற்கும்
கவலைக்கும் நான் காரணமாகி விட்டேனே என்றெண்ணும் போது எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாகின்றது.
அந்தக் குற்ற உணர்ச்சியினாலேயே நான் அவர்களைப் பற்றி மேலும் விசாரிக்காமல் என் அன்பை
வெளிபடுத்தாமல் இருக்கின்றேன். இப்படிப்பட்ட மைத்துனர்கள் கிடைத்ததற்கு ஒருவர் மிகவும்
பெருமைப்படவல்லவா வேண்டும்?. என்னையும் அவர்களுள் ஒருவனாக வளர்த்த அவர்கள் குடும்பம்
எவ்வளவு அன்பானது! துறவிக்கு ஒப்பான, கடமை தவறாத அவர்கள் தாயார். அதே போலத்தான் என்
நண்பர்கள் விஷயத்திலும். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால்
அவர்கள் நன்மையைக் கருதியோ அல்லது என்னுடைய நன்மையைக் கருதியோ நான் அவர்கள் எல்லோரையும்
பெயர் சொல்லி விசாரிப்பதில்லை. என்னுடைய நண்பர் என்று சொல்லிக்கொண்டு உன்னிடம் வந்த
அந்த வழக்கறிஞர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை இன்னமும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பதற்கு
அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதே நேரம் இங்கே என்னைப் பார்த்தேன், என்னுடன்
பழகினேன் என்று கூறிக்கொண்டு உன்னிடம் வருபவர்களிடம் நீ எச்சரிக்கையாக இரு. உனக்கு
மிகுந்த அனுபவம் இருக்கின்றது. அதனால் எச்சரிக்கைகள் எதுவும் தேவையில்லைதான் என்றாலும்,
ஒன்றை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நான் எவர் மூலமாகவும் உனக்கு எந்த
ஒரு செய்தியையும் சொல்லி அனுப்ப மாட்டேன். எல்லாவற்றையும் கேட்டுகொள். ஆனால் எதையும்
அப்படியே நம்பி விடாதே. எவற்றை நம்பலாம் என்று உன் அறிவு சொல்கிறதோ அவற்றை மட்டும்
எடுத்துக்கொள். நேரமாகி விட்டது. நான் முடித்தாக வேண்டும். நீ கேட்ட விவரங்கள் உனக்கு
பாபாவின் கடிதத்தில் அனுப்பப்படும். எல்லோரையும் விசாரித்ததாகக் கூறவும். எங்களுடைய
உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். முடிந்தவரையில் உன்னுடைய உடல் ஆரோக்கியத்தை
நன்றாகப் பார்த்துக்கொள்ளவும். மனித முயற்சியைத் தாண்டி ஏதேனும் மோசமான நிலை வந்தாலும்
அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்போம். கவலை வேண்டாம்.

இப்படிக்கு

உன் அன்புள்ள

தாத்யா.

Posted on Leave a comment

தைவானை இந்தியா ஆதரிக்கவேண்டும் | எஸ். நடராஜன்



சீன அதிபர் ஜின்பிங் அண்மையில் ‘சீன ராணுவம் விரைவில்
அனைத்து வித நடவடிக்கைகள் மூலம் தைவானைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும்’ என்று அறிவித்துள்ளார்.
சீன அதிபரின் இவ்வித அறிவிப்பானது உலக நாடுகளின் தலைவர்களை சற்றே ஆத்திரப்பட வைத்துள்ளது.
அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம்
சீன ஆட்சியாளர்களுக்கு அவர்களுடைய மூதாதையர்களிடம் இருந்து வந்து சேர்ந்த மரபணுக் கோளாறே
ஆகும். தனது தரை மற்றும் கடல் எல்லைகளில் உள்ள சுமார் 16 நாடுகளின் பிரதேசங்களை சீன
ராணுவம் அனுதினமும் ஆக்கிரமித்து வருகிறது. திபெத், மங்கோலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,
வட வியட்நாம், தென் வியட்நாம், வடகொரியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா,
தாய்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, நேபாளம் போன்றவை இதில் அடங்கும். இந்த நாடுகளின்
நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை சீன அரசு உரிமை கோர இதுவரை எந்தவித முகாந்திரமும் ஆதாரமும்
இல்லை என்று உலகின் சிறந்த அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீன ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன், எப்பொழுதேனும்
உலகின் எந்தப் பகுதியிலேனும் ஒரே ஒரு முறை நடந்து சென்றாலும் அப்பகுதி முழுவதும் தமக்குச்
சொந்தம் என்று உரிமை கொண்டாடும் சுபாவம் சீன ஆட்சியாளர்களுக்கு இயல்பாகவே உள்ளது. பதினேழு
மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஒரு சில காலகட்டத்தில் சீனாவை ஆண்ட மஞ்சு வம்சத்து
அரசர்கள் அண்டை நாடுகளான திபெத் மற்றும் மங்கோலியா மீது ஆதிக்கம் செலுத்த தமது படைகளை
அங்கு அனுப்பியபோது இயல்பாகவே வீரம் செறிந்த திபேத்தியர்களும் மங்கோலியர்களும் சீனத்
துருப்புக்களைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். குதிரை ஏற்றம் வாள் வீச்சு மற்றும்
யுத்த கலைகளில் தேர்ச்சி பெற்ற மங்கோலியர்கள் சீனத் துருப்புகளை துவம்சம் செய்து அவர்களின்
போர் சிந்தனையை மறந்து போகுமாறு செய்தனர். இருப்பினும் மக்கள் தொகையில் பல்கிப் பெருகிய
சீனர்கள் அவ்வப்போது மங்கோலியாவில் ஊடுருவி தீராத தலைவலியை ஏற்படுத்தி வந்தனர்.
1959ம் ஆண்டு சீனத் துருப்புகள் திபெத் நாட்டின்
மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டன. அதன் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது
எண்பதாயிரம் சீடர்களுடன் நம் நாட்டில் அடைக்கலம் புகுந்தார். நமது மாநிலமான இமாச்சல
பிரதேசத்தில் உள்ள தரம்சாலா என்ற நகரத்தில் அவர்களுக்கு தங்க இருப்பிடமும் உணவும் அளித்து
இந்திய அரசு பாதுகாத்து வருகிறது. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்திற்காக
1962ம் ஆண்டு நம் நாட்டின் மீது படையெடுத்தது. அருணாச்சல பிரதேசத்தில் சுமார்
60,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா அபகரித்துக் கொண்டது. மேலும் அம்மாநிலத்தின்
தவாங் மாவட்டத்தையும் தெற்கு திபெத் என அழைத்து தன்னுடைய பிரதேசம் எனக் கூறி வருகிறது.
சீனாவின் ஆக்ரோஷத்தைப் பார்த்து பயந்துபோன அப்போதைய மத்திய அரசு திருக்கயிலாய மலையையும்
மானசரோவர் ஏரியையும் சீனாவிற்குத் தாரை வார்த்து விட்டது.
ஸ்ரீ ராமபிரானின் முன்னோர்கள், ஸ்ரீகிருஷ்ணர்,
பீமன், அர்ஜுனன் மற்றும் சைவ சமயப் பெரியவர்களான சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர்,
காரைக்கால் அம்மையார், ஔவையார், சீக்கிய மதகுரு குருநானக் ஆகியோர் திருக்கயிலை மலை
சென்று ஈசனைத் தரிசனம் செய்துள்ளனர். 1962ல் இருந்து அம்மலைக்குச் செல்லும் இந்துக்கள்,
சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமிருந்தும், யாத்திரை வாரியாக
பில்க்ரிமேஜ் டேக்ஸாக  ஒரு குறிப்பிட்ட தொகையை
வசூலித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்தொகை ரூபாய் 30 ஆயிரத்தை எட்டியுள்ளது.
சீனாவின் இச்செயலால் இந்து மதப் பற்றாளர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
1969ம் ஆண்டு ரஷ்யாவிற்குச் சொந்தமான சென்பவோ என்ற
தீவை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனத் துருப்புக்கள் திடீரென்று நள்ளிரவில் புகுந்து
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 90 ரஷ்ய ராணுவ வீரர்களைக் கொண்டு அதைக் கைப்பற்றிக்
கொண்டது. பொழுது விடிந்ததும் டாங்கிகள் சகிதம் நுழைந்த ரஷ்ய ராணுவம் 2000 சீனர்களை
சல்லடையாகத் துளைத்து, அத்தீவை மீட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்ய நாடு விதிக்கும்
எந்த நிபந்தனையையும் மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு வருகிறது.
சின்னஞ்சிறு நாடான தைவான் சீனாவின் தென்கிழக்குத்
திசையில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 36,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு
கொண்டது இந்நாடு. 2000ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 23 மில்லியன். வருடாந்திரப்
பொருளாதார உற்பத்தி ஜிடிபி 311 பில்லியன் டாலர். தனிநபர் வருமானம் 13838 டாலராக வளர்ந்துள்ளது.
1971 அக்டோபர் 26 வரை ஐநா சபையின் உறுப்பினர் மற்றும் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகவும்
இருந்த தைவான், நமது பிரதமர் நேருவின் முன்மொழிதலாலும் உலக நாடுகளின் நிர்பந்தத்தாலும்
ஐநாவில் தான் வகித்த இரு பதவிகளையும் சீனாவிற்கு விட்டுக்கொடுத்தது. அந்நாட்டை அவ்விரு
பதவிகளையும் ஏற்கச் சொல்லி விட்டு வெளியேறிவிட்டது. உலகின் முக்கிய அமைப்பான ஐநாவில்
தன்னை இடம்பெற வைக்க தைவான் செய்த உதவியை மறந்து நன்றி கொன்றுவிட்டு சீனா தைவானை ராணுவ
நடவடிக்கை மூலம் இணைத்துக் கொள்ளப் போவதாக மிரட்டுகிறது.
1961ம் ஆண்டு சீன அதிபர் மா சே துங் தைவானைத் தனது
நாட்டு ஏவுகணைகள் மூலம் தாக்கி இணைத்துக்கொள்ள அறிவிப்பு செய்து அதற்கான பூர்வாங்க
வேலையில் ஈடுபட்டிருந்தது. அப்போதைய ரஷ்ய அதிபர் குருஷேவ் தைவானை இணைக்க சீனா தன்னுடைய
ஏவுகணைகளை கொண்டு தாக்கினால் ரஷ்ய ஏவுகணைகள் சீனாவை அதே வழியில் தாக்கும் என எச்சரிக்கை
விடுத்தார். வேறு வழியின்றி சீனா அம்முயற்சியிலிருந்து பின் வாங்கியது.
ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அருகில் உள்ள
அண்டை நாடுகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற, உலகில் எந்த
ஆட்சியாளர்களுக்கும் புரியாத தெரியாத வினோதமான சித்தாந்தத்தை சீன ஆட்சியாளர்கள் கூறி
வருகின்றனர். 1950ம் ஆண்டுகளிலிருந்து சீன ஆட்சியாளர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட
அமெரிக்கா தனது தெற்கு ஆசியாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் தைவானையும் இணைத்து தனது
அதி நவீன ஏழாவது கடற்படையை தைவான் பிரதேசத்திற்கு அருகில் நிலைநிறுத்தியது.
1987ம் ஆண்டு தைவான் அதிபர் சியான் சிங் குவேர்,
சீனர்களின் நெருங்கிய உறவினர்கள் தைவானின் இருந்தால் அவர்கள் சீனாவிற்கே சென்று குடியேறி
விடலாம் என அறிக்கையும் வெளியிட்டார். 1995ல் தைவானின் அதிபராகப் பதவி ஏற்ற லீ டெங்
ஹூய் ஆரம்பத்தில் சீன ஆட்சியாளர்களோடு சுமுக உறவு கொண்டிருந்தாலும், கடைசியில்  தைவான் தனிநாடாகும் என்ற எண்ணத்தை வெளியிட்டார்.
2000ம் ஆண்டு பதவி ஏற்ற ஜனநாயக முன்னேற்றக் கட்சி டி.டி.பி., தனது அறிக்கையே தைவானின்
சுதந்திரம் எனப் பிரகடனப்படுத்தியது. அமெரிக்கா தைவானுக்கு உதவ முடிவு செய்து சீன நாட்டின்
மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும் அதிநவீனப் போர் விமானங்களை தைவானுக்கு சப்ளை
செய்தது. சீனாவின் எச்சரிக்கையை மீறி அதிபர் லீ டெங் ஹூய்யைத் தனது நாட்டுக்கு சிறப்பு
விருந்தாளியாக அழைத்துச் சென்றது.
இதனால் சீனாவின் பார்வை தைவானின் மீது கடுமையாக
இருந்ததால், ஜனநாயக முன்னேற்றக் கட்சி சீன அரசு ராணுவ நடவடிக்கை மூலம் தைவானை இணைக்காமல்
இருந்தால், தனிநாடு என்ற கோரிக்கையை தைவான் விட்டுவிடும் என அறிக்கை வெளியிட்டது. மேலும்
மேலும் தைவானின் சர்வதேசத் தொடர்புகளை விரிவுபடுத்த வெளிநாடுகளில் உள்ள பல அமைப்புகளுடன்
தொடர்பு கொண்டது.
தைவானில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறி அமெரிக்க
குடிமகன்களாகிவிட்ட தைவானியர்கள் நாடு திரும்பினால் தைவான் அரசின் உயர்ந்த பொறுப்புகள்
வழங்கப்படும் என அறிவிப்பு செய்தது. அவற்றை செயலிலும் காட்டிவிட்டது தைவான். ‘சீனா
என்பது சீனாதான். தைவான் என்பது தைவான்தான்’ என்று அறிவிப்பு செய்து இரண்டும் வெவ்வேறு
நாடுகள் எனப் பிரகடனப்படுத்தியது. தைவான் நாட்டு பாஸ்போர்ட்டுகளில், ‘சீனாவில் அச்சடிக்கப்பட்டது’
என்ற வாசகம் நீக்கப்பட்டு, ‘தைவானில் அச்சடிக்கப்பட்டது’ என மாற்றி அமைக்கப்பட்டது.
தைவானின் ராணுவப் புள்ளிவிவரப்படி 2001ல் இருந்து 2010 வரை 116.6 பில்லியன் டாலர் செலவில்
அமெரிக்க ஆயுதங்கள் வாங்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா
சீன எதிர்ப்பையும் மீறி தைவானோடு பொருளாதார ஒப்பந்தம் செய்தார் மற்றும் அதிநவீன எஃப்16
போர் விமானங்களை தைவானுக்கு வழங்கினார்.
நவீன விஞ்ஞானத்தில் தனது நாட்டை முன்னேற்றி வரும்
சீன ஆட்சியாளர்கள், தைவானை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமாகவும் அறிக்கை வெளியிட்டு
வருகின்றனர். தைவானின் தற்போதைய அதிபர் அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை உடனடியாக வழங்கவேண்டும்
என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அக்கோரிக்கைக்கு இதுவரை
செவிசாய்க்கவில்லை.
உலக அரங்கில் இந்திய நாட்டிற்கு என்று சில முக்கியக்
கடமைகள் உள்ளன. வலிமை குறைவான நாடுகளை மிரட்டல் விடும் நாடுகளிடமிருந்து பாதுகாப்பதும்
ஒன்றாகும். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில்
ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்தபோது பூடான் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தியத் துருப்புக்கள்
அப்பகுதியைச் சுற்றி வளைத்து சீனத் துருப்புக்களை அங்கிருந்து வெளியேறுமாறு செய்தன.
இச்செயல் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் ராணுவ நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகும்.
ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் முதுகெலும்பை முறித்து 20 நாடுகளின் பயணிகள்
மற்றும் சரக்குக் கப்பல்களை மீட்டுக் கொடுத்த பெருமை இந்தியக் கடற்படையே சாரும். சீனச்
சரக்குக் கப்பலும் மீட்கப்பட்டது.  எதிரிக்கும்
ஆபத்தில் உதவ வேண்டும் என்ற இந்திய சித்தாந்தத்தை உலகம் தெரிந்துகொண்டது. எத்தியோப்பியா,
லெபனான், காங்கோ, இலங்கை போன்ற நாடுகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட நமது முப்படையினரின்
சாகசச் செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. 
சீன நாட்டிற்கு உலக அரங்கில் ஆக்கிரமிப்பாளன் என்ற
பெயரோடு தரம் குறைந்த பொருட்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்கிறது என்றும், உலக நாடுகளுக்கு
10 மடங்கு ஏற்றுமதி, ஆனால் ஒரு மடங்கு மட்டுமே அந்நாடுகளிலிருந்து இறக்குமதி என்ற சற்றும்
நியாயமில்லாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்றும் அவப்பெயர் உண்டு.
நியாயம் வெல்லும், அதர்மம் படுதோல்வி அடையும் என்ற
விதியின்படி சீனா தோல்வியடைவது உறுதி. இந்திய நாடு தைவானுக்குத் தேவையான பொருளாதார
ராணுவ உதவிகளை வல்லரசு நாடுகளிடம் நன்கு கலந்து ஆலோசித்துச் செய்ய வேண்டும். இது நமது
கடமையும் கூட
.

Posted on Leave a comment

சில நேரங்களில் சில பதிவுகள் – 24 | சுப்பு

நம்ம ஆஞ்சநேயர்
அடையாறு பகுதியில் ஆர்.எஸ்.எஸ் வேலைகளில் நானும் நண்பர்களும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் சிலர் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். கல்லூரி மாணவர்களைக் குறிவைத்துச் செயல்பட்ட இவர்களில் முக்கியமானவர் பின்னாளில் வழக்கறிஞராகி, உயர்நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வும் பெற்றுவிட்டார். இன்னொருவர் தோழர் சித்தார்த்தன். சித்தார்த்தனோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியாரியக் கொள்கைகளுக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்ட குருவிக்கரம்பை வேலுவின் மகன் சித்தார்த்தன். அடையார்வாசி. சித்தார்த்தன் மார்க்சிஸ்ட் சிந்தனையுடையவன். முதலில் இவனைச் சந்தித்தபோது இலக்கியம் குறித்துப் பேசினோம். நான் ஒவ்வொன்றாக ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தபோது அவன் “நீங்கள் வண்ண நிலவனைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“அவர் எந்தப் பத்திரிகையில் எழுதுகிறார்?” என்றேன்.
“பத்திரிகைகளில் அவர் எழுத மாட்டார்” என்றான்.
“பின்னே, நாமே அவரைத் தேடிப்போய் படிக்க வேண்டுமா?” என்றேன்.
“இல்லை. இலக்கியத் தரமான கதைகளை வெளியிடுவதற்கென்றே இதழ்கள் இருக்கின்றன. கணையாழியை நீங்கள் பார்த்ததில்லையா?” என்றான்.
“லைப்ரரியில் பார்த்திருக்கிறேன். அதில் படம் போடுவதில்லையே. அதனால் எனக்குப் பிடிக்காது” என்றேன்.
சித்தார்த்தன் எனக்கு ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கொடுத்தான். இதைக் கையில் எடுத்தவுடன் கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது எனக்குள் பல விஷயங்களைப் புரட்டிப் போட்டது. பிறகு ஆன்டன்செகாவ், பால்ஸாக், துர்கனேவ், ஆல்வர் காம்யூ, பிறகு புதுமைப்பித்தனில் தொடங்கி பூமணி வரை படித்தேன். இலக்கியத் தொடர்பு என்னை கலாபூர்வமான உலகத்தைக் காணச் செய்தது. சித்தார்த்தனும் நானும் சேர்ந்து ‘வெளிப்பாடு’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம்.
பொதுவுடைமைக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் புதிய அலைத் திரைப்படங்களான அங்கூர், நிஷாந்த், மன்தன் போன்ற ஷ்யாம் பெனெகல் இயக்கிய ஹிந்தித் திரைப்படங்களுக்கு சித்தார்த்தன் என்னை அழைத்துச் செல்வான். பொருள் முதல் வாதமா கருத்து முதல் வாதமா என்பதில் எங்களுக்குள் கட்சி பேதம் இருந்தாலும் ஷ்யாம் பெனெகலை ரசிப்பதில் கருத்தொற்றுமை இருந்தது.
அங்கூர் (1974)என்பது ஹைதராபாதிற்கு அருகே உள்ள ஒரு கிராமத்துக் கதை. இந்த கதையில் ஷபனா ஆஸ்மியின் பெயர் லட்சுமி. லட்சுமியும் அவளுடைய ஊமைக் கணவனும் ஏழை தலித்துகள். கிராமப் பண்ணையாரான சூர்யாவின் வீட்டில் லட்சுமியும் அவரது கணவனும் வேலையாட்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் லட்சுமி, முதலாளியின் ஆசைக்கு இடம் கொடுக்கிறாள். கிராமம் முழுவதும் முதலாளிக்கும் லட்சுமிக்கும் உள்ள கள்ள உறவு பற்றியே பேச்சாய் இருக்கிறது…
கடைசிக் காட்சியில் ஒரு சிறுவன் சூர்யா வீட்டின் மீது கல்லை எரிவதாக முடித்திருப்பார் இயக்குநர் ஷ்யாம் பெனெகல்.
நிஷாந்த் (1975) படத்திலும் ஷபனா ஆஸ்மிதான் மையப்புள்ளி. இந்தப் படத்தில் அவருடைய பெயர் சுசீலா. கிராமத்து அழகியான சுசீலா பண்ணையாரால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறாள். சுசிலாவின் கணவர் பள்ளிக்கூட வாத்தியார். அவர், காவல் நிலையம் கலெக்டர் அலுவலகம் என்று எங்கே போய் முறையிட்டாலும் நீதி கிடைப்பதாக இல்லை. இறுதியில் கிராமத்துப் பூசாரியின் தலைமையில் மக்கள் ஒன்றுதிரண்டு பண்ணையாரைக் கொலை செய்துவிடுகிறார்கள்.
இந்தப் படங்களையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு புரட்சியின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது சித்தார்த்தனின் நினைப்பு.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இந்தியச் சூழலில் சமயம் சார்ந்த தீர்வுதான் சரிப்படும். இதைத்தான் பூசாரியின் தலைமை என்பதாக இயக்குநர் படம்பிடித்திருக்கிறார் என்று சொல்லி அவனை மடக்கிவிட்டேன்.
நாளடைவில் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. இருந்தாலும் அவ்வப்போது கொள்கை உரசல்களும் உண்டு. ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும். நானும், சித்தார்த்தனும் பேசிக் கொண்டிருந்தோம். பராசக்தி உண்டு என்பதை அவனிடம் நிரூபிக்க முயன்றேன். நான் எதைச் சொன்னாலும் அவன் ஒத்துக் கொள்வதாயில்லை. நாகரிகமாக மறுத்துவிட்டான். எனக்குக் கோபம் வந்துவிட்டது.
“இதோ பார். மணி பத்தாகிறது. நான் காலையில் சாப்பிட்டதுதான். நம் இருவரிடமும் காசில்லை. இந்த வேளையில் ராகவன் வீட்டுக்குப் போனாலும் எதுவும் மிச்சமிருக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். பராசக்தி என்னைப் பட்டினி போட மாட்டாள். நீயே பார்” என்றேன்.
நான் இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கே சேகர் என்ற பையன் வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினான். இவன் எனக்கு நெருங்கிய நண்பனில்லை. கொஞ்சம் பழக்கம். அவ்வளவுதான். தவிர, ஒரு சண்டையில் இவனுடைய அண்ணனின் மூக்கெலும்பை நான் உடைத்திருக்கிறேன். சேகர் என்னிடம் “ஹலோ” என்றான். பக்கத்திலிருந்து டீக்கடையின் கல்லாவில் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, “நான் வரேம்மா. நீயே வேண்டியதைச் சாப்பிட்டுவிடு” என்று சொல்லிவிட்டு அவசரமாய்ப் போய்விட்டான்.
*
காலில் செருப்பு இல்லாமல், பட்டன் இல்லாத சட்டையோடும், பரட்டைத் தலையோடும் நான் ஒரு பைராகிபோல் உலவி வந்தேன். எனக்குத் தெரிந்த பாரதியார் பாடல்களை உரக்கப் பாடிக்கொண்டே நடந்தேன். இந்த மாதிரி ஒருமுறை பாடிக்கொண்டே போனபோது சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன. என்னைப் பைத்தியக்காரனென்று நினைத்து சிறுவர்கள் கல்லால் அடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி ரமணனிடம் சொன்னபோது அவனை யாரும் கல்லால் அடிக்கவில்லையே என்று வருத்தப்பட்டான்.
ரமணனோடு ஒருநாள் மாலை கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது, நினைவு தப்பியது. கடலும், கரையும் நானும், என் கையிலிருந்த சுண்டலும் ஒன்றாகச் சுழன்றோம். பாகுபாடுகள் அழிந்தன. நினைவை நிலைநிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் ஓடினேன். அருகிலிருந்த ராகவன் வீட்டுக்குள் நுழைந்தேன். சமையல்கட்டு வாணலியில் கத்திரிக்காய் கறி வெந்து கொண்டிருந்தது. கையில் சுடச்சுட அந்தக் கறியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டேன். நாக்கு சுட்டு, வாய் வெந்து புறையேறியது. கண்ணில் நீர் வடிந்தது. ஒரே எரிச்சல். நான் நானானேன். எனக்குத் தியான முறைகள் எதுவும் தெரியவில்லை. இந்த மாதிரி திடீர் அனுபவங்கள் ஏற்பட்டபோது ராட்சச வைத்தியத்தைத் தவிர வேறு என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
பெரும்பாலான நேரங்களில் நான் ரமணன் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒருமுறை ரமணன் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள். ஆகவே, சாப்பிடு என்று என்னைச் சொல்ல ஆளில்லை. ஆகவே, சாப்பிடவில்லை. அது பற்றிய உணர்வுமில்லை. மூன்றாவது நாள் மதியம் நடக்கும்போது கால்கள் தடுமாறின. ஏன் இவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்று ஆராய்ந்தபோதுதான் ஒழுங்காகச் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆயிற்று என்று தெரிய வந்தது. உடனடியாக சாப்பிட வசதி இல்லை. அன்று இரவு ராகவன் வருவதற்குள் நான் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் ராகவன் தயவில் பசியாறினேன்.
ரமணனுடைய நண்பன் ரவியின் தொடர்பு எனக்கு மிகவும் பயன்பட்டது. ரவியின் சந்திப்புக்குப் பிறகு எனக்குத் தத்துவத்தில் ஆர்வம் பிறந்தது. தத்துவப் படிப்பு என் அறிவுத்தளத்தை விசாலமாக்கி பார்வையைக் கூர்மையாக்கியது.
ரவி வீட்டில் ஒருநாள் ரமணனும் மற்ற நண்பர்களும் கவிதை பற்றிய சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த சபைகளில் என்னுடைய பங்கு எதுவுமிருக்காது. வாயே திறக்க மாட்டேன். ‘எது கவிதை’ என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கும் அந்த அறைக்கும் நடுவிலிருந்த திரையை விலக்கி, ரவியின் மனைவி ஷோபனா முகம் காட்டினாள். “மோகத்தைக் கொன்று விடு, அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு. இதுதான் கவிதை” என்றாள். மானசீகமாக அவளுக்கு மதிப்பெண்களை அள்ளிப் போட்டேன். அவள்தான் அன்றைய தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி.
எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி என்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருந்தாள். இவள் கல்லூரி பொருளாதாரப் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்டு என்னை ஒருநாள் நச்சரித்துக் கொண்டிருந்தாள். கடைசி வருடக் கல்லூரிப் படிப்பில் ஏற்படும் சந்தேகத்தை, கல்லூரிக்குள் நுழையாத என்னுடைய விஷய ஞானத்தால் தீர்க்க முடியாது. அந்தப் பெண்ணும் விடுவதாயில்லை. புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். Keynesian Propensity theory பற்றிய பாடம் அது. பராசக்தியிடம் பிரார்த்தித்துவிட்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடத்தைப் படித்தேன். பிறகு இரண்டு மணி நேரம் அவளுக்கு அதை விளக்கினேன்.
மறுநாள் அதே புத்தகத்தை எடுத்து, அதே பாடத்தைப் படித்துப் பார்த்தேன். அட்சரம்கூடப் புரியவில்லை. இதற்குப் பிறகு இரண்டு மாத காலம் முதலிலிருந்து தொடங்கிப் பொருளாதாரத்தைப் படித்த பிறகுதான் அந்தப் பாடம் விளங்கியது.
*
சிங்கப் பெருமாள் கோயிலில் ராமு ஐயங்கார் என்ற பெரியவர் இருந்தார். நம்மைப் பார்த்தவுடன் ஆரூடம் சொல்லிவிடுவார். ரமணன் அப்பா சேஷன் இவரைப் பார்க்கப் போவார். பலமுறை என்னை அழைத்தும் நான் போகவில்லை. பிறகு ரமணன் வற்புறுத்தியதால் நான், ரமணன், ராகவன், ராமானுஜம் இன்னும் சில நண்பர்களோடு சிங்கப்பெருமாள் கோயிலுக்குப் போனேன்.
ராமு அய்யங்கார் வீட்டில் அடியெடுத்து வைத்தவுடனே எனக்கு ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. நல்ல விருந்து பரிமாறப்பட்ட இலையில் அசிங்கத்தை வைத்தது போல் இருந்தது. இவரைப் பார்க்க நமக்குத் தகுதி கிடையாது என்று நினைத்து கதவோரமாக உட்கார்ந்தேன். ரமணனும் நண்பர்களும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்த்து “டேய் இவனுக்கு ஒன்றும் சொல்ல முடியாதுடா” என்றார். சரி ஜென்மாந்திரக் குப்பையெல்லாம் இவருக்குத் தெரிந்துவிட்டது. அதுதான் இப்படிச் சொல்கிறார் என்று குறுகினேன். “இவனுடைய பிரகாசம் அதிகமாயிருக்கிறது. அதனால் எதுவும் சொல்ல முடியாது” என்றார். அருகில் வந்து அமரச் சொன்னார். “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். நானறியாமல் என்னிலிருந்து “பராசக்தியைப் பார்க்க வேண்டும்” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன. நான் சொல்லி முடிப்பதற்குள் “ஏன் நாலு நாளுக்கு முன்னே பார்த்தியே. போறாதோ?” என்றார். என்னிடம் வார்த்தையில்லை.
நான்கு நாட்களுக்கு முன்னர் சிவன் கோவில் மங்கள துர்க்கை சந்நிதியில் அபிராமி அந்தாதி படிக்கும்போது அம்பாள் தன் பாதத்தை என் தலையில் வைத்தது போலிருந்தது. நமக்குத் தகுதியில்லை என்று அவள் பாதத்தைத் தட்டிவிட்டுவிட்டேன். ரமணனுக்கு மட்டும் விஷயம் தெரியும். ரமணன் அதை அய்யங்காரிடம் தெரிவித்தான். மற்றவர்கள் இப்போது ராமு ஐயங்காரிடம் கேட்க வேண்டியிருந்ததைக் கேட்டவுடன் புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன் அவரை நமஸ்கரித்தேன். “அபிராமி அந்தாதி இன்று எத்தனை நாள்?” என்றார். ‘நூற்றி நாலாவது நாள்” என்றேன். “நூற்றி எட்டாவது நாள் அபிராமி தோட்டைக் கழற்றிப் போடுவாள். ஆனால் உனக்கு இது நடக்கும்போது எந்தப் பாதிப்பும் இருக்காது. மனம் அமைதியாகவே இருக்கும்” என்றார்.
வெளியே வந்தோம். நண்பர்கள் பார்வையில் புதிய மரியாதை தென்பட்டது. ராகவன், “Let us have a treat” என்று சொல்லி எல்லோருக்கும் பாஸந்தி வாங்கிக் கொடுத்தான். ரமணன் என்னைத் தனியாக அழைத்து “டால்ஸ்டாய் கதையை ஞாபகம் வைத்துக்கொள்” என்றான். டால்ஸ்டாய் கதையை நான் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் சொல்லுவேன். கடவுள் ஓரிரவு ஏழைத் தச்சனுடைய கனவில் வந்தாராம். நாளை உன்னை நேரே வந்து சந்திக்கிறேன் என்றாராம். மறுநாள் பூராவும் தச்சன் காத்திருந்தும் கடவுள் வரவில்லை. வருத்தத்துடன் தச்சன் தூங்கியபோது மீண்டும் கனவில் கடவுள். ஏனையா என்னை ஏமாற்றினீர் என்று தச்சன் கடவுளைக் கேட்டான். நான் உன்னை ஏமாற்றவில்லையே. காலையில் கோச் வண்டியில் சிக்காமல் ஒரு கிழவியைக் காப்பாற்றினாயே, அந்தக் கிழவியும்; மதியம் சாப்பிடும்போது ஐயா என்று குரல் கேட்டவுடன், உனக்காக வைத்திருந்த உணவைப் போட்டாயே, அந்தப் பிச்சைக்காரனும் நான்தான் என்றாராம் கடவுள். இதுதான் கதை. ஆகவே, நான் கவனமாக இருக்க வேண்டும்.
பஸ்ஸில் வரும்போதே பராசக்தியை எதிர்பார்த்தேன். சாலை ஓர மரம் பராசக்தியாக இருக்குமோ? மரத்தின் அடியில் குப்பையைப் பொறுக்கும் சிறுமியோ, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பனோ என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக இரவு பகலாக நானே ஆச்சரியப்படும்படி வேறு சிந்தனையே இல்லை. மூன்றாம் நாள் இரவு அசதியில் நன்றாகத் தூங்கிவிட்டேன். பாதி இரவில் பராசக்தியின் பாதம் பட்டது. உடலெங்கும் மின்சார ஓட்டம். கண் விழிக்காமலே உறங்கிவிட்டேன்.
காலையில் ராகவன் “ஏண்டா, தள்ளிப் படுக்கக்கூடாது” என்றான். “ஏன், என்னாயிற்று?” என்றேன். “ராத்திரி பாத்ரூம் போவதற்காக எழுந்தவன் உன்னை மிதித்துவிட்டேன். அதற்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. விடியும்வரை படுக்கையில் உட்கார்ந்துகொண்டு காயத்ரி ஜபம் செய்து கொண்டிருந்தேன்” என்றான். நம்ம லெவலுக்கு ராகவன்தான் பராசக்தி என்பதை யூகித்துக் கொண்டேன். நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. கோவிலுக்குப் புறப்பட்டேன்.
சிவன் கோயிலுக்கு வந்து ராமர் சந்நிதியில் நிற்கும்போது “காதைப்பார்” என்று காதின் உள்ளே ஒரு குரல் கேட்டது. திரும்பினால் அராளகேசி. அருகில் சென்றால் அம்பாளுடைய வலது காதில் தோடில்லை. அப்போதும் எனக்கு உறைக்கவில்லை. “சந்துருவைக் கூப்பிடுங்கள்” என்று மேனேஜரிடம் சொன்னேன். அவர் வந்து “என்ன விஷயம்?” என்றார். “அம்பாள் காதில் தோட்டைக் காணோம். சந்துருவை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றேன்.
“நீர்தானய்யா அபிராம பட்டர். அதுதான் தோடு விழுந்துவிட்டது” என்றார் அவர். சந்துரு வந்து பார்த்தபோது தோடு கீழே கிடந்தது. அப்போது கௌரிசங்கர் கோவிலுக்குள் நுழைந்தான். அவனிடம் விஷயத்தைச் சொன்னேன். அந்த சமயத்தில் என் மனோநிலை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. ஆரவாரமும் இல்லை. அய்யங்கார் சொன்னதை நினைவு கூர்ந்தேன்.
ரமணன் வீட்டுக்குப் போனேன். “ரமணா, உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றேன். “இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் அரைமணி நேரம் அக்காள் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு ரமணனும் நானும் வெளியே வந்தோம். அவனிடம் சொன்னவுடனே, அவன் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி, அவர் உடனே அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய் என்று அமர்க்களப்படுத்திவிட்டார்.
அன்று மாலை ரமணன் வீட்டுக்கு வக்கீல் ரவி வந்தான். நானும், ரமணனும், ரவியும், கௌரியும் கோவிலுக்குப் போனோம். உள்ளே நுழையும்போது சந்தேக புத்தி தன் வேலையைக் காட்டியது. ‘Perhaps it was a coincidence’ என்று நினைத்தேன். சந்நிதியில் நின்று அம்பாளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரெண்ட் கட். கண் முன்னே இரண்டு காதுகளிலிருந்தும் தோடு கழன்று கீழே விழுந்தது.
நான் அந்தாதி சொல்லத் துவங்கினேன்.
அந்தாதி முடிந்து கண் விழித்துப் பார்த்தபோது கௌரி மட்டும் உடனிருந்தான். “நீ ரொம்ப சத்தம் போட்டுட்டே. அதனால அவங்க போயிட்டாங்க” என்றான். அவர்களைப் பார்ப்பதற்காக கௌரியும் நானும் கடற்கரையை நோக்கி நடந்தோம்.
நானும், ராகவனும் ஒருநாள் ஈராஸ் தியேட்டரில் சினிமாவுக்குப் போனோம். இந்திப்படம். டைட்டிலில் ‘காளி சரண் என்று பெயர் போட்டவுடன் ராகவன், “ஆஹா, என்ன பெயர்?” என்றான். எனக்கோ கழுத்தில் விறைப்பு. கபாலத்திற்குள் ரத்தப் பாய்ச்சல். கண்கள் சொருகி, தலை வலி ஆரம்பித்தது. எதேச்சையாகத் தோட்டத்துப் பூவைப் பார்த்தாலோ, எதிரில் உள்ள குழந்தை சிரித்தாலோ இந்தத் தலைவலி அனுபவம் ஏற்படுவதுண்டு.
மறுநாள் தலைவலியைச் சரி செய்ய ராமு அய்யங்காரிடம் போனேன். அய்யங்கார் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டார். தலையை மேலே உயர்த்தி எங்கோ பார்த்தபடி “இப்போது எப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அவர் சொல்லும் போதே கழுத்தில் விறைப்பு தளர்ந்தது. மெள்ள மெள்ள தலையிலிருந்து பளு இறங்கியது. கமென்ட்ரி மாதிரி அவர் பேசிக் கொண்டேயிருந்தார். நரம்புகளில் முறுக்கு அவிழ்ந்தது. வலி குறைந்தது. தலையிலிருந்து கழுத்து, தோள்பட்டை வழியாகக் கீழே போய்விட்டது. காற்றின் நுண்ணிழை போன்ற கரங்களால் என்னை வருடி, வைத்தியம் செய்தது யார் என்ற கேள்வி மிஞ்சியது. அய்யங்காரைக் கேட்டேன்.  “எல்லாம் நம்ம ஆஞ்சநேயர்தான்டா” என்றார் அவர். உடல் பதறிவிட்டது எனக்கு. சிறிது நேரம் சமாளித்துப் பேசிவிட்டு சீக்கிரமே அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.
…தொடரும்

Posted on Leave a comment

கிருதுமாலில் ஒரு மால் (சிறுகதை)| கிரி பிரசாத் கண்ணன்



‘ஸ்வாமி உள்ளே இருக்கீரா?’ என்ற சோகம் கலந்த குரலோடு
நீலகண்ட தீக்ஷிதர் ரேழியில் நின்றுகொண்டு உள்ளே நோக்கி கோவிந்த கனபாடிகளை அழைத்தார்.
சாணம் தெளித்து மெழுகிய சற்றே நீளமான மண் தரையோடு கூடிய திண்ணையில் ஊர்ப் பெரியவர்கள்
இருந்தார்கள். கறவைகள் பனிப்புல் மேய்வதற்காக அந்தந்த வீட்டின் கொட்டத்திலிருந்து வெளியே
வரவும், பல்கால் குயிலினங்கள் கூவிக்கொண்டு தன் இரை தேடப் போகவும் சரியாய் அமைந்த,
பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் காலம். ‘ஓதல் அந்தணர் வேதம்பாட, சீர்இனிதுகொண்டு நரம்புஇனிது
இயக்கி..’ என்று சிறப்போடு இருக்கும் மதுரையின் தென்மேற்கே ஒரு கிராமம் துவரிமான்.
இப்போது கனபாடிகளை அழைக்கும் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்.
பச்சிலை நீள் கமுகும் பலவும், தெங்கும் வாழைகளும்,
விளைசெந்நெலும் ஆகியெங்கும் மச்சனி மாடங்கள் நிறைந்த, வைகைக்கரையில் அமைந்த ஊர். எங்கு
நோக்கிலும் இயற்கை பச்சை கம்பளத்தை விரித்தாற்போல் இருக்கும் அழகு சூழ்ந்த ஊர். அரசன்
வழி நின்ற குடிகளும் அவ்வாறே உத்தமர்களாய் இருந்தார்கள்.
ரெங்கம்மாள் அகல் விளக்கின் வெளிச்சத்தில் திருமடப்பள்ளியில்
பாலமுது காய்ச்சிக்கொண்டிருந்தார். இரண்டு நாளில் ஏகாதசி. அதற்குள் அச்சித்திரம்-அஸ்வமேதம்
பாராயணம் முடித்து கடகம் என்ற யஜுர் வேதம் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அஸ்வமேதம்
பாராயணம் செய்து கொண்டிருந்தார் கனபாடிகள். பின்வரும் பஞ்சாதி சொல்வதற்கும், தீக்ஷிதர்
அழைப்பதற்கும் சரியாய் இருந்தது. அவர்கள் வந்த நோக்கமும் அது தான்.
‘ஆப்ரஹ்மன் ப்ராஹ்மனோ ப்ரஹ்மவர்சஸீ ஜாயதாம்’..
‘இந்த தேசம் முழுவதும் ப்ரஹ்ம தேஜஸ் உள்ள
வேதமறிந்தவர்கள் உண்டாகட்டும். இந்த நாட்டில் அரசர்களும், ஆயுதங்களும், வீர்ய சௌகர்யமும்
உண்டாகட்டும். பசுக்கள் முதலியவைகள் நன்கு உண்டாகட்டும். பெண்கள் நாகரீகமாக திகழட்டும்.
பருவம் தோறும் நல்ல மழை பெய்யட்டும். மரங்களும், செடிகளும், பயிரும் வளரட்டும். நமது
நாட்டிலுள்ள உள்ள எல்லோரின் யோக க்ஷேமம் வளர்ச்சி அடையட்டும். நமது நாட்டை ஆளும் அரசன்
புத்தி கூர்மையுடன் மக்கள் நலம் விரும்பும் வீரனாக திகழட்டும்.’
அவர்கள் குரல் கேட்டு, அந்த பஞ்சாதியோடு வெளியில்
வந்தார் கனபாடிகள்.
‘என்ன தீக்ஷிதர் ஸ்வாமி இந்நேரம். நான் கோவில்
நடை திறக்க இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறதே. ஏதாவது அவசரமா?’ என்றபடி வெளியில் பார்த்தார்.
அங்கு, அரையர், போரையர், தென்னவன் பிரம்மராயர் மாறன்காரி அனைவரும் வந்திருந்தனர். அத்தனை
பெரிய அரசு அதிகாரிகளையும் கண்டதில் கனபாடிகளுக்குத் திடுக்கிட்டது. விரைவாய் வெளியே
வந்தார். அனைவரையும் உள்ளே அழைத்தார்.
தீக்ஷிதர் சொல்லத் தொடங்கினார். ‘கனபாடிகளே, நாம்
சிறிதும் எதிர் பார்க்காத ஒரு நேரம் வந்துவிட்டது. நம் ஊரையும் நம் குல தனத்தையும்
நாம் காக்க வேண்டும்.’ கனபாடிகளுக்குப் பதற்றம் அதிகமானது.
அரையர் தொடந்தார். ‘ஆம். அந்நியப்படை நம் நாடு
நோக்கி வருகிறது. அவர்கள் கண்ணூர் கொப்பம் வந்து விட்டனர். இன்னும் ஓரிரு நாளில் கண்ணூர்
கொப்பம் வீழ்ந்தவுடன் அந்நியப்படை நம் பாண்டிய நாடு நோக்கிவரும்’ என்றார் கொஞ்சம் தழுதழுத்த
குரலில் வரும் ஆபத்தின் குணம் தெரிந்து.
அதற்கு கனபாடிகள் ‘முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
திருநாடு சென்ற பின், நம் மன்னர் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் மழவராயன் சிங்காசனத்தை
அலங்கரிக்கும் போது இந்த சோழ, சேர, ஹொய்சாள அரசர்கள் நம்மை என்ன செய்ய முடியும்.’
மாறன்காரி இடைமறித்தார். ‘சரிதான் கனபாடிகளே. அவர்கள்
வருவதாயின் நம் ஊரின் சிறுபிள்ளை கூட எதிர்கொண்டு ஓடவிடும். ஆனால் வருவது அவர்களல்ல.
துலுக்க படைகள் வடக்கிருந்து ஒவ்வொரு நகரமாய்ப் பிடித்து வருகிறது.’ இது கேட்டவுடன்
கனபாடிகளும் தீக்ஷிதர்களும் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் இருந்தனர்.
மாறன்காரி தொடந்தார். ‘அந்தப்படை நாடு நகரமும்
அழிப்பது மட்டுமில்லாது கோவில்களையும் அழிக்கிறார்கள். அவர்கள் இலக்கே நம் தெய்வங்களும்,
ஆபரணங்களும்தான்.’ அதற்கு மேல் அவரால் பேச இயலவில்லை.
போரையர் விஷ்ணுவர்தன் தொடந்தார். ‘ஆம். ஸ்ரீரங்கம்தான்
தற்போது அவர்கள் இலக்கு. அதில் பெரும் பொருள் அவர்களுக்குக் கிடைக்கப்போவது உறுதி.
அந்த ஆசையில் அவர்கள் மதுரை நோக்கியே வருவார்கள். ஸ்ரீரங்கத்தில் உள்ள பலர் ஊரைவிட்டுச்
சென்றுவிட்டதாகவும், கோவிலையும், நம்பெருமாளையும் காக்க பெரும் படை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து அதில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் நம்
குடிகளையும், கோவிலையும் காக்க வேண்டும். அரசர் இன்று காலை மந்திராலோசனை கூட்டம் முடிந்து
திருமுகம் வரைவார் மூலம் ஓரிரு திருமுகங்களை நம் பாண்டிய நாட்டின் நாற்பத்திரெண்டு
நாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறார். இதில் நாம் இருக்கும் ‘திருமலை வள நாடு’ மட்டுமின்றி,
‘திருமல்லிநாடு, திருவழுதிநாடு’ இரண்டும் மிக முக்கியமாய் இருக்கிறது. அந்நியரிடமிருந்து
இங்குள்ள கோவில்கள்தான் பெரிதும் காக்கப்படவேண்டும்.’ ஒரே மூச்சாய் சொல்லி முடித்தார்.
‘நம் ஊரின் பெருமை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய
வேண்டியதில்லை. உங்கள் முன்னோர்கள் தான் இந்த ஊரின் முதல் குடிகள் என்று கூடச் சொல்லலாம்.
இங்குள்ள கோவிலில் உங்கள் குடும்பம்தான் வழிவழியாய் ஆராதனை செய்கிறார்கள். நம் கோவில்
பெருமை பன்மடங்கு பெரிது.’ பெரும் அரசு அதிகாரியான தென்னவன் பிரம்மராயர் மாறன்காரி.
அதிர்ச்சியில் உறைந்திருந்த கனபாடிகள் தொடந்தார்.
‘நீங்கள் சொல்வது சரிதான். அந்த இறைவனே எங்களுக்கு இந்தக் கைங்கர்யத்தைத் தந்திருக்கிறான்.
நம்மாழ்வார் சொல்வது போல ‘தன்னாக்கி என்னால் தன்னை இன்கவி பாடும் நம்வைகுந்தநாதன்’.
நீங்கள் சொல்வது போல் நம் ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. என் முன்னோர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
இங்கு தான் கிருதுமால் என்ற வைகையின் கிளை நதி உற்பத்தியாகி மதுரை நோக்கிப் புறப்படுகிறது.
அங்கு நம் கூடலழகர் சந்நிதி சுற்றிப் பாய்கிறது, வைகுந்தம் போல். கடைச்சங்க காலத்திற்கு
முந்திய பாண்டியர்களில் ஒருவராகிய ‘வடிம்பலம்ப நின்ற பாண்டியன்’ ஆட்சிக் காலம் தொட்டே
இந்த ஊருக்கு வரலாறு உண்டு. நெடுங்காலம் ஆட்சி செய்தார் இப்பாண்டியன். ஒரு நாள் இந்த
ஊரில் கிருதுமால் நதியில் சந்தியாவந்தனம் செய்யும்போது, அவர் கையில் ஒரு மீன் அகப்பட,
அது தன் உருவைப் பெரிதாக்கிக்கொண்டே போக, அரசனும் அதற்கு இடம் தர முடியாமல் தவித்தான்.
முடிவில் அதுவே திருமாலின் முதல் அவதாரமாக ‘மச்சாவதாரமாக’ காட்சி தந்தது. உலகமே கடற்
பிரளயத்தால் அழிய, திருமால் சொல்லியபடி, அந்த மீனின் அருளால், இம்மன்னன் மட்டும் நம்
கிருதுமாலில் தோன்றிய நம் குடிகளைக் காத்தார். இதையே திருமங்கை ஆழ்வாரும் தம் திருமொழியில்
இப்படி சொல்லிருக்கிறார்.
வானோரளவும்முதுமுந்நீர் வளர்ந்தகாலம் * வலியுருவில்
மீனாய்வந்துவியந்துய்யக்கொண்ட தண்டாமரைக் கண்ணன் *
ஆனாவுருவிலானாயன் அவனைஅம்மாவிளைவயலுள் *
கானார்புறவில்கண்ணபுரத்து அடியேன்கண்டுகொண்டேனே.
‘அது முதல் இந்த ஊர் பாண்டியர்களின் வழிபடு ஊரானது.
வடிவலம்ப பாண்டியர் பின்னாளில் அதே கிருதுமால் தோன்றுமிடத்தில் ஒரு சிறு கோவிலும் கட்டினார்.
அதற்கு இறையிலி/திருவிடையாட்டம் (நிலங்களும்)தந்து எங்கள் முன்னோரை ஆராதனம் செய்யப்பணித்தார்.
இன்று வரை நாங்கள் கைங்கர்யப்பேறுபெற்றோம். அப்பப்பா எவ்வளவு சிறப்புஇருக்கிறது நம்
ஊருக்கு’ என்றார் கனபாடிகள்.
அவர் வாய் திறந்தாலே வேதமும் தமிழ்மறையும் அருவியாய்ப்
பெருக்கெடுக்கும். வந்தவர்கள் எல்லாம் தங்கள் வேலையை மறந்து இருந்தனர். அப்போது சங்கிடுவான்
சங்கின் ஒலி கேட்டுத் தன் நிலைக்கு வந்தனர்.
‘இவ்வளவு பெருமையுடைய நம்மூர் காக்கப்படவேண்டும்.
பலகாலம் தொட்டு இங்கு நம்மைக் காக்கும் நம் பெருமானும்..’ உணர்ச்சியின் மேலிட்டு கொஞ்சம்
கர்ஜித்தார் அரையர், சைவ சமயத்தராயினும். அடுத்த வேலைகளில் இறங்க அனைவரும் ஆயத்தமாயினர்.
போரரையரும், மாறன் காரியும் அதற்கான திட்டம் வகுத்தனர்.
‘இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்குள் நம் ஊரைக்
காலி செய்து மேலும் தெற்கே போகவேண்டும். குடிகள் கொஞ்சம் கொற்கை நகர், அதாவது நம் பழைய
தலைநகரம் வரை சென்றால் நல்லது. அது கொஞ்சம் பாதுகாப்பானது. இங்கு நம் படை வீரர்கள்
மட்டும் குடிகள் போல் தங்கி இருக்கட்டும். அந்நிய படைகள் வந்தவுடன் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.
நம் தேசத்தவர் கொஞ்சம் சேர தேசம் அருகில் சென்றுவிட்டனர். இங்குள்ளோர் தங்கள் இல்லங்களில்
ஒரு சுவரில் பிறை ஒன்றமைத்து, அதனுள் பக்கவாட்டில் 3-4 அடியில் துளையிட்டு தங்கள் நகைகள்,
இன்ன பிற முக்கிய வஸ்துக்களை சேமித்து, அதன் மீது மண்சாந்து பூசிவிடவேண்டும். நம் மக்கள்
செல்லும் வழியில் முன்னதாகவே நம் படை இரண்டு குழுவாய் செல்லும். ஒன்று முன்னர் எதுவும்
ஆபத்து இல்லாதவாறு பார்த்துக்கொள்ளும். மறறொன்று அவர்களுக்கு சமைத்து, போகும் வழியில்
இருக்கும் கல் மண்டபங்களில் வைத்துவிடுவார்கள். அரையரே இதை இப்போதே இந்த வளநாட்டிலுள்ள
ஏனாதி, மதவராயன், வத்தராயன் முதலானோர் மூலம் யாரும் அச்சப்படாதவாறு குடிகளுக்குத் தெரியப்படுத்தவும்..
இன்னும் சிலகாலம் தான்’ என்று ஒரு திட்டம் முடித்தார் மாறன்காரி.
‘அடுத்து நம் பெருமானையும் கோவிலையும் காக்க வேணும்.’
தீக்ஷிதர் தொடந்தார். ‘கோவிலைக் காக்க ஸ்ரீரங்கம் போல் ஏதாவது வியூகம் வகுக்க வேண்டும்.
நம் கோவில் சிறியது. அவர்களை ஊருக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும். நம் பெருமானை
மட்டும் எப்படியாவது காக்க வேண்டும். உலகெல்லாம் காக்கும் நம் பெருமாளை இப்படி நாம்
காக்க வந்திருப்பது என்ன விந்தையோ.’
‘சரி, காலம் தாழ்த்த நேரமில்லை. அரையரே, நீர் போய்
நம் உத்தரவை அதிகாரிகளுக்குச் சொல்லும். இதற்கு திருமுகம் தேவைப்படாது..’
அரையர் விடைபெற்றவுடன் மாறன்காரி, ‘நம் பெருமானைக்
காப்பதுதான் பெரும் கவலையாய் இருக்கிறது. இந்த ஊரைவிட்டு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு
போகவேண்டும். கோவிந்த பட்டரே, நான் அதற்கான ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போய் இன்றைய
ஆராதனைகளை முடித்துவிட்டு வாருங்கள். நான் திருமுகத்தில் சொல்லப்பட்ட மற்ற விஷயங்களைப்
பார்த்துவிட்டு இரண்டாம் கால ஆராதனையில் வந்துவிடுவேன்.’ அனைவரும் கலைந்தனர்.
கனபாடிகள், ரெங்கம்மாள் செய்த பதார்த்தங்களைத்
தன் இல்லப் பெருமானுக்கு கண்டருளப்பண்ணிவிட்டு கோவில் நோக்கிப் புறப்பட்டார். வழியெல்லாம்
அதிக கவலையோடு, கண்களில் கண்ணீரோடு ஓடினார், தன் முன்னோர் ஆராதித்த பெருமானைக் காண.
கோவில் வாசலில் சிலர் விஸ்வரூபம் சேவிக்க காத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களிடமும், பெருமானிடமும் காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு கோவிந்த பட்டர்
ஆராதனைகளைத் தொடங்கினார். அவரேதான் பெருமானுக்கு தளிகை செய்யவும் வேண்டும். இவர்கள்
குடும்பத்தின் கைங்கர்யம்தான். இவருக்கு சிறுபிள்ளையாதலால், இவரே அந்த கைங்கர்யமும்
செய்தார். அன்று பெருமாள் கோடி சூரியனை மிஞ்சியவராய், சங்கு-சக்கர தாரியாய் நான்கு
புயங்களுடன் இரண்டு நாச்சிமாரோடு காட்சி தந்தார். திருமல்லிநாட்டில் ஒரு பகுதியுள்ளதால்
இங்கு ஆண்டாளுக்கு சந்நிதி இல்லை. வகுளபூஷண பாஸ்கரராய் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்தார்.
நித்ய ஆராதனை முடித்து ஆழ்வார் பாசுரங்கள் சில சொல்ல ஊரிலுள்ள சிலரும் வந்திருந்தனர்.
திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருவாய்மொழி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
பட்டர் மட்டும் ‘தீப்பாலவல்வினையேன் தெய்வங்காள்
என்செய்கேனோ?’ என்று நின்றுருகிக் கொண்டிருந்தார். இரண்டாம் ஆராதனம் முடிய மாறன் காரியும்
வந்தார்.
கோவிலில் கூட்டம் குறைய, நடை சாற்றும் நேரம் வந்தது.
மாறன்காரி கோவிந்த பட்டரை அழைத்துக் கொண்டு பின்னால் இருந்த மாஞ்சோலை சென்றார். இருவர்
மட்டும் ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ‘ஆகட்டும் ஸ்வாமி அப்படியே செய்கிறேன்.’
என்று பட்டர் வெளியே வந்தார். மாறன்காரி ஏதோ யோசித்துவிட்டு பின் வழியாய் சென்றார்.
கோவிந்த கனபாடிகள் சன்னதி தெரு தாண்டி வரும் போதே மக்களிடத்தில் ஒருவித கிளர்ச்சி தெரிந்தது.
ஆங்காங்கு கூடி பேசிக்கொண்டிருந்தனர். இவர் வீடு வந்த போது ரெங்கம்மாளும் அதையே சொன்னார்.
தங்களிடம் பெரும் நகைகள், வாஸ்துக்கள் இல்லை. அந்தப் பெருமான் மட்டுமே இவர்களின் குல
தனம்.வேறு சொத்து இல்லை. சில முக்கிய நபர்கள் தவிர இரவோடு இரவாகப் பலரும் காலிசெய்தனர்.
படைவீரர்கள் குடிகள் போல் வந்தனர்.
அரசன் இரவு மந்திராலோசனை கூட்டியிருந்தார். மாறன்
காரி அங்கு இருந்தார். அதுவழக்கமாய் நடக்கும் சபையில் இல்லை. மதுரைக்குத் தொலைவில்
திருக்கானப்பேர் அருகில் இருந்தது. அங்கு தான் நாணயம் தயாரிக்கும் இடம் இருந்தது. குலசேகரன்
1200 கோடி பொற் காசுகளை தன் கருவூலத்தில் வைத்திருந்தார். அதையும் பாதுகாக்க வேண்டி
அங்கு கூட்டம் நடந்தது. கருவூல சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பாதி மாறன் காரியிடம் தரப்பட்டது.
அவர் அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். நேராக கனபாடிகளைக் காண அங்கிருந்து கிளம்பி
விடிந்து சில நாழிகைகளில் துவரிமான் வந்தார்.
சோழ தேசத்தில் வேளக்காரப்படை என்று ஒன்றிருக்கும்.
அது தங்கள் உயிரைக்கொடுத்து மன்னரைக் காக்கும். அது போல பாண்டிய தேசத்திலும் ஒருபடை
இருந்தது. அதற்கு தென்னவன் ஆபத்துதவிகள் என்று பெயர். அதில் ஒரு பிரிவை இந்த மூன்று
கோவில்களைக் காக்கும் பணிகளிலும் அரசன் பணித்திருந்தான். அவர்களும் மாறன் காரியுடன்
வந்தனர். அரசனே திருமலை நாட்டிலுள்ள அழகாபுரி கோட்டை (அழகர் கோவில்)செல்வதால் தனி பாதுகாப்பு
ஏற்படுத்தப்படவில்லை. முனையெதிர் மோகர் என்ற படைப்பிரிவு அரசனோடு இருந்தது. காலை ஆராதனைகள்
முடிந்த பின் மீண்டும் மாலை ஆராதனத்திற்காக கோவிந்த பட்டர் சென்றார். அதற்கு முன் தென்னவன்
ஆபத்துதவிகள் கோவில் முன் இருந்தனர்.
அன்று சாயங்கால ஆராதனை நேரம்தாழ்த்தி செய்யப்பட்டது.
கோவிந்த பட்டரும் மிகவும் வாஞ்சையோடு செய்தார். இனி இப்பெருமானுக்கு எப்போது இது போல்
கைங்கர்யம் செய்வோம் என்ற கேள்வி இருந்தது. பின்னிரவு வருமுன் கோவில் நடை சாற்றப்பட்டது.
ரெங்கம்மாளும், மற்றும் சில படைவீரர்களும் அங்கிருந்தார். அன்றோடு பட்டரும் ஊரை விட்டுப்
புறப்பட வேண்டும்.
குதிரை குளம்படி கேட்டு மாறன் காரி நிமிர்ந்தார்.
தூதுவன் திருசிராமலையிலிருந்து வந்தான். ஓலை படித்தவர் கண்களில் குளமாய்க் கண்ணீர்.
அருகிலிருந்தவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. கோவிந்த பட்டரை அழைத்து விவரத்தைச் சொன்னார்.
‘ஸ்வாமி, நான் சொன்னபடியே நடந்தது. கண்ணூர் கொப்பம்
வீழ்ந்தது. ஸ்ரீரங்கம் தாக்கப்பட்டது. அங்கு மட்டும் இதுவரை பல்லாயிரம் பேர் பலியாகியிருக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் பெருமாளை மட்டும் காப்பாற்றி இருக்கின்றனர்..’
முழு விவரமும் சொல்லவில்லை. கனபாடிகள் தரையில்
அமர்ந்தார். சற்று விம்மலோடு அழவும் செய்தார். இனி நடக்கும் காரியத்தைப் பார்க்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தார். காரி அவரை கொற்கை தேசம் போகச் சொன்னார். ‘எங்கள் குல தனத்தை
விட்டு எப்படிப் போவேன்’ என்று புலம்பினார். மறுத்தார். காரியும் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஒரு பெரும் பெட்டியில் சன்னதியில் இருக்கும் விக்ரகங்களை
எழுந்தருளப்பண்ணிக்கொண்டு தென்னவன் ஆபத்துதவிகள் படையோடு மேற்கு நோக்கிப் பயணமானார்கள்
கோவிந்த பட்டரும் அவரது குடும்பமும். நம்மாழ்வார் மட்டும் மாறன் காரியோடு வேறு திசையில்
சென்றார். மேற்கு நோக்கி சென்றவர்கள் கூட வேறு சிலரும் சென்றனர். கோவிந்த பட்டர் கோவில்
சாமான்களை எடுத்துக்கொண்டு காப்பிடல், அச்சோ பதிகம் உட்பட சில பெரியாழ்வார் பாடல்களை,
பெருமானுக்கு எந்த ஊறும் நேரக்கூடாது என்றபடி பாடிக்கொண்டு போனார்.
வரவிருக்கும் அந்நியப் படைகளைத் திசை திருப்ப,
திருக்கானப்பேரிலிருந்து கொண்டுவந்த பொற்காசுகளை கிழக்கே, வடக்கே என்று கொஞ்சம் புதைத்து
வைத்தனர் சில படை வீரர்கள். இது காரியின் ஒரு யோசனை. அப்படியாவது இந்தப் பெருமான்களைக்
காக்கவேண்டும். மறுநாள் காலை அவ்வளவு இனிதாய் இல்லை. எதிர்பார்த்ததை விட வேகமாக மாலிக்
காஃபூர் தலைமையில் அந்நியப்படை மதுரை வரை வந்து விட்டது. திரு தளவாய்புரத்தில் சுந்தர
பாண்டியன் எதிர் கொண்டு சற்றே தாமதமாக்கினான். அதற்கு மேல் முடியாமல் அவனும் வீர பாண்டியனோடு
சேர்ந்து மதுரை கோட்டைக்குள் வந்தான்.
மாலிக் காஃபூர் படையோடு கோட்டையின் வெளியில் காத்திருந்தான்.
மூன்றுநாளாகியும் அவனால் கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. சித்திரை மாத வெய்யிலில்
அவன் படைவீரர்கள் சோர்ந்திருந்தனர். நீரும் இல்லை. வேறு வழியில்லாமல் பாண்டியனிடம்
சமாதானத் தூது விட்டான். கோவில்களை அழிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு கோட்டைக் கதவுகள்
திறந்தன. அதற்கு பிரதி பலனாய், மாலிக் காஃபூருக்குப் பாதி உணவு தானியமும், அனைத்து
குதிரை, யானைகளும் தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. கோவில்களுக்காக இவை அனைத்தையும்
ஏற்றான் பாண்டியன். ஏகப்பட்ட செல்வங்களோடு 612 யானைகளும், 20000 குதிரைகளும் பெற்று
வடக்கே புறப்பட்டான் மாலிக் காஃபூர்.
தாங்களும், தங்கள் உடைமையும், கோவில்களும் காக்கப்பட்டதை
எண்ணி ஊர் மக்கள் ஆரவாரித்தனர். அந்நியர்களுடன் போரிட்டுத் தோற்கடிக்க முடியாதது கண்டு
வீர பாண்டியன் சற்றே வருத்தத்தோடு இருந்தான். மாறன் காரியும், மற்றை அமைச்சர்களும்
உடனிருந்தனர். துவரிமானிலிருந்து வந்த நம்மாழ்வாரை மாறன் காரி மதுரை மீனாட்சி கோவிலுக்குள்
வைத்திருந்தார். கோவிலினுள், மாலிக் காஃபூர் ஒரு நிமிஷம் நின்று கவனித்தபோது, மாறன்
காரி உயிர் அவரிடமில்லை. சிறு புன்முறுவலோடு அவன் நகர்ந்தான். இதைப்பார்த்த பாண்டியன்
பின்னர் காரியிடம் கேட்ட போது துவரிமான் பற்றி சொன்னார்.
இரண்டு மூன்று நாட்களில் விஷயம் எங்கும் பரவியது.
தங்கள் ஊரை விட்டுப்போன மக்கள் திரும்ப வந்தனர். கோவிந்த பட்டர் மேற்கே நாகமலையில்
பெருமானோடு இருந்தார். அவரை விஷயம் எட்டவே, தென்னன் ஆபத்துதவிகள் சூழ, மலை அடிவாரத்திலேயே
பெருமானுக்கு விஷேஷ ஆராதனை செய்யத்தொடங்கினார். ஆம் அவர்கள்தான் உண்மையான ஜெய-விஜயர்கள்
இப்போது. மறுநாள் ஊர் நோக்கி அவர்களும் திரும்பினர். ஒருவாரத்தில் மாறன் காரி வந்தார்.
நம் பெருமானை சேவிக்க வீர பாண்டியரும், சுந்தர பாண்டியரும் துவரிமானுக்கு வருவதாக கனபாடிகளிடம்
சொன்னார். அவருக்கு மிகுந்த ஆனந்தம்.
அரசன் வருகைக்காக ஊர் அலங்கரிக்கப்பட்டது. பேரிகைகள்
முழங்கின. இரண்டு பாண்டியர்களும் தங்கள் முன்னோர் வணங்கிய இறைவனை கோவிலில் சென்று வழி
பட்டனர். சுந்தரபாண்டியன் கோவிலை கொஞ்சம் பெரிதாய்க் கட்ட விரும்பினான். திடீரென்று
ஒரு இடத்தில் கருடன் பாண்டியன் அருகில் வந்து பின் வேறொரு இடத்தில் மூன்று முறை வட்டமிட்டது.
சுந்தர பாண்டியனுக்குப் புலப்பட்டது. மாறன் காரியிடமே அந்தப் பொறுப்பையும் ஒப்படைத்தான்.
கருடன் வட்டமிட்ட இடத்தில் சில மாதங்களில் கோவில்
உருவானது. ஸ்ரீரங்கம் போலவே இந்த ஊரும் நதிகளால் பிரிக்கப்பட்டு ஒரு தீவு போலத்தான்
இருந்தது. ஆம். ஒருபுறம் வைகை, மறுபுறம் கிருதுமால். கோவிலுக்குள் அரங்கனையே ப்ரதிஷ்டை
செய்தனர். ஆனால், நின்ற கோலத்தோடு, அரங்கராசனும், ஸ்ரீ தேவி, பூ தேவியுமாய். சுந்தர
பாண்டியனே மங்களாசாசனம் செய்து ஸம்ப்ரோக்க்ஷணம் செய்தான். கோவிந்த கனபாடிகளும், தீக்ஷிதரும்
கைங்கர்யங்களைத் தொடந்தனர், பொலிக பொலிக பொலிக என்று!

Posted on Leave a comment

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் – புத்தக விமர்சனம் | சுப்பு

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர்
சு.நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவெட் லிமிடெட், டிசம்பர் 2018.
 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நம் நாட்டில் ஆங்கில
மருத்துவத் துறையின் வளர்ச்சி பற்றிய செய்திகளை மருத்துவர் நரேந்திரன் கூற முற்பட்டிருக்கிறார்.
இத்தகைய முயற்சியில் இது ஒரு முன்னோடியான நூல் என்று கூறலாம்.
காலனிய மருத்துவம் பற்றிப் பேசும் போது, காலனிய
அரசியல், பொருளாதார, கலாசார, இலக்கியத் தகவல்கள் நூலின் கருப்பொருளுக்குத் தேவைப்படும்
அளவிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
முதலில், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவத்சல பாரதி வழங்கியுள்ள கருத்துரையைப் பாராட்ட
வேண்டும். நூலின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய செய்தியையும் கனச் சுருக்கமாக அவர் எழுதியிருப்பது
நூலுக்குப் பெருமைதான்.
ஆங்கிலேய மருத்துவம் சுதேசி மருத்துவ முறைகளை கபளீகரம்
செய்து விட்டது. ஆங்கிலேயர் உலகையெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆள வேண்டுமென்ற பேரவாவின்
அடிப்படையில் அவர்களது மருத்துவக் கொள்கை வரையறுக்கப் பட்டது என்பதை ஆசிரியர் சான்றுகளோடும்
தரவுகளோடும் நன்கு விளக்குகிறார். இந்தியாவின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அவர்களது மருத்துவத்தை
அவர்களுக்காக நிலை நிறுத்த இங்கு இருந்த மதக் கொள்கைகள், கலாசாரம் இவைகளைக் கருத்திற்
கொண்டு துப்புரவு, சுகாதாரம் என்ற இரு பெரும் பண்பளவுகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களது
மருத்துக் கொள்கைகள், மருத்துவ முறைகள் வகுக்கப்பட்டன. இதில் இந்தியாவின் பெரு நகரங்களான
தில்லி, மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு என்ற நான்கினுள் அக்காலத்தில் பொட்டலாகக் கிடந்த
சென்னையில் மருத்துவத்தை அதிகம் வளர்த்தனர் ஆங்கிலேயர். ஸ்டான்லி மருத்துவ மனை கஞ்சித்தொட்டி
மருத்துவமனை என்றும் கீழ்பாக்கம் மருத்துவ மனை இலண்டன் கஞ்சித்தொட்டி மருத்துவ மனை
என்றழைக்கப்பட்டதும், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மதநம்பிக்கையின் காரணமாக மறுப்பு
தெரிவித்ததும், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில், இனப் பாகுபாடுகள் இருந்தமையும்
ஆசிரியர் விவரிக்கும்போது எப்படி ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்தாண்டே தம் வாழ்வைப்
பெருக்கிக் கொண்டனர் என்ற வஞ்சகம் புரிகிறது.
சுதேசி மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் தடுத்தனர்.
அதோடு ஆங்கிலேய மருத்துவமும் சுதேசிகளுக்குக் குறைந்த அளவே பயன்படுமாறும் பார்த்துக்
கொண்டனர். இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு இடையிலேதான் தமிழ்நாட்டில் தஞ்சை மன்னர் சரபோஜி,
பண்டிட் கோபாலாசார்லு, கேப்டன் சீனிவாசமூர்த்தி போன்ற சில பொதுநல நோக்குடையவர்களால்
சுதேசி மருத்துவம் வேரற்றுப் போகாமல் நோயாளிகளுக்கு ஓரளவேனும் பயன்பட்டது என்கிறார்
மருத்துவர் நரேந்திரன்.
காலனிய கால மருத்துவத்தைப் பற்றிய புத்தகத்தில்
ஆசிரியர் சற்றே பின் காலனியத்தைப் பற்றியும் தொட்டிருக்கிறார், இந்த நூலில் மருத்துவர்
ரங்காசாரி பற்றி சிறிய குறிப்பே இருக்கிறது. ஆரியம்-திராவிடம் என்ற அரசியற் கொள்கை
பொய் என்று நிரூபணம் ஆன பின்னும் அதைப் பற்றிய குறிப்பு இந்நூலில் இடம் பெற்றிருக்கக்
கூடாது. அதே போல யேல் பல்கலைக் கழகத்தில் முதல்வர் அண்ணாதுரை உரையாற்றினார் என்பதும்
சர்ச்சைக்குரிய விஷயம்.
இந்தப் புத்தகத்திலிருந்து சில முக்கியமான பக்கங்கள்
:
“மதராஸ் ஏப்.டபிள்யூ.எல்லீட்ஸ் என்பவர் அம்மைக்
குத்துதல் குறித்த ஒரு சமஸ்கிருதப் பாடலை ஒரு பழைய தாளில் எழுதி, இது பழங்காலத்திலே
நடைபெற்றதுதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தி அம்மை குத்துதலை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். இதே போன்றே மதராஸ் டாக்டர் அண்டர்சன்னும் பொய்யான செய்திகளைக்
கூறி அம்மை குத்த வழிகண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.” பக்கம்-164
“மதராஸில் உள்ளூர் மொழியில் மருத்துவம் கற்பிக்கும்
முயற்சிகள் எப்போதும் ஊக்குவிக்கப்படவில்லை இதற்கு மாறாக வங்காளம், பம்பாய் போன்ற இடங்களில்
உள்ளூர் மொழி வழி மருந்துவக் கல்வி அளிக்கப்பட்டது. ஆனால் மதராஸில் கீழ்மட்ட மருத்துவ
உதவியாளருக்குக்கூட ஆங்கிலவழிக் கல்வியே அளிக்கப்பட்டது.” பக்கம்-88.
“டாக்டர் கேப்டன் ஜீ.சீனிவாசமூர்த்தியால் தயாரிக்கப்பட்ட
ஆயுர்வேதம் குறித்த உஸ்மான் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் தர்க்க ரீதியாகவும்,
அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக இருந்தன. மேலும் இவ்வறிக்கையில் மருந்து கொடுத்து குணமாக்கும்
மருந்துவம் சிறப்பாக உள்ளது. அது சிக்கனமானது. நமக்குப் போதுமானது. என்று கூறியது”
பக்கம்-209.

Posted on Leave a comment

க்வாண்டம் கம்ப்யூட்டர்களின் உச்ச உயர்நிலை (Quantum Supremacy) | ஆர்.ஸ்ரீதர்



கடந்த சில தினங்களாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து
ஊடகங்களில் அதிகம் அடிபடும் சொல் Quantum Supremacy – இது என்ன, மாட் டாமன் (Matt
Damon)நடித்த பிரபல ஹாலிவுட் படங்களான போர்ன் ஐடென்டிட்டி, போர்ன் சுப்ரிமஸி, போர்ன்
அல்டிமேட்டம் (Bourne Identity / Supremacy / Ultimatum)வரிசையில் அடுத்த படமா இந்த
க்வாண்டம் சுப்ரிமஸி என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். தவறில்லை.
ஆனால், இந்த க்வாண்டம் சுப்ரிமஸி என்ற சொல் முழுக்க
முழுக்க கம்ப்யூட்டர் உலகைச் சேர்ந்தது.
கடந்த ஒரு வாரத்தில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில்
உள்ள தொழில்நுட்ப இணையத் தளங்கள், பத்திரிகைகள் மற்றும் கம்ப்யூட்டர் இயலைச் சார்ந்த
பல ஊடகங்களில் இந்தச் சொல்தான் பரபரப்பாக அலசப்பட்டது. இதற்கு முதலில் பிள்ளையார் சுழி
போட்டது இங்கிலாந்தைச் சார்ந்த Financial Times பத்திரிகைதான். இது கடந்த வாரத்தில்
ஒரு செய்தி வெளியிட்டது: கூகிள் நிறுவனம் (Google)புதிய சாதனையாக ‘க்வாண்டம் கம்ப்யூட்டர்களின்
உச்ச உயர்நிலை’யை எட்டிவிட்டது. இதன் மூலம், கூகிளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மிக,
மிகக் கடினமான பிரச்சினைகளை (problems)மின்னல் வேகத்தில், அதி விரைவாகத் தீர்க்கும்
வழிவகைகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள். உலகிலுள்ள எந்த சூப்பர் கம்ப்யூட்டர்களும் செய்ய
முடியாத இந்தச் சாதனைகளை க்வாண்ட்டம் கம்ப்யூட்டர்கள் மூலம் செய்துகாட்டிவிட்டனர்.
இந்த மகத்தான ஆராய்ச்சியைப் பற்றிய முழு விவரங்களையும் (தேவையான தணிக்கைகளைச் செய்ததற்கு
பிறகு சக ஆராய்ச்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் வெளியிடலாம் என்றிருந்தபோது,
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸா (NASA)வில் பணிபுரியும் சில விஞ்ஞானிகள் மூலம் இந்த
ஆராய்ச்சியைப் பற்றிய சிறுசிறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனவே, இப்போது இந்த ஆராய்ச்சியின் முழு விவரங்களையும்
வெளியிட வேண்டிய கட்டாயம் கூகிள் நிறுவனத்திற்குத் தற்போது ஏற்பட்டுள்ளது. முழு விவரங்களுடன்
கூடிய அறிக்கையை கூகிள் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.
(Quantum
computer web)
சரி, இந்தக் க்வாண்டம் கம்ப்யூட்டர் என்பதுதான்
என்ன?
க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் நாம் அனுதினமும் பயன்படுத்தும்
பாரம்பரிய கம்ப்யூட்டர்களிலிருந்து மிகவும் மாறுபட்டவை.
இவை நாம் தினசரி உபயோகப்படுத்தும் டெஸ்க்டாப்
/ லாப்டாப் போன்ற கம்ப்யூட்டர் என்ற வார்த்தையுடன் நாம் சம்பந்தப்படுத்தும் எல்லாவற்றிலிருந்தும்
வேறுபட்டிருக்கும். பெரிய அலுவலகங்களில் ஏஸி அறைகளில் பிரமாண்டமாக பீரோ சைஸில் ஒன்றன்பின்
ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கும் விலையுயர்ந்த சர்வர்கள் போல இருக்கும்.
வழக்கமான (conventional)கம்ப்யூட்டர்கள் ‘பிட்ஸ்
(Bits)’ – ‘0’ அல்லது ‘1’ – எனப்படும் பாரம்பரிய இயற்பியல் (Classical Physics)முறைப்படி
தகவல்களை செயல்படுத்தும். [ (‘0’ & ‘1’ இரண்டும் சேர்ந்திருந்தால் அது பைனரி (Binary)].
இன்று உலகின் சக்திவாய்ந்த ஸூப்பர் கம்ப்யூட்டர்கள்
ஒரு செகண்டுக்கு 1,48,000 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி – வேண்டாம்
விடுங்கள். ஒன்றிற்குப் பிறகு தலை சுற்றும் வகையில் எக்கச்சக்கசக்க சைபர்கள் வரும்)செயல்கள்
(operations)செய்துவிடும். இப்படி மின்னல் வேகத்தில் செயல்பட 9000 IBM CPU க்கள் தேவைப்படும்.
இந்த CPU க்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சேர்மானத்தில் (COMBINATION)இருக்க வேண்டும்.
ஆனால், க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் கணக்கிடுவதற்கு
(COMPUTE)‘QUBITS’ (க்வாண்டம் பிட்ஸ் என்பதின் சுருக்கம்)-ஐ பயன்படுத்துகிறது. இயற்பியலின்
ஒரு அங்கமான க்வாண்டம் மெக்கானிக்ஸ் (Quantum Mechanics)-ன் மூலக்கூறுகளை வைத்து இயங்குவதால்
இதனுடைய ப்ராஸஸர்கள் (Processors)ஒரே சமயத்தில் ‘0’ மற்றும் ‘1’ஐ இயக்க முடியும். அனாயாச
வேகம் என்று மனதில் கொள்ளுங்களேன்.
இந்த அசகாய வேலைத்திறனால் ஒரு க்வாண்டம் கம்ப்யூட்டரானது
பல பாரம்பரிய கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று இணையாக (parallel)செய்யும் வேலைகளைக் காட்டிலும்
அதிகமான வேலைப்பளுவை ஒரே ஒரு கம்ப்யூட்டர் மூலம் முடித்துவிடும்.
இது போல ஒரு கம்ப்யூட்டர் பற்றிய எண்ணம் உலகளவில்
1990களில் இருந்தே இருந்து வந்தாலும் 2011ல் கனடாவைச் சேர்ந்த D – Wave System என்ற
நிறுவனம் இதை முதலில் செயல்படுத்தியது.

சரி, இதனால் நமக்கு (பொதுமக்களுக்கு)என்ன உபயோகம்?
ஒரு பாரம்பரிய கம்ப்யூட்டர் அதற்குத் தேவையான அதிக
ஆற்றலின் அளவால் (Energy Requirements)ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதைத்தவிர
இவற்றைப் பராமரிக்க ஏராளமான இடமும் தேவை. ஆனால், இதையெல்லாம் க்வாண்டம் கம்ப்யூட்டர்கள்
அலட்சியமாக சுருக்கிவிடுகின்றன. இதனால் குறைவான ஆற்றல் (மின்சக்தி)போதும். நாளடைவில்
செலவும் மிச்சமாகும். மிகச் சிக்கலான வேலைகளை இந்தக் க்வாண்டம் கம்ப்யூட்டர் சர்வசாதாரணமாக
செய்துவிடுவதால் அதை நிர்வகிக்க நிறைய ஆட்களும் / நேரமும் தேவையில்லை.
சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய வங்கிகள் முதல்
பெரிய வணிக நிறுவனங்கள், நம்முடைய பாதுகாப்பு (Security)பணிகள் வரை எல்லாமே சுலபமாக,
குறைந்த செலவில், குறைந்த ஆட்களுடன் சாதிக்க முடியும்.
இதன்மூலம் கூகிள் சாதித்தது என்ன?
க்வாண்டம் கம்ப்யூட்டர்களின் உச்ச உயர்நிலை (Quantum
Supremacy)என்பது இப்படிப்பட்ட க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் மூலம் மிகச் சிக்கலான விஷயங்களையும்
தீர்க்க முடியும் என்பதை கூகிள் நிறுவனம் நிரூபித்துள்ளது. இதன் செயல்பாட்டிற்காக கூகிள்
நிறுவனம் ஒரு 54-Qubit ப்ராஸஸரை உபயோகப்படுத்துகிறது.
கூகிள் நிறுவனத்தின் இந்த ஆற்றல் மிக்க க்வாண்டம்
கம்ப்யூட்டரின் பெயர் Sycamore (கிரேக்க மொழியில் பரிசுத்தம் என்ற வார்த்தையிலிருந்து
உருவானது – இதே பெயரில் ஒரு மரமும் இருந்ததாக பைபிளில் குறிப்புள்ளது).
இன்றைய (சக்திவாய்ந்த)ஸூப்பர் கம்ப்யூட்டர்கள்
குறிப்பிட்ட ஒரு பணியை (task)செய்வதற்கு 10,000 வருடங்கள் (ஆம், 10,000 வருடங்கள்)எடுத்துக்
கொண்டால், அதே பணியை இந்தக் க்வாண்டம் கம்ப்யூட்டர் 200 செகண்டுகளில் (கிட்டத்தட்ட
3 நிமிடத்திற்கு சற்று அதிகம்)அனாயசமாக முடித்துவிட்டு, ‘வேறென்ன வேலை இருக்கு, பாஸ்?’
என்று கேட்கும்.
இந்த சாதனை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
நிச்சயம் குறிப்பிடத்தக்க பெரிய சாதனைதான் என்றாலும்,
இவை எந்தவொரு கடினமான வேலையையும் செய்துகாட்டிவிடும் என்று சொல்ல முடியாது என்று கம்ப்யூட்டர்
இயலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதற்கு அழகான ஒரு ஒப்புவமையும் அவர்கள் தருகிறார்கள்;
ஒரு குறிப்பிட்ட போட்டியில் ஒரு Ferrari காரும், ஒரு சரக்கு லாரியும் பங்குபெற்றால்,
Ferrari கார் நிச்சயம் வெற்றிபெற்றுவிடும். ஆனால், அதற்காக சரக்கு லாரி செய்யும் எல்லா
வேலைகளையும் Ferrari கார் செய்யமுடியுமா என்றால் அது நிச்சயம் முடியாது.
க்வாண்டம் கம்ப்யூட்டரை முதலில் செயல்படுத்திய
கனடாவைச் சேர்ந்த D – Wave System என்ற நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் (இதோ, அடுத்த வருடம்தான்)இதன்
ஆற்றலை 5000 Qubit ஆக உயர்த்திவிட முடியும் என நம்புகிறது (இதன் தற்போதைய ஆற்றல், ஏற்கனவே
குறிப்பிட்டபடி, 54- Qubit).
இதுபோன்ற தொழில்நுட்ப சாதனைகளால் முக்கியமாக நம்முடைய
ஆன்லைன் பரிமாற்றம் அதிகப் பாதுகாப்பு பெறும், ஹேக்கர்கள் குறைவார்கள் என்று நம்பலாம்.
ஏனென்றால், இது போன்ற ஒரு அதிக ஆற்றல் வாய்ந்த க்வாண்டம் கம்ப்யூட்டரை (அதன் மின்னல்
வேக ப்ராஸஸருடன்)வாங்க சில பல கோடிகள் தேவைப்படும். எனவே, கம்ப்யூட்டர் அறிவு (மட்டும்)படைத்த
எந்த சில்லறை ஹேக்கர்களாலும் இதை அவ்வளவு ஈஸியாக வாங்க முடியாது.
இந்தியாவின் நிலைப்பாடு:
இப்போதைக்கு இந்தியாவில் க்வாண்டம் கம்ப்யூட்டர்கள்
இல்லை. ஆனால், 2018-ல் நமது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of
Science & Technolgy)இதற்காக ஒரு தனித்துறையை QuEST (Quantum-Enabled Science
& Technology)என்ற பெயரில்ஏற்படுத்தி இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த ஆராய்ச்சியை
மேம்படுத்துவதற்காக ரூ.80 கோடியை ஒதுக்கியுள்ளது.
நம்பிக்கையோடு இருப்போம்.
INFORMATION COURTESY:
Financial Times (UK), New Scientist, IEEE
Spectrum & The Hindu

Posted on Leave a comment

பாண்டி இலக்கியத் திருவிழா 2019 | ஜடாயு



இந்தியாவின் முக்கிய நகரங்களில் Lit Fest எனப்படும்
வருடாந்திர இலக்கியக் கூடுகைகள் அண்மைக் காலங்களில் பிரபலமாகி வருகின்றன. 2006ம் ஆண்டிலிருந்து
நடந்து வரும் ஜெய்ப்பூர் Lit Fest திருவிழாவை அடியொற்றி தில்லி, மும்பை, சென்னை, கோவா,
கல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், லக்னோ போன்ற நகரங்களிலும் இத்தகைய
திருவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான ஒரு குறிப்பிட்ட
வடிவமும் உருவாகி விட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் வாழும் பெருமளவு ஆங்கிலம் சார்ந்த
நடுத்தர, மேல்தட்டு வாசகர்களையும், எழுத்தாளர்களையும் மையப்படுத்திய இந்த நிகழ்வுகளில்
உரைகளும், அமர்வுகளும் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். இலக்கியம் என்ற
பெயர் இருந்தாலும் சமகால அரசியல், பொருளாதாரம், சமூகப் போக்குகள் குறித்த விவாதங்களும்,
சர்ச்சைகளுமே அதிகமாகவும், மையமாகவும் இருக்கும். இந்த நிகழ்வுகளை நடத்துவதிலும் பிரபலமாக்குவதிலும்
தேசிய அளவிலான ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஊடகங்கள், ஆங்கில பதிப்பகங்கள் மற்றும்
ஆங்கில செய்தித்தாள்களின் பங்கு கணிசமானது. தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமான உள்ளூர்
இலக்கியக் கூட்டங்கள் போன்றவையல்ல இவை. பெரும் தொழில்முறை நேர்த்தியுடன், நட்சத்திர
அந்தஸ்துள்ள வளாகங்களில் ஏற்பாடு செய்யப் பட்டு, புகழ்பெற்ற பிரபலங்களும் எழுத்தாளர்களும்
பேச்சாளர்களும் பங்குகொள்ள 2-3 நாட்களாக நடைபெறும் மெகா நிகழ்வுகள்.
2018ம் ஆண்டு தொடங்கப் பட்டு இந்த வருடம் இரண்டாம்
முறையாக கடந்த செப்டம்பர் 27,28,29 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்ற Pondy Lit
Fest திருவிழாவும் ஒருவகையில் மேற்கூறிய நிகழ்வுகளின் வகைமையைச் சார்ந்ததுதான். என்றாலும்
அதற்கென்று ஒரு குறிப்பிட்ட தனித்துவமும் சிறப்பும் இருந்தது. ‘பாரத சக்தி’ என்ற பெயரும்,
http://pondylitfest.com/ தளத்தில் முகப்பு வாசகமாக உள்ள ஸ்ரீ அரவிந்தரின் மேற்கோளுமே,
அதனை இதுபோன்ற மற்ற அனைத்து Lit Fest நிகழ்வுகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுயது.
“India is the Bharat Shakti, the living energy of a great spiritual conception,
and fidelity to it is the very principle of her existence” என்பது அந்த முகப்பு வாசகம்.
மற்ற Lit Fest நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவையும்,
அதன் தேசியத்தையும், பண்பாட்டையும் குறித்த எதிர்மறைக் கருத்து நிலைப்பாடுகளையே மையப்
படுத்தி வருகின்றன என்பது கண்கூடு. அரசியல் ரீதியாக பா.ஜ.கவையும் பண்பாட்டு ரீதியாக
இந்துமதத்தையும் கடுமையாக எதிர்க்கக் கூடிய மார்க்சிய, செக்யுலரிச, லிபரல் முகாம்களைச்
சார்ந்த எழுத்தாளர்களும், கல்வியாளர்களுமே அவற்றில் முக்கியப் பேச்சாளர்களாக அழைக்கப்படுகின்றனர்.
இந்த எதிர்மறைப் போக்கிற்கான தீர்க்கமான எதிர்க்குரலாகவும், அதே சமயம் ஆக்கபூர்வமாகவும்
நேர்மறையாகவும் இந்திய தேசியம் மற்றும் இந்துப் பண்பாட்டுக்கு உகந்த கருத்துப் பரவலை
முன்னிறுத்துவதாகவும் இந்த வருட பாண்டி இலக்கியத் திருவிழா அமைந்தது. Republic தொலைக்காட்சி
இந்த நிகழ்வுக்கான முக்கிய ஊடக ஆதரவாக இருந்தது.
முதல் நாள் (செப்டம்பர் 27)மாலை புதுச்சேரி மாநில
ஆளுனர் கிரண் பேடி விழாவைத் தொடங்கி வைத்தார். புதுச்சேரியின் பாரம்பரியச் சிறப்பையும்,
அங்கு நிலவும் சுதந்திரமான, ஆரோக்கியமான சூழலையும் தான் அங்கு வந்து சேர்ந்தது குறித்த
அதிர்ஷ்டத்தையும் சுவையாக விவரித்தார். இறுதி நாள் அமர்வில் கேரள மாநில ஆளுனர் ஆரிஃப்
முகமது கான் சிறப்புரையாற்றினார். 1980களில் ஷா பானு வழக்கில் காங்கிரஸ் முஸ்லிம் அடிப்படைவாத்திற்கு
அடிபணிந்ததை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறியவரான கான், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை
நீக்குவதற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தவர். இன்று நாட்டில் தேசபக்த முஸ்லிம்களைப்
பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியக் குரல் அவருடையது என்றே கூறலாம்.
நிகழ்வின் பெரும்பாலான அமர்வுகள் நெறிப்படுத்தப்பட்ட
கலந்துரையாடல்கள் (panel discussion)வடிவில் இருந்தன. பேசுபொருள்களும் பல தரபட்டவை.
பாரதமாதா என்ற கருத்தாக்கம், இந்திய தேசியவாதம், இந்துத்துவம் vs இந்துமதம், ஜம்மு
காஷ்மீர், தமிழ்ப் பண்பாடு, சமூக ஊடகங்களின் தாக்கம், உலக அரங்கில் இந்தியா, வெளியுறவுக்
கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி, சூழலியல், தேசிய பாதுகாப்பு, சமீபத்திய வரலாற்று /
அகழாய்வு கண்டுபிடிப்புகள், இந்தியாவில் அறிவியல் துறைகள், பாரம்பரியம் vs நவீனத்துவம்
ஆகிய விஷயங்கள் முக்கியமாகப் பேசப்பட்டவை.
“மகாபாரதம்: பழமையா, நவீனத்துவமா, பின்நவீனத்துவமா?”
என்ற கலந்துரையாடலில் நானும் அரவிந்தன் நீலகண்டனும் பேசினோம். ‘நம் நாட்டு மரபுகள்:
புதிய பார்வைகள்’ என்ற அமர்வை அரவிந்தன் நீலகண்டன் நெறிப்படுத்தினார், நானும் கணேஷ்
லட்சுமிநாராயணனும் அதில் உரையாற்றினோம். நான் நெறிப்படுத்திய ‘தமிழ் கலாசாரப் போக்குகள்’
என்ற அமர்வில் தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி தனது உரையை வழங்கினார். விழா அமைப்பாளர்கள்
சார்பில் அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
‘தமிழ் ஊடகம்: பிரசினைகளும் கவலைகளும்’ என்ற அமர்வு
அரவிந்தன் நீலகண்டன் நெறிப்படுத்தலில் முற்றிலுமாக தமிழிலேயே நிகழ்ந்தது. ஹரன் பிரசன்னா,
ம.வெங்கடேசன், எஸ்.ஜி.சூர்யா இதில் கலந்து கொண்டனர்.
‘துயரங்களும் பிழைத்திருத்தலும்: சில கதையாடல்கள்’
என்ற அமர்வு முக்கியமான ஒன்றாக எனக்குப் பட்டது. கோவாவில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு, 1980களின்
காஷ்மீர் பயங்கரவாதம், மரிச்சபி (மேற்கு வங்கம்)படுகொலை, தேசப்பிரிவினையின் போது வங்கத்தில்
நிகழ்ந்த வன்முறை – இவற்றால் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் வம்சாவளியையும்
சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் கூறிய விவரணங்கள் பதைபதைப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்படுத்துவதாக இருந்தன. இந்து சமுதாயங்கள் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுகைகளையும்,
தங்களது உரிமை இழப்புகளையும் வரலாற்றில் பதிவு செய்யவேண்டியது எவ்வளவு முக்கியமானது
என்பதை இந்த அமர்வு உணர்த்தியது.
‘மக்களின் எதிரி யார்: மைய ஊடகங்களா சமூக ஊடகங்களா?’
என்ற அமர்வு சிறப்பாக இருந்தது. மோதி அரசுக்கும் இந்து சமுதாயத்திற்கும் எதிராக பொய்யாக
உருவாக்கப் படும் போலி செய்திகளைத் தோலுரித்து, ஊடகங்களால் இருட்டிப்பு செய்யப் படும்
செய்திகளை கவனப் படுத்தும் Opindia.com தளத்தை நடத்தி வரும் நூபுர் ஷர்மா, பசுக்காவலர்கள்
வன்முறை செய்கிறார்கள் என்று வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை களத்தில் சென்று ஆராய்ந்து
பசுக்கடத்தல் காரர்களின் அத்துமீறல் மற்றும் அராஜகத்தை வெளிக்கொணர்ந்து ஸ்வராஜ்யா இதழில்
பதிவு செய்து வரும் ஸ்வாதி கோயல் ஷர்மா ஆகியோர் சிறப்பான கருத்துக்களை இந்த அமர்வில்
கூறினர்.
‘பழையதைத் தோண்டுவதில் ஏதேனும் நன்மை உண்டா?’ என்ற
அமர்வை சமூக ஊடக பிரபலமும், தில்லி ஜே என் யு பல்கலை பேராசிரியருமான ஆனந்த் ரங்கநாதன்
சிறப்பாக நெறிப்படுத்தினார் (இவர் இந்த இலக்கியத் திருவிழாவின் ஒட்டுமொத்த நெறியாளரும்
கூட). இதில், சமீபத்தில் ராக்கிகர்ஹியில் கண்டெடுக்கப் பட்ட சிந்துவெளி காலத்திய அகழாய்வுப்
பொருட்களை மரபணு ரீதியாக ஆராய்ச்சி செய்த அறிவியலாளர் நீரஜ் ராய், ஆரியப் படையெடுப்புக்
கோட்பாடு முற்றிலுமாக இந்த ஆராய்ச்சியால் முறியடிக்கப் படும் என்ற அளவில் கருத்துத்
தெரிவித்தார். அரவிந்தன் நீலகண்டன் திராவிட இனவாதக் கொள்கை எந்த அளவுக்கு ஆதாரமற்றது
என்று விளக்கினார். வரலாற்றாசிரியர் மீனாட்சி ஜெயின் அயோத்தி ராமஜன்மபூமியில் பல நூற்றாண்டுகளாக
‘மக்கள் குடியிருப்பு’ என்பதாக இன்றி வழிபாட்டிடம் என்பதற்கான அகழாய்வு சான்றுகள் கிடைத்துள்ளதை
விவரித்தார்.
இது தவிர, சில தனிப்பட்ட நேர்காணல்களும் இருந்தன.
காஷ்மீரில் அடுத்து என்ன செய்தால் அமைதி திரும்பும், அங்கிருந்து துரத்தப்பட்ட இந்துக்கள்
திரும்பச் செல்வார்கள் என்பது குறித்து சுஷீல் பண்டிட் உடனான நேர்காணல். ‘இருபத்தொன்றாம்
நூற்றாண்டில் ஆர் எஸ் எஸ்’ என்ற நூலின் ஆசிரியரான சுனில் அம்பேகர் உடனான நேர்காணல்.
இஸ்லாமியப் படையெடுப்பில் கோயில்கள் அழிப்பின் போது தெய்வச் சிலைகள் பாதுகாக்கப் பட்டது,
மீண்டும் மீண்டும் கோயில்கள் எழுந்தது குறித்த வரலாற்றைக் கூறும் Flight of
Deities and Rebirth of Temples என்ற நூல் குறித்து அதன் ஆசிரியர் மீனாட்சி ஜெயின்
உடனான நேர்காணல். இவை நான் பார்த்தவற்றில் முக்கியமானவை.
இந்த இலக்கியத் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும்
வீடியோ பதிவு செய்யப் பட்டு PLF யூட்ப்யூப் சேனலில் வலையேற்றப்பட்டு வருகின்றன. அவற்றை
இங்கு காணலாம் – https://www.youtube.com/channel/UCCIWgcLRmJqUCuN-VuMHnLw/videos
இத்தகைய இலக்கியத் திருவிழாக்களின் முக்கியத்துவம்
என்பது தேசிய அளவில், வாசிப்பும் சிந்தனையும் கொண்ட மக்களிடையே உருவாகி வரும் கருத்தியல்,
வாழ்க்கை மதிப்பீடுகள், அரசியல் ஆதரவு நிலைகள், அறிவுசார் உரையாடல்கள், கோட்பாட்டு
வாதங்கள் ஆகியவற்றின் ஒரு பகுதியாகவும் எதிரொலியாகவும் அவை உள்ளன என்பதுதான். அண்மைக்காலங்களில்
இந்திய மொழிகளின் வெகுஜன ஊடகங்களிலும், இலக்கியப் போக்குகளிலும் கூட தேசிய அளவிலான
சிந்தனைகள் மற்றும் ஆங்கில ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து வருவதைக் காணமுடியும். அந்த
வகையில் பாண்டி இலக்கியத் திருவிழா என்பது இந்திய தேசியவாத, இந்துப் பண்பாட்டுத் தரப்பின்
ஒரு முக்கியமான அறிவு சார்ந்த குரலாக உருப்பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

Posted on Leave a comment

மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 7) | தமிழில்: ஜனனி ரமேஷ்



பகுதி
7
(26)எனது வாக்குமூலத்தில் இந்தக் கட்டம் வரை, எனது
பாதுகாப்பு தொடர்பான எதிர்மறை விஷயங்களை மட்டுமே கையாண்டு வந்துள்ளேன். என்னைச் சிக்க
வைக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பு சமர்ப்பித்த அனைத்து சான்றாவணங்களும் தவறென நிரூபிக்க
முயன்றுள்ளேன். கனம் நீதிபதி அவர்களை இப்போது நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் எனது
பாதுகாப்பு தொடர்பாக நான் உடன்படும் விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்.
மகாத்மா காந்திஜியின் படுகொலைக்கு நானும் உடந்தை என்றும், பண்டிட் நேருவின் உயிரைப்
பறிக்கத் தூண்டிவிட்டேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காந்திஜி மற்றும்
பண்டிட்ஜீ ஆகியோர் மீது நான் வைத்திருக்கும் தனிப்பட்ட மதிப்பையும், மரியாதையும் இத்தருணத்தில்
கனம் நீதிபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
1908ம் ஆண்டு காந்திஜி இலண்டனில் முக்கியப் புள்ளியான பண்டிட் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்குச்
சொந்தமான ‘இண்டியா ஹவுஸில்’ தங்கியிருந்த போது அவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு
என்வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அவருடனான தனிப்பட்ட மற்றும் பொதுவான உறவுகளை
இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை. அத்தருணத்தில் நானும் காந்திஜியும் நண்பர்களைப்
போலவும் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் போலவும் ஒன்றாக வசித்துப் பணியாற்றிதையும், தனது
மனைவியுடன் தனிப்பட்ட முறையில் வருகை தந்து பழைய நண்பர்கள் மற்றும் தற்போதைய அரசியல்
பற்றி பல மணி நேரம் எங்களுடன் அளாவியதையும் சுட்டிக்காட்டப் போவதில்லை. மேலும் காந்திஜி
அவரது ‘யங்க் இந்தியா’ இதழில் அவ்வப்போது என்னைப் பற்றி எழுதிய நெகிழ்வான விஷயங்களையும்
குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவும் போவதில்லை. ஏனெனில் இந்த வழக்குக்கும்,
அந்த நினைவுகளுக்கும், எந்தத் தொடர்பும் கிடையாது என்பதே முக்கியக் காரணம். சில விஷயங்களிலும்,
சித்தாந்தங்களிலும், எங்கள் இருவருக்கும் இடையே அடிப்படை வேறுபாடு நிலவினாலும், பரஸ்பர
அபிமானம் இருந்ததால், தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மரியாதையும், தனிப்பட்ட நல்லெண்ணமும்
கொண்டிருந்தோம்.
கடந்த சில வருட நிகழ்வுகளை மட்டுமே நான் கருத்தில்
எடுத்துக் கொள்கிறேன். ப்ராசிக்யூஷன் தரப்பு 1938ம் ஆண்டு முதல் பல கடிதங்களைச் சான்றாவணங்களாகச்
சமர்ப்பிக்க இந்த நீதிமன்றம் அனுமதித்தே இதற்குக் காரணமாகும். எனவே நானும் 1940 முதல்
என்னால் வெளியிடப்பட்டு பத்திரிகைகளில் அச்சான ஆறு அல்லது ஏழு பத்திரிகைச் செய்திக்
குறிப்புகளை மேற்கோள் காட்ட என்னைக் கட்டாயம் அனுமதிக்கவேண்டும். என்னுடைய இந்த வாக்குமூலத்தில்
அவற்றின் சாரத்தை மேற்கோள் காட்டுகிறேன். எனது நினைவிலிருந்து அவற்றை எடுத்திருக்க
முடியாது என்பதை நிரூபிக்க அவற்றின் மூல அச்சுப் பிரதிகளையும், இந்த வாக்குமூலம் தொடர்பான
கடிதங்களையும், பல்வேறு தேதிகளில் வெளியான பத்திரிகைச் செய்திகளையும் தனித்தனியாக இணைத்துள்ளேன்.
என்னுடைய வாக்குமூலத்தை உறுதிப்படுத்த அவற்றை இந்த நீதிமன்றம் படித்துப் பார்க்கும்
பட்சத்தில், இணைக்கப்பட்ட அந்தப் அச்சுப் பிரதிகள் பயனளிக்கும். எது எப்படியிருப்பினும்,
இணைக்கப்பட்ட அச்சுப் பிரதிகளை அச்சடித்துத் தர தீடீரென இன்றைக்கு ஆணையிட்டிருக்க முடியாது
என்பதை மட்டும் இவை நிரூபிக்கும்.
இந்த வாக்குமூலத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த அச்சுப்
பிரதிகள் அனைத்துமே என் வசம் இருந்த கோப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்று ப்ராசிக்யூஷன்
தரப்பு சாட்சியான பிரதான் (எண் 129) என்பவரால் ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டவை
என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவை பிரதிவாதி சான்றாவணங்களாக எண் குறிக்கப்பட்டு
நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
(A)பண்டிட் நேரு குறித்த எனது பத்திரிகைச் செய்தி
பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு நான்கு ஆண்டு காலம்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போது 1940 நவம்பர் 6ம் தேதி நான் வெளியிட்டு இந்தியா முழுவதுமுள்ள
அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியான பத்திரிகைச் செய்தி. இதன் சாராம்சம் ‘வீர் சாவர்க்கர்
சூறாவளிப் பிரசாரம்’ (Veer Savarkar’s Whirl-wind Propaganda)என்னும் எனது அறிக்கைகள்
அடங்கிய புத்தகத் தொகுப்பின் பக்கம் 262ல் காணலாம். இந்நூலை வெளியிட்டவர் திரு ஏ.எஸ்.
பிடே. இதை உறுதிப்படுத்த இதன் மூலப் பக்கங்கள் எனது வாக்குமூலத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ளன
(இணைப்பு A).
‘பண்டிட் ஜவாஹர்லால் நேருவுக்கு
விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு காலச் சிறைத் தண்டனை என்னும் செய்தி ஒவ்வொரு இந்திய தேசாபிமானிக்கும்
நிச்சயம் வருத்தமளிக்கும் அதிர்ச்சியாகும். எங்கள் இருவருக்கும் இடையே நிலவிய பல்வேறு
கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் காரணமாக வேறு வேறு சித்தாந்தங்களின் கீழ் பணியாற்றி
வந்தாலும், பொது வாழ்க்கை முழுவதும் தொண்டாற்றிய அவரது தேசாபிமானத்துக்கும் மனிதாபிமானத்துக்கும்
எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், அவர் தொடர்ந்து சந்தித்து வரும் கொடுமைகளுக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்களயும் தெரிவிக்காவிடில், இந்து சபாவைச் சேர்ந்தவன் என்னும் கடமையிலிருந்து
தவறியவன் ஆவேன்’ – சாவர்க்கர்.
(B)காந்திஜி மற்றும் நேருஜி கைது குறித்த எனது
பத்திரிகைச் செய்தி:
1942 ஆகஸ்ட்டில் தலைவர்கள் கைதானதைத் தொடர்ந்து
வெளியான பத்திரிகைச் செய்தியின் சாராம்சம் : (சான்றாவணம் டி.36)
‘தவிர்க்க முடியாதது நடந்தே
விட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னணி மற்றும் தேசாபிமானத் தலைவர்களான மகாத்மா காந்தி,
பண்டிட் ஜவாஹர்லால் நேரு மற்றும் நூற்றுக் கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். தேசாபிமானச் செயலுக்காக அவர்கள் சந்திக்கும் துயரங்களுடன் இந்து
சங்கடனைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட இரங்கல்கள் இணையும்’.
‘இந்தியாவில் நிலவும்
அமைதியின்மைக்குத் தீர்வு காண ஒரே சிறந்த வழி இந்திய – பிரிட்டிஷ் காமன்வெல்த்தில்
கிரேட் பிரிட்டனுக்கு இணையாகச் சரிசமமான உரிமைகளையும் கடமைகளையும், உள்ளடக்கிய முழு
சுதந்திரத்தையும், இணையான அந்தஸ்தையும் கொண்ட அரசியல் நிலையை வழங்குவதாக பிரிட்டிஷ்
பாராளுமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி அறிவிப்பதுடன், மேற்கண்ட அறிக்கையில் கூறியுள்ளதுபோல்
உண்மையான அரசியல் அதிகாரங்களை இந்தியாவுக்கு அளிக்க உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள
வேண்டுமென்றும், நான் மீண்டும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’ – சாவர்க்கர்.
(C)காந்திஜியின் உண்ணாவிரதம் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
சர் தேஜ் பகதூர் சாப்ரூ தலைமையில் டாக்டர் ஜெயகர்,
சர் ஜெகதீஷ் பிரசாத் மற்றும் ஏனைய தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
நானும் ஓர் உறுப்பினராக இருந்தேன். இப்பொறுப்பில் இருந்த காரணத்தால் 1943ம் ஆண்டு சிறையில்
இருந்தவாறே காந்திஜி மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்துக் கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டேன்
(சான்றாவணம் டி.79 பார்க்கவும்). (இணைப்பு B)- 1943 பிப்ரவரி 22 தேதியிட்ட ‘பயனீர்’
பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு.
‘காந்திஜியின் மோசமான
உடல் நிலை குறித்து நாம் அனைவரும் ஆழ்ந்த கவலை கொள்வதுடன், அவரது விலை மதிப்பற்ற உயிரைக்
காப்பாற்றவும், எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ, காந்தியிஜியின் உயிரைக் காப்பாற்ற நாடு தழுவிய அளவில் நாம் அனைவரும்
கூட்டாக இணைந்து மகாத்மா காந்திஜியிடமே, அவர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு
வேண்டுகோள் விடுப்பது ஒன்றுதான் இப்போதுள்ள ஒரேயொரு மிகச் சிறந்த வழி என்பதை உணர வேண்டும்.
அவர் கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக நாம் இதைச் செய்யவேண்டும். இந்த வாய்ப்பின்
மீது அதிக நம்பிக்கை வைப்பது இப்போது கூட அபாயகரமானதுதான்.
காந்திஜியின் உயிரைக்
காப்பாற்ற அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசை இணங்க வைக்க எங்களால் இயன்ற
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உண்ணாவிரதமோ, தார்மிகமோ, மனிதாபிமான வேண்டுகோளோ,
அரசின் இதயத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று இப்போது நம்புவதில் எந்தப் பயனும்
இல்லை. மரணம் உள்ளிட்ட அபாயகரமான எந்த விளைவுகளுக்கும் பொறுப்பில்லை என்று கைகளை உதறிவிட்டுத்
தெளிவாக இருக்கின்றது. நேரம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருப்பதால் கோபிப்பதிலும், கண்டிப்பதிலும்,
எந்தவொரு வினாடியையும் வீணடிக்கக் கூடாது. அரசிடம் வைக்கும் வேண்டுகோள், ராஜினாமா அல்லது
தீர்மானம் மூலம் காந்திஜியின் விடுதலையைப் பெற முடியாது. மனிதாபிமானம் இல்லாத வைஸ்ராய்கள்
லாட்ஜ் கதவுகளின் முன்பு காத்திருப்பதை விட நமது முகங்களை காந்திஜியின் படுக்கை அருகே
திருப்பி, எந்த தேசத்துக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டாரோ, அந்த தேசத்தின் நலனுக்காக
அதை நிறுத்த வேண்டுமென்று அவரிடமே கோரிக்கை வைக்க வேண்டும்.
மரணம் என்னும் விபரீத
முடிவுக்குச் செல்வதற்கு முன்பாக இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த எந்தத் தார்மிகக் கேள்வியும்
குறிக்கே நிற்கப் போவதில்லை. தார்மிகக் கேள்விகள் அரசியல் காரணங்களுக்காகக் கேட்கப்படுகின்றன
என்பதால் அவை அவற்றின் அரசியல் பயன்பாடுகளாலேயே முக்கியமாகத் தீர்மானிக்கப்படும். காந்திஜியே
உண்ணாவிரதத்தை இரு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மேற்கொண்டார். முதலாவது அவரது உயிருக்கான
இடர்ப்பாடு என்பதை விடக் கடுமையான சோதனையை வெற்றி கொள்ளவே விரும்பினார். இதன் காரணமாக
இதுவொரு திறன் உண்ணாவிரதம் ஆகும். எத்தனை நாள்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அவர்
கூறினாலும், மேற்கூறிய இரு முக்கிய வரம்புகள் காரணமாக இதுவொரு அரைகுறைக் கணக்கே ஆகும்.
இரண்டாவது, இந்த அம்சம்
தவிர்த்து, ஏனைய விஷயங்களை விடவும் மேலோங்கும் வகையில், உயர்ந்த நோக்கம் உள்ளது. தனது
உயிரைப் பிணை வைத்து எந்த நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து சேவை செய்ய காந்திஜி விரும்பினாரோ,
இந்தச் சூழலில், அவரது இழப்பை விட, அவரது உயிர் விலை அளவிட முடியாத மதிப்பு கொண்டது
என அந்த நாடு உணர வேண்டும் என்பதே நோக்கமாகும்.
நமது வற்புறுத்தல் அல்லது
புகழ்ச்சிக்காக அரசு இணங்குவதை விடவும், இந்த தேசத்துக்காக அவர் இணங்குவதற்கான வாய்ப்புகள்
நிச்சயம் அதிகம். ஏனெனில் ராஜ்கோட் மற்றும் பல நடவடிக்கைகளில் அவர் எடுத்த மற்றும்
திரும்பப் பெற்றுக் கொண்ட உறுதிமொழிகள் தொடர்பான விஷயங்களை மேலோங்கும் வகையில் தேசிய
அளவிலான உயர் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பார் என்பது நமக்குத் தெரிந்த விஷயமே.
இதன் காரணமாகத் தில்லியில்
நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் காந்திஜி உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுகோள்
விடுக்க வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(D)ஜின்னாவுக்கு எனது பத்திரிகைச் செய்தி:
நான் சூராவார்டியை தீர்த்துக் கட்ட விரும்பியதாக
ஆப்தேவிடம் கூறியதாகத் தனது சாட்சியில் பேட்ஜ் கூறியுள்ளார். சூராவார்டி முஸ்லிமாக
இருப்பதால் என் மீது வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு இன்னும் ஏற்புடையதாக இருக்குமென
பேட்ஜ் நம்பியிருக்கலாம். சட்டம் ஒழுங்கை மதித்து வாழும் குடிமகன், இந்துவோ முஸ்லிமோ,
மத சம்பிரதாயங்கள் அல்லது அரசியல் கொள்கைகளில் மாறுபட்ட நம்பிக்கை கொண்டுள்ள யாராக
இருப்பினும், அவர்கள் மீதான உட்பகை மற்றும் சகோதர வன்முறைச் செயலை நான் தொடர்ந்து கடுமையாகக்
கண்டித்து வருகிறேன் என்பதற்கு 1943 ஜூலை 27 அன்று வெளியான பத்திரிகைச் செய்தியே சான்றாகும்.
அந்தச் செய்திக் குறிப்பில், அப்போது வரை இந்தியக் குடிமகனாகவும், சக நாட்டு மனிதனாகவும்
விளங்கிய முஸ்லிம் தலைவர் காயித்-ஏ-ஆசாம் ஜின்னா மீதான கொலை முயற்சியை நான் வன்மையாகக்
கண்டித்துள்ளேன் (சான்றாவணம் டி.8பார்க்கவும்).
‘ஜின்னாவின் மீதான கொலை
வெறித் தாக்குதலைக் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர் மயிரிழையில் உயிர்
பிழைத்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் மனத்தளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்குக்
காரணம், முஸ்லிம்களுக்காகத் தீவிரமாகப் பாடுபட்ட அவரை ஒரு முஸ்லிமே கொல்ல முயன்றதுதான்.
இதுபோன்ற உட்பகை, தூண்டுதலற்ற மற்றும் கொலைவெறித் தாக்குதல், அதன் நோக்கம் அரசியல்
அல்லது வெறித்தனம் எதுவாக இருப்பினும், பொது மற்றும் குடிமை வாழ்க்கையில் கறையை ஏற்படுத்தும்
என்பதால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் – வி டி சாவர்க்கர்’.
ஜின்னாவின் பதில்:
எனது செயலர் பிட்டேவிடம் மேற்கண்ட அறிக்கையின்
நகலை ஜின்னாவுக்கு அனுப்புமாறு கூறினேன். அதைப் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஜின்னா
1943 ஆகஸ்ட் 15 அன்று பிட்டேவுக்குக் கீழ்காணும் கடிதத்தை எழுதினார் (சான்றாவணம் டி/75).
மவுண்ட் பிளெசண்ட் சாலை,
மலபார் ஹில்
1 ஆகஸ்ட் 1943
அன்புடையீர்,
நீங்கள் அனுப்பிய சாவர்க்கர்
அறிக்கையின் பத்திரிகைச் செய்தி நகல் வந்து சேர்ந்தது. என் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக்
கண்டித்தும், அனுதாப அறிக்கை வெளியிட்டமைக்கும் சாவர்க்கருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
உண்மையுள்ள,
(ஒப்பம்)எம் ஏ ஜின்னா
(E)மகாத்மாஜியின் பிறந்தநாள் குறித்த எனது பத்திரிகைச்
செய்தி:
1943 அக்டோபர் 2 ஆம் தேதி காந்திஜிக்கு அனுப்பிய
கீழ்க்காணும் தந்தியைப் பத்திரிகைச் செய்தியாக வெளியிட்டேன் (சான்றாவணம் டி/77).
‘மகாத்மா காந்திஜியின்
75ஆவது பிறந்தநாளில் அவருக்கும், நம் திருநாட்டுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்க இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் – சாவர்க்கர்’.
(F)கஸ்தூரிபா மரணம் குறித்த எனது பத்திரிகைச் செய்தி:
1944 பிப்ரவரி 23 அன்று காந்திஜிக்கு நான் அனுப்பிய
தந்தியும் பின்னர் பத்திரிகையில் வெளியான செய்தியும் (சான்றாவணம் டி/78 பார்க்க). ‘அமிர்த
பஜார் பத்திரிகை’ உள்ளிட்ட ஏனைய பத்திரிகைகளில் வெளியான செய்திக் குறிப்பும் இந்த வாக்குமூலத்தின்
இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது (இணைப்பு C).
‘கனத்த இதயத்துடன் கஸ்தூரிபாய்
மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசுவாசமான மனைவியாகவும்,
அன்பான அன்னையாகவும் விளங்கியவர் இறைவனுக்கும், மனிதனுக்குமான சேவையில் உன்னதமான மரணத்தைத்
தழுவிக் கொண்டார். உங்கள் துக்கத்தை இந்த நாடே பகிர்ந்து கொள்கிறது – சாவர்க்கர்’.
(G)மகாத்மாவின் விடுதலை ஒட்டி நான் விடுத்த பத்திரிகைச்
செய்தி:
சிறையிலிருந்து காந்திஜியை விடுவித்தைத் தொடர்ந்து
1944 மே 7ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையும் பத்திரிகையில் வெளியான செய்தி (சான்றாவணம்
டி/81 பார்க்கவும்).
‘காந்திஜியின் முதிர்ந்த
வயது மற்றும் சமீபத்திய நோய் காரணமாக மோசமடையும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு அரசாங்கம் அவரை விடுவித்திருப்பது குறித்து தேசமே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
இதுவொரு மனிதாபிமானச் செயல். காந்திஜி விரைந்து குணமடைய வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
அரசியல் காரணங்களுக்காக விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பண்டிட் நேரு
மற்றும் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது வெளிப்படையான நீதி விசாரணைக்கு
உத்தரவிட்ட வேண்டும். அப்போதுதான் அரசு அவர்கள் மீது சுமத்தியுள்ள உண்மையான குற்றச்சாட்டுகள்
என்ன என்பதை இந்த நாடு தெரிந்து கொள்ளும் – வி டி சாவர்க்கர்.’
(தொடரும்)